செல்வசங்கரன்

சைடு வாங்குதல் – செல்வசங்கரன் கவிதை

செல்வசங்கரன்

சிரிப்பே வரவில்லை
இப்படித்தானே சிரிக்கவேண்டுமென சிரித்துப் பார்க்க
இதுவெல்லாம் சிரிப்பில் அடங்குமா
இடதும் வலதும் உதடுகள் சைடு வாங்கிக் கொண்டதால்
தூரத்திலிருந்து பார்ப்பவர்கள்
சிரிக்கிறானென்றே பொத்தாம் பொதுவாக கூறி நகர்ந்தனர்
சிரிக்கவில்லை எனக்குத் தெரியுமாதலால்
பழைய பொசிசனுக்கு வருவதில் ரொம்பச் சிரமமில்லை
இப்பொழுது சிரிக்காமலா இருக்கிறேன் பெரிய பாவம் செய்ய பார்த்தேன்
உதடுகளைப் பழையபடி ரெண்டு பக்கமும் ஒதுக்கி வைத்துக்கொண்டேன்
அக்கேசனாக பார்த்தவர்கள் உள்ளம் களித்திருப்பார்கள்
பக்கத்தில் இருந்தவர்கள் தான்
பெரிய இனா வானா என்று முணுமுணுத்தபடியிருந்தனர்
சிரிப்பது மாதிரி ரொம்ப நேரம் செய்து
முடியவில்லை வாய் வலிக்க ஆரம்பித்துவிட்டது
திரும்பவும் நியூட்ரல் நிலைக்கு வந்து உதடுகளை
பாந்தமாகப் பிடித்து அமுக்கி விட்டுக் கொண்டேன்
என்ன செய்தும் சிரிப்பு வரவில்லை
சிரிப்பை நினைப்பதொன்றே சிரிக்கச் சிறந்த வழியென
காதுக்குள் வந்து பட்சி சொன்னதால் பிழைத்தேன்
அவ்வழியில் போனால் போகப் போக
கொஞ்சம் கொஞ்சமாக கண்ணில் நீர் பூக்க ஆரம்பித்து
ஒரே சிரிப்பு முழக்கம்
என்ன செய்தும் சிரிப்பை அடக்க முடியவில்லை
இப்படிச் சிரிக்கிறேனென்ற சொந்தச் சிந்தையே
கனிய வைத்துக் கனிய வைத்து வளம் குன்றாது காத்தது
சிம்ரன் சிரித்துச் சிரித்துப் பேசி எனக்கு ஒன்று தந்தாரே
அதுவா இது
சிரிப்பதையே வைத்த கண் வாங்காமல்
பார்த்துக் கொண்டிருக்கும் மரியாதை பொருந்தியோரே
உங்களிடம் தான் கேட்கிறேன்
இல்லையென்றாலும் ச்சும்மாவாது சொல்லுங்கள் எதாவதுனாலும்

