எழுத்து

அமிழ்தல்

காலத்துகள்

இருப்பதிலேயே தனக்கு பொருத்தமாக உள்ளதாக நினைத்திருந்த சட்டையை அணிந்து கொண்டு பேண்ட்டின் ப்ளீட்டை நீவி விட்டான். தலை வாரிக்கொள்ளும்போது ‘பங்க்’ கட் தனக்கு சரி வராதது குறித்த விசனமும், நேர்க்கோடு, பக்கவகிடில் எது தனக்கு எடுப்பாக உள்ளது என்ற வழக்கமான சந்தேகமும்.

வீட்டிலிருந்து வெளியே வந்து சந்துருவுக்காகக் காத்திருந்தான். இன்று தசரா சந்தையில் அவள் எதிர்பட நிறைய வாய்ப்புள்ளது என்ற எண்ணமே உற்சாகம் தந்தது. ‘என்னடா மூணு நாளா தினோம் தினோம் வேற வேற டிரஸ்ஸு’ என்றபடி சந்துரு சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தினான். இரண்டு வீடுகள் தள்ளி வசிக்கும் பேங்க் ஆபிசரின் மூன்று பெண்கள் கிளம்பத் தயாராகி அடுத்தடுத்து நின்று கொண்டிருப்பதைப் பார்த்தவன், ‘பார் சார்ட் மாதிரி நிக்கறாங்கடா,” என்றான். சேலை அணிந்திருந்த மூத்த பெண் ஜாக்கெட்டின் கைப்பிடிப்பையும் கொசுவத்தையும் நீவியபடி இருந்தாள், முகத்தில் வெட்கப் பூரிப்பு, கண்கள் தெருவைச் சுற்றி சுழன்று கொண்டிருந்தன.

தெரு முனையை அடையும்போது இறுதி வீட்டின் வாசலில் ‘தலைவர்’ வந்து நின்றார். செங்கல்பட்டிற்கு குடிவந்த இந்த பத்து வருடங்களாக அவரைப் பார்த்து வருபவனுக்கு அந்த மிகப் புகழ்பெற்ற தொப்பி, கறுப்புக் கண்ணாடி மற்றும் வேட்டி சட்டை எப்போதும் அணிந்திருக்கும் ஆசாமியை முதன்முதலில் பார்த்தபோது ஏற்பட்ட வியப்பு இப்போது இல்லாது போனாலும் அவரைக் காணும் முதல் கணம் ஏற்படும் துணுக்குறுதல் மட்டும் நீங்கவே இல்லை. தலைவர் காலமாகி கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கடந்த பின்பும் இந்த ஆசாமி தலைவராக செங்கல்பட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அவர் வீட்டின் கதவில் நிஜத் தலைவர் கையில் பேனாவுடன் சிந்தித்தபடி இருக்கும் பிரபலமான வண்ணப் புகைப்படம் இருந்தது. அதில் மிக வசீகரமாகத் தோற்றமளிப்பார். இந்த ஆசாமி உடைகளை மாற்றியெல்லாம்கூட தலைவரின் வசீகரத்தைப் பெறா முடியாவிட்டாலும், அவர் நடப்பது, சைக்கிளில் செல்வது எல்லாம் மிதப்பது போலவே இருக்கும். இத்தனை நாசூக்குடன் எந்த வேலைக்குச் செல்ல முடியும்? அவரின் உடைக்கு விழுந்தடித்து ஓடுவதெல்லாம் சாத்தியமும் இல்லை. வீட்டில் இருந்தபடி புறா வளர்த்தல், விற்றல் தவிர என்ன வருமானம் உள்ளது, எப்படி குடும்பம் நடத்துகிறார் என்பதெல்லாம் புதிர்தான்.

அவரைத் தாண்டிச் சென்றபின், ‘என்னடா இன்னும் இந்த ஆள் இப்படியே ட்ரெஸ் பண்ணிக்கறார், நைட்டாவது டிரெஸ்ஸ மாத்துவாரோ என்னமோ’ என்று இவன் சிரித்தபடிச் சொல்ல, ‘அப்பகூட கெடயாதுடா, முக்கியமா அப்பத்தான்’ என்று சொல்லி நிறுத்தினான் சந்துரு. இவன் சந்துருவைப் பார்க்க, ‘அவர் மட்டும்ல, அவர் வைப்பும் ரொம்ப பெரிய பேன்டா’ என்று சொல்லி கண்ணடித்தான். ‘அதுக்கு?’ என்று கேட்டவனைப் பார்த்து சந்துரு நமட்டுச் சிரிப்பு சிரித்தவுடன் இவனுக்கு விளங்கியது.

‘சும்மா ஒளராதடா’

‘சத்தியமாடா’

‘ஆமா நீ பாத்த’

‘இல்லடா முரளிண்ணண் சொன்னார்டா’

‘அவர் மட்டும் பாத்தாறாக்கும்’

பேசியபடி சின்ன மேட்டின் மீதேறி ராமர் கோவில் குளத்தினருகே வந்தார்கள். மறுமுனையில் இருந்த மேட்டுத் தெருவில் தசரா சந்தை களைகட்டத் தொடங்கி இருந்தது அங்கு ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த தற்காலிக ட்யூப் லைட்களின் வெளிச்சத்தில் தெரிந்தது. பொதுவாக மாலை நேரங்களில் அமானுஷ்ய உணர்வைத் தரும் குளமருகே இருந்த பெரிய ஆலமரமும் கூட அவ்வெளிச்சத்தில் அச்சுறுத்துவதாக இல்லை. மரமருகே அருகில் இருந்த மாவு அரைப்பு கிடங்கு மூடப்பட்டிருக்க அதன் திண்ணையில் சேட் அமர்ந்திருப்பதைப் பார்த்த சந்துரு
‘இவனப் பாத்தா சேட் மாதிரியே இல்லையேடா’ என்று சொல்ல, ‘டேய் சேட்னா சேட் மட்டும்தானாடா, முஸ்லிம் கூட வெச்சுப்பாங்க’ என்றான் இவன்.

‘என்னடா சொல்ற, நெஜமாவா’

‘ஆமாண்டா இவன் முஸ்லிம்டா பெரிய பணக்கார குடும்பம் போல, சின்ன வயசுல அப்பா, அம்மா செத்துட்டாங்க, அப்பறம் சொந்தக்காரங்க இவன வெரட்டிட்டாங்க’

‘யார்ரா சொன்னா?’

‘தெருல அப்படித்தான் பேசிக்கறாங்க’

சேட்டையும் கிட்டத்தட்ட தலைவரைப் போல் இவன் இங்கு குடி வந்ததிலிருந்தே பார்க்கிறான். உடலமைப்பிலோ, முகத்திலோ இத்தனை வருடங்களில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை என்று தோன்றியது. அதே கனிவான, முதிரா இளமை கொண்ட – எப்போது பார்த்தாலும் இருபதுகளைத் தாண்டாதது போல் தோற்றமளிக்கும் – முகம்,இவனை ஏமாற்றுவது ஒன்றும் கடினமல்ல என்று நினைக்கத் தோன்றும். சேட் பேசியோ, யாசகம் கேட்டோ இவன் பார்த்ததில்லை, ஆனாலும் எப்படியோ உணவு கிடைத்து விடுகிறது. மிக மெதுவாக இலையிலிருந்து கவளம் கவளமாக எடுத்து சேட் உண்வதை இவன் பார்த்திருக்கிறான். தொய்ந்து போன சட்டை லுங்கிதான் ஆடை,எப்போதும் மொட்டைத் தலைதான். யார் ஆடைகளை அளிக்கிறார்கள், முடி வெட்டுகிறார்கள் என்பதும் தெரியாது. அழுகையோ, சிரிப்போ, தனக்குத் தானே பேசிக்கொள்வதோ எதுவும் இல்லாமல் மிதமான நடையில் தெருக்களில் வலம் வருபவன், எங்கு வேண்டுமானாலும் உறங்கி விடுவான்.

மேட்டுத் தெருவை அடைந்தவுடன் ‘இந்த சைட்ல கம்மியாத்தான் கடங்க இருக்கும்டா’, என்று சொன்னவனை, ‘பரவால்ல, மொதல்ல இப்படி ஆரம்பிக்கலாம் வா, எல்லாம் தெரியும்’, என்று இடது புறம் திருப்பினான் சந்துரு. இவன் வீட்டிலிருந்து ஏழெட்டு நிமிடத்திற்குள் வரக்கூடிய மேட்டுத் தெருவின் இந்தப் பகுதிக்கு இவன் பெரும்பாலும் வருவதில்லை.. சிறிது தூரம் நடந்தவுடன் அம்பாஸிடர் கார் நிறுத்தப்பட்டிருக்க, அருகே நந்தியாவட்டை மலர்கள் பூத்திருந்த இரண்டு அடுக்குகள் கொண்ட அந்த வீட்டைக் கடக்கும்போது எப்போதும் போல் அசௌகர்ய உணர்வு. வகுப்பறை சூழலில் அவனுள் இருக்கும் தன்மதிப்பு இத்தகைய நேரங்களில் அனிச்சையாக ஆட்டம் கண்டு விடுகிறது. சில மாதங்களுக்கு முன் பொதுக் குழாயில் இருந்து குடத்தில் தண்ணீர் நிரப்பி தோளில் சுமந்து வந்துகொண்டிருந்தபோது அவள் எதிரே வந்தது நினைவுக்கு வந்தது.

‘போறும்டா அந்தப் பக்கம் போலாம்’, என்று திரும்ப, ‘அப்பறம் என்னத்துக்கு மூணு நாளா வர’ என்றான் சந்துரு. பிளாஸ்டிக் வளையத்தை வீசி அதனுள் சிக்கும் பொருட்களை பெறக்கூடிய கடையின் அருகே நின்றார்கள். வளையங்களை வீசுபவர்களில் பெரும்பாலானோருக்கு மூன்றில் ஒன்றுகூட சிக்கவில்லை. இவர்களைவிட ரெண்டு மூன்று வயது சிறிய பெண்கள் வந்து நின்று அவ்விளையாட்டில் பங்கேற்க தேவையான ஐந்து ரூபாயை செலவு செய்வதின் தேவை குறித்து விவாதிக்க ஆரம்பித்தார்கள். ‘எதுக்குடா வீண் செலவு’ என்று சந்துரு சொன்னதைக் கேட்காமல், ஐந்து ரூபாய் செலுத்தி மூன்று வளையங்களை பெற்றுக்கொண்டான். க்ளிப் ஒன்றும், சீப்பு ஒன்றும் சிக்க, அந்தப் பெண்கள் இவன் அவற்றைப் பெற்றுக்கொள்வதை கவனிப்பதைக் கண்டு மீண்டும் உற்சாகமாக உணர்ந்தான். ‘எல்லாம் கர்ல்ஸ் ஐட்டம்ல, நீ வெச்சு என்ன பண்ணப் போற?’ என்று கேட்ட சந்துரு, இவன் பார்வையையின் திசையை கவனித்து, ‘டேய் த்ரோகம் பண்ணாதடா’ என்று சிரித்தபடி சொன்னான்.

