விமரிசனம்

விமரிசனம் என்றால் என்ன? – தன்னையே கேட்டுக் கொள்கிறார் ஏ.ஓ. ஸ்காட்

nonfiction_a-o-_scott_cover_2

கே – விமரிசனத்தின் நோக்கம் என்ன? விமரிசகர்களால் என்ன பிரயோசனம் இருக்கிறது?

ப – இவை பெரிய கேள்விகள்! இருந்தாலும், யாரும் கேட்கக்கூடிய கேள்விகள்தான். ஆனால் இரண்டும் ஒரே கேள்வியல்ல.

கே: ஆனால் விமரிசகர்கள் செய்வதெல்லாம் விமரிசனம்தானே?

ப: நிச்சயமாக, விமரிசகர்கள் செய்வது விமரிசனம்தான். அதே போல், விமரிசனம் செய்பவர்கள் எல்லாரும் விமரிசகர்கள்தான். இப்படிச் சொல்வதில் உள்ள பிரச்சினை இப்போது உங்களுக்குப் புரிகிறது என்று நினைக்கிறேன்.

நாம் இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறோம், ஆனால் அதற்குள் சொன்னதையே சொல்லத் தொடங்கிவிட்டோம். விமரிசனம் செய்வதைப் பற்றி பேசும்போது, நாம் ஒரு வேலையைப் பேசுகிறோமா?- எழுத்து வகையொன்று, பாண்டித்தியம் அல்லது பத்திரிக்கைத் துறையின் வகையினம், ஏதோ ஒரு அறிவுத்துறை- இதில் வேலை செய்து பிழைப்பவர்கள் விமரிசகர்கள் என்று சொல்லலாமா? அல்லது, விமரிசனத்தைப் பேசும்போது நாம், அந்த அளவுக்கு அதிக நிபுணத்துவம் அல்லாத ஒரு செயல்பாட்டைப் பேசுகிறோமா? விமரிசனம் செய்வது என்பது சீட்டு விளையாடுவது, சமையல் செய்வது அல்லது சைக்கிள் ஓட்டுவது மாதிரி யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளக்கூடிய விஷயமா? அல்லது விமரிசிப்பது என்பது அதைவிட அடிப்படையான, அதைவிட தன்னிச்சையான செயலாக இருக்குமா, கனவு காண்பது அல்லது மூச்சு விடுவது அல்லது அழுவது போன்ற விஷயமா?

கே- இங்கு கேள்விகளை நான் கேட்க வேண்டும் என்பதுதான் ஏற்பாடு என்று நினைக்கிறேன்

ப- மன்னித்துக் கொள்.

கே- சரி, மறுபடியும் முதலிலிருந்து துவங்குவோம். உன்னிடமிருந்தே துவங்குவோம். உன் தொழில் விமரிசனம், அது தவிர நீ, விமரிசனம் என்றால் என்ன என்றும், அதன் நோக்கம் என்ன என்றும் அதிகம் சிந்திக்கிறாய்.

ப- நான் செய்வதை இந்த வரிசையில்தான் பேச வேண்டும் என்றில்லை. தவிரவும் இதை மட்டும்தான் செய்கிறேன் என்றும் சொல்ல முடியாது.

கே- சரி. ஆனால் நான் கேட்க வந்தது…

ப- என்னால் என்ன பிரயோசனம்? நான் செய்வதன் நோக்கம் என்ன?

கே- சரி, உன் விருப்பப்படி அப்படியும் கேட்கலாம். ஆனால் நான் இந்த அளவு விரோத பாவனையில் கேட்க மாட்டேன்.

ப- அதெல்லாம் ஒன்றுமில்லை. வில்லியம் பிளேக் சொன்னது போல், எதிர்ப்பே உண்மையான நட்பு. ஒவ்வொரு விமரிசகனும் அவநம்பிக்கை, சந்தேகம், சில சமயம் முழுமையான காழ்ப்பு என்று அத்தனையையும் எதிர்கொள்ளப் பழகிக் கொள்கிறான். உனக்கு என்ன ஒரு துணிச்சல்! யார் உனக்கு இந்த உரிமை கொடுத்தது? நீ சொல்வதை ஏன் நான் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்? இந்தக் கேள்விகள் எல்லாம் எங்களுக்கு வாடிக்கையான விஷயங்கள். எங்கள் தகுதி குறித்து, எங்கள் அறிவு குறித்து, எங்கள் இருப்புக்கான உரிமை குறித்தே கேள்வி எழுப்பத் தூண்டுவது- விமரிசகனாக இருப்பதில் மிகப் பெரிய வேலை இது என்று தோன்றுகிறது.

கேள்வி- சரி, நீ இப்போது அதற்கெல்லாம் பதிலடி கொடுப்பது என்று முடிவு செய்திருக்கிறாய். உன் கருத்துகளின் நியாயத்தைச் சொல்ல விரும்புகிறாய். சாமுவேல் எல் ஜாக்சனுக்கு பதிலடி கொடுப்பதற்காகத்தான் இந்தப் புத்தகத்தில் உள்ளவற்றை எல்லாம்  நீ எழுதினாய் என்று சொல்வது சரியாக இருக்குமா?

