எழுத்து

திளைத்தல்

ஸ்ரீதர் நாராயணன்

அம்மாவின் தோளில் தொற்றியபடி
நீரில் துழாவிச் செல்கிறான்
குளத்தின் ஆழப்பகுதி நெருங்க
கிலேசமும் உவகையுமாக
கூக்குரலிடுகிறான்.
தனக்கென ஓர் உலகு கொண்ட
தனித்துவ சிறுவன்..

அவனுக்கு எட்டாத இன்னொரு உலகு
அடுத்த தடங்களில் இயங்குகிறது.

விசிலோசைக்கு ஏற்ப
இராணுவ ஒழுங்கோடு
படபடத்தப்படி போகின்றன
நீரில் தத்தளிக்கும்
பட்டாம்பூச்சிகள்

செந்தோலினி

– ஆகாஷ் சிவா – 

கண்கள் தேடுவது கிடைப்பதில் எப்போதும் சிரமம் இருக்கும், ஆனால் தேடுவதை விட அதிக முக்கியத்துவமான பொருள் கிடைத்தால் அதன் மகிழ்ச்சியே தனி, ஆனால் அனைத்தும் கிடைக்காது சிலவற்றை அதித முயற்சியால் அபகரிக்கவும் வேண்டி வரலாம்.

கலைந்து கிடந்த காகிதங்களில் இருந்த கிறுக்கல்களை மீண்டும் மீண்டும் படித்தேன். எதுவும் நன்றாக இல்லை . கிறுக்கு தாடி எதாச்சும் எழுதுச்சா தெரியலயே, என மனதிற்குள் சொல்லி கொண்டேன். கருமாரி அம்மன் கோயில் விழா பற்றிய மஞ்சள் நோட்டீஸ், ஆண்மை குறைவா?? டாக்டர் சானக்கியனிடம் வாருங்கள் என்ற விளம்பரம், என இவைதான் தாடிக்கு எழுத வசதியானவை. நல்ல காகிதம் வாங்க வசதியில்லை எனவும் சொல்லலாம்.

படிக்க முடிதா, அச்சு அப்படியே பின்னால தெரியுது, இதுல காலரா பேதி வந்த கணக்கு வாத்தி மாறி கையெழுத்து வேற.

‘கத்தி சின்னத்தில் வாக்களிப்பீர்,’ என படத்தோடு இருந்த விளம்பரத்தில் பணத்தாசை பற்றி கவிதை எழுதியிருந்தது, முடிவு பெறாமல். ;அத முடிச்சிருந்தா தேவல. கத்தி படத்தில் நீல மையால் ரத்தம் சொட்டுவது போல் சித்திரம். கிறுக்கு, எழுதறத விட்டுட்டு படம் வரைஞ்சா, இப்போ நாலு நாளுல கதைக்கு எங்க போறது.

மீண்டும் வாசலிற்கு வந்து கடிதத்தை படித்தேன். காற்று பலமாக வீச கடிதத்தை கவனமாக பிடித்து கொண்டேன். மூன்றாம் மாடி என்பதால் சற்று பலமாகவே காற்று வீசும்.

“வரும் தீபாவளி சிறப்பிதழிற்கு உங்கள் கதை ஒன்றை எழுதி தரும்படியும், அதற்கு சன்மானமாக ரூபாய் 55ஐ பெற்றுக் கொள்ளும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. சிறப்பிதழ் அச்சடிக்க அவகாசம் வேண்டி கதை இம்மாத இறுதிக்குள் வந்து சேர வேண்டும்.

“இப்படிக்கு செந்தோலினி ஆசிரியர்”.

பத்திரிக்கை ஆபிஸில் குமாஸ்தா தாடிக்கு வேண்டியவர், கடிதத்தை கொடுத்து எப்படியாச்சும் கதையை தேத்துமாறு கூறிச்சென்றார்.

55 ரூபா, இந்தாளு எழுதுர கதைக்கு அது ரொம்ப அதிகம் தா, ஆனாலும் இப்ப அது கூட கிடைக்காது போல.

