12. ஆசிரியர் எங்கே?
ஜார்ஜ் ட்ருக்கர் எழுதிய ‘லைப் ஆப் எ லிவிங் செயின்ட்’ புத்தகம் வெளியானவுடன் பிரிட்டன் முழுக்க பெரிய சர்ச்சை கிளம்பியது. இதன் நம்பகத்தன்மையை பல விஞ்ஞானிகள் சந்தேகித்தனர். பெரும்பாலான கிறிஸ்துவர்கள் இதில் வரும் கிறிஸ்டோவை இரண்டாம் இயேசுவாக ஏற்க மறுத்தனர். இந்த புத்தகம் அமெரிக்காவிலும் வெளியாகி அங்கும் ஒரு சர்ச்சை கிளப்பியது. இங்கிலாந்தில் ஆன்மீகவாதிகளுக்கும் நாத்திகர்களுக்கும் இடையில் பெரிய சண்டை வந்தது. ஆன்மீகவாதிகள் இந்தப் புத்தகத்தை தடை செய்யவேண்டும் என்றும், நாத்திகர்கள் தடைக்கு எதிராகவும் போராடினர். இந்தச் சண்டை பல சமயங்களில் கைகலப்பில் முடிந்தது. தெருக்களில் இறங்கி இரண்டு கூட்டங்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. என்ன செய்வது என்று தெரியாத அரசு, புத்தகத்தைத் தடை செய்தது. அதை எதிர்த்து நாத்திகர்களின் போராட்டம் சூடு பிடித்தது. இவ்வளவு எதிர்ப்பை எதிர்பார்க்காத அரசு தடையை நீக்கியது.
பிரான்சிஸ் என்ற பாதிரி தன்னுடைய சர்ச் கூட்டம் ஒன்றில் ஆவேசமாகப் பேசினார். “இரண்டாம் இயேசு என்பதெல்லாம் பொய். நம்மை ஏமாற்ற நம் எதிரிகள் செய்யும் சதி இது,” என்று முழங்கினார். “நாம் நம் மதத்தையும் இயேசுவின் நாமத்தையும் காக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். நாம் எல்லோரும் வரும் ஞாயிறன்று ஜார்ஜ் ட்ருக்கர் வீட்டின்முன் ஒரு போராட்டம் நடத்த வேண்டும்,” என்று அறைகூவல் விடுத்தார். கூடியிருந்த கூட்டம் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தியது. (more…)
