ரா. கிரிதரன்

கோபி கிருஷ்ணனின் ‘புயல்’ குறித்து ரா. கிரிதரன்

ரா கிரிதரன்

நமக்குத் தெரிந்த சிறுகதை பாணியிலிருந்து சற்றே விலகிய கதை. முடிவுக்கு மிக அருகில் தொடங்கி ஒரு உச்சகட்டத்தின் வெடிப்பில் முடியும் கதை எனும் யுத்தியை விடுத்து எழுதப்பட்ட கதை. இதில் திட்டமிடல் இல்லை. கோபி கிருஷ்ணனின் கதை இயல்பே இதுதான்.

ஆதவனும் கோபியும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். மனித மனங்களின் விசித்திரங்களையும், மனித உறவுகளால் உண்டாகும் விநோத ரசமாற்றங்களையும் கதைகளாக்கியவர்கள். ஆதவனின் ‘இரு நாற்காலிகள்’ கதை ஒரு உதாரணம்.

எவ்விதமான பதில்களையும் சென்றடையாமல் நவீன வாழ்வின் சிக்கல்களை காட்டக்கூடிய கலைஞர் கோபி. நவீனத்துவ மனிதனின் பாசாங்குகளை வெளிப்படையாக்கியவர், ஆனால் அதற்கு மரபு சார்ந்த பதில்களைக் கொடுக்காதவர். மனிதன் தனி மிருகம். அவன் இந்த சமூகத்தில் வாழ்வதன் வழியே தனது இயல்பையும், தன்னுடன் வாழும் மனிதர்களின் இயல்பையும் முடிவு செய்கிறான். அவனது குழப்பங்களுக்கும், வாழ்வியல் போராட்டங்களுக்கும் மரபிலும் மண்ணிலும் பதில் இல்லை.

புயல் கதையின் தொடக்க வரியே மேற்சொன்ன பார்வையை நிறுவிவிடுகிறது. எங்கோ காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது, அதன் பாதிப்பு வேறு எங்கோ நடக்கிறது. “அதிகாலையிலிருந்தே பலத்த மழை. சென்னை அருகே புயலாம்”. சாதாரண வரியாகத் தெரிந்தாலும், கதையின் ஊடே பயணிக்கும்போது மனிதர்களின் நடத்தைகளையும் இயல்புகளையும் எடுத்துரைக்கும் கருத்தாக மாறிவிடுகிறது.

ஸோனா வேலைக்குப் போவதில் அதிக நாட்டமில்லாமல் உலகைப் புரிந்துகொள்ள வேண்டும் எனும் உயரிய நோக்கோடு ஏக்நாத்தின் வற்புறுத்தலாம் வேலைக்குச் செல்கிறாள். ஜூரம் அடிக்கும் குழந்தைக்கு மாத்திரையும், காபி பொடி, சாக்லெட்டும் வாங்கிக்கொண்டு கடும் மழைக்கு நடுவே அலுவலகத்திலிருந்து வீட்டுக்குப் போகிறான் ஏக்நாத். மழையில்தனது பொத்தல் விட்ட மழை உடுப்பைப் போட்டுச் செல்கிறான். ரோட்டை அடைத்துக் கோலம் போடும் மாமியின் புள்ளிகளை அழிக்காமல் செல்வதும், சிகரெட் புகைக்கு முகம் சுளிக்கும் மாமியிடம் மன்னிப்பு கேட்டு அணைத்துவிடுவதுமாக அவன் சமூகத்தை ‘அட்ஜெஸ்ட்’ செய்து செல்பவன்.

அவன் சென்ற அதே மழையில் வீடு திரும்பியிருக்கும் மனைவி சோனாவுக்கு சென்ற இடமெல்லாம் சமூகம் இடர் கொடுக்கிறது. அவளது உணர்வுகளை அத்துமீறும் பாலியல் தீண்டல்களையும், பெண்களை அடைய நினைக்கும் மனோபாவத்தையும் அவள் வேலை செய்யும் மருத்துவமனை முதல் வீடு வரும் வரை அனுபவிக்கிறாள். வீடு வந்தபின்னும் பக்கத்து போர்ஷன் குடிகாரன், ரெண்டு டிக்கெட் இருக்கு சினிமா வர்றியா, என்கிறான். அவள் மனம் பதைபதைத்து விடுகிறது.

