எழுத்து

இந்திராவின் ஆசைகள் – அசோகமித்திரனின் இரு சிறுகதைகள்

 அஜய் ஆர்

 

ami

பிரபல வீணைக் கலைஞர் ‘ராமச்சந்திரன்’ பற்றி தன் தோழி சரோஜாவிடம், இந்திரா (‘இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள வேண்டும்’) கேட்கப் போக , அவர் யார் என்றே தெரியாதது போல் முதலில் பதில் சொல்லி, பிறகு “எல்லாம் கேட்டிருக்கிறேன். ஒரு வாத்தியம் என்றால் அதனிடம் மரியாதை, பக்தி எல்லாம் வேண்டாம்? குரங்கை ஆட்டிக் காண்பிப்பது போலவா வீணையை வாசிப்பது” என்று அவரைக் கடுமையாக விமர்சிக்கிறாள் சரோஜா. இவளால் இப்படி நுட்பமாக விமர்சிக்க முடியுமா என்று நம்ப முடியாமல் அவளை இந்திரா கூர்ந்து பார்க்க , தான் வீணை கற்றுக்கொள்ளும் வாத்தியார் தான் அப்படிச் சொன்னார் என்று உண்மையை தயங்கிய படி சரோஜா சொல்கிறாள்.

நாம் மதிக்கும் ஒருவரின் கருத்தை, அதை புரிந்து கொள்ளாவிட்டாலும், நம்முடையது போலவே சொல்வதின் நுண் சித்திரம் இது. தன் ஆசையை நிறைவேற்றாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே செல்லும் தந்தை, “அழுத மூஞ்சி சிரிக்குமாம், கழுதைப் பாலைக் குடிக்குமாம்” என கேலி செய்பவர்களை நீங்கள் எனக்கு தம்பி தங்கைகளே இல்லை என இந்திரா பழிப்பது, திருவிழாவுக்கு போவது போல் கும்பலாக கச்சேரி கேட்க கோவிலுக்கு செல்வது, அங்கு தன் சங்கீதம் பற்றி அதிகம் தெரியாத தாய் கேட்கும் கேள்விகளுக்கு பல்லைக் கடித்துக்கொண்டு பதில் சொல்வது, சற்று நேரத்தில் வாயைத் திறந்து கொண்டே அவள் தாய் தூங்கி விடுவது என வீணை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற இந்திராவின் ஆசையைப் பற்றிய கதையில் பெரும் பகுதி இத்தகைய சித்தரிப்புக்களால் தான் நிறைந்திருக்கிறது.

இலக்கில்லாமல் செல்வது போல் தோன்றினாலும் வாசகனே அறியாதவாறு அவனை தான் கொண்டு செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்வார் அசோகமித்திரன். சரோஜாவின் வாத்தியாரைப் பார்த்து விட்டு திரும்பும் இந்திராவைக் கடிந்து கொள்ளும் அவள் தாயிடம் அவள் நடத்தும் உரையாடல் இந்தக் கதையில் அத்தகைய ஒரு இடம். முதலில் இந்திராவின் விருப்பத்துக்கு ஒப்புக்கொள்பவர், வீணை கற்றுக் கொள்ள கட்டணம் 20 ரூபாய் என்றவுடன் ‘இருபது ரூபாயா’ என்று ஒரு கணம் மலைக்கிறார். அவர் தாய் கொத்தமல்லி, பச்சை மிளகாய் வாங்க பேரம் பேசுவது போல் இப்போது செய்வதாக இந்திராவுக்கு தோன்ற, தொடர்ந்து அவர் உடைந்த மூக்குக் கண்ணாடியை தொடர்ந்து உபயோகிப்பது, மாதக் கடைசியில் பக்கத்து வீட்டில் கடன் வாங்குவது நினைவில் வர இங்கு ஒரு திறப்பு அவளுக்கு கிடைக்கிறது. நிறைய செலவாகும் என்ற காரணத்தை மனதில் வைத்துக்கொண்டு, தான் இப்போது கற்றுக்கொள்ளப் போவதில்லை என அவளே, தாய் வற்புறுத்தியும் உறுதியாக இருக்கிறாள்.

குழந்தைமை மறைந்து இந்திரா முதிர்ச்சி அடையும் கணம் என்ற அளவில் முடிந்திருக்கக் கூடிய கதையில், இந்திராவிற்கும் வாசகருக்கும் இன்னொரு திறப்பை அளிக்கிறார் அசோகமித்திரன். இரவு தூக்கம் வராமல் படுத்திருக்கும் இந்திரா, அம்மா சப்தமில்லாமல் குலுங்கி அழுது கொண்டிருப்பதை உணர்வதோடு கதை முடிகிறது. தன் குழந்தையின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்பதனாலா, அல்லது இளமையில் இதே போல் நிறைவேறாமல் போன தன் ஆசையை எண்ணியா அல்லது இரண்டினாலுமா, எதனால் இந்திராவின் தாய் அழுகிறாள் என்பதற்கான பதிலை வாசகனின் யூகத்திற்கே அசோகமித்திரன் விடுகிறார்.

தாய் அழுவதைப் பார்த்துக்கொண்டிருந்த இந்திரா இப்போது மத்திம வயது பெண். (‘இந்திராவுக்கு வீணை கற்றுக் கொள்ள முடியவில்லை’). இந்தக் கதையில் அவளின் இள வயது ஆசை நிறைவேறவில்லை என்று தெரிய வருகிறது. தன் மகன் கோபுவை பாட வைக்க அவள் முயல, அவனோ கராத்தே கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறான். நிறைவேறாத ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது என்று இந்தக் கதையை விமர்சிக்கலாம். ஆனால் கதை இந்திரா தன் ஆசையை மகன் மீது திணிப்பதைப் பற்றியல்ல. அவனின் ஆர்வமின்மைக்காக வருத்தப்பட்டாலும், இந்திரா அவனைக் கடிந்து கொள்வதில்லை.

