Author: பதாகை

மகான்

ஸிந்துஜா

பாலு எட்டு மணி வாக்கில் மகானைத் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்தான். வந்தவரின் முழங்காலுக்குச் சற்றுக் கீழ் வரை மஞ்சள் கரையுடன் வெள்ளை வேஷ்டி, கொஞ்சம் இளகின காவியில் தொள தொளவென்று அரைக்கைச் சட்டை. தலையில் முக்காலும் வழுக்கை. தெளிவான சதுர முகத்தின் நெற்றியில் மூன்று வரி வெள்ளைப் பட்டை. நடு வரியில் இப்போது புழக்கத்தில் இல்லாது மறைந்து விட்ட ஒரு ரூபாய் நாணய அளவில் சந்தனப் பொட்டு. அதன் நடுவில் அரக்குக் குங்குமம். மனிதன் சற்று உயரமாய் இருந்ததால் இளம் தொந்தி அடங்கிக் கிடந்தது போல் ஒரு தோற்றம். மேனி கறுப்பும் இல்லாமல் சிவப்பும் இல்லாமல் மரியகுப்பம் செங்கல் பளபளப்பில் மின்னிற்று. காலில் செருப்புக் கிடையாது.

பாலு உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தான். அவன் மனைவி சுலோச்சு கையில் ஒரு சிறிய பிளாஸ்டிக் வாளியுடன் வந்தாள். வாளியில் இருந்த குவளையில் நீர் எடுத்து மகானிடம் கொடுத்தாள். அவர் கால்களை அலம்பிக் கொண்டதும் மூவரும் வீட்டுக்குள் சென்றார்கள்.

காலை இளம் வெய்யிலின் சூட்டுக்காக எதிர் வீட்டு வாசலில் சேரைப்
போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த ராமேந்திரன் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். நேற்றே பாலு அவரிடம் இம்மாதிரி மகானை அழைத்து வரப் போவதாகக் கூறியிருந்தான். ராமேந்திரன் இருந்த குடியிருப்புக்குப் பக்கத்தில் ஒரு வருஷம் முன்னால்தான் பாலு வந்தான். அவனாகவே அவரைத் தேடிக் கொண்டு வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். தனியார் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவன் வீயாரெஸ்ஸில் வேலையை விட்டு விட்டு வந்ததாகத் தெரிவித்தான். அவன் மனைவி சுலோச்சு தெலுங்கு ரெட்டியார் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்றும் அவர்கள் காதல் திருமணத்தில் முடிந்ததாகவும் ஒரு நாள் சொன்னான்.

பாலு அக்கம் பக்கத்தில் எல்லோரும் தன்னைப் பற்றி அறியுமாறு வைத்துக் கொண்டிருந்தான். வங்கியில் வேலை பார்த்திருந்தாலும் அவனுக்கு எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்திருந்தது. பாலு யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று அவன் தானாக ஒரு கணியன் பூங்கொன்றனாரைத் தனக்குள் வைத்துக்கொண்டு விட்டான். அவன் பேச்சும் கேளீர் கேளீர் என்று கூப்பிட்டு மயக்குவதாய்த்தான் இருந்தது, வார்த்தைகளில் அப்படி ஒரு ராயசம்.

பாலு அவன் வீட்டிலிருந்து வெளியே வந்து தன்னைப் பார்த்து விட்டு நெருங்குவதை ராமேந்திரன் கவனித்தார்.

“என்ன மகானை அழைச்சுண்டு வந்துட்டியா?”

“ஆமா. அவர் பானஸ்வாடிலே ரெண்டு நாள் தாமசம். இன்னிக்கி இங்கே வந்துட்டு கம்மனஹள்ளிக்குப் போயிடுவார். சாயந்திரம் வரை இருக்கேன்னார்.”

“சாப்பாடு உங்காத்திலேதானா?”

“அதெல்லாம் மூச்சுப் பரியப்படாது. குடிக்கறதுக்கு ஜலம் வாங்கிண்டாலே
பெரிய விஷயம். எல்லாருக்கும் எல்லாம் கொடுக்கிற கை, கொடுக்கிற மனசு அது.”

“இந்தத் தெருவிலே இருக்கறவா எல்லாரும் காத்திண்டிருக்கா. சாமி படத்திலேந்து விபூதி விழறதைப் பாத்து வாங்கி இட்டுக்கணும், அவர் கையிலே இருந்து சங்கு வரவழைச்சுக் கொடுக்கறதை வாங்கிக்கணும்னு தவிக்கிறதுகள். எல்லாம் நீ சொல்லி வச்சதுதான்” என்றார் ராமேந்திரன்.

“நீங்க இன்னும் நம்பலே இல்லே?”

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லே.”

“இல்லே, உங்க குரலே காட்டிக் கொடுக்கறதே” என்றான் பாலு சற்றுச் சலிப்பான குரலில். தான் முக்கியத்துவம் தரும் இவர், தான் முக்கியத்துவம் தரும் அவருக்கு முக்கியத்துவம் தரவில்லையே என்னும் சலிப்பு.

அப்போது நாலாவது வீட்டில் குடியிருக்கும் அப்பண்ணா அவர்களை நெருங்கினார்.

பாலுவிடம் “நேத்திக்கு மணியோட ரிசல்ட் வந்தது பாஸ் பண்ணிட்டான். கணக்கு காலை வாரி விட்டுடுமோன்னு எனக்குக் கொஞ்சம் கவலை
யாத்தான் இருந்தது” என்றார்.

“ராமநாதன் ஸார் பாஸ் பண்ணிட்டார்னு சொல்லுங்கோ” என்றான் பாலு. ராமநாதன் வாத்தியார் மணியின் டியூஷன் மாஸ்டர்.

“அவனுக்குக் காலேஜிலே கேக்கற க்ரூப் கிடைச்சா நன்னாயிருக்கும். மகான்தான் வழி காட்டணும்” என்றார் அப்பண்ணா பாலுவிடம் தாழ்ந்த குரலில்.

“அதுக்கென்ன? வாங்கோ, வாங்கோ. அவர் அனுக்கிரகம் பண்ணுவார்.”

“எங்காபீஸ்லே சுப்பாராவ்னு இருக்கார். அவர் பொண்ணுக்குக் கல்யாணமே ஆகாம இருந்தது. அவரும் பானஸ்வாடிலேதான் இருக்கார். மகான் கிட்டே போய்க் கால்லே விழுந்திருக்கார். இன்னும் ஒரு மாசத்திலே வடக்குலேந்து உமக்கு மாப்பிள்ளை வருவான்னு மகான் சொன்னாராம். இருபது நாள் கழிச்சுப் பொண் கேட்டுண்டு டெல்லிலேந்து வந்தாளாம்.. சரியா முப்பதாவது நாள் நிச்சயதார்த்தம் நடந்துதுன்னார்” என்றார் அப்பண்ணா.

பாலு ராமேந்திரனைச் சற்றுப் பெருமையுடன் பார்த்து விட்டு “அவர் இன்னும் கால் மணியிலே பூஜை ஆரம்பிக்கிறேன்னார். போய் பூஜை சாமானெல்லாம் எடுத்து வைக்கணும். வரட்டா?” என்று கிளம்பினான். அப்பண்ணாவும் அவனுடன் சென்றார்.

“சாப்பிட வரேளா?” என்று அபயத்தின் குரல் கேட்டு அவர் திரும்பிப் பார்த்தார். வாசல் நிலைப்படியில் நின்றிருந்தாள். பாலுவுடன் பேசியது அவள் காதிலும் விழுந்திருக்கும்.

அவர் எழுந்து வீட்டுக்குள் சென்று கை கழுவி விட்டு சாப்பிட உட்கார்ந்தார். இட்லிகளையும் சட்டினியையும் அவரது தட்டில் வைத்தவாறே அபயம் “நீங்க அந்த மகானைப் பாக்கப் போறேளா?” என்று கேட்டாள். அவர் உடனடியாகப் பதில் அளிக்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அபயம் எதுவும் பேசாமல் உள்ளே சென்று கொஞ்சம் இட்டிலிகளை ஒரு தட்டில் போட்டுக் கொண்டு வந்து உட்கார்ந்து தானும் சாப்பிட ஆரம்பித்தாள்.

அவர் “அங்க போகணுமான்னுதான் இருக்கு” என்றார். அப்போது வெளியிலிருந்து நரசி வீட்டுக்குள் வந்தான். அவரின் ஒரே பிள்ளை.

“இன்னிக்கி ஆபீசுக்கு லீவுன்னு பெரிய வாக்கிங்கா?’ என்றார் ராமேந்திரன் பிள்ளையைப் பார்த்து. அவன் ஒரு அமெரிக்கக் கம்பனியின் இந்தியக் கிளைப் பொறுப்பாளராக இருக்கிறான். அங்கே அவர்களுக்கு லீவு என்றால் இங்கே இவனுக்கும் லீவு.

அவன் சிரித்தவாறே “ஆமா. அம்மா, எனக்கும் டிபன் கொடுத்துடு” என்றான். பிறகு ராமேந்திரனைப் பார்த்து “எதிராளாத்து வாசல்லே என்ன திடீர்னு அப்படி ஒரு கூட்டம்? ஏதாவது விசேஷமா?” என்று கேட்டான்.

“ஓ, உனக்கு அதைப்பத்தி எதுவும் தெரியாதோ? நீதான் கார்த்தாலே சூரியன் மனுஷாளைப் பாக்க வரதுக்கு முன்னாலேயே ஆபீசுக்குப் போயிடறே. ஆபிஸ்லேந்து நீ திரும்பறப்போ உனக்கு ஜோடியா கோட்டான்தான் முழிச்சிண்டு இருக்கு. நம்பாத்து விஷயத்தையே உன்கிட்டே முழுசாப் பேச முடியறதில்லே. எதிராளாத்து பாலு ஒரு மகானைப் பத்தி ஒரு மாசமா பேசிண்டு அலையறான். இன்னிக்கி அவர் பாலு ஆத்துக்கு வந்திருக்கார்” என்றார் ராமேந்திரன்.

“மகானா?”.

“ஆமா. பாலு அவரை நடமாடற தெய்வம்னு சொல்லிச் சொல்லி மாஞ்சு போறார். அவர் முழங்கைலேந்தும் உள்ளங்கைலேந்தும் சங்கு, முத்து, ஸ்வாமி டாலர்னு எடுத்து வரவாளுக்குக் கொடுக்கறாராம். அவர் பூஜை பண்ணி முடிச்சப்பறம் ஸ்வாமி படம் மாட்டியிருக்கற சுவத்திலேந்து குங்குமம், விபூதி எல்லாம் கொட்டறதாம்” என்றாள் அபயம்.

“அப்பா, இதையெல்லாம் நீங்க நம்பறேளா?” என்று கேட்டான் நரசி.

