பானுமதி ந

    தும்பி – ந. பானுமதி சிறுகதை

பானுமதி. ந

திரையில் அது மின்னல் எனத் தோன்றியது. அறுபது நேனோ வினாடிகள் நீடித்த அது பொன்னொளி கொண்டிருந்தது. படம் எடுக்கும் தொலைநோக்கி கருவியுடன் இணைந்த ரோபோ தன் கோணத்தையும், ’ரெசல்யுஷனை’யும் சரி செய்து கொள்வதற்குள் அது இல்லாமல் போய்விட்டது.

தரையிலிருந்து வானக் கட்டுப்பாட்டகம் அது என்னவென்று ஆராய முடியுமா அல்லது வேறு சாதனங்கள் தேவையா என்று கேட்டுக் கொண்டிருக்கையிலே சிறு கீற்று மின்னல் போல் பளீரிட்டது. இம்முறை அது எழுபது நேனோ வினாடிகள் நீடித்தது. ரோபோ அதை படம் எடுத்துவிட்டது. அதை அறிய விண்வெளியில் அமைந்துள்ள ‘இன்டெர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனில்’ஸ்காட் கெல்லி, ரம்யா மற்றும் லியோ ஜாய் செயலில் இறங்கினர்.

“இன்று என் அம்மாவின் பிறந்த தினம். நான் ஒரே பையன். என் வொய்ப்பும், மகளும் போய் கொண்டாடுவார்கள். நான் ஃபோட்டோ அனுப்பச் சொல்லியிருக்கிறேன்” என்றான் கெல்லி.

“பிறந்த நாள் வாழ்த்துக்கள் உன் அம்மாவிற்கு. ஷாம்பெய்ன் இருந்தால் எப்படி இருக்கும் இப்பொழுது?” என்று சப்புக் கொட்டினான் ஜாய்.

“ரொம்ப வருத்தப்படாதே. சோம பானமே உனக்கு கிடைச்சாலும் கிடைக்கும்” என்று சிரித்தாள் ரம்யா. ’நம் மூவர் ஃபோட்டோவையும் அம்மாவுக்கு அனுப்பு கெல்லி எங்கள் வாழ்த்துக்களுடன்.”

விண்வெளி ஆய்வுக்கூடம். அறிவியலின் திறத்தால்  ஆறு ‘லைட் இயெர்ஸ் தொலைவில் காணப்படும் பூமியைப் போன்ற அந்தப் பதினோரு கோள்களில் எதிலாவது உயிரினம் இருக்குமா என ஆராய அவர்கள் வந்துள்ளார்கள். புவியில் காணப்படுவது போன்றே பாறைப் படிமங்களும், ஆக்ஸிஜன், மீதேன் போன்ற வாயுக்களும் வேற்று கிரக வாசிகளை தேடும் ஆர்வத்தை அதிகரித்துள்ளன.

இளமை ததும்பும் வயது; பார்ப்பது, வியப்பது, ஆராய்வது எல்லாமே சிறுவர்களைப் போல. விண்வெளி ஆய்வுக்கூட லிகொவில் வெற்றிடம் உருவாக்குவதுண்டு.  எவர்சில்வர் குழாய்களிலிருந்து ஹைட்ரஜனை நீக்கி வெற்றிடம் உருவாக்கி அதிர்வுகளை தவிர்க்கிறார்கள். இது துல்லியத்திற்காக செய்யப்படுகிறது. கெல்லி இதை நிர்வகிப்பதில் வல்லவன். .ரம்யா துல்லியமான கணிதத்தில் நிபுணி. விண்வெளிக் கற்கள், அவைகளின் சுழல் வேகத்தினை கணினியின் உதவியுடன் கணக்கிட்டு அவற்றுடனான மோதலைத் தவிர்த்து விண்வெளி ஓடத்தின் பாதையை ஆணைகளிட்டு கட்டுப்படுத்தும் திறனுடையவள். ஜாய் விண்ணில் அரிதாகக் கேட்கும் விந்தை மிகு ஒலிகளை ஆராய்ச்சி செய்பவன். அவை வேற்று கிரக உயிரிகள் எழுப்பும் ஒலியா அல்லது வேறு ஏதாவதா என்று நுட்பமாகப் பதிவான். பின்னர் அதை ‘டிஜிடைஸ்’ செய்து ‘அலை நீள’ வாரியாகப் பகுத்துத் தொகுப்பான்.

இப்பொழுது  பூவுலகின் அனைத்து நாடுகளும் ‘இன்ஸ்பேஸ்’ என்ற அமைப்பை உருவாக்கி ஒற்றுமையாகச் செயல்படுகின்றன.

“இந்தப் பொன்னொளி எதாயிருக்கும்? வேறு கோளங்கள்ல பூமியைப் போல மழை பெய்கிறதோ? மின்னல் அதனால் காணப்படுகிறதோ? நாம பாக்கற மாரி வலுவானதா? இது நிகழக்கூடும் என்றால், ஏன் இடியின் ஒலி கேட்கவில்லை?” இது ரம்யா

‘ட்ரேப்பிஸ்ட்’ கிட்டத்தட்ட நம் சூரியன்தான். எடை குறைந்தும், ஒளி மிகுந்தும் இருக்கு. அந்த சுழல் கிரகங்கள் நான்கில் பகலும், இரவும் மாறி மாறி வருது.’ என்றான் கெல்லி.

‘உண்மதான். ஒருக்கால் கடவுளின் இடமோ? இல்ல, தேவர்கள்.. தப்பு தப்பு.. அசுரர்கள்? நம்மள  அப்டக்ட் செய்வார்கள் எனத் தோன்றுகிறது’ என்றான் ஜாய்.

‘உன்ன சாப்ட அசுரன் வரப்போறான்’  என்றாள் ரம்யா.

இந்த உரையாடல்களுக்கு இடையே ரம்யா கணினியில் அனைத்து விவரங்களையும் சரி பார்த்தாள் ம்….ஹூம்.. கணினி திணறியது. அந்தக் காட்சி மீண்டும் வரவில்லை. அண்ட சராசரத்தின் ஏதோ ஒரு நிகழ்வு என அவர்கள் முடிவு செய்தனர்.

இரு நாட்களுக்குப் பிறகு ரம்யா தன் இருக்கையுடன் மிதந்து வந்தாள். மிக அரிதாகத்தான் உணர்ச்சிவசப் படுவாள்.”எக்சைடிங்க் யார்’ட்ரேப்பிஸ்ட்’ நட்சத்திரம் தன் சுழல் வேகத்தை மிதப்படுத்தியிருக்குமோன்னு ஒரு அனுமானத்திற்கு வழி புலப்படுகிறது. இது ஒரு அற்புதம், ஒரு பொன்னான வாய்ப்பு. நம் விண் ஓடத்தின் வேகத்தை அதிகப்படுத்தினா, நாம் அருகே  நெருங்க முடியும்.” என்றாள். .

“எப்படிச் சொல்றே?” என்றான் கெல்லி.

“கணினியிடம்  சிமிலாரிடீஸ் கேட்டேன். வாயேஜர் 1 பதிஞ்ச சூரிய சுழற்சியப் பத்தி  சொல்லியது”என்றாள் அவள்.

“அப்படின்னா?” இது கெல்லி

‘எனக்கும் முதல்ல இது புரியல; பின்னர் யோசிச்சேன். காஸ்மிக் கதிர்களின் ஃப்ளக்ஸ் எதிர்பாராத விதமா அதிகரிச்சு, சோலார் காற்றின் துகள்கள் கொறஞ்சுதுன்னா  சூரியனின் சுழற்சி 2 லேந்து நாலு மடங்கு அதிகரிக்கும். அது போல இது ட்ரேப்பிஸ்ட்டின் செயல் எனத் தோணிச்சு. இதை உறுதிப்படுத்த ஜாய் உதவணும்”என்றாள் ரம்யா.

“ஓ,பேபி, மார்வலஸ்.நான் என்ன செய்யணும்?’’ என்றான் ஜாய்.

“முதல்ல பேபின்னு கூப்பிடுவதை நிறுத்து. நாம பூமில பாப்பமே மின்னலும், இடியுமென; அதைப் போல, அல்ல, அப்படியே அல்ல ,ஆனால் மிக மெல்லிய ஓசையும் வருகிறது.அதை வைத்து மின்னல் மோகினி யார்னு கண்டு பிடிக்கப்  பார்”

கெல்லி தன் கருவிகளை எடுத்துக் கொண்டான். ”’ஸ்பேஸ் வாக்’ போய் வருகிறேன். ஏதாவதுதெளிவாகிறதான்னு பாக்கலாமே?.”

“அது ரிஸ்க், கெல்லி . அவ்வளவு கிட்டக்க அது ஏற்பட்டிருந்தா, நம் கணினிகள் கதறியிருக்கும். வெயிட் செய்யலாம். அதற்குமுன் அந்த ஒலிகளைப் பாத்து எதனுடனும் ‘மேட்ச்’ ஆகிறதா எனச் சொல்றேனே”என்றான் ஜாய்.

“டோன்ட் வொரி. இதை சூட்டோடு சூடாச் செய்யணும் .நான் ‘வேக்குவம் பாட்டை’யும் எடுத்துக்கொண்டு போறேன். ரம்யா, நீ என் ‘வாக்கை’ பதிவு செய்து கொண்டே வா. வெற்றிடத்தில்  என்னால் முடிந்தவரை நிலைப்பேன். அப்பொழுது ஏதேனும் நடக்கலாம். இது ஒரு அனுமானம் தான். அப்படி ஏதும்  நடக்காவிட்டால் உடனே திரும்பிவிடுவேன். என் உயிர் உன் கைகளில். ஏதேனும் ஆபத்து எனத் தோன்றினால் ‘ஸ்பேஸ் சூட்டை’த் திறந்து என்னை உள்ளே இழுத்துவிடு”

“இவ்ளோ ரிஸ்க் எதுக்கு கெல்லி, பாத்துக்கலாமே” அவள் சொல்லி முடிப்பதற்குள் அவன் போய்விட்டான்.பரபரப்புடன் அவள் இருக்கையை கணினிமுன் வடிவமைத்து அமர்ந்து கொண்டாள்.

