மாயக்கூத்தன்

வண்ணக்கழுத்து 11: கூடல்

மாயக்கூத்தன்

வண்ணக்கழுத்தின் காயங்கள் மெல்ல ஆறின. பிப்ரவரி மாத மத்தி வரை அவனால் கூரைக்கு மேல் பத்து கஜம் தூரம் கூடப் பறக்க முடியவில்லை. அவன் பறக்கும் நேரம் கூட மிகக் குறைந்துவிட்டது. எத்தனை முறை திரும்பத் திரும்ப கூரையிலிருந்து அவனை விரட்டினாலும், என்னால் அவனை கால் மணிநேரத்திற்கு மேல் வானில் பறக்க வைக்க முடியவில்லை. முதலில் அவனுடைய நுரையீரல்தான் சரியாக வேலை செய்யவில்லை என்று நினைத்தேன். சோதித்துப் பார்த்ததில் நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பது தெளிவானது. பிறகு, அவனுடைய இருதயத்தில் பிரச்சனை இருக்கலாம் என்று நினைத்தேன். ஒருவேளை நடந்த விபத்தில் இருதயம் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். இரண்டாவது சோதனையில் அந்த அனுமானமும் தவறு என்பது தெளிவானது.

ஆக, வண்ணக்கழுத்தின் நடத்தையில் கடுமையாக எரிச்சலடைந்து, நடந்த எல்லாவற்றையும் விவரித்து கோண்டுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். அவரோ சில ஆங்கிலேயர்களோடு வேட்டைச் சுற்றுலா போயிருந்திருக்கிறார். அவரிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்பதால், நானே என் புறாவை மிக கவனமாக ஆராய முடிவு செய்தேன். ஒவ்வொரு நாளும் அவனை எங்கள் மாடியின் மீது ஏற்றுவிட்டு பார்த்துக் கொண்டிருப்பேன். ஆனால் அவனுக்கு என்ன பிரச்சனை என்பதைப் பற்றி ஒரு துப்பும் கிடைக்கவில்லை. அவன் மீண்டும் பறப்பான் என்ற நம்பிக்கையை முழுவதுமாக நான் இழந்துவிட்டேன்.

பிப்ரவரி மாத கடைசியில், அடர்ந்த காட்டின் உட்பகுதியிலிருக்கும் கோண்டிடமிருந்து எனக்கு சுருக்கமாய் ஒரு குறிப்பு வந்தது. ”உன் புறா பயந்து போய்க் கிடக்கிறது. அவனுடைய பயத்தைக் குணப்படுத்து. அவனைப் பறக்கவை.” என்று எழுதியிருந்தது. ஆனால் அவர், எப்படி என்பதைச் சொல்லவில்லை. அவனை இன்னும் உயரமாகப் பறக்கவைக்க என்னாலும் எதுவும் செய்ய முடியவில்லை. அவனைக் கூரையிலிருந்து விரட்டுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. நான் ஒரு மூலையிலிருந்து விரட்டினால், அவன் பறந்து போய் இன்னொரு மூலையில் உட்கார்ந்து கொண்டான். மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், மேகத்தின் நிழலோ, வானத்தில் பறக்கும் பறவைக் கூட்டத்தின் நிழலோ அவன் மீது விழுந்தால் அவன் பதற்றத்தில் நடுங்கினான். தன் மீது விழும் எந்த ஒரு நிழலையும், தன் மீது பாயந்து வரும் ராஜாளி என்றே அவன் நினைத்துக் கொண்டான். அவன் எவ்வளவு மோசமாக நிலை குலைந்திருக்கிறான் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவனை அவனுடைய பயத்திலிருந்து மீட்பது எப்படி என்பது என்னை இன்னும் திணறச் செய்தது. நாங்கள் இமாலயத்தில் இருந்திருந்தால், அவனை முன்பொருமுறை குணப்படுத்திய லாமாவிடம் கொண்டு போயிருப்பேன். ஆனால், இந்த நகரத்தில் லாமா இல்லை. நான் காத்திருக்க வேண்டியதாயிற்று.

மார்ச் மாதம் வசந்த காலத்தை அழைத்து வந்தது. வழக்கத்துக்கும் அதிகமான ரோமங்கள் உதிர்ந்து மீண்டும் முளைத்திருந்த வண்ணக்கழுத்து, ஒரு பெரிய அடர்ந்த கருநீலப்பச்சைக் கல்லின் மையத்தைப் போல இருந்தான். விவரிக்க முடியாத அளவிற்கு அவன் அழகாயிருந்தான். எப்படி என்று தெரியவில்லை ஆனால் ஒருநாள், அவன் ஜகோரேவின் மனைவியுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். வசந்த காலம் தொடங்கியிருக்க, அவள் மிகவும் பிரகாசமாக இருந்தாள். அவளுடைய கருவண்ண மாணிக்கக்கல் மாதிரியான நிறம் சூரிய ஒளியில், நட்சத்திரங்கள் ஒளிரும் வெப்பமண்டல இரவு போல இருந்தது. இவளும் வண்ணக்கழுத்தும் கூடுவது இவர்களுடைய பிள்ளைகளுக்கு நல்லதில்லை என்பதை நான் அறிந்திருந்தாலும், அது அவனுடைய பயத்தைப் போக்கக் கூடும் என்று நினைத்தேன். மேலும், ஜகோரே இறந்த பின்னர் அவளிடம் வளர்ந்திருக்கும் கடுகடுப்பிலிருந்து அவளை விடுபட வைக்கும் என்றும் நினைத்தேன்.

அவர்கள் இரண்டு பேரின் நட்பை மேலும் வளர்க்க, இரண்டு பேரையும் ஒரே கூண்டில் போட்டு, இருநூறு மைல்களுக்கு அப்பால் ஒரு காட்டின் முனையில் வாழும் என் நண்பன் ரட்ஜாவிடம் கொண்டு சென்றேன். அவனுடைய கிராமத்தின் பெயர் காட்சிலா. அந்தக் கிராமம் ஒரு நதிக்கரையில் இருந்தது. நதிக்கு அந்தப்புறம் அடர்ந்த காடுகளும் அனைத்து வகை மிருகங்களும் கொண்ட உயர்ந்த குன்றுகள் இருந்தன. ரட்ஜா அந்த ஊரின் பூசாரி. அவனுடைய முன்னோர்கள் பத்து நூற்றாண்டுகளாக தொடர்ந்து பூசாரிகளாக இருந்திருக்கிறார்கள். அவன் அந்த ஊரின் பூசாரி என்பதால், அவனும் அவனுடைய பெற்றோரும் ஒரு பெரிய கான்கிரீட் கட்டிடத்தில் குடியமர்த்தப்பட்டிருந்தார்கள். கான்கிரீட்டால் கட்டப்பட்ட அந்தக் கிராமத்தின் கோவில், இவர்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இருந்தது. உயரமான சுவர்களால் சூழப்பட்ட அந்தக் கோவிலின் முற்றத்தில், ஒவ்வொரு இரவும், வேதங்களை வாசித்து அவற்றை அங்கு கூடியிருக்கும் குடியானவர்களுக்கு விளக்கும் கடமையை ரட்ஜா செய்து வந்தான். உள்ளே அவன் சத்தமாக வாசித்துக் கொண்டிருக்கையில், வெளியே தூரத்திலிருக்கும் குறுகிய நதியின் பக்கத்திலிருந்து புலியின் உறுமலோ யானையின் பிளிறலோ கேட்கும். அது அழகிய, ஆனால் அச்சுறுத்தும் இடம். காட்சிலா கிராமத்தில் ஆபத்தான விஷயம் எதுவும் நடக்கவில்லை தான். ஆனால், நமக்கு வேண்டாத வேட்டை விலங்கினங்களை எதிர்கொள்ள அதிக தூரம் செல்ல வேண்டியதில்லை.