“எனக்கு நம்பிக்கையில்லேனு சொன்னா பாலு அடிக்க வந்துடுவான்” என்று சிரித்தார் ராமேந்திரன். “சித்த நாழி மின்னேதான் உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லேல்லேன்னு கேட்டான். ஒரு மாசமா தெனைக்கும் கார்த்தாலே குளிச்சிட்டு அந்த மகான் ஆத்துக்குக் கிளம்பிப் போறான். சாயரட்சைதான் திரும்பறான். தினம் அவர் மகாத்மியத்தை என்கிட்டே வந்து சொல்லாமப் போகமாட்டான். ஒவ்வொண்ணும் ஒரு கதை மாதிரி இருக்கும். திருடன் கிட்டே பறி கொடுத்த நகையைப் பத்தி ஒருத்தி வந்து சொன்னா. மறுநாள் திருடனே பறிகொடுத்தவ ஆத்துக்கு வந்து நகையைத் திருப்பிட்டானாம். பெங்களூர் முழுக்கக் காமிச்சும் தேவலையாகாம அப்படி ஒரு ஜுரம் வாரக்கணக்கிலே படுத்தின குழந்தைக்கு ஒரு வாரம் அவரோட பிரசாதத்தைக் கொடுத்துக் குணமாச்சாம், இன்சால்வன்ஸி நோட்டீஸ் கொடுக்கப் போற ஸ்டேஜிலே யாரோ ஒரு மைசூர்காரர் இவரைத் தேடிண்டு வந்து காப்பாத்துங்கோன்னு அழுதாராம். ரெண்டு நாள் கழிச்சு அவருக்கு கேரளா லாட்டரியிலே பிரைஸ் அடிச்சதாம். அதை ஏன் கேக்கறே? பாலு கிட்டே உக்காந்தா, நாள் கணக்கிலே என்ன, வாரக் கணக்கிலே மாசக் கணக்கிலே சொல்லுவான்.”

“பாலு அங்கிள் இப்படி அந்த மகான் ஆத்திலேயே குடி இருந்தா, குடும்பம் நடத்தறது எப்படி?” என்று கேட்டான் நரசி.

“எதுக்குடா அவர் பொண்டாட்டியே கவலைப்படாத விஷயத்துக்கு எல்லாம் நீ கவலைப்பட்டுண்டு இருக்கே?” என்று அபயம் பையனைப் பார்த்துச் சிரித்தாள்.

“அங்கையும் பாலு ஒரு பொடி வச்சிருக்கான். போனவாரம் லெவென்த் கிராஸ் மார்க்கெட்லே ராமண்ணா கடையிலே காய்கறி வாங்கிண்டு வரப் போனப்போ அவன்தான் சொன்னான். தினம் உங்க பக்கத்து வீட்டுக்காரர் பத்துப் பதினஞ்சு தேங்கா கொண்டு வந்து போடறாருன்னு. மார்க்கெட்டிலே ஒரு தேங்கா முப்பது முப்பத்தஞ்சுக்குக் குறைச்சு விக்கறதில்லேயே. ராமண்ணா ஒரு காய்க்கு இருபது ரூபா கொடுத்தான்னாக் கூட இருநூறு முந்நூறு கிடைக்காதா பாலுவுக்கு?மகானைப் பாக்க வர்ற ஜனங்கள்தான் வெத்திலே, பூ, தேங்காய், பழம், சுவீட்டுன்னும் கொண்டு வந்து கொட்டறதாமே. அவர் ஒண்ணுத்தையும் கையாலே தொடறதில்லையாம். எல்லாத்தையும் வந்து போறவா கிட்டேயே கொடுத்து அனுப்பிச்சிடறாராம். அவர் வேறே யாராத்துக்காவது பூஜை பண்ணனும்னு போறதா இருந்தா, இப்பல்லாம் பாலுதான் சாரதி. அவனோட ஸ்கூட்டர்லே அழைச்சுண்டு போயிட்டுத் திரும்ப ஆத்திலே கொண்டு வந்து விட்டுடறான்.”

“நீங்க சொல்றதை எல்லாம் கேட்டா எனக்கும் அவரைப் பாக்கணும் போல இருக்கு” என்றான் நரசி.

“அப்படிப் போடு!” என்று சிரித்தார் ராமேந்திரன். “ஆனா நீதான் விபூதி குங்குமம் எல்லாம் இட்டுக்க மாட்டியேடா?”

“அவர் தரப்போ மரியாதைக்கு நெத்தியிலே வச்சுண்டு ஆத்துக்கு வந்ததுக்கு அப்புறம் அழிச்சிண்டாப் போச்சு” என்றான் நரசி.

பனிரெண்டு மணி வாக்கில் அவர்கள் மூவரும் கிளம்பி பாலுவின் வீட்டுக்குச் சென்றார்கள். அவர்களைப் பார்த்ததும் பாலு தன்ஆச்சரியத்தைக்
கண்களை அகல விரித்துத் தெரிவித்தான். ராமேந்திரன் சுற்றும் முற்றும் பார்த்தார். தெரிந்தவர்கள் அவர் கண்களைச் சந்தித்ததும் கையசைத்து வணக்கம் தெரிவித்தார்கள். தெரியாதவர்களும் சேர்ந்து கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது.

பாலு “இன்னும் அஞ்சு நிமிஷத்திலே பூஜை முடிஞ்சு பிரசாதம் கொடுப்பார். வாங்கிண்டு கூட்டம் கலைஞ்சிடும். அதுக்கப்புறம் அவரோட நீங்க சித்த நாழி இருந்து பேசிட்டுப் போகலாம்” என்றான்.

பூஜை முடிந்ததும் அவரவர் கைகளில் எடுத்துக் கொண்டு வந்த பைகளை மகான் கையில் கொடுத்தார்கள். அவரும் வாங்கிப் பலரிடம் அதை விநியோகம் செய்தார். எதையும் அவர் தன்னிடம் வைத்துக் கொள்ளவில்லை. ஒரு வயதான கணவனும் மனைவியும் பேரக் குழந்தையுடன் மகானை நெருங்கினார்கள்.

மகான் அவரைப் பார்த்து “சேஷு , எப்படியிருக்கேள்?” என்று கேட்டார்.

சேஷு “எல்லாம் மகானோட ஆசீர்வாதம்” என்றார் குரல் நடுங்க. “நேத்திக்கு மத்தியானம்தான் மது மேலே ஒண்ணும் குத்தம் இல்லேன்னு கோர்ட்லே ரிலீஸ் பண்ணிட்டா..”

பாலு ராமேந்திரன் காதருகில் நின்று “இவர் பாலஸ் ஆர்ச்சர்ட்லே இருக்கார். பெரிய மருந்துக் கடைக்காரர். ஏகப்பட்ட ஹோல்சேல்.பெங்களூர்லேயே எட்டு பிராஞ்சு இருக்கு, பையன்தான் பாத்துக்கறான். போன மாசம் யாரோ வேண்டாதவன்கள் இவா கோடவுன்லே போதை மருந்து கொண்டு போய்ப் போட்டுட்டு போலீஸ்லே வத்தி வச்சிட்டான்கள். போலீஸ் கேஸ் போட்டு பையனை அரெஸ்ட் பண்ணிடுத்து. இவர் மகான் கிட்டே வந்து என்ன பண்ணறதுன்னு கேட்டார். பையனைக் கோர்ட்டுக்கு இழுத்துண்டு போனதும் பகவான்தான். அவனைக் கொஞ்ச நாள் கழிச்சு வெளியே விடறதும் அவரேதான். நல்ல காரியங்களைப் பண்ணிண்டே இருங்கோ. அது போதும்னார் மகான். அதைத்தான் இப்போ சொல்றார் சேஷு”
என்றான்.

சேஷு தன்னிடமிருந்த பையிலிருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்தார். அதைப் பிரித்து ஒரு நகையை எடுத்தார். அந்த ஹாலின் விளக்கு வெளிச்சத்தில் அது மஞ்சளாய்ப் பளபளத்தது. வெற்றிலை பாக்கு பழம் தேங்காயுடன் அதையும் வைத்து மகானை நமஸ்கரித்து அவர் கையில் கொடுத்தார். “இதை நீங்களே வச்சுக்கணும். வேறே யாருக்கும் வழக்கம் போலக் கொடுத்திடப்படாது” என்றார் சேஷு.

மகான் புன்முறுவலுடன் அவர்களுடன் வந்திருந்த பெண் குழந்தையைத் தன்னிடம் இழுத்துக் கொண்டார். “யாரு இவோ?”

“எங்காத்து வேலைக்காரியோட பொண்ணு. வீட்டு வேலை, சமையல் வேலை எல்லாம் இவ அம்மாவே எடுத்துப் போட்டுண்டு செய்யறா. அதான் ஆத்தோட வச்சிண்டிருக்கோம். நாங்க கிளம்பி வரச்சே நானும் சாமியைப் பாக்கணும்னு அடம் பிடிச்சது. அதான் அழைச்சுண்டு வந்தோம் ” என்றார் சேஷு.

“குட்டி பேரென்ன?” என்று மகான் குழந்தையிடம் கேட்டார்.

“தேவி” என்றது.

“ஓ, அது என்னோட தாயார் பேருன்னா?.இதைத் தேவிக்கு சாத்தாம வேறே யாருக்குப் போய்ச் சாத்தறது?” என்று அந்த மாலையைக் குழந்தையின் கழுத்தில் அணிவித்தார். “இப்ப சாட்சாத் தேவியான்னா இருக்கா.”

அங்கு இருந்தவர்கள் திகைப்புடனும் சந்தோஷத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பாலு ராமேந்திரனிடமும் நரசியிடமும் “நான் சொன்னேன் இல்லியா? எதையும் கேட்கவோ வாங்கவோ மாட்டார். அது கொடுக்கற கைதான். கர்ணன் மாதிரி” என்றான்.

கூட்டம் கலைந்ததும் பாலு ராமேந்திரனையும் அபயத்தையும் நரசியையும் கூட்டிக் கொண்டு போய் மகானிடம் அறிமுகம் செய்வித்தான்.

“இவர் ராமேந்திரன். பக்கத்தாத்துலே இருக்கார். டெல்லியிலே ஹோம் செக்ரட்டரிக்கு அடுத்தாப்பிலே இருந்தார். இது,மாமி. சுலோச்சுவுக்கு குரு எல்லா விஷயத்திலேயும்” என்றான் பாலு சிரித்தபடி.

“நன்னாயிருக்கு! நான்னா சுலோச்சு கிட்டேர்ந்து நிறைய சமையல் கத்துண்டு இருக்கேன்” என்றாள் அபயம்.

“இது நரசி. இவாளோட ஒரே பிள்ளை. அமெரிக்கன் கம்பனியிலே இந்தியா ஆபீசை நடத்திண்டு பெரிய போஸ்ட்லே இருக்கார். இவ்வளவு சின்ன வயசிலே பெரிய பதவி” என்றான் பாலு.

இந்த முகமன் கேட்டு நரசி சிரித்து வெட்கப்பட்டாற் போல உடலை ஒருமுறை வளைத்துக் கொண்டான்.

“பேஷ். பேஷ். ஒரு காலத்திலே மேக்கே பாரு மேக்கே பாருன்னு கும்பிடு போட்டுண்டு இருந்தா. இப்போ அவா அங்கேர்ந்து கெழக்கைப் பாத்து நமஸ்காரம் பண்றா” என்று மகான் புன்முறுவல் பூத்தார்.
.
மூவரும் விழுந்து அவரை நமஸ்கரித்தனர் அவர் ஆசீர்வாதம் செய்தார். கையில் வைத்திருந்த சாமான்கள் நிரம்பிய பையை ராமேந்திரன் அவரிடம் தந்தார். அவர் அங்கு நின்றிருந்த சுலோச்சுவிடம் கொடுத்து விட்டுக் கையில் கட்டியிருந்த வாட்ச்சைப் பார்த்தார். பிறகு பாலுவிடம் “கிளம்பலாமா?” என்று கேட்டபடி எழுந்தார்.

