சிறுகதை

சக மனிதன்

உஷாதீபன் 

டது தோளை அவர் அசைக்கவேயில்லை. இருக்கையின் பிடியில் இடது கையைப் பதித்திருந்தார். அத்தனை ஆசுவாசமாகவும், அழுத்தமாகவும் தலை சாய்ந்திருந்தான் அந்த ஆள். மெலிந்த சரீரம். அவனது மொத்த எடையையும் அவரே தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பதுபோல் உணர்ந்தார். சட்டை பட்டன்கள் அவிழ்ந்து அந்த மங்கிய இருட்டிலும் வியர்வை சொரிவது தெரிந்தது. இடது தோளிலிருந்து முழங்கை வரை சற்று மரத்துப் போனது போல்தான் இருந்தது. மணிக்கட்டோடு கையை மட்டும் அசைக்க முடிந்தது. அவன் லேசாக எழும்பினால் இடது சுவர்ப்பக்கமா சாய்ஞ்சுக்குங்க என்று சொல்லலாம் என எண்ணினார். அதற்காக விரல்களைத் தாளம் போடுவது போல் கைப்பிடியில் மெல்ல சத்தமெழுப்பினார். எந்தச் சலனமுமில்லை.

படம் ஓடும் சப்தத்தில் இது எங்கே காதில் விழப் போகிறது அவனுக்கு. வந்தது முதலே தூங்க ஆரம்பித்துவிட்டான். தூங்கிக் கொண்டேதான் வந்தான் என்றும் சொல்லலாம். நியூஸ் ரீலுக்கு முன்பு போட்ட விளம்பரம் கூட அவன் பார்க்கவில்லை. தூங்குவதற்காகவே தியேட்டருக்கு வந்திருப்பானோ என்று தோன்றியது. காசு கொடுத்துத் தூங்குகிறான்.  வரிசைக் கடைசி, சுவர் ஓர இருக்கையில் அமர்ந்தால் ஏ.சி. சரியாக வராதோ என்ற சந்தேகத்தில் அதற்கு அடுத்த இருக்கையில் அமர்ந்தார் பூவராகன். ஏ.சி. ஓடுகிறதா என்று சந்தேகமாய் இருந்தது. குளிர்ச்சியே இல்லை. ஒருவேளை கொஞ்ச நேரம் கழித்துத் தெரியலாம். தோளை லேசாகக் குலுக்கினார். அவன் உறக்கம் கலைந்து அதற்கு வேறு சண்டைக்கு வந்தால்? என்று தோன்றியது. இன்னொரு முறை குலுக்கிப் பார்த்தார். பலனில்லை. இருக்கும் இருப்பைப் பார்த்தால் படம் முடியும் வரை அவன் விழிக்க வாய்ப்பே இல்லை என்றுதான் தோன்றியது.

தேடி வந்ததுபோல், அல்லது குறி வைத்து நுழைந்ததுபோல், அவனுக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கை என்பதாய் எண்ணி வருவதுபோல் அவன் அந்த வரிசையில் நுழைந்தான். பத்துப் பேரைக் கடந்து வந்து அமர வேண்டும். தனி ஆட்களாகவும், மனைவி மக்களோடும் அமர்ந்திருந்தார்கள். அத்தனை இருக்கைகளிலும் ஆட்கள் இருக்க, இடித்தும், பிடித்தும், தடுமாறியும் ஏதோவோர் வேகத்தை உணர்ந்தவனாய்   நுழைந்தான் அவன். யார் காலையோ மிதித்து விட்டான் போல அவன் கடந்ததும், அவர் அவனை நோக்கி கையை நீட்டியும் நீட்டாமலும்  என்னவோ சொல்லித் திட்டினார். தடுமாறி ஒருவர் தொடையில் கையை வைத்துத் தாங்கிக் கொண்டான்.  காதில் விழக் கூடாது, சண்டை வேண்டாம் என்பது போல் திட்டியவர்,  முனகினார் என்றுதான் சொல்ல வேண்டும். அவன் எதையும் பொருட்படுத்தியவனாய் இல்லை. வந்து சேர்ந்த விதமும், பொத்தென்று இருக்கையில் விழுந்த விதமும் ஒரே இணைப்பாக இருந்த அந்த மொத்த வரிசையையும் ஒரு குலுக்குக் குலுக்கிற்று. பலரது தலையும் முன்னெழும்பி அவனை அந்த அரையிருட்டில் பார்த்தது. சுத்தக் காட்டானா இருப்பான் போல்ருக்கு!- ஒருவர் சத்தமாகவே சொன்னார். அதுவும் அவன் காதில் விழவில்லை. முழு நினைவில் இருந்தால்தானே! இப்போது அவன் உலகம் வேறு!

லேசாக சுவற்றைப் பார்த்து எச்சில் உமிழ்ந்து கொண்டதுபோல் இருந்தது. மூக்கைப் பிடித்துக் கொண்டார் இவர். முட்டக் குடித்திருக்கிறான் என்று தெரிந்தது.. புளிச்ச வாடை அவனிடமிருந்து வீசியது. படம் முடிந்து போகும் வரை இந்த அவஸ்தை உண்டு என்று அந்தக் கணமே தோன்றியது இவருக்கு. கர்சீப்பை எடுத்து வாயையும் மூக்கையும் அழுந்தப் பொத்திக் கொண்டார். இன்னிக்குக் கிளம்பின நேரம் சரியில்ல!-நினைத்துக் கொண்டார். கண்கள் சொக்கிக் கிறங்கியது அவனுக்கு. விளம்பரம் முடிந்து நியூஸ் ரீல் ஓட ஆரம்பித்திருந்தது. எதுவும் பார்க்கவில்லை அவன். நமக்குன்னு இடம் அமையுதே என்று நினைத்துக் கொண்டார். வேறு எங்கும் இடம் இல்லாதது கண்டே அந்த இடத்தைப் பிடித்தார். எண்ணிட்ட இருக்கைகள் இல்லை. இஷ்டம்போல் அமர்ந்து கொள்வதுதான். முதலில் வருபவர்கள் முன்னுரிமை பெற்றவர்கள் ஆகிறார்கள். தாமதமாய் வந்தால் அப்படித்தான்! அதுக்காக இப்படியா அமையணும்? காசு கொடுத்து சங்கடத்தை விலைக்கு வாங்குவது இதுதான்!

எப்போதுமே வரிசை நுனியில்தான் அமர்வார். அப்போதுதான் சட்டென்று எழுந்து விருட்டென்று எல்லோருக்கும் முன்பு வெளியேற முடியும். அவரது தேர்வு வரிசை நுனி இருக்கைகள்தான். பாத்ரூம் போய் வருவதற்கும் அதுதான் வசதி அவரைப் பொறுத்தவரை. இன்று அப்படி அமையவில்லை. அத்தோடு கிளம்பும்போதே மிகவும் தாமதமாகி விட்டது. போவமா இருந்திருவமா என்று நினைத்துக் கொண்டே வந்து சேர்ந்து விட்டார். டூ வீலரில் வருகையிலேயே மனதுக்குள் ஏகத் தடுமாற்றம். பாதியில் வண்டியை வளைத்து வீடு திரும்பி, மீண்டும் தியேட்டருக்கு விட்டு ஏகக் குழப்பம்.

இத்தனைக்கும் மிருணாளினியிடம் சொல்லவில்லை. வெளில போய்ட்டு வர்றேன் என்றுதான் கிளம்பினார். அவளும் அதற்குமேல் ஒன்றும் கேட்கவில்லை. எப்பொழுதுமே கேட்கமாட்டாள். மிஞ்சி மிஞ்சிப் போனால் அருகே சம்மந்தபுரம் பார்க்குக்குப் போகப்போகிறார். போய் நண்பர்களிடம் அளவளாவிவிட்டு வருவார். வெளியே வரும்போது வழக்கம்போல்  ஒரு தேங்காய் போளி, ஒரு பருப்பு போளி சாப்பிடுவார். அத்தனை நேரம் வயதொத்த நண்பர்களுடன் உட்கார்ந்து பேசிவிட்டு, பிறகு தான் மட்டும் வந்து அந்த போளியைப் பதம் பார்ப்பது என்பதில் அவருக்கு ஒன்றும் சங்கடம் இருந்ததில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு ருசியில் இருந்தார்கள். சிலர் சுண்டல் வாங்கி உண்டார்கள். இன்னும் சிலர் சூடாக வேப்பெண்ணெய் மணக்க வறுத்த  கடலைப் பருப்பை  வாங்கிக் கொரித்தார்கள். அவரவர் டேஸ்ட் அவரவருக்கு. கூடி உட்கார்ந்து மணிக்கணக்காய்ப் பேசுபவர்கள், தின்பதில் பிரிந்து போவார்கள். இவருக்கு சின்ன வயது முதலே போளி என்றால் பிரியம். அம்மா கையால் செய்த போளியின் ருசி மறக்காது இன்னும் அவர் நாக்கில் தவழ்கிறது. ஏங்கித் திரிந்த காலம். அது பணக்காரர்கள் பண்டம் என்ற நினைப்பிருந்தது மனதில்

அவர்களுக்காக அவள் செய்ததில்லை. அதற்கான வசதியும் இருந்ததில்லை. ஏதாவது விசேடம் நடக்கும் வீட்டில் அழைத்திருப்பார்கள். முறுக்கு சுற்ற, பலகாரம் செய்ய என்று. அம்மா போய் வரும்போது நாலு கட்டித் தருவார்கள். மூன்று  சகோதரர்கள், சகோதரிகள் மத்தியில் அதற்கு அடிபிடி. ஆளுக்கொன்றாவது வேண்டாமா, இன்னும் ரெண்டு சேர்த்துத் தாருங்கள் என்று அம்மா கேட்க மாட்டாள். கொடுத்ததை வாங்கி வருவாள். கொடுக்காவிட்டாலும் வந்து விடுவாள். கேட்கமாட்டாள். முறுக்கு சுத்தப் போனியேம்மா ஒண்ணும் கொண்டு வரல்லியா? என்று கேட்டு அழுதால், அடிதான் விழும். அவா கொடுத்தாத்தான் இல்லன்னா இல்ல. புரியுதா? அப்டியெல்லாம் எதிர்பார்த்து நாக்கைத் தீட்டிண்டு இருக்கக் கூடாது புரிஞ்சிதா? இது அம்மாவின் கண்டிப்பு.

திட்டமாய் வளர்ந்தவர் அவர். எந்த செயலுக்கும் சில முன் தீர்மானங்கள், முடிவுகள் என்பது உண்டு. ஒரு சினிமா போவதென்றால் கூட இந்த நேரத்திற்குள் கிளம்ப வேண்டும், இந்த நேரத்திற்குள் வீடு திரும்பி விட வேண்டும் என்று வரித்துக் கொள்வார். இஷ்டம்போல் கிளம்பி, இஷ்டம்போல் வந்து சேருவது என்பதெல்லாம் அவரைப் பொறுத்தவரை பொறுப்பற்ற செயல். ஆனால் இன்று உண்மையிலேயே கொஞ்சம் லேட் ஆகிவிட்டதுதான். தடுமாற்றம்தான் காரணம். புறப்படுகையில் வயிற்றைக் கலக்குவது போலிருந்தது. பாத்ரூம் போய்விட்டுக் கிளம்பினார். முதல் தடங்கல். போவோமா அல்லது அப்படியே இருந்து விடுவோமா என்றும் தோன்றியது. கொஞ்சம் தண்ணி கொண்டா என்றார் மனைவியிடம். பெரிய டம்ளர் நிரம்பக் கொண்டு வந்தாள் அவள். நல்லவேளை சொம்புல எடுத்திட்டு வரல என்றார். ஒரு வாய் தொண்டைய நனைக்கன்னு கேட்டா இவ்வளவா? என்று விட்டு எழுந்து நடந்து விட்டார். அவர் கண் முன்னால் அந்த மீதித் தண்ணீரை வாசல் செடிக்கு அவள் வீசியது அவளது கோபத்தைக் காட்டியது. தூக்கித்தானே குடிச்சேன் எச்சிலா பண்ணினேன் தூரக் கொட்டுற? என்றவாறே கிளம்பி விட்டார்.

அன்று மிருணாளினியிடம் சிறு மனத்தாங்கல். அதை வெளிப்படையாய் அவளிடம் கேட்கவில்லை. அவளாகச் சொல்வாள் என்று எதிர்பார்த்திருந்தார். செய்து முடித்துவிட்டுச் சொன்னாள் அவள். முன்பே சொன்னால், தான் என்ன வேண்டாம் என்றா சொல்லப் போகிறோம் என்கிற நம்பிக்கை அவளுக்கு ஏன் இந்த வயதிலும் வரவில்லை என்பதை நினைத்தார். பெண்கள் சம்பாதிக்கிறார்கள் என்றாலே அவர்களுக்கு ஒரு சுதந்திரம் தானாகவே வந்து விடுகிறது. Financial freedom. அது தன்னெழுச்சியானது. மற்றவரை லட்சியம் செய்யாதது. அலுவலகத் தோழிகளோடு எதிர் வங்கிக்குப் போய் அவள் அக்காவிற்குப் பணம் அனுப்பியிருக்கிறாள். இதற்கு முன்பு ஒரு தரம் அப்படிச் செய்தபோது இவனிடம் சொல்லி வங்கிக்குக் கூட்டிப் போனாள். RTGSல் பணம் எப்படி அனுப்புவது என்பதை அன்று தெரிந்து கொண்டாள். இந்த முறை அவளாகவே செய்திருக்கிறாள். முன்னதாகவே சொல்வதானாலும் “எங்க அக்காவுக்குப் பணம் அனுப்பப் போறேன்..“ என்றுதான் சொல்வாள் முடிவு பண்ணிவிட்டதைத் தெரிவிப்பதுபோல் தகவல் வரும். அனுப்பட்டுமா? என்ற முறைக் கேள்வியெல்லாம் இல்லை. தடுப்பேன் என்று அவளாகவே நினைத்துக் கொள்வாளோ என்னவோ? அல்லது அப்படிச் செய்வதில் அவளுக்கே ஒரு உறுத்தல் அல்லது தயக்கம் இருந்ததோ என்னவோ? அவள் என்ன வாங்குகிறாள் என்று கூட இன்றுவரை இவர் கேட்டதில்லை. பணம் என்பது ஒரு காரணி. அதுவே வாழ்க்கையில்லை.

இப்போது அவன் மிக நன்றாய்ச் சாய்ந்திருந்தான் இவர் தோளில். அவனை எழுப்ப ஏனோ இவருக்கு மனசாகவில்லை. தோள் கண்டேன் தோளே கண்டேன் என்று அவன் அயர்ந்திருந்தான்.  இப்படி ஒருவன் தூங்கக் கொடுத்து வைக்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டார். அவன் முகம் வற்றியிருந்தது. பாவமாய்த்தான் தெரிந்தது. ஒரு வேளை தன்னைப்போலவே பெண்டாட்டியிடம் சண்டை போட்டு விட்டு, ஏற்றிக் கொண்டு வந்திருப்பானோ? நல்ல உறக்கம் என்பது ஒருவனுக்குக் கிடைக்கும் கிஃப்ட். ஓய்வு பெற்ற பிறகு சமீபத்தில்தான் இந்த உறக்கம் அவரிடம் குறைந்திருக்கிறது. இரவு பத்து மணிக்குக் கண்ணசந்தார் என்றால் படக்கென்று தூங்கி விடுகிறார்தான். அடுத்தாற்போல் ரெண்டு மணிக்கு மேல் விழிப்பு வந்து விடுகிறது அவருக்கு. சிறுநீர் கட்டி நிற்கிறது. அது எழுப்பி விடுகிறது. மீண்டும் வந்து படுக்கையில் தூக்கம் பிடிக்கத் தாமதமாகி விடுகிறது. ஆக நாலு மணி நேர உறக்கம் என்பதுதான் உத்தரவாதம்.

பிறகு படுத்துப் புரண்டால், என்னென்னவோ நினைப்புகள் வந்து விடுகின்றன. குடும்பத்தில் சகோதரர்களிடம் ஏற்பட்ட சண்டை, திருமணம் செய்வதற்கு முன் தங்கைமார்கள் படுத்திய பாடு, அலுவலகத்தில் திடீர் திடீர் என்று அவருக்குக் கிடைத்த மாறுதல்கள், தர்மபுரி, பாலக்கோடு,  கிருஷ்ணகிரி என்று தூக்கியடித்தது.. உள்ளூர் வரப் படாத பாடு பட்டது. தன் விண்ணப்பம் சீனியாரிட்டியில் வைக்கப்படாமல், அதற்குரிய பதிவேட்டில் பதியப்படாமல், வேண்டுமென்றே காணாமற் போக்கியது, கடைசியில் சி.எம். செல்லுக்கு மனுப்போட்டு நியாயம் கிடைத்தது அடேயப்பா எத்தனை துன்பங்கள், அலைக்கழிப்புகள்?.

எல்லாக் காலத்திலும் மிருணாளினி தனியாய்த்தான் இருந்து கழித்திருக்கிறாள். ராத்திரிதான் பயமாயிருக்கும் மத்தப்படி ஒண்ணுமில்ல என்பாள் சாதாரணமாய். ஒருவேளை தான் இல்லாமல் இருந்ததே அவளுக்குப் பெருத்த நிம்மதியாய் இருந்துவிட்டது போலும்! என்று நினைத்துக் கொள்வார். டிபார்ட்மென்ட் சர்வீஸில் அவர் பட்ட கஷ்டங்கள் யாருமே பட்டிருக்க மாட்டார்கள். எந்த மாறுதலுக்கும் சிபாரிசு என்று போனதில்லை. பைசா செலவழித்து வாங்கியதில்லை. அப்படி அவசியமில்லை என்று விடுவார். ஒரு வேளை ஒரு குழந்தை பிறந்திருந்தால் எண்ணங்கள் மாறியிருக்குமோ என்னவோ? அந்த பாக்கியம் இல்லை.  அப்பாவிகள் இந்த உலகத்தின் எல்லா இடங்களிலும் துன்பத்திற்குள்ளாகிறார்கள். அதுதான் யதார்த்தம். கஜகர்ண வித்தை தெரிந்தவன்தான் இங்கு பிழைக்க முடியும்.

. படம் ஓடிக் கொண்டிருந்தது. அவனைக்  கை தொட்டு அசைத்தால் மேற்கொண்டு ஏதேனும் விபரீதம் ஆகி விடலாம். அப்படியே மெதுவாய்த் தள்ளி சுவற்றுப் பக்கம் சாய்த்து விடலாம் என்றாலோ அது பெரும் பிரயத்தனம். முழு போதையானாலும், நிச்சயம் எழுந்து விடுவான். அப்படியே தலை கவிழ்ந்து கீழே சாய்ந்து விட்டால்? பிறகு எவன் இடுக்கில் தூக்குவது? ஆகவே எதுவும் சாத்தியமில்லை என்று தோன்றியது. ஆனால் அவன் உறக்கத்தைக் கலைக்க மனமில்லை. தான் பிரயத்தனப்பட்டாலும் கலையாது. மீறிக் கலைந்தால் பிரச்னைதான்.

கவனம் அவன் மீதுதான் இருந்ததே தவிர படத்தின் மீது சுத்தமாய் இல்லை. வில்லனின் கார் பின்னால் சர்ரு சர்ரு. என்று பத்திருபது கார்கள் புயலாய்ப்  பின் தொடர. வயலில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் விவசாயிகள் என்னவோ ஏதோவென்று புரியாமல் பார்க்கிறார்கள். ஒரு கணம் தோன்றி மறையும் இந்தக் காட்சியில் எழும் சப்தம் தியேட்டரையே அதிர வைத்தது. இதெல்லாம் எனக்கு ச்ச்சும்மா.! என்பதுபோல் அவன் இவர் தோளில் கிடந்தான். அவன் வீட்டில் கூட இத்தனை சுகமாய்த் தூங்கியிருக்க மாட்டான். நிச்சயம்.  அவனை ஒதுக்குவதற்கு ஒருவரும் முன் வரவில்லை. இவர் வரிசை ஆட்களே உதவியில்லை.  இது அவர் தலைவிதி என்று விட்டு விட்டார்கள் போலிருக்கிறது. திரும்பித் திரும்பிப் பார்க்க மட்டும் செய்தார்கள். பிறகு படத்தில் லயித்து விட்டார்கள். அவனுக்கும் சேர்த்து படம் பார்த்துக் கொண்டிருந்தார் இவர். எழுந்து கதை கேட்டால்? என்று தோன்ற சிரிப்புதான் வந்தது.

மிருணாளினியைக் கூட்டி வந்திருந்தால் இந்தத் தொந்தரவு வந்திருக்குமா?- திடீரென்று இப்படித் தோன்றியது இவருக்கு. ஆபத்துக் காலங்களில் என்றும் அவள் இவர் கூட இருந்ததேயில்லை.. இதுதான் நிதர்சனம். அவளுக்கு சினிமா பிடிக்காது. கோயில் குளம் என்றால் கிளம்பி விடுவாள். அவளுக்கும் ஒரு ரிலாக்சேஷன் வேண்டுமே என்று கூட்டிப் போவார்.. சாமி தரிசனம் செய்ய பத்து ரூபாய் க்யூ நீண்டு நிற்கும். ஆனால் ஐம்பது ரூபாய்க் க்யூவில் போக வேண்டுமென்பாள். அதுதான் எனக்குப் பிடிக்காது. ரெண்டு வரிசையும் சந்நிதிக்குள்ள நுழையும்போது ஒண்ணாயிடப் போகுது இதுக்கு எதுக்கு அம்பது வெட்டிச் செலவு? அவ்வளவு பெரிய கூட்டமில்லையே?  அந்தக் காசை அர்ச்சகர் தட்டுல போடு அவருக்காச்சும் உதவும். குறைஞ்ச சம்பளம் உள்ளவங்க அவங்கதான் என்பார் இவர். அதுவும் போடறேன் இல்லேங்கல. ஆனா இதுல போனா சீக்கிரம் முடிஞ்சிடுமே.? என்று சொல்லி இவரின் பதிலை எதிர்பாராமல் போய் நின்று விடுவாள்.

