எழுத்து

ஜெயமோகனின் “ஊமைச்செந்நாய்”: தமிழில் ஒரு பின்-காலனியக் குரல்

ஜிஃப்ரி ஹாஸன்

பின்-காலனிய இலக்கியத்தை, குடியேற்ற நாடுகளை அல்லது அதன் மக்களை முக்கிய பேசுபொருளாகக் கொண்டு குடியேற்ற நாடொன்றின் குடிமகனால் எழுதப்படும் இலக்கியங்கள்என இலக்கியக் கோட்பாட்டாளர்கள் வரையறுக்கின்றனர்.

காலனித்துவ ஆட்சிக்குட்பட்டிருந்த நாடாக இந்தியா இருந்தபோதும் பின்-காலனிய இலக்கியங்கள் இங்கிருந்து ஆங்கிலத்தில் வெளிவந்தளவுக்கு தமிழில் வெளிவரவில்லை. இதற்கு முக்கிய காரணம் தமிழின் புனைவெழுத்துகளை சராசரியான மனித வாழ்வும் அதன் உணர்ச்சிகரமான பக்கங்களுமே தீர்மானித்து வந்தன. தமிழ்ச்சிறுகதைகளுக்குள்ளும், நாவல்களுக்குள்ளும் கொட்டிக்கிடக்கின்றன மனித வாழ்வு பற்றிய நூற்றுக்கணக்கான பார்வைகள். இந்த வட்டத்தை  தமிழ்ப் புனைவுலகம் மிக அபூர்வமாகவே மீறியுள்ளது. ஜெயமோகனின் “ஊமைச்செந்நாய்“ தமிழ்ச் சிறுகதை வெளியில் அத்தகையதொரு அபூர்வமான  மீறலே.

காலனித்துவ ஆட்சி பல பரிமாணங்களை உடையது. கீழைத்தேய நாடுகளை ஆங்கிலேயர் தங்களது காலனித்துவத்தின் கீழ் கொண்டு வந்து அங்குள்ள பொருளியல் வளங்களைச் சூறையாடியமை காலனித்துவ ஆட்சியின் ஒரு பரிமாணம் என்றால் அங்குள்ள மக்களின், தனிமனிதர்களின் கனவுகளை, சுயமரியாதையை, வாழ்க்கையை சூறையாடியமை அதன் இன்னொரு பரிமாணமாகும். இவை தவிர வேறு பல பரிமாணங்களும் அதற்குண்டு.

ஜெயமோகனின் ஊமைச்செந்நாய் காலனித்துவத்தின் பல பரிமாணங்களைப் பேசும் கதை. மேற்கில் அதிக மதிப்புமிக்கதாக விளங்கிய யானைத்தந்தம் எனும் பொருள் வளத்தை சூறையாடுவதற்காக வில்சன் எனும் வெள்ளைக்கார துரை  ‘ஊமைச்செந்நாய்’ என அந்த துரையால் அழைக்கப்படும் (அழைக்கப்படும் என்பதைவிட வசைபாடப்படும் என்பதே பொருத்தமானது) சுதேசியான வேட்டையாள் ஒருவனை உதவிக்கு வைத்துக்கொண்டு இந்தியாவின் அடர்வனமொன்றுக்குள் காட்டு யானை ஒன்றை வேட்டையாடும் ஒரு நிகழ்வுதான் இந்தக்கதையின் மையச் சம்பவமாக வடிவங்கொள்கிறது. அதேநேரம் மனிதர்களது கனவுகள் சுய மரியாதை என்பன இன்னொரு விதத்தில் எப்படி மோசமாக சூறையாடப்பட்டன என்பது கதையின் உபபரிமாணமாக வெளிப்படுகிறது. இந்த இரு பரிமாணங்களும் ஒற்றை வடிவங்கொண்டு ஒரு விசையுடன் கதையை நகர்த்திக் கொண்டு செல்கிறது.

வளச்சூறையாடல் என்ற பெருந்தளத்திலிருந்து சுழலும் இக்கதையில் நுண்மையான மனித உணர்ச்சிகள்கூட புறக்கணிக்கப்படாமல் அதற்கே உரிய தீவிரத்துடன் சித்தரிக்கப்படுவது, காடு பற்றிய விபரணங்களின்போது காட்டின் மௌனத்தையும், அதன் ஓலத்தையும் கதையின் சொற்களுக்குள் உள்ளடக்கி இருப்பது, வாசகனைச் சோர்வடையச் செய்யாத கதைமொழி மற்றும் உணர்ச்சிச் சித்தரிப்பு போன்ற காரணங்களால் இந்தக் கதை ஜெயமோகனின் ஒரு மாஸ்டர்பீஸாகவும், தமிழின் ஒரு குறிப்பிடத்தக்க படைப்பாகவும் மாறுகிறது.

ஊமைச்செந்நாயிலிருந்து ஒரு வாசகன் உணர்ந்து கொள்ளக்கூடிய உண்மை காலனித்துவ சுரண்டல் என்பது வளங்களைச் சூறையாடுவதுடனோ, பண்பாட்டுத் திணிப்புடனோ நின்று விடாது ஒரு இனத்தின் மற்றும் தனிமனிதனின் சுய மரியாதையைக்கூட சூறையாடும் வரைக்கும் அதன் எல்லை விரிவுபட்டது என்பதுதான். ஊமைச்செந்நாயின் மையக் கதையாக இந்த உண்மைதான் வரிக்கு வரி அழுத்தமாக சொல்லப்படுகிறது. ஆனால் அது ஒரு பிரச்சாரத்தன்மையாகத் தோற்றங்கொள்ளாமல் ஒரு புனைவுத் தன்மையாகவே வெளிப்படுகிறது. புனைவை கலைத்துவச் செறிவுமிக்கதாய் ஆக்கும் ஜெயமோகனின் வழமையான புனைவு மொழியிலிருந்தும், எடுத்துரைப்பிலிருந்தும் ஒரு நூலளவு வித்தியாசம் இக்கதைக்குள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

வில்சன் எனும் பெயரையுடைய வெள்ளைக்கார துரை மேற்கின் குறியீடென்றால் ஊமைச்செந்நாயை இந்தியாவின் குறியீடாக கொள்ள முடியாது. ஏனெனில், காலனித்துவ சக்திகளை மூர்க்கமாகவும், சாத்வீகமாகவும் எதிர்த்து நின்றதே காலனித்துவ இந்தியாவின் வரலாறாகும். ஆனால் ‘ஊமைச்செந்நாய்‘ கதையின் இறுதியில் அடையும் தீவிரத்தை வேறெங்கும் அடைவதில்லை.

கதையில் வில்சன் பற்றிய விபரணம் காலனியப் பேரரசு பற்றிய விபரணமாக வாசகனின் மனதில் படிகிறது. வில்சன் பிரித்தானியா எனும் காலனியப் பேரரசினதும் வெள்ளை இன மையவாதத்தினதும் (Ethnocentrism) அகமும் புறமுமாக இருக்கிறான். ஆனால் ஊமைச்செந்நாயோ அக்கால இந்தியாவின் அகமும் புறமுமாக இருக்கிறானா என்பதை திட்டவட்டமாகச் சொல்லிவிட முடியாது.

ஆங்கிலேய வெள்ளைத் திமிர் வில்சன் வழியே கதையில் ஆரம்பம் முதல் முடிவு வரை வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

துரை கண்களைச் சிமிட்டினான். பதிலுக்கு நாம் சிமிட்ட முடியாது என்று கதையின் தொடக்கத்திலேயே கதைசொல்லி சொல்லும்போது அது வெள்ளையனுக்கும்-இந்தியனுக்குமிடையிலான  ஒரு சமநிலையின்மையை காட்டுகிறது. அச்சமநிலையின்மையே கதையின் மையப்புள்ளியும் கூட.

துரையின் பாலியல்  தேவைக்காக கிராமத்திலிருந்து அழைத்துவரப்படும் பெண்ணோடு துரை வாய்வழிப்புணர்ச்சியில் ஈடுபடுகிறான். அவனுடன் சமமாகப் படுப்பதற்கு, யோனி வழி புணர்வதற்குக்கூட இந்தப்பெண்கள் கீழானவர்கள் என்ற வெள்ளைத்திமிர் இது போன்று இன்னும் பல இடங்களிலும் வெளிப்படுகிறது.

வில்சன் துரை ஊமைச்செந்நாயிடம் நீ வெள்ளைக்காரப் பெண்ணோடு எப்போதாவது புணர்ந்தாயா?” எனக்கேட்கிறான். ஊமைச்செந்நாய் வழமை போன்று மௌனமாக இருக்கிறான்.

 ”உன் கண்களைப்பார்த்தால் அவர்கள் கூப்பிடுவார்கள். நீ எப்போதாவது வெள்ளைப்பெண்ணுடன் படுத்தாய் என்று தெரிந்தால் நான் உன்னை தேடிவந்து கொல்வேன்…”

என்கிறான் வில்சன் துரை. ஒரு இந்தியப் பெண்ணுக்கும் வெள்ளையனுக்கும் பிறந்தவன்தான் ஊமைச்செந்நாய். அதனால் ஓரளவு வெள்ளையனின் சாயலை ஊமைச்செந்நாய் பெற்றிருந்தது வில்சன் துரையால் சகித்துக்கொள்ள முடியாமல் போகிறது. ஒரு வெள்ளையன் ஒரு போதும் அடிமையாக இருப்பதில்லை, என செந்நாயை நோக்கி கத்துகிறான் துரை.

இப்படி கதையின் பல இடங்களிலும் வெள்ளைத் திமிர், காலனிய அகம்பாவம் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதற்கு எந்த விதத்திலும் குறைவுபடாமல் ஊமைச்செந்நாயின் தாழ்வுணர்ச்சியும், அடிமை மனப்பான்மையும் சமாந்தரமாக வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

கதையின் மையக் கதாபாத்திரமான ஊமைச்செந்நாய் எனும் கதைசொல்லிக்கு வெள்ளையன் பற்றிய பிம்பம் உயர்வானதாகவே இருக்கிறது. தாழ்வுணர்ச்சியுள்ள கதாபாத்திரமாகவே பல இடங்களில் வாசகனுக்குத் தென்படுகிறான். அவனது தாழ்வுணர்ச்சி என்பது ஒருவிதத்தில் அன்றைய இந்தியாவின் தாழ்வுணர்ச்சியாக ஒரு வாசகன் கருதவும் இடமுண்டு. ஊமைச்செந்நாய் என அவனுக்கு வழங்கப்பட்ட அடையாளத்தைக்கூட அவன் எதிர்த்து நிற்பதில்லை. புறத்திலிருந்து அவன் மீது திணிக்கப்பட்ட அடையாளம் அது. தனது அடையாளத்தை தன் புறத்திலிருந்து, தனது சுயத்திலிருந்து அவன் சூடிக்கொள்வதில்லை. காலனித்துவவாதியால் தன் மீது திணிக்கப்பட்ட அந்த அடையாளத்தை ஒருவாசகன் இந்திய தேசத்தின் மீதான, அதன் குடிமக்களின் மீதான அவமானத்தின் அடையாளமாகவே காண்கிறான். கதை நெடுகிலும் ஊமைச்செந்நாய் மௌனமாகவே அதைக் கடந்து சென்று விடுகிறான். ஆனால் ஒரு கீழைத்தேய வாசகன் பெரும் அதிர்ச்சியுடன் அவனது மௌனத்தை எதிர்கொள்கிறான். ஊமைச்செந்நாயின் மௌனத்தை அவனால் இலகுவில் கடந்துசெல்ல முடிவதில்லை.

