பானுமதி ந

இராகப் பெண்கள் – 4: மோகனக் கல்யாணி

பானுமதி. ந

4. மோகனக் கல்யாணி- அன்னவாசல் அழகு

சிலவற்றிற்கு ஒரு புனிதம் உண்டு. அவை மாசுபடாது தூசு படாது தெய்வீகத்தின் மறு உருவாய் வாழ்வில் காணக் கிடைக்கும்.

அம்மா அன்பானவள், காருண்யம் மிக்கவள், புனிதமானவள், போற்றத்தகுந்தவள். தாய் பிறன் கைபட சகிப்பவனாகி நாயென வாழ்பவன் நமரில் இங்கில்லை.

ஆனால், தி. ஜா வின் “அம்மா வந்தாள்” -அகிலாண்டமாக- அனைத்து அண்டமாக எழிலும், கம்பீரமும் கொண்டவள். விளையும் நிலம் இவள். செழுமையின் இனம் கொண்டு நிலம் கூடிக் களிப்பவள். முழுமையாக தன் நாயகனை அடையவிட்டு அந்த அனுபவத்துடன் அவனை விலகச் செய்பவள். அவள் தரிசு நிலமல்ல. சிவசுவின் விளைநிலம். அன்பும் எளிமையும் அறிவும் மட்டும் அவளை அடையப் போதுமானதில்லை. அதற்கு மேலும் ஒன்று – அவளே ஆளுமை, அதைச் சீண்டும் ஆளுமை, செயல் ஊக்கம் கொண்ட ஆண்மை; அதன் மூலம் பெற்ற பிள்ளைகள் எல்லாமும் ஒரு குடும்பத்தின் அங்கமாக.

மீள இயலாத கவர்ச்சி அவ்வழியில் அவளுக்கு இருக்கிறது. ஒரு அற்புத அனுபவம் நல்வழியில் கிடைத்தால் அது கொண்டாடப்படுகிறது. அது உலகோர் ஏற்றுக் கொள்ளும் பாதை இல்லையென்றால், சமுதாய நியதிகளை மீறியது என்றால்  மனிதர்கள் என்ன செய்வார்கள்?இச்சையும் உடலும் தன் இரையைத் தேடித் தேடி உண்கையில் மனம் ஒருமிகத் தூய்மையான ஒன்றை தனக்காக ஏற்படுத்திக் கொண்டு விடுகிறது. அழுக்கை விழுங்கும் தீ… எந்த நேரத்திலும் தூய்மையான விளக்கு.. இருளை விரட்டும் தீ.. காமங்கள் அண்டாத தீ.. நீருள் இருக்கும் நெருப்பு போன்ற தீ.

காமாக்னியை அழிக்கும் வேதத்தீ. அம்மாவின் அன்பிற்குரிய அப்பு வேதம் கற்பவனாகி அவளுடைய பரிகாரமாக விளங்க அம்மா விரும்புகிறாள். முகப் பொலிவும், உடல் வலிமையும் மிகத் தூயமனமும் ஒருங்கே அவனிடம் உள்ளன. அவன் இந்துவின் மனக் கணவன். அவன் உணராமலேயே இந்து அவனைக் காதலிக்கிறாள். பரசுவுடன் அவளுக்குத் திருமணம் ஆகி 3 வருடங்கள் குடித்தனம் நடத்தியும் அவள் உடலாலும் மனதாலுமாக இருவாழ்க்கை வாழ்கிறாள். அந்த நலமற்ற கணவனையும் இழந்து ஊர் திரும்பும் இந்து ஒரு தருணத்தில் அப்புவிடம் மனம் திறக்கும் இடம் நயம் மிக்கது. பெண் தானே தன்னைத் தரும்போதும்கூட விலகி ஓடும் அப்பு வேள்வித்தீ என மிளிர்கிறான். அம்மாவைப் பற்றி இந்து சொல்கையில் உள்ளே கொதிக்கிறான். தி.ஜா படைக்கும் காட்சிகள் அந்த எண்ண ஓட்டத்திற்கும் நிகழ்வுகளுக்கும் அவற்றின் மறைமுகத் தன்மைகளுக்கும் எத்தனை பொருத்தம்! ”இந்து மாதிரி ஒரு பெண்ணை விட்டுவிட்டு நீ சாதிக்கப் போவது என்ன?” என்று ஒரு வேலையாள் மூலம் கேட்கிறார் தி ஜா மறைமுகமாக. இதை பின்னர் நினைக்கிறான் அப்பு.