இவரோ வெளியே துவஜஸ்தம்பத்திற்கு அடுத்தாற்போல் நின்று நேரே சந்நிதியைப் பார்த்து ஒரு பெரிய கும்பிடாகப் போட்டு விட்டு வந்து அமர்ந்து விடுவார். ஸ்டாலில் அன்று என்ன புதிய நைவேத்யம் என்று பார்ப்பார். புளியோதரை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். ரெண்டு பொட்டணம் வாங்கி வந்து ஒன்றைப் பிரித்து, சுவைத்து உண்ண ஆரம்பிப்பார். விழுந்து விழுந்து கும்பிடுபவர்களையும், சுற்றிச் சுற்றி வருபவர்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அவருக்குப் பிடிக்கும். இப்படி எத்தனாயிரம் பேரின் வேண்டுதல்களை எப்பொழுது இந்தச் சாமி விடுபடல் இல்லாமல் நிறைவேற்றி வைப்பார்? என்று தோன்றும். மிருணாளினி எனக்கு வாங்கலையா? என்று கேட்டுக் கொண்டேதான் வருவாள். அகத்திக் கீரை வாங்கி மாட்டுக்குக் கொடுத்தேண்ணா. எவ்வளவு அழகா வாங்கிக்கிறது தெரியுமா? அது திங்கிற அழகே தனி ஒரு இலை விடாம ஒரு முடி முழுக்கத் தின்னுடுத்து. இன்னொண்ணு வாங்கப் போனேன். காப்பாளன் போதும் மாமின்னுட்டான். பிடிச்சிக்கோன்னு அவன்ட்டச் சொல்லி, முன் பக்கமும், பின் பக்கமும் நன்னாத் தொட்டுக் கண்ணுல ஒத்திண்டு வந்தேன்.. கோயிலுக்குன்னு நிக்கிற பசு மாடுகளுக்கே தனி அழகு..! கண்ணுக்குள்ளயே நிக்கறது.!

இன்று அவள் இவருடன் வந்திருந்தால் இந்தக் கடைசி இரண்டு இருக்கைகள்தான் நிச்சயம் கிடைத்திருக்கும். ஏனென்றால் தான் வந்த பிறகு சற்று நேரம் கழித்துத்தானே இந்தாள் வந்தான். ஆனால் அவளுக்கு இதுபோல் சண்டைப் படங்களெல்லாம் பிடிக்காது. ஏதாவது சாமி படம் என்றால் ஒருவேளை வரலாம். அல்லது சரித்திரப் படம். அவள் கடைசியாக மனதோடு தியேட்டர்  வந்து  பார்த்தது பாகுபலி. ரெண்டாம் பாகம் எப்ப வருதாம் என்று உற்சாகமாய்க் கேட்டாள். பிறகு அது வந்தபோதும் கூட்டிப் போனார் இவர். பிரம்மாண்டமா இங்கிலீஷ் படம் போல எடுத்திருக்கான் என்றாள். அந்தக் காலத்துல பென்ஹர்னு ஒரு படம் வந்தது. நான் சின்ன வயசுல பார்த்திருக்கேன். அதுக்கப்புறம் இதைத்தான் பார்க்கிறேன் இத்தனை பிரம்மாண்டமாய் என்று வியந்தாள்.

அப்போது இவர் லீவில் இருந்தார். தனது சி.எம். செல் மனு நடவடிக்கையில் இருந்த நேரம் அது. உடனடியாக இவருக்கு உள்ளூர் மாறுதல் வழங்கவும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அடுத்தாப்ல டிரான்ஸ்பர் ஆர்டரோடதான் இந்த ஆபீஸ்ல காலடி வைப்பேன் என்று சொல்லிவிட்டுத்தான் வந்திருந்தார். அதுபோலவே போய் நின்றார். அந்த நிகழ்வுக்குப் பின்தான் அவர் மீது கை வைப்பதை விட்டது  உள்ளூர் நிர்வாகம். கடைசி ஒரு வருடம் இருக்கும்போது திரும்பவும் களேபரம்  ஆரம்பமானது. பணி ஓய்வு பெற ஓராண்டிருக்கையில் யாரையும் சொந்த ஊரிலிருந்து மாற்றக் கூடாது என்ற உத்தரவினைக் காட்டி அங்கேயே ஓய்வு பெற்று கம்பீரமாய் வீடு வந்து சேர்ந்தார். அது அவரின் வாழ்நாள் சாதனையானது.

படம் முடிந்திருந்தது. என்ன பார்த்தோம் என்றே நினைவில்லை. அவன் பாரமே பெரிய மனபாரமாய்ப் போனது. அதுபோக ஏதேதோ நினைவுகள்.  இனி வேறு வழியில்லை என்று எழ முயன்றார் பூவராகன். தள்ளிவிட்டிட்டு நீங்க பாட்டுக்கு எந்திரிங்க சார் கிடக்கான் அந்த ஆளு நமக்கென்ன? என்றனர் சிலர். படம் ஓடுகையில் இது நேரம் வரை வாயைத் திறக்காதிருந்தவர்கள் அவர்கள். வெளியேறும் நேரம் வீரமாய் வந்தது வார்த்தைகள். கீழ தடுமாறி அடி கிடி பட்டுச்சின்னா? என்று நினைத்தார். ஆனது ஆச்சு அவன்பாட்டுக்குத் தூங்கத்தானே செய்றான் போகட்டும் பாவம்! என்ன வேதனைல இங்க தஞ்சம் புகுந்தானோ? அவர் மனசு இரக்கப்பட்டது.

தன்னுடன் வைத்திருந்த ஜோல்னாப் பையை எடுத்து வலது தோளில் மாட்டிக் கொண்டு மெல்ல அவனைத் தம் பிடித்துத் தூக்கி  தடுமாறாமல் எழுந்தார் பூவராகன். இருக்கையின் பின்னால் அவனை மெல்லச்  சாய்த்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வெளியேறினார். முதலிலேயே செய்திருக்கலாமோ என்று தோன்றியது. இப்போது எப்படி சாத்தியமானது என்றும் வியப்பாயிருந்தது. ஒரு வேளை அவனாகவே அட்ஜஸ்ட் ஆகி சாய்ந்து கொண்டானோ? அவன் தலை தொங்கித்தான் கிடந்தது.  தியேட்டர் ஏறக்குறையக் காலி. திரைக்கு அருகே பக்கவாட்டில் நிறையப் பேர் படியிறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் பார்வை இவரை நோக்கியிருந்தது. இருக்கை வரிசையை விட்டு வெளியேறி வாயிலை நோக்கிய பிரதான நடுப்பகுதி அகண்ட வழிப் படிகளில் இறங்க ஆரம்பித்தார். ஒவ்வொரு படியிலும் வெளிச்சம். ஒராள் உள்ளே மயங்கிக் கிடக்கிறான் என்று தியேட்டர் ஆள் யாரிடமாவது சொல்வோம் என்று நினைத்துக் கொண்டார்.

அரங்கு இப்போது முழுக்கக் காலியாகிவிட்டது. கடைசியாக இறங்கிக் கொண்டிருந்த கொஞ்சப் பேரோடு இவரும் வேகமாகப் போய்ச் சேர்ந்து கொண்டபோது அந்தச் சத்தம் கேட்டது.

ஓவ்வ்வாவ்வ்வ்வ்வ்!  – அந்த ஆள் மிகப்  பெரிதாகக் கத்திக் கொண்டு சுற்றிலும் உள்ள இருக்கைகள் அதிரும் வண்ணம். ஆவாவ்வ்வ்வ்.வே..வென்று சத்தமாய் எதுக்களித்து.. அந்த ஏரியாவே அசிங்கப்படும்படிக்கு பொளேரென்று  வாந்தியெடுத்தான். திரும்பத் திரும்ப பொளக் பொளக்கென்று தாங்க மாட்டாமல், அடக்கத் திராணியின்றி அவன் கொட்டித் தீர்த்தபோது. கடைசிப் படியில் நின்று ஒரு முறை கலக்கத்தோடு நோக்கிய பூவராகன் உண்மையிலேயே அதிர்ந்துதான் போனார். படம் பார்க்கையில் அவனை நகர்த்தியிருந்தால் இது நடந்திருக்குமோ?  எண்ணம் தந்த பயத்தில் வியர்த்தது அவருக்கு. மீதிப் படிகளை இறங்கிக் கடக்கலானார்.  அப்டி ஆகியிருந்தா என்ன பண்ணப் போறோம்? குழாய்ல  போய் முழுக்கக்  கழுவிட்டு வீடு போக வேண்டியதுதான்.. வேறே வழி? அவராகவே சமாதானப்படுத்திக் கொண்டார். அப்டி ஆகாததுனாலதான் இப்டி நினைக்கத் தோணுதோ? என்றும் ஒரு குறுக்குச் சிந்தனை இடையே பாய்ந்தது. இவ்வளவு நேரம் அவனைப் பொறுத்திட்டிருந்தவன் அதையும் செய்ய மாட்டனா? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டு வண்டி ஸ்டான்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

உள்ளே என்ன சத்தம் என்று புரியாமல் எமர்ஜென்ஸி  வாயிலிலிருந்து  நாலைந்து ஆட்கள் திடு திடுவென்று தியேட்டருக்குள் புகுந்து கொண்டிருந்தார்கள்.

 

 

 

 

சீஸர்

– ஆதவன் ம – 

நவாப்பழ மரத்தை சுற்றி சுற்றி வந்து மூக்கை விடைத்து முகர்ந்தது சீசர். முன்னங்கால் எக்கி மரத்தில் ஏற எத்தனித்தது. வேலு பெல்ட்டை இழுத்தான். கண்களை சுருக்கியடி தலையை குனிந்து மீண்டும் தரையை மோப்பம் பிடித்தது.

சின்னப்பையன் தன் அன்றைய வேலையைத் தொடங்கியிருந்தார். அவரைச் சுற்றி காகங்கள் எழுந்தமர்ந்து பறந்து கொண்டிருந்தன.

புலரியின் மஞ்சள் கீற்றுகள் கீழ் வானத்திலிருந்து வெளிவருவதை கம்மாய் மேட்டில் படுத்திருந்த மாடுகள் அசைபோட்டபடி பார்த்துக் கொண்டிருந்தன. எங்கும் மஞ்சளின் ஔிப்பிரவாகம். கழுத்தைத் திருப்பி கொம்பால் காகத்தை விரட்டியது பசு.றெக்கைகளை அறக்கப் பறக்க அடித்து தாழ்வாக பறந்த காகத்தை தாவி பிடிக்க முனைந்து தாவியது சீசர். காகம் பறந்து சென்று மரக்கிளையில் அமர்ந்து கரைந்தது. சீசர் சோகமான கேள்விக்குறியுடன் காகத்தைப் பார்த்து குரைத்தது. படிப்பகம் பூட்டிக் கிடந்தது. வேலு சீசரை இழுத்துக்கொண்டு நடந்தான்.

சந்திரன் கைகளில் தூக்குவாளியுடன் எதிரே வந்தார்.

‘என்னா மருமகனே, எங்கேயா’ என்று கேட்டுவிட்டு ‘ வெளிக்கா’ என்று நடந்து சென்றார்.

‘அத்தே, மாணிக்கம் எந்துருச்சுட்டானா’ என்றபடி வந்தான் வேலு.

‘என்னடா வெள்ளனயே வந்துருக்க’

‘ சீசர அவுத்துவிடனும்ல’

‘ ஏன், அண்ணே எங்க’

‘ அப்பா, கூட்டத்துக்கு போயிருக்காரு, நேத்தே போயிட்டாரு’

‘ டீ குடிக்கிறயா’

‘ வேணாந்த்த’

‘அந்தா தூங்குறான் பாரு, எளவு விடுஞ்சு நாயெல்லாம் வெளிய சுத்துற நேரமாயிருச்சு, இவனோட ஒடனொத்த பயலுகள்ளாம் காலைல கௌம்பி வீட்டுக்கு ஏதாவது கொடுக்கனுமே அப்டின்னு அலையிறானுக, இத பாரு தூக்கத்த’ என்றபடி காலால் எட்டி எழுப்பினாள்.

மாணிக்கம் தூங்கும் பாயில் இருந்து மூத்திர நாற்றம் அடித்தது. பிளாஸ்டிக் யையை போட்டுத்தான் படுப்பான். ஆனாலும் கைலியும் போர்வையும் நாறும். தினமும் துவைக்க தண்ணி கிடைக்காது. தண்ணீர் எடுக்க முக்கு கொழாயடிக்குதான் போகனும். நல்ல தண்ணிக்கு ஐயரம்மா வீட்ல கொடத்துக்கு ஒர்ருவா.

‘ மாமா எங்கத்த, படிப்பகத்துல காணாம்’ என்றபடி மாணிக்கத்தை எழுப்பினான்.

மாணிக்கமும் அதற்கே காத்துக் கொண்டிருந்தவன் போல எழுந்து பின்பக்கம் சென்றான். பின்பக்கம் என்பது ஒரு சிறு முற்றம். அதன் வலது மூலையில் சின்னச் சுவர் எழுப்பி, துணி மறைத்து கக்கூஸாக பயன்படுத்தினர். அதையொட்டி சிறு மேட்டில் பப்பாளி மரமும் முருங்கை மரமும் இருந்தன. அதையொட்டி மண் படிந்த திருக்கையும் பணியாரச்சட்டியும் கிடந்தன. மழைத் தண்ணீர் ஒழுகி ஏற்படுத்திய கருப்பு தடம் அதையொட்டிய மதில் சுவரில் தெரிந்தது.

அந்த மதிலுக்கு பின்னிருந்த சேட்டின் மரஅறுவை மில்லில், சனிக்கிழமை, அறுத்து மீந்த மரத்தூளை விற்பார்கள். வாங்கி வைத்துக் கொண்டால், மண்ணெண்ணை வாங்க முடியாத நேரத்தில் அதை எரித்துக் கொள்ளலாம். கனகம் வீட்டில் பெரும்பாலும் அடுப்பெரிவது டீ கொதிக்க வைக்கத்தான்.

வீடு என்பது ஒரு அறை, நீள்சதுர அறை. அதிலேயே கட்டில் போட்டு படுத்துக் கொண்டார்கள். அதையொட்டி யாரும் படிக்காத அரசியல் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. நீள் சதுரத்தின் வடக்கு பக்கத்தை ஒட்டி அடுப்படி. மண்ணெண்ணை அடுப்பு, கொஞ்ச பாத்திரங்கள் இருந்தன. தோசைக் கல்லும், டீக்கரை படிந்த பாத்திரமும் அடுப்பை ஒட்டி இருக்கும். மேற்கு பக்கத்தில் சிறு பானா வடிவில் மாணிக்கத்தின் முழங்காலை ஒட்டிய திண்டும் பானாவின் இரண்டு தாங்குகோடுகளை ஒட்டி கீழே கிடக்கும் கிடைக்கோடு அவன் கெண்டைக் கால் வரை இருக்கும். தெற்கு பக்கம் கண்ணாடி பாதரசம் ஓரத்தில் பிரிந்து இருப்பதை வீட்டுக்குள் நுழைபவரின் முதல் பார்வையில் படும்படி அவருக்கு இடப்பக்கம் மாட்டப்பட்டிருந்தது. அதையொட்டிய தென்மேற்கு மூலையில் பெஞ்சில் துண்டு மடிப்பதற்கு கிடக்கும். அறை என்று சொன்னால், கிடக்கும் பொருட்களையெல்லாம் எடுத்துவிட்டால் மொத்தமாக பத்து பேர் படுக்கலாம்.

மாணிக்கம் முகத்தை முருங்க மரக்கொடியில் காய்ந்த துண்டில் துடைத்தபடி வந்தான். பெஞ்சில் மேல் கிடந்த கவட்டையையும் எடுத்துக்கொண்டான். கனகம் அதை வேகமாக பிடுங்கப் போனாள். மாணிக்கம் பின்பக்கம் வைத்து மறைத்துக் கொண்டான்.

‘அத்தே விடுங்கத்த ‘ என்றான் வேலு

‘ஒனக்கு ஒன்னும் தெரியாது, இந்த சனியன வச்சுக்கிட்டு இந்த சனிய ஊர் வம்பெல்லாம் வெலக்கி வாங்குது’

அவனிடம் இருந்து பிடுங்க முடியாததினால் ‘என்னமோ செஞ்சு தொலங்க’ என்றாள்.

ஒரு கவரில் பழுத்த இரண்டு பப்பாளியையும், காயையும் போட்டு ‘அம்மாட்ட கொடு’ என்றாள் கனகம்.

இருவரும் நடந்து ஆத்துக்கு சென்றனர். மிகப் பழமையான படித்துறை படியில் வயதானவர்கள் சிலர் அமர்ந்திருந்தனர். தண்ணீர் ஒரு ஓரமாக ஓடிக்கொண்டிருந்தது. சீசரை மாணிக்கம் பிடித்திருந்தான். ‘நான் போயி ஆய் இருந்துட்டு வர்றேன், அதுக்கப்பறம் நீ போ ‘ என்று வேலு நடந்து ஆற்றில் வளர்ந்திருந்த ஒரு மறைவை தேடி அமர்ந்தான். மாணிக்கம் கரை ஓரத்தில் இருந்து கற்களை எடுத்து தேங்கியிருந்த தண்ணிரில் அடித்தான். பின்பு வானத்தை நோக்கி இலக்கில்லாமல் கற்களை கவட்டையால் விசிறினான்.

பத்மஸ்ரீ கமல்ஹாசன் நற்பணி மன்ற நிழற்குடையில், மயில் நிற கரு நீலமும் பஞ்சு மிட்டாய் நிற பார்டர் சேர்ந்த பட்டுச் சேலை கட்டி நின்றிருந்த அம்மாளின் முந்தானையை பிடித்தபடி ஒரு சிறுவன் கையில் கட்டியிருந்த கடிகாரத்தை தின்று கொண்டிருந்தான். முகத்தில் கண்ணிர் வழிந்த தடம் தெரிந்தது. ஒரு சிறு பெண், மாணிக்கத்தின் வயதிருக்கும், அவன் அக்காவாக இருக்கலாம், கையில் இருந்த மிட்டாயை சீசரை நோக்கி நீட்டி அழைத்தது. சீசர் அவர்களை நோக்கி இழுத்தது. இதுபோன்ற அடர் நிறங்கள் சீசரை ஈர்த்துவிடும். அது குரைத்த குரைப்பில் தங்கள் சின்னச் சிரிப்புகளை மறந்து குழந்தைகள் இவன் பக்கம் பார்த்தார்கள்.

தங்க பிரேம் கண்ணாடி அணிந்த ஒருவர் ஆட்டோ பிடித்து வந்தார். குழந்தைகள் எல்லாம் சீட்டுக்கு பின்னால் இருந்த திண்டில் ஏறி அமர போட்டி போட்டது. ஆட்டோ கிளம்பி சென்றது.

பஸ் ஸ்டாப்பிற்கு பின்னால் இருந்த கம்பெனியில் இருந்து கரும்புகை, புகைபோக்கி வழியாக வெளியேறியதும் நீண்ட ஊதொலி எழுப்பப்பட்டது. ஆற்றில் சாலையின் அடியில் சென்ற பெரிய சிமெண்ட் பைப்பில் இருந்து கறுப்புநிற கழிவு சென்று ஜீவமுக்தி அடைந்தது. சீசர் சத்தத்தை கேட்டு வாலை பின்னால் சொருகியபடி மாணிக்கத்தின் கால்களை சுற்றி வந்தது. கால்கள் ஈரத்தில் நனையும்படி நக்கியது.

சீசரின் உயர்ரக ஐரோப்பிய ஜாதிப் பண்புக்காகவே அதை நேசித்தார், வேலுவின் அப்பா. அதன் மின்னும் கறுப்பு நிறமும் அதற்கு அடைவு கட்டியது போன்று அமைந்த ‘காப்பிக்கலர்’ நிறத்திற்கும் அவர் சந்தோஷமாக செலவழிக்க தயாராய் இருந்தார். ஆனால் சிறியதாய் விடைக்காத காதுகளும் குட்டைக் காலுடன் நாட்டு நாயைப் போன்ற அதன் நடையும் அவரின் ஆசையை தடுத்தது. ஆனாலும் சீசருக்கு சாப்பாடு பிரச்சினையில்லை. அது கிடைத்தபோது உண்டது, கிடைக்காதபோது காதை மடக்கி, குழைந்து, கால்களை நக்கி பணிந்து நடக்க கற்றுக் கொண்டது .

மாணிக்கத்திடம் அதற்கு அளவற்ற வாஞ்சை. அவனைக் கண்டால் தலையை அவன் கால்களுக்குள் நுழைத்து பின் வெளிவந்து மேலேறி அவன் முகத்தை நோக்கி தாவும், முடியாமல், அவன் முன்னால் வந்து முகத்தை திருப்பி அவனைப் பார்த்தபடி வாலையும் பின்பக்கத்தையும் ஆட்டும். மாணிக்கத்திற்கும் அதனுடன் பெரும் பரிவு ஏற்பட்டு போய்விட்டது. இருவரும் ஒருவகையில் ஒன்றாகினார்கள்.

‘ டேய், ஒங்கப்பெனங்கடா, வீட்ல இருக்கானா’ என்றார் படியிலிருந்த எழுந்த வந்த கிழவனார்.

‘ இல்ல தாத்தா, அப்பா தெர்லியே…,’ என்றான்.

வேலு வந்தான், இவனும் வெளிக்கிருந்தபின் ஆற்றுக்குள் இருந்த ஓடுகாலில் குளித்தனர். சுற்றிலும் மாதுளையும், வேம்பும் புங்கனும் வைத்திருந்தனர். வாசலை ஒட்டி பன்னீர் மரம் வளர்ந்திருந்தது. அதற்கடுத்து பனைமரங்கள்.

