எழுத்து

வேலை இல்லா பட்டதாரி

ஜிஃப்ரி ஹாஸன்

வேலையில்லா  பட்டதாரியாக வாழ்வைத் தொடங்கி  நடத்திச் செல்வது என்று அப்துல் காதர் முடிவெடுத்தபோது அது இவ்வளவு கடினமானதாக இருக்கும் என அவன் எண்ணி இருக்கவில்லை. அரசாங்கத்திலிருந்தவர்கள் எல்லா ஊழல்களையும் புரிந்து தனது குடும்பத்தின் சொத்துகளைப் பெருக்குவதில் காட்டும் அக்கறையை வேலை இல்லாத பட்டதாரிகளின் தொழிற் பிரச்சினையில் எடுத்துக் கொள்வதாக இல்லை. அதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவனாகத்தான் அப்துல் காதரும் இருந்தான்.  வேலை இல்லா பட்டதாரியாக வாழ்வதில் நிரம்பி இருந்த கொடுமைகளின் கனதி அவனை உயிருடன் உளவியல் சித்ரவதை செய்வதாக இருந்தது.

  அப்துல் காதருக்கு தன்னை ஒரு வேலை இல்லா பட்டதாரியாக உணர்த்தும் மகத்தான பணியை முதன் முதலில் அவனது தந்தைதான் தொடக்கி வைத்தார். ஆரம்பத்தில் குறிப்பாலும் பின்னர்  நேரடியாகவும் அவனது தந்தை தனது பணியை சிறப்பாகச் செய்து முடித்து விட்டிருந்தார். அதை அவனது தந்தை தன் வாயாலேயே சொல்லுமளவுக்கு இப்படிப் பொறுப்பற்றவனாக நடந்து விட்டோமே என்று அப்துல் காதருக்கும் ஒரு சிறிய வருத்தம் இருக்கத்தான் செய்தது.

வேலை இல்லா பட்டதாரி என்ற முதல் கிண்டலும் எதிர்ப்பும் இப்படி தன் வீட்டுக்குள்ளிருந்தே வெடிக்கும் என்பதை அப்துல் காதர் கனவிலும் நினைத்திருக்க மாட்டான். ஓசிச் சாப்பாடு, ஓசி ஃபேன் படுக்கை, அவ்வப்போது கொழும்புக்கு ஓசிப் பயணம், தம்பி கெட்ட கேட்டுக்கு ஓசிப் பணத்தில் புத்தகக் கொள்வனவு என ஓசி வாழ்வு தறிகெட்டு ஓடத் தொடங்கியபோது தந்தைக்கும் வேறு வழி இல்லாமல் போய்விட்டது. அப்துல் காதருக்கு இந்த ஓசி வாழ்வின் இன்பங்கள் தனது அன்றாட வாழ்வின் துன்பங்கள் என்பதை பாமரத்தனமாக உணர்த்த வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்

அப்துல் காதர் பட்டதாரியாக வெளியேறிய மறுதினமே அவன் ஒரு அரசாங்க உத்தியோகத்தனாக இருப்பான் என்பதுதான் அவனது தந்தையின் கணிப்பாக இருந்தது. அது பொய்த்துப் போன போது அப்துல்காதர் மீது அவருக்கிருந்த நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.

அப்துல் காதருக்குள்ளும் ஒரு வகையான கலகக்காரன் இருந்து கொண்டுதான் இருக்கிறான். சூடு, சொரணையில் உச்சக்கட்டத்தில் இருப்பவன். தன்னை அவமதிப்பவன் எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருந்தாலும் அவனது தொடர்புகளைச் சாகும் வரை துண்டிக்கும் போர்க் குணம் உள்ள அப்துல் காதருக்கு இந்த அவமானம் வீட்டுக்குள்ளிருந்து வெடித்தது பெரிய சங்கடமாகப் போய்விட்டது.

வேலை கிடைக்கும்வரை அப்துல் காதர் தனது தந்தையின் பரம்பரைத் தொழிலுக்குத் திரும்பி விடுவோமா என்றும் யோசித்தான். செங்கல்வாடி, சேனைப் பயிர்ச் செய்கை இதுதான் அவனது பரம்பரைத் தொழில். தனது பரம்பரைத் தொழிலை அப்துல் காதர் செய்யாமல் விட்டதற்குக் காரணம் அவனது தாய் அவனை அப்படியான தொழில்களைச் செய்யாமல் தடுத்ததுதான். ஆனாலும் அப்துல் காதருக்கு சிறிய வயதிலிருந்தே இந்தத் தொழில்களில் பரிச்சயம் இருந்ததால் அவன் அதை சிரமமானதாக உணரவில்லை.

‘டேய் உன்னட அங்க படிச்சவனுகளெல்லாம் வேல எடுத்துட்டானுகளா..?’ அப்துல் காதரின் தந்தை அவ்வப்போது பொறுமை இழந்து எத்தனை தடவை இப்படிக் கேட்டிருப்பார் என்பதை அப்துல் காதருக்கு இப்போது சரியாக கணக்கிட்டுக் கூற முடியாதுள்ளது. அநேகமாக அவரும் அவனும் வீட்டில் சந்திக்கக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் இப்படித்தான் உரையாடல் தொடங்கும். யாருக்கும் வேலை கிடைக்கவில்லை என்பதை புள்ளி விபரங்களோடு தந்தைக்கு அப்துல் காதர் தெளிவுபடுத்துவான்.

ஊருக்குள்ளும் தெரிந்தவர்கள் காணும் போதுஎன்ன செய்றிங்க?’ எனக்கேட்டு தலையில் ஒரு பாறாங்கல்லைப் போட்டுக் கொண்டே இருந்தார்கள். இதனால் ஊருக்குள்ளும் தலை காட்டுவதை இயன்றளவு குறைக்கத் தொடங்கினான் அப்துல் காதர். ஆனால் வீட்டைச் சமாளிக்கும் விசயத்தில்தான் அப்துல் காதர் திணறிக்கொண்டிருந்தான்.  இதனால் தனது செலவுகளுக்கான பணத்தை இனித் தந்தையிடமிருந்து பெற்றுக் கொள்வதில்லை என ஒரு நாள் உணர்ச்சிவசப்பட்டு அப்துல் காதர் ஒரு முடிவு எடுத்து விட்டிருந்தான். அது அவனுக்குள்ளிருந்த அந்தக் கலகக்காரனின் திருவிளையாடல். அந்தக் கலகக்காரன் சூடு சொரணையில் உச்சக்கட்டதில் இருப்பவன். எப்பேர்ப்பட்ட கொம்பனுக்கும் வளைந்து கொடுக்காதவன்.

தனது செலவுகளுக்காக உம்மா இரகசியமாகத் தரும் பணத்தையும் பெற்றுக் கொள்வதில்லை என்ற முடிவும் அதன் ஒரு பகுதியாக இருந்தது. அதனால் சிறு  தொழில் நடவடிக்கை ஒன்றில் ஈடுபடுவது என அப்துல் காதர் முடிவெடுத்தான். அவனது ஊரிலுள்ள அப்துல் காதரின் நண்பன் ஒருவன், சிறிது காலம் அப்துல் காதருடன் ஒன்றாகப் படித்தவன். ஆசிரியர் சற்றும் எதிர்பாராத தருணமொன்றில் தனது புத்தகப் பையால் அவரின் மண்டையில் அடித்து விட்டு பாடசாலையை விட்டும் தப்பிச் சென்ற தனது பால்ய நண்பன் தற்போது சொந்தத் தோணி, வலை வைத்து ஆற்றில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவதை அப்துல் காதர் அறிந்திருந்தான்இப்போது அப்துல் காதருக்கு தனது பால்ய நண்பனை விட்டால் வேறு யாரும் உதவுபவர் இருப்பதாகவும் தெரியவில்லை. இது மாதிரியான தொழில்களில் அப்துல் காதருக்கு பப்ளிக்காக ஈடுபடுவதற்கு அவனது பட்டதாரிகௌரவமும்சற்றுத் தடையாக இருந்தது.

எனினும் தனது பால்ய நண்பனுடன் இணைந்து இரவு நேர மீன் பிடியில் ஈடுபடுவது என்ற உறுதியுடன் இருந்தான். தனது பால்ய நண்பனைச் சந்தித்து அதற்கான அனுமதியையும் அப்துல் காதர் பெற்றுக் கொண்டான். அந்தகெப்பில் பால்ய நண்பன்பார்த்தியா மச்சான் படிச்சி என்னடா கிழிக்கிற.. என்றும் கர்விக் கொண்டான். தனது இதுவரை கால ஆதங்கத்தையும் இறக்கி வைத்து விட்டதான ஆசுவாசம் அவன் முகத்தில் அப்போது தென்பட்டுக் கொண்டிருந்தது. அப்துல் காதரை சந்தர்ப்பம் பார்த்து அடித்து விட்ட திருப்தி அவன் முகத்தில் படர்ந்ததையும் அப்துல் காதர் கவனிக்கத் தவறவில்லை

அப்துல் காதரின் ஊருடன் அண்டி ஓடிய  இலங்கையின் புகழ்பெற்ற ஆறான மாதுரு ஓய ஆற்றில் இரவு ஒன்பது மணியளவில் இறங்கி தோணியில் மீன் பிடிப்பதுதான் இப்போது அப்துல் காதரின் தொழில். இதற்காக இரண்டு நாட்கள் பால்ய நண்பன் அப்துல் காதருக்கு பயிற்சி வழங்கினான். பயிற்சி நெறி முடிவில் அப்துல் காதர் துடுப்பு வலிப்பது பால்ய நண்பன் வலை வைத்து மீன் பிடிப்பது என அப்துல் காதரின் வாழ்வுப் படகு நகரத் தொடங்கியது.

ஆனால் வீட்டில் இந்த தொழில் நடவடிக்கை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. வாழைச்சேனையில் ரூம் எடுத்து எக்ஸாம் ஒன்றுக்கு அப்துல் காதர் படித்து வருவதாக வீட்டில் ஒரு நம்பிக்கை பொதுவாக நிலவி வந்தது. இந்த இரகசியத்தை பால்ய நண்பனும் தனது உயிருள்ளவரை காப்பாற்றுவதாக அப்துல் காதரின் தலையில் அடித்து சத்தியம் செய்திருந்தான்.