நான் வந்த ரயில், இரவில் காட்சிலாவை அடைந்தது. ரட்ஜாவும் அவர்கள் வீட்டு வேலையாட்கள் இருவரும் என்னை அழைத்துப் போக ரயில் நிலையம் வந்திருந்தார்கள். ஒருவர் என்னுடைய பொதியை வாங்கி தன் தோளில் போட்டுக் கொண்டார். மற்றொருவர் இரண்டு புறாக்களும் இருந்த கூண்டை வாங்கிக் கொண்டார். நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு அரிக்கேன் விளக்கை ஏந்திக் கொள்ள வேண்டிருந்தது. எனக்காக ஒரு விளக்கை கொண்டு வந்திருந்தார்கள். ஒரு வேலையாள் முன்னால் போக, இன்னொருவர் பின்னால் வர நாங்கள் ஒற்றை வரிசையில் ஒரு மணிநேரம் நடந்தோம். எனக்கு சந்தேகங்கள் எழுந்தன. “நாம் ஏன் இப்படிச் சுற்றிப் போகிறோம்?” என்றேன்.

“வசந்த காலத்தில் வடக்கே போகும் மிருகங்கள் இந்த வழியைக் கடக்கும். காட்டுக்குள் குறுக்கு வழியில் எல்லாம் போக முடியாது” என்றான் ரட்ஜா.

”சுத்த அபத்தம். எத்தனையோ தடவை நான் போயிருக்கிறேன். எத்தனை மணிக்குத்தான் வீடு போய்ச் சேர்வோம்?” என்றேன் நான்.

“இன்னும் அரை மணியில்…”

பிறகு, எங்கள் காலடியில் பூமி பிளந்து எரிமலையாய் ஏப்பம் விட்டது போல ஒரு பயங்கர சத்தம். “ஹோய், ஹோ ஹோ ஹோ ஹோய்!” என்று கூக்குரல்.

பயத்தில் புறாக்கள் கூண்டுக்குள் தங்கள் இறக்கைகளை அடித்துக் கொண்டன. சும்மா இருந்த கையால் ரட்ஜாவின் தோளைப் பற்றிக் கொண்டேன். ஆனால், அவனோ என் உணர்வைப் புரிந்து கொள்ளாமல் சத்தம் போட்டு சிரித்தான். எஜமானைப் போலவே வேலையாட்கள், அவர்களும் சிரித்தார்கள்.

அவர்களுடைய களிப்பு அடங்கியவுடன், ”எத்தனையோ முறை போயிருக்கிறாயா? அப்படியா? பிறகு ஏன் விளக்கொளியைக் கண்டு பயப்படும் குரங்குகளின் அலறலுக்கு பயப்படுகிறாய்?” என்றான் ரட்ஜா.

”குரங்கா?” என்றேன்.

“ஆமாம். நிறைய குரங்குகள் இந்த சமயத்தில் வடக்கு நோக்கிப் போகும். நம் தலைக்கு மேலிருந்த மொத்த கூட்டமும் நம்மைக் கண்டு பயந்துவிட்டது. அவ்வளவு தான். இனிமேல் குரங்குச் சத்தத்தைப் புலியின் உறுமல் என்று நினைத்துக் கொள்ளாதே.”

அதிர்ஷ்டவசமாக, என் மரியாதைக்கு மேற்கொண்டு பங்கம் வருவதற்கு முன் விரைவாக நாங்கள் வீட்டை அடைந்துவிட்டோம்.

அடுத்த நாள் காலை, ரட்ஜா தன் கடமையை நிறைவேற்ற அவர்களுடைய கோவிலுக்குச் சென்றான். நான் கூரைக்குச் சென்று என்னுடைய பறவைகளை திறந்துவிட்டேன். முதலில் அவை குழம்பிப்போயின. ஆனால், கையில் நெய்க் கடலைகளோடு என்னை அருகில் பார்த்த பின்னர், அவை எந்தத் தயக்கமும் இல்லாமல் காலை உணவை எடுத்துக் கொண்டன. கிட்டத்தட்ட அந்த நாள் முழுக்க நாங்கள் கூரையில் செலவிட்டோம். புதிய இடத்தின் சூழல் அவற்றை பதற்றம் கொள்ளச் செய்யும் என்பதால் அவர்களை தனியே விட்டுவிட்டுப் போக நான் விரும்பவில்லை.

தொடர்ந்த ஒருவாரத்தில், இரண்டு புறாக்களும் காட்சிலாவிக்கு தங்களை பழக்கிக் கொண்டுவிட்டன. மேலும், ஒன்றோடு ஒன்று மிக நெருக்கமாகவும் ஆகிவிட்டன. நான் புத்திசாலித்தனமாகத்தான் இவ்விரண்டையும் மற்ற புறாக்களிடமிருந்து விலக்கிக் கொண்டுவந்திருக்கிறேன் என்பதில் இப்போது எந்தச் சந்தேகமும் இல்லை. நாங்கள் அங்கு வந்த எட்டாவது நாள் வண்ணக்கழுத்து, தன் பெடையைத் தொடர்ந்து பறந்து செல்வதைக் கண்டு நானும் ரட்ஜாவும் ஆச்சரியப்பட்டோம். அவள் தாழ்வாகப் பறந்து போனாள். வண்ணக்கழுத்து பின் தொடர்ந்தான். அவன் அவளை நெருங்குவதைக் கண்டு, அவள் உயர்ந்து திரும்பிப் பறந்தாள். அவனும் அப்படியே செய்து, அவளைப் பின் தொடர்ந்தான். அவள் மீண்டும் உயர்ந்தாள். இந்த முறை அவன் பின் வாங்கினான். அவளுக்கு கீழே காற்றில் வட்டமிடத் துவங்கினான். ஆனாலும், அவன் தன் தன்னம்பிக்கையை மீண்டும் அடைவதை நான் உணர்ந்தேன். கடைசியில் புறாக்களுக்கே எடுத்துக்காட்டாகத் திகழும் வண்ணக்கழுத்து பறப்பதில் தனக்கிருக்கும் பயத்திலிருந்தும் திகிலிலிருந்தும் தன்னை குணப்படுத்திக் கொள்கிறான். மீண்டும் அவன் காற்றை தனதாக உணர்ந்தான்.

அடுத்த நாள் காலை அவர்கள் இருவரும் உயரப் பறந்து ஒருவரோடு ஒருவர் விளையாடினார்கள். வண்ணக்கழுத்து மீண்டும் அவளோடு போகாமல், அவசர அவசரமாய் கீழே வந்து அவளுக்குக் கீழ் வட்டமடித்தான். எனக்கு குழப்பமாக இருந்தது. ஆனால், கூர்மையான ரட்ஜா எனக்கு விளக்கினான். “காற்றாடியைப் போல பெரிய மேகம் ஒன்று சூரியனை மறைத்திருக்கிறது. அதன் நிழல் விழ, வண்ணக்கழுத்து அதை தனது எதிரி என்று நினைத்துக் கொண்டுவிட்டான். மேகம் விலகும் வரை காத்திரு, பின்னர் பார்” என்றான்.