55 ரூபாய் கிடைத்தால் கல்லூரி கட்டணத்தை கட்டி விடுவேன். வயித்துக்கும் வாய்க்கும் ஆகும். மாடியில் இருக்கும் சிறிய குடிசைதான் என்பதால் பிரபலமான எழுத்தாளர் என நம்பி வீட்டுக்காரர் வீட்டை வாடகை இல்லாமல் விட்டு விட்டார். இவரோட நான் சேர்ந்து இருக்கரதால அந்த செலவு மிச்சம். இந்த நேரம் பார்த்து ஊர் சுத்த போய் விட்டான். வழக்கமா போவதுதான். போனா எப்ப திரும்ப வருவார் என தெரியாது, சாதாரணமாக ஒரு வாரம் ஆகும். இப்ப போய் மூன்று நாள் ஆகிவிட்டது.

ஒருவழியாக யோசித்து கதையை நாமே எழுதி கொடுத்திடலாம், தாடிதா எழுதுச்சு என பத்திரிக்கை ஆசிரியர் நம்பி விட்டால் போதும், வழக்கமாக நான்தான எடுத்துட்டு போவேன் கதைகளை, அதனால் அதிகம் சந்தேகம் வராது என்று முடிவு செய்து உள்ளே போய் அமர்ந்தேன். இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. தரித்திரம் புடிச்ச மேச, தாடி எங்கருந்தோ தூக்கி வந்தது, ஒரு யோசனயும் வர மாட்டுது. வெளிய போய் எதாச்சும் கதை கிடைக்குதா பார்ப்போம் என வீதிக்கு இறங்கி வந்தேன். வீட்டுக்காரர் எதிரில் வந்தார்.

“வீரன் எங்க தம்பி பாத்து நாளாச்சு, பயணம் போயிருக்காறா” என்றார்.

வீர ராஜ விக்ரமன், தாடியோட புனைப்பெயர். கீரையக்கூட வலுவா கிள்ளத் தெரியாது பேரு மட்டும் வீரன்.

“ஆமா, அண்ணே மூணு நாளாச்சு” என்றேன்.

“அவரோட ப்ரெண்ட் ரவிதாசன் இறந்துட்டாரு, வீரன் வந்தா சொல்லிடுப்பா” என்றபடி வீட்டுக்குள் சென்று விட்டார்.

ரவிதாசனா, ஆகா கதை கிடைச்சிடுச்சு. இப்போதுதான் ரிடையர் ஆனார், வயசான கட்ட, பாக்க நிறைய பேர் வருவாங்க எதாச்சும் கதை நிச்சயம் கிடைக்கும்.

ஓட்டமும் நடையுமாக ரவிதாசன் வீட்டிற்கு சென்றேன், வீட்டில் யாருமில்லை, பக்கத்திலிருந்த வீட்டில் கதவை தட்டினேன்.

“ரவிதாசன்” என்று அவர் வீட்டை நோக்கி கை காட்டினேன்.

” எடுத்துட்டு போய்ட்டாங்கபா, இப்போதா, சூரியன் மறைய போதுல்ல” . அதுக்குள்ளயா, என்னங்கடா அவசரம் உங்களுக்கு.

“எப்போ தவறுனாறு” என்றேன்.

“நேத்து ராவுக்கு ஏதோ சத்தம் கேட்டுச்சுப்பா, காலம்புறதா தெரிஞ்சுது”.

“நெஞ்சு வலியோ?” என்றேன், எப்படி செத்தார் என எப்படி தெரிந்து கொள்வது.

“வலுக்கி விழுந்து அடி பட்டிருக்கும் போல, நமக்கென்ன தெரிது, வந்தவனுங்க பூரா கடங்கொடுத்தவனுங்க, பொணத்த நடு வீட்டுல போட்டுட்டு பணமிருக்கானு தேடிருக்கானுங்க வீட்ல, இல்லனதும் தூக்கிட்டு போய்ட்டானுங்க கொழுத்த, ஒரு தகவலும் இல்ல”.

அடடே, பிணத்தை நடுவுல போட்டுட்டு, பணத்த தேடுனாங்களா, காட்சி நல்லா இருக்கே, நேர்ல பாத்திருந்தா வளர்த்து கதை எழுதிருக்கலாம். அதிர்ச்சிகரமான முடிவு அமைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைத்து கொண்டே. “சரி, நா அப்போ கிளம்புறேன் ” என்றபடி திரும்பினேன்.

இருட்டத் துவங்கியிருந்தது. மெல்ல மெல்ல வெள்ளை நிறத்தில் காய்ச்சி ஊற்றிய வெள்ளிக் குழம்பாக நிலவு பிரகாசிக்க துவங்கியிருந்தது. முழுதாக சிரிப்பை, மலர்ச்சியை மட்டுமே உடைய முகம். பார்க்கப் பார்க்க வளர்ந்து கொண்டே எல்லையில்லாமல் செல்கிறது அதன் குதூகலம் நிறைந்த புன்னகை.