“முன்னாடி விண்வெளியில் இந்த ஒலிகளை நான் கேட்டதில்ல. ஆனா கீழே கேட்டிருக்கேன்” என்றான் ஜாய்.

மூவரும் அவர்களின் உணவை அச்சமயம் உண்டு கொண்டிருந்தார்கள். ”கீழேன்னா எங்கடா?”

“பூமிலதான்”

“என்னது,பூமியின் ஒலி இங்க டைரக்டா கேட்குமா?”

“கூல், கூல் பேபி. பூமியின் ஒலி இல்ல இது; ஆனா, பறவைகளின் குரல்களின், சிறகுகளின் ஒலி. எங்கள் பண்ணை வீட்டில், தாத்தாவுடன் கேட்ட ஒலியைப் போல் இருக்கு” என்றான் அவன்.

கெல்லி பூமிக்கு செய்தி அனுப்பி  பண்ணை வீட்டில் அங்கு வரும் பறவைகளின் ஓசையை சேகரித்து அனுப்பச் சொன்னான்.

ஒரு வாரம் அமைதியாக ஓடிற்று. அவர்களின் ஸ்பேஸ் ஸ்டேஷன் காலம் முடியப் போகிறது. ஒரு நிகழ்வு, அதன் ஈர்ப்பு, அதன் விடை புரியாத தன்மை அவர்கள் விவாதித்துக் கொண்டே இருந்தார்கள். பூமியிலிருந்து வந்த பறவை ஒலிகள் குரலொலிகளாகவே இருந்தன. சிறகோசைக்கும், குரலோசைக்கும் …

.நான் சிறகோசைகளை பெரிதுபடுத்தி கேட்டுப் பார்க்கிறேன். ஏதேனும் பிடிபடலாம்”

அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே மீண்டும் கணிணித் திரையில் பொன் வண்ண மின்னல் பளீரிட்டது. கெல்லி “மேக்னிஃபையிங்க்” கமாண்டும் ரம்யா “ஆம்ப்லிஃபையிங்க்” கமாண்டும் ஜாய் ”சவுண்ட் ஒன்லி’ கமாண்டும் கொடுக்க திரையில் பார்த்த காட்சி மூவரையும் பேச்சிழக்கச் செய்துவிட்டது. பொன் உடலோடு மிகப் பெரிதான ஒரு தும்பி, தங்கமும், வெள்ளியும் கலந்து இழையோடும் பல்லடுக்குச் சிறகுகள், முகத்தில் பல்லாயிரக் கணக்கான கண்கள் அவைகளும் பொன்னிறத்தில் ஒளிர்ந்தன. அது ‘ட்ரேப்பிஸ்டின்’ ‘டி’ கோளிலிருந்து வெளிப்பட்டு, தன் சிறகுகளை படபடவென அடித்துக் கொண்டு நீள் வட்டப் பாதையில் பயணித்து இவர்களின் ஸ்டேஷனை நோக்கி வருவது தெரிந்தது. அதன் வேகம் அளப்பரியதாக இருந்தது. சிறகுகள் அடுக்கடுக்காக மிக மெல்லியதாக, அதன் பட பட அடிப்பில் உந்து சக்தி உற்பத்தி செய்வதாக, அதன் மூலம் பறக்க இயல்வதாக அமைந்திருந்தன.

கீழே புவி பரபரப்பானது. ”நோ ஸ்பேஸ் வாக்ஸ் .நோ ஸ்பேஸ் ஷிப் நவ். ஸ்டேஷனிலேயே இருங்கள். இன்னும் பத்து  நிமிடங்களில், பூமியின் கணக்குப்படி உங்கள் ஷிப் உங்களை ஏற்றிக்கொண்டு பூமிக்குத் திரும்பத் தொடங்கும். ஆல் த பெஸ்ட்”என்று மெசேஜ் வந்தது.

மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து செய்வது என்ன என்று புரியாமல் தவித்தனர். அவர்களை பொன்னொளி சூழ்ந்தது. கெல்லி வெகு வேகமாக பொதுவில் பொருந்தக்கூடிய சங்கேத மொழியில் அதற்கு செய்தி அனுப்பினான். ’நாங்கள் பூமியிலிருந்து வந்திருக்கிறோம். நீங்கள் யார்?’

‘மகிழ்ச்சி. விரைவில் அறிவீர்கள்’ என பதில் வந்தது.

‘உங்கள் கோள் எது? ஏன் எங்களை நோக்கி வருகிறீர்கள்?’

‘நான் உங்களுக்கு தீமை செய்ய மாட்டேன்’

‘நல்லது.ஆனால் எப்படி நம்புவது?’

‘வேறு வழியில்லை உங்களுக்கு.’

‘அப்படியல்ல. நேர் பதில்கள் இல்லையெனில் உங்களை  அழிக்க நேரிடலாம்’

‘உயிரைத் தேடி வந்துட்டு உயிரை அழிப்பாயா என்ன?’

மூவரும் விக்கித்தார்கள்.இவர்களைப் பற்றி எல்லாம் தெரிந்துதான் இது வந்திருக்கிறது.

“கெல்லி காம்பேட் பாட்டை செயல்படுத்து. அதை தடுமாறச் செய்ய முடியுமா எனப் பார்.எங்கள் கணக்குப்படி உங்களுக்கு ஐந்து நிமிடங்களே உள்ளன. அசட்டுத் துணிச்சல் அபாயகரமானது.” என்று பூமியிலிருந்து கட்டளை வந்தது.

மூவருக்கும் இப்பொழுது தெளிவு வந்துவிட்டது. ஸ்பேஸ் ஸ்டேஷனின் கதவு திறந்து, பொன்மின்னல் தன்னை சிறிதாக்கிக் கொண்டு உள்ளே வந்தது. ‘நேரமில்லை. உங்கள் கோளில் விரைவில் வாழ்வில்லை. எங்கள் கோளில் மனிதரில்லை. என்னுடன் வந்தால் நீங்கள் சரித்திர நாயகர்கள். இல்லையெனில் உங்கள்  விருப்பம். வெற்றிடத்தில் நிலைக்கும் உங்கள் ஆற்றலைப் பார்த்ததுமே நீங்கள் தான் எங்களது விருந்தினர்கள் என்று முடிவு செய்து நான் வந்தேன் என்றது

‘ஃப்யர்’ என்ற ஆணை கட்டுப்பாட்டகத்திலிருந்து வருவதற்குள் விண் ஓடம் பிரிந்தது.

  அற்றைத் திங்கள் – பானுமதி. ந

               பானுமதி. ந

அது சிறு மலையைக் குடைந்து கட்டப்பட்ட பழைய கோயில். தன்னைப் போலவே பழசு என்ற எண்ணம் அவனுக்கு ஆறுதலாக இருந்தது. மிகப் பெரிய முரசுகள் பெரிய திண்ணைகளின் மேல் வைக்கப்பட்டிருந்தன. முழங்காத முரசுகள் சஹானாவைப் போல; இல்லை, முழக்காத முரசுகள் தன்னைப் போல. நீண்ட நடைபாதைகளை ஒட்டி அலங்கார நடன மண்டபம் வெறிச்சென்று காட்சி அளித்தது. எத்தனை மேளங்கள், எத்தனை தாளங்கள் இங்கே ஒலித்திருக்கும். இந்த அச்சுறுத்தும் அமைதியில் மேற்கூரையும், பக்கச் சுவர்களும், ஒலிக்கு ஏங்கி, வண்ணங்களை உதிர்த்து நிற்கின்றன. அம்மன் சன்னதியில் தூங்கா விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சிற்பி படைத்த கணத்தில் உறைந்த அன்னையின் சிற்பம் அவன் மனத்தில் உறையும் அந்த கனவைப் போன்றதா அல்லது… வேறு எதைப் போன்றது?

சிவன் சன்னதியில் இருளை விழுங்க முடியாமல் ஒளி தத்தளித்துக் கொண்டிருந்தது. விசித்திரமான அழகு என்று தனக்குள் சொல்லிக் கொண்டே அவன் பாறைப் படிகளின் மேலேறி திறந்திருந்த வாயில் வழியாக சுனைப் படுகைக்கு வந்தான்.

அவன் உள்ளேயிருப்பதை உணராமல் காவல்காரன் பூட்டிக் கொண்டு போய்விட்டான். கத்திக் கூப்பிடலாமா என ஒரு கணம் நினைத்தான். எங்கிருந்தால் என்ன என்றும் சிந்தை ஓடியது.
அன்று இதைப் போல் பூரண நிலவில்லை. அவன் தன் வீட்டு முற்றத்தில் கிணற்றை ஒட்டிய மேடையில் கையில் பேருக்கு ஒரு புத்தகத்துடன் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒழுங்கான வடிவுகளிலில்லாத புண்ணாக்குகள் போல் நிறம் கொண்டு சிறு குன்றுகளெனக் காணப்பட்ட மேகங்கள் எங்கே? கண்ணைச் சிமிட்டிச் சிமிட்டி ஒன்று மற்றொன்றை அழைக்க வானில் மிளிரும் பூக்கள். அவனது கவிதை வேளையை கலைக்கவென்றே காலிங் பெல் அடித்தது.