ரட்ஜா சொன்னது சரிதான். சில நொடிகளில் சூரியன் வெளிவந்து, அதன் பிரகாசத்தில் வண்ணக்கழுத்தின் இறக்கைகள் ஒளிர்ந்தன. அவன் கீழே இறங்குவதை நிறுத்திவிட்டு, காற்றில் வட்டமடிக்கத் துவங்கினான். அவனுக்குத் துணையாக இருக்க கீழே இறங்கிக் கொண்டிருந்த அவனுடைய துணையோ, நூறு அடிக்கு மேலே நின்று அவனுக்காக காத்திருந்தாள். இப்போது வண்ணக்கழுத்து, கூண்டிலிருந்து விடுவிக்கப்பட்ட கழுகு போலே வேகமாக இறக்கையை அடித்து மேலே உயர்ந்தான். அவன் திசையைத் திருப்பி மேலே மேலே பறக்க சூரிய ஒளி அவனைச் சுற்றில் வண்ணக்குளத்தை உண்டாக்கியது. சீக்கிரமே பின் தொடர்வதை விட்டுவிட்டு, தன் பெடையை வழி நடத்தினான். அவர்கள் வானத்தில் ஏறினார்கள். அவனுடைய பயம் முழுக்க விலகிவிட்டிருந்தது. அவனுடைய சுறுசுறுப்பாலும் சக்தியாலும் அவள் ஈர்க்கப்பட்டாள்.

அடுத்த நாள் காலை இருவரும் சீக்கிரமே கிளம்பினார்கள். அவர்கள் நீண்ட தூரமும் அதிக நேரமும் பறந்தார்கள். மலையுச்சிகளைத் தாண்டி அதற்கப்பால் கீழே சென்றது போல, அவர்கள் கொஞ்ச நேரம் மலைகளுக்குப் பின்னால் காணாமல் போனார்கள். குறைந்தது ஒரு மணிநேரமாவது அங்கே இருந்திருப்பார்கள்.

கடைசியில் பதினோரு மணி சுமாருக்கு, ஒவ்வொருவர் அலகிலும் ஒரு பெரிய வைக்கோலோடு அவர்கள் வீடு திரும்பினார்கள். முட்டையிடுவதற்காக அவர்கள் கூடு கட்டப் போகிறார்கள். அவர்களை வீட்டுக்கு கொண்டு போய்விடலாம் என்று நான் நினைத்தேன். ஆனால், ரட்ஜா நாங்கள் மேலும் ஒரு வாரமாவது இருக்க வேண்டுமென்று வற்புறுத்தினான்.

கடைசி வாரத்தின் ஒவ்வொரு நாளும் நதிக்கு அந்தப்பக்கம் இருக்கும் ஆபத்தான காட்டில் நாங்கள் சில மணிநேரம் செலவிட்டோம். இரண்டு புறாக்களையும் எடுத்துக் கொண்டு போய், ரட்ஜாவின் வீட்டிலிருந்து ஐந்து மைல் தொலைவிலிருக்கும் அடர்ந்த காட்டில் விடுவதற்காகத் தான் இந்தக் காட்டுப் பயணம். வண்ணக்கழுத்து எல்லாவற்றையும் மறந்துவிட்டு தன்னுடைய திசையறிவை சோதித்துக் கொண்டு, உயர உயரப் பறந்தான். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், தன் துணை மீதான அன்பும், புதிய இடமும் வானிலையும் அவனை பயமென்னும் நோயிலிருந்து குணப்படுத்தி விட்டன.

நம்முடைய எல்லா துன்பங்களுமே பயத்தினாலும், கவலையினாலும் வெறுப்பினாலுமே வருகின்றன என்பதை இங்கு பதிவு செய்தாக வேண்டும்.. எவனொருவனை இந்த மூன்றில் ஒன்று பற்றிக் கொண்டாலும் மீதி இரண்டும் தானாகச் சேர்ந்துவிடும். எந்தவொரு விலங்கும் தன்னுடைய இரையை முதலில் அச்சுறுத்தாமல் கொல்ல முடியாது. எந்தவொரு விலங்கும் தன்னுடைய எதிரி குறித்த பீதி பீடிக்கப்படாமல் அழிவதில்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால், எதிரியின் இறுதி தாக்குதலுக்கு முன்பே ஒரு விலங்கின் பயம் அதைக் கொன்றுவிடுகிறது.

(தொடரும்…)

வண்ணக்கழுத்து 10ஆ: தொடரும் போர்ப்பயிற்சி

இப்போது திடீரென்று பல வீடுகளின் மாடியிலிருந்துவண்ணக்கழுத்து! வண்ணக்கழுத்து! வண்ணக்கழுத்து!’ என்ற கூச்சல் எழுந்தது. புறா விரும்பிகள் பலர் அவனுடைய பெயரைக் கூவிக் கொண்டிருந்தார்கள். இப்போது என்னால் கொஞ்சம் கூடப் பிழையில்லாமல் காண முடிந்தது. தலைவர்களுள் தலைவனாய் என்னுடைய புறா ஒரு பெரிய கூட்டத்தின் முன்னின்று, அவர்களுடைய பயணத்தை வழிநடத்தியது. எத்தனை பெருமிதமான தருணம் அது! அவன் அவர்களை இந்த அடிவானத்திலிருந்து அந்த அடிவானம் நோக்கி வழிநடத்தினான். ஒவ்வொரு முறையும் புறாக்கள் சீரான இடைவெளையில் சில அடிகள் மேலே உயர்ந்தன. காலை எட்டு மணியளவில் வானத்தின் எந்த மூலையிலும் ஒரு புறாவைக்கூட காணமுடியவில்லை. இப்போது எங்கள் கொடிகளை சுருட்டிவைத்துவிட்டு, பாடங்களைப் படிக்க கீழே சென்றுவிட்டோம். மதியம் நாங்கள் மீண்டும் மாடிக்குச் சென்றபோது, புறாக்கூட்டம் மொத்தமாக இறங்குவதை அனைவராலும் பார்க்க முடிந்தது. வண்ணக்கழுத்துதான் இன்னமும் வழிநடத்திக் கொண்டிருந்தான். மறுபடியும்வண்ணக்கழுத்து! வண்ணக்கழுத்து! வண்ணக்கழுத்து!” என்ற சத்தம் உயர்ந்தது. புறாக்களுக்கு தலைவனாக நான்கு மணிநேரத்திற்கு மேல் நிலைத்திருந்ததால், அவன் பரிசை வென்றான். மேலே சென்றது போலவே கீழே இறங்கிக் கொண்டிருந்தான் அவன்- இப்போது தலைவன்!

பறப்பதன் அபாயகரமாக நிகழ்வு இப்போது வந்தது. அந்தப் பெரிய  கூட்டத்தின் தளபதி கலைந்துச் செல்ல ஆணையிட்டான். பெரிய கூட்டத்திலிருந்து ஒவ்வொரு கூட்டமாகப்  பிரிந்து, தங்கள் வீடு நோக்கிச் சென்றன. ஆனால், மிக வேகமாகச் செல்லவில்லை. அவர்கள் வீடு நோக்கிச் செல்லும்போது, அவர்களுக்கு மேலே வானத்தில் யாராவது காவல் காக்க வேண்டும். மற்ற போட்டியாளர்களின் புறாக்கள் கீழிறங்க, அவர்களைப் பின்னிருந்து காவல்காக்க, வண்ணக்கழுத்து என்னுடைய சிறிய புறாக்கூட்டத்தை ஒரு குடையாய் வியூகம் அமைத்து நிறுத்தினான். இதுதான் தலைமைக்குக் கொடுக்கும் விலை. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் தியாகம்.