அதன் பின்பக்கம் எப்படியிருக்கும். துக்கத்தின் எல்லை உடைத்து பாய்ந்து வரும் துன்பக் கடல் போல் பரந்து சோர்வின் உச்சத்தில் உறைந்திருக்குமோ, இல்லை வஞ்சத்தின், அகங்காரத்தின், சிம்மசொப்பனமாக உயர்ந்து வீற்றிருக்கும் நயவஞ்ச முகமாக இருக்குமோ? எதுவானாலும் நாம் காண்பதற்கு முற்றிலும் நேரெதிரான ஒன்று முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளது.

தாடிக்கு இப்படி எதாச்சும் மறைக்கப்பட்ட நேரெதிர் முகம் இருக்குமா. இந்த முகமே பாதிதான் வெளியில் தெரியும். நல்ல மனிதர், சாது, மனதில் உள்ள வலிமையில் கால்பங்குகூட உடலில் தேராது. பத்திரிக்கைகளுக்கு நல்ல கையெழுத்தில் கதைகளை அனுப்பவென்றே என்னை அவருடன் தங்க வைத்து கொண்டார். எனக்குத் தெரிந்தவரை சொந்தமென எதுவும் இல்லை, பணப்பற்று இல்லை, சற்றே அளவுக்கு மீறிய கிறுக்குத்தனம், அனைத்திலும் வித்தியாசமான பார்வை, பொதுவான எழுத்தாள பிம்பம்தான். மொத்தமாக சொல்வதானால் இந்த உலகத்தில் வாழ வழியில்லாமல் அலையும் உயிரி பட்டியலில் நிச்சயம் இடம் உண்டு.

தூரத்தில் யாரோ படுத்திருந்தது தெரிந்தது, நல்ல குடிகாரராக இருக்க வேண்டும், ஒய்யாரமாக படுத்து ஐம்பூதஙகளையும் வறுத்து எடுத்துக் கொண்டிருந்தார். இவரிடம் எதாச்சும் கேட்டால் கதைக் கரு கிடைக்கலாமென அவரிடம் சென்றேன்.

“யாருய்யா அது, நடுவீதில உருளுரது”.

“கொண்டு போய் உன் வீட்டுல விடுடா, அங்க உருளுர “.

வார்த்தைகள் தெளிவாக இருக்கிறது, போதை தலைக்கேறவில்லை, அப்புறம் ஏன் விழுந்திருக்கிறார்.

காலில் பலமான காயங்கள் இருந்தது, தரையில் தேய்த்தெடுத்தது போலிருந்தது, வீங்கி ஈ மொய்த்தபடி, அதை அவ்வப்போது விரட்டி கொண்டிருந்தார்.

“எப்படியா, அடிப்பட்டது” என்றேன்

வானத்தைப் பார்த்து, “டோய் உன்ன விட மாட்டன்டா “.

நிமிர்ந்து வானத்தைப் பார்த்தேன், மூன்று விண்மீன்கள் நானில்லை நானில்லை என தலையசைத்தன.

“யோவ் கேக்குறல சொல்லுயா”.

“யென்ன என்னடா நெனச்ச, நா யாரு தெரியுமா”.

பார்த்தாலே தெரியுது, எதாச்சும் தேரும் பார்த்தா ம்க்கும் .

“யோவ் எழுந்து வீட்டுக்காச்சும் போய் தொல “.

“வூடா, அவள போய் எவன் பாப்பான்”.

சரிதான், குடும்பஸ்தன் வீட்டுல அவன் மனைவியாவது நிம்மதியா இருக்கட்டும், என்று நினைத்தவாறே நகர்ந்தேன்.

தெருமுனையை தாண்டியபோது குடியானவன் புலம்பல் கேட்டது.

“வேணுனே இடிச்சுப் போனா விடுவனா, டோய் தாடிக்காரா”

தாடிக்காரனா, பாதி ஊரு அக்ரகாரம் தா, கிறுக்கு ஊருக்குள்ள வந்திருக்குமோ. தப்பித்து ஓடும் போது இவனைத் தெரியாமல் இடித்து தள்ளியிருப்பாரோ.