பதில்- முழுக்க அப்படி இருக்கும் என்று ஒப்புக் கொள்ள முடியாது. ஆனால் நீ இந்தப் பேச்சை எடுத்தது குறித்து சந்தோஷப்படுகிறேன். இதன் பின்னணி பற்றி கொஞ்சம்: மே 2012ல், அன்றைக்கு The Avengers- நீ அந்தப் படம் பார்த்தாய்தானே? எல்லாரும் பார்த்தார்கள்- அந்தப் படம் வட அமெரிக்கா எங்கும் 3500 இடங்களில் திரையிடப்பட்டது. நான் அந்தப் படத்தில் உள்ள சில விஷயங்களைப் பாராட்டி ஒரு விமரிசனம் எழுதினேன்- புத்திசாலித்தனமான வசனங்கள், கூர்மையான நடிப்பு-, வேறு சில விஷயங்கள் பற்றி குறை சொன்னேன், அதிலும் குறிப்பாக மகத்தான வெற்றி பார்முலா எனும் பீடத்தில் ஒரிஜினாலிட்டியை பலி கொடுத்ததைக் குற்றம் சொன்னேன். நானே என்னை மேற்கோள் காட்டலாம் என்றால்: “தி அவஞ்சர்ஸ்”சின் வெற்றி ரகசியம் இதுதான்- இது விறுவிறுப்பாய் நகரும் ஒரு சிறிய டயலாக் காமெடி. ஆனால் இந்த திரைக்கதை வேறொன்றாக, மார்வலுக்கும் அதன் புதிய ஸ்டூடியோ முதலாளிகள் மற்றும் வால்ட் டிஸ்னி கம்பெனிக்கும் ஒரு மாபெரும் ஏடிஎம் மெஷினாக, மாறுவேஷம் போட்டுக் கொண்டு வந்திருக்கிறது”. இப்போது பார்க்கும்போது இந்த மதிப்பீடு நியாயமாகத்தான் தெரிகிறது, நானே அப்படிச் சொல்லிக் கொள்ளலாம், இல்லையா? அதன்பின் சில ஆண்டுகள் கழித்து “அவஞ்சர்ஸ்- ஏஜ் ஆஃப் அல்ட்ரான் வந்தபோது ஏறத்தாழ எல்லாருமே இதே மாதிரிதான் சொன்னார்கள்- அதன் வசீகரங்களும் திரில்களும் உயிரற்ற கார்ப்பரேட் ஸ்பெக்டகில் ஆனதில் ஒன்றுமில்லாமல் போய் விடுகிறது என்றார்கள். மிகச் சாதாரணமான ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டுபவர்களின் முன்வரிசையில் நானும் ஒருவனாய் இருந்தேன் என்று சொல்லிக் கொள்வதிலும் ஒரு திருப்தி இருக்கத்தான் செய்கிறது.

இருந்தாலும் அந்த சமயத்தில், நான் சொன்னதற்கு அவசரப்பட்டு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் என்னை பாதித்தார்கள். நியூ யார்க் டைம்ஸ் தளத்தில் என் விமரிசனம் பதிப்பிக்கப்பட்டவுடன், அவஞ்சர்ஸ் படத்திலும் மார்வல் யூனிவர்ஸ் பிரான்சைஸ் வெளியீடுகளிலும் நிக் ஃபியூரியாக நடிக்கும் ஜாக்சன், டிவிட்டரில் ஒரு நிலைத்தகவல் பகிர்ந்து கொண்டார்- “ஏ.ஓ. ஸ்காட்டுக்கு வேறொரு புதிய வேலை தேவைப்படுகிறது! அவருக்கு வேலை கிடைக்க உதவுவோம்! அவரால் செய்யக்கூடிய வேலை கிடைக்கட்டும்!” என்று தன்னைத் தொடர்பவர்களைத் தூண்டும் விதமாக எழுதினார். அவரைத் தொடர்பவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் அவரது அழைப்பை ஏற்றனர்- என் எடிட்டர்கள் என்னை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லவில்லை. மாறாய், டிவிட்டரின் சிறந்த மரபுகளுக்கு ஏற்ப, நான் என்னைக் கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும் என்ற அவர்களது கற்பனையை விரிவாகச் சித்தரித்து  ஜாக்சன் கோபத்தில் சொன்னதை ரீட்வீட் செய்து பரிந்துரைத்தனர். இவற்றில் அர்த்தமுள்ள டிவீட்டுகள் பழகிப்போன, ஏன், கானனிக்கல் என்றும்கூட சொல்லக்கூடிய எதிர்-விமரிசன உணர்வுகளை வெளிப்படுத்தின: எனக்கு சந்தோஷப்படத் தெரியாது; நான் எல்லாருடைய மகிழ்ச்சியையும் கெடுக்கப் பார்க்கிறேன்; நான் வெறுப்பவன், மரபானவன், மேல்தட்டுப் பார்வை கொண்டவன். இதில் எனக்கு மிகப் புதிதாய் இருந்தது- காமிக் புக்ஸ் படிக்கப் பிடிக்காதவனாக இருந்ததால் உயர்நிலைப் பள்ளியில் படித்த காலத்தில் எல்லாரிடமும் உதை வாங்கிய நெர்ட்டாக இருந்த நான் இப்படிப்பட்ட ஒரு ஆளாக இப்போது வளர்ந்திருக்கிறேன் என்பதுதான் (என் காலத்தில் எல்லாரிடமும் அடி வாங்கிய நெர்டுகளில் சிலர் காமிக் புக்ஸ் வாசிப்பவர்களாக இருந்தார்கள். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது என்று நினைக்கிறேன், எல்லாவற்றிலும் சூப்பர் ஹீரோக்களும் ஃபேன்பாய்களும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். நான் அடி வாங்கிய எதற்கும் காமிக் புக்ஸ்கள் காரணமாக இருந்திருக்கவில்லை).