இப்போது அப்துல் காதருக்கு சிறிய தொகை பணம் கிடைத்து வந்தது. அதைக்கொண்டு வீட்டிலும் சிறிய வேலைகள் செய்து வந்தான். ஆனால் அதற்கு எந்த மதிப்பும் கிடைக்கவில்லை. வாப்பாவின் முகம் இன்னும் விடியவில்லை. அவரைப் பொறுத்தவரை அப்துல் காதருக்கு ஒரு அரசாங்க வேலை கிடைக்க வேண்டும். அது வரைக்கும் அப்துல் காதர் ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் உழைத்தாலும் அவனுக்கு மதிப்புக் கிடைக்காது. இந்த மடத்தனமான போக்கினால் அப்துல் காதருக்குள்ளிருக்கும் கலகக்காரன் ஆத்திரத்தின் உச்சகட்டத்துக்குப் போய் திரும்பி வந்தான். அந்த கலகக் காரன் சூடு, சொரணையில் உச்ச கட்டத்தில் இருப்பவன். எந்தக் கொம்பனுக்கும் வளைந்து கொடுக்காதவன்.

மீன் பிடி தொழிலில் கிடைக்கும் பணம் அப்துல்காதரின் கையில் புத்தகங்களாக மாறிக்கொண்டிருந்தது. அதற்காக அவனுக்கு மாதம் ஒருமுறை கொழும்புப் பயணம் மேற்கொள்ள வேண்டி இருந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் அவனது கொழும்புப் பயணத்திற்காக தனது பால்ய நண்பனிடம் 2 நாட்களுக்கு முன்னமே விடுமுறையை அறிவிக்க வேண்டி இருந்ததுதான். இத்தகையை சந்தர்ப்பங்களில்தான் அப்துல்காதர் தற்கொலை பற்றிச் சிந்தித்ததுண்டு. மார்க்கம் மட்டும் அதை தடை செய்யாமல் இருந்திருந்தால் அப்துல் காதர் எப்போதோ ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டிருப்பான்.

அப்துல்காதர், தான் கொழும்புக்குச் செல்வது புத்தகம் வாங்குவதற்காகத்தான் என்பதை பால்ய நண்பனுக்கு ஒரு போதும் சொன்னதில்லை. சொல்லியிருந்தால் சில வேளை தற்கொலைக்கு பதிலாக கொலையே நடந்திருக்கலாம். அதாவது  பால்ய நண்பன் அப்துல்காதரை ஆத்திரம் தாங்க முடியாமல் அடித்தே கொன்றிருக்ககூடும். இந்த அச்சம்தான் அப்துல் காதரை அவனிடம் சொல்லவிடாமல் தடுத்தது.

சிலவேளைகளில் பால்ய நண்பன் தன்னை ஒரு முதலாளி போன்று பாவனை செய்ய நினைக்கிறபோதும் அப்துல் காதருக்குள்ளிருக்கும் கலகக்காரனைக் கவனத்திற் கொண்டு அந்த எண்ணத்தை நடைமுறைப்படுத்துவதில்லை. ஏனெனில் அந்தக் கலகக் காரன் சூடு, சொரணையில் உச்ச கட்டத்தில் இருப்பவன். எந்தக் கொம்பனுக்கும் வளைந்து கொடுக்காதவன்.

000

ஆற்றின் முதுகு நிலவொளியில் பளபளத்தது. பால்ய நண்பன் நிலாக்காலங்களில் வீச்சுக்கு வருவதில்லை. ஆனால் இன்று வந்திருந்தான். இன்று அவன் வந்தது மீன் பிடிக்க அல்ல என்பதை அப்துல்காதர் நடு ஆற்றின் முதுகில் மிதந்த தோணியில் இருந்தபடி உணர்ந்தான். மீன் பிடிக்கும்போது ஆற்றிலும் வலையிலுமே பால்ய நண்பனின் கண்கள் நிலை குத்தி நிற்பதையும் மீன்கள் அகப்படாத சந்தர்ப்பங்களில் சவலால் ஆற்றின் முதுகில் ஓங்கி அடிப்பதுமே பால்ய நண்பனின் வழக்கமாக இருந்தது. இன்று எந்த மீனும் அகப்படாவிட்டாலும் எந்த சலனங்களுமின்றி ஆற்றின் அமைதியை ஒத்த ஒருவகை அமைதி பால்ய நண்பனில் ஊடுறுவி இருந்ததை அப்துல் காதர் நோட்டமிட்டான்.

ஆற்றின் முதுகில் பட்டுத் தெறித்த நிலவொளியில் அப்துல் காதரின் முகத்தை ஏறிட்ட படி பால்ய நண்பன் ஒரு முக்கிய விடயம் குறித்து அப்துல் காதருடன் பேச்சுத் தொடுத்தான்.

“மச்சான், என்ட தங்கச்சி வெளிநாட்டிலிருந்து வந்திருக்காள்றா..முதல் இருந்தத்த விடவும் இப்ப அவள் நல்ல அழகுடா மச்சான், உன்ன அவளுக்கு கலியாணம் பேசிப் பார்க்கச் சொல்லி உம்மா சொன்னாடா..”

அப்துல் காதருக்கு அந்தக் கதை இலைக்கறிச் சட்டியில் இடி விழுந்ததைப் போல இருந்தது. அப்துல் காதர் தனது வாழ்க்கைத் துணைவி படித்தவளாகவும் அவனது கனவுகளுக்கு இயைந்து கொடுப்பவளாகவும் இருக்க வேண்டும் என்பதை ஒரு இலட்சியமாகவே கொண்டிருந்தான். இலக்கியம் பற்றி, புத்தகங்கள் பற்றி, தெரியாத ஒரு பாமரப் பெண்ணால் தனக்கு ஒரு போதும் நல்ல துணைவியாக இருக்க முடியாது என்பதை அப்துல் காதர் உறுதியாக நம்பி வந்தான். தனது தந்தையைப் போல் தன்னைப் புரிந்து கொள்ளாத ஒரு மனைவியால் அவனது இலக்கியமும் கனவுகளும் கருகிப் போய்விடும் என அப்துல் காதர் கடுமையாக அஞ்சினான். பால்ய நண்பனின் சகோதரியால் அவனது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியும் என்று அவன் கொஞ்சமும் நினைக்கவில்லை.

பால்ய நண்பன் என்றுமில்லாதவாறு இந்த நிலாக் காலத்திலும் ஆற்றுக்கு வந்தது மீன்பிடிக்க அல்ல மாப்பிள்ளை பிடிக்கத்தான் என்பதை அப்துல் காதரால் உணர்ந்து கொள்ள முடியுமாக இருந்தது.

“அவளுக்கென்னடா குற, கலியாணத்த முடிச்சிட்டு வெளிநாட்டுக்குப் போய் ஊட்ல இரிக்கிற குற வேலயையும் முடிச்சிருவாள்..அதுக்குப்புறகு அவள் வெளிநாடு போக மாட்டாள்..தொழிலப்பத்தி நீ யோசிக்கத் தேவல மச்சான், வாப்பா உனக்கு ஒரு புதுத் தோணி வாங்கித் தாரெண்டும் சொல்லி இருக்காரு..”

பால்ய சினேகிதன் தனது தங்கச்சிக்கு மாப்பிள்ளை கிடைத்துவிட்டான் என்ற தீர்மானத்தை ஏற்கனவே எடுத்துவிட்டவனைப் போலவே பேசிக் கொண்டிருந்தான்.

இப்போது இருள் சூழ்ந்து கொண்டது. மேகங்கள் நிலவை மூடி இருக்க வேண்டும். தூரத்தில் மீன்கள் துள்ளும் ஓசை அப்துல் காதருக்கு துல்லியமாகக் கேட்டது. அப்துல் காதர் பால்ய சிநேகிதனை நேர் கொண்டு பாராமல் வேறு எங்கேயோ திரும்பிப் பார்த்தபடி யோசித்தான்.

அரசாங்க வேல கிடைக்கு மட்டும் இவனோட மீன் பிடிக்க வந்தா ஒரேயடியா நம்மல வீச்சு வலக்காரனாவே ஆக்கிருவான் போல இருக்கு, என்றுதான் அப்போது அப்துல் காதர் அநேகமாக யோசித்திருப்பான். அப்துல் காதருக்குள்ளிருக்கும் கலகக்காரனை இந்த இடத்தில் பேச அனுமதிக்கக் கூடாது என்பதில் அப்துல் காதர் உறுதியாக இருந்தான்.

 நடு ஆற்றில் வைத்து பால்ய நண்பனின் கோரிக்கையை ஒரேயடியாக மறுத்து விடுவது அவ்வளவு உசிதமானதல்ல என அப்துல் காதரின் உள் மனம் அவனை எச்சரித்தது. இலேசான, தற்காலிகமான ஒரு பதிலை வழங்குவது என்ற தீர்மானத்துக்கு இப்போது அப்துல் காதர் வந்துவிட்டிருந்தான்.

இப்போது நிலவொளியில் மீண்டும் ஆற்றின் முதுகு பளபளக்கத் தொடங்கிற்று. நிலவை விட்டும் மேகங்கள் விலகி இருக்க வேண்டும். பால்ய சினேகிதனின் ஊடுறுவும் கண்களில் பதிலுக்கான ஏக்கம் தெரிந்ததை அந்த மங்கலான ஒளியிலும் அப்துல் காதர் நோட்டமிட்டான்.

 ‘பார்ப்பம்என்று மட்டும் சொல்லத்தான் அப்துல் காதர் அதிகம் விரும்பினான். இருந்தாலும் அதற்கு கொஞ்சம் சமனான ஆனால் நண்பனுக்கு சற்று நம்பிக்கையூட்டக்கூடியதான ஒரு பதில் அப்துல் காதரிடமிருந்து வெளிப்பட்டது.    

வீட்டயும் கதச்சிட்டுச் சொல்றன் மச்சான்..!’

இதற்கிடையில் அப்துல் காதர் தனது எதிர்கால துணை பற்றி அதிகம் கனவுகள் கண்டவன். தற்போது ஒரு வேலை இல்லா பட்டதாரியாக அவன் இருந்தாலும் வாழ்க்கையில் எதையாவது செய்தாக வேண்டும் என்ற குறிக்கோளில் அவன் உறுதியாகவே இருந்து வந்தான். எத்தகைய சந்தர்ப்பத்திலும் அத்தகைய கனவுகளை அவன் கலைத்துவிட விரும்பியதில்லை. இதெல்லாம் பால்ய சிநேகிதனுக்கு புரியாது என்பதையும் அப்துல் காதர் நன்கறிவான். அதனால் அது பற்றி அவனுடன் அப்துல் காதர் எதுவும் பேச விரும்பவில்லை.