‘பாலா, யார்னு பாரு, கைவேலையா இருக்கேன்’

முணுமுணுத்துக்கொண்டே சென்றவன் நடுவயதில் ஒருத்தர் கதவருகே நிற்பதைப் பார்த்தான்.

“நாங்க கும்மோணம். நேக்கு டிரான்ஸ்ஃபர் இந்தூருக்கு ஆயிருக்கு. உங்காத்துல இடம் இருக்குன்னா, சரி பாக்கலாமேன்னு வந்தோம். பெரியவா யாருமில்லயா?” நேரங்கெட்ட நேரத்தில வீடு பார்க்க யாரும் வருவதில்லையே என்று வியந்தான் அவன். ஒத்தர் நின்னுன்டு பன்மைல பேசறாரே, என நினைத்தவன் அப்பொழுதுதான் அவளைக் கவனித்தான். பாதி ஒளியோடு கலந்த இருளில் மருதாணி மரத்தடியில் நின்று கொண்டிருந்தாள்.

‘உள்ள வாங்க சார், அம்மா இருக்கா, அப்பா வெளில போயிருக்கா, உங்க பேரு’ என்றான் இவன்.

“கோதண்டராமன், இவ எம் பொண்ணு, சஹானா, நாங்க ஆர்த்தின்னு கூப்ட்றோம். உன் பேரு பாலாதானே? அம்மா கூப்ட்றச்சே கேட்டுது”

மாநிறத்தில் இருந்தாள் அவள். இரட்டைப் பின்னல் மடித்துக் கட்டியும் பின்முதுகு வரை ஊஞ்சல் ஆடியது. மருள மருள விழிக்கும் கறுப்பு திராட்சைகள். சிறிய வாய். அந்த சங்குக் கழுத்து அவனை அசைத்துவிட்டது. அம்மா ஏதோ சொன்னதற்கு மூக்கைச் சுருக்கி சிறிது அண்ணாந்து பல் வரிசை தெரிய சிரித்தாள். வாடகை கூட இல்லாமல் அவர்களைக் குடியேற்ற அவன் ரெடி. ஆனால், அப்பா என்ன நினைக்கிறாரோ? ’சீதாபதி பிள்ளையாரே, நிஜம்மா உனக்கு சிதர்க்காய் விட்றேன், பதினெட்டு தோப்புக்கரணம் போட்றேன்.’

இந்தக் கரடுமுரடான பாறையில் அந்த எண்ணம் அவனுக்கு இளநகை ஊட்டியது. அவர்கள் குடித்தனம் வந்தார்கள். ”அப்பாவப் பாத்தாச்சு, பொண்ணு அவராட்டம் இல்ல, சோ, அம்மாவப் பாத்துடணும்னு தோணி வாடகை ஏத்தாம ஒப்டுண்டேள் போலிருக்கு” என்று அம்மா அப்பாவை கேலி செய்ததும் நினைவில் வந்தது.

அந்த ஊரில் ஒரே ஒரே ஸ்கூல்தான் ஹையர் செகண்டரிக்கு. அதுவும் கோ-எட். பாலா நிஜமாகவே வானில் பறந்தான். அவன் ப்ளஸ் டூ அவள் ப்ளஸ் ஒன் அவ்வளவுதான். ராது, வேணு, சீமா, பாண்டு எல்லோரும் அவனுடன் ‘க்ரூப் ஸ்டெடி’ செய்ய விழைந்தார்கள். அவன் வீட்டிலே, அதுவும் சஹானா இருக்கும் போர்ஷனில் இவர்கள் வீட்டு முற்றத்தின் ஒரு பக்கம் திறக்கும் என்பதால் அந்தக் கூடத்திலேயே வாசம் செய்ய விரும்பினார்கள். அம்மாகூடச் சொன்னாள்- “மாடில போய் படிங்களேன்டா” என்று. சீமா ரொம்ப கெட்டிக்காரன். ”மாமி, அங்க நாங்க பேச ஆரம்பிச்சுடுவோம் இல்லன்னா பராக்கு பாப்போம்; இங்கன்ன நீங்க பாத்துண்டிருக்கேள்னு பயமிருக்கு, படிப்போம்”. அம்மா சிரித்துக் கொண்டே, ‘கலைமகளை’ப் படிப்பாள்.

சஹானா பாலாவின் அக்கா உஷாவுடன் நெருங்கிய தோழியாகிவிட்டாள். ’க்ளுக் க்ளுக்’கென்று எதற்கோ சிரிப்பார்கள். அவன் நெருங்கி வந்து நின்றால் உதடுகள் மடிந்து ஒலியற்ற சிரிப்பாக முகமும் கண்ணும் சிரிக்கும் அவளுக்கு. ”ஏண்டா, எங்களையே சுத்தற. வேற வேலையில்லியா?” என்று உஷா கடுகடுப்பாள்.

சஹானா கணக்கு ட்யுஷனுக்கு போய் வரும் வழியில் வெளிச்சம் குறைவாக இருக்கும். அவள் ‘பயமாக இருக்கிறது நீ கூட வாயேன்’ என்று ஒருமுறை கூடக் கேட்டதில்லை. அவன் சைக்கிளுடன் முனையில் காத்து நின்று பாதுகாவலனாக வருவதற்கு நன்றியும் சொன்னதில்லை.

இன்று அவனுக்குத் தோன்றுகிறது- அவள் அனாஹதத்வனி- ஒலி கேட்காத மந்திரம். ஆனால், அவள் நன்றாகப் பாடுவாள். அதுவும் மார்கழியில் முப்பது நாட்களும் திருப்பாவை அவளுடைய அப்பா பாட இவள் வாங்கிப் பாடுவாள். ’நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா’ என்று. இன்று அந்தப் பாடல் அவனுள் கேட்பானேன்?

‘மூட நெய் பெய்து முழங்கை வழி வார’ அவர்கள் வீட்டில் சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள். அவனுக்கு அதனுடன் வரும் வடை மேல் தான் மிகுந்த ஆசை. அவள்தான் பிரசாதத்தை எடுத்து வருவாள்; ’இன்னும் ரெண்டு வட கிடைச்சா நன்னாருக்கும்’. கன்னங்களில் கொப்பளிக்கும் அந்தச் சிரிப்பு அவன் வெக்கங்கெட்டு கேட்டதை ஈடு செய்வதாக அவனுக்கு அன்று தோன்றியது. அவன் இல்லாதபோது தூய்மையான வெண்காகிதத்தில் இரு வடைகள் அவனுக்கென வைக்கப்பட்டிருக்கும். அவன் ரூமிற்கு அவள் வந்து போன வாசத்தை நெஞ்சு நிறைய இழுத்துக் கொள்வான், வடையின் ருசியோடு சேர்த்து.

அவர்கள் மூன்று வருடங்கள் அவன் வீட்டில் இருந்தார்கள்; அவருக்கு பதவி உயர்வுடன் மாற்றலும் வந்துவிட்டது. சிறிது காலம் கடிதப் போக்குவரத்து இரு குடும்பங்களுக்கும் நடந்தது. அவள் படிக்கும் சென்னை கல்லூரியில் ஒருமுறை அவளைச் சென்று பார்த்தான். அவள் வீட்டிற்கு அழைத்தும் அவன் போகவில்லை. இப்பொழுதும் அழகாகத்தான் இருந்தாள். ஆனால், மஞ்சள் பாவாடையுடன், மருளும் விழிகளுடன், அண்ணாந்த சிரிப்புடன், அவனுள் உறைந்த சஹானா இல்லாமல் அவள் ஆர்த்தியாகத்தான் தெரிந்தாள். அவள் அவர்கள் வீட்டில் குடியிருந்த மூன்று வருடங்களில் ஒருமுறை கூட இந்தத் தோற்றம் தனக்கு எழவில்லை என அவன் வியந்து கொண்டான்.

மேலே வானம் வெள்ளிச் சலங்கைகள் கட்டிக் கேட்காத ஒலியில் ஆடிக் கொண்டிருந்தது. மலைப் பாறைகளின் வழவழப்பு கருமையில், நிலவின் ஒளி, தம்பூராவின் ஒரு பகுதியில் படும் அகல்விளக்கென மினுக்கியது. ரகசிய முனகலென காதோரம் சஹானா பாடினாள்.

 

 

  சாகர மேகலை – பானுமதி. ந

பானுமதி. ந

மாலினி சிரித்துக் கொண்டாள். நீல வண்ணத்தில் அவள் அணிந்திருந்த ஒளியாடையில் ஆங்காங்கே நீல இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. நீலோத்பலம், செவ்விய அவளது வலது மேற்கரத்தில் பாதி இதழ் விரித்து தாமரையில் மலர்ந்த அல்லி என இருந்தது. மயிலின் நீலப் பீலி மேற்புர இடக்கையில். நீல வைரங்கள் மின்னும் கங்கணம் அணிந்த கீழ் வலக்கரம் மடியில் ஆடையின் மடிப்பில் மேல் கிடந்தது. காகச் சிறகுகளால் செய்யப்பட்ட உருட்டு மாலை கீழ் இடக்கரத்தில் இருந்தது. காலம் அணுகா யௌவனத் தோற்றம். தன் மாளிகையில் அந்த இளைஞன் இருப்பதை விஷ்வகோசத்திடம் அவள் தெரிவிக்கவில்லை. ஏன் என அவளுக்கே விளங்கவில்லை.

அவன் இன்னமும் மயக்கத்தில்தான் இருக்கிறானா என்றும் அவளுக்கு ஐயம் இருந்தது.