பெண்களுக்கான கடைகளில் விசேஷ கவனம் செலுத்தியபடி வந்து கொண்டிருந்தவன் சற்று தள்ளி இருந்த மாயஜால அரங்கினுள் நுழைந்து கொண்டிருந்தவர்களை பார்த்து சந்துருவை இழுத்துக்கொண்டு அங்கே விரைந்தான். அரங்குக்கு வெளியே இருந்த நாக, கடல் கன்னிகளின் ஓவியங்கள் இப்போதெல்லாம் வியப்பையோ எதிர்பார்ப்பையோ ஏற்படுத்துவதில்லை. இரண்டு ருபாய் கட்டணம் செலுத்தி நுழைந்து உள்ளே அமர்ந்திருந்தவர்களை நோட்டம் விட, அது வேறு யாரோ. தடிமனான துணியால் நெய்யப்பட்ட கூடாரம் கதகதப்பாக இருக்க, துணியின் மணமும், மணலின் மணமும் கலந்த ஈரம் தோய்ந்த வாடை அடித்தது. ட்யூப்லைட்டை பூச்சிகள் மொய்த்துக் கொண்டிருந்தன. சீட்டுக்கட்டை வைத்தும் காகித மலர்களைக் கொண்டும் சில வழக்கமான தந்திரங்களை மாயாஜால நிபுணர் நிகழ்த்திக் காட்டியப் பின் சிறுவனொருவனை மேடைக்கு அழைத்து தண்ணீர் குடிக்கச் செய்து, பின் அவன் கால்களுக்கிடையில் டம்ளரை வைக்க அது நிரம்பியதைக் கண்டு அரங்கில் ஆரவாரம்.இவர்களின் வயதே இருக்கக்கூடிய உதவியாள பெண்ணை தற்காலிக மேடையின் ஒரு செயற்கை தூணின் மீது கட்டி வைத்து திரையை மூடி சில நொடிகள் கழித்து திறக்க அவள் இப்போது வேறொரு தூணில் கட்டப்பட்டிருந்தாள். இதே போல் நான்கு முறை நடக்க, இப்போது மீண்டும் ஆரம்பித்த தூணில் கட்டப்பட்டிருந்தாள். ஒவ்வொரு முறையும் திரை விலக்கப்படும்போது அப்பெண்ணின் முகம் எந்த அயர்ச்சியும் இல்லாமல் இயல்பாகவே இருந்தது.

இவன் தவறாக அடையாளம் கண்டிருந்த பெண் மெல்லிய கழுத்துச் சங்கிலியை கவ்வியபடி கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் உதட்டிற்கு மேல் ஈர மினுமினுப்பையும், கன்னத்தில் உருவாகியிருந்த ஒற்றைக்கோட்டு வியர்வை பாதையையும் பார்த்தவன் நாவால் உதட்டை வருடினான். கண்களை மூடினால் அவள் மணத்தை நுகர முடியும் என்று நினைத்தவனுக்கு, சில நிமிடங்கள் கால் மேல் கால் போட்டுக் கொள்ள வேண்டியிருந்தது. பின் தன்னை மீட்டு கவனத்தை மீண்டும் நிகழ்ச்சியில் செலுத்தினான்.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வர, வெளியே அடுத்த ஷோவிற்கு மனைவி, குழந்தையுடன் காத்திருந்த நாடார், ‘என்ன மேன், ஷோ எப்டி’ என்றார். ‘பரவால்ல நாடார்,பாக்கலாம்’. ‘சனிக் கெழம மத்தியானம் மட்டும்தாண்டா மனுஷன் கொஞ்சம் ப்ரீயா இருக்கார்’ என்றான் சந்துரு. ஞாயிறு முதற்கொண்டு தினமும் காலை ஆறு மணிக்கெல்லாம் கடை திறந்து இரவு பத்து மணிக்கு முன்பாக மூடாதவரை, சனிக்கிழமை மாலை மட்டும் செங்கல்பட்டின் ஏதேனும் திரையரங்கில் கண்டிப்பாக பார்க்க முடியும். சனி அன்று ஐந்தரை மணி அளவில் அவர் தனியாளாக சைக்கிளில் மிக விரைவாக சென்று கொண்டிருப்பதில் இருந்து, திருமணமாகி மனைவியுடன் டி.வி.எஸ் பிப்டியில் செல்ல ஆரம்பித்து, பின் இப்போது மகனுடன் ‘ட்ரிபிள்ஸ்’ அடித்தபடி செல்வதை இவன் பார்த்து வருகிறான். இன்று ஒரு மாற்றாக தசரா.

‘நாடார் வீட்ல டிவி இருக்குமாடா, வெச்சிருந்தாலும் வேஸ்ட்ல ‘

அதிகரித்தபடி இருந்த கூட்டத்தினூடே நடந்து கொண்டிருந்தவர்கள் ராமையா டிபன் கடையிலிருந்து வந்த எண்ணை வாடையினால் ஈர்க்கபப்ட்டு அங்கே சென்றார்கள்.முட்டிக்கு மேல் மடித்து கட்டப்பட்ட லுங்கி, வியர்வையில் உடலுடன் ஒட்டியிருந்த வெள்ளை பனியனுக்கு ஈடுகொடுக்கும் வெள்ளை மீசை தலைமுடியுடன் ராமையா அலுமினிய பாத்திரத்தில் இருந்த மாவில் கையை விட்டு எடுத்து எண்ணைச் சட்டியில் போட்டு பொரித்துக் கொண்டிருந்தார். மலம் கழித்தபின் கோவில் குளத்தில் கால் கழுவி விட்டு அவர் நேராக கடைக்குச் செல்வதை பார்த்த நினைவுகளை அகற்ற முயன்றான். ஆளுக்கு சில வடைகள் வாங்கி வெளியே பெஞ்ச்சில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சாம்பல் நிற பேண்ட்டும் வெள்ளை நிற சட்டையும் அணிந்த ஒருவர் கடைக்கு வருவதை பார்த்தவன், ‘டேய் இவர நான் பாத்ருக்கேண்டா ‘ என்று ஆச்சரிய குரலெழுப்பினான்.

தலைமுடி அங்கங்கே கொத்து கொத்தாக தலையெங்கும் சின்னஞ் சிறு கொம்புகள் முளைத்தது போல் விறைத்திருந்தது. சட்டையும், பேண்ட்டும் கசங்கி அழுக்கு படிந்திருந்தன. வெண் புள்ளிகள் போல் முகத்தில் தாடியின் ஆரம்பம். உள்ளே சென்று கடைக்காரரிடம் ஏதோ கேட்டவர் பின்பு அவரிடம் கெஞ்சுவது தெரிந்தது.

‘இவர நான் நெறய மொற சின்ன மணியக்கார தெருல பாத்ருக்கேன். இதே கலர் பாண்ட் சட்டதான் போட்ருப்பார், ஆனா பக்கா க்ளீனா இருக்கும்டா. நான் சைக்கிள்ள அவர க்ராஸ் பண்ணும்போதே டக்குனு தெரியும். தலைமுடி அழுத்தி படிஞ்சு வாரி இருக்கும். ‘

ராமையா என்ன நினைத்தாரோ, அவர் கேட்டதற்கு ஒப்புக்கொண்டு பொட்டலம் கட்ட ஆரம்பித்தார். சட்டைப் பையில் இருந்த பணத்தை எண்ணாமல் அப்படியே கொடுத்து பொட்டலத்தை வாங்கியவர் நாலைந்து அடி தள்ளிச் சென்று சாக்கடையருகே இருந்த காலி இடத்தில் வடைகளை அள்ளி வைத்தார். அங்கு நின்றிருந்த நாய்கள் அவருடன் வந்தவை என புரிந்தது.

‘என்னமா சாப்டுது பாரு’.

அந்த ஆசாமி செய்வதைப் பார்த்தபடி கூட்டம் நகர்ந்து கொண்டிருக்க, சிலர் அங்கே நிற்க ஆரம்பித்தார்கள். இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ராமையா எழுந்து வந்து, ‘ஸார், நீங்க பாட்டுக்கு கொடுத்துட்டு போய்டுவீங்க, அப்பறம் இதுங்க இங்கயே சுத்திகிட்டு இருக்கும், கொஞ்சம் அசந்தா புடிங்கிட்டு பூடும், எனக்குதான் ப்ரச்சன. தள்ளிப் போய் எதுவானாலும் குடுங்க, இதுக்கு தான் காச கொறக்க கேட்டீங்களா, ஒங்களுக்கு கேக்கரீங்கன்னுல நெனச்சேன்’ என்றார். அம்மனிதர் எதுவும் பேசாமல் பொட்டலத்துடன் நகர நாய்கள் அவர் பின்னே சென்றன. அவர் பின்னால் போகப் போனவனை பிடித்த சந்துரு ‘எங்கடா போற’, என்றான்.

‘இல்ல அவர் எங்க போறார்னு’ என்று ஆரம்பித்தவனை இடைமறித்து ‘ஒனக்கு அவர தெரியாதுல்ல’ என்றான் சந்துரு.

‘இல்லடா ரோட்ல போம்போது பாத்திருக்கேன் அவ்ளோதான்’

‘அப்பறம் என்ன’

‘அப்டி இல்லடா அவர பாக்கறப்ப காலேஜ் ப்ரொபசர் லுக் இருக்கும். எப்பவுமே புல் ஹேண்ட் சட்டதான், அத கரெக்டா எல்போ வரிக்கும் மடிச்சு விட்றுப்பார். இப்போ பாரு ஒரு சைட்ல சட்ட நீட்டிக்கிட்டு, தலைமுடி கலஞ்சு பாக்கவே பிசாசு புடிச்சவன் மாதிரி இருக்கார்’

‘இந்த மாதிரிலாம் திடீர்னு ஆச்சுனா பேமிலில எதாவது பெரிய ப்ரச்சனையா இருக்கும், நீ ரொம்ப திங்க் பண்ணாத, இவர் பின்னாடி போனா மிஸ் பண்ணிடுவ.’ என்று சொல்லியபடி சந்துரு இவனை இழுத்துச் சென்றான்.

