எழுத்து

பெண் – கலைச்செல்வி சிறுகதை

கலைச்செல்வி

மணி பத்தாகி பத்து நிமிடங்கள்தான் கடந்திருந்தது. அதற்குள் அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்க தொடங்கியிருந்தது. கணவனிடம் சொல்லிக் கொள்ள கூட அவகாசமின்றி காரிலிருந்து இறங்கி கொண்டாள். முதல் தளத்திலிருந்து அவளது இருக்கை. அவசரமாக படிகளில் தாவி ஏறினாள். பச்சை மையில் கையெழுத்து போடும் தகுதி பெற்றவள். ஒரே மகன். பன்னிரண்டாம் வகுப்பிலிருந்தான்.

”மேடம்.. சிஇ உங்களை வர சொல்றார்..” என்றார் அலுவலக உதவியாளர் அவளுக்காக காத்திருந்தவர் போல.

”கடவுளே.. அதுக்குள்ள வந்துட்டாரா.. இருங்க பேக்க வச்சிட்டு வந்துடுறேன்..”

”பேக்க நான் வச்சிடுறன்.. சார் உங்களை ரெண்டு தடவை கூப்டுட்டாரு..”

அதுவும் உண்மைதான். பேச்சின் நுனியிலேயே கோபத்தை வைத்திருப்பார். முகாம் அலுவலர் என்பதால் வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள்தான் அலுவலகப் பணியிலிருப்பார். அதுவும் இத்தனை சீக்கிரம் வருவதில்லை. ஏதேனும் அவசர வேலையாக இருக்கும்.

“வீரபாண்டியன் சார் வந்துட்டாரா..?” பேக்கை அவனிடம் நீட்டினாள்.

”வந்துட்டாரு மேடம்.. அவரும் சிஇ ரூம்லதான் இருக்காரு..” பதட்டமான நடந்தாள். இவளும் வீரபாண்டியனும் இரண்டாம் மட்ட அதிகாரிகள். கதவை தள்ளிக் கொண்டு நுழைந்தாள். தலைமைப் பொறியாளர் அலைபேசியில் பவ்யமாக பேசிக் கொண்டிருந்தார். தலைமை அலுவலகம் அது. துறை செயலரிமிருந்து போன் வந்திருக்க வேண்டும்.

”வணக்கம் சார்..” தயக்கமாக கூறினாள். கண்கள் அவளை கவனித்தாலும் யோசனை அதிலில்லாதது போல வெற்றுப் பார்வை பார்த்தார். மீண்டும் “வணக்கம் சார்..“ என்றாள். படபடப்பாக இருந்தது. வீரபாண்டியன் இவளை பார்த்து வணக்கம் சொல்வது போல நெஞ்சு வரை வலது கையை உயர்த்தினான். தனது பக்கத்து இருக்கையை சைகையால் காட்ட, அவள் தலைமை பொறியாளரின் உத்தரவுக்காக காத்திருந்தாள். அலைபேசியை வைத்து விட்டு, விட்டதிலிருந்து தொடர்ந்தார். அவளை அப்போதுதான் கவனித்தது போல நாற்காலியை காட்டினார். கைப்பையிலிருந்து எடுத்து வைத்திருந்த குறிப்பேட்டையும் பேனாவையும் எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்தாள் அவள்.

”அனொவ்ன்ஸ்மெண்ட்ல அறிவிச்ச வொர்க் பத்தின டீடெயில்ஸ் டிவிஷன்வைஸா ரெடி பண்ணனும்..” என்றார்.

”சரிங்க சார்..” என்றான் வீரபாண்டியன். அவளுக்கு விஷயம் பிடிப்பட்டது. சட்டசபை கூட போவதால் இந்த கெடுபிடி.

”எக்ஸ்பெட்டட் கொஸ்டின்ஸ் சர்க்கிள்ல கேட்டு வாங்கி.. ரிப்ளைய ரெடி பண்ணனும்..” சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்ப சாத்தியமுள்ள கேள்விகளுக்கு பதில் தயார் செய்ய வேண்டும். சட்டமன்றம் தொடங்கிய பிறகு கவனஈர்ப்பு.. கட்மோஷன்.. ஸ்டார்ட்.. அன்ஸ்டார்ட் என பல்வேறு ரூபத்தில் மூச்சு விட அவகாசமின்றி கேள்விகள் வந்து விழும். இவைகளெல்லாம் வீரபாண்டியனுக்கான பணிகள். அவனுக்கு கீழே மூன்று உதவிப்பொறியாளர்கள். அதில் இரண்டு காலியிடம். அவளுக்கும் அப்படிதான்.

”மேடம்.. இம்மீடியட்டா ப்ராகரஸ் ரிப்போர்ட் வேணும்.. போத் ஃபிஸிக்கல் அண்ட் ஃபைனான்சியல்.. பிபிடி தயார் பண்ணீடுங்க..” என்றார் இவளிடம் திரும்பி. மூன்று வட்டங்களும் ஒன்பது கோட்டங்களும் உள்ளடக்கியது தலைமை அலுவலகம். பணிகளின் விபரமும் அதன் தற்போதைய நிலையையும் புத்தகமாகவும் பவர்பாயிண்ட்டாகவும் தயார் செய்ய வேண்டும்.

”சரிங்க சார்..”

”டிலே பண்ணீடாதீங்க மேடம்..” என்றார் சற்றே கண்டிப்புடன்.

”ஒகே சார்..”

கதவை தள்ளிக் கொண்டு வெளியே வந்தனர் இருவரும்.  “கவர்மெண்ட் ஆபிசுன்னா வேலையே கெடையாதுன்னு வெளில பேசுவாங்க.. இங்க வந்து பாக்க சொல்லுணும் அவங்களெல்லாம்..” என்றாள் கீதா.

”ஆமா மேடம்.. சிஇ சொல்ற டீடெயில்ஸ கேட்டு வாங்கறதுக்குள்ள ஒரு வழியாயிடும்..” என்றான்.

”இன்னைக்குள்ள வொர்க் ஸ்டேஜ் வாங்கினாதான் நாளைக்கு பிபிடி ரெடி பண்ண முடியும்..” என்றாள்.

”சார்.. இந்த தபாலை கொடுக்க சொன்னாரு சிஇ..“ வீரபாண்டியனின் கையில் திணித்தார் அலுவலக உதவியாளர். சென்ற முறை கேட்கப்பட்ட சட்டமன்ற கேள்விகளின் தற்போதைய நிலை வேண்டி அனுப்பப்பட்ட அவசர நிகரி தபால். “சரி.. வர்றேன்.. மேடம்..” தபாலோடு தனது இருக்கைக்கு விரைந்தான். குளிரூட்டி பொருத்தப்பட்ட அடுத்தடுத்த கேபின்கள். கண்ணாடி தடுப்பு.. முதல் தடுப்பு அவனுடையது. அதற்கடுத்த கேபினிலிருந்தது கீதாவின் இருக்கை. மேசை மேலிருந்த தோள்பையை அதற்கான இடத்தில் வைத்து விட்டு அமர்ந்தாள். டிராவை திறந்து சிறு நோட்டை எடுத்து ஸ்ரீராமஜெயம் போல எதையோ இரண்டு நிமிடம் எழுதினாள். செல்போன் ஒலித்தது. கணவரின் பெயர் ஒளிர “ஒங்க ஆபிசே பரபரப்பா இருந்துச்சு.. எதும் அவசரமா..?” என்றான் அக்கறையாக. “அசெம்ளி கூட போவுதுல்ல.. அதான்..“ என்றவள்  ”சரி.. மணிகண்டன் ஸ்கூலுக்கு மூணறைக்கு போவுணும்.. மறந்துடாதீங்க..” என்றாள்.

”மேடம்.. இதுல நாலு கொஸ்டின் நீங்க டீல் பண்ற சப்ஜெக்ட்..” என்றான் அங்கிருந்தே வீரபாண்டியன்.

”ஒரு ஜெராக்ஸ் எடுத்து குடுங்க சார்..” என்றாள் இவளும் இங்கிருந்தபடியே.

கொஸ்டினை சமாளிப்பது கொஞ்சம் சுலபம். “பரிசீலனையில் உள்ளது.. வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்க ஆவண செய்யப்படும்.. இது எங்கள் துறை சார்ந்ததல்ல..“ என்ற மூன்று பதில்களுக்குள் முன்னுாறு கேள்விகள் என்றாலும் அடங்கி விடும். உதவி பொறியாளரை அழைத்தாள்.

”மேம்..”

”இன்னைக்குள்ள பிராகிரஸ் ரிப்போர்ட் முடிச்சாவணும். நீங்க மளமளன்னு எல்லா இஇக்கு ஃபோன் போட்டு விஷயத்தை சொல்லுங்க.. சி.இ உடனே தர சொன்னாருன்னு சொல்லுங்க..”

”முடிஞ்சளவு வாங்கீடுறேன் மேடம்..”

”நீங்க எங்கிட்ட சொல்றமாதிரி நான் சிஇட்ட சொல்ல முடியுமா சார்.. நீங்க ஃபோன் ரூம்க்கு போங்க.. நா வேலைய முடிச்சுட்டு வந்துடுறேன்..” என்றாள்.

வீரபாண்டியன் அவள் கேபினுக்குள் நுழைந்தான்.

”மேடம்.. இந்த கொஸ்டினை பாருங்களேன்…” என்றான். சட்டசபை தொடங்கினாலே வரும் தலைவலி இது. சமூக ஆர்வலர் என்ற பெயரில் ஒருவர் எதாவது எசகுபிசகான கேள்விகளை முதலமைச்சர் தனிப்பிரிவு.. துறை செயலர்.. உட்பட உயர்நிலை அலுவலங்களுக்கு அனுப்பி விட்டு இங்கும் ஒரு பிரதி அனுப்பி விடுவார். ”யாரு சார்.. அந்த ராஜ மன்னாருதானே..” என்றாள்.