இந்திராவிற்கு அவள் சகோதரர்களின் நண்பன் சங்கரன், வீணை ராமச்சந்திரன் குறித்த அவன் கருத்துக்கள், பொதுவாகவே அவன் தரப்பை தன்மையாக எடுத்து வைக்கும் அவன் குணம் எல்லாம் இப்போது நினைவில் வருகின்றன. ஒரு நாள் நீ இல்லாமல் நான் இருக்க முடியாது என்று அவளிடம் சொல்லும் அவன், அடுத்த சில நாட்கள் கழித்து அவள் வீட்டிற்கு வருவதை நிறுத்தி விடுகிறான். இந்த நினைவலைகளைத் தொடர்ந்து அ.மியின் புனைவில் அதிகம் காண முடியாத, யதார்த்தத்தைக் கடந்து செல்லும் , பகற்கனவின் சித்தரிப்பில் சங்கரன் அவள் வீட்டிற்கு வருகிறான். இந்திரா நரைத்த தலைமுடியுடன் இருக்க அவன் மட்டும் அன்று பார்த்தது போலவே இருப்பதாகச் சுட்டப்படுவதில் உள்ள உளவியல் கவனிக்கத்தக்கது. சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பும் சங்கரனை மீண்டும் அழைத்து வருமாறு அப்போது வீட்டிற்குள் நுழையும் கோபுவை இந்திரா அனுப்ப, அவன் வெளியே யாரும் இல்லை என்கிறான்.

வீணை கற்றுக்கொள்ள முடியவில்லை என்பது இந்திராவின் நிறைவேறாத ஆசை என்று வாசகனுக்குத் தெரியும். இந்திராவின் சங்கரன் குறித்த நினைவுகளும், அதைத் தொடரும் பகற்கனவும் அது ஒன்று மட்டுமே அவளுடைய நிறைவேறாத ஆசை இல்லையோ என்ற உணர்வைத் தருகிறது. அவளில்லாமல் அவனால் இருக்க முடியாது என்று ஒரு நாள் சங்கரன் சொல்லி விட்டுச் செல்ல, இந்திராவிற்கோ தன் மீது அவன் பெரிய சுமையை தூக்கி வைப்பது போல் தோன்றுகிறது. அவன் குறித்து அவளுக்கிருக்கும் நேர்மறையான அபிப்ராயத்தை சுட்டும் சம்பவங்களை வைத்து, அது மற்றவர்கள் அறிந்து விடக் கூடாது என்ற பயம் கலந்த, அதே நேரம் இனிமையும் கூடிய சுமை தான் என்று யூகிக்க முடியும். ஆனால் அதற்கடுத்த சில நாட்களில் சங்கரன் அவள் வீட்டிற்கு வருவது நின்று விடுகிறது.

வீணை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவளின் ஆசையைப் போல் அழுத்தமானதாக இதைச் சொல்ல முடியாவிட்டாலும், சங்கரன் குறித்த நினைவுகள் இத்தனை ஆண்டுகளாக அவள் மனதின் ஒரு மூலையில் அழியாமல் இருந்தது என்பதை அவள் பகற்கனவு உணர்த்துகிறது. இருவருக்கும் ஆண் பிள்ளைகள் மட்டுமே இருப்பதால் சம்பந்தம் கூட செய்து கொள்ள முடியாது என்று சங்கரன் கூறுவதாக இந்திரா காணும் பகற்கனவில், இன்னும் சில சொல்லப்படாத விஷயங்கள் உள்ளன.
வீணை கற்றுக்கொள்ள தனக்கிருந்த ஆசையை அவள் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடும். ஆனால் சங்கரன் குறித்து? அவள் யாரைத் தேடுகிறாள் என்று கோபு கேட்பதற்கு ‘சங்கரன்’ என்று இந்திரா சொல்ல அவன் உதட்டைப் பிதுக்குகிறான். ‘அவள் சங்கரன் என்றாலும் சர்தார் சிங் என்றாலும் அவனுக்கு ஒன்று தான்’ என்று அசோகமித்திரன் சொல்லும் போது இந்திராவின் – யாருடனும் பகிர முடியாத – அந்தரங்க சோகம் தெரிகிறது.

ஒரு வேலை சங்கரனை மணந்திருந்தால் அவள் ஆசைகள் நிறைவேறி இருக்கலாம். சங்கரனுக்கு என்ன ஆனது என்பதையும் இறுதியில் புனைவு எழுத்தாளனுக்கு அளிக்கும் ‘எல்லாம் தெரிந்த கதைசொல்லி’ என்ற சலுகையின் மூலம் வாசகனுக்கு மட்டும் சொல்கிறார் அசோகமித்திரன். அதை இதுவரை அறிந்திராத இந்திரா இனியும் அறிய மாட்டாள். அவள் நினைவுகளில் எப்போதும் இனிமையை நிறைக்கும் இளைஞனாகவே சங்கரன் வலம் வருவான்.

நிறைவேறாத ஆசைகளுடன் நடுத்தர வயதை அடைந்துள்ள இந்திராவின் வாழ்வும் அவள் தாயைப் போல சப்தமில்லாமல் குலுங்கி அழுவதில் – இதே போல் யாருக்கும் வெளிக்காட்டாமல் மனதோடு குமறிக்கொண்டிருக்கும் எண்ணற்ற வாழ்க்கைகளோடு – தான் இணைய வேண்டும்.

அசோகமித்திரனின் பிற சிறுகதைகள் குறித்து- 

ஒளிப்பட உதவி – இட்லிவடை

ஒரே கேள்வி

எஸ். சுரேஷ்

கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?

பதில்: ஹ ஹ ஹ ஹ ஹ. காலேஜ் முடிச்சிட்டு உத்தியோகம் கிடைச்சிருக்கற ஸ்டுடென்ட் கிட்ட இந்த மாதிரி கேள்வியா? ஹ ஹ ஹ. இப்போ தான் சார் இந்திய கம்ப்யூட்டர் இண்டஸ்ட்ரி வேகமாக வளரும் போல் இருக்கு. நாங்க வேற டாப் கிளாஸ் காலேஜ்லிருந்து பாஸ் ஆகியிருக்கோம். முன்னாடி நிறைய வாழ்கை இருக்கு சார். இப்போ போயி எதுக்கும் வாழணும்ன்னு கேட்டுண்டு.