கதைசொல்லியான ஊமைச்செந்நாய் வில்சன் துரையைப் பற்றிச் சொல்லும் போது-

அவனுக்கு நாற்பது வயதுதான் இருக்கும். ஆனால் நம்மூரில் நாற்பது வயதில் இருபது வயதான மகன் வந்து அவனுக்கும் பிள்ளை பிறந்து தாத்தா ஆகி மிச்சமிருக்கும் நாட்களை எண்ண ஆரம்பித்திருப்பார்கள். தொப்பை சரிந்து தாடைக்கு கீழே சதை தொங்கி கண்ணுக்கு கீழே கறை விழுந்து தெரிவார்கள். துரை இறுக்கமாக பனைநாரால் பின்னிச் செய்தவன்போல இருந்தான். ”

காலனித்துவ பேரரசின் மீதும் வெள்ளையினத்தின் மீதும் ஒரு எல்லையற்ற மயக்கம் குடியேற்றநாட்டு மக்களின் மனங்களில் மறைமுகமாக ஏற்றப்பட்டிருந்ததைத்தான் இந்தவரிகள் வெளிப்படுத்துகின்றன. காலனித்துவத்தின் ஒரு உளவியல் பரிமாணம் அது. அது நம்மை அறியாமல் நமக்குள் வந்துவிடுவது. ஜெயமோகனால் கூட அதனை தவிர்க்கமுடியாமல் போய்விட்டது.

காலனிய ஆட்சியாளர்களுக்கும், வெள்ளைத்திமிருக்குமெதிரான இந்திய மிடுக்கு கதையின் எந்தவொரு புள்ளியிலும் வெளிப்படுவதாக இல்லை. கதைமுடிவில் ஊமைச்செந்நாய் எடுக்கும் முடிவு இந்தியாவின் மிடுக்கைப் பறைசாற்றப் போதுமானதாக இல்லை. ஊமைச்செந்நாயையும் அவன் தேசத்தையும் கன்னா பின்னா என்று கடுமையாக அவமரியாதை செய்யும் வில்சனை ஒரு சந்தர்ப்பத்தில் ஊமைச்செந்நாய்தான் சாவின் விளிம்பிலிருந்து மீட்டுக்கொண்டு வருகிறான். எதிர்ப்புக் குணமற்ற முழுமையாக சரணாகதியடைந்த பாத்திரம் அவன்.

கதையின் முடிவில் செந்நாய் உயரத்திலிருந்து சறுக்கி கீழே விழ நிகழும்போது பதிலுக்கு துரையும் அவனைக் காப்பாற்றுவதற்கு முயற்சிக்கிறான். ஆனால் செந்நாயோ அவன் தயவால் உயிர் பிழைப்பதைவிட சாவை அல்லது சுயமாகத் தப்பித்தலைத் தெரிவு செய்து, கடைசியில் துரையை சபித்துவிட்டு மரணப் பள்ளத்தாக்கை நோக்கி விசையுடன் இறங்குகிறான்.

ஊமைச்செந்நாய் வில்சனை சாவிலிருந்து மீட்டெடுத்ததற்கும் வில்சனால் காப்பாற்றப்படுவதை தவிர்த்துக்கொண்டமைக்கும் வேறு பண்பாட்டுக்காரணிகள் இருக்கக்கூடும். ஆனால் வாசகனுக்கு அவை பூடகமானவை.  ஊமைச்செந்நாயின் அந்த முடிவு துரையினதும் அவன் தேசத்தினதும் ஆணவம், ஒரு எளிய மனிதனின் முன்னால் எதுவுமே இல்லை என்பதைச் சொல்வதோடு அவனை (ஊமைச்செந்நாயை) ஒரு சரித்திரச் சித்திரமாகவும் மாற்றிவிடுகிறது.

எனினும் கதையில் இந்தக்கட்டம் காலனித்துவ அடக்குமுறைக்கெதிரான இந்தியாவின் சுதந்திர உணர்வை இப்படியான அடிமை உணர்வுள்ள மனிதர்களைக்கொண்டு மாற்றீடு செய்வது ஒரு வரலாற்று அபத்தம் என இன்னொரு கோணத்திலும் வாசிக்கப்பட முடியும். கதைக்குள் அதற்கான சாத்தியங்கள் திறந்தே கிடக்கின்றன.

கதையின் ஒட்டுமொத்தத்தையும் ஒரு அறிவுத் தளமன்றி உணர்வுத்தளமே தீர்மானித்திருக்கிறது.  கதைக்குள் ஒரு பின்காலனிய அரசியல் பரிமாணம் அதன் எல்லாப் பண்புகளோடும் இல்லாமல் இருக்கிறது. காலனிய முதலாளித்துவ அரசியல் மீதான விமர்சனமாக கதை அமைந்துவிடாமல் வேறொரு தளத்துக்கு ஜெயமோகன் கதையை நுட்பமாக நகர்த்திக்கொண்டு செல்கிறார். ஊமைச்செந்நாய் என வில்சன் துரையால் கிண்டலாக அழைக்கப்படும் சுதேசி ஊழியமற்ற ஒரு வேட்டை உதவியாளனாகவே வருகிறான். அவன் தனது தன்னுணர்வு சார்ந்தும், உழைப்பு சார்ந்தும், இருப்பு சார்ந்தும் பல பரிமாணங்களில் சுரண்டப்படுகிறான். சுருக்கமாகச் சொல்வதானால் வில்சன் துரை எனும் ஆங்கிலேயப் பேரரசின் காலனித்துவப் பசிக்கு முழுமையாக அவன் இரையாகிறான். இந்த அரசியல் கதைக்குள் ஊடுபாவி இருக்கிறது. ஆனால் அதுவே கதையாக இருப்பதில்லை. மனித உணர்ச்சிசார்ந்த சித்தரிப்புத்தான் கதையை நகர்த்தும் மைய விசையாகவுள்ளது.

இக்கதை முடிவடைவதில்லை. ஊமைச்செந்நாயின் கதை மட்டுமே முடிகிறது. கதையின் தலைப்பாக ஊமைச்செந்நாயை வைத்து கதையை முடித்திருக்கிறார் ஜெயமோகன். மற்றப்படி கதை மேலும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஊமைச்செந்நாயின் கதையை முடிப்பதன் மூலம் கதைக்கு ஒரு நிறுத்தம் மட்டுமே ஏற்படுகிறது.

கதை காலனித்துவச் சில்லுகளாலேயே உருண்டு செல்கிறது. கதாபாத்திரங்கள் காலனிய சுரண்டலை ஏதோ ஒருவிதத்தில் அனுபவிப்பவர்கள். அந்தவகையில் பின் காலனிய புனைவுகளின் தன்மைகளைப் பெற்றதாகவுள்ளது. ஒரு புனைவாக அது பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது.

ஐரீன்

காலத்துகள்

தொடர்ந்து ஐந்து கிராண்ட் ஸ்லாம் வென்றிருந்த  ஸ்டெப்பி கிராப் அன்று பிரெஞ்சு ஓபன் பைனலில்  தோல்வி அடைந்திருந்தார். சென்றாண்டைப் போலவே இந்த வருடமும் நான்கு க்ராண்ட் ஸ்லாம்களையும் வென்று விடுவார் என்று உறுதியாக நம்பியிருந்தேன்.

‘போன வர்ஷம் அவ ஜெயிச்சதெல்லாம் ப்ளூக்குனுதான் அப்போலேந்து சொல்லிட்டேருக்கேன், ஒலிம்பிக்ஸ் வேற’, அப்பா என்னிடம். க்றிஸ் எவர்ட் ரசிகர்.

கருப்பு வெள்ளையில் பரிசளிப்பு விழா. வெற்றி பெற்ற, வாயில் நுழையாத மிக நீளமான பெயர் கொண்ட ஸ்பெயின் நாட்டுப் பெண் அழுது கொண்டிருந்தார். ஸ்டெப்பி அழுவதையும், அவர் பார்வையாளர் பகுதியில் ஏறிக் குதித்து அங்கிருக்கும் அவரது தந்தையைக் கட்டிக்கொள்வதையும் பார்த்ததுதான் அதிகம்.  இன்று டிவி காமிரா அவர் பக்கம் செல்லும்போதெல்லாம் எங்கோ நிலைகுத்தி இருந்த பார்வை. மூன்றாவது செட்டில் வெற்றியின் விளிம்பைத் தொட்ட பின்னான தோல்வி.

எல்லாம் முடிந்து டி.வியை அணைக்கும் நேரத்தில் வீட்டு உரிமையாளர் தண்டபாணி எங்கள் போர்ஷனுக்கு வந்தார். காலை நேரங்களில் கோமணம் மட்டும் அணிந்து கொண்டு வீட்டு வாசலில் உள்ள சாக்கடை கால்வாயை நோண்டியபின் மூன்று கீழ் போர்ஷன்கள் வழியாக சிறு நடை, பின் தன் மாடி போர்ஷனுக்குச் சென்று விடுவார். அவருடன் வந்தவர் சிறிய கை கொண்ட, முட்டிக்கு கீழே கொஞ்சம் நீளும், கவுன் அணிந்திருந்தார்.

பெரிய, சின்ன மணியக்காரத் தெரு இரண்டிலும்  இரவு ஆடை, சுடிதார் அணியும் இருவது முப்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பத்து  பேருக்கு மேல் இருக்க மாட்டார்கள். தேன் நிறம், விரித்து விடப்பட்ட தலைமுடி, துருத்திக் கொண்டிருக்கும் கன்ன எலும்புகள். கை நரம்புகள் தெரிந்தன. மிசஸ். கோம்ஸ், பள்ளி ஆசிரியை.

‘இவனும் ஒங்க ஸ்கூல்தான்’

‘என்ன க்ளாஸ்?’

