எழுத்து

விமரிசனம் என்றால் என்ன? – தன்னையே கேட்டுக் கொள்கிறார் ஏ.ஓ. ஸ்காட்

nonfiction_a-o-_scott_cover_2

கே – விமரிசனத்தின் நோக்கம் என்ன? விமரிசகர்களால் என்ன பிரயோசனம் இருக்கிறது?

ப – இவை பெரிய கேள்விகள்! இருந்தாலும், யாரும் கேட்கக்கூடிய கேள்விகள்தான். ஆனால் இரண்டும் ஒரே கேள்வியல்ல.

கே: ஆனால் விமரிசகர்கள் செய்வதெல்லாம் விமரிசனம்தானே?

ப: நிச்சயமாக, விமரிசகர்கள் செய்வது விமரிசனம்தான். அதே போல், விமரிசனம் செய்பவர்கள் எல்லாரும் விமரிசகர்கள்தான். இப்படிச் சொல்வதில் உள்ள பிரச்சினை இப்போது உங்களுக்குப் புரிகிறது என்று நினைக்கிறேன்.

நாம் இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறோம், ஆனால் அதற்குள் சொன்னதையே சொல்லத் தொடங்கிவிட்டோம். விமரிசனம் செய்வதைப் பற்றி பேசும்போது, நாம் ஒரு வேலையைப் பேசுகிறோமா?- எழுத்து வகையொன்று, பாண்டித்தியம் அல்லது பத்திரிக்கைத் துறையின் வகையினம், ஏதோ ஒரு அறிவுத்துறை- இதில் வேலை செய்து பிழைப்பவர்கள் விமரிசகர்கள் என்று சொல்லலாமா? அல்லது, விமரிசனத்தைப் பேசும்போது நாம், அந்த அளவுக்கு அதிக நிபுணத்துவம் அல்லாத ஒரு செயல்பாட்டைப் பேசுகிறோமா? விமரிசனம் செய்வது என்பது சீட்டு விளையாடுவது, சமையல் செய்வது அல்லது சைக்கிள் ஓட்டுவது மாதிரி யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளக்கூடிய விஷயமா? அல்லது விமரிசிப்பது என்பது அதைவிட அடிப்படையான, அதைவிட தன்னிச்சையான செயலாக இருக்குமா, கனவு காண்பது அல்லது மூச்சு விடுவது அல்லது அழுவது போன்ற விஷயமா?

கே- இங்கு கேள்விகளை நான் கேட்க வேண்டும் என்பதுதான் ஏற்பாடு என்று நினைக்கிறேன்

ப- மன்னித்துக் கொள்.

கே- சரி, மறுபடியும் முதலிலிருந்து துவங்குவோம். உன்னிடமிருந்தே துவங்குவோம். உன் தொழில் விமரிசனம், அது தவிர நீ, விமரிசனம் என்றால் என்ன என்றும், அதன் நோக்கம் என்ன என்றும் அதிகம் சிந்திக்கிறாய்.

ப- நான் செய்வதை இந்த வரிசையில்தான் பேச வேண்டும் என்றில்லை. தவிரவும் இதை மட்டும்தான் செய்கிறேன் என்றும் சொல்ல முடியாது.

கே- சரி. ஆனால் நான் கேட்க வந்தது…

ப- என்னால் என்ன பிரயோசனம்? நான் செய்வதன் நோக்கம் என்ன?

கே- சரி, உன் விருப்பப்படி அப்படியும் கேட்கலாம். ஆனால் நான் இந்த அளவு விரோத பாவனையில் கேட்க மாட்டேன்.

ப- அதெல்லாம் ஒன்றுமில்லை. வில்லியம் பிளேக் சொன்னது போல், எதிர்ப்பே உண்மையான நட்பு. ஒவ்வொரு விமரிசகனும் அவநம்பிக்கை, சந்தேகம், சில சமயம் முழுமையான காழ்ப்பு என்று அத்தனையையும் எதிர்கொள்ளப் பழகிக் கொள்கிறான். உனக்கு என்ன ஒரு துணிச்சல்! யார் உனக்கு இந்த உரிமை கொடுத்தது? நீ சொல்வதை ஏன் நான் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்? இந்தக் கேள்விகள் எல்லாம் எங்களுக்கு வாடிக்கையான விஷயங்கள். எங்கள் தகுதி குறித்து, எங்கள் அறிவு குறித்து, எங்கள் இருப்புக்கான உரிமை குறித்தே கேள்வி எழுப்பத் தூண்டுவது- விமரிசகனாக இருப்பதில் மிகப் பெரிய வேலை இது என்று தோன்றுகிறது.

கேள்வி- சரி, நீ இப்போது அதற்கெல்லாம் பதிலடி கொடுப்பது என்று முடிவு செய்திருக்கிறாய். உன் கருத்துகளின் நியாயத்தைச் சொல்ல விரும்புகிறாய். சாமுவேல் எல் ஜாக்சனுக்கு பதிலடி கொடுப்பதற்காகத்தான் இந்தப் புத்தகத்தில் உள்ளவற்றை எல்லாம்  நீ எழுதினாய் என்று சொல்வது சரியாக இருக்குமா?

பதில்- முழுக்க அப்படி இருக்கும் என்று ஒப்புக் கொள்ள முடியாது. ஆனால் நீ இந்தப் பேச்சை எடுத்தது குறித்து சந்தோஷப்படுகிறேன். இதன் பின்னணி பற்றி கொஞ்சம்: மே 2012ல், அன்றைக்கு The Avengers- நீ அந்தப் படம் பார்த்தாய்தானே? எல்லாரும் பார்த்தார்கள்- அந்தப் படம் வட அமெரிக்கா எங்கும் 3500 இடங்களில் திரையிடப்பட்டது. நான் அந்தப் படத்தில் உள்ள சில விஷயங்களைப் பாராட்டி ஒரு விமரிசனம் எழுதினேன்- புத்திசாலித்தனமான வசனங்கள், கூர்மையான நடிப்பு-, வேறு சில விஷயங்கள் பற்றி குறை சொன்னேன், அதிலும் குறிப்பாக மகத்தான வெற்றி பார்முலா எனும் பீடத்தில் ஒரிஜினாலிட்டியை பலி கொடுத்ததைக் குற்றம் சொன்னேன். நானே என்னை மேற்கோள் காட்டலாம் என்றால்: “தி அவஞ்சர்ஸ்”சின் வெற்றி ரகசியம் இதுதான்- இது விறுவிறுப்பாய் நகரும் ஒரு சிறிய டயலாக் காமெடி. ஆனால் இந்த திரைக்கதை வேறொன்றாக, மார்வலுக்கும் அதன் புதிய ஸ்டூடியோ முதலாளிகள் மற்றும் வால்ட் டிஸ்னி கம்பெனிக்கும் ஒரு மாபெரும் ஏடிஎம் மெஷினாக, மாறுவேஷம் போட்டுக் கொண்டு வந்திருக்கிறது”. இப்போது பார்க்கும்போது இந்த மதிப்பீடு நியாயமாகத்தான் தெரிகிறது, நானே அப்படிச் சொல்லிக் கொள்ளலாம், இல்லையா? அதன்பின் சில ஆண்டுகள் கழித்து “அவஞ்சர்ஸ்- ஏஜ் ஆஃப் அல்ட்ரான் வந்தபோது ஏறத்தாழ எல்லாருமே இதே மாதிரிதான் சொன்னார்கள்- அதன் வசீகரங்களும் திரில்களும் உயிரற்ற கார்ப்பரேட் ஸ்பெக்டகில் ஆனதில் ஒன்றுமில்லாமல் போய் விடுகிறது என்றார்கள். மிகச் சாதாரணமான ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டுபவர்களின் முன்வரிசையில் நானும் ஒருவனாய் இருந்தேன் என்று சொல்லிக் கொள்வதிலும் ஒரு திருப்தி இருக்கத்தான் செய்கிறது.

இருந்தாலும் அந்த சமயத்தில், நான் சொன்னதற்கு அவசரப்பட்டு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் என்னை பாதித்தார்கள். நியூ யார்க் டைம்ஸ் தளத்தில் என் விமரிசனம் பதிப்பிக்கப்பட்டவுடன், அவஞ்சர்ஸ் படத்திலும் மார்வல் யூனிவர்ஸ் பிரான்சைஸ் வெளியீடுகளிலும் நிக் ஃபியூரியாக நடிக்கும் ஜாக்சன், டிவிட்டரில் ஒரு நிலைத்தகவல் பகிர்ந்து கொண்டார்- “ஏ.ஓ. ஸ்காட்டுக்கு வேறொரு புதிய வேலை தேவைப்படுகிறது! அவருக்கு வேலை கிடைக்க உதவுவோம்! அவரால் செய்யக்கூடிய வேலை கிடைக்கட்டும்!” என்று தன்னைத் தொடர்பவர்களைத் தூண்டும் விதமாக எழுதினார். அவரைத் தொடர்பவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் அவரது அழைப்பை ஏற்றனர்- என் எடிட்டர்கள் என்னை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லவில்லை. மாறாய், டிவிட்டரின் சிறந்த மரபுகளுக்கு ஏற்ப, நான் என்னைக் கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும் என்ற அவர்களது கற்பனையை விரிவாகச் சித்தரித்து  ஜாக்சன் கோபத்தில் சொன்னதை ரீட்வீட் செய்து பரிந்துரைத்தனர். இவற்றில் அர்த்தமுள்ள டிவீட்டுகள் பழகிப்போன, ஏன், கானனிக்கல் என்றும்கூட சொல்லக்கூடிய எதிர்-விமரிசன உணர்வுகளை வெளிப்படுத்தின: எனக்கு சந்தோஷப்படத் தெரியாது; நான் எல்லாருடைய மகிழ்ச்சியையும் கெடுக்கப் பார்க்கிறேன்; நான் வெறுப்பவன், மரபானவன், மேல்தட்டுப் பார்வை கொண்டவன். இதில் எனக்கு மிகப் புதிதாய் இருந்தது- காமிக் புக்ஸ் படிக்கப் பிடிக்காதவனாக இருந்ததால் உயர்நிலைப் பள்ளியில் படித்த காலத்தில் எல்லாரிடமும் உதை வாங்கிய நெர்ட்டாக இருந்த நான் இப்படிப்பட்ட ஒரு ஆளாக இப்போது வளர்ந்திருக்கிறேன் என்பதுதான் (என் காலத்தில் எல்லாரிடமும் அடி வாங்கிய நெர்டுகளில் சிலர் காமிக் புக்ஸ் வாசிப்பவர்களாக இருந்தார்கள். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது என்று நினைக்கிறேன், எல்லாவற்றிலும் சூப்பர் ஹீரோக்களும் ஃபேன்பாய்களும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். நான் அடி வாங்கிய எதற்கும் காமிக் புக்ஸ்கள் காரணமாக இருந்திருக்கவில்லை).