முகம் – செல்வசங்கரன் கவிதை

செல்வசங்கரன்

ஒரு மொபைல் தொலைந்ததை பற்றிய விசாரணை போய் கொண்டிருந்தது
எல்லார் மீதிருந்த சந்தேகமும் விலகி
விசாரணை வளையத்திற்குள் நானும் அவனும் மட்டும் இருந்தோம்
இந்த வளையத்திற்குள்ளாக அவனையும் இழுத்து வந்ததற்காக
அதிகாரிகளே உங்கள் நெஞ்சை ஒருமுறை விடைத்துக் கொள்ளலாம்
ஒரு முறையென்ன ஒருமுறை
உங்கள் நெஞ்சு உங்கள் முறுக்கு விடைத்துக் கொண்டே இருந்தாலும்
யார் கேட்பது
எடுத்தவன் அவனென தெரியுமென்பதால் கூறினேன்
எனக்கென்ன இன்னும் ஒரேயொரு வேலை மட்டும்
வடிகட்டித் தூக்கும் போது வழிந்தோடுவது மட்டுமே பாக்கி
அதிகாரி விசாரணையை முடுக்கி விட்டிருந்தார்
எடுத்தவன் அவனென கூறி விட்டால் வேலை சுளுகு ஒப்புக்கொள்கிறேன்
அந்த மயிர் புடுங்குறது எனக்கெதற்கு என்று தான்
நான் எடுக்கவில்லை
நான் எடுக்கவில்லையென்ற முகமிருக்கிறது அது போதும்
அப்படி வைத்துக் கொண்டேன்
இல்லையென்றாலும் அப்படித் தானே இருக்குமது
எடுத்தவனைப் பார்த்தேன் அவன் முகத்தில் ஒரு அசால்ட்டு தெரிந்தது
அசால்ட்டையே ஒரு தோரணை போல காட்டினான்
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது
ஏன் இப்படி அசால்ட்டு காட்டுகிறான்
இவனெல்லாம் எடுத்திருக்கவே மாட்டான் என்பது போலயிருந்தது
அந்த அசால்ட்டு
இப்பொழுது என் முகம் மீது எனக்குச் சின்னதாக ஒரு டவுட்
உண்மையிலேயே எனது முகம் எடுக்காத மாதிரி தான் தெரிகிறதா
அவனது அசால்ட்டை தூக்கிச் சாப்பிடுவது மாதிரியா உள்ளதது
யார் கண்டது எனக்கது இன்னும் வரவில்லையோ
இது சரியா இல்லை இப்படிக் காட்டினால் சரிப்பட்டு வருமாயென
கையை வைத்து உருளையான ஒன்றை
உருட்டியுருட்டிச் சரிசெய்வது போல
என் முகத்தை வைத்தே என் முகத்தை இப்படி அப்படித் திருகி
கோட்டித்தனங்கள் காட்டிக் கொண்டிருந்தேன்
இப்பொழுது அதிகாரிக்கு என் மீது லைட்டாக ஒரு டவுட்
அதிகாரி மற்றும் அவனோடு சேர்ந்து கொண்டு
நானுமே என்னைக் கை காட்ட பேருதவி புரிந்துவிட்டதால்
சந்தேகம் உறுதியாகி என்னை அரெஸ்ட் செய்வதாகக் கூறினார்கள்
அதிகாரி அவர்களே
நான் எடுக்கவில்லையென்றாலும் அப்படி வாதிடுவதே கூட
என்னைப் பொறுத்த வரையில் கெட்ட கேவலம்
இது மைண்ட் வாய்ஸ் இது கேட்காது
அதற்கு முன்னால் எனக்கு ஒன்று தெரிந்தாக வேண்டும்
உங்களைப் பொறுத்தவரை இதை விட அசிங்கமான கேள்வியொன்றை
உங்களிடம் கேட்க முடியாது ஆனாலும் சொல்லுங்கள்
உண்மையிலேயே குற்றம் செய்த மாதிரி என் முகம் தெரிகிறதா
ஆமென மண்டையை ஆட்டிவிட்டால்
நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன்
இதையாவது முகம் காட்டியதேயென
எனக்கும் கால காலத்திற்கும் நக்கிக் கொள்ள ஒன்று வேண்டாமா