அம்மாவின் மறுபுறம் தெரிகையில் அப்பு அம்மாவைவிட அப்பாவை வெறுக்கிறான். குமையும் கையாலாகாத சினம். தனிமையில் மட்டும் கசடு கொப்பளித்து மேலே வருகிறது. அந்திக் கருக்கலில் அலைகளின் ஓலத்திற்கிடையே அப்புவும் அவன் தந்தையும் பேசுவது நாகரிகத்தின் உச்சம்.

அப்புவின் மேல் கறையே படக்கூடாதென நினைக்கும் அம்மா, அவன் அப்பா பார்த்து வைத்துள்ள பெண்ணின் இறந்து போன தாயின் நடத்தை சரியாக இல்லை என மறுத்துவிடுகிறாள். அந்த அளவிற்கு அவன் புனிதத்தில் அவளூக்கு விருப்பம்.  நீள்விழிகள் கொண்ட அந்த பெண்ணை வியந்த போதும் அம்மாவை அப்பு தட்டவில்லை. தன் உறவினர் அனைவரும் அறிந்த அம்மாவின் மறுபக்கம் அப்புவைப் பந்தாடுகிறது. தன் புனிதத்தினால் தான் தனிமைப்பட்டுப் போனதாக எண்ண வைக்கிறது.

தான் படித்த வேதபாடசாலைக்குத் திரும்பும் அப்பு இந்துவின் அன்பில் இணைகிறான். அவனைத் தேடி வரும் அம்மா அவன் அம்மா பிள்ளையாகி விட்டான் என்றும், இனி தான் தன் கணவனை வதைப்பது சரியல்ல என்றும், காசிக்குப் போய் கர்மம் தொலைக்கப்போவதாகவும் சொல்கிறாள்.

அம்மா மோகினி. ஒரு அரசியின் ஆளுமை, நடை, பேச்சு, செயல் அத்துடன் தன் வசப்படுத்தும் ஒரு திறன். அந்த கம்பீரத்தின் முன்னே அனைத்தும் தோற்றுவிடுகின்றன. பூரணம், பூரணத்தில் சம்பூர்ணம்… அவளின் இசை.அன்னிய ஸ்வரம் வந்தும் கணவன் வெறுக்காத மோகனம். சொந்தங்கள் வாய் மூடி மௌனித்துக் கிடக்கின்றன . அவளின் ஆளுமை அவள் குறையைக் காணவொட்டாமல் அடிக்கிறது. ஒரு உரிமையுடனே சிவசுவிடம் அவள் நடந்து கொள்கிறாள். இரு குதிரைகளில் சவாரி செய்வது போல் தோன்றினாலும் அரசப் பட்டயமிட்டுச் செல்லும் குதிரை நினைவை அசை போடுகிறது. அரசியின்போகத்தில் மற்றொன்று திளைக்கிறது.

ச ரி க ப த ச  ச த ப க ரி ச

இல்லை நி இல்லை. ஆனால் என்ன ஒரு அழகு இதில்! மோகன இராமா, கோபிகா மனோகரம் இவையெல்லாம்  மட்டும் மோகனமில்லை. அகிலாண்டமும்தான். ஆரோகணத்தில் தொடங்கி, அவரோகணத்தில் பயணித்து அவள் பின்னர் அவரோகணத்தில் கரைந்து கரைந்து ஆரோகிக்கிறாள். அப்புவைப் பெற்றதாலேயே, அவனை வேதம் கற்க வைத்ததாலேயே, புனிதத்தின் அரவணைப்பில் தன்னை புடம் போட நினைக்கிறாள். கூர்க்கில் சிறு வடிவம் கொண்டு எழுந்து கன்னித் தமிழகத்தில் பெருக்கெடுத்தோடும் காவிரி. ஆம்… அவள் விரிந்தவள், பரந்தவள், புனித நீராட்டுபவள், புண்ணிய நதிகளின் பாவம் போக்குபவள். தன் வேள்வியாய் தன்னையும் தருபவள். அவள் அனைவரும் இரசிக்கும் மோகனம், ஆனால்  அனைவராலும் பாட முடியா “மருங்கு வண்டு கிடந்தார்ப்ப மணிப்பூ ஆடை அது போர்த்து கருங்கயற்கண் விழித்து ஒல்கி” நடக்கும் நதி அவள்.