”ஆமா மேடம்..” என்றான் அலுப்பாக. பெரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டிருப்பதால் பதில் அளிக்காமல் அலட்சியம் செய்து விட முடியாது. இமயத்திலிருந்து வங்காள விரிகுடா வரையிலான நீர்த்தடங்களை இணைத்து அதன் மூலம் இந்திய மக்கள் அனைவருக்கும் நீர் வழங்கும் திட்டம் என்ற தலைப்பில் நுணுக்கி நுணுக்கி வெகு அபத்தமான யோசனைகளோடு பத்து பக்கத்துக்கு எழுதியிருந்தார். இடையிடையே சிவப்பு மையில் படங்கள் வேறு வரைந்திருந்தார்.

”இதுக்கெல்லாம் என்னன்னு சார் பதிலெழுதறது.. பேசாம ஒருநாள் ஆபிசுக்கு வர சொல்லி கவுன்சிலிங் பண்ணி அனுப்பலாம்..” சிரித்தாள்.

”கரெக்ட்தான்.. நாமளும் ஒருநாள் இதுக்காக ஒதுக்கி சிரிச்சிக்கலாம்..” என்றான் சின்ன சிரிப்படன்.

”காபி சாப்றீங்களா சார்..” என்றாள். வீட்டிலிருந்தே ப்ளாஸ்கில் எடுத்து வந்து விடுவாள். காபி போட்டு இவளுக்கும் கணவருக்கும் ஆளுக்கொரு ப்ளாஸ்கில் ஊற்றி வைப்பது அம்மாவின் வேலை. ”தாரளமா..” என்றான்.

மதியம் வரை கால்வாசி தகவல்களை கூட பெற முடியவில்லை. தினசரி பார்வையிட வேண்டிய தபால்கள் வேறு குவிந்திருந்தன. அதற்குள் தலைமைப் பொறியாளரிடமிருந்து அழைப்பு. ”மேடம்.. என்னாச்சு..?” என்றார்.

”பண்ணீடுறேன் சார்..” என்றாள்.

”எப்ப முடியும்னு சொல்லுங்க..” என்றார் கூடுதல் வேகமாக.

”சார்.. முடிச்சிடுறேன் சார்..”

”இஇட்ட நீங்களே நேரடியா பேசுங்க.. ஏஇ பேசறதுக்கும் எஸ்டிஓ பேசறதுக்கும் வித்யாசமில்லையா..?” என்றார்.

செயற்பொறியாளர்கள் விபரங்களை உடன் அளித்து விடுவதாகதான் சொன்னார்கள். ஆனாலும் நான்கு மணியாகியும் வேலை சுணக்கமாகவே இருந்தது. வீரபாண்டியனுக்கும் அதே நிலைதான். ”ஒரு கேள்விக்கு பதில் தர்றதுக்கே இவ்ளோ நேரமா சார்..? அத்தனையும் வாங்கி கம்பைல் பண்ணி நாங்க எப்போ செகரட்ரிக்கு அனுப்பறது..” தொலைபேசியில் சத்தமாக பேசிக் கொண்டிருந்தான். அருகில் போய் ”எந்த டிவிஷன் சார்..” என்றாள். சொன்னான்.

”வைக்காதீங்க.. நான் பேசறேன்..” என்றபடியே ரீசிவரை வாங்கிக் கொண்டாள்.

“சார்.. எல்லா டிவிஷனும் ஃபிகர் குடுத்துட்டாங்க.. உங்கள்ட்டேர்ந்து வந்தவொடனே கம்பைல் பண்ணி செகரட்டரிக்கு அனுப்பணும்.. அங்கேர்ந்து ஃபோன் வந்துட்டே இருக்கு சார்..”

”எல்லாமே ஒடனே.. ஒடனேன்னா எப்டீங்க மேடம்..?” என்றார் அந்த செயற்பொறியாளர்.

”உங்க கஷ்டம் புரியுது சார்.. நாங்க என்ன செய்ட்டும்.. ப்ரீதிங் டைம் கூட குடுக்காம அவசரப்படறாங்களே சார்..” செயற்பொறியாளர் பதவி இவள் பதவியை விட ஒரு படி மேலானது. அவளின் பணிவில் மனம் இளகியவற்போல ”உங்க ஆபிஸ் மெயில் ஐடி குடுங்க மேடம்.. அனுப்ப சொல்றேன்..“ என்றார்.

”சார்.. பிபிடிக்கு ஃபோட்டோஸ் வேணும் சார்..” என்றாள் மின்னஞ்சல் முகவரியை சொல்லி விட்டு.

”தெரியும்மா.. சொன்னீங்களே..” அலைபேசியை துண்டித்துக் கொண்டார்.

”பாருங்க சார்.. டெய்லி பத்து மெயில் கரஸ்பாண்ட் பண்றோம்.. மெயில் ஐடி வேணுமாம்..” என்றாள் வீரபாண்டியனிடம் கோபமாக..

”அப்றம் அவங்க கெத்தை காட்றது எப்டீ..?” சிரித்து விட்டு தொடர்ந்தான். ”எல்லா டிவிஷன்லேர்ந்தும் பர்டிகுலர்ஸ் வந்துடுச்சா மேடம்..”

“அட.. நீங்க வேற சார்.. இன்னும் வர்ல..”

”மேடம்.. சிஇ கூப்டுறாங்க..” என்றார் அலுவலக உதவியாளர் குறுக்கிட்டு.

தலைமைப் பொறியாளர் கடுப்பாக வைத்திருந்தார் முகத்தை. ”மேடம்.. ஒம்பதே ஒம்பது டிவிஷன்.. அதை கேட்டு வாங்க இவ்ளோ நேரமாங்க..? மத்த ரீஜின்லேர்ந்தெல்லாம் வந்துருச்சாம்.. நம்பதான் இன்னும் அனுப்பலயாம்.. செகரடேரியட்லேர்ந்து அர்ஜ் பண்றாங்க.. சீக்ரம்..” பேசிக் கொண்டே வந்தவர் குரலை உயர்த்தி கத்த தொடங்கினார். ”எல்லாம் அவசர நேரத்திலதான் செய்வீங்களா..?  அசெம்ளி கூட்டம் கூட போவுதுன்னு தெரியும்ல்ல.. இதெல்லாம் தயாரா வச்சிக்க வேணாமா..? அவசர கோலத்தில அள்ளுப்புளிக்கணக்க கொடுத்துடுவீங்க.. அங்க மினிஸ்டர் முன்னாடி பதில் சொல்றது நாந்தானே..? போய் விறுவிறுன்னு வேலைய பாருங்க மேடம்..”

எரிச்சலாக வந்தது அவளுக்கு. செயற்பொறியாளர்களின் அலைபேசியை தவிர்த்து அலுவலக எண்ணில் தொடர்பு கொண்டு கத்தினாள். ”தோ.. வாங்கீ்ட்டே இருக்கோம் மேடம்..” என்றார்கள்.

”எவ்ளோ நேரம் இதயே சொல்லுவீங்க.. ஒரு டிவிஷன் ஒர்க்கை கூட கம்பைல் பண்ணி தர முடியலேன்னா என்ன சார் அர்த்தம்.. நீங்க எப்போ அனுப்பி.. நாங்க எப்போ செகரடேரியட்டுக்கு அனுப்பறது..?” என்றாள் கோபமாக.

கணவரிடமிருந்து அழைப்பு. ”சொல்லுங்க..” என்றாள்..

”மணிகண்டனோட மிஸ் ரொம்ப பிரைஸ் பண்ணினாங்க.. எல்லாம் அவங்கம்மா கோச்சிங்ன்னு சொன்னேன்.. அவங்களுக்கு ஆச்சர்யமா போச்சு.. நைசா நீ வேலைக்கு போறீயான்னு விசாரிச்சாங்க.. எங்கம்மா எஸ்டீஓவா இருக்காங்கன்னு ஒன் பையன் பெருமையா சொன்னான்..” என்றான்.

”இங்க ஆபிஸ்ல ஒரே புடுங்கு.. எல்லாம் ஓரே நாள்ல எல்லாத்தையும் முடிச்சுக் குடுன்னு உசிர வாங்றாங்க..” என்றாள்.

”சரி.. பொறுமை.. பொறுமை.. கௌம்பும்போது மிஸ்ட்கால் குடு.. உன்னை பிக்கப் பண்ணீக்கிறேன்.. வீட்ல ஃப்ரஷ்அப் பண்ணீட்டு வெளில சாப்டுக்கலாம்..”

”நேரமாயிடும்னு நெனக்கிறேன்..”

”அப்டீன்னா உங்கம்மாவையும் மணியையும் கூட்டீட்டு வந்துடுறன்.. சாப்டுட்டே வீட்டுக்கு போலாம்..” என்றான். அவனும் அதிகாரி என்பதால் மனைவியை புரிந்துக் கொள்ள முடிந்தது.

”சரிங்க.. வைக்றன்..” என்றாள். வெளியே இருட்டத் தொடங்கியிருந்தது. ”கடவுளே.. ஆறாயிடுச்சா.. நேரம் போறதே தெரில..”

மெயிலில் புகைப்படங்கள் வந்துக் கொண்டேயிருந்தன. ”எல்லாத்தையும் டவுன்லோடு பண்ணி டிவிஷன்வைஸ் ஃபோல்டர் போட்டு ஏத்தி வச்சுடுங்க மேடம்.. பிபிடி பண்றதுக்கு கம்ஃபர்டபளா இருக்கும்…” என்றாள் தனது உதவியாளரிடம். அதற்குள் தலைமைப் பொறியாளர் கனிணி அறைக்கே வந்து விட்டார்.

”எவ்ளோ நேரம் எடுத்துக்குவீங்க..?” அனைவரும் எழுந்துக் கொண்டனர்.

”இதோ ஆச்சு சார்.. முடிச்சுட்டோம்..” பதற்றமாக பேசினாள்.