ஷ் – செல்வசங்கரன் கவிதை

செல்வசங்கரன்

அந்தச் சாலையில் விர்ர்ரென என்னை முந்திக் கொண்டு போனார்
அது விர்ர்ரெனவா என ஒரு டவுட்
என் பங்கிற்குக் கைகளைத் திருகியபடி நானும் முந்தினேன்
அதே பழைய சர்ச்சையைக் கிளப்பி அவர் முந்தினார்
அதையும் விட திருகி நான் முந்தினேன்
இப்பொழுது எங்களை இன்னொருவர் முந்திப் போனார்
எங்கள் எல்லோரையும் இன்னொருவர் முந்தினார்
திரும்பவும் அவர் என்னை முந்திக் கொண்டு போக
அவர்கள் எல்லோரையும் முந்திக் கொண்டு
நான் போய்க் கொண்டிருந்தேன்
அவர் என்னை விட்டபாடில்லை
திரும்பவும் என்னை முந்த முந்தப் பார்க்க
இப்பொழுது அந்தச் சாலையில் யாராலும் முந்த முடியவில்லை
தலை தெறிக்க சாலை கீழே ஓடிக்கொண்டிருந்தது
லேசாகக் குனிந்தாலும் மண்டையைக் குழப்பி விடும் ஓட்டம்
சாலை இப்படி ஓடுவதாலேயே வந்துவிட்டோம் வேறு வழியில்லையென
வண்டிகள் அதில் ஓடிக் கொண்டிருக்கிறதோ
ஆம் ஆம் அப்படித் தான்
இல்லையென்று கூறி விட்டால் அதுவே ஒரு பிரச்சினையாகி
வேறு வேறு பிரச்சினைகளைக் கிளப்பலாம்
சாலையின் நட்ட நடுவே இதெல்லாம் கூட ஒரு சிக்கலே
தலையை அங்கிட்டு இங்கிட்டு ஒரு சொட்டு திருப்பமுடியவில்லை
கைகள் மரத்துப்போனதால் அது இருக்கிறதா என்றே தெரியவில்லை
எது எப்படிப் போனாலென்ன
வண்டி சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது
ஆனால் ஏன் நிற்பது மாதிரி இருக்கிறது தெரியவில்லை
எதுயெதுவோ எதிரே கடந்து பறக்கும் போதெல்லாம்
விருட் விருட்டென ஒரு சவுண்டு
ஆனால் அது விருட் விருட்டெனவா என
திரும்பவும் அதே போல ஒரு டவுட்
அய்யய்யோ நேரங்காலம் தெரியாமல் இது வேறா
இனி இந்தச் சாலை உலகம் தான் என்னைக் காக்க வேண்டும்
நானே பறந்து கொண்டிருக்கிறேனோ மிதந்துகொண்டிருக்கிறேனோ
ஒரு கட்டத்தில் அந்தச் சாலையில் வேறெதுவுமே கேட்கவில்லை
வேறெதுவுமே எனக்குள் இல்லை
எல்லாம் ஷ் மயம் தான்
ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்………………………………ஷ்

பவுன்சர், கூரெனும் யுக்தி – செல்வசங்கரன் கவிதைகள்

செல்வசங்கரன்

 