ஆனால் தன்னை எவ்வாறு பால்ய சினேகிதன் நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை அதற்கு மேலும் அறிந்து கொள்ள அப்துல் காதருக்குள்ளிருக்கும் கலகக்காரன் இடங்கொடுக்கவில்லை. ஒரு சாமான்ய வீச்சுவலைக்காரன் போல்தான் அப்துல் காதர் பால்ய நண்பனின் கண்களுக்குத் தென்படுகிறானா? இப்போது அப்துல் காதர் எனும் வேலை இல்லா பட்டதாரியை அவனுக்குள்ளிருக்கும் கலக்காரன் கழுத்தை நெரித்துக் கொள்ளுமளவுக்கு ஆத்திரத்தின் உச்ச கட்டத்தில் இருந்தான். ஏனெனில் சூடு, சொரணையில் உச்ச கட்டத்தில் இருப்பவன் அவன்.  

ஒரு வேலை இல்லா பட்டதாரியாக வாழ்வதில் அப்துல் காதரால் எதிர்கொள்ள நேரிட்ட மிகப்பெரிய ஒரு சோதனைக் கட்டமாக அதை அப்துல் காதர் கருதினான். நாளை இந்த வீச்சு வலைத் தொழிலுக்கு முற்றுப் புள்ளி வைப்பது என்ற உறுதியான தீர்மானத்துக்கு அப்துல் காதருக்குள்ளிருக்கும் கலகக்காரன் வந்துவிட்டிருந்தான். எவனுக்கும் வளைந்து கொடுக்காத கலகக்காரன் அவன். அநேகமாக அப்துல் காதரும் பால்ய சிநேகிதனும் வீச்சுக்கு வந்த கடைசி இரவாக அன்றைய இரவு இருந்ததை பால்ய சினேகிதன் கடைசி மட்டும் அறியாமல்தான் இருந்தான்.

மறு நாள் தனது ஊரில் வளர்ந்து சடைத்துக் கிளை பரப்பி நின்ற ஆல மரத்தின் கீழ் தன் பால்ய நண்பனைச் சந்தித்த அப்துல் காதர் அவனது திருமணக் கோரிக்கையை முற்றாக நிராகரித்தான். தனது எதிர்கால வாழ்வு பற்றியும் வாழ்க்கைத் துணை பற்றிய கற்பனைகளையும் பால்ய நண்பனிடம் ஒரு நாகரீகத்துக்காக அப்துல் காதர் பகிர்ந்து கொண்டான். பால்ய நண்பனோ இதுவெல்லாம் நடக்கிற காரியமா என்பதைப் போல் அலட்சியமாக எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.

000

திருமணப் பேச்சுவார்த்தையால் தன் பால்ய சிநேகிதனின் நட்பையும் அவன் புண்ணியத்தால் கிடைத்த வீச்சு வலைத் தொழிலையும் இழந்துவிட்ட அப்துல் காதரை திருமணம் என்ற பேய் விடாது தொடர்ந்தும் விரட்டிக் கொண்டே இருந்தது. வேலை இல்லா பட்டதாரியாக ஒரு மாதிரியாக தட்டுத்தடுமாறி நகர்ந்து கொண்டிருந்த அவனுக்கு வீட்டிலும் கலியாணப் பேச்சுகள் களை கட்டத் தொடங்கி இருந்தன. அவனது பெற்றோருக்கோ, உறவினர்களுக்கோ வாழ்க்கைத் துணை பற்றிய அவனது கனவுகளை அறிந்து கொள்ளத் தெரியாமலிருந்தது. அது பற்றி அவன் கவலைப்படவுமில்லை. அப்படி எல்லாம் யோசிக்குமளவுக்கு அவர்கள் படித்தவர்களோ, புரிதலுள்ளவர்களோ இல்லை என்பதை அப்துல் காதர் நன்கறிவான்.  அப்படி திருமணமும் நடந்து விட்டால் பால்ய சிநேகிதனும் இனி ஆற்றுக்கு கூட்டிச் செல்லமாட்டானே என்ற படபடப்பு அப்துல் காதரை அலைக்கழித்தது. அவனது தந்தையும் அப்துல் காதரை திருமணம் முடித்துக் கொண்டு வீட்டைக் காலி செய்யும் யோசனையை அண்மைக்காலமாக தொடர்ச்சியாக முன்வைத்து வரத் தொடங்கி இருந்தார். அதனை வேலை இல்லா பட்டதாரியான அப்துல் காதர் தனது வாழ்வில் தனக்குக் கிடைத்த மிகப்பெரிய அவமானமாகக் கருதினான்.

எனினும் இந்த சூழலிலிருந்து தப்பிச் செல்வதற்காக தாயுடன் மட்டும் இரகசிய ஒப்பந்தமொன்றைச்  செய்து கொண்டு வெளியூருக்குத் தப்பிச் செல்வது பற்றியும் அப்போது அப்துல் காதருக்கு ஒரு யோசனை வந்து தொலைத்தது.

இப்படியாக வேலை இல்லா பட்டதாரியான அப்துல் காதரின் வாழ்வு உள் வீட்டில் நாறிக் கொண்டிருந்தாலும் அவனது அயல் வீட்டுச் சாச்சியின் தயவால் அக்கம் பக்கத்தில் சூடு கிளப்பிக் கொண்டுதான் இருந்தது. வருவோர் போவோரிடமெல்லாம் அப்துல் காதரின் அருமை பெருமைகளை கொஞ்சம் மிகைப்படுத்தி அள்ளி வைப்பதுதான் அவரின் ஒரே பொழுது போக்காக இருந்தது. இப்படித் தூர இடம் சென்று படித்துப் பட்டம் பெற்று வந்தும் எதுவுமே படிக்காத பக்கத்து வீட்டுச் சாச்சியின் ஒரே பொழுது போக்குப் பொருளாக தான் ஆகிவிட்டோமே என்ற வெட்கம் அப்துல் காதரை மிக மோசமாக வாட்டத்தான் செய்தது. இருந்தாலும் அதை அப்துல் காதர் வெளிக்காட்டிக்கொள்ள விரும்பவில்லை. காரணம் வேலை இல்லா பட்டதாரி என்ற அவனது சமூக அடையாளத்தை மறைத்துக் கொண்டு தன்னையும் ஒரு படித்த மனிசனாக ஊரில் காட்டிக்கொள்ள அந்தப் புகழுரைகளை அனுமதிப்பதைத் தவிர வேறு வழிகளும் அவனுக்கிருக்கவில்லை.

மச்சி நம்மட அத்துக் காதன்ட படிப்பு இந்த ஊர்ல ஆரும் படிக்கலயாம் மச்சி.. முஸ்லிம் ஆக்கள்ளேயே மூணு பேருதான் இந்தப்படிப்பு படிச்சயாம். அதில ஒண்டு நம்மட அத்துக் காதனாம்

பேன் பார்த்துக் குத்திக் கொண்டே சாச்சி காதர் புராணம் பாடுவது வீட்டுக்குள் கவட்டுக்குள் கைவைத்துக் கொண்டு ஓசிப் பேன் காற்றில் ஒய்யாரமாக படுத்துக் கிடக்கும் அப்துல் காதரின் காதுகளிலும் விழுந்து கொண்டுதானிருந்தது.

மெய்தானா மச்சி அப்ப மத்த ரெண்டு பேரும் எங்கயாம்?’ பேன் பார்க்க வந்த அயல் வீட்டுப் பெண் சாச்சியின் புகழுரையை ஐயத்துடன் நம்புவது போல்தான் அப்துல் காதருக்குப் பட்டது. எதற்கும் அவர்கள் வெளியேறிச் செல்லும் வரைக்கும் தான் வெளியேறிவிடக்கூடாது என்ற உறுதியான முடிவை அப்துல் காதரும் அப்போது எடுத்துவிட்டிருந்தான்.

000

புறக்கணிப்பும் அவமானமும் அப்துல் காதரை கடுமையாக சிதைக்கத் தொடங்கின. திருமணத்தில்கூட அவன் அதுவரை கண்டு வந்த கனவுகளுக்கேற்ற ஒரு பெண்ணைத் தெரிவு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருந்தான். வேலை இல்லா பட்டதாரிக்கு கனவுகள் தேவையில்லை. இலட்சியங்கள் தேவையில்லை என சில நாட்களாக அப்துல் காதர் அரற்றத் தொடங்கி இருந்த ஒரு நாளில் யாருக்கும் தெரியாமல் அப்துல் காதருக்குள்ளிருந்த கலக்காரன் தற்கொலை செய்துகொண்டான். அந்தக் கலகக்காரன் சூடு, சொரணையில் உச்ச கட்டத்தில் இருப்பவன். எந்தக் கொம்பனுக்கும் வளைந்து கொடுக்காதவன்.

எல்லா வாயில்களும் தனக்கு மூடப்பட்டு விட்டிருப்பது போல் அப்துல் காதர் உணர்ந்தான். வேறு வழியின்றி மீண்டும் பால்ய சிநேகிதனுடன் வீச்சுக்குச் செல்வது என்ற முடிவை அப்துல்காதர் எடுத்து விட்டிருந்தான். இன்று மாலை அவனைச் சந்தித்து தனது வருகையை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினான். பால்ய சிநேகிதனும் வேறு ஒரு உதவியாளரை சேர்த்திருக்காதிருக்க வேண்டும் என அப்துல் காதரின் உள் மனம் இறைவனைப் பிரார்த்தித்தது. பால்ய நண்பனைச் சந்தித்து அப்துல் காதர் தனது விருப்பத்தைச் சொன்ன போது பால்ய நண்பனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

 ‘வா மச்சான் எனக்குத் தெரியுண்டா நீ சொன்னதெல்லாம் நடக்காதெண்டு..ராவைக்கு நாம வீச்சுக்குப் போவம்..“

தனது தொழிலுக்கு உதவியாளன் கிடைத்து விட்ட சந்தோசத்தை விடவும் தனது தங்கைக்கு ஒரு மாப்பிள்ளை கிடைத்துவிட்ட மகிழ்ச்சிதான் பால்ய நண்பனின் முகத்தில் அப்போது படர்ந்து கொண்டிருந்ததை அப்துல் காதர் அவதானித்தான். அப்துல் காதருக்குள்ளிருக்கும் கலகக்காரன் மட்டும் இருந்திருந்தால் நிச்சயமாக அவன் அதை சகித்துக் கொண்டிருக்க மாட்டான் என்பதை அப்துல் காதர் நன்றாகவே அறிந்திருந்தான்.   