தலைவரின் மனைவி வளையல் செட்டொன்றை எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்க தலைவர் ‘என்னய்யா அஞ்சு ரூபா சொல்ற, மூணு ரூபா தரேன்’ என்று அதற்கு பேரம் பேசிக் கொண்டிருந்தார். கடையில் நின்றிருந்தவர்கள் அவரை தாங்கள் கவனிப்பது தெரியாமல் இருக்க முயன்று கொண்டிருந்தார்கள். பேரம் பேசும்போது இருக்கும் எச்சரிக்கை உணர்வு, கறார்த்தன்மை எதுவும் கடைக்கரரிடமும் இல்லை, அவர் முகத்தில் வியர்வையை மீறிய மலர்ச்சி தெரிந்தது. தலைவர் கேட்ட விலைக்கு கொடுத்தும் விட்டார்.

அவர் மனைவியுடன் செல்வதை பார்த்தவாறே ‘பாத்தியாடா, ட்ரெஸ்தான் தலைவர் மாதிரி, பிசினாறிப் பய’ என்று ஆரம்பித்த சந்துரு, ‘நாலஞ்சு மாசம் முன்ன சித்தப்பா புறா வாங்க இவர் ஊட்டுக்குப் போனாரு, பத்து ரூபா கொறஞ்சு போச்சு, கோவில் பக்கத்துல தான் வீடு, புறாவ தாங்க, வீட்ல வுட்டுட்டு எடுத்துட்டு வரேன்னு சொன்னாரு,ஆளு கேக்கலையே, என்னடா நம்ம தெருலேந்து அஞ்சு நிமிஷம்கூட ஆகாது திரும்பி வர, சித்தப்பாவ வேற அங்கிங்க பாத்திருக்காரு அவரு, தெரிஞ்ச மொகம்தான்,அப்படியும் தரலையே’ என்று பொருமி முடித்தான்.

‘அதனாலத்தான் சாயங்காலம் அப்படி சொன்னியாடா’

‘டேய் அது வேறடா, சத்தியமா உண்மைடா அது, நீ வேணா நைட் வந்து செக் பண்ணு, வளையல்லாம் வாங்கி தந்துருக்கார், நைட் ஷோ கண்டிப்பா உண்டு இன்னிக்கி’

‘ஏண்டா, அதை ஏண்டா நான் போய் பாக்கணும், வேணா நீ போ’

‘முரளியண்ணன் சொன்னது கரெக்டான்னு செக் பண்ணலாம்ல ‘

‘எதுவும் இன்ட்ரஸ்ட் இல்லாம தான் சாங்கலத்துலேந்து அலஞ்சுட்டிருக்கியாக்கும்”

அவர் அந்தக் கூட்டத்திலும் நாசூக்குடன் நடந்து செல்வதையும், அவரைப் பார்ப்பவர்களுக்கு தன்னிச்சையாக ஒரு கணமேனும் குழப்பமும், அவர்களை மீறிய பவ்யமும் ஏற்படுவதையும், பின் ஓரக்கண்ணால் பார்த்தபடி அவரைக் கடந்து செல்வதையும் கவனித்தார்கள்.. அவர் மக்களைப் பார்த்து கும்பிடு போடாததுதான் பாக்கி, மற்றபடி அரசனொருவன் நகர்வலம் செல்லும் பாவனைதான் அவர் நடையில் தெரிந்தது. ‘இதுக்குத்தான் இந்த மாதிரி ட்ரெஸ் போடறார்டா’ என்றான் சந்துரு. ‘அப்போ அவரு வைப் மேட்டர்’ என்று இவன் கேட்க ‘ஒருவேளை அவர் பொண்டாட்டி சொல்லித்தான் இப்படி பண்றாரோ’ என சந்துரு சொன்னான். அவர் மனைவியும் கணவனின் கைகளைப் பற்றியபடி ஏதோ பேசியபடியே செல்வதைப் பார்த்தால் அவரும் மகிழ்ச்சியாக உள்ளார் என்பது தெரிந்தது. ‘இன்னிக்கு நாலஞ்சு நைட் ஷோ இருக்கும்டா’ என்றான் இவன். ‘ஐயோ செத்தார்டா’ என சந்துரு சொல்ல மீண்டும் சிரிப்பு.

இரண்டாம் முறை சுற்றி வரும்போது ராமையா கடையின் முன் இரண்டு நாய்கள். ‘நீ சொன்ன ஆள உட்ருச்சு’ என்றான் சந்துரு. நாடார் பேசிச் சிரித்தபடி குடும்பத்துடன் முன்னே சென்று கொண்டிருந்தார். வழியில் அரசமரத்தின் கீழ் வெண் களிமண்ணில் செய்யப்பட்ட அம்மனின் தலை மற்றும் வேறு சில கடவுள் ஓவியங்களைக் கொண்ட, பூசாரி யாரும் இல்லாத, தகரக் கூரை மட்டுமே உடைய வழிபாட்டு இடம். பக்தர்கள் தங்கள் குறைகளை நேரடியாக அம்மனிடம் சொல்லிக் கொள்ளலாம். கடை விளக்குகளின் வெளிச்சத்தில் அம்மன் தலை அருகே வயதான பெண் உட்கார்ந்து கொண்டிருக்க, அவர் வாய் அசைந்து கொண்டிருப்பதும், தன் கைகளை அம்மனின் முகத்தின் முன் நீட்டியபடி அசைத்துக் கொண்டிருப்பதும் தெரிந்தது. மரத்தைக் கடக்கும்போது அவர் முகத்தில் நீர் வழிந்து கொண்டிருப்பதை கவனித்தான். வீட்டிற்குத் திரும்பலாம் என்று இவன் சொல்ல, மீண்டும் அவள் வீட்டிற்கு சற்று முன் நின்றிருந்த ராட்டினத்திற்கு அருகே அழைத்துச் சென்ற சந்துரு, ‘இன்னும் கொஞ்சம் தள்ளி இத நிறுத்திருக்கலாம்’ என்றான். கேட் மூடி இருந்த வீட்டில் இருந்து பார்வையை அகற்றி ராட்டினத்தை சுற்றி இருந்தவர்களை கவனித்தான்.

சிறுவனொருவன் ராட்டினம் சுழற்றுபவரிடம், ‘ண்ணா, எட்டணாதான் இருக்குண்ணா’ என்று கெஞ்சிக் கொண்டிருந்தான். தொடர்ந்து அவரிடம் இறைஞ்சிக் கொண்டிருக்கிறான் போலிருந்தது. எரிச்சலான தொனியில் ‘எட்ணாக்கு பாதி சூத்தைதான் வெக்க முடியும்’ என்று மூஞ்சியில் அடித்தார் போல் சொல்லி விட்டார். சுற்றி நின்றவர்கள் சிரிக்க, யார் பார்வையையும் சந்திக்காமல் அங்கிருந்து விரைந்து சென்ற அந்தப் பையனைக் கூப்பிட்டு காசு கொடுக்கலாமா என்று இவன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவன் கூட்டத்தினுள் மறைந்துவிட்டான்.

திடீரென மூக்கையடைக்கும் துர்நாற்றம். அருகில் சேட். சந்துருவுடன் கொஞ்சம் விலகி நின்றான். சேட் ராட்டினம் சுற்றுவதையே பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்த அதன் உரிமையாளர் ‘என்னப்பா ஒனக்கும் இந்த வயசுல ஏறணுமா’ என்றார். சேட் எதுவும் சொல்லாமல் நிற்க, அவனைக் கூர்ந்து பார்த்தபடி சுழற்றிக் கொண்டிருந்தார்.அந்தச் சுற்று முடிந்து ராட்டினம் நிற்க, குழந்தைகள் இறங்கினார்கள். சேட்டின் மேலுடம்பு மட்டும் தன்னிச்சையாக செயல்படுவதைப் போல, கால் நகராமல், கொஞ்சமே கொஞ்சம் முன்சென்று மீண்டும் நிமிர்வதை பார்த்தான்.

‘சேட் வாங்கி கட்டிக்கப் போறான்டா’ என்றான் சந்துரு. புதிதாக குழந்தைகள் ஏற ஆரம்பிக்க, சுழற்றுபவர் ‘நீயும் ஏறிக்க’ என்றார் சேட்டிடம். ஒன்றும் சொல்லாமல் இருந்த சேட்டிடம் மீண்டும் அதையே சொல்லியபின் அவன் பெரும் எடையை சுமப்பவன் போல் தயங்கித் தயங்கி ராட்டினத்தின் அருகில் சென்றான். ஏறாமல் நின்றுகொண்டிருண்டவனின் தோளைப் பற்றி முன்னெத்தி அவர் ஏற்றிவிட, அவன் அந்த சிறிய இடத்திற்குள் தன்னை பொருத்திக் கொண்டான். ராட்டினம் சுழன்று மேலே செல்லும்போது சேட்டின் முகத்தில் ஏற்படும் மலர்ச்சி கீழே வரும்போது இல்லை.

சற்று நேரம் முன்பு அவமானப்பட்டுச் சென்ற சிறுவன் திரும்பி வந்து கொண்டிருந்தான், முகம் மலர்ந்திருந்தது. ராட்டினத்தின் பக்கம் திரும்பக்கூடச் செய்யாமல் கடந்து சென்றவனைப் பார்த்துக் கொண்டிருந்தவன் பார்வையில் அவள் வீடும் இருந்தது. நுரை குமிழிகளை உமிழும் வஸ்துவினுள் ஊதி குமிழிகளை உற்பத்தி செய்து, பின் அவற்றை அவன் விரலால் தொட அவை உடைந்து சிதறிக் கொண்டிருந்தன. நுரைக்குமிழிகள் உருவாதல், உடனேயே சிதைதல், மீண்டும் உருவாதல் என அதே சுழற்சி தொடர்ந்து கொண்டிருந்தது. உடல் எடை அனைத்தையும் இழந்தது போல் மிகவும் தளர்ச்சியாக உணர்ந்தான். வெறுமையாக இருந்தது.

‘இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுடா, இவ்ளோ நேரம் இருந்துட்டு கடசில வேஸ்ட் பண்ணி ஓடாத’, என்று சந்துரு கேட்டதற்கு பதில் சொல்லாமல் நடந்தவன், குளத்தைத்தாண்டும்போது க்ளிப்பையும், சீப்பையும் அதனுள் தூக்கி எறிந்து, நீரில் வட்ட சிற்றலைகள் தோன்றி அமிழ்வதை பார்த்தபடி நின்றிருந்தான்.

