Author: பதாகை

கொதிப்பு

ஐ கிருத்திகா

கொடியடுப்பில் முள்ளங்கிக் குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது. அதன் வாசம் நாசியைத் தொட்டு ராசுப்பயலை எழுப்பிவிட்டது. அவனுக்கு முள்ளங்கிக் குழம்பென்றால் பெரும்பித்து.

“எங்கம்மா முள்ளங்கிக்கொளம்பு வைக்கும் பாரு. அதுக்கு ஒரு தனி ருசிடா…” நண்பர்களிடம் கதையளப்பான்.

“நல்லா தாராளமா பருப்ப வேவுச்சி கடஞ்சி ஊத்தி இம்மாம் வெங்காயத்த வதக்கி கொளம்ப கொதிக்கவுடும். முள்ளங்கிய நெலாத்துண்டாட்டம் நறுக்கி வதக்குறப்ப ஒரு வாசமடிக்கும் பாரு. வார்த்தையால சொல்லமுடியாது.” அவன் கண்கள் தானாக மூடிக்கொள்ளும்.

“மேல சொல்லுடா…” நண்பர்கள் தூண்டிவிடுவார்கள்.

“முள்ளங்கிக் கொளம்புன்னா மஞ்சத்தூள ரெண்டுசிட்டிக கூடுதலாத்தான் போடும் எங்கம்மா. அதனால கொளம்பு மஞ்ச, மஞ்சேர்ன்னு இருக்கும். மொதநா கொளம்பவுட மய்க்கா நா கொளம்புக்கு ருசி அதிகம்.”

” அதெப்புடிடா…?” வேண்டுமென்றே கேட்பார்கள்.

” எங்கம்மா காலம்பற எந்திரிச்சதும் மொத வேலயா மீந்த கொளம்ப கொடியடுப்புல போட்டு சுண்டவைக்கும்.அதுல ரெண்டு கைப்புடி முருங்கைக்கீரைய உருவிப் போட்டுடும். அந்த வாசம் புடிச்சா நாக்கு ஊறும். காந்த வாசனை அடிக்கிற கொளம்புல வெந்த முருங்கக்கீர வதங்கி சவுக், சவுக்குன்னு கடிபடும். அதெல்லாம் தின்னாத்தான்டா தெரியும்.”

ராசுப்பயலுக்கு பள்ளிக்கூடம் போகும் வரை சொல்வதற்கு தினமும் ஆயிரம் கதைகளிருந்தன. நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு கழியில் புத்தகப்பையை மாட்டி இருவர் மாற்றி இருவராக சுமந்து செல்வார்கள். பள்ளிக்கூடம் சற்று தூரம்தான்.

ராசுப்பயலின் பேச்சு தூரத்தைக் கடக்க தினமும் தேவைப்பட்டது. சோறு, அரசமரப்பிள்ளையார், தடி வாத்தியார், இலவச டிவியில் பார்த்த சினிமா என்று ஏதோ ஒன்று ராசுப்பயலுக்கு சொல்லக் கிடைத்துவிடும். சிலசமயம் ஏற்பாடில்லாமல் கதையை ஆரம்பிப்பான். கதை அவனைத் தன்பாட்டுக்கு இழுத்து சென்றுவிடும். நண்பர்கள் உம் போட்டபடி செல்வர்.

ஐந்தாறு பேர் ஒரு குழுவாக பள்ளிக்கூடத்துக்குப் போவார்கள். பள்ளிக்கூடம் கடைத்தெருவிலிருந்தது. கடைத்தெரு முடியுமிடத்தில் இடதுபுறம் திரும்பி பத்து தப்படி நடந்தால் பள்ளிக்கூடம். அந்தத் திருப்பத்தில் ஒரு பிள்ளையார் கோவிலுண்டு. அங்கு வந்ததும் பேச்சை நிறுத்தி விழுந்து கும்பிட்டுவிட்டு கிரில் கதவின் கம்பிகளில் சிந்திக்கிடக்கும் விபூதியை பூசிக்கொள்வார்கள். ராசுப்பயல் பெரும்பட்டையாக இட்டுக்கொள்வான்.

அவனுக்குப் பள்ளிக்கூடம் செல்வதொன்றும் அவ்வளவு விருப்பமான செயலாக இருக்கவில்லை. மதியசோறும், முட்டையும் அவனை வா, வாவென்று கூப்பிட்டதில் போய்க்கொண்டிருக்கிறான். பள்ளி முடிந்து வீட்டுக்குவருபவன் புத்தகப்பையை கடாசிவிட்டுத் தெருப்புழுதிக்குத் தன்னை ஒப்புக் கொடுத்துவிடுவான் .

“வெளக்கு கொளுத்தியாச்சி. இந்தப் பயல இன்னும் காணும். பொஸ்தவத்த எடுத்து ஒரு எளுத்து படிக்க மாட்டேங்கிறான். நல்லவிதமாவும் சொல்லிப் பாத்துட்டன், வெளக்கமாத்தால வெளுத்தும் பாத்துட்டன். வெளங்காத பய….அவுங்கப்பனாட்டமே ஊர் மேய கெளம்பிடுறான்.”

ஈசுவரி பக்கத்து வீட்டு முத்தரசியிடம் புலம்பித் தீர்த்தாள். நாலெழுத்து படித்து மகன் உருப்பட்டுவிட வேண்டுமென்பதுதான் அவள் நினைப்பு.

“பள்ளிடத்துல பேக்கு, டவுசர், சட்ட, பொஸ்தவம் எல்லாம் குடுத்து சோத்தையும் போட்டு படிக்க சொல்லுறாங்க. புத்தியுள்ள புள்ள அத பயன்படுத்திக்கிட்டு முன்னேறி வந்துடும். இது என்னாவுமோ, மண்ணாத்தான் போவுமோ…” தலையிலடித்துக்கொள்வாள்.

மழை வரும் போலிருந்தது. மாடக்குழியில் ஏற்றி வைத்திருந்த விளக்கு, வீசிய காற்றுக்கு அல்லாடியது. ஈசுவரி ஆடுகளைப் பக்கவாட்டிலிருந்த தொழுவத்தில் அடைத்து புல்கட்டை பிரித்து உதறிவிட்டாள். அன்று நல்ல வளப்பமான புற்கள் பெருத்த கட்டாக அறுத்துக் கட்ட கிடைத்திருந்தன. கைக்கு லாவகமாய் பிடித்தறுக்க பெரிது, பெரிதான புற்கள். ஈசுவரிக்கு மனசு நிறைந்துவிட்டது. மண்டைக்காத்தான் கண்டால் சவட்டிவிடுவான்.அவன் வயலை ஒருவரும் அண்டமுடியாது. மழைக்குப் பயந்து ஈசுவரி துணிந்து விட்டாள். நல்லவேளையாக அவன் தலைகாட்டவில்லை. புற்கள் வீச்சு, வீச்சாக வளர்ந்து கிடந்தன. ஒரேமூச்சாக அறுத்துப் பெருங்கட்டாக கட்டிவிட்டாள்.

கோடைவெயிலுக்கு எரிந்து கிடக்கும் புற்களைக் கண்டு மனம் வெதும்பி நிற்பதற்கு மாறாக பொங்கும் புதுப்புனல் போல மனம் நுரைத்துப் பொங்கிற்று. ஆடுகள் புசு,புசுவென்று மூச்சு விட்டபடியே பருபருவென்று புற்களைத் தின்றன. ராசுப்பயல் குதிரைமுகம் வரை புழுதியப்பிய கால்களோடு வந்து நின்றான். கையிலிருந்த பனையோலை காற்றாடி சுழன்று கொண்டிருந்தது.

“பசிக்கிது சோறு போடும்மா…”

குனிந்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் பின்புறம் நின்று குதிகால்களை எக்கிப்பார்த்து சொன்னான். ஈசுவரி பதில் சொல்லவில்லை.

“சோறாக்கலயாம்மா…?”

சுழன்று கொண்டிருந்த காற்றாடியைக் கட்டைச்சுவரில் வைத்துவிட்டு அடுப்புமேல் மூடியிருந்த குண்டானைத் திறக்கப் பாய்ந்தான். ஈசுவரி திரும்பி, ஓங்கின வேகத்துக்கு முதுகில் ஒன்று வைத்தாள்.

“வெளக்கு வச்ச நேரத்துல ரெண்டு வார்த்த படிச்சோமுன்னு இல்லாம தெருத்தெருவா சுத்திட்டு வந்து சோறு போடுன்னா, சோறு எங்கேயிருந்து வரும். ஒங்கப்பனா கையெளுத்துப் போட்டு சம்பாரிச்சி கொண்டாந்து கொட்டுறான்.”

அவளுக்கு ஆவேசமாக இருந்தது. முட்டைப் போல் வயிறு பெருத்திருந்த சமயத்தில் இன்னொருத்தியுடன் ஓடிப்போனவனைத் திட்டுவதற்கு சந்தர்ப்பத்தை உருவாக்க தேவையிருக்கவில்லை. எதொன்றுக்கும் அவனை இழுத்துவைத்து வசவுகளை விட்டெறிவதற்கு அவளுக்குக் கைவரப்பெற்றிருந்தது.

ராசுப்பயல் திண்ணையில் அமர்ந்தான். முதுகு திகுதிகுவென்று எரிந்தது. வலது கையை எட்டும் மட்டும் வளைத்துப் பின்புறம் துழாவி தடவிக்கொண்டான். மழைத்தூறல்கள் போட்டது. சாய்வு, சாய்வான ஊசித்தூறல்கள். மழைக்குப் பயந்துதான் அவன் இவ்வளவு சீக்கிரமாக வீட்டுக்கு வந்ததே. இல்லாதுபோனால் இருளின் வீச்சு முழுமையடைந்திருக்கும்போது மெல்ல தலைகாட்டும் பசியை உணர்ந்து அலுப்புஞ்சலிப்புமாய் விடைபெற்றுக்கொள்வான். சோறு, சோறு என்று வயிறு குதியாட்டம் போடும். தெருவில் அநேகமாய் விளக்குகள் எரிவதில்லை. இருட்டு மசி போல் அப்பிக்கிடக்கும் தெருவில் அவன் மனதிலூரும் பயத்தை அடக்க சத்தம் போட்டுப் பாட்டு பாடியபடியே வருவான்.

கையில் எப்போதும் ஒரு குச்சி இருக்கும். அதை அப்படியும், இப்படியுமாக அசைத்து தன் கவனத்தை அதில் பதித்துக்கொள்வான். ஈசுவரி வெளியே எட்டிப்பார்த்தாள். பெருமழை கொட்டிக் கொண்டிருந்தது.

“எந்திரிச்சி வந்து சோத்தத் தின்னு. கரண்டு போச்சின்னா தொளாவணும்.”

அவன் அசிரத்தையாக எழுந்தான். புழுங்கலரிசிச்சோறின் மணம் மூக்குக்கு இதமானதொரு வாசத்தைப் பரப்ப, அக்கறையில்லாதவன் போல் தட்டின் முன் அமர்ந்தான். குண்டுபல்பின் மஞ்சள் ஒளியில் சோறு மினுமினுத்தது. உதிரி, உதிரியாய் கொஞ்சம் புளியம்பூ நிறத்தில் தட்டு நிறைய சோறு.

அள்ளித் திங்க வேண்டும்போல மனசு பரபரத்தது. ஈசுவரி குழம்பை சோற்றின் மேல் பரவலாக ஊற்றினாள். கத்தரிக்காய் துண்டுகள் சோற்றில் விழுந்தன.

“கால், கை களுவுற பளக்கமெல்லாம் இருந்தா நீ உருப்புட்டுடமாட்ட…”

ராசுப்பயல் எழுந்துபோய் ஒழுகிய மழையில் கால், கையை நீட்டி கழுவிவிட்டுவந்தான்.

“களுவிட்டன்.”

வேகமாய் அமர்ந்து குனிந்து சாப்பிடத் தொடங்கினான். பள்ளிக்கூடத்து மதியசோறு வயிறு நிரம்பத்தான். மற்றபடி அதொன்றும் ருசியாக இல்லை என்பான் அவன்.

“கல்யாண ஊட்டுல எல நெறச்சி சோறு போடுவாங்க. ரெண்டு வகை காயி, வடை, பாயசம்னு எக்கச்சக்க அயிட்டம் இருக்கும். அந்தமாரி சாப்பாடு சாப்புட்டு பாக்கணும்டா ” என்று நண்பர்களிடம் சொல்லி, சொல்லி மாய்ந்து போவான்.