இன்றைக்கு நம் கலாசார வாழ்வின் மாற்ற முடியாத அங்கமாக இருக்கும் அபத்தமான, ஹைப்பர்ஆக்டிவ் இன்டர்நெட் சச்சரவுகளில் ஒன்றாய் அவஞ்சர்ஸ் சம்பவமும் வளர்ந்து வெடித்தது. மேஸ் விண்டு என் வேடத்தைக் கலைத்து விட்டார்! ஜூல்ஸ் வின்ஃபீல்டின் அறச்சீற்றத்துக்கு நான் காரணமாகி விட்டேன்! பொழுதுபோக்கு விஷயங்களை விவாதிக்கும் தளங்களில் ஜாக்சனும் நானும் போட்டோஷாப் செய்யப்பட்ட ஆக்சன் மூவி சண்டைப் போஸ்களில் நின்றோம். மழைக்குப்பின் முளைக்கும் காளான்கள் போல் மினியேச்சர் கருத்துக் கட்டுரைகள் முளைத்தன. நாங்கள் டிவிட்டரில் சண்டை போட்டது பிரேசில், ஜப்பான், ஜெர்மனியில் செய்தியானது. பலமான தாக்குதலுக்கு உள்ளான எனக்கு ஆதரவாகப் பேச  என் சகாக்களில் சிலர் முன்வந்தார்கள்- எந்த வேலையைச் செய்யும் தகுதி எனக்குக் கிடையாது என்று ஜாக்சன் நினைத்தாரோ அந்தப் பொறுப்பின் நேர்மையையும் முக்கியத்துவத்தையும் பாதுகாப்பது தங்கள் கடமை என்று அவர்கள் நினைத்தார்கள்.

 கேள்வி- நீ பயப்படவில்லையா?

பதில் – அதற்கு மாறாய், எனக்கு  நன்றி சொல்ல வேண்டும் போலிருந்தது. என் உயிருக்கோ பிழைப்புக்கோ எந்த ஒரு ஆபத்தும் இருக்கவில்லை. உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையின் ஒரு பில்லியன் டாலர்கள் என்ற இலக்கை விரைவில் தொட்ட படங்களில் இன்றும் இரண்டாவது இடத்தில் உள்ள படம் தி அவஞ்சர்ஸ். டிவிட்டரில் எனக்கு சில நூறு ஃபாலோயர்கள் கிடைத்தார்கள். குறுகிய ஒரு சில நிமிடங்கள் நான் காரித் துப்பப்பட வேண்டிய வில்லனாகவும் மேன்மையான, மிகவும் வசை பாடப்பட்ட லட்சியத்தின் தியாக பிம்பமாகவும் ஒரே சமயத்தில் இருக்க முடிந்தது. அனைவருக்கும் இது வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு அளித்தது, அதன்பின் எல்லாரும் அடுத்த வேலை பார்க்கப் போய் விட்டார்கள்.

ஆனால் தேநீர்க்கோப்பையில் வீசும் புயலும் வானிலையை பாதிப்பதாக இருக்கக்கூடும். ஜாக்சன் ஒரு முக்கியமான, நியாயமான கேள்வி எழுப்பியிருக்கிறார் என்று நினைக்கிறேன். தி அவஞ்சர்ஸ் பற்றியோ வேறெந்த படத்தைப் பற்றியோ நான் எழுதியதில் உள்ள நியாய அநியாயங்களை ஒருபுறம் விலக்கி வைப்போம்- விமரிசகனின் வேலை என்ன என்றும் அதை ஆக்சுவலாகவே எப்படி செய்ய முடியும் என்றும் கேட்பதில் எப்போதும் ஒரு அர்த்தம் இருக்கிறது.

கேள்வி- ஆக, உன் தொழிலை உணர்ச்சிவசப்படும் திரை நட்சத்திரங்களையும் அவர்களது ரசிகர்களையும் தாக்குதல்களிலிருந்து- விமரிசனத்திலிருந்து- பாதுகாத்துக் கொள்வதற்கான காரணங்களை இதில் நீ எழுதியிருக்கிறாய். இது கொஞ்சம் இரட்டை வேடம் போடுவது போலில்லையா? நீ என்ன வேண்டுமானாலும் சொல்வாய், ஆனால் உன்னைப் பற்றி மற்றவர்கள் சொல்வதை உன்னால் ஏற்றுக் கொள்ள முடியாதா?

பதில் – உண்மையில் அப்படியில்லை. அதாவது, ஆமாம் நாம் யாருடைய படைப்புகளைப் பற்றி எழுதுகிறோமோ அவர்கள், ஏன், நம் வாசகர்கள், நாம் செய்வதில் சிறிது குறை சொல்லும்போது நாம் எல்லாரும் கொஞ்சம் உணர்ச்சிவசப்படத்தான் செய்கிறோம். அது மனித சுபாவம்தான். ஆனால் எனக்கு அதைவிட இதுதான் முக்கியமாக இருக்கிறது- நாம் ஒருவரையொருவர் விமரிசித்துக் கொள்கிறோம் என்பதில் ஒரு பொதுப்பண்பை என்னால் பார்க்க முடிகிறது- மனித இனத்துக்கே பொதுவான சுபாவம் இது என்றுகூட சொல்லுவேன்- நாம் எல்லாரும் குறை கண்டுபிடிக்கிறோம். நாம் போற்றவும் செய்கிறோம். தீர்ப்பும் சொல்கிறோம். இதுதான் விமரிசனத்தின் அடித்தளம். நல்லது கெட்டது, எதைக் கண்டனம் செய்ய வேண்டும், எதை ஊக்குவிக்க வேண்டும், எதைப் பற்றி நம் நண்பர்களிடம் சொல்ல வேண்டும் என்பதை நாம் எப்படி அறிகிறோம், அல்லது இது நமக்குத் தெரியும் என்று நாம் எப்படி நினைத்துக் கொள்கிறோம்? தி அவஞ்சர்ஸ் அல்லது எதுவாகவும் இருக்கட்டும், அதன் வெற்றி தோல்வியை நாம் எப்படி மதிப்பிடுகிறோம்? உண்மையைச் சொன்னால், அது நம் வேலையோ இல்லையோ, நாம் ஒரு முடிவுக்கு வரத்தான் செய்கிறோம். நம்மால் இதைச் செய்யாமல் இருக்க முடியாது.

கேள்வி : சரி, நாம் எப்படி தீர்மானம் செய்கிறோம்? அல்லது, கேள்வி இப்படி இருக்க வேண்டுமோ, “நாம் ஏன் ஒரு தீர்மானத்துக்கு வருகிறோம்?”

பதில் – நிஜமாகவே சொல்கிறேன், நான் இந்தப் புத்தகத்தை எழுத ஆர்மபித்தபோது என் கேள்விகளுக்கான பதில்கள் சுலபமாகக் கிடைக்கும் என்று நினைத்தேன், ஆனால் அப்படியெல்லாம் இல்லை. தெளிவாகவும் ஆணித்தரமாகவும் நான் சொல்லக்கூடிய பதில்கள் இருக்கும் என்று நினைத்தேன். எது அழகாக இருக்கிறது, எது பொருள் பொதிந்ததாக இருக்கிறது, எது சந்தோஷப்படுத்துகிறது என்பதை நான் இதை எழுதும்போது கண்டுகொள்வேன் என்று நினைத்தேன்- ஒரு வேளை மானுட இனத்தின் துவக்கக் காலத்தில் நாம் நம்மை வேட்டையாடும் மிருகங்களைத் தவிர்க்கவும் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ளவும் நியூரல் சுவிட்சுகள் அல்லது ஹார்மோனல் எதிர்வினைகளை பரிணாம வளர்ச்சியின் போக்கில் வளர்த்துக் கொண்டோம் என்ற முடிவுக்கு வரலாம். அல்லது இதன் மதிப்பு இவ்வளவு என்று பகுத்து உணரவும் தீர்மானங்களுக்கு வரவும் தேவையான உள்ளார்ந்த, காலத்துக்கப்பாற்பட்ட  தர அளவைகள் நமக்குள் இருக்கும்; அவை நூற்றாண்டு கால மாற்றங்களில் உருவம் மாறி இடத்துக்கு இடம் வெவ்வேறு வகைகளில் வெளிப்பட்டாலும், அவை நம்மை உண்மையும் அழகும் நிறைந்த பாதையில் எப்போதும் கொண்டு செல்லும் என்ற முடிவுக்கு வரலாம் என்று நினைத்தேன்.