இதைக் கொட்டித் தீர்க்கும்போது ஏக்நாத்தால் எதுவும் செய்ய முடியவில்லை. ஒருவிதத்தில் கையாலாகதவன்தான். அவனது மனம் உடனே, அப்பன் செய்த தவறுதானே மகன் தலையில் வரும், நானும் எதுவும் செய்ததில்லையே, எனக்கு ஏன் அப்படி ஒன்று நடக்கிறது, என குழப்பம் அடைகிறான். சமூகம் விஸ்வரூபத்தை உன்னிடம் காட்டியிருக்கு விடு, எனச் சொல்கிறான். இதற்கு ஈடான சிக்கல்களை அடைந்தவன்தான் என்றாலும் அவன் ஒருவிதத்தில் இந்த சமூகத்தின் கீழ்மைகளுக்குப் பழகியவனாக இருக்கிறான்.

திடீரென ஒரு இடத்தில் புயல் தோன்றியதில் மற்றொரு இடத்தில் மழை பெய்வது போல மனைவின் புலம்பலாலும் இயலாமை நிலையாலும் சட்டென “சாக்கடையில் உழலும் பன்றிகள்” எனச் சமூகத்தின் சீர்கேட்டை நோக்கி கத்துகிறான்.

அவன் சரி செய்யக்கூடியது எதுவுமில்லை. அதே சமயத்தில் இந்த கத்தல் மட்டுமே அவனது மனைவிக்கும் ஆறுதலாக இருக்காது என்பதையும் அறிந்தவன்தான். அதனால் கத்தி வைக்கிறான்.

இரு ஏரிகள்

ரா கிரிதரன்

(This is an unauthorised translation of the poem, ‘Two Lakes,’ originally written in English by Arvind Krishna Mehrotra. The Tamil translation is intended for educational, non-commercial reproduction at this particular website only)

பூகோள நிகழ்வுகள்
மட்டுமல்ல ஏரிகள்.
பொம்மை உயிர்காட்சியகம் மற்றும்
பொய்யான ஜப்பானிய தோட்டத்தோடு
நிறைந்த ஏரி ஒன்று எனக்குத் தெரியும்.
ஒரு சிகப்பு சாலை சுற்றியிருக்க அது முழுவதுமாகப் பொய்த்தோற்றம். அதன் பிம்பங்களில்
தனித்த வண்டிகள், வாசமான எஞ்சின்கள் மற்றும் ஒரு பெரிய
எஃகு பட்டறை.

ரெண்டாவது ஏரி
மலையடிவாரத்தில் மாசற்று
இருக்கிறது;
இல்லாதது போல். ஒரு பக்கம்
விடுதியில் இறந்த இங்கிலாந்துக்காரர்கள்
புலிகள் மீது அமர்ந்து சீட்டாடுகிறார்கள்.
மீசை முகத்தினூடாக தூசித்துகள்கள் மிதக்கின்றன.
பில்லியர்ட் அறையில் மேஜை சீர்குலையாமல் இருக்கையில்,
ரத்தம் உறைந்த சமையலறை கத்தி
அப்பகுதியின் நாட்டார் கதையில்
பத்திரமாகத் தோன்றியிருக்கிறது.

oOo

(1970களின் நவீன ஆங்கில இந்திய கவிதை உலகத்தில் மிகப் பிரபலமானப் பெயர் அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா. அருண் கொலாட்கர், ஏ.கே.ராமானுஜம், போன்றவர்களுடன் அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா ஒரு கவிதை இயக்கமாகச் செயல்பட்டார். அவரது ஆங்கில கவிதைகளும், பிராகிரத மொழியாக்கங்களும், கபீரின் கவிதை ஆக்கங்களும் உலகளாவிய கவனத்தைப் பெற்றுத்தந்தது. பம்பாயின் நவீன சிறு பத்திரிக்கை உலகின் அடையாளமாகக் காணப்பட்டவர் அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா. damn you எனும் சிறு பத்திரிகையைத் தொடங்கி பல இளம் கவிஞர்களை ஆங்கில கவிதைக்கு ஆற்றுப்படுத்தியிருக்கிறார். Middle Earth, Nine Enclosures போன்ற தொகுப்புகளும் History of Indian Literature, The Oxford India anthology of twelve modern Indian Poets போன்ற விமர்சக நூல்களும் எழுதியவர்.

அவரது கவிதைகளின் மொழியாக்கங்களை இத்தொடரில் பார்க்கலாம்.)