பவுன்சர்

பந்தே நீ அவன் தலையைக் குறி பார்த்துச் சென்றுகொண்டிருக்கிறாய்
என்ன காரியம் செய்கிறாய்
அது ஒரு பிசகு அதைப் போய் உண்மையென நீ நம்ப
எவ்வளவு பெரிய விபரீதம் நேரப் போகிறது பார்
என்ன பந்தே நான் சொல்வது கேட்கவில்லையா
இனி ஒன்றும் செய்ய முடியாது
விர்ரென காற்றைச் சீறிப் பாயும் உன் பயணத்தில்
இன்னும் சற்றைக்கு அவன் தலை உனக்குத் தட்டுப் பட்டுவிடும்
சத்தமில்லாமல் என் பெயரைக் கூறிவிட்டு நீ ஒதுங்கிக் கொள்
இல்லையென்றாலும் என்னை யாரென்று தெரியாமலா போகப் போகிறது
குற்ற உணர்ச்சியில் என்னைச் சாவடி அடிக்கப் போகிறார்கள்
பந்தைப் போடும்போது வேகமெடுப்பதற்காக
நடந்து கொண்டே போவார்களே அப்படிப் போன ஒரு சமயத்தில்
பந்தைப் போடுவதற்குத் தயாராய் அவனை நோக்கித் திரும்பியதும்
உன்னை வெளியே அனுப்புவதற்காக இப்படியும் ஒரு வழியிருக்கிறதென
அமுக்குணியாக உள்ளுக்குள் ச்சும்மா சிரித்துக் கொண்ட கணமது
அதைப் போய் உண்மையென நம்பிக் கொண்டு
ஆட்டிக் கொண்டு இந்தப் பந்து இப்படிக் கிளம்பிவிட்டது என்ன செய்ய
மேலும் அது பாதி தூரம் சென்ற பிறகு அதற்கு காது கேட்காதது
எனக்கு தெரியாதெனக் கூறினாலும்
இவ்வுலகம் என்னை நம்பவா போகிறது
பந்தோடு ஒட்டி உறவாடினேனல்லவா என்னைச் சொல்ல வேண்டும்
இப்பொழுது பந்து சீற்றத்தோடு தலைக்கு மிக அருகில் போய்விட்டது
எப்படியோ தடுத்துவிடலாமென
மட்டையை வைத்து அவனும் தடுக்கப் பார்க்கிறான்
அவனால் அது முடியாது போனதால்
அவனை உரசுவதற்கு முந்தைய மிக துல்லியமான அந்த தருணம் பார்த்து
போய்த் தொலையென லேசாக அவன் குனிந்து கொண்டதும்
நல்லவேளையாக பந்து பின்னாலிருப்பவனிடம் போய் தஞ்சமானது
எல்லாம் சுமுகமாக முடிந்தது
நண்ப என்னை மன்னித்து விடு
இனி விளையாடுவதற்கு பந்து அல்லாத ஒரு வழியை நாம் தேடவேண்டும்
பந்தேயில்லாமல் ஓடி வந்து போடுகிறது மாதிரி போடுகிறேன்
நீ அடிக்கிறது மாதிரி அடி
அவனுக்குப் போட்டேன் பாருங்கள் ஒரு பவுன்சர்

oOo

கூரெனும் யுக்தி

கூரான கத்தி என்ன செய்யுமென
நமக்குத் தெரிந்தபோதும் நம்மையது விட்டபாடில்லை
இப்படிச் செய்வேன் அப்படிச் செய்வேனென
தினமும் ஒரு புதிய பாடத்தை நடத்த வந்திடுகிறது
கத்தி இங்கு கழுத்து அங்கு என்றாலுமே
அதெல்லாம் அதற்கு ஒரு பிரச்சினையேயில்லை
கத்தியை நோக்கி கழுத்தே தேடி வருகிறது
அதுவும் புதிய புதிய கழுத்து
கத்தியை உறைக்குள் செருக மறந்த ஒருநாளில்
விறைப்பின் சுரு சுரு தாங்காது
நம்மை யார் என்ன செய்து விட முடியுமென
கொலைக்கு முன்பாக ஒரு தடவை
போலியாக அதைச் செய்து பார்ப்பார்களே அங்கு புகுந்தது
யாருமில்லாது கத்தியை மட்டும் கண்டதில்
அவர்கள் குழம்பிப் போனார்கள்
மாதிரி கொலையை அப்படி அப்படியே போட்டபடி
பாதியாக இடிந்திருந்த அம்மண்டபத்தில்
கிடைக்கிற இடங்களில் போய் ஒளிந்து கொண்டனர்
பீடு நடை போட்டுக் கொண்டிருந்தது கத்தி
சுருட்டி வைக்கப்பட்ட ஓலைப்பாய்க்குள் ஒருவன் ஒளிந்திருந்தான்
அவனிடம் இன்னொருவன்
ஓலைப் பாயில் ஒளிந்திருப்பது மாதிரி வேவு பார்க்கிறேன்
நீ பயந்தா இங்கு ஒளிந்துள்ளாய் என்றதும்
கத்தியின் காதிற்கு ஓலைப் பாய் இருந்த திசையிலிருந்து
சரக் புரக் சரக் புரக்கென்ற ஒலி வந்துகொண்டேயிருந்தது
கத்தி அங்கிருந்தவாறு தன் மண்டையைத் திருப்புவதற்குள்
நடிப்பதாகக் கூறியவன் ஓலைப் பாயிலிருந்து வெளிவந்து
கூரான கத்தியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்
தனது கொலைக்கு இக்கத்தி பயன்படுமா என்று
கத்தியை நோக்கி ஒருவன் நடந்து திடீரென பின்வாங்கிக் கொண்டதும்
கத்திக்கு எல்லாமே குழப்பமாக இருந்தது
மண்டபம் பாதுகாப்பு குறைவெனக் கருதிய ஒருவன்
கத்தியின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்தால் தேவலையென்று
அதன் பின்னால் ஒளிய ஒளியப் பார்க்க
அந்தக் கத்தி முதன்முதலாக ஒருவனை பார்த்து ஓடியது
கூரென்ற அந்த ஒரு யுக்தியை
காலிசெய்துவிட்டதாக நினைக்க வேண்டாம்
அடர்ந்த மயிரை மழித்துக் கொள்ளுங்களென்றோ
இல்லை வேறெப்படியோயேனும் ஒருவன் கைக்குள் அது புகுந்து விடும்
இருப்பதென்னவோ ஒரேயொரு யுக்திதான்
கட்டக் கடைசியில் வைத்திருப்பவன் கழுத்தை
வைத்திருப்பவனை வைத்தே அறுக்க வைக்கும் ராஜ யுக்தி அதுவும்