 

ஆதவனின் ‘சின்ன ஜெயா’- வெ. சுரேஷ்

வெ. சுரேஷ்

‘பிள்ளையாய் இருந்துவிட்டால், இல்லை ஒரு துன்பமடா,’ என்பது கண்ணதாசனின் மிக பிரபலமான ஒரு பாடல் வரி. இப்படி ஒரு கணமேனும் நினைக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். சிக்கல்கள் மிகுந்த நடப்பு வாழ்வில், நிஷ்களங்கமான, சிந்தனையின் பளுவற்ற, நாளை என்ன நடக்குமோ என்ற பதற்றமற்ற குழந்தைப் பருவத்துக்கே திரும்பிச் செல்ல விரும்பாதவர்கள் யார்? நாம் அனைவருமே சமயங்களில் ஒன்றுமறியாத குழந்தைகள் போல நடிப்பதும், நம்மை நாமே ஒன்றுமறியாத குழந்தைகளாக நினைத்துக் கொள்வதும் நடக்கத்தான் செய்கிறது. சில மனிதர்களிடத்தில் இது இன்னமும் ஆழமாக செயல்படும் விதம் காரணமாக காலப்போக்கில் ஆழ்மன பழக்கமாகவே மாறுவதையும் உளவியல் நிபுணர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். இது மாதிரியான ஒரு இடத்தையும் சூழலையுமே ஆதவன் தன் ‘சின்ன ஜெயா’ என்ற சிறுகதையின் மூலம் கவனப்படுத்துகிறார்.

திருமண வயதைத் தாண்டிக் கொண்டிருக்கும், திருமணம் நடக்குமா என்பதே கேள்விக்குறியாக இருக்கும், ஜெயா என்ற முதிர்கன்னியின் சிந்தனையோட்டங்களைச் சொல்வதே ஆதவனின், ‘சின்ன ஜெயா’. கிட்டத்தட்ட சம்பவங்களே இல்லாத ஒரு வித்தியாசமான சிறுகதை இது. அதிகாலையில், வயதான தன் தந்தை, கழிப்பறைக்கு சிறுநீர் கழிக்கச் செல்லும் சத்தம் கேட்டு விழித்துக் கொள்ளும் ஜெயாவின் அச்சங்கள், குழப்பங்கள், விரக்தி ஆகியவை வெளிப்படுவதே இந்தச் சிறுகதை. முதிர்கன்னி என்ற ஒரு தன்மையை முழுக்க முழுக்க உளவியல் ரீதியாகவே அணுகியிருக்கிறார் ஆதவன்.

விழித்துக் கொள்ளும் ஜெயாவின் மனதில் தன் நிலையைப் பற்றிய பல சிந்தனைகள் ஓடுகின்றன. தன் பெற்றோர் தனக்கு திருமணம் செய்து வைக்க அவ்வளவாக, முனைந்து முயற்சிக்காமல் இருப்பதை நினைத்துக் கொள்கிறாள். உடனிருந்த வரையில், இவர்களை படாத பாடு படுத்திவிட்டு, இவளுக்கு முன்னாலேயே காதல் திருமணம் செய்துகொண்டு அமெரிக்கா சென்றுவிட்ட தன் தம்பியை நினைத்துக் கொள்கிறாள். ஆனால், தன்னைச் சுற்றியுள்ளவர்கள், அனுதாபம் கொள்வது அவளது பெற்றோர் குறித்தே தவிர, தனக்காக இல்லை என்பதையும் நினைத்துக் கொள்கிறாள். ‘அவர்கள் என்ன செய்வார்கள் பாவம், வயசாகிவிட்டது. ஓடியாடி மாப்பிள்ளை பார்க்க முடியாது… ஒரே பிள்ளையும், இப்படிப் பண்ணிட்டான்’.

தன் நிலையில் எது செய்தாலும், அது விமர்சனத்துக்கே உள் ளாவதையும் நினைத்த்துக் கொள்கிறாள்.’சற்று யோசனையாக அமர்ந்து இருந்தால் கல்யாணம் ஆகவில்லை என்ற கவலை,’ அதனால் இப்படி,. அதற்கு பயந்து ஒரு செயற்கையான சுறுசுறுப்பைக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும். சற்று சிடுசிடுத்தாலோ, கல்யாணம் ஆகாத ஏக்கத்தை மீண்டும் இப்படிக் காட்டுகிறாள் என்ற குத்தல். ஆனால் வயதான ஒரு காரணத்தாலேயே அவளின் பெற்றோர்கள், இயல்பாக சுதந்திரமாக இருக்கலாம். அவர்களின் வயது காரணமாக அது மன்னிக்கப்படும். தவிர அவர்களின் அறுவையையும் இவள் தாங்கிக் கொள்ள வேண்டும்.

அவள் தன்னிச்சையாக இருக்க முடிவது அலுவலகத்தில்தான். ஆனால் இன்று அங்கும் அப்படி இருக்க முடியாது. ஏனென்றால் இவளது தோழிகள்- இவளை புரிந்துகொண்ட இவளது தியாகத்தை மதிக்கும் தோழிகள்- இருவரும், இன்னும் ஏழு நாட்கள் லீவு. அதுவரை, தங்கள் பிரிவில் இருக்கும் கங்காதரனை , நாற்பது வயதாகியும் இன்னும் திருமணமாகாத கங்காதரனை சமாளிக்க வேண்டும். ஆண் பார்வை, கங்காதரனின் பார்வை, அவள் மனதில் கிலி ஏற்படுத்துகிறது. ஆண்களைப் பார்த்தாலே அவளுக்கு பயமாயிருக்கிறது. இவ்வளவு ஆண்டுகள் தன் ருசியுடன், தன் சிந்தனைகளுடன் வாழ்ந்து பழகிவிட்ட அவள், ஒரு ஆணுக்காக அவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பே கசக்கிறது.

இந்த நினைவுகளால், உறக்கம் வராத ஜெயா ஒரு புத்தகத்தை எடுக்கிறாள், படிப்பதற்காக. அதிலிருந்து ஒரு புகைப்படம் விழுகிறது. அவளும் அவள் தம்பி ரமணனும் சிறு வயதில் எடுத்துக் கொண்ட படம். தம்பியை நினைத்துக் கொள்கிறாள். தன் பெற்றோரைப் போல் இல்லாத தன் தம்பியே பரவாயில்லை என்று தோன்றுகிறது அவளுக்கு. அவளைவிடச் சிறுவன் என்றாலும், தன் சுயேட்சைத் தன்மையாலும், சாகசத்தாலும், துறுதுறுப்பாலும், இவளை மிஞ்சியதன் மூலம் இவளைச் சின்னவளாக உணரச் செய்தவன். இதை நினைக்கும்போதே சட்டென்று, தன் தோழிகளில்லாத இந்த வாரத்தை பயமின்றி, குழப்பங்களின்றி கழிக்கவும் உபாயத்தை இந்தப் போட்டோ கொடுப்பதைக் காண்கிறாள். ஆம், இந்தப் போட்டோவில் இருப்பதைப் போல அவள் சிறுமியாக இருக்கப்போகிறாள். தன் தோழிகள் தனக்குத் தந்த பாதுகாப்பு உணர்வை இந்த போட்டோ தரும் என்ற உணர்வுடன், ஞாபகமாக, அலுவலகம் கிளம்பும்போது அதையும், எடுத்து தன் கைப்பைக்குள் வைத்துக் கொள்கிறாள் ஜெயா.

ஜெயாவின் தேவை, தன்னை பொறுப்பு மிக்கவளாக. பெரியவளாக உணரச் செய்யும், சதா திருமணத்துக்காக ஏங்கிக் கொண்டிருப்பவளாகக் காட்டும் அவளது பெற்றோரின் இருப்பு அல்ல, தன்னை ஒரு பெண்ணாக உணரச் செய்து, தான் அவனுக்காக மாற வேண்டிய அவசியத்தை நினைவூட்டி அவளை அச்சுறுத்தும் கங்காதரன் போன்ற ஆண்கள் அல்ல. அவளுக்கு வேண்டியது, அவளைத் தம்மைவிடச் சிறியவளாகக் கருதி, பாதுகாப்பாக உணரச் செய்யும் தன் தோழிகளைப் போன்றவர்களும், அவளது தம்பியை நினைவூட்டும் இந்தப் புகைப்படமும்தான். தன் தோழிகள் திரும்பி வரும்வரை இந்தப் புகைப்படம், தன்னை தன் அச்சங்களிலிருந்தும் அலைபாய்தல்களிலிருந்தும் காப்பாற்றும் என்று தன்னைத்தானே நம்ப வைத்துக் கொண்டு அச்சங்களை உதறி, அலுவலகத்துக்குக் கிளம்புகிறாள் “சின்ன ஜெயா”.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நாற்பண்புகள், படித்த, பொருளாதார சுதந்திரம் பெற்ற பெண்களுக்கும் சில குறிப்பிட்ட சூழல்களில் அரணாகின்றன என்பது நவீன காலத்துக்குரிய நகைமுரண். இவற்றுக்கான தேவையை இன்னமும் பெண் உணர்கிறாள் என்பது அவளது வேதனையாக இருக்கலாம், ஆனால் அந்த வேதனை அவள் வாழும் சமூகத்தின் சிறுமையைச் சோதித்துப் பார்ப்பதாக இருக்கிறது. அவளுக்கு கல்வித்துறையிலும் பணியிட வாய்ப்புகளிலும் அளிக்கப்படும் சம உரிமைகள் அவள் மூலமாக,பொருளாதார பயன்களைப் பெருக்கிக் கொள்ளத்தானா என்றுகூடத் தோன்றுகிறது. ஒரு பெண்ணிடம் பிறர் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதையும், அத்தனை சுதந்திரங்களும் இருப்பதாகத் தோன்றினாலும்கூட அவள் என்ன செய்கிறாள், என்னவாக இருக்கிறாள் என்பதை அவள் வாழும் சமூகம் எவ்வளவு கறாராக வரையறை செய்கிறது என்பதை ஆதவன் மிக மென்மையாகவும், புரிந்துணர்வுடனும் ‘சின்ன ஜெயா’வில் பதிவு செய்திருக்கிறார். பொருளாதார சுதந்திரமும் பணி சார்ந்த அதிகாரமும் மட்டும் ஒரு பெண்ணுக்கு முழு விடுதலை அளிப்பதில்லை, யாரையும் சார்ந்திராத அவளது தனியிருப்புக்கான அங்கீகாரமும் தேவைப்படுகிறது என்பதுதான் ‘சின்ன ஜெயா’ க்களின் சோகம்.