ஆனால், இப்போது கோரமான முடிவொன்று துவங்கியது. இந்தியாவில் குளிர்காலங்களில், பெரும்பருந்து இனத்தில் ஒன்றான ராஜாளி தெற்குப் பக்கம் வரும். அவை இறந்த மிருகங்களின் இறைச்சியை உண்ணாது. கழுகையும் பருந்தையும் போல, ராஜாளியும் தான் தன் நகங்களால் கொன்றதை மட்டுமே உண்ணும். அவை மோசமானவை, கபடம் நிறைந்தவை. கழுகுகளில் கொஞ்சம் தாழ்வானவை என்று நினைக்கிறேன். அவற்றின் இறக்கைகள் ஓரத்தில் கிழிந்திருக்காது என்றாலும், அவை பருந்தைப் போல இருக்கும். ஜோடியாக பருந்துக் கூட்டத்திற்கு கொஞ்சம் மேலே பறக்கும். இதனால், இவற்றின் இரையின் பார்வையிலிருந்து தப்பித்துவிடும். ராஜாளிகள் தங்கள் இரையைப் பார்க்க முடியும். ஆனால், இரைகளால் அவற்றை பார்க்க முடியாது.

வண்ணக்கழுத்து தலைமைக்கான போட்டியில் வென்ற சற்று நேரத்தில், பருந்துக் கூட்டத்திற்கு மேலே ஒரு ராஜாளி ஜோடி பறந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்த நொடியிலேயே, விரல்களை என் வாயில் வைத்து கிறீச்சென்று சீட்டியடித்தேன். வண்ணக்கழுத்து என்னுடைய சமிக்ஞையைப் புரிந்து கொண்டான். தான் மையத்தில் நின்று கொண்டு, மற்றவர்களின் இடத்தை மாற்றியமைத்தான். இப்போது அந்தக் கூட்டம் ஒரு பிறையைப் போன்ற வடிவத்தில் பறந்து கொண்டிருந்தது. ஜகோரேவையும் ஹிராவையும் பிறையின் இரண்டு முனைகளை பார்த்துக் கொள்ளப் பணித்தான். மொத்த கூட்டமும் ஒரு பெரிய பறவையைப் போல ஒன்றாகப் பறந்தன. வேக வேகமாக கீழே இறங்கத் துவங்கின. அவை எதற்காக வானத்தில் ஏறினவோ அந்த வேலை இப்போது  முடிந்திருந்தது. அவர்களோடு காலையில் விளையாடிக் கொண்டிருந்த புறாக்கூட்டங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றுவிட்டன.

இவை வேகமாக இறங்குவதைக் கண்டு ஒரு ராஜாளி, இமாலய விளிம்பிலிருந்து விழும் பாறை போல அவர்கள் முன்னால் விழுந்ததுஎன் பறவைகள் இருக்கும் நிலைக்கு வந்தவுடன் தன்னுடைய இறக்கையை விரித்து அவர்களை நேருக்கு நேர் எதிர் கொண்டது. இதுவொன்றும் புதிதல்ல. ஒவ்வொரு ராஜாளியும் புறாக் கூட்டத்தைப் பயமுறுத்த இதையே செய்து வந்திருக்கிறது. அதில் பதினொன்றுக்கு பத்து முறை வெற்றியும் பெற்றுவிடும் என்பதை மறுக்க முடியாது. அவை புறாக்களின் முன்னால் வரும் போது, புறாக்கள் தங்கள் உறுதி இழந்து, பீதியில் ஓர் ஒழுங்கில்லாமல் எல்லாத் திசைகளிலும் பறக்கும். இப்போதும், அந்த ராஜாளி அதைத்தான் எதிர்பார்த்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தந்திரமான நம் வண்ணக்கழுத்து, கொஞ்சம் கூட அசராமல், இறகுகளை அடித்துக் கொண்டு, மொத்த கூட்டத்தையும் எதிரிக்கு ஐந்தடிக்குக் கீழே பறக்கச் செய்தது. எதிரி ஒருபோதும் ஒற்றுமையாக இருக்கும் கூட்டத்தை தாக்காது என்பதை அறிந்தே அவன் இப்படிச் செய்தான். ஆனால் அவன் சில நூறு அடிகள் பறந்திருக்க, இரண்டாவது ராஜாளி, பெண் ராஜாளியாக இருக்கலாம், புறாக்களின் முன்னால் விழுந்து தன் கணவனைப் போலவே இறக்கையை விரித்தது. ஆனால், வண்ணக்கழுத்து கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை. மொத்த கூட்டத்தையும் அந்த ராஜாளியை நோக்கி நேராகச் செலுத்தியது. இதை நினைத்துப்  பார்க்கவும் முடியாது. எந்தப் புறாவும் இதுவரை இது போலச் செய்யத் துணிந்ததில்லை. பெண் ராஜாளி, பறந்து ஓடிவிட்டது. அது கொஞ்சம் திரும்பியிருக்கும், உடனே வண்ணக்கழுத்தும் மற்ற புறாக்களும் தங்களால் முடிந்த அளவுக்கு வேகமாக கீழே இறங்கின. எங்கள் கூரைக்கு மேலே அறநூறு அடிக்குக்குப் பக்கத்தில் அவை வந்துவிட்டன. ஆனால் விதி. ராஜாளி வடிவில் ஒரு ஒரு வெடிகுண்டைப் போல மீண்டும் விழுந்தது. இந்த முறை பிறை வடிவத்திற்கு நடுமத்தியில் விழுந்து, தன் இறக்கைகளையும் அலகையும் தீப்பொறிகள் போல விரித்தது. கூடவே அலறலும் கிறீச்சிடுதலும். இது தாக்கத்தை ஏற்படுத்தியது. உறுதியான ஒரே கூட்டமாக இருந்த புறாக்கள் இப்போது இரண்டு பாகமாகப் பிரிந்துவிட்டன. ஒரு பாதி வண்ணக்கழுத்தைப் பின் தொடர்ந்ததுஇன்னொரு பாதி பயத்தால் பீடிக்கப்பட்டு எங்கெங்கோ பறந்தது. ஒரு நல்ல தலைவன் ஆபத்துக் காலத்தில் என்ன செய்வானோ, அதை வண்ணக்கழுத்து செய்தான். பயத்தால் சிதறிய கூட்டத்தைப் பின் தொடர்ந்து, அதை முந்திச் சென்று, மீண்டும் இரண்டு பாதியையும் ஒரு பெரிய கூட்டமாக இணைத்துக்கொண்டான்.

இப்போது பெண் ராஜாளியின் முறை. இரண்டு பாதியும் இணைந்த சற்று நேரத்திற்கெல்லாம் பெண் ராஜாளி வண்ணக்கழுத்திற்கும் மற்ற புறாக்களுக்கும் நடுவே விழுந்தது. கிட்டத்தட்ட அவன் வால் மேலேயே விழுந்து, அவனையும் மற்ற புறாக்களையும் பிரித்துவிட்டது. தங்களுடைய வழிகாட்டியை இழந்த புறாக்கள், எதையும் கணக்கில் கொள்ளாமல் பாதுகாப்பைத் தேடிப் பறந்தன. எந்தப் பக்கத்திலிருந்தும் தாக்கக் கூடிய வகையில் வண்ணக்கழுத்து தனித்துவிடப்பட்டான். இப்போதும் அசராமல், கீழே இறங்கிக் கொண்டிருக்கும் தன்னுடைய கூட்டத்தை நோக்கிச் செல்ல முயன்றான். ஒரு டஜன் அடிகள் கீழே இறங்கியிருப்பான், ராஜாளி அவன் முன்னால் பறந்து வந்தது. இப்போது எதிரி கிட்டத்தில் வர, அவனுடைய தைரியம் அதிகமானது. ஒரு கரணம் போட்டான். அவனது அதிர்ஷ்டம், நல்ல காரியம் செய்தான். இல்லையென்றால், அவனுக்குப் பின்னால் நகங்களை நீட்டிக் கொண்டு வந்த பெண் ராஜாளி அவனை அங்கேயே அப்பொழுதே பிடித்திருக்கும்.