ஜனனி

இவள் யார்? நம் புராணங்களில் அன்னை மனித வயிற்றில் பிறப்பதில்லை. அவள் கண்டெடுக்கப்படுபவள். கரு வாசம் அவளுக்கு இல்லை. இந்த விதியை சிறிது மாற்றி, குழந்தை வெளிப்படுகையில் அன்னை அதில் புகுந்து கொள்வதாக லா ச ரா எழுதுகிறார். பிறந்ததுமே அனாதை ஆகிறாள். ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு அவர் மனைவியால் ஏற்றுக் கொள்ளமுடியாமல்  “ஜனனி” ஆகிறாள். அவள் உலகின் தாய். ஆனால் அவள் விரும்பிய தாய்ப்பால் அவளுக்குக் கிடைக்கவில்லை. அவள் கழுத்தில் கடயம் போடப்பட்ட தாய்ப் பசு. ஒரு கல்யாணமும் நடக்கிறது அவளுக்கு. தன் உடல் மாறுதல்கள், அவை கவரும் கண்கள், உள்ளே படரும் இனம் தெரியா ஏக்கம். தன்னுள் தன்னை ஒடுங்கச் செய்து விடுகிறது. ”நீ நானாக இருப்பினும், நான்  நானாகத்தான் இருக்க முடியும். ஆனால், நீ –மறுபடியும் ‘நா’னாகிக் கொண்டிருக்கிறாய்.  ‘உன்னின்’ மீட்சி” லா ச ராவைத் தவிர யாரால் இதை எழுத முடியும்?

இக்கதையில் ஜனனி தன்னை “நித்திய சுமங்கலி” என்று சொல்வாள். பரம்பொருளிலிருந்து பிரிந்த உயிர் அவனை மறந்து, அல்லல்பட்டு, தன்னைத்தானே உணர்ந்து அவனைச் சேரும் ஒரு செய்தி கதையில் உள்ளது. உடல் கொள்ளும் அவஸ்தைகள், உயிர் உருகும் சம்பவங்கள் எல்லோருக்கும் நேர்வதே. அதை அன்னை தானே அனுபவிக்கிறாள். அவள் கல்யாணி- மங்களங்கள் நிறைந்தவள். மாயா வினோதினி- “மானிடர்கென்று பேச்சுப்படின் வாழகில்லேன்” என்றாள் ஆண்டாள்.

அன்னை ஒரு பட்டாளத்தானை மணமும் செய்கிறாள்.  சாந்தி மூகூர்த்தத்தின்போது அவனை வதைத்தும் விடுகிறாள். அவன் இறந்த பின்னரும் அவள் பூவும், மஞ்சளும், தாலியும் அவளுடனே இருக்கிறது. அவள் கல்யாணிதான். பல ஜனன இராகங்கள்  அவளுக்கு உண்டு. ஆனால் அவளுக்கு அமுது ஊட்ட யாருண்டு? கல்யாணிகளுக்கும் ஆசை உண்டோ? புனிதமான அம்மா, தன் உடல் அமைப்பினாலேயே பால் நினைந்து ஊட்டும் அன்பு, அதில் அடங்கியுள்ள அந்தக் கடமை, அன்னையைக் கடயம் போட்ட பசுவாக காட்டத் துடித்தாலும், அவள் மீறுகிறாள். ஆணின் மீது வரும் கட்டற்ற சினத்தின் வெளிப்பாடு அது. ஆனாலும் அவள் பரம கல்யாணி. யார் அறிவார் இதை?அவளை பீடத்தில் ஏற்றி நீ அன்னை என்று சொல்லிவிட்டான் ஆண். அவள் தூய்மைக்காக கர்ப்ப வாசம் அவளிக்கில்லை என்றும் சொல்லிவிட்டான். ஆனால், தான் மட்டும் “மன்னு புகழ் கோசலை தன்  மணிவயிறு வாய்”க்கிறான். ஜனனியாகப் பிறப்பெடுக்க அவள் ஏன் தீர்மானிக்கிறாள்?தன்னைக் கொஞ்சிக் கொண்டாட தனக்கும் அமுதூட்ட ஒரு தாய் வேண்டுகிறாள். அந்த அனுபவம் அவளுக்குக் கிடைக்கவேயில்லை.முனைப்பால் கூட முலைப்பால் அருந்தாத கல்யாணி.

அகிலாண்டம், ஜனனி  இருவருமே மக்கள் அறியும் இனிய மோகனமும், கல்யாணியும். அகிலாவை நாம் சிறிது நேரம் பெண்ணாகவும் பார்க்க முயல்கிறோம்; அவள் மோகம் நமக்குப் புரிகிறது. அவள் தேடும் புனிதம் அவளுக்குக் கிடைத்தால் நமக்கு மகிழ்ச்சி, இல்லையெனில் வருத்தமில்லை. அந்தக் கவர்ச்சியும், குழைவும், கம்பீரமும், இயல்பும் ஆளுமையும் நாம் பார்க்கும் பெண்களிடத்தில் ஒரு சேரக் கிடைத்தால் நாம் கொள்ளும் பரவசம்! அங்கே சமுதாய நியதிகள் சற்றுக் கண்ணயரும்.

