தொடர்கதை

வண்ணக்கழுத்து 4 (அ): இமாலயம்

-மாயக்கூத்தன்-

சமவெளியில் மழையும் வெப்பமும் அதிகமானதை அடுத்து, பெரியவர்கள் எங்களை இமாலயத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். இந்திய வரைபடத்தை எடுத்துக் கொண்டால், அதன் வடகிழக்கு மூலையில் டார்ஜிலிங் என்ற நகரைப் பார்க்கலாம். உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட்டைப் பார்த்தபடி அதற்கு எதிரில் நேருக்கு நேர் நின்று கொண்டிருக்கும் நகரம் அது.

டார்ஜிலிங்கிலிருந்து, கேராவானில் பல நாட்கள் மெதுவாக பயணம் செய்து, எங்கள் குடும்பமும் நானும் என் இரண்டு புறாக்களும் டெண்டாம் என்ற சிறிய கிராமத்தை அடைந்தோம். அது கடல்மட்டத்திலிருந்து பத்தாயிரம் அடி உயரத்தில் இருக்கிறது அக்கிராமம். அப்படியொரு உயரத்தில், அமெரிக்காவின் எந்தவொரு மலையிலோ ஆல்ப்ஸிலோ கொஞ்சமாவது பனி படர்ந்திருக்கும். ஆனால், வெப்பமண்டலத்தில் இருக்கும் இந்தியாவிலோ, பூமத்திய ரேகையிலிருந்து சுமார் முப்பது பாகை கோணங்களில் இருக்கும் இமாலயத்திலோ, பத்தாயிரம் அடிக்கு கீழே பனி உருவாவதில்லை. மிருகங்கள் நிறைந்த மலையடிவாரக் காடுகள், செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு குளிரத் துவங்கியவுடன், அதன் விலங்குகள் எல்லாம் தெற்குப் பகுதிக்கு இடம்பெயர்ந்துவிடும்.

எங்கள் இடத்தை, உங்களுக்கு கொஞ்சம் விவரிக்கிறேன். தேயிலை வளரும் பள்ளத்தாக்குகளைப் பார்த்தவாறு, கல்லும் மண்ணும் கொண்டு கட்டப்பட்ட எங்கள் வீடு இருந்தது. அதைத் தாண்டி, கரடுமுரடான ஆனால் கம்பீரமான, வரிசைத் தொடர்களாக இருக்கும் முகடுகளுக்கு இடையே, பள்ளத்தாக்குகளில் நெற்பயிரும், சோளமும் பழத்தோட்டங்களும் தெரியும். தூரத்தில் இருண்ட பசுமரக்காடுகள் போர்த்த செங்குத்துச் சிகரங்களுக்கு அப்பால், ஆயிரக்கணக்கான அடிகள் உயர்ந்து நிற்கும், கஞ்சன்சங்கா, மகாலு, எவரஸ்ட் போன்ற தூய வெண்ணிற மலைத்தொடர்கள். விடியலின் முதற் கதிரொளியில் அவை வெள்ளையாகத் தோன்றும். சூரியன் மேலே போகப் போக, அதிகரிக்கும் வெளிச்சத்தில், ஒவ்வொரு சிகரமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். அடிவானத்தில், அதிக தொலைவில் அல்ல, வானத்தின் மத்தியைக் கிழித்துக் கொண்டு உயரும், அதிலிருந்து சிந்தும் ஒளியில் ஆசீர்வதிக்கப்பட்ட ரத்தம் போல, இளஞ்சிவப்பு நிறத்தில் இச்சிகரங்கள் பிரகாசிக்கும்.

(more…)

வண்ணக்கழுத்து பகுதி 3 – திசை அறிதல்

மாயக்கூத்தன்– 

கடலாழத்தில் நீந்த புதிதாக பயிற்சி பெற்றவன் போல, காற்றில் இறங்குவது குறித்து வண்ணக்கழுத்துக்கு இருந்த பயம் போய்விட்டது. அவன் நீண்ட நேரமும், அதிக உயரத்திலும் பறக்கத் துவங்கினான். ஒரே வாரத்தில் விடாமல் அரைமணிநேரம் அவனால் பறக்க முடிந்தது. வீட்டுக் கூரைக்குத் திரும்பும்போது, அவன் தன் அப்பா அம்மாவைப் போலவே அழகாகத் தரையிறங்கினான். கால் கூரையில் பதியும்போது, தன்னை சமநிலைக்கு கொண்டு வர, படபடவென்று இறக்கைகளை பீதியில் அடித்துக் கொள்வது அதற்குப் பிறகு இல்லை.