இது நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் என்னுடைய மற்ற புறாக்கள் வேகமாக பறந்து கிட்டத்தட்ட என் வீட்டை அடைந்துவிட்டன. கனிந்த பழங்கள் மரத்திலிருந்து விழுவதைப் போல வேக வேகமாக அவை கூரையில் விழுந்தன. ஆனால், அவற்றில் ஒன்று மட்டும் கோழையல்ல. மாறாக முழுக்க முழுக்க வீரத்தின் உருவம் அது. அவன்தான் கருமுத்து ஜகோரே. மொத்தக் கூட்டமும் எங்கள் கூரையில் இறங்கிவிட, ஜகோரே மட்டும் கரணம் போட்டு உயரே பறந்தான். அவனுடைய நோக்கம் என்னவென்பது தெளிவாகத் தெரிந்தது.. அவன் வண்ணக்கழுத்துக்கு துணையாக இருக்கப் பறக்கிறான். அவன் மீண்டும் கரணம் போட, ராஜாளி தன்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொண்டுவிட்டது. வண்ணக்கழுத்தைத் துரத்துவதை விட்டுவிட்டு, ஜகோரேவை நோக்கிப் பறந்தது. உங்களுக்குத் தான் வண்ணக்கழுத்தைப் பற்றித் தெரியுமே, அவன் ஜகோரேவைக் காப்பாற்ற கீழே இறங்கினான். மின்னலைப் போலே வேகமாக வட்டமடித்துக் கொண்டும் வளைந்து கொண்டும் இறங்கினான். அவன் பின்னால் வந்த பெண் ராஜாளிக்கு மூச்சுவாங்கியது. வண்ணக்கழுத்து போட்ட அத்தனை வளைவுகளையும் அதனால் போட முடியவில்லை. எண்ணிக்கையில் கிட்டக்கூட வரமுடியவில்லை. ஆனால் அனுபவசாலியான ஆண் ராஜாளி குறிவைப்பதற்காக மேலே மேலே ஏறியது. இதனால் ஜகோரேவுக்கு ஆபத்து வந்தது. ஒரே ஒரு தவறான முடிவு போதும், ராஜாளி, ஜகோரேவைப் பிடிக்க. பாவம் இந்தப் பறவைகள்; எதைச் செய்திருக்கக் கூடாதோ, ஜகோரே அதைச் செய்தான். ஆண் ராஜாளிக்கு கீழே, நேர்க் கோட்டில் பறந்தான். ராஜாளியோ தன் இறக்கையை முடுக்கிக் கொண்டு, மெளனத்தின் இடியைப் போல விழுந்தது. எந்தச் சத்தமும் கேட்கவில்லை. ’சத்தத்தின் நிழல்கூடக் கேட்கவில்லை. கீழே, கீழே, கீழே மரணத்தின் உருவமாக அது விழுந்தது. அப்போதுதான் மிகக் கொடுமையான அந்த விஷயம் நடந்தது. எப்படி என்றே தெரியவில்லை, ஆனால் ஜகோராவைக் காப்பாற்றவும் எதிரியை சலிப்படையச் செய்யவும் வண்ணக்கழுத்து, ஜகோரேவுக்கும் ராஜாளிக்கும் நடுவே நுழைந்தான். தாக்குதலை நிறுத்துவதற்கு பதில், ராஜாளி தன் நகங்களை முடுக்கிக் கொண்டு, நடுவே நுழைந்தவனைப் பிடித்துவிட்டது. இறுக்கிப் பிடிக்கவில்லை தான், ஆனால் காற்றெங்கும் இறகுகள் பொழிந்தன.

எதிரியின் பிடியின் வண்ணக்கழுத்தின் உடல் துடிப்பதைப் பார்க்க முடிந்தது. பழுக்கக் காய்ச்சிய ஒரு இரும்புக் கம்பி என்னில் நுழைந்தது போல் நான் என் பறவைக்காக வலியால் துடித்து  அலறினேன். ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை. வட்ட வட்டமாக, உயரே உயரே அந்த ராஜாளி வண்ணக்கழுத்தை தூக்கிச் சென்றது. கூடவே, தன் நகங்களால் இன்னும் இறுகப் பிடிக்க முயன்றது. இங்கே நான் வெட்கப்பட வேண்டிய ஒன்றைச் சொல்லியாக வேண்டும். வண்ணக்கழுத்தைக் காக்க மிகத் தீவிரமாக இருந்த நான், பெண் ராஜாளி விழுந்து ஜகோரேவைப் பிடித்துவிட்டதைக் கவனிக்கவில்லை. வண்ணக்கழுத்து பிடிபட்ட உடனேயே இது ரொம்ப வேகமாக நடந்திருக்க வேண்டும். இப்போது காற்று முழுக்க ஜகோரேவின் இறகுகள். எதிரி அவனை மிக இறுக்கமாக பிடித்துக் கொண்டிருந்த்து. அவனும் தன்னை விடுவித்துக் கொள்ள அசையக் கூட இல்லை. ஆனால், வண்ணக்கழுத்து அப்படியில்லை. அவன் ஆண் ராஜாளியின் பிடியில் இன்னமும் துடித்துக் கொண்டிருந்தான். தன் துணை இரையை மேலும் இறுக்கமாக பிடிக்க உதவி செய்யப் போவதைப் போல, பெண் ராஜாளி தன் துணைக்கு வெகு அருகில் பறந்தது. அப்போது பார்த்து ஜகோரேவும் விடுபடப் போராடினான். அது பெண் ராஜாளியை ஆடச் செய்ததால், அதன் இறகு துணையின் இறகு மீது மோதியது. ஆண் ராஜாளி தன் சமநிலையை இழந்தது. அது காற்றில் கிட்டத்தட்டக் கவிழ்ந்துவிட, மீண்டும் ஒரு இறகு மழையோடு வண்ணக்கழுத்து அதன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். அவன் கீழே விழுந்தான். அடுத்த முப்பது நொடிகளில் மூச்சிறைத்துக் கொண்டு ரத்தம் வடிய ஒரு பறவை எங்கள் கூரையில் கிடந்தது.

அவனுடைய காயத்தின் தீவிரத்தை அறிய அவனைத் தூக்கினேன். அவனுடைய இரண்டு பக்கங்களும் கிழிந்திருந்தது. ஆனால், அத்தனை மோசமாக இல்லை. உடனடியாக அவனை புறா மருத்துவரிடம் கொண்டு போனேன். அவர் அவனுடைய காயங்களுக்கு கட்டு போட்டார். இதற்கு ஒரு அரைமணி நேரம் ஆனது. நான் வீடு திரும்பி, வண்ணக்கழுத்தை அவன் கூண்டில் விட்டுவிட்டுப் பார்த்தால், ஜகோரேவை எங்கும் காணோம். அவனுடைய கூண்டும் காலியாக இருந்து. நான் கூரைக்குப் போன போது, ஜகோரேவின் துணைப் பெடை விளிம்பில் உட்கார்ந்து கொண்டு, அவனைத் தேடி ஒவ்வொரு திசையையும் அளந்து கொண்டிருந்தது. அன்று மட்டுமல்ல,. அடுத்த இரண்டு மூன்று நாட்களும் அப்படியே தன் துணையத் தேடிக் கொண்டிருந்தது. தன் துணை ஒரு தைரியமான வீரனுக்காக தன்னையே தியாகம் செய்திருக்கிறது என்பதை அறிந்து அது ஆறுதல் அடைந்ததா என்ன என்று எனக்குத் தெரியவில்லை.