ஜனனி –கல்யாணி- “நிதி சால சுகமா”வும் கல்யாணி தான் “வாசுதேவயனியும்” கல்யாணிதான். அவள் ஜனக இராகமாகத்தான் இருக்க முடியும். ஜன்யமாக முடியுமா?அவள் நிறைவானவள். முதல்“ப்ரதி மத்ய “ இராகம். ஏழு ஸ்வரமும் கொண்டவள். ஆனாலும் ஒரு ஏக்கம் உண்டு.

மோகனம்  ஜன்ய இராகம்- ஒளடத இராகம். தன் மயக்கில் நம்மையும் கடத்துபவள்.

ஜனனியின் ஒரு ஆவல், அகிலாண்டத்தின் ஒரு ஆவல்

அவள் ஆவலை அறிவார் இல்லை. இவளது வெளித் தேடலில் மன்னிப்பு இல்லை. ஆனால், இருவரின் உள்ளார்ந்த சினம் மோகனகல்யாணி.

“என் தனிமையின் உருவற்றமையாலே, நான் காலம், இடம், உரு நியமங்கள் கடந்த மெய். சப்தத்தின் சத்யம். நான் சொல். சொல்லின் பொருள். பொருளின் செயல். மூன்றும் ஒன்றாய் இயங்கும் திரிசூலம்”

கல்யாணி-   ச ரி க ம ப த நி ச,   ச நி த  ப ம க ரி ச

மோகனம்-   ச ரி க ப த ச ,  ச த ப க ரி ச

மோகனக்கல்யாணி- ச ரி க ப த ச, ச நி த ப ம க ரி ச

ஏறுகையில் இல்லாத ஸ்வரம் இறங்குகையில் பூரணம்.

ஒரு ஒளடத சம்பூர்ண இராகம்

oOo

இராகப் பெண்கள் – 2. தர்பாரி கானட (தர்பார் கானடா)

பானுமதி. ந

2. தர்பாரி கானட (தர்பார் கானடா) – ஒளியும் ஒலியும்  

கானடா நம் நினைவில் தன்னிரக்கத்தையும், சுகமான சோகத்தையும் ஏற்படுத்தும். தர்பாரில் ஒரு கம்பீரம் கலந்த நிலை. இவ்விரு ராகங்களைப் போல்,  பூர்வா மற்றும் அம்மணி இருவரும் இரு மாபெரும் எழுத்தாளர்கள் படைத்த ராகங்கள்..

பெயரில் ஒரு பாவம் பொதுவாக இருக்கிறது. பெயரைக் கேட்கும்போதே ஒரு கோட்டுச் சித்திரம் மனது வரைந்துவிடுகிறது. அதிகம் கேள்விப்படாத பெயரோ அல்லது பொதுப்பெயரோ நம்மைச் சிறிது நேரம் சிந்திக்க வைக்கிறது.

பூர்வா ஒரு அபூர்வ பெயர். அம்மணியோ பொதுப் பெயர். இப்பாத்திரப் பெயர்களே நம்முள் அலை எழுப்புகின்றன. இந்தக் கதாநாயகிகள் உயிர்ப்புடன் உலா வர உறுதுணை செய்கின்றன..

இரைச்சலும், மௌனமுமான சூழ்நிலையில்தான் அறிமுகமாகிறாள் பூர்வா!

ஒளியும் ஒலியுமாக அம்மணி.

அம்மணிக்கு அவள் ஊரைப் பற்றி பிறர் பேச விருப்பமில்லை. தன்னுள் நினைத்துக்கொள்ளவே ஆசை.

பூர்வா ஊரை நினைப்பதேயில்லை.

அம்மணி ஆதிப் பெருங்காற்று, ஊழிப் பெருவெள்ளம், தடை உடைக்கும் பிரவாகம்! காட்டாற்றின் வேகம். பிரபஞ்ச தாண்டவம். வெளியே இரைச்சல். உள்ளே நிறைவு. அழகின் செருக்கு. மனிதர்களைத் தொட்டு உணரும் மனப்பழக்கம். ஊரில் பெரிய மனிதரின் சிறு கால் அழுக்கைக்கூடத் தாளாத சிறுமி- அவர் மனக்குப்பையை அறிகையில் பந்தத்தையும், சொந்தத்தையும் துறக்கிறாள். பாடலும், ஆடலுமாக வாழப் பிடித்திருக்கிறது.

இறைவன் இணைக்கும் பந்தங்கள் வேடிக்கையாக இருக்கிறது அவளுக்கு!

கோபாலி இசைக்க மறந்த ராகம் அவள். அவளே இசையென பொங்குகிறாள். நிறைக்கிறாள், நிறைகிறாள். தன் போதி மரத்தை கண்டுகொள்கிறாள்.