ஆதவன் சிறுகதைகள் – சில குறிப்புகள்

வெ. சுரேஷ்

orr-10085_interview_0000

கடந்த ஆறு ஆண்டுகளாக, அநேகமாக நான் படித்த புத்தகங்கள் குறித்த பதிவையே எழுதி வந்திருந்த நிலையில் (சில பொது கட்டுரைகளும் உண்டு), திடீரென்று ஒருநாள், ஒரு ஆசிரியரை எடுத்துக் கொண்டு, பதிமூன்று வாரங்கள் அவர் எழுதிய ஒரு சிறுகதை குறித்து ஒவ்வொரு வாரமும் எழுத முடியுமா என்று கேட்டார் நண்பர் நட்பாஸ். அப்படி எழுதி பழக்கமில்லை என்பதால் முதலில் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. பிறகு, எழுதி விடலாம் என்று முடிவு செய்தபின் எந்த எழுத்தாளருடைய கதைகள் என்று அதிகம் யோசிக்க வேண்டியிருக்கவில்லை. உடனடியாக எனக்கு ஆதவனின் சிறுகதைகள்தான் என்று தோன்றிவிட்டது.

வேறு எந்த எழுத்தாளருடைய எழுத்துக்களைவிடவும், என் மனதுக்கு மிகவும் நெருக்கமாக நான் உணர்ந்தவை ஆதவனின் எழுத்துக்கள்தான். என் சஞ்சலங்கள், சந்தேகங்கள், ஊகங்கள், கேள்விகள், முடிவுகள் அனைத்தையும் ஆதவனின் கதாபாத்திரங்களும் வெவ்வேறு அளவில் கொண்டிருந்தார்கள். தன்னைப் பற்றி ஆதவன் ஓரிடத்தில் இப்படி சொல்கிறார்- “ஒரு பெண் தன் கணவனை விட்டுவிட்டு இன்னொருவனுடன் சென்று விட்டால் என்றால், யாரைத் திட்டுவது என்பதில் பலருக்கு சந்தேகமேயில்லை. ஆனால், எனக்கு அப்படியில்லை” .இந்த மனப்பான்மை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அதே போல, அறிவுப்பூர்வமான விவாதங்களும் தர்க்கப்பூர்வமான பார்வைகளும் எந்த அளவுக்கு தன்னைக் கவர்கிறதோ அதே அளவுக்கு உணர்வுச் சுழிப்புகளும், எளிதில் வரையறுத்துவிட முடியாத நியாயங்கள் பற்றிய தடுமாற்றங்களும் தனக்கு உண்டு என்கிறார் ஆதவன். அது எனக்கும் அப்படித்தான்.

அடுத்த கவலை எந்தெந்தக் கதைகள் என்பது பற்றி. என்னிடமே ஆதவனின் 5 சிறுகதைத் தொகுப்புகள் இருந்தாலும், கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும், ஆர்.வெங்கடேஷ் அவர்கள் தொகுத்த ‘ஆதவன் சிறுகதைகள்,’ புத்தகத்திலிருந்தே கதைகளை தெரிவு செய்தேன், ஒரே புரட்டலில் அத்தனையையும் பார்க்கும் ஒரு சௌகரியத்துக்காக. மேலும், அதில் உள்ள ஆர். வெங்கடேஷ் அவர்களின் முன்னுரையும் முக்கியமான ஒன்று.

கதைகளைப் பொறுத்தவரை ஒரு பாதகமான விஷயம், ஆதவனின் கதைகளில் மிகச் சிலவற்றைத் தவிர பிற கதைகள் வலையேற்றப்படவில்லை என்பதுவே. அதனால் நான் தேர்ந்தெடுத்த கதைகளைப் புத்தகங்களன்றி வேறு எங்கும் படிக்க முடியாது என்பது ஒரு இழப்புதான். இருந்தாலும், இவற்றைப் படிப்பவர்கள், புத்தகங்களை வாங்க இது ஒரு கிரியா ஊக்கியாக இருக்கட்டுமே என்ற ஒரு நப்பாசையும் இருந்தது. ஆனால், கிழக்கு வெளியிட்டிருக்கும் தொகுப்பில் 60 கதைகள் இருந்தாலும், “இரவுக்கு முன் வருவது மாலை” தொகுப்பில் உள்ள கதைகள், விடுபட்டுள்ளன என்பதையும் இப்போதுதான் கண்டுபிடித்தேன் இதில் ஒரு முக்கியமான விடுபடல் , “கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன் ” கதை. ஆதவனின் சிறந்த கதைகளில் ஒன்று அது..

அவரது சிறுகதைகளில் மிகப் பிரபலமானவை என்றால் நானறிந்து, ‘முதலில் இரவு வரும்’, மற்றும் ‘ஓர் பழைய கிழவரும் புதிய உலகமும்’ தான். ஆகவே இந்த இரண்டு கதைகளை சேர்க்கவில்லை. எழுத்தாளர்களை பற்றியது என்பதால் முதல் கதையாக, புதுமைப்பித்தனின் துரோகம் சிறுகதையை தேர்ந்தெடுத்தேன். அதற்குப்பின் தானாகவே ஓரு வரிசை உருவாகி வந்துவிட்டது.

பொதுவாக ஆதவனின் எழுத்துக்களை நகர்ப்புற எழுத்து என்று வகைப்படுத்தல் தமிழக விமர்சகர்களிடம். உண்டு. இந்த ஒரு சொற்றொடர், அவரது விரிந்த படைப்புலகத்துக்கு நியாயம் செய்வதது அல்ல. அதிகமும் நகரத்து, பெருநகரத்து மனிதர்கள் குறித்தே எழுதியிருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால், அதில் அவர் எடுத்துக் கொண்ட பிரச்னைகள் பலதரப்பட்டவை. 70களின் மிக முக்கிய பிரச்சனைகளான வேலையில்லாத் திண்டாட்டம், அடையாளச் சிக்கல்,தனி யார் நிறுவனங்களின் வளர்ச்சி அவ்வளவாக இல்லாத சோஷலிச யுகத்தின் உச்ச காலகட்டத்தின் அரசு வேலைகள் தரும் அலுப்பு, பெண்கள் குறித்த குறுகுறுப்பு, காதலின் ஆர்வம், காதல் திருமணத்தில் முடிவதின் நிறைவின்மை, மணவாழ்க்கையின் விரிசல்கள், பொதுவாகவே வாழ்வின் மீதான அதிருப்தி, நண்பர்களிடையேயான பரஸ்பர போட்டி பொறாமை, இன்னொருவரிடம் அனுசரித்துப் போக முடியாத குணங்கள், தனி மனிதன் தன் மிக நெருங்கிய மனிதர்களிடையேகூட வேடங்கள் புனைய வேண்டிய அவசியம் ஏற்படுத்தும் தருணங்கள், பெண்களின் பிரத்தியேகப் பிரச்சைனைகளை பரிவுடன் அணுகும் கதைகள், என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு அம்சத்துக்கும் குறைந்தபட்சம் இரண்டு கதைகளாவது தேர்ந்தெடுக்கலாம்.

இந்த தொடரில் நான் சேர்க்காத காதல், திருமணம், அதன் நிறைவு அல்லது நிறைவின்மை ஆகியவற்றைப்பற்றி பேசும் ஒரு சிறுகதை வரிசையினைக்கூட தனியே தர முடியும். அவை இப்படி அமையக் கூடும், “ சிவப்பாக உயரமாக மீசை வெச்சுக்காமல், நிழல்கள், கால் வலி, காதலொருவனைக் கைப்பிடித்தே, புகைச்சல்கள், நூறாவது இரவு, சினிமா முடிந்தபோது” என்று தொடங்கி தனியே எழுதலாம்., தவிர, ‘புறா, இந்த மரம் சாட்சியாக, நானும் இவர்களும்,அப்பர் பர்த், போன்ற இன்னும் சில கதைகள் குறித்தும்,எழுத ஆவலாகத்தான் இருந்தது.பிறிதொரு சமயம் பார்ப்போம்.

இந்தியா சோஷலிச சாம்ராஜ்யமாக இருந்த காலத்தின் உச்சத்தில் அன்றைய காலகட்டத்து இளைஞர்களின் அபிலாஷைகளை, தடுமாற்றங்களை, உளக் கொந்தளிப்புகளை உள்ளவாறே சித்தரித்த ஆதவன், பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்ட காலத்தின் மிக துவக்கத்திலேயே மறைந்துவிட்டார். திறந்த அமைப்பின் பொருளாதார தாராளமயமாக்கலும், உலகமயமாக்கமும், அது தந்திருக்கும் ஏராளமான வாய்ப்புகளும் சவால்களும், வித்தியாசங்கள் மழுங்கடிக்கப்பட்டு ஒற்றை தரப்படியாக்குதலும் கொண்ட இந்தக் காலகட்டத்து இளைஞர்களை ஆதவன், எந்த வகையில் தன் கலையில் கொண்டு வந்திருப்பார் என்ற ஆர்வமூட்டும் வினாவுக்கு நாம் விடை காணவே முடியாத வகையில், காலம் அவரைப் பறித்துக் கொண்டுவிட்டது.

இத்தொடரில் பேசப்பட்ட சிறுகதைகள்:

புதுமைப்பித்தனின் துரோகம் 

அகந்தை 

சிரிப்பு 

அந்தி 

கார்த்திக் 

‘லைட்ஸ் ஆன், ரெடி ஃபார் தி டேக்!’

இன்டர்வியூ

தில்லி அண்ணா

லேடி 

ஒரு அறையில் இரு நாற்காலிகள் 

சின்ன ஜெயா 

கருப்பு அம்பா கதை 

அகதிகள் 

oOo

ஒளிப்பட உதவி – Archive.org

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – உடன்பிறந்த அடையாளங்கள்- மு. வெங்கடேஷ்

மு வெங்கடேஷ்

அ.முத்துலிங்கம் அவர்களின் ‘அமெரிக்கக்காரி‘, அமெரிக்காவில் குடியேறத் துடிக்கும் ஒரு இலங்கைப் பெண்ணின் கதை.

புலம்பெயர்தலை இரண்டு வகையாகப் பார்க்கலாம். முதல் வகை பணி நிமித்தமாக அனைத்து சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு. இரண்டாம் வகை உயிர் பிழைக்க வழி தேடி எந்த சுகங்களையும் கண்டிராது, உயிர் வாழ வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடு. இந்தக் கதையை என்னால் அந்த இரண்டு கோணங்களிலும் பார்க்க முடிகிறது.

முதல் வகையின் புரிதல் முதலிலும் இரண்டாம் வகையின் புரிதல் இரண்டாவதுமாக.