(தொடரும்…)

வண்ணக்கழுத்து பகுதி 10அ: தொடரும் போர்ப் பயிற்சி

மாயக்கூத்தன்

நாள் மாறி நாள் வர புதிதாய்ச் சேர்ந்த புறாக்கள் மெதுவாக வீட்டிலிருந்து கொஞ்சம் தொலைவாக பறக்கக் கற்றுக் கொண்டன. ஒரு மாதம் முடியும் போது அவை வீட்டிலிருந்து ஐம்பது மைல்களுக்கும் மேல் தொலைவில் கொண்டு செல்லப்பட்டு, விடுவிக்கப்பட்டன. தங்களுடையை முந்தைய முதலாளியிடமே திரும்பப் பறந்து போய்விட்ட இரண்டைத் தவிர மீதி அனைத்தும் வண்ணக்கழுத்தின் தலைமையில் என்னிடம் திரும்பிவிட்டன.

யாரும் மறுக்க முடியாத தலைமை என்பது அத்தனை எளிதாக தீர்மானித்துவிடக் கூடியதல்ல. உண்மையில், வண்ணக்கழுத்துக்கும் இரண்டு புதிய பெடைகளான ஹிரா மற்றும் ஜகோரேவுக்கும் இடையே தீவிரமான யுத்தம் நடந்தே இதைத் தீர்மானிக்க வேண்டியிருந்தது. இதில் ஜகோரே சுத்தமான கருப்பு டம்ப்ளர். அதன் சிறகுகள் கருஞ்சிறுத்தையின் தோலைப் போல் மின்னும். ஜகோரே மென்மையானது, கடுமையானது அல்ல. ஆனாலும், வண்ணக்கழுத்தை மொத்த கூட்டத்தின் தலைவனென்று ஏற்றுக்கொண்டு பணிய மறுத்தது. தூதுப் புறாக்கள் எத்தனை சண்டைக்காரர்கள் என்றும் எவ்வளவு பெரிதாகத் தங்களை காட்டிக் கொள்பவை என்றும் உங்களுக்குத் தெரியும். எங்களுடைய கூரைக்கு மேல் அத்தனை ஆண் தூதுப் புறாக்களும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை உள்ள அனைத்தும் தங்கள் ஆளுகைக்குட்பட்டது என்று நினைத்துக் கொண்டு கம்பீர நடை போட்டுக் கொண்டு கத்திக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கும். வண்ணக்கழுத்து தன்னை மாவீரன் நெப்போலியன் என்று நினைத்துக் கொண்டிருந்தது என்றால், சூரியனின் மையப்பகுதியைப் போன்ற வெண்மையான ஹிரா, தன்னை மாவீரன் அலெக்ஸாண்டர் என்று நினைத்துக் கொண்டிருந்தது. தூதுப் புறா இல்லை என்றாலும் கருப்பு வைரமான ஜகோரே தன்னை ஜூலியஸ் சீசரும் மார்ஷல் ஃபோவும் உருக்கிச் செய்யப்பட்டதாக அறியவைத்துக் கொண்டிருந்தது. இந்த மூன்றைத் தவிர வேறு சில கர்வம் பிடித்த ஆண் புறாக்களும் இருந்தன. ஆனால், அவை இந்த மூன்று புறாக்களில் ஏதோ ஒன்றால் தோற்கடிக்கப்பட்டிருந்தது. இப்போது ஒட்டுமொத்த கூட்டத்திற்கும் யார் தலைவன் என்ற கேள்விக்கு சண்டை தேவை.

ஒருநாள் ஹிரா தன் சிறகுகளைக் கோதிக் கொண்டே, திருமதி ஜகோரே முன்னிலையில் ஏதோ உளறிக் கொண்டிருந்தது. திருமதி ஜகோரே, சுத்தக் கருப்பு. ரத்தக்கல் போல சிவப்பான கண்கள். இது கொஞ்ச நேரம் கூட தொடர்ந்திருக்காது, எங்கிருந்தோ ஜகோரே பாய்ந்து வந்து ஹிராவின் மேல் விழுந்தது. ஹிராவும், பயங்கர கோபத்தில் ஒரு பேயைப் போல சண்டையிட்டது. மூக்கும் மூக்கும், காலும் காலும், இறக்கையும் இறக்கையும் மோதிக் கொண்டன. இரண்டு ஆண்களும், ஒன்றை ஒன்று புடைத்துக் கொண்டிருக்கும் இடத்திலிருந்து மற்ற எல்லா புறாக்களும் பறந்து ஓடின. வண்ணக்கழுத்து அவர்களுக்கு மேலே, ஒரு டென்னிஸ் நடுவரைப் போல் சாந்தமாய் உட்கார்ந்திருந்தது. அரை டஜன் முறை மாறி மாறி தாக்கிக்கொண்டபின் , ஹிரா வென்றது. பெருமையின் எல்லைக்கே சென்ற அது, தன் நெஞ்சை விரித்துக் கொண்டு திருமதி ஜகோரேவிடம் போய் “மேடம், உன் வீட்டுக்காரன் ஒரு கோழை. நான் எவ்வளவு நன்றாய் இருக்கிறேன் பார். பக், பக்கூம், கும்கும்” என்று சொல்வது போல நின்றது. திருமதி ஜாகோரே, ஹிராவின் மீது ஒரு கேவலமான பார்வையை வீசிவிட்டு, தன் கணவனோடு இணைய இறக்கையை அடித்துக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்றுவிட்டது. ஹிரா, அசிங்கப்பட்டு வாடிப் போய்விட்டது. பிறகு திடீர்க் கொந்தளிப்பில், கடுங்கோபத்துடன் வண்ணக்கழுத்தின் மீது பாய்ந்தது. இதை எதிர்பார்க்காத வண்ணக்கழுத்து கடுமையான முதல் தாக்குதலில் கிட்டத்தட்ட தோற்றுவிட்டது. வண்ணக்கழுத்துக்கு மயக்கம் வரும் அளவிற்கு ஹிரா கொத்தவும் இறக்கைகளால் அடிக்கவும் செய்தது. அதனால் வண்ணக்கழுத்து தப்பி ஓடியது. கூடவே இந்தப் பைத்தியமும் துரத்திக்கொண்டு ஓடியது. பம்பரங்கள் போல இரண்டும் வட்டமிட்டு ஓடின. எது துரத்துகிறது எது துரத்தப்படுகிறது என்றே என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவை போன வேகத்தில் ஓட்டத்தை நிறுத்தி ஒன்றை ஒன்று கொத்தி அடித்துக் கொண்டிருந்ததை என்னால் பார்க்கக் கூட முடியவில்லை. இறக்கை இறக்கையை அடிக்கும் ஓசை அச்சுறுத்தும் இரைச்சலாக காற்றை நிறப்பியது. இப்போது எல்லாத் திசைகளிலும் சிறகுகள் பறக்கத் துவங்கின.