பூர்வா நீர் நிறைந்த குடம். தன்னுள் தானே மூழ்கும் சிலை. மௌனமே இயல்பு. பேசும் அபூர்வ தருணங்கள் கலக்கமே! வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் அதைப் பற்றி பெருமையுமில்லை, நிறைவுமில்லை, குறையுமில்லை. கணவன் கூட நுழையமுடியாத உள் ஆழம். இந்த உலகைப் படைத்த பின்னர் கடவுள் கொண்ட மௌனம். இரு பாதியெனப் பிரித்த பின்னர் சேர்க்கும் விளையாட்டில் அவன் கொண்ட ஆசை! அதில் வென்றும், தோற்றும் இருள், ஒளியென அவன் காணும் காட்சி.

வலி என்பதையே வெளிப்படுத்தாத பூர்வா ஒரு அபூர்வா! அமைதியாக அனுபவித்துக் கொள்ள அவளால் முடிகிறது. தன் முடிவை அறிந்த மௌனமோ அது!. முடிவில், கதறலில், வலி அவளை வெல்கிறது. இரு குழந்தைகள் வயிற்றிலேயே இறக்க அவளும் இறக்கிறாள்.

ஒலி நிறைந்த, வண்ணமயமான உலகில் இருந்து அம்மணி ஆர்ப்பாட்டமில்லாத அமைதிக்கு வருகிறாள். அவளுக்கு என்றுமே மனதில் இரைச்சலில்லை. வெளியே மௌனமில்லை.

பூர்வாவிற்கு வெளியே இரைச்சலில்லை, உள்ளேயோ அமைதியின் ஒலம்.

பூர்வா புன்னகையின் புதிர். கதாநாயகன் நினைத்துக் கொள்வான், “நான் இவளை மணந்தேனா அல்லது இவள் புன்னகையை மணந்தேனா?” என்று. அவள் “பொருள் புரியாப் புன்னகையுடன்” உட்கார்ந்திருப்பாள். “அவள் பத்திரம் என் மனதின் நிம்மதியைக் குலைத்தது” ஆனாலும் அவள் பால் கொண்ட காதல் குறையவில்லை.

ச ரி  ம ப த நி ச    ச  நி ச த ப ம க ரி. தர்பார். அம்மணி

ஆரோகணத்தில் அவள் காட்டாறு என்றாலும் அவரோகணத்தில் நீர்வீழ்ச்சி

ச ரி ப க ம த நி ச      ச  நிப ம  க ம ரி ச. – கானடா. பூர்வா

இவள் பனி உறைந்த பாறை  கடலுள்ளே சிதறும் எரிமலை

அம்மணியும் பூர்வாவும் ஒரு புள்ளியில் தொடங்கி  இரு கிளையெனப் பிரிந்து இணையும் இராகங்கள்.

தர்பாரி கானடா:

ச ரி க  ச ம ப த நி ச        ச த நி ப ம ப க  ரி ச

வாழ்வைத் தன் போக்கில் அணுகி, வாழ்ந்து பிறர் கவனங்களைக் கவர்ந்து, அனைத்தையும் தழுவும் காற்றாய், ஒலியாய் வாழ்ந்த அம்மணி அமைதியை உள்வாங்குகிறாள்.

தன்னுள்ளே மூழ்கி, உள்ளே இரைச்சலாய், வெளியே மௌனமாய், கேட்காத கேள்விக்கு விடை தேடி, வலியை ஒலியாய் வெளிப்படுத்தி பூர்வா விடை பெறுகிறாள்.

 

என் பெயர் என்ன?

 

– பானுமதி ந

 

கொழு, கொழு கன்றே,

கன்றின் தாயே ,

கன்று மேய்க்கும் இடையா,

இடையன் கைக் கோலே

கோல் சார்ந்த மரமே

மரம் தரும் நிழலே

நிழல் நிற்கும் குதிரை

என் பெயர் என்ன?

ஒரு ஈக்கு தன் பெயர் மறந்துவிட்டதாம். பறந்து பறந்து கன்று முதல் குதிரை வரை எல்லோரையும் கேட்டதாம். குதிரை “ஹி … ஹி” என்று கனைத்தவுடன் ஈக்கு தன் பெயர் நினைவிற்கு வந்ததாம்.

அம்மா சொன்ன கதை.. அவள் குரலின் ஏற்ற இறக்கங்களுடன் இன்றும் விருபாக்ஷியின் காதுகளில் ஒலிக்கிறது.

“எப்படியம்மா ஈக்கெல்லாம் பெயர் உண்டு?” சற்று வளர்ந்தபின் அவள் கேட்பாள்.