பாலு அவரிடம் “சாயந்திரம் வரை இருக்கேன்னேளே!” என்றான்.

“நாலரை மணிக்கு மல்லேஸ்வரத்துக்கு வரச் சொல்லி சங்கரமடத்திலேந்து
கூப்பிட்டு அனுப்பிச்சிருக்கா . அதான் ஆத்துக்குப் போயிட்டு அங்கே போலாம்னு இருக்கேன்” என்றார்.

பாலு அவரிடம் “நாம காத்தாலே இங்க ஸ்கூட்டர்லே வரப்பவே பிரேக் சரியாப் பிடிக்காம இருந்தது. வண்டியை இங்கே கொண்டு வந்து நிறுத்தினதும் பிரேக் கேபிள் கட்டாயிடுத்து. இருங்கோ. ஒரு ஒலாவைக் கூப்பிடறேன்” என்றான்.

நரசி ” டாக்சி எதுக்கு? நான் என் கார்லே கொண்டு போய் விட்டுடறேன்” என்றான். பாலு அவனை நன்றியுடன் பார்த்தான்.

“உனக்கு எதுக்குப்பா சிரமம்?” என்றார் மகான்.

“நீங்க இப்பிடிச் சொல்றதைக் கேக்கறதுதான் எனக்கு சிரமம்” என்றான் நரசி. அவர் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

காரில் உட்கார்ந்ததும் நரசி ஏ.சி.யைப் போட்டான்.

“ஏ.சி. வேணுமா?” என்று அவர் கேட்டார்.

“உங்களுக்கு வேணுமோன்னுதான் போட்டேன். அணைச்சிடட்டுமா?”

அவர் தலையசைத்ததும் அவன் ஏ.சி.யை அணைத்து விட்டு இருவர் பக்கமிருந்த ஜன்னல்களை லேசாகத் திறந்து வைத்தான்.

காரில் செல்லும் போது அவர் அவனைப் பற்றி விஜாரித்துக் கொண்டு வந்தார். அவர்களது பூர்விகம் எது, அவனுக்குக் கூடப் பிறந்தவர்கள் இருக்கிறார்களா, அவன் வயசு என்ன, எந்த ஸ்கூல், காலேஜில் படித்தான், இப்போது இருக்கும் வேலையில் அவனை வெளிநாட்டுக்கு வரச் சொல்லி அங்கே வேலை பார்க்கச் சொல்லுவார்களா என்றெல்லாம் கேட்டார். அவன் பதிலளித்துக் கொண்டு வந்தான்.

அப்போது அவனது மொபைல் ஒலித்தது. எடுத்து “ஹலோ!” என்றான். வெளியிலிருந்து எழுந்து வந்த ஒலிகளினால் மொபைலை ஸ்பீக்கரில் போட்டான்.

“சார், ரங்கநாதன் பேசறேன்” என்றது எதிர்க்குரல்.

“எதுக்கு லீவு நாள்லே ஆபீசுக்கு வந்திருக்கே?”

“இந்த ஜூனியர் எஞ்சினியர் அப்ளிகேஷன்களைப் பாத்து லிஸ்ட் எடுத்திடலாம்னு வந்தேன். ஆபீஸ் நாள்லே வேறே வேலை ஏதாவது குறுக்கே வந்துட்டே இருக்குமே. ஆனா நான் கூப்பிட்டது இதுக்கிலே சார்.”

“சொல்லு.”

“இருபது அப்ளிகேஷன்லே எட்டு பேர் எலிஜிபிளா இருக்காங்க. அதிலே ஒரு ஆள் ஐ.ஐ.டி லக்னவ்.”

“என்னது?”

“ஆமா சார். நீங்க ஒரு பார்வை பாத்துட்டா இன்டெர்வியு எப்ப வச்சுக்கலாம்னு டிசைட் பண்ணி நாளைக்கி கால் லெட்டர்சை அனுப்பிச்சிடலாம்.”

“சரி, இப்ப ஒரு மணி நேரத்திலே வரேன். பாத்துடலாம்” என்று நரசி மொபைலை ஆஃப் செய்தான்.

கார் மரியப்பா சர்க்கிளைக் கடக்கும் போது அவர் “அதோ அங்கே ஒரு பஸ் ஸ்டாப் தெரியறது இல்லியா? அதுக்கு அடுத்த லெப்ட்லே இருக்கற சந்துலே போகணும்” என்றார். நரசி அவர் சொன்ன வழியில் சந்துக்குள் நுழைந்து சென்றான். சந்து சாலைகளின் ஒரிஜினல் சொந்தக்காரர்களான மாடுகள் வழியில் படுத்திருந்தன. கார் வரும் சத்தம் கேட்டுத் தலையை உயர்த்திப் பார்த்துவிட்டு ‘சரி ஒழிந்து போ’ என்பது போல எழுந்து நகர்ந்து சென்றன. சற்றுப் பெரிதாக இருந்த கட்டிடம் ஒன்றின் அருகில் நிறுத்தச் சொன்னார்.

பிறகு அவர் இறங்கிக் கொண்டு ‘உள்ளே வா” என்றார்.

“பரவாயில்லே. நான் கிளம்பறேன்” என்றான் நரசி.

“ஆத்து வாசலுக்கு வந்தவாளை வாசல் வழியே திருப்பி அனுப்பிச்சுடற நாகரிகத்தை நான் இன்னும் கத்துக்கலே” என்றார்.

அவன் சிரித்தபடி அவருடன் சென்றான். பெரிய கட்டிடத்தை ஒட்டியிருந்த ஒரு பழைய கட்டிடத்தில் நுழைந்தார்கள். அது ஒரு காம்பவுண்டுக் குடித்தனம் என்று ஒவ்வொரு சிறிய வீட்டு வாசலிலும் தென்பட்ட கோலங்கள் தெரிவித்தன.

“தலையைக் கொஞ்சம் குனிஞ்சுண்டு வரணும்” என்றபடியே அவர் தன் போர்ஷனுக்குள் நுழைந்தார்.

உள்ளே சிறிய ஹாலில் இருந்த சிறிய நாற்காலியில் அமர்ந்திருந்த வாலிபன் வந்த விருந்தினரைக் கண்டு எழுந்து நின்றான். அவன் ஒல்லியாக உயரமாக இருந்தான். அரையில் வேட்டியும் மேலே கை வைத்த பனியனும் அணிந்திருந்தான். மகான் நரசியிடம் “என் பிள்ளை. வெங்கடேசன்னு பேரு” என்றவர் பிள்ளையின் பக்கம் திரும்பி “இவர் நம்ம பாலு சார் ஆத்துக்குப் பக்கத்து ஆத்திலே இருக்கார். கார்லே கொண்டு வந்து விடறேன்னு வந்தார்” என்றபடி உள்ளே சென்றார்.

“உக்காருங்கோ” என்று வெங்கடேசன் நரசியிடம் நாற்காலியைத் தள்ளினான். உட்கார்ந்து கொண்ட நரசியின் பார்வை கூடத்தைச் சுற்றி வந்தது. வெண்மை மறைந்து லேசாக மஞ்சளாகிக் கொண்டிருந்த சுவர்கள் வீட்டுக்குள் இருந்த வெளிச்சத்தை அடக்க முயன்று வெற்றி பெற்றிருந்தன. கூடத்துக்குள் வலது மூலையில் ஒரு மேஜை மீது செம்பருத்திப் பூக்கள் செருகப்பட்டு வெங்கடாஜலபதி படமும் மீனாட்சி அம்மன் படமும் இருந்தன. மேஜையை ஒட்டி இருந்த ஒரு ஸ்டூலில் மடித்த படுக்கை விரிப்புகளும் தலையணைகளும் காணப்பட்டன. இடது பக்க மூலையில் நிறைய கீறல்களுடன் ஒரு பழைய பிரிட்ஜ் நின்றது.

நரசி வெங்கடேசனைப் பார்த்து “எங்கே வேலை பாக்கற? இன்னிக்கி ஆபீஸ் லீவா?” என்று கேட்டான்.

வெங்கடேசன் நரசியின் கண்களைப் பார்க்காமல் “இப்ப ஒண்ணும் வேலை இலாமதான் இருக்கேன்” என்றான்.

அப்போது உள்ளேயிருந்துவந்த மகான் “லெமன் ஜுஸ்தான். சாப்பிடு” என்று ஒரு கிளாஸ் தம்ளரை நீட்டினார். அவன்”தாங்க்ஸ்” என்றபடி எடுத்துக் கொண்டான்.

“என்ன படிச்சிருக்கே?” என்று நரசி கேட்டான்.

வெங்கடேசன் “கம்ப்யூட்டர் இஞ்சினீரிங்” என்றான்.

“எப்போ முடிச்சே?”

“2018லே. உடனே வேலை கிடைச்சது. எலக்ட்ரானிக் சிட்டிலே ஒரு பிரைவேட் ஹார்டுவேர் கம்பனியிலே இருந்தேன். கோவிட் சமயத்திலே வேலை போயிடுத்து.” என்றான் வெங்கடேசன்.

“ஆமா. ரொம்பப் பேர் அப்பலெந்து இந்த மாதிரிக் கஷ்டத்தை ஃபேஸ் பண்ணிண்டு இருக்கா” என்றான் நரசி மகானைப் பார்த்து. .

“இப்ப மறுபடியும் ஆள் கேக்க ஆரம்பிச்சிருக்கால்லியா. அப்ளை பண்ணிண்டு இருக்கேன்” என்றான் வெங்கடேசன்.

நரசி தன் கைக்கடிகாரத்தைப் பார்த்து விட்டு “அப்ப நான் கிளம்பட்டுமா? ஆபீசுக்குப் போகணும்” என்று எழுந்தான்.

மகான் அவன் கூடவே வந்தார். “உங்களுக்கு எதுக்குக் கஷ்டம்?” என்று நரசி வாசலருகே அவரைத் தடுத்தான்.

“இதிலென்ன?” என்றபடி அவர் அவன் கூட வந்தார்.

அவன் காரில் ஏறிக் கொண்டு அவரைப் பார்த்தான்.

“போயிட்டு வா. உன்னைப் பார்த்தது ரொம்ப சந்தோஷம்” என்று கையை அசைத்தார். பிறகு தன் வீட்டை நோக்கிச் சென்றார்.

பந்தம்

ஷ்யாமளா கோபு

“ஹல்லோ அண்ணா, எப்படி இருக்கே?” பூமா தன் தந்தையை கைப்பேசியில் அழைத்து குசலம் விசாரித்தாள்.

ஐந்தாறு அண்ணன் தம்பிகள் கொண்ட ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தின், மூத்த மகனை அவனுக்கு கீழ் பிறந்தவர்கள் சுமார் ஏழெட்டு பேர்களும் பங்கும் பங்காளிகள் வகையறாவில் ஏழெட்டு உருப்படிகளும் அண்ணா என்று அழைக்கப் போய் அந்த அண்ணாவிற்குப் பிறக்கும் சின்னதுகளும் அண்ணா என்றே அழைக்க தலைப்பட்டதினால் நேர்ந்த விபரீதம் தான் இது. அப்பாவை அண்ணா என்ற இந்த முறை தவறிய அழைப்பு.