கங்கையின் பாடல்

ரா கிரிதரன்

(This is an unauthorised translation of the poem, ‘Songs of the Ganga,’ originally written in English by Arvind Krishna Mehrotra. The Tamil translation is intended for educational, non-commercial reproduction at this particular website only)

நான் கங்கை
மலைப்பனி
நீர்த்தேவதை

நான் சமவெளி
நான் மலையடி
என் ஓடைகளின் ஆசைகளை
கடலுக்கு கொண்டு செல்லும்
தூதுவன்

ஆணும் நான் பெண்ணும் நான்

குழந்தைகளுக்கு நான் காகிதக்கப்பல்
கடலாடிக்கு நான் ஒரு பழக்கம்
மழித்த முனிக்கு நான் ஒரு மேகம்
அசைவுகள் அனைத்தும் என் பிம்பம்

நான் ஒரு பாலம்
கோட்டையும் நான்
குறிபார்க்கும் வில்லாளியும்
மனிதனைக் கரைப்பதில் மகத்தானவள் நான்

உயிரை ஆக்குபவனும் நான்
எடுப்பவனும் நான்

**

நான் வெளியுலகுக்குள் செல்கிறேன்
நான் உலகம்
நான் தேசங்கள், நகரங்கள், மக்கள்
கோர்க்காத புத்தகத்தின் பக்கங்கள் நான்

சுற்றியிருக்கும் காற்று என் அறை
நான் நீரை உடுத்தியிருக்கிறேன்
நான் நீரைப் போல் நிர்வாணமானவள்
தெளிவு நான்

அரசு வீழ்ந்ததென
ஒரு கொடி கொடுத்தான்
நண்பனொருவன்

மழை பிடிக்கப் போவதாகச் சொல்லி
வலை விரிக்கிறேன்

நான் விஷம்

**
மலையிலிருந்து
வரையாடுகள்
இறங்குகின்றன
தனிமை கிடைக்காமல்
பாலையிலிருந்து
ஒட்டகங்கள் திரும்புகின்றன

மணலில் இருகோடுகள் வரைந்து
அவை உடைக்க முடியாத சுவர்கள் என்கிறேன்

நான்கு திசைகளை ஒன்றாக்கினேன்
நடையின் ரகசியம் அறிந்தவள் நான்

நெருப்பின் இறப்பு நான்.

**

அறிந்தேன் புகையிலிருந்து மறைதலை
கடலிலிருந்து பாரபட்சமற்ற தன்மையை

அறிந்தேன் பறவைகளிடமிருந்து
சூறாவெளியில் வீடொதுங்கும் வழியை

அறிந்தேன் சிறுத்தையிலிருந்து
புள்ளிகளால் சூரியனை மறைக்க

கோடையில் நான் செழு தர்பூசணி வளர்க்கிறேன்
வெள்ளத்தின் போது தங்குவேன்
தபால்காரனின் வீட்டருகே

நான் ஏதிலி
நான் ஒரு கோமாளி
நிழலற்றவளும் நான்.

oOo

(1970களின் நவீன ஆங்கில இந்திய கவிதை உலகத்தில் மிகப் பிரபலமானப் பெயர் அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா. அருண் கொலாட்கர், ஏ.கே.ராமானுஜம், போன்றவர்களுடன் அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா ஒரு கவிதை இயக்கமாகச் செயல்பட்டார். அவரது ஆங்கில கவிதைகளும், பிராகிரத மொழியாக்கங்களும், கபீரின் கவிதை ஆக்கங்களும் உலகளாவிய கவனத்தைப் பெற்றுத்தந்தது. பம்பாயின் நவீன சிறு பத்திரிக்கை உலகின் அடையாளமாகக் காணப்பட்டவர் அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா. damn you எனும் சிறு பத்திரிகையைத் தொடங்கி பல இளம் கவிஞர்களை ஆங்கில கவிதைக்கு ஆற்றுப்படுத்தியிருக்கிறார். Middle Earth, Nine Enclosures போன்ற தொகுப்புகளும் History of Indian Literature, The Oxford India anthology of twelve modern Indian Poets போன்ற விமர்சக நூல்களும் எழுதியவர்.

அவரது கவிதைகளின் மொழியாக்கங்களை இத்தொடரில் பார்க்கலாம்.)