தெருவில் நடக்கும் விசேஷங்களுக்கு ஈசுவரி மட்டும் போவாள். வரும்போது வடையையோ, போண்டாவையோ மடியில் கட்டிக்கொண்டு வருவாள். ராசுப்பயல் தானும் வருவதாக சொன்னால் முதுகில் சாத்துவாள்.

“இருவது ரூவாய வச்சிப்புட்டு ரெண்டுபேரு வந்து தின்னுபுட்டுப் போறாங்கன்னு பின்னாடி பேசுவாளுங்க…வேணுமுன்னா நீ போ. நான் போவல” என்பாள்.

“கறியும், கூட்டும் திங்கவா போறன். நாலு சனம் வேணுமுன்னு போறன். நாளபின்னாடி என் எளவுன்னா தூக்க நாலுபேரு வரணுமில்ல.” குரல் அழுகையில் பிசிறடிக்கும். ராசுப்பயல் பேசாமல் அமர்ந்திருப்பான்.

மழை மறுநாளும் தொடர்ந்ததில் பள்ளிக்கூடம் விடுமுறை அறிவித்திருந்தது. பள்ளிக்குப் போகாமல், விளையாடவும் போகமுடியாமல் வீடடங்கி கிடப்பது ராசுப்பயலுக்கு பெரும் அவஸ்தையாயிருந்தது. மின்சாரம் அவிந்து போயிருந்ததில் இலவச டிவி இருண்டு கிடந்தது.

திடீர், திடீரென வீசிய காற்றுக்கு கிளேரியா மரம் அசைந்ததில் பெருத்த நீர்ச்சொட்டுகள் சொட்டித் தெறித்தன. ஆடுகள் சாரலுக்குப் பயந்து நெருக்கியடித்துத் திண்ணையில் நின்றிருந்தன. தெருவடைத்த மழை. இரண்டுநாள் மழைக்கு மண் வாந்தோடிப் போயிருந்தது. முன்பு இப்படியொரு பெரு மழையில்தான் அவன் பிறந்தான்.

“அப்பிய மாசம் பொத்துக்கிட்டு ஊத்துது. கருக்கிருட்டு புடிச்சி ஊரே இருண்டு கெடக்கு. ஒருவா கஞ்சி குடிச்சிப்புட்டு கம்முன்னு படுத்துக்கிடலாம்னு பாத்தா திடீர்ன்னு வலி பொரட்டியெடுக்க ஆரம்பிச்சிடுச்சி. முத்தரசி கொடலையத் தூக்கி தலையில போட்டுக்கிட்டு ஓடிப்போயி ஒன் பெரியாத்தாள கூட்டியாந்தா. சிம்னி வெளக்க பொருத்தி வச்சிக்கிட்டு ஆத்தா பிரசவம் பாத்துச்சி.” ஈசுவரி சொன்ன கதையை ஜோடித்து ராசுப்பயல் தன் நண்பர்களிடம் கூறுவான்.

“கொளேர்ன்னு ஒரே இருட்டாம். அப்ப துணுக்கு சுடராட்டம் நான் பொறந்ததும் எல்லாருக்கும் கண்ணு கூசிப்போச்சாம். தவமா, தவங்கெடந்தாலும் இப்படியொரு புள்ள பொறக்காதுடின்னு ஆத்தா கண்ணு தண்ணி வுட்டுச்சாம்.”

அவன் சற்று நிறம்தான். அதனால் நண்பர்கள் அதை ஒத்துக்கொண்டு பேசாமலிருந்தனர். மழை நின்று வெயில் காட்டத் தொடங்கிவிட்டது. ஈசுவரி ஆடுகளைக் கொட்டகையில் தள்ளி கட்டிவிட்டு நூறுநாள் வேலைக்குக் கிளம்பிவிட்டாள்.

பகல்பொழுதில் மேயவிட்டால் பச்சையைக் கண்டமேனிக்கு பாய்ந்துவிடும். நிலத்துக்குச் சொந்தக்காரன் பிடித்து வைத்துக்கொள்வான். போய் நின்றால் காது கூச கூச்சல்போடுவான்.

பிறகு தண்டமழுது கூட்டிவரவேண்டும். அந்தப்பாடுகளுக்கு பயந்து அவள் அவிழ்த்துவிடும் வேலை வைத்துக்கொள்வதில்லை. வேலை முடிந்து வரும்போது எங்காவது புகுந்து ஒரு கட்டுப்புல் தேற்றிவிடுவாள். விடுமுறை நாட்களில் ராசுப்பயலை நச்சரிப்பாள்.

“அவுத்துட்டுப் போயி மேச்சிட்டு வாயன்டா. சும்மாதான கெடக்குற…”
அவள் கேட்கும்போதெல்லாம் அவன் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி சமாளிப்பான்.

“பரிச்ச ஆரமிக்கப்போவுது. படிக்கணுமில்ல…” என்பான்.

“பெசல் கிளாசு வச்சிருக்காங்கம்மா. பள்ளிடம் போவணும் ” என்று புத்தகமூட்டையை தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவான்.

வடக்குத் தெருவில் தாழப் படர்ந்திருக்கும் மரத்தின் கிளையொன்றில் அவன் பை தொங்கிக்கொண்டிருக்கும். அந்தத் தெருவில் அவனுக்கு ஏராளமான நண்பர்களுண்டு. அவர்களுடன் சேர்ந்துகொண்டு மண்டையில் தெறிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் விளையாடுவான்.

விளையாட்டு அலுக்கும் நேரங்களில் நண்பர்களுடன் கடைத் தெருவை சுற்றிவருவான். ஊரில் ஒரேயொரு கிளப் கடை இருந்தது. காலையில் போட்ட பூரி கண்ணாடிப் பெட்டிக்குள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும்.

அதைப் பார்த்தபடி சற்றுநேரம் பொழுது போகும். பறக்கும் தட்டு போன்ற பூரிகள். அதன் உப்பல் ரகசியம் இன்றுவரை அவனுக்குப் பிடிபடவேயில்லை. ஒரேயொருமுறையாவது அந்தப் பூரியைத் தின்றுபார்த்துவிட மனசு ஆவலாய் துடிக்கிறது.

ஒரு செட் பூரி முப்பது ரூபாய். விளிம்பற்ற தட்டில் வாழையிலை போட்டு இரண்டு பூரிகளோடு கிழங்கு அள்ளி வைத்துத் தருவார்கள். வெளியிலிருந்து பார்த்தாலே மேசைகள் தெரியும். பொன் நிறமாய் மினுமினுங்கும் கிழங்கு தெரியும். அவக், அவக்கென்று விழுங்கும் வாய் தெரியும். ஆர்டர் சொல்லிவிட்டு ஆவலாய் பறந்தலைகிற கண்கள் தெரியும். இன்னொரு செட் என்று சொல்கிற குரலை வைத்து முதுகுகாட்டி அமர்ந்திருக்கிற காளிமுத்து மாமாவையோ, சின்னான் பெரியப்பாவையோ இனங்கண்டுகொள்ளமுடியும் .

தினம் கடையைக் கடக்கும் தருணங்களில் காற்றில் மசாலா வாடை அடிக்கும். சால்னாவோ, கிழங்கோ வாயு ரூபத்தில் வந்து மூக்கைத் தடவும். அது ஒரு சுகந்த மணம். அதை அனுபவிப்பதற்காகவே ராசுப்பயல் நடையைத் தளர்த்துவான். ஒருமுறை ஈசுவரியிடம் நைச்சியமாக கேட்டும் பார்த்தான். முப்பது ரூபாய் என்றதும் அவள் மலைத்துவிட்டாள்.

“அதெல்லாம் நமக்குத் தோதுப்படாதுடா” என்று அந்தப் பேச்சுக்கு அத்தோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள். முப்பது ரூபாயில் பருப்பு, உப்பு, புளி, மிளகாய் வாங்கி பத்து நாட்களை ஓட்டிவிடுவாள்.

நண்பர்களில் யாராவது பூரி சாப்பிட்டதாக சொன்னால் பசி கப்பென்று காதையடைக்கும். பூரிப்பசி. அவர்கள் தின்றதை விட அதைப்பற்றி அவர்கள் கதையளப்பதைத் தாங்கிக் கொள்வது பெருங்கடினமாக இருந்தது அவனுக்கு.

தங்களுக்கும் கதை சொல்லத் திறமை வந்துவிட்டதைப்போல அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர். அப்படி, இப்படியென்று அவன் பட்டாளத்திலிருந்த அத்தனை பேரும் பூரி சாப்பிட்டிருந்தார்கள். சிலர் கடன் சொல்லி சாப்பிட்டதாக சொன்னார்கள். பின்னாடியே அவர்களுடைய அப்பாக்கள் வந்து கடனடைத்து விடுவார்களாம்.

ராசுப்பயலுக்கு முதன்முறையாக அப்பா இல்லாதது பெருங்குறையாகப்பட்டது. அதுநாள்வரை அப்பாவைப்பற்றி அவன் யோசித்ததில்லை. தெளிவற்ற பிம்பமாக கூட அவர், அவனுடைய விழிப்படலத்தில் உறைந்திருக்கவில்லை. சிறுநெல் மணியளவு கருப்பைக்குள் ஊன்றி தரித்திருக்கையிலேயே அவர் விட்டுப் போய்விட்டார்.

அம்மாவின் ஒவ்வொரு வசவின்போதும் அவரின் இருத்தல் குறித்த ஞாபகம் வரும். அம்மாதிரியான ஒரு உறவுக்கு வீரியமிருப்பதாகவே அவன் நினைக்கவில்லை. இப்போது பூரியின் மீதான காதலில் அவரின் நினைவு வந்தது.

காலையில் எழும்போதே ஈசுவரி அந்த சந்தோஷ செய்தி சொன்னாள். “எலே பயலே, உன் புத்தகப்பையி மேல காசு வச்சிருக்கேன். கிளப்பு கடையில பூரி வாங்கித் தின்னு.”

ராசுப்பயலுக்கு சட்டென்று காதுகள் அடைத்துக்கொண்டதைப் போலிருந்தது. திருதிருவென்று விழித்தான்.

“முப்பது ரூவாதான….?”

ஈசுவரி தலையாட்டிக் கேட்டாள். ஆவென வாயைத் திறக்க மா…..வுக்கு காற்று மட்டும் வந்தது.

“காசு பத்திரம்…”

ஈசுவரி அடுப்புச்சாம்பல் ஒதுக்கி சாணி மெழுகினாள். மூன்று பத்து ரூபாய்த்தாள்கள் பைமேல் மடித்து வைக்கப்பட்டிருந்தன. ராசுப்பயல் புத்தகப்பைக்குள் ரூபாயை பத்திரப்படுத்திக்கொண்டான். அவசரமாக நீரை மொண்டள்ளிக் குளித்தான். பாட்டின் வார்த்தைகள் இஷ்டத்துக்கு வந்தன. பூரிகள் பறக்கும் தட்டுகளாய் கண்ணுக்கெதிரே காற்றில் அலைந்தன. அவசரமாய் சீருடை அணிந்து மாடத்தில் கிடந்த விபூதியை நெற்றியில் அப்பிக்கொண்டு புத்தகப்பையை தூக்கி தோளில் போட்டுக்கொண்டான்.

மற்ற பயல்கள் கிளம்பியிருக்கவில்லை. வெயில் மஞ்சள் படலமாய் விரிந்து கிடந்த தெருவில் ராசுப்பயல் ஒரு காலை அழுத்தி, ஒரு காலை உயர்த்தி, திரும்பவும் அதேபோல் அழுத்தி, உயர்த்தி பாட்டுப் பாடியபடியே ஓடினான்.

காலை நேரமென்பதால் கடையில் கூட்டம் அதிகமிருக்கவில்லை. நேரமாக, ஆக மண்டத் தொடங்கிவிடும். ராசுப்பயல் தயங்கியபடியே கடைக்குள் எட்டிப் பார்த்தான். கால்கள் கூசின. கொஞ்சம் படபடப்பாயிருந்தது. தோளில் கிடந்த பையை இடது கைக்கு கொண்டுவந்து துழாவினான். பணம் இருப்பதை உறுதி செய்துகொண்ட மனதுக்கு சற்று ஆசுவாசமாயிருந்தது.