அதுவும் அந்த மூத்த மகனின் முதல் மகளோ அல்லது முதல் மகனோ யார் முதலில் பிறக்கிறார்களோ அவர்கள் கண்டிப்பாக அண்ணா என்றே அழைப்பார்கள். அவர்களுக்குப் பின்னால் பிறந்த குழந்தைகள் தந்தையை அண்ணா என்று அழைக்கும் முன்பு அந்த தந்தையின் ரெண்டொரு தங்கைகள் திருமணம் முடிந்து புகுந்த வீடு போய் விட ரெண்டொரு தம்பிகள் வேலை விஷயமாக வெளியூருக்கு போய் விட நேர்ந்து விடுமாதலால் இந்த குழந்தைகள் தந்தையை அப்பா என்றே அழைக்கும் பேறு பெற்றவர்கள் ஆவார்கள்.

அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த ரங்கசாமியின் மூன்று மகன்களுடன் கூடிய கூட்டுக்குடும்பத்தின் முதல் மகனாம் சிவநேசனின் கடைசி மகள்தான் இந்த் பூமா. ஆனால் சிவநேசனின் ஐந்து மக்களும் முன்னால் பிறந்தவர்களின் அடியொட்டி தாங்களும் அவரை அண்ணா என்றே அழைத்துப் பழக்கப்பட்டுப் போயிருந்தனர். அதிலும் அவருடைய கடைக்குட்டி பூமா பேரன் பேத்தி எடுத்த பின்பும் இன்னும் செல்லம் தான் அவருக்கு. பூமாவிற்கு மூத்த அக்காக்களும் அண்ணன்களும் தந்தையிடம் பக்தியும் மரியாதையும் கொண்டு எட்டி நின்று பழகிய போதும் பூமா மட்டும் இன்னும் சிறுபிள்ளைத்தனமான அவரிடம் வம்பு வளர்ப்பதில் அவருக்குமே மிகவும் மகிழ்ச்சி தான். திருமணம் முடிந்து ரெண்டு பிள்ளைகளைப் பெற்று வெளிநாட்டில் வேலைக்கு அனுப்பியவள். ஒரு பெரிய மத்திய அரசு அலுவலகத்தில் உயர்பதவியில் இருப்பவள். கை நிறைய மட்டுமன்றி பை நிறையவும் சம்பாதிப்பவள். அவள் கணவர் கோபாலனோ சுயதொழில் செய்து பணத்தை மூட்டையில் வாரிக் கட்டிக் கொண்டிருப்பவர்.

“ஹல்லோ, சொல்லும்மா. எப்படி இருக்கே? மாப்பிள்ளை எப்படி இருக்காங்க? பேரனுங்க சுகமா?” என்று சிவநேசனின் கேள்விகள் ஒரு மைல் நீளத்திற்கு நீண்டு கொண்டு செல்ல அங்கே ஒரு பிரேக் போட்டாள் பூமா.

“ண்ணா… நான் கூப்பிட்டா இத்தனை கேள்வி கேட்பது உனக்கு வாடிக்கையா போச்சு. நீயா போன் பண்ணி கேக்கணும் இத்தனை கேள்வியை”

“ஹி.. ஹி.”

“சிரிக்காதே” என்றவள் தானும் சிரித்தாள்

“என்னம்மா எப்படி இருக்கே?” என்றார் வாஞ்சையுடன்.

“நல்லாயிருக்கேன்ண்ணா” என்று அந்த ஒரு பதிலில் தான் அவருடைய நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கிறது என்பதை அறிந்தவளாக பொறுப்புடனும் அன்புடனும் பதில் சொன்னாள்.

“என்னம்மா வேலைக்கு போகலையா? இந்நேரம் கூப்பிடறே?”

“ஊஹூம். வேலைக்கு போகலைப்பா. போன வாரம் சொன்னேனே ஒரு இடம் விலைக்கு வருதுன்னு”

“ஆமாம். வாங்கிட்டியா?”

“கொஞ்சம் பணம் குறையுதுப்பா”

“என்கிட்டே பணம் இருக்கும்மா” என்றவரை இடைமறித்து அவளுடைய தாய் “என் நகைகளும் கூட இருக்குங்க” என்றது காதில் விழுந்தது. “நான் வேணும்னா கொண்டுக்கிட்டு வரட்டுமா தங்கம்?” என்று கேட்டார்.

“இல்லைப்பா. எனக்கு பணம் வேண்டாம். அம்மாவிடம் சொல்லு. என் நகைகளை அடகு வைக்கத் தான் வங்கி வரை போயிட்டு வந்தோம். அதனால் தான் வேலைக்கு போகலை. அடுத்த வாரம் ரெஜிஸ்டர் பண்றோம்ண்ணா”

“ஏன் உன் நகையை அடகு வைக்கிற? வெளியே தெருவுல போறவ. ஆபீசுக்கு போறவ. என் நகையை அடகு வைக்கலாம் இல்லையா?” என்று தாய் கேட்டது காதில் விழுந்தது. ஸ்பீக்கரில் போட்டிருக்கிறார் போலும் என்று நினைத்து “இந்த கொரோனா காலத்தில ஆபீசுக்கே போகலைம்மா. இதில் வெளியே தெருவுல எங்க போறது?” என்றாள் பூமா.

“அது சரி” என்றார் சிவநேசன்.

“என்னவோ போ பூமா, அந்த காலத்துல கூட்டுக்குடும்பத்தில மாட்டிக்கிட்டு அல்லல் பட்டோம். பெத்த பிள்ளைங்களுக்கு ஒன்னு வாங்கித் தரனும்னா மீன மேஷம் பார்த்துக்கிட்டு, பிள்ளைங்க ஆசைப்பட்டுக் கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியலையேன்னு வருத்தப்பட்டு கிடந்திருக்கோம். இப்போ நம்மை கேட்க ஆளில்லை. பணம் காசும் கை நிறைய கிடக்கு. நீங்கள் எல்லோரும் இன்னைக்கு நல்லாயிருக்கீங்க என்ற சந்தோஷம் இருந்தாலும் உங்களுக்கோ எதுவுமே என்னிடம் தேவையில்லாமல் போச்சு” என்றார் சிவநேசன் உண்மையான வருத்தத்துடன்.

பூமாவிற்கும் தன்னுடைய சின்ன வயதில் நிகழ்ந்த சம்பவம் இன்று நினைவிற்கு வந்தது. பூமா ஊராட்சி தொடக்கப்பள்ளிக்கு போய்க் கொண்டிருந்த பருவம் அது. வசதியான வீட்டுப் பிள்ளைகள் அலுமினியத்தால் ஆன பெட்டியில் புத்தகங்கள் கொண்டு வருவார்கள். சிலர் அடியில் குஞ்சம் வைத்த ஜோல்னா பையில் கொண்டு வருவார்கள். பூமாவிற்கு அவளுடைய தாய்மாமன் தில்லியிலிருந்து வாங்கி வந்திருந்த அலுமினிய பெட்டியில் அவ்வளவு விருப்பமில்லை. மாறாக குஞ்சம் வைத்த புத்தக பை வேண்டும் என்று அடம். இவள் ஒருத்திக்கு மட்டும் குஞ்சம் வைத்த பை வாங்கிக் கொடுத்தால் வீட்டில் மீதமுள்ள சிறுவர்களுக்கும் வாங்கித் தர வேண்டும். ஒரு சராசரி விவசாய குடும்பத்தில் அவ்வளவு பணத்திற்கு எங்கு போவது?

இறுதியில் “இத்தனை குழந்தைகள் இருக்கும் குடும்பத்தில் உன் அக்கா மகளுக்கு மட்டும் தனியாக எப்படி வாங்கிக் கொண்டு வரலாம்” என்று பூமாவின் தாய்மாமன் திட்டு வாங்கிக் கொண்டு போனது தான் மிச்சம். உங்க குடும்பத்தில் இனி கால் வைக்க மாட்டேன் என்று மாமாவின் சபதம் வேறு தனிக்கதை.

நினைவில் இருந்து மீண்டவள் தந்தையிடம் கேட்டாள் “யாரு சொன்னா?”என்று.

“யாருமே எங்களிடம் எதுவும் கேட்பதில்லை. மாறாக நீங்கள் தான் எங்களுக்கு படியளந்து கொண்டிருக்கிறீர்கள். அதிலும் நீ தான் மாதாமாதம் எங்களுக்கு பென்சன் தருகிறாய்” என்றார் சிவநேசன்.

“நான் ரொம்ப நாளா உன்னிடம் ஒன்னு கேட்டுக் கொண்டிருக்கிறேன். நீ வாங்கித் தர மாட்டேங்கிறே” என்றாள் பூமா சிணுங்கலுடன்.

சிறு பிள்ளையாய் தன்னிடம் சிணுங்கிக் கொண்டிருக்கும் மகளின் குரல் பெற்றோர் இருவருக்கும் உற்சாகத்தைக் கொடுக்கவே அதே சிரிப்புடன் “என்னவாம்?” என்றார்கள் ஒரு சேர.

“எனக்கு ஒரு புடவை எடுத்துக் கொடுன்னு எத்தனை வருஷமா கேட்கறேன்” என்றாள் பூமா.

“உனக்கு இல்லாத புடவையா? அப்பாவிடம் கேட்கறே?” என்று சிரித்தாள் அவள் தாய்.

“எனக்கு எவ்வளவு இருந்தா என்ன? ண்ணா நீ வாங்கி தருவியா மாட்டியா?”

“நீ பொங்கலுக்கு எங்களுக்கு காசு அனுப்புவே இல்லையா. இந்த வருஷம் அனுப்பாதே. அந்த பணத்தில் உனக்கு ஒரு புடவை வாங்கிக்கோ” என்றாள் அம்மா.

“ம்..போங்கா இருக்கே. அதெல்லாம் கிடையாது. நீ உன் சொந்த பணத்தில் எனக்கு புடவை வாங்கி தரணும்”

“அவர்ட்ட எது காசு?” என்றாள் அம்மா கவலையுடன்.

“உனக்கு கிடைக்கும் காசில் சேர்த்து வெச்சி வாங்கி தா” என்றாள் பூமா.

“நிஜமாவா கன்னுக்குட்டி கேட்கறே?” என்றார் சிவநேசன்.

“ஆமாம் ண்ணா” என்றாள் பூமா உறுதியுடன்.

“வாங்கித் தரேன்” என்றார் தீர்மானத்துடன்.

தந்தைக்கு எண்பது வயதாகிறது. சதாபிஷேகம் செய்ய வேண்டும் என்று அண்ணன்களும் சித்தப்பாக்களும் அத்தைகளும் தீர்மானித்து கிராமத்து வீட்டில் நடத்துவதற்கு ஏற்பாடாகி எல்லாரும் குடும்பத்துடன் ஒரு வாரம் முன்னே போய் அந்த ஓட்டு வீட்டில் அடைந்து விட்டார்கள். பூமாவின் இரு மகன்களும் மருமகள்களும் பேரன் பேத்திளுடன் வந்து விட்டிருந்தனர். மூன்று தலைமுறைகள் கூடியிருந்தது. கிராமமே திருவிழா கோலம் பூண்டிருந்தது. சிவநேசனும் மிக உற்சாகமாக இருந்தார்.