மனித படைப்பூக்கத்தின் வரலாற்றைப பார்க்கும்போது உன்னால் பாட்டர்ன்களைப் பார்க்க முடிகிறது- வடிவங்கள், ஒலிகள், கதைகள்- அவை மிக ஆழ்ந்த ஒரு தளத்தில் பரம்பரை பரம்பரையாக ஒரு தொடர்ச்சி கொண்டதாய் இருந்து வந்திருப்பதை உணர்த்துகின்றன. மனிதனின் படைப்புகள் எண்ணிறந்த அளவில் பரந்துபட்டிருப்பதை நீ பார்க்க முடியும். அது அத்தனையையும் ஒரு பகுப்பில் அல்லது குறிப்பிட்ட சில அளவைகளுள் தொகுத்துக் கொள்ள முடியாது என்ற முடிவுக்கும் நீ வரலாம். ஒவ்வொரு கலாசாரமும், ஒவ்வொரு வர்க்கமும், ஒவ்வொரு இனக்குழுவும் ஒவ்வொரு நட்புக்குழுவும் வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டமும் தனக்கான கலைகள் மற்றும் புத்தாக்கங்களுக்குப் பொருந்தும் வகையில் தனக்கேயுரிய கானன்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களை நம் நவீன, காஸ்மோபாலிட்டன் கூருணர்வுகள் முகர்ந்து பார்க்கின்றன, வகைமாதிரிகளைத் தேர்ந்தெடுத்து ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டு பகுத்துப் பிரித்து நாம் கண்டறிந்ததை ஏற்றுக் கொள்ளும் இனிய செயலைச் செய்கின்றன. இவற்றுக்கிடையே, புதிய புதிய விஷயங்கள் தோன்றி நம்மைத் தமக்குள் மூழ்கடிக்கின்றன – இந்த வெள்ளம் நம்மை அசைய விடாமல் ஆட்கொண்டு நம்மில் வெறுமை நிறைத்தாலும் இதுவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. எத்தனை எத்தனை என்று வியக்கிறோம், அல்லது இவ்வளவு இருக்கிறதே என்று கவலைப்படுகிறோம். நம் கவனத்தை அத்தனை அத்தனை விஷயங்களும் கோருகின்றன, நம்மை வசீகரிக்கத்தான் எத்தனை எத்தனை கவனக்குலைவுகள், நம் மேஜை மீதுதான் எத்தனை எத்தனை தரிசனங்கள்- இவற்றிலிருந்து ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுப்பதே ஒரு பெரும்பாடு போலிருக்கிறது.

கேள்வி- அந்த வேலை- தேர்ந்தெடுப்பது, வேறுபடுத்திப் பார்ப்பது, மதிப்பிடுவது, புதிய விளக்கம் அளிப்பது- இதைத்தான் நீ விமரிசனம் என்று சொல்கிறாய்.

பதில் – ஆமாம். ஆனால் இது அதைவிட அடிப்படையான, அவசரமான விஷயமும்கூட. இது சிக்கலான விஷயம். சாமுவேல் எல். ஜாக்சன் விஷயத்துக்குப் போகலாம். அவஞ்சர்ஸ் நிகழ்வு முடிந்து ஆறு மாதங்களுக்குப்பின் அவர் ஹப்பிங்டன் போஸ்ட் நேர்முகம் ஒன்றில் எங்கள் டிவிட்டர் சண்டையைப் பேசினார். அதில் விமரிசனம் பற்றி, அதிலும் குறிப்பாக பாபுலர் கலாசாரத்தை விமரிசனம் செய்வது பற்றி, பொதுவாகவே பரவலாகப் பேசப்படும் ஒரு குற்றச்சாட்டை அவரும் சொன்னார். “உலகத்தில் தொண்ணூற்று ஒன்பது சதவிகித மக்கள் சினிமாவை சினிமாவாகதான் பார்க்கிறார்கள்,” என்று சொன்னார் அவர். “அறிவுத்தளத்துக்கு கொண்டு போகக்கூடிய அறிவார்ந்த விவாதத்துக்கு உரியது அல்ல பாபுலர் சினிமா”.  இது வெகு காலமாகச் சொல்லப்படுவது, இது விமரிசனத்துக்கு எதிரான சக்திவாய்ந்த வாதம்- ஒரு சில வகைகளில் பார்த்தால் இதற்கு பதிலே கிடையாது. ஒரு படைப்பை அதன் அளவைகளைக் கொண்டே அணுக வேண்டும், அனுபவிக்க வேண்டுமே தவிர ஆராயக் கூடாது என்பன போன்ற கருத்துகளில் வேரூன்றிய பார்வை இது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ள மறுப்பதுதான் விமரிசகனின் வேலை. எது ஒன்றையும் அது எப்படி இருக்கிறதோ அப்படி மட்டும்தான் பார்க்க வேண்டும் என்பதை அவன் ஏற்றுக்கொள்ளக் கூடாது, அதை அறிவார்ந்த வகையில் கூர்நோக்க வேண்டும் என்று அவன் வலியுறுத்தியாக வேண்டும்.

 “அறிவுஜீவித்தனம்” என்பது வேண்டுமென்றே அழகற்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல், ஒருவரை நோக்கி அச்சொல்லைப் பயன்படுத்துவதே குற்றம் சாட்டும் செயல். ஆனால் உண்மையில் அறிவுஜீவித்தனம் என்பது, “யோசித்துப் பார்” என்பதற்கு இணையான சொல்தான். யோசித்துப் பார்த்து எடுக்கப்பட்ட படம், யோசித்துப் பார்க்கும் சாத்தியங்கள் கொண்டது என்ற இரண்டும் தி அவஞ்சர்ஸ் படத்துக்கு பொருந்தக்கூடும் என்பதை ஏன் இத்தனை தீவிரமாக மறுக்க வேண்டும்? இந்தக் கேள்வியைக் கேட்பதில் அர்த்தம் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஜாக்சன் உட்பட, அதன் படைப்பாளிகள் தங்கள் அறிவைப் பயன்படுத்தி, அவர்கள் அறிந்தே மேற்கொண்ட சில நோக்கங்களின் காரணமாக உருவான படம் என்ற பொதுப் பார்வையில் தி அவஞ்சர்ஸ் நிச்சயம் ஒரு “அறிவார்ந்த விவரணை”தான். மேலும், அது பிற கேளிக்கை காமிக் புத்தகங்கள் பலவற்றைப் போல், பெரும்பொருட்களைப் பேசுகிறது- கௌரவம், நட்பு, பழிவாங்குதல், சட்டத்துக்கு உட்பட்ட உலகில் தீமை இருப்பதன் சிக்கல், இப்படி பல சொல்லலாம். இந்த வகைமையின் ரசிகர்களும் உயர்நிலைப்பள்ளியில் ஆங்கிலம் பயின்றவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம்தான் இது. இறுதியாக, இருபத்து ஒன்றாம் நூற்றாண்டு ஹாலிவுட் தயாரிப்புகளைச் செலுத்தும் உலகளாவிய வணிகத்தின் கட்டளைகளுக்கு எதிராய் விளையாட்டாய் கதைசொல்லும் உந்துதல் முட்டிக்கொள்ளும்போது என்ன நடக்கிறது என்பதை தி அவஞ்சர்ஸ் காட்டுகிறது (என் கோணத்தில் இதுதான் என்னை ஆத்திரப்படுத்துகிறது).

இத்தனையும் சொல்வதானால் தி அவஞ்சர்ஸ் மிகவும் சுவாரசியமான, சிக்கலான படைப்பு என்றும் அதன் வெற்றிகளும் குறைபாடுகளும் சிந்திக்கத்தக்கன என்றும் சொல்வதாகும். ஆனாலும்கூட நல்லது கெட்டது பிரித்துப் பார்த்து, இதற்குரிய பின்புலத்தைக் கண்டு இதன் இடத்தை நிறுவுவதைப் பற்றி யோசித்துப் பார்ப்பதேகூட நாம் முக்கியமான விஷயத்தைத் தவற விடுவதாக அமையலாம். அல்லது, ஜாக்சன் சொல்வது போல், “…if you say something that’s fucked-up about a piece of bullshit pop culture that really is good—‘The Avengers’ is a fucking great movie; Joss [Whedon] did an awesome job—if you don’t get it, then just say, ‘I don’t get it’”, என்று விட்டுவிடலாம்.