காசினி வந்து வணங்கினாள். அவர்களின் மொழியில்,’அவன் முனகுகிறான்’, என்றாள்.

இயல்பாக தன் இரு கரங்களை மறைத்துக்கொண்டு, அவனைத் தன் முன் நிறுத்தும்படி கட்டளையிட்டாள்.

அவனைப் பார்க்கையில் எழும் அந்த உணர்விற்கு என்ன பெயர்? அவனுக்கு ஒரு ஒளியிருக்கை அமைத்து அதில் அவனைக் கட்ட வேண்டியிருந்தது.

அவன் அவளைப் பார்ப்பதும், தவிர்ப்பதுமாக இருந்தான். இவர்களின் ஒளியாடையில் அவன் இவர்களில் ஒருவனாகத்தான் தெரிந்தான். ஆனால், இத்தனை இக்கட்டிலும் அவன் கண்கள் ஒளியுடன் இருப்பதையும், அலைபாய்ந்து கொண்டிருப்பதையும் அவள் கவனித்தாள்.

“யார் நீ? எங்கிருந்து வருகிறாய்?” அவன் அதிர்வதும், மகிழ்வதும் கட்டப்பட்டிருந்த அந்த நிலையிலும் தெரிந்தது.

“தமிழ் தெரியுமா, உங்களுக்கு? நான் விவேகானந்தன்”, என்றான் இவன் மிக மெல்லிய குரலில்.

மாலினி புன்னகைத்தாள். ”எப்படி வந்தாய்? ஏன் வந்தாய்? அது என்ன ஊர்தி? உன்னை மட்டும்தான் பார்த்தேன். மானுடர்கள் இறக்கும் பிரிவினைச் சேர்ந்தவர்கள். உண்மையைச் சொல், இங்கே உனக்கென்ன வேலை?”

“நான் ஆய்வின் பொருட்டு வந்தவன். நாங்கள் எங்கள் அனுமானத்தின்படி ‘சூன்யவாத நிலையில்’ ஏதேனும் கோள் இருக்குமா எனத் தேடி வான மண்டலத்தைக் கடந்து அந்த ஊர்தியின் மீது ஏறி நால்வர் என  வந்தோம். மூவர் எஞ்சவில்லை. எங்கள் ஊர்தியும் பழுதுபட்டு உங்கள் கோளின் அப்பகுதியில் விழுந்தது.”

“அது உன் உலகிற்கு உதவாது”

“இல்லை. காலத்தை, வெளியை முற்றாக அறிய வேண்டும். எங்கள் வாழ்வின் எல்லைகள் விரிந்தாக வேண்டும். அறிவும் ஆற்றலும் அனைவருக்கும் பொதுவானது. காலத்தை, வெளியை ஒருமித்த உங்கள் கணிதம் தேடி வந்தோம். நான் ஒருவன் மட்டுமே இருக்கிறேன்.”

“எதை வைத்து நாங்கள் காலத்தை, வெளியை ஒருமித்தவர்கள் என்கிறாய்?”

‘நீங்கள்தானா அது என்பது எனக்கு அறுதியாகத் தெரியாது. ஆனால், நீல வண்ண உங்கள் நீள்சுழல் பாதையில் ”கால சக்ர பேதத்தை” நான் யூகித்துக்கொண்டேன்”

இப்பொழுது காசினி சிரித்தாள். ”உங்கள் ‘காசினி ஆர்பிடர்’ சனி கோளைச் சுற்றி வருகிறது என  அறிவோம். அதனாலெல்லாம் நீங்கள் காலசக்ர பேதத்தை அறிய முடியாது.”

“நன்றி. இது நீள்வட்டப் பாதையின் நீல்வட்ட வெளியென சொன்னதற்கு,” என்றான் விவேகானந்தன்.

“உன்னால் அதை அறிந்து கொள்ள முடியாது. அப்படியே தெரிந்து கொண்டாலும் உன் உலகிற்கு நீ திரும்பினால் அல்லவா அதைப் பற்றி பேச?”என்று விஷ்வாவின் குரல் கேட்டது. மாலினி திடுக்கிட்டாள். அவளையும், காசினியையும் அறிவொளி நம்பி அமைதியாக இருக்கும்படி சைகை செய்தான்.

“என் உலகிற்கு நான் திரும்பிச் செல்லாவிடில் மற்றொருவன் வருவான், மேலும் ஒருவன்… மேலும் ஒருவன். அவ்வளவு  எளிதாக  விட்டுவிட மாட்டோம். நம் உரையாடல் இந்த நேரம் இரகசியமான ஓரிடத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறது. எங்களின் வேத ஜோதிடம் ஒட்டி முத்துஸ்வாமி தீஷிதர் எழுதிய ’திவாகரதனுஜம் சனைச்சரம்’ என்ற யதுகுல காம்போதி பாடலில்’ கால சக்ர பேதம்’ செய்வதில் சனி கோளிற்கு இருக்கும் மகத்துவம் பற்றிச் சொல்லியிருக்கிறார். எங்கள் காசினி சுற்ற, ஹூயுஜன்ஸ் அனுப்பும் புகைப்படங்கள் எங்களுக்கு எல்லாவற்றையும் சொல்லிவிடும்” என்றான் விவேகானந்தன்.

“அப்படியா? எப்படியும் நீ மீளப்போவதில்லை. அறிவொளி நம்பியும், மாலினியும் வெவ்வேறு கோள்களிலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டு  பின்னர் எங்கள் குடிமக்கள் ஆகிவிட்டனர். நீ தானாகவே வந்திருக்கிறாய். உன்னையும் எங்கள் குடிமகன் எனச் செய்யப்போகிறேன்” என்ற விஷ்வா,‘நம்பி, நம் அனைத்து உயிரிகளும் இனி இயங்கலாம், தடையில்லை. நாழி ஒன்றில் இவன் ஏழாம் உயிரினமாக மாற்றப்படுவான். ஏற்பாடுகள் செய்யுங்கள்”

‘விஷ்வா, இப்பொழுது நாழி பதினெட்டுதான் ஆகிறது’

“ஆறு நாழி போதும்”, என்றான் விஷ்வா. அங்கிருந்து செல்கையில் அவன் கண்கள் மாலினியையும், நம்பியையும் விரைவாக சந்தித்து மீண்டன.

“உன்னையும், காசினியையும் விஷ்வா விட்டு வைக்க மாட்டான். ஏன் இப்படிச் செய்தீர்கள்? இன்று காலை முதல் எல்லாமே இங்கு சரியாக இயங்கவில்லை. ஒளி இருக்கையோடு இந்தப் பையனை விஷ்வாவின் இடத்திற்கு அனுப்பிவிடு. என்ன யோசிக்கிறாய்?”என்றான் நம்பி

“ஒன்றும் இல்லை, நம்பி. இன்னம் ஆறு நாழி இருக்கிறதே. எப்படியும் நம்முடன்தானே இவன் இனி இருக்கப் போகிறான். நானும், காசினியும் இவனைப் பார்த்தபோது இவன் உணர்வோடில்லை. சரி செய்தபிறகு விஷ்வாவிடம் சொல்லலாம் என இருந்துவிட்டோம். நான் பார்த்துக் கொள்கிறேன்.”

“இன்று நடந்ததை நீ அறியமாட்டாய்.”

“முழுதும் பார்த்தேன், நம்பி, நீ போ, விஷ்வா தேடப் போகிறான்”

நடந்த அனைத்துமே அவள் அறிவாள். ஒளியலைகளால் ஆன இருக்கையில் விஷ்வகோசம் அமர்ந்திருந்தான். அன்று அவர்களுக்குள் எண்ண அலைகளை இயக்கும் நாள் இல்லை. அனைத்தும் ஒத்திசைக்கப்பட்ட நியதியில் தான் நடந்து கொண்டிருக்கும். எண்ணற்ற நுண்ணுயிரிகளால் ஆன ஒளி நெசவு இது. இங்கே ஏழாம் எண்களிலிருந்து பதினைந்தாம் எண்கள் வரை பகுத்துப் பிரிக்கப்பட்ட உயிரிகள் அனைத்தையும், அந்த நுண்ணுயிரிகளே வழிநடத்தும். அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமாய் இருக்கின்றன.

ஏழாம் உயிரினம் தன் வேலையைச் செய்யும் இடமே அந்தக் கடல் பகுதியில்தான். ஒளிக் கோளின் கதிரனைத்தையும் அதுவே வாங்கிக்கொள்ளும். இந்த மண்டலத்தில் அதிக எண்ணிக்கையில் இயங்கும் அது, தன் இனத்தில் சரியாகச் செயல்படாதிருக்கும் பகுதியை புதுப்பித்துக் கொண்டுவிடும். தன் எண்ணிக்கைகள் குறையாது பார்த்துக் கொள்ளும்.

எட்டாம் உயிரினம் தன்னிடம் முன் உயிரினம் கொடுத்துக் கொண்டேயிருக்கும் கதிர்களை அணுக்களாக மாற்றி ஒன்பதாம் உயிரியிடம் கொடுக்கும். இந்த செயல்பாடுகளில் இதுவரை பிழை ஏற்பட்டதில்லை

ஒன்பதாவது, அணுக்களைப் பகுக்கும். சில கருந்துளைகளை அடையாளம் கண்டு அதை பத்தாவதற்கு அனுப்பிவிட்டு, எதிர்மின்னிகளைச்  சேமிக்கும்.