திடீரென்று, மூக்கோடு மூக்கு வைத்துக் கொண்டு, நகத்தோடு நகம் கோர்த்துக் கொண்டு இரண்டும் குஸ்தி போட்டுக் கொண்டு தரையில் உருண்டன. இரண்டும் கடுங்கோபத்தின் ஒற்றை உருவமாய் உருமாறின. அந்த வழியில் எந்த முடிவையும் அடைய முடியாது என்பதை உணர்ந்து வண்ணக்கழுத்து தன் எதிரியின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு காற்றில் உயரே பறந்தது. ஹிராவும், தன் இறக்கையை வேகமாக அடித்துக்கொண்டு அதைத் தொடர்ந்தது. தரைக்கு மூன்று அடிக்கு மேலே, வண்ணக்கழுத்து தன் நகங்களை கழுகின் நகங்களைப் போல ஹிராவின் மூச்சுக் குழாயைச் சுற்றிப் போட்டு, மேலும் மேலும் இறுக்கிப் பிடித்தது. அதே நேரத்தில், தொடர்ந்து பயங்கரமாக தன் இறக்கையைக் கொண்டு அடித்தது. முட்கதையை போன்ற அந்த இறக்கைகள், எதிரியின் உடம்பிலிருந்து பனியைப் போன்ற சிறகுகளைப் பொழியச் செய்தது. இப்போது, பொழியும் சிறகு மழையில் மறைந்து இரண்டும் தரையில் உருண்டு, பித்தேறிய பாம்புகள் போல தீவிரமாக ஒன்றை ஒன்று கொத்திக் கொண்டன. கடைசியில் ஹிரா விட்டுவிட்டது. கிழிந்த வெள்ளை மலர் போல வாடி தரையில் வீழ்ந்தது. அதன் ஒரு கால் வேறு பிசகிவிட்டது. வண்ணக்கழுத்திற்கோ, கழுத்திலும் தொண்டையிலும் சுத்தமாக சிறகுகள் எதுவுமே இல்லை. ஆனால், ஏதோ ஒரு வழியில் சண்டை முடிந்ததில் அவனுக்குச் சந்தோஷம். ஹிரா மட்டும் தன் பாதி சக்தியை ஜகோரேயுடனான சண்டையில் செலவிட்டிருக்காவிட்டால், தன்னால் ஜெயித்திருக்க முடியாது என்று வண்ணக்கழுத்துக்கு நன்றாகவே தெரியும். எப்படியிருந்தாலும், நல்ல வகையில் முடிவதெல்லாம் நன்மைக்கே. ஹிராவின் காலுக்கு நான் கட்டு போட்டுவிட்டு, மேலும் அவசியமானதைச் செய்தேன். அடுத்த முப்பது நிமிடங்களில், புறாக்கள் அனைத்தும் அந்நாளின் கடைசி உணவை உண்டு கொண்டிருந்தன. சமீபத்தில் என்ன நடந்தது என்பதை அவை முழுமையாக மறந்துவிட்டது போலிருந்தன. அவற்றின் ரத்தத்தில் எந்த வித பிணக்கோ காழ்ப்புணர்ச்சியோ இல்லை. அவையெல்லாம் நல்ல குடும்பத்திலிருந்து வந்தவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவற்றில் சிறிய புறாக்களில் கூட நல்ல விதமான வளர்ப்பு இருந்தது. ஹிரா, தன்னுடைய தோல்வியை பண்பான மனிதனைப் போல் ஏற்றுக் கொண்டது என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

இப்போது ஜனவரி மாதம் பிறந்துவிட்டிருந்த்து. குளிர்ந்த வானிலையும், தெளிவான வானமும் இருக்க புறாக்களுக்கான பரிசுப் போட்டி துவங்கியது. ஒவ்வொரு மனிதனுடைய பறவைக் கூட்டமும் மூன்று வகைகளில் சோதிக்கப்பட்டன. அவை, குழு ஒற்றுமை, தொலைதூரம் பறத்தல் மற்றும் ஆபத்துக்கிடையில் பறத்தல். முதல் வகைமையில் நாங்கள் முதற்பரிசு வாங்கிவிட்டோம். அதன் பிறகு நடந்த ஒரு சோகமான சம்பவத்தால் அடுத்த இரண்டு போட்டிகளில் எங்களால் பங்கெடுக்க முடியவில்லை. அது என்ன என்பதை அதற்குரிய இடத்தில் நீங்கள் அறிவீர்கள்.

குழு ஒற்றுமைப் போட்டி இப்படித்தான் இருக்கும். வெவ்வேறு புறாக் கூட்டங்கள் அவரவர் வீடுகளிலிருந்து மேலெழும்பிப் பறக்கும். தங்கள் எஜமானர்களின் சீட்டிகள் மற்றும் அவர்களை உணர்த்தும் வேறு சப்தங்கள் கேட்காத தூரத்திற்குச் சென்றவுடன், தனித்தனியான குழுக்கள் ஒன்றிணையும். பிறகு அவை அனைத்தும் எதற்கு தகுதியுண்டு என்று நினைக்கின்றனவோ அந்த புறாவின் தலைமையில் பறக்க ஒப்புக்கொள்ளும். புறாக்களின் புத்தியும் உள்ளுணர்வும் மேலோங்கியிருக்கும் ஆகாயத்தில் இவையனைத்தும் நடக்கும். எந்தப் பறவை முன்னால் பறக்கிறதோ, எது வழிநடத்த அனுமதிக்கப்படுகிறதோ அது தனக்கு அளிக்கப்பட்ட கெளரவத்தின் இயல்பையும் காரணத்தையும் உணராமலேயே வழிநடத்தும்.

வெப்பம் நாற்பத்தைந்து ஃபேரன்ஹீட்டுக்கு இறங்கிவிட்டது. இந்தியாவின் எங்கள் பகுதியில் அதுவொரு நல்ல குளிர்ந்த காலை. உண்மையில், அது அந்த வருடத்திலேயே குளிர்ச்சியான நாள். மேலே வானம், வழக்கமாய் குளிர்காலத்தில் இருப்பதுபோல மேகங்களற்று, வடிவமில்லா நீலமாணிக்கக் கல் போல இருந்தது. வெளிர்சிவப்பு, நீலம், வெள்ளை, மஞ்சள் வண்ணங்களில் இருந்த நகர வீடுகள், விடியலின் பலவண்ணப் பள்ளத்திலிருந்து எழும் ராட்சதர் படை போல இருந்தன. தொலைவில், அடிவானம் பழுப்பு மற்றும் ஊதா நிறங்கள் கொண்டு எரிந்தது. தேன் நிறத்திலும் ஊதா நிறத்திலும் உடையணிந்த ஆண்களும் பெண்களும் தங்கள் காலைப் பிரார்த்தனைகளை முடித்துவிட்டு, வீட்டு மாடிகளில் கைகளை உயர்த்தி சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருந்தார்கள். நகரத்தின் சப்தங்களும் வாசனைகளும் இரவின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டன. பருந்துகளும் காகங்களும் தங்கள் குரல்களால் காற்றை நிறப்பின. அந்தச் சத்தத்திலும் புல்லாங்குழல் வாசிப்பவர்களின் பாடலைக் கேட்க முடிந்தது. போட்டி தொடங்கியதற்காக சமிக்ஞை சீட்டி அடிக்கப்பட்ட அந்த நொடியில், ஒவ்வொரு புறா வளர்ப்பாளரும் தன் வீட்டின் கூரையிலிருந்து வெள்ளைக் கொடியை அசைத்தார்கள். உடனடியாக எங்கிருந்தோ எண்ணற்ற புறாக் கூட்டங்கள் வானத்தில் உயர்ந்தன. கூட்டம் கூட்டமாக, வண்ண வண்ணமாக, அவற்றின் படபடக்கும் இறக்கைகள் அவற்றை நகரத்திற்கு மேலே கொண்டு சென்றன. காகங்களும், சிவப்பும் பளுப்புமான பருந்துகளும், பத்தாயிரக் கணக்கான டம்பளர்களும் தூதுப் புறாக்களும் இடியைப் போல வான்புகும் முன்பே, ஓடி மறைந்துவிட்டன. சீக்கிரமே, காற்றாடி போன்ற வடிவத்தில் பறந்து கொண்டிருந்த ஒவ்வொரு கூட்டமும், பெரிய காற்றுச் சுழியில் சிக்கிக் கொண்ட பல மேகங்கள் போல வானத்தில் வட்டமடித்தன. ஒவ்வொரு நொடியும் அவை மேலே ஏறிக் கொண்டே இருந்தாலும், வெகு நேரம் ஒவ்வொரு புறா உரிமையாளரும் தன் கூட்டத்தை மற்றவருடையதில் இருந்து தனித்து அறிய முடிந்தது. கடைசியில் தனித்தனி கூட்டங்கள் ஒன்றாகக் கலந்து இறக்கைகளால் ஆன கெட்டியான சுவர் போலப் பறந்தபோதும், அவை பறந்த விதத்தைக் கொண்டே, என்னால் வண்ணக்கழுத்து, ஹிரா, ஜகோரே மற்றும் இன்னும் அரை டஜன் புறக்களை அடையாளம் காண முடிந்தது. ஒவ்வொரு பறவைக்கும் தனிப்பட்ட குணாதிசயங்கள் உண்டு, அவை பறக்கும்போது அதைக் காண முடிந்தது. ஒவ்வொரு உரிமையாளரும் ஒரு குறிப்பிட்ட புறாவின் கவனத்தைப் பெற, உரத்த சீட்டியை பிரத்யேக நிறுத்தங்களோடு அடிப்பார். சத்தம் கேட்கும் தூரத்தில் இருந்தால், அந்த பறவையின் கவனத்தை ஈர்க்கும்.