ஆனா நீங்க கேக்கறது எனக்கு புரியறது. நான் நிறைய நாவல் படிப்பேன். இந்த விஷயத்தை பத்தி பல ஐரோப்பிய நாவலாசிரியர்கள் பேசியிருக்காங்க. காமு, சார்த்தர், தாஸ்தாவெஸ்கி இப்படின்னு பல பேரு. அங்க நிஹிலிசம்ன்னு ஒரு தத்துவம் இருக்கு தெரியுமா? அந்த தத்துவத்தின்படி நமக்கு இந்த உலகத்துல ஒண்ணும் புரியாது. ஒரு மாதிரி சூன்யம் இந்த உலகம்ன்னு அந்த தத்துவம் சொல்லுதாம். புத்தரும் இதே தத்துவத்த சொன்னாரா அப்படின்னு ஒரு கேள்வி இருக்கு. ஆனா புத்தர் சொன்னது வேற நிஹிலிசம் வேறன்னு சொல்றாங்க. தத்துவம் படிச்சா மண்ட குழம்பிடும். நான் ரிலேடிவிட்டி தியரி படிச்சவன். இந்த தத்துவம்லாம் படிச்சா அதுவே சுலபமா இருக்கும் போல் இருக்கு.

ஆனா ஐரோப்பால நிஹிலிசம் பெரிய பாதிப்பு ஏற்படுத்தினதா சொல்றாங்க. பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் தற்கொல செஞ்சிண்டாங்களாம். இதுக்கு எதிரா காமு ஒரு பெரிய கட்டுரை எழுதினதா என் நண்பன் அசோக் சொல்றான். அவனும் நானும் ஒரே கம்பனில சேரப் போறோம்.

வாழ்க்கைல எவ்வளவோ செய்யணும் ஆனா ஒரு அம்பது வயசுல டக்க்னு போயிடணும். எங்க கொள்ளு தாத்தா பாவம். படுத்த படுக்கையா இருந்து, அவரும் கஷ்டப்பட்டு எல்லோரையும் துன்புறுத்தி போனாரு. அது மாதிரி இல்லாம ஒரு ஹார்ட் அட்டாக்ல போயிடணும். அது ஒண்ணுதான் ஏன் அசை,

கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?

பதில்: வாங்க சார் வாங்க. போன முறை நீங்க ஏதோ தமாஷுக்கு சொல்றீங்கன்னு நினைச்சேன். நிஜமாவே வந்துட்டீங்க. உங்க திட்டம் நல்லா இருக்கு. பத்து வருஷத்துக்கு ஒரு முறை இந்த கேள்விய கேக்கறது. என்ன மாற்றம் நிகழ்ந்திருக்குன்னு பார்க்கறது.

நான் காலேஜ் விட்டு வெளீல வந்தவுடனே இப்ப தான் வாழ்க்கையே ஆரம்பிக்குதுன்னு நினைச்சேன். ஆனா பத்து வருஷம் கழிச்சி இப்போதான் வாழ்க்கையே ஆரம்பிக்கப் போவுதுன்னு ஒரு உணர்வு இருக்கு. ஏன்னா நான் காதலிக்கும் பெண்ணை அடுத்த மாசம் கல்யாணம் செஞ்சிக்க போறேன்.

நான் வேலைல சேர்ந்த பிறகு ஆபிஸ ஒரு கலக்கு கலக்கிட்டேன். நான் முதல் முறையா கோட் பண்ணத கிளையேன்ட் ரொம்ப பாராட்டினான். வேலைக்கு சேர்ந்த ஆறு மாசத்துல என்னை அமெரிக்காவுக்கு அனுப்பினாங்க. அந்த ப்ராஜெக்ட் சரியா முடிச்சேன். அந்தக் காலம் இப்போ போல் இல்ல. அப்போ எல்லாம் அமெரிக்கா போற கனவே காண முடியாது. நான் போனது பல பேருக்கு அசிடிடி கொடுத்தது. என் நண்பன் அசோக்கும் வயிறு எறிஞ்சான். ரெண்டு வருஷம் அங்க இருந்துவிட்டு திரும்பி வந்தேன்.

என் கதைய விடுங்க. நீங்க கேட்ட கேள்விக்கு என்ன பதில்? இப்போ இது போன்ற கேள்வியெல்லாம் யாரும் கேக்கிறதில்ல. மாணவனா இருந்தபோது நாங்க எல்லோரும் புத்தகம் படிப்போம், விவாதிப்போம். இப்போ புத்தகம் படிக்கிற டைம் இல்ல. படிச்சாலும் விவாதிக்க ஆள் இல்ல. வேலை, வேலை, வேலை. நாமும் முன்னேறுகிறோம். கம்பனியும் முன்னேறுகிறது. காற்றுள்ள போது தூற்றிக்கொள்ள வேண்டும் சார். நின்று நிதானமா யோசிக்கற அளவுக்கு டைம் இல்ல சார். இருக்கவும் கூடாது. அப்ப தான் முன்னேற முடியும்.

எதுக்காக வாழணும்? எதிர்காலத்துக்காகதான். எதிர்காலம் நல்லா இருக்குன்னா வாழ வேண்டியதுதான். நான் ப்ராஜெக்ட் லீட் ஆன பிறகு அவ என் டீம்ல சேர்ந்தா. அன்றைக்கே காதல்வயப்பட்டுட்டேன். அழகியா இல்லையான்னா எனக்கு பதில் சொல்ல தெரியாது. ஆனா எனக்கு அவ தான் பொருத்தமான பெண். இவ கூட வாழ போகிறோம் என்று நினைக்கிற பொழுதே எவ்வளவு வருடங்கள் வேணுமானாலும் இந்த உலகத்துல வாழலாம்ன்னு தோணுது சார். இப்ப இந்த கேள்விக்கு அவசியமே இல்ல.

கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?

பதில்: கரெக்டா வந்துடிறீங்க சார். பத்து வருஷம் ஆனாலும் எப்படியோ என்ன தேடி கண்டுபிடிச்சிடறீங்க.