 

வேலுவின் வீட்டுக்கு சென்றார்கள். வாசல் கேட்டில் சீசரை கட்டி போட்டுவிட்டு மாடியில் இருந்த அறைக்கு சென்றான் வேலு. மாணிக்கம் முன் வராந்தாவில் இருந்த பெஞ்சில் அமர்ந்தான். சுவரில் மார்க்ஸ் ஏங்கல்ஸ் படங்கள் வாசலுக்கு மேலே மாட்டப்பட்டிருந்தன. இரண்டுக்கும் நடுவில் வேலுவின் தாத்தா பிச்சையா சேர்வையின் படம் மாட்டியிருந்து. காய்ந்த கனகாம்பர மாலை இருந்தது. வேலுவின் அப்பா வீட்டில் இருந்தால், இந்நேரம் புதிய பூ மாற்றப்பட்டிருக்கும்.

சந்திரா ஒரு தட்டில் வடித்த சோறும் முட்டையும் பாலும் கொண்டு வந்தாள். மாடிக்கு ஏற திரும்பும் விசாலமான படியில் உட்கார்ந்து சோற்றில் முட்டையை உடைத்துப் போட்டு நன்றாக பிசைந்து பாலூற்றி சீசருக்கு வைத்தாள். மாணிக்கத்துக்கு சந்திரா தன்னை பார்ப்பது போன்ற பிரமை ஏற்ப்பட்டது. சிவப்பு நாக்கில் எச்சில் வழிய சீசர் நக்கித் தின்றது.

மேலேயிருந்து வேலு சிவப்பு நிற சட்டை ஒன்றை தூக்கிப் போட்டு ‘போட்டுக்கடா’ என்றான்.

‘ டேய் இப்டி கழட்டி கழட்டி போட்டுட்டு போனா யார் தொவைக்கிறது. இந்த சட்டைய போட்டுட்டு உன்னோடத கையிலய எடுத்துட்டு போயிரு’ என்றாள் பரமு.

மாணிக்கதுக்கு என்ன சொல்ல என தெரியவில்லை. நிமிர்ந்து சந்திராவை பார்த்தான். அவள் இவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள், லேசாக சிரிப்பது போலவும் இருந்தது.

‘எம்மா , நீ சும்மா இருக்க மாட்டியா, ஒனக்கு இப்ப என்ன’ என்றாள் சந்திரா.

மாணிக்கம் சட்டையை போட்டுக் கொண்டான்.

‘ஒனக்கென்னடி, இங்க தொவைக்கிறது நான்தான’

‘வாடா, சாப்புடலாம்’ என்றான் வேலு

‘இல்ல, எனக்கு பசிக்கல, அம்மா ஏதாவது செஞ்சுருக்கும்’

‘வாங்க சார், ரெம்பத்தான் பிகு பண்றீங்க, ஒங்கம்மா என்னத்த செஞ்சிருக்கப் போறா’ என்றாள் பரமு.

மாணிக்கத்திற்கு பசி வயித்தை கிள்ளியது.

இட்லி, மைய அரைத்த தக்காளிச் சட்னியுடன் கொஞ்சம் போல தேங்காய் சட்னி இருந்தது. இரண்டு தட்டுகள் இருந்தன, ஒன்றில் நான்கும் மற்றொன்றில் இரண்டு இட்லியும் இருந்தன. சிறியதாக இருந்த தட்டில் மாணிக்கம் உட்கார்ந்தான்.

‘ நீ தேங்காச் சட்னி சாப்பிடுவியா’ என்றாள் பரமு

‘ இல்ல அத்த, நான் சாப்புட மாட்டேன்’

இட்லி நன்றாக இருந்தது. ஒரு இட்டிலியை சாப்பிட்டவுடன் நன்றாக பசித்தது. அடுத்த இட்லியை மிக பொறுமையாக சாப்பிட்டான்.

‘ஏண்டா இட்டுலி புடிக்கலயா, பழைய கஞ்சி இருக்கு சாப்புடுறியா’

பழைய கஞ்சியில் பீ நாற்றம் அடித்தது. இருந்தாலும் பசித்தது, வாங்கி வேறு வைத்துவிட்டான். கூச்சமாகவும், சங்கடமாகவும் இருந்தது. வாசனையை பொருட்படுத்தாமல் சாப்பிட்டு முடித்தான்.

பள்ளத்தை நோக்கி நடந்து சென்றார்கள். இரண்டு பக்கமும் அலுமினிய பட்டறைகளின் சத்தமும் வாசனையும் வந்தது. மழைபெய்யும்போது எழும் மண்வாசம், மண்ணைத் தின்ன ஊறும் வெறி போல பற்களில் ஒரு நறநறப்பை உணர்ந்தான். சுண்ணாம்புக் கட்டிகளை வாயில் போட்டு மென்று தின்ன வேண்டும் என்ற வெறி ஏறியது.

கம்மாய்க்குள் ஷெரிப், கணேசன், தர்மராஜன், நிருபன் (எ) மேனேஜர், கருப்பு அமர்ந்திருந்தனர். அனைவருமே மாணிக்கத்தை விட பெரியவர்கள். தர்மராஜனும் கணேசனும் லோடுமேனாக இருக்கிறார்கள். தர்மராஜன்தான் கிரிக்கெட் கேப்டன். இருவரும் பள்ளத்து தெருவில் இருக்கிறார்கள்.

சற்றுத்தள்ளி இருந்த மரத்தினடியில் சின்னப்பையன் அமர்ந்திருந்தார். இரண்டு பக்கமும் மூன்று பொதிமூட்டைகள். அழுக்கு அடையாய் அப்பியிருந்தன. நெஞ்சு வரை சடைபிடித்துத் தொங்கும் தாடிமயிர் நரைத்திருந்தது. மூட்டையின் நிறத்திலேயே சட்டையும் வேட்டியும் கட்டியிருந்தார்.

கம்மாயை சுற்றி சேரும் குப்பைகள் முதல் பொட்டலத்தில் இருந்தது. முதல் பொட்டலத்தில் இருந்து தேவைப்படாத குப்பைகள் இரண்டாவதில். மூன்றாவது மிகப் பழையது. முதல் இரண்டு பொட்டலத்திற்கு சென்ற பொருட்கள் எப்பொழுதாவது தவறுதலாக கீழே விழுந்து பொருட்களின் உரிமையாளருகு சேரலாம். மூன்றாவது பொட்டலம் சின்னப்பையனுடைய சொத்து. என்ன செய்யலாம் என்பதுதான் சின்னப்பையனின் ஆகப்பெரிய சிக்கலாக இருந்தது. குப்பைகள் எங்கு இருந்தாலும் எடுத்துக்கொண்டு வந்து தரம் பிரித்து வைத்துக்கொள்வார். அவரைச் சுற்றி காக்காய்க் கூட்டம் ஒரு வளையம் போல அமர்ந்திருந்தது.

சின்னப்பையன் தீவிரமாக முதல் மூட்டையைப் பிரித்து அன்றைய அலுவலைப் பார்க்கத் தொடங்கினார். எப்பொழுதும் யாரிடமும் பேசுவதில்லை. பேசினால் ஒன்றும் புரியாது. விநோதமான மந்திரம் போன்ற லயத்துடன் இருக்கும். கூர்ந்து கவனித்தால் தான் அது கெட்ட வார்த்தை என்பது புரியும். சாப்பாடு கொடுத்தால் சாப்பிடமாட்டார். டீயும் கஞ்சாவும் வாங்கிக் கொடுத்தால் சொன்ன வேலையை செய்வார்.

மாணிக்கத்தை ஆட்டையில் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். அவன் எப்பொழுதுமே காவலுக்குத்தான். நிருபன் ஆட்டம் முடிந்தவுடன் மாணிக்கத்தை அழைத்துக்கொண்டு ரயில்வே தண்டவாளத்தை தாண்டி, ஆறும் கம்மாயும் சேறும் இடத்திற்கு செல்வான். நன்றாக தடித்து வளர்ந்து குடை விரித்திருக்கும் சீமக்கருவேல மரம் அவனுக்கு பிரியமானது. அதன் கீழே முட்கள் இல்லாமல் சுத்தமாக வைத்திருந்தான். இரண்டு கற்களுக்கிடையில் போடப்பட்ட சிமெண்ட் சிலாப்பில் அமர்ந்து கஞ்சாவை கசக்கி தூளாக்கி பீடியில் ஏற்றி பற்ற வைத்து இழுப்பான். பின்பு மாணிக்கத்தின் தொடைகளைத் தடவி கைகளால் பின்புறத்தை தடவுவான்.

முதல் முறை இங்கு அவர்கள் வந்தபொழுது அன்று தேய்பிறையின் நான்காம் நாள். அடர்த்தியான திரவமாய் காற்று நகராமல் இருந்தது. வரும்பொழுதே மரணவிலாஸில் முட்டை புரோட்டாவும், ஈரலும் வாங்கி வந்திருந்தனர். அன்று எழுந்த முதல் எண்ணம் கைகளை தட்டி விட்டு ஓடத்தான் நினைத்தான். ஆனால், பிரிக்கப்படாத பொட்டலங்களை கடந்து அவனால் செல்ல முடியவில்லை. அன்று பசி அடங்கவே இல்லை. மீண்டும் கடைக்கு சென்று ஆளுக்கு நான்கு புரோட்டாவும் குடலும் சாப்பிட்டார்கள்.

நிருபனின் அப்பாவும் வேலுவின் அப்பாவும் சிறு பட்டறைகள் நடத்திக் கொண்டிருந்தார்கள். நிருபன் ஆளானதும் சக்கரவர்த்தி அவனுக்கு சிறு உணவகத்தை போட்டு கொடுத்தார். நான்கு டேபிள் போட்டு, வெளியே தோசைக்கல் போட்டு கூரை வேய்ந்து முக்கில் ஈவ்னிங் மட்டன் ஸ்டால் தொடங்கினான். சாயுங்காலங்களில் வெட்டியாய் ஊரைச் சுற்றி இரவில் அகாலத்தில் தேடிச் சென்று புரோட்டாவும் ஆட்டுக்குடலும் சாப்பிட்டு வருவதற்கு பதிலாக இது நல்ல ஏற்பாடாகவே தோன்றியது நிருபனுக்கு.

எண்ணெயில் சோம்பு பட்டை லவங்கம் பொரிய வெங்காயம் தாளித்து, அரிந்த தக்காளிப் போட்டு மசாலாப்பொடிகளை எண்ணெய் ஊறி வர ,ஈரலைப் போட்டு வதக்கி, வெந்துவிடுமுன் தண்ணீர் ஊற்றி அரைத்த தேங்காய் ஊற்றி கொழுப்பு போட்டு அம்மா வைக்கும் ஈரல் குழம்பின் சுவையை அடித்துக் கொள்ள முடியாது. காரம் குறைந்த குடல் குழம்பு, கூட்டி வைத்த குழம்பு, மட்டன் சுக்கா என கடை ஆரம்பித்த கொஞ்ச நாளில் வியாபாரம் நன்றாக இருந்தது. பின்னர் சுற்றிலும் இருந்த அலுமினியசில்வர் பட்டறையில் வேலை செய்பவர்களுக்காக மதியமும் காலையும் கடையை விரிவாக்க வேண்டியதாக இருந்தது.

நிருபனின் தாத்தாவும் மாணிக்கத்தின் தாத்தாவும் தான் கட்சி வளர அங்கு வேலை செய்தவர்கள். கோட்ஸில் தொழிற்சங்க பணிகளில் முழுமையாக தொண்டாற்றினார்கள். ரயில்வே தொழிலாளர் போரட்டத்தின்போது ரயில் மறிப்பை முன்னின்று செய்து சிறை சென்று வந்தார் மாணிக்கத்தின் தாத்தா. ஆனால் காலம் செல்லும் திசையின் விசையை அறியாதவராய் இருந்தார். நிச்சயமாக ஏற்படப் போகும் சோசலிச அரசாங்கத்தினால் தனிமனித கவலைகள் தீர்ந்து போய்விடும் என்று உறுதியாக நம்பினார்.

தர்மர் கையில் இருந்த காசில் மலிவாய் வந்த இடத்தை வாங்கிப் போட்டார். சிறு பட்டறை ஒன்றை ஆரம்பித்துவிடடு கட்சி அனுதாபியாக மாறினார். இப்பொழுது கட்சி செல்லும் திசையை தீர்மானிக்கும் ஒரு விசையாகவும் வளர்ந்து விட்டார்.

‘ என்னடா, நேத்து கூட்டத்துக்கு வர்ல’ என்றார் மேனேஜர்

‘ பள்ளிக்கூடத்துக்கு போய்ட்டேன்’ என்றான் மாணிக்கம்.

வேலு, ‘இப்ப நாங்க திமுக’ என்றான்

‘ ஆமா பெரிய்ய மசுரு’

‘ ஏண்டா, ஏற்கனவே ஒங்க மாமாவ கட்சிக்குள்ள இழுத்துட்டு அந்த வைரவமணி ஆடுற ஆட்டம் தாங்க முடியல. போற எடத்துலலெல்லாம் குத்தி காமிக்கிறாங்க’ என்றார் மேனேஜர்.

‘இல்லண்ணே இப்பலா திமுகதான் மரியாத’

கல் குவியலை தன் பக்கத்தில் சேர்த்து வைத்துக்கொண்டு சுவாதீனமில்லாமல் கை அசைய இழுத்து விட்டுக் கொண்டிருந்தான் மாணிக்கம்.

‘ ஏண்ணே, இவங்க மாமாவ இந்திக்காரங்க கட்டி வச்சு அடச்சாங்கலாமே புனாவுல, அதுனாலதான் அங்க பதிவிலா கொடுத்து வச்சுருக்காங்க’ என்றான் கணேசன்

‘ ஆமா பெரிய்ய பதவி மயிரு, வேலைக்கு போன எடத்துல சூசுவான்னு இருந்துட்டு வாராமா அங்கன ஒரு பட்றய போட்டுட்டான். அண்ணங்காரனுங்க சும்மா இருப்பானுங்களா, அடி பிருச்சு எடுத்துட்டாங்க. அப்டியே வேல பாக்குற மொதலாளிட்டிட்டயும் போட்டு விட்டாங்க, அந்தாளு தொறத்தி விட்டுட்டான். இங்க வந்தப்ப பாக்கனுமே ஏதோ கேதம் விசாரிக்க வந்த மாதிரில்ல இருந்தான், டேய் ஒன் சூத்த சாத்திட்டு சும்மா இருக்க மாட்டியா, பெரிய்ய வௌக்கன்ன மயிரு’ என்றான்.

மாணிக்கம் அடித்த ஒரு கல்லில் அடிபட்டு சின்னப்பையனைச் சுற்றி அமர்ந்திருந்த காகம் கீழே விழுந்தது. சின்னப்பையன் தன் அலுவலை விட்டு மாணிக்கத்தைப் பார்த்தார். லேசாக சிரித்தது போல் மீசை வலைந்திருந்தது. மீண்டும் பொட்டலத்தை கிண்டத் தொடங்கினார். மாணிக்கத்திற்கு உடல் லேசாக நடுங்கியது.

அனைவரும் அமைதியானார்கள். கருப்பும் தர்மனும் எழுந்து ஓடினார்கள்.

‘ண்ணெ, நீ என்ன வேன்னா சொல்லு, இனி நாங்க தான்’ என்றான் வேலு.

‘அதுவும் சரிதாண்டா, இனி குருட்டு பயலுக்கு போட்டியே இல்ல’

குட்டை போல் தேங்கியிருந்த நீரின் ஒரத்தில் களி மண்ணில் வயிற்றை பரப்பி சுகமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது கருப்பு நாய். மாணிக்கத்துக்கு சீசர் ஞாபகம் வந்தது. சீசரின் நிறமும் முடியும் குணத்தில் பாதியும் அப்பாவுடையது. அசப்பில் வெளிநாட்டு நாய் போலவே இருக்கும். ஆனால் சாப்பாட்டில் எந்த பாரபட்சமும் இல்லை. அதில் அம்மாவைப் போல. மாணிக்கத்திடம் பாசமாக இருக்கும். மாமா காலையில் கழட்டி விடுவார். நேராக மாணிக்கத்தின் வீட்டுக்கு வந்து கதவை தட்டி எழுப்பும். பின்பு மாணிக்கம் கூட்டிக் கொண்டு ஆற்றிற்கு போவான். காலை நடையும் கடனும் தீர்ந்திபின் மாமா வீட்டில் கட்டி விட்டு பள்ளிக்கு கிளம்புவான்.

ஒருமுறை எப்போதும்போல மூத்திரம் பெய்யும் திண்டில் இருந்துவிட்டு அலைந்தது. ஒரு பெண் நாய் இதை நோக்கி வந்தது. மெல்ல கால்களையும் சுற்றி சுற்றி வந்து மூக்கையும் முகர்ந்தது. நாக்கால் முகத்தை நக்கியது. பின்பு திரும்பி தன் பின் பக்கத்தை ஆட்டியது. சீசர் முகர்ந்தது. வாலை தூக்கி ஏதோ ஒன்றை பீச்சியது. வடிந்த திரவத்தை நக்கிய சீசர் பரவசமானது. ஆனால் பெண் நகர்ந்து சென்றது, சீசரும் முன்னால் செல்ல முனைந்து இழுத்தது. மாணிக்கம் இழுத்து பிடித்தபோது அவன் மேல் தாடை பற்களை பயங்கரமாக தெரிய திறந்தபடி குறைத்து தாவியது. சங்கிலியை விட்டு விட்டு தலைதெறிக்க ஓடி வந்தான். அதற்குபின் ‘அவர்கள்’ வீட்டில் இருந்து யாராவது கூடவே வர வேண்டும்.

பொதுவாக வேலுவின் அப்பாவிற்கு நாய் வளர்க்க பிடிக்காது. ஆனால் இது போன்ற உயர்ஜாதி நாய்களின் மேல் ஒரு பிரேமை. அதுவும் உலகத்திற்கு புது வெளிச்சத்தை காட்டிய ஐரோப்பிய நாய்கள் மீது தனி பிரேமை.

இடது கண் பிய்த்தெறியப்பட்டிருந்த காகத்தை எடுத்துக்கொண்டு நிருபனும் தர்மராஜனும் கருப்பும் தம் வழக்கமான இடத்திற்கு சென்றனர்.

வேலு சாப்பிட சென்றான். மாணிக்கம் பள்ளத்து தெருவிற்குள் சென்றான். நடந்து அப்படியே ஆற்றுக்குள் இறங்கினான். வெயில் அவ்வளவாக இல்லை, இருந்தும் கிறக்கமாக இருந்தது. கரையையொட்டி மாடுகள் கட்டப்பட்டிருந்தன. பாதரசம் உதிர்ந்து போயிருந்த கண்ணாடியின் பின்பக்கம் போல கிடந்தது ஆற்றுப் படுகை. யாருக்கும் எந்த கட்டுப்பாடும் கிடையாது. காடாய் மண்டியிருந்த படுகையின் ஒரு ஓரத்தில் சாக்கடை நீர் கரை புரண்டு ஓடியது. குப்பை, மாட்டு சாணம், மலஜல தீர்த்தம் என்று மணத்தது. ஆழ மூச்சை இழுத்து ஆற்றை சுவாசித்தபின் தேங்கியிருந்த குட்டைக்கருகில் சென்றான்.

பாலத்தின் தெற்கே முழுவதும் வண்ணான் தொட்டிகள், அதை ஒட்டி கிணறுகள். சிலர் அந்த நேரத்திலும் துவைத்துக் கொண்டிருந்தார்கள். ஆத்துக்கு அக்கரையில் இருப்பவர்கள். பசும்புல் தரையில் வண்ண வண்ண நிறங்களில் துணிகள் காய்ந்து கொண்டிருந்தன. அங்கு ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். அதற்கு அருகில் சென்றான். தரையில் ஆங்காங்கே அனைத்து கட்சி கொடிகளும் கிடந்தன, காங்கிரஸ் கொடியைத் தவிர.

‘இங்கென்னடா பண்ற’ யாருடனோ பேசிக் கொண்டிருந்த வேலுவன் மாமா திரும்பிக் கேட்டார்.

‘சும்மாதான் மாமா’

‘செரிய்யா சாயங்காலத்துக்குள்ள காஞ்சுருமா, நைட்டு மீட்டிங் இருக்குய்யா’

‘அதெல்லாம் தாராளமா ஆயிரும்யா, நீங்க கவலப்படாதீங்க’

‘அப்ப சேரி, நான் சாயங்காலம் ஆளனுப்புறேன்’ என்று பையில் இருந்து காசை எண்ணி கொடுத்தார்.

மாணிக்கத்திற்கு சந்தோஷமாக இருந்தது.

‘சாப்பிட்யாடா, சாப்புட போவோமா’ என்றபடி அவனுடைய பதிலை எதிர்பாராமல் கரைக்கு நடந்து சென்றார்.

ஆனிமாத நடுப்பகலின் உள்ள வானத்தின் நீலத்தில் குறுக்காக ஒழுங்கில்லாமல் செல்லும் வெள்ளைக் கோடுகள் கொண்ட சட்டைக்கு கருப்பு நிற பேண்ட் போட்டிருந்தார். கைகளை முழங்கை வரைக்கும் மடித்துவிட்டு அலட்சியமான கவர்ச்சியுடன் இருந்தார். அடர்த்தியான மீசை, நெளிநெளிவான மேடு பள்ளமான அடர்த்தியான தலைமுடி வாரப்பட்டு நெடுநேரமாகியிருந்தது. உதட்டை ஒட்டிய மருவில் பூனை மயிர் இரண்டு வளர்ந்திருந்தததை வெட்டியிருந்தார். மாநிறம். எதை பற்றியும் கவலைப்படாமல் தனக்குள் ஆழ்ந்து ஏதோ ஒரு யோசனையில் முழ்கியபடி நடந்து சென்றவர் பின்னால் மாணிக்கமும் நடந்து சென்றான். சைக்கிளில் ஏறி வலது காலை எக்கி ஊன்றியபடி காத்திருந்தார். இவனைப் பார்த்தவுடன் பெடலை மிதித்து அழுத்த, மாணிக்கம் ஓடிப்போய் தாவி கேரியரில் அமர்ந்தான்.