ஒருநாள் இரவு எல்லோரும் வீட்டின் முன் இருக்கும் களத்து மேட்டில் அமர்ந்து நிலா சாப்பாடு சாப்பிட்டு விட்டு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சு எங்கெங்கோ சுற்றி வந்து இறுதியாக பூமாவின் புடவையில் வந்து நின்றது.

“நான் இருநூறு ரூபாய் சேர்த்து வெச்சிருக்கேன். நாளைக்கு நீ போய் புடவை எடுத்துக்கோ” என்றார் சிவநேசன்.

“இருநூறு ரூபாய்க்கு என்ன புடவை எடுக்க முடியும்?” என்று கேட்டாள் பூமாவின் அண்ணி.

“ஷ்” என்று கண்ணால் அவளை அடக்கி விட்டாள் பூமா. “இரு….நூ..று ரூபாயா? பேஷ். பேஷ். எதுப்பா உனக்கு இவ்வளவு ரூபா?”

“என்னம்மா கிண்டல் பண்றே? உன்னிடம் இல்லாத பணமா?” என்றார் சிவநேசன்.

“என்ட எவ்வளவு இருந்தா என்ன? நீ வாங்கிக் கொடு”

“சரி. இந்தா” என்று தன் இடுப்பில் கட்டியியிருந்த அகலமான பெல்ட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார் அவர்.

“ஊஹூம். நான் போக மாட்டேன். நீ தான் எடுத்து தரணும்”

“நானா?”

“ஆமாம். நீ தான்”

“நீ புது மோஸ்தரில் புடவை கட்டுவே. எனக்கு எடுக்கத் தெரியாதே”

“உனக்கு எவ்வளவு தெரியுமோ அவ்வளவு எடுத்தா போதும்” என்றவள் “நீ வாங்கி தரும் புடவையைத் தான் சதாபிஷேகத்துக்கு கட்டிப்பேன்” என்றாள் பூமா.

“சாக்கு மாதிரி எதையாவது வாங்கிக் கொடுத்துடப் போறேன்” என்றார் கவலையுடன்.

“சாக்கு மாதிரி இல்லைண்ணா. சாக்கே வாங்கிக் கொடுத்தாலும் அதைக் கட்டிக் கொண்டு தான் விஷேசத்திற்கு வருவேன்” என்றாள் இன்னும் முனைப்புடன்

“அண்ணியுடன் போய் வாங்கிக்கோ”

“ஊஹூம். நீ தான் கடைக்கு போய் வாங்கித் தரணும்”

“ஏய் பூமா, எதுக்கு நீ அவரை இந்த பாடுபடத்தறே?” என்று கோபப்பட்டார் இவ்வளவு நேரமும் பூமா தந்தையிடம் வம்பு செய்து கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த அவள் கணவன்.

“என்னோட அப்பா, நான் கேட்கறேன். அப்படித் தானேண்ணா” என்று அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் பூமா.

“ஆமாம் மாப்பிள்ளை. கொளந்தை கேட்கறா என்னால கடைக்கு போய் வாங்கித் தர முடியலை”

விசேஷம் சிறப்பாக நடந்தேறிய பின்பு அவரவர் கிளம்பி சென்று விடவே பூமாவும் பெற்றோரிடம் விடைப் பெற்றுக் கொண்டாள். ”ண்ணா, அடுத்த தடவை வரும் போது எனக்கு புடவை எடுத்து வெச்சிருக்கணும். சரியா” என்றாள்.

“ஆகட்டும்” என்று பொக்கை வாய் காட்டி சிரித்தார் சிவநேசன்.

வீட்டிற்கு வந்த பின்பு பூமாவின் கணவன் கோபாலன் அவளிடம் மிகவும் வருத்தப்பட்டார். ”நீ ரொம்பத் தான் பண்றே. அந்த வயசான மனுஷன் கடைக்கு போய் புடவை வாங்கித் தரணும்னு என்ன ஒரு அடம் உனக்கு?” என்று.

“அது ஒரு கணக்குங்க” என்றாள் பூமா.

“உன் கூட பிறந்தவங்களும் இங்க தானே இருக்காங்க. அவுங்களுக்கு இல்லாத கணக்கு உனக்கு மட்டும் என்ன இருக்கு? கருமம். எல்லார் எதிரிலும் என் மானம் போவுது”

“என் கூடப் பிறந்தவங்க அவரிடம் பயபகதியுடன் எட்டி நின்று வளர்ந்தவர்கள். தங்களுடைய தேவைக்கு கூட அவரிடம் எதிரில் நின்று கேட்டு அறியாதவர்கள். ஆனால் நான்? அவருடைய தோளில் அமர்ந்து ஊரை சுற்றி வந்தவள். வானத்தையும் பூமியையும் இயற்கையும் விவசாயத்தையும் ரசிக்க கற்றுக் கொடுத்தவர் அவர். அவர் கையைப் பிடித்து இழுத்து இது வேண்டும் அது வேண்டும் என்று அழுது அடம் பிடித்துக் கேட்பது நான் மட்டும் தான். ஒருபெரிய கூட்டுக் குடும்பத்தில் அவ்வளவாக பணப்புழக்கம் இல்லாத காலத்தில் நான் கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியாமல் என்னை விட அதிகம் கவலைப்பட்டவர் அவர். அப்படி எதையாவது வாங்கிக் கொடுத்து விட்டால் என்னை விட அதிகம் மகிழ்ந்தவரும் அவர் தான்”

“சரி. அது சின்ன வயசுல எல்லார் வீட்டிலும் நடப்பது தானே. அன்னைக்கு வாங்கிக் கொடுக்கலைன்னு இன்னைக்கு குத்திக்காட்டுவது போலிருக்கு”

“ஊஹூம்”

“என்ன ஊஹூம்?” என்றார் அப்போதும் எரிச்சலை மறைக்க மாட்டாமல்.

“அன்னைக்கு நாங்க கேட்டதை எல்லாம் வாங்கி கொடுக்க முடியவில்லை என்பதை விட இன்றைக்கு நம்ம பிள்ளைங்க கிட்ட வாங்கிக் கொண்டிருக்கிறோமே என்ற எண்ணம் தான் அவுங்களுக்கு”

“அதுனால என்ன? பிள்ளைங்க பெத்தவங்களுக்கு செய்யறது தப்பா என்ன?” என்றார் கோபாலன்.

“நிச்சயம் இல்லை. ஆனால் நம்மால் அவர்களுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை என்ற எண்ணத்தை விட பிள்ளைங்க வளர்ந்துட்டாங்க. நம்ம கையை விட்டுப் போய்ட்டாங்க என்ற எண்ணம் தான் அவர்களுக்கு தாங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்காது”

“அது உண்மை தான்” என்று ஒப்புக் கொண்டார் கோபாலன்.

“அதனால் தான், நான் இன்னும் வளரலை. உங்க கிட்ட கேக்கற அளவுக்கு இன்னும் நான் உங்க கைக்குள்ள தான் இருக்கேன் என்று அவருக்கு உணர்த்த தான் இந்த நாடகம்” என்று சிரித்தாள் பூமா.

“ஓஹோ” என்றார் அவளைப் புரிந்து கொண்டவராக.

“இது ஒரு விதமான பந்தம். அதை உணரவும் மற்றவர்களுக்கு உணர்த்தவும் தான் இது. இந்த புடவை கேட்கும் நாடகம். ஆனால் அதிலும் ஒரு விஷயம் பாருங்கள். அப்பா இருநூறு ரூபாய் சேர்த்து வெச்சிருக்கிறாரே. ஒவ்வொரு ரூபாயையும் எடுத்து வைக்கும் போது அவருக்கு என் ஞாபகம் வருமில்ல”

“அது சரி” என்றார் அவர்.

“இன்னும் எவ்வளவு நாள் இருக்கப் போறாங்க ரெண்டு பேரும். இருக்குற நாள் வரைக்கும் அவுங்க நினைத்துக் கிடக்க ஏதேனும் ஒரு காரணம் வேணுமில்ல” என்றாள் பூமா.

சிவநேசன் சாப்பிட்டு விட்டு வந்து கட்டிலில் அமர்ந்தார். பின்னால் வந்து அவர் மனைவி அருகில் கிடந்த மேசை மீது தண்ணி சொம்பை வைத்து விட்டு சதாபிஷேகத்தில் நடந்த கதைகளை பேசிக் கொண்டிருந்தாள். கடைசியாக பூமா புடவை கேட்ட கதை வந்தது.

கணவனிடம் கேட்டாள்.”இந்த குட்டிக்கு மட்டும் வம்பு போக மாட்டேங்கிது” என்றாள்.

“எதை சொல்றே?” என்று கேட்டார் சிவநேசன்.

“பேரன் பேத்தி எடுத்து பாட்டியாகவும் ஆயிட்டா”

‘யாரை சொல்றே? கடைக்குட்டியையா?”

“புடவை வாங்கி தரணுமாம். அதுவும் நீங்களே கடைக்கு போய் வாங்கித் தரணுமாம். இந்த குழந்தைக்குத் தான் எவ்வளவு வம்பு பாருங்க” என்றாள்.

“அவள் இன்னும் நம்ம குழந்தையாக இருக்கறதால தான் இத்தனை வம்பு பண்ணுறா” என்றார் அவர்.

இருவரும் சேர்ந்து சிரித்தனர். அவளைத் திருமணம் முடித்து வந்த நாளிலிருந்து ஒவ்வொரு பிள்ளைகளும் பிறந்த நாளையும் பொழுதையும் அவர்கள் வளர்ந்த காலத்தையும் அவர்களை வளர்க்க இவர்கள் பட்ட பாட்டையும் இன்று பிள்ளைகளின் வளர்ச்சியைக் கண்ட நிறைவையும் மாறி மாறி பேசி பேசி நீண்டது அந்த இரவு. அவர்களும் பிள்ளைகளை நினைத்துக் கிடக்க காரணம் வேண்டும்.

ஒரு பார்வையற்றவனின் திருப்தி – மலையாளம் மூலம் : தகழி சிவசங்கரம் பிள்ளை ஆங்கிலம் வி. அப்துல்லா தமிழில் தி. இரா. மீனா

தி. இரா. மீனா

பார்கவியை தன் மனைவியாக பப்பு நாயர் ஏற்றுக் கொண்டான். பிறவியிலிருந்தே அவனுக்கு பார்வையில்லை. அவளுக்கு அந்த கிராமத்தில் அவ்வளவு நல்ல பெயரில்லை. அவளுடைய வீட்டிற்கு போவது பற்றி யாரும் அவனிடம் கேள்வி கேட்கவில்லை. அவன் பார்வையற்றவன் அல்லவா?

மத சம்பந்தமான பழங்கதைகள் கேட்பது பார்கவியின் தாய்க்கு மிகவும் பிடிக்கும். பப்பு நாயர் தனக்குத் தெரிந்த எல்லாக் கதைகளையும் அவளுக்குச் சொல்வான். அவன் அங்கு போவதை தடை செய்ய அவன் அம்மா இரண்டு தடவை முயற்சி செய்தாள்.கடைசியில் பார்கவி கர்ப்பிணியானாள். பப்புநாயர் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

தன் வீட்டிற்குள் அவனை அனுமதிக்க முடியாது என்று பப்புநாயரின் அம்மா சொன்னாள். அவனுக்கு ஒரு பதிலிருந்தது: “எல்லா நேரமும் என் தம்பி என்னை கவனித்துக் கொள்ள மாட்டான். என்னைப் பார்த்துக் கொள்ள யாராவது ஒருவர் வேண்டும்.”