“என்னாடா,,,,?” கல்லாவுக்கு அந்தப்புறமிருந்து முதலாளி எட்டிப்பார்த்துக் கேட்டார்.

“பூரி…..” ராசுப்பயலுக்கு குரல் எழும்பவில்லை.

“சாப்புடணுமா….?” கையை வாய்க்கருகில் கொண்டு சென்று கேட்டார். ராசு தலையாட்டினான்.

“காசு கொணாந்திருக்கியா….?” அவனுக்கு அவமானமாயிருந்தது. சட்டென உடல் கூசிப்போக கண்கள் கலங்கின. வேகமாய் தலையாட்டி பைக்குள்ளிருந்து ரூபாய் நோட்டுகளை எடுத்துக் காண்பித்தான்.

“உள்ளாற போயி ஒக்காரு…” அவர் கைக்காட்டிய இடத்தில் சென்றமர்ந்தான். இரண்டு கால்களுக்கிடையில் புத்தகப்பையை நிறுத்தி இறுக்கிக் கொண்டான்.

‘தம்பிக்கு ஒரு செட்டு பூரி குடுப்பா…” முதலாளியே அவனுக்காக குரல் கொடுத்தார். ராசுப்பயல் நாற்காலியின் விளிம்பில் அமர்ந்திருந்தான். கைவிரல்களைக் கோர்த்து தொண்டையை நனைத்துக்கொண்டான். அவன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து சமையல்கட்டை நன்றாகப் பார்க்க முடிந்தது. உள்ளே, கைவைத்த அழுக்கு பனியன் அணிந்திருந்த மாஸ்டர் பூரி தேய்த்துக் கொண்டிருந்தார். பிசைந்து வைத்திருந்த மாவிலிருந்து சிறிது கிள்ளி எடுத்து உள்ளங்கைகளுக்கு நடுவில் வைத்து உருட்டினார்.

உருட்டிய மாவை அரை நொடியில் பெரிய வட்டமாய் தேய்த்தார். ராசுப்பயல் அதை அதிசயம் போல் கண்கள் விரியப் பார்த்தான். வட்டா நிறைய கொதித்துக் கிடந்த கிழங்கில் கல்பாசியின் தணியாத வாசம். சப்ளையர் பையன் ஒரு பெரிய தம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து வைத்தான். ராசுப்பயல் கொஞ்சமாய் நீர் அருந்திக் கொண்டான்.

“தண்ணி குடிச்சா பசியடங்கிடும் ” என்பாள் ஈசுவரி. நீரில் எண்ணெய் கசண்டடித்தது.

பக்கத்து மேசையில் ஒருவர் பூரி மேல் குருமாவைப் பரப்பி மூன்று விரல்களால் பிய்த்து, பிய்த்து தின்று கொண்டிருந்தார். ராசுப்பயலுக்கு வாய்க்குள் உப்புநீர் சுரந்தது. உதடுகள் லேசாக பிளந்து கொண்டன. கருமணிகள் அசையாது அவரையே உன்னித்தன.

“பூரி……” சப்ளையர் ணங்கென்று தட்டை வைத்தான். அவன் ராசுவைவிட நான்கைந்து வயது மூத்தவனாயிருப்பான். முகம் கடுகடுத்திருந்தது. திடீரென்று பக்கவாட்டிலிருந்து குரல் வந்ததில் தவம் கலைந்த தினுசில் ராசுப்பயல் அதிர்ந்துபோனான்.

தட்டில் இளம்பச்சை நிற குருத்து வாழையிலையில் இரண்டு உப்பல் பூரிகள். பக்கத்தில் மஞ்ச, மஞ்சேரென்று ஆவாரம்பூ குருமா. மூன்று விரலால் பிய்க்க வேண்டும். பக்கத்துமேசை மனிதர் சொல்லித் தந்திருந்தார். பிய்த்தான். பிஞ்சு விரல்கள் எண்ணெயில் மினுமினுத்தன. குருமாவில் தோய்த்தான். விழிகளில் பறந்தலைகிற ஆவல். தலையை லேசாக உயர்த்தி கிழங்கோடு பூரியை வாயிலிட்டுக்கொண்டான். அப்போது கண்கள் தானாக மூடிக்கொண்டன. அதுவரை அனுபவித்தறியாத ருசியின் தீண்டலில் நாக்கு இளஞ்சிவப்பு மலர் போல மலர்ந்து போனது. ஒவ்வொரு வாய்க்கும் எழுந்த கிளர்ச்சி மனதை பரபரக்க செய்தது. கால்கள் பையை இறுக்கிக்கொண்டன.

மூளையின் செல்களை உணர்வூட்டி விட்டது போல அவனுக்குள் கதைகள் கிளைத்தன. இன்னொருமுறை கடைக்கு வருவது போன்ற நிகழ்வை நிகழ்த்திப் பார்த்து மனசு சந்தோஷப்பட்டது. ஒவ்வொரு வாய்க்கும் இடைவெளி விட்டு ருசிக்க, கண்கள் சுற்றியலைந்தன. உடல் முன்னும், பின்னுமாக லேசாக அசைந்தது. கடைசிவாயை வழித்து வாயிலிட்டுக்கொண்டபோது வயிறு நிறைந்து போனது.

குருமாவின் மசாலா வாசம் உள்ளங்கையில் மிதந்தது. உள்ளங்கை எண்ணெய் மினுமினுப்பில் வாழைப்பூ போல இளமஞ்சள் நிறத்தில் பளபளத்தது. கழுவிய கையை
சட்டையில் துடைத்துக்கொள்ள பயமாயிருந்தது. ஒருமாதிரி அடிபட்ட கை போல உடம்பில் படாதவாறு வைத்துக்கொண்டு ராசுப்பயல் பிள்ளையார் கோவிலண்டை வந்து நின்றான். தூரத்தில் சகாக்கள் வருவது தெரிந்தது.

“ஒசத்தியான மஞ்ச நெறத்துல ஆவாரம்பூவாட்டம் குருமா. …” மனதில் சொல்லிப் பார்த்துக்கொண்டான் .

இன்னொரு பக்கம்

ஸிந்துஜா

கிழக்கு மேற்காகத் திருப்பரங்குன்றம் சாலை ஓடிற்று. சாலையின் வடக்கில் இருந்த பஸ் ஸ்டாப்புக்குப் பின்புறம் வரிசையாக நான்கு வீடுகள் ஒரே காம்பவுண்டுக்குள்  சாலையைப் பார்த்தபடி நின்றன. இடது பக்கம் இரண்டு, வலது பக்கம் இரண்டு என்று பிரித்து நடுவில் உயர்ந்து நின்ற இரும்புக் கிராதியிட்ட கேட்டின் வழியே ஒரு பாதை சென்றது. பாதை வழியே உள்ளே சென்றால் உள்ளே இடது பக்கம் முன்பு கோடவுன் என்று கட்டப்பட்டு அப்புறம் வீடாய் மாறி விட்ட கட்டிடம். வலது பக்கம் பெரிய கிணறு. வீட்டுக்குள்ளேயே கக்கூஸ் கட்டிக் கொள்ளும் நாகரீகத்தை ஒத்துக் கொள்ளாத காம்பவுண்டின் சொந்தக்காரர்  கிணற்றைத் தாண்டி  மூன்று கழிவறைகள் கட்டியிருந்தார். தவிர பெண்கள் வீட்டின் முற்றத்திலேயே குளியல் வேலைகளை முடித்துக் கொள்பவர்களாக இருந்ததால், குடியிருக்கும் வீட்டு ஆண்கள் உபயோகிக்க என்று இரண்டு குளியலறைகளும் அங்கே இருந்தன. கோடவுனுக்கு என்று கட்டப்பட்டு யாரும் வராததால் இரண்டு மூன்று தடுப்புச் சுவர்களை எழுப்பி ஒரு வீடாக அதை வீட்டுச் சொந்தக்காரர் மாற்றியும் அது முறையான வீடாக அமையாதிருந்த

தால் குடி வருவதற்கும் ஆள் கிடைப்பது பெரும்பாடாக இருந்தது. கடைசியாக மூன்று மாதங்களுக்கு முன்னால்தான் தர்மலிங்கம் குடும்பம் அந்தப் பின் வீட்டுக்குக் குடி வந்தது..

தர்மலிங்கம் வீட்டில் அவர், அவரது மனைவி, பிள்ளை நாராயணன் என்று மொத்தம் மூன்று பேர். அந்த வீட்டில் எப்போதும் ஒருவித மயான அமைதி நிலவியது. வீட்டில் உள்ளவர்கள் பேசும் குரல்களைக் கூட யாரும் கேட்கவில்லை. அந்த மூன்று பேரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறார்களா என்று கூட மற்றவர்களுக்கு ஐயம் இருந்தது.

காம்பவுண்டில் முன்புறம் சாலையைப் பார்த்து நின்ற நான்கு வீடுகளிலும் நடுத்தரக் குடும்பத்தினர்தாம் வசித்து வந்தனர். முதல் வீட்டில் பழனிச்சாமி வாத்தியார் என்று வீணை வித்துவான் குடி இருந்தார். சிபாரிசு, சபா போன்ற புழுக்களை அவர் மதிக்காமல் இருந்ததால் கேடு கெட்ட உலகம் அவர் பக்கம் திரும்பாமல் இருந்தது. ட்யூஷன்களிலும் மீனாக்ஷி அம்மன் கோயில் நவராத்திரி போன்ற விசேஷக்  கச்சேரிகளிலும், அவ்வப்போது கிடைத்த கல்யாண வீட்டு வாசிப்புகளிலும் ஜீவனம் நடத்த முடிந்தது. அவர்களுக்கு விஜயா என்று  பெண். அவள் பள்ளி இறுதி வகுப்பை முடித்து விட்டு நான்கு வருஷங்களாகக் கலியாணத்துக்குக் காத்துக் கொண்டிருந்தாள்.

இரண்டாம் வீட்டில் இந்தியன் வங்கியில் வேலை பார்த்த வரதராஜுவும் அவர் மனைவி லட்சுமியும்  இருந்தார்கள்.

இந்தக் கதைக்கு மற்ற இரண்டு குடித்தனக்காரர்களைப் பற்றிய அறிமுகம் தேவை இல்லை.

வரதராஜுதான் எல்லோரிடமிருந்தும் மாத வாடகையை வசூலித்து அவர் அலுவலகம் போகும் வழியில் இருந்த வீட்டுக்காரரிடம் கொண்டு போய்க் கொடுத்தார்.  இதற்காக மாதம் ஒரு முறை அந்தந்த வீட்டுக்

காரர்கள் வரதராஜுவிடம் வந்து நிர்ணயிக்கப்பட்ட தொகையைக் கொடுத்து விட்டுச் செல்லுவார்கள். இந்த வசூல் விவகாரத்தின் பொருட்டு தர்மலிங்கத்துக்கு வரதராஜுவுடன் பேசும் பழக்கம் ஏற்பட்டது. முதல் மாத வாடகை கொடுக்க வந்த போது வரதராஜு அவரிடம் “இதுக்கு முன்னாலே எங்கே குடியிருந்தீங்க?” என்று கேட்டார்.

அவர் “கல்கத்தாலே” என்றார். “ரிட்டயர்மென்டுக்கு அப்புறம் ஆழ்வார்குறிச்சிக்குப் போயிடலாம்னு நினைச்சுகிட்டு இருந்தேன். அதுதான் சொந்த ஊரு. ஆனா நாப்பது வருஷங் கழிச்சும் பரமகல்யாணியைத் தினமும் சேவிக்கிற பாக்கியம் கிடைக்கலே” என்று சிரித்தார்.

வரதராஜு ‘ஏன், என்ன ஆச்சு?’ என்று பார்வையாலேயே கேட்டார்.

“பையனுக்கு இங்கே காலேஜில் சீட்டு கிடைச்சிது. ஆஸ்டல்லே விடலாம்னுதான் இருந்தேன். ஆனா என் சம்சாரம் ஒத்துக்கலே. இங்க ஒரு மூணு வருஷம் மீனாச்சியைப் பாத்துகிட்டு சிவனேன்னு கிடடான்னு நமக்கு எழுதியிருக்கு.”

“நாப்பது வருஷமா? வேலையெல்லாம்?”