ஒரு நாள் அவளுக்கொரு காதலன் இருந்தான்; அடுத்த நாள் இல்லை. அவன் வேறு ஒரு பெண்ணை தேடிப்போய்விட்டான். இது அவளுடைய மூன்றாவது காதலன். இந்தக் காதலர்களை எப்படி இழுத்து தன்னிடம் வைத்திருப்பது என்று அவளுக்கு தெரியவில்லை. அவர்கள் தேடும் ஏதோ ஒன்று அவளிடம் இல்லை. அல்லது இருந்தும் அவள் கொடுக்கத் தவறிவிட்டாள் என்பது தெரிந்தது.

முதல் காதலன் ஒரு நாள் இரவு தன்னுடன் வந்து தங்கும்படி சொல்ல, அவள் மறுக்கிறாள். விலகிச் செல்கிறான். இரண்டாம் காதலனுக்கும் அதே காரணம் தேவைப்படுகிறது அவளைப் பிரிய. மூன்றாமானவனுக்கும் அதே நிலைதான். அதற்கான காரணத்தை ஆசிரியரே சொல்லிவிடுகிறார்.

இவர்கள் அவளிடம் எதையோ தேடினார்கள். அவள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இன்னும் இலங்கைக்காரியாகவே இருந்தாள்

ஆனால் அவளுக்கோ தான் எப்படியாவது ஒரு அமெரிக்கக்காரியாக வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே ஆழ் மனதில் பதிந்து கிடக்கிறது. சிறுவயது முதல். தன் தாய் எத்தனை விளக்கம் கூறியும் அதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏமாற்றம் அடைகிறாள்.

இடையே தான் ஒரு அமெரிக்கக்காரி இல்லை இலங்கைக்காரி என்று விரக்தியோடு சொன்னாலும் (நான் அங்கேதான் அமெரிக்கக்காரி, இங்கே வெறும் இலங்கைக்காரிதான்), இறுதியில் உண்மையான அமெரிக்கக்காரி யார் என்பதை தன் வயிற்றிலிருக்கும் குழந்தை மூலம் அறிகிறாள், அது வியட்நாமிய ஆணும், இலங்கைப் பெண்ணும், ஆப்ரிக்க உயிரணுவுமாக இருந்தாலும்கூட. அந்த மகிழ்ச்சியில் தன் தாய்க்கு ஒரு கடிதமும் எழுதுகிறாள். “எனக்கு ஒரு அமெரிக்க குழந்தை பிறந்திருக்கிறது” என்று ஒற்றை வரியில், அது ஆணா பெண்ணா என்பதைக்கூடச் சொல்லாமல். அவளைப் பொறுத்தமட்டில் அது ஒரு அமெரிக்கக்காரி. அவ்வளவுதான். அதுதான் அவள் விரும்பியதும்.

பெரிதாக வளர்ந்ததும் அவள் அம்மாவைப்போல கொண்டையை சுருட்டி வலைபோட்டு மூடுவாள். தன் நண்பிகளுடன் கட்டை பாவாடை அணிந்து கூடைப்பந்து விளையாட்டு பார்க்கப் போவாள். சரியான தருணத்தில் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரிப்பாள். ‘என் அறையில் வந்து தூங்கு’ என்று ஆண் நண்பர்கள் யாராவது அழைத்தால் ஏதாவது சாட்டுச் சொல்லி தப்பியோட முயலமாட்டாள். பல்கலைக்கழக கலாச்சார ஒன்று கூடலில் ‘என்ன தவம் செய்தனை’ பாடலுக்கு அபிநயம் பிடிப்பாள் அல்லது பதினாறு கம்பி இசைவாத்தியத்தை மீட்டுவாள். ஒவ்வொரு நன்றிகூறல் நாளிலும் புதுப்புது ஆண் நண்பர்களைக் கூட்டி வந்து பெற்றோருக்கு அறிமுகம் செய்துவைப்பாள். அவர்களின் உயிரணு எண்ணிக்கை மில்லி லிட்டருக்கு இரண்டு கோடி குறையாமல் இருக்கவேண்டுமென்பதை முன்கூட்டியே பார்த்துக்கொள்வாள்.

கதை இறுதியில் ஆசிரியர் சொல்வது போலவே அந்தக் குழந்தை இருக்கும். ஏனென்றால் அது “அமெரிக்கக்காரி“. அதுதானே அவளுக்கும் வேண்டும்.

கலாச்சாரம் என்பது “jet lag” ஐ போல் சில நாட்களில் சரியாவதும், கைகடிகாரத்திலுள்ள முள்ளை மாற்றி வைப்பது போலவும், செல்லும் இடத்திலுள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு உடையை மாற்றிக் கொள்வது போலவும் அல்ல. அது நம் உடன் பிறந்தது. சாகும்வரை நம் அடையாளமாய் நம் உடன் வந்து கொண்டேதான் இருக்கும், sweetcandy என்றாலும், liftelevator ஆக்கினாலும். அவள் பிறப்பால் ஒரு இலங்கைக்காரி. இந்த உலகத்தில் எங்கு சென்றாலும் அவள் அவ்வாறே அறியப் படுவாள். அதை அவளால் அழிக்க முடியாது. அதுதான் சரியும் கூட.

ஊரில் நான் வெள்ளைக்காரத் துரையாக இருக்கலாம். ஆனால் இந்த பெல்ஜிய நாட்டில் நான் ஒரு இந்தியன். தமிழன். அது போலத்தான் அமெரிக்காவில் இருந்தாலும் அவள் இலங்கைக்காரிதான். நான் இங்கு வந்து ஜலதோசத்தின்போது மூக்கை உறிஞ்சுவதற்குப் பதில் சிந்தினாலும், தோழிகளைப் பார்க்கையில் கன்னத்தில் மூன்று முத்தங்கள் கொடுத்து வரவேற்றாலும், நண்பன் தோளில் கை போட்டு நடப்பதைத் தவிர்த்தாலும், பிறந்து ஒரு வயது கூட நிரம்பாத கைக்குழந்தையைத் தனி அறையில் படுக்க வைத்துவிட்டு மனைவியுடன் மற்றொரு அறையில் படுத்துறங்கினாலும், பள்ளி செல்லும் சிறுமி தன் உடன் பயிலும் சிறுவனிடம் நடு விரலை உயர்த்திக் காண்பிப்பதைக் கண்டும் காணாமல் சென்றாலும் நான் இந்தியன்தான். ஒருபோதும் பெல்ஜியன் ஆக முடியாது. அதுதானே எதார்த்தமும் கூட?

மதி மேற்கத்திய கலாச்சாரத்திற்குத் தன்னை மாற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கிறாள். மாற்றிக்கொள்ள முடிந்தும் ஏதோ ஒன்று அவளைத் தடுக்கிறது. அது அவள் வளர்ந்த விதம், வளர்ந்த சூழல் ஆக இருக்கலாம். ஆனால் தன்னுள் கனலாக எரிந்து கொண்டிருக்கும் “அமெரிக்கக்காரி” ஆசை அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக மாறச் செய்கிறது. என்னதான் மாறினாலும் அவளால் “அந்த” மாற்றத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கலாச்சார மாற்றத்தை முதல் முறையாகக் கடந்து செல்லும் பெண் (தலைமுறை) என்பதால்.

அதற்காக அவளுக்குக் கிடைக்கும் பரிசு, முதல் மூன்று காதலர்களை இழக்கிறாள். இறுதியாக அவள் தேர்ந்தெடுப்பது ஒரு “வியட்நாமிய” ஆண். ஏன்? அவளே சொல்கிறாள். “ஏய் இலங்கைக்காரி, நீ ஏன் என்னை மணம் முடித்தாய்?” என்று அவன் கேட்பதற்கு அவள் அளிக்கும் பதில் “பணக்காரி, பணக்காரனை முடிப்பாள். ஏழை ஏழையை முடிப்பாள். படித்தவள் படித்தவனை முடிப்பாள். ஒன்றுமில்லாதவள் ஒன்றுமில்லாதவனை முடிப்பாள்.” ‘துரத்தப்பட்டவள் துரத்தப்பட்டவனை முடிப்பாள்’ என்றும் முடித்திருக்கலாம். அவளின் எண்ணம் சரியாகத்தான் இருக்கிறது. லான் ஹாங்குக்கும் அதே எண்ணம் இருந்திருக்கலாம். வாய்ப்பிருக்கிறது.

மூன்று வயது சிறுவனை கட்டி வைத்தாலே சிசுவதை என்று கைது செய்யும் நாடு அமெரிக்கா. ஆனால் எப்போதும் போர், உயிருக்கு உத்திரவாதமில்லை, உடன் பிறந்த சகோதரர்களும் போரில் கொல்லப்பட்டு விட்டார்கள், மிஞ்சி இருக்கும் அம்மாவின் உயிரும் ஒவ்வொரு முறை கடிதம் எழுதும் போதும் “செத்து விடாதே” என்று சொல்லும் அளவுக்குத்தான். இப்பேற்பட்ட சூழலில் அவள் மனமுடைந்து போகாமல் அமைதியான சூழலில் வாழ நினைக்கிறாள். தன் அம்மாவுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணுகிறாள். அமெரிக்கக்காரியாக முயற்சி செய்கிறாள்.

இந்த “அமெரிக்கக்காரி” மோகம் மதிக்குத் தானாக வந்ததாகத் தோன்றவில்லை. அம்மாவின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே தோன்றியதாக இருக்க வேண்டும், அம்மாவின் எண்ணமாக. தான் என்ன துன்பங்களை அனுபவித்தாலும் தன் மகளும் அவள் சந்ததியினரும் எங்காவது நல்ல சூழலில் அமைதியாக ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணம் மூலமாக.

இறுதியாக மதி பெண் குழந்தை பிறந்ததும் மிகுந்த சந்தோசத்தில் அம்மாவிடம் இவ்வாறு சொல்கிறாள், இவள் முழு அமெரிக்கக்காரி. உன்னையும் என்னையும் போல் குறுகிய வட்டத்திற்குள் போர் சூழலில் சிக்கித் தவிக்காமல், அமைதியான வாழ்க்கையை, உலக அறிவுடன், எதை எப்படி கையாள வேண்டும் என்ற அறிவோடு சுதந்திரமாக வாழ்வாள், என்று. இந்த “அமெரிக்கக்காரி” ஆசை என்பது மதியின் அம்மாவிடம் தோன்ற, மதி பாதி அமெரிக்கக்காரி ஆகிறாள். பின் இறுதியாக தன் மகளை முழு அமெரிக்கக்காரி ஆக்கி மகிழ்ச்சி கொள்கிறாள்.

oOO

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – – ரா. கிரிதரன்

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – நடைபயிலும் வேர்கள்- ஸ்ரீதர் நாராயணன்

இறந்தவர்களுக்கான புதிய பெயர்கள்

Matthew Jakubowski

(This story is translated with the kind permission of Matthew Jakubowski for non-commercial publication specifically at Padhakai.com. No other use may be made of this material without prior permission of the author.)