‘எய்த்து’

‘ஐ டேக் பார் கே.ஜி’

ரெண்டு தெரு தள்ளிதான் பள்ளி என்பதால் இங்கு குடிவந்திருக்கிறார். இரு பிள்ளைகள்- ராபர்ட், ஐரீன். இருவரும் நல்ல சிவப்பு நிறம்.’நல்ல காலம்டா அவங்க ஹை ஸ்கூலுக்கு எடுக்கல’

‘எப்டியும் மாட்ன நீ, ஸ்கூல்ல சும்மா எதாவது பண்றத பாத்தாக்கூட, வீட்ல சொல்லப் போறாங்க பாரு’.

‘ஆங்க்லோ இண்டியன்தான?’

‘ஆமா’

‘க்ராஸ்ஸு’

‘டேடேய்..’

‘சும்மா சொன்னேன்டா’

‘எங்க வீட்ல தவ்ற மத்த மூணு போர்ஷன்லையும் நான்-வெஜ் உண்ட’

அவர்கள் குடி வந்த இரு நாட்களில் தண்டபாணிக்கும் அவர் மகனுக்கும் வழக்கமான  சண்டை. மாடியில் இருந்து வரும் இரு தரப்பு  வசவுகள், மாமியாரும் மருமகளும் பக்கபலம். மகனுக்கு  நிலையான வேலை கிடையாது. எப்போதும் சிவந்த கண்கள், கலைந்த தலைமுடி. ஓரிரு தடவை தந்தையை அடிக்கச் சென்றதும் உண்டு. பீஸ்ட். இரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை. மூன்று போர்ஷன்களில் வரும் வாடகையை

வைத்துதான் குடும்பம் நடக்கிறது.

‘குடி இருக்றவங்க புள்ளிங்க இங்குலீசு மீடியம் படிக்குது, ஏன் புள்ளக்கு என்ன கொறச்சல்?’

‘எளக்காரம்’

‘காச கொடுக்க மாட்டேங்கறான் கம்நேட்டி’

‘வெளில நிக்காத உள்ள வா,’ அம்மா.

‘இங்க ஷிப்ட் பண்ணப்ப எம்பேரன தமிழ் மீடியம்லதான் போட்ருக்கேன், எதுக்கு இங்கிலீஷ்னு கேட்டான்,’ அப்பா.

‘அப்பா குடுக்க மாட்டேங்கறார்னா, ஒழுங்கா வேலைக்காவது போணும்,’ என்று சொல்லிவிட்டு சமையலறைக்குள் சென்றார்

‘எல்லார்க்கும் வேல செய்ற பொண்டாட்டி கடப்பாங்களா’

ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசும் மூவரின் உச்சரிப்பிற்கு விரைவில் பிடிபட்டு விட்டது. ‘அன்க்கீகீள்’ என்று ராபர்ட் என் தந்தையை அழைப்பதும், கழிவறைக்குச் செல்லும்போது சிறிய பாட்டிலில்  பினாயிலை அவன் எடுத்துச் செல்வதும் சில நாட்களில் புதுமை இழந்தது.

தாம்பரத்தில் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்த ஐரீன் காலையில் சீக்கிரமாக கிளம்பி விடுவாள். ராபர்ட் செங்கல்பட்டு கல்லூரியில் இறுதியாண்டு. கல்லூரிக்கு எப்போதும் தடி ஜீன்ஸும் அடர்த்தியான நிறத்தில் காலர் வைத்தடி-ஷர்ட்டும் தான். பள்ளியில் இருந்து நான் திரும்பும் போது ராபர்ட் மட்டும் எதையாவது படித்துக் கொண்டோ, மேற்கத்திய பாடல்களை கேட்டுக் கொண்டோ இரண்டு அறை மட்டுமே கொண்ட அவர்கள் போர்ஷன் வாசலில் அமர்ந்திருப்பான்.

ஆரம்பத்தில் பார்க்கும்போது தலையசைத்தல்கள், ஓரிரு வார்த்தை பரிமாற்றங்கள்  மட்டும். அடுத்த மூன்று வாரங்களில் ஸ்டெப்பி விம்பிள்டன் வென்றதை இருவரும் கொண்டாடினோம்.

‘ராபர்ட் ஆர் பாப்’

‘பாப்ப்பா?’

‘பெட் நேம்’

‘செட் ஆகலையே ராபர்ட்டுக்கு’

‘பாப்பி. ஐ லைக் பாப்’

‘லேடிஸ் நேம் இல்ல?’

‘போத்’

‘இந்த பேர்ல இந்தி படம் வந்த்ருக்கு’

‘தெரியும், நைஸ் சாங்க்ஸ், மாம் லைக்ஸ் தி மூவி எ லாட்’

வீடு திரும்பியபின் அவனுடன் கொஞ்ச நேரம்  பாட்டு கேட்டுக்கொண்டிருந்து அவனுடன் சேர்ந்து  தலையாட்டி வைப்பேன். தமிழ், ஹிந்தி திரைப்படப் பாடல்களிடம்  அத்தகைய விலக்கம் இல்லை அவனுக்கு, எங்கள் வீட்டில் உள்ள கேசட்டுக்களை வாங்கி கேட்பான். டப்பா ஸ்கூலுக்கோ, ஸ்ரீனிவாசா  க்ரவுண்ட்டுக்கோ கிரிகெட் ஆடப் போகும்போதும் என்னுடன் வந்து சும்மாவேனும் அமர்ந்திருப்பான்.

அவனையோ, ஐரீனையோ  தேடி யாரும் வருவதில்லை. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை  வார நாளொன்றின் மாலையில் ஒருவர் வந்து செல்வார். பெல்டின் மீது பிதுங்கும் பெரிய தொப்பை, நல்ல நிறம், கைகளில் அடர்த்தியாக சுருட்டை சுருட்டையாக  கருப்பு முடிகள்.

‘ஆர் அங்க்கீள் டேவிட்’

ஞாயிறு காலை நூலகத்திற்கு போவதை வழக்கமாக வைத்திருந்தேன்.’லெட்ஸ் கோ இன் தி ஆப்டர்நூன்’  என்றான் ராபர்ட்.’அவங் கூட போகாத’ என்றாள் ஐரீன்.

‘தனியா போனா போர் மேன், வெயிட் பார் மீ’

அவனுடனேயே ஒரு மணி வாக்கில் கிளம்பினேன்.

‘பாப் டோன்ட் கெட் ஹிம் இன் ட்ரபுள்’ .

‘வி வில் ஹேவ் பன் டோன்ட் வர்றி’

ஏதோ நூலை படித்துக்  கொண்டு அவன் அமர்ந்திருக்க, நான் புத்தகங்களை தேடிக் கொண்டிருந்தேன். கண்காணிப்பாளர் மதிய உணவிற்கு சென்று விட்டார், மீதமிருந்த இரண்டு பேரும் புத்தகங்களை வைத்து விட்டு கிளம்பினார்கள். ராபர்ட்  அறையில் மூலையில் இருந்த அடுக்கிற்கு சென்று இடுக்கிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து பேன்ட்டினுள் செருகிக் கொண்டான். நான் பார்ப்பதை கவனித்து அருகில் வந்து  கண்ணடித்தான். அவன் வயிறு பிதுங்கி இருப்பது போல் தோன்றியது.

‘புக்ஸ் எடுத்துடியா, ஷால் ஐ வெயிட் அவுட்சைட்?’.

‘இல்ல தோ கெளம்பலாம்’ மூன்று கார்டுகளில் ரெண்டிற்கு மட்டும்தான் புத்தகம் எடுத்தேன்.

என்ட்ரி  போட்டுக் கொண்டிருக்கும்போது, ராபர்ட் வெளியே சென்று நின்று கொண்டான். சிறிது தூரம் நடந்த பின் புத்தகத்தை எடுத்து என்னிடம்காட்டி சிரித்தவனிடம், ‘கரெக்ட்டா எப்படி எடுத்த?’

‘வில் கீப் இட் தேர் மேன், தென் சம் டேஸ் லேட்டர் வந்து எடுத்துப்பேன்’

மாதத்தில் ஒரு முறை என்னுடன் நூலகத்திற்கு வருவான். அன்று மட்டும் நான் ஒன்றோ இரண்டோதான் புத்தகங்கள் எடுப்பேன்.

‘கரெக்ட்டா வேணும்னுதானே லஞ்ச் டைம்ல வர’

‘ஆஹ், மை ஷெர்லாக்’

நானும் ஒரு புத்தகத்தை ஒளித்து வைத்துக் கொள்கிறேன் என்று சொன்னதற்கு, ‘நோ நோ நீலாம் இத பண்ணக் கூடாது’

‘ஜாலிக்குதான பாப்’

‘தென் ஐ வில் கோ அலோன்’

அந்த ஞாயிறும் ராபர்ட்டும் நானும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தோம். ஒரு முதியவர் முடிச்சை அவிழ்த்துப் பார்த்து மீண்டும் கட்டியபடி முன்னால் சென்று கொண்டிருந்தார்.

‘ஹே, ஆஸ்க் தட் ஓல்ட் மேன் டு ஸ்டாப்’

ஓடிச் சென்று அவரை நிறுத்தினேன்.

‘என்ன தம்பி என்ன வேணும்?’ வயது அறுபதிற்கு மேல் இருக்கும்.

இரண்டு ரூபாய் நாணயத்தை நீட்டி, ‘கீழ் போட்டீங்க’ என்றான் ராபர்ட்.

முடிச்சை அவிழ்த்து  மீண்டும் பார்த்து ‘நீங்களே எடுத்துக்காம குடுத்தீங்களே’

செட்டித் தெருவை தாண்டி இருந்தோம்.

‘ஏன் சிரிக்கற’

‘ஒண்ணு..ல  ராபர்ட்’

‘யூ  இம்ப்’. அவனும் சிரிக்க ஆரம்பித்தான்.

மண்டையைப் பிளக்கும் மதிய வெயிலில் ஆளரவமற்ற தெருவில் நடந்து கொண்டிருந்தோம்.

இரு வீட்டிலும் அங்கமுத்து திரையரங்கில் மாலைக் காட்சி பார்க்க முடிவு. டிக்கெட் வாங்க நாங்களிருவரும் முன்னதாக வெளிவந்து இரு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டாலும் நல்ல கூட்டம், பிரபலமான பாடல்கள். நுழைவாயில் படிக்கட்டில் நின்றபடி, ‘ஸ்டே ஹியர்  கீப் எ பேர்ட்ஸ் ஐ வியு பார் தெம், நா டிக்கெட் வாங்கறேன்,’ என்றதில் ‘பேர்ட்ஸ் ஐ வியுவின்’ அர்த்தம் பிடிபட   சில கணங்கள் ஆனது. ஐரீன் அருகே அமர்ந்துதான் படம் பார்த்தேன். படத்தின் ஆரம்பத்திலும், இறுதியிலும் தற்கொலைச் சம்பவங்கள். இரண்டு தடவையும் அவளின்  ‘ஊ’, ‘காட்’.  திரும்பி வரும்போது படத்தின் இசை பற்றி ராபர்ட் பரவசமாக பேசிக் கொண்டிருந்தான். குறிப்பாக நாயகன்-நாயகி நடனமாடும் வரிகள் இல்லாத  இசைக் கோர்வை குறித்து ‘ப்ளட்டி குட்’. ஐரீன் எதுவும் பேசாமல் வந்தாள்.