”உண்டுடி. நாம் அதை மறந்துடறோம் இல்லாட்டி மறைச்சுடறோம்”

விருபாக்ஷிக்குப் புரியாது. ஆனால் அதற்கு மேல் கேட்கவும் தெரியாது.

அவளது பெயரின் அழகே அவளை மயக்கிக் கொண்டிருந்தது. அதை சுரங்களாக அவள் பகுத்துப் பார்ப்பாள்.

ச ரி க ம,

ரி க ம ப,

க ம ப த,

ம ப த நி,

ப த நி ச….

விருபாக்ஷி, ரூபாக்ஷி. விபாக்ஷி, விக்ஷிபா, விரூபா என்று சர இராகமாக அவை உருக்கொள்ளும். ஒவ்வொன்றும் ஒரு மந்திர அர்த்தத்துடன் முழங்கும். சொல்லிலிருந்து பிரியும் மௌனமாக. பின்… மௌனம் பெற்றெடுத்த சொற்களாக.. அவள் அதிலேயே ஆழ்ந்துவிடுவாள்.

அந்த பெயர் தன்னைத் தனியே நிறுவுவதாக அவள் உணரத் தலைப்பட்டாள். அடர்காட்டின் அந்தரங்கப் பகுதியில் ஒரே ஒரு பூ. நிலவின் வாசம் கொண்டு, மலை அருவியின் தோள் தொட்டு, பசும்புல்லின் திண்மையுடன், உலவும் காற்று. ஓங்கு செந்நெல் ஊடும் கயல் துள்ளியாடும் நீர்நிலை. வான் நிறைந்தவள். தன் பெயரைப் போலவே எண்ணிலடங்கா கண்கள் என வின்மீண்கள் கொண்டவள். செம்பருத்திப் பூவின் நாக்கென நீளும் வேத நெருப்பு .மழை கொணரும் மண்வாசம் .

இந்த எண்ணங்கள் தந்த மன எழுச்சி குகையினுள் ஒளிரும் இருள் போல் அவளை ஆட்கொண்டது.தான் என்றுமே அந்தப் பெயருடன் தான் இருந்திருப்பதாகப் பட்டது. ஆலிலையில் அவன் பாலனாக வந்த நேரம்… இல்லையில்லை.. அதற்கும் முன்னதாக.. அவள் மூன்று கண்களுடன் அவனுக்கு ப்ரணவம் சொல்கையில் விருபாக்ஷி. அவள் கனவின் விரிவெளி தோற்றத்திலும் அவள் அவளேதான்.

தன்னை மணம் செய்பவர் விஸ்வேஸ்வர் என்று பெயர் கொண்டவராக நிச்சயம் இருப்பார் என்றும், ஆனாலும் அவள் தன் பெயராலேயே அறியப்படுவாள் என்றும் அவள் நினைத்தாள். பேழையில் இருந்த வைரங்கள், தோடுகளாக மாற அவள் தன் சர இராகங்களை மறந்தாள். அவள் குழந்தைக்கு தன் பெயர் மறந்த ஈயின் கதையை சொல்லத் துவங்கினாள்.

நிழல் தின்றவள்

ந. பானுமதி

கனமான போர்வையென இருள் அவளைச் சூழ்ந்தது. ஒளியின் எந்த ஒரு சாகசமும் செல்லுபடியாகாத இருட்டு. கோளறு வான்வெளி. விண்மீன்கள் உமிழும் ஒளிக் குளிகைகளை வாங்கிப் பரவசப்படுத்த கோள்கள் இல்லை. தானே ஒளிரும் விண்மீன்கள் திகைத்தன. இதென்ன ஒளியை வெறுக்கும் உயிரினங்கள் வந்து விட்டனவா? இல்லை இல்லை… இவைகள் ஒளியை மறுக்கும் கோள்கள்.

ஒளியின் நிழல் அல்லவா இருள். நிழலில் எப்படி ஒளியேற்றுவேன்? ஒளிரும் நிழல்… நிழலில் ஒளி; இரண்டும் சங்கமிக்கும் புள்ளியை இந்த இருள் தாண்டியே தண்டிக்கிறது. ஒளி பரவ விலகும் இருளில்லை இது. இருள் நிறைக்க மறையும் ஒளி. தன் இருப்பின் பயனறியாமல் ஒளி உள் வாங்குகிறது. அருணா தன் சிந்தையின் போக்கை நினைத்து வியந்தாள். நம்மைச் சூழும் இருள் உலகின் மேல் கவிய ஏன் ஆசைப்படுகிறோம்? ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலல்லவா அவை இரண்டும்? அதனதன் நியதியில் அவை அவை அததற்கான மதிப்பைப் பெறுகின்றன. ஒளி இல்லையேல் உயிர்ப்பு இல்லை. ஆனால் அந்த உயிர் பயிராவதோ இருளில். இயக்கம் ஒன்று, அமைதி ஒன்று.