தொடக்கத்தில் அவனோடு கூடவே பறந்த அப்பாவும் அம்மாவும், இப்போது அவனை விட்டுவிட்டு அவனைவிட அதிக உயரத்தில் பறக்கத் தொடங்கினார்கள். பையன், தன் பெற்றோர்கள் பறக்கும் உயரத்திற்கு எப்போதும் முயற்சி செய்து கொண்டிருந்தான் என்பதால், அவனை இன்னும் மேலே பறக்க வைக்கத்தான் அவர்கள் அப்படிச் செய்கிறார்கள் என்று சில காலம் நினைத்துக் கொண்டிருந்தேன். குட்டிப் பயலுக்கு அவர்கள் அருமையான  முன்னுதாரணமாக இருக்க நினைக்கிறார்களாக இருக்கும். ஆனால் கடைசியில் ஜூன் மாத தொடக்கத்தில் ஒருநாள், ஒரு கெட்ட சம்பவத்திற்குப் பிறகு என் எண்ணம் மாறியது. (more…)

வண்ணக்கழுத்து 2 – கல்வி

மாயக்கூத்தன்– 

பறவைகளின் உலகில் காண்பதற்கு அருமையான விஷயங்கள் இரண்டு உண்டு. ஒன்று, அம்மா தன் குஞ்சை வெளிச்சத்திற்கு கொண்டு வர முட்டையைக் கொத்தி உடைப்பது. மற்றொன்று, அவனை அவள் அணைத்து, கொஞ்சி உணவு ஊட்டிவிடுவது.

வண்ணக்கழுத்தை அவனுடைய அப்பாவும் அம்மாவும் மிகவும் பாசத்துடன் அணைத்து வளர்த்தார்கள். மனிதர்களின் குழந்தைகள் பெற்றோரின் அணைப்பில் பெறுவதை அவனும் பெற்றான். ஒன்றும் அறியாத அந்தக் குஞ்சுகளுக்கு, இது கதகதப்பையும் சந்தோஷத்தையும் தரும். உணவைப் போலவே அணைப்பும் அவைகளுக்கு அவசியம்.

இந்தப் பருவத்தில், புறாக்கூண்டில் அதிக அளவில் பஞ்சையோ பருத்தித் துணியையோ அடைக்கக்கூடாது. துணியும் பஞ்சும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் கூடு அதிகம் சூடாகாமல் இருக்கும். இந்த அறிவு இல்லாத புறா வளர்ப்பாளர்கள், குஞ்சு வளர வளர தன் உடம்பிலிருந்து மேலும் மேலும் உஷ்ணத்தை உண்டாக்குவான் என்பதைப் புரிந்துகொள்வதில்லை. மேலும், இந்த சமயத்தில் அடிக்கடி புறாக்கூண்டை சுத்தம் செய்வதும் நல்லதில்லை என்றே நினைக்கிறேன். தாய் தந்தைப் பறவைகள் கூண்டில் என்னவெல்லாம் வைத்திருக்கிறார்களோ அவையெல்லாம் குஞ்சை சுவுகரியமாகவும் மகிழ்வாகவும் வைத்திருக்கும். (more…)

வண்ணக்கழுத்து 1

மாயக்கூத்தன்– 

1. பிறப்பு

பத்து லட்சம் பேர் இருக்கும் கல்கத்தாவில் புறாக்கள் இருபது லட்சமாவது இருக்கும். இந்துப் பையன்கள் மூன்றில் ஒருவனிடம் காரியர்கள், டம்ப்ளர்கள், ஃபேன்டெயில்கள், பௌடர்கள் என்று ஒரு டஜன் வளர்ப்புப் பறவைகளாவது இருக்கும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புறாக்கள் வளர்க்கப்பட்டு வரும் இந்தியாவில், ஃபேன்-டெயிலும் பெளடரும் பறவைகளை நேசிப்பவர்கள் பிரத்யேகமாய் உருவாக்கிய இருவேறு இனப் புறாக்கள். காலங்காலமாக, மாட மாளிகைகளில் அரச குடியினராலும், சின்னஞ் சிறிய வீடுகளில் ஏழைகளாலும் புறக்களின் மீது அன்பும் அக்கறையும் பொழியப்பட்டு வருகிறது. பணக்காரர்களின் தோட்டங்களிலும் குடில்களிலும் நீரூற்றுகளிலும், சாதாரணர்களின் சிறு நந்தவனங்களிலும், பழத்தோட்டங்களிலும், அலங்காரமாகவும் இசையாகவும் பல வண்ணப்புறாக்களும் குனுகும் மரகதக் கண் கொண்ட வெண்புறாக்களும் தானிருக்கும்.