“ஒரு வெள்ளைக்காரன் கம்பனியிலே. சேந்தப்போ பத்து மணி ஆபீசுக்கு எட்டு மணிக்கே போயி கூட்டிப் பெருக்கணும்; டேபிள் சேர் எல்லாத்தையும் துடைக்கணும். பாத்ரூமைக் கழுவி சுத்தம் பண்ணனும். ஆபீஸ்லே வேலை பாக்கறவங்களுக்கு சமோசாவும் டீயும் அவங்க கேக்கிறப்போ வாங்கிக் கொடுக்கணும். ரூமுலேதான் தங்கி இருந்தேன். அங்கே திரும்பிப் போக ராத்திரி ஆயிரும்.  கடைசி பத்து வருஷத்திலே வீட்டுக்கும் ஆபீசுக்கும் சேத்து யூஸ் பண்ணக் கார் கொடுத்தாங்க. பதினோரு மணிக்கு ஆபீஸ். நாலு மணிக்கு வீடு. கம்பனி கஸ்டமர்களுக்கும் சப்ளையர்களுக்கும் தீபாவளிக்கு ரசகுல்லாவும் துர்கா பூஜைக்கு சோன் பப்டியும் பாக்கெட் பாக்கெட்டா அட்டன்டர்களை விட்டு அனுப்புவேன். மாசத்திலே பாதி நாள் இன்கம்டாக்ஸ், சேல்ஸுடாக்ஸ் ஆபீசர்களுக்கு ஸ்டார் ஹோட்டல்லே பார்ட்டி கொடுக்கிற நெலைமைக்கு ஏத்தி விட்டுட்டான் வெள்ளைக்கார பாஸ்” என்று புன்னகை செய்தார்.

பிறகு “நீங்க இந்த ஊர்தானா?” என்று தர்மலிங்கம் வரதராஜுவைக் கேட்டார்.

“எனக்குப் புட்டபர்த்தி பூர்வீகம். இங்கே ஒரு மில்லுலே வேலை கிடைச்சுதுன்னு வந்தேன். அப்புறம் பேங்கிலே வேலை கிடைச்சு இங்கேயே செட்டில் ஆயிட்டேன்” என்றார் வரதராஜு. “நானும் மீனாச்சி கிட்டே வந்து முப்பது வருஷம் ஆயிடுச்சு.”

“புட்டபர்த்தின்னா சத்திய சாயி பாபா?”

“ஆமா.”

“நிஜமாவே விபூதி எல்லாம் மேலேந்து கொட்டுமா?”

“எல்லாம் நம்பிக்கைதான். கடவுள் தலைக் கொண்டையிலே கங்கையை முடிஞ்சு வச்சார்னும், கெட்டவனுக்குப் பத்து தலை இருந்ததுன்னும், செங்கடலை  வத்த வெச்சு மத்தவங்க நடக்கறதுக்கு வழி பண்ணிக் கொடுத்தார்னும் சொல்லிட்டு இருக்கறதை எப்பிடி நம்புறோம்? அது மாதிரிதான்” என்றார் வரதராஜு.

“நீங்க கல்கத்தாலே இருந்தது பத்திப் பேசிட்டிருந்தீங்க. கல்கத்தாலே நீங்க எங்க குடியிருந்தீங்க?” என்று வரதராஜு யதார்த்தமாகக் கேட்டார்.

தர்மலிங்கம் கொஞ்சம் யோசித்தவர் போல மௌனமாக இருந்தார். பிறகு “அலிப்பூர்லே” என்றார். “நீங்க கல்கத்தா வந்திருக்கீங்களா?”

“நாங்க ரெண்டு வருஷத்துக்கு முன்னாலே ஒரு பத்து நாள் என் மச்சான் வீட்டுலே போய்த் தங்கினோம். அவன் அங்கே ரயில்வேலே இருக்கான்” என்றார் வரதராஜு

“அலிப்பூர்லேயா?”

“இல்லே. ஜே  சி போஸ் ரோடுக்குப் பக்கத்திலே. அங்கேர்ந்து அலிப்பூர் பக்கந்தான்னு  என் மச்சான்  சொல்லுவான் அங்கே அவனோட மாமனார் வீடு இருந்திச்சின்னு அடிக்கடி போவான். நாங்க கல்கத்தா போனப்போ எங்களையும் ஒரு தடவை அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப்  போயிக் காமிச்சான் ” என்றார் வரதராஜு.

” ஓ சம்பந்திங்க வீடா? அவங்க எங்கே இருந்தாங்க அலிப்பூர்லே? ” என்று தர்மலிங்கம் கேட்டார்.

வரதராஜு கொஞ்சம் யோசித்தார். பிறகு “எனக்கு ரோடு பேரு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது” என்றார். “ஆனா நாங்க போனப்போ சம்பந்தி வீடு பக்கத்திலே ஒரு ஆஸ்பத்திரி இருந்திச்சு. பெரிய ஆஸ்பத்திரி.”

தர்மலிங்கம் “ஆஸ்பத்திரியா? அப்போ கமாண்ட் ஆஸ்பத்திரியாதான் இருக்கும்” என்றார்.

வரதராஜு “ஆமா. அதேதான்” என்றார்.

“சரி, நான் கிளம்பறேன்” என்று எழுந்தார் தர்மலிங்கம்.

அவர் கூடவே வாசலுக்கு வந்த வரதராஜு “அப்ப எங்க இருந்தீங்க?” என்று கேட்டார்.

தர்மராஜு திடுக்கிட்டு “என்ன? என்ன?” என்றார்,

“இல்லே, நீங்க அலிப்பூர்லே எங்கே இருந்தீங்கன்னு கேட்டேன்” என்றார் வரதராஜு. .

“ஓ, அதுவா?” என்றார் தர்மலிங்கம். “ஆஸ்பத்திரிக்குக் கொஞ்சம் தள்ளி.”

“ஒரு வேளை நீங்க என் தம்பியைக் கூடப் பாத்திருப்பீங்க. அவனுங் கூட உங்களைப் பாத்திருப்பான்” என்றார் வரதராஜு.

தர்மலிங்கம் “அப்ப நான் வரட்டுமா?” என்று கேட்டபடி வெளியே சென்றார்.

அதற்குப் பின் அடுத்த மாதம்  வாடகை கொடுக்க வந்தார் தர்மலிங்கம், அவர் வரும் போது மாலை நாலரை இருக்கும். வரதராஜு காப்பி குடித்துக் கொண்டிருந்தார்.

வந்தவரைப் பார்த்து “வாங்க. உக்காருங்க. காப்பி சாப்பிடுங்க” என்று உபசரித்தார் வரதராஜு.

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நான் அப்புறமா வரட்டுமா?” என்று கேட்டார் தர்மலிங்கம் நின்று கொண்டே.

“அட, உக்காருங்க சொல்லுறேன். நம்ம வீட்டுக் காப்பியையும் டேஸ்ட் பண்ணிப் பாருங்க” என்று வரதராஜு சொல்லிக் கொண்டிருக்கும் போதே லட்சுமி ஒரு தட்டில் பட்சணங்களைக் கொண்டு வந்து ஒரு ஸ்டூலில் தர்மலிங்கம் முன்னால் வைத்து “சாப்பிடுங்க” என்றாள்.

அவர் சங்கோஜத்துடன் நாற்காலியில் உட்கார்ந்தார். தட்டிலிருந்து

அல்வாத்துண்டு ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார்.

வரதராஜுவிடம் “பிரமாதமா இருக்கே. நாகப்பட்டினம் மிட்டாய்க் கடையிலே வாங்கினதா?” என்று கேட்டார்.

“இல்லே. நம்ம வீட்டிலே செஞ்சதுதான்” என்றார் வரதராஜு சிரித்துக் கொண்டே.

“அடடா, எவ்வளவு பிரமாதமா இருக்கு? நான் ஒரு முட்டாள், நாகப்

பட்டினம் கடை அல்வாதான் உலகத்திலேயே டேஸ்டின்னு நினைச்சு

கிட்டு இருந்தேன்” என்று சிரித்தார். “அப்படியே கரையுதே நாக்கிலே! என்னமா ஒரு ஸ்மெல்லு!” என்று விடாமல் புகழ்ந்தார்.

“கொஞ்சம் மிச்சரையும் எடுத்துக்குங்க. காப்பி குடிக்கறப்போ

நாக்குலே கொஞ்சம் காரம் இருக்கணுமில்லே” என்றார் வரதராஜு.

மிக்சரை எடுத்து வாயில் போட்டு மென்றார். “இப்பவாச்சும் நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாப் பேசணும்! இது வீட்டிலே செஞ்சதுதானே!” என்றார்.

உள்ளேயிருந்து சிரித்துக் கொண்டே வந்த லட்சுமி அவரிடம் காப்பிக் கோப்பையைக் கொடுத்தாள்.

“இவ்வளவு காப்பியா?” என்று அவர் பிரமித்தார். “இன்னிக்கி ராத்திரி எங்க வீட்டிலே நான் ஒண்ணும் சாப்பிட வேணாம்னு நீங்க முடிவு பண்ணிட்டீங்க” என்றார். அப்புறம் வாடகைப் பணத்தைக் கொடுத்தார்.

“உங்க மச்சான் இந்தப் பக்கம் வருவாரா?” என்று கேட்டார்.

திடீரென்று அவர் அப்படிக் கேட்டதும் வரதராஜூவுக்கு ஒன்றும் புரியவில்லை. விழித்தார்.

“அதான் கல்கத்தாலே இருக்காருன்னிங்களே!”

“ஓ அவனா? எனக்கு மொத்தம் மூணு மச்சாங்க இருக்காங்க. அதான் நீங்க திடீர்னு கேட்டதும் முழிச்சிட்டேன். அவன் எங்க இப்ப கல்கத்தாலேந்து வர்றது? போன வருஷந்தான் வந்திட்டுப் போனான். குடும்பத்திலே எல்லாரையும் இழுத்துப் பிடிச்சி அழச்சிட்டு வரதுன்னா சும்மாவா இருக்கு?” என்றார் வரதராஜு.

“அது சரி, அது சரி” என்று எழுந்தார் தர்மலிங்கம்,

லட்சுமி உள்ளேயிருந்து வந்து ஒரு பாத்திரத்தை அவரிடம்கொடுத்தாள்.

“கொஞ்சம் அல்வாவும், மிச்சரும் வச்சிருக்கேன். அம்மாவுக்கும் தம்பிக்கும் கொடுங்க.”

வியப்பு அவரை அடித்துத் துவைத்துப் போட்டது போல ஒரு நிமிஷம் தர்மலிங்கம் அப்படியே நின்றார். பிறகு லட்சுமியைப் பார்த்து வணங்கி விட்டு மெதுவாக வெளியே சென்றார்.

வரதராஜு “இந்த மனுஷன் ஒரு மாசம் கழிச்சு வந்து எதுக்கு உன் தம்பியைப் பத்தி கேக்கறாரு? ஒரு நிமிஷம் ஒண்ணும் புரியாம முழிச்சிட்டேன்” என்றார் மனைவியிடம்.

“கல்கத்தாலே உங்க மச்சான் இருக்கான்னதும் நீங்க ரொம்ப சொந்தமாயிட்டீங்க போலிருக்கு” என்று சிரித்தாள் அவர் மனைவி,

“அப்பிடியா சொல்லுறே? எனக்கு என்னமோ அப்படித் தோணலியே?” என்றார் வரதராஜு.

“பின்னே எப்பிடித் தோணுதாம்?”

அவர் ஒன்றும் சொல்லாமல் அவளைப்  பார்த்தார்.

“வந்ததுக்கு ஏதாவது பேசிட்டுப் போகணும்னு நினைச்சிருப்பாரு. பாவம்” என்றாள் லட்சுமி.

 

ரு நாள் தாயம்மா லட்சுமியிடம் வந்து “நம்ம அய்யாவோட பிரெண்டு

ஊருக்குப் போயிருக்காரு” என்றாள்.

“யாரு? எந்த ஊருக்கு?” என்று லட்சுமி கேட்டாள்.

“அதான் பின்  வூட்லே இருக்காரே அவருதான்.”

“யாரு கல்கத்தாக்காரரா?”

“ஆமா. அவருதான். அந்த ஊருக்குத்தான் போயிருக்காராம்” என்றாள் தாயம்மா.