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – – ரா. கிரிதரன்

ரா. கிரிதரன்

ஹனீஃப் குரேஷி எழுதிய The Buddha of Suburbia நாவலின் தொடக்கம் இது:

“My name is Karim Amir, and I am an Englishman born and bred, almost. I am often considered to be a funny kind of Englishman, a new breed as it were, having emerged from two old histories”

இரு கலாச்சார அடையாளங்கள் இணையும்போது ஒன்றை மற்றொன்று ஆதிக்கம் செய்யத் தொடங்கும் என்றாலும் முற்றிலும் புதுவிதமான அடையாளம் உருவாவதே அதன் இயல்பாக அமையும். மிகக் கச்சிதமாக அக்கருவைத் தொட்டுத் தொடங்கும் ஹனீஃப் குரேஷியின் நாவல் பிறந்த ஊரைக் கைவிட்டு புது நிலத்தில் வேரூன்ற நினைப்பவர்களைப் பற்றிய நல்லதொரு நாவலாக அமைந்திருந்தது.

அ.முத்துலிங்கம் எழுதிய ‘அமெரிக்கக்காரி‘ எனும் சிறுகதை இதே போன்ற – ஒரு ‘கிட்டத்தட்ட’ தனமையைப் பற்றிய கச்சிதமானத் தொடக்கத்தைக் கொண்டிருக்கிறது.

“ஒரு நாள் அவளுக்கொரு காதலன் இருந்தான்; அடுத்த நாள் இல்லை. அவன் வேறு ஒரு பெண்ணை தேடிப்போய்விட்டான். இது அவளுடைய மூன்றாவது காதலன். இந்தக் காதலர்களை எப்படி இழுத்து தன்னிடம் வைத்திருப்பது என்று அவளுக்கு தெரியவில்லை. அவர்கள் தேடும் ஏதோ ஒன்று அவளிடம் இல்லை. அல்லது இருந்தும் அவள் கொடுக்கத் தவறிவிட்டாள் என்பது தெரிந்தது.”

ஆம், முழுக்க முழுக்க இந்த அமெரிக்கக்காரியின் பார்வையில் சொல்லப்படும் இந்தக் கதையில் வரும் இலங்கைப் பெண்ணும் ‘கிட்டத்தட்ட’ அமெரிக்கக்காரிதான் என்றாலும் அவள் தன்னை ஒரு புது இனம் என்பதைக் கண்டுகொள்ள நெடுகாலம் ஆகிறது. ஆங்கில புத்தகங்கள் படிக்கத் தொடங்கியதால், அதில் வரும் அமெரிக்க சாகச கதைகளை பள்ளியில் சொல்லிக் கொண்டிருப்பதால், பிறந்த நாடான இலங்கையில் சிறுவயது முதலே அமெரிக்கக்காரி என அழைக்கப்பட்டவள் அமெரிக்கா எனும் நாட்டைப் பற்றிய யதார்த்தத்தை சற்று வயதான பின்னரே தெரிந்துகொள்கிறாள். அவளைப் பொருத்தவரை நினைவு தெரியாத நாள் முதலே அமெரிக்கக்காரி எனும் அடையாளத்தை அவள் பெற்றுவிட்டாள். அது ஒரு அழியா மச்சமாக அவளோடே வளர்ந்தது. தான் ஒரு அமெரிக்கக்காரி என நம்பத் தொடங்கும் பத்து வயதில் அவளது தாய் அமெரிக்காவே போனாலும் அவள் இலங்கைக்காரி தான் எனப்போட்டு உடைத்ததில் மனம் நொந்துப்போகிறாள்.

அமெரிக்கக்காரி ஆவதற்கான அவளது முயற்சிகள் அவள் அமேரிக்கா வந்தபின்னும் தொடரத்தான் செய்கின்றன. வலிய வந்து பழகும் நண்பர்களிடமிருந்து அவள் இலங்கைக்காரி போல தலைகுனிந்து விலகுவதில்லை. பேசுகிறாள். காப்பி குடிக்கிறாள். வெளியே செல்கிறாள். அவர்கள் அவளை அடைய எடுக்கும் பிரயத்தனங்களுக்கு ஓர் எல்லை வரை வளைந்துகொடுக்கிறாள். இரவு வீட்டுக்கு அழைக்கும்போது அந்த உறவு ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது. அமெரிக்கக்காரி என்பதை மானசீகமான எல்லையாக்கி சோதித்துப்பார்ப்பதில் அவளுக்கு விருப்பமில்லை. பயமிருப்பதாகவும் தெரியவதில்லை. ஹனீஷ் குரேஷி எழுதுவது போல அவள் கிட்டத்தட்ட அமெரிக்கக்காரி மட்டுமல்ல, கிட்டத்தட்ட இலங்கைக்காரியும்தான்.