”இன்னும் எத்தனை பெட்டிஷன் பெண்டிங்..?” என்றார் வீரப்பாண்டியனிடம்.

”டோட்டலா இருவத்தொண்ணு சார்.. பதினாறு குளோஸ் பண்ணீட்டேன்.. இன்னும் அஞ்சு இருக்கு சார்..”

சிஎம் செல் பெட்டிஷன் பைலை பார்வையிட்டவர் ”ஒரு மாசத்துக்கு முன்னாடி வந்த பேப்பர்.. .ஃபைல்ல கட்டி வச்சிட்டு இப்ப வேலை செய்றீங்க.. அப்டிதானே..? உதவிப் பொறியாளரை கத்தி விட்டு ”இதெல்லாம் மானிட்டர் பண்ணாம நீங்க என்ன சார் பண்றீங்க..? என்றார் கோபமாக வீரபாண்டியனிடம்.

பிறகு இவளிடம் திரும்பி ”நீங்கம்மா..?” என்றார்.

”இதோ முடிச்சிட்டேன் சார்..” என்றாள் பவ்யமாக.

”காலைலேர்ந்து ஒரே பதில்தானே சொல்றீங்க.. புக்லெட் போட்டாச்சா..?“

”இன்னும் இல்ல சார்.. இப்பதான் எல்லா ப்ராகிரசும் வந்துச்சு.. இதோ போட்டுடுறன் சார்..” என்றாள்.

நிமிர்ந்து பார்த்து விட்டு கோபமாக நகர்ந்தார். மணி ஏழரையை தாண்டியிருந்தது.

”கடவுளே.. இவருக்கென்னா..? சொல்லீட்டு போயிடுவாரு.. அவசரம்னு கேட்டாலே ஆடி அசஞ்சு குடுக்குறாங்க.. இதுல டெய்லி வேற ரிப்போர்ட் கேக்குணுமா.. ச்சே.. வெறுத்துப் போச்சு.. பொம்பளன்னு கூட அந்தாளுக்கு அறிவில்ல.. இவரு பாட்டுக்கு பேசிட்டு போறாரு.. மினிஸ்டர்.. செகரட்டரின்னு அலைஞ்சு வருமானம் வர்ற பக்கமா போஸ்டிங் வாங்கீட்டு வந்து உக்கார தெரியுதுல்ல.. கேள்விக் கேட்டா வலிக்குதாம்மா..? இவரு பொண்டாட்டீ பொம்பளபுள்ளயெல்லாம் இத்தனை நேரத்துக்கு வெளிய இருந்தா தாக்கிக்குவாராம்மா… ஆம்பளபொம்பள வித்யாசம் கூட தெரியாம ஒரேடீயா எகிற்றாரு.. சே..” என்றாள் படபடப்பாக நாளை மருத்துவ விடுப்பு எடுக்க வேண்டும் என்ற முடிவோடு.

***

‘இரவுக்கு ஆயிரத்தொரு கண்கள் -2: ஆயிரத்து இரண்டாம் இரவின் கதை’

– ஆர். அஜய்-

ஆயிரத்தொரு இரவுகள் கதைகள் கேட்டபின் மனம் மாறி ஷெரியார் (Shahryar)  ஷஹேரேசாதவுடன் (Scheherazade) இனிமையான இல்வாழ்க்கை நடத்தினார் என்று ‘அரேபிய இரவுகள்‘ முடிகின்றன (இந்த ஆயிரத்தொரு இரவு காலகட்டத்தில் கதை சொல்லல்/ கேட்டல் இவற்றினூடே மூன்று குழந்தைகள் ஷஹேரேசாத/ ஷெரியார் தம்பதியருக்கு பிறந்தன என்பதையும் நினைவில் கொள்வோம்). அதன்பின் அவர்களுடைய இல்வாழ்க்கை எப்படி இருந்திருக்கக்கூடும்?  தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த கத்தி நீங்கியபின், தினமும் அரசனை மகிழ்விக்கும் கதை சொல்ல வேண்டிய நிர்பந்தம் இனி இல்லாத நிலையில் ஷஹேரேசாத அடுத்த இரவை எப்படி கழித்திருப்பார்? உறக்கமில்லாமல் கதை சொல்லிச் சொல்லி அலுத்துப் போய் நிம்மதியான இரவுத் தூக்கத்தை எதிர்நோக்கி காத்திருந்திருப்பாரா அல்லது ‘ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது’ என்பதற்கு ஏற்ப மேலும் கதைகளை உருவாக்கி இருப்பாரா? எட்கர் ஆலன் போ, ஆயிரத்தி இரண்டாவது இரவிலும் ஷஹேரேசாத இன்னொரு கதையை சொல்வதாக ‘The Thousand-And-Second Tale of Scheherazade‘ ல் புனைகிறார்.

போவின் புகழ் பெற்ற ஆக்கங்களைப் படித்து அவருடையது மிக இருண்மையான உலகம் என (சரியான) புரிதலில் இருப்பவர்களுக்கு இந்தக் கதையில் உள்ள மெல்லிய நகைச்சுவை புதிதாக இருக்கக்கூடும். அந்தப்புரத்தில் உள்ள அனைத்து கன்னிகளையும் கொன்று விடுவதாக தன் தாடியின் மீது ஷெரியார் உறுதி எடுக்கிறார். அவரை தைரியமாக மணம் முடிக்கும் ஷஹேரேசாத கணவனை உறக்கத்தில் இருந்து எழுப்பும்போது அவன் அவளைக் கடிந்து கொள்வதில்லை என்பதற்கு பாசம் காரணமல்ல, ‘… who bore her none the worse will because he intended to wring her neck on the morrow, …‘  என்பதுதான். தன் கணவன் குறட்டை விடுவதைப் பற்றிய மனத்தாங்கலும் ஷஹேரேசாதவுக்கு உள்ளது. எல்லாம் சுபமாக முடிந்த பின்பு, ஆயிரத்தி இரண்டாம் இரவில். குறட்டை விட்டபடி உறங்கிக் கொண்டிருக்கும் கணவனைப் பல முறை கிள்ளி எழுப்பி ஷஹேரேசாத சிந்த்பாத்தின் ஏழாவது பயணத்தை பற்றிய கதை சொல்ல ஆரம்பிக்கிறார். குறட்டை ஒலியின் நாராசத்தை கேட்காமல் இருக்கவே இன்னொரு கதையை ஆரம்பித்தார் என்றும் கருதவும் இடம் உள்ளது.

வழக்கம் போல் பயணப் பித்தால் பீடிக்கப்படும் சிந்த்பாத் இன்னொரு பிரயாணத்தை ஆரம்பிக்கிறான். ஆனால் எப்போதும் போல் பெரும் பாம்புகளையோ, பறவைகளையோ சந்திப்பதில்லை, பயமுறுத்தும் ஜின்களோ, மயக்கும் அழகிகளோ, சாகஸ நிகழ்வுகளோ இல்லை. மனித- மிருக அம்சங்கள் கொண்ட ஜீவராசி ஒன்றைச் சந்திப்பவன், அதனால் பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதும், அங்கு அவன் காண்பவற்றை விவரிப்பதுமே மீதிக் கதை. முதற்பார்வையில் பெரிதாக சுவாரஸ்யம் இல்லாத நிகழ்வுகள்தான், ஆனால் தன் (போவின்) காலத்திய கண்டுபிடிப்புகளை சிந்த்பாத் காண்பதாக சுட்டிச் செல்வதின் மூலம் தன் தனித்துவத்தை பதிவு செய்கிறார். சார்ல்ஸ் பாபெஜ்ஜின் கணக்கீடு கருவி, ஆரம்ப கால புகைப்படக் கருவி, ரெயில் வண்டி என சிந்த்பாத் பார்ப்பவற்றின் பெயரை நேரடியாக சொல்லாமல் குறிப்பால் உணர்த்துகிறார். ‘Another directed the sun to paint his portrait, and the sun did’ …’In place of corn, he had black stones for his usual good; and yet, in spite of so hard a diet, he was so strong and swift that he would drag a load more weighty than the grandest temple in this city, at a rate surpassing that of the flight of most birds‘  போன்றவை எவற்றைக் குறிக்கின்றன என வாசகன் யூகிக்க முடியும்.

இவற்றை ஷெரியார் எவ்வாறு எதிர்கொள்கிறார்? மனித- மிருக ஜீவராசி பற்றி கேள்விப்படும்போது மிகவும் மகிழ்விப்பதாக இருப்பதாக சொல்பவர் அதன் பின் ‘Hum’, ‘Hoo’, ‘Humph’, ‘Pooh’, ‘Stuff’ போன்ற பொத்தாம் பொதுவான ஒற்றை வார்த்தை எதிர்வினைகள் ஆற்றுவதன் மூலமும் அவை பின்னர்  ‘Nonsense’,  ‘Twattle’, ‘Ridiculous’, ‘Absurd’,  ‘Preposterous’ ஆக மாறுவதன் மூலமுமே அவர் மனநிலையை போ நமக்கு உணர்த்துகிறார். எனவே இறுதியில் ஷஹேரேசாதவைக் கொல்ல அவர் உத்தரவிடுவது பெரிய வியப்பில்லை. முதலில் வருத்தமடையும் ஷஹேரேசாத, பின் தன் அறிவிலி கணவனின் குழந்தைத்தனமான துர்நடத்தை பல கற்பனை செய்ய முடியாத சாகசங்களைப் பற்றி அவன் அறிந்து கொள்ள முடியாமல் தடுத்து விடுவது அவனுக்குதான் நஷ்டம் என்று தன்னை தேற்றிக் கொண்டு மரணத்தை தழுவுவதில் அவல நகைச்சுவை உள்ளது.

‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பதன் உதாரணம் ஷஹேரேசாத என்று எளிதில் சொல்லி விடலாம். அதே நேரம் இன்னொன்றும் கவனிக்கப்பட வேண்டியது. பல விசித்திர, அசாதாரண கதைகளை ஆயிரத்தொரு இரவுகள் சந்தோஷமாக கேட்டு வந்த ஷெரியார் ஏன் உண்மையை எதிர்கொள்ளும்போது அது தலைவலி ஏற்படுத்துவதாக சொல்லி, அதற்காக மனைவியை தண்டிக்க வேண்டும்? போவிற்குதான் இவை நிகழ்கால உண்மைகள், ஷெரியாரைப் பொறுத்தவை அவை பொய்கள் (அல்லது எதிர்கால உண்மைகள்) என்பது சரியே, ஆனாலும் இந்த (நிகழ்/ எதிர்கால) உண்மைகள்/ பொய்கள் ஷஹேரேசாதவின் புனைவுகளைவிட எந்தளவுக்கு மாறுபட்டவை, நம்ப முடியாதவை? ‘Truth is stranger than fiction‘ என்று கதையின் ஆரம்பத்தில் போ குறிப்பிடுவதை கதையின் இறுதியோடு ஒப்பிட்டு பார்ப்பது போ இந்தக் கதையில் என்ன முயல்கிறார் என்பதை புரிய உதவக்கூடும். அதிலுள்ள நகைமுரணும்,  கதையின் மெல்லிய நகைச்சுவை அம்சமும் இதை கவனிக்கப்பட வேண்டிய கதையாக்குகின்றன.

oOo

இரவுக்கு ஆயிரத்தொரு கண்கள் – 1 – ஆர். அஜய்

விளக்கு அமைப்பின் ‘புதுமைப்பித்தன் நினைவு விருது -2015’

ரவிசங்கர்

விளக்கு என்னும் அமைப்பு, ஒவ்வொரு வருடமும் தமிழ் இலக்கியத்துக்குச் சிறந்த பணியாற்றியவர் ஒருவரைத் தேர்வு செய்து ஒரு விருது அளிக்கிறது. இந்த விருது புதுமைப்பித்தன் நினைவாக வழங்கப்படுவதாகத் தெரிகிறது. 2015 ஆம் ஆண்டிற்கான விருதை, தமிழில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருபவரும், தமிழிலிருந்து இங்கிலிஷுக்கு மொழிபெயர்ப்பதில் பெயர் பெற்றவராகத் திகழ்பவருமான திரு.கல்யாணராமனுக்கு இந்த அமைப்பு வழங்கியது. அதன் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பாராட்டு நிகழ்ச்சி,  சென்னை அருங்காட்சியகத்துக்கு எதிர் சாரியில் உள்ள இக்ஸா மையத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழின் மூத்த எழுத்தாளர்களான திரு. இந்திரா பார்த்தசாரதியும், திரு. அசோகமித்திரனும் வந்திருந்து சிறப்பித்தனர்.

கல்யாணராமன், தமிழிலக்கிய உலகில் நுழைய காரணமாக இருந்த கணையாழி பத்திரிகையை அன்று இயக்கிய அசோகமித்திரனும், அப்பத்திரிகையின் பதிப்புக் குழுவில் அன்று பங்கெடுத்து வந்த இந்திரா பார்த்தசாரதியும் இந்த நிகழ்ச்சிக்கு வந்தது ஒரு அபூர்வ நிகழ்வுதான். இவர்களைத் தவிர சிறப்பு வரவேற்பைப் பெற்றவராக, கிரியா பதிப்பகத்தை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வரும் எஸ்.ராமகிருஷ்ணனும் அரங்கில் இருந்தார்.

உரையாற்ற அழைக்கப்பட்ட ஐந்து நபர்கள் பேசியன பற்றி ஒரு சிறு விவரணை கீழே.

முதலாவதாக நிகழ்ச்சியில் பேசிய பெருமாள் முருகன் நல்ல தயாரிப்புடன் வந்து பேசினார். சிறிது நீளமான உரை. மொழிபெயர்ப்பு பற்றித் தொல்காப்பியரிடமிருந்தே செய்திகளை நாம் பெற முடியும், அப்போதிருந்தே தமிழில் மொழிபெயர்ப்பு இலக்கியம் பற்றிய விழிப்புணர்வும் அதன் இயல்புகள் பற்றிய கருத்து வெளிப்பாடும் இருந்திருக்கிறது என்பதைச் சுட்டினார். அன்றைய கவனம் பெருமளவும் சமஸ்கிருதத்திலிருந்து பெறப்படும் இலக்கியம் பற்றி என்பது நமக்குத் தெரியும் என்றாலும், தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய  நச்சினார்க்கினியார், இளம்பூரணர் போன்றார் காலத்திருந்தே மொழிபெயர்ப்பு என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கட்டமைப்பதில் நம் கவனம் இருந்திருக்கிறது என்பதைச் சுட்டி இந்தத் துவக்க கால கவனம் எப்படி உருமாறியது என்பதையும் பற்றிப் பேசினார்.

சமகாலத்தில் மொழிபெயர்ப்பு என்பதில் தமிழிலிருந்து பிற மொழிகளுக்குப் போகும் இலக்கியம் பற்றியும், அதைச் செய்பவர்களைப் பற்றியும் தகவல் தேடினால் கிட்டுவது மிகக் கடினமாக இருக்கிறது என்றார். ஒரு சில பெயர்களைச் சொன்னார். ஆர். சண்முகசுந்தரம் நூறு புத்தகங்களுக்கு மேல் தமிழில் மொழிபெயர்த்தவர். அவரைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாமல் இருக்கிறோம்.  பட்டம் வாங்கவென, இதைப் பற்றி ஒருவர் ஆய்வு நடத்தி எழுதிய கட்டுரை/ புத்தகம் ஒன்றுதான் இன்னமும் இருக்கிற ஒரே ஆதார நூல் என்பது வருந்தத்தக்கது என்று பேசியவர், பிறகு கல்யாணராமனுடைய மொழிபெயர்ப்பின் அருமை பற்றி நிறையப் பேசினார். தன் கதைகளுக்கு கல்யாணராமன் கொடுத்த சிறப்புக் கவனத்தைப் பற்றி விளக்கினார்.

வட்டார வழக்குகள் நிறைந்த தன் படைப்புகளைச் சுயவிருப்பப்படி மொழி பெயர்க்காமல், தன்னை நேரில் வந்து பார்த்துப் பல மணி நேரம் உரையாடி, தொலைபேசியில் தொடர்ந்து பேசி அவ்வப்போது எழும் ஐயங்களை விளக்கிக் கொண்டு, மின்னஞ்சலில் மேற்படியான தகவல்களைச் சேகரித்து ஒவ்வொரு கதைக்கும் பல மாதங்கள் செலவழித்து மொழிபெயர்த்திருக்கிறார். அப்படி மொழிபெயர்த்தபோது கிட்டிய முதல் பிரதிகளைத் தன்னிடம் கொடுத்து சோதித்துக் கொண்டு மேலும் மேலும் தம் பிரதியைச் செம்மைப்படுத்திக் கொள்வதை ஒரு வழக்கமாக இவர் கொண்டிருக்கிறார். தம் கதைகளுக்குக் கிட்டிய சிறப்பான மொழிபெயர்ப்பாளர் இவர் என்பதில் தனக்கு ஐயம் இல்லை என்றும் சொன்னார்.

கல்யாணராமன் செய்யும் எதையும் இப்படிப் பல முறை சோதித்துச் செய்பவர் என்பது அவரது பேட்டி ஒன்றைப் பிரசுரித்த சொல்வனம் குழுவுக்கும், அந்த நேர்காணலை நடத்தி எழுதிக் கொடுத்த ஸ்ரீதர் நாராயணனுக்கும் தெரியும்.

அடுத்து பேசிய தேவிபாரதியும் கிட்டத்தட்ட முழுதுமே தன் நூலைக் கல்யாணராமன் எப்படி மிகக் கவனமாகவும், நிறைய உழைப்போடும் மொழிபெயர்த்திருக்கிறார் என்பது பற்றியே பேசினார். அந்த மொழிபெயர்ப்பின் விளைபொருளாகத் தன் சிறுகதைகளில் சிலவற்றின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் ‘ஃபேர்வெல், மஹாத்மா’ உலகரங்கில் கவனம் பெற்று விட்டது, இது சாத்தியமானது கல்யாணராமனின் மொழிபெயர்ப்புத் திறனால்தான் என்றும் தெரிவித்தார்.

இ.பா கொஞ்சம்தான் பேசப்போகிறேன் என்று ஆரம்பித்தார், ஆனால் பேசத் துவங்கியதும் தான் நினைத்திருந்த கருத்துகளின் தொகுப்பில் கிட்டிய உந்துதலாலோ அல்லது பேச்சுடைய ஓட்டம் கொடுத்த உற்சாகத்தாலோ கொஞ்சத்துக்கு மேலாகப் பேசினார். (ஒலிபெருக்கியிலிருந்து புறம் நகர்ந்து பேசியதாலும், அறையில் தெருவுடைய போக்குவரத்தின் சத்தம் ஊடுருவியதிலும் இவர் பேசியதில் மூன்றிலொரு பங்கு எனக்கு எட்டவில்லை).

மொழிபெயர்ப்பு என்பதைவிட மொழியாக்கம் என்பதே தனக்குப் பிடித்த சொல் என்றவர் அனேகமாக மொழியாக்கம்தான் சாத்தியம் என்பதைச் சொன்னார். அட, நான் பேச இருந்த விஷயத்தைப் பேசி விட்டாரே, இனி எதைப் பேசுவது என்று திகைத்தேன்.