இந்த முறை உங்களுக்கு ஸ்ட்ராங்கா பதில் சொல்லலாம். நாம நம்ம குழந்தைகளுக்காக வாழணும். எனக்கு இப்போ ரெண்டு குழந்தைங்க. ஒவ்வொரு நாளும் ஆபிஸ்ல இந்த பாலிடிக்ஸ் எல்லாம் டீல் பண்ணிட்டு வீட்டுக்கு சோர்வா வரும்போது அந்த குழந்தைங்க சிரிப்ப பார்த்தா வரும் ஆனந்தம் வார்த்தைல சொல்ல முடியாது சார். க்ளுகோஸ் குடிச்ச மாதிரி இருக்கும்.

குழந்தைங்க இல்லேன்னா வாழ்க்கை ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும். முன்ன மாதிரி இல்ல சார் இப்போ. ஆபிஸ் பூரா பாலிடிக்ஸ். நான் எல்லா வேலையும் பண்ணி கஸ்டமர குஷிப்படுத்தி பிஸ்னெஸ் டெவெலப் பண்ணேன். ஆனா என்ன லாபம்? எனக்கு ப்ரமோஷன் குடுத்தாங்க சரிதான். நானும் அப்போ ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனா அடுத்த நாளே அசோக்குக்கும் ப்ரமோஷன் குடுத்தாங்க. அவன அமெரிக்கா அனுப்பினாங்க. என்ன கேட்டாங்க ஆனா மனைவி கர்ப்பமா இருந்தா. என்னால போக முடியல. அவன் என் அளவுக்கு என்ன வேல பண்ணான்? ஏதோ பாஸ் கூட சிரிச்சி சிரிச்சி பேசுவான். எப்படியோ ப்ரமோஷன் வாங்கிட்டான். எல்லோருக்கும் ப்ரோமோஷன் குடுத்தா வேலை செய்யறவனுக்கு என்ன சார் மதிப்பு? சரி விடுங்க. கார்ப்ரட்ல இதெல்லாம் சகஜம்.

இப்போ உங்க கேள்விக்கு வருவோம். நாம நமக்காக வாழணுமா இல்ல நம்ப சார்ந்து இருக்கிறவங்களுக்காக வாழணுமா? என்ன பொருத்த வரையில இது தான் கேள்வியா இருக்க முடியும். இதுக்கு பதில் சொன்னா உங்க கேள்விக்கு பதில் சொன்ன மாதிரி. நான் பைரப்பா எழுதின ‘வம்ச வ்ரிக்ஷா’ படிச்சேன். அதுல ஒரு குழந்தை தாய் தந்தைக்கு மட்டும் சொந்தம் இல்ல. அவங்க வம்சத்துக்கே சொந்தம்னு அதுல வரும் முக்கியமான கதாபாத்திரம் வாதாடுறாரு. என்னால அத ஏற்க முடியல. குழந்தை அதைப் பெற்றவர்களுக்கு தானே சொந்தம்? ஆனா அந்த ஒரு பாய்ண்ட் ஆப் வியூ தப்புன்னு சொல்ல முடியல. இந்த காலத்துக்கு அதெல்லாம் சரி வராது. என் அப்பா அம்மா என் கூட தான் இருக்காங்க. அவங்களுக்கு பேரன் பேத்தி மேல அலாதி ப்ரியம் ஆனா அதுக்குன்னு அவங்களால நம்ம குழந்தைங்க எதிர்காலத்த டிசைட் பண்ண முடியாது இல்லையா?
ஹ ஹ ஹ. ரொம்ப பேசிட்டேன்னு நினைக்கிறேன்.

கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?

பதில்: முதல் முறையா நானே என்னை இந்த கேள்வி கேட்டுக்கொண்டேன். உலகம் ரொம்ப மாறிவிட்டது சார். எதுக்குமே மதிப்பில்லாம போயிடிச்சி. பணம் தான் முக்கியம்னு ஆயிடிச்சி. நான் எவ்வளவு வருஷமா இந்த கம்பெனிக்காக பாடு பட்டிருப்பேன். எவ்வளவு உழைச்சேன். என் உழைப்புனால எவ்வளவு புது கஸ்டமர் கிடைச்சாங்க. ஒரு டவுன்ட்டர்ன் வந்தவுடனே யார தூக்கலாம்னு பாக்கறாங்க. லாயல்டி, உழைப்பு எதுக்குமே மரியாத இல்ல. காக்கா பிடிக்கறவங்க தான் வாழறாங்க. என்ன நேரா கூப்பிட்டு “போடா வெளியிலே”ன்னு சொல்லிருந்தா அது மரியாதையா இருந்திருக்கும். ஆனா இவங்க அப்படி செய்யல. என்னை ஒரு பவர் இல்லாத ரோலுக்கு மாத்தினாங்க. ஏழு வருடமா ப்ரமோஷன் இல்ல. ரெண்டு வருஷம் இன்க்ரிமென்ட் இல்ல. இன்க்ரிமென்ட் குடுத்தாலும் ஏதோ ரெண்டு பர்சென்ட் மூணு பர்சென்ட்ன்னு குடுக்கறாங்க. அதே அசோக்க பாருங்க. நல்லா அமெரிக்கால செட்டில் ஆயிட்டான். கம்பனி அவனுக்கு கிரீன் கார்ட் ஸ்பான்சர் செஞ்சது. அவனுக்கு இந்த அஞ்சு வருஷத்துல ரெண்டு ப்ரமோஷன். என்னால உயிர் வாழ்ந்தவன், காக்கா பிடிக்கிறதா தவிர ஒரு டாலேன்ட் இல்லாதவன். அவனுக்கு எப்படி ஒரு வாழ்வு பாருங்க.