இன்றைக்கு நம் கலாசார வாழ்வின் மாற்ற முடியாத அங்கமாக இருக்கும் அபத்தமான, ஹைப்பர்ஆக்டிவ் இன்டர்நெட் சச்சரவுகளில் ஒன்றாய் அவஞ்சர்ஸ் சம்பவமும் வளர்ந்து வெடித்தது. மேஸ் விண்டு என் வேடத்தைக் கலைத்து விட்டார்! ஜூல்ஸ் வின்ஃபீல்டின் அறச்சீற்றத்துக்கு நான் காரணமாகி விட்டேன்! பொழுதுபோக்கு விஷயங்களை விவாதிக்கும் தளங்களில் ஜாக்சனும் நானும் போட்டோஷாப் செய்யப்பட்ட ஆக்சன் மூவி சண்டைப் போஸ்களில் நின்றோம். மழைக்குப்பின் முளைக்கும் காளான்கள் போல் மினியேச்சர் கருத்துக் கட்டுரைகள் முளைத்தன. நாங்கள் டிவிட்டரில் சண்டை போட்டது பிரேசில், ஜப்பான், ஜெர்மனியில் செய்தியானது. பலமான தாக்குதலுக்கு உள்ளான எனக்கு ஆதரவாகப் பேச  என் சகாக்களில் சிலர் முன்வந்தார்கள்- எந்த வேலையைச் செய்யும் தகுதி எனக்குக் கிடையாது என்று ஜாக்சன் நினைத்தாரோ அந்தப் பொறுப்பின் நேர்மையையும் முக்கியத்துவத்தையும் பாதுகாப்பது தங்கள் கடமை என்று அவர்கள் நினைத்தார்கள்.

 கேள்வி- நீ பயப்படவில்லையா?

பதில் – அதற்கு மாறாய், எனக்கு  நன்றி சொல்ல வேண்டும் போலிருந்தது. என் உயிருக்கோ பிழைப்புக்கோ எந்த ஒரு ஆபத்தும் இருக்கவில்லை. உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையின் ஒரு பில்லியன் டாலர்கள் என்ற இலக்கை விரைவில் தொட்ட படங்களில் இன்றும் இரண்டாவது இடத்தில் உள்ள படம் தி அவஞ்சர்ஸ். டிவிட்டரில் எனக்கு சில நூறு ஃபாலோயர்கள் கிடைத்தார்கள். குறுகிய ஒரு சில நிமிடங்கள் நான் காரித் துப்பப்பட வேண்டிய வில்லனாகவும் மேன்மையான, மிகவும் வசை பாடப்பட்ட லட்சியத்தின் தியாக பிம்பமாகவும் ஒரே சமயத்தில் இருக்க முடிந்தது. அனைவருக்கும் இது வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு அளித்தது, அதன்பின் எல்லாரும் அடுத்த வேலை பார்க்கப் போய் விட்டார்கள்.

ஆனால் தேநீர்க்கோப்பையில் வீசும் புயலும் வானிலையை பாதிப்பதாக இருக்கக்கூடும். ஜாக்சன் ஒரு முக்கியமான, நியாயமான கேள்வி எழுப்பியிருக்கிறார் என்று நினைக்கிறேன். தி அவஞ்சர்ஸ் பற்றியோ வேறெந்த படத்தைப் பற்றியோ நான் எழுதியதில் உள்ள நியாய அநியாயங்களை ஒருபுறம் விலக்கி வைப்போம்- விமரிசகனின் வேலை என்ன என்றும் அதை ஆக்சுவலாகவே எப்படி செய்ய முடியும் என்றும் கேட்பதில் எப்போதும் ஒரு அர்த்தம் இருக்கிறது.

கேள்வி- ஆக, உன் தொழிலை உணர்ச்சிவசப்படும் திரை நட்சத்திரங்களையும் அவர்களது ரசிகர்களையும் தாக்குதல்களிலிருந்து- விமரிசனத்திலிருந்து- பாதுகாத்துக் கொள்வதற்கான காரணங்களை இதில் நீ எழுதியிருக்கிறாய். இது கொஞ்சம் இரட்டை வேடம் போடுவது போலில்லையா? நீ என்ன வேண்டுமானாலும் சொல்வாய், ஆனால் உன்னைப் பற்றி மற்றவர்கள் சொல்வதை உன்னால் ஏற்றுக் கொள்ள முடியாதா?