பாதர் என்ன பண்றார்?

காலத்துகள்

முழிப்பு தட்டியவுடன் தலையணையில் இருந்த கோழை குமட்ட,   புரண்டு திரும்பும்போது தோள் வலித்தது, கையில் வரி வரியாக பாயின் அச்சு.  அப்பா இன்னும் தூங்கிக் கொண்டிருந்தார், மணி பார்த்தான்,  ஏழரை. பாயைச் சுருட்டும்போது முனகச் செய்த முதுகுப் பிடிப்பு சரியாக இன்னும் பத்து பதினைந்து நிமிடங்களாகும்.

சமையலறைக்குள் சென்றவனிடம் பல் விளக்கும்படி சைகை செய்தார் அம்மா. வீட்டின் பின்புறச் சுவற்றில் அமர்ந்தபடி நாவில் எஞ்சியிருந்த க்ளோஸ்ஸப் சுவையுடன் டிக்காஷனின் கசப்பு கலப்பதை அப்போதே கூச ஆரம்பித்திருந்த கோடை வெய்யிலில் ருசித்துக் கொண்டிருக்கும்போது மெல்லிய  குரலெழுப்பியபடி அருகில் வந்து உரசி நின்றது அலமேலு. கொஞ்சம் காப்பியைச் சுவற்றில் ஊற்ற, அதைக் குடித்துவிட்டு மீசை இழைகளைச் சுத்தம் செய்தபின் வெண்ணிற உடலை வளைத்து சிறிய பிங்க் நிற நாவால் உடலெங்கும் சுத்தம் செய்துவிட்டு நீட்டிப் படுத்து ஒற்றைக் கண்ணால் பார்த்தது. வீட்டில் காலை நேர ரேடியோச் சத்தம், பேச்சுச் சத்தம் எதுவும் இல்லை. வேலைக்கு கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்த அம்மா  பாத்திரம் தேய்ப்பதையும் சாப்பாட்டுப் பொருட்களை எடுத்து வைப்பதையும் வழக்கத்தைவிட மெதுவாக, அதிக ஒலி எழுப்பாமல் செய்து கொண்டிருந்தாள். இவன் அன்றைய தினசரியைப் புரட்டிக் கொண்டிருந்தான்.

எட்டு மணி அளவில் அம்மா கிளம்பும்போது, ‘சாப்பாடு எடுத்து வெச்சுருக்கேன், அப்பாட்ட சொல்லு,’ என்று மெல்லிய குரலில் கூறிவிட்டுச் சென்றாள். இவன் குளித்து முடித்தபோது எட்டரை ஆகியிருந்தது. அப்பா இன்னும் தூங்கிக் கொண்டிருந்தார், சாப்பிடத் தோன்றவில்லை. பெரியமணியக்காரத் தெருவிலிருந்து பழைய பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் மாவட்ட நூலகத்திற்கு நடந்து செல்ல பதினைந்து நிமிடங்களாவது ஆகும், வெய்யிலை சமாளித்து விடலாம்.

வருகை பதிவேட்டில் முன்னரே  பத்து பதினைந்து பேர் கையொப்பங்கள். நேற்று எடுத்து வந்திருந்த புத்தகங்களை திருப்பியாயிற்று. புத்தக அறையில் இந்த நேரத்தில்  யாரும் இல்லை, பதினொரு மணிக்கு மேல்தான் வர ஆரம்பிப்பார்கள். எந்தப் புத்தகம் எந்த ஷெல்பின் எந்த வரிசையில் இருக்கும் என இந்த ரெண்டு வருடங்களில் கிட்டத்தட்ட மனப்பாடமாகிப் போன அறையில் இந்த முறை எடுத்துச் செல்ல வேண்டிய  புத்தகங்களை தேட அதிக நேரமாகவில்லை. அனைத்து அடுக்குக்களையும் ஒரு சுற்று சுற்றி வந்ததில், நேற்று புத்தகம் எடுத்துச் சென்ற பின் பிற உறுப்பினர்களால் கொண்டு  செல்லப்பட்ட நூல்கள் எவையென்று காண முடிந்தது.

பத்திரிக்கைகள் படிக்கும் இடம் நிறைந்திருந்தது. எந்த இதழும், தினசரியும்  மொத்தமாக படிக்கக் கிடைக்காது, கையில் அகப்படும் தாள்களை வாசிக்க வேண்டியதுதான். படித்துக் கொண்டிருந்த ஒருவர் எழ அவரிடத்தில் அமர்ந்து அவர் விட்டுச் சென்ற ஞானபூமியின் சில தாள்களை படித்தான். அடுத்து அமர்ந்திருந்த இளைஞர் வேலைவாய்ப்பு தாள்களில் இருந்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். பின் இவனும்  அவற்றை புரட்டியதில் மருத்துவர், பொறியாளர் வேலைகளைவிட மற்ற, கேள்விப்படாத துறைகளில் இருந்து அழைப்புக்கள் அதிகமாக தென்பட்டன.  வீட்டிற்கு கிளம்பும்போது மணி பன்னிரெண்டு, அப்பா இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருப்பார்.

அப்பா இன்னும் எழுந்திருக்கவில்லை. சாப்பிடப் பிடிக்காமல், எடுத்து வந்திருந்த புத்தகங்களை வாசலில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும்போது ‘எங்கடா போய்ட்ட நேத்து விளையாடலாம்னு சொன்னியே, வந்து பாத்தேன். அப்பா தூங்கிட்டிருந்தாரு, ஒடம்பு சரில்லயா?’ என்று கேட்டுக்கொண்டு முரளி வந்தான்.

‘ஆமாண்டா, மருந்து வாங்கத்தான் போயிருந்தேன்’

‘இப்ப வரியா, கோபால், மணிலாம் பின்னாடிதான் இருக்காங்க’

உள்ளே திரும்பிப் பார்த்தவன் முரளியுடன் சென்றான். இவன் போர்ஷனுக்கு பின்னால் உள்ள காலி மனை கிரிக்கெட் மைதானமாக செயல்படும். அங்கிருந்த தென்னை, பஞ்சு மரங்களின் நிழல் கோடையின் உக்கிரத்தில் இருந்து கொஞ்சமே கொஞ்சம் பாதுகாப்பு தந்தது. ஒரு மணி வாக்கில் சாப்பிடுவதற்காக அனைவரும் வீட்டிற்குச் சென்றார்கள். அப்பா எழுந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ‘சாப்பாடு வெச்சுருக்குன்னு அம்மா சொன்னா’ என்று சொல்லிவிட்டு மீண்டும்  புத்தகம் படிக்கத் துவங்கினான். அப்பா சாப்பிட்டவுடன் மீண்டும் தூங்க ஆரம்பித்தார்.

மெல்ல எழுந்து ரேடியோவை எடுத்துக் கொண்டு பின்புறம் சென்று எலுமிச்சை மரத்தின் அடியில் அமர்ந்தான். ‘ஆப் கி ப்ஹர்மாயிஷ்’ஷில், ‘காதல் பைத்தியக்காரத்தனமானது, போதையூட்டுவது’ என்று கிஷோர் குமார் குரலில் ராஜேஷ் கன்னா உருகிக்கொண்டிருக்கும்போது- நிஜத்தில் நேரில் பார்த்தே இராத பியானோவை, நடிகருக்கு பதிலாக இவன் மெய்மறந்து வாசித்துக் கொண்டிருக்க –  ‘என்னடா இந்த வெய்யில்ல வெளில இருக்க’ என்று குரல் கேட்டது. சுந்தரி அக்கா வந்து விட்டார்.

‘இல்லக்கா உள்ள புழுக்கமா இருக்கு அதான்’

‘எப்போ ஸ்கூல் தொரக்கறாங்க’

‘வர  மண்டேக்கா’

அடுத்த பாடலில் ‘நான் எழுதிய கடிதம் ஆயிரக்கணக்கான வண்ணங்கள் கொண்ட அழகிய காட்சியாக’ மாறிக்கொண்டிருக்கும்போதே அந்த வகுப்பறைக் காட்சி இடைவெட்டி, அனைத்தையும் நிறமிழக்கச் செய்தது. எல்லா வருடமும் அது கண்டிப்பாக  நிகழும் என்று சொல்வதற்கில்லை, போன வருடம்கூட அதற்கு தேவையேற்படவில்லைதான். ஆனால் இழந்த வண்ணங்களை மீட்க முடியவில்லை. ‘நீ அழை, உனக்காக காத்திருக்கிறேன்’ என்று ஹேமந்த் குமார் அதற்கடுத்த பாடலை முடித்துக் கொள்ளும்போதுதான் ஒலிபரப்பில் மீண்டும்      கவனம் செலுத்த முடிந்தது.  இதை இனி மீண்டும் எப்போது ஒலிபரப்பி எப்போது   பாடியபடியே மாடியில் உலவ என்று கவலைப்பட முடியாமல் இந்த புதுப் பிரச்சனை பயமுறுத்தியது.

நான்கு மணி அளவில் அப்பா எழுந்து நாளிதழ் படித்து, பின் மீண்டும் தூங்கி விட்டார். வேலை முடிந்து வந்த அம்மாவின் முகத்தில் அவள் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனதின் ஆயாசம். சமையலறையிலிருந்து சைகை செய்து இவனை அழைத்தவள், ‘எழுந்தாளா, எப்ப எழுந்தா?’ என்று கேட்டாள். ‘ஒண்ணாயிருக்கும், அப்பறம் நாலு மணிக்கு எழுந்தா அப்பறம் திரும்பி தூங்கியாச்சு’. ஒன்றும் சொல்லாமல் தலையாட்டியவள் இரவுணவை தயார் செய்து விட்டு அப்பாவை எழுப்பினாள். பத்து முறைக்கு மேல் கூப்பிட்ட பின் எழுந்தவர் எதுவும் பேசாமல் சாப்பிட்டார். எட்டு மணிக்கெல்லாம் வீட்டில் விளக்கணைத்தாகி விட்டது.  பின்புறம் சென்று காலி மனையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவன், கொசுக்கடி அதிகமாகவும் உள்ளே வந்தான். அம்மாவும் படுத்திருந்தாலும் தூங்கி விட்டாளா என்று தெரியவில்லை. பாயை விரித்து வைத்தவன், சுவற்றில் சாய்ந்தபடி இருளை நோக்கிக் கொண்டிருந்தான்.