வீட்டிற்கு வந்து மேசையில் அமர்ந்து எழுதத் துவங்கினேன், புரியாத மாறி எதாச்சும் எழுதுவோம், செந்தோலினிலா யாரு படிக்குறா.

எப்போது தூங்கினேன் என தெரியவில்லை, பாயில் படுத்திருந்தேன், மேசையில் தாடி அமர்ந்திருந்தான், எழுதிக் கொண்டு, அறை எங்கும் மாமிச வீச்சம் அடித்தது, மூக்கை ஊடுருவி தொண்டையில் சிக்கியது, எழுந்து மேசையிடம் சென்றால் என்ன என தோன்றியது, நரம்புகளை அசைத்து அசைத்து உடலை லேசாக்கி எழுந்தேன், காலில் ஏதோ பிசுப்பிசுப்பாக ஒட்டியது, இருளில் எதுவும் தெரியவில்லை, காலை மடக்கி பார்த்தேன், மேசை மீதிருந்த லாண்டர் விளக்கின் ஒளி பரவிய லேசான காற்றின் குளிரில் காலின் மீது பரவியிருந்த திரவம் இறுக ஆரம்பித்திருந்தது, ஆழ்ந்த கருஞ்சிவப்பு, ரத்தம். மூச்சின் வெம்மை ஏறியது. மேசை அருகே சென்றேன், கத்தியின் முனையிலிருந்து ரத்தம் வழிந்து மேசையில் இருந்து கீழே சொட்டி கொண்டிருந்தது,

நீலப்பேனாவால் வரையப்பட்டிருந்த அந்த கத்தி, தாடி அதையே பார்த்து கொண்டிருந்தார். அதன் அருகே

” நீ துடிக்கும் கடைசி நொடிகளை காண்பேனா
என் கண்கள் உலரும் வரை சிமிட்டாமல்
ஒற்றை கையசைவில், ஒங்கிய ஒரு தள்ளலில்
தீர்ந்து விடலாம் உன் வாழ்வும் என் தாழ்வும்”

பணத்தாசை பற்றிய கவிதை, ரத்தத்தால் தேய்த்து கடைசி வரி எழுதப்பட்டிருந்தது.

லேசான நடுக்கத்தோடு எழுந்தேன், உடல் முழுதும் வியர்த்திருந்தது, லாண்டர் விளக்கின் ஒளியில் கண்கள் கூசியது, மேசையில் நான்தான் அமர்ந்திருக்கிறேன், கதையை முடித்து விட்டு அப்படியே தூங்கி விட்டிருக்கிறேன், முகம் துடைத்துக் கொண்டு பாயை விரித்து படுத்து உறங்கிவிட்டேன்.
தாடி ஆறு நாள் கழித்து வந்தார். புதிய வெள்ளைச் சட்டை, தாடியை மழித்திருந்தார், கையில் பெரிய தூணிப்பை வைத்திருந்தார்.

“என்ன தம்பி கதைய நீயே குடுத்துட்டியா, எங்க காட்டு நா பாக்குர”

“மேஜல இருக்கு, பைல என்ன”

“தூணிடா, உனக்கும் இருக்கு ஒரு சட்ட, வெள்ள போடுவல” என்றபடி உள்ளே சென்றார்.

‘சுற்றல் கணம்’ கதையின் பெயர்.

‘பெரியவரைத் தள்ளி விட்டவன் தாடியை நீவிய படி வெளியேறினான்’, கடைசி வரியைப் படித்தபின் தாடி வெளியே வந்தார் .

நான் ரத்தம் படிந்த கத்தியை பார்த்து கொண்டிருந்தேன்.

‘உன் வாழ்வும் என் தாழ்வும்’. மனதில் சொல்லிக்கொண்டேன், எழுதப்படாத வரி ஆனால் இதைவிட பொருத்தமாக யாரும் எழுதிவிட முடியாது. ரத்தம் வீச்சம் நிறைந்த என் கனவின் படைப்பு.
“நல்லா ஜரூரா இருக்குடா, நல்ல எழுதுர, நான் போய் நம்ம ரவிதாசன் வீட எட்டிப் பாத்திட்டு வந்திடுர, நல்ல மனுசன், தவறிட்டானு கேள்வி பட்ட”, படிகளில் தாடி இறங்கி சென்றார்.