லட்சுமிக்கு வியப்புடன் கூடவே சற்றுக் கோபமும் வந்தது. கல்கத்தா போற மனுஷனுக்கு நம்ம கிட்டே ஒரு வார்த்தை சொல்லத் தோணலை பாரு என்று நினைத்தாள். தர்மலிங்கம் போவதை அவளிடம் தெரிவித்திருந்தால் தம்பிக்குக் கொஞ்சம் பலகாரங்கள் செய்து கொடுத்திருப்பாள். அடுத்த மாதம் அவன் மனைவிக்குப் பிறந்த நாள் வருகிறது. அதுக்கு ஒரு  புடவை வாங்கிக் கொடுத்தனுப்பி இருக்கலாம்.

மாலையில் வரதராஜு வீட்டுக்கு வந்த போது அவள் தாளமாட்டாமல் அவரிடம் பொருமினாள்.

“போன மாசம் ஒரு நாள் திருச்சிக்கு அவரு மாத்திரம் ஒரு கலியாணத்துக்குப் போயிட்டு வரேன்னு உங்ககிட்டே சொல்லிட்டுப் போனாரில்லே? இப்போ உங்க மச்சான் இருக்கற ஊருக்குப் போகறதைக் கூட சொல்லாமப் போறாரு! ஏதாச்சும் பார்சல் கட்டிக் கொடுத்திருவோமுன்னு பயமா?”

“சரி விடு. அந்த மனுஷனுக்கு என்ன பிரச்சினையோ, நமக்கு என்ன தெரியும்? திடீர்னு போயிருக்காருன்னா ஒண்ணும் குறை சொல்ல முடியாது. ஆனா பிளான் போட்டு ஊருக்குப் போனாருன்னா நாமதான் அவருகிட்டேர்ந்து விலகி நிக்கணும். இல்லியா?” என்றார் அவர்.

ஒரு வாரம் கழித்து தர்மலிங்கம் திரும்பி விட்டார்.அவர் டாக்சியிலிருந்து இறங்கும் போது வாசலில் நின்ற வேப்பமரத்திலிருந்து வரதராஜு வேப்பங்குச்சியை ஒடித்துக் கொண்டிருந்தார். தர்மலிங்கம் கூட ஓர் இளைஞனும் இறங்கினான். உயரமாக, கட்டுடலுடன், செவேலென்று இருந்தான். காரிலிருந்து ஒரு பெட்டியும் இரு தோள் பைகளும் இறக்கப்பட்டன. தர்மலிங்கம் அவரருகே வரும் போது வரதராஜுவிடம் “இது என் பையன் சார். செல்வம்னு பேரு. நாராயணனுக்கு அண்ணன். கல்கத்தாலே வேலை பாக்குறான்” என்றார். அவனைப் பார்த்து “சாருக்கு வணக்கம் சொல்லுடா” என்றார். அவன் கை தூக்கி அவரை வணங்கினான்.

“திடீர்னு கிளம்பிப் போக வேண்டியதா ஆயிடிச்சு. அதான் உங்ககிட்டே ஒரு வார்த்தை சொல்லிக்கக் கூட முடியாமப் போயிருச்சு” என்றார் தர்மலிங்கம்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லே. போன வேலை திருப்தியா ஆச்சுன்னா சரிதான்” என்றார் வரதராஜு.  அவர்கள் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நடந்தார்கள். அந்தப் பையன் இரண்டு மூன்று முறை திரும்பிப் பார்த்துக் கொண்டே போனான்.

அடுத்து வந்த நாள்களில் காம்பவுண்டில் உள்ளவர்களுக்கு செல்வம் பெரும் காட்சிப் பொருளாகி விட்டான். தினமும் மாலையில் அண்ணனும் தம்பியும் வெளியே கிளம்பி விடுவார்கள். செல்வம் அணிந்திருந்த உடைகள் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தன. ஒரு நாள் அணிந்த உடையை அவன் மறுநாள் அணிந்து யாரும் பார்க்கவில்லை. அண்ணனும் தம்பியும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டு செல்வார்கள்.

ஒரு நாள் மாலையில் வாத்தியாரின் மனைவியும் லட்சுமியும் பேசிக் கொண்டிருந்த போது விஜயாவின் கலியாணப் பேச்சு வந்தது.

“நானும் படாதபாடு படுறேன். இந்தப் பொண்ணுக்கு ஒரு சம்பந்தம் அமைஞ்சிட்டா தேவலே” என்றாள் வாத்தியாரின் மனைவி.

“நாமதான் கையிலே வெண்ணையை வச்சிக்கிட்டு நெய்க்கு அலையறமோன்னு தோணுது” என்றாள் லட்சுமி.

“என்ன சொல்றீங்க?”

“ஆமா. இந்தப் பின்வீட்டுலே இருக்காரே தர்மலிங்கம், அவர் பிள்ளையைப் பாத்தீங்கள்ளே? ராஜா மாதிரி இருக்கான். கல்கத்தாலே வேலையிலே இருக்கான்னு சொல்றாங்க. அவனை விஜயாவுக்குப் பாக்கலாமில்லே?”

“ஆனா யாரு எப்பிடிப் போயி கேக்கறது? அவங்க வீட்டுலே இருக்கிறவங்க சண்டிகேஸ்வரரைக் குலதெய்வமா வச்சிருக்கிற மாதிரியில்லே இருக்காங்க? அவங்க யாரும் இங்கே  யாரோடையும் பேசி நான் பாத்ததில்லையே!” என்றாள் வாத்தியாரின் மனைவி. அவள் குரலில் லட்சுமியின் யோசனைக்கு வரவேற்பிருந்தது.

“நா எங்க வீட்டுக்காரரைக் கேக்கச் சொல்லறேன். அந்த வீட்டு மனுஷன் நாலுலே ரெண்டிலே இவங்க கிட்டே வந்து பேசிட்டுப் போவாரு” என்றாள் லட்சுமி. அன்றிரவு அவள் வரதராஜுவிடம் இதைச் சொன்ன போது “இந்த ஐடியா நல்லா இருக்கே. தர்மலிங்கத்துக்கிட்டே கேட்டுப் பாக்கலாம்” என்றார். ஆனால் மறுநாள் அவர் ஆபிசிலிருந்து வரும் போதே இரவு மணி எட்டாகி விட்டது. அவரைப் பார்த்ததும் சூடாகத் தோசை சுட லட்சுமி அடுப்படிக்குச் சென்றாள்.

எட்டரைக்கு எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். அப்போது ‘ஓ’வென்று பெருங் குரலில் யாரோ ஓலமிடுவது கேட்டது. பதறியடித்துக் கொண்டு வரதராஜு வாசலுக்கு ஓடினார். ஆனால் சத்தம் பின் வீட்டிலிருந்து வந்து கொண்டு இருந்தது. அவர் வேகமாகத் தர்மலிங்கத்தின் வீட்டை அடைந்தார். அவருக்குப் பின்னாலேயே பழனிச்சாமி வாத்தியாரும் ஓடி வந்தார். வரதராஜு “தர்மலிங்கம் சார், தர்மலிங்கம் சார்!” என்று சத்தமாக அழைத்தார். உள்ளேயிருந்து எந்த மறுமொழியும் வரவில்லை. உள்ளே இருந்த அழுகுரல் சத்தத்தில், தான் கூப்பிடுவது கேட்கவில்லை போலும் என்று வரதராஜு கதவைத் தட்டினார். வாத்தியாரும் சேர்ந்து கொள்ள இருவரும் பலமாகக் கதவைத் தட்டினர். ஆனால் எந்தவித பதிலும் உள்ளிருந்து வரவில்லை. சில வினாடிகளில் அழுகுரலின் உக்கிரம் அடங்கி நின்றது. ஓரிரு நிமிஷங்கள் இருவரும் காத்திருந்து விட்டுத் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள்.

மறுநாள் காலையில் தர்மலிங்கம் வீட்டில் பால் கொண்டு வந்து தரும் கறுப்பாயி, லட்சுமியிடம் வந்து அவர்கள் வீட்டில் கதவைத் தட்டினாலும் திறக்கவில்லை என்று சொன்னாள். வரதராஜூவுக்கும் லட்சுமிக்கும் வயிற்றில் கலவரம் பிடுங்கித் தின்றாலும் வேறு எதுவும் செய்ய முடியாத நிலைமையில் இருப்பதை உணர்ந்தார்கள். வரதராஜு மாலை வீடு திரும்பியதும்  லட்சுமி அவரிடம் அன்று மத்தியானம் தர்மலிங்கம் வீட்டை விட்டு வெளியே வந்து தண்டல்காரன்பட்டிப் பக்கம் நடந்து சென்றதாகச் சொன்னாள். ஒரு மாதிரி தள்ளாடிக் கொண்டே அவர் சென்றது பார்க்கப் பரிதாபமாக இருந்தது என்றாள்.

ஆனால் அடுத்த இரண்டு நாள் கழித்து நடந்ததுதான் மிகுந்த அதிர்ச்சியை வரதராஜுவிடம் ஏற்படுத்தி விட்டது. வரதராஜுவின் வீட்டுக்கு அன்று  மாலையில் வந்து வாத்தியார்தான் விஷயத்தைச் சொல்லிக் கோபப்பட்டார். அன்று காலை வாத்தியாரின் வீட்டுக் கொல்லைப்புறம் வழியாக அவர் வீட்டுக்குள் வெகு வேகமாக செல்வம் ஓடி வந்தானாம். வந்தவன்  வாசல் வரை சென்று விட்டு மறுபடியும் அதே வேகத்தில் திரும்ப வந்தானாம். வெள்ளிக்கிழமையென்று அப்போதுதான் எண்ணெய் தேய்த்துக் குளித்து விட்டு வெளியே வந்த விஜயாவின் மீது மோதி அவள் கீழே விழுந்து விட்டாள். அவன் நின்று அவளைப் பார்த்துச் சிரித்தானாம். அவள் பயந்து போய் “ஐயோ ஐயோ!” என்று கத்தியதைக் கேட்டு விஜயாவின் அம்மா வந்து பார்த்து அவளும் அதிர்ச்சியில் உறைந்து விட்டாள். செல்வம் மறுபடியும் திரும்பி வாசல் வழியே ஓடிப் போய் மெயின் ரோடில் நின்றானாம். அங்கே அப்போது பஸ்களும் லாரிகளும் கார்களும் பறந்து கொண்டிருந்த நேரம். இதற்குள் அவன் வீட்டில் இல்லாததைக் கண்டு பிடித்த நாராயணன் வாசலுக்கு வந்து ரோடில் நிற்பவனைப் பார்த்திருக்கிறான். அவனை நோக்கி ஓடிய இவனைப் பார்த்து அவன் ரோடின் குறுக்காக எதிர் முனைக்கு ஓடினானாம். அப்போது வந்து கொண்டிருந்த ஸ்கூட்டர் ஒன்றின் மேல் மோதி செல்வம் ரோடில் விழுந்து விட்டான். கையிலும் காலிலும் நல்ல அடி. தோல் சிராய்ப்பினால் ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. ஒரே களேபரமாகிக் கடைசியில் நாராயணன் அவனை ஒரு ரிக் ஷாவில் ஏற்றிப் பக்கத்தில் இருந்த கிளினிக்குக்கு எடுத்துச் சென்றான். அவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்த போது மதியம் ஒரு மணியாகி விட்டதாம். கைகளிலும் கால்களிலும் கட்டுப் போட்டிருந்த அவனை நாராயணன்தான் ரிக் ஷா விலிருந்து தூக்கிச் சென்றானாம்

கோபம் கொந்தளித்துக் கொண்டிருந்த முகத்துடன் இதையெல்லாம் சொல்லி விட்டு பழனிச்சாமி அவரிடம்  “என்ன சார் இங்கே நடக்குது? வீட்டுக்குள்ளாற ஒருவன் தாந்தோணியா ஓடி வாரான். குளிச்சிட்டு வந்த பொம்பளைப் புள்ளே மேலே இடிச்சு அதைக் கீளே தள்ளி விட்டுருக்கான். போதாதுக்கு அவ கீளே விளுந்து கிடக்கிறதைப் பாத்து சிரிச்சுகிட்டே நின்னானாம். மனுஷத்தன்மையே இல்லாத பயலால்லே இருக்கான்? ‘இப்பிடி ஆயிருச்சே, மன்னிச்சுக்குங்க’ன்னு ஒரு வார்த்தை அந்தப் பயலோட அப்பன் கிட்டேயிருந்து இதுவரைக்கும் வரலே. என்னை என்னா கையாலாகாத பயலுன்னு நினைச்சுகிட்டு இருக்காங்களா? வீச்சரிவா எடுத்தா ஒரே போடுதான். நான் செயிலுக்குப் போனாலும் ஆயிட்டுப் போகுதுன்னு வெட்டிப் போட்டிருவேன்” என்று  கத்தினார்.