“அவளை எப்படி நீ காப்பாற்றுவாய்?”அம்மா கேட்டாள்.

“அவளுக்கு நான் எதுவும் கொடுக்க வேண்டாம் . வீடுகள் சுத்தம் செய்து அல்லது மாவரைத்து அவள் பிழைத்துக் கொள்வாள்.”

“நீ என்ன செய்வாய்?”

“அவள் என்னைப் பார்த்துக் கொள்வாள்.”

“அவளுக்கு மூன்று தடவை கரு கலைந்திருக்கிறது.”

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ! உலகத்தில் அவளுக்கு வேறு யாருமில்லை.” இப்படித்தான் பப்பு நாயரின் நிரந்தரமான வெளியேற்றம் அவன் வீட்டிலிருந்து நிகழ்ந்தது.

பார்கவி ஓர் அந்தணர் குடும்பத்தில் வீட்டு வேலை செய்து வந்தாள். ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பாடு , மாதத்திற்கு ஐந்துபடி அரிசி அவள் கூலி. இது தவிர இரண்டு வீடுகளில் மாவரைத்து தரும் வேலையும் அவளுக்கு நிரந்தரமாக இருந்தது. அவள் பப்புநாயரை நன்றாக கவனித்துக் கொண்டாள். அவனுக்கு கெட்டியான அரிசி கஞ்சி வைத்துக் கொடுத்து விட்டு நீராக உள்ளதை தான் குடித்து பசி தீர்த்துக் கொள்வாள். பணிவாக இருப்பாள். அவள் பேசுவது மிகக் குறைவு. வறுமை அவள் முகத்திலிருந்த உற்சாகத்தையெல்லாம் சுரண்டியிருந்தது. இருபது வயதிலேயே உள்ளடங்கிப் போயிருந்த கன்னம், பள்ளமான கண்கள், ஆகியவை பத்து வயதை அதிகரித்துக் காட்டின. அவள் உறுப்புகளில் எப்போதும் ஒருவித சோக நிழல் இருந்தது.மனம் விட்டு ஒருபோதும் மகிழ்ச்சியாக அவள் சிரித்ததில்லை. தன் அதிர்ஷ்டவசமான தோழிகளைப் பார்க்கிற போது மிக அபூர்வமாக ஒரு கேலியான புன்னகை அவள் காய்ந்த உதடுகளில் வெளிப்படும்.

எப்போதும் தன் இடுப்பைச் சுற்றி ஒரு மெல்லிய ஆடை அணிந்திருப்பாள். மாற்று உடைகள் வேறு எதுவும் அவளிடமில்லை.ஆனால் ஒரு போதும் தன் அரை நிர்வாண ஆடை குறித்து அவள் வெட்கப்பட்டதில்லை.

“பார்கவி வயிற்றில் ஓர் ஆண்குழந்தையைச் சுமந்திருக்கிறாள்.அவன் வளர்ந்த பிறகு ராமாயணம் படிப்பான்.” என்று பப்புநாயர் சொல்வான். “எனக்கு பெண்குழந்தைதான் வேண்டும்.”என்று அவள் பதில் சொல்வாள்.

பார்கவிக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. நாயரின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போனது. அவன் அறையை விட்டு வெளியே போகவே மாட்டான். வீட்டுக்கு வரும் பெண்களிடமெல்லாம் “பார்கவி பெண் குழந்தைதான் வேண்டுமென்றாள். என் ஆசைப்படிதான் நடந்தது.” என்று சொல்வான். எல்லா நேரமும் குழந்தையைத் தன் மடியிலேயே போட்டு கொஞ்ச வேண்டுமென்று விரும்பினான். “குட்டிப் பையா, நீ பெரியவனான பிறகு உன் அப்பாவிற்கு ராமாயணம் படித்துக் காட்டுவாயா?’ என்று குழந்தையிடம் கேட்பான்.

அவன் முகம் சந்தோஷத்தில் மின்னும்.”பார்கவி,நீ குழந்தைக்கு முத்தம் கொடுப்பதில்லையா?” என்று அடிக்கடி கேட்பான்.

“ஒரு நிமிடம் கூட நீ பேசாமலிருக்க மாட்டாயா?” என்று அவள் பதில் சொல்வாள்.

“பெண்ணே , நமக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. என்க்கு வேறு என்ன வேண்டும்? இவன் என்னை காசி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு அழைத்துப் போவான்.செய்வாய் தானே மகனே?” குழந்தைக்கு அழுத்தமாக முத்தம் கொடுப்பான். ’அஸ்வதி, மகம், மூலம், கேதுவிற்கு ஏழாவது ’ என்று ஜாதகத்தை கணக்கிடத் தொடங்குவான்.’இளம்பருவத்திலேயே இவன் சுக்கிரனின் ஆளுமை உள்ளவனாக இருக்கிறான். இவன் மிக அதிர்ஷ்டக்காரன். கோபிகா ரமணன் என்று இவனுக்குப் பெயர் வைக்க வேண்டும் பார்கவி. ஓமன திங்கள் கிடாவோ என்ற பழைய தாலாட்டை நீ கற்றுக் கொள்ள வேண்டும்’ என்று சொன்னான்.

அவள் குழந்தைக்கு ராமன் என்று பெயர் வைத்தாள். “ஏன் நீ அவனுக்கு கோபிகா ரமணன் என்று பெயர் வைக்கவில்லை ?’ என்று கேட்டான்.

“ஓ, பிச்சை எடுக்கப் பிறந்த ஓர் ஆண் குழந்தை..” என்றாள்.

“அப்படிச் சொல்லாதே பெண்ணே. அவன் ஜாதகம் ஒரு தலைவனுடையது.” அவள் அந்த தாலாட்டுப் பாடலையும் கற்றுக் கொள்ளவில்லை.

பப்புவின் மடியிலிருக்கும் குழந்தை வீறிட்டு அலறும். பப்பு உற்சாகம் அடைந்து பார்கவியை கூப்பிடுவான். ’அலறுவதற்காக பிறந்த பேய்’ என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவள் கத்துவாள். பார்கவி குழந்தையை அடிப்பாள். பப்புநாயர் அதிர்ந்து போவான். வேலைக்குப் போய்விட்டு சாயந்திரம்தான் வருவாள். குழந்தையின் தொண்டை வரண்டு போய் விட்டதாக தனக்குள் முணுமுணுத்துக் கொண்டு அமைதியை இழந்தவனாக தவிப்பான். அவனது அன்பு மனதை நெகிழ்விக்கக் கூடியது.

’என் மகனுக்கு நல்ல எதிர்காலமிருக்கிறது. அவனுடைய இடது மார்பில் தாமரையைப் போல இருக்கும் ஒரு மச்சம் தெய்வீக தன்மையைக் காட்டுவதாகும்.’

வீட்டுக்கு அருகாமையில் உள்ள பெண்களிடம், ”அவன் என்னைப் போல இருக்கிறானா ?” என்று கேட்பான். அந்தப் பெண்களின் கண்களிலிருந்து கண்ணீர் வரும். தன்னை விழுங்கியிருக்கும் இருளில் ஒரு துளை இருப்பதை அவன் கவனித்திருந்தான். குழந்தை தன்னைப் போலவே இருக்கிறதென்று நினைத்தான். ”உன்னால் பார்க்க முடியுமா ?” என்று ஒரு பெண் அவனிடம் ஒரு நாள் கேட்டாள்.

“என் மகனை என்னால் பார்க்க முடியும்.”என்று பதில் சொன்னான். மகனைப் பார்த்துக் கொண்டேயிருப்பான். குழந்தையை முத்தமிடும்போது ’ குட்டி பயலே, உன் சிரிப்பு!’ என்று சில சமயங்களில்
சொல்வான். அந்த அமைதியான சிரிப்பைக் கூட அவன் பார்த்தான்.

’அவள் மிக மோசமான பெண். குழந்தை அவனைப் போல இருக்கிறதா?’ என்று கிராமத்துப் பெண்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள்.

ராமனுக்கு முதன்முதலாக அன்னம் கொடுக்கும் சமயம். அந்த மங்கலமான செயலை தன் கையால் தானே செய்ய வேண்டுமென பப்பு நாயர் ஆசைப் பட்டான். ஆனால் பார்கவி அவனை அனுமதிக்கவில்லை. அவன் பெருந்தீனிக்காரன் என்று அவள் தன் அம்மாவிடம் சொன்னாள். ’அப்படியெனில் வேறு யாரையாவது வைத்து அன்னம் ஊட்டலாம். குழந்தை பெருந்தீனி தின்பவனாகி, தொப்பையன் ஆகிவிடக் கூடாது’ என்று அவள் அம்மா சொல்லிவிட்டாள். ’நான் அவ்வளவு சோறு சாப்பிடுபவனில்லை’ என்று அந்த நகைச்சுவைக்கு உண்மையாக சிரித்துக் கொண்டே பதில்
சொன்னான் பப்பு நாயர்.

குழந்தை வளர்ந்தான். அந்தக் குடும்பச் சூழ்நிலை மோசமானது. வேலை செய்த இடத்தில் திருடி விட்டதாக குற்றம் சாட்டி பார்கவியை வேலையை விட்டு நீக்கி விட்டனர்.

“குழந்தையை பட்டினி போடாதே. என் பங்கை அவனுக்கு கொடுத்து விடு.” நாயர் மனைவியிடம் சொல்வான்.

அது வரட்சியான கார்த்திகை மாதம். அந்த வீட்டில் அரிசி கஞ்சி சமைத்து மூன்று நாட்களாகி விட்டன. ஒரு நாள் பீன்ஸ் இலைகளை சாப்பிட்டு சமாளித்தனர். இரண்டாம் நாள் அரிசி நொய். மூன்றாம் நாள் பக்கத்து வீட்டு கேசவன் நாயர் பத்து பைசா கொடுத்தார். சிறிது அரிசி வாங்கி கஞ்சி வைத்து பார்கவி, அவள் அம்மா, அவள் மகன் மூவரும் சாப்பிட்டனர். வராந்தாவில் உட்கார்ந்திருந்த பப்பு நாயருக்கு பக்கத்து வீட்டுக்காரர் ராமாயணம் வாசித்துக் கொண்டிருந்தார். அடுக்களையில் என்ன நடந்து கொண்டிருந்தது என்று நாயருக்குத் தெரியாது.

அன்று இரவு அவன் குசேல விருத்தத்திலிருந்து சில எளிமையான பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தான். நள்ளிரவிற்குப் பிறகும் பசி அவனைத் தூங்க விடவில்லை. அவன் பாடுவது அக்கம் பக்கத்தினருக்கு மிகத் தெளிவாக கேட்டது. ”இது என்ன பைத்தியக்காரத்தனம்?” பார்கவி கோபத்துடன் கேட்டாள். ‘நான் கடவுளைப் பற்றித்தானே பாடிக் கொண்டிருக்கிறேன்’பாடுவதை நிறுத்தி விட்டு மௌனமாக பிரார்த்தனை செய்தான்.