அடுத்த நாள் காலையில் ‘ஒடம்பு செரியில்லையா’ என்று கேட்டபடி அப்பாவை எழுப்ப முயன்று கொண்டிருந்தாள் அம்மா. இந்த நேரங்களில் அது அத்தனை எளிதல்ல. பத்து நிமிடத்திற்கு மேல் மன்றாடியப் பின் புரண்டு படுத்த அப்பா, ‘என்ன வேணும், மனுஷன் தூங்கக்கூட கூடாதா’ என்று முகத்தை சுளித்துக் கொண்டே கடித்துப் துப்பினார். ‘அதுல்லமா, ஒடம்பு சரியில்லையானுதான் கேட்டேன்’ என்று சமாதானமான குரலில் சொல்லிவிட்டு அம்மா, ‘ஆபிஸுக்கு  லீவ் லெட்டர் அனுப்பணுமா’ என்று மீண்டும் மெதுவாக கேட்டதும் ‘மனுஷன நிம்மதியா இருக்க வுடாத, எப்பப்பாரு வேல வேல, ஒடம்புக்கு முடியலனா என்ன பண்ண முடியும்’ என்று கத்திவிட்டு மீண்டும் திரும்பி படுத்துக் கொண்டார்.

பின் அம்மா எவ்வளவு சொல்லியும் எதுவும் பேசவில்லை, கண்ணைக்கூட திறக்கவில்லை. அம்மா அழுகையை அடக்கிக் கொள்வதைப் பார்த்தான். காலை உணவை சாப்பிடாமல் ஒன்பது மணிக்கெல்லாம் நூலகம் சென்றவன் மதியம் வரை அங்கேயே இருந்தான். இரவுணவை சாப்பிட மட்டும் எழுப்பியதைத் தவிர அன்று மாலை அம்மா எதுவும் பேசவில்லை. மீண்டும் எட்டு மணிக்கு விளக்கணைப்பு, மீண்டும் இருளின் அமைதியினுள் மூழ்கியபடி இவன். அன்று அத்தனை தூரம் நடந்தும் தூக்கம் எளிதில் வரவில்லை. அம்மாவும் அடிக்கடி புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த நாள், வெள்ளி. நூலகத்திற்கு விடுதலை. இருந்தும் ஒன்பது மணிக்கே  கிளம்பினான். ‘என்னடா நேத்தும் ஆள காணும், அப்பாக்கு இன்னும் முடியலையா?’ என்று கேட்ட முரளிக்கு ‘ஆமாம்டா, இன்னும் நாலஞ்சு நாளாகும் போல’ என்றான்.

‘இப்போ எங்க போற?’,

‘சந்துரு வீட்டுக்குடா,’

‘சண்டேதானே ஊர்லேந்து வர்றதா சொன்னான்?’

‘இல்லயே… சும்மா போய் பாக்கறேன்’.

‘வந்துட்டான்னா வர்றப்ப அவனயும் கூட்டிட்டு வா, ஒங்கப்பாக்கு இன்னும் முடியலல?’

‘வைரல் பீவரா இருக்கலாம்னு டாக்டர் சொல்றார்’

பள்ளி முகப்பில் இருந்த வாட்ச்மேனிடம்  டை வாங்கவேண்டும் என்று சொல்லி உள்ளே நுழைந்தான். மிகக் குறைவான ஆள் நடமாட்டத்துடன் பள்ளி இன்னும் பிரமாண்டமாக, தன்னுள் நிறைந்திருக்கும் மௌனத்தோடு புதிதாக இருக்கிறது.  இலக்கில்லாத சுற்றுதல். பள்ளியில் வளர்க்கப்படும், உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் ‘லவ் பேர்ட்ஸ்களின்’ கீச்சுக்கள், பல வண்ணங்கள். தலைமையாசிரியர் அலுவலக அறையருகே சுவற்றில் பொறிக்கப்பட்டிருந்த, பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த, மாணவர்களின் பட்டியல் மதிப்பெண்களுடன்.  இரண்டு வருடங்களில் இதில் இடம் பெற முதல் வாய்ப்பு வரும்.   கேள்விப்பட்டிருந்த கிசுகிசுக்கள் தந்த  குறுகுறுப்பில்  தலைமையாசிரியர் அறை உள்ள தளத்திற்கு செல்லும்போது யாரோ பேசியபடி இறங்கும் ஒலி கேட்டதால் அவற்றை உறுதிப்படுத்த முடியாமல்  திரும்பி இறங்க வேண்டியிருந்தது.

இத்தனை வருடங்கள் அமர்ந்திருந்த வகுப்பறைகளில்  ஒன்றன்பின் ஒன்றாக சிறிது நேரம் கழித்தான். இரண்டு மாதமாக யாரும் புழங்காமல் இருந்ததால் அறைகளில் கார நெடி, இறுதி வகுப்பு நாளன்று குறிக்கப்பட்ட பட்ஸ்/ ப்ளாசம்ஸ் இன்னும் அழிக்கப்படாமல். பரீட்சைக்கு முன் சுவர்களில் இருந்து சார்ட்கள் அகற்றப்படும்போது கீழே உதிர்ந்த பசை திரிகளில் இன்னும் கோந்தின் கிறுகிறுப்பான வாசம். பல ஆசிரியர்கள், சம்பவங்கள், ஆண்டு விழா பரிசுகள் என ஆற்றுப்படுத்தும் அதே நேரத்தில் பள்ளியாண்டின் முதல் நாளில் உள்ளூர குறுகி நின்ற சில  தருணங்களை நினைவூட்டும் அறைகள். செவன்-எப்பில் இந்த ஒரு வருடமாக   பகற்கனவுகளில் மட்டும் அமர்ந்திருந்த பெஞ்சில் உட்காரும்போது ஏதோ சாதித்த அற்ப திருப்தி.  அங்கேயே கண்ணயர்ந்து படுத்து  எழும்போது கழுத்தில் வலி. வரும்  வருட வகுப்பறைக்குச் சென்றான். பொதுவாக  எப்போதும் நண்பர்களோடு அமரும் இறுதி பெஞ்சிற்கு முந்தைய டெஸ்கில் யாரோ எப்போதோ செதுக்கிய பெயர்.

வீட்டில் நுழையும்போது ‘ரெண்டு மூணு நாளா வெளிலயே சுத்திட்டிருக்கியே ஸ்கூல் தொறக்கற நேரத்துல படுத்துக்கப் போற’ என்று கேட்டார் சுந்தரி அக்கா.

‘சும்மதான்க்கா’

‘சாப்டியா, உங்கம்மா கெளம்பும்போது சொன்னங்க, ரெண்ட் நாளா காத்தால  வெச்சுட்டு போன  சாப்பாடு அப்டியே இருந்துதாமே. இன்னிக்கு இங்க சாப்டு, உருளக்கெழங்கு காரக்கொழம்பு பண்ணிருக்கேன்’

‘இலக்கா வீட்லயே சாப்டறேன்’ என்றவனை வற்புறுத்தி தன் போர்ஷனுக்கு அழைத்துச் சென்றார். தலைகுனிந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பேச்சுவாக்கில், ‘எப்பம் போல படிக்கணும்டா, கவலைப்படாத, எல்லா வீட்லயும் நடக்கறதுதான்’ என்று அக்கா சொன்னார். சோற்றை அளைந்தபடி இருப்பதை பார்த்து ‘நான் வாசல்ல ருக்கேன்’ என்று வெளியே சென்றார்.  சாப்பிட்டுப்பின் வெளியே வர, ‘ஓன் பிரெண்ட்ஸ் பின்னாலதான் இருக்காங்க’ என்றார். ‘நா இங்க கொஞ்ச நேரம்  படுத்துக்கறேன் கா’ என்று சொல்லி அங்கேயே தூங்கி  எழும்போது மணி ஐந்துக்கு மேல் ஆகியிருந்தது.

அம்மா  அன்று மாலை விடாப்பிடியாக அப்பாவை எழுப்பி, உடம்புக்கு என்ன, வேலைக்கு மீண்டும் எப்போது போகப் போகிறார் என்று கேட்டார். கடுகடுப்பாக அப்பா சொல்லும் பதில்களை முன்வைத்து மேலும் கேள்விகள் கேட்டு ஒரு கட்டத்தில் அம்மா அழ ஆரம்பித்தார். இனி எப்படியும் நாளைக்குள் எல்லாம் முடிந்து விடும்.

அடுத்த நாள் சண்டை இன்னும் தீவிரம் அடைந்தது. தனக்கு மரியாதை தரவில்லை, அப்படிப்பட்ட இடத்தில் வேலை பார்க்கப் போவதில்லை என்ற எப்போதும் சொல்லும் காரணத்தை அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். அம்மா செய்திருந்த டிபனை தட்டோடு வீசினார். அறையில் தாளித்த கடுகின் மணம், தேங்காய் பிசிறல்கள். ‘நா வேணா போய் பேசறேன், திருப்பி சேத்துப்பாங்க’ என்று சொன்ன அம்மாவை நோக்கி செருப்பை தூக்கி எறிந்தார். அம்மா சுவற்றோரம் ஒண்டி அமர, டேப் ரெக்கார்டரின் வயரைப் பிடுங்கி கையில் சுற்றிக்கொண்டு அம்மாவின் முகத்தை நோக்கி நீட்டியபடி அப்பா மிரட்டுவதை சுந்தரி அக்கா எட்டிப் பார்த்து விட்டு போனார்.  ஒரு  மணி வாக்கில் சண்டையின் அந்த அலை ஓய்ந்தபின் நாளிதழை அப்பா படிக்க ஆரம்பிக்க, இவனிடம் வந்த அம்மா ‘ராமசாமி ஸார கூட்டிட்டு வா’ என்றார்.

சின்ன மணியக்காரத் தெருவில் இருந்த மாவட்ட கல்வி அலுவலகம்,  ஒரு காலத்தில் பங்களாவாக இருந்திருக்கக்கூடும்.  கூடப்படிப்பவர்கள்  கண்ணில் பட்டுவிடக் கூடாது.  இரண்டு நாட்களில் பள்ளிகள் திறக்க இருப்பதால் ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. கூட்டம் அதிகமாக இருக்கும்போது உள்ளே செல்லாமல், அதிகாரிகள் உபயோகத்திற்கான வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் வழியாகச் சென்று அவர் அறை ஜன்னலின் அருகே நிற்பதுதான் வழக்கம். எதிரே ஒருவர் ஏதோ சொல்லிக்கொண்டிருக்க ‘மாவட்ட கல்வி அலுவலர்’ ராமசாமி, கோப்புக்களை பார்த்துக் கொண்டிருந்தார். உருண்டையான உடலுக்கு பொருத்தமான வட்ட முகத்தில், இரண்டுடனும் ஒத்துப்போகாத தீவிரத்தன்மை, கொஞ்சம் எல்லை மீறினாலும் விழுந்து பிடுங்கி விடுவார் என்பது போல். அம்மாவுடன் வேலை பார்க்கும் அவரைவிட பதினைந்து இருவது வயது மூத்த தோழி எல்.எல்லின் கணவர். பெரியவர்கள் சொன்னால் கணவன் கேட்பான் என்ற நம்பிக்கை இன்னும் அம்மாவிற்கு உள்ளது.