கல்லூரி நிகழ்ச்சியில் நாட்டியம் ஆடிக்காட்டும்போது கூடவே தந்திக்கருவி வாசித்த வியட்நாமிய மாணவன் நண்பனாகிறான். என்னை ஆச்சர்யப்படுத்து, எனும் கேள்வி மூலம் ஒரு இதமான நண்பனாகும் அவன் மதிக்கும் எல்லைக்கோடுகள் அவளுக்குப் பிடிக்கிறது. அவன் கண்ணியமாகக் கைபிடிக்கும் வேளையில் அவள் எல்லை மீறி முத்தமிடுகிறாள். செளஜன்யமான உறவு மலர்கிறது.

மாணவர் விடுதியை விடுத்து தனியறை எடுத்து இருவரும் சேர்ந்து வாழத் தொடங்குகின்றனர். அவன் வேலைக்குப் போகத் தொடங்கியபோதும் அவள் முனைவர் பட்டத்துக்குத் தயார் செய்கிறாள். கடுமையான வேலை. வேலைக்கு இடையே ஒரு குழந்தை வேண்டுமென இருவரும் முயல்கின்றனர். மிக இயல்பாக ஆசிய நாட்டு மக்களின் மன இயல்பை கதாசிரியர் தொடர்கிறார். இனம் புரியாத இடத்தை நோக்கி அவர்களது உறவு செல்லவில்லை. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழத்தொடங்கிய சில காலத்தில் அவர்களிடையே ஏற்படும் இடைவெளி குறைந்து அவர்கள் மேலும் நெருங்க ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு வழிமுறையைக் கைக்கொண்டிருக்கிறது. பொதுவாக ஆசியர்கள் குடும்ப வாழ்வின் அடுத்தகட்டத்தை தங்கள் பிள்ளைகள் மூலம் தொடங்குகின்றனர். தனிமனித வெளி என்பது பல்கிப் பெருகும் குடும்பச்சங்கிலி எனும் அமைப்பின் ஒரு அங்கம் மட்டுமே என்பதை உணர்கின்றனர். மேற்கத்திய சமூகம் குடும்ப அமைப்பை தனிமனித வெளியினுள் ஊடுருவலாகவும் இடையூறாகவும் பார்க்கிறது. சேர்ந்து வாழும் இருவருக்கு குறுக்கே வரும் ஒரு இடைவெட்டாக மதிப்பதினால் தனிமனித வெளிக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை மீறியது எதுவும் இல்லை என்றாகிறது. கதையில் இலங்கைக்காரி தனது அமெரிக்கக்காரியை வென்று எடுக்கும் இடமாக இப்பகுதி அமைந்துள்ளது.

வியட்நாமிய காதலனின் விந்து குறைபாடு பெரு வெடிப்பாக அவர்களது உறவைப் பிரிக்கவில்லை. அவர்களை மேலும் நெருங்கச் செய்கிறது. குழந்தைத் தரமுடியாதத் தன்னைவிட்டு விலகும் அவன் அளிக்கும் உரிமையை அன்பால் மறுக்கிறாள். வீடு கட்டச் சேர்த்திருக்கும் பணத்தைக்கொண்டு மகப்பேறு சிகிச்சை செய்யச் செல்கிறாள். இதைச் சொல்லும்போது அமெரிக்காவில் கிளிண்டன் – மோனிகா விவகாரத்தை அ. முத்துலிங்கம் சொல்கிறார். காலக்குறிப்பு போலத் தெரிந்தாலும் மேற்கத்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கத்தை இலங்கைக்காரி-வியட்நாமிய காதலனின் தியாகத்தை ஒப்பிடும் தராசாகவே வாசகருக்குத் தோன்றும்படி எழுதியிருக்கிறார். சம்பந்தமில்லாத தகவல்களை எழுதி கதையை ரொப்புகிறார் எனும் குற்றச்சாட்டு பொய்க்கும் கணம் இது. ஒரு சிறுகதையாசிரியர் சகலவிதமான தகவல்களையும் விட்டுவிட்டு இந்த குறிப்பிட்ட நிகழ்வை ஏன் இந்த இடத்தில் குறிப்பிடுகிறார் என்பதை சேர்த்துப் பார்த்தால் கதை அடிநாதமாகப் பேசும் விஷயத்தை நாம் சென்றடையலாம்.