ஆனால், தி அவஞ்சர்ஸ் எப்படிப்பட்ட படம் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். குறிப்பாக, அவஞ்சர்ஸ் படத்துக்கு விமரிசிக்கப்படும் தகுதியில்லை (“a piece of bullshit pop culture”)  என்று சொல்லிக்கொண்டே அது விமரிசனத்துக்கு அப்பாற்பட்டது (“a fucking great movie”) என்றும் ஜாக்சன் இரட்டை அளவுகோல்களைப் பிரயோகிப்பதை என்னால் ரசிக்க முடிகிறது. முன்னொரு காலத்தில் திரைப்படங்கள், ரசமற்ற மற்றும் நடுவாந்தர பொழுதுபோக்குகள் குறித்து அறிவுஜீவிகள் மிகச் சுலபமாகக் கொண்டிருந்த யோசனையற்ற எள்ளலை அவர் எதிரொலிக்கிறார். அதே சமயம், மிகவும் புராதானமான, மிகுந்த உயர் விமரிசனப் பார்வையில், கலைப்படைப்பு என்பது களங்கப்படுத்தப்பட முடியாதது, அது தன்னளவிலேயே பூரணமானது என்ற கருத்தையும் அவர் இங்கு பயன்படுத்திக் கொள்கிறார். இப்படிப்பட்ட கருத்துச்சூழலில் ஒரு விமரிசகன், எந்த வகையிலும் அச்சுறுத்தாத, விளையாட்டாகச் செய்யப்பட்ட கேளிக்கையை தீவிரமாக எடுத்துக் கொள்ளும் குற்றம் செய்தவன் ஆகிறான். அல்லது, மிகவும் உன்னதமான ஒன்றை தன்னுடைய அபத்த மட்டத்துக்குக் கீழே தள்ளிய குற்றம் புரிந்தவன் ஆகிறான். எப்படிப் பார்த்தாலும் விமரிசகன் குற்றம் செய்தவன்தான்.

ஆனால் இங்கே இதுதான் முக்கியம்: இதைச் செய்யும் விமரிசகன், தான் அவஞ்சர்ஸ் பார்த்த அனுபவம் பற்றியோ (அல்லது ஒரு நாவல் வாசித்தது பற்றியோ ஓவியத்தை ரசித்தது பற்றியோ இசை கேட்டது பற்றியோ) பேசும்போது, நின்று நிதானித்து யோசிக்கும் யாரையும்விட வித்தியாசமாய் எதுவும் செய்வதில்லை. ஏனென்றால், சிந்திக்கும்போதுதான் விமரிசனம் துவங்குகிறது. நாம் அத்தனை பேரும் அந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் ஆகிறோம். இல்லையென்றால், ஒரு படைப்பை எதிர்கொள்கையில் நாம் இந்தக் குற்றத்தைச் செய்திருக்க வேண்டும்.

கேள்வி : ஆக, சிந்தனைக்கு ஆதரவாக இப்போது புத்தகம் எழுதியிருக்கிறாயா? உன் வாதம் என்ன? உண்மையில் யாரும் சிந்திக்கக்கூடாது என்று சொல்வதில்லை.

பதில் – சீரியசாகவா சொல்கிறாய்? சிந்தனாவாதத்தை எதிர்ப்பது ஏறத்தாழ நம் குடிமைச் சமயமாகவே ஆகிவிட்டது. “விமரிசனச் சிந்தனை (Critical thinking)” என்பது எங்கும் காணக்கிடைக்கும் கல்விக் கோஷமாக இருக்கலாம்- தெளிவாக வரையறை செய்யப்படாத இந்த ஆற்றலை வளர்பருவத்தில் நம் குழந்தைகள் போகிற போக்கில் எங்காவது கண்டெடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்- ஆனால் உலகில் நீ உன் அறிவைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கான பலன் அபரிதமான அளவில், கைமேல் கிடைக்கிறது.

கலாசார நுகர்வோர்கள் என்ற வகையில் நாம் எதுவும் செய்யாமலிருக்கும் வகையில் ஆற்றுப்படுத்தப்படுகிறோம். அல்லது, எல்லாம் நல்லபடியாக வேலை செய்யும்போது, ஒரு பொய்யான அரைகுறை விழிப்பு நிலை அடையும் வகையில் தூண்டப்பட்டு, ரசிகமனம் என்ற ஒரு தற்காப்புத்தன்மை கொண்ட குழு அடையாளத்தை நோக்கியோ, ஆழமற்ற, அரைகுறை நகைமுரண்தன்மை கொண்ட ‘எல்லாவற்றிலும் நல்லது உண்டு’ என்ற பாவனையை நோக்கியோ செல்ல  ஊக்குவிக்கப்படுகிறோம். இத்தனைக்கும் இடையில், அரசியல் பொதுச்சமூகத்தின் குடிகள் என்ற வகையில் நாமும், வாதத்தின் இடத்தை விதண்டாவாதம் கைப்பற்றிக் கொள்ளும் , கோட்பாடுப் பகைமைகள் நிறைந்த, அதிதீவிர விருப்பு – வெறுப்புச் சூழலில், போராளிகளாக அணிதிரள வேண்டியதாகிறது.

நம்மைத் தொடர்ந்து தாக்கிக் கொண்டே இருக்கும் உணர்வுகளால் தடுமாறுகிறோம், கருத்து வெள்ளத்தில் தத்தளிக்கிறோம் என்ற நிலையில் நமக்கு எதையும் சந்தேகிக்க இடமில்லை, எதையும் யோசிக்க அவகாசமில்லை. இதை விட்டு வெளியேறலாம் என்றெல்லாம் பகல்கனவு காண முடியுமே தவிர அதெல்லாம் நடக்காது. நாமிருக்கும் உலகில் உள்ளபடியே தெளிவாகக் கண்டறிந்து வாழக் கற்றுக் கொண்டாக வேண்டும், வேறு வழியில்லை. ஆனால், இது எளிய விஷயம் அல்ல. கூட்டமாய்ச் சிந்திப்பது, முன்னனுமானங்களில் சரண் புகுவது, அறியாமையில் ஆழ்ந்திருப்பது போன்ற சுகங்களைத் தேடிச் செல்வது இதைப் பார்க்கும்போது மிக எளிது. இந்த  வசீகரங்களை எதிர்த்து நிற்க நமக்கு விழிப்புணர்வும், சுய கட்டுப்பாடும், புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும்  தேவைப்படுகிறது.

கேள்வி- அப்படியானால் நீ எழுதியிருப்பது சோம்பலுக்கும் மடமைக்கும் எதிரான பிரகடனமா?

பதில் – அப்படியும் சொல்லலாம். ஆனால் அப்படி ஒரு எதிர்மறை பொருள் கொள்ள வேண்டிய அவசியமென்ன? இந்தப் புத்தகம் கலையையும் கற்பனையையும் கொண்டாடுகிறது என்றும் மகிழ்ச்சிக்கான நம் உள்ளார்ந்த தேடலை விசாரிக்கிறது என்றும் தேடலுக்கான உந்துசக்தியை நாம் பல்வேறு வகைகளில் நுண்மையாக்கிக் கொள்வதைப் பேசுகிறது என்றும் கொள்ளலாம்.

கேள்வி – இத்தனையும்தான் விமரிசகனின் வேலையா?

பதில் – ஒவ்வொருவரின் வேலையும் இதுதான், இந்த வேலையை நாம் அத்தனை பேரும் செய்ய முடியும் என்றும் நம்புகிறேன். அர்த்தம் காணவும் மகிழ்ச்சியடையவும் எல்லையில்லா தவிப்பு கொண்டவர்கள் நாம், அந்தத் தவிப்பை நிறைவு செய்யும் படைப்புகளை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதை யோசித்துப் பார்ப்பதில் இந்த முயற்சி துவங்கலாம் என்று சொல்லுவேன். அதே சமயம், இந்த அழகிய, புதிரான விஷயங்களை எதிர்கொள்ளும்போது நாம் அடையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லுவேன்.

நாம் கலையை ஒரு அலங்காரப் பொருளாகக் கருதுகிறோம். அது ஏற்கனவே நிறுவப்பட்ட ஒரு குறுகிய பாதை என்றும் அதில் நாம் ஒவ்வொருவரும், தனித்தனியாகவோ ஒத்த மனம் கொண்ட கூட்டத்தினருடனோ, பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் நம்புகிறோம். அல்லது வாழ்க்கையில் நமக்கு மகிழ்ச்சியளிக்கும், படைப்பூக்கம் மிகுந்த கூறுகளை அதைவிட முக்கியமான விஷயங்கள் என்று நாம் நம்புவனவற்றுக்கு அடுத்த நிலையில் இறக்கி வைக்கிறோம். நம் இருப்பின் அழகியல் பரிமாணங்களை நம் மத நம்பிக்கைகள், அரசியல் கோட்பாடுகள், அறச் சார்புகள் போன்ற பெட்டிகளுக்குள் அடைத்து வைக்கிறோம். நாம் கலையை அற்பப்படுத்துகிறோம். அர்த்தமற்ற விஷயங்களை வழிபடுகிறோம். நம் உளறலுக்கு அப்பால் நம்மால் பார்க்க முடிவதில்லை.

எல்லாம் போதும்! நம் உள்ளங்களுக்கு விடுதலை அளிப்பதே கலையின் பணி; விமரிசகனின் கடமை, அந்தச் சுதந்திரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பதைக் கண்டறிவது. எல்லாரும் விமரிசகர்கள்தான் என்று சொன்னால் நாம் ஒவ்வொருவரும் நம் மனச்சாய்வுகளைக் கடந்து சிந்திக்க முடியும், நம் சந்தேகத்தையும் திறந்த மனத்தையும் சமநிலையில் பேண முடியும், களித்துக் கொழுத்து மொண்ணையாகிப் போன நம் உணர்வுகளைக் கூர் தீட்ட முடியும், நம்மைச் சூழ்ந்திருக்கும் அறிவுத்தள மந்தநிலையை எதிர்த்துப் போராட முடியும்  என்று பொருள்படுகிறது. அல்லது அப்படி புரிந்து கொள்ள வேண்டும். ஆச்சரியமான நம் அறிவுக்கு நாம் வேலை தர வேண்டும். நம் அனுபவங்களுக்கு உரிய மரியாதை அளித்து அதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

கேள்வி : மிகச் சரி. ஆனால் ஒரு விமரிசகன் இத்தனையும் செய்வது எப்படி?