‘என்னடா சாப்புடுற’

‘வாங்க மாபள, என்ன மருமகன் எளச்சுபோயிட்டிய’ என்றார் கல்லாவில் அமர்ந்திருந்த தர்மர்.

‘மாமா, எனக்கு பிரியாணி, இவனுக்கு புரோட்டா கொடுத்துருங்க, கொடல் இருக்கா, அது ஒன்னு, சுக்கா ஒன்னு’

‘கொடலு தீந்துருச்சு மாப்ள, மாங்கா சாப்றீங்களா’

‘தோப்ஜாவா’ என்று சிரித்தார்

‘ ஆமாய்யா மாமன் தோப்ஜாவத்தான் போடனும்’ என்று சிரித்தார் தர்மர்.

‘ஏண்டா, இப்படி அழுக்கு சட்டைய போட்டுக்கிட்டு சுத்துற, ஒங்கப்பெங்கடா’

மாணிக்கம் எதுவும் பேசவில்லை. இலையை விரித்து தண்ணீர் தெளித்து புரோட்டாவையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

‘ இன்னைக்கி நைட்டு கூட்டம் இருக்கு, வர்றியா’

‘ சேரி மாமா’

பிரியாணியும் சுக்காவும் வந்தது. அதில் கொஞ்சத்தை எடுத்து மாணிக்கத்தின் இலையில் வைத்தார்.

‘வரும்போது நாலஞ்சு பேர கூட்டிட்டு வா, நான் வேலுட்டயும் சொல்லிருக்கேன்’ என்றார்

சாயுங்காலமே அறுபதடி சாலை கூட்டமாக இருந்தது. இரவில் தான் கூட்டம். எதிர்கட்சிகள் அனைத்தும் இணைந்து நடத்தும் கூட்டம் என்பதினால் எல்லாக்கொடிகளும் கம்பங்களில் கட்டப்பட்டிருந்தன. ராமன் போட்ட சாரத்தில் மேடை ஏறிக்கொண்டிருந்தது. ஒருவித பரபரப்பான சூழ்நிலை உருவாகியிருந்தது. வேலுவின் மாமாவை சுற்றி நிருபனும் கருப்பும் நின்று கொண் டிருந்தார்கள். மாணிக்கத்துடன் செந்திலும் அழகரும் வந்தனர். கருப்புடன் இருவரும் கொடிகளை வாங்கச் சென்றனர். வேலு எங்கு சென்றான் எனத் தெரியவில்லை.

வானம் அடர்ந்த நீலத்துடன் இருந்தது. இப்பொழுது மழை பெய்ய வேண்டும் என எண்ணிக்கொண்டான்.

‘சே, வானம் வேற இப்டி இருக்கே, மழ வந்தா என்னா பண்ண’ என்றான் நிருபன்

‘பாக்கலாம், மழ வந்தா வருட்டும்டா’ என்றான் சந்திரன்

‘ எப்பயும் இப்டி ஒரு அசால்டாண்ணே’

‘ வேற என்ன செய்ய, மழையில நனைஞ்சு பின்னாடி எல்லாக்க கூட்டம் ஓங்கடைக்குத்தான்டா வரும்’

‘ ஆ, அது வேற ஒன்னு இருக்குல்ல…. ஏன் அண்னே எப்டி அத மறந்தேன்’

‘ டேய் அதுக்குத்தான் மண்டையில ஒன்னும் இருக்ககூடாதன்றது, ரொம்ப அறிவாளியா இருந்தா, தேவையான அறிவு இருக்காது’

‘ நீங்கதான்னே அறிவாளி, நான் என்னாண்ணே’

‘அப்ப வா, நம்ம கட்சிக்கு’

‘அது ஆகாதுன்னே, அப்பாவுக்கு தெருஞ்சா அவ்ளவுதான்’

‘அப்ப என்ன மயித்துக்கு என்ன பத்தி தேவையில்லாதத பேசிட்டுருக்க’
நிருபன் மாணிக்கத்தை பார்த்தான்.

‘இங்க… இங்க பார்றா, இனி இந்த மாறி ஏதாவது என் காதுக்கு வந்துச்சு மென்னிய முறுச்சுருவேன்’

‘ இல்லன்ணே, யாரோ தப்பா சொல்லிருக்காங்கனே’ என்று கண்கலங்கினான்.

‘சேரி விடு, நாம ஆகுற வேலய பாப்போம்’

மேடை போடப்பட்டிருந்தது, பின்னால் வெள்ளைத் துணியைக் கட்டி ஓர அலங்காரங்களை ஈர்க்கால் குத்திக்கொண்டிருந்தான் ராமன். கீழே இருந்து செல்வம் அவனுக்கு துணியை ஒதுக்கி விட்டபடி ஈர்க்கை கொடுத்துக் கொண்டிருந்தான்.

‘என்னா ராமா, மழ வரும்போல தோணுதே’ என்றான் சந்திரன்.

‘ஆமாண்ணே அப்டிதான் இருக்கு’ என்றபோதே மழை பெய்யத் தொடங்கியது. அனைவரும் கலைந்து ஓடத் தொடங்கினார்கள். ஆலமரத்தின் கீழும் மரணவிலாஸிலும் ஆறுமுகம் டீக்கடையிலும் ஓடியவர்கள் ஏறி நின்றார்கள்.

மழை விடும்பொழுது அருணாச்சலம் வந்தார். அருணாச்சலம் சந்திரன் கட்சியின் மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர்.
எட்டு மணிக்கு மேல் தான் முக்கிய பேச்சாளர்களும் தலைவர்களும் வருவது.

இனி இந்த மழை வராது என்பது போல் வானம் கலைந்து எறிந்த துணி போல் கிடந்தது. அருணாச்சலம் ரோஜா நிற சட்டை போட்டிருந்தார். கையில் தங்க பிரேஸ்லட். நனைந்த தலைமுடியை ஏர்நெத்தியில் இருந்து ஏற்றி விட்டார். வெள்ளையாக தடித்து போதையில் கண்கள் இலக்கில்லாமல் இருந்தது. உதடுகள் வெத்தலைக் கறையால் சிவந்திருந்தது.

‘என்னாடா, இன்னும் மழ வருமா’

‘வராதுன்னுதான் தோனுதுண்ணே’

கையில் கட்டியிருந்த கடிகாரத்தின் கண்ணாடியை துடைத்துவிட்டு மணிக்கட்டை மடக்கி மணி பார்த்தார்.

‘இன்னும் ஒன்றமண்நேரமாவது ஆகுமாப்பா’

‘ஆகும்ணே’

‘பையன் ஆரு’

‘சொந்தக்காரப் பயந்தான், ஏதாவது சாப்றீங்களா’

‘சாப்டலாம், அண்ணே வர்ற நேராகும்ல’

‘ஆமாண்ணே’

‘ஆமா என்ன ஏதும் இருக்கா’

‘சாராயம் இருக்கு’

‘நம்ம காச்சுனதா’

‘ஒருவகையில அப்டித்தான்’

‘அப்ப அத வர்றவனுக்கு கொடுத்துரு, வேற என்ன இருக்கு’

‘கள்ளு வேணும்னா காலேல சொல்லிருக்கனும், வேற சிவபானம் தான் இருக்கு’

‘கடசீல பரதேசியாக்கிருவீங்கப் போல, சேரி வா, என்ன பண்ண’ என முகம் வீங்க சிரித்தார்.

வளர்பிறையின் சிறு கீற்றை மறைத்து வெளிப்பட்டு கடந்து கொண்டிருந்தது மேகம். இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே கிடப்பது எனத் தெரியவில்லை மாணிக்கத்திற்கு. நாளை காலையில் வேகமாக கிளம்பி பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று தோன்றியதுமே மனம் கனத்தது. காலையையும் வெளிச்சத்தையும் நினைக்க மனம் கூசியது. இந்த உலகம் வெறும் இரவுகளால் நிரம்பியதாக ஏன் இருக்கக்கூடாது.

ஆனாலும் காலையில் சென்றுதான் ஆக வேண்டும். சந்திராவின் ஞாபகம் வந்தது. தன் இடுப்பு பகுதியில் ஊர்ந்து மேயும் வெற்றிலை உதட்டுக்காரரின் கைகளை உணர்ந்தான். சந்திரா என்ன செய்து கொண்டிருப்பாள், இந்நேரம், இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு படுத்தபடி தன்னை பற்றி எண்ணிக் கொண்டிருப்பாள் என தோன்ற உடல் சிலிர்த்தது.

சந்திராவும் மாணிக்கமும் திருவாப்புடையார் கோவிலுக்கு சென்றிருந்தனர். ஏழாம் நாளான பாவாடை தரிசனத்திற்கு அம்மன் சந்நிதி முன் கூட்டம் முண்டியடித்தது.

எங்கும் பூக்கள் கசங்கி எழும் நாற்றமும் குங்கும விபூதி தரித்த உடல்களில் எழும் வியர்வையின் நெடியும் கலந்திருந்தது. இவற்றினூடாக அனைத்தையும் கடந்து நிற்கும் தூய பெண் வாடை.

மாணிக்கத்திற்கு மூச்சடைத்தது. கூட்டம் கசக்கித் தள்ளியது. திடீரென்று வயிற்றுக்குள் சுழன்றெழும் பந்தொன்றை உணர்ந்தான். பின் முதுகில் அழுத்தும் சந்திராவின் மார்பகம். அலையும் அவள் கைகள் மேய்ந்து அவனை உணர்ந்தது. அவனுடைய கைகளை பற்றி தன் கால்களுக்கிடையில் வைத்துக் கொண்டாள்.

வயிறு பசித்தது.

‘என்னடா பசிக்குதா ‘ என்றார் அருணாச்சலம்.

ஆமாம் என தலையாட்டினான்.

‘சேரி வா சாப்டுவோம்’ என அவனை உட்கார வைத்துக் கொண்டார். புரோட்டாவைப் பிரித்து அவன் மடி மீது வைத்துவிட்டு அதில் ஈரல் குழம்பை ஊற்றினான் நிருபன்.

வானம் கலையத் தொடங்கியது. மேல் பரப்பு நீங்கி சென்றதும் அடிப்பரப்பிலிருந்து தூறல் விழுந்து கொண்டிருந்தது. காகங்கள் நவ்வாப்பழ மரத்திலிருந்து கரைந்தது பெரிய தொந்தரவாக இருந்தது. கட்சி அலுவலகத்தின் பின்புறம் நின்றிருந்த நவ்வாப்பழ மரம் நீண்டு தடித்த பழங்களை கொட்டும். மாணிக்கம் காலையிலே வந்து அறை வாசலை கூட்டிப் பெருக்கி பழங்களை பொறுக்கி பேப்பரில் போட்டுக்கொள்வான். பின்பு பள்ளிக்கு சென்றுவிட்டு சாயுங்காலம் மேல் தான் வருவான். ஒரு வாரமாகத்தான் இந்த கரைதல்.

‘டேய், அங்க எவண்டா, அந்த சனியன தொரத்தி விடுங்கடா’ என்றார் அருணாச்சலம்.

‘ண்ணே, காக்காக் கூட்ட கழச்சோம்னா, அது நல்ல பாம்பு மாதிரி விடாது, தொரத்தி தொரத்தி கொத்தும்’

‘என்னய்யா, எந்த காலத்துல இருக்கீங்க’

‘சத்தியம்னே, நான் கண்ணால பாத்துருக்கேன்’

‘அப்டியா’ என்று தன் சிந்தனையை கொஞ்சம் காக்காயை நோக்கி திருப்பிவிட்டு எழுந்து வெளியே சென்றார். சிகரெட்டை பற்றவைத்தபடி வராண்டாவில் நடந்தார். காக்காய் ஒன்று தாழ்வாக பறந்து தலையை உரசி செல்ல உடலில் ஒரு நடுக்கம் தோன்றியது. உள்ளே சென்று மேஜையில் அமர்ந்து ஆழ்ந்து புகைத்தார்.

‘சந்திரன் அந்த காக்கா கூட்ட கழச்சு விடுய்யா’ என்றார் வாசலில் நுழைந்த சந்திரனிடம்.

‘ண்ணே, பாவத்த அதப் போய்ட்டு எதுக்குண்னே’

‘யோவ், சொன்னத செய்யா, நீயும் இவங்க மாறி வளவளன்னு பேசிக்கட்டு’

‘சேரிண்ணே’

காக்காய்கள் காலையிலே தங்களுடைய கரைச்சலைத் தொடங்கிவிட்டது. மாணிக்கத்தைச் சுற்றி வேலுவும் அழகரும் நின்றிருந்தார்கள். வேலுவின் கைகளில் சீசர் இருந்தது. மாணிக்கம் கைகளில் இருந்த உண்டி வில்லால் கிளையில் அமர்ந்திருந்த காக்காயை அடித்தான். அது அந்த கிளையை அசைக்க காக்காய்கள் மேலெழுந்தகு பறந்தன. வேலுவிற்கு பதற்றமாக இருந்தது. ஆனாலும் வெளியே காண்பிக்கவில்லை.

‘டேய் என்னத்த அடிக்கிற, காக்கா கூட்ட பாத்து வீசுடா’ என்றான். பின்பு ‘ இங்கத்தா’ என்று கவட்டையால் குறிப் பார்த்தான். கற்கள் அந்தரத்தில் இரண்டு முறை பறந்து தரையில் விழுந்தன. மாணிக்கம் அடித்த கல் நேராக சென்று கூட்டை கலைத்தது. குச்சி ஒன்று அசைந்தது. இரண்டு மூன்று கற்களை தொடர்ச்சியாக அதன் மீது வீசினான். காக்காய்கள் அனைத்தும் மரத்தில் இருந்து எழுந்து அந்தரத்தில் பறந்தபடி கரைந்தன. தைரியம் கொண்ட சில தாழ்வாக பறந்து அவர்ளை தோக்கி வந்து சிறகால் வீசியன. மேலேயிருந்து சிறு சிறு குச்சிகளுடன் இரண்டு காக்காய் குஞ்சுகள் நிலத்தில் விழுந்தன. சீசர் பாய்ந்து சென்று காக்காய்க்குஞ்சை கவ்வியபடி ஓடியது. சில காக்காய்கள் சீசரை துரத்தியடி பறந்தன. மற்றவை மாணிக்கத்தை நோக்கி பறந்து வந்தன. தாய் காக்காய் குஞ்சு கீழே விழுந்த இடத்தில் தத்தி தத்தி நடந்தது. அலகால் கீழே விழுந்த குச்சிகளை எடுத்துக்கொண்டு மேலேப் பறந்தது.

வேலுவும் அழகரும் எங்கு சென்றனர் எனத் தெரியவில்லை. மாணிக்கம் கம்மாயைப் பார்த்து ஓடத் தொடங்கினான். காக்காய்கள் அவன் தலையைக் கொத்தியபடி பறந்து வந்தன. கைகளால் தட்டியடி முன்னாடி ஓடிக் கொண்டிருந்தான். கம்மாய்க்கரையிலிருந்து சீசர் நாக்கால் வாயைத் துடைத்தபடி அவனை நோக்கி ஓடி வந்தது. மெல்ல ஆறுதல் அடைய காக்காய்கள் சின்னப்பையன் அமர்ந்திருந்த மரத்தில் மேலேறி அமர்ந்து கரைந்தது.

சின்னப்பையன் கீழே விழுந்திருந்த கவட்டையை எடுத்து முதல் மூட்டைக்குள் போட்டார். உள்ளேயிருந்த குப்பைகளை சிதற வெளியே எடுத்து போட்டுவிட்டு கவட்டையை மீண்டும் கண்டடைந்த ஆச்சர்யத்துடன் இரண்டாம் மூட்டைக்குள் போட்டுவிட்டு, கீழே சிதறியிருந்த குப்பைகளை பதற்றத்துடன் மாணிக்கத்தை பார்த்தபடி அள்ளிப்போட்டோர். முகம் கலவரமாகவே இருந்தது.

இரண்டாம் மூட்டையை பிரித்து கவட்டையை மூன்றாவது மூட்டைக்குள் போட்டபின் உதறிக்கொண்டிருந்த அவர் உடல் நிதானமடைந்தது. முகத்தில் பூரண பரவசம். நார் போன்ற மீசையை ஒதுக்கிவிட்டு மாணிக்கத்தைப் பார்த்து சிரித்தார். புலரியின் ரேகைகள் அவர் முகத்தின் மீது படிந்து ஔிர்ந்தது.

அச்சாரம்

– பூவன்னா சந்திரசேகர் – 

“மணி ஆறாச்சு. ஊராளக பூராம் மேய்ச்ச முடிச்சு அது அத கொண்டாந்து கசாலையில கட்டிட்டாக. காலையிலே நீச்சத் தண்ணிய வெறும் வயித்துல குடிச்சுட்டு போன மனுஷன பொழுதடைஞ்சும் இன்னும் காணோம். இப்பிடி ஆடாக்கும் மாடாக்கும்னே அலைஞ்சா, அந்த உடம்புதான் என்னத்துக்கு ஆகுறது?”

மாட்டுக் கசாலையை கூட்டிபெருக்கி முடித்து விட்டு மாட்டுக்கு காடித்தண்ணியில் புண்ணாக்கு கொட்டி கலக்கிக் கொண்டிருந்தாள் காளியம்மா. அறுவடை முடித்து ஒருவார காலமே ஆயிருந்தது. அவர்களது முப்பது சென்ட் நிலத்தில் விளைந்த நெல்லின் குட்டிக் குவியல் வாசலில் தார்ப்பாய் விரிப்பில் கொட்டிக் கிடந்தது.
மூன்று பத்தி வீடு. முதல் பத்தி இருப்பு. ரெண்டாம் பத்தி கிடங்கு. மூன்றாம் பத்தி கைவிடப்பட்டது. முழுக்க வவ்வால் மூத்திர வாடை. கீரிப்பிள்ளைகள் நடமாட்டம். அரவுகளின் ஊர்வு சில சமயம்.

பனியிறங்கத் துவங்கிவிட்டிருந்தது. மார்கழி மாத பாவனை அது. மஞ்சள் விழுங்கி மெல்ல வெள்ளுரு சுமக்கத் துவங்கிருந்தது மேலை வானம். கருப்பையா, கதிர் தாளை மிதித்து நசுக்கி மேய்ச்சலில் இருந்து மீண்டு வந்து கொண்டிருந்தார். அவர் கழுத்தில் சரடாக சாரதி துண்டு ஒன்று தழுவலாய்க் கிடந்தது. மாடுகளின் கழுத்துப்பட்டை மணியோசை கிணிங்…கிணிங்…கிணிங்….

சத்யாவின் ஆசை மாடு ஒய்த்தக்கா அவரின் நடையை ஒத்து உடன் ஒரு நாய்க்குட்டி போல சிலுப்பிக்கொண்டே வந்தது. அவருக்கு பிரியமான காரி மாடு அது. வீட்டுத் தொழுவத்திலே தான் பிறந்தது. ஒரு எட்டு வயசிருக்கும். கடவாய்ப் பல்லெல்லாம் போட்ட தொழுவத் தாய் மாடு. எவற்றுக்கும் மூப்பு. ராணி.பனைமட்டை எரித்த கருஞ்சாம்பல் நிறம். நெற்றியில் மட்டும் வெற்றிலை அளவு வெள்ளை கிரீடம். நிஜமாகவே ராணிதான். மகாராணி. இப்போதும் கன்று ஈந்திருந்தது. ஐந்தாவது ஈத்து.

கட்டுத்தளையில் கட்டிக் கிடந்த மரைக்கன்று, முளைக்குச்சி பிடிங்கும் ஆர்ப்பரிப்போடு ஆத்தாக்காரியின் அருகாமை உணர்ந்தமையினால் மாப்போட்டுக் கொண்டிருந்தது. கன்றின் நெற்றியில் கூட ஒரு கொழுந்து வெற்றிலை அளவில் வெள்ளை. ஒய்த்தக்கா வயிற்று வழியல்லவா?
ஒரு நாள் மேய்ச்சலில் கடந்த, நடந்த, குடித்த, படுத்த எல்லா நில சேறும் குளம்படியில் ஒட்ட கசாலை அடைந்த செவலைக்கிடேரி ஈரக்கூலத்தை அவசரமாய் வாயில் அதக்கித் திணித்து மென்றது.கட்டறுத்த மரைக்கன்று மாரை முட்டிக் கொண்டிருந்தது.

“இன்னும் பாலே பீச்சலே, அதுக்குள்ள என்னவாம் இதுகளுக்கு அவசரம்” காளியம்மாள் கன்றுக்குட்டியின் பிடிகயிற்றை வல்லூட்டியமாய் இழுத்து, முளைக்குச்சியில் தழைத்தாள்.

“நாப்பூரா அதுக மேஞ்சுட்டு வாரது, ஒனக்கும் எனக்கும் இல்லடி. அதுக்க பிள்ளைக்கு பாலுக்கும், அதுக்க வயித்துக்கும்தாண்டி, கூதரக் கழுத. கன்டுக்க கட்ட அவுத்துவிடு. அதுக்க வயிறு சலம்ப மிச்ச மீசாடி நமக்குப் போதும் என்ன?”

“வீடு விரிசப்பட்டு கெடக்கு. ஒரு மூட்டை சாந்து கொழைச்சு அப்ப நேரங்கெட்டுத் திரியுறோம். உனக்கும் எனக்கும் காப்பி தண்ணிக்குக் கூட காண மாட்டேங்குது பாலு. இதுல அம்புட்டும் கண்ணுக்கு குடிக்க விட்டா, எங்குட்டு இருந்து கடைக்கு பால் ஊத்துவே? எவன் தாலிய அறுத்து உள்ள கடனை கட்டுவே? அந்த பிள்ள இருந்த மட்டும் மில்லுக்குப் போயி வயித்த ரொப்புச்சு. எந்த கோயிலுக்கு கொறை வச்சமோ? எந்தச் சாமிய பழிச்சுப் பேசுனமோ அறியல. இருந்த ஒன்னையும் காவெடுத்துக்கிடுச்சு. எம்மவ போயி வருஷம் ரெண்டும் மூனும் போயி, இப்ப ஆறு ஆகிப் போச்சு. அந்த புள்ள பொறந்து, ஆளாகி, கடைசியில சீவன் போன இந்த ஒத்த வீட்டையும் இப்போ கரைய விட்டுகிட்டு கிடக்கோம். அதெல்லாம் உரைக்கல உனக்கு. கன்டுக்கு பால் வேணுமாம் பாலு.”