‘ஹீரோ இஸ் அ லூசர்’

‘பாப், ஹீரோயின் ரெண்டும் கூடத்தான்’

‘ஐரீன் நீ என்ன சொல்ற?’

‘ஷட் அப் பாப்’

‘ஏன் கோவப்பட்ற’

‘வில்லன்ட்ட சண்ட போட்டு செத்தாக்கூட பரவால்ல பாப். வேஸ்ட் இந்தாள், சண்டையே போடத் தெரியாது’ என்று என்னுடைய ஆதர்ச நட்சத்திர நடிகர் அந்தச் சூழலை எப்படி அதிரடியாக  சமாளித்திருப்பார் என்று விவரித்தேன்.

‘கரெக்ட்டா சொல்றான் பார்’

‘இன்சென்சிடிவ் பிக்ஸ் போத் ஆப் யு’

வீடு வந்து சேரும் முன் அவளுடன் இயல்பாக பேசத் துவங்கி இருந்தேன்.

மேட்டுத் தெரு ஐஸ் பால் கடைக்கு சென்று சொம்பில்  குளிர்ந்த பால் வாங்கி வருவது, சின்ன மணியக்கார தையல் கடை என அவளுடன் விடுமுறை நாட்களில் அலைந்தேன். ‘ஒ யூ ஹவ் ப்ரோக்கன் மை ஹார்ட்,’ என்று ஊளையிடுவான் ராபர்ட்.

வீட்டில் பெரியவர்கள்தான் என் பள்ளிக்கு முன்பாக இருக்கும் காப்பி அரைக்கும் கடைக்கு செல்வார்கள்.  இந்த முறை தனியாக சென்று வருவதாக கெஞ்சி அனுமதி பெற்று கொண்டு ஐரீனிடம், அவள் வருகிறாளா என்று கேட்க, அவள் தயார்.

பில்டர் காபி மீது அவளுக்கு பிரியம்.  கடையின் இரண்டாம் படிக்கட்டில் போடப்பட்டிருந்த ஸ்டூலில் அமர்ந்தாள். கடைக்காரரிடம் அரைக்க வேண்டிய விதம், அளவுகளை  சொன்னேன்.

‘எப்பமே நான்தான் வருவேன் இங்க’

‘நைஸ், க்ரேட் ஸ்மெல், இங்கேயே ஒக்காந்திருக்கலாம் போலிருக்கு’

‘யா’

‘அதுதான் மிஸ் எடுக்கற கிளாஸ்’

‘யுவர்ஸ்’

‘அது மேல, தர்ட் வரைக்கும்தான் இங்க, ஹை ஸ்கூல்லாம் பர்ஸ்ட், செகண்ட் ப்ளோர் ‘

சைக்கிளில் வந்து கொண்டிருந்த கஞ்சாவைப் பார்த்ததும் கடைப்பக்கம் திரும்பினேன். சைக்கிள் பெல் ஓசை.

‘ஹி இஸ் காலிங் யு’

அவனருகில் சென்றேன்.

‘என்னடா’

‘சும்மா வெளில ஒரு ரவுண்ட்’

‘இவங்க தான் மிஸ் பொண்ணா?’

‘ம்ம், சைக்கிள் ப்ரேக்கு சரி இல்லையா? லூசா இருக்கு’

‘இல்லடா’

‘கூப்டறாங்கடா’

‘நீ கெளம்பு’

‘யுவர் பிரெண்ட்?’

ஸ்டாண்ட் போட்டான்.

‘மை கிளாஸ்மேட் கஞ்சா’

‘கஞ்சா?’

‘மை நேம் இஸ் ரகுராமன்’

‘பின்ன ஏன் அப்டி கூப்டற?’

‘சொல்லட்டுமாடா’

‘சும்மா ஜோக்கடிக்கறான்’

‘பட் தேர் மஸ்ட் பி சம் ரீசன் நோ’

‘யா’

‘நாளக்கு இஸ்கூல் வருவேல்ல’

‘ஏன் அவன டீஸ் பண்ற, போய்ட்டான் பாரு’

‘பிரெண்ட்தான’

‘வை இஸ் தட் பாய் ஸ்டேரிங் அட் மீ’

‘தெர்ல, சும்மா நிக்கறான்னு நெனக்கறேன்’

‘டேய் என்னடா இங்கேயே நிக்கற, கெளம்பு போ’

இரண்டடி தள்ளிச் சென்று நின்று தெரு முனையை பார்த்தான்.

‘ஐரீன் கார்னர்ல பாரு’

லுங்கி கட்டிக் கொண்டு இரண்டு இளைஞர்கள், இவர்கள் பக்கம் பார்த்தபடி. ஒருவன் எங்கள்பால்காரம்மாவின் கடைசி மகன். போன வருடம், லுங்கி அவிழ்ந்து மேலே முழுக்கை சட்டையுடன் கையில் பெரிய கம்புடன் அடுத்த தெருவுக்கு ஓட முயற்சித்துக் கொண்டிருந்தவனை

பால்காரம்மாவும் மற்றவர்களும் அடக்கிக் கொண்டிருந்தார்கள். சற்று அமைதியான பின்பும் அவர்கள் கொடுத்த லுங்கியை அணியாமல்

தூக்கி வீசிக் கொண்டிருந்தான். குச்சி குச்சியான கால்கள்.

அந்தச் சிறுவனை அருகே வருமாறு ஐரீன் சைகை காட்டினார்.

‘வாடா ஒண்ணும் பண்ண மாட்டாங்க’

‘ஏன் நிக்கற’

‘இல்லக்கா அவங்கதான்’

‘சொல்ரா’

‘அக்கா பேரு என்ன, வயசு என்னனு கேக்கச் சொன்னாங்க’, நாலணா நாணயத்தை எடுத்துக் காட்டினான்.

‘என்ட்ட நேரா கேக்கச் சொல்லு போ’

‘அதெல்லாம் வேணாம், அக்கா பதில் சொல்லலன்னு மட்டும் போய் சொல்லு’

‘  நீ போய் அப்படியே சொல்லு’

‘ப்ரச்சன ஆயிடும்’

‘நத்திங் வில் ஹேபென்’

திரும்பிச் சென்றவன் அவர்கள் அருகில் சென்று ஏதோ சொல்லி விட்டு ஓடினான்.

‘திக் ப்ரவ்ன், லுக்ஸ் யம்மி’. பிளாஸ்டிக் உறைக்குள் பொதிந்து வைக்கப்பட்ட காபிப் பொடியை வாங்கிய போது உள்ளங்கையில் உஷ்ணம். வீடு செல்லும்வரை இருக்கும்.

‘இது என்ன?’

‘சிக்கரி’ மற்றொரு சிறிய உறையில்.

‘வாட்ஸ் இட், ஊஸ்’

‘இதையும் மிக்ஸ் பண்ணுவாங்க’. வீட்டிற்குச் சென்றவுடன் முழுதாக கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தெரு முனையில் வேறெங்கேயோ பார்த்தபடி   பால்காரம்மா பேரனும் அவன் நண்பர்களும்.

‘சைட்ல பாக்காத, லுக் ஸ்ட்ரைட்’

பத்தடி நடப்பதற்குள் சீட்டி ஓசை, உற்சாகச் சிரிப்பு.

‘வேணாம் அவங்க பொறுக்கிங்க’

நான் அங்கேயே நின்று விட்டேன். ஐரீன்   ஏதோ கேட்கிறாள். பதில் இல்லை. மீண்டும்  கை நீட்டி ஏதோ கேட்க, ஏதோ வாயசைக்கிறார்கள்.

அருகே சென்றேன்.

‘சின்னப் பையன்கிட்ட கேக்க சொன்னீங்கள்ல, ஆஸ்க் நவ்’

‘என்னடா சொல்லுது இது?’

‘அது இதுலாம் பேசாத’

‘நீ என்ன சொல்றேன்னு புர்ல’

‘ஓட்றானுங்க பாரு’

‘புல்லீஸ்’

டிசம்பர் மாத மத்தியில் நாடார் கடையில் சிவப்பு கலர் பேப்பர் வாங்கி வெட்டப்பட்டு அவர்கள் போர்ஷன் முன்பும், இயேசு படத்திற்கும் தோரணம். கிறிஸ்த்மஸ் ஸ்டார். நானும் வீட்டில் உள்ள சாய்பாபா படத்தின் சட்டகத்தின்மீது கலர் பேப்பர் ஒட்ட  முயற்சித்து கோந்து சரியாக பதியாமல் அரை மணி நேரத்திற்குள் பாதி ஒட்டியபடி ஊசலாட ஆரம்பித்தது.

‘என் கிளாஸ்மேட்ஸ் ரெண்டு பேர் அவங்க வீட்டுக்கு சான்டா, கரோல்ஸ் பாட்றவங்க வருவாங்கன்னு சொல்வாங்க’

‘இங்க சான்டா வருவாரா’

‘ஹன்ட்ரட்ஸ் ஆப் சான்டா’

‘ரீல் வுடாத’

‘ட்ரூ’

‘இந்தளவுக்கு பீலா விடக்கூடாது, ஐரீன் சான்டா வருவாரா’

‘நெக்ஸ்ட் இயர் பாக்கலாம்’

‘பழைய வீட்ல’

‘நோ. சான்டா ஹேட்ஸ் அஸ்’

‘பாப். சும்மா சொல்றான்’

கிறிஸ்த்மஸ்சுக்கு முந்தைய நாள் முன்னிரவு அவர்கள் வீட்டில் பாடல்களுக்கு  ஆட்டம். டேவிட் வந்திருந்தார். அந்த வயதிலும் மிசஸ். கோம்ஸ் டேவிட்டுடன் மெல்லிசை பாடலொன்றுக்கு அசைந்தபடி நன்றாகவே ஆடினார். ராபர்ட்டும் ஐரீனும்  துள்ளலான இசைக்கு. ‘பை தி ரிவர்ஸ்’ என தொடங்கும் பாடலைத் தவிர மற்றனைத்தும் மனதில் தங்காதவை. என்னையும் ஆடச் சொன்னார்கள். சில நிமிடங்கள் உடம்பையும் தலையும் உலுக்கியபின் சென்றமரும்போது சம்பிரதாய கைதட்டல்கள்.