பதில் – உண்மையில் அப்படியில்லை. அதாவது, ஆமாம் நாம் யாருடைய படைப்புகளைப் பற்றி எழுதுகிறோமோ அவர்கள், ஏன், நம் வாசகர்கள், நாம் செய்வதில் சிறிது குறை சொல்லும்போது நாம் எல்லாரும் கொஞ்சம் உணர்ச்சிவசப்படத்தான் செய்கிறோம். அது மனித சுபாவம்தான். ஆனால் எனக்கு அதைவிட இதுதான் முக்கியமாக இருக்கிறது- நாம் ஒருவரையொருவர் விமரிசித்துக் கொள்கிறோம் என்பதில் ஒரு பொதுப்பண்பை என்னால் பார்க்க முடிகிறது- மனித இனத்துக்கே பொதுவான சுபாவம் இது என்றுகூட சொல்லுவேன்- நாம் எல்லாரும் குறை கண்டுபிடிக்கிறோம். நாம் போற்றவும் செய்கிறோம். தீர்ப்பும் சொல்கிறோம். இதுதான் விமரிசனத்தின் அடித்தளம். நல்லது கெட்டது, எதைக் கண்டனம் செய்ய வேண்டும், எதை ஊக்குவிக்க வேண்டும், எதைப் பற்றி நம் நண்பர்களிடம் சொல்ல வேண்டும் என்பதை நாம் எப்படி அறிகிறோம், அல்லது இது நமக்குத் தெரியும் என்று நாம் எப்படி நினைத்துக் கொள்கிறோம்? தி அவஞ்சர்ஸ் அல்லது எதுவாகவும் இருக்கட்டும், அதன் வெற்றி தோல்வியை நாம் எப்படி மதிப்பிடுகிறோம்? உண்மையைச் சொன்னால், அது நம் வேலையோ இல்லையோ, நாம் ஒரு முடிவுக்கு வரத்தான் செய்கிறோம். நம்மால் இதைச் செய்யாமல் இருக்க முடியாது.

கேள்வி : சரி, நாம் எப்படி தீர்மானம் செய்கிறோம்? அல்லது, கேள்வி இப்படி இருக்க வேண்டுமோ, “நாம் ஏன் ஒரு தீர்மானத்துக்கு வருகிறோம்?”

பதில் – நிஜமாகவே சொல்கிறேன், நான் இந்தப் புத்தகத்தை எழுத ஆர்மபித்தபோது என் கேள்விகளுக்கான பதில்கள் சுலபமாகக் கிடைக்கும் என்று நினைத்தேன், ஆனால் அப்படியெல்லாம் இல்லை. தெளிவாகவும் ஆணித்தரமாகவும் நான் சொல்லக்கூடிய பதில்கள் இருக்கும் என்று நினைத்தேன். எது அழகாக இருக்கிறது, எது பொருள் பொதிந்ததாக இருக்கிறது, எது சந்தோஷப்படுத்துகிறது என்பதை நான் இதை எழுதும்போது கண்டுகொள்வேன் என்று நினைத்தேன்- ஒரு வேளை மானுட இனத்தின் துவக்கக் காலத்தில் நாம் நம்மை வேட்டையாடும் மிருகங்களைத் தவிர்க்கவும் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ளவும் நியூரல் சுவிட்சுகள் அல்லது ஹார்மோனல் எதிர்வினைகளை பரிணாம வளர்ச்சியின் போக்கில் வளர்த்துக் கொண்டோம் என்ற முடிவுக்கு வரலாம். அல்லது இதன் மதிப்பு இவ்வளவு என்று பகுத்து உணரவும் தீர்மானங்களுக்கு வரவும் தேவையான உள்ளார்ந்த, காலத்துக்கப்பாற்பட்ட  தர அளவைகள் நமக்குள் இருக்கும்; அவை நூற்றாண்டு கால மாற்றங்களில் உருவம் மாறி இடத்துக்கு இடம் வெவ்வேறு வகைகளில் வெளிப்பட்டாலும், அவை நம்மை உண்மையும் அழகும் நிறைந்த பாதையில் எப்போதும் கொண்டு செல்லும் என்ற முடிவுக்கு வரலாம் என்று நினைத்தேன்.