முட்டிப் பால் குடித்த கன்றை, தயவே இல்லாமல் ஆங்கார வேகமாய் இழுத்து வந்து கட்டில் தழைத்தாள். வாயோரம் முலை முட்டிய நுரையோடு பால் கசிய பாவமாய் கதறியது கன்று.”ம்மா… ம்மா…”

முன்னமே ஒருமுறை காளியம்மா, அவருக்கு அறியாது ஒரு வெள்ளைக் கிடேரியை விலைபேசி ஏற்றியே விட்டாள். விலை சொல்பம்தான். சீட்டுக்காரனிடம் அதைச் சொல்ல முடியாதே. அப்புறம் மனுஷன் மூணு நாளா வேளைக்கு சாப்டல. சத்யா போனப் பிற்பாடு, அவர் அளவளாவி பேச சிரிக்க உள்ளதானால் அவை மாட்டோடும் கன்றோடும் தான். பிள்ளை பத்தின மூச்செழுந்தாலே காளியம்மா புகையடித்த கண்ணாய் நாள் முச்சூடும் அழுது தேமி ஒடுங்கியே போவாள். தனியே அவளிருக்கும் சமயங்களில் லேசான விசும்பலாய் ஒரு ஒப்பாரி அதிர்ந்து வீட்டை நிறைக்கும். ஒத்தைப் புள்ள. அதுவும் பொம்பளப் புள்ள. மூணு தரம் தப்பி நாலாவதா நிலைச்ச உசுராச்சே. இருக்கத்தான் செய்யும் வேதனை.

கருப்பையா பாலூற்றப் போனாலும் மாட்டுக்கு மருந்து வாங்க டவுனுக்குள் போனாலும் சத்யா சைக்கிளின் கேரியரில் தான் ஒட்டியிருப்பாள். ஒரு மடிப்பு சீனிச்சேவு வாங்கித் தாந்தால் பொட்டுப்போல கொறித்துக்கொண்டு அடங்கி இருப்பாள்.

வளனை, சூராணம், முத்துப்பட்டணம் சுற்றில் பெரும்பான்மை சாயா கடைகளில் பொங்கியது கருப்பையாவின் கசாலை மாட்டு, மடி கறந்த பால் தான்.குடுப்பதைக் காட்டிலும் குறைவாயினும் சிணுங்கல் இல்லாமல் வாங்கிக் கொள்வார். ஓரிரு வருடப் பழக்கமில்லை, இரண்டு தலைமுறையாக பால் ஊற்றிக் கொண்டிருக்கிறது அந்தக் குடும்பம் இந்தத் தெருக்கடைகளில்.பால்காரர் உடையாரைத் தெரியாத சுற்றமும் அவர் மகன் கருப்பையாவை நன்கறியும். ”நல்ல கன்று ஈன்ற பசுவின் குணம் அவருக்கு.”

புத்துக்கால் சீக்கு. அப்பனுக்கு இருந்தது. சித்தப்பனுக்கு இருந்தது. கருப்பையாவுக்கும் இருக்கிறது. வெறுங்காலால் நடமாட்டம் ரணமாய் வெடிக்கும். செருப்பில்லாது அடி நகர திராணியிராது. செருப்பே போட்டு நடந்தாலும் குண்டூசிகளாய் அவ்வப்போது குடையும். பெரும்நேரம் பஞ்சு செருப்பு தான். அதுவும் குதிகால் பக்கம் ஒரு ஓரம் மட்டும் குழியாகி இருக்கும். மழைக் காலங்களில் வாசலில் கிடக்கும் அவரது செருப்பு ஒரு குட்டிக் குளத்தை தன்னில் நிறைத்து வைத்திருக்கும். இந்த மாதிரியான அமைப்போடு அவர் நடப்பது, மணல் சாலையில் மாட்டு வண்டி ஆடி ஆடி கடப்பது மாதிரி கூட அல்ல. அப்படியே அதன் அசலாய் தான் இருக்கும்.

கருப்பையாவின் வயதையொத்த ஒரு பழஞ்சைக்கிள் ஒன்று கடைத்தெருக்களுக்கு பாலூற்றப் போகும் அவருக்கு நெடுங்காலத் துணை. அவரின் தோற்றம் மூப்பேறிக்கொண்டே இருந்தது சைக்கிளின் மேல் துருவேற கூட அவர் விடுவதில்லை. அவரின் தலைமயிர் எப்போதும் கண்டிராத தேங்காய் எண்ணெய் வாங்கி, பழைய வேட்டியைக் கிழித்து அதில் சலம்ப ஊற்றி துடைத்து சைக்கிளை மினுமினுப்பாக வைத்திருப்பார். அது அவருக்கு வெறுமனே சைக்கிள் மட்டுமல்ல.அது அவர் அப்பனைச் சுமந்தது, அவர் அப்பன் ஓட்ட பின்னே இவர் அமர, கடை கண்ணி எங்கும் பாலூற்றி வந்த பழ நினைவுகளைச் சுமந்தது. அவரது மகள் அந்த சைக்கிளில் தானே ஊடுகால் போட்டு ஓட்டப் பழகினாள். அதிலே தானே பத்தாப்பு வரை பள்ளிக்கூடம் போய் வந்தாள். மஞ்சள்காமாலை முற்றலாகி அவள் மெல்லச் செத்துக் கொண்டிருக்கையில் அந்த அழகு பெத்த சைக்கிளில் தானே அவளைச் சுமந்து ஆஸ்பத்திரி போனார்.
அப்படி பார்த்தால் அது என்ன வெறுமனே இரும்படித்து செய்யப்பட்ட சாதாரண சைக்கிள் மட்டுமில்லை தானே?

சத்யா பத்தாம் வகுப்பு முடித்த கையோடு பஞ்சு மில்லுக்கு அனுப்பப்பட்டாள். அவளும் மேற்கொண்டு படிக்கணும் என வாய் திறக்கவில்லை. அப்பன் சீக்காளி, ஆத்தா வெகுளி, மழைக்கு கரையும் வீடு எல்லாம் நினைத்தாளோ என்னவோ. மேலே படிக்க வைக்கச் சொல்லி அவள் கேட்கவுமில்லை.இவரே படி என்றும் சொல்லவில்லை. நல்ல வடிவான முகம். தாட்டியமான உடம்பு. வெந்தய நிறம். வட்ட முகத்துக்கே அழகாய் மூக்கும் அதில் கிராம் பவுனில் செய்த மூக்குத்தியும். மாதம் ஆறாயிரம் ஊதியம். உண்ண உறங்க இடம் வேலையிடம் பார்த்துக்கொள்ளும். கொஞ்சம் பாரமில்லாமல் காலம் கழிக்கப்பட்டது. வீடு கூரை பிரித்து வேயப்பட்டது. மாதம் ஒரு தரம் மீனோ நண்டோ எடுத்து சாப்பிட வாய்த்தது. மூன்று மாத இடைவெளியில் ஒரு வாரம் ஊருக்கு வந்து போவாள்.

“எப்பா… ஏய்… கருப்பையா, மாடு மூனு நாளா அப்பவோ இப்பவோன்னு ஈத்துக்கு நிக்கி, ராவும் பகலுமா ஒரே சத்தம். என்ன எழவோ தெரியல, மசுரு மயம்புட்டு கன்டு போடத்தான் மாட்டிங்குது. என் வீட்டாளும்,போடுறது காளையங்கன்டா இருந்தா மனியங்குடி கருப்பு கோயிலுக்கே நேந்து விடுறதா வேண்டி காணிக்கை முடிஞ்சு போட்டுருக்கா. அந்த டாக்டக் கூப்பிட்டா மருந்துன்றான், மாத்திரைன்றான், ஊசின்றான். நமக்கு அதுக மேல எல்லாம் ஒரு பிடிப்பும் இல்ல. நீ ஒரு எட்டு வந்து பாத்தாக்கா நல்லா இருக்கும்யா. நல்லபடியா ஈத்தெடுத்து குடுத்துட்டீனா கூட ஒரு ரூவா கூட்டி தாரேன். கொஞ்சம் வெரசா வந்தாய்னா சௌரியமா இருக்கும்” தடியப்பன் அவதி அவதியாய் ஒப்பித்தார்.

“ஈத்து வலி எடுத்துக் கிடக்குன்னு இம்புட்டு சல்லிசா சொல்றியேப்பா. ஏறுப்பா மொத வண்டியில.” பின் கேரியரில் தடியப்பனை ஏற்றிக் கொண்டு பெடலை அழுத்தினார். பிடி வரப்பு போன்ற கால்களால் அவர் சைக்கிளை செலுத்த, அது கண்மாய்க் கரையில் சீறலுடன் பாய்ந்து கொண்டிருந்தது.

மாடு தொழுவத்திலிருந்து வெளியில் கட்டப்பட்டிருந்தது. விழி பிதுங்கலாய் மிரண்டு ஒரே இடத்தில் உலப்பிக் கொண்டிருந்தது. பிருஷ்டம் வழி அக்கி வழிந்தது.கால் செருப்பைக் கழற்றி கையிலெடுத்து தொழுவ ஓரமாகப் போட்டார். தோளில் கிடந்த சாரதி துண்டை தலையிலேற்றிக் கட்டினார். விட்டம் பார்த்து தெளிந்த மேகங்களினூடே கடவுளே இருப்பது போல கை கூப்பி வேண்டினார். மாடு கட்டிக்கிடந்த இடம் வைக்கோலும் சாண மூத்திரமும் குழைந்து நசநசப்பாகக் கிடந்தது. அருகில் எவர் போனாலும் மாடு சீறியது. பேற்று வலியாதலால் கோபமும் பயமும் பலியாக வரத்தான் செய்யும். மெல்ல எக்கி மூக்கணாங்கயிற்றைப் பிடித்தார். மாட்டை மெல்ல அடங்கி பெருமூச்செறிந்தபடி மெல்லத் தரையில் கிடத்தினார். தலையை வளைத்து பெருங்குரலெடுத்து ஓங்கலாய் மாடு கத்தியது. வயிற்று மேட்டை மெல்ல வருவி விட்டார். தடியப்பன் வீட்டம்மா மாட்டின் தலைமாட்டில் அமர்ந்து வாயில் சேலைத் தலைப்பை பந்தாய் சுருட்டி வைத்துக்கொண்டு விசும்பியபடியே அதன் நெற்றியையும் தாடையையும் வாஞ்சையாய் தடவிக்கொடுத்துக் கொண்டிருந்தாள். மாட்டின் விழி மேலேறிக் கொண்டிருந்தது. மூச்சு பலமாய் வீசியது. தடியப்பன் தலையிலடித்து கதற ஆரம்பித்துவிட்டிருந்தார்.

“ஏய்… அழுகைய நிறுத்துய்யா மொத. சீவனமா கெடக்க மாட்ட அழுதே கொன்னுப்புடுவே போலேயே. போப்பா… அழுகைய முழுங்கிட்டு போயி கங்கெடுத்து அதுல சாம்பிராணியோட அளவா வரமிளகா ரெண்டு பிச்சுப் போட்டு கொண்டா ஓடு. மிளகா நெறிக்கு மாடு கொஞ்சம் அசராம திடப்பா கிடக்கும். வெரசா போயி அத கொண்டா மொத.” இடுப்பு கைலியை வரித்து எடுத்து கண்களைத் துடைத்துக்கொண்டே வேகமாய் வீட்டுக்குள் ஓடினார்.

ஈயச் சாம்பிராணிக் கரண்டியில் மாட்டுக்கு சோறு பொங்கும் அடுப்பைக் கிளறி கங்கள்ளி சாம்பிராணி போட்டு ரெண்டோ மூன்றோ மிளகாய் கிள்ளிப்போட்டு அதை மாட்டின் தலையைச் சுற்றி காட்டினார். காரநெடி புகை அந்த இடத்தைச் சூழ்ந்து இருமலைக் கிளப்பியது. மாடு மெல்ல விழியை உருட்டி சுயநினைவுக்குத் திரும்பி சீராக மூச்சுவிடத் தொடங்கியது.

தொடர்ந்து விடாது வயிற்றை வருடிக் கொடுத்துக் கொண்டேயிருந்தார். சற்று நேரத்திற்குள் நன்கு வெந்த சேனைக் கிழங்குகளைப் போல இரண்டு இளங்குளம்புகள் பிருஷ்ட வழியே வெளியே துருத்தின. கருப்பையா இரண்டு கைகளிலும் விளக்கெண்ணெய் தடவி கன்றின் இரண்டு கால்களையும் பிடித்து பதுசாக இடைவிட்டு இடைவிட்டு இழுத்தார்.

“ இந்தாய்யா… தடியப்பா, அஞ்சாறு கூலம் அள்ளியாந்து இங்குன போடு. கன்டெ இழுத்து அதுல தான் கிடத்தனும்.”

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் உடைபட்ட கஞ்சிக்கலயம் போல பனிக்குட நீர் ஒழுக கன்றை இழுத்து கூலக் குவியலில் போட்டார். உடனேயே கன்றின் மூக்கிலும் கண்ணிலும் அப்பியிருந்த அக்கியை வழித்து எறிந்தார். அதன் காதில் ஊதி தெளிவாக்கினார். கன்று தொண்டையைக் கமறி, ம்ம்ம்மா… என்றது. ஒரு முழுப் பிரசவம். கலங்கி நின்ற கண்ணீர் திவலைகள் வழிந்தோட சிரிப்போ சிரிப்பாய் கன்றை வாரி தன் மடியில் போட்டுக்கொண்டாள் தடியப்பனின் வீட்டாள்.

“மனியங்குடியான் மாட்டக் காப்பாத்திட்டான். காளையங்கன்டு தான் போட்டுருக்கு. சொன்னாப்புல அவனுக்கே அத நேந்து விட்டுரும்மா நீயி…” சொல்லி நிறைய சந்தோசமாய் சிரித்தார். அவர் முகமெல்லாம் ரத்தமும் அக்கியும் தெறித்திருந்தது. தன் தலைக்கட்டை அவிழ்த்து முகம் துடைத்து, அதை மீண்டும் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டார். தன் இடுப்பில் இருந்த குட்டி சூரிக் கத்தியை எடுத்து கன்றின் கிழங்குக் குளம்பை சமமாய் வகுந்து விட்டார்.

“ இன்னும் சத்த நேரத்துக்கெல்லாம் மாடு இளங்கொடி போட்டுரும் பாத்துக்க. மாட்டத் திங்க விட்டுறாம ஒழுங்கா சாக்குல முடிஞ்சு முக்கு ஆலமரத்துல கட்டிப்புடு. நல்லா ஒசக்க ஏத்திக் கட்டனும். இல்லாட்டி இந்த நாய்ப்பண்ணைக தின்னுபுடும். அப்புறம் கன்டுக்குக் கூட பால் வடியாது சொல்லிட்டேன்.” பிசுபிசுப்பாக ரத்தக் கறையோடு இருந்த கையில் துட்டைத் திணித்தார் தடியப்பன்.

“காசு கீசு குடுக்கனும்னு நினைப்பே வேணாம் பாத்துக்க. மாடெல்லாம் மனுஷ ஆளா, நான் பெத்த மக்களா நினைச்சுகிட்டு தான் இதுகல எல்லாம் செய்றேன். அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். சினை மாட்டை கருதுல மேயவிட்டதுனால தான் இம்புட்டு தொல்லை. மாட்டுக்கு பனிப்புல்லு அறுத்துப் போடு, அளவா வீட்டுக்கு கரந்துக்கிட்டு கன்டுக்கு வயிறு நிறைய குடிக்க விடு. தவிடு, பருத்திக் கொட்டை, புண்ணாக்கு அப்பப்ப நீச்சத்தண்ணியில கலந்துவிடனும் என்ன? விளங்குச்சுல்ல?. அப்பச் சரி நான் வாரேனப்பா.” சைக்கிள் ஸ்டாண்ட் நீக்கி, ரெண்டு கிந்து கிந்தி சீட்டில் ஏறிக்கொண்டார். கேரியரில் கட்டிக் கிடந்த பால் டவராக்களின் சப்தத்தோடு கரையேறி வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தார்.

கருப்பையாவின் வீட்டுக்கான பாதை சாலையிலிருந்து ரெண்டு வீடுகளின் வாசல் வழியாகத்தான் விரிந்து போகும். நல்ல மிடுக்கான வீடுகள். திடமான கான்கிரீட் வீடுகள். மச்செடுத்து கட்டப்பட்டவை. நிலம்புலம்,காசு,வண்டி என அடுக்கடுக்காய் கணக்கில் வரும் கனமான செல்வம் படைத்தவர்கள் அந்த வீட்டாட்கள். மாடும் கன்றும் அவர்கள் வீட்டு வழியே போவதை கம்பளிப்பூச்சி ஊர்வதைப் போல கொனட்டலான முகச் சுளிப்புடன் பார்த்துக்கொண்டிருப்பார்கள். மாடு கன்று சாணம் அவர்களது வீடுகளருகே சாணம் போடுவதையும் மூத்திரங்களிப்பதையும் தினசரி குறை கூறலில் ஒப்பித்துக் கொண்டேயிருப்பார்கள். அந்தப் பாதை பொது. இடம் புறம்போக்கு. இந்த ஐந்தாறு வருடங்களில் ஒரு கருதறுப்பு எந்திரம் சாகவாசமாய் போகும்படியானதாக இருந்த பாங்கிலிருந்து குறுக்கப்பட்டு ஒற்றையடிப் பாதையளவாய் ஒடுங்கிப் போய்விட்டிருந்தது. மச்சு வீட்டுக்காரர்கள் இருவருக்கும் பேச்சற்று இருந்தாலும் இந்த பாதையழிப்புக்கு பேசிக்கொள்ளாமலே சமாதானமாய் சமபங்கிட்டு தங்கள் வெளிகளுக்குள் ஒளித்துக் கொண்டார்கள். இரண்டொருமுறை சத்தம் போட்ட கருப்பையாவுக்கு ஆறுதலான பதிலே கிடைத்தபாடில்லை. கோர்ட்டோ கேசோ அவர் அறியாதவர். பாவம், முதுகு உப்பு வெடிக்க காடு கரை அலைபவருக்கு போலிசென்றால் ஒரு பயம். கேஸ் என்றாலே ஒரு நடுக்கம். அவரும் என்ன செய்வார். நடையை சுருக்கிக் கொண்டார். மாடுகளை ஒற்றை வரிசையில் ஓட்டிச்செல்ல பழகிக் கொண்டார்.

மறு ஆண்டு புரட்டாசி, கனத்த மழையையும் காட்டுங்காற்றையும் விசிறியடித்துக் கொண்டிருந்தது. அம்மியில் மஞ்சள் தட்டும் சத்தத்திலேயே அதிரும் சுவர்கள், ஆகிருதி காலநிலைக்கு மட்டுப்பட்டுவிட்டது. விரிசல் இன்னும் அதிகம் வளர்ந்தது. வெயிலோ மழையோ தயவு தாட்சண்யமின்றி வீட்டுள்ளே சமயங்களில் குதித்தது. பத்து வருடங்களுக்கு முன்னே கப்பரை பிரித்து வேய்ந்தது. அதுவும் பரிந்து கொண்டு வரத் துவங்கியிருந்தது. காசில்லை. கடன் வாங்கவும் நாதியில்லை. அடகு வைக்கலாமென்றால் வீட்டில் குழுமைப் பானையில் விதை நெல்லைத் தவிர்த்து விற்றுப் பொருளாக்க ஏதுமில்லை. சத்யாவின் குட்டியூண்டு மூக்குத்தி செலவழிக்கக் கூடாத செல்வமாயிற்றே. அதை தீண்டவும் கூடாது. எப்படி மனம் ஒப்பும்.ரெண்டு தலைமுறை வெள்ளாமைக் காடான கார்ச்செய் விலைக்கு தள்ளப்பட்டது. நிலம் கரைந்து பணமாகி, பணம் பொருளாகி வீட்டுக்கு கொஞ்சம் திடம் சேர்த்தது.

காளியம்மாவுக்கு இளைப்பு நோய் வந்தது முதல் கருப்பையா சவலைப் பிள்ளையாய் என்ன செய்ய எனத் தெரியாமல் திணறிப்போக ஆரம்பித்தார். மாடு கன்டைக் கூட பார்த்துக் கொள்ளும் நிதானத்தை இழந்தார். மாட்டுக் கூடாரத்தில் கானை வர, மாடுகள் ஒன்றொன்றாக எண்ணில் கழியத் தொடங்கின. கண் முன்னே சாகும் பிரியங்களை காணச் சகியாமல், குறைந்த விலைக்கே அத்தனையையும் வண்டியேற்றினார். கங்கு நொறுங்கும் சப்தமாய் உள்ளே என்னமோ உடைவது போன்றிருந்தது அவருக்கு. எல்லாம் முடித்தாகிவிட்டபின், சவக்களை வந்து குடிகொண்ட தொழுவத்தை வெறித்து வெறித்துப் பார்த்தபடியே எவ்வளவு நேரம் நின்றிருப்பார் எனத் தெரியாது. மாடும் கன்றும் உலப்பிய தடங்களை பூவைத் தொடும் லயத்தோடு தொட்டும் தொடாமலும் வருடி வருடி வெக்கை நீர் உதிர, பிடிகயிற்றை கட்டிக் கொண்டு துடித்து அழுதார். அவருக்கு அப்போது ஆறுதல்கள் ஏதும் தேவைப்படவில்லை. முடிந்தமட்டும் அழுது தீர்க்கவே நினைத்துக்கொண்டார்.