வீட்டினுள் நுழைந்து கதவைச் சாத்தி கொண்டேன், மேசை மீது இருந்த துணிப்பையை எடுத்து கீழே வைத்தேன், நான் மட்டும் பயன்படுத்தும் வலது டிராயரை சாவியைக் கொண்டு திறந்தேன், என் சட்டைகளை எடுத்து வெளியே வைத்தேன், கருப்பு முடிக்கற்றைகளான ஒட்டு தாடியை எடுத்து வெளியே வைத்தேன், நான் கண் சிமிட்டாமல் பார்க்க பார்க்க பணக்கட்டுகள் அசையாமல் விறைந்துக் கிடந்தன. ரத்தம் உறிஞ்சிக் குடித்த செந்தோல் பணக்கட்டுகள்.

ஆதவனின் ‘கறுப்பு அம்பா கதை’ குறித்து வெ. சுரேஷ்

வெ. சுரேஷ்

90களின் மத்தியில் பாலகுமாரன்  ஒரு நேர்காணலில் சொன்னார், பணியிடமும் பணியும் குடும்ப வாழ்க்கையில் ஏற்படுத்தும் விளைவுகளை முதன்முதலாக தமிழின் புனைகதை பரப்புக்குள் கொண்டு வந்த எழுத்தாளன் தான்தான் என்று. மெர்க்குரிப்பூக்கள், இரும்புக் குதிரைகள், தாயுமானவன், முதலிய   படைப்புகளை வைத்து  அவர் அப்படிப் பேசியிருக்கக்கூடும். ஆனால், தமிழின் தீவிர இலக்கிய பரப்பினில் பாலகுமாரனுக்கு முன்பே அவை பதிவாகியுள்ளன. முக்கியமாக, பணிச்சூழல் நம் மீது செலுத்தும் தாக்கத்தை அதிகம் தன் சிறுகதைகளில் பதிவு செய்தவர் ஆதவன்.

வாழ்க்கை வேறு, அந்த வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான பொருள் மட்டுமே ஈட்டும் பணி, அது சார்ந்த சூழிடம் வேறு என்ற நிலை இந்தியாவில் 20ம் நூற்றாண்டிலேயே பரவலாக காணப்படத் துவங்கிவிட்டது. பணிச்சூழல் ஒரு’ குடும்பத்தில் கணவன், மனைவி, குழந்தைகள் என்று ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது குறித்து ஆதவனின் பல சிறுகதைகள் பேசினாலும், மிகச் சிறப்பான ஒன்றாக நான் கருதுவது, அவரது ‘கருப்பு அம்பா கதை’.

பகலெல்லாம் தன்  பிழைப்புக்காக, ஒரு நிறுவனத்திடம் தன் உழைப்பை விற்று, ஏறத்தாழ அடிமைப் பணி செய்து, தன் சுயமிழந்து, பல்வேறு அநியாயங்களை கண்டும் காணாமலும் வாழ்க்கை நடத்தும் கோடிக்கணக்கான நடுத்தர வர்க்க பிரதிநிதியான சங்கரனுக்கு இரவில் எப்போதும் ஒரு முக்கியமான வேலை, தன்  மகள் மாலுவுக்கு கதை சொல்லித் தூங்க வைப்பது. அந்தக் கதைகள் எப்போதும் அவர்களது வீட்டைச் சுற்றியுள்ள மாடுகள், மாலுவின் மழலை பாஷையில், ‘அம்பா’ பற்றியதுதான். அதுவும், கறுப்பு அம்பாதான், அதாவது, எருமை மாடுகள்தான் விசேஷம்.