‘டுடே’, ‘மாம்பழ சீஸன்’ – செல்வசங்கரன் கவிதைகள்

செல்வசங்கரன்

டுடே

ஒவ்வொரு கழுத்தையும்
சவரக்கத்தி முனையில் வைத்துக் கொண்டு
மாங்கா மண்டையைக்கூட அலங்கரித்தபடி
ஒவ்வொருவரையும்
கவனமாக வீட்டிற்கு அனுப்பிக் கொண்டிருக்கும்
அந்தச் சலூன்காரர்
இதுவரை யாரையும் கழுத்தறுக்காதது
இன்றைய தேதிக்கு
ஆச்சரியமாத்தான்டே இருக்கிறது

oOo

மாம்பழ சீஸன்

எத்தனைப் பதவிசாகத் தட்டினாலும்
ஒரு மாம்பழம் அதிலிருந்து நைஸாக நழுவி உருண்டோடி விடுகிறது
பின்னால் ஓடிய கைகளுள் ஒன்று
கழிவு நீர் வருவதற்குள் கபக்கென அமுக்கி
அதனைக் கையளித்தபோது
அவர் கண்ணிலிருந்து பீய்ச்சியடிக்கும்
அந்தக் கருணை ஒளியைக் காண்பதற்காக
இதுவரைக்குமான
பதற்றங்களும் மெனக்கெடல்களும் பாய்ந்து கவ்வல்களும்
எத்தனை எத்தனையோ
வேறு வேறு மாம்பழங்கள்
வேறு வேறு மாமனிதர்கள்
வேறு வேறு சந்துகள் பொந்துகள் அவ்வளவே
ஒரு உருண்டோடியின் பின்னாலோடும்
ஒரு வாய்ப்பு கிட்டிய நாளில்
மாம்பழ உருவாக்கியின் முதல் தொடுதலுக்கு
அந்த மாம்பழம் எவ்வளவு நெகிழ்ந்து கொடுத்திருக்குமோ
எவ்வளவு நெகிழ்வைக் கொடுத்திருக்குமோ
அத்தனைக் குழைவுகளையும்
அத்தனை இளக்கங்களையும் கையிலள்ளி
இந்தாருங்கள் பிடியுங்கள் என்றேன்
மாம்பழக்காரரே உடனே யேசுநாதராக மாறி
திவ்வியத்தின் ஒளியை என் மீது பாய்ச்சிடாதீர்
மாம்பழத்தின் பக்கமும் லேசாக அதைத் திருப்பி விடும்