‘அனதர் மைகேல் ஜாக்சன் இன் தி மேக்கிங்’.

மாலை ஐரீனுடன் வெளியே சென்றுவிட்டு  சந்திற்குள் நுழையும்போது பக்கத்து வீட்டு ராட்சஸி கூப்பிட்டார்.

‘ராத்ரி பெரியவர் ஒலாத்தறாரு வீட்டு வாசல்ல, கல்லுப்பு போட்டு வைங்க’

‘ஹவுஸ் ஓனரா’

‘இல்ல, ஸ்னேக்க சொல்றாங்க. நைட் அந்த பேர சொல்லமாட்டங்க’

‘ஹி இஸ் ஏ ஸ்னேக் டூ’

‘ஏன்?’

‘நத்திங்’

‘உப்பு போட்டா வரமாட்டாரு’

‘நாங்க எந்த பாம்பும் பாக்கலையே, என்ன பாம்பு?’

‘பெரியவர் எல்லார் கண்ணுக்கும் தெரிய மாட்டார்”

ராட்சஸிக்கு மாந்த்ரீகம் தெரியும் என்ற தெருப்  பேச்சை நம்பச் செய்யும் உருவம். எங்கள் இரு வீட்டிற்கும் பொதுக் கிணறு. ராட்சஸி வீட்டு மா, தென்னை மரங்களுக்கு நிறைய தண்ணீர் செலவாகி  விடுகிறது என்று தண்டபாணி கோடைக் காலங்களில் கிணற்றை தூர் வாரும்போது முணுமுணுப்பார். ராட்சஸியிடம் நேரடியாகச் சொன்னதில்லை.

‘அவங்களுக்கு மேஜிக் தெரியும் ‘

‘விச்?’

‘அப்டித்தான் சொல்றாங்க’

உப்பை வாசலில் போடாவிட்டாலும் எந்த பாம்பும் தென்படவில்லை.

‘எப்டி அவங்கள்ட்ட தைரியமா பேசறீங்க’

‘நீதான் பயமுறுத்தற, எனக்கு எந்த டிப்ரன்ஸ்சும் தெரில’

‘குமாஸ்தாக்கு பர்ஸ்ட் வைப் இருந்தாங்களாம், அதப் பத்திலாம்…’ ராட்சஸி கணவர் வக்கீலிடம் குமாஸ்தாவாக வேலை பார்த்தார்.

‘ஹு நோஸ், அவங்ளுக்கு எப்டி தெரியும்’

‘…’

‘ஷி இஸ் வெரி லோன்லி அவ்ளோதான்’

மிசஸ். கோம்ஸின் போர்ஷனுக்கு முன் சிறிய கொட்டகை.  தண்டபாணி முன்பு மாடு வளர்த்த இடம். வீட்டை விரிவாக்கி கட்டியபின் கொட்டகையை இடிக்க மனமில்லை. இப்போது குடியிருப்பவர் உபயோகத்திற்கு மாவாட்டும் கல்லும் அம்மிக் கல்லும், அவருடைய வேறு பழைய பொருட்களும். அரைக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

கோவணத்துடன் கொட்டகையில் இருந்து தண்டபாணி வெளியே வந்து போர்ஷன் வாசலில் நின்று, நெஞ்சை நீவியபடி உள்ளே ஏதோ சொல்லி விட்டுச் சென்றார். வழுக்கை, தொங்கும் மார்பகங்களில் சில வெள்ளை முடிகள், தொந்தி, கருத்த பிருஷ்டங்களில் தேமல்.

‘நாடார் கடக்கு போறேன் எதாவது வாங்கணுமா’

ஐரீன் தோளைக் குலுக்கினாள்.

‘ஹி இஸ் டுயிங் இட் ஆன் பர்பஸ்’

‘மா’

‘இங்க பூச்சி ஜாஸ்தி, போர்த் படிக்கும்போது என்ன நட்டுவாக்கிளி கொட்டிடுச்சு’

‘அப்டின்னா’

‘ஸ்கார்பியன் டைப்’

‘இங்க பாக்க என்ன இருக்கு?’

‘முன்னலாம் அவர் காத்தால மட்டும்தான் இங்கெல்லாம் வருவாரு’

‘ஸீ’

‘நீ கெளம்பு கடேக்கு’

‘டோன்ட் டெல் பாப் மாம்’

டப்பா ஸ்கூலில் விளையாடி விட்டு  வீட்டிற்குத் திரும்பும் போது மிசஸ். கோம்ஸ் போர்ஷனுக்கு முன்பு சண்டை.

‘ஓனர் எங்க வேண்ணாலும் போவான், வீட்டுக்குள்ள வரலல்ல’ தண்டபாணிகூட பீஸ்ட். ராபர்ட் தோளில் வைத்து அழுத்தியபடி ஐரீன்.

‘அதுக்கு இப்டியா வரணும்’

‘ஏம்மா இங்க எதாவது குப்ப அடச்சு கெடக்கான்னு பாக்க வராரு, வேறப்படி வர முடியும்?’

‘நாங்க வீட்ல இருக்கும்போதுதான் மெனி டைம்ஸ் வராரு ‘

‘வேணும்னேவா இங்க வராங்க, நீ இல்லாதப்பதான் வர்னுமா, பெர்சா நீட்டி கேள்வி கேக்கற?’

‘கொஞ்சம் மரியாதையா பேசுங்க’

‘தபார்ம்மா இப்டிதான் பேச வரும், இங்க்லீசுலாம் தெர்யாது’

‘வேணும்னே வந்து வீட்டு முன்னாடி நிக்கறீங்க’

‘நிய்யூ இந்த வவுசுல கவுனு போட்டுட்டு நிக்கற, எவன் எவனோ வூட்டுக்கு வரான் நான் கேக்கறேனா’

‘ராபர்ட், நோ…’ தோளில் கை வைத்து அவனை இழுத்தாள் ஐரீன்.

‘ஒங்கள சொன்னா கோவம் வர்தில்ல’

‘ஹி இஸ் அவர் அங்கிள்’

‘நீதான சொல்ற’

இந்த முறை ராபர்ட் தண்டபாணியை நெருங்கி நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டான்.

‘அடிங்கோத்தா எங்கப்பன.. ‘

தெருவாசிகள் பலர் கூடி விட்டார்கள்.

‘நைனாவ அட்சிட்டான்  ‘

‘அவரு ஊடு என்னமோ பண்றாரு’

‘இஸ்கூல் வாத்தியாரம்மா இப்டி பண்ணுதே’

‘ஓனரையே அடிப்பாங்களாமா’

‘நானே பாத்திருக்கேன் இந்தாளு  இங்க அப்பப்ப வர்த அத கேக்க மாட்டேங்கறீங்க,’ ராட்சஸி.

‘மாய்மாலம் பண்ணி வீட்ல ஒட்டிக்கிட்டவ பேசறா’ தள்ளிச் சென்று தண்டபாணி முணுமுணுத்ததோடு சரி, யாரும் நேரடியாக ராட்சஸியிடம் பேசவில்லை.

அப்பா பேசிப் பார்த்தார்.

‘அவங்களுக்கும் நமக்கு சரிப்பட்டு வராது, காலி பண்ண சொல்லிடுங்க ஸார்’

‘ஏதோ கோவத்துல ரெண்டு சைட்லயும் பேசிட்டீங்க’

‘இல்லங்க ஸார் இதுங்களுக்கெல்லாம் வூட கொட்த்தருக்க கூடாது ஸாரு, ரெண்டுங்கெட்டான்’

மீண்டும்  ராபர்ட்டை அடக்கினார்கள்.

‘தோ இதுதான் சொல்றேன், காலி பண்ண சொல்லுங்க’

‘லச்சரஸ் பகர்’ என்று ராபர்ட் கத்திக் கொண்டிருந்தான்.

‘இங்கிலீசு பேசுனா மட்டும் போதுமா?’

‘அவ்ங்க அவங்க ஆளுங்களோட கூத்தடிக்கட்டும்’

அந்த மாத முடிவிலேயே காலி செய்து குடி புக வேறு வீடு டேவிட் ஏற்பாட்டில் கிடைத்து விட்டது. கிளம்ப இன்னும் ஓரிரு நாட்கள் இருக்கும்போது

அவர்கள் போர்ஷனுக்கு சென்றேன்.  இரண்டு  சூட்கேஸ்களில் துணிகளை திணித்துக் கொண்டிருந்தார்கள் மிசஸ். கோம்சும் ஐரீன்வும்.

‘என்னடா?’

‘ஹெல்ப் பண்ணட்டுமா?’

‘வேணாம், தேங்க்ஸ்’

சூட்கேஸை மூட அதன் மேல் பகுதியில் வலுவான அடி.

‘பார்பேரியன்ஸ்’

‘மா’

‘இட்ஸ் தி ட்ருத்’

‘நீ கெளம்புடா’

‘இட் வாஸ் அ மிஸ்டேக் டு கம் ஹியர் ‘

‘போயிட்டு அப்பறம் வா’

‘திஸ் இஸ் நாட் அவர் பிளேஸ்’

‘வாட் இஸ், மாம்?’

ராயர்

தி. வேல்முருகன்

காலை மணி பத்து இருக்கும். வெள்ளாத்து ஓரம் கரையில் தீ மூட்டி கொண்டு இருந்தனர் குமாரும் ராயரும். அகரம் அங்காளம்மன் கோயிலுக்கு கொடி ஏத்திய மறுநாள் அன்று பூச்சட்டி எடுக்க ஒவ்வொருவராக பெண்களும் ஆண்களும் சிறுவரும் கையில் பானையோடு வந்து சேர்ந்த வண்ணம் இருந்தனர், மானம்பாடி ஆத்தம்கரையில்.

“ஏ குமாரு, நல்லா வேர அடி வேருக்கட்டை கிடந்தா பாரப்பா இந்த நெருப்பு பத்தாம போயிடும்”

“எல்லாம் 20 பானைக்கும் மேல இருக்குது”

“பிறகு யார்ரா நெருப்பு போட்டதுன்னு நம்மள குறை சொல்லுவானுவ! கட்டைவோ கிடக்கும் கிழக்காலே, ஆத்தோரம் போய்ப் பாரு,” என்று சொல்லிவிட்டு ராயர் ஒரு பீடியை எடுத்து தலைப்பில் இருந்து ஒரே சீராக அரக்கி விட்டு வாயில் வைத்தார்.