கருந்துளைகள் வரப் பெற்றவுடன் அவற்றை எடையற்ற சிறு துகள்களாக மாற்றி சுற்றியுள்ள கடலின் அமைதிக்குள் பத்தாவது செலுத்திவிடும். இந்தத் துகள்கள் கோளின் மைய விசை அழுத்தத்திற்கு ஏற்ப உருவாக்கப்படும்.

பதினொன்றாவது உயிரினம் இவை அனைத்தையும் கண்காணிக்கும்.

பன்னிரண்டாவது செயல் அறிக்கைகளை நுண் ஒளியலைகளாக மாற்றி அத்தனை உயிரினமும் அறிந்து கொள்ளச் செய்துவிடும்.

பதின்மூன்றாம் உயிரினம் கடலின் காவல் பொறுப்பு. முக்கியமாக கடலில் செலுத்தப்பட்ட கருந்துளைகள் மறு ஆணை வரும் வரை பாதுகாப்பாக இருக்கின்றனவா என கண்காணிக்கும். மேகங்கள் போன்ற சில சஞ்சரிப்புகளால் ஒளிக் கோளிலிருந்து ஒளி தடைபடும் நிகழ்வுகளில் சேமிக்கப்பட்ட எதிர்மின்னியிலிருந்து நுண் ஒளியலைகளை இது அமைக்கும்.

பதினான்காம் உயிரினம் நேர்மின்மம் தங்கும் உயிரி. அதன் செயல்பாடுகள் ஒளியலைகளால் புனையப்பட்ட இவ்விடத்தில் வெளியையும் காலத்தையும் ஒருங்கே சட்டகமென இழுத்து, செயல் புதைந்த பொருளிலிருந்து விசையை வெளிக் கொணர்ந்து அனைத்து உயிரியினையும் இந்தக் கோளில் இயங்கச் செய்யும்.

பதினைந்தாம் உயிரினம் விஷ்வகோசம். அவன்தான் ஒன்றிலிருந்து  ஒவ்வொன்றும் இருநூறு ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஐந்து கோள்களின் நிலவுகளுக்குச் சென்று வருபவன். நொதுமின்னியையும் லெப்டான்களையும் அறிந்தவனும் அவனே. ஒளியலைகள் பயணிக்கும் வேகம் அசாதரணமானது.ஆனாலும், அந்த ஐந்து கிரகங்களும் கொண்டிருக்கும் கோள் விசையில் மாறுபாடு உண்டு. அதையொட்டியே அதனதன் நிலவுகளின் மாறுபட்ட சுழற்சியும் அமையும். அதையும் அவன் கணக்கிட வேண்டும். ஒவ்வொரு கோளிலும், அதனைச் சுற்றியுள்ள நிலவுகளிலும் அதனதன் தூசி அடுக்குகள் கணத்திற்கு கணம் மாறும்; அதைக் கணித வடிவங்களாக பல்காலம் பயின்று அந்த தூசைக் கடந்து உள் செல்லும் வடிவமைத்தவன் அவன். தூசியைக் கடப்பதற்கு மட்டும்தான் அது.

நிலவுகளின் நீள்வட்டப் பாதையில் உள்ளே நுழைகையில் அதன் ஈர்ப்பு விசைக்கேற்ப ஒளி அலை ஊர்தியை மாற்றி அமைக்க வேண்டும்.

இந்தக் கோளில் ஒரு பக்கத்தில் கருமை என்பது கிடையாது. ஒளிக்கோள் வழங்கும் வெளிச்சம் ஒரே சுழற்சிக்கு ஏற்ப  நடைபெறுவதால் இரவு நிகழும் பகுதி இவர்கள் அறியப்படாத ஒன்றாகவே இருக்கிறது.

ஒளி அலை இருக்கையை விஷ்வகோசம் நகராமல் இருக்கும் பொருட்டு அமைத்தான். பதினான்காவது உயிரியை எண்ண அலைகளுக்கு வருமாறு அழைப்பு விடுத்தான். ஏழு முதல் அனைத்துமே எண்ணக் கதம்ப உரையாடலில் இணைந்தது கேட்டு வியந்தான்.

“ஒளிக் கோளின் கதிர்களை வாங்கிக் கொண்டிருக்கையில் மிக நூதனமான ஒரு நிகழ்வினை என் திரையில் கண்டேன். இருளென நாம் கொண்டிருக்கும் பகுதியில் நாம் எப்போழுதோ பார்த்த புதக்கோளின் ஒளிர் பச்சையில் ஒரு ஊர்தி வரும் அதிர்வுகளை என் திரை காட்டிற்று. இதுவரை அறியாத ஒன்று. நான் பதினான்கிடம் தெரிவித்தேன். ஒளிக் கதிர்களை  வாங்குவதை அவர் அறிவுரையின் பேரில் நிறுத்தி வைத்துள்ளேன்”, என்றது ஏழாம் உயிரி.

“கதிர்கள் இல்லாததால் அணு மாற்றம் செய்து அதை ஒன்பதாம் உயிரிக்கு அனுப்ப இயலவில்லை”, என்றது எட்டாம் உயிரி.

“அணு பகுத்தல் நடைபெறவில்லை” இது ஒன்பதாம் உயிரி.

“கருந்துளைகள் வந்தால் அல்லவோ கடலுக்குள் செலுத்த?” என்றது பத்து.

“நிகழாத செயல்களை எப்படிக் கண்காணிப்பது?” பதினொன்றின் கேள்வி.

“செயல் அறிக்கைகளை நுண் ஒளியலைகளாக்கும் நான் திகைத்துப் போயிருக்கிறேன்”, பன்னிரண்டு கவலைப்பட்டது.

“கருந்துளைகள் பாதுகாப்பாக இருக்கின்றன. சேமிக்கப்பட்ட எதிர்மின்னிகளிலிருந்து வெளிப்படும் ஒளி அலைகளின் உற்பத்தி குறையவில்லை”. நல்ல தகவல் சொல்லிற்று  பதின்மூன்று.

“பதினான்காம் உயிரியே, ஏழாம் உயிரி முதல் அனைத்தும் உணர்த்தும் இவ்விஷயம் நாமே அறியாத ஒன்று. அங்கே எது வரக்கூடும்? நாம் எவ்வாறு செல்வது?” என்றான் விஷ்வ கோசம்.

‘இதுவரை நிகழாத ஒன்று. நாம் யோசித்துத்தான் செயல்படவேண்டும். இந்தப் பால்வெளியில் யாரும் நம்மை நாடி வந்ததில்லை; நாமாகக் கொண்டு வந்தவர்களைத் தவிர. நம்முடைய விழிப்புணர்வை பரிசோதிக்க கடலை மேகலையெனக் கொண்ட அன்னையின் ஆடலா, அல்லது வேறு ஏதாவதா, புரியவில்லையே’,என்றார் அறிவொளி நம்பி.

இந்தக் காட்சியை விவேகானந்தனுக்கு மாலினி போட்டுக் காட்டினாள். ”ஏன் எனத் தெரியவில்லை, உன்னை எனக்கு மிகப் பிடித்திருக்கிறது. உன்னுடன் நான் உன் உலகிற்கு வர முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஆனால், விஷ்வா அதை அனுமதிக்கமாட்டான். அவனுக்கு நிகரான அவன் விரும்பும் ஒரே சக உயிரி நான். என்னை இழக்க நேர்ந்தால் அவன் உன்னை உருவற்று அழித்துவிடுவான். இப்பொழுது அவன் உன்னை விட்டுச் சென்றிருப்பதே பெரிய விஷயம். எப்படியும் உன்னுடன் நான் நட்பு கொள்ள அவன் விடமாட்டான். உன்னை ஏழாம் உயிரியாகச் செய்தாலும் நான் உன்னிடம் நட்புடன் இருப்பேன் என்பதை அவன் அறிவான். உன்னை அழித்தாலோ எப்பொழுதும் அவனுக்கு நான் உடன்படமாட்டேன் என்பதும் அவனுக்குத் தெரியும். உன்னை நானே தப்புவித்தால் பழி அவன் மேல் விழாது.  அது அவனது திட்டம். போகும் பாதையில் உனக்கு மரணம் கூட ஏற்படலாம். ஆனால், எனக்காக உன்னை விட்டுவிட்டு தனக்காக என்னை மன்னித்து விடுவான்”.

இதை உள்வாங்கவே விவேகானந்தனுக்கு சில வினாடிகள் பிடித்தன.

“உனக்கு சில இரகசியங்கள் சொல்கிறேன். இந்தக் குளிகை உன் மூளையின் மேல் பரப்பில் வைத்துத் தைக்கப்படும். இது பயோ- கம்பெடபில். சரியாக நான்கு மாதங்களில் உன் குருதியிலேயே இது உயிர் பெற்று நீ விரும்பும் வேகத்தில் கால நேரங்களை இயக்கும். அதனால் நீங்கள் உலகின் அதி வேக சுழற்சியில் பல நூற்றாண்டு கடந்து செல்வீர்கள். அதே நேரம் மற்ற கண்டங்கள் மிகப் பின்தங்கிய நிலையில் இருக்கும். இருவித செயல்பாடு உண்டு இதில். என் ‘பாட்கள்’ உன் ஊர்தியை சரி செய்து நுண் கதிர் வேகத்தில் உன் உலகை நோக்கிச் செலுத்திவிடும்.”

“உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன்? எனக்காக எத்தனை தியாகம்? உங்களுக்கு என் பொருட்டு ஆபத்து எனத் தோன்றுகிறதே?” “

“ஆம், ஆனால் விஷ்வா என்னை இழக்க மாட்டான். ஆனால், தண்டிக்கக் கூடும். அதிலிருந்தும் என்னை அவனே மீட்பான்.”