முன்னர் போல ஆள் நடமாட்டம் அதிகமில்லாமலே ஆகிப்போனார் கருப்பையா. அப்படி வெளியே போனாலும், நேமத்து முக்குக் கடைக்கு ஒரு சாயா சாப்பிடப் போவதோடு சரி. யாருடனும் விவரணையான பேச்சேயில்லை. காளியம்மாவும் அந்த வட்டத்திற்குள் தள்ளப்பட்டாள். சாப்பாடு போட்டுவைத்துவிட்டு கூப்பிட்டால், குனிந்த தலை நிமிராமல் சாப்பிடுவார். சிலசமயம் பிடி பருக்கைகளை பொறுக்கித் தின்றுவிட்டு எழுந்துவிடுவார். இராமுச்சூடும் கசாலையில் தான் உறக்கம்..மழை பெய்தாலும்,கொசுக் கடி பியத்தாலும், குளிர் அனத்தினாலும். ஊருக்குள் ஏவர் மாட்டுக்கு நோவு வந்தாலும் கருப்பையா இப்பொது வைத்தியத்திற்குப் போவதில்லை. நாட்செல்லச் செல்ல அவர்களும் அவரை அழைப்பதை நிறுத்திக் கொண்டார்கள். ஆஸ்பத்திரி மருந்துகளுக்கும் மாத்திரைகளுக்கும் தொழுவத்துப் பிள்ளைகளைப் பழக்கினார்கள்.

“பித்துக்குளி ஆகிட்டான்டா இந்தாளு. ஆளு எம்புட்டு சூட்டிப்பான மனுஷன். இந்த ஆறு மாத்தையாவே அவரு கூறு சரியில்லை. ராத்திரிலாம் டவீர்னு… கத்தி ஒப்பு வைக்கிறாராம். பொண்டாட்டியைப் போட்டு தும்புக் கவுத்தாலே அடி வெளுக்குறாராம். என்னமோ… பாவம்… நல்ல ஆளு. மண்டை முத்தி இப்படி திரிய விட்டுருச்சு நேரமும் விதியும்.” ஊரே கருப்பையாவை பைத்தியமெனும் போர்வைக்குள் அவரறியாமலே நெட்டித் தள்ளியது. அவருக்கு அது குறித்த எந்த கவலையும் இருந்ததாகத் தெரியவில்லை. அவருக்கு அது ஒரு பொருட்டுமில்லை. காளியம்மாவுக்கும் உடல்நிலை மோசமாகிக் கொண்டு போனது. அவளும் மனம் விட்டுப் போனாள். என்ன மிச்சம்?. பிள்ளை போச்சு.வீட்டாம்பள விட்டேத்தியா அலையறான். பொட்டு நிம்மதியில்லாத பொழப்பு என்ன பொழப்பு?.

நல்ல மழை நாளொன்றில் காளியம்மாவின் அஸ்தியும் அந்த வீட்டுச் சுவரோடு கரைந்து போனது. காளியம்மாவும் வீடும் ஒரு ராவில் தடமற்று போனார்கள். கொஞ்ச நஞ்ச நாளில் கருப்பையாவும் ஊரில் தங்கவில்லை. எங்கே போனார் என்றும், என்ன ஆனார் என்றும் யாரும் அறிந்திரவில்லை. வெறித்த பார்வையும் அழுக்கு உடுப்புமாய் சூராணம் ரோடுகளில் கருப்பையா அலைந்து திரிவதாக சிலர் சொல்லிக் கொண்டார்கள். பொய்யாகவோ புறமாகவோ ஊர் சொன்ன கோட்டை அவரே கடந்து போய்விட்டிருந்தார்.. கருப்பையாவும் இப்போது ஒரு பைத்தியக்காரன்.

” நல்ல செனை மாடா வாங்கனும். நாம பால் யாவாரம் பண்ணாதனால ஊரே நல்ல காப்பித்தண்ணி அத்துல்லா போயில்ல கிடக்கு”

அவர் இப்பதெல்லாம் யார் பேசினாலும் திருப்பிப் பேசும் உரையாடல் சுருக்கம்.

“காளையார்கோயிலு மாட்டுத் தாவணியில நல்ல காரிக் கிடேரி ஒன்னுக்கு அச்சாரம் போட்டு வச்சுருக்கேன். ஒரு ஆறேழு மாத்தைக்குள்ள கன்டு ஈண்டுப்புடும். பழைய மாறி பால் யாவாரம் பண்ணப் போறேன், மாப்ளே… இன்னும் நாப்பது நாள்ல ரூவாயும் தாரேன்னு சொல்லிப்புட்டென். ஒங்கிட்ட தான் கேக்கணும்டே கிடைந்தேன். ஒரு ஓர்ரூவா பணமாத் தந்தாய்னா, நல்ல சவுரியமா இருக்குனு பாத்தேன். என்ன மாப்ளே. ரோசனை பண்ணி சொல்லுங்க.”

சரியான அன்ன ஆகாரம் அற்று அலைந்தவர் மெலிந்து ஒரே இடத்தில் படுக்கையாகிப் போனார். ஊர் ஆட்கள் ஊர் மத்தியிலுள்ளப் பொதுத் தொழுவில் அவரைக் கிடத்தி, சின்ன அளவில் வைத்தியம் பார்த்தனர். எதுவும் பலித்தபாடில்லை. அரைகுறையாய் கரைந்து நின்ற அவர் வீட்டு ஒற்றைக் குட்டிச்சுவரும் அன்றிரவு மடீர்… என விழுந்து நொறுங்கிப் போனது. மறுநாள் கருப்பையா கீற்றுப் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தார். கால்மாட்டில் பக்காப்படி நிறைய நெல் அள்ளி வெற்றிலை குத்தியிருந்தார்கள். தலைமாட்டில் ஊதுபத்தி சுருள் சுருளாய் புகைந்து எரிந்துகொண்டிருந்தது. அமைதியாய் இருந்த கூட்டம் சட்டென சலசலத்தது.

“ஆரோ மாட்டு யாவாரியாம். கருப்பையாவைத் தேடி வந்துருக்காராம்.”

“என்னவாம் யா”

“அதொன்னும் இல்லப்பா. இந்தா நம்ம கருப்பையா ஒரு நாப்பது நா முன்ன, சந்தைக்கு வந்து மாடொன்னு வாங்கிக்கிறதாச் சொல்லி அச்சாரம் போட்டுட்டு போனாப்புல. அதான் நாளாகிப் போச்சே, சரி ஒரு எட்டு பாத்து என்ன ஏதுன்னு பாத்துப்புட்டு வரலாம்னு வந்தேன். பாத்தாக்கா…”

சொல்லிக்கொண்டே கருப்பையாவின் துணி சுற்றப்பட்ட மெலிந்த உடலைப் பார்த்தார். கருப்பையாவின் மடித்த கைகளுக்குள் திணித்து வைக்கப்பட்டிருந்த மாட்டுத் தும்புக் கயிற்றை அவரது கைகள் மேலும் இறுக்கமாய் பிடித்துக் கொள்வது போல் இருந்தது அவருக்கு. மேந்திசை போர்வைக்குள் விழுந்து புதைந்தது பொழுது. அந்த ஒரு நாள் மாலைக்குள் கருப்பையாவும் அவர் சந்ததியும் இருந்த தடமே இல்லாது மண் மூடப்பட்டது. புதைத்த இடத்தில் கருவேலங்குச்சி அடையாளத்துக்கு நடப்பட்டது. சத்யா உறங்கும் அதே இடுகாடு.

அவரது வீடிருந்த இடமும் அண்டை வீட்டு வேலிகளுக்குள் சுருட்டப்பட்டுவிடும். அவரது மாட்டுத் தொழுவம் மட்டும் நுடமாய் ஓடிந்த கட்டை கம்புகளோடு நின்றுகொண்டிருக்கும். காலப் போக்கில் கருவேலம் மண்டிப்போய் அரவமில்லாமல் ஆகிப்போகும். அன்றைய இரவின் சாமத்தில், கருப்பையா வீட்டுத் தொழுவத்திலிருந்து அடையாளமில்லாத ஒப்பாரிச் சத்தமும் பசிக்கு அலறும் கன்றின் கதறலும் அலையாய் எழுந்து ஊரை நிரப்பிக் கொண்டிருந்தன.

யாருளர் என்றில்லை

 

ஶ்ரீரஞ்சனி

 

 

 

“கண்மணி நில்லு காரணம் சொல்லு, காதல்கிளியே கோபமா….”

“சந்திரசேகரின் விருப்பமாக இதோ ஊமை விழிகள் திரைப்படப்பாடல்,” அறிவிப்பாளர் பின்புலத்தில் பேசினார். சிவரஞ்சனி ராகத்தில் அமைந்த பாடல்கள் எல்லாமே அவனுக்குப் பிடித்தவைதான். சேர்ந்துபாடும்படி அவை அவனைத் தூண்டுவதுண்டு. அதுவும் சிவரஞ்சனியில் சுரேந்தரின் குரல் குழைந்து ஒலிக்கும்போது அதற்குத் தனிச்சிறப்பு வந்துவிடுகிறதென அவன் பரவசப்படுவதுண்டு. ஆனால், அந்தப் பாடல் இன்று அவனைக்  கண்கலங்கச் செய்தது. உடனடியாக ரேடியோவை நிறுத்தினான். “ஆம்பிளைப் பிள்ளையடா நீ! ஒரு நாளும் நீ அழக்கூடாது!” அப்படிச் சொல்லிச்சொல்லித்தான் அம்மம்மா அவனை வளர்த்திருந்தார். ஆனால், கையறுநிலையில் இருக்கும்போது அழுவதைத்தவிர என்னதான் செய்யமுடியும் எனத் தனக்காகத் தானே அவன் பரிதாபப்பட்டான்.

‘பிடிகேல்லை, வீட்டை விட்டிட்டுப் போயிடு, எண்டெல்லாம் அவள் இம்சித்தபோது, ஏன் என்னைப் பிடிக்கேல்லை எண்டு சொல்லெண்டுதானே நானும் கேட்டனான். என்ர பிடியிலையிருந்து திமிறிக்கொண்டு போகவெளிக்கிட்டவளைப் பதிலைச் சொல்லிப்போட்டுப் போவெண்டு மறிச்சன். அது கிரிமினல் குற்றமாம். சத்தியமாய் எனக்கு விளங்கேல்லை. ரண்டு வருஷமா ஒண்டாயிருந்திட்டுப் பிடிக்கேல்லைப் போ எண்டால், என்ன காரணத்துக்காண்டி அப்பிடிச் சொல்லுறாள் எண்டு நான் கேட்கக்கூடாதோ?  போயிருக்கவேணுமாம்… அதெப்படிப் போறது? அந்தக் கதாநாயகி அவனில இரங்கி திரும்ப அவனிட்டை வாறாள். இவள் என்னடாவெண்டால் பொலிசைக் கூப்பிடுறாள்.’ அவனின் மனம் மிகவும் வலித்தது.

காரிலிருந்து இறங்கி நடந்தபோது, உடல்நிறை பல மடங்காக அதிகரித்து விட்டதுபோல அவனின் கால்கள் தள்ளாடின. ‘இண்டைக்கு டிசலுசன் செய்யோணும்’ என்ற நினைப்பு வேலையிலிருந்த அவனின் ஆர்வமின்மை மேலும் அதிகரித்தது. டிசலுசன் செய்யும் உபகரணத்துக்குப் போட்டியிருக்கும், நல்ல உபகரணம் ஒன்றை எடுக்கவேண்டுமே என்ற  துடிப்புடன் வழமைபோல் அவனால் ஓடமுடியவில்லை. அவனின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த வெள்ளைக்  கோர்ட்டை ஏனோதானோவென எடுத்துக் கொளுவிக்கொண்டு பரிசோதனைச்சாலைக்குள் நுழைந்தான். அவனின் மனமோ நடந்துமுடிந்தவற்றையே சுற்றிச்சுற்றிச் சுழன்றுகொண்டிருந்தது.

எல்லோரும் மிகவும் மும்மரமாக தங்கள் தங்கள் வேலைகளில் மூழ்கிப்போயிருந்தார்கள்.  தன்னுடைய பரிசோதனைக்குரிய செய்முறை ஒழுங்குகளைப் பற்றிக் கூறும் ஆவணத்தை அச்சிலெடுத்தவன் அதனைக் கிரகிப்பதற்கு முயற்சித்தான். ஆனால், அவனின் மனதில் எதுவும் பதிவதாக இல்லை, மீளமீள அவற்றை அவன் வாசிக்க வேண்டியிருந்தது. ‘இந்தச் செய்முறை ஒழுங்குகளைப்போல, உறவுகளை எப்பிடிக் கையாளுறதெண்டும் அறிவுறுத்தல்கள் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்’ ஆற்றாமையில் அவனின் மனம் குமைந்தது.

மெற்போர்மின் குளிசைகள் உடலில் கரையுமளவைப் பரிசோதிப்பதற்காக வயிற்றுக்குள் இருக்கும் கரைசலை ஒத்த கரைசல் ஒன்றைத் தயாரித்து, அந்தக் குளிசைகள் அதில் கரையுமளவைப் பரிசோதிக்கும் பரிசோதனைதான் அது. லதா அவனிடமிருந்து விலகுவதையும், குளிசைகளைச் சிதைத்து அவன் பரிசோதிக்கப் போவதையும் ஏனோ அவனின் மனம் முடிச்சுப்போட்டுப் பார்த்தது. தேவைப்படும் அமிலமோ, காரமோ தண்ணீரில் நன்கு கரைவதற்காகப் பரிசோதனைக் குடுவைகளை அதிரும் உபகரணமொன்றில் வைத்துத் கலக்குபவர்கள், கரைசல்களின் pHகளைச் சரிபார்ப்பவர்கள், கரைசலிலிருக்கும் வாயுக்களை அகற்றுவதற்காக சொனிக்கேசன் செய்பவர்கள் என அந்தப் பரிசோதனைச்சாலை அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. அவனுக்குத் தேவையான கரைசலை உருவாக்குவதற்காக பெரிய வாளி ஒன்றில் தண்ணீரை நிரப்பிக் கொண்டிருந்தபோது, “உங்கள் எல்லாரையும் பாக்கேக்கே, கீரிமலைத் தீர்த்தத் திருவிழாதான் எனக்கு ஞாபகம் வருகுது,” என அந்தக் கொம்பனியில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த யமுனா சொல்லிச்சிரித்தாள். அந்த நாட்டிலேயே இருந்திருந்தால் எவ்வளவு நல்லாயிருந்திருக்குமென அவனின் மனம் ஏங்கியது.

பரிசோதனையின்படி அந்தக் குளிசைகள் எவ்வளவு கரைந்துள்ளன என்பதைப் பரீட்சித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் அவன். “நான் பேசநினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்,” என அவனுக்குப் பக்கத்திலிருந்த சங்கர் முணுமுணுத்துக் கொண்டிருந்தான். குறிப்பிட்ட கரைதிறனைப் பெறுபேறுகள் காட்டாவிடில் செய்யப்பட்ட பரிசோதனையில் வழுக்கள் இருந்தன என்பதுதான் முடிவாகவிருக்கும். பின்னர், மேற்பார்வையாளரிடமிருந்து அது தொடர்பான எச்சரிக்கை கிடைக்கும், பரிசோதனையை மீளச் செய்யவேண்டியிருக்கும். அந்தப் பொருளில்தான் எதிர்பார்க்கப்படும் பெறுபேறு திரையில் தெரியவேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் சங்கர் பகிடியாகப் பாடிக்கொண்டிருந்தான். ‘உறவெண்டால் அப்பிடியெல்லோ இருக்கோணும், வெளிநாட்டுக் கலாசாரத்தில வளந்த அவளோடை உறவுவைச்சதுதான் பிழை’ என எண்ணி அவனை மனம் நோகச் செய்தது அந்தப் பாடல்.

அவனின் பரிசோதனைப் பெறுபேறுகள் இருக்கவேண்டிய வரையறைகளுக்குள் இருக்கவில்லை. ‘என்ன தலையிடி இது, இண்டைக்கு வீட்டுக்கு நேரத்தோடை போகேலாது, பட்ட காலே படும் எண்டு சும்மாவா சொல்லியிருக்கினம்’ – அவனின் மனம் முழுவதும் சலிப்புக் குடிகொண்டது. ஒரே ரென்சனாக இருந்தது. நிகழ்ந்ததைப் பற்றி மேற்பார்வையாளரிடம் கூறிவிட்டு திரும்பவும் அதே பரிசோதனையைச் செய்ய ஆரம்பித்தவனுக்குக் களைப்பாக இருந்தது. கரைசலின் வெப்பநிலை குறித்த நிலையை அடைவதற்கிடையில் ஏதாவது சாப்பிட்டுவிட்டு வருவோமென கன்ரீனை நோக்கிவிரைந்தபோது அம்மம்மாவின் அழைப்பு வந்தது. அவவிடம் லதாவைப் பற்றிச் சொல்லி முட்டுத்தீர்க்க வேண்டுமென அவனின் மனம் விழைந்தாலும் அப்படி மனம்திறந்து பேச அவனால் முடியவில்லை.

ஏதோ சாப்பிட வேண்டுமென்பதற்காகச் சாப்பிட்டிட்டுவந்து, திரும்பவும் அந்தப் பரிசோதனையைத் தொடர்ந்தான். அவனின் சேர்ட் பொக்கற்றுக்குள் இருந்த கைத்தொலைபேசி திரும்பத்திரும்ப அதிர்ந்துகொண்டேயிருந்தது. ஆனால், யார் அழைக்கிறார்கள் என்றோ, ஏன் அழைக்கிறார்கள் என்றோ அக்கறைப்பட அவனால் முடியவில்லை. கடைசியில் பெறுபேறுகள் எதிர்பார்க்கப்பட்ட வரையறைக்குள் வந்திருந்தன. வீட்டுக்குப்போய் ஒரு பியர் குடித்துவிட்டுப் படுத்திட வேண்டுமென நினைத்தபடி வேலையிடத்தைவிட்டு அவன் வெளியேறினான்.

அடுத்தநாள் காலையில் எழுந்து தொலைபேசியைப் பார்த்தபோதே அவனுக்காகக் குரலஞ்சல் காத்திருப்பது தெரியவந்தது. நெருங்கி வாழ்பவர்களுடனான வன்முறையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நிகழும் தொலைபேசி மூலமான ஆறுவாரக் கவுன்சலிங் வருகிற புதன் கிழமையிலிருந்து ஆரம்பமாக இருப்பதாக அந்தக் குரலஞ்சல் கூறியது.

X     X     X

மூன்று வருடங்களுக்கு முன்னர் ரொறன்ரோவுக்குப் புலம்பெயர்ந்திருந்தபோது மாமா வீட்டில்தான் அவன் தங்கியிருந்தான். கோடைகாலத்தில் மாகாணத்துக்குச் சொந்தமான பார்க் ஒன்றில் கூடாரமிட்டுத் தங்குவது மாமா வீட்டுக்காரரின் வருடாந்தப் பொழுதுபோக்காக இருந்தது. அந்த வருடம் கனடா தினத்துடன் சேர்ந்துவந்திருந்த நீண்ட வாரவிடுமுறையின்போது, அவர்களுடன் சேர்ந்து அவனும் அங்கு போயிருந்தான். மாமியின் ஊரான அச்சுவேலியைப்   பிறப்பிடமாகக் கொண்ட இருபது குடும்பத்தினர் ஒன்றிணைந்திருந்து களிக்கும் இடம்தான் அது. அவனின் ஊர் கொக்குவில் ஆதலால் மாமா குடும்பத்தவரைவிட அவனுக்கு வேறு எவரையும் அங்கு தெரிந்திருக்கவில்லை. அவன் வயதுக்காரரும் அங்கிருக்கவில்லை. அதனால் மாமாவின் வயதுக்காரருடன் உதைபந்தாட்டம் விளையாடுவதைத்தவிர வேறெதுவும் அவனுக்கு ஆர்வமூட்டுவதாக இருக்கவில்லை. பொழுதுசரியும் நேரம் மழை வேறு கொட்டிக்கொண்டிருந்தது, கூடாரத்தில் அது எழுப்பிய ஒலியை ரசித்தபடி, உறங்குவதற்கான பை போன்ற ஒன்றினுள் படுத்திருந்தவன் அப்படியே நித்திரையாகிவிட்டான். அவனின் நீண்ட நித்திரையைச் சூரிய உதயம் பார்க்கவென அவன் வைத்திருந்த அலாரம் குழப்பியது. வேகமாக எழுந்து அந்த ஏரிக்கரைக்குச் சென்றவன், ஏற்கனவே அங்கு ஒரு இளம் பெண் வந்திருப்பதைக் கண்டான். ஆனால், சூரிய உதயத்தை ரசிக்க வந்தவள்போல அவள் இருக்கவில்லை. எங்கோ வெறிச்சுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இருட்டுச் சற்று விலக வானத்திலும் ஏரியிலும் வெவ்வேறு நிறங்கள் வர்ணஜாலம் காட்டத் தொடங்கின. அவனுக்கு உற்சாகம் பிறந்தது. அவளுடனும் அது பற்றிப் பேசவேண்டும் போலிருந்தது. “ஓ, மை கோட்! எவ்வளவு அழகாயிருக்கு, என்ன? இதைக் கமெராவுக்குள் அடக்கேலாது,” அவளைப் பார்த்தபடி தன் களிப்பைப் பிரஸ்தாபித்தான்.

“ம்ம்,” பற்றற்ற பதில் அவளிடமிருந்து வந்தது.

“இயற்கையை ரசிக்கிறது உங்களுக்குப் பிடிக்குமா?”

“எனக்கு இதுகளிலை ஈடுபாட்டில்லை.”

“இலங்கையில இருக்கேக்கை இதுகள் ஒண்டும் பெரிசாத் தெரியேல்லை, ஆனா, இப்ப சூரியன் உதிக்கிறதைப் பாக்கிறது, அலையடிக்கிற சத்தத்தைக் கேட்கிறது, நட்சத்திரங்களை எண்ணுறது … எல்லாம் சொர்க்கத்தில இருக்கிறமாதிரிச் சந்தோஷத்தைத் தருது.”