பார்கவி மீண்டும் கருவுற்றாள். இந்தத் தடவை அவளுக்கு பெண்குழந்தைபிறக்குமென்று நாயர் சொன்னான். மூத்த குழந்தை இப்போது சிறிது பேசத் தொடங்கியிருந்தான். தாயை அம்மா என்றும், பாட்டியை அம்மும்மா என்றும் அழைத்தான். ஆனால் அப்பா என்ற வார்த்தைக்கான அடிப்படை ஒலி அவனிடமிருந்து வரவேயில்லை.

’சின்னப் பயலே, ஏன் அப்பா என்று கூப்பிட மாட்டாயா ?’ அப்பா என்ற வார்த்தை உச்சரிப்பதற்கு கடினமானது என்று நாயர் தனக்குள் சமாதானம் செய்து கொண்டான்.

இந்த முறை கருவுற்றலின் போது பல தடவை பார்கவி நோய்வாய்ப்பட்டாள். இந்த கஷ்டங்கள் எல்லாம் போய்விடும் என்று பப்புநாயர் சொல்லிக் கொண்டேயிருந்தான். ராமன் அம்மாவை விட்டு அகல
மாட்டான். பப்பு நாயரின் அருகே அவன் மறந்தும் போவதில்லை. அவனுக்கு ஒரு தங்கை பிறக்கப் போவதாகவும், அந்தக் குழந்தை எங்கேயிருக்கிறதென்று அம்மாவிடம் கேட்டு அவன் முத்தமிட
வேண்டுமென்றும் மகனிடம் சொல்வான்.

பார்கவி பெண் குழந்தை பெற்றெடுத்தாள். குழந்தையின் ஜாதகத்தை கணித்த நாயர் அவளுக்கு பதினான்காம் வயதில் திருமணம் நடந்து மகிழ்ச்சியாக இருப்பாளென்றான். ’என் மகள் அவள் தாயைப் போல இருக்கிறாள், இல்லையா அக்கா?’என்று பக்கத்து வீட்டு குட்டியம்மாவிடம் கேட்டான். அவள் பெரிதாகச் சிரித்தாள். முகத்தில் கேலி பரவியது.

“ஆமாம்,அப்படித்தான் நினைக்கிறேன்.”

அக்கம்பக்கத்தவர்கள் அந்தப் பெண் குழந்தையின் அப்பாவாக உத்தேசமாக யாரைச் சொல்ல முடியும் என்று விவாதித்து முடிவுக்கு வந்தனர். இப்போது இரண்டு குழந்தைகள். குடும்பத்தை வறுமை பிய்த்துத் தின்றது.பார்கவியின் உடல்நிலையும் சீர்கெட்டது. அவளால் எந்த வேலையும்செய்ய முடியவில்லை.

அவர்கள் குடும்ப நிலை சீக்கிரம் சரியாகி விடும் என்று பார்கவிக்கு நாயர் ஆறுதல் சொன்னான். இந்த கொடுமைகளிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அவள் நினைத்தாள். குழந்தைகள் அனாதையாகி விடுமெனவும், அது முட்டாள்தனமான முடிவென்றும் அவன் விவாதித்தான். ஆனால் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட அவள் கண்களிலிருந்து வரவில்லை. பல்லைக் கடித்து தன் இயலாமையைக் காட்டுவாள். ஒரு சில கணங்கள் அந்த கண்களிலிருந்து ஒளி எழுந்து, பின் அடங்கி ஆற்றாமையை காட்டும். “நீ ஏன் பிச்சை எடுக்கக் கூடாது?’ என்று ஒரு நாள் அவனிடம் கேட்டாள். ’பெண்ணே, நீ சொல்வது சரிதான். புத்தியோடு பேசுகிறாய். ஆனால் ‘நான் இந்த கிராமத்தை விட்டு போக வேண்டுமே. குழந்தைகளை விட்டு எப்படிப் போவேன் என்று தெரியவில்லையே.’

பார்வதி மீண்டும் கருவுற்றாள். அவளால் எழுந்திருக்க முடியவில்லை. பல நாட்கள் அடுப்பே பற்ற வைக்கப்படவில்லை. நாயர் மகனை தினமும் மதியம் பக்கத்திலுள்ள அந்தணர் வீட்டிற்கு அனுப்பி விடுவான். அவர்கள் கொடுக்கும் அரிசிக் கஞ்சியை அம்மாவும் ,பிள்ளைகளும் சாப்பிட்டு விடுவார்கள். அதில் ஏதாவது மிச்சமிருந்தால் நாயர் சாப்பிடுவான்.

“நான் ராமாயணத்தைக் கேட்கும் போது எனக்கு பசியோ, தாகமோ எதுவுமில்லை ”என்று பப்புநாயர் சொல்வான். அவனுக்காக யாரோ படிக்கிற ராமாயணத்தைக் கேட்டபடியே அவன் தன் பகல் பொழுதைக் கழித்து விடுவான். ராத்திரியில் தனக்கு நினைவில் வருகிற வரிகளைச் சொல்லிக் கொண்டு படுத்திருப்பான்.

குழந்தைகள் பசியில் அழுவார்கள்.பார்கவி ஒன்றும் பேசாமல் படுத்திருப்பாள். ’சீக்கிரம் எல்லாம் சரியாகி விடும்’ என்று நாயர் சொல்வான். கவனிப்பாரற்ற நிலைக்கு குழந்தைகள் தள்ளப்பட்டன. ராமனை பகல் முழுவதும் பார்க்க முடியாது. வீடு வீடாய் பிச்சை எடுப்பான். பெண் குழந்தை நோய்வாய்ப்பட்டது. யாரிடமோ அரிசியைக் கடன் வாங்கி வந்து கஞ்சி செய்து தரச்சொல்லி அவளுக்குக் கொடுப்பான். ராமன் அந்தியில் தான் வீட்டிற்கு வருவான். கடவுளைப் பற்றிப் பாடச் சொல்லிக் கேட்பார்கள். அதற்கு காசு தர மாட்டார்கள். பப்புநாயர் அவனைப் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு சாமி கதைகள் எல்லாம் சொல்வான். நாயர் கதை சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் எழுந்து போய் விடுவான். அடுப்படியில் இருந்து அவன் குரல் கேட்கும் போதுதான் ராமன் அங்கில்லாதது நாயருக்குத் தெரியும்.

பார்கவிக்கு பிறந்த ஆண்குழந்தை நான்காம் நாளில் இறந்துபோனது. அது ஒரு வகையில் வரம்தான். அவர்கள் எப்படிக் காப்பாற்றுவார்கள்? நாயர் இப்படிச் சொல்லி தன்னைச் சமாதானம் செய்து கொண்டான். குழந்தைகளை காப்பாற்றுவது என் பொறுப்பு. இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. நமக்கு இனி வேறு குழந்தைகள் வேண்டாம்,’ என்று பார்கவியிடம் சொன்னான்.

ராமனுக்கு இப்போது ஆறு வயது. அவனுக்கு எழுத, படிக்க கற்றுத் தர வேண்டும் என்று நாயர் முடிவு செய்து பள்ளியில் சேர்த்தான்.

பார்கவிக்கு அந்தணர் வீட்டில் இழந்த வேலை திரும்பவும் கிடைத்தது. அது இறந்து போன குழந்தையால் கிடைத்த அதிர்ஷ்டம் என்று பப்பு நாயர் சொன்னான். அந்த வேலையின் வழியாக குடும்பத்திற்கு ஒரு வேளை உணவு கிடைத்தது. ஆனால் நாயருக்கு அதனால் எந்த பிரயோஜனமுமில்லை. அவன் பட்டினி தொடரவே செய்தது. மதியமும், இரவும் அந்தணர் வீட்டிலிருந்து கொண்டு வந்த சாப்பாட்டை அம்மாவும், குழந்தைகளும் சாப்பிட்டார்கள். நாயர் ராமாயணப் பாடல் பாடிக் கொண்டோ கேட்டுக் கொண்டோ வராந்தாவில் உட்கார்ந்திருப்பான். அபூர்வமாக, அவனுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுப்பார்கள். அவன் எப்போதும் சாப்பாடு கேட்டதில்லை. எது கி்டைத்ததோ அதைச் சாப்பிட்டான்.

ராமன் பள்ளிக்குப் போகவில்லை. தன்னிடம் வரவேண்டாம் என்று நாயரின் அம்மா சொல்லி விட்டாள். தன்னால் செலவை சமாளிக்க முடியாதென்று சொன்னாள். அவள் சொல்வது நியாயமானதே என்று அவனுக்குப் பட்டது. அவன் குழந்தைகள் எழுதப் ,படிக்க கற்றுக் கொள்ள வேண்டும். மகனுக்கு ஆறு வயதுதான் ஆகிறது. இன்னும் ஒரு வருடம் காத்திருக்கலாம்.

குழந்தைகள்? இன்று வரை அவர்கள் அவனை அப்பா என்று கூப்பிட்டதில்லை. அவன் அங்குமிங்கும் தடுமாறி நடப்பதைப் பார்த்துச் சிரிப்பார்கள். “கண்ணே, இங்கே வா ’ என்று கூப்பிட்டு கையை நீட்டுவான். அந்தக் குழந்தை அவனருகில் வரவே வராது. தூரத்தில் நின்று கொண்டு அவனைப் பார்த்து முகம் சுளிக்கும். ’ராமா,கொஞ்சம் வெற்றிலை பாக்கு கொண்டு வா’ என்று ஒரு முறை மகனிடம் சொன்னான். ராமன் வெற்றிலையில் மிக தாராளமாக சுண்ணாம்பைத் தடவி, பாக்கு என்று சொல்லி சில கற்களை வைத்துக் கொடுத்து விட்டான் .பப்புநாயர்வாய் வெந்து கத்திய போது கைகொட்டி சத்தமாகச் சிரித்தான். அந்த கேலியை நினைத்து நாயரும் சிரித்தான்.

ஒரு நாள் பப்பு நாயர் குச்சியின் உதவியோடு வீட்டின் முன் வராந்தாவில் இறங்கினான். அடுப்படியில் அம்மாவோடு சண்டை போட்டுக் கொண்டு வெளியே வேகமாக ஓடி வந்த ராமன் குச்சி மேல் விழுந்தான். பப்பு நாயர் அவன் முகத்தின் மேல் விழுந்தான். இந்த நிகழ்வை வழிப்போக்கர்களிடம் சொல்லி மகனின் வேகத்தைப் பாராட்டுவான். இப்படியாக இரண்டு வருடங்கள் கழிந்தன. ராமனை இன்னும் பள்ளியில் சேர்க்கவில்லை. சில தடவை பார்கவியிடம் இதைப் பற்றி நாயர் சொல்லிப் பார்த்தான் ’உன் உளறுவாயால் நீ வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவாய்’என்று சொல்லிவிட்டாள்.

’நான் பேசும் விஷயம் சரிதானே?’

அவள் பதில் எதுவும் சொல்ல மாட்டாள். பேசாமல் வேலைக்கு கிளம்பி விடுவாள். ராமன் சின்னச் சின்ன திருட்டுவேலைகளில் ஈடுபட்டான்.’ நீ செய்வது சரியா?’ என்று நாயர் கேட்டான்.

’நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்பது பதிலாக இருந்தது. அவன் சின்னப் பையன்தான். பெரியவனாகி விட்டால் சரியாகிவிடுவான் என்று நாயர் தன்னைச் சமாதானம் செய்து கொண்டான்.