பின்னந்தலை வியர்வையில் நனைந்திருக்க, உதட்டில் விழுந்த வியர்வைத் துளியை நா வருடியது. உள்ளே இருந்தவர் சென்றபின் அடுத்து வந்தவர் இவனை கவனித்து, ராமசாமியிடம் சொல்ல, திரும்பிப் பார்த்து உள்ளே வருமாறு சைகை காட்டினார். உள்ளே சென்று அவர் முன்னே பேசாமல் நின்று ‘என்னடா’ என்று அவர் கேட்ட பின்பும் எதுவும் சொல்லவில்லை. ‘அப்பா திரும்ப வேலக்கு போலயா’ என்று அவர் தலை தூக்காமல் கேட்டபோது அவர் எதிரே அமர்ந்திருந்தவர் திரும்பிப் பார்த்தார். ராமசாமி சொன்னது அறைக்கு வெளியே நின்றிருப்பவர்களுக்கு கேட்டிருக்கக்கூடும். உடலில் வியர்வைச் சுரப்பு இன்னும் அதிகரித்து, அக்குளில் ஈரம் அதிகமாகியபடியே இருந்தது. காதின் பின்புறத்தில் உஷ்ணம். ‘நா வரேன்னு சொல்லு’ என்றார். வெளியே வரும்போது அங்கு நின்றிருந்தவர்களின் பார்வை கூசச்செய்தது.

ஆள் நடமாட்டமில்லாத தெரு வெயிலையும் மீறி கொஞ்சம் அமைதியளித்தது.  தொடை இடுக்குகளில் வியர்வை வழிந்து கால்கள் உரசும்போது உணரும் ஈரப் பிசுபிசுப்பு அசூயையாக இருந்ததால் கால்களைச் சற்று அகட்டி  நடக்க வேண்டியிருந்தது. வீட்டில் கேள்விகள், மன்றாடல், கோபம் என அதே சுழற்சியில் சண்டை. சொன்னபடி கொஞ்ச நேரம் கழித்து ராமசாமி வந்தார். அப்பா முகம் கொடுத்துப் பேசாதது வழக்கம்தான் என்பதால் நாற்காலியில் அமர்ந்தபடி எப்போதும் போல் அறிவுரைகள் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் இன்று அப்பா ‘நீங்க இதுல்லாம் இன்டெர்பியர் ஆகாதீங்க’ என்று சொல்லிவிட்டார். ராமசாமியின்  உடலசைவுகளில் இன்னும் இறுக்கம். ‘இனி என்ன வரச் சொல்லாதம்மா’ என்று அப்பா பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்த அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினார். ‘நீ நல்லா படிக்கறத விட்றாத’ என்று போகும்போது, சொன்னபோது கண்கள் தன்னிச்சையாக விரிந்து இமைத்தன. வீட்டினுள் கவிந்திருந்த அமைதியின் பாரத்தை தாங்க முடியவில்லை. பின்புறம் சென்று அமர்ந்த கொஞ்ச நேரத்தில் வியர்வையோடு  கண்ணீரும் சேர்ந்து கொண்டது. சத்தமிடாமல் அழுவது பழக்கம்தான். உள்ளே இறுதிகட்டச் சண்டை நடந்து கொண்டிருக்கும்.

நான்கு  மணி அளவில் இவனருகே  வந்த அம்மா ‘வந்து காப்பி குடிடா, மத்தியானமே சாப்டல’ என்றார். முகம் காலையில் இருந்ததை விட திடமாக இருந்தது.  உள்ளே அப்பாவும் காபி குடித்துக் கொண்டிருந்தார்.  மாலை உண்ணும்போது அம்மாவும் அப்பாவும் சில வார்த்தைகள் பரிமாறிக்கொண்டார்கள். வேலைக்குச் செல்வதைப் பற்றிய பேச்சு எழவில்லை. அன்றிரவு வீட்டில் டிவியும், ரேடியோவும் ஒலித்தது. அடுத்த நாள் காலை, அன்று சமைக்க வேண்டிய உணவைப் பற்றி பேசிக் கொண்டார்கள். வீடு மெல்ல இயல்பு நிலைக்கு திருப்பப்பட்டுக் கொண்டிருந்தது. ஹிந்தி தொடரில் கிருஷ்ணன் என்ன சொல்கிறான் என அம்மாவிற்கு மொழிபெயர்த்தார் அப்பா. ‘நாளக்கு ரெடியா’ என அப்பா கேட்க, தலையாட்டினான். ‘புக்ஸ்க்கு கவர் போட்டு கொடுத்துடுங்களேன், நீங்கதான் க்ளீனா பண்ணுவீங்க’ என்று அம்மா சொன்னதில் தெரிந்த செயற்கையான உற்சாகம் இவனுக்கு புதிதல்ல.

திங்கள் காலை வழக்கம் போல் எழுந்த அப்பா காய்கறி நறுக்குவது, இவனுக்கு மதிய உணவை எடுத்து வைப்பது போன்ற சின்ன உதவிகளை அம்மாவிற்குச் செய்தார். ‘சாப்டாம இருந்துராதீங்க’ என்று அப்பாவிடம் சொல்லி விட்டு அம்மா கிளம்பியபின்  தினசரியை எடுத்து படிக்க ஆரம்பித்தார். ஒரு வரி விடாமல் படித்து முடிக்க பதினொன்று ஆகிவிடும். இன்றிலிருந்து பள்ளிக்கு ‘பேண்ட்’. தையல் அளவைக் கொடுக்கும்போதும் தைத்த உடையை வாங்கும்போதும் இருந்த மகிழ்ச்சி இப்போது  இல்லை. மூட்டையை தூக்கிக் கொண்டு நடை.

பள்ளி மீண்டும் உயிர்பெற்றிருந்தது. துள்ளும் வெள்ளை, சிவப்பு இரட்டைச் சடைகள், பல விதங்களில் கட்டப்பட்ட டைகள். புதிய சீருடைகளைவிட அதிகமாக   சற்றே சாயம் போன சென்ற வருடத்திய உடைகள். முட்டிவரை நீளும், ஆடுசதை வரை  மூடும், நைந்து, கணுக்காலுக்கு சற்று மேல் வரை மட்டுமே வரும், எனப் பலவித காலுறைகள், அவற்றுக்கு இணையான தரத்தில் ஷூக்கள். தேர்வாகாமல் அதே வகுப்பில் மீண்டும் படிக்க வேண்டியவர்களின் அசௌகர்யம். புதிதாக பள்ளியில் சேர்ந்திருப்பவர்களின் ஆரம்ப கட்ட கூச்சம்.

வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் நண்பர்களின் உற்சாக வரவேற்பு. பசங்களிடம் புதிதாக பேண்ட் போட்ட சந்தோஷம். கோடையை கழித்ததை பற்றிய பரஸ்பர பிரஸ்தாபங்கள். இந்த ஆண்டு பாடமெடுக்கப் போகும் ஆசிரியர்கள் யாரென்று ட்யூஷன் செல்லும் ஓரிரு மாணவர்களை கேட்டான். விடுமுறை நாட்களின் சோம்பல் இன்னும்  மிச்சமிருக்கும் புதிய ஆரம்பத்தின் கிளர்ச்சியில் தளும்பி இருந்த வகுப்பறைச் சூழலில்  அச்சத்தை தள்ளி வைக்க முடிந்தது. முதல் மூன்று பீரியட்களுக்கு இவர்களுக்கு ஏற்கனவே சொல்லிக் கொடுத்துள்ள ஆசிரியர்கள். இன்னும் நான்கு பீரியட்கள்தான். அடுத்து வந்த ஆசிரியர் புதியவர். தன்னை அறிமுகம் செய்துகொண்டபின்  ஒவ்வொருவராக சொல்லிக் கொண்டு வர இவன் முறை. எழுந்து தன் பெயரைச் சொன்னான்.

‘பாதர் என்ன பண்றார்?”

கருணையின் கைகள்

மஜீஸ்

தனித்தலையும் காடென உணர்கிறேன்
இப்பயண வழி கொடியது
இது கனவுகள் நீண்ட சாலை
தீராக் கனவுகளும் தீர்ந்து போகும் இரவுகளும்
இன்னும் கொஞ்சம் தேவைப்படுகிறது எனக்கு
இந்த கண்ணாடியையும் இந்த முக மூடியைும்
நீ பத்திரப்படுத்திக்கொள்
ஏனென்ற கேள்வி
இங்கு தடை செய்யப்பட்டுள்ளது

ரகசியங்களை தேடி
நீ நெடுந்தூரம் பயணிக்கப் போகிறாயா?
எல்லா ரகசியங்களுக்கு பின்னாலும்
சிதைக்கப்பட்ட ஜீவிதத்தில் நான்
பூச்சியமாக்கப்பட்ட துயர் செய்தி மட்டுமே
உன்னை வந்தடையும் ஒரு நாளி்ல்

அந்த நாளில்
கருணையின் கைகள் நீளாதா
நீ விட்டுச்சென்ற இடத்தில்

இருப்புக்கும் விருப்புக்கும் இடையிலான இடைவெளி- ‘ஒரு அறையில் இரு நாற்காலிகள்’, ஆதவன் சிறுகதை

வெ. சுரேஷ்

இரு மனிதர்களுக்கிடையேயான நட்பின் அடிப்படை என்ன? ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நட்பு கொள்கிறோமா? அல்லது, நீண்ட காலம் நீடிக்கும் பழக்கம் புரிதலைச் சாத்தியமாக்கி, ஆழப்படுத்தி, நட்பையும் ஆழப்படுத்துகிறதா? சில பேருடன் எளிதில் நட்பு கொள்ள முடிகிறது. சிலரிடம் காரணமே இல்லாமல் விலக்கமே உருவாகிறது. யாரை விரும்புகிறோம், யாரை வெறுக்கிறோம் என்பதற்கெல்லாம் காரணங்கள் உண்டா? அல்லது, முதலில் தோன்றும் பிடித்த/பிடிக்காத  உணர்வுக்கு தர்க்க ரீதியான காரணங்களை நாம் முனைந்து  உருவாக்கிக் கொள்கிறோமா? பலரிடமும், ஏன், எல்லாருடனுமே நட்பாய் பழகவே மனம் ஆசைப்படுகிறது. ஆனால் சிலருடன் மட்டுமே அது சாத்தியப்படுகிறது. விருப்புக்கும் இருப்புக்குமான இந்த இடைவெளியின் காரணங்களைத் துல்லியமாக விளக்கி விட முடியுமா?