பதில் – நல்ல கேள்வி!

நன்றி- A. O. SCOTT ASKS HIMSELF: WHAT IS CRITICISM?, A.O. SCOTT, LITHUB http://lithub.com/what-is-criticism/

image credit – https://www.kirkusreviews.com/features/o-scott/

நீர்க்குமிழ் உலகங்கள்

காலத்துகள்

பால்கனியில் தனக்கு மட்டுமே ஒலித்துக் கொண்டிருக்கும் இசைக்கு
ஆடிக் கொண்டிருக்கிறாள் நடன மங்கை
தாழ்வாரத்தில் நடந்தபடி தீவிரமாய்
பாடம் எடுக்கிறாள் ஆசிரியை
வாசற்படியில் குச்சியைச் சுழற்றி
கண்ணுக்குப் புலப்படாத எதிரிகளுடன்
போரிடுகிறான் மாவீரனொருவன்
உலகின் மிக வேகமான பௌலரின் பந்தை எதிர்கொள்கிறான்
அவன் தலைமுறையின் முதன்மை பேட்ஸ்மேன்
உள்ளிருந்து ஒலிக்கும் அதட்டலில்
அனைவரின் உலகங்களும் நிலையழிய
அவசரமாக உள்ளே ஓடுகிறார்கள்,
மீண்டும் குழந்தைகளாகி.

வாழ்ந்ததன் பொருள்: பறவையும் தாழ்ந்தாடும் மரக்கிளையும் – நித்ய சைதன்யா

வாழ்வாசை ஒருபோதும் மனிதர்களை கைவிடுவதில்லை. விரும்பி தன்னை முடித்துக் கொள்பவர்கள் இங்கு மிக அரிதிலும் அரிதே. வழங்கப்பட்டதை கடைசித்துளிவரை உறிஞ்சிக் குடித்துவிடவேண்டும் என்றுதான் அனைவரும் நினைக்கிறோம். அத்தனை பேருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்து விடுகிறதா என்ன? எத்தனை துய்த்த பின்னும் மனம் மீண்டும் நுகரும் வேட்கையால் அலையாடிக் கொண்டே இருக்கிறது. எல்லா ஆசைகளும் முதலில் ஒரு துளியென இம்மண்ணில் விழுகின்றது. வேரோடி வாழும் நிலத்தை ஆரத்தழுவியபோது இது நிரந்தரம் என்றும் இன்னும் அதிகக்காலம் வழங்கப்பட்டுள்ளது என்றும் நம்புகிறோம். அதனால் ஓயாமல் லௌகீக காரியங்களில் நம்மை இழக்கிறோம். செய்கின்ற அனைத்தும் நம் விருப்பம் ஒன்றினால் மட்டுமே நிகழ்கிறதா?

எக்கணமும் நம் வாய்ப்பு காலாவதியாகலாம். காலடி மண் இல்லாமலாகி பறத்தலின் சாமான்யம் விதிக்கப்பட்டு மீண்டும் இங்கு நிகழ்வனவற்றை கண்ணாடியின் அப்புறம் நின்று வெறிக்கும்போது நம்மால் என்ன செய்துவிட முடியும்? விடைபெற்றுக் கொள்ளும் மனநிலையை எப்போதும் கைவசம் வைத்துக்கொள்வது சாலச்சிறந்தது. நம் காற்றை நிறுத்தும் கணம் எங்கிருக்கிறது? எப்படி அதன் தருணமறிந்து நம்மைத்தேடி அடைகிறது? இத்தனை நுண்ணிய நீர்த்துளிகளை பேராழி கணக்கில் வைத்துள்ளதா? பேராழி என்பதே நுண்ணிய நீர்த்திவலைகளின் தொகைதானோ? தொகுப்பதும் பகுப்பதும் எவரின் கரம்?

ஒரு மரணம் நிகழும்போது ஒரு பறவை பறந்து செல்கிறது, தொடுவானம் தாண்டிய தொலைவிற்கு. இனி ஒருபோதும் அது மீண்டு வருவதில்லை. தாழ்ந்தும் உயர்ந்தும் தவித்தாடும் மரக்கிளையே அப்பறவை இருந்ததற்கான பருப்பொருள் சாட்சி. வந்தமரும் பறவையை ஆடி ஓயும் மரக்கிளை எவ்வாறு எதிர்கொள்கிறது? அமர்தலும் பறத்தலும் தவித்தாடுதலும் உலக இயல்பு என்றறியும் கணம் புன்னகையாக அன்றி வேறென்னவாக விரியும்? மரணத்தை எதிர்கொள்ள தர்க்கத்தைவிட சிறந்த கேடயம் வேறு உண்டா?

ஒற்றைச் சிலம்பு

தருணாதித்தன் – 

உமாவுக்கு உருளி என்று ஒரு பாத்திரம் உண்டே அந்த உருளியை வாங்க வேண்டும் என்று வெகு நாட்களாக தீராத ஆசை. உருளி பழைய கால மீனாட்சியம்மாள் சமையல் குறிப்புகளில் திரட்டுப்பால் செய்ய “வாயகன்ற உருளியில் எட்டு ஆழாக்கு பாலை ஊற்றி, சுண்டக் காய்ச்சி, துருப்பிடிக்காத தோசைத்திருப்பி அல்லது தேய்ந்த சாதக் கரண்டியால் விடாமல் கிளறி ” என்று வரும். தற்காலத்தில் உருளியில் தண்ணீர் ஊற்றி வண்ணப்பூக்களை அதில் மிதக்க விட்டு அலங்காரமாக வைப்பது வழக்கமாகி இருக்கிறது. உமா அதற்கு பார்வையாக ஒரு நல்ல உருளி வேண்டும் என்று வெகு நாட்களாகத் தேடிக் கொண்டிருந்தாள்.

அவள் சினேகிதி லீலா அந்த மாதிரி வேலைப்பாடுள்ள நேர்த்தியான உருளி வேண்டுமானால் கேரளத்தில்தான் கிடைக்கும் என்றும், உள்ளூர்க் கடைகளில் கிடைப்பது எல்லாம் சரியான அமைப்பு இல்லை, அப்படி சமச்சீராக இல்லாமல் வார்த்த பாத்திரத்தில் நீர் ஊற்றி வைத்தால் சீன வாஸ்து சாஸ்திரப்படி சொத்து நஷ்டமாகும் என்று கேட்காமலேயே ஆலோசனை கொடுத்தாள். டிஸம்பர் கடைசியில்தான் எல்லோருக்கும் லீவு அமைந்து கொச்சினுக்கு போக முடிந்தது.

ஃபெர்ரியில் ஏறி மட்டாஞ்சேரியில் இறங்கிய உடனேயே நிறைய கடைகள் ,ஆனால் ஏனோ ஒரு கடை ஈர்த்தது. வாசலில் நின்று வரவேற்றுக் கொண்டிருந்த கடை ஆளும் காரணமாக இருக்க வேண்டும். அப்போதுதான் குளித்து விட்டு வந்தது போல ஒளி முகம், அதில் நிறைந்த புன்னகை, படிந்து வாரிய ஈரத்தலை, நெற்றியில் விபூதி, கை மடித்து விட்ட வெள்ளைச் சட்டை, அகலக் கரையுடன் வெள்ளை வேட்டி, எழுந்து வந்து வழியை மறித்து அவன் கடையைத் தாண்டிப் போக விடவில்லை.

ஒரு பாரம்பரியமான வீட்டையே கடையாக்கி இருந்தார்கள். வாசலில் திண்ணையிலிருந்து, உள்ளே ரயில் பெட்டிகள் மாதிரி நீளமாக இருந்த பல அறைகள் முழுவதும் பழங்காலப் பொருட்கள்தான். வண்ணக் கண்ணாடி தொங்கும் விளக்குகள், நிலைக் கதவு, பணப் பெட்டி, சிற்பத் தூண்கள், ஊஞ்சல் பலகை, அப்பக் காரை, பித்தளை வெற்றிலைப் பெட்டி, அளக்கும் படி, கிளிக்கூண்டு, நிற்கும் ஆளுயர கடியாரம், மரச் சிற்பங்கள், பெரிய மண் ஜாடிகள், சட்டம் போட்ட கட்டில், பித்தளை டெலிஸ்கோப் என்று ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாத பொருட்கள் இறைந்து கிடந்தன.