“சார். பதட்டப்படாதீங்க. உங்க கோபம் எனக்குப் புரியுது. உங்க நிலைமையிலே இருந்தா நான் கூட இப்படித்தான் இருப்பேன். நாம  அங்கே போயி தர்மலிங்கத்தையே கேப்போம்”  என்று வரதராஜு அவரைச் சமாதானப்படுத்த முயன்றார்.

“நாம போவோம். ஆனா நீங்க நாளைக்கு வீட்டுக்காரரைப் பாத்து முதல்லே இந்தக் குடித்தனத்தை வெளியே போகச் சொல்லணும்” என்றார்.

“நிச்சயமா. காலேலே மொத வேலையாப் போயி வீட்டுக்காரரைப் பாத்துப் பேசிடறேன்” என்றார் வரதராஜு. அவராலும் ஆத்திரத்தை அடக்கிக் கொள்ள முடியவில்லை.

அவர்கள் தர்மலிங்கத்தின் வீட்டை அடைந்து கதவைத் தட்டினார்கள். தர்மலிங்கம்தான் கதவைத் திறந்தார். அவரைப் பார்த்ததும் வரதராஜு திடுக்கிட்டு விட்டார். சில தினங்களில் ஒருவரால் இவ்வளவு கிழடு தட்டிப் போக முடியுமா? நைந்த கண்களும், வதங்கிய முகமுமாகக் காணப்பட்ட அவர் கதவைப் பிடித்துக் கொண்டிராவிட்டால் கீழே விழுந்து விடுவார் போலத் தோன்றியது. கோபத்துடன் வந்த வாத்தியார் கூட ஒரு நிமிடம் அரண்டு போய் நின்றார்.

தர்மலிங்கம் அவர்களை உள்ளே அழைத்து உட்காரச் சொன்னார்.

“இன்னிக்கிக் காலையிலே உங்க பையன் எங்க வீட்டுக்கு வந்து அடிச்ச கூத்து உங்களுக்குத் தெரியுமா?” என்று பழனிச்சாமி தர்மலிங்கத்தைப் பார்த்துக் காட்டமாகக் கேட்டார்.

தர்மலிங்கம் திடுக்கிட்டு அவரைப் பார்த்தார். “என்ன ஆச்சு? எனக்குத் தெரியாதே” என்றார் குரல் நடுங்க.

பழனிச்சாமி அன்று அவர் வீட்டில் நடந்ததைக் கூறினார். “இது வெளியே தெரிஞ்சா எம் பொண்ணுக்கு எவ்வளவு அவமானம்.  பெத்த மனசு துடிக்குது.”

தர்மலிங்கம் வாத்தியாரின் கைகளைப் பிடித்துக் கொண்டு “இதை உங்க காலா நினைச்சு விழுந்து கும்பிடறேன். தயவு செய்து மன்னிச்சிருங்க என்னை” என்றார்.

வாத்தியார் “நீங்க எதுக்கு மன்னிப்பு கேக்கறீங்க? அந்தப் பயித்தியக்காரப் பயலைக் கூப்பிடுங்க. நீங்க மட்டும் இல்லேன்னா, இத்தினி நேரத்துக்கு அவன் கையைக் காலை முறிச்சிப் போட்டிருப்பேன்” என்றார் கோபமாக.

“நீங்க சொல்லுறது ரொம்ப சரி. அவன் பயித்தியக்காரன்தான். இப்ப ரூமுக்குள்ளாறே அடைச்சுப் போட்டிருக்கோம்” என்றார் தர்மலிங்கம்.

“என்னது?”

“இது என்ன வியாதின்னு தெரியலே. எல்லாரையும் மாதிரி ஒழுங்கா பேசுவான், நடப்பான், சாப்புடுவான், தூங்குவான். முன்னாலே ஒரு வருஷத்துக்கு ஒன்றரை வருஷத்துக்கு ஒரு வாட்டி திடீர்னு யாரோட கண்ட்ரோலுக்கும் அடங்காம, திடீர்னு சிரிச்சுக்கிட்டு  திடீர்னு அழுதுகிட்டு, தனக்குள்ளேயே பேசிகிட்டு ஓடுவான். ஏன் இப்பிடின்னு யாருக்குமே தெரியாது. இன்னிக்கி உங்க வீட்டுக்குள்ளே ஓடி வந்த மாதிரி திடீர்னு வீட்டை விட்டு வெளியே வந்து ஓடிப் போயிருவான்.

ஆனா இப்ப இந்த ஒரு வருஷத்திலே இது மாதிரி நடக்கறது மூணாவது தடவை. அதுக்குத்தான் பதறிட்டு கல்கத்தா போனேன். டாக்டர் அவனைத் தனியா விடாதீங்க. கொஞ்ச காலம் உங்க கூடவே இருக்கட்டும்னு சொல்லிட்டாரு. அதனாலே இங்கே கூட்டிக்கிட்டு வந்தேன்” என்றார்.

சத்தம் போட வந்தவர்கள் சத்தமடங்கிக் கிடந்தார்கள்.

தர்மலிங்கம் பழனிச்சாமியிடம் “சாரு கூட என்னையத் தப்பா நினைச்சிருப்பாரு. அவரு நான் கல்கத்தாவில் இருக்கறதை பத்திக் கேக்குறப்போ அதை மறிச்சிகிட்டு வேறே எதாவது கேள்வி கேட்டு பதில் சொல்லிப் பேச்சை மாத்தப் பாப்பேன். என் பையனை இவரோ இவரு உறவோ பாத்துறக்கூடாதுன்னுதான் அப்பிடி நடந்துக்கிட்டேன்” என்று மன்னிப்புக் கோரும் குரலில் சொன்னார்.

“நா அதெல்லாம் மனசிலே வச்சிக்கலையே” என்று வரதராஜு பரிவுடன் அவரிடம் சொன்னார். “ஆனா அன்னிக்கி ராத்திரி உங்க வீட்டுலேந்து அழற குரல் வந்தப்போவே எனக்கு சந்தேகமா இருந்துச்சு. நீங்கதான் நாங்க ரெண்டு பேரும் வந்து அப்பிடிக்  கதவைத் தட்டியும் கதவைத் தெறக்கவேயில்லை” என்றார் வரதராஜு.

தர்மலிங்கம் அவர்கள் இருவரையும் பார்த்து “ரெண்டு நிமிஷம் நாம வெளியிலே போய்ப் பேசலாமா?” என்று இறைஞ்சும் குரலில் கேட்டார்.

அவர்கள் மூவரும் வாசலில் இருந்த வேப்ப மரத்தின் கீழ் வந்து நின்றார்கள். சாலையில் போக்குவரத்து எதுவுமில்லாமல் நிசப்தம் தெருவை அடை காத்தது. இருந்த இருள் வெளியில் ஏதோ ஒரு வீட்டில் சுவர்க்கோழிஒன்று  ‘ணிக்’கிட்டுக் கொண்டிருந்தது. நின்றிருந்தவர்களின் மனப் போராட்டங்களை எதிரொலித்து வேப்ப மர இலைகள் அசையாமல் நின்றன. அவர்களைப் பார்த்து உறுமிக் கொண்டே ஒரு தெரு நாய் ஓடிற்று.

தர்மலிங்கம் “என் சம்சாரத்தை வச்சுக்கிட்டுப் பேச வேணாமின்னுதான் இங்க உங்களைக் கூட்டிகிட்டு வந்தேன்” என்று சொன்னார். “அன்னிக்கி ஏன் அப்பிடி செல்வம் பய அழுதான் தெரியுங்களா? ராத்திரி எட்டு மணிக்கு சாதாரணமா சிலோன் ரேடியோலே பாட்டு கேட்டுகிட்டு இருந்தவன் தீடீர்னு டிரஸ்ஸைக் கழட்டிப் போட்டுட்டு அம்மணமா நிக்குறான். டேய் டேய் என்னடா பண்ணுறேன்னு அவங்கிட்டே நான் ஓடறேன். அவன் சிரிச்சுகிட்டே எதோ ஓடிப்பிடிச்சு விளையாடற குழந்தை மாதிரி கொல்லப்பக்கம் ஓடுறான். என்ன சத்தம்னு அவங்கம்மா வெளிலே வந்து பாத்து அப்படியே கலங்கி நின்னுடுச்சி. நாராயணன்தான் அவன் பின்னாலேயே ஓடிப் போயி தடுத்து நிறுத்தி வீட்டுக்குள்ளாற  இழுத்திட்டு வந்தான். கழட்டிப் போட்ட உடுப்பை மாட்டுறான்னா மாட்டேன்னு மணிக் கணக்கா அடம் பிடிக்குறான். கெஞ்சிக் கதறி மெரட்டி சொன்னாலும் கேக்காம உடுப்பைக் கழட்டி எறிஞ்சு எறிஞ்சு ஓடப் பாக்குறான். நாராயணன் அவனை ரூமுக்குள்ளை தள்ளிக்  கட்டிப் போட்டான். அப்போ அவன் மூஞ்சிலே இந்தப் பய காறித் துப்பினான். வேணுமின்னே ஒரு வார்த்தை சொல்லாம உக்காந்தபடியே ஒண்ணுக்குப் போயிட்டான். அப்பதான் நாராயணனுக்கும் பொறுமை போயிருச்சு. உருட்டுக் கம்பை எடுத்திட்டு வந்து சாத்த ஆரமிச்சான். அடிக்காவது பயந்து அடங்கட்டுமின்னு. வலி பொறுக்காம அவன் அலறினதும் அப்பதான்.”

மற்ற இருவரும் வாயடைத்து நின்றார்கள். சமாளித்து வரதராஜுதான் தர்மலிங்கத்தின் முதுகில் அணைப்பாகக் கை வைத்து மெல்லத் தட்டிக் கொடுத்தார். பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து தர்மலிங்கத்தை அவரது வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டுத் திரும்பினார்கள்.

வீட்டுக்குத் திரும்பிய வரதராஜு லட்சுமியிடம் தர்மலிங்கத்தின் தோற்றத்தையும், செல்வம் மனநலம் சரியாக இல்லாதவன் என்பதையும் சொல்லிப் புலம்பித் தீர்த்து விட்டார்.

“நீங்க செல்வத்தைப் பாத்தீங்களா?”

“ஆமா. உள்ளே ஒரு ரூமிலே கட்டிப் போட்டு வச்சிருக்காங்க. லேசா கதவைத் திறந்து காமிச்சாரு தர்மலிங்கம். கட்டில்லே அவன்  படுத்திருந்தான். எங்க மூணு பேரையும் அவன் கண்ணு பாத்துகிட்டே இருந்திச்சு. அவன் மனசிலே என்ன ஓடிக்கிட்டு இருந்திச்சோ?” என்றார் வரதராஜு.

மறுநாள் வரதராஜு வழக்கம் போல் காலை ஆறு மணிக்கு நடைப் பயிற்சிக்குக் கிளம்பிப் போகும் போது பழனிச்சாமி அவர் வீட்டிலிருந்து வெளியே வந்தார்.

“என்ன இன்னிக்கி புதுசா வாக்கிங் ஆரமிச்சிருக்கீங்களா?” என்று பழனிச்சாமியைப் பார்த்து வரதராஜு சிரித்தார்.

“நீங்க வெளியே வரதுக்காகத்தான் நான் காத்துக்கிட்டிருந்தேன். வாங்க போகலாம்” என்று பழனிச்சாமி வரதராஜுவுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தார்.

நடந்து செல்கையில் “நேத்தி ராத்திரி இந்த தர்மலிங்கத்தையும் அவரு குடும்பத்தையும் நினைச்சு நான் சுத்தமா தூங்கவே இல்லே” என்றார் பழனிச்சாமி. “உலகத்துலே கடவுள் மனுஷனை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறான் பாருங்க.”