போடா கொய்யான்னு ராஜினாமாவ வீசி எறிஞ்சிட்டு வந்துடலாம். ஆனா நம்ப குடும்பத்துக்காக அத செய்யாம இருக்கேன். இப்போ என் கூட வேல செஞ்ச பிஸ்வாஸ்ஸ எடுத்துக்கோங்க. அவனுக்கு ஒரே குழந்தை. அவன் பெண்டாட்டி நல்ல வேலைல இருக்கா. நல்ல சம்பாத்தியம். அவன வேற ரோல் எடுக்க சொன்னாங்க. அவன் உடனே ராஜினாமா செஞ்சிட்டு பெண்டாட்டி பணத்துல சாப்பிட்டுக்கொண்டு ஜாலியா இருக்கான். நமக்கு அப்படி முடியலை. அதுனால பல்ல கடிச்சிண்டு ஓட்டிக்கொண்டிருக்கிறேன். வெளியில வேற என் வயசு ஆளுங்களுக்கு வேலை கிடைப்பதில்லை.

இப்போ என்னோட குறிக்கோள் ஒன்றே ஒன்று தான். என் பிள்ளைகள நல்லா படிக்க வச்சு நல்ல future அமைச்சு கொடுக்கணும். அது தான் வாழ்க்கைல முக்கியம். நம்ப வாழ்க்கையே நம்ப குடும்பத்துக்கு தான்.

கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?

பதில்- மனசு நெறஞ்சிருக்கு சார். போன வருஷம் என்னுடைய அறுபதாம் பிறந்த நாள ரொம்ப கிராண்டா என் பிள்ளைகள் கொண்டாடினார்கள். எல்லாரும் வந்து பார்டிசிபேட் பண்ணங்க. இவ்வளவு பேர் நம்ம கூட இருக்காங்கன்னு நினைக்கும் பொழுது மகிழ்ச்சியா இருக்கு.

அதே போல் இவ்வளவு வருஷம் நாம உயிர் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்பதே இந்த காலத்துல ஒரு சாதனையா இருக்கு. பாவம் அசோக். நல்லா ப்ரோமோஷன் வந்துது. ஆனா என்ன லாபம். ஒரே ப்ரெஷர். சட்டென்று ஒரு நாள் மாரடைப்புல போயிட்டான். எல்லோருக்கும் ஒரே ஷாக். “நல்ல வேள உங்களுக்கு ப்ரோஷன் வரல. அந்த ப்ரெஷர் உங்களுக்கு இல்ல. ஆள் இல்லாம பணத்த வச்சிண்டு என்ன பண்றது?” என்று என் மனைவி கேட்டாள். அதுவும் உண்மைதான்.

ஒரு விதத்துல வேலைய விட்டதும் நல்லது தான். நல்ல டைமிங்க்ள விட்டேன். பையன் ஒரு மாதிரி அமெரிக்கால வேலைல சேர்ந்த பிறகு நான் இங்க வேலைய விட்டேன். பிறகு ஸ்டார்ட் அப்ல கொஞ்ச நாளு, ஒரு காலேஜ்ல லேக்சுரர்ரா கொஞ்சம் நாளுன்னு வண்டி ஓடிச்சி. அப்புறம் டாட்டர்-இன்-லா பிரேக்னேன்ட் ஆனா. பெண்ணு கல்யாணமாகி ஜெர்மனி போயிட்டா. அதுக்கு பிறகு கொஞ்ச நாள் அமெரிக்கா, கொஞ்ச நாள் ஜெர்மனின்னு வண்டி ஓடுது.

எப்பவுமே நான் உங்க கேள்விக்கு டைரெக்ட்டா பதில் சொல்றதில்ல. ஹ ஹ ஹ. இப்போ நான் வாழறது என் பேர பிள்ளைகளுக்காக தான். இப்போ எங்க உலகமே அவங்கதான்.

கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?

பதில்: நீங்க புதுசா தம்பி. அவர் வரலையா? ஒ. என் மனைவியும் கான்சர்ல தான் இறந்தா. லங்க் கான்செர். அவ போன பிறகு எதுக்கு வாழணும் தான் இருக்கு. ஏன் வாழணும்னு கேள்வி எழுந்துக்கொண்டே இருக்கு. பதில் தான் தெரியல. பசங்க ரெண்டு பேரும் வேற வேற எடத்துல இருக்காங்க. எனக்கோ அங்க இருக்க பிடிக்கல. இங்க ஒரே தனிமை. என் மனைவி என்ன பாடு பட்டா. உதவிக்கு யாரும் இல்ல. இந்த நகரத்துல எனக்கு பல சொந்தக்காரர்கள். ஆனா எல்லோரும் அவங்க அவங்க வேலைல இருக்காங்க. நம்ம ஒத்தாசைக்கு வேலைக்கார்கள் தான். அவங்கள் நம்பி தான் பல பேர் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கு தம்பி. நம்ப பிள்ளைகள விட வீட்டுக்கு வர நர்சுக்கு தான் நம்மள பத்தி நல்லா தெரிஞ்சிருக்கு.

நம்ம பிள்ளைக இங்க இருந்தா நமக்கு ஒரு சந்தோஷம். இப்போ எல்லாம் பேர பிள்ளைகள கம்ப்யூட்டர் ஸ்க்ரீன்ல தான் பாக்க முடியறது. எங்க சம்பந்தி கதியும் இதேதான். என் பையனோட மாமியார் தனியா இருக்கா பாவம். மாமனாருக்கு சுகர். கிட்னி கோளறு. ரொம்ப துன்பப்பட்டு இறந்தாரு பாவம். அவர் போனது எல்லோருக்கும் ஒரு ரிலீப்.

இந்த தனிமைல வாழ்க்கையோட அர்த்தம் என்னனு தேடிக்கொண்டிருக்கிறேன். பல புக்ஸ் படிக்கிறேன். ஆனா ஏனோ மனம் அதுல லயிக்க மறுக்கிறது. என் மனைவியோட நினைவு இன்னும் என்னைவிட்டு நீங்கலைன்னு நினைக்கிறேன். எப்போவும் அவ தான் ஞாபகம் வருகிறாள். ஹ்ம்ம். ஏதோ நம்மள யம தர்மன் அழைக்கும் வரை வாழ்ந்துக்கொண்டிருக்க வேண்டும். அது தான் விதி.

கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்?