“என் பொருட்டு நீங்கள் ஆபத்தைச் சந்திக்க வேண்டாம். அவர் என்னை இந்தக் கோளின் வாசியாகத்தானே மாற்றுகிறார்.”

அவள் சிரித்தாள். “மனிதனாக இருந்தும் சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருப்பவர்களை நீ அறியவில்லையே”

“இருந்தாலும்..”

“எனக்காக ஏன்  என்றுதானே கேட்க வருகிறாய்?”

“……”

“நான் ஜூவாலமுகீ, செவ்வாய்க் கோளில் இருந்தபோது. அங்கே செந்தணல், இங்கே நீலாக்னி. உங்கள் ஜோதிட நூல் செவ்வாயை பூமியின் குமாரன் என்று சொல்கிறது. நீ பூமைந்தன். பூமி உனக்குத் தாய் என்றால் நான் அவள் பெயர்த்தி”

அவன் அசந்து போனான். சனியும், செவ்வாயும் பகையாளிகள் என அவன் அப்பா சொன்னது நிழலாடியது. ’ஜூவால மாலினி’ என நினைத்துக் கொண்டான்.

“கிளம்பும் சமயம். விரைவாக எழும்பு. என்றோ ஒரு நிகழ்வில் நாம் மீண்டும் சந்திக்கவும் கூடும்”

 

 

 

 

வதம் – பானுமதி. ந

 பானுமதி. ந

காலையிலேயே மிகுந்த கோபத்துடன் உதித்த ஆதவன் நாள் முழுதும் தன் கிரணங்களை வாரி இறைத்துக் கொண்டிருந்தான். அவனின் தேர் உழுத வான வெளியில் துல்லிய நீல மேகங்களை உண்ணும் ஆசையில் பதுங்கிப் பதுங்கி வந்த வெண் மேகங்கள் அவனது சாரதியின் சவுக்கு பட்டு வீறிய வடிவங்களுடன் ஒதுங்கி ஒதுங்கி அசைவற்று சோர்வுடன் படுத்திருந்தன. தன் கோபம் எதனால் என்று அறியாமல் அவன் கடலுக்குள் தன்னையே தனக்கு ஒளித்துக் கொண்டு மறைந்தான். காற்று அவன் சினத்தில் தானும் கட்டுப்படுவது போல் எங்கோ ஒளிந்து கொண்டு விட்டது.

வழி தப்பிய தவிட்டுக் குருவி  அந்த மொட்டை மாடியில் உயர்ந்திருந்த குடிநீர் குழாயின் வளைவில் அமர்ந்து குரல் எழுப்பிப் பார்த்து பின்னர் சோகமாக அலைக்கழிந்தது. அத்தனை பறவைகள் சுகமாக இருப்பிடம் சேர இது மட்டும் தன் வழி மறந்த விதியை சாகேதராமன் நோக்கினான். ’ஒருக்கால் உன்னை அழுத்தும் பாரத்தை நீ தனியேதான் அனுபவிக்க வேண்டும் என்று சொல்கிறதோ?’ அதன் கூட்டுப் பறவை வந்து அதை அழைத்துச் சென்றால் தனக்கு இந்தப் பிரச்சனையிலிருந்து விடிவு கிடைக்கும் என்றும் அப்படி எதுவும் நடக்காவிடில் தான் அந்தப் பிரச்சனையை எதிர் கொள்ள நேரிடும் என்றும் அவன் உளம் பதைத்தான்.  அதன் சினேகிதப் பறவையை அந்தப் பறவையைவிட இவன் எதிர்பார்க்கத் தொடங்கினான்.

இருள் கவிந்து பெருகியது. குரல் எழுப்பாமல் அந்தப் பறவை பறந்துவிட்டது. இவனை ஏமாற்றம் கவ்வியது. சலித்து நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். மிகத் தேசலான தேங்காயின் கால் ஓட்டில் ஒட்டியிருப்பது போல் நிலா காட்சியளித்தது. ’இன்று நாலாம் பிறையா? நாய் படாத பாடு படப் போகிறேன்.’

தன் எதிர்மறை எண்ணங்களும், அறிவிற்கு உடன்பாடில்லாத சிந்தனைகளும் அவனுக்கு வியப்பாகவும் இருந்தன. ஆனாலும் தன்னைக் குத்திக் கிழித்து, அந்த வதையில், வாதையில் தன்னை வாட்டிக் கொள்ளவே அவனுக்கு விருப்பம் மிகுந்தது.

வீணையில் அன்று ‘சலமேல ரா, சாகேத ராமா’ என்ற பாடலை அக்காவிற்கு அவளது வாத்தியார் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினாராம். இரவு 3 மணிக்கு இவன் பிறந்ததால் இவன் ‘சாகேத ராமன்’. அந்த மார்க்க இந்தோளத்தை இன்று கேட்டாலும் இவனுக்கு மனதைப் பிசையும். பள்ளியில் இவனை ‘சாகேது பிஸ்கோத்து’ என்று கேலி செய்வார்கள். ’சாது கேது சூது’ என்று பாடுவார்கள். தன்னை ஏன் ‘ராமன்’ என்றோ, ‘ராமா’ என்றோ, ‘ராம்’ என்றோ கூப்பிட மறுக்கிறார்கள் இவர்கள் என்றெல்லாம் தோன்றும் இவனுக்கு. ஆனால் சொல்ல பயம். நிலையான தோழமையற்ற தனிமை அவனை படிப்பில் முன்னேறச் செய்தது. பேராசிரியர்கள்கூட இவனிடம் சந்தேகம் கேட்பார்கள். உடன் படிப்பவர்கள் விளக்கங்கள் கேட்பார்கள். ஆனால், யாருமே ஒட்டி உறவாடியதில்லை. தன்னை ஒரு சினிமா பார்க்கக்கூட ஏன் அழைத்ததில்லை யாரும்? ஏன் கர்ப்பக்கிரஹத்துக் கடவுளாக தன்னை ஒதுக்கி விட்டார்கள்? வேண்டிக் கொள்ள மட்டும்….  ‘வேண்ட முழுதும் தருவோய் நீ’ பிரச்சனைகளைத் தீர்க்க மட்டும்… அசடு என்று என் முகத்தில் எழுதியிருக்கிறது போலும்!

சோபையற்ற நிலவைச் சுற்றி வெண்கரடி என மேகங்கள் சூழ்வதை சாகேத ராமன் பார்த்தான். ஆம், ஆம்.. கரடிதான். இவனின் சிறு வயதில் ஒருவன் கரடி வேஷம் கட்டிக் கொண்டு தெருவில் திடீரென வந்தான். பெரியவர்கள் பயந்து கொண்டே பார்க்க, குழந்தைகள் அலறிக் கொண்டே ஓடின. இவன் நினைத்தான், ’நான் எந்த வேஷம் போட்டு மனிதர்களை நெருங்கவிடவில்லை? நான் மனிதனா, கரடியா, குழந்தையா, பெரியவனா?  என் அறிவின் தகிக்கும் நெருப்பில் நானென்னையே வார்த்துக் கொண்டிருக்கிறேன் போலும்.’

‘யாருடன் நான் சாதாரணமாகப் பேசியிருக்கிறேன்? இல்லை, என்னிடம் தப்பில்லை. உலகில் பெரும்பான்மையினர் முட்டாள்கள். நான் என் தொழிலில் மேம்பட்டவன். எனக்கு என்ன குறை?’

‘குறைதான், என் மேதமை அடிபடப் போகிறது. என்னை கூண்டில் நிற்க வைத்து கேள்வி கேட்கப் போகிறார்கள். நிமித்தங்களில் மட்டும் அறிவைச் செலுத்தாத தான் தான் இன்று நாலாம் பிறையையும், தனித்த பறவையையும் எண்ணிக் கலங்குகிறேன்.’

‘சாகேதன், உங்களுக்கு நெறையா வேலை. ஆனா, இந்த ப்ரபோசலை உங்களை விட்டா யாரும் புரிஞ்சிக்கக்கூட முடியாது. ஒரு ரெண்டு நாள்ல .. பிளீஸ் மேலேந்து ப்ரஷர்ப்பா’

தான் ஒரு கரடிதான் என இவன் மேலும் நினைத்தான். தேன் குடிக்க ஓடும், மதி மயங்கிய கரடி. ’உங்களை விட்டா யாரும் புரிஞ்சிக்கக்கூட முடியாது’ இது போறும் முட்ட முட்ட தேன் குடிக்க

இவன் சிந்தனையைக் கலைப்பது போல் மெட்டி ஒலி. ரமணி ஏன் இங்கே வருகிறாள் இப்போ? என் டேபிளைக் கொடைஞ்சிருப்பாளோ? என் வாதையை கொண்டாடப் போறா. அவளை மனசால வதச்சது தெரியாத மாதிரி நான் நடந்துக்கறேன்னு சொல்லுவோ.. எல்லார்ட்டயும் சாதாரணமா இல்ல, ரணமாத்தான்… என்று முடிக்காம விடுவோ…

“ஏன் இங்க தனியா உக்காந்துண்டு இருக்கேள்? சாப்பிடக்கூட வல்லியே?”

இவன் பதில் சொல்லவில்லை. ”என்ன பிராப்ளம், சொன்னாத்தானே தெரியும்?”

‘உனக்கு என்ன சொல்லணும் இப்போ? நீயும், சங்கரும் சாப்பிட்டாச்சோல்யோ? நை நைன்னு புடுங்காம போய்த் தூங்கு’

“எதுக்கு எரிச்சல் படறேள்? வாய் விட்டு சொன்னாத்தானே சல்யூஷன் சொல்லலாம்.”