கதை நடக்கும் நாளிலும் அதே மாதிரி ஒரு கறுப்பு அம்பா கதைதான் சொல்கிறான் சங்கரன். அன்றைக்கு கருப்பு அம்பாவுக்கு ஜலதோஷம். ஏனென்றால், சங்கரனுக்கு ஜலதோஷம். அதற்காக, டாக்டரிடம் போகிறது கருப்பு அம்பா. அங்கே ஏகப்பட்ட கூட்டம். டாக்டரின் வீட்டில் காத்திருக்கும் மிருகங்களின் விவரணையில்தான் கதை விரிகிறது., ஸலாம் போட்டே தும்பிக்கை இழந்த யானை, கிளைக்கு கிளை தாவி, கை சுளுக்கிக் கொண்ட குரங்கு, கத்திக் கத்தி தொண்டையைப் புண்ணாக்கிக் கொண்ட கழுதை, எவ்வளவு சுமை என்றாலும் வாயைத் திறக்காமல் சுமந்து கழுத்தில் புண் வந்த வண்டி மாடு,, எதையும் செய்யாமலேயே சுற்றிச் சுற்றி வந்ததனால் கால் வலி கண்டு வரிசையில் எப்படியோ எல்லோரையும் விட முன்னால் சென்று அமர்ந்திருக்கும் நரி, என்று பல விலங்குகள் வரிசையில் காத்திருக்கின்றன, அவர்களுடன் கறுப்பு அம்பாவும் சேர்ந்து கொள்கிறது. வரிசை மிகவும் மெதுவாக நகர்கிறது. புதிதாக வந்த மிருகங்களெல்லாம் எப்படியோ, கம்பவுண்டரைத் தாஜா செய்து உள்ளே போய்விட, கறுப்பு அம்பா அதே இடத்தில் உட்கார்ந்திருக்கிறது. காலெல்லாம் ஒரே வலி. அந்த சமயத்தில் உள்ளே வரும் குள்ள நரி ஒன்று கம்பவுண்டருக்கு காட்பரீஸ்  சாக்லேட்  கொடுத்து வரிசையில் முன்னே செல்லவும் கறுப்பு அம்பாவுக்கு கோபம் வந்து விடுகிறது. ஒரே முட்டு,  நரியை. நரி அலற, சங்கரனுக்கு சுய நினைவு வருகிறது. குழந்தையின் புரிதல் திறனை தாண்டிப் போய்விட்டதோ கதை என்று மாலுவைப் பார்க்கிறான். அவள் அயர்ந்து தூங்கிவிட்டிருக்கிறாள். கறுப்பு அம்பா க்யுவில் சேர்ந்தபோதே தூங்கியிருக்க வேண்டும்.

சங்கரனுக்கு சந்தேகம் இந்தக் கதையை தான் யாருக்கு சொன்னோம் என்பதில். விலங்குகளின் வரிசையெல்லாமே, அவனது அன்றாட வாழ்வில் தினமும் சந்திக்கும் மனிதர்கள்தாமா? பொறுமையாக தன் முறை வரட்டும் என்று உட்கார்ந்திருப்பது கறுப்பு அம்பாவா அல்லது தானேதானா? சுய இரக்கத்தோடு படுத்திருக்கிறான் சங்கரன். இங்கே இந்த கதை முடிந்திருந்தால், அவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது. அப்போது கையில் பால் டம்ளருடன் வரும் சங்கரனின் மனைவி விஜி, குழந்தைக்கு பகலில் தான் சொல்லும் வெள்ளை அம்பா கதை கூறுவதில்தான் இந்தக் கதை  முழுமை அடைகிறது.

அவளின் கதையில், வெள்ளை அம்பாவுக்கு நாள் பூராவும் இடுப்பொடிய வேலைகள், அதற்குமேல் அதிலேயே புகார்கள், குற்றம் குறைகள். ஆனால் கறுப்பு அம்பாவுக்கு இதொன்றும் தெரியாது. நாளெல்லாம், ஜாலியாக வெளியில் போகும், வரும். வீட்டிலே இருக்கும்போதெல்லாம் ஹாயாக எப்போதும் படுத்துக் கொண்டிருக்கும்.

Alvin Toffler தனது Third Wave எனும் நூலில், தொழிற்புரட்சிக்குப்பின் தோன்றிய நகர வாழ்க்கை, காலையிலிருந்து மாலைவரை, ஆண்களை தொழிற்கூடம்/ அலுவலகம், படிக்கும் வயது வந்த சிறுவர் சிறுமிகளை பள்ளிக்கூடம், பெண்களை வீடு/ தொழிற்கூடம்/ அலுவலகம் என்று பிரித்து அனுப்பியதன் விளைவுகளைக் குறிப்பிடுகிறார். அது மட்டுமல்லாமல், இன்றைய உலகின் மிக இயல்பான ஒரு நிகழ்வு அது என்று அவர்களை நம்பச்செய்து, அதை மீற முடியாத நடைமுறை யதார்த்தமாக்கி, அதற்கான உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் நெறிகளையும் உருவாக்கித் தந்து, அதை என்றுமிருந்த நிலைபெற்ற ஒன்றாக நம்பவைப்பதில் வெற்றிகொண்டது என்கிறார் அவர். அதையும் அதைச் சார்ந்த இன்னும் சில விஷயங்களையும் அவர் Indust-reality என்ற சொல்லினால் குறிக்கிறார். அந்த Indust-reality என்ற சொல்லுக்கு இலக்கணம் போல அமைந்த ஒன்றுதான், கறுப்பு அம்பா கதை, அந்தப் பெரிய நிறுவனங்களுக்கு முன் சிறுத்துப் போய் நியாய அநியாயங்களை எதிர்க்கவோ, அடையாளம் காட்டவோ துணிவின்றி,தன உரிமைகளையும் கூட அதட்டிக் கேட்டாக தெரியாமல், தன் குடும்பம் எனும் சிறு  வளைக்குள்ளேயே ஒடுங்கி, புலம்பும் ஒரு ஆணின் மன அவசங்களைக் காட்டுகிறது. , அதே சமயம், மற்றொரு   கோணமாக, அவன் எந்த அளவுக்கு அதே வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தன் சக ஜீவனான மனைவியின் உலகைப்பற்றி அறியாமலேயே இருக்கிறான் என்பதையும் அனாயாசமாகக் காட்டுகிறது.