 

matt-j

ஜெப் காலமாகிய பின் இந்த ஏழு ஆண்டுகளாக சில மாதங்களுக்கு ஒரு முறை வீட்டுக்குப் பெயர் சூட்டுவதும் பின் அதை மாற்றி வேறு பெயர் சூட்டுவதுமாய் இருக்கிறாள் கரேன். அமைதியான இடம், காலி கலவி மாளிகை, பதுக்கல்காரனின் களிப்பு, குப்பை ஆட்டுக் கொட்டடி, ஆனந்த நிலவறை. இருபத்து- மூன்று ஆண்டுகள் இருவரும் ஒன்றாய் இருந்தது குறித்த அவளது நினைவுகளின் இறுகும் ஆடியில் தன்னை கவனித்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வில் அவனைத் திருப்தி செய்வதற்கான விளையாட்டாய் துவங்கியது.

காலையில் தனியாய் முட்டை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதும், இரவில் தாமதமாய் கதவைத் திறந்து உள்ளே வரும்போதும், அவளது நினைவுகளின் இல்லத்துக்குரிய ஒரு புதுப்பெயர் தோன்றும். அந்தப் புதுப்பெயரை அவள் மீண்டும் மீண்டும் மெல்லத் தனக்குள் சொல்லிக் கொள்ளும்போது, கண்கள் விரிந்து அவளது முகத் தோற்றம் ஒரு நீர்வீழ்ச்சியைக் கடந்து வந்தது போல் உயிர்த்தெழும்.

புதுப்பெயர் சிறிது காலம் அவளைக் காக்கும். முன்னளவு கண்ணீர் இல்லை, ஈரமற்ற தேம்பல். ஆதன் ஆற்றல் குறைவதன் துவக்கத்தை அவள் பெரும்பாலும் இரவில்தான் உணர்வாள், வெளியே பலமான காற்றோ குளிரோ இல்லாதபோதும் தரையும் சுவர்களும் அசையத் துவங்கும்; அவனை அவள் மறக்கவில்லை என்பதை அவன் அறிந்தாக வேண்டும் என்று பாவனை செய்து கொள்வதற்கேனும் ஒரு புதுப்பெயர் தேவைப்படுகிறது என்பதை அவள் அறிந்து கொள்வாள்.

அவள் அவனை அவ்வளவு நேசித்தாளா? காதல் நிகழ்காலத்தில் உள்ளதல்ல. அது கடந்த காலமும் எதிர் காலமும் உயிர்நாட்டதைப் பற்றுதலின் இறுக்கம், உன்னில் ஒரு பகுதியை வேறொருவருக்கு விட்டுக் கொடுப்பது, நீ மங்கி மறைவதைக் கண்டதும் உன்னை உயிர்ப்பிக்க அவர்களைப் பாடச் செய்வது. உண்மையைச் சொல்வதானால், அவனது இல்லாமையை நேசிப்பது இதமாக இருந்ததால் அவள் பாடிக் கொண்டேயிருந்தாள். அவ்வளவு நேசித்தாளா என்ற கேள்விக்கு, இருக்கலாம் என்றுதான் சொல்ல முடியும் என்று அவள் தீர்மானித்துக் கொண்டாள். இப்போதும் அவன் அறியப்பட்டவன்தான், ஆறுதலளிக்கும் இல்லாமையின் இருப்பு.

வெறுமை தன் வடிவம் இழந்தபோது, மேலும் மேலும் அவனைப் போல் இல்லாது போனபோது, தனது நினைவுகளையும் சந்தேகங்களையும் எந்த நிலைக்குக் கொண்டு சென்றாலும் சரி என்று ஏற்றுக்கொண்டு தன் துயரம் அதைச் சரி செய்யவும், அதன் மீது மோதிக் கொள்ளவும் இடம் கொடுத்தாள்.

அவன் துன்பப்படுகிறானா? இப்போது அவன் போய் விட்ட நிலையில் அவளது துயரம் குறித்து அவனுக்கு அக்கறை இருக்குமா?

“நீ தேறி வருவதை நீயே கெடுத்துக் கொள்கிறாய், அது உனக்கும் தெரியும்,” என்று அவளது நெருங்கிய தோழி லியாண்ட்ரா அழுதுவிடுவது போல் கூறினாள், கரேன் வீட்டுக்கு எவ்வளவு முறை புதுப்பெயர் தந்திருப்பாளோ அவ்வளவு முறை விசுவாசமாய் அவள் மீண்டும் மீண்டும் பாடும் பல்லவி. “நீ உன்னை எவ்வளவு கஷ்டப்படுத்திக் கொள்கிறாய் என்பது அபத்தமாக இருக்கிறது. உனக்கு பணமும் நேரமும் இருக்கிறது என்பதால் மட்டும் நீ அவனுக்கு கடமைப்பட்டிருக்கிறாய் என்று அர்த்தமில்லை. அப்புறம், எதுவும் சொல்லாதே…”

“… ஹனி, நான் உன் மீதும் அன்பு வைத்திருக்கிறேன் என்பது உனக்கே தெரியும்.” வழக்கமாய் வரும் பதில்தான், அதில் அன்பைவிட குரூரம்தான் இருந்தது, பிறரைப் போலவே லியாண்ட்ராவும் தனது கலையை மதிக்க மாட்டாள் என்ற அச்சத்தால் நம்பிக்கையின்மை வெளிப்படையாகவே தெரிந்தது.

அவளது நண்பர்களும் பலரை இழந்திருக்கிறார்கள். புற்றுநோயைவிட கொடூரமான விஷயங்களுக்காக. அவளுக்குத் தெரியும்.

அவர்கள் அறிய மாட்டார்கள். ஏனென்றால், அந்த வீட்டைப் பற்றி என்ன ஏது எப்படி என்று எதுவும் அவள் சொன்னதில்லை, அதன் சுவர்களுக்குள் துக்கத்தை ஒரு நிகழ்த்துகலையாகவும் போர்க்கலையாகவும் பயிலும் அவளது வழக்கங்கள் பற்றியும் அவள் சொன்னதில்லை.

அது இப்போதும் எவ்வாறு திரள்கிறது, அந்த உணர்வுதான், அவனது இல்லாமையை இவ்வுலகினுள் அது சுவாசிக்கும்போதே அவளும் அவனது உயிரை அதனுள் சுவாசிக்கிறாள், இவ்வாறு பிணைந்திருத்தலில் தன் வாழ்வுக்கு ஒரு பொருள் இருப்பதாய் கற்பனை செய்து கொள்வதன் அமானுட சஞ்சாரமும் சஞ்சரித்தலும். சாதாரணமாய் வாழ்தலைத் தனக்குரியதாய் ஆக்கிக்கொள்ள அவளால் இயலும், அது சோபையிழக்கும் என்றாலும்; அதன் பின் ஒரு நாள் அவள் பிணையற்ற பறவையாவாள். இந்தச் சிலேடை அவளை எப்போதும் சிரிக்க வைத்ததில்லை.

வெறுமைக்கும் நினைவுக்கும் இடைப்பட்ட உலகுகளுக்கு இடையில் வீடு பெருமூச்செறிவதைக் கேட்டபடி படுக்கையின் தனிமையில் அவளது உடல் போர்வைகளுக்கு இடையில் மண்ணின் கீழ் ஆழத்தில் கிடப்பது போல் இருந்தாள், அதன் உயிருள்ள சருமம் எங்கும் இறந்தவர்களைச் செவித்தபடி. தொல்காலத்தில் இருந்தவர்கள் சொன்னது போல், புதிய உடலொன்று தரிக்கக்கூடிய உடலின் உறக்கத்தில்.

அவன் போய்ச் சேர வேண்டும் என்று சில சமயம் நீ எவ்வளவு விரும்பினாய் என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்கிறார்களோ இல்லையோ, நீ பைத்தியமாய் பாசம் வைத்திருக்கிறாய் என்று சொல்கிறார்கள். அவள் அறிவதற்கு வெகு காலம் முன்னரே இழப்பின் முழு உருவத்தையும் அறிந்து விட்ட அவர்கள்- உண்மையில் நோய்மையே தீது, என்று அறிந்திருந்திருந்தார்கள். துன்பப்படுதலே உண்மையில் அஞ்சுதற்குரிய முடிவின்மை. முகமற்ற வலி குரூர, குறுகிய வாழ்வில் நித்தியங்களை வளர்த்தெடுக்கிறது.

தம்பதியர் “பாசத்துடன்” “போராடும்” இரட்டைப் போராளிகள் ஆகின்றனர். என்ன ஒரு கதை! ஆனால் இது ஒரு நாயகக் கதையா இல்லை பேய்க் கதையா? சுண்டிவிடப்பட்ட நாணயத்தின் இரு முகங்கள் என்பதை கரேன் அறிந்திருந்தாள். அது எங்காவது விழுந்தாக வேண்டும். விளைவுகளை கண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்க முடியாது. அவள் அதைச் செய்யவில்லை. அதன் ஒவ்வொரு சுழற்சியையும் அவள் கவனித்திருந்தாள், நாணயம் நிலைக்கு வந்ததும், மரணத்தின் முகத்தை உற்று நோக்கினாள்.