இன்றைக்கும் கூட, எங்கள் பெருநகர்களுக்கு வருகை புரியும் வெளிநாட்டினர், தங்கள் வளர்ப்புப் புறாக்கள் ஈரமற்ற குளிர் காற்றில் உயரப் பறக்க, எண்ணற்ற சிறுவர்கள் சமதளமாய் இருக்கும் வீட்டுக் கூரைகளில் வெள்ளைக்கொடி அசைத்து சமிக்ஞை செய்து கொண்டிருப்பதைக் குளிர்கால காலை வேளைகளில் காண முடியும். நீல வானத்தில், தடித்த மேகங்களாய் புறாக்கூட்டங்கள் பறந்து செல்லும். சிறிய கூட்டங்களாகத் தொடங்கி, தங்கள் எஜமானர்கள் வீட்டுக் கூரைகளின் மேல் இருபது நிமிடங்கள் வட்டமடிக்கும். பின் மெதுவாக மேலேறி, எல்லா சிறிய கூட்டங்களும் ஒரு பெரிய கூட்டமாகி, கண்ணுக்கப்பால் தொலைதூரம் போய்விடும். ரோஸ், மஞ்சள், வயலட், வெள்ளை என்று பல நிறங்களில் இருந்தாலும் எல்லா வீட்டுக் கூரைகளும் ஒரே வடிவில் இருக்கும்போது, ஒவ்வொரு புறாவும் தத்தமது வீடுகளை எப்படி கண்டுபிடித்து வந்து சேர்கிறது என்பது ஆச்சரியம்தான். (more…)

மானுடம் குடியமர்ந்த கோள் – புறப்பாடு

சிகந்தர்வாசி

அந்தச் சீனர் உறங்கிக் கொண்டிருப்பதை லிண்டா லூவும் நானும் பார்த்தபடி நின்றிருந்தோம். அவர் விழித்துக் கொள்வார் என்று காத்திருந்தோம், ஆனால் அவர் குறட்டை விட ஆரம்பித்தார். என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. முழுக்கதையும் தெரிந்து கொள்ளும் ஆரவம் எங்களுக்கு இருந்தது, ஆனால் அவர் எப்போது விழித்துக் கொள்வார் என்று தெரியவில்லை. அவரைத் தூக்கத்திலிருந்து எழுப்பவும் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், அவர் தூக்கத்தைக் கலைத்தால் எப்படி எடுத்துக் கொள்வார் என்றும் எங்களுக்குத் தெரியவில்லை. எனவே காத்திருப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை, எனவே காத்திருந்தோம்.

கால் மணி நேரத்துக்குப் பின்னர், சி லிங்கின் மகன் வீட்டிலிருந்த எங்களை நோக்கி நடந்து வருவதைக் கண்டோம். அவன் இளம் பருவத்து சி லிங்க் போலிருந்தான். அவனை எல்லாரும் ‘சீனக்குட்டி’ என்று செல்லமாக அழைத்தனர். அவன் வேறொரு வீட்டில் இருந்தான், தினமும் தன் தந்தைக்கு மதிய உணவு எடுத்து வருவான். இப்போது இங்கே நாங்கள் இருப்போம் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை, என்ன காரியமாக இங்கு வந்திருக்கிறோம் என்று கேட்டான். எங்களுக்கு வரலாற்றில் உள்ள ஆர்வத்தைக் கூறிவிட்டு, பாதி கதையில் பெரியவர் உறங்கி விட்டார் என்று சொன்னோம். அவன் சிரித்துக்கொண்டே, “இந்தக் கதையை அவர் பலமுறை எனக்குச் சொல்லியிருக்கிறார். ஆனால் அதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இப்போது அவரே அதில் பாதியை உங்களிடம் சொல்லிவிட்டதால், மீதியை நான் சொல்கிறேன்,” என்று சொல்லிவிட்டு, சீனக்குட்டி கதையைத் தொடர்ந்தான். (more…)