கருவைச் சுமக்கும் காலம் முழுவதும் அவளது அம்மாவுக்குக் கடிதம் எழுதுகிறாள். குழந்தை வளருகிறது, நீ செத்துப்போய்விடாதே என்பதுதான் ஒவ்வொரு கடிதத்தின் சாரமும். அதுவும் சாதாரணக் குழந்தையல்ல. அமெரிக்கக் குழந்தை என்பது கடிதத்தின் அடிநாதம். யுத்தம் நடந்து கொண்டிருக்கும் நகரத்தில் பஸ் பிடித்துச் சென்று அமெரிக்காவுக்குத் தொலைபேசும் தாயார் என்ன குழந்தை, பெயர் என்ன எனப் பெரும் இரைச்சலுக்கு நடுவே கேட்கிறாள். இவள் சொல்வதெல்லாம் குழந்தை ஒரு அமெரிக்கக்காரி என்பதுதான்.

ஆம், இவளைப் போல் இல்லாமல், அமெரிக்கா எதுவோ அதிலெல்லாம் இயல்பாய் பொருந்திப் போகும் அமெரிக்கக்காரியாக அவள் வளர்வாள்.

அமெரிக்கக்காரி, அ. முத்துலிங்கம், சிறுகதை

எஸ். சுரேஷின் ‘பாகேஸ்ரீ’

ரா. கிரிதரன்

பாகேஶ்ரீ ராகம் மென்சோகம் நிரம்பியது; சுயபச்சாதாபம் நிரம்பியது எனும் குறிப்போடு தொடங்கும் கதையில் அதே உணர்வுகளோடு பலவிதமான பாடல்களும் அவற்றின் ரசனையும் சுட்டப்படுகின்றன.  கதைசொல்லியின் பழைய நினைவுகளாகக் கதை தொடங்குகிறது. நிஜாம் பகுதியில் நடப்பது போலச் சொல்லப்பட்ட கதை பழைய ஹைதராபாத்தின் சாயா கடைகளில் நடக்கும் இயல்பான நிகழ்வுகளின் பின்னணியில் சொல்லப்பட்டிருப்பது கதையை நல்ல வாசிப்பனுபவமாக ஆக்குகிறது. டீக்கடை என்றாலே அரட்டை என ஆகிவிட்ட காலத்தில் ரம்மியமான இசையனுபவமும் கலை விவாதங்களும் நடக்கும் பொது அரங்குகளாகவும் அவை இருந்த காலத்தை நினைவூட்டியதில் பாகேஶ்ரீ ராகம் போல ஒரு வித ஏக்கம் நமக்கும் தோன்றியது. நிஜாம் சாம்ராஜ்ஜியத்தின் எச்சங்களாக எஞ்சிய சிலவற்றுள் ஹிந்துஸ்தானி கலைஞர்களுக்கான இடமும், கலாரசனையும் இருந்தாலும் அவையும் இன்று காணாமல் போய்விட்டதில் மனித மனநிலையின் இறக்கத்தை அசைபோடுகிறது கதையின் பின்புலம்.

பொதுவாக ராகங்களுக்கு என இருக்கும் இயல்புகளில் எனக்கு அதிக ஈர்ப்பு கிடையாது. சிலவகை ராகங்கள் காலையில் பாட உகந்தவை, சில இரவு நேர ராகங்கள் எனப் பிரித்திருப்பதே ஒருவித வசதிக்காக மட்டுமே தவிர அவை எழுப்பும் உணர்வுகளுக்கும் அந்த நேரங்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக நான் முழுவதாக நம்பவில்லை. இது ஒரு தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். இசையின் இயல்பு அகவயமானதுதான். ஆனால், ராகம் என்பது ஒரு உணர்வுநிலை. அதனால், சில குறிப்பிட்ட வகை மன இயல்புகளோடு இயைந்து போகும் தன்மை கொண்டது என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. இரவு நேரத்தில் கவிழும் அமைதியில், உலகமே தூங்கும்போது பரமாத்மாவைப்போல சாட்சியாக விழித்துப்பார்க்கும் நிலையில் பாடல்களின் உணர்வுகள் நமது மன இயல்புடன் இணைந்துகொள்ளும். அப்படி இரவின் இயல்பைக் கூட்டும் ராகங்கள் இருக்கலாம். பாடப்பாட ஒருமித்த மன நிலை கூடும்.