மீண்டும் சிரிப்பு வந்தது அவளுக்கு. அவள் இருளைக் குடைந்து குடைந்து அந்த குகையினுள் இருக்கப் பிறந்திருக்கிறாள். ஆம்… இருக்கத்தான்… வாழ அல்ல. ஒளி இல்லாமல் இந்த இருளிற்கும் அர்த்தமில்லை என்று  புரிகிறது.

குளிர்ந்த ஒளி வீசிய அந்த நாள்… இன்றைய இருளிற்கு வித்திட்ட காலத்தின் நாள். விசையில் அகப்பட்ட பொருள் போல அந்த வேகத்தின் சுழலில் சிக்கிய நாள். இன்றும் அக்கணம் அந்தக்கரணத்தில் நிற்கிறது. திரிசங்குவின் உலகம் போல் தனியானது, ஆனால் அதை சுவர்க்கம் என்று சொல்கிறார்கள். தனிமையானது அப்படி ஆகுமா?

அந்த மாலை அவள் நினைவில் கிளர்ச்சியை உண்டாக்கியது. முழு மதி அன்று. சோம்பும் மேகங்களிடையே சந்திரனும் சற்று சோகமாக வலம் வந்தான். மணல்பரப்பும், சிறு குன்றுகளும் அவன் ஒளி படர, அட்சதை சிதறிய மண மண்டபம் போலவும், சூடக் காத்திருக்கும் மலர் மாலைகள் போலவும் காட்சி அளித்தன.

மூன்று கடல்களின் சங்கமம்; முத்தான கூடல். அலைகள் வெண்ணிலாவைத் தொடும் ஆசையில் மேலெழும்பி, தளர்ந்து, கரையை அறைந்து, அறைந்து திரும்பின.

அவள் மரகதப் பச்சையில் ஒளிர்ந்தாள். மணப்பெண் அலங்காரம். முத்துச் சுடராய் மூக்குத்தி. கண்களில் கனவும், கவிதையும். ஒசிந்த இடையில் வைர ஒட்டியாணம். அணிகலன்கள் அவள் புன்னகை முன் மதிப்பிழந்தன.

காலம் தன் போக்கில் நெய்து கொண்டே இருக்கும் இழையறா ஆடைகளில், பருவங்கள் தம் பதிவைத் திரும்பத் திரும்பச் செய்தாலும் சிலது பொங்குகிறது, சிலது மங்குகிறது, சிலதோ உறைந்துவிடுகிறது.

அவர்களுடைய குடும்பத்தின் தோட்டக் கோயிலுக்குச் சென்றிருந்தபோது  உண்மை போல் தோற்றமளித்த கல் குருவியை ஒரு உயிர்க்குருவி அலகால் கொத்திக் கொத்தி புண்ணானதைப் பார்த்தாள். கல் குருவியும், உயிர்க் குருவியும் என்ன ஒரு இணை! நினைவிலேயே சுவைக்கும் ஒளி; நிழல் தின்னும் வாழ்வின் வலி.

அவள் மேல் இருள் மிகக் கனமான போர்வையென இறங்கியது.

ஒளிப்பட உதவி – eugene stickland

நிழலைத் தின்றவன்

                   ந. பானுமதி

 

அவன் கனவில் ஒரு குதிரை வந்தது. பட்டுக் கருப்புக் குதிரை.நெற்றியில் வெள்ளை ஒரு பதக்கம் போல் ஓடியது. அதன் அழகு வியப்பிற்குரியதாய் இருந்தது. அதனால்தானோ என்னவோ சற்று கர்வமாகவும், அலட்சியமாகவும் நின்றிருந்தது.

இதைப் போன்ற குதிரையை பார்த்திருக்கிறானா என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.

மொத்தமாகவே அவன் ஏழெட்டு குதிரைகளைத்தான் பார்த்திருப்பான். ஆனால் அவைகள் அனைத்தையுமே வண்டியில் பூட்டப்பட்ட நிலையில்தான் கண்டிருக்கிறான். ஓடி ஓடிக் களைத்த குதிரைகள். உணவைக்கூட அவை ஆவலாக உட்கொண்டதில்லை.. அவைகளின் மூச்சுச் சீறல்கள் சிறு வயதில் பயமாகவும், வளர்ந்த பின்னர் சோகமாகவும் தனக்குக் கேட்டதாக கனவிற்குள்ளும் அவனுக்கு நினைவு வந்தது.