அப்படி துல்லியமாக விடை  அளித்து விடமுடியாத கேள்விகளாகவே எனக்கு எப்போதும் தோன்றுபவை இவை. ஆனாலும் மனித மனமும் மனிதனின் காரண காரிய விளக்கத்தை எப்போதும் நாடும் பகுத்தறிவும், எல்லாவற்றுக்கும் ஒரு தர்க்க ரீதியான விளக்கத்தை நாடியபடியே உள்ளன. இருப்புக்கும் விருப்புக்கும் இடையேயான இந்த இடைவெளிதான், இலக்கியத்தின் ஊற்றுக்கண் எனலாம். கலங்கிய நதியென ஓடும் வாழ்வின் ஆழங்கள் வெளிப்படும் தெள்ளிய, ஆனால் கணப்போதைய தருணங்களை மறு உருவாக்கம் செய்து, ஒரு வகையில் அதன் பொருளை நிரந்தரமாக்கி, இருப்புக்கும் விருப்புக்கும் இடையேயான இந்த இடைவெளிகளைப் புரிந்து கொள்ளவே இலக்கியம் உதவுகிறது. தத்துவத்துறையில் Is-Ought Problem என்று 250 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றி இதுவே பல்வேறு பார்வைகளில் விவாதிக்கப்பட்டு வருகிறது – அறத்தாறு எதுவென்ற கேள்வி இருப்புக்கும் விருப்புக்கும் இடையேயான இடைவெளியை நோக்கும்போது நம்முன் எழுவதைத் தவிர்க்க முடியாது. இலக்கியம் விடை தருகிறதோ, இல்லையோ, கேள்வியை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த அத்தனை கேள்விகளுக்குமான பதில்களையும், கேள்விகளையுமேகூட தர்க்கப்பூர்வமாக அலசிப் பார்க்கும் சிறுகதையே ஆதவனின் ‘ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்’

தில்லியில், ஒரு ‘சர்க்கார் காரியாலயத்தில்’ வேலை செய்யும்,  பகுதி நேர எழுத்தாளராகவும் இருக்கும் கைலாசம், எல்லோரோடும் ‘அட்ஜஸ்ட்’ செய்துகொண்டு வாழும் தகுதி கொண்ட திறந்த மனம் படைத்த ஒரு நவீன மனிதனாகவே தன்னை  உணர்பவர். அலுவலகத்தின் இட நெருக்கடி காரணமாக, அவர் அமர்ந்து வேலை செய்யும் அறையை  இன்னொரு  அலுவலருடன்  பகிர்ந்து கொள்ளும் சூழல் ஏற்படுகிறது. அப்படி அவரது அறைக்குள் வரும் இன்னொரு நாற்காலிக்காரர், அகர்வால்,

எத்தனை முயன்றும் அகர்வாலுடன் கைலாசத்தால் இயல்பான நட்புறவை வளர்த்துக் கொள்ள முடிவதில்லை.  .அகர்வாலோ அவரை பலவிதங்களிலும் நெருங்கி, நட்பாக பழக முயற்சித்துக் கொண்டே இருக்கிறார். அவர் நெருங்க நெருங்க இவரது விலக்கம் அதிகரிக்கிறது.

இதை எண்ணி மனம் நொந்து, தன்னைப் பற்றிய ஒரு ஏமாற்றத்தில் உண்டாகும் குற்றவுணர்ச்சியில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் வரும் தன்  நண்பர் ராமுவுடன் வெளியே (அகர்வாலுடன் சேர்ந்து சாப்பிடுவதை தவிர்த்த மகிழ்ச்சியுடன்) சாப்பிடச் செல்கிறார் கைலாசம். இவர்கள் இருவரிடையே நடைபெறும் நட்பு குறித்த  உரையாடலுமே இந்தச் சிறுகதை.

கைலாசமும் அகர்வாலும் ஏன் நட்பு கொள்ள முடிவதில்லை என்பதை கைலாசமும் ராமுவும் பல்வேறு கோணங்களில் விவாதிப்பதை ஆதவன் தனக்கே உரித்தான கூர்மையான, ஆழமான, சமயங்களில், வாய்விட்டுச் சிரிக்கவைக்கும் நகைச்சுவையுடன் பதிவு செய்திருப்பதே இந்தக் கதையை மீண்டும் மீண்டும் படிக்கத்  தூண்டும் ஒன்றாக ஆக்குகிறது. ராமுக்கு இவர்கள் இடையில் நட்பு கைகூடாததில்  கைலாசத்துக்கு இருக்கும் வருத்தம், தேவையில்லாத ஒன்றாக, இருப்பதாகப்  படுகிறது,. “பழக முடியலேன்னா, வெட்டி விட்டுற வேண்டியதுதானே,” என்பதே அவரது எளிமையான தீர்வு. ஆனால் கைலாசத்துக்கு அப்படியல்ல. “எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்,  யார் மனதையும் புண்படுத்தக் கூடாது, கருத்து பரிமாற்றம், செயது கொள்ளணும்னு” நம்புகிறவர் அவர்.  ஆனால், அதை ஒரு மூட நம்பிக்கை என்று  நிரூபித்துவிடுகிறார் அகர்வால்.

இது இரு தனிமனிதர்கள் இடையேயான பிரச்னை மட்டுமல்ல, இருவேறு மொழிகள், கலாச்சாரங்களின் பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதிலும் பிரச்னை இருக்கிறதோ என்பதையும் அலசுகிறார் ஆதவன். தமிழரான கைலாசம், உத்தரபிரதேசவாலாவான அகர்வால் எதிர்பார்க்கும் ஒரு சராசரி “மதராஸி”யாக இருப்பதில்லை. சப்பாத்தி, சமோசா, சாப்பிடுவதிலோ இந்திப் படங்களை பார்ப்பதிலோ எந்தத் தயக்கமும் கைலாசத்துக்கு இல்லை என்பதில் அகர்வாலுக்கு இருக்கும் ஏமாற்றத்தில் மிக நுட்பமாக இந்தியாவின் வடக்கு- தெற்கு அரசியலையும் கொண்டு வந்து விடுகிறார் ஆதவன். கைலாசத்திடம் இல்லாத, வட இந்திய எதிர்ப்புணர்வுக்கு பதிலாக அகர்வால் மேற்கொள்ளும் இட்லி, தோசை, சாம்பார் விருப்பம், தமிழக அறிஞர்கள், அரசியல் ஆகியவற்றின் மீது அவர் இவருக்காக மேற்கொண்டு காட்டிக்கொள்ளும் ஆர்வம், இவையெல்லாம் கைலாசத்துக்கு ஏதோ தேசிய ஒருமைப்பாட்டுக்கான போட்டியில் நடக்கும் நாடகத்தில் பங்கு பெரும் உணர்வை ஏற்படுத்துகிறது.

அடுத்து பெண்கள், செக்ஸ் ஆகிய விஷயங்கள் குறித்து உரையாடல் திரும்புகிறது. இவற்றைப் பற்றி சகஜமாக இருவரும் பேசிக் கொள்ள முடிகிறதா என்று கேட்கிறார் ராமு. அதையும் முயற்சித்தாயிற்று, ஆனால் அதைப் பற்றி பேசினால், அவன் அதற்கு மட்டும்தான் லாயக்கானவன் என்று தான் நினைப்பதாக அவன் நினைப்பதில்தான் முடிகிறது என்று வருத்தத்துடன் சொல்கிறார் கைலாசம். ஒருவர் வீட்டுக்கு ஒருவர் சென்றதுண்டா என்றால், அந்தக் கூத்தும் நடந்துவிட்டது, அகர்வால், வீட்டு தோசை சாப்பிட வேண்டும் என்றதால், கைலாசத்தின் வீட்டுக்கு ஒருமுறை வந்திருக்கிறார். ஆனால், அங்கு, அவர் கைலாசத்தில் மனைவியின் சமையலைப் புகழ்வதும், அவரை மகிழ வைப்பதற்காக அபத்தமான ஜோக்குகளை அடிப்பதும் கைலாசத்தின் மனைவிக்கு பிடிக்காமல் போகிறது- அவர்  கண்டிப்புடன் சொல்லிவிடுகிறார்,  அகர்வால் வீட்டுக்குத் தானும் வரமாட்டேன், கைலாசமும் போகக் கூடாது என்று. இதற்கு ராமுவின் பதில், பெண்கள் இந்த விஷயத்தில் எப்போதுமே நல்ல முன்னெச்சரிக்கையுடைவர்கள் என்பது.

ஆங்கிலத்தில்,Two good people not made for each other, என்று சொல்வார்கள். கைலாசமும் அகர்வாலும், இருவருமே அடிப்படையில் நட்பார்ந்தவர்கள்தான், ஒருவொருக்கொருவர் மதித்து உறவாடும் நோக்கமும் உள்ளவர்கள்தான். ஆனாலும் அவர்களிடையே ஏன் அந்த நட்பு மலர்வதில்லை என்பதே கைலாசத்தைக் குடையும், குற்ற உணர்வுக்கு ஆளாக்கும் கேள்வி. எல்லா வழிகளிலும் முயன்றும் முகிழ்க்காத ஒரு நட்பை சராசரித்தனத்திலிருந்து மேம்பட்டிருப்பதாக தான் நம்பும் தன் தனித்தன்மையின் தோல்வி என்றே காண்கிறார் கைலாசம்.

கதையின் இறுதியில் அலுவலகக் கேர்டேக்கரிடம் தம் அறையில் அகர்வாலின் இருக்கைக்கும் தன் இருக்கைக்கும் நடுவே ஒரு தடுப்பு போட்டுத் தரச்சொல்லி கைலாசம் கேட்க, உ.பி வாலாக்களோடு சேர்ந்திருக்கவே முடியாத நிலை குறித்த கேர்டேக்கரின் பிரசங்கத்தை மறுப்பேதும் சொல்லாமல், மௌனமாகக் கேட்டுக் கொண்டு அமர்ந்திருக்கிறார் கைலாசம்.