அவள் பிரச்சினை என்ன என்பதைப் பிறரிடம் சொல்ல முயற்சி செய்வது வெளிப்படையாய் பேசுவது என்று சொல்கிறார்களே, அதற்கும், சாதாரண விஷயத்துக்கான புகழ்ச்சிக்கும்தான் கொண்டு செல்லும். முட்டாள்தனமான வாக்குவாதத்தில் வெற்றி பெறவோ, மீட்கப்பட வேண்டுமென்றோ அவள் விரும்பவில்லை. இன்னும் விரிவான, நிரந்தர அந்தரங்க வட்டத்தைப் பிறர் மதித்தால் போதும், என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஆனால் மரணத்தைச் சில சமயம் மன்னிக்க முடியாது என்பதைத்தான் அவள் லியாண்ட்ராவிடமும் பிறரிடமும் சொல்ல அஞ்சியிருக்கலாம். நிச்சயம் இது போல் நடந்து விடுகின்றது. ஆனால் அவற்றை நாம் எப்போதும் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. எண்ணற்ற புதுப்பெயர்களே நமக்குப் போதுமானவையாய் இருக்கலாம், மரணத்துக்கு அப்பாற்பட்ட சக்திகளின்மீது உணர்ச்சிகளற்ற ஒரு புரிதலை அவை நிலைநாட்டக்கூடும். போதாமை மிகுந்த ஜீவன்களில் நாம் தொடர்ந்து பெயர் சூட்டி உயிர் நிறைக்கும்போது இந்தச் சக்திகள் எதிர்வினையாற்றாமல் போகலாம், இவ்வுலகுக்குப் பொருந்தாத தம் இருப்பு விரிசலடைவதை அவையும் உணரத் துவங்கலாம். திறந்த, துடிக்கும் இதயத்தைப் பொசுக்கும் வெண்-சூட்டுத் தீக்கோல் போன்ற காதலால் நாம் நம்முடன் இறுக்கி அணைத்துக் கொண்டவர்களைப் போல் தாமும் மரணிக்கக்கூடியவைதான் என்பதை அவை கணப்போது உணரலாம். அப்படியும் இருக்கலாம். உயிர்க் குருதிக்குள் துளைக்கும் உலோகத்தின் வெப்பம், புதிய பெயர்களை அழைக்கும் ஓலம். அப்படியும் இருக்கலாம், ஒவ்வொரு நாளும் ஒரு சில நிமிடங்கள் மட்டும்தான் என்றாலும், அவளது உயிரும் பிரியும் வரை.

 

நன்றி : (b)OINK

oOo

About the author: 

Matthew Jakubowski is an American fiction writer and literary critic. A former editor for the translation journal Asymptote, his writing appears regularly in publications worldwide, such as The Paris Review Daily, The National, 3:AM Magazine, The Brooklyn Rail and Kirkus Reviews. He lives in Philadelphia, Pennsylvania, and maintains a litblog called truce. (Blog URL: http://mattjakubowski.com )

மெய்ம்மை கடப்பு

பால்கோபால் பஞ்சாட்சரம்

சாஸரின் மெய்ம்மை-பிந்தைய உலகு – எலியனோர் பார்க்கர் (மொழியாக்கம் – பீட்டர் பொங்கல்) தொடர்பாய் சில குறிப்புகள்:

wicker-house

Post truth= ‘மெய்ம்மை- பிந்தைய’ என்பது அத்தனை பொருத்தம் இல்லாத மொழிபெயர்ப்பு.

சில குறிப்புகள் கீழே:

போஸ்ட் மாடர்ன் = நவீனக் கடப்பு நிலை. நவீன காலத்தைக் கடந்த நிலை. இதன் முன்னோடி, உடனோடியாக, போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிசம்= அமைப்பியல் (வாதக்) கடப்பு நிலை. (வாதம் என்ற சொல் அபரிமிதமாகப் பயன்படுத்தப்பட்டு ஒவ்வாமை உண்டாகி இருக்கிறதால் அதைத் தவிர்க்கலாம்.)

அமைப்புகளால் தனிமனிதர் செலுத்தப்படுகிறார், தெரிந்தோ, தெரியாமலோ, விரும்பியோ, விரும்பாமலோ என்ற கருத்தாக்கம் அமைப்பியலின் அடிப்படை. தனிமனிதச் செயலதிகாரம் என்பது கிருஸ்தவ இறையியலில் ஒரு பகுதி. சமூக உறுப்பு என்ற நிலைக்குத் தனிமனிதச் செயலூக்கம்/ திறன்/ அதிகாரம்/ விருப்பம் ஆகியன அடிபணிய வேண்டும் என்ற சர்ச்சிய நிர்ப்பந்தத்தைத்தான் மேற்கண்ட அமைப்பியல் வாதமெனும் ‘செகுலர்’ கருத்தாக்கம் திரும்பச் சொல்கிறது.

சர்ச், என்பதன் வேர்ச்சொல், ‘வலிமையானது, ஆற்றல் வாய்ந்தது,’ எனப் பொருள்படும் keue என்ற பதம். ஆற்றலுக்கும் வலிமைக்கும் அடிபணிவதை அற/ ஒழுக்கக் கட்டாயமாக முன்வைக்காமல், நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீங்களே (மனிதரே) உருவாக்கிய அமைப்புகள் பூதாகாரமாக, செடுக்காக, மிக நுண்ணிய தளங்களிலும், பரிமாணங்களிலும் கூட ஊடுருவி மனித வாழ்வை ஆள்கின்றன, இனி மனிதருக்கு மீதம் இருப்பதெல்லாம் அடிபணிவது, எதிர்ப்பது, உடனோடியபடி தம் தேவைகளை நிறைவேற்றும் சகஜபாவம் கொள்வது போன்ற ஒரு சிலதான் என்கிறது அமைப்பியல்வாதம். கெல்லி எறிவது, மறு உருவாக்கம் செய்வது, மேலாதிக்கம் செய்து நாமே (தனிமனித ஊக்கமே) செலுத்துவது போன்றன எல்லாம் கனவுகள், நடக்க வாய்ப்பில்லை என்ற ஒரு அகங்கார நாச வாதம், அல்லது தொடர் நசிவையே முன்வைக்கும் வாதம் அமைப்பியல் வாதம். இதன் ஒரு சமகால எதிர்ப்பு மரபு இருப்பியல் வாதத்திலிருந்து வந்தது. இருப்பியல் வாதமும் அமைப்பியல் வாதமும் பின்னிப் பிணைந்த நாகங்கள்.

இதன் சில வடிவுகள் இந்திய தத்துவ மரபில் உண்டு. ஆனால் நிலைத்த ஆதிக்க, ஒற்றைப் பெரும் நிறுவனம் இல்லாத, பல்வகை மரபுகளுக்குரிய பாரதத்தில் இவை சர்ச்சிய அமைப்பு வாதமாக உருவெடுக்கவில்லை. மெய்நாட்டம் என்பது தனிமனித விடுதலையை இயற்கையின் பேராட்சியிலிருந்து விடுவிப்பதைப் பற்றிய விசாரங்களாக மட்டும் இருந்தது. தவிர இந்திய மரபுகள் தனி மனிதச் செய்கைகளின் விளைவான உறவுப் பின்னல்களுக்கும் விடை தேட முனைகின்றன. அவற்றைத் துறப்பது, எதிர்ப்பது, அழிப்பது போன்றவற்றோடு அவற்றில் முங்கியிருந்தபடி உலர்ந்த மனிதராவது எப்படி என்பதையும் இந்திய சிந்தனை மரபுகள் யோசித்திருக்கின்றன.

கோஷங்கள் போல அடிக்கடி முழங்கப்படும் யோக, ஞான, பக்தி, கர்ம இத்தியாதி மார்க்கங்கள் இந்த வகை யோசனைகளின் விளைவுகள்தான். எந்த நிலையில் என்ன மனப்பாங்குடன் என்ன அவசரத்துடன் இருந்தாலும் தனிமனிதனுக்கு விடுதலை கிட்டும் என்பதுதான் இந்திய மரபின் நல்ல செய்தி. அறம்/ ஒழுக்கம்/ நன்னயம்/ நற்சிந்தனை/ கருணை/ பேரன்பு என்ற சில தனிமனிதருக்குச் சாத்தியமான, ஆனால் அவர்தம் அதிகாரத்துக்கு மேற்பட்ட, காலம் காலமாகப் பெருகி ஓடும், காரண காரியங்களுக்கு அப்பாற்பட்ட அவசிய இருப்பாக உள்ள, சில பொது மறைகளையாவது கவனித்து நடந்தால்தான் அது சாத்தியம் என்றும் உணர்த்துகின்றன.

இப்படி ஒரு சொல்லுக்கு,- அமைப்பியல் என்பதற்கு- நெடிய அர்த்தங்களின் ஆற்றுப்படல் உண்டு. அதைக் கவனிக்க தத்துவத்தைக் கவனித்தால் மட்டும் போதாது. வரலாறு, சமூக அமைப்பு, இறைமை நிறுவனங்கள், அரசமைப்பு போன்றனவற்றின் உடனிணைந்த இயக்கப் போக்குகள் பற்றியும் ஒரு சுதாரிப்பு தேவை. அதை எல்லாம் கடந்து விட அந்த அமைப்புகளை, அவற்றின் தர்க்க நியாயங்களை, நியாயப்படுத்தல்களை கேலிக்கும், அவமதிப்புக்கும் உள்ளாக்குவதில் துவங்கி, அலட்சியம் செய்வதில் தொடர்ந்து, அவற்றை நிர்வகிக்கும் மனிதர்களுக்கு மதிப்பு கொடுக்க மறுப்பதில் நீண்டு, வரலாறு என்பதையும் கடந்த கால சாதனைகள்/ சாதிப்புகள் எல்லாவற்றையும் வேரோடு (அ) கருவறுத்துக் கிடத்துவதன் மூலமும் நம்மால் விடுவிப்பைப் பெற முடியும் என்று பல தத்துவாளரும், இலக்கிய விமர்சகர்களும், வரலாற்றாளரும் நம்பினர். சாஸரின் எழுத்திலும் சர்ச்சுக்கு எதிரான இத்தகைய விமரிசனம் உண்டு, எங்கும் அதிகார அமைப்புகள் விவாதத்துக்கு அப்பாற்பட்டவையாக இருக்கும்போது இவ்வாறே எதிர்கொள்ளப்படுகின்றன.

தூல உலகின் அதிகாரம் வெறும் பொய்மைகளின் அடுக்கு, சீட்டுக்கட்டு மாளிகை, அதன் அடித்தளத்தையே தகர்க்க வெறும் கெக்கலிப்பே போதும் என்று கூட இருபதாம் நூற்றாண்டுச் சிந்தனையாளர்கள் சிலர் நினைத்தனர். அமைப்புகளின் நிர்வாகிகள் சிறிது காலம் அலங்க மலங்க விழித்து செயலற்று நின்றனர் என்பது உண்மை. ஆனால் வீழ்ந்தது என்னவோ இந்த நிர்வாகிகளும், அவர்களின் ஆணையகங்களும் இல்லை. மாறாக கருத்து வெற்றிடம் ஏற்பட்டு, முன்னேற்றம் என்ற சொல்லே கறை/ குறைப்பட்டுப் போனபின், பக்கவாட்டில் காத்திருந்த மிருக பலம் கொண்ட பழங்கதையாடல் எளிதே ஆணையகங்களைப் பிடித்து விட்டது.