“ம்ம், சொர்க்கம் எப்பிடியிருக்குமெண்டு உங்களுக்குத் தெரியுமோ?”

அவன் சிரித்தான். “நான் என்ன சொல்லுறனெண்டால்…”

“சரி, நான் போகப்போறன்,” அவள் நடக்க ஆரம்பித்தாள். அங்கிருந்து போவதற்கு அவனுக்கு விருப்பமில்லை என்றபோதும் அவளுடன் சேர்ந்து நடப்பதற்காக, ‘நானும் வருகிறேன்,’ என்றபடி அவளைப் பின்தொடர்ந்தான்.

 

சற்று நேரத்தின்பின், காலைச் சாப்பாட்டுக்கென ஒரு அன்ரி ரொட்டி சுட்டார். அப்போது அங்கிருந்த கதிரையொன்றில் ஒரு புத்தகத்துடன் குந்தியிருந்த அவளைக் கண்டதும் அவளும் தங்களின் குழுவினர்தான் என்பது அவனுக்குப் புரிந்தது. பின்னர், கதையோடை கதையாக அவளின் குடும்பம் முதல்நாள் இரவுதான் வந்தது என்றும், அவளின் சினேகிதி அண்மையில் தற்கொலை செய்ததால் அவள் மிகவும் குழம்பிப்போய் இருக்கிறாள் என்றும் மாமியிடமிருந்து அறிந்தான். மதியம் ஏரியில் குளித்துவிட்டு வந்தபோதும் அவள் அதேயிடத்தில் இருந்தாள். அவனுக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஒரு கதிரையை இழுத்துக்கொண்டு போய் அவளருகில் இருந்தவன், “இருக்கலாமோ?” என அவளைக் கேட்டான்.

“இருந்துபோட்டுத்தான் இருக்கலாமோ எண்டு கேட்கிறியள்.”

“அப்ப எழும்பட்டா?” அவன் கதிரையை விட்டெழுந்தான்.

“பரவாயில்லை இருங்கோ. ஆனா, பேச்சுத் துணைக்கு நான் சரிவரமாட்டன்,” என்றாள் அவள் அசட்டையாக. தன்னுடைய நடத்தைக்கு விளக்கம் சொல்வதுபோல, “என்ரை வயசிலை இங்கை ஒருத்தருமில்லை, அதுதான் …” என்றான் அவன்.

“பொதுவா இங்கை இளம் ஆக்கள் வாறேல்லைத்தான், ஒவ்வொருத்தரின்ரை ஆர்வங்களும் வித்தியாசம்தானே.”

“எங்கை வேலை செய்யிறீங்க?”

“அதெப்படி நான் வேலைசெய்யிறன் எண்டு நீங்க அனுமானிச்சியள்?”

“ஓ, சொறி, படிக்கிறீங்களா?”

“ரண்டு கிழமைக்கு முதல்தான் வேலையிலை சேந்திருக்கிறன்.”

“ஓ, வாழ்த்துக்கள், நான் கனடாவுக்கு வந்து எட்டு மாசமாச்சு, பொருத்தமான வேலை ஒண்டும் இன்னும் கிடைக்கேல்லை.”

“என்ன வேலை தேடுறீங்க?”

“சயன்ஸ் டிகிறி இருக்கு, படிச்சதுக்குத் தக்கதா ஏதாவது ஒரு வேலை கிடைச்சால் நல்லதெனப் பாக்கிறன்.”  நீங்க என்ன வேலைசெய்யிறீங்கள் என அவளிடம் கேட்க அவனின் வாய் உந்தியது. ஆனால் அவள் பதில் சொல்வாளோ இல்லையோ என்ற தயக்கம் இருந்ததால் அவன் கேட்கவில்லை.

 

இரவு வானம் முழுவதும் நட்சத்திரங்களால் நிரம்பிவழிந்தது. அண்ணாந்து பார்த்துப் பார்த்து அவனுக்குக் கழுத்து வலித்தது. “நுளம்பு கடிக்கேல்லையா?”  கழிப்பறைக்குப் போட்டுவந்த அவள்தான் கேட்டாள்.

அவள் அப்படித் தானாகக் கதைத்ததில் அவனுக்குச் சந்தோஷமாக இருந்தது.

“இந்த நட்சத்திரங்களைப் பாக்கிறதுக்கு எதையும் தாங்கலாமெண்டிருக்கு.” அவன் சிரித்தான். “இதில வெள்ளி எதெண்டு உங்களுக்குத் தெரியுமோ?”

இது வீனஸ், அது சற்ரேர்ன், அதிலை தெரியிறது பிக் டிப்பர் … என ஒவ்வொன்றாக அவள் பெயரிட அவன் அதை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அடுத்த நாள் காலையில் சூரிய உதயம் பார்க்கசென்றபோது அவள் வரமாட்டாளா என அவனின் மனம் தேடியது. அவள் வராததில் அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.

பகல் ஏரியில் நீந்தச் சென்றபோது, அவளின் அம்மா அவளைப் பலவந்தமாகக் கூட்டிக்கொண்டு வந்திருந்தார். “இரவைக்கும் நட்சத்திரங்களை அடையாளம் காட்டுவீங்களா?” அவன் கேட்டான். அவள் புன்னகைத்தாள். ஆனால், அன்றிரவு மேகக்கூட்டங்கள் அதிகமாக இருந்தமையால் நட்சத்திரங்கள் அதிகம் தெரியவில்லை. நெருப்பைக் கொளுத்திப்போட்டு அந்தக் கதகதப்பில் சுற்றவர இருந்து எல்லோரும் கதைத்துக்கொண்டிருந்தனர். சிறிய குச்சி ஒன்றில் மாஸ்மலோவைக் குத்தியெடுத்துப் பின் அதை நெருப்பில் வாட்டிப்போட்டு அவளிடம் அவன் கொடுத்தான். “நன்றி. ஆனா, நானே செய்யலாம்,” எனக் கூறியபடி அவள் எழுந்து நெருப்பருகே வந்தாள். தலைமயிரை அள்ளி உச்சியில் கொண்டையாகப் போட்டிருந்தவளின் ஒரேயொரு மயிர்க்கற்றை மட்டும் அவளின் நெற்றியில் அழகாக ஊசலாடிக்கொண்டிருந்தது. தீச்சுவாலையில் அவளின் முகம் அப்பழுக்கில்லாமல் ஒளிர்ந்தது, அவனுக்கு அவள் மிக அழகாகத் தெரிந்தாள்.

“என்ரை சினேகிதி ஒருத்தி மருந்துக் குளிசைகள் தயாரிக்கிற கொம்பனி ஒன்றில வேலைசெய்யிறாள். உங்களுக்கு விருப்பமெண்டால் அவளுக்கூடாக உங்கடை ரெசிமியை அங்கை அனுப்பிப்பாக்கலாம்.”

“ஓ, மிக்க நன்றி! அப்படிச் செய்தீங்க எண்டால் மெத்தப் பெரிய உபகாரமாயிருக்கும். உங்கடை போன் நம்பரைத் தருவீங்களோ?”

“என்ரை ஈமெயில் அட்ரஸ் தாறன், அதுக்கு அதை அனுப்பிவிடுங்கோ.”

தன்னுடைய போனில் அவன் அதைக் குறித்துக்கொண்டான். அடுத்த நாள் அங்கிருந்து விலகும்போது மீண்டும் அவளுக்கு அவன் நன்றி சொன்னான்.

அவளின் உதவியால் அவனுக்கு வேலை கிடைத்திருந்தது. ‘அதுக்கு நன்றியாகவேனும் ஒரு கோப்பி வாங்கித் தரலாமா?” என அவளிடம் அவன் ஈமெயிலில் கேட்டிருந்தான். முடிவில் அவர்கள் இருவரும் ரிம் ஹோட்டன் ஒன்றில் சந்தித்தனர். அப்போது அவளின் வேலை, அவனின் வேலை என இயல்பாகப் பேசிக்கொண்டனர். அதன்பின்னர் ஒரு திருமண விழாவில், ஒரு பிறந்தநாள் விழாவில் என அவர்களின் சந்திப்புகள் தொடர்ந்தன. அவளிடம் தான் நெருங்குவதை அவன் உணர்ந்தான்.

ஒரு நாள் தற்செயலாக இருவரும் ஸ்காபோரோ ரவுண் சென்ரறில் சந்தித்துக்கொண்டனர்.  “கோப்பி குடிப்பமா?” அவள்தான் அவனை அழைத்தாள். செக்கண்ட் கப் என்ற அந்தக் கடையில் அவனும் அவளும் ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக இருந்து கதைத்தனர்.

“வசந்தியின்ர கதையை அறிஞ்சன். கவலையான விஷயம்,” கொஞ்சம் தயக்கத்துடன் அவன் சொன்னான். அவன் வேலைசெய்கின்ற கொம்பனியில்தான் வசந்தியும் வேலை செய்திருந்தபடியால் வேலையிடத்தில் அதுபற்றி அவன் அறிந்திருந்தான்.

“யா… காதலும் கத்தரிக்காயும்! அநியாயமாகச் செத்துப்போனாள் எண்டு எனக்கு அவளிலை சரியான கோவம். அவன் இல்லையெண்டால் என்ன? சரியான விசரி!” பெருமூச்செறிந்தாள்.

“ம், என்ன செய்யிறது? சிலருக்குக் காதல் பெரிய விஷயமாயிருக்கு. அதில்லை எண்டதைத் தாங்கிறதுக்கான உத்திகளோ வழிமுறைகளோ தெரியிறதில்லை. எல்லாருக்கும் வாழோணும் எண்டுதான் ஆசையிருக்கும், இருந்தாலும் …”

“எதுவும் நடக்காதமாதிரி அவன் நல்லாய்த்தானே இருக்கிறான். வசந்தியின்ரை குடும்பம்தான் அதிலையிருந்து மீளமாட்டாமல் இன்னும் தத்தளிச்சுக் கொண்டிருக்கு. அவனைக் கண்டு நாலு கேள்வி கேட்கோணுமெண்டு எனக்கு ஆசை, இன்னும் சந்தர்ப்பம் வருதில்லை”

கோபத்தில் அவளின் முகம் சிவந்தது. அவனுக்கு அது பிடித்திருந்தது. அப்படியாக மெதுமெதுவாக அவர்கள் இணைந்தனர். ஒருவருட உறவுக்குப் பின் அவளின் அப்பார்ட்மென்ற்க்கு அவன் இடம்மாறினான். கலியாணம் கட்டாமல் என்னெண்டு ஒண்டாயிருக்கிறது எனத் தன்னைத் தானே முதலில் கேட்டுக்கொண்டவன், முடிவில் அவளின் ஆலோசனைக்குச் செவிசாய்க்கும் அளவுக்கு அவளில் பைத்தியமாக இருந்தான்.

அப்படி இடம்மாறுவதன்மூலம், மாமா வீட்டில் இருப்பதன் அசெளரியம் குறையும், அவளைச் சந்திப்பதில் இருக்கின்ற சிக்கல்களும் முடிவுக்கு வருமெனத் தனக்குத் தானே அவன் சமாதானம் சொல்லிக்கொண்டான். ஆனால், ஒன்பதுமாத காலத்துக்குள் இப்படியாகுமென அவன் நினைக்கவேயில்லை.

வேலைமுடிந்து வீட்டுக்குப் போகும்போது அவளுக்குக் கோல் பண்ணுவான். வீட்டுக்குப் போனதும் அவளைக் காணாவிடில் திரும்பக் கோல் பண்ணுவான். அவள் உடனே பதிலளிக்காவிட்டால் பத்து நிமிடம் கழித்துத் திரும்பவும் கோல் பண்ணுவான். அவளுடன் கதைக்கும்வரை அவனால் அமைதியாக இருக்க முடிவதில்லை. அவளுக்கு ஏதாவது நடந்திருக்குமோ என்ற தவிப்பு அவனின் மனதில் இருக்கும், அதைவிட அதிகமாக, தன் அழைப்பை உதாசீனம் செய்யுமளவுக்கு அவளுக்கு என்ன முக்கியமான விடயமிருக்கு என்ற கோபம் வரும். அவனின் அந்த நடத்தை அவளுக்கு மிகவும் எரிச்சலை ஏற்படுத்தியது. ஆறு, ஏழுதரம் அவன் கோல் பண்ணிய பின்னர், சிலவேளைகளில் அவள் அவனைத் திருப்பிக் கோல் பண்ணுவாள். “கோல் பண்ணேக்கே பதிலளிக்காட்டி நான் பிஸி எண்டு உங்களுக்கு விளங்காதே. இப்பிடியெல்லாம் கோல்பண்ணி அலுப்புத்தாறது எனக்குப் பிடிக்காது,” எனச் சினப்பாள். “எங்கை நிக்கிறாய், என்ன செய்கிறாய்?” என அவன் கேட்டால் அவளின் சுதந்திரத்தில் அவன் தலையிடுகிறான் என அவளுக்கு ஆத்திரம் வரும். கோல் பண்ணிச் சாப்பிட்டியா என்று கேட்பதுகூட அவளுக்குப் பிடிப்பதில்லை. தான் ஒரு சின்னப் பிள்ளையில்லை, தனக்குத் தன்னைக் கவனிக்கத்தெரியும் என்பதுதான் அவளின் கருத்தாகவிருந்தது.

அவளுக்குப் பிடிக்கவில்லை என்று அவற்றைச் செய்யாமல்விட அவனால் முடியவில்லை. அவள் வீட்டுக்குப் பிந்தி வரும் நாட்களில் வேண்டுமென்று அவளை எரிச்சலூட்டுவதற்காக சினிமாப் பாட்டை உச்சஸ்தாயில் போட்டுக்கேட்பான் அல்லது அவளுக்குப் பிடிக்காத வேறு ஏதாவது ஒன்றைச் செய்வான்.

கடந்த இரண்டு வாரங்களாக, “எங்கடை உறவு சரிவரும்போல தெரியேல்லை. எங்கடை இயல்புகள் எல்லாம் வேறைவேறையா இருக்கு. இந்த உறவு வேண்டாம், விட்டிடுவம். எங்காவது ஒரு இடம் பாத்துக்கொண்டு நீங்க போறது நல்லம்,” என்ற மாதிரி அவள் அவனிடம் அடிக்கடி சொன்னாள். அவள் கூறிய எதையும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, சும்மா பேச்சுக்குத்தான் சொல்கிறாள், அவனைப் பிரிகிறதுக்கு அவளுக்கும் விருப்பமிராது. விரைவில் கோபம் ஆறி பழையபடி வந்துவிடுவாள் என்றெல்லாம் தனக்குத் தானே அவன் கற்பனை செய்துகொண்டான்.

அன்று அவள் வேலையால் வந்தபோது அவனுக்கு அவள் மிகவும் அழகாகத் தெரிந்தாள்.  சிவப்பு நிறச் சட்டையில் அவள் நல்ல செக்சியாக இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. கதிரையில் இருந்தவன் வேகமாக எழுந்து, அவளின் பின்பக்கமாகக் சென்று அவளைக் கட்டியணைத்து அவளின் கழுத்தில் ஆசையாக முத்தமிட்டான். அவள் அவனிடமிருந்த விலக எத்தனித்த போது, அவளை முன்பக்கமாகத் திருப்பி அவளின் உதட்டைக் கெளவினான். அவனுக்கு அவனின் காமத்தை அடக்க முடியவில்லை. அவளுக்கு கோபம் உச்சிக்கேறியது.

“உங்களுக்கு ஒண்டும் விளங்குதில்லையா? எனக்கு உங்களைப் பிடிக்கேல்லை, தயவுசெய்து என்னைத் தொடாதேயுங்கோ,” எனக் கத்தினாள். “எப்ப வீட்டை விட்டிட்டுப் போகப்போறியள்?” என வெடித்தாள். அவளின் கோபம் அவனுக்கு உண்மையிலேயே புரியவில்லை.

“ஏன் என்னைப் பிடிக்கேல்லை எண்டு சொல்லு, பிறகு நான் போறன். எல்லாரும் ஒரே மாதிரி இருக்கேலுமா?”

“என்ன, எல்லாத்தையும் நான் இனி பட்டியல்போட்டுக் காட்டுறதோ? ஒண்டும்தான் பிடிக்கேல்லை!” வெறுப்பை உமிழ்ந்தாள் அவள்.

“அப்ப முந்தி உனக்கு என்னிலை என்ன பிடிச்சது? வீட்டிலை இருக்க வாவெண்டு என்னத்துக்கு கூப்பிட்டனி? ரண்டு வருஷமா இருந்த உறவை சும்மா முறிக்கேலுமோ? மாமாவைக்கும் தெரியும். இதென்ன விளையாட்டு எண்டு நினைச்சியோ? அதோடை நான் வாடகை தாறன். எனக்கு நீ இரண்டு மாத முன்னறிவித்தல் தரவேணும். தெரியுமோ?” பதிலுக்கு அவனும் கத்தினான். அவனிடமிருந்து விலகிச்செல்ல முயன்றவளின் கையைப் பிடித்திழுத்தான்.

அவள் அறைக்குள் போய் கதவைப் பூட்டிக்கொண்டாள். ஆத்திரமடைந்த அவன் மேசையிலிருந்த பூச்சாடியை எடுத்தெறிந்தான். வீடு அதிர்ந்தது. அடுத்த அரை மணித்தியாலத்தில் வீட்டுக்குப் பொலிஸ் வந்துநின்றது. அவளின் விருப்பமில்லாமல் அவளைப் பாலியல்ரீதியாகத் தொட்டது, வீட்டை விட்டுப் போகச்சொல்லியும் போகாதது, கையைப் பிடிச்சிழுத்தது எனப் பல குற்றம்சாட்டி அவனை அவர்கள் கைதுசெய்தனர்.

நடந்ததைச் சொல்லிப் பிணையெடுக்கும்படி மாமாவிடம் கேட்டபோது அவனின் உடலும் மனமும் கூனிக் குறுகிப்போயின. அந்த அவமானத்தைப்போல ஒன்றை அவன் வாழ்நாளில் ஒரு நாளும் உணர்ந்திருக்கவில்லை. பிணையில் வெளியே வந்தபோது இதுபற்றி வேலையிடத்துக்குத் தெரியவராதுதானே எனப் பல தடவைகள் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டான். அவமானமும், வெட்கமும், கோபமும் அவனைப் பிடுங்கித்தின்றன. “அவளின்ர சினேகிதி இறந்த சோகத்தை ஆற்றுறதுக்கான ஒரு வழியாத்தான் அவள் உன்னைப் பாவிச்சிருக்கிறாள். இனியும் இப்பிடியெல்லாம் ஏமாந்து போகாதை, நல்லதொரு பொம்பிளையாய்ப் பாத்து நாங்கள் கட்டிவைக்கிறம்,” என்றார் மாமி. திரும்பவும் மாமா வீட்டில் போயிருக்க அவனுக்குப் பிடிக்கவில்லை. மாமா வீட்டுக்குப் பக்கத்திலிருந்த ஒரு வீட்டின் அடித்தள அறை ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டான்

X     X     X

கவுன்சிலிங்கின் பன்னிரண்டு அமர்வுகளில் முதல் சில கோபத்திலேயே கழிந்தன. ஒருநாள் அவன் செய்த எந்தச் செயல்கள் அவளுக்கு அவனில் கோபத்தை ஏற்படுத்தின, ஏன் அவை அவளுக்குக் கோபத்தை ஏற்படுத்தின என அவன் நினைக்கிறான் என்றெல்லாம் எழுதிக்கொண்டு வரும்படி அந்தக் கவுன்சிலர் கேட்டிருந்தார்.

அப்படி அவன் எழுதியவை பற்றி உரையாடியபோது அவளுக்கு அவை ஏன் கோபத்தை ஏற்படுத்தின என்பது தனக்கு விளங்கவில்லை என்றான் அவன். அத்துடன் தான் அப்படிச்  செய்வது தன்னுடைய கரிசனையைத்தான் காட்டுகிறது என விளக்கம் சொன்னான்.

மேலும் இரண்டு வாரங்கள் சென்றன. ஒருவருக்குப் பிடிக்காத போது அவரின் உடலைத் தொடுவது சட்டப்படி தவறு எனக் கனேடியச் சட்டம் இருப்பது தனக்குத் தெரியாது என்றான். இலங்கையில் ஒருவர் கோபித்தால் கையிலை பிடித்து இருத்தித்தான் ஆட்கள் விளக்கம் சொல்வது, விளக்கம் கேட்பது எனக் கலாசார வேறுபாட்டை விளங்கப்படுத்த முயற்சித்தான்.

“உங்கடை ரோல் மொடல் யார்?” என அந்தக் கவுன்சிலர் கேட்டார்.

“நான் சின்ன வயசாயிருக்கேக்கேயே அம்மாவும் அப்பாவும் செல்லடிபட்டு செத்துப் போச்சினம். அம்மம்மாவுடன்தான் நான் வளந்தனான்.”

“ஓ, சொறி. அப்ப ஆண் ரோல் மொடல் எண்டு ஆரைச் சொல்லுவியள்?”

“தெரியேல்லை”

“சரி, உங்கடை அம்மம்மா உயிரோடை இருக்கிறாவா? இந்தச் சம்பவம் பற்றி அவவுக்குச் சொன்னா அவ என்ன சொல்லுவா?”

“அவ இருக்கிறா. ஆனா என்ன சொல்லுவா எண்டு தெரியேல்லை. இதைப்பத்தி அவவுக்கு நான் ஒண்டும் சொல்லேல்லை. தெரிஞ்சால் அவ கவலைப்படுவா.”

“என்னத்தைப் பற்றிக் கவலைப்படுவா எண்டு நீங்க நினைக்கிறீங்க?”