பார்கவி மீண்டும் கருவுற்றாள். அது நாயருக்கு சிறிது ஆச்சர்யமாக இருந்தது. ’பார்கவி, இது எப்படியானது?’ என்று கேட்டான். அவள் பதில் சொல்லவில்லை. இந்த சமயத்தில் அவள் ராமனை வீட்டு வேலைக்கு அனுப்பினாள்.’படிக்க வேண்டிய இந்த சமயத்தில் அவனை வேலைக்கு அனுப்பலாமா?’என்று பக்கத்து வீட்டு குட்டியம்மாவிடம் புகாராகச் சொன்னான்.

’ஆமாம்..’என்றாள் அவள். பார்கவி என்ன செய்கிறாள் என்பதெல்லாம் குட்டியம்மாவிற்குத் தெரியும். பப்புநாயரை பார்கவி அவமதிப்பதைப் பார்க்கும் போது அவளுக்கு நாயர் மேல் இரக்கம் ஏற்படும். நாயர் பட்டினி கிடக்கும் போது பார்கவி தன் வயிற்றை நிரப்பிக் கொள்வதை அவள் பார்த்திருக்கிறாள். அவளுக்கு அழுகை கூட வந்திருக்கிறது. இப்போது அவள் நாயரின் அம்மாவிடமிருந்து ஒரு செய்தி கொண்டு வந்திருக்கிறாள்.

அங்கு நடக்கும் நிகழ்வுகளை அக்கம் பக்கத்தினர் பேசத் தொடங்கி இருந்தனர்.ஆனால் பரிதாபப்பட்டு யாரும் அவனிடம் இந்த மாதிரியான விஷயங்களை நேரடியாகப் பேசுவதில்லை. அதனால் வாழ்வின் தீய நிலை அவன் இருட்டான உலகில் ஒளிந்து இருந்தது. ஒரு வேளை அவன் வாழ்கின்ற நரகம் பற்றி அவனுக்கு தெரிய வந்தால் அவனால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று அக்கம்பக்கத்தினர் பயந்தனர். பார்கவியின் மேல் அவன் வைத்திருக்கும் எல்லையற்ற காதல் எல்லோரும் உணர்ந்ததாக இருந்தது. அதே நேரத்தில் அவனது அசைக்க முடியாத நம்பிக்கை அதிசயமானதாகவுமிருந்தது. அவனுடைய நேர்மைக்கும் ,தியாகத்திற்கும் உலகமே தலை வணங்கும். அவன் பார்கவியிடம் ஒரு வார்த்தை கூட கோபமாகப் பேசியதில்லை. கொடுமையான யதார்த்தத்தை அவனால் எப்படி எதிர்கொள்ள முடியும்?

குட்டியம்மாவால் எதையும் சொல்ல முடியவில்லை.’என் மகன் மிக புத்திசாலி. அவன் ஒரு பெரிய அலுவலகத்தில் வேலை பார்க்கிறான்.’ என்று நாயர் அவளிடம் சொன்னான்.

’பப்பு நாயரே,அவன் உங்கள் மகனில்லை’.

’இல்லை,அவன் கடவுளின் குழந்தை.இந்த உலகமே கடவுளால் படைக்கப்பட்ட மாயைதானே?’

குட்டியம்மா அதற்கு பதிலெதுவும் சொல்லவில்லை. அவளுக்கு அதைச் சொல்ல தைரியமில்லை.

பார்கவிக்கு இந்த முறை ஓர் ஆண்குழந்தை பிறந்தது. வீட்டின் புதிய வருகை நாயருக்கு மகிழ்ச்சி அளித்தது. அந்தக் குழந்தை தனக்கு தோழமையாயிருக்குமென்று அவன் சொன்னான். இன்னொரு நாள், மீண்டும் குட்டியம்மா வந்தாள். ’எதையும் பார்க்க முடியாத அதிர்ஷ்டக்காரன் நீ. இந்த உலகத்தின் அவலங்களையெல்லாம் நீ பார்க்க வேண்டியதில்லை’ என்றாள்.

“இந்த உலகில் தீயது என்பதேயில்லை. உண்மைதான்,வறுமை இருக்கிறது ஆனால் அது முடிவுக்கு வந்துவிடும். சோகமிருக்கும் போது சந்தோஷமும் இருக்கும் அக்கா .”

“இல்லை.. அப்படி..”

“நான் வருத்தமாக இல்லை; எந்த வருத்தத்தோடும் கடவுள் என்னை இந்த உலகிற்கு அனுப்பி வைக்கவில்லை. என் குழந்தைகளைப் பற்றிய வருத்தம் எனக்கிருக்கிறது என்பது உண்மைதான். ராமன் எனக்கு ஒரு கடிதம் கூட எழுதியதில்லை.’

’குழந்தைகளை நீ பார்த்திருந்தால் இந்த மாதிரி நீ வருத்தப்படமாட்டாய்.’

’நான் என் குழந்தைகளைப் பார்க்கிறேன்.’

’அப்படியெனில் ,நீதான் அவர்களுக்கு அப்பாவா?’ குட்டியம்மாவின் இதயம் ஒரு கணம் துடிப்பை மறந்தது. தன்னையறியாமலே அவள் உண்மையை உளறிவிட்டாள். பப்புநாயர் பதிலுக்காக் தயங்கி, தடுமாறினான். அடுத்த கணம் ’அவர்கள் குழந்தைகள்.’ என்றான்.

’உனக்கு என்ன தெரியும் நாயர் ?’

’நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம் அக்கா. இப்போது பிறந்த இந்தக் குழந்தை – நான் முட்டாளில்லை. பார்வையற்றவர்களுக்கு ஓர் அதீத புத்தி கூர்மையுண்டு. எனக்கு பல விஷயங்கள் தெரியும். ஒரிரவு நான் வீட்டிற்குள்ளிருந்து நாணயங்களின் ஒலி வருவதைக் கேட்டேன் .

”நீ வராந்தாவில் உட்கார்ந்திருக்கிறாய். அவள் ஒரு பிசாசு.’ பப்புநாயர் உடனடியாக பதில் சொல்லவில்லை.

’அதனாலென்ன? குழந்தைகளுக்கு அப்பா இல்லை என்று உலகம் சொல்லாதில்லையா?’

’அவர்கள் உன்னை ’அப்பா’என்று கூப்பிடுகிறார்களா?’

’இல்லை. ஆனால் நான் அவர்களை நேசிக்கிறேன். ராமனும், தேவிகாவும் எனக்கு முன்னால் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு அழகானவர்கள்! என் கண்மணிகள்! அவர்கள் என் குழந்தைகள்தான். அவர்களுக்காக நான் ஏதாவது செய்ய வேண்டாமா?’

’அவள் உன்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள்.’

’அவள் பரிதாபத்திற்குரியவள். பசியில் எவ்வளவு தவித்திருக்கிறாள்! ஒரு வேளை இதுதான் அவளுடைய வாழ்வாதாரத்திற்கான ஒரே வழி போலும். அந்த அளவிற்காவது அவளுக்கு நான் உதவிக் கொண்டிருக்கிறேன்.’

குட்டியம்மாவிற்கு அவனிடம் பேச எதுவுமேயில்லை.அவன் மனம் மிக விசாலமானது, இந்த உலகத்தைப் போல. அவன் இருட்டில் தடுமாறுகிற ஒருவனில்லை. அவன் மனம் நிரந்தர உள்வெளிச்சம் கொண்டிருக்கிற ஓர் ஒளிரும் படிகம். தனக்குள் பலப் பல உலகங்களை அடக்கிக் கொண்டிருக்கிற மேதமை.

குட்டியம்மா அமைதியாக வெளியேறினாள் ; அந்த இரவிலும் அக்கம்பக்கத்தினர் அவன் பாடும் குசேல விருத்தத்தை கேட்டனர்.

————————————————-

நன்றி : The Penguin Book of Modern Indian Short Stories

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இல்லாதது

ரகுராவணன்

வராத வாந்தி தலைசுற்றல் மயக்கம்
புளிக்காத மாங்காய்
தீராத சாம்பல்
வெளுத்துப் போன பாய்
அலுத்துப் போன உடல்
சலித்துப் போன சாமி
கொழுத்துப் போன டாக்டர்
நீளாத மாதம்
ஓயாத வாய்கள்
ஆட்டாத தொட்டில்
தூக்காத குழந்தை
போகாத கல்யாணம் காதுகுத்து
பெயர் சூட்டு பிறந்தநாள் விழாக்கள்.
இன்று பக்கத்து வீட்டில் சீமந்தம்.
அழுகின்ற குழந்தைக்கு ஆறுதல்
கூறுகிறான் கணவன்

ஏடாதி கவிதைகள்

ஏடாதி

1.

திறந்திருக்கும் வாசல்
சுழட்டிப் பெய்யும் மழை
கட்டற்ற வெளியில்
கட்டியணைக்கும் இருள்
யானைக் காதின்
மடல் அது போல
வீசும் காற்றில்
வருடும் மேனியில்
முளைவிடும் வித்துக்கள்
வேர்களை ஆழ ஊன்றுகிறது
ஒத்த வீட்டின்
மேவிய குழிமேட்டில்…

2.

எத்தனிக்கும்
களைந்த மதியத்தில்
இளைப்பாறும் கனத்தில்
கிணத்து மேட்டில்
கீற்றசைக்கும் தென்னை
விரித்துகாயும்
அவள் நரையை
அள்ளி வருடியது

புற்றிலிருந்து
தப்பிவந்து
அசந்துறங்கும்
நடைஎறும்பாய்
முற்றிலும் துறவு பூண்ட
புத்தனைப் போல
ஆழ்ந்துறங்குகிறாள்
ஆளாங்குளத்தி

3.

இடையபட்டியில்
கிடையமர்த்தியவனுக்கு
உடைந்தது மண்டை
அடைக்கலம் கேட்டதனால்…

ஒரே வழித்தட பேருந்து
இனம் பிரித்தது
மகளிருக்காக மட்டுமென்று…

சாக்கடையிலும் கூட
தனியாக ஓடியது
மேலத்தெருவும் கீழத்தெருவும்…

பாவம் என்ன செய்தது
குடிசை வீடு
உறங்கும் நெடிய இரவில்
பற்ற வைத்தது
சிறகில்லாத மின்மினி…

4.

கதவு திறக்கையில்
தலை தட்டும்
மிளகாய் கொத்தும்
வேம்புக் கரித்துண்டும்
நிதம் தூவுகிறது அட்சதை….
துவைத்து போட்ட
அம்மாவின் நூற்சேலை
உறங்குகிறது அலமாரியில்
நீள் நாட்களாக
அணைத்துப் போர்த்தினேன்
அம்மாவின் கதகதப்பு
ஒட்டிக் கொண்டது

5.

வெட்டிவைத்த வாழைத்தார்
ஊதிப் பழுக்கிறது
மூடிய உழவர் சந்தையால்…

நிரம்பி வழிகிறது
கழணித் தண்ணீர்
சந்தைக்குப் போகும் வத்துபால்மாடு…

நடைஎறும்பின் வழியே
நானும் சென்றேன்
பக்கத்தில் புற்று…

நேற்று மேய்ந்த ஆடு
வத்தலாய் காய்கிறது இன்று
ஊர் பொங்கல்…