எழுத்து

அமேஸான் காடுகளிலிருந்து- 7: கள்ளமில்லா மனது

மித்யா 

“அறை முழுவதும் மெல்லிய பச்சை ஒளி பரவியது. நான் கண்ணை மூடிக்கொண்டு பத்மாசனத்தில் உட்கார்ந்திருந்தேன். பச்சை ஒளி பரவியவுடன் அங்கு நிசப்தம் நிலவியது. ஓயாமல் அழுது கொண்டிருந்த ராணியின் குரல் சட்டென்று யாரோ குரல்வளையை நெருக்கியது போல் நின்றது. கதறிக் கொண்டிருந்த இளவரசியின் குரலும் அடங்கியது. எல்லோரும் திகைத்து நின்றிருப்பதை உணர்ந்தேன். வெளியில் இலைகளின் சலசலப்பும் பறவைகளின் ஓசையும் தவிர வேறேதும் இல்லை. என்ன நடக்கப் போகிறது என்று எல்லோரும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

“நீ யார்?” என்ற கேள்வி என்னை வந்து தாக்கியது. இது காதில் கேட்கக்கூடிய சப்தம் இல்லை. அது மொழியும் அல்ல. என் உள்ளுணர்வுடன் வேறொரு ஆத்மா உரையாடிக் கொண்டிருந்தது. இது என்னை தவிர வேறு யாருக்கும் கேட்கவில்லை, ஆனால் இந்த ஆத்மா பேசும்போது பச்சை ஒளி மங்கியும் பிறகு அதிகமாக மிளிர்வதாகவும் இருந்தது.

“நான் யார் என்பது இங்கு முக்கியமில்லை. நீ யார்? எதற்காக இங்கே வந்தாய்? எங்கிருந்து வந்தாய்?” (more…)

தத்துவ விசாரணை

எஸ்.சுரேஷ்

 

“ஆரம்பிக்கலாமா?
“பொறு பெரியவர் வரட்டும்” என்றது அந்த ஓநாய்.
மெதுவாகக் குன்றின் மேல் ஏறி வந்தது,
தளர்நடையுடன் ஒரு கிழ ஓநாய்.
“ஆரம்பிப்போம்” என்று சொல்லிவிட்டு,
நிலவைப் பார்த்து, “ஊஊஊஊஊஊஊ,” என்று ஊளையிட்டது.
மற்ற ஓநாய்களும் கூடச்சேர, காடு முழுவதும் ஊளை.
“போதும்யா, எவ்வளவு நேரம் கத்தறது?” என்று கிழ ஓநாய் சொன்னவுடன்
ஊளை நின்றது
குன்றை விட்டு ஓநாய்கள் இறங்கிக் கொண்டிருக்க
குட்டி ஓநாய் ஒன்று மேலே ஓடிவந்தது.
“முடிஞ்சுதா?”
“ஜோலி முடிஞ்சு. வேட்டையாடப் போறோம்,” என்று சொல்லிவிட்டு
எல்லா ஓநாய்களும் சென்றுவிட்டன
தனியாக விடப்பட்ட குட்டி ஓநாய் துக்கம் தொண்டையடைக்க,
நிலவைப் பார்த்து “ஊஊஊஊஊஊஊ” என்று ஊளையிட்டது.
ஆனால், அதன் துக்கம் யார் காதிலும் விழவில்லை.

00

ஒளிப்பட உதவி – dogzer

மகரந்த்

  காஸ்மிக் தூசி


என்னது?
சட்டையை
கழற்றிவிட்டு
பூஜை செய்ய
போகவா?
நன்றி வேண்டாம்.

என்னால் ஆகாது
நீங்கள் விரும்பினால்
தாராளமாக போகலாம்.

போகும் முன்
தீப்பெட்டியை தருகிறீரா?

புகைத்தால்
யாரும்
பொருட்படுத்தாத
முற்றத்தில்
வெளியே
இருக்கிறேன் நான்.

000

அருண் கொலாட்கரின் Makarand என்ற கவிதை மொழிபெயர்ப்பு

நட்சத்திரங்களின் அற்புதம் உனக்கும் இவ்வுலகில் கிடைக்கட்டும்

சீன கவிஞர் யீ லூ (தமிழாக்கம்-  பாஸ்டன் பாலா)
கைபேசியில் இருக்கும் அவனின்
கண்களில் களிப்பு 
கீழே பாயும் பெரும்பறவையின்
கொம்மையில் களிப்பு 
பூந்தொட்டியில் மலர்ந்திருக்கும் சூரியகாந்தியின்
ஒவ்வொரு இதழின் இருதயத்திலும் களிப்பு 
 
தன் பிஞ்சு இலைகளை மனோரஞ்சித மரம் உதற
அதிலும் ஆணிவேரில் இருந்து சுரக்கும் ஒரு களிப்பு இருக்கும்       
 