“இப்பிடிப் பொலிசிலை நான் பிரச்சினைப்பட்டதைப்பத்தித்தான்”

“ஓ, சரி, அவவுக்குச் சொன்னீங்க எண்டால் அவ என்ன சொல்லுவா எண்டு நீங்க நினைக்கிறீங்க?”

“அவளுக்குப் பிடிக்கேல்லை எண்டால், விட்டிடவேண்டியதுதானே எண்டு சொல்லக்கூடும்.”

“அது சரி, எங்களை விரும்பச்சொல்லி நாங்க ஒருத்தரையும் வற்புறுத்தேலாது”.

“ஓம், விளங்குது, பறக்கவிடு, அது திரும்பிவந்தால் உன்னுடையது எண்டு எங்கடை ஊரிலை சொல்லுறவை.”

“ம்ம், அவ விலகிப்போயிட்டா, நீங்க தனிச்சுப் போயிடுவியள் எண்டு நினைச்சனியளோ?”

“நான் தனியத்தான் வளந்தனான், அம்மா, அப்பா, சகோதரம் எண்டு ஒருத்தருமில்லை. அம்மம்மாவும் இப்ப தூரத்திலை. ரண்டு வருஷ உறவு இது”

“ரண்டு வருஷமா வளத்த உறவை எப்படிப் பிரியிறது எண்டு யோசிச்சியள்.”

“ஆனா, ஒரு ஆளுக்கு விருப்பமில்லை எண்டால் விலகிட வேணுமெண்டு இப்ப நான் படிச்சிட்டன். சும்மா இழுத்துவைச்சுக் கொண்டிருக்க வெளிக்கிட்டுக் கடைசியிலை பொலிஸ் கேஸ் ஆயிட்டுது. முதல்தரமெண்டதாலை நல்லவேளை வேலையிடத்துக்குத் தெரியவரேலை.”

“உங்கடை சுயமேம்பாட்டுக்காக, இப்பிடியான பிரச்சினைகள் இனிமேல் வராமல் தடுக்கிறதுக்காக என்ன செய்யலாமெண்டு நினைக்கிறியள்?”

“நீங்கதான் சொல்லோணும். இப்ப உங்களுக்கு என்னைப்பற்றித் தெரியும், நான் என்ன செய்யவேணுமெண்டு நீங்க நினைக்கிறீங்க?”

“ம், இந்தப் பிரச்சினையள் வராமல் எப்பிடித் தடுத்திருக்கலாமெண்டு நீங்க நினைக்கிறியள்?”

“எனக்குப் பொறுமை இல்லை. பொறுமையை நான் வளத்துக்கொள்ள வேணும்.?

“மிகச் சரி, பொறுமை மிக முக்கியம்.”

“ஒரு பிரச்சினைக்கு உடனடியாத் தீர்வு காணவேணுமெண்டு வெளிக்கிடுறதாலை பிரச்சினை பெரிசாய்ப் போகுது.  அதைக் கொஞ்சம் ஆறப்போட்டால் சிலவேளை வேறைவிதமா நல்ல தீர்வும் வரலாம்.”

“ம்ம், நல்லதொரு எதிர்வினை அது. அதோடை மற்றவை தூரவிலகினால், மனசிலை ஏற்படுற வெறுமைக்கு என்ன செய்யலாமெண்டும் கற்றுக்கொள்ள வேணும்.”

“அதுக்கு நான் என்ன செய்யலாம்?”

“சமூகத்திலை பல விதமான சமூக சேவை நிறுவனங்கள் இருக்கு. நீங்க அவையை அணுகலாம். அவையை அணுகி, கைவிடப்பட்டு இருக்கிறமாரி அல்லது தனிச்சிருக்கிறமாரி உணர்ற நிலையைக் கையாளுறதுக்குக்கான உத்திகளை அறிஞ்சுகொள்ள விரும்புறதாகச்  சொல்லுங்கோ.”

“ஓம், ஓம்”

“உங்கடை அம்மா, அப்பா செத்துப்போனபோது உங்களுக்கு எத்தனை வயசு?”

“ஏழுவயசு.”

“அந்த இழப்புச் சம்பந்தமாக ஏதாவது கவுன்சலிங்குப் போனனீங்களா?”

“இல்லை”

“ஓ. அப்ப உங்களுக்குக் கவுன்சலிங் கட்டாயம் உதவிசெய்யும், பழைய காயங்களையும் ஆற்றுறதுக்கு உதவுமெண்டு நான் நம்புறன்.”

“உங்களுக்கு மிக்க நன்றி, உங்களிட்டை இருந்து நான் நிறையப் படிச்சிட்டன். முதலிலை எனக்குப் பிடிக்கேல்லை, இப்ப எல்லாம் விளங்குது.”

“உங்களுக்கு உதவ முடிஞ்சதிலை எனக்குச் சந்தோஷம். உங்கடை எதிர்கால வாழ்க்கைக்கு என்ரை வாழ்த்துகள்.”

“மீண்டும் நன்றி.”

தொலைபேசியை வைத்தபோது மனதில் ஒருவகை வெறுமையும், அதேவேளையில் அமைதியும் அவனில் குடிகொண்டன. ஆழமாக மூச்செடுத்தான். பின்னர் ரேடியோவைப் போட்டுவிட்டு தேநீர் போடத் தயாரானான்.

மனமே ஓ மனமே நீ மாறிவிடு, மலையோ அது பனியோ நீ மோதி விடு,” சித்திராவின் இனிய குரலில் ஒட்டோகிராப் திரைப்படப் பாடல் ஒலித்தது.

 

 

 

 

 

ஸ்டார்

லட்சுமிஹர்

 

இருள் கொஞ்சம் எட்டி பார்க்கத் தொடங்கியிருந்தது. ஹரிஷும், அருணாவும் பாலுவுக்கு பிறந்தநாள் கேக் வாங்க பேக்கரிக்கு வந்துள்ளனர். அருணா பள்ளி முடிந்து ஹரிஷை வீட்டுக்கு கூட்டி வரும் வழியில் இருக்கும் பேக்கரி பூட்டி இருந்ததால், கொஞ்ச தூரம் நடந்து இங்கு வந்து சேர்ந்தனர். வந்தவுடன் ஹரிஷ் ஓடிப் போய் ஒரு சேரில் உட்கார்ந்து கொண்டான், அருணா அங்கிருந்தவரிடம் பிறந்தநாள் கேக்கை ஆர்டர் செய்தாள். இதில் எதிலுமே ஹரிஷ் பங்கெடுத்து கொள்ளவில்லை, அது அவனுக்கு பிடிக்கவும் இல்லை. கேக் தயார் ஆகி கொண்டிருக்க அருணா ஹரிஷ் உடன் வந்து சேரில் உட்கார்ந்து கொண்டாள். வரும் வழியில் தான் சர்பத் குடித்தனர், அது அருணாவுக்கு பிடித்த கடை.
ஹரிஷ் கடையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். இது வரை இந்த சந்தில் அவன் வந்ததே இல்லை. கடை எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிடலாம், இல்லை வேறு ஒன்றாகக் கூட மாறக்கூடும் என்ற தோற்றத்தில் இருந்தாலும், அவ்வளவு அழகாக இருந்தது அழுக்கு படிந்து போய். எல்லாம் எண்ணெய்ப் பிசுக்கு. ஆர்டர் செய்த கேக் வந்தது . அவனுக்கு பிடித்த ரெட் கலர். அதில் அவனுடைய பேரும், அப்பாவுடைய பேரும் சேர்த்தே எழுதி வாங்கினாள் அருணா.

சின்ன வீடுதான் என்றாலும் முன்னால் தோட்டம் இருப்பதால் அழகாக இருந்தது. கேக்கை டேபிள் மேல் வைத்த ஹரிஷ் பெட்ரூமுக்குள் சென்று உடை மாற்றிக் கொண்டிருந்தான். அருணா–ஹாலை டெகரேட் செய்தாள். இரவு மணி ஆகிக் கொண்டே இருக்க, அருணா பாலுவிற்கு தொடர்ந்து கால் செய்தாள். பாலு பதில் அளித்த மாதிரி தெரியவில்லை. ஹரிஷ் ஹாலில் டெகரேட் பண்ணியதை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்தான். அது எதுவும் கடையில் வாங்கி அழகுபடுத்தியது கிடையாது, அருணாவே பேப்பர் , சார்ட் என இருப்பதை வைத்து செய்தது, அவ்வளவு அழகாக இருந்தது.அதில் ஹாப்பி பர்த்டே பாலு என எழுதியிருந்தது.

பாலுவிற்கு ஸ்டூடியோவில் ஷூட்டிங் போய்க் கொண்டிருப்பதால் வரமுடியாது என்றும் கூடவே சாரியும் கேட்டு விட்டார். பாலு பிறந்த நாள் முடிய 3 மணி நேரம் தான் இருந்தது, இப்படி நடக்கும் என்று ஹரிஷிற்கு தெரியும் அதனால் தான் இதில் எதிலும் பங்கு எடுத்து கொள்ளவில்லை. அருணா இரவு சாப்பாடு சமைக்காதலால், பாலு பிறந்தநாளுக்கு வாங்கின கேக்கை வெட்டி கொடுத்தாள். ஹரிஷ் டிவியை ஆன் செய்து பார்க்க தொடங்கினான், கேக்கை தின்று கொண்டே. சேனலை மாற்றும்போது ஒரு சண்டை காட்சி ஓடிக் கொண்டிருந்தது, சட்டென நிறுத்தி விட்டான். ஸ்டண்ட் பாலு. அந்த காட்சியை பார்க்க விருப்பமின்றி ஓடிப்போய் படுத்துக் கொண்டான் முகத்தை பெட்டில் புதைத்தபடி.

போன சண்டே டிவியில் போடப்பட்ட அப்பா அடிவாங்கி இருந்த படத்தை பார்த்து விட்டு கிளாசில் இருந்த கவுதம் ஹரிஷை வம்பிழுக்க ஆரம்பித்துவிட்டான். அதனால் அம்மா, அப்பாவிடம் சண்டை. அவர்களுக்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை.

ஒரு நாள் பாலுவை வைத்து கிளாசில் கவுதம் ஒரு ஜோக் சொல்ல அனைவரும் சிரித்து விட்டனர்.

‘ silent don’t listen to gautham. Gautham stop that…’

என மேடம் கூற அந்த சிரிப்பு சத்தம் அடங்கிப் போனது. ஹரிஷ் அந்த கிளாசில் தலையை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. அதன் பிறகு இன்டெர்வலில் ஹரிஷ் கவுதமை போய் அடிக்க இருவரும் சண்டை போடத் தொடங்கினர், ஹரிஷுக்கே அதில் அடி பலமாக விழுந்தது. அதிலிருந்து ஹரிஷை “ஸ்டண்ட்மேன் “என கூப்பிடத் தொடங்கி விட்டனர், சிரித்து கொண்டே.

ஆட்டோ வை மிஸ் பண்ணியதால், பாலு வந்து ஸ்கூலில் விட நேர்ந்தது, ஸ்கூலில் பாலுவும் ஹரிஷும் நடந்து கொண்டிருக்கையில் நந்தன், “ஸ்டண்ட் மேன் ,” என கத்தி விட்டு சென்றான். ஹரிஷுக்கு கோவம் தாங்க முடியவில்லை, ஆனால் பாலு திரும்பி அவனுக்கு தன்னுடைய ஆர்ம்ஸ் -ஐ மடித்து காட்டி விட்டு போனார். அதை நந்தன் கிளாசில் வந்து, “அவரோட ஆர்ம்ஸ் எவ்வளவு பெருசா இருந்துச்சு தெரியுமா, நம்ம பென் டென் -ல் வரும் ஃபோர் ஆர்ம்ஸ் மாதிரி இருந்தது,” என சொல்ல அவனுக்கு பெருமையாக இருந்தது. ஹரிஷுக்கு பிடித்த கார்ட்டூன் கேரக்டரும் அது தான். அருகில் இருந்த கவுதம் நடு பெஞ்சில் அமர்ந்திருந்த ஹரிஷ் காதுக்கு விழுகும்படி, “வில்லனுக்கே இவ்வளவு பெரிய ஆர்ம்ஸ் னா அவங்கள அடிக்கிற ஹீரோஸ்க்கு எவ்வளவு பெருசு இருக்கணும்,” என சொல்லவும் சுத்தி இருந்தவர்கள் சிரித்து கொண்டே தலை ஆட்டினர்.

அன்றிரவு ஹரிஷ் அப்பா சாப்பிடுவதற்கு முன் தண்டால் எடுத்து கொண்டிருந்தார், அருணா சாப்பிட எல்லாத்தையும் கூப்பிட பாலு கைக்கு போனது ரிமோட். அதில் கே டிவி யை வைத்தார், அதில் அவர் நடித்திருந்த சண்டைக் காட்சி வர போவதாகவும், அதை எடுக்கையில் எப்படியெல்லாம் இருந்தது, டைரக்டர் சார் குட் னு மைக்குல சொல்ல, யூனிட் முழுக்க கை தட்டுனாங்க, அதுக்கப்புறம் தான் எங்க மாஸ்டரு என்ன கூடவே வச்சுக்கிட்டாரு என சொல்லி கொண்டிருக்கையில், அந்த சண்டைக்காட்சி வந்ததும் பாலு அதோ பாரு என கை காட்ட அதில் ஒருவர் தீப்பற்றி அலறும் காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. அதை தான் பாலு சொல்லுகிறார் , ஹரிஷ் தடாலென சாப்பாடை தட்டி விட்டு ரூமுக்குள் போய் விட்டான். அந்த சண்டைக் காட்சியில் பாலுவின் மூஞ்சி கூட தெரியவில்லை. பாலுவிற்கு என்னவென்று புரியவில்லை, அருணா, பாத்து பயந்திருப்பான் என சொல்ல பாலு தலை ஆட்டிக்கொண்டார். இரவு ஏ வி ம் இல் ஷூட்டிங் இருப்பதால் வேகமாகவே கிளம்பிவிட்டார்.அருணாவுக்கு தெரியும் எதனால் ஹரிஷ் அப்படி நடந்து கொண்டான் என்று. என்ன சொல்ல அவனிடம், பாலு சென்றதும் பெட்ரூம் க்கு சென்ற அருணா ஹரிஷ் தூங்கி கொண்டிருப்பதை பார்த்து விட்டு அந்த அறை கதவை சத்தம் இல்லாமல் மூடினாள். அந்த படத்தை தொடர மனமில்லாமல் டிவியை அணைத்து விட்டாள்.

“டேய் இந்த கேக்க முழுசா சாப்பாடலையா நீ,” எனக் கேட்டு பக்கத்தில் அமர்ந்தவளுக்கு ஹரிஷ் அழுதது தெரியாமலில்லை. “எதுக்கு இப்போ அழகுற,” என்ற கேள்விக்கு ஹரிஷ் இடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை. “என்னாச்சுன்னு சொன்னாதான தெரியும்,” என்றதும் ஹரிஷ் தலையை அருணா தோல் மீது புதைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தவன், “என்ன ஸ்கூல்ல ஸ்டண்ட் மேன், ஸ்டண்ட் மேன் னு கூப்பிட்றாங்க, அசிங்கமா இருக்கு” என்றதற்கு பதில் ஏதும் சொல்லவில்லை அருணா.

அழுகையை நிப்பாட்ட அருணா பீரோவில் இருந்து ஏதோ போட்டோ வை எடுத்து தன் பின்னால் மறைத்து கொண்டாள், “சரி, அம்மா சொல்றதுக்கு பதில் சொன்னேனா ஒனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு”.

“சர்ப்ரைஸா?” என டல் ஆக கேட்ட ஹரிஷ்ன் தலையை நிமிர்த்தி, “ஆமாம்,” என்றாள் அருணா.

“என்ன கேள்வி?”

“ஹரிஷுக்கு கஷ்டமா கேக்கலாமா இல்ல ஈஸியா கேக்கலாமா?”
“ஈஸியா,” என சிரித்துக் கொண்டே பதில் சொன்னான் ஹரிஷ்.

“ஹரிஷுக்கு புடுச்ச ஹீரோ யாரு?

சட்டென, “விஜய்,” என தலை ஆட்டினான்.

“விஜய் தான் புடிக்குமா?”

“ஆமா”

“உண்மையா விஜய்தான?”

“ஆமா 100 வாட்டி ப்ரோமிஸ் விஜய்தான்,” என்று கட்டிலில் குதித்தான்.

அருணா கட்டிலை விட்டு எழுந்த தான் மறைத்து வைத்திருந்த போட்டோவை மெதுவாகக் காட்டினாள் ஹரிஷிடம். அதை ஹரிஷால் நம்ப முடியவில்லை. அது அப்பாவும், விஜயும் சேர்ந்து நிற்கும் போட்டோ, அதில் விஜய் அப்பாவை அடிக்கவில்லை. இருவரும் சிரித்து கொண்டிருக்கும் போட்டோ அது.

அதை வாங்கி பார்த்துக் கொண்டிருந்த ஹரிஷ் அம்மாவைப் பார்த்து, “இது உண்மையிலே எடுத்ததா?”

“ஆமா”

“ஏன் கேக்குற?”

“இவ்வளவு நாளா ஏன் என்கிட்ட நீங்க காட்டவே இல்ல?”

உனக்குதான் அப்பாவ பிடிக்கவே இல்லையே,” என சொன்னவுடன் என்ன சொல்லுவது என தெரியாமல் தலையை கீழிறக்கி அந்த போட்டோ வை பார்க்க தொடங்கினான். அதில் நிஜமாகவே விஜயும், அப்பாவும் சிரித்து கொண்டிருந்தனர்.

“அப்போ அப்பா விஜய் கிட்ட அடி வாங்கலயா?”

“அது சும்மா டிஷ்ஷியும் டிஷ்யூம, விஜய் சார் அடிக்கற மாதிரி இவரு அடிவாங்குற மாதிரி நடிப்பாங்க. அதெல்லாம் சும்மா,” என சிரித்து கொண்டே ஹரிஷின் தலையில் முத்தமிட்டாள்.

“அப்பனா நான் இந்த போட்டோவ ஸ்கூலுக்கு எடுத்துட்டு போகவா ?”

சரி என்பது போல தலையாட்டினாள் அருணா. ஹரிஷை விட அருணாவே மிகவும் சந்தோஷத்தில் இருந்தாள். ஆனாலும் பிறந்த நாளான இன்றைக்கும் பாலு வர வில்லை என்பதை மனதில் போட்டு அலைக்கழித்து கொண்டு தான் இருந்தாள். அவளுக்கு அந்த ராத்திரிகள் அவ்வளவு எளிதாக கடப்பதில்ல.

காலை எழுந்திருக்கையில் பாலு வீட்டில் தான் இருந்தார். ஹரிஷ் ஸ்கூலுக்கு போகும் முன் பாலுவை கூப்பிட்டு, “நேத்து எங்க போயிருந்தீங்க?” என அதட்டும் தொனியில் கேட்டான்.

பாலு அருணாவை பார்த்து சிரித்து விட்டு, “ஷூட்டிங்… டிஷ்ஷியும் டிஷ்ஷியும் ஷூட்டிங்,” என அவனை அடிப்பது போல செய்து காட்டினான்.

“விஜய் உங்கள அடுச்சாரா?”

“ஆமா”

ஹரிஷ் அழுவது போல அருணாவை பார்த்தான். அருணா ஓடிவந்து ஹரிஷை கட்டி பிடித்துக் கொண்டு பாலுவை கையால் தோளில் தட்டினாள். “அப்பா பொய் சொல்றாரு ஹரிஷ், நீ அழாத. அழக்கூடாது. இன்னொரு தடவ கேள” என கண்ணீரை துடைத்த, பாலுவை பார்த்து முறைத்து கொண்டாள்.

“இப்போ நீ அழுகாம இருந்தா உண்மைய சொல்லுவேன்”

ஹரிஷ் நிமிர்ந்து பாலுவை பார்த்தான்.

பாலு சிரித்துக் கொண்டே கை, கால்களை காட்டி, “இங்க பாரு ஒண்ணுமே இல்ல. அடிவாங்குனேன்ல டிவி ல, அதெல்லாம் சும்மா,” என சொல்லி சிரித்துக் கொண்டார்.

அருணா , “நீ போட்டோ எடுத்துக்கிட்டயா?” என கேட்க, “எடுத்துட்டேன்,” என தலை ஆட்டிக் கொண்டு ஆட்டோவில் ஏறிச் சென்றான் ஹரிஷ்.

அவன் எடுத்து வந்த போட்டோவை அனைவரும் ஆச்சரியதுடன் பார்த்து கொண்டிருந்தனர். நந்தன் ஓடி வந்து, “விஜயும் உங்க அப்பாவும் பிரண்ட்ஸா?” என கேட்டதற்கு, “ஆமா,” என சத்தமாக சொன்னான், கவுதம் காதிற்கு விழும் அளவிற்கு.

“அப்போ அடிக்கிறது எல்லா?”

“அது சினிமா, வெறும் டிஷ்ஷியும் டிஷ்ஷியும்தான்,” என பாலு செய்தது போலவே செய்து காட்டினான் ஹரிஷ்.

“அப்டினா விஜய பாப்பயா நீ?”

ஆமா எங்க அப்பா அடுத்தவாரம் கூட்டிட்டு போறேன்னு சொல்லிருக்காரு நானும் விஜய் கூட நின்னு போட்டோ எடுத்துப்பேன்”

அன்று சாயங்காலம் படுத்து கொண்டிருந்த அப்பாமேல் ஏறி விளையாடி கொண்டிருந்த ஹரிஷ், “அப்பா விஜய பாக்க கூட்டிட்டு போவையா ?” என கேட்டதற்கு, “கண்டிப்பா” என சொல்லி சிரித்துக் கொண்டார் பாலு. ஹரிஷ் சந்தோசத்தில் பாலுவின் நெஞ்சின் மேல் சாய்ந்து கை வைக்கையில், மேல் சட்டையின் அடியில் ஒரு பெரிய தழும்பு கையில்பட்டது, அது முன் பக்கம் கழுத்தில் ஆரம்பித்து இடுப்பு வரை சென்றது.