சில பொருட்களுக்கு விலை ஒட்டி இருந்தது. உமாவுக்கு உருளிகளின் விலை அத்துப்படி ஆகி இருந்தததால், முதலில் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தாள். திருப்திகரமாக இருந்தது. மிக அதிகம் இல்லை. அவற்றில் ஒன்றை எடுத்து நல்ல வெளிச்சத்தில் முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தாள். லட்சணமாக இருந்தது. ஓரங்கள் எல்லாம் சுத்தமாக இருந்தது. கைப்பிடிகளில் சித்திர வேலைப்பாடு அழகாக இருந்தது. பல நாட்களாக தேடிக்கொண்டிருந்தது இவ்வளவு சீக்கிரம், திருப்தியாக, அதுவும் நல்ல விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சியினால் கண்கள் விரிந்து, குரல் சற்று மிகுந்தது, உடலில் ஒரு விசை ஏறியது. கடை ஆள், நுட்பமாக அதை கவனித்திருக்க வேண்டும். வேறு சில பொருட்களைக் காட்ட ஆரம்பித்தான். “இதோ பாருங்கள், உருளி வைக்கும் இடத்துக்கு மேலே தொங்க விட சர விளக்கு”. உமாவுக்கு அதில் அவ்வளவு இஷ்டமில்லை. அவள் பார்வை சுற்றிலும் அலைந்தபோது ஒரு கணம் அந்த பெரிய பெட்டியின் மேல் நிலைத்தது.

பித்தளைப் பூண் போட்டு, கரும் பழுப்பு நிறத்தில் எண்ணெய் தேய்த்தது மாதிரி மினுக்கியது. உடனே அவன் ஆரம்பித்து விட்டான். இப்போதெல்லாம் இந்த மாதிரி பெட்டி மிகவும் போகிறதாம். வீட்டில் ஹாலில் வைத்து அதன் மேல் சின்ன பித்தளைப் பொருட்களை வைக்கிறார்களாம். உடனேயே சில பொருட்களை வைத்து அலங்காரம் செய்து காட்டினான். ஒரு கஜ லக்ஷ்மி விளக்கு, தூபக்கால், ஒரு பாக்கு வெட்டி, ஒரு பித்தளைக் கரண்டி நடுவில் ஒரு இடம் காலியாக இருந்தது. அவன் சுற்றிலும் தேடி ஒரு வட்டமான பெரிய வளை போல ஒன்றை கொண்டு வைத்தான். வரி வரியாக மணிகளுடன் வேலைப்பாடுடன் அதுவும் நடுவில் பொருத்தமாக இருந்தது. இப்படியாக அந்த பெட்டி மிக அழகாக அமைந்தது. உமாவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அதிகம் பேரம் இல்லாமல் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு விட்டாள்.

உமா வீட்டுக்கு வந்தவுடன் முதல் வேலை உருளிக்கு நல்ல இடம் பார்த்து வைத்தாள். உள்ளே நுழைந்தவுடன் பார்வையான இடம். அதில் மலர்கள், நடுவில் வெள்ளி தீபம் மிதக்க, வீடே மங்களமாக இருந்தது. பெட்டிக்குத்தான் சரியான இடம் கிடக்கவில்லை. டெலிவிஷன், கண்ணாடி ஷோ கேஸ், டெலிபோன், பத்திரிகை வைக்கும் ஸ்டாண்டு என்று ஏற்கெனவே ஹால் அடைசலாக இருந்தது. ஒரு வேளை பெட்டியை அவசரப்பட்டு வாங்கி விட்டோமோ என்று தோன்றியது. கடைசியாக புத்தக அலமாரியை வேறு அறைக்கு மாற்றி, ஹாலிலேயே இடம் அமைந்தது. எல்லாம் சேர்ந்து வீடு பொலிவாக இருப்பதாக உமாவுக்குத் தோன்றியது. தானே வேறு வேறு கோணங்களில் நின்று, அமர்ந்து பார்த்து மகிழ்ந்து போனாள். அடுத்தது யாரிடமாவது காட்டாவிட்டால் மகிழ்ச்சி பூர்த்தி ஆகாது என்று தோன்றியது.

முதலில் பக்கத்து வீட்டு லக்ஷ்மி வந்திருந்தாள், முகத்தில் பவுடர் வியர்க்க, எங்கோ போகும் அவசரத்தில். சாவியைக் கொடுத்து விட்டு உள்ளே வராமலேயே போய் விடுவாளோ என்று உமாவுக்கு ஒரு சிறு கலக்கம். வந்தவள் வாசலிலேயே உருளியையும் பெட்டியையும் பார்த்து ஒரு கணம் நின்று விட்டாள். ” அட, எப்ப வாங்கின இதெல்லாம்? ” என்று கேட்ட உடனேயே, உமாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனாலும் போகிற போக்கில் லக்ஷ்மி “இங்க இருக்கற நிலமைல உருளிய தேய்க்கறத்துக்கு முடியுமா, வேலைக்கு ஆளே சரியாக இல்லை, நம்மால முடியாதுப்பா” என்றாள்.

முதலில் அவள் பொறாமையால் சொல்கிறாள் என்று தொன்றினாலும் சரிதான் என்று தோன்றியது. செல்வி தினமும் வருவதே லேட், அவள் கணவன் வேலுச்சாமி வேலை எதுவும் இல்லாமல் தினமும் குடித்து விட்டு அவர்கள் இருந்த பேட்டையில் ரௌடியாகத் திரிந்து கொண்டு இருந்தான். ஏதாவது காரணம் சொல்லி பாதி நாள் வரமாட்டாள். உமாவுக்கு அவளுடன் அதிக நாட்கள் சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை. ஆனாலும் பல வருடங்களாக பழகினவள், வேலை சுத்தம் என்று வேறு ஆள் பார்க்க இஷ்டம் இல்லை.

புதிய பொருட்களை மற்ற எல்லோருக்கும் காண்பிக்கலாம் என்று யோசித்து, வெள்ளிக்கிழமை அன்று நிறைய பேரை ஏதோ பூஜை என்று அழைத்தாள். லீலா உருளியைப் பார்த்து அதுவும் கேரளத்தில் வாங்கியதை உறுதி செய்து கொண்டு, நல்ல லட்சணமாக இருப்பதாக சொன்னாள். அடுத்தது பெட்டியின் மேல் இருந்த பொருட்களை பார்த்துக் கொண்டு வந்தவள், அந்த வளையைப் பார்த்ததும் ஒரு மாதிரி நெற்றியைச் சுருக்கினாள்.

” இது என்ன தெரியுமா? ” என்றாள்.

“ஏன், இது ஏதோ வளை போல வேலைப்பாடாக இருக்குன்னு வாங்கி வந்தேன்”

“இதெல்லாம் வீட்டில் வைக்க மாட்டார்கள். இது ‘செலம்பு’ன்னு சொல்லுவோம், வெளிச்சப்பாடு கையில வெச்சுட்டு ஆடறது” என்றாள். ‘செலம்பு’ என்றபோது ச்செலம்பு என்று அழுத்தியபடி. உமா சரி இது தமிழில் சிலம்புன்னு சொல்வோமே அந்த மாதிரி என்று புரிந்து கொணடாள். ஆனால் ஏன் சிலம்பை வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கேட்டாள். ஒரு வேளை ஒற்றைச் சிலம்பினால் கண்ணகி கதை மாதிரி ஏதாவது இருக்குமோ என்று நினைத்தாள். லீலா விவரமாக ஆரம்பித்தாள். வெளிச்சப்பாடு என்பவன் பகவதி கோவில்களில் சாமியாடி மாதிரியாம். சிவப்பு ஆடை அணிந்து ஒரு கையில் மணி கட்டிய வாளும் இன்னொரு கையில் சிலம்பும் ஏந்தி விரிந்த கூந்தலுடனுடன் தாளத்துக்கு இசைந்து ஆடுவானாம். ஆட்டம் அதிகமாகி வெறி கொண்டு, வாளால் அவன் தன் தலையிலேயே ரத்தம் வரும்படி காயப்படுத்திக்கொண்டு ஆடுவானாம். ஆடும்போது அவன் பேசுவது பகவதி வாக்காம். இந்தக் காலத்திலெல்லாம் பகவதி கோவில்களில் திருவிழா முன் போல நடப்பதில்லையாம், பல வெளிச்சப்பாடு ஆட்கள் அதிக வருமானமில்லாமல் அந்தத் தொழிலையே விட்டு விட்டார்களாம். அவள் கடைசியாக அருகில் போய் தொடாமல் உற்றுப் பார்த்து, “இதோ பார் இதெல்லாம் ரத்தக் கறை, எந்த வெளிச்சப்பாடு சோற்றுக்கு வழி இல்லாமல் இதை விற்றானோ, இதெல்லாம் வீட்டில் வேண்டாம்” என்று அடித்துச் சொல்லி விட்டாள். உமாவுக்கு லீலா வழக்கம் போல ஏதோ கதை விடுகிறாள் என்றுதான் நினக்கத் தோன்றியது. அவள் அடிக்கடி யக்ஷிகள், மோகினி, குட்டிச் சாத்தன் என்று நேரில் பார்த்துப் பழகின மாதிரி பேசுவாள்.

உமா அன்று மாலையே ரமேஷிடம் அவன் அலுவலகத்திருந்து வந்தவுடன் சொன்னாள், அவன் மொபைலில் ஏதோ பார்த்துக் கொண்டே அரை குறையாகக் கேட்டு, இதெல்லாம் என்ன பழங்காலம் மாதிரி கதை என்றான். உமாவும் அதிகம் கவலைப் படவில்லை.