மனித படைப்பூக்கத்தின் வரலாற்றைப பார்க்கும்போது உன்னால் பாட்டர்ன்களைப் பார்க்க முடிகிறது- வடிவங்கள், ஒலிகள், கதைகள்- அவை மிக ஆழ்ந்த ஒரு தளத்தில் பரம்பரை பரம்பரையாக ஒரு தொடர்ச்சி கொண்டதாய் இருந்து வந்திருப்பதை உணர்த்துகின்றன. மனிதனின் படைப்புகள் எண்ணிறந்த அளவில் பரந்துபட்டிருப்பதை நீ பார்க்க முடியும். அது அத்தனையையும் ஒரு பகுப்பில் அல்லது குறிப்பிட்ட சில அளவைகளுள் தொகுத்துக் கொள்ள முடியாது என்ற முடிவுக்கும் நீ வரலாம். ஒவ்வொரு கலாசாரமும், ஒவ்வொரு வர்க்கமும், ஒவ்வொரு இனக்குழுவும் ஒவ்வொரு நட்புக்குழுவும் வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டமும் தனக்கான கலைகள் மற்றும் புத்தாக்கங்களுக்குப் பொருந்தும் வகையில் தனக்கேயுரிய கானன்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களை நம் நவீன, காஸ்மோபாலிட்டன் கூருணர்வுகள் முகர்ந்து பார்க்கின்றன, வகைமாதிரிகளைத் தேர்ந்தெடுத்து ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டு பகுத்துப் பிரித்து நாம் கண்டறிந்ததை ஏற்றுக் கொள்ளும் இனிய செயலைச் செய்கின்றன. இவற்றுக்கிடையே, புதிய புதிய விஷயங்கள் தோன்றி நம்மைத் தமக்குள் மூழ்கடிக்கின்றன – இந்த வெள்ளம் நம்மை அசைய விடாமல் ஆட்கொண்டு நம்மில் வெறுமை நிறைத்தாலும் இதுவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. எத்தனை எத்தனை என்று வியக்கிறோம், அல்லது இவ்வளவு இருக்கிறதே என்று கவலைப்படுகிறோம். நம் கவனத்தை அத்தனை அத்தனை விஷயங்களும் கோருகின்றன, நம்மை வசீகரிக்கத்தான் எத்தனை எத்தனை கவனக்குலைவுகள், நம் மேஜை மீதுதான் எத்தனை எத்தனை தரிசனங்கள்- இவற்றிலிருந்து ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுப்பதே ஒரு பெரும்பாடு போலிருக்கிறது.

கேள்வி- அந்த வேலை- தேர்ந்தெடுப்பது, வேறுபடுத்திப் பார்ப்பது, மதிப்பிடுவது, புதிய விளக்கம் அளிப்பது- இதைத்தான் நீ விமரிசனம் என்று சொல்கிறாய்.

பதில் – ஆமாம். ஆனால் இது அதைவிட அடிப்படையான, அவசரமான விஷயமும்கூட. இது சிக்கலான விஷயம். சாமுவேல் எல். ஜாக்சன் விஷயத்துக்குப் போகலாம். அவஞ்சர்ஸ் நிகழ்வு முடிந்து ஆறு மாதங்களுக்குப்பின் அவர் ஹப்பிங்டன் போஸ்ட் நேர்முகம் ஒன்றில் எங்கள் டிவிட்டர் சண்டையைப் பேசினார். அதில் விமரிசனம் பற்றி, அதிலும் குறிப்பாக பாபுலர் கலாசாரத்தை விமரிசனம் செய்வது பற்றி, பொதுவாகவே பரவலாகப் பேசப்படும் ஒரு குற்றச்சாட்டை அவரும் சொன்னார். “உலகத்தில் தொண்ணூற்று ஒன்பது சதவிகித மக்கள் சினிமாவை சினிமாவாகதான் பார்க்கிறார்கள்,” என்று சொன்னார் அவர். “அறிவுத்தளத்துக்கு கொண்டு போகக்கூடிய அறிவார்ந்த விவாதத்துக்கு உரியது அல்ல பாபுலர் சினிமா”.  இது வெகு காலமாகச் சொல்லப்படுவது, இது விமரிசனத்துக்கு எதிரான சக்திவாய்ந்த வாதம்- ஒரு சில வகைகளில் பார்த்தால் இதற்கு பதிலே கிடையாது. ஒரு படைப்பை அதன் அளவைகளைக் கொண்டே அணுக வேண்டும், அனுபவிக்க வேண்டுமே தவிர ஆராயக் கூடாது என்பன போன்ற கருத்துகளில் வேரூன்றிய பார்வை இது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ள மறுப்பதுதான் விமரிசகனின் வேலை. எது ஒன்றையும் அது எப்படி இருக்கிறதோ அப்படி மட்டும்தான் பார்க்க வேண்டும் என்பதை அவன் ஏற்றுக்கொள்ளக் கூடாது, அதை அறிவார்ந்த வகையில் கூர்நோக்க வேண்டும் என்று அவன் வலியுறுத்தியாக வேண்டும்.

