ஜிஃப்ரி ஹாசன்

நினைவு முள் – ஜிஃப்ரி ஹாசன் கவிதை: ஒரு குறிப்பு

பீட்டர் பொங்கல்

hand-of-memory

பதாகையில் கவிதை எழுதுபவர்களில் றியாஸ் குரானா, ஜிஃரி ஹாசன், மஜீஸ் மூவருக்கும் ஒரு தனி மொழி அமைந்திருப்பது தன்னிகழ்வா அல்லது அப்படிப்பட்ட ஒரு கவிதை மரபின் வழியில் இவர்கள் எழுதுகிறார்களா என்று தெரியவில்லை. மூவருக்கும் பொதுவாய் ஒரு தனி மொழி என்று சொல்வதில் ஒரு முரண்பாடு உள்ளது போல் தொனிக்கலாம். உண்மையில், இந்த மூவரின் கவிதைகளில் பலவும் ஒரு சிறுகதைக்குரிய இயல்பு கொண்டிருக்கின்றன.  ஒரு சில கவிதைகளை சிறுகதைகளாகவும் வளர்த்தெடுக்கலாம். ஆனால் இவர்கள் மூவரும் ஒரே மாதிரி எழுதுவதில்லை. றியாஸின் கவிதைகளில் உள்ள படிமத்தன்மை, நேர்க்கோட்டு மொழிதலின்மை பிற இருவரின் கவிதைகளிலும் இல்லை. ஜிஃப்ரி ஹாசனின் கவிதைகளில் உள்ள துயரம் நேரடியானது, அதைப் பிறரிடம் பார்க்க முடியவில்லை. மஜீஸ் வெகுச் சில கவிதைகளே பதாகையில் எழுதியிருந்தாலும் அவர் எழுதுவதிலுள்ள நுட்பமான நகைச்சுவை மிகவும் மதிப்பு மிக்கது என்று தோன்றுகிறது, அது இயல்பாய் வெளிப்படுவதாலும், அதை அதிகம் காண முடியாமையாலும்.

இவ்வாரம் ஜிஃப்ரி ஹாசன் கவிதை – நினைவுமுள்

ஜிஃப்ரி ஹாசன் பதாகையில் எழுதிய கவிதைகளில் உள்ள ஆறுதலற்ற வலி இதில் இல்லை,  ஒரு நேர்மறைத்தன்மை கொண்ட காரணத்தால் அவர் எழுதியதில் வித்தியாசமான கவிதை.  அமைதியை நாடும் வகையில், துயரை விடுபடும் வகையில் எழுதியிருக்கிறார். வழக்கமாக, துயரில் மேலும் மேலும் ஆழ்த்துவதாகவே அவர் எழுதி வருகிறார். அவர் கவிதைகளில் ஏதோ ஓர் இடத்தில் துயர் மேலோங்கி பிறவனைத்தையும் விழுங்கி விடுகிறது.

இந்தக் கவிதையில் உள்ள ‘பாதைதோறும் நினைவுகள் குடை விரித்தன’  என்பதில் உள்ள எளிய கவித்துவம் திரைப்பாடல்களுக்கு வெளியே மதிப்பிழந்து விட்டது என்று நினைக்கிறேன். அதில் ஒரு கற்பனைத்தன்மை இருக்கிறது. பாதையெங்கும் நினைவுகளின் நிழல் என் மேல் படிந்தது என்பதை இவ்வாறு உருவகப்படுத்தியிருப்பது அழகாக இருந்தாலும், இந்தக் கவிதை ஒரு பயணத்தைப் பற்றிய கவிதை என்பதால் அதற்கு இங்கு இடமில்லை என்று சொல்ல முடியாது.

எந்த இடத்தில் பிரிந்தோமோ/ அந்த இடத்தில் சேர்வோம்

என்பதைத் தொடர்ந்து அந்த வரி வருகிறது, அதன் பின் வரும் வரிகள்-

உங்கள் முகத்தில்/ நான் ஒரு களங்கமற்ற சிரிப்பையும்/ உங்கள் இதயங்களில்/ ஒரு நல்லெண்ணத்தையுமே வேண்டுகிறேன்/’

என்று செல்கின்றன.

முதலில் பிரிவு நேர்ந்த இடத்தில், அதற்கான காரணங்கள் உள்ள இடத்தில், ஒன்று சேர வேண்டும் என்ற விருப்பம். அடுத்து, பயணம், பாதை எங்கும் நினைவுகள். இவை பிரிதலின் நினைவுகள் என்பதால், ஒரு சிரிப்பும் நல்லெண்ணமும் மட்டும் போதும் என்ற இறைஞ்சுதல். இதையடுத்து, இதுவரை சொல்லப்பட்டதே மீண்டும் சொல்லப்படுகிறது-

நம் பிரிவு நிகழ்ந்த இடங்களை/ நம் சேரிடங்களாக்கி/ களங்கமற்ற ஒரு புன்னைகையை நடுவோம்