மொழிபெயர்ப்பு என்பது எப்போதும் ஒரே பிரதியோடு நிற்பதில்லை. அந்தந்த காலத்தில் செவ்விலக்கியங்கள், சிறந்த படைப்புகளை மொழி பெயர்ப்பவர்கள் தமக்கு உகந்த மொழியில், நடையில் அவற்றை மாற்றுகிறார்கள். ஸெர்வாண்டெஸின் ‘டான் கிஹோட்டே’ க்குப் பல மொழிபெயர்ப்புகள் உண்டு என்று மொழிபெயர்ப்பாளர்கள் சிலரின் பெயர்களைச் சொன்னார்.  இரு மொழிகளிலும் மிக்க தேர்ச்சி தேவை என்றும், யார் வேண்டுமானாலும் மொழிபெயர்க்கலாம் என்பது உண்மைதான் என்றாலும், மூல ஆசிரியரின் நோக்கத்தைத் தெரிந்து கொள்ள அந்த மொழிக் குழுவின் இயல்புகள், படைப்பின் காலம் ஆகியன குறித்து நல்ல அறிவு தேவை என்றார்.

இ.பா. சேம் ஸைட் கோல் ஒன்றையும் போட்டார்- சம்ஸ்கிருதம் ஏதோ ஒரு சில சமூகக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்த சொத்து இல்லை. அது ஒரு காலத்தில் அகில இந்திய இணைப்பு மொழி, அதிலிருந்து தமிழ் கடன் வாங்கிய அளவு, கடன் கொடுத்தும் இருக்கிறது என்பதை நாம் அறிவதில்லை என்றார் அவர். சீவக சிந்தாமணி தமிழிலிருந்துதான் சம்ஸ்கிருதத்துக்குப் போயிருக்க வேண்டும் என்ற ஓர் ஆய்வாளரின் கருத்து தனக்கு உடன்பாடுள்ள கருத்து என்றார். அது போலப் பல நூல்கள், உதா: பெரிய புராணம், தமிழிலிருந்து சம்ஸ்கிருதத்துக்குப் போனதை அறியாமல், இடைக்காலத்தில் (18-19 நூற்றாண்டுகளைச் சொல்கிறார்) இயங்கிய சில தமிழறிஞர்கள் கூட,  சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு வந்த நூலாக அதைக் கருதியதைச் சொல்லி, நம் ஆய்வு முறைகள் இன்னமும் நன்கு செம்மைப்படவில்லை என்பதாகச் சொல்லி வருந்தினார்.

அ.மி பேசவில்லை. தனி உரையாடலில்கூட அவருக்குக் குரல் அதிகம் எழவில்லை. மிக்க தளர்ச்சி. ஆனாலும் படிகள் ஏறி இறங்கி, அங்கு வந்து அமர்ந்திருந்து பரிசை வழங்கினார் என்பது வியப்புக்குரியது. அது அவருடைய மன உறுதியைக் காட்டியது என்பதோடு, கல்யாணராமனின் இலக்கிய நடவடிக்கைகள் மீது அவருக்கிருக்கும் மதிப்பையும் காட்டியது.

கன்னடரும், பெங்களூர்வாசியுமான  ஸ்ரீநாத் பேரூர் (பெயரைச் சரியாகச் சொன்னேனா என்பது தெரியவில்லை) சுருக்கமாக, ஆனால் நன்கு உரையாற்றினார். இவர் இங்கிலிஷில் பேசினார். குறிப்பாக கல்யாணராமன் தன் போன்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஆதர்சம் என்று சொன்னார். புலிக்கலைஞன் என்ற அமி கதையின் மொழிபெயர்ப்பிலிருந்து சில பகுதிகளைப் படித்துக் காட்டினார். டால்ஸ்டாய், தாஸ்தயெவ்ஸ்கி, செகாவ் போன்ற பற்பல ரஷ்ய எழுத்தாளர்களை சென்ற நூற்றாண்டில் உலகம் படிக்க முடிந்ததற்குக் காரணமே மொழிபெயர்ப்பாளர்கள்தாம் என்றார் அவர். சென்ற நூற்றாண்டின் சிறந்த ரஷ்ய எழுத்தாளர் யாரென ஆங்கிலேயர்களைக் கேட்டால் அது கான்ஸ்டன்ஸ் கார்னெட் என்றுதான் சொல்வார்கள், என்றார். காரணம், அவர்கள் ருஷ்ய எழுத்தாளர்களை படித்திருப்பது கான்ஸ்டன்ஸ் கார்னெட் மொழியாக்கத்தில்தான். அங்கு வந்திருந்த எத்தனை பேருக்கு இந்தப் பெயர் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை.  (அவர் யாரெனவும் ரஷ்ய நாவல்களை மொழி பெயர்ப்பதில் நடக்கும் பனிப்போர் பற்றித் தெரிந்து கொள்ளவும் இந்தக் கட்டுரையைப் பாருங்கள்). அதே போல், தனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர் யார் என்று கேட்டால் தான் கல்யாணராமன் பெயரைத்தான் சொல்ல முடியும் என்றார்- அசோகமித்திரன், பெருமாள் முருகன், தேவிபாரதி, சல்மா, என். டி. ராஜ்குமார் என்று பல தமிழ் எழுத்தாளர்களும் பிற மொழியினருக்கு கல்யாணராமன் மொழியாக்கத்தில்தான் வாசிக்கக் கிடைக்கிறார்கள்.

நான் பேச நினைத்ததில் பகுதிகளை இ.பா, பெ.மு, ஸ்ரீநாத் ஏற்கனவே பேசி இருந்தனர். அதனால் சுருக்கிக் கொண்டேன்.

சொன்னவை: கல்யாணராமனின் துவக்க காலப் புனைவுகள் அவர் சொன்னது போல தற்சாய்வு கொண்டிருந்ததால் போதாதவையாக இல்லை. அவை சிறப்புகள் கொண்டவையாகவே இருந்தன. அவர் புனைவை எழுதாமல் நிறுத்தியது நமக்கு நஷ்டம்.

மொழிபெயர்ப்பு, மொழியாக்கம், முழி பெயர்ப்பு என்ற மூவகையில் மூன்றாவது, தமிழில் நிறையக் கிடைக்கிற விஷயம். புனைவு மட்டுமல்ல, அரசியல் நூல்கள் கூடத் தவறான வகைகளில் மொழிபெயர்க்கப்பட்டுப் பரப்பப்படுகின்றன. மூல நூல்களோடு ஒப்பிட்டால்தான் அவை எத்தனை தூரம் தவறானவை என்பது தெரியும். தமிழ் மட்டுமே படிக்கிறவர்களுக்கு இந்தக் குறைகள் தெரியாதது வருந்தத்தக்க நிலை. இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.

இங்கிலிஷில் இருந்து தமிழிற்குக் கொணரப்பட்டதே இப்படி என்றால், தமிழிலிருந்து இங்கிலிஷுக்குப் போனது எப்படி இருக்கும்?  மிக்க சுதந்திரம் எடுத்துக் கொண்டு அவற்றை மாற்றிப் படைத்தவர்களே அதிகம். ஏ.கே. ராமானுஜம் போன்றாரின் மொழிபெயர்ப்புகள்கூட இப்படிச் சுதந்திரம் எடுத்து மாற்றிக் கொடுக்கப்பட்டவை. அவர் மொழிபெயர்த்த சங்கம் பாடல்களில் எனக்குச் சங்க காலத்துப் பண்பாடு கிட்டவில்லை. அது அவருடைய கவியாக்கமாகத்தான் தென்பட்டது.

ஆனால், பொதுவாக இந்திய சமூகங்களின் குணங்களை இந்திய மொழியிலிருந்து இங்கிலிஷுக்கு மாற்றப்பட்ட இலக்கியம் கொடுக்குமளவு நேரடியாக இங்கிலிஷில் எழுதப்படும் இந்திய நூல்கள் கொடுப்பதில்லை.

அந்த வகையில் கல்யாணராமன் செய்து வரும் மொழியாக்கம் ஒரு அரும்பணியே. இது அ.மிக்கு கல்யாணராமனின் கொடை என்று கூட நாம் சொல்லலாம். அ.மியே இங்கிலிஷில் எழுதக் கூடியவர் என்றபோதும், கல்யாணராமனின் உழைப்பும், அளிப்பும் அ.மியின் எழுத்தை ஒளிரச் செய்கின்றன.

இவை இன்று முன்னெப்போதையும் விட கூடுதலாக அவசியமான முயற்சி என்பது ஏன்  என்றால், 40 ஆண்டுகளுக்கு முன்பு போல இல்லாமல் பல லக்ஷம் இந்தியர்களும், தமிழர்களும் இன்று உலக நாடுகளில் பலவற்றிலும் பரவிச் சென்று வாழ்கின்றனர். அவர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களின் அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் இத்தகைய மொழிபெயர்ப்புகள் இந்தியத்தைக் கொண்டு சேர்க்கின்றன. குறிப்பாக இரண்டாம், மூன்றாம் தலைமுறையினருக்கு இந்தியப் பண்பாட்டைக் கடத்திக் கொடுப்பதில் மொழிபெயர்ப்பு இலக்கியம் அரும் பணி புரிகிறது.

இந்திய மொழிகளிடையே மொழிமாற்றம் என்பது இந்தியரிடையே ஒருங்கிணைப்பைச் சாதிக்கும் அரிய பணியைச் செய்கிறது. இது ஆங்கிலம் மட்டுமே பேசி, அதையே படிக்கும் மக்களுக்கு அத்தனை பயனுள்ளதாக இராது, ஆனால் இந்திய மொழிகளில் படிக்கும் பலருக்கும் மிகப் பயனுள்ள ஒரு வழிமுறை.

உலகமயமாதல் என்பது அடையாளங்களை அழிக்கிறது என்றே பேசப்படுகிறது. என் அனுபவத்தில் அது ஏராளமான அடையாளங்களுக்கு உயிர்ப்பூட்டி மறுபடி செயல் வேகம் கொள்ளவும் தூண்டுகிறது. மொழிபெயர்ப்புக்கு உலகமயமாதலால் ஒரு தூண்டுதல் கிட்டி இருக்கிறது.