இந்தக் கறுப்பு பட்டுக் குதிரை ஒரு சேணமும் அணியவில்லை. கடிவாளமும் இல்லை. உயரமாகவும், அசையாமலும் நின்றிருந்தது. அதை நெருங்க அவன் ஆசைப்பட்டான். அது  அவனை ஒரு பொருட்டாகக் கூட பார்க்காதது அவனுக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது. அதன் பயங்கர வசீகர அழகு அவனை அங்கிருந்து நகரவிடவில்லை.

அதை “நிலா” என அழைக்க ஆசைப்பட்டான்.  கறுப்பு நிலா! அமாவாசையை கறுப்பு நிலா எனச் சொல்லலாமோ என்று கேட்டுக் கொண்டான்.  கறுப்புத் துகள்களிலிருந்து உலகம் தோன்றியிருக்கலாம் என்கிறார்களே விக்ஞானிகள்— அதைப் போல் இந்த கறுப்பு நிலா ஒரு வெளியைத் தோற்றுவிக்கக்கூடும்.  கருநிழல் படிந்த பேரொளியாக அந்த வெளியில் பல தோற்றங்கள் உருக்கொள்ளக் கூடும்.

நிழல்… அப்பொழுதுதான் அவன் கவனித்தான். அதற்கு நிழலே இல்லை. முன்னே, பின்னே, பக்கவாட்டில், கால்களுக்கிடையில். அடர்ந்த வாலை ஒட்டி எங்குமே நிழலைக் காணோம். கண்களை கசக்கிக் கொண்டு பார்த்தான். இல்லை—நிழலில்லை.

ஒளி படாது காட்சி இல்லை.  இங்கே காட்சியிருப்பதால், நிழல் இருக்க வேண்டுமே? அவன் தன்னை கிள்ளிப் பார்த்துக் கொண்டான். அதை நெருங்கும் ஆசையுடன், அதனால் ஏதேனும்மோசமான  விளைவு ஏற்படுமோ என்றும் தவித்தான்.

ஏன் நெருங்காமலே அந்த அழகை இரசிக்க மனம் ஒப்பவில்லை என அவனுக்குப் புரியவில்லை. மேலும் விபரீதமாக அதன் மேல் ஏறும் ஆசையும் வந்தது. அதன் உயரம் மலைக்க வைத்தாலும், அதில் பயணிக்க மிகுந்த முனைப்பும் மனதளவில் ஏற்பட்டது. நிழல் விழாத “நிலா”அச்சத்தைத் தந்தது.

அவன் வாழ்க்கையில் பெரும் நிகழ்வுகள் இல்லை. பெரிய மாற்றங்கள் கிடையாது. கல்வி, வேலை, திருமணம், குழந்தை  என்ற பாதுகாக்கப்பட்ட சராசரி வாழ்க்கை. அவன் படகில் பயணித்ததில்லை, ஓர் இரவிற்கு மேல் இரயிலில் சென்றதில்லை, மலை ஏறியதில்லை.தேர் இழுத்ததில்லை, தெப்பம் செலுத்தியதில்லை.

இதெல்லாம் சேர்ந்து கனவாக வந்ததோ என கனவிற்குள் ஒரு இழை வந்து போனது. தான் மட்டும் தனியாக அந்த வெளியில் நிலாவுடன் நிற்பதை அவன் அப்பொழுதுதான் உணர்ந்தான். இரு உயிர்கள். மனிதனும், விலங்குமாக. விந்தைகளேயற்ற தன் வாழ்வின் தனிப்பட்ட பொக்கிஷம் போல் கறுப்பு நிலாவும் தானும்..

அவன் ஆவல் இப்பொழுது கட்டுக்கடங்கவில்லை. “நிலா” என்று அழைத்துக் கொண்டே அடியெடுத்து வைத்தான். இந்த நிலையில்கூட தான் ஓடிச் சென்று அதைத் தொட முயற்சிக்கவில்லை என்பது ஆறுதலா, வருத்தமா எனவும் சிந்தித்தான்.

அவன் அடியெடுத்துவைக்கையில் “நிலா” பக்கவாட்டில் விலகி நடந்தது. அவன் வியப்பின் சிகரத்தில் நின்றான். இது என்ன  என்று மீண்டும் ஒரு முறை முயன்ற போதும் “நிலா” பக்கவாட்டில் நடந்து சென்றது. ஆனால், மறையவில்லை. இந்த விளையாட்டின் கவர்ச்சி அவன் களைப்புறும் வரை தொடர்ந்தது. அவன் திடீரென்று உணர்ந்தான்- அவனின் நிழலும் விழவில்லை. அவனின் அருகில் “நிலா” நின்று கொண்டிருந்தது.

..

ஒளிப்பட உதவி – Ponthieu14