“ஆமா. விஜயாவுக்கு நடந்ததைப் பத்தி நானும் லட்சுமியும் கூட நேத்து ரொம்ப நேரம் பேசிகிட்டு இருந்தோம். இன்னிக்கிக் காலேலே முடியாது. ஆனா சாயங்காலம் ஆபீஸ்லேர்ந்து திரும்பி வரப்போ வீட்டுக்காரரைப் பாத்து சொல்லிட்டு வந்திடறேன்” என்றார் வரதராஜு.

“இல்லே. வேணாம். நீங்க வீட்டுக்காரரைப் பாத்து தர்மலிங்கத்தைக் காலி பண்ணச் சொல்ல வேணாம்.”

வரதராஜு அவரை உற்றுப் பார்த்தார்.

“நேத்து ராத்திரி விஜயாவுக்கு நடந்ததைப் பத்தி நான் எனக்குள்ளேயே பேசிக்கிட்டிருந்தேன். யோசிச்சுப் பாத்தா ஒருத்தன் பைத்தியமா இருக்குறப்போ அவனுக்கு மனசுன்னு ஒண்ணு இருக்குதான்னு சந்தேகமாத்தான் இருக்கு. ‘அவன் கண்ணு பாக்குறது காது கேக்குறது எல்லாம் அவன் மூளையிலே பதிஞ்சு பாக்குறானா கேக்குறானா என்ன?’ன்னு எனக்குத் தோணிச்சு. நாம வயசுப் பிள்ளைகளா இருந்தப்போ பக்கத்திலே எதுத்தாப்பிலே வர்ற நம்ம வயசுப் பொண்ணுங்களை ஓரக் கண்ணாலே பாப்போம். அவ பார்வை நம்ம பக்கம் இல்லேன்னு நல்லாத் தெரிஞ்சா அவ மேலே முழுக் கண்ணையும் வச்சுப் பாப்போம். அப்போ நம்ம மனசிலே அப்பிடி ஒரு சந்தோஷம் வரும். பயமும் வரும். நமக்கெல்லாம் அப்போ இருபது இருபத்திரண்டு வயசு இருந்திருக்குமா? இப்போ இந்த செல்வம் பயலுக்கும் அந்த வயசுதானே இருக்கும்? அன்னிக்கு செல்வம்  பய கீழே விழுந்து கிடந்த என் மகளைப் பாத்தப்போ அவன் கண்ணு அவ மேலே பட்ட மாதிரி இருந்திருக்கும். ஆனா பார்வை? அந்தப் பித்த நிலையிலே ஆம்பளை பொம்பிளைங்கிற வித்தியாசமெல்லாம் தெரிஞ்சிருக்குமா அவனுக்கு? எனக்கு நான் அது வரைக்கும்  குமுறிக்கிட்டே இருந்ததை நினைச்சு ராத்திரி ரொம்ப வெக்கமாயிருச்சு” என்றார் பழனிச்சாமி.

பழனிச்சாமி பேசிக் கொண்டு வந்தார். வானம் அலம்பி விட்ட தரை போல சுத்தமாக இருந்தது. அவர்களைத் தழுவிச் சென்ற அதிகாலையின் இளங்காற்றில் பழனிச்சாமியின் வார்த்தைகள் குளித்தெழுந்து மெருகேறியது போல வரதராஜூவுக்குத்தோன்றிற்று.அவரைத்

தழுவிக் கொண்டு நிற்க வேண்டும் போலவும் அவரது கைகளையும் நெற்றியையும் முத்தமிட வேண்டும் போலவும் வரதராஜூவுக்கு இருந்தது. அக்கம் பக்கம் வந்து போய்க் கொண்டிருந்த ஜனம் வேடிக்கை பார்க்கும் என்ற தயக்கத்தில் அவர் எதுவும் செய்யாமல் நடந்து சென்றார்.

பழனிச்சாமி “தர்மலிங்கமும் என்னா பாடு பட்டுக்கிட்டு இருப்பாரு? சொந்த வீட்டிலே கண்ணுக்கு முன்னாலே சொந்த மகனை ஜெயில்லே போடுற மாதிரி கட்டிப் போட்டு பாத்துகிட்டு இருக்குறதை விட வேறே பெரிய தண்டனை இந்த வயசிலே அவருக்கு வேணுமா? அவரு சம்சாரத்தை நினைச்சா எனக்கு அப்பிடியே புரட்டிக்கிட்டு வருது. வயசுக்கு வந்த மகன்  உடம்புல ஒரு பொட்டுத் துணி இல்லாமே நிக்கறதைப் பாக்குற அம்மாவோட மனசு எப்பிடி முறிஞ்சு போயிருக்கும்? அந்தத் துக்கத்தை அவுங்க யாரோடவாவது பகிந்துக்க முடியுமா? நினைச்சு நினைச்சு மறுகுறதைத் தவிர வேறே என்ன செய்ய முடியும் அவுங்களாலே? தர்மலிங்கத்தோட சம்சாரம் அனுபவிச்சிட்டு இருக்கிற கஷ்டத்துக்கு முன்னாலே என்னோட வீட்டக்காரம்மா ஓரு நா பட்ட கஷ்டம் எந்த மூலைக்குன்னு நெஞ்சு பொங்கி கிட்டே இருக்கு. கடவுள் ஏன் இப்படியாப்பட்ட கஷ்டத்தைக் கொடுக்குற கயவாளியா இருக்கான்னு திட்டணும் போல இருக்கு” என்று உடைந்த குரலில் சொன்னார். அவரது உடல் லேசாக நடுங்கிக் கொண்டிருந்ததை வரதராஜு பார்த்தார்.

“சரி, ரெண்டு நிமிஷம் உக்காந்துட்டுப் போகலாம்” என்று சாலை ஓரத்தில் போட்டிருந்த சிமெண்டு பெஞ்சுக்கு பழனிச்சாமியை வரதராஜு அழைத்துச் சென்றார்.

 

 

 

 

 

 

 

 

 

 

காம மறுப்பு: மூன்றாம் பாலினமும் வன்முறையின் உச்சமும் (சு.வேணுகோபாலின் பால்கனிகள் நாவலை முன்வைத்து)

முனைவர் ம இராமச்சந்திரன்

‘காமக் கடல்மன்னும் உண்டே அது நீந்தும்
ஏமப் புணை மன்னும் இல்’ (குறள் 1164)

உலகில் தோன்றும் ஒவ்வொரு உயிரினத்துக்கும் இங்கு வாழ்வதற்கான முழு உரிமை உண்டு. காமத்தாலும் காதலாலும் பின்னிப் பிணைந்த வாழ்க்கையில் மறுக்கப்படும் காமத்தாலும் ஒதுக்கப்படும் காதலாலும் வாழ்வியல் சிக்கல்கள் தோன்றுகின்றன. வாழ்வியல் சிக்கலும் போராட்டமும் ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்குமானதாக இருக்கலாம், ஒரு மனிதனுக்கும் ஒரு குடும்பத்திற்குமானதாக இருக்கலாம். ஒரு மனிதனுக்கும் ஒரு சமூகத்திற்குமானதாக இருக்கலாம். ஒரு பாலித்திற்கும் இன்னொரு பாலினத்திற்குமானதாக இருக்கலாம். இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் காமத்தாலும் காதலாலும் சிக்குண்டு அல்லாடும் இவ்வாழ்க்கைச் சூழ்நிலையில் ஒரு குடும்பத்தில் மூன்றாம் பாலினமாகப் பிறந்த ஒருவனின் அல்லது ஒருத்தியின் காமம் சார்ந்த உளவியல் சிக்கல்களையும் சமூகச் சிக்கல்களையும் கேள்விக்குள்ளாக்கும் நாவல் பால்கனிகள். இந்நாவலை சு.வேணுகோபால் எழுதியுள்ளார். இதனைத் தமிழினி அதிகப் பிழையோடு வெளியிட்டுள்ளது.

இன்றைய இருபத்தொன்றாம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் மூன்றாம் பாலினத்தவருக்கான உரிமைகள் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதை உற்றுநோக்கும் சூழலில் பால்கனிகள் நாவல் முக்கியத்துவம் பெறுகின்றது. ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகள் இன்றளவும் இந்திய, தமிழ்ச் சமூகத்தை வந்தடையவில்லை. மூன்றாம் பாலினத்தவர்கள் இச்சமூகத்தில் வாழ தகுதியற்றவர்கள் என்ற எண்ணமோ அல்லது பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்படக் கூடியவர்கள் என்ற எண்ணமோ அல்லது இழி பிறவிகள் என்ற எண்ணமோதான் மேலோங்கி நிற்கிறது.

பிறந்து வளர்ந்த குடும்பமே ஒதுக்கித்தள்ளுதல், ஆண் பெண், சார்ந்து பழகிக்கொள்ளும் நடைமுறையில் ஒவ்வாமை, கேலி, கிண்டல், அதிகார மீறல் என்ற சமூகக் கொடுமைகள், தனக்கான பாலியல் சுதந்திரத்தைப் பெறமுடியாமல் தவிக்கும் நிலை. வேலைவாய்ப்பில் புறக்கணிப்பு, பொது இடங்களில் அருவருப்பான பார்வை, பாலியல் சீண்டல்கள் என்று மூன்றாம் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்கள் அதிகம். இதன் விளைவு சமூகத்தைச் சீண்டும் நாகரிகத்தை உடைக்கும், மதிப்பீடுகளைச் சின்னாபின்னப்படுத்தும் நடத்தை சார் எதிர்வினைக்குத் தள்ளப்படுகிறார்கள். இப்படிபட்ட பாதிப்புகளுக்கு உள்ளான ஒருவன் கிட்ணன்.

இந்நாவலின் கதை கம்பம், மதுரை, கோவை ஆகிய இடங்களில் நகர்ந்து செல்கிறது. இந்த நகர்வுகள் அனைத்தும் கிட்ணனின் வாழ்க்கைச் சிக்கலின் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளன. நாவல் முழுவதும் பெண்களுக்குப் பிடித்தமானவனாக வலம் வருகின்ற கிட்ணன் பிறகு பெண்ணாக மாறும்போதும் அவர்களின் எண்ணத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படுவதில்லை. திவ்யாவின் மூலமாகக் கதை சொல்லப்படுகிறது. கிட்ணன் சிறுவயதில் மற்றவர்களோடு விளையாடும்போது எந்தப் பாலின வேறுபாடும் இல்லாமல் இருந்து வருகிறான். சற்று வளர்ந்த பிறகு வேட்டிக் கட்டிக்கொள்ளும்போதும் நடந்துவரும் போதும் அவனிடம் பெண் சாயல் வந்துவிடுகிறது. வீட்டில் உள்ளவர்களும் ஊரில் உள்ளவர்களும் கேளி செய்தாலும் அவனுக்கு தான் ஒரு பெண் என்ற உணர்வு வரவில்லை. மற்றவர்களும் கேலி செய்தார்களே அன்றி அவனைப் பெண்ணாக எண்ணவில்லை.

ஊரில் நடைபெற்ற மாரியம்மன் திருவிழாவில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கு இவனும் கலந்துகொண்டு ஆடிய ஆட்டமும் பெண் உடையும் அனைவரையும் கவர்ந்து இழுத்தது. மோகினி என்று அழைக்கும் அளவுக்கு இவனின் பெண் சாயல் வளர்ச்சிநிலைக் கண்டது. சமையல் செய்வதில் மிகவும் நேர்த்தியை கையாழுவதும் பெண்களுக்குத் தெரிந்த சமையல் சாகசங்கள் அவனிடம் இருப்பதும் அவனது குடும்ப உறவான பெண்களுக்கு இவன் மேல் அக்கறையும் பற்றும் ஏற்பட்டுவிட்டது. இவனின் அம்மா உடல் நலிவால் படுக்கையில் கிடந்தபோது அவருக்கு அனைத்து உதவிகளையும் பெண்ணாகவும் ஆணாகவும் இருந்து செய்து வந்தான். அம்மாவின் மறைவு அவனுள் இருக்கும் பெண்மையை உணரச்செய்தது.