முதல் சம்பவம் அடுத்த வெள்ளிக்கிழமை காலை நடந்தது. படுக்கையிலிருந்து எழுந்ததிலிருந்தே சின்னப் பெண் சண்டி. வென்னீர் சூடு பற்றவில்லை என்று அழுகைக் குளியலுக்குப் பிறகு, ஸ்கூல் சீருடைக்குள் திணித்து, தலையை வாரி, பொட்டு வைத்து அவளைத் தூக்கி பெரிய கண்ணாடியில் காண்பித்து,

” அழாத கண்ணு, இதோ பார் , சின்னு எவ்வளவு அழகு தெரியுமா ?”
சொல்லி முடிப்பதற்குள், பார்த்துக் கொண்டிருக்கும்போதே கண்ணாடி திடீரென்று ஒரு ஓரத்திலிருந்து ஆரம்பித்து பெரிய விரிசல் விட்டு உடைந்து போனது. பயந்து போய் சின்னுவை இறக்கி விட்டு சுற்று முற்றும் பார்த்தாள், ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள், கல் எதுவும் விழவில்லை. ரமேஷ் குளித்துக் கொண்டிருந்தான். உமாவுக்கு அதிர்ச்சியில் வியர்த்து விட்டது. அவசரமாக சின்னுவை கொண்டு போய் ஸ்கூல் பஸ் ஸ்டாப்பில் விட்டு விட்டு, வீட்டுக்கு வந்து அவளுடைய அம்மாவுக்கு ஃபோன் செய்தாள். அம்மா சந்தேகமில்லாமல் சொல்லி விட்டாள் – கண்ணாடி ஒரு மங்கலப் பொருள், வெள்ளிக்கிழமை அதுவும் தை வெள்ளிக்கிழமையில் உடைவது நல்லது இல்லை. ரமேஷ் குளித்து வந்தவுடன், அவனைத் தலை துடைக்கக்கூட விடவில்லை.

“ரமேஷ், இந்தக் கண்ணாடியப் பாருங்க, இப்ப நான் சின்னுவ ட்ரெஸ் பண்ணிட்டு அவளுக்கு காமிச்சிட்டிருந்தேனா, பார்க்கும்போதே விரிசல் விட்டு உடைஞ்சிடுச்சு ”

அவன் கண்ணாடி அருகே போய் ஆராய்ந்தான். விரிசல் ஆரம்பித்த்த இடம் கண்ணாடியை பொருத்தி இருந்த ஒரு ஸ்க்ரூவில்.

“இதோ பார் இந்த ஸ்க்ரூவை அதிகமாக அழுத்தி இருக்கிறது. இப்படித்தான் சமமா அழுத்தம் இல்லா விட்டால் ஒரு பக்கம் உடையும் ”

” இது நம்ம வீட்டில மூணு வருஷமா இருக்கு, எப்பவோ ஆகி இருக்கணுமே”

உமாவுக்கு ஒரு வேளை அந்தச் சிலம்பால் இருக்குமோ என்ற சந்தேகம் வந்து விட்டது.

அடுத்த சம்பவம் ரமேஷின் பிறந்த நாள் அன்று நடந்தது. அவனுடைய அம்மாவும் அப்பாவும் முதல் நாளே வந்து விட்டார்கள், ரமேஷின் அண்ணா வீட்டிலிருந்து. காலையிலேயே எல்லோரும் குளித்து கோவிலுக்குப் போக வேண்டும் என்பதால் சீக்கிரமே எழுப்பி வரிசையாக குளிக்க அனுப்பி, கடைசியாக மாமியாரை அனுப்பினாள். அரை மணிக்கும் மேல் ஆயிற்றே என்று பாத்ரூம் கதவைத் தட்டினால் பதிலே இல்லை. கூர்ந்து கேட்டால் முனகும் சத்தம் கேட்டது. கதவை பலமாக தள்ளி, தாழ்ப்பாள் உடைந்து திறந்தால், ரமேஷின் அம்மா அலங்கோலமாக தரையில். கை கொடுத்தால் கூட எழுந்திருக்க முடியவில்லை. இரண்டு பேராக சேர்ந்து தூக்கி வந்து படுக்க வைத்து, டாக்டரை வரவழத்து, அவர் ஃப்ராக்சர் இருக்குமா என்று பார்க்க எக்ஸ் ரே எடுக்க ஆம்புலன்ஸ் வரவழைத்து, மாடிப் படிகளில் ஸ்ட்ரெச்சரைத் தூக்கி, கடைசியில் நல்ல வேளையாக மிக லேசான விரிசல்தான் எலும்பு உடையவில்லை, இரண்டு மாதம் ஓய்வில் இருந்தால் சரியாகி விடும் என்ற முடிந்த போதுதான் நிம்மதி ஆனது. ஆனாலும் ஒரு வாரத்துக்குள்ளேயே எல்லோரும் படாத பாடு பட்டார்கள்.

செல்வி வழக்கம் போல பாதி நாட்கள் வரவில்லை. வேலுச்சாமி கார்ப்பரேஷன் தேர்தலுக்கு நிற்கப் போகிறானாம். அவளுடைய வீட்டிலேயே நிறைய வேலையாம். வேலைக்காரி சௌகரியம் இல்லாததால், உமா கஷ்டப்படுவதைப் பார்த்து, அவர்கள் ஒரு ஆம்புலன்ஸ் வைத்துக் கொண்டு ரமேஷின் அண்ணா வீட்டுக்குத் திரும்பப் போய் விட்டார்கள். பேச்சு வாக்கில் லீலாவிடம் இதெல்லாம் விவரித்த போது அவள் சொன்னாள் “நான் சொல்றேன்னு தப்பா நினச்சுக்காத, எனக்கெனமோ எல்லாமெ அந்தச் செலம்பாலதான்னு தோணுது, வீட்டில வயசானவங்கள ரெண்டு நாள் கூட தங்க விடல பாரு, இங்க அய்யப்பன் கோவில்ல தந்த்ரி இருக்கார், அவர் சோழி உருட்டிப் பார்த்து சொல்லிடுவார், இப்படியே விட்டா உங்க வீடு மட்டும் இல்ல நம்ம அபார்ட்மென்ட்டுக்கே ஏதாவது வரும்’ என்றாள். உமாவுக்கு பயமாக இருந்தது. ரமேஷிடம் சொன்னபோது அவன் சோழி விவகாரத்துக்கு ஒத்துக் கொள்ளவில்லை.

மூன்றாவது சம்பவம் விரைவில் வந்தது. அதுவும் லீலா சொன்னபடியே. ஒரு நாள் பைப்பில் தண்ணீரில் ஏதோ கெட்ட வாடை லேசாக ஆரம்பித்தது. முதலில் வழக்கம் போல ஒரு நாள் தண்ணீர் வராமல் இருந்து, பைப் எல்லாம் காலி ஆகி மறு நாள் வரும்போது, அழுக்கு, இரும்புத்துரு எல்லாம் சேர்ந்து வாடை வருவதுண்டு. அந்த மாதிரிதான் ஏதோ என்று நினைத்தாள். மறு நாள் அதிகமாகப் போகவே, உமா மேலே மொட்டை மாடிக்குப் போய் ஒவர் ஹெட் டாங்கைப் பார்க்கப் போனாள். டாங்கின் மூடி வைக்கும் ஸ்லாப் திறந்து கிடந்தது. உள்ளே எட்டிப் பார்த்தால் ஏதோ கருப்பாக மிதந்து கொண்டிருந்தது, கீழே போய் டார்ச் கொண்டு வந்து வெளிச்சம் போட்டுப் பார்த்தால் ஒரு காக்கை. லீலா பார்த்த உடனேயே சொன்னாள் ” அதுவும் பார் அண்டங்காக்கா, கழுத்து முழுக்க கருப்பா இருக்கு, நான் முதல்லயே சொன்னேனில்ல, இதுக்கு எங்க ஊரில என்ன சொல்வோம் தெரியுமா “, அதற்கு மேல் கேட்கவில்லை உமாவுக்கு கிலியாகி விட்டது.

வீட்டுக்கு வந்ததும் உமாவுக்கு அந்தச் சிலம்பைத் தொலைத்து விட வேண்டும் என்று தோன்றியது. தொடாமல், ஒரு குச்சியால் அதை எடுத்து ஒரு ப்ளாஸ்டிக் கவரில் போட்டாள். அப்படியே பால்கனியிலிருந்து தூக்கி எறியலாமா என்று தோன்றியது. அது திரும்ப காம்பவுண்டுக்குள்தான் விழும். கீழே கையில் எடுத்துச் செல்ல பயமாக இருந்தது. குளியல் அறை பக்கத்தில் தூக்கி எறிய வைத்திருந்த பிற சாமான்களுடன் வைத்து விட்டு நன்றாக சோப்புப்போட்டு கை கழுவினாள். இத்தனை நாள் வீட்டில் இருந்தது, இன்னும் ஒரு இரவில் ஒன்றும் ஆகக்கூடாது என்று நினைத்தாள். காலையில் செல்வி எடுத்து கீழே மற்ற குப்பைகளுடன் போட்டு விடுவாள், வாரத்துக்கு ஒரு தடவை வரும் கார்ப்பரேஷன் லாரியில் எங்காவது போய்த் தொலைந்து விடும்.

அடுத்த நாள் செல்வி நேரத்துக்கு வந்து விட்டாள். வேலுச்சாமி இப்போது கார்ப்பரேஷன் தேர்தலில் மூழ்கி இருப்பதால் குடி எல்லாம் குறைந்திருக்கிறதாம். அவளிடம் மறக்காமல் அந்தக் ப்ளாஸ்டிக் கவரை குப்பையில் போடச் சொன்னாள். அதற்கு அடுத்த நாள் செல்வி வரவில்லை. நாலு தடவை ஃபோன் செய்த பிறகு எடுத்தாள். அவள் வேலுச்சாமி தேர்தலுக்கு நிறைய உதவி செய்கிறாளாம். அடுத்த வாரம் வருவதாக சொன்னாள்.