தூர நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த மணி ராயரிடம், “ஏன் மாமா அந்த காச கொடுக்கக் கூடாதா நீ,” என்று கேட்டதும் அதுவரை இருந்த நாட்டாமைத்தனம் மறைந்து ராயருக்கு முகம் வாடி விட்டது. கூட்டத்தில் யாராவது தன்னைப் பார்க்கிறார்களா எனப் பார்த்தார். பம்பைக்காரரும் ஒத்துக்காரரும் தட்டிக் கொண்டு இருந்தனர். கூட்டத்தில் கொஞ்சம் பேர் வேப்பிலை ஒடிக்க கலைந்து கொண்டிருந்தனர். ஒத்தும் பம்பையும் இருவரும் கழுத்தில் இருந்து வாரைக் கழட்டி விட்டு வேலிக் கருவை நிழலில் ஒதுங்கிக் கொண்டிருந்தனர். கூட்டத்தோடு வந்த சிறுவர்கள் அருகில் இருந்த ரயில்வே பாலத்தை பார்க்க மேலே ஏறிக் கொண்டிருந்தனர். யாரும் அவர்களை கவனிக்கவில்லை

“மாப்பிள்ளை, அப்படி போவும் வாயேன்,” என்று மணியை அழைத்துக் கொண்டு சற்று பெரிய வேலிக்கருவை ஆற்று ஓரம் நின்ற இடத்திற்கு வழி முள்ளை ஒதுக்கிக் கொண்டு ராயர் சென்றார்.

வாயில் இருந்த பீடி அணைந்து விட்டது. அதைத் தூக்கி எறிந்து விட்டு புதிதாக ஒரு பீடியை உருட்டிப் பத்த வைத்தார்.

மணி ராயரை விட்டு பார்வை விலக்காமல் பார்த்துக் கொண்டு நின்றான். “மாப்பிள்ளை,” என்று ராயர் ஆரம்பித்தார்.

“சொல்லு மாமா,” என்றான் மணி.

“நான் இந்த ஊருல எப்படி சத்தியகீர்த்தியா இருந்தேன் தெரியும் இல்ல உனக்கு?”

“அதான் மாமா காசக் கொடுத்துட்டு இரண்டு வருசமா உன் பின்னாடி நிக்கிறேன்”

“அது இல்லை மாப்பிள்ளை, என் தம்பி சடையன தெரியுமில்ல உனக்கு?”

“அதுக்கென்ன மாமா இப்ப?”

“இருக்குப்பா! நீல்லாம் சின்ன புள்ள அப்ப. ஒரு நாளு மணி இந்நேரம் இருக்கும். நம்ம கிருஷ்ணன் கோயில் மானியம் இராக்குட்டைக்கு கொடுத்தாங்கல்ல, நெய்வேலியானுவல்ட்ட, தெரியுமா?”

“தெரியாது மாமா”

“நீ எல்லாம் அப்ப சின்னப்பிள்ளைப்பா. இருந்தாலும் சில விசயம் தெரிஞ்சிக்கணும். அந்தக் குட்டைலதான் நான் மாச சம்பளத்துக்கு ராக்காவலுக்கும் பகல்ல ஆளு வேலைக்குமா நிக்கிறேன். மோட்டுத் தெரு பசங்க இரண்டு பேர் சைக்கிள்ல ஓடியாந்து, “அண்ண அண்ண, ஒரு ஆளு கிடக்கு பேச்சு மூச்சு இல்லாம, நீ கொஞ்சம் வா உன் தம்பியான்னு பார்த்து சொல்லு,” அப்படின்னு சொன்னதும் எனக்கு ஈரக்குலைல இருந்து ஒரு படபடப்பு வந்து நெஞ்சு எல்லாம் அடைக்குதுபா.

“நான் கைல இருந்தத போட்டுட்டு அப்படியே குறுக்கே கொடக்கல்லு செட்டியாரு நெலத்துல இறங்கி கண்ணு மூஞ்சி வாய்க்கா வரப்பு தெரியாம ஒரே ஓட்டமா ஓடறேன்….”

“ஏய் கம்னாட்டிவோல எங்கடா போனிங்க? தீ உக்காந்துட்டுதுடா. ஏலேய் ஏய். யார்ரா அங்க? ராயரு ஏன்டா அங்க போயி நிக்கிற? தீய கலைச்சு இரண்டு கட்டைய எடுத்துப் போடுரா,” என்று ராமு படையாச்சியின் குரல் கேட்டது.

ராயரும் மணியும் திகைச்சு நிற்பதை கவனித்து, “என்னடா காலையிலே ஊத்திட்டிங்களா?”

“இல்ல மாமா தே கட்டை எடுக்கதான் வந்தோம்”

ராயரோடு மணியும் சேர்ந்து வந்து விறகு போட்டதும் தீ குறைந்சு திரும்ப நன்றாக பிடித்து எரிய ஆரம்பித்தது. கரகம் ஜோடித்து தயாராகி விட்டது. பூசாரி இன்னும் வரவில்லை. பூச்சட்டி எடுக்க வந்தவர்கள் வேப்பிலையை ஒடித்து வந்து சும்மாடு பிடிக்க தயார் செய்து கொண்டு இருந்தனர்.

“வாணம் வச்சிருக்க தம்பி, இரண்டு வாணத்த வுடுப்பா, வர வேண்டியவங்க எல்லாம் வரட்டும்,” என்றார் பம்பைக்காரர்.

‘உயிங்’ என்று ஒரு வாணம் ஆற்று மேலும் மற்றொன்று தெருவு பக்கமும் சென்று வெடித்தது.

“போதும்பா, கரவம் கெளம்பும்போது விடலாம். எல்லாம் ஆவ வேண்டிய வேலையைப் பாருங்க,” என்றார் ராமு படையாச்சி.

“மாப்பிள்ளை நீ வா,” என்று ராயர் மணியை அழைத்துக் கொண்டு ஒதுங்கி மறைவாக நின்று கொண்டு பீடி பத்த வைத்தார்.

மணிக்கு ராயரை நேரடியாக கேட்க முடியாமல், தானே சடையனைப் பற்றி தனக்கு தெரிந்ததைச் சொல்ல ஆரம்பித்தார்.

“மாமா எனக்கு சடையன நல்லா தெரியும். பொம்பளை மாதிரி தண்ணி கொடத்த இடுப்புல எடுத்துட்டு வருவாப்பல. எந்நேரமும் வாயில வெத்தலை பாக்கும் பொயலையும் போட்டு மென்னுக்கிட்டு பொம்பளைவகூட அவுங்களுக்கு புடிச்ச மாதிரி பேசி சிரிச்சுட்டு இருப்பாப்பல. நாங்க எல்லாம் அப்ப விபரம் தெரியாத வயசு. சடையன் யாருகூட பேசுனாலும் நாங்க அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து தப்பாதான் பேசுவோம் மாமா. அப்புறம் அவரு அகரத்து வாய்க்கா ஓரம் இருக்கற மூணு பனை மரத்துலதான் இருக்காரு, ராத்திரியானா பாதி சாமத்துல நாலாவதா ஒரு பனை ஒசந்து நெடுமரமா தெரியும், அது சடையன்னு சொல்லுவாங்க. அதப் பார்த்தா அவன் ஜோலி முடிஞ்சுது அப்படின்னு பயமுறுத்துவாங்க. ஆனா அவருக்கு பொம்பளைய மாதிரி நடையும் சாடையும் இருந்ததால நாங்க பயந்துகிட்டுதான் அந்தப் பக்கம் போவோம்”

“ஆமாண்டா மாப்பிள்ளை, அந்தப் பயல என் அம்மாதான் அப்படியாக்கிப் போச்சு. அக்காவோ கட்டிக்கிட்டு போனதும் கடைக்குட்டி இவனுக்கு பொம்பளை வேசம் போட்டுப் பாத்திச்சு, இவன் அதைய புடுச்சுகிட்டு நடக்க ஆரம்பிச்சுட்டான். வளந்த பிறகு கொஞ்சம் திருந்தி சட்டை கைலி கால் சட்டைவோன்னு போட்டாலும் சுருக்குப் பையும் வெத்தலை பாக்கையும் விடல.

“இருபது இருபத்தைந்து வருசத்து முன்ன என்ன இருந்தது? ரொம்ப கஷ்டம் மாப்பிள்ள, அப்ப இவன் சித்தாள் வேலைக்கும் நான் கூலிக்கு வண்டி ஓட்டவும் போவோம். அம்மா பாலு கறந்து செட்டித் தெருல குடுக்கும். அப்பா முடியாதவரு. அப்படி குடும்பம் போயிக்ட்டு இருந்தது. இவன் மாத்திரம் கொஞ்சம் காசு செருவாடு புடிச்சு வட்டிக்கு குடுக்க வாங்கன்னு இருந்தான்.

“கெட்ட சகவாசம் வந்துபோச்சி மாப்பிள்ளை. பொம்பளைவோ சினிமாவுக்கு, ஊட்டுல துணைக்குன்னு இட்டுப் போயி சின்ன வயசுலேயே சொல்லி கொடுத்துட்டாளுவ. வெளிய தெருவ போவ பொம்பளைவோ தொணைக்குப் போவ ஆரம்பிச்சவன், பிறகு ராத்தங்க ஆரம்பிச்சு சமயத்துல ரெண்டு மூணு நாலு வராம இருப்பான் அப்ப.

“நான்கூட, பொட்டப்பயலே ஊட்டுப் பக்கம் வராதன்னு அடிச்சுருக்கேன். ஆனா என்ன இருந்தாலும் கடைக்குட்டிப் பய இல்லியா, நாங்க தேடுவோம். ராத்திரில எங்களக் கண்டா, தே வரேன் போன்னு சொல்லுவான், ஆனா வர மாட்டான், சந்துல எங்கயாவது மறைஞ்சு நிப்பான்.

“இப்படி இருக்கும்போது எனக்கு கல்யாணம் ஆச்சுதா, இவன் ஊட்டுக்கே சுத்தமா வரது நின்னு போச்சு. சரி, கல்யாணம் பண்ணி வச்சா சரியா வந்துடுவான்னு அம்மா என் அக்கா பொண்ணய பேசி வச்சிருக்கு. அப்ப இவன் என்ன பண்ணான் தெரியுமா?

“சீட்டு புடிச்சு 25000 ரூவாய பாதிக்குப் பாதி தள்ளி எடுத்து வசூல் பண்ணிக்கிட்டு இருந்தான். அப்பதான் ஒரு நாளு விடியக்காலையில 4 மணி இருக்கும், மொத கோழி கூவிப் போச்சு. அரவம் கேக்குது, யாருன்னு பார்க்கறேன், சடையன் உள்ள பூனை மாதிரி வரான். கெட்ட வீச்சம் அடிக்குது.