அவனோடு படித்த நண்பனும் ஊரில் உள்ள விடலைகளின் சீண்டலும் உறங்கிக்கிடந்த பெண்மையை உசுப்பிவிட்டன. தான் ஆணல்ல பெண் என்பதை காமச் சீண்டலின் மூலம் உணர்ந்து கொண்டான் கிட்ணன். ஊராரின் ஏச்சுக்கும் உடன்பிறந்த அண்ணன் அடிக்கும் அப்பாவின் புறக்கணிப்புக்கும் வடிகாலாய் திவ்யா விளங்கினாள். அம்மாவின் மறைவுக்குப் பிறகு காமத்தின் பெரும்பேயும் சமூகத்தின் வன்கொடுமையும் அவனை ஊரைவிட்டு ஓடச் செய்தன. ஓடியக்கால்களும் உழன்ற மனமும் அவனை அவளாக்கியது. யாருக்கும் பயந்து வாழவேண்டியதில்லை. அவன் அவளாகச் சுதந்திரமாகச் சுற்றித் திரியத் தொடங்கினான்.

அண்ணன் மகனுக்கு மொட்டை அடிக்க போகிறார்கள் என்பதைக் கேட்டு சொந்த ஊருக்குப் பெண்ணாக வந்தான் கிட்ணன். அவனைக் கண்டு ஊரே வியந்துபோனது. ஆனால் அவனை ஏற்றுக்கொள்ள யாரும் தயாராக இல்லை. பெண்களின் கருணையும் அவர்களின் கேலியும் பழக்கப்பட்ட ஒன்றாக மாறிப்போனது. அவனது அண்ணன் சுதாகர் அநாகரிக வார்த்தைகளைப் பேசி அடிக்க வந்தான். ஊரார் அவனை விலக்கிவிட்டனர். பிறந்து வளர்ந்து பேசி பழகிய குடும்பம் ஒதுக்கி தள்ளுவதைக் கண்டு கண்கலங்கி தனித்து நின்றான் கிட்ணன். அவனது அப்பாவும் அவனை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. தன்னைத் தேடி தனது இனத்தைத் தேடிப் பயணப்பட்டான் கிட்ணன்.

மதுரையில் திவ்யாவின் வீட்டிற்கு அடிப்பட்ட காயங்களோடு ஒருநாள் வந்தான். அவனைக் கண்டு பிறப்பின் இடர்பாடுகளை உணரத் தொடங்கினாள் திவ்யா. மறுநாள் வீட்டில் கிட்ணனைக் காணோம். அவளது சேலை , உள்ளாடை, செருப்பு, நகைகள் காணாமல் போயிருந்தன. மற்றவர்களாக இருந்தால் ஊருக்குத் தகவல் கொடுத்துச் சண்டைப் போடுவார்கள். ஆனால் சிறுவயது முதல் தம்பி என்று உடன் விளையாடியவன் அவளோடு மனதளவில் கலந்து விட்டவன் கிட்ணன். அவனுக்கும் ஒரே ஆறுதல் அவனது அம்மா. அவள் இறந்தபிறகு திவ்யா அக்காதான். அன்று சென்றவன் பிறகு அவனைப்பற்றிய எந்தத் தகவலும் வரவில்லை அவளுக்கு என்று கூறுவதை விட அவளைத் தவிர வேறு யாரும் அவனைப் பற்றி நினைக்கவில்லை என்பது தான் உண்மை.

தனது அண்ணனிடம் சொத்தில் தனக்குச் சேரவேண்டிய பங்கைத் தரவேண்டும் என்று கூறியபோது அவனது அண்ணனும் அப்பாவும் அவனை அடித்துத் துரத்தி விடுகின்றனர். ஊரார் கேலியும் கிண்டலும் செய்கின்றனர். இங்கே மூன்றாம் பாலினத்தவருக்குப் பரம்பரைச் சொத்தில் பங்கில்லை என்பதும் அவர்கள் மனிதனாகப் பார்க்கப்படுவதில்லை என்பதும் சமூகக் கொடுமை. அதைவிட அவனை யாரும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் அவலம் கொடூரமானது. இந்த உலகிற்கு அவனைக் கொண்டுவந்த பெற்றோரே ஏற்க மறுக்கும்போது இந்தச் சமூகம் எப்படி அவனை ஏற்றுக்கொள்ளும். இது யார் செய்த தவறு? கிட்ணனா? பெற்றோரா? சமூகத்தில் அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்படும் மனிதர்களாக மூன்றாம் பாலினத்தவர் நடத்தப்படுவது மாற்றப்பட வேண்டிய சமூகத் கொடுமைகளில் ஒன்று.

திவ்யா பணியாற்றும் வங்கி நடத்தும் கருத்தரங்கில் கலந்துகொள்ள கோவை வருகிறாள். அங்குக் கிட்ணன் திவ்யாவை அடையாளம் கண்டு அவளிடம் பேசும்போது வியந்துபோகிறாள். என்றாலும் தன்னையும் மற்றவர்கள் பாலியல் சிண்டலுக்கு ஆளாக்கிவிடுவார்களோ என்ற அச்ச உணர்வு ஏற்படுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை. இப்போது இருக்கும் கிட்ணன் அமைதி சாந்தம் கொண்டவனாக இருக்கிறான். சுடிதார் போட்டு இயல்பான பெண்ணாகத் தோற்றம் தருகிறான். சற்று உற்று நோக்கினால் மட்டும் அவன் மூன்றாம் பாலினம் என்று தெரியவரும் என்பதால் சற்று ஆசுவாசப்பட்டுக் கொண்டாள்.

அவனோடு உறவாடியபோது தனது தோழி பார்கவியிடம் எனது தம்பி என்று கூற அதற்கு ‘இல்ல அக்கா நான் அவங்களுக்குத் தங்கச்சி’ என்று மறுக்கும் இடம் தனது அடையாளத்தை ஏற்றுக்கொள்ளும் மனம் வெளிப்படுவதைக் காணலாம். மீண்டும் மாலையில் சந்திக்கும் திவ்யா கிட்ணனுக்குக் குழந்தை இருப்பதைக் கண்டு வியந்து போகிறாள். அவன் வசிக்கும் வீடு மூன்றாம் பாலினத்தவர்கள் கூட்டமாக அங்கு வாழ்கின்ற பகுதியாக இருக்கிறது. ஒரு ஹோட்டலில் சரக்கு மாஸ்டராக இருந்து வருவதைக் கூறும் கிட்ணன் தனது மகனைப் படிக்க வைத்து பெரிய ஆளாக ஆக்க வேண்டும் என்று கூறும்போது புறக்கணிப்பின் வலி வெளிப்படுகிறது.

ஹோட்டல் முதலாளி வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பாலியல் தொல்லைக்கொடுப்பதைச் சகித்துக்கொண்டு வாழ்வதாகக் கிட்ணன் கூறும்போது சமூகத்தின் அவலம் புலப்படுகிறது. வேறு இடத்திற்குச் சென்றாலும் அங்கும் இவனைவிட மோசமான ஆள் இருக்கலாம். என்பதால் இங்கேயே தனது மகனுக்காக வேலை செய்து வருவதாக க் கூறும் கிட்ணன் மூன்றாம் பாலினமாகப் பிறந்ததற்காகப் படுகின்ற துன்பங்கள், அவமானங்கள், தொல்லைகள் போன்றவை திவ்யாவின் கண்முன் வந்து போகின்றன. திவ்யா தனது பர்சில் இருந்து ஐநூறு ரூபாயை எடுத்துக் குழந்தை கையில் வைக்கும்போது கிட்ணன் அழுது விடுகிறான். முதல் சொந்த உறவு ‘நீ தான் என் பிள்ளைக்குக் காசு கொடுத்திருக்க’ என்று அவன் பூரித்துப்போகும் நிலை உறவுக்காக ஏங்கும் தனிமையின் திக்கற்ற சூழலை வெளிப்படுத்துகிறது. பார்கவி ரயில்வே ஸ்டேசனில் குழந்தையைக் கொஞ்சி பணம் கொடுக்கும்போது வாங்கிக்கொள்ள கண்டிப்பாக மறுத்துவிடும் கிட்ணன் இச்சமூகத்தில் வாழவேண்டிய, அனைத்து உரிமைகளுடன் வாழவேண்டிய எலும்பும் சதையும் மனமும் கொண்ட சக உயிர் என்பதை ஒவ்வொருவரும் உணரும் தருணம் இது. அவனல்ல அவளாக வாழ்வதற்கு ஒரு சமூகம் எப்போது தயாராகிறதோ அப்போது இந்தச் சமூகம் நாகரிக எல்லைகளைத் தொடலாம்.

 

அக்னிசாட்சி

அஞ்சதி 

கொடுந்தீயில்
வெந்த அவள் மனத்தை
கொத்தித் தின்கிறது
குடும்பக் கட்டமைப்பு
எதையும் கேட்காமல்
அலுத்துப் போன அவள்
அங்கங்களில் மறந்தே போனது
மனமிருக்கும் இடம்
எல்லோருக்கும் சூரியோதயம்
அவளுக்கோ சந்திரோதயம்
வலிகளைக் கடந்திட
வழக்கமாகிப் போனது
அவள் மேல் உழும் காளைமாடுக்கு
எவ்வித உணர்வுகளும் புரியாது
அக்னி சாட்சியில்
அன்றாடம் கேட்கிறது
அபயக்குரல்
எல்லாவற்றையும் பொறுத்து கொள்கிறாள்
தன் பிள்ளைக்கு வேண்டுமாம் அப்பா
மறுநாள் அக்னி பிரவேசத்தில் குளிக்க
அவள் அங்கங்களை அலசுகிறாள் இல்லற அமிலத்தில்.

தீண்டுவாரற்ற சடலங்கள்

தாட்சாயணி

தீண்டுவாரற்றுக் கிடந்தன சடலங்கள்
உயிர் மூச்சைப் பிடித்து
நாங்கள் ஓடிக்கொண்டிருந்த போது,
தெருவிலே தீண்டுவாரற்றுக் கிடந்தன சடலங்கள்.
முகமிழந்து, நிறமிழந்து,
முழங்கைகள், கால் இழந்து
தலை இழந்த முண்டங்கள் ஆகி,
வீதியெங்கும் சதைத்துண்டங்களாக,
தீண்டுவாரற்றிருந்தன அவை

இரைந்து கொண்டிருந்த எமன்களை
வானம் அணைத்து வைத்திருந்தது.
எரிகுண்டுகள் பின்னாலேயே சீறிக் கொண்டிருந்தன.
ஓயாத சில கரங்கள்,
தீண்டுவாரற்றுப் போன அந்தச் சடலங்களை
வீதியோரக் குழிகளுக்குள்
போட்டு மூடிக் கொண்டிருந்தன.

தீண்டுவாரற்றுக் கிடக்கும் சடலங்களைப் பற்றி
நீங்கள் யாரேனும்
ஒரு கணமாவது நினைத்துப் பார்த்ததுண்டோ?

நாங்கள் அறிந்திருந்தோம்,
யுத்தத்தின் அனல் மூண்ட நாட்களில்,
துரோகத்தின் நிழல் மூடிய காலங்களில்
தீண்டுவாரற்றுக் கிடந்தன
ஏராளம் சடலங்கள்.

வெறுவெளிகளில் கிடந்த பள்ளங்களில்
குண்டுகள் வீழ்ந்து மூடியிருக்கும் சடலங்கள்

மலக்கூடக் குழிகளுக்குள்,
நிர்ப்பந்தமாய் வீசி மூடப்பட்ட சடலங்கள்

பதுங்குகுழிகளின் சரிவில்
சமாதியாக்கப்பட்ட சடலங்கள்

நள்ளிரவின் இருண்மைக்குள்
அடையாளமற்றுத் துண்டிக்கப்பட்ட தலைகளோடு
கம்பங்களில் கட்டப்பட்ட சடலங்கள்

எனத் தீண்டுவாரற்ற சடலங்களின் கதை
சொல்லச் சொல்ல நீளும்.

இப்போதும்
தீண்டுவாரற்றுக் கிடக்கின்றன சடலங்கள்.
யாரிடமும் கொடுப்பதற்குமில்லை
யாரும் ஏற்பதற்குமில்லை.

உறவுகளின் கதறலொலி மட்டும்
தூரத்தில் எங்கோ கேட்கும்

வானத்தில் ஆத்மாக்கள்
சுழன்றடித்துக் கொண்டேயிருக்கின்றன.

வேண்டத்தகாத ஒரு பொருளாய்
உடல்களை வீசியெறிந்து பற்ற வைக்கிறார்கள்.

சுவாலை எழுகிறது
சுவாலை எழுகிறது

தீண்டத்தகாத உடலங்களெனினும்,
சுவாலை மட்டும்
அவ்வுடல்களைத் தழுவிக் கொண்டேயிருக்கிறது.