கடைசியாக, காலனியத்தின் எச்சமான ஒரு மொழி மூலம் காலனியத்தை நம்மிடமிருந்து அகற்ற நாம் பயன்படுத்த முடியும், இந்தியாவை ஒருங்கிணைக்க, பல மொழிக் குழுக்களிடையே உறவைப் புதுப்பிக்க, இதைப் பயன்படுத்த முடியும் என்பது ஒரு நகை முரண்தான். நம்மை நம்மிடமிருந்தே பிரிக்கும் வகையில் நம்மிடையே இன்றும் நிலவும் காலனிய எச்சங்களை நாம் அகற்றுவதுதான் நாம் ஒன்றிணைய உதவும் என்று முடித்தேன்.

கடைசியாக ஜி.குப்புசாமி பேசினார். தான் இந்தக் கூட்டத்தில் பேசுவதற்காக எடுத்த குறிப்புகள் எல்லாம் ஒரு கோப்பில் மேஜையில் வைக்கப்பட்டிருப்பதைச் சுட்டியவர், அவற்றைப் பேசுவதானால் பல மணி நேரங்கள் ஆகும் என்றார். அவை இனி ஒரு புத்தகமாகத்தான் வர வேண்டியிருக்கும், ஆனால் தனக்குக் கொடுக்கப்பட்ட பத்து நிமிடங்களில் முடிகிற மட்டும் தன் கருத்துகளைச் சொல்லப் போவதாகச் சொன்னார்.

இதற்குள் கூட்டம் கலைந்திருந்தது. பாதி பேர்தான் எஞ்சினர். அ.மி, இ.பா எல்லாம் நான் பேசும் முன்னரே சென்றிருந்தனர். திரு.குப்புசாமி, நபகோவ் மொழிபெயர்ப்பு பற்றி எழுதிய ஒரு கட்டுரையைக் குறிப்பிட்டு அது தனக்கு முக்கியமான கருத்துகளைக் கொடுத்தது என்று சில முறை திரும்பத் திரும்பச் சொன்னார்.  கல்யாணராமனின் சில மொழிபெயர்ப்புகளிலிருந்து பகுதிகளை மேற்கோள் காட்டி அவற்றின் சொல்தேர்வு, மூல எழுத்தாளரின் நோக்கமறிந்து பொருளைக் கைப்பற்றும் தன்மை என்பனவற்றைச் சிலாகித்தார். எல்லாரும் சொன்னது போல, மொழிபெயர்ப்பாளரும் ஒரு படைப்பாளி, அவருக்கான உரிய இடத்தைக் கொடுக்க நம் சமூகம் தவறுகிறது என்பதையும் சொன்னார்.  பிராந்திய வழக்குகளை நன்கு சோதித்து அறிந்து கல்யாணராமன் மொழிபெயர்ப்பது பாராட்டப்பட வேண்டிய ஒரு அணுகல் என்றார். அதே போல  இன்றைய தமிழிலக்கியத்தில் சிறந்த புனைவெழுத்தாளர் யாரெனப் பட்டியலிட்டால் அதில் கல்யாணராமன் பெயர் நிச்சயம் இருக்கும் என்றார். எந்த அளவுக்கு மொழிபெயர்ப்பாளர்கள் மறுஆக்கம் செய்கிறார்கள் என்பதை நாம் கவனிப்பதில்லை, இந்த நிலை மாற வேண்டும் என்று முடித்தார்.

ஏற்புரை வழங்கிய  கல்யாணராமன் சுருக்கமாகத்தான் பேசினார்.  படைப்பாளியின் அளவுக்கு மொழிபெயர்ப்பாளரும் முக்கியமான பணி ஆற்றுகிறார், அவர்களுக்கு பெயர் அங்கீகாரம்கூடக் கிட்டுவதில்லை. நம் நாட்டைப் போன்ற பல மொழிகள் உள்ள கூட்டமைப்பிற்கு மொழி மாற்றங்கள் மிக அவசியம். இதன் வழிதான் மொழியினங்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள முடியும். அப்படிப் புரிந்து கொள்ளவும்தான் பிற மொழி இனங்களுக்குத் தக்க இடத்தை நாம் ஒவ்வொருவரும் கொடுக்கவும், அதன் மூலம் நமக்கான மதிப்பைப் பிறரிடம் இருந்து பெறுதலும் சாத்தியமாகும் என்றார்.

துவக்கத்தில் ’வெளி’ ரங்கராஜனும், இறுதியில் பொன். வாசுதேவனும் சிறு உரையாற்றி விளக்கு அமைப்பின் பணி குறித்து விளக்கினர்.

சுமார் மூன்று மணி நேரம் நடந்த இந்தக் கூட்டம் இறுதி வரை பலரை அமர வைத்திருந்தது என்பது இந்தத் தலைப்பு குறித்து தமிழில் ஒரு அளவுக்கு கவனம் கூடி வருகிறது என்பதைக் காட்டுகிறதா என்று யோசித்தேன்.

– ரவிசங்கர்  / 26 ஃபிப்ரவரி 2017/ சென்னை

oOo

ஒளிப்பட உதவி – செந்தில்நாதன் (திரு ஸ்ரீநாத் பேரூர் மற்றும் திரு ஜி. குப்புசாமி இருவரும் உரையாற்றியது பற்றி செந்தில்நாதன் அளித்த குறிப்புகள் அடிப்படையில் கட்டுரை  திருத்தப்பட்டிருக்கிறது. செந்தில்நாதன் அவர்களுக்கு நன்றிகள்)

சாஸரின் மெய்ம்மை-பிந்தைய உலகு – எலியனோர் பார்க்கர்

(Unauthorised translation made for non-commercial use at this particular website only. The Author and Publishers have been contacted, and this post will be removed if permission to translate and display are denied.)

(ஆங்கிலத்தில், Eleanor Parker)

போஸ்ட்-ட்ரூத்‘ என்பது நம் காலத்துக்குரிய சொல் – குறைந்தபட்சம், ஆக்ஸ்போர்டு அகராதிகளின் பார்வையில்; அவை ‘போஸ்ட்-ட்ரூத்‘ என்ற சொல்லை 2016ஆம் ஆண்டின் சிறப்புச் சொல்லாய் அறிவித்திருந்தன. ‘போஸ்ட்-ட்ரூத்‘ என்ற சொல், “பொதுக் கருத்துகளை உருவாக்குவதில் உணர்ச்சிகள் மற்றும் தனிமனித நம்பிக்கைகளை நோக்கி முன்வைக்கப்படும் வாதங்களைவிட அகவயப்பட்ட தகவல் குறிப்புகள் குறைந்த அளவு தாக்கம் கொண்டிருக்கும் சூழலை” குறிக்கிறது என்று வரையறை செய்திருந்தனர்.

ஒரு புதிய சொல் தோன்றும்போது அது எதை விவரிக்கிறதோ அதுவும் புதியதாய் தோன்றிய ஒன்று என்ற எண்ணம் வலுப்பெறுகிறது: விவரிப்பதற்கான புதுச்சொல் தோன்றும்வரை அது இருக்கவில்லை என்ற எண்ணம். இந்த விஷயத்தில் நிலைமை அப்படியல்ல, ‘மெய்ம்மை-பிந்தைய’ என்ற சொல் இன்று பரபரப்பாகப் பேசப்பட்டாலும்கூட; வரலாற்றாய்வாளர்களுக்கு நன்றாகவே தெரியும், தகவல் குறிப்புகளுக்கு இருக்கும் ஆற்றலைவிட அதிக சக்தியுடன் உணர்ச்சிகளும் தனிப்பட்ட நம்பிக்கைகளும் பொதுக் கருத்தைக் கட்டமைக்காத காலம் என்ற ஒன்று இருந்ததே இல்லை. இப்போது என்ன வேறுபாடு என்றால், புனைச்சுருட்டுகளும் பொய்ச்செய்திகளும் எவ்வளவு வேகமாக புழங்குகின்றன என்று வேண்டுமானால் சொல்லலாம்: உண்மையல்லாத, அல்லது, திரிக்கப்பட்ட கதைகளை பரப்புவதில் மிகப்பெரும் செய்தி நிறுவனங்களும் பொது மக்களும் பங்கேற்க சமூக ஊடகங்கள் இடம் கொடுக்கின்றன. உண்மை குறித்த அக்கறை கொண்டவர்களுக்கு இது ஒரு வலுவான சவாலாய் இருக்கிறது.

ஆனால் பொய்க் கதைகள் தங்கு தடையின்றி பரவுகின்றன என்பது குறித்த கவலையும்கூட புதிதல்ல. 14ஆம் நூற்றாண்டின் இறுதில், ஜியஃப்ரி சாஸர் இது குறித்து ‘தி ஹவுஸ் ஆஃப் ஃபேம்’ என்ற கவிதையில் கூர்மையாக எழுதியிருக்கிறார். இந்தக் கவிதை ஒரு கனவு- தரிசனத்தை விவரிக்கிறது. இந்தக் கனவில் சாஸர், ஓயாமல் பேசிச் சிரிக்க வைக்கும் கழுகொன்றால் ஆகாயத்தில் தூக்கிச் செல்லப்பட்டு, சொர்க்கத்துக்கும் பூமிக்கும் நடுவில் நிற்கும் ஒரு கோட்டையை அடைகிறார். இதுதான் புகழ் வீடு. பேச்சிலும் எழுத்திலும் உதிக்கும் அத்தனை வார்த்தைகளும் இங்கு வந்து சேர்கின்றன.