இதைக் கற்பனை கலந்த ஒரு நம்பிக்கை, எதிர்பார்ப்பு என்று கொள்ளலாம். இலக்கியத்தில் கற்பனையின் இடம் என்ன என்பதை இந்தக் கவிதை உணர்த்துகிறது. அவநம்பிக்கைகளை கற்பனை கொண்டுதான் கடந்தாக வேண்டும். எனவே புன்னகை விதைக்கப்படுகிறது (புன்னகை  மலர்தலால் நடுவோம் என்றாகும் போல)

இந்தப் புன்னகைக்குப் பின் என்ன நடக்கிறது? இனி, நம் சொற்கள் ஒவ்வொன்றும் நடந்து முடிந்த கதையைச் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. ஒரு புன்னகை நம் சொற்களின் பொருளை மாற்றி விடுகிறது.

நெஞ்சையுறுத்தும் நினைவு முட்களை /உயிர்ப்பற்ற குருட்டு நம்பிக்கைகளை/ ஒரு யுகப் பின்னடைவை/ இப்போது நமது சொற்கள் தாண்டிவிட்டன

இறுதி வரிகள்-

துயர் படிந்த ஒரு காலமும்/ அதன் குரூரக் காயங்களும்/ ஒரு பயணத்தில் கடந்து விடக்கூடியவையே

இப்போது நாம் இது என்ன பயணம் என்று கேட்டுக்கொண்டால், புன்னகையையும் நல்லெண்ணத்தையும் நோக்கிய பயணம் என்று சொல்ல முடியும், இல்லையா? நாம் இந்தப் பயணத்தை மட்டும் மேற்கொள்ள முடிந்தால் கடந்த காலம் இவ்வளவு துயரம் அளிப்பதாகவும், அதன் குரூரங்கள் இவ்வளவு வலி தருவதாகவும் இருக்காது.

இது ஒரு நம்பிக்கைதான். யதார்த்தத்தில் நடக்கும், நடக்காது போகலாம். ஆனால் ஒரு கவிதை என்று வரும்போது, அதில்கூட இது போன்ற நம்பிக்கைகளை வெளிப்படுத்த முடியாது என்றால் எப்படி? நம் அறிவுக்கு எட்டாத விஷயங்களை கற்பனைதான் மெய்ப்பிக்க வேண்டும், இல்லையா?

அதை இந்தக் கவிதை செய்கிறது என்று நினைக்கிறேன். நினைவுமுள் என்ற தலைப்பு முதலில் ஒரு உறுத்தல், வலி என்பது போல் உள்ளது. அதன்பின் கடைசியில் கடிகார முள் போல் அதுவும் இடம் மாறக்கூடியதுதான் என்ற ஒரு நம்பிக்கைக்கு இடம் அளிக்கிறது. நம் துயர நினைவுகள் எப்போதும் ஒரு முள்ளாய் நமக்கு வலிக்க வேண்டியதில்லை, புன்னகையை நோக்கிய ஒரு பயணத்தில் எல்லாம் மாறலாம். நினைவுமுள் துயரிலிருந்து நம்பிக்கைக்கும், கடந்தகாலத்திலிருந்து எதிர்காலத்துக்கும் நகரக்கூடியதுதான்.

ஜிஃப்ரி ஹாசன் கவிதை – நினைவுமுள்

ஒளிப்பட உதவி – cafepress.com

மழைக் கால சோகம் போல…

ஜிஃப்ரி ஹாசன்

சங்கீத வார்த்தைகளால்
வானம் மழைக்கால கீதத்தை
இசைக்கிறது
கொதிப்பேறிக் கிடந்த
வரண்ட நிலத்தின் வெடிப்புக்களை
கண்ணாடிப் பூக்களாய்
மாற்றுகிறது மழை
இரசிக்கப்படாமலே
கைவிடப்பட்டுக் கிடந்த
இயற்கையை மழை அழகுபடுத்துகிறது
குழந்தைகள் வண்ணத்துப்பூச்சிகளாய் மாறி
மழையின் தெருக்களில்
சிறகசைத்துப் பறப்பதை
முரட்டுக்கரங்கள் தொடர்ச்சியாகத்
தடுக்க முனைந்து தோற்கின்றன
மின்சாரக் காற்றில் உலர்ந்த உடல்களை
இயற்கையாய் வருடுகின்றன
மழையின் கரங்கள்.
மழைக் கால இரவுகள்
அன்பின் இரகசியத்தை ஈரச் சொற்களால்
பகிர்ந்துகொள்கின்றன
எனினும்
இனம்புரியாதவோர்
மழை நேரத்துச் சோகம்
மீண்டும் அதே ஈரச் சொற்களால்
துயரக் கவிதைகளை
இதயத்தில் எழுதிக்கொண்டே இருக்கிறது