பழைய நிஜாம் அரசாட்சியின் மிச்சங்கள் கலாச்சார அடையாளங்களாகவும், கலப்பு மொழியாகவும் எஞ்சி நிற்கும் ஒரு பின்னணியில் நடப்பது கதைக்குப் பெரிய பலத்தைத் தருகிறது. தெலுங்கு, உருது மொழிகளும் கலந்திருப்பது கதைக்கு நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது. ரெண்டாவதாக, கதையின் கட்டமைப்பு மிகக் கட்டுக்கோப்பான பாணியில் அமைக்கப்பட்டிருப்பது ரசனை சமநிலையைப் பூர்த்தி செய்கிறது. கதையில் எவ்விதமான உணர்ச்சிகளும் தனித்துத் தெரியவில்லை. ஹ, ஹ ஹ என விரக்தியாகத் தெரியும் சிரிப்பு கான் சாகிப் சத்தியம் கேட்டபோதும் கதைசொல்லியின் மனதில் ஒலித்திருக்கலாம். அதே போல, கரானாவுக்கு வாரிசாகத் தனது மகன் உருவாக வேண்டும் எனும் வெறி உருவாவதும் ஒரு அரக்கத்தனமாகத் தெரியாமல் மிக இயல்பான ஒன்றாக ஆசிரியர் காட்டியிருப்பது உணர்ச்சியற்ற கூறல்முறையில் அவருக்கு இருக்கும் ஈடுபாட்டைக்காட்டுகிறது.  இதுவே கதையை ஒரு சமநிலையில் பார்க்க உதவுகிறது. சிறுகதையில் அதீத உணர்வு பாவனைகள் சமநிலையைக் குலைத்துவிடக்கூடும். கற்பூர டப்பாவில் பாதுகாத்த பண வாசனை போல கதையின் இயல்பை மாற்றிவிடும்.

ஆனால், மேலே சொல்லப்பட்ட சிறப்பியல்புகளே கதை அடுத்த கட்டத்துக்குச் செல்ல தடையாக இருக்கின்றன. உணர்ச்சியற்ற நடையில் கூறப்படும் பெரும்பாலான கதைகளுக்கு நேரும் அவலம்தான் என்றாலும் பல இலக்கியவாதிகள் இக்கட்டத்தை வேறொரு வழியில் தாண்டிவிடுகிறார்கள்.  வாழ்வின் அபத்த நிகழ்வாகவோ, உச்சகட்ட முரண்பாட்டுக் களமாகவோ நிகழ்வுகளைத் தொகுக்கும்போது உணர்ச்சியைக் காட்டாத கதைக்கும் ஆழம் கூடிவிடுவதைப் பார்க்கலாம். “எனக்கு எதைப் பார்த்தாலும் சிரிப்பாக இருக்கிறது”, எனத் தொடங்கும் ‘மரப்பசு’ நாவல் நாயகியின் உணர்ச்சிகள் வேகக்கார் போட்டி போல உச்சகட்ட தீவிரத்தையே தக்கவைத்திருந்தாலும் கதையை நாடகத்தனமாக மாற்றாமலிருக்க அம்மணியின் இயல்புக்கு மாறான காதலைப் புகுத்தி முரண்பாட்டை அதிகப்படுத்துகிறார் தி.ஜா. இரவு தாமதமாக வருவதால் வெளி கேட்டைத் திறக்காமல் போகும் வீட்டுக்காரம்மாவின் கோபத்தை எதிர்கொள்ளும் அபத்தத்தை விவரிப்பதில் கோபி கிருஷ்ணன் உணர்ச்சியைக் காட்டாது கதையை வாசகர்க்கு கடத்த முடிவதோடு கதாபாத்திரங்களின் ஆழத்துக்கும் புக வழி ஏற்படுத்த முடிகிறது.