பதில்: நீங்க வேற ஆளா? அவர் ரிசைன் பண்ணிட்டாரா? இந்த காலம் அப்படி. நாங்க எல்லாம் முப்பது ஆண்டுகள் ஒரே கம்பனில இருந்தவங்க. அந்த வால்யூ சிஸ்டம் இப்போ இல்லை. மாரல்ஸ் மாறி போச்சு. நீ கேட்ட இல்லையா ஒரு கேள்வி, “எதுக்கு உயிர் வாழணும்’ன்னு. இதுக்கு தான் உயிர் வாழணும். அதாவது என்ன போல் பெரியவங்க, இந்த தலைமுறைக்கு ந்யாயம்னா என்ன, தர்மம்ன்னா என்னான்னு எடுத்து சொல்லணும். அதுக்காக நாங்க வாழணும்.

நான் தினமும் கோவிலுக்கு போறேன். தினமும் அங்க அரை மணி லெக்சர் குடுக்கிறேன். பல ஆர்டிகல்ஸ் எழுதுகிறேன். உலகம் பூரா பல பேர் அத படிக்கறா. எனக்கு எவ்வளு மெசஜ், எவ்வளு மெயில் தெரியுமா. என் பொண்ணு இப்போ ஹாலந்த்ல இருக்கா. அவ ஒரு நாள் போன் பண்ணி, “அப்பா இங்க ஒருத்தர் உங்க ஆர்டிகல் படிச்சி ரொம்ப புகழ்ந்தார். ஐ யாம் ப்ரௌட் ஆப் யூ” சொன்னா. போன முறை பையன பாக்க அமெரிக்கா போன போது அவங்க கோவில்ல மூணு நான் அத்வைதம் பத்தி பேசினேன். என்ன ரெஸ்பான்ஸ் தெரியுமா. பேரன், பேத்திக்கெல்லாம் ஒரே ஆச்சரியம், “யூ ராக் தாத்தா”ன்னு சொன்னா என் பேத்தி. இப்போ கோவில்ல நடக்கற எல்லா விசேஷத்துக்கும் நான் இருந்தாகணும். பல ஏழை பசங்களுக்கு படிக்க உதவற டிரஸ்ட் வச்சிருக்கோம். நீங்க கூட எதாவது குடுக்கலாம். டாக்ஸ் exemption உண்டு. நேத்தி சுவாமிஜி வந்தார். என்னோட நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தார். அவரும் நாங்க செய்கிறதெல்லாம் மெச்சினார். ஏதோ பகவான் புண்யத்துல நம்மளால முடிஞ்சத செய்யமுடியறது.

ஓம் சத்குருவாய நமஹா.

கொண்டாட்டமும் கேளிக்கையும்

இந்த வாரம் இடுகையிடப்பட்டுள்ள “கைகால்களை நீட்டி” என்று துவங்கும் அமலன் ஸ்டான்லி கவிதையின் துவக்கம் தெளிவில்லாதது. குழந்தைகள் வகுப்பறைக்கு வெளியே பெய்யும் மழையில் கைகளையும் கால்களையும் நீட்டி ஈரமாக்கிக் கொள்கின்றன என்பது மழைக் கவிதை என்று தெரிந்தபின்தான் புரிகிறது. மேலும் கள்ளத்தனம் என்ற சொல் குற்றம் என்பதை நினைவுபடுத்தாமல் போனாலும், மறைக்கப்படும் செயலைச் சுட்டுகிறது.

அடுத்து வராண்டாவில் கேட்கும் கூக்குரல்கள் டீச்சரின் பிரம்பு வீச்சில் அடங்குகின்றன- டீச்சரின் பிரம்புவீச்சு எங்கே நடக்கிறது? வராண்டாவில் இருக்கும் மாணவர்களை அடிக்கிறாரா? ஆம் என்றால் கூக்குரல்கள் வலியின் அலறல்கள். அல்லது வகுப்பறைக்குள் அவர் பிரம்பைக் கொண்டு மேஜையில் அடித்து, அதனால் வராண்டாவில் நிற்கும் மாணவர்களின் சத்தம் நிற்கிறதா? அப்படி என்றால் கூக்குரல்கள் அதுவரை சந்தோஷமாக ஒலித்த சத்தங்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். இந்த அளவுக்கு ஏன் யோசிக்க வேண்டும் என்று கேட்டால், ஒட்டுமொத்தமாக தொகுத்து வாசிக்கும்போது இது மிகவும் மகிழ்ச்சியான கவிதையாகவே இருக்கிறது. ஒவ்வொரு வார்த்தையாக வரி வரியாகப் பிரித்து படிக்கும்போதுதான் இது போன்ற முரண்பொருள் புலப்படுகிறது.

To decipher what Tolstoy wanted to say, the translator has to devise an interpretation of Tolstoy’s narrative voice in “Anna Karenina” என்கிறது ஒரு NYT கட்டுரை . ஒன்று, நாம் முதல் பத்தியில் உள்ள கள்ளத்தனம் என்பதைத் தொடர்ந்து கூக்குரல்கள் என்று வருவதால் இது மழையின் அழகை ரசிக்கும் கவிதை மட்டுமல்ல, வகுப்பறைக்குள் அடைந்து கிடக்கும், ஆசிரியர்களுக்கு பயப்படும் மாணவர்களையும் பற்றிய கவிதை என்று புரிந்து கொண்டால், மழை பெய்வதைப் பார்க்கவும் அதில் நனையவும் வகுப்பறையை விட்டு வெளியே வரும் மாணவர்களை வராண்டாவில் பிரம்பால் அடித்து ஆசிரியர் உள்ளே போகச் சொல்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். அப்போது கூக்குரல்கள் அவலக் குரல்கள் என்று அர்த்தப்படும். அப்படியில்லாமல், கள்ளத்தனம் என்பது பிஞ்சுகளைச் செல்லம் கொஞ்சுவது என்று புரிந்து கொண்டால், வராண்டாவில் மாணவர்கள் சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள், ஆசிரியர் மேஜையை பிரம்பால் அடிக்கிறார் அல்லது காற்றில் பிரம்பைச் சுழற்றிக் கொண்டு வருகிறார், அதுவரைக்கும் சந்தோஷமாக சத்தம் போட்டுக் கொண்டிற்கும் மாணவர்கள் இப்போது அடங்குகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

மேற்கண்ட இரண்டு அர்த்தங்கள் எப்படி இருந்தாலும், முதல் பத்தியில் பிஞ்சுகள் அறைக்குள் இருக்கிறார்கள், கைகால்களை நனைத்துக் கொள்கிறார்கள் இப்போது இன்னும் கொஞ்சம் வெளியே, வராண்டாவுக்கு வந்து விட்டார்கள் என்பது தெரிகிறது. அதற்கு அடுத்தபடியாக விடலைகள்.