“இதை எல்லாம் சொல்லக் கூடாது, நீ யாரு வெத்து மனுசாளா? மாமன் மவந்தான கேட்டுக்க- எல்லா பெரிய பிரச்சினைக்கு ஆரம்பம் உப்பு பொறாத சின்ன பிரச்சினைதான் காரணமா இருக்கும் அந்த மாதிரி சின்ன பிரச்சினைதான் ஆரம்பம்.

“எனக்கு கல்யாணம் நடந்து கொஞ்ச நாள்தான ஆவுது, அப்ப அன்னைக்கு நல்ல நிறைஞ்ச வெள்ளிக்கிழமை. வீட்டுல இருந்த பால உரிலேருந்து பூனை தள்ளப் போவ, அதப் பாத்து அம்மா என் ஊட்டுக்காரிய சத்தம் போட, ஒன்னு மேல ஒன்னு குறை சொல்ல எனக்கு இடையில கோவம் வந்து ஊட்டுக்காரிய ஒரு அடி அடிச்சிட்டேன். அதான் என் ஊட்டுக்காரி அதுக்கு ஒத்துக்கல. அன்னைக்கு ராத்திரி நான் கடுப்புல வெளிய நார்க் கட்டிலைப் போட்டு படுத்து இருக்கேன், நல்ல மாசி மாசத்து நிலா வெளிச்சம் வாசல்ல விழுது. காஞ்ச புளி உடைக்காம வாசல்ல கிடக்கு. .தூக்கம் இல்லை, சரியா பெரண்டு பெரண்டு கிடக்கேன். அப்பதான் சடையன் வாரான். முட்டை ஓடு ஒடையற மாதிரி சத்தம். புளியம்பழத்தை மெரிச்சிட்டான் போல இருக்கு. இவன் மேலதான் வீச்சம் அடிச்சது. புரிஞ்சு போச்சு. வந்த கோவத்துல வச்சி விரிச்சு கண்ணு மூஞ்சி தெரியாம அடிச்சிட்டேன்”

“ஏன் மாமா?”

“உனக்குப் புரியலையா? என்னப்பா, அக்கா பொண்ண பேசி வெச்சிருக்கு, இந்தப்பய திருந்தாம பொம்பளகூட படுத்துக் கிடந்து வந்து இருக்கான்பா”

“அப்புறம் மாமா?”

“அன்னைக்கு போனவன்தான்…”

“எல்லாம் தனித்தனியா நிற்காம வாங்கடா, நேரம் ஆவுது, சாமி அழைக்கணும்… ஏங்க பம்பைக்காரரே கொஞ்சம் தட்டுங்க… ஏய் வாணத்தை உடுங்கப்பா,” என்று எல்லோரையும் விரட்டிக்கொண்டு வந்தார் ராமு படையாச்சி.

ராயரும் மணியும் தொடர்ந்து பேச முடியாமல் தீ எரியற இடத்துக்கு வந்து தீயைக் கலைத்து நெருப்பை ஆற்றினார்கள்.

பூச்சட்டி எல்லாம் வேப்பிலை மாலை கட்டி வரிசையாக இருந்தது. பூசாரி கொண்டு வந்து இருந்த வடை வாரியால் நெருப்பை பூச்சட்டியில் அள்ளிப்போட ஆரம்பித்தார். சாம்பிராணி பொடியை எல்லாரும் போட ஆரம்பித்ததும் அந்த இடம் பார்க்க வேறு மாதிரி ஆகிப் போனது.

பம்பைக்காரர் ராகமாக பாட ஆரம்பித்தார். செண்டையும் பம்பையும் உக்கிரமாக அடிக்க ஆரம்பிக்கவும் பூசாரி வந்து பூக்கரகம் பக்கத்தில் நின்னதுதான் தெரியும், “ஆடி வாரா என் அங்காளம்மா…” என்று பம்பைக்காரர் ஒரு பக்கம் பாட, “என் அங்காளம்மா…” என்று ஒத்துப்பாடி பின்தொடர்ந்தார்.

பம்பை அடியை கூட்டி, டாய் என்று கத்திக் கொண்டு,

“ஓடி வரா என் அங்காளம்மா
அவ பாடி வாரா என் அங்காளம்மா”

என்று பம்பை அடி வேகம் கூடியதும் பெண்கள் இருவர் இறங்கி சாமியாட பூசாரி உடல் நடுங்க ஆரம்பித்து கத்திக் கொண்டு துள்ள ஆரம்பித்தார். அவரருகில் நின்ற அக்னிபுத்திரனும் சாமியாட ஆரம்பித்தார். இருவருக்கும் விபூதியிட்டு கரகமும் பூச்சட்டியும் கையளித்து தூக்கிவிட்டதும் வரிசையாக மற்றவர்களும் பின்தொடர்ந்தனர். பம்பையும் மேளமும் வாண வேடிக்கையோடு முன் சென்றது.

“மாமா…” என்று ராயர் கையை மணி பிடித்துக் கொண்டு கூட்டம் போகட்டும் என்பது போல் கை காட்டினான்.

“அப்புறம் என்னாச்சு மாமா?”

“அத ஏன் கேக்கற மாப்பிள்ளை… தானா வந்துடுவான்னு இரண்டு நாளு பாத்துட்டு தேட ஆரம்பிச்சா ஆள கண்ணுல காணும். தெரிஞ்சவங்க சொந்தக்காரங்க ஊடுவோன்னு ஒரு இடம் பாக்கி இல்லாம தேடறோம் ஆளு அம்புடலை. ஒரு வாரம் ஆயிப் போச்சி, ஒரு தகவலும் கிடைக்கல. எத்தனை நாளைக்கு சும்மா இருக்க முடியும்?

“அன்னைக்குதான் இறால் குட்டைக்கு திரும்ப வேலைக்குப் போனேன், அப்பதான் இந்த மாதிரி கத்திக்கிட்டு ஓடியாந்தானுங்க”

“பிறகு என்ன ஆச்சு மாமா?”

“உன் தம்பியா பாருன்னு சொன்னானுவல, பயம், நடுக்கம் மாப்பிள்ளை, அப்படியே சொரசொரப்பு. ஒண்ணுமே புரியல. எங்க எங்கன்னு கேட்டுப் போறேன். கொய்யாத்தோப்பு போ போன்னு சொல்றாங்க. புள்ளத் தோப்பு வழியாத்தான போவணும், ஒரே ஆனை நெருஞ்சி காலெல்லாம் குத்துது, வேலிக் கருவை மேலயெல்லாம் கிழிக்க ஓடுறேன். தூரத்துலேயே தெரியுது, ஆளுவ கூட்டமா நிக்கிறது. அதப் பார்த்து ஓடறேன். ஓடிப் பார்த்தா ஒரு கீத்துல குப்புறக் கிடக்குறது தெரியுது. பார்த்ததும் தெரிஞ்சு போச்சு ,அவந்தான்னு. புள்ள எவ்வளவு நேரம் கிடந்தானோ…

“ரேகம் எல்லாம் துடிக்கிது. கிட்ட நெருங்க முடியல, வாட… யாருமே போவ மாட்றாங்க. உருக் குலைஞ்சு கிடக்கு. எனக்கு தம்பிய நாமதான் கொன்னுட்டோம்ன்னு மனசு ஆறலை மாப்பிள்ளை.

“நான் அன்னைக்கு கோவப்பட்டு அடிச்சது அதர்மம். பொம்பளை சுகம் ஒரு நாள் கிடைக்கல. இவன் மாத்திரம் போயி வரான அப்படிங்கற ஆத்திரம் பொறாம பாதகத்தை செஞ்சிட்டேன். ஒரு நாளும் அந்த மாதிரி அடிச்சது இல்லை…”

“அழுவாத மாமா… விதி, நீ என்ன செய்ய முடியும்?”

“நான் அடிக்கலனா அவன் போவப் போறது இல்ல. ஊட்டுல புது பொம்மனாட்டி இருந்ததால அவன் மான ரோசப்பட்டு வரல. அப்ப போனவன்தான் கீழ கிடக்கான்.

“சனம் எல்லாம் கூடிப் போச்சு, என் காசுக்கு வழி சொல்லுன்னு.

“எந்தக் காசுனு கேட்டா, எல்லாம் சீட்டுப் பணம். எனக்கு ஆயிரம் ரெண்டாயிரமுன்னு எல்லாம் ஒரு இருபது ஆயிரம் கணக்கு வருது.

“அப்ப நாட்டாமை கெழவர்தான் எல்லாரையும், நேரம் கெட்ட நேரத்துல என்னடா பேசுறீங்கனு சத்தம் போட்டு, “அதெல்லாம் பிறகு பார்க்கலாம் முதல்ல ஈச்சம் பாயும் கட்டிலும் கொண்டு வந்து பாயில சுருட்டிக் கட்டுங்கடா. கட்டிலோட தூக்கி கொண்டு போயி சுடலைல வச்சி எரிச்சுட்டு வந்து சேதிய சொல்லுங்கடா,” அப்படின்னு சொன்னாரு.

“அதே போல செஞ்சாச்சு. விடிஞ்சு பால் தெளிக்க கிளம்பறோம். பணம் தரணுமுன்னு சொல்லி கடன்காரன் வழிய மறைக்கவும் பஞ்சாயத்த ஓடும் பிள்ளை விட்டு உடனே ஊரக் கூட்டியாச்சு. ஆள் ஆளுக்கு வாய்க்கு வந்த மாதிரி பேச ஆரம்பிச்சதும் நான் சொன்னேன், ‘நாட்டாமை பணம் காசுக்காக அண்ணன் தம்பி இல்லாம புடாது. என் தம்பி போய்ட்டான். அவன் எவ்வளவு காசு வச்சி இருந்தான் வாங்குனான்னு எனக்குத் தெரியாது. .குடியிருக்கிற மனக்கட்டு இருக்கு. அத ஒரு விலை போட்டு நீங்க எடுத்துக்குங்க. செத்துப் போன எந்தம்பிய கடன்காரன்னு யாரும் சொல்லாதீங்க. நான் என் குடும்பத்தை காலி பண்ணிட்டு வேலை செய்யப் போற இடத்துல இரந்து என் பாட்டப் பாத்துக்கிறேன்,” அப்படினு சொன்னதும் நாட்டாமை செத்துப்புட்டாரு. நல்ல மனுஷன்.