பாகேஶ்ரீ கதையில் ஏகலைவன் போல சத்தியம் கொடுத்துவிடும் கதைசொல்லியின் எண்ண ஓட்டத்தில் தொடங்கும் கதை அவனது மனதின் ஆழத்தில் உறங்கும் சோகத்தைக் காட்ட எவ்விதமான முயற்சியையும் எடுக்கவில்லை. ஹ,.. ஹ… ஹ… எனச் சிரிக்கும் வகையில் ஒருவித விட்டேத்தியான மனநிலையைக் காட்டுவதாக எடுத்துக் கொண்டாலும் அது தீவிரமாகச் சொல்லப்படாதது அவனுடன் ஒன்றிவிடமுடியாதபடி தள்ளிவைக்கிறது. கலையின் உச்சகட்டத் தீவிரத்தைக் கைகொள்ளும் ஒருவன் அதன் வெளிப்பாட்டுக்குத் தடைவரும்போது முட்டிப்பார்க்கவோ, உடைந்து நொறுங்கிப்போவதோ, தீவிரமான கழிவிரக்கத்தில் புகுந்துகொள்வதோ இயல்பானது. அவன் பாட முடியாமல் முணுமுணுப்பதாக கதையின் தொடக்கத்தில் வந்தாலும் அந்த சத்தியம் அவனது இயல்பை எப்படி மாற்றியது எனச் சொல்லிவிட்டு பின்கதையில் அதே இசை அவனுடைய குதூகலத்தை ஊட்டியது எப்படி எனச்சொல்லியிருந்தால் பாடல்களில் காட்டப்பட்ட மென்சோகம் சொல்லாமலேயே நமக்குக் கடத்தப்பட்டிருக்கும். இந்த மாற்றம் நடக்காததால் கதையில் சுட்டிக்காட்டப்படும் பாடல்களுக்கும் கதைசொல்லியின் உணர்ச்சிக்கும் ஒரு பெரிய இடைவெளி விழுந்துவிடுகிறது. இதுவே கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தாமல் ஆசிரியரே பாடலின் உணர்வுகளைச் சொல்வது போல அமைந்துவிடுகிறது. ஆசிரியரே பாடலை மென்சோகம் எனச் சொல்லும் தேவையும் ஏற்படுகிறது.

நுண்கலைகளைப் பற்றிய விவரங்கள் அதிகம் வரும் கதையில் அக உணர்வுகளுக்கு எந்தளவு மதிப்பு தரவேண்டும்? நுண்கலையின் வெளிப்பாடு எதற்குப் பயன்படவேண்டும் என கதாசிரியர் உத்தேசித்திருக்கிறார் என்பதைப் பொருத்து இதற்கான பதில் அமையலாம். திசைகாட்டியைப் போல கதையில் வரும் புறக்காட்சிகள் கதையின் நம்பகத்தன்மையைக் கூட்டுவதற்காகவும், கதைக்கு மேலதிக பொருளை அளிப்பதற்காகவும் பயன்படும். தமிழுக்கு கூடுதலாக அகப்புற சித்தரிப்புகள் ஆடிப்பிம்பமாகப் பார்க்கும் மரபை கதைகளுக்குப் போட்டுப்பார்த்து வளர்த்தெடுத்தும் வழிமுறை கைவசம் உண்டு. அக உணர்வுகளும் புறக்காட்சிகளும் உண்மையில் ஆடிப்பிம்பமாகச் செயல்படும் விதத்தில் ஒருங்கிணையும்போது நம்பகத்தன்மையும் கதைக்கு மேலதிக பொருளையும் அவை கொண்டுகூட்டி அளிக்கும். இக்கதையில் பாடல்களின் தன்மையும் அதன் உணர்வுநிலைகளையும் கதாபாத்திரங்கள் மீது சுமத்திப்பார்ப்பதற்கான  சந்தர்ப்பங்களை ஆசிரியர் அதிகம் பயன்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது.

சத்தியம் வாங்கும் நிகழ்வை முன்னிட்டு நாடகீய ஆட்டம் மூலமாகவோ, கதைசொல்லியின் தீவிரத்தன்மையைக் கூட்டும் அகச்சித்தரிப்புகள் மூலமாகவோ, வாழ்வின் முரணைக் காட்டும் விதத்தில் விட்டேத்தியான மனநிலை மூலமாகவோ, அபத்தத்தின் வெளிப்பாடாகவோ இந்த இடைவெளியை அவர் நிரப்பியிருந்தால் பாகேஶ்ரீ மிகச்சிறந்த கதையாக மாறியிருக்கும்.

பாகேஶ்ரீ சிறுகதை, எஸ். சுரேஷ்

பாகேஶ்ரீ சிறுகதையில் வரும் பாடல்கள்