கவிதையில் பாழ் கழிவறை என்று வருகிறது, அவசியம்தானா? எதுகை மோனையாக எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். அல்லது பாழடைந்த இடங்கள் குற்றச்செயல்களுக்கு பாதுகாப்பாக இருப்பதால் பள்ளியின் பாழ் கழிவறையில் சீட்டாடிக்கொண்டு பதுங்கியிருக்கும் விடலை மாணவர்கள் சிலர் என்று இருக்கலாம். இவர்கள், மழை பெய்வதைப் பார்த்ததும் வெளியே வருகிறார்கள் – கொடிமரத் திடலில் நன்றாக நனைந்து ஆடுகிறார்கள். அவர்கள் ஆசிரியர்களுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாய் மறைத்து வைத்திருக்கும் சீட்டுக் கட்டுகள் அவர்களுடைய ரகசியப் பைகளில் இருந்து பிதுங்கி விழுகின்றன.

இதெல்லாம் எப்படியானாலும் முதலில் மாணவர்கள் அறையில் இருந்தார்கள், கள்ளத்தனமாய் ரசித்தார்கள். அடுத்து வராந்தாவுக்கு வந்தார்கள், அடி வாங்கி அழுதார்கள் அல்லது மிரட்டலுக்கு பயந்தார்கள். இப்போது துணிச்சலாக வெளியே வந்து மழையில் ஆடுவது மட்டுமல்ல, அவர்களின் திருட்டு புத்தியும் வெளிப்பட்டு விடுகிறது – பதிவர் மொழியில் சொன்னால், பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.

அடுத்து- “மெலிந்து சிரித்து பார்வை மாற்றாது நோக்கும்/ மழலையரின் கலவர ஆர்வம்.”

-இதோ இங்கே சில பூனைக்குட்டிகள். கள்ளம் கபடமில்லாத மழலைகள்தான், ஆனால் இந்தச் சீட்டுக்கட்டு விடலைகளுக்கும் இவர்களுக்கும் எவ்வளவு தூரம்? அச்சம் அணை போடுமளவே கலவர உணர்வு, அச்சம் நீங்கினால் ஆர்வம் இவர்களை கொடிக்கம்பத்துக்குக் கொண்டு சென்று விடும்.

எதிர்பாராத குறுமழைக்கு
யாரோ தவறவிட்ட சரித்திர நூல்
மண்பட்டு நனைகிறது
மரத்தடியில் கவனிப்பாரற்று.

-இறுதியில் ஒரு காட்சி. யாராலோ தவறவிடப்பட்ட சரித்திரப் புத்தகம் மழையில் நனைந்து கொண்டிருக்கிறது- இது எப்போது தவறவிடப்பட்டது? ஏன், எப்போது கைக்கொள்ளப்பட்டது என்றும்கூட கேட்கலாம். இங்கு கல்வியைச் சரித்திர நூல் பிரதிநிதிப்படுத்துகிறது- சரித்திரம் என்பது இறந்த காலம் (வாழும் வரலாறு என்றும் உண்டு, ஆனால் இந்தக் கவிதையின் கான்டக்ஸ்ட் அந்த மாதிரி அர்த்தப்படுவதில்லை), மழை நிகழ்காலம், எதிர்பாராதது, அனைத்தையும் நனைப்பது, கல்வி தொகுக்கப்பட்டது, நாலு சுவர்களுக்குள் அடைத்து வைத்திருக்கும் நெறிப்பிரதி. அறைக்கு வெளியே பெய்யும் மழை அது அளிக்கும் களிப்பால் அமைப்புக்கு வெளியே வரச் சொல்லும் அழைப்பு. மேலும், சரித்திர நூல் மண்பட்டு நனைவதில் ஒரு கவித்துவம் இருக்கிறது- மண்ணோடு பிறந்தது மண்மூடி மறைந்ததம்மா.. என்று பாடினால் அதில் ஒரு நியாயம்கூட இருக்கும்.

சுருக்கமாகச் சொன்னால், இந்தக் கவிதையில் ஓர் உணர்வு முரண்பாடு உள்ளது. இது மாணவர்களுக்கும் மழைக்கும் ஆதரவான கவிதையாக வெளிப்பார்வையில் தெரிகிறது என்றாலும் இதன் உள்ளடக்கம் ஒரு அடக்குமுறையைக் கண்டிக்காமல் சித்தரிக்கிறது. ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும், அடக்குமுறை அது இது என்று எந்த கோஷமும் இல்லாமல் மழைநாளின் களிப்பைக் கொண்டாடவே செய்கிறது.

oOo

கொண்டாட்டம் களியாட்டமாய் மாறாமல் எப்போது கேளிக்கையாய் நின்று விடுகிறது? பார்வையாளர்கள் பங்கேற்க முடியாத தொலைவில் கடைசி வரை நின்று விலகும்போது கொண்டாட்டத்துக்கு உரிய உருமாற்றம் நிகழ்வதில்லை, யார் யார் எங்கிருந்தார்களோ அங்கேயே இருந்து பிரிகிறார்கள், அப்போதிருந்த நிகழ் கணத்தின் சாட்சிகளாய் ஒரு சில தடயங்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன- இந்தக் கவிதையில் சரித்திரப் புத்தகம், மற்றொரு கவிதையில்  குழிபறித்துக் கிடக்கும் தெரு. சிவசக்தி சரவணன் மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த இரு கவிதைகளிலும் கடக்கப்படாத தொலைவைப் பார்க்க முடிகிறது.