“அவரு எழுந்து, “ஏய் தலைமுறையா இருந்த குடும்பம், நீ எங்கடா போவ? முட்டுக்கட்டை இருடா,” அப்படினு சொல்லி, “ஏம்ப்பா உங்களுக்கு எல்லாருக்கும் சொல்றேன். செத்துப் போன தம்பி வாங்குன கடனுக்காக அண்ணன்காரன் இல்லன்னு சொல்லாம தன் பங்கையும் உட்டுக் குடுக்குறான். நீதி, நாயமுன்னு ஒன்னு இருக்குல்லையா? அண்ணன் தம்பின்னா பாகம் இரண்டு. ஒரு பாகத்துல ராயர் இருந்துக்கட்டும். ஒரு பாகத்தை விலையப் போடு. அத எல்லாருக்கும் பிரிச்சுக் கொடுத்துடு. மேற்கொண்டு பாக்கி நின்னுச்சினா இருக்கப்பட்டவன் அவனுக்கு ஒரு வருஷம் கெடு கொடுங்க, ராயர் பைசல் பண்ணிடட்டும். கடன் கொடுத்தவன் எல்லாம் கூடிப் பேசி ஒரு முடிவுக்கு வாங்க,” அப்படினு சொல்லிப்புட்டாரு.

“உடனே பொம்பளைவோ எல்லாம் குசுகுசுன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க, கூட்டத்துல. சடையன் ராத்திரி வந்து ரோட்ல நின்னான், பார்த்தேன். அவன் பேயா நிற்கிறான், நிலை இல்லாம. யாராவது அடாவடியா ராயர வீட்டை விட்டு தொரத்துனீங்க, அவங்க குடும்பம் அவ்வளவுதான், சடையனத் தெரியுமுல்ல ஒருத்தரும் தப்பிக்க முடியாது. பாவம், கோரமா அகாலமா போயிட்டான் வாழற வயசு, அப்படினு பேசுதுங்க ஒவ்வொரு பொம்பளையா.

“உண்மையோ பொய்யோ யாரு கண்டா? அதிகமா சொன்னவங்க எல்லாம் பயந்து போயி உள்ள தொகைய சொன்னதும், நாட்டாமை, “என்னடா சொல்ற ராயர்?” அப்படின்னு கேட்டார்.

“”அதுக்கென்னங்க பால் தெளிய முடிச்சிட்டு செட்டியார்ட்ட ஊடு பத்திரம்தான் இருக்கு அத வச்சித் தரேன், நீங்களே கொடுத்துடுங்க நாட்டாமை,”ன்னு சொல்லிட்டு அப்படீயே செஞ்சேன் மாப்பிள்ளை. அப்படியாப்பட்ட சத்யகீர்த்தி நானு. சரியா மூணு வருசம் ஆச்சு மனக்கட்ட திருப்ப. அப்பா அம்மா ரெண்டு பேரும் மறு வருசமே ஒன்னு பின்ன ஒன்னா போயி சேர்த்துட்டாங்க. நான்லாம் தப்பு பண்ணிட்டு என்னும் இருக்கேன். அப்பையே போயி இருக்கணும், மாப்பிள இப்படி நெஞ்சில வச்சி குமைஞ்சு அல்லாடாம…”

“அப்புறம் உம் பிள்ளைவோள யாரு பார்ப்பா மாமா?”

“அத நினைச்சுதான் கிடக்குறேன்”

“அது சரி மாமா, சடையன் எப்படி செத்தாப்லன்னு தெரிஞ்சுதா?”

“கெட்ட சகவாசம்தான். பொம்பிளை தொடர்பு, காசு பணம் குடுக்க வாங்கன்னு இருந்தான்ல, இதுல ஏதோ ஒன்னுதான் காரணம். அவன் செத்ததும் ஒரே புரளி. இங்க நிக்கிறான் அங்க நிக்கிறானு… பொம்பளைவொளுக்கு சொல்லவா வேணும்?”

“அவன் பூட்டான், ஆனா இன்னைக்கும் என் மனசு தவிக்குது மாப்பிள பொறாமையில நான் அடிச்சது உண்மை. எனக்கு மன்னிப்பு கிடையாது.

“நீ நல்லா இருப்ப. யாருகிட்டயும் இப்படி மனச நான் தொறந்தது இல்லய்யா. உன் காசு எங்கேயும் போயிடாது தரேன் மாப்பிள”.

பூக்கரகமும் அக்னிச் சட்டியும் கோயில் வாசல் வந்து விட்டது. கோயில் உள்ளிருந்து எட்டிப் பார்த்த ராமு படையாச்சி, “என்னடா ராயர் இன்னும் போத தெளியலையா உனக்கு? நல்ல குடும்பத்துல பொறந்துட்டு ஏன்டா இப்படி பண்ற?” என்று கேட்டுக்கொண்டு அருகில் வந்தவர், “ராயரு, ரெண்டு நாளைல தரன்னு சொன்னியேடா, வித உடப் போறன்னு சொல்லி வாங்கின அந்தக் காசக் குடுக்கக் கூடாதாடா?” என்றார்.

ஊடல் – டபிள்யூ. எஸ். மெர்வின்

டபிள்யூ. எஸ். மெர்வின் 

நீ இல்லாமை என்னைத் துளைத்துச் சென்றிருக்கிறது,
நூலொன்று ஊசியைத் துளைத்துச் செல்வது போல்.
நான் எது செய்தாலும் அதன் வண்ணம் கோர்த்திருக்கிறது.

oOo

(This is an unauthorised translation of the poem, ‘Separation,’ originally written in English by W.S. Merwin. The Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only)

கோபி கிருஷ்ணனின் ‘புயல்’ குறித்து ரா. கிரிதரன்

ரா கிரிதரன்

நமக்குத் தெரிந்த சிறுகதை பாணியிலிருந்து சற்றே விலகிய கதை. முடிவுக்கு மிக அருகில் தொடங்கி ஒரு உச்சகட்டத்தின் வெடிப்பில் முடியும் கதை எனும் யுத்தியை விடுத்து எழுதப்பட்ட கதை. இதில் திட்டமிடல் இல்லை. கோபி கிருஷ்ணனின் கதை இயல்பே இதுதான்.

ஆதவனும் கோபியும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். மனித மனங்களின் விசித்திரங்களையும், மனித உறவுகளால் உண்டாகும் விநோத ரசமாற்றங்களையும் கதைகளாக்கியவர்கள். ஆதவனின் ‘இரு நாற்காலிகள்’ கதை ஒரு உதாரணம்.

எவ்விதமான பதில்களையும் சென்றடையாமல் நவீன வாழ்வின் சிக்கல்களை காட்டக்கூடிய கலைஞர் கோபி. நவீனத்துவ மனிதனின் பாசாங்குகளை வெளிப்படையாக்கியவர், ஆனால் அதற்கு மரபு சார்ந்த பதில்களைக் கொடுக்காதவர். மனிதன் தனி மிருகம். அவன் இந்த சமூகத்தில் வாழ்வதன் வழியே தனது இயல்பையும், தன்னுடன் வாழும் மனிதர்களின் இயல்பையும் முடிவு செய்கிறான். அவனது குழப்பங்களுக்கும், வாழ்வியல் போராட்டங்களுக்கும் மரபிலும் மண்ணிலும் பதில் இல்லை.

புயல் கதையின் தொடக்க வரியே மேற்சொன்ன பார்வையை நிறுவிவிடுகிறது. எங்கோ காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது, அதன் பாதிப்பு வேறு எங்கோ நடக்கிறது. “அதிகாலையிலிருந்தே பலத்த மழை. சென்னை அருகே புயலாம்”. சாதாரண வரியாகத் தெரிந்தாலும், கதையின் ஊடே பயணிக்கும்போது மனிதர்களின் நடத்தைகளையும் இயல்புகளையும் எடுத்துரைக்கும் கருத்தாக மாறிவிடுகிறது.

ஸோனா வேலைக்குப் போவதில் அதிக நாட்டமில்லாமல் உலகைப் புரிந்துகொள்ள வேண்டும் எனும் உயரிய நோக்கோடு ஏக்நாத்தின் வற்புறுத்தலாம் வேலைக்குச் செல்கிறாள். ஜூரம் அடிக்கும் குழந்தைக்கு மாத்திரையும், காபி பொடி, சாக்லெட்டும் வாங்கிக்கொண்டு கடும் மழைக்கு நடுவே அலுவலகத்திலிருந்து வீட்டுக்குப் போகிறான் ஏக்நாத். மழையில்தனது பொத்தல் விட்ட மழை உடுப்பைப் போட்டுச் செல்கிறான். ரோட்டை அடைத்துக் கோலம் போடும் மாமியின் புள்ளிகளை அழிக்காமல் செல்வதும், சிகரெட் புகைக்கு முகம் சுளிக்கும் மாமியிடம் மன்னிப்பு கேட்டு அணைத்துவிடுவதுமாக அவன் சமூகத்தை ‘அட்ஜெஸ்ட்’ செய்து செல்பவன்.

அவன் சென்ற அதே மழையில் வீடு திரும்பியிருக்கும் மனைவி சோனாவுக்கு சென்ற இடமெல்லாம் சமூகம் இடர் கொடுக்கிறது. அவளது உணர்வுகளை அத்துமீறும் பாலியல் தீண்டல்களையும், பெண்களை அடைய நினைக்கும் மனோபாவத்தையும் அவள் வேலை செய்யும் மருத்துவமனை முதல் வீடு வரும் வரை அனுபவிக்கிறாள். வீடு வந்தபின்னும் பக்கத்து போர்ஷன் குடிகாரன், ரெண்டு டிக்கெட் இருக்கு சினிமா வர்றியா, என்கிறான். அவள் மனம் பதைபதைத்து விடுகிறது.

இதைக் கொட்டித் தீர்க்கும்போது ஏக்நாத்தால் எதுவும் செய்ய முடியவில்லை. ஒருவிதத்தில் கையாலாகதவன்தான். அவனது மனம் உடனே, அப்பன் செய்த தவறுதானே மகன் தலையில் வரும், நானும் எதுவும் செய்ததில்லையே, எனக்கு ஏன் அப்படி ஒன்று நடக்கிறது, என குழப்பம் அடைகிறான். சமூகம் விஸ்வரூபத்தை உன்னிடம் காட்டியிருக்கு விடு, எனச் சொல்கிறான். இதற்கு ஈடான சிக்கல்களை அடைந்தவன்தான் என்றாலும் அவன் ஒருவிதத்தில் இந்த சமூகத்தின் கீழ்மைகளுக்குப் பழகியவனாக இருக்கிறான்.

திடீரென ஒரு இடத்தில் புயல் தோன்றியதில் மற்றொரு இடத்தில் மழை பெய்வது போல மனைவின் புலம்பலாலும் இயலாமை நிலையாலும் சட்டென “சாக்கடையில் உழலும் பன்றிகள்” எனச் சமூகத்தின் சீர்கேட்டை நோக்கி கத்துகிறான்.

அவன் சரி செய்யக்கூடியது எதுவுமில்லை. அதே சமயத்தில் இந்த கத்தல் மட்டுமே அவனது மனைவிக்கும் ஆறுதலாக இருக்காது என்பதையும் அறிந்தவன்தான். அதனால் கத்தி வைக்கிறான்.