எளிய குரூரங்கள் – தி. வேல்முருகனின் ‘முத்துப்பிள்ளை’

மாயக்கூத்தன்

ஒரு வெள்ளிக்கிழமையன்று பள்ளி விடும் சமயம் வாரக்கடைசியை எப்படிக் கழிக்கலாம் என்று ஒரு சிறுவன் யோசிப்பதில் தொடங்கும் இந்தக் கதை, வெவ்வேறு மனிதர்களைக் கடந்து சென்று நாம் சாதாரணமாக எண்ண முடியாத ஒரு முடிவை அடைகிறது.

தி வேல்முருகனுடைய கதைகளில் இருக்கும் ஒரிஜினாலிட்டி அவற்றை மற்ற எல்லோரிடமிருதும் வேறுபட்டு நிற்க வைக்கிறது. இந்த மனிதர்களை வேல்முருகன் அன்றி வேறொருவர் நமக்கு அறிமுகப்படுத்த முடியாது. அதுவும், ஒரே கதையில் வரும் வெவ்வேறு மனிதர்கள், ஒன்றுபடும் விதமும் வேறுபடும் விதமும் சிந்திப்பவர்களுக்கு பல திறப்புகளைத் தரக்கூடும். அவர் அப்படி நினைத்து, தன் கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார் என்று நீங்கள் சொல்லக்கூடும். எனக்கு அப்படித் தோன்றவில்லை. என் எண்ணம் தவறென்றாலும் பிரச்சனையில்லை. அது அவருடைய கதைகள் தரும் உற்சாகத்தையும், அளிக்கும் தாக்கத்தையும் எந்த விதத்திலும் குறைத்துவிடுவதில்லை.

இங்கே ஆயாவும் பவுனும். இரண்டு பேருக்கும் ஒரு தலைமுறைக்கான இடைவெளி இருந்தாலும் பவுனின் இன்றைய நிலையும், ஆயாவின் முந்தைய நிலையும் ஒன்று- ஆயாவை குழந்தைகளையும் விட்டுவிட்டு அவள் கணவன் போனபின் அவள் குடும்பத்தைக் கரை சேர்க்கிறாள், பவுனு பொறுப்பில்லாத கணவனுடன் இருந்தாலும், குழந்தை இல்லாத குறைக்காக வருந்துகிறாள். இருவரும் வெவ்வேறு விதமாக தங்கள் நிலையைக் கடக்கிறார்கள். பவுனை நம்முடைய காலத்து மனுஷி என்று வைத்துக் கொண்டால், நமக்குள்ளிருந்து எழும் குரலை நம்பி மேலேறி வருவதை விட, இன்றைக்கு நம்முடைய சொந்த வாழ்க்கைக்கு மற்றவர்களின் அங்கீகாரம் நமக்கு அவசியமாகிவிட்டதோ என்று தோன்றுகிறது. ’உன் வயதில் நானும் பிள்ளைகளை வைத்துக் கொண்டு மேலே வரவில்லையா’ என்று கேட்கும் ஆயாவுக்கு எனக்குப் பிள்ளைகள் இல்லை என்று பவுன் சொல்கிறாள். மனிதர்களுக்கு அவர்களைச் சார்ந்து யாரும் இல்லை எனும்போது, வரும் வேகத்தை என்னவென்று சொல்வது? இல்லை, ஒருவனோ ஒருத்தியோ தனக்காகவே மட்டுமே தன்னுடைய வாழ்க்கையை முன்னெடுத்துக் கொண்டு செல்வது அத்தனை கடினமானதா?