“நான் உண்மையில் ஓரளவு ஞாபகம் இருந்த தேவதச்சனின் ஒரு கவிதையை மொழிபெயர்க்க விரும்பி, அதை எடுத்துப் பார்த்தபோது அதில் குறிப்பாக அதன் கடைசி வரிகளை எப்படி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது என்று தெரியாமல் இருந்தது. சரி, வேறு ஏதாவது எளிமையாக இருக்கிறதா என்று சில புத்தகங்களைப் புரட்டியபோதுதான் அமலன் ஸ்டான்லியின் மக்கள் கூடுமிடம் என்று துவங்கும் கவிதையும் இன்னொன்றும் அகப்பட்டன,” என்று எழுதுகிறார் சரவணன். எந்த திட்டமிடலும் இல்லாத தன்விருப்பத் தேர்வுகளிலும் ஒருமை இனங்காணப்படக்கூடும் என்பதற்கான உதாரணங்கள் இந்தக் கவிதைகள். உள்ளடக்கம் ஒரு சந்தோஷ நிகழ்வு, ஆனால் விவரிக்கப்படும் பின்னணியில் ஒரு ஏமாற்றம் நிழலாடுகிறது, களிப்பைச் சித்தரிக்கும்போதே உள்ளடங்கி நிற்கும் தடுமாற்றங்களையும் இந்தக் கவிதைகள் நிகழ்த்துகின்றன.

‘”…but paging back through the novel, I realized that I never had to worry about coming upon some disturbing sensibility, original metaphor, syntactical oddity, evidence of an intricate pattern, mysterious allusion, or alien setting. No, The Nest is formed from familiar twigs to hold in fledgling readers who cheep for their next helping of plot from the pre-digesting mother/author,” என்று ஒரு கட்டுரையில் படிக்க நேர்ந்தது. ஒரு இலக்கியப் படைப்பில் நாம் எதிர்பார்க்கக்கூடியவை எவை என்பதில் சிலவற்றை இது வசதியாக பட்டியலிட்டுத் தருகிறது- ஒரு உறுத்தலைத் தோற்றுவிக்கும் நுண்ணுணர்வு (disturbing sensibility), புதிய படிமங்கள் (original metaphor), தனித்துவம் கொண்ட மொழி (syntactical odditity). நுட்பமான கட்டமைப்பு (intricate pattern), புதிர்த்தன்மை கொண்ட சுட்டல்கள் (Mysterious allusion), அந்நிய களம் (alien setting). வெ. அமலன் ஸ்டான்லியின் இவ்விரு கவிதைகளும் ஒரு டிஸ்டர்பிங் சென்சிபிலிட்டியை உணர இடம் கொடுக்கின்றன என்று நினைக்கிறேன்.

அண்மைய பதாகை இதழ்களில் நகுல் வசன் ந. ஜெயபாஸ்கரன் கவிதைகளையும் இப்போது சரவணன் வெ. அமலன் ஸ்டான்லி கவிதைகளையும் மொழிபெயர்க்க எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இது நம் வாசிப்பைச் சிறிதளவேனும் விரிவுபடுத்துகிறது.

  • ஜெயபாஸ்கரன் கவிதைகள்-

இந்தக் கணம்
ஐந்தேகால் ரூபாய்க்கு

  • வெ. அமலன் ஸ்டான்லி கவிதைகள்-

மக்கள் கூடுமிடம் 
கைகால்களை நீட்டி

கைகால்களை நீட்டி… – வெ. அமலன் ஸ்டான்லி கவிதை மொழியாக்கம்

கைகால்களை நீட்டி
ஈரமாக்கிக் கொள்ளும்
பிஞ்சுகளின் கள்ளத்தனம்.

டீச்சரின் பிரம்பு வீச்சில்
வராண்டாவில் அடங்கும்
கூக்குரல்கள்
பாழ் கழிவரைவிட்டு வெளியேறி
கொடிமரத் திடலில்
நீர் ஊறிக் கூத்தாடும் விடலைகளின்
ரகசியப்பை பிதுங்கி விழும் சீட்டுக்கட்டுகள்.
மெலிந்து சிரித்து பார்வை மாற்றாது நோக்கும்
மழலையரின் கலவர ஆர்வம்.
எதிர்பாராத குறுமழைக்கு
யாரோ தவறவிட்ட சரித்திர நூல்
மண்பட்டு நனைகிறது
மரத்தடியில் கவனிப்பாரற்று.

- வெ. அமலன் ஸ்டான்லி

*****************************************************

Furtively the little ones
stretch and wet
their hands and feet
A whiplash of the teacher’s cane
shuts out the clamour in the veranda

Emerging from the run-down washroom
adolescent merry-makers
dance about, soaking in rain
at the square with the flag mast-
decks of cards popping out of secret pouches

With thin smiles and rapt eyes,
the toddlers have a look
of awestruck wonder

In the sudden drizzle
a history textbook someone had lost
gets damp and muddy
under a tree
unnoticed by all

*****************************************************

வாழ்ந்ததன் பொருள்

நித்ய சைதன்யா

துளியென உருப்பெற்று
வெள்ளமென பெருக்கெடுத்து
சுழற்றி உட்கொள்ள பாய்ந்தோடுகிறது
உயிர் ஏகிய சாவின் நிழல்
எம்மிப் பறந்தபின் தவித்தாடுகிறது
பறவையை ஏந்திய மரத்தின் கிளை
மண்ணின் அணைப்பை விழைந்து
காற்றில் மிதந்து தணியும் ஓரிலையில்
முன்னோக்கி செல்லும் அகாலப்பெருவெளி
தணியாத இரவொன்றின் விசனம்
விழித்து முறைக்கும்
வனத்தின் விழி கொண்டு
நிழல் தாண்டிய பயணத்தில்
எக்கணமும் நிகழக்கூடும்
மண்ணோடு கரையும் பேறு
பாசக்கயிற்றின் அழுத்தம் பழகி
சிரிக்க முடிந்தால் போதும்
இங்கு வாழ்ந்ததன் பொருள் கிட்டும்