மகளின் சித்திரங்கள்

ஜிஃப்ரி ஹாசன்

சித்திரம் போல் எதையோ
வரைந்து கொண்டிருக்கிறாய்
எவரும் கண்டுகொள்ளாத
உன் ஓவியத்தில் உயிரோட்டத்தையும்
அன்பையும் காண்கிறேன்
ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லா வரையறைகளையும்
உன் கோடுகள் மீறியுள்ளன
இதயங்களை சுண்டி இழுக்கும்
நிறப் பூச்சுக்கள் அதில் இல்லை
எனினும் அதில் உன் துடிப்பான கனவுகளும்
வேட்கையுமுள்ளன
காகிதங்களில் பட்டாம்பூச்சிகளைப் போல்
நீ எதையோ கிறுக்குகிறாய்
நான் இப்போதெல்லாம்
நிஜப் பட்டாம்பூச்சிகளை இரசிப்பதே இல்லை
பூக்களை நீ வரைகிறாய்
காகிதங்களில் ஒரு நந்தவனத்தின்
வாசனை ஒட்டிக் கொள்கிறது
ஏதோ ஒரு மனித உருவைக் கிறுக்கி விட்டு
“தந்தையே, நான் உங்களை வரைந்துள்ளேன்“
என்கிறாய்
எனது புகைப்படத்தைக் காட்டிலும்
என்னை அது துல்லியமாய் காட்டுவதாக
உணர்கிறேன்
நம் வீட்டின் சுவர்களை
உன் கிறுக்கல்கள் அசிங்கப்படுத்தியிருப்பதாய்
சொல்லப்படும்போது
அவை அலங்காரங்கள் என
தயக்கமின்றிச் சொல்கிறேன்
நீ நினைக்கிறாயா?
உனது கிறுக்கல்களுக்கு
என்னைப் போல் ஒரு இரசிகன் கிடைப்பானென்று

யாரோ கலைத்துப் போட்ட அமைதி

ஜிஃப்ரி ஹாசன்

மெண்ணுணர்வுகளோடு
ஒரு பூவையும், சில பறவைகளையும்,
கொஞ்சம் நட்சத்திரங்களையும்
இரசித்தபடி
ஒரு மெளனத் தவத்துள்
புதையுண்டு போகிறான்
“என்னை விட்டு விடு
மௌனத் தவத்துள் நான் இன்னும் சில யுகங்கள்
கனவுகள் காண வேண்டும்”
எனப் புலம்புகிறான்
எதையோ வெற்றிகொள்ளும்
உக்கிர வேட்கையோடும்
தீயின் கனலோடும்
இதோ ஒரு சந்நியாசி இருக்கிறான்
வாழ்க்கை பரிசளிக்கும் தண்டனைகளை
பூக்களை இரசிப்பது போல் இரசிக்கும்படி
கடவுள் அவனுக்கு கட்டளை இட்டார்
எந்த ஆரவாரங்களுக்கும்
அவன் தவம் கலைதல் கூடாதென்று
கடவுள் அவனை ஏவினார்
எனினும்
கறைபடிந்த காலத்தில்
அடையாளமற்ற சில அருவருப்பான
குரல்கள் அவன் அமைதியைக் குலைத்தன
எந்த அர்த்தமுமற்ற பொய்யான சொற்களால்
பகடிகளால் நிறைந்த அர்த்தமற்ற
ஆரவாரங்களால்
அவன் தவம் சிதைந்திற்று
வாழ்க்கை, நேசிப்பிலிருந்து
உன்னதங்களிலிருந்து
தவத்திலிருந்து
புனிதங்களிலிருந்து
மனிதனைத் தள்ளிவைக்கும் தண்டனைகளால் நிறைந்தது
என இறுதியில் அதே கடவுளிடம் முறையிட்டபடி
மீண்டும் வாழ்வின் சாளரங்களை
எதையோ வெற்றி கொள்வதற்கான
உக்கிரத்தோடு திறக்கத் தொடங்கினான்.

நினைவுமுள்

ஜிஃப்ரி ஹாசன்

எந்த இடத்தில் பிரிந்தோமோ
அந்த இடத்தில் சேர்வோம்
பாதைதோறும் நினைவுகள் குடை விரித்தன
உங்கள் முகத்தில்
நான் ஒரு களங்கமற்ற சிரிப்பையும்
உங்கள் இதயங்களில்
ஒரு நல்லெண்ணத்தையுமே வேண்டுகிறேன்
நம் பிரிவு நிகழ்ந்த இடங்களை
நம் சேரிடங்களாக்கி
களங்கமற்ற ஒரு புன்னைகையை நடுவோம்
நெஞ்சையுறுத்தும் நினைவு முட்களை
உயிர்ப்பற்ற குருட்டு நம்பிக்கைகளை
ஒரு யுகப் பின்னடைவை
இப்போது நமது சொற்கள் தாண்டிவிட்டன
துயர் படிந்த ஒரு காலமும்
அதன் குரூரக் காயங்களும்
ஒரு பயணத்தில் கடந்து விடக்கூடியவையே.