தன் பிஞ்சு இலைகளாடும் மனோரஞ்சிதத்தின்
ஆணிவேரில் களிப்பு சுரந்தவாறிருக்க வேண்டும்     
தலை புதைத்துத் தன் பாதையில் விரையும் லாரி
களிப்பை அடக்கிக் கொள்ளும்
தன் இலக்கைச் சேர்ந்தபின் விடுவிக்கக் காத்திருக்கும்
ஏற்புக் கடிதம் பெற்ற பெண்
களிப்பை இறுக்கி அணைத்துக் கொள்கிறாள்
தழுவலில் அது வெடித்துச் சிதறலாம்
 
ஒவ்வொன்றாகப் பதிவு செய்கிறேன்
யாருக்குத் தெரியும்  எனக்குரியது என்று
பிறவற்றுக்கு இணையாய் கிடைக்குமென்று
 
இன்னும் பதிவேன், இன்னும்
நட்சத்திரங்களின் அற்புதம் உனக்கும் இவ்வுலகில் கிடைக்கட்டும்
உனக்கும் களிப்பு கிட்டட்டும்
000
(சீன கவிஞர் யீ லூ (Yi Lu – 伊路 ) 1956ல் பிறந்தவர். நாடகத்திற்கும் திரைப்படத்திற்கும் அரங்க வடிவமைப்பாளராகவும் இயங்குகிறார். நான்கு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டு இருக்கிறார். அவற்றில் பார் (See – 《看见》 – 2004) மற்றும் இரு கடல்களை உபயோகித்து (Using Two Seas – 2009) ஆகியவை விருதுகள் பெற்றிருக்கின்றன. நூறு மலர்கள் விருது, ஃபூஜியான் மாநிலத்தின் இலக்கிய பரிசு ஆகியவையும் வென்றிருக்கிறார்.)
ஒளிப்பட உதவி – Starts with a Bang

அமேஸான் காடுகளிலிருந்து- 6: ஆவி சூழ் உலகம்

மித்யா 

அத்தியாயம் 6 – ஆவி சூழ் உலகு

“உங்களுக்கு நான் ஒரு கதை சொல்லப்போகிறேன்” என்று ஆரம்பித்தான் அந்த இந்தியன். நடுநிசி நேரம். வானத்தில் பல ஆயிரம் நட்சத்திரங்கள். மெல்லிய காற்று வீசிக்கொண்டிருந்தது. பூச்சிகளின் இடைவிடாத ஒலி. காட்டுக்குள்ளிருந்து மிருகங்களின் ஊளை. மேலே எழும்பும் அக்னி ஜ்வாலைகள் இருட்டுடன் போராடிக் கொண்டிருந்தன.

அந்த இந்தியன் நெருப்பின் முன் உட்கார்ந்து தீப்பிழம்பின் ஒளியில் மிளிரும் கிறிஸ்டோவையும் ஆலிஸ்சையும் பார்த்தான். அவர்கள் இன்னும் சிவப்பாக தெரிந்தனர். அவன் கதை சொல்ல ஆரம்பித்தான்.

“ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். இல்லை இல்லை. இன்னும் இருக்கிறார். அவனுக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு மகள் பிறந்தாள். குழந்தையே இல்லாத ராஜா ராணிக்கு மகள் பிறந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. அவர்கள் இந்த வரவை எப்படி கொண்டாடியிருப்பார்கள் என்பதை நீங்கள் ஊகித்துக்கொள்ளலாம்.

அந்த மகள் ஒரு அழகான ராஜகுமாரியாக மாறினாள். புற அழகு மட்டுமல்ல. அவள் அகமும் அழகாக இருந்தது. யாருக்கும் தீங்கு நினைக்காத ஓர் இளவரசியாக அவள் இருந்தாள். எல்லோருடனும் ஒரு சாதாரண பிரஜை போல் பழகினாள். முதலில் ராஜாவிற்கும் ராணிக்கும் இது பிடிக்கவில்லை. “என்ன இது. இளவரசி என்றால் சும்மாவா? கை அசைத்தால் ஆட்கள் ஓடி வரவேண்டும். கண் சைகையில் எல்லா வேலையும் முடிய வேண்டும். இவளோ இப்படி எல்லோருடனும் சரிக்கு சமமாக பழகுகிறாளே?” என்று ராணி ராஜாவிடம் வருத்தப்பட்டுக்கொண்டாள். ராஜாவும் இளவரசியின் பழக்க வழக்கங்களை மாற்ற பல ஆசிரியர்களை நியமித்தார். ஆனால் இளவரசியோ ஆசிரியர்களுக்கு தக்க மரியாதை செய்தாலும் அவர்கள் சொல்லிக் கொடுத்த எதையும் கடைபிடிக்கவில்லை. எப்பொழுதும் போல் எல்லோருடனும் ஆடிக் கொண்டிருந்தாள். (more…)