அவளை எரிப்பது போலும் இழிவாகவும் இவன் பார்த்த பார்வை அவளை காயப்படுத்தியது. அப்படிப் பார்த்த பிறகு இவனையும் இவன் மனம் சாடியது. அவள் சொல்வது சரிதான்; ‘வதையும், வாதையுமான குணம் எனக்கு.’

“எனக்கு ஆப்பிள் க்ரீனும் தெரியும். பேரியம் நைட்ரேட்டின் ஃப்ளேமும் தெரியும். இன்னிக்கு உங்களுக்கு சி.பி.ஐயிலிருந்து வந்த நோட்டீசும் தெரியும்” என்றாள் ரமணி.

பளாரென கன்னத்தில் அறை வாங்கியது போல் இவன் உடல் அதிர்ந்தது. அவர்கள் தேன் நிலவில் நடந்த விஷயத்தை எத்தனை ஞாபகமாக இப்போ சொல்கிறாள்?

திருமணம் முடிந்த அன்றே அவர்கள் தேன் நிலவு பயணம். தனி கூபே அவளை நன்றாகப் படுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு இவன் தன் வேலையில் மூழ்கி விட்டான். ரமணிக்கு தானாகப் பேசவும் தயக்கம். ஆனாலும், மறுநாள் மாலையில் வெளியே போக இவன் அழைத்தபோது அவள் மகிழ்ந்து போனாள். நீலத்தகடு போன்ற ஏரியில் வண்ண வண்ண நிறப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைகளைக் கூடாரம் போல் தொங்கவிட்டிருந்த ஹனிமூன் படகுகள். ஏரியில் கரைகளிலிருந்தும் நீரூற்றிலிருந்தும் நலுங்கும் மின் சிதறல்கள். இனிமை இனிமையென மெருகூட்டிக்கொண்டெ மயக்கும் மாலை. அதற்குப் போட்டியாக மேற்கில் மறையும் கதிர்கள் மேகங்களில் எழுதும் காதல் கவிதைகள். வண்ண வண்ண நெசவுகள், நொடியில் நிறம் மாறும் கலவைகள். அப்பொழுதுதான் அவன் கேட்டான். ”அதோ, அந்த மேகத்தோட கலரை நீ என்னன்னு சொல்வ?”

அவள் சிரித்துக் கொண்டே ‘ஆப்பிள் க்ரீன்’ என்றாள்.

’நீஎன்ன கெமிஸ்ட்ரி எம்.ஃபில்? பேரியம் நைட்ரெட்ன்னு உனக்குத் தோண வேணாம்?’

”இயல்பா எல்லாரும் சொல்ற மாதிரிதானே நானும் சொன்னேன். பேச்சில எல்லாம் இப்படி வராது எனக்கு” என்றாள். அன்று இவன் அலட்சியமாக சிரித்த சிரிப்பு இன்றுவரை அவளுக்கு நெருஞ்சி முள். இன்று அதைப் பிடுங்கி இவனைக் குத்திவிட்டாள்.

இதைப் போல் எத்தனையோ? காயப்படுத்திய பிறகு தன்னை நினைத்து தானும் காயப்படுவான். இது என்ன வதம்? ஏன் அனைவரையும் சொல்லால் அடித்துக்கொண்டே இருக்கிறேன்? உன்னைவிட எனக்கு எல்லாம் தெரியும் என்று ஏன் உணர்த்திக்கொண்டே இருக்கிறேன்? நான் அப்படி மேம்பட்டவன் என்றால் இந்த கோர்ட் நோட்டீசுக்கு ஏன் உளைகிறேன்?

இவளை கரடியெனவே பயம் காட்டுகிறேன். அதன் இளிப்பை, முகச் சுளிப்பை சாமா போன்ற அண்டியவர்களிடம், தன் அறிவை வியக்கும் மேலதிகாரிகளிடம் ஆட்டுவிக்கும் கயிற்றையும் கொடுத்துவிட்டு அதை உணராத மௌடீகமாக மிதப்பில் நான் நடக்கும் நடப்பு.. அடேயப்பா! எல்லாவற்றிற்கும் தன்னையே சொல்லிக் கொள்வதில் இல்லை, தன்னையே கொல்வதில் மனிதனும், மிருகமுமாக… வாதை.

“உங்கள் மனம் கண்ணாடி போல் எனக்குத் தெரியறது. என்னை யாரும் குறை சொல்ல முடியாது என்ற உங்கள் மனப்பிம்பம் இன்று உடைந்துவிட்டது. நோட்டீசைவிட அதுதான் உங்களை பாதிக்கிறது. எம் பி எ கோல்ட் மெடலிஸ்ட் அதுவும் ஃபினான்ஸில் என்பதால் உங்கள் கிரெடிட் தீர்மானங்கள் தவறே ஆகாது என்ற ஆதர்சம் இன்று சிதைகிறது”

‘மேலே பேசாதே. நான் ரெகமண்ட் செய்தபடி நடந்திருந்தா இன்னிக்கு இந்த நோட்டீஸ் வர அவசியமில்லை.ஆனா, பாவிகள்…’

“உங்க பேர்ல தப்பு இல்லைன்னு எனக்குத் தெரியும். அதை க்ளியரா சொல்றதுக்கு வழி வகை செய்யணும் இப்பொ. அதை விட்டுட்டு சாப்பிடாம கொள்ளாம உக்காந்திருந்தா வந்த கடிதாசு இல்லன்னு ஆயிடுமா?”

‘என் காலம் பாத்தியா? உங்கிட்ட எல்லாம் பேச்சு கேக்க வேண்டியிருக்கு’

“விதி சேத்துப் போட்டிருக்கே! ஒண்ணு பண்ணுங்கோ! சாமி அலமாரி முன்னாடி நின்னு இவளை சீக்கிரம் அழைச்சுக்கோன்னு வேண்டிக்கோங்கோ. இதையும் கேட்டுட்டு ருத்ரம் ஆடலாம். நாளைக்கு காத்தால என் அண்ணா வரார். இந்த கோர்ட் சமாசாரமெல்லாம் பாக்கறத்துக்காக”

அவளை அப்படியே தரையில் சாய்த்து வதைக்க எழுந்தவன் அழுது கொண்டே அவளை அணைத்துக் கொண்டான். கரடிக்குப் பயந்த குழந்தை.

 

ஸ்ருதி பேதம்    

 பானுமதி. ந

கோடை காலம் தொடங்கப் போகிறது என்றாலும் இந்த இள மஞ்சள் மாலை வேளை சற்று குளிர்ச்சியாக இருந்தது. சந்தோஷ் தான் உடுத்தியிருந்த டி ஷர்ட்டையும், பர்முடாசையும் பார்த்துக்கொண்டான். நீலமும், வெண்மையுமான மேகங்கள் தலையில் மட்டும் செந்நிறம் கொண்டு விரைந்து கொண்டிருந்தன. ”என் பாட்டி இருக்கும் விண்ணகர் வரை நீங்கள் செல்வீர்கள்தானே. அவளிடம் சொல்லுங்கள்- அவள் அளித்த உடுப்பு இன்றும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது என”

அவள் தன்னை அவனாக அறிந்தது சிறு வயது முதலே. ஆனால் தெளிவில்லாமல் இருந்தது. திம்மாச்சிபுரத்தில் பாட்டியின் வீட்டில் பார்த்த அந்த ஆளுயரக் கண்ணாடி அவளை இரண்டெனக் காட்டியது. கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கையில் நிழல் கூத்து கட்டியது. தான் மறைந்து தான் தோன்றியதை பயத்துடன்தான் பார்த்தாள். இரண்டு எனக் காட்டி ஒன்றெனப் புரிந்தது அவளது பதினாங்காம் வயதில் தெளிவாயிற்று.

தன் ஏழாவது வயதில் சந்தியா அம்மா, அப்பா, அண்ணனுடன் திம்மாச்சிபுரத்திற்கு பாட்டி வீட்டிற்கு வந்தாள். அந்த ஊருக்கு அவர்கள் சென்ற நேரம் குளிர் காலம் போய் இள வேனில் அடியெடுத்து வைத்த நேரம். இந்தப் பருவங்களின் காலடி ஓசை என்பது இயற்கை மாற்றங்களில்தான் கேட்கிறது. மெதுமெதுவாக வந்து, சிறிது சிறிதாகப் பரிணமித்து பின் முழுதாக தன் கோலம் மட்டுமே காட்டும் பருவ மாறுதல்கள். ஆனால் அவை கால அளவுகளை ஒரு சீராகத்தான் பின்பற்றுமா என்ன? குளிரிலிருந்தும், முதுவேனிலிலிருந்தும் சிறிது களவாடிக்கொள்ளும் போலும்!

அவர்கள் பம்பாயிலிருந்து சென்னை வந்து பின்னர் திருச்சி வந்து அங்கிருந்து வாடகை காரில் திம்மாச்சிபுரம் வந்தனர். அம்மாவிற்கு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பிரார்த்தனை இருந்தது. வழியெங்கும் சிறு சிறு குளங்கள், அதன் கரையோரங்களில் பெரும் மரங்கள். அவை நீரின் மேலே கிளைகளைத் தாழவிட்டு வரையும் நிழல் ஒவியங்கள்- நீரலையில் காற்றலை செல்ல கலைந்து கூடும் சித்திரங்கள். இன்னதென்று புரியாத சந்தோஷமும், கிலியும் சந்தியாவிற்கு ஏற்பட்டது. அம்மா அவளை அவளைப் பார்த்துவிட்டு அப்பாவிடம் பழிப்பு காட்டினாள். அப்பா வழக்கமான அமைதியில்.