 “அறிவுஜீவித்தனம்” என்பது வேண்டுமென்றே அழகற்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல், ஒருவரை நோக்கி அச்சொல்லைப் பயன்படுத்துவதே குற்றம் சாட்டும் செயல். ஆனால் உண்மையில் அறிவுஜீவித்தனம் என்பது, “யோசித்துப் பார்” என்பதற்கு இணையான சொல்தான். யோசித்துப் பார்த்து எடுக்கப்பட்ட படம், யோசித்துப் பார்க்கும் சாத்தியங்கள் கொண்டது என்ற இரண்டும் தி அவஞ்சர்ஸ் படத்துக்கு பொருந்தக்கூடும் என்பதை ஏன் இத்தனை தீவிரமாக மறுக்க வேண்டும்? இந்தக் கேள்வியைக் கேட்பதில் அர்த்தம் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஜாக்சன் உட்பட, அதன் படைப்பாளிகள் தங்கள் அறிவைப் பயன்படுத்தி, அவர்கள் அறிந்தே மேற்கொண்ட சில நோக்கங்களின் காரணமாக உருவான படம் என்ற பொதுப் பார்வையில் தி அவஞ்சர்ஸ் நிச்சயம் ஒரு “அறிவார்ந்த விவரணை”தான். மேலும், அது பிற கேளிக்கை காமிக் புத்தகங்கள் பலவற்றைப் போல், பெரும்பொருட்களைப் பேசுகிறது- கௌரவம், நட்பு, பழிவாங்குதல், சட்டத்துக்கு உட்பட்ட உலகில் தீமை இருப்பதன் சிக்கல், இப்படி பல சொல்லலாம். இந்த வகைமையின் ரசிகர்களும் உயர்நிலைப்பள்ளியில் ஆங்கிலம் பயின்றவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம்தான் இது. இறுதியாக, இருபத்து ஒன்றாம் நூற்றாண்டு ஹாலிவுட் தயாரிப்புகளைச் செலுத்தும் உலகளாவிய வணிகத்தின் கட்டளைகளுக்கு எதிராய் விளையாட்டாய் கதைசொல்லும் உந்துதல் முட்டிக்கொள்ளும்போது என்ன நடக்கிறது என்பதை தி அவஞ்சர்ஸ் காட்டுகிறது (என் கோணத்தில் இதுதான் என்னை ஆத்திரப்படுத்துகிறது).

இத்தனையும் சொல்வதானால் தி அவஞ்சர்ஸ் மிகவும் சுவாரசியமான, சிக்கலான படைப்பு என்றும் அதன் வெற்றிகளும் குறைபாடுகளும் சிந்திக்கத்தக்கன என்றும் சொல்வதாகும். ஆனாலும்கூட நல்லது கெட்டது பிரித்துப் பார்த்து, இதற்குரிய பின்புலத்தைக் கண்டு இதன் இடத்தை நிறுவுவதைப் பற்றி யோசித்துப் பார்ப்பதேகூட நாம் முக்கியமான விஷயத்தைத் தவற விடுவதாக அமையலாம். அல்லது, ஜாக்சன் சொல்வது போல், “…if you say something that’s fucked-up about a piece of bullshit pop culture that really is good—‘The Avengers’ is a fucking great movie; Joss [Whedon] did an awesome job—if you don’t get it, then just say, ‘I don’t get it’”, என்று விட்டுவிடலாம்.

ஆனால், தி அவஞ்சர்ஸ் எப்படிப்பட்ட படம் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். குறிப்பாக, அவஞ்சர்ஸ் படத்துக்கு விமரிசிக்கப்படும் தகுதியில்லை (“a piece of bullshit pop culture”)  என்று சொல்லிக்கொண்டே அது விமரிசனத்துக்கு அப்பாற்பட்டது (“a fucking great movie”) என்றும் ஜாக்சன் இரட்டை அளவுகோல்களைப் பிரயோகிப்பதை என்னால் ரசிக்க முடிகிறது. முன்னொரு காலத்தில் திரைப்படங்கள், ரசமற்ற மற்றும் நடுவாந்தர பொழுதுபோக்குகள் குறித்து அறிவுஜீவிகள் மிகச் சுலபமாகக் கொண்டிருந்த யோசனையற்ற எள்ளலை அவர் எதிரொலிக்கிறார். அதே சமயம், மிகவும் புராதானமான, மிகுந்த உயர் விமரிசனப் பார்வையில், கலைப்படைப்பு என்பது களங்கப்படுத்தப்பட முடியாதது, அது தன்னளவிலேயே பூரணமானது என்ற கருத்தையும் அவர் இங்கு பயன்படுத்திக் கொள்கிறார். இப்படிப்பட்ட கருத்துச்சூழலில் ஒரு விமரிசகன், எந்த வகையிலும் அச்சுறுத்தாத, விளையாட்டாகச் செய்யப்பட்ட கேளிக்கையை தீவிரமாக எடுத்துக் கொள்ளும் குற்றம் செய்தவன் ஆகிறான். அல்லது, மிகவும் உன்னதமான ஒன்றை தன்னுடைய அபத்த மட்டத்துக்குக் கீழே தள்ளிய குற்றம் புரிந்தவன் ஆகிறான். எப்படிப் பார்த்தாலும் விமரிசகன் குற்றம் செய்தவன்தான்.

ஆனால் இங்கே இதுதான் முக்கியம்: இதைச் செய்யும் விமரிசகன், தான் அவஞ்சர்ஸ் பார்த்த அனுபவம் பற்றியோ (அல்லது ஒரு நாவல் வாசித்தது பற்றியோ ஓவியத்தை ரசித்தது பற்றியோ இசை கேட்டது பற்றியோ) பேசும்போது, நின்று நிதானித்து யோசிக்கும் யாரையும்விட வித்தியாசமாய் எதுவும் செய்வதில்லை. ஏனென்றால், சிந்திக்கும்போதுதான் விமரிசனம் துவங்குகிறது. நாம் அத்தனை பேரும் அந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் ஆகிறோம். இல்லையென்றால், ஒரு படைப்பை எதிர்கொள்கையில் நாம் இந்தக் குற்றத்தைச் செய்திருக்க வேண்டும்.