கடலின் ஆர்ப்பரிப்பு போல் பல லட்சக்கணக்கான பேச்சுக்கள் அனைத்தின் ஓசைகளும் கோட்டையைச் சுற்றி ஆர்ப்பரிக்கின்றன. அவற்றின் விதியை நிர்ணயிக்கும் சக்திதான் புகழ்: அவளுக்குப் பல செவிகள், கண்கள், நாவுகள். அவள் தன் அரண்மனைக்கு வரும் சொற்கள் மற்றும் கதைகளின் விதியைத் தீர்மானித்து வீற்றிருக்கிறாள். கனவில் சாஸர், அவள் ஆணைகள் இடுவதைக் காண்கிறார்- அவை நியாயமற்றவையாகவும் வெளிப்பார்வைக்கு தன்னிச்சையாகவும் தோன்றுகின்றன. சில உண்மைக் கதைகள் மறக்கப்பட வேண்டும் என்றும் சில பொய்க் கதைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் அவள் தீர்மானிக்கிறாள்; நல்லவர்கள் சிலர் நினைவில் வைத்திருக்கப்பட வேண்டியவர்கள் என்றும், வேறு சிலர் மறதியின் இருளுக்குத் தக்கவர்கள் என்றும் சபிக்கப்படுகிறார்கள். அதே சமயம், தகுதியற்றவர்களுக்கு இறவாப் புகழும் அருளப்படுகிறது.

இதன் பின் சாஸர், இதைவிட சஞ்சலப்படுத்தும் ஒரு காட்சியை விவரிக்கிறார். புகழ் வீட்டைக் காட்டிலும் இது அதிக குழப்பமாகவும் நிலையில்லாமலும் இருக்கிறது: சுள்ளிகளால் ஆன இந்த வீடு, அசாத்திய வேகத்தில் சுழன்றபடி சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த வீட்டில், ‘டைடிங்ஸ்‘ நிறைந்திருக்கின்றன; இது பயனுள்ள ஒரு மத்தியகால ஆங்கிலச் சொல், சேதி அல்லது தகவல் என்ற எளிய பொருள் கொண்டது, ஆனால் அதே வேளை வம்பு, வதந்தி போன்றவற்றின் எதிர்மறைச் சாயல்களும் அதிகம் கொண்டது. மனதில் நினைக்கக்கூடிய அத்தனை விஷயங்களைப் பற்றிய சேதிகளும் இந்த வீட்டில் சுற்றி வருகின்றன, அவை புழக்கத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் என்று அடுத்தடுத்து பேசிப் பெருகுகின்றன, விரைவில் பொய்யும் மெய்யும் இணைந்த பிரிக்க முடியாத கலவையாகி, நெருப்பைப் போல் பரவுகின்றன, ‘தவறித் தெறித்த பொறியால்/ நகரே தீக்கிரையாகும் போல்

குறிப்பாய்ச் சொல்லத்தக்க வகையில் கண்முன் நிற்கும் ஒரு தருணத்தை சாஸர் விவரிக்கிறார். வீட்டின் சன்னலின் வழியே வெளியேற ஒரு உண்மைக் கதையுடன் பொய்க்கதை ஒன்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது. இரண்டுமே, “முதலில் என்னைப் போக விடு!” என்று கத்துகின்றன. இறுதியில், சகோதர உறவு பூண்டு உலகைச் சுற்றி வர இரண்டும் ஒப்புக் கொள்கின்றன. இனி இவர்களின் உறவுப் பிணைப்பு மிக நெருக்கமானதாக இருக்கும் என்பதால் யாராலும் மெய்யையும் பொய்யையும் பிரித்துப் பார்க்க முடியாது. இந்தச் சேதிகள் இதற்குப்பின் பயணிகளாலும், மாலுமிகளாலும், யாத்திரீகர்களாலும் எங்கும் கொண்டு செல்லப்படுகின்றன; உண்மைத் தகவல்களைவிட சுவாரசியமான கதைக்கு மதிப்பு கொடுப்பவர்கள் என்று மத்தியகால சமூகத்தில் முத்திரை குத்தப்பட்ட குழுக்கள் இவை.

சாஸரின் ஓசை மிகுந்த, கிறுகிறுக்க வைக்கும் புரளி வீடு, டிவிட்டர் பயனர்கள் எவருக்கும் பழக்கப்பட்ட ஒன்றாக இருக்கும். எதைச் சாஸர் புரிந்து கொண்டு, இந்தக் கவிதையில் கூர்மையான வகையில் உயிர்ப்புடன் சித்தரிக்கிறார் என்றால், ஒரு கதை பரவுகிறதா இல்லையா என்பதை தீர்மானிப்பதில் உண்மைக்கு மிக அபூர்வமாகவே மிக முக்கிய பங்கு இருக்கிறது என்பதைத்தான். இந்த எண்ணத்தில் சாஸர் நீண்ட கால ஆர்வம் கொண்டிருந்தார், கான்டர்பரி டேல்ஸின் பின்னணியும் இதுவே: அந்தக் கவிதையில் யாத்திரிகர்கள் ஒருவருக்கொருவர் கதைகள் சொல்லிக் கொள்கையில், கதை கேட்பதும் பகிர்ந்து கொள்வதும் எவ்வளவு சிக்கலானது என்பதை நிகழ்த்திக் காட்டுகிறார்கள். அவரவர் கதைகளை புகழும்போதும் வன்மையாகக் கண்டிக்கும்போதும் யாத்திரிகர்கள் தத்தம் நலன்கள் மற்றும் அக்கறைகளால்தான் உந்தப்படுகிறார்கள், கதைக்குரிய உள்ளார்ந்த மதிப்பால் அல்ல. கதையொன்று சொல்லப்பட்டபின், அது கேட்பவர்களால் எப்படி எடுத்துக் கொள்ளப்படும் என்பதை கதை சொன்னவன் கட்டுப்படுத்த முடியாது.

புகழ் வீடு என்ற கதை, சாஸரால் முடிக்கப்படவில்லை. ‘மெய்ம்மை-பிந்தைய’ உலகு குறித்து கவலைப்படுபவர்களுக்கு அது விடைகள் எதுவும் அளிப்பதில்லை. சாஸர் விவரிக்கும் சித்திரத்தின் எதிர்வினையாய் நாம், நம் காலத்துக்குரிய ‘சேதிகளை’ பகிர்ந்து கொள்வதில் இன்னும் கவனமாய் இருக்க வேண்டும் என்று வேண்டுமானால் தீர்மானித்துக் கொள்ளலாம், ஆனால் அதில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கைக்கு சாஸர் அதிகம் இடம் கொடுப்பதில்லை. ‘மெய்ம்மை-பிந்தைய’ என்பது புதிய சொல்லாக இருக்கலாம், ஆனால் அது மிகப் பழைய பிரச்சினையை விவரிக்கிறது.

நன்றி – Chaucer’s Post-Truth World, Eleanor Parker, History Today 

ஒளிப்பட உதவி – A Clerk of Oxford

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – நடைபயிலும் வேர்கள்

– ஸ்ரீதர் நாராயணன் –
statue_of_liberty

பத்தாண்டுகளுக்கு முன்னர் சில காலம் ஊர் சுற்றும் பிழைப்பில் இருந்தாக வேண்டிய கட்டாயம். அப்போது அமெரிக்காவின் தென்கிழக்கு முனையின் கடற்கரை நகரமான மயாமி பீச்சிற்கு (Miami beach) பணி நிமித்தமாக செல்ல வேண்டியிருந்தது. இரண்டு வாரப் பணி இழுபட்டு ஒன்றரை மாதங்களாக அங்கேயே தங்கியிருக்க வேண்டியிருந்தது. சுற்றுலா நகரத்திற்கான அத்தனை இயல்புகளையும் கொண்ட, பலதரப்பட்ட மக்கள் சங்கமிக்கும் ஊரில், எனக்கு ஏற்பட்ட முதல் உணர்வு நானொரு அந்நியன் என்பதுதான். அயலகத்தனான எனக்கிருந்த ஒரே அனுகூலம் ஆங்கில மொழி. ஆனால் அங்கே பெரும்பான்மையோரின் மொழி வழக்காக ஸ்பானிஷ்தான் இருந்தது. முகமன் உரைக்கும் முறையிலிருந்து, உணவுப் பழக்கங்கள், மொழிவழக்கு, கலாச்சார மாற்றங்கள் எனப் பலவகையான அலைக்கழிப்புகளைப் பற்றி அலுவலக சகா மெக்ஸிகர் ஒருவரிடம் புலம்பியபோது அவரும் அதைப் போன்ற உணர்வுகளையே வெளிப்படுத்தியது ஆச்சர்யமாக இருந்தது. மூன்றில் இரண்டு பங்கு இஸ்பானியர்களைக் கொண்ட நிலப்பகுதியில், மெக்ஸிகர்களின் கலாச்சார வேறுபாடுகள் பற்றி சிறிது புரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு தூரதேசத்தைப் பற்றிய நமது கணிப்புகளும், புரிதல்களும் பெரும்பாலும் தகவல்கள் அடிப்படையில் நிகழ்கின்றன. அத்தூரத்தை நாம் கடந்து செல்லும்போது நமக்குக் கிடைக்கும் காட்சிப் புலன்களும், அனுபவங்களும் முற்றிலும் வேறாக அமைகின்றன. தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் ஒருவரை, ஓர் அமெரிக்க நகரில் சந்திக்க நேர்ந்தது. தன்னுடைய சில நாட்கள் வாசம், தனக்கு அமெரிக்க நிலப்பரப்பையும் அரசியலையும் பற்றிய புதிய புரிதல்களை, தான் உருவகித்து வைத்திருந்த கருத்துகளுக்கு மாறானதொரு பிம்பத்தை காட்டுகிறது எனச் சொன்னார். புத்தகங்களும், ஊடகங்களும் வழியே நமக்கு வந்து சேரும் தகவல்களுக்கும், நாம் நேரிடையாக சென்றடையும் அனுபவங்களுக்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. அ முத்துலிங்கம், தன்னுடைய வாழ்வில் பெரும்பாலான காலத்தை பயணங்களிலும், புதிய நிலங்களிலும் கழித்திருப்பதால் ஒரு நிலத்தின் வேர்கள் பிறிதொரு நிலத்திற்கு பழக்கப்படுவதன் நுட்பங்களைப் பற்றி தன்னுடைய படைப்புகளில் பதிவு செய்கிறார். க்றிஸ் ஆர்னேட் போன்றோர் தம்முடைய புகைப்பட பயணத்தினூடே காட்டும் நிலம் சார்ந்த கலாச்சார மானுடவியல் போன்றதொரு பார்வை அ. முத்துலிங்கத்தின் படைப்புகளில் நமக்கு கிடைக்கிறது.

முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி‘ சிறுகதை புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வியலை மூன்று காலக்கட்டங்களில் காட்டுகிறது. இலங்கையிலிருந்து அமெரிக்க பல்கலையில் கல்வி கற்க வரும் மதி, தன்னுடைய கல்லூரிப் பருவத்தின் முதல் மூன்றாண்டுகளை அலைமோதும் அனுபவங்களோடு கடந்து செல்கிறாள். நட்புகள் தேடி வருவதும், விட்டு விலகுவதுமாக இருக்கிறது. குறிப்பாக ஆண்கள். நட்புக்காக அவளுக்கு அதிக பரிச்சயமில்லாத கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகளுக்கு செல்கிறாள். பென்சீன் அணு அமைப்பு பற்றி விளக்கிச் சொல்கிறாள். நன்றி நவில்தல் தினத்தன்று நண்பனின் வீட்டிற்கு விருந்துக்கு சென்று அவன் பெற்றோருடன் பழகுகிறாள். உண்மையில் இச்சம்பவங்கள், இத்தகைய கிரமப்படி நடந்து வந்தால், அவர்களிடையேயான உறவு இறுகி அடுத்தக் கட்டத்திற்கு நகர்கிறது எனக் கொள்ளலாம். ஆனால் மதி விஷயத்தில் இச்சம்பவங்கள் எல்லாம் வெவ்வேறு ஆண்களுடன் நடக்கிறது

இலங்கையைப் போன்ற போர்ச்சூழலிலிருந்து மீண்ட வியட்நாமைச் சேர்ந்த லான்ஹங் நண்பனாக வாய்த்ததும், மதியின் புலம்பெயர்ந்த வாழ்க்கை இரண்டாம் கட்டத்திற்கு செல்கிறது. கூடு அமைத்து நிலை கொள்ளும் பருவம். வேர்கள் நிலைகொள்ளும் இளம் பருவ விருட்சம் போல், அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை வடிவமைத்துக் கொள்கிறார்கள். முதல் தலைமுறை புலம்பெயர்ந்தவர்கள் எதிர்நோக்கும் பெரும் சிக்கல் அது. தங்களுடைய இளமையின் பெரும்பகுதியை, நேரத்தை, உழைப்பை செலுத்தி அவர்கள் புதிய இடங்களில் தங்களை நிலை நிறுத்துகிறார்கள்.

மூன்றாவது பருவமாக கிளை பரப்பி மேலெழுவதில்தான் லான்ஹங்கின் வீர்ய குறைபாடு தெரிய வருகிறது. கூடு என்பது வெறும் வீடு மட்டுமல்ல. குடும்ப அமைப்பாக விரிந்து பெருகுதலும் கூடு கட்டுவது போலத்தான். தங்கள் எதிர்காலத்திற்கான உத்திரவாதமாக வீடு வாங்குவதை விட, செயற்கை கருத்தரிப்பின் வழியே குழந்தை பெற்றுக் கொள்ள தீர்மானிக்கிறார்கள். செயற்கை முறையில் கருத்தரிப்பது முழுவதும் உத்திரவாதமான சிகிச்சை முறை இல்லை. ஆனால் மதியின் விஷயத்தில் அது அவளுக்கு சித்திக்கிறது. இலங்கைக்காரருக்கும், வியட்நாமியருக்கும் ஆப்பிரிக்கர் உதவியுடன் குழந்தை வரம் வாய்க்கிறது.

அமெரிக்கக்காரி சிறுகதையில், மதியின் பெண்ணையும் சேர்த்து மூன்று அமெரிக்கக்காரிகள் இருக்கிறார்கள். இலங்கையில் ஒரு கிராமப்பகுதியில் வடிவாக சேலையை வரிந்து உடுத்தி, கொண்டை போட்டு, அதற்குமேல் மயிர் வலை மாட்டி, குடையை எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு படிப்பிக்கச் செல்லும் மதியின் அம்மாவால்தான் மதியினுள் அமெரிக்கக்காரியாகும் கனவு விதைக்கப்படுகின்றது. தன்னுடைய குழந்தை பிறந்ததும் மதி தன் அம்மாவுக்கு கடிதம் எழுதும்போது ‘உன் வயிற்றில் நான் இருக்கும்போதே, என் வயிற்றில் கருமுட்டைகள் இருந்திருக்கின்றன. அப்படியானால் இவளும் உன் வயிற்றினிலிருந்து வந்தவள்தான்‘ என்கிறாள். அம்மாவிடமிருந்த அக்கனவு மதி வழியே அவள் பெண்ணாக பிறந்து வருகிறது.

இக்கதை நிலவும் காலத்தில் அமெரிக்க ஊடகங்களில் ஓரளவுக்கு இலங்கைப் போர் பற்றிய பிரக்ஞை இருந்தது. அப்போதைய சில அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களில், இலங்கைப் பின்னணி கொண்ட பாத்திரமாக யாரையாவது காட்டுவார்கள். பெயரளவுக்குத்தான் என்றாலும், அமெரிக்க ஊடகங்கள் அதை சிறிதளவேனும் செய்து வந்தன.

மதி தன்னுடைய தாயாருக்கு எழுதும் கடிதத்தில் தவறாமல், ‘செத்துப் போய்விடாதே’ என்று எழுதுவது, அம்மாவுடனான நெருக்கத்தைக் காட்டும் செய்தி என்பதை விட, இலங்கைப் போரில் அவள் இழந்த சகோதரர்களைப் பற்றிய வலி எனப் புரிகிறது.

மெக்சிகோக்காரியோ, கனேடியக்காரியோ இல்லாமல் அது ஏன் அமெரிக்கக்காரி? அமெரிக்க பெருநிலத்தில் அமெரிக்கர் எனும் இன அடையாளம் என்பது எப்போதும் கலவையானதாகவே இருந்து வருகிறது. பூர்வகுடிகள்கூட தங்களை அமெரிக்கர் எனும் நீரோட்டத்திலிருந்து தனித்துக் காட்டிக் கொள்வதில் முனைப்பாக இருக்கிறார்கள்.

இந்தக் கதையில் தமிழ்ப்பெண், வியட்நாமியன், ஆப்பிரிக்கன் என்ற கலவையில் பிறக்கும் பெண் – asian, african, mongoloid என்ற மூன்று ethnic groupகளுக்குப் பிறந்து, caucasians பெரும்பான்மை வாழும் மண்ணில் தானும் ஒருவராய் ஆகிறாள். இது இங்கிலாந்தில், இந்தியாவில், ஸ்வீடனில், எங்கும் சாத்தியம். ஆனால் அவள் அந்த மண்ணின் வரலாற்றுக்கு உரியவளாய் ஏற்றுக் கொள்ளப்படுவாளா? வேறெங்கும் இல்லாத அந்த வாய்ப்பு அமெரிக்காவில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

சுயநலத்துக்காக, பணத்துக்காக, லாபத்துக்காக என்றே வைத்துக் கொள்ளலாம். ஒரு பெரும்பொய் என்றும், பிரச்சாரம் என்றும்கூட வைத்துக் கொள்ளலாம். உலக வரலாற்றில் எத்தனை தேசங்கள் இனம், மொழி, நிறம், பிறப்பு, சமயம் அடிப்படையில் இல்லாத குடியுரிமையை அளித்து பிறரை அழைத்தன? அந்த ஒரு அழைப்பு – சுதந்திர தேவி சிலைக்கு பணம் திரட்ட எம்மா லாசரஸ் எழுதிய கவிதை இது – இப்போது அதில் பொறிக்கப்பட்டிருக்கிறது

“வைத்துக் கொள்ளுங்கள், தொல்நிலங்களை, உங்கள் புரட்டுப் பெருமைகளை!” கூவுகிறாள் அவள்

மௌன இதழ்களில், “என்னிடம் கொடுங்கள், உங்கள் சோர்வுற்றவர்களை , உங்கள் ஏழைகளை,

சுதந்திர மூச்சு விடக்காத்திருக்கும் நெருக்கிய கூட்டத்தை,

உங்கள் நிரம்பிய நிலங்களில் கைவிடப்பட்ட அபலைகளை,

வீடில்லாதவர்களை, புயலால் சூறையாடப்பட்டவர்களை என்னிடம் அனுப்புங்கள்,

அப்பொற்கதவிற்கு அருகே என்னுடைய விளக்கை நான் உயர்த்துகிறேன்!”

சிரியா, ஈராக் போன்ற அரபு தேசங்களில் இருப்பவர்களுக்கு தம் நாட்டை அழித்தது அமெரிக்காதான் என்று தெரியாதா, தம்மை வெறுப்பவர்கள்தான் அமெரிக்காவை ஆள்கிறார்கள் என்று தெரியாதா? இருந்தாலும் அங்கே குடியேற நினைக்கிறார்கள்.  கனவின் வலிமை அது.

மதி தன்னுடைய அமெரிக்கக்காரியாகும் முறைமையில் கடைசியாக தன்னுடைய அம்மா, தான் மற்றும் தன்னுடைய மகளின் சரிவிகிதமான கலவையை கண்டறிகிறாள். ஒருவேளை அவளுடைய பெண் இலங்கைக்கு மீண்டும் சென்று தனது வேர்களை அங்கே நடைபயிலவும் செய்யலாம்.

oOo

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – – ரா. கிரிதரன்