![]()
சமவெளியில் மழையும் வெப்பமும் அதிகமானதை அடுத்து, பெரியவர்கள் எங்களை இமாலயத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். இந்திய வரைபடத்தை எடுத்துக் கொண்டால், அதன் வடகிழக்கு மூலையில் டார்ஜிலிங் என்ற நகரைப் பார்க்கலாம். உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட்டைப் பார்த்தபடி அதற்கு எதிரில் நேருக்கு நேர் நின்று கொண்டிருக்கும் நகரம் அது.
டார்ஜிலிங்கிலிருந்து, கேராவானில் பல நாட்கள் மெதுவாக பயணம் செய்து, எங்கள் குடும்பமும் நானும் என் இரண்டு புறாக்களும் டெண்டாம் என்ற சிறிய கிராமத்தை அடைந்தோம். அது கடல்மட்டத்திலிருந்து பத்தாயிரம் அடி உயரத்தில் இருக்கிறது அக்கிராமம். அப்படியொரு உயரத்தில், அமெரிக்காவின் எந்தவொரு மலையிலோ ஆல்ப்ஸிலோ கொஞ்சமாவது பனி படர்ந்திருக்கும். ஆனால், வெப்பமண்டலத்தில் இருக்கும் இந்தியாவிலோ, பூமத்திய ரேகையிலிருந்து சுமார் முப்பது பாகை கோணங்களில் இருக்கும் இமாலயத்திலோ, பத்தாயிரம் அடிக்கு கீழே பனி உருவாவதில்லை. மிருகங்கள் நிறைந்த மலையடிவாரக் காடுகள், செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு குளிரத் துவங்கியவுடன், அதன் விலங்குகள் எல்லாம் தெற்குப் பகுதிக்கு இடம்பெயர்ந்துவிடும்.
எங்கள் இடத்தை, உங்களுக்கு கொஞ்சம் விவரிக்கிறேன். தேயிலை வளரும் பள்ளத்தாக்குகளைப் பார்த்தவாறு, கல்லும் மண்ணும் கொண்டு கட்டப்பட்ட எங்கள் வீடு இருந்தது. அதைத் தாண்டி, கரடுமுரடான ஆனால் கம்பீரமான, வரிசைத் தொடர்களாக இருக்கும் முகடுகளுக்கு இடையே, பள்ளத்தாக்குகளில் நெற்பயிரும், சோளமும் பழத்தோட்டங்களும் தெரியும். தூரத்தில் இருண்ட பசுமரக்காடுகள் போர்த்த செங்குத்துச் சிகரங்களுக்கு அப்பால், ஆயிரக்கணக்கான அடிகள் உயர்ந்து நிற்கும், கஞ்சன்சங்கா, மகாலு, எவரஸ்ட் போன்ற தூய வெண்ணிற மலைத்தொடர்கள். விடியலின் முதற் கதிரொளியில் அவை வெள்ளையாகத் தோன்றும். சூரியன் மேலே போகப் போக, அதிகரிக்கும் வெளிச்சத்தில், ஒவ்வொரு சிகரமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். அடிவானத்தில், அதிக தொலைவில் அல்ல, வானத்தின் மத்தியைக் கிழித்துக் கொண்டு உயரும், அதிலிருந்து சிந்தும் ஒளியில் ஆசீர்வதிக்கப்பட்ட ரத்தம் போல, இளஞ்சிவப்பு நிறத்தில் இச்சிகரங்கள் பிரகாசிக்கும்.