கேள்வி : ஆக, சிந்தனைக்கு ஆதரவாக இப்போது புத்தகம் எழுதியிருக்கிறாயா? உன் வாதம் என்ன? உண்மையில் யாரும் சிந்திக்கக்கூடாது என்று சொல்வதில்லை.

பதில் – சீரியசாகவா சொல்கிறாய்? சிந்தனாவாதத்தை எதிர்ப்பது ஏறத்தாழ நம் குடிமைச் சமயமாகவே ஆகிவிட்டது. “விமரிசனச் சிந்தனை (Critical thinking)” என்பது எங்கும் காணக்கிடைக்கும் கல்விக் கோஷமாக இருக்கலாம்- தெளிவாக வரையறை செய்யப்படாத இந்த ஆற்றலை வளர்பருவத்தில் நம் குழந்தைகள் போகிற போக்கில் எங்காவது கண்டெடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்- ஆனால் உலகில் நீ உன் அறிவைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கான பலன் அபரிதமான அளவில், கைமேல் கிடைக்கிறது.

கலாசார நுகர்வோர்கள் என்ற வகையில் நாம் எதுவும் செய்யாமலிருக்கும் வகையில் ஆற்றுப்படுத்தப்படுகிறோம். அல்லது, எல்லாம் நல்லபடியாக வேலை செய்யும்போது, ஒரு பொய்யான அரைகுறை விழிப்பு நிலை அடையும் வகையில் தூண்டப்பட்டு, ரசிகமனம் என்ற ஒரு தற்காப்புத்தன்மை கொண்ட குழு அடையாளத்தை நோக்கியோ, ஆழமற்ற, அரைகுறை நகைமுரண்தன்மை கொண்ட ‘எல்லாவற்றிலும் நல்லது உண்டு’ என்ற பாவனையை நோக்கியோ செல்ல  ஊக்குவிக்கப்படுகிறோம். இத்தனைக்கும் இடையில், அரசியல் பொதுச்சமூகத்தின் குடிகள் என்ற வகையில் நாமும், வாதத்தின் இடத்தை விதண்டாவாதம் கைப்பற்றிக் கொள்ளும் , கோட்பாடுப் பகைமைகள் நிறைந்த, அதிதீவிர விருப்பு – வெறுப்புச் சூழலில், போராளிகளாக அணிதிரள வேண்டியதாகிறது.

நம்மைத் தொடர்ந்து தாக்கிக் கொண்டே இருக்கும் உணர்வுகளால் தடுமாறுகிறோம், கருத்து வெள்ளத்தில் தத்தளிக்கிறோம் என்ற நிலையில் நமக்கு எதையும் சந்தேகிக்க இடமில்லை, எதையும் யோசிக்க அவகாசமில்லை. இதை விட்டு வெளியேறலாம் என்றெல்லாம் பகல்கனவு காண முடியுமே தவிர அதெல்லாம் நடக்காது. நாமிருக்கும் உலகில் உள்ளபடியே தெளிவாகக் கண்டறிந்து வாழக் கற்றுக் கொண்டாக வேண்டும், வேறு வழியில்லை. ஆனால், இது எளிய விஷயம் அல்ல. கூட்டமாய்ச் சிந்திப்பது, முன்னனுமானங்களில் சரண் புகுவது, அறியாமையில் ஆழ்ந்திருப்பது போன்ற சுகங்களைத் தேடிச் செல்வது இதைப் பார்க்கும்போது மிக எளிது. இந்த  வசீகரங்களை எதிர்த்து நிற்க நமக்கு விழிப்புணர்வும், சுய கட்டுப்பாடும், புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும்  தேவைப்படுகிறது.

கேள்வி- அப்படியானால் நீ எழுதியிருப்பது சோம்பலுக்கும் மடமைக்கும் எதிரான பிரகடனமா?

பதில் – அப்படியும் சொல்லலாம். ஆனால் அப்படி ஒரு எதிர்மறை பொருள் கொள்ள வேண்டிய அவசியமென்ன? இந்தப் புத்தகம் கலையையும் கற்பனையையும் கொண்டாடுகிறது என்றும் மகிழ்ச்சிக்கான நம் உள்ளார்ந்த தேடலை விசாரிக்கிறது என்றும் தேடலுக்கான உந்துசக்தியை நாம் பல்வேறு வகைகளில் நுண்மையாக்கிக் கொள்வதைப் பேசுகிறது என்றும் கொள்ளலாம்.

கேள்வி – இத்தனையும்தான் விமரிசகனின் வேலையா?

பதில் – ஒவ்வொருவரின் வேலையும் இதுதான், இந்த வேலையை நாம் அத்தனை பேரும் செய்ய முடியும் என்றும் நம்புகிறேன். அர்த்தம் காணவும் மகிழ்ச்சியடையவும் எல்லையில்லா தவிப்பு கொண்டவர்கள் நாம், அந்தத் தவிப்பை நிறைவு செய்யும் படைப்புகளை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதை யோசித்துப் பார்ப்பதில் இந்த முயற்சி துவங்கலாம் என்று சொல்லுவேன். அதே சமயம், இந்த அழகிய, புதிரான விஷயங்களை எதிர்கொள்ளும்போது நாம் அடையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லுவேன்.