என்னைப் போல தேவையில்லாததை எல்லாம் எழுதிவிடும் கெட்ட பழக்கம் வேல்முருகனிடம் இல்லை. கதைக்கு என்ன தேவையோ அவற்றை மட்டுமே எழுதும் ராணுவ ஒழுங்கு அவரிடம் இருக்கிறது. ஒவ்வொரு வரியும் கதையை முன்னே எடுத்துக் கொண்டு போவதை இந்தக் கதையில் காணலாம்.

அவன் (அந்தச் சிறுவன்) தன்னுடைய வாரக்கடைசி இப்படிப் போகும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆயாவுக்கும் பவுனுக்கும் நடக்கும் சந்திப்பும் அதன் தொடர்ச்சியும், மாமா வளர்க்கும் ஆட்டுக்கு விழும் அடியும் கூட அவை நிகழும் நொடிக்கு முன்பு வரை எதிர்பாராதவை. தன் பாட்டியுடன் அவள் வீட்டுக்கு வார இறுதியில் செல்லும் சிறுவன் அங்கு தன் மாமாவுடன் ஊர் சுற்றுகிறான். அவர் ஆடு வளர்க்கிறார், அது இவன் கொடுக்கும் புல்லைத் தின்றதும் முட்ட வருகிறது- தான் வளர்க்கும் ஆட்டுக்கு அவர் சண்டை பழக்கிக் கொண்டிருக்கிறார். அடுத்த நாள் ஆடுகளுக்கு இடையில் நடக்கும் சண்டையில் வெளிப்படும் வன்மம் இயற்கையாகவே அவற்றுக்கு உரியதா அல்லது அதுவும் மனிதர்களால் பழக்கப்பட்டதா என்றே சந்தேகம் வருகிறது. மனிதனையும் மிருகத்தையும் எது பிரிக்கின்றது என்று யோசித்தால் மனிதனின் காரணமற்ற, ஆனால் திட்டமிட்ட வன்முறையும், தன்னிச்சையாய் அவனுள் சுரக்கும் கருணையும்தான் என்று தோன்றுகிறது. வேல்முருகனுடைய எழுத்து இந்த திருப்பங்களை சிந்தனையின் உளைச்சல் இல்லாமல் மிக இயல்பாகவும் எளிதாகவும் கொண்டு சேர்க்கின்றது.

பொதுவாகவே வேல்முருகன் எழுதும் கதைகளில் பலவற்றின் முடிவு ஒரு எளிதான செண்டிமெண்டாலிடியை நோக்கிச் செல்வதைப் பார்க்க முடியும். அது இந்தக் கதையிலும் இருக்கிறது. ஆனால் அதற்கு வேல்முருகனைக் குற்றம் சொல்ல முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது. அவர் காணும் மனிதர்கள் இயல்பாகவே மிக எளிதில் நெகிழ்ந்து விடுபவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் கோபமும் குரூரமும்கூட கனிவு நிறைந்த ஒரு கணத்தை நோக்கிக் காத்திருப்பவை.

முத்துப்பிள்ளை, தி. வேல்முருகன்

பச்சை வண்ண சீப்பி

ஸ்ரீதர் நாராயணன்

புள்ளிகள் மேவிய வளைய வடிவான
பச்சை வண்ண சீப்பி ஒன்றை
பார்த்தபடியே இருக்கிறார்.
முகம் என்னவோ உணர்ச்சி மிகுதியில்
விண்டுவிடுவது போல் தளும்பி நிற்கிறது

ஒரு குழந்தையின் மோகன சிரிப்பையோ
ஒரு பிரிவின் துயரையோ
உலர்ந்த சருகுகள் முறியும் ஓசையையோ
முனை மழுங்கிய சீப்பி கொண்டு
ஒருவரின் குரல்வளையை நெறிக்கும் முயற்சியையோ
அவர் எண்ணிக் கொண்டிருக்கலாம்.

விழியகற்றி என்னைப்
நோக்கி திரும்பும்போது
அந்த சீப்பிப் பற்றிய எந்த தடயமுமற்ற
முற்றிலும் வேறொரு சங்கதி பற்றி
பேச்செடுக்க தயாராகிறேன்.