இந்த முறை அந்த பழமை வாதம் முன்பு இருந்த அளவு நெறி/ ஒழுக்கம்/ அறம் ஆகிய கதையாடல்களைக் கூட அவசியமாகக் கருதவில்லை. ஆனால் அலட்சியபாவம் கொண்ட ஒவ்வொருவரிடமும் உள்ளுறைந்த நீண்ட காலக் குழு அடையாள மனோபாவத்தை தூண்டி, அதன் அழிப்பு எத்தகைய இழப்பு என்று சுட்டிக் காட்டி, அவர்களில் கணிசமானவரை ‘முன்னேற்றம்’ என்ற பொய்க்கனவிலிருந்து விடுவித்து, தம் இருப்பைக் காப்பது என்ற புது வேலை/ கடமையில் பிணைக்கப் பணித்து அதில் வெற்றி பெற்று விட்டது. அல்லது ஒவ்வொரு நாடாக வெற்றி பெற்று வருகிறது. இதில் விசித்திரம் என்னவென்றால் எதிர்ப்பு இயக்கமாக ‘கட்டுடைப்பைச்’ செய்தவர்களும் இதே அடையாளத்தைத்தான் கிளர்த்தியிருந்தனர். இவர்களே உண்மையை அதிகாரத்தின் கருவி என்று கட்டுடைத்து அதன் நம்பகத்தன்மையைக் குலைத்திருந்தனர்.

ஆக, கடப்பு என்ற சொல் பொருளற்ற சொல்லாக்கம் இல்லை. பிந்தைய என்ற சொல்லை விட கடப்பு என்பது கூடுதலான செறிவு கொண்டது. பிந்தைய என்பதில் எனக்குத் தெரிந்து பொருளேதும் பெற முடியாது. இது வெறும் காலம் தாண்டி புதிதாக வந்த நிலை மட்டுமல்ல.

போஸ்ட்- ட்ரூத் என்பதை- உண்மையைக் கடந்த நிலை என்று கருதிப் பேசுவது நல்லது. தற்போது புழக்கத்தில் உள்ள ‘ட்ரூத்தர்’ என்ற சொல் அவநம்பிக்கையாளர்களைக் குறிப்பது இங்கு கவனிக்கத்தக்கது. இவர்களால் எந்த உண்மையும் நிறுவப்படுவதில்லை, அதிகாரப்பூர்வ உண்மைகள் சதிவலைப்பின்னல்களாய் இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பி இவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றனர். பின் அதே அதிகார துஷ்பிரயோகம், தீவினைகள், அநீதி ஆகியன வேறு வடிவில் தொடர்கின்றன.

2. மெய்ம்மை என்பதோடு ட்ரூத் என்பதைப் போட்டுக் குழப்பலாமா என்பது என் இன்னொரு கேள்வி. மெய்ம்மை என்பதை நாம் தமிழ் மரபில் எப்படிப் பார்க்கிறோம் என்று யோசித்தல் நல்லது. உண்மை அனேகமாக புறத் தகவல்களின் நம்பகத் தன்மையையும், நம் சாதிப்புகளின் நம்பகத்தன்மையையும் சுட்டும். மெய்ம்மை என்பது நம் கொள்கையோடு, நம் ஒழுக்கத்தோடும், நம் செயல்பாட்டின் நம்பகத்தன்மையையும் சுட்டும். இவற்றில் உண்மை கருத்தளவில் நிற்பது அல்லது/ சிந்தனை அளவில் நிற்பது என்றும், மெய்ம்மை நடத்தையை (மார்க்கம்?) நம்புவது என்றும், இறுதியில் செயல்பாட்டை (கர்மம்?) நம்புவது என்றும் வைக்கலாம்.

இதில் எனக்கொன்றும் பிரமாதத் தெளிவு இல்லை. ஆனால் இரண்டு சொற்களும் ஒன்றே அல்ல என்று நம்புகிறேன்.

3. இப்படி ஒரு வாக்கியம் இருக்கிறது. “‘போஸ்ட்-ட்ரூத்‘ என்ற சொல், “பொதுக் கருத்துகளை உருவாக்குவதில் உணர்ச்சிகள் மற்றும் தனிமனித நம்பிக்கைகளை நோக்கி முன்வைக்கப்படும் வாதங்களைவிட அகவயப்பட்ட தகவல் குறிப்புகள் குறைந்த அளவு தாக்கம் கொண்டிருக்கும் சூழலை” குறிக்கிறது என்று வரையறை செய்திருந்தனர்.” இதில் எங்கோ குறை இருக்கிறது. போஸ்ட் ட்ரூத் காலத்தில் புறத்திலிருந்து கிட்டும் வாதங்கள் அகத்தகவல்களை மீறுகின்றன என்று பொருள் கிட்டுகிறது. ஆனால் ஆக்ஸ்ஃபோர்ட் அகராதியைச் சோதித்தால் அதில் கிட்டும் வாக்கியம் இது: ‘Relating to or denoting circumstances in which objective facts are less influential in shaping public opinion than appeals to emotion and personal belief‘. இங்கு ஒப்ஜெக்டிவ் ஃபாக்ட்ஸ் என்பதை அகவயப்பட்ட தகவல் குறிப்புகள் என்று நீங்கள் ஆக்கியிருப்பது அத்தனை பொருத்தமானதல்ல. ஒப்ஜெக்ட் என்பது அகத்துக்கு அப்பாற்பட்ட புறநிலைப் பொருள். ஒப்ஜெக்டிவ் ஃபாக்ட்ஸ் என்பன புறத்திலிருந்து நேரடியாகப் பெறக்கூடிய தகவல்கள், அதே நேரம் அவை வெறும் தகவல்கள் இல்லை, நிறுவப்படக் கூடிய, மாறாத நிலைப்பாடு கொண்ட தகவல்கள். உண்மை என்பதைச் சற்று மேல்நிலைச் சொல்லாகக் கொண்டால், நான் வருணித்த அளவோடு நிறுத்துவது பொருந்தும். அகராதி என்ன சொல்கிறது? புறநிலை கொடுக்கும் நம்பகமான தகவல்களை விட அகத்துறை நம்பிக்கைகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் சுண்டல்களாக விடுக்கப்படும் எழுச்சித் தூண்டல்களே மிக்க தாக்கம் கொண்டு விடுகின்றன என்று சொல்கிறது.

பீட்டர் பொங்கலின் தமிழாக்கம் இதற்கு மாறாக, எதிராகச் சொல்கிறது.

உண்மையில் போஸ்ட் -ட்ரூத் அதாவது உண்மை கடந்த நிலை என்பது உண்மை உதாசீனப்படுத்தப்படுவது, அதுவே நம்பகத்தன்மை இழப்பது, உண்மையை நிலை நாட்ட வழக்கமாக இருக்கும் நிறுவனங்கள், அதிகார மையங்கள், ஆளுமைகள் போன்றாரெல்லாம் தம் செல்வாக்கிழந்து வீழ்ந்து போயிருக்க, பொய்யர்களும், சூதாடிகளும், கயவர்களும், நாடகமாடுவோரும் பரப்பும் எல்லாத் தூண்டல்களும் மிக்க உயிர்ப்பு பெற்று உலவும் நிலை. இந்தத் தூண்டல்கள் பற்பல தளங்களிலும், பல காலங்களிலும், கிட்டத் தட்ட எந்நேரமும் சாதாரணர்களைச் சென்று சேர்கையில் புறத்தகவலின் உண்மை நிறுவல் என்ற முயற்சி தன் செயலின் செடுக்காலேயே தோற்கடிக்கப்படுகிறது. யாரெல்லாம் அதிகாரத்தை நிலைகுலையச் செய்ய அதன் அடித்தளங்களையே சாய்ப்போம் என்று சாகசம் செய்ய நினைத்தார்களோ அவர்களெல்லாம் இன்று நிலைகுலைந்து நிற்கின்றனர். முழுப் பொய் என்பது பாலைவனச் சூரியனைப் போல இரக்கமற்ற எரிப்பைக் கொணர்வது.

4. ஜியாஃப்ரி சாஸர் இல்லை. ஜெஃப்ரி சாஸர் என்ற உச்சரிப்புதான் சரி.

தவிர துவக்கத்தில் சரியாக ஹௌஸ் ஆஃப் ஃபேம் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் கடைசிப் பத்தியில் ‘புகழ் வீடு’ என்ற கதை என்று உள்ளது. தவிர இந்தக் கவிதையில் மூன்று வீடுகள் பேசப்படுவதாக விக்கி சொல்கிறது. இவற்றில் மூன்றாவதை ஏன் புரளி வீடு என்று பீட்டர் பொங்கல் குறிப்பிடுகிறார் எனத் தெரியவில்லை. அது பெரும் சப்தம் நிறைந்த வீடாக மட்டும்தான் வருணிக்கப்படுகிறது. அதில் ஓசை திடுமென நிற்கக் காரணம் மிக்க கனம்பொருந்திய மனிதர் ஒருவர் அங்கு வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. இதை இந்தக் கட்டுரை விட்டுவிட்டது. விக்கியில் ஓரிடத்தில் சில உரையாளர்கள் இந்த நபர் எலியாஹ் என்று கருதுவதாகத் தெரிகிறது. எலியாஹு பற்றித் தெரிய இங்கே பார்க்கலாம். (ஹீப்ரூ உச்சரிப்பு எலியாஹ்/ எலியாஹு என்று வருகிறது. இங்கிலிஷில் இலைஜா என்று பயன்படுத்துகிறார்கள்.)

அந்த ஓசையான வீடு சுள்ளிகளால் ஆனது என்பது ஏற்கத் தக்க விவரணை. ஆனால் அது விக்கர் என்ற தாவரத்தால் ஆனது. விக்கர் என்பதை நாணல், பிரம்புக் கொடி என்று பல தமிழகராதிகள் குறிக்கின்றன. குறிப்பாகத் தமிழ் லெக்ஸிகன் அப்படிக் குறிக்கிறது.

இந்த எலியாஹ் போன்ற நபர் வந்ததும் ஆரவாரம் அடங்குவது என்பதில் நாம் சிறிது கவனம் செலுத்தலாம். அதை எப்படி அறிந்து கொள்வது?

இன்னுமோர் விசித்திரம்.

விக்கியை மேற்கோள் காட்டுகிறேன்- ‘Chaucer remarks that “if the house had stood upon the Oise, I believe truly that it might easily have been heard it as far as Rome.” நாம் ஓசை என்கிறோம், சாஸர் பயன்படுத்தும் சொல் oise.  அது ஃப்ரெஞ்சு, டச்சு உச்சரிப்புகளும், இங்கிலிஷ் உச்சரிப்பும் கொண்ட சொல். இங்கிலிஷில் வாஸ் என்பதாக ஒலிக்கிறது.

oOo

ஒளிப்பட உதவி – House of Fame Intro, GWU Chaucer Class S2015, Youtube