கடைசியில் மொத்த கூட்டமும் எந்தவொரு புறா விரும்பியும் முரசு கொட்டினால் கூடக் கேட்காத உயரத்தை அடைந்துவிட்டன. இப்போது அவை வட்டமிடுவதை நிறுத்திவிட்டு ஒருபக்கமாக நகரத் துவங்கின. தலைமைக்கான போட்டி தொடங்கிவிட்டது. அவை வானத்தின் ஒரு திசையிலிருந்து மற்றொன்று நோக்கி நகர, உரிமையாளர்கள் நாங்கள், புறாக்ககள் தங்களை வழிநடத்த அனுமதிக்கும் புறாவின் குணாதிசயங்களை கவனிக்க மேலே பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரு சமயம் என்னுடைய ஜகோரே வழிநடத்தும் போல் இருந்தது. ஆனால், அது கூட்டத்தின் முன்பகுதியை அடைந்த சில நேரங்களிலேயே, எல்லாப் புறாக்களும் வலப்பக்கம் திரும்பிவிட்டன. அது பின்தொடர்ந்து பறப்பவர்களிடையே குழப்பத்தைக் கொண்டுவந்தது. குதிரைப் பந்தயக் குதிரைகள் போல வகைவகையாய் பெயர் தெரியாத புறாக்களும் முன்னால் வந்தன. ஆனால், சிறிது நேரத்தில் அவை ஒவ்வொன்றும் மீதி கூட்டத்தால் பின்னுக்குத் தள்ளப்பட்டன. இப்படி அடிக்கடி நடக்க, போட்டியில் ஆர்வத்தை இழக்கத் துவங்கிவிட்டோம். ஏதோவொரு அறியப்படாத புறா, அதிகம் பலராலும் விரும்பப்பட்ட தலைமைக்கான பரிசை தட்டிச் செல்லும் என்று தோன்றியது.

(தொடரும்…)

வண்ணக்கழுத்து பகுதி 8: பயணம் தொடர்கிறது…

வண்ணக்கழுத்து பகுதி 8: பயணம் தொடர்கிறது

”உழவாரக்குருவிகளின் கட்டிடக்கலைத் திறமையை உங்களுக்குத் தெளிவாக விளக்க, முதலில் அதனுடைய குறைபாடுகளைச் சொல்லிவிடுகிறேன். பறக்கும் பூச்சிகளைப் படிப்பதற்கு ஏதுவாக சிறிய அலகு கொண்டவை அவை. அதனுடைய அகலமான வாய், பறக்கும் போது இரையைப் பிடித்துக் கொள்ள ஏதுவாக இருக்கிறது. பூச்சிகளை நோக்கி அது பாயும்போது, வெகு சில பூச்சிகள் மட்டுமே தப்ப முடியும். உழவாரக் குருவி மிகச் சிறியதாக இருப்பதால், அதனால் அதிக எடையைத் தூக்க முடியாது. அதன் கூடு, வைக்கோல், சற்றே பெரிய ஊசியைப் போன்ற தடிமனுள்ள சுள்ளிகளைப் போன்ற இலகுவான பொருட்களால் கட்டப்பட்டிருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

“முதன் முறை நான் உழவாரக் குருவியைப் பார்த்தபோது, முடங்கிப் போய் உருக்குலைந்தது போல் இருந்தது. தங்களுடைய கால்கள் மோசமானவை என்று எல்லா உழவாரக் குருவிகளுக்குமே தெரியும். சமநிலைப் படுத்திக்கொள்ளக் கூட அந்தக் கால்கள் போதாது. அதனுடைய உடம்பிலிருந்து நீட்டிக் கொண்டிருக்கும், மீன்பிடி கொக்கிகள் போன்ற கால்கள், இடங்களைப் பற்றிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டவை. சின்னச் சிறிய கொக்கிகள் போன்ற அதன் கால் நகங்கள் வளைந்து கொடுக்காதவை. அதனுடைய உடம்புக்கும் பாதங்களுக்கும் இடையே போதுமான நீளத்தில் கால்கள் இல்லை. இதனால், நீண்ட கால்கள் மற்ற பறவைகளுக்குத் தரும் குதிக்கும் திறன் உழவாரக் குருவிகளுக்கு இல்லை. இந்தக் குறைபாடு மற்றொரு சாதகத்தால் அடிபட்டுப் போகிறது. அவற்றால், கற்களால் அமைக்கப்பட்ட வேலிகளிலும், பளிங்கு இறவானங்களிலும், வீடுகளில் பளிங்குக் கல்லில் கூரைக்குக் கீழ் செதுக்கப்பட்ட அலங்காரங்களிலும், மற்ற எந்த பறவையைக் காட்டிலும் ஒட்டிக் கொள்ள முடியும். என் நண்பனான உழவாரக் குருவி, பளபளப்பான சுவர்களில் கூட ஏதோ சொறசொறப்பான மேற்பரப்ப போல தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். (more…)

வண்ணக்கழுத்து 5 (ஆ ): வண்ணக்கழுத்தைத் தேடி

மாயக்கூத்தன்

அடுத்த இரவு, அடர்ந்த காட்டில் மரத்தின் உச்சியில் உட்கார்ந்திருந்தபோது என்னுடைய சிக்கிம் நண்பனின் வீட்டையும் அதன் சவுகரியங்கள் பற்றியும் பல முறை நினைத்துப் . பார்த்துக் கொண்டிருந்தேன்.

நாள் முழுக்க நடந்து விட்டு, பயங்கரமான காட்டின் மத்தியில் இருக்கும் ஒரு மிகப்பெரிய ஆலமரத்தில் அன்றைய இரவைக் கழிப்பதை யோசித்துப் பாருங்கள். பொதுவாக, உயரமான இடங்களில் ஆலமரம் வளர்வதில்லை என்பதால், அந்த மரத்தைக் கண்டுபிடிக்க அரைமணி நேரத்துக்கும் சுற்று கூடுதலாகவே ஆனது. ஒரு யானை பின்னோக்கி நடந்துவந்து தாக்கும்போது, மரம் உடைந்து விடாதபடிக்கு அது தண்டியான மரமாக இருக்க வேண்டும். இப்படித்தான் சில பெரிய மரங்களை யானைகள் சாய்த்துவிடுகின்றன. எனவே, நாங்கள் உயரமான மரத்தைத் தேட வேண்டியிருந்தது. ஒரு யானையின் தும்பிக்கைக்கு உச்சிக்கிளைகள் எட்டாத அளவு உயரமாகவும், இரண்டு யானைகள் சேர்ந்து இரட்டிப்பு பலத்துடன் தள்ளினாலும் உடைக்க முடியாதபடிக்கு தாட்டியாகவும் இருக்கும் மரத்தைத் தேடினோம். (more…)