நடுவில் சின்னு ஸ்கூலில் ஆன்யுவல் டே போட்டிகள் என்று பிஸியாகி விட்டாள். சின்னுவுக்கு பாட்டுப் போட்டி, க்விஸ் இரண்டுக்கும் தயார் செய்வதற்கே நேரம் சரியாக இருந்தது. என்னதான் வீட்டில் பாடினாலும், கேள்விக்கு பதில் சொன்னாலும், சின்னு ஸ்கூலில் சொதப்பி விடுவாள். சாயங்காலம் அவளை தினமும் உட்கார்ந்து பாட வைத்து, வாங்கி வந்திருந்த புத்தகத்திலிருந்து கேள்வி கேட்டு – நடுவில் சிலம்பு விவகாரம் நினைவில் இல்லை. இந்த தடவை சின்னுவுக்கு இரண்டு போட்டிகளிலும் பரிசு.

ஞாயிற்றுக் கிழமை நிதானமாக எல்லோரும் அமர்ந்திருந்தபோது ரமேஷிடம் விவரமாகச் சொன்னாள்- குப்பையில் எறிய வைத்தது வரை. “ஒரு வழியா அந்தச் சிலம்பு தொலஞ்சுது, இனிமேலாவது வீட்டில கெட்டது எதுவும் நடக்காது, லீலா சொன்னபடி முதல்லயே தூக்கி எறிஞ்சிருக்கலாம், இப்ப பாருங்க நம்ம சின்னு பரிசு வாங்கி இருக்கா, இனிமே எல்லாம் நல்லதுதான் நடக்கும் ”

“அதெல்லாம் மடத்தனம், ஏதோ ஒரு பழைய மெட்டல் துண்டுக்கும், வெயில்ல கண்ணாடி உடையறது, ஈரத்தரையில அம்மா வழுக்கி விழுந்தது, திறந்து வெச்ச தொட்டித் தண்ணீரில காக்கா செத்ததுன்னு என்ன தொடர்பு? இப்ப பரிசு வாங்கினா அதுவும் அந்தச் சிலம்பு போனதுனாலயா? ஆஃபீஸில ரீஜனல் மேனேஜர் பொஸிஷனுக்கு என்னத்தான் ரெகமண்ட் பண்ணி இருக்கேன்னு எம் டி நேத்து சொன்னாரு, அதுவும் சிலம்பு போனதாலயா?” என்றான். “ஆமாம்“ என்றாள் உமா திடமாக, ஒரு வாரமாக அவளுக்கு முதுகு வலி கூட காணாமல் போயிருந்து.

ரமேஷ் அப்போதுதான் நினைவுக்கு வந்தவானாக, “அன்னிக்கு நீ கிளம்பிப் போன பிறகு செல்வி எதையோ காட்டி அம்மா தூக்கி எறிய வெச்சுருக்காங்க போல, நான் எடுத்துக்கறேன்” அப்படின்னு சொன்னா, அவசரத்துல நான் என்னன்னு கூட பார்க்கல. இப்ப நீ சொல்லறத கேட்டா அந்தச் சிலம்புதான்னு தோணுது” என்றான். செல்வி அப்படித்தான். கெட்டுப்போன ட்யூப் லைட், கார் பேட்டரி என்று தூக்கி எறிய வைத்திருக்கும் பொருட்களை எடுத்துக் கொள்வாள். உமாவுக்கு பயம் படர்ந்தது, பாவம் செல்வி அவளுக்கு ஏதாவது ஆகாமல் இருக்க வேண்டுமே என்று பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொண்டாள்.

உடனே செல்விக்கு ஃபோன் செய்தாள். வழக்கம் போல அவள் எடுக்கவில்லை. விவரம் எதுவும் சொல்லி அனுப்பாமல் ஃபோனையும் எடுக்காமல் இந்த மாதிரி ஒரு வாரம் வராமல் இருந்ததில்லையே என்று கவலை அதிகமானது. ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு நேராக அவள் இருக்கும் தெருவுக்குப் போனாள். பஸ் ஸ்டாண்டுக்கு பின் புறம் ஒரு சந்து. பெட்டிக் கடையில் விசாரித்து வீட்டைக் கண்டு பிடித்துப் போனால், வீடு பூட்டி இருந்தது. பக்கத்து வீட்டில் இருந்து ஒரு சின்னப் பெண் ஒழுகும் மூக்குடன், வாயில் விரலுடன் எட்டிப் பார்த்து அம்மாவை அழைத்தது.

“என்னம்மா நீங்க என்ன தின மலரா, முந்தா நாள்தான் தந்திலேர்ந்து வந்தாங்க ” என்றாள். உமாவுக்கு எதுவும் புரியவில்லை, கலக்கம் அதிகரித்தது, தினப் பத்திரிகைகளில் வரும் அளவுக்கு ஏதாவது விபரீதமாக ஆகி விட்டதா, ” இல்ல, செல்வி எங்க வீட்டில வேல செஞ்சுட்டிருந்தா, ஒரு வாரமா வரலயேன்னு பார்க்க வந்தேன், என்ன ஆச்சு அவளுக்கு?”

” சொல்லல போல, அவ இனிமே வேலைக்கு வர மாட்டாளுங்க, “, உமா கர்சிப்பை எடுத்து வாயில் வைத்துக் கொண்டாள்.

“ஏன் என்ன ஆச்சு ?”

“ஒரே அதிர்ஷ்டம்தான் அவங்களுக்கு, வேலுச்சாமி கார்ப்பரேஷன் எலக்ஷனுல செயிச்சு நம்ம வார்டு கார்ப்பரேடர் ஆயிட்டாருங்க ” என்றாள்.

உமாவுக்குப் பெரிய நிம்மதியாக இருந்தது, அவளுக்கு எதுவும் ஆகவில்லை என்பது ஆசுவாசமாக இருந்தது, செல்வி சிலம்பைத் தூக்கி எறிந்திருக்க வேண்டும்,

“செல்வி வந்தா உமான்னு தேடிட்டு வந்தாங்கன்னு சொல்லு”, குற்ற உணர்ச்சி கணத்தில் நீங்கியது. திரும்பப் போகும்போதே பஸ் ஸ்டாண்ட் பிள்ளையாருக்குத் தேங்காய் வாங்கி உடைத்தாள்.

ஒரு வாரம் கழித்து செல்வி வந்தாள், முகம் வாடி சோர்ந்து இருந்தாள். வேலுச்சாமி எலக்ஷனை எதிர்த்து கோர்ட்டில் கேஸ் போட்டிருக்கிறார்களாம். கள்ள ஓட்டு மற்றும் வன்முறையால்தான் அவன் வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சி வாதமாம்.

உமாவுக்கு வயிற்றில் கலக்கம், “அந்த சிலம்பை நீ ஏன் தூக்கி எறியல? உங்க வீட்டுக்கு எதுக்கு எடுத்துட்டுட்டுப் போன?“ குரல் குளறியது.

செல்விக்கு அவளது கலக்கம் புரியவில்லை, “எதும்மா, அன்னிக்கு நீங்க, அந்த பொட்டி மேல இருந்த சலங்கைய ஒரு கவருல போட்டு வெக்கிருந்தீங்களே, அதுவா ?“

“ஆமாம், அதேதான், தூக்கி எறியச் சொன்னா, ஏன் எறியல?” குரல் உயர்ந்தது.

“இல்லம்மா, நான் அத ஊட்டுக்கு கொண்டு போய், புளி போட்டு தேச்சனா, பளபளன்னு ஆயிடுச்சு. எங்க ஊட்டுக்காரரு, அம்மா ஏதோ தெரியாம தூக்கிப் போட்டிருப்பாங்க, மரியாதயா அவங்க ஊட்டுலயே கொண்டு போய் கொடுத்திடுன்னு திட்டினாரு”

“அன்னக்கே திரும்ப வந்து வெச்சுட்டேனுங்க,” உமா திடுக்கிட்டு கருப்புப் பெட்டியைப் பார்த்தாள், இடம் காலியாகத்தான் இருந்து.

“கீழ பொட்டி மேல இருந்தா தூசு படிஞ்சு துடைக்க கஸ்டமா இருக்குதுன்னு, கண்ணாடி அலமாரில வெச்சுட்டேனுங்க “

உமா திரும்பினாள், அங்கே கண்ணாடி ஷோ கேஸில் நடு நாயகமாக மற்ற அலங்காரப் பொருட்களுடன் அந்த ஒற்றைச் சிலம்பு வீற்றிருந்தது.

மூத்த குடி

சரவணன் அபி

ஆநிரை கவர்தலில்லை
களவு மணமுமில்லை

உடன்போகிய
பழங்குடித் தலைவனின்
பழங்குடி மகள்
கொண்டவனைக் கொன்ற
இயலும் துறையும்
அறியா
பண்டை மொழி
பண்பட்ட நிலம்

தன் புண்ணரிந்து
தான் நிலையழிவது
போலும்
மகளை எரிப்பதும் கரு
மகவை அறுப்பதும்

மூத்த பழங்குடி
முந்தைய மரபின்
ஏதோவோர்
எச்சம் இதுவெனில்
திருத்தமும்
அத்தன்மையதாய் தானே
இருத்தல் கூடும்