தாத்தா  வரவேற்றதே, “என்னடி, இப்படி ‘க்ளோஸ் கட்’ பண்ணிண்டிருக்கே” என்றுதான். ”சந்தீப் தலையப் பாருங்கோ, ஹிப்பி மாரி வச்சுண்டிருக்கான்” என்றாள் அவள். “அவன் புருஷக் கொழைந்தேடி. எப்படியும் இருப்பான்.” அம்மா மேலே பேசாதே என்று ஜாடை காட்டினாள். ”கட்டித் தங்கமே. பாட்டி உனக்குத்தான் ஸப்போர்ட். நீ உன் இஷ்டப்படி இருடி கொழந்தே” அன்றுதான் இந்த விதை முளை விட்டிருக்க வேண்டும். அங்கே இருந்த முப்பது நாட்களும் அவள் சந்தீப்பின் உடைகளை வேண்டுமென்றே அணிந்து கொண்டு தாத்தாவின் வாயில் விழுந்து புறப்பட்டுக் கொண்டேயிருந்தாள். எப்படியும் அவர்கள்தான் அமெரிக்கா போகப் போகிறார்களே- அப்ப இந்தத்  தாத்தா என்ன செய்வாராம்?

இன்று முப்பதாவது வயதில் கோடை தொடங்கும் பருவத்தில் இங்கே ந்யூயார்க்கில் தனிமையில் அமர்ந்திருக்கையில் அவனுக்கு பாட்டியும், அந்த ஊரும் நினைவில் கிளர்ந்தெழுந்தன. ஒரே ஒருமுறை பார்த்த ஊர், என்றுமே நினைவில்..

அவள் அதுவரை ’இருவாக்ஷி’ என்ற பூவைப் பார்த்ததேயில்லை. ஊருக்கு வந்த மறுநாள் இளங்காலைப் பொழுதில் வந்த அந்த வாசம். அவள் அரவமே செய்யாமல் தோட்டத்திற்கு வந்தாள். செடிகளில் முளைத்த நட்சத்திரங்களென அவை மின்னின. இருளுமில்லை, ஒளியுமில்லை என இரண்டும் சந்திக்கும் மாலையை அவள் அறிவாள். ஜூஹூ பீச்சை பார்த்திருக்கும் அவர்களது பம்பாய் வீட்டில் அதை அவள் பார்த்துக் கொண்டேயிருப்பாள். ஆனால், இரவும், பகலும் சந்திக்கும் இந்தக் காலை-இதுதான் நான் மலரும் வேளை என வாசம் வீசும் இருவாக்ஷி. பாட்டி  வீடு இத்தனை அழகா?

அந்தக் கிராமத்தில் அவர்கள் தோட்டத்து வீட்டில் பெரிய வட்ட வடிவமான கிணறு. உள்ளே இறங்க படிக்கட்டுகள், தண்ணீர் இறைக்க ராட்டினம், அந்த தாம்புக் கயிறும் அதன் முடிவில் கட்டப்பட்டுள்ள தோண்டியும், பாட்டி மடிசார் கட்டிக் கொண்டு அதில் பூஜைக்கெனவும், குடிப்பதற்கெனவும் சுமக்கும் குடங்களும் அவளை வியப்பில் ஆழ்த்தின. குளிப்பதற்கென மோட்டார் கனெக்க்ஷன் வேறு இருந்தது. அவள் நீந்தத்தான் ஆசைப்பட்டாள். அந்தக் கிணற்றிலே ஐந்து நாட்களில் அவள் டைவ் அடிக்கக் கற்றுக் கொண்டுவிட்டாள்.

“நடராஜா, இந்தப் பொண்ணு இங்கியே இப்டி ஆம்பிளைத்தனமா இருக்கேடா. அமரிக்காவுல எப்படி ஆகப் போறதோ?” அப்பா என்றைக்கு பதில் சொல்லியிருக்கிறார் இன்று சொல்ல? தாத்தாவைப் போல் ஏன் பாட்டி அந்த வீட்டில் ஒரு முக்கிய ஆளாக இல்லை? அவள் பச்சைக்குதிரை தாண்டினாள். கபடி ஆடினாள். கிட்டிப்புள் அடிக்கக் கற்றுக் கொண்டாள். பெண்கள் விளையாட்டில் அவளுக்குப் பிடித்ததே ஏழாங்கல் மட்டும்தான்.

அவர்களின் குலதெய்வக் கோயிலில்கூட தாத்தாவிற்குத்தான் பரிவட்டம் கட்டினார்கள். அப்பாவிற்கு மாலை போட்டார்கள், சந்தீப்பிற்கு குட்டி மாலை. ’எனக்கு’ என்றாள் சந்தியா. ”நிக்கர் போட்டுண்டா நீ என் வம்சமாயிடுவியாடி?” என்றார் தாத்தா. பாட்டி அதற்குள் தன் கழுத்தில் இருந்து முத்துமாலையைக் கழற்றி, “நோக்கு வாடாத மாலை, சந்தியா,” என்று அவள் கழுத்தில் போட்டுவிட்டாள். அம்மாவிற்கு கண்ணைக் கண்ணை உருட்டுவதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது.

அவள் காற்றாகச் சுற்றினாள். மிகப் பெரிய விடுதலையை உணர்ந்தாள். அன்றைய தன் நிலைக்கு இன்றைய வார்த்தைகள்! உள்ளுணர்வு அறிவிக்காமல் இருப்பதில்லை எதையும். ஆனால், அப்பட்டமாகப் புரிந்து கொள்ள முடியுமா?

“சந்தியா, நீ கேட்டுண்ட்ருக்கியே, அந்த ரூமை இப்ப திறக்கப் போறேன்”. பாட்டி அவளை அழைத்துச் சென்ற அறை அவ்வளவு பெரியது. சுவர் முழுதும் அவள் பார்த்திருந்த ஸ்வாமி படங்களைத் தவிர பல படங்கள்; இரு வேறு உடல் பகுதிகள் இணைக்கப்பட்ட வண்ண ஓவியங்கள், சிறகு முளைத்த தேவதைகள், வீணை வடிவான பெண் மிக அழகாக இருந்தாள். பாட்டி சொல்லி அர்ச்சுனன் பெண்ணான கதையைக் கேட்டாள். அந்த மாறுதலை மழுப்பிய வண்ணங்களோடு வரைந்திருந்தார்கள். அன்று பாட்டி ‘ஹைமவதி’யைப் பற்றிச் சொன்னது புரியவில்லை. ஆனால், அந்த ஓவியம் இன்றும் கண்முன் எழுகிறது. இவை தவிர கல்யாணப் புகைப்படங்கள் இருந்தன.

“பாட்டி, உன் கல்யாண போட்டோ இருக்கா. இந்தத் தாத்தா அப்பயும் இப்படித்தான்  வெஞ்சுண்டே இருந்தாரா?” என்றாள் சந்தியா. ”போட்டோ இல்லடி. ஆனா ரெண்டு டிரெஸ் இருக்கு. அந்தப் பெட்டிக்குள்ள வச்சிருக்கேன் பாரு.”

பாட்டி காண்பித்த நீல நிற கால் சராயும், பட்டு மஞ்சள் மேல்சட்டையும் பொன்னிறப் பூ இழைகளால் சந்தியாவை அப்படிக் கவர்ந்தன. இதோ இதையும் பாரு, என்று பாட்டி காண்பித்தது அதே நீல நிறத்தில் பட்டுப் பாவாடையும், மஞ்சள் நிற ஜாக்கெட்டுமாக அதை விடச் சற்றுப் பெரியதாக இருந்தது. ”பாட்டி, ரெண்டுமே இவ்ளோ சின்னதா இருக்கே. ஏன் இன்னும் வச்சுண்டிருக்கே?”

“உனக்காத்தான் சந்தியா. நேக்கு கல்யாணம் ஆறச்சே உன் வயசு. அப்ப மட்டும் இல்லடி, இப்பக்கூட கல்யாணத்தை சரியா புரிஞ்சுக்க முடியல்லே. எங்களுக்கு நாலு நாள் கல்யாணம். அப்போ மூணாம் நா சாயங்காலமா ‘அம்மான் ஊர்வலம்’னு ஒன்னு நடந்தது. அன்னிக்கு ரெட்டக் குதிர சாரட்டுல, பேண்டு, நாதசுரம், வாண வேடிக்கையோட பொண்ணு, மாப்ளயை ஊர்வலமா அழைப்பா. அப்போ, பெண்ணுக்கு ஆண் டிரெஸ், ஆணுக்கு பெண் டிரெஸ். நானும், உன் தாத்தாவும் சின்னவாதானே. நேக்கு ஆண்கள் டிரெஸ் பொருத்தமா இருந்ததாம். அவரும் சில்லாட்டமா இருப்பார் அப்போ. சீதைக்கும், ராமனுக்கும் அப்படி ஒரு ஊர்கோலம் நடந்ததாம்.’

“பாட்டி, ஸ்வாரஸ்யமாயிருக்கு. அம்மாவுக்கு இதெல்லாம் தெரில்ல போலிருக்கு. அப்பாகிட்ட கதை கேட்டா காக்கா வடை திருடின கதை மட்டும்தான் சொல்றா”

“இத்தனை நாள் காப்பாத்தியாச்சு, நோக்கு இரண்டையும் தரென், இனிமே இது உனக்குத்தான்”

யாருக்கும் புரியாத அவனை, அவனுக்கே தெளிவில்லாத அவனை, பாட்டி எப்படி அறிந்தாள்? பாட்டி தந்த உடுப்புகளை உடனே தொட்டுத் தடவ அவனுக்கு ஆசை வந்தது.