நாம் கலையை ஒரு அலங்காரப் பொருளாகக் கருதுகிறோம். அது ஏற்கனவே நிறுவப்பட்ட ஒரு குறுகிய பாதை என்றும் அதில் நாம் ஒவ்வொருவரும், தனித்தனியாகவோ ஒத்த மனம் கொண்ட கூட்டத்தினருடனோ, பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் நம்புகிறோம். அல்லது வாழ்க்கையில் நமக்கு மகிழ்ச்சியளிக்கும், படைப்பூக்கம் மிகுந்த கூறுகளை அதைவிட முக்கியமான விஷயங்கள் என்று நாம் நம்புவனவற்றுக்கு அடுத்த நிலையில் இறக்கி வைக்கிறோம். நம் இருப்பின் அழகியல் பரிமாணங்களை நம் மத நம்பிக்கைகள், அரசியல் கோட்பாடுகள், அறச் சார்புகள் போன்ற பெட்டிகளுக்குள் அடைத்து வைக்கிறோம். நாம் கலையை அற்பப்படுத்துகிறோம். அர்த்தமற்ற விஷயங்களை வழிபடுகிறோம். நம் உளறலுக்கு அப்பால் நம்மால் பார்க்க முடிவதில்லை.

எல்லாம் போதும்! நம் உள்ளங்களுக்கு விடுதலை அளிப்பதே கலையின் பணி; விமரிசகனின் கடமை, அந்தச் சுதந்திரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பதைக் கண்டறிவது. எல்லாரும் விமரிசகர்கள்தான் என்று சொன்னால் நாம் ஒவ்வொருவரும் நம் மனச்சாய்வுகளைக் கடந்து சிந்திக்க முடியும், நம் சந்தேகத்தையும் திறந்த மனத்தையும் சமநிலையில் பேண முடியும், களித்துக் கொழுத்து மொண்ணையாகிப் போன நம் உணர்வுகளைக் கூர் தீட்ட முடியும், நம்மைச் சூழ்ந்திருக்கும் அறிவுத்தள மந்தநிலையை எதிர்த்துப் போராட முடியும்  என்று பொருள்படுகிறது. அல்லது அப்படி புரிந்து கொள்ள வேண்டும். ஆச்சரியமான நம் அறிவுக்கு நாம் வேலை தர வேண்டும். நம் அனுபவங்களுக்கு உரிய மரியாதை அளித்து அதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

கேள்வி : மிகச் சரி. ஆனால் ஒரு விமரிசகன் இத்தனையும் செய்வது எப்படி?

பதில் – நல்ல கேள்வி!

நன்றி- A. O. SCOTT ASKS HIMSELF: WHAT IS CRITICISM?, A.O. SCOTT, LITHUB http://lithub.com/what-is-criticism/

image credit – https://www.kirkusreviews.com/features/o-scott/

இந்திராவின் ஆசைகள் – அசோகமித்திரனின் இரு சிறுகதைகள்

 அஜய் ஆர்

 

ami

பிரபல வீணைக் கலைஞர் ‘ராமச்சந்திரன்’ பற்றி தன் தோழி சரோஜாவிடம், இந்திரா (‘இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள வேண்டும்’) கேட்கப் போக , அவர் யார் என்றே தெரியாதது போல் முதலில் பதில் சொல்லி, பிறகு “எல்லாம் கேட்டிருக்கிறேன். ஒரு வாத்தியம் என்றால் அதனிடம் மரியாதை, பக்தி எல்லாம் வேண்டாம்? குரங்கை ஆட்டிக் காண்பிப்பது போலவா வீணையை வாசிப்பது” என்று அவரைக் கடுமையாக விமர்சிக்கிறாள் சரோஜா. இவளால் இப்படி நுட்பமாக விமர்சிக்க முடியுமா என்று நம்ப முடியாமல் அவளை இந்திரா கூர்ந்து பார்க்க , தான் வீணை கற்றுக்கொள்ளும் வாத்தியார் தான் அப்படிச் சொன்னார் என்று உண்மையை தயங்கிய படி சரோஜா சொல்கிறாள்.

நாம் மதிக்கும் ஒருவரின் கருத்தை, அதை புரிந்து கொள்ளாவிட்டாலும், நம்முடையது போலவே சொல்வதின் நுண் சித்திரம் இது. தன் ஆசையை நிறைவேற்றாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே செல்லும் தந்தை, “அழுத மூஞ்சி சிரிக்குமாம், கழுதைப் பாலைக் குடிக்குமாம்” என கேலி செய்பவர்களை நீங்கள் எனக்கு தம்பி தங்கைகளே இல்லை என இந்திரா பழிப்பது, திருவிழாவுக்கு போவது போல் கும்பலாக கச்சேரி கேட்க கோவிலுக்கு செல்வது, அங்கு தன் சங்கீதம் பற்றி அதிகம் தெரியாத தாய் கேட்கும் கேள்விகளுக்கு பல்லைக் கடித்துக்கொண்டு பதில் சொல்வது, சற்று நேரத்தில் வாயைத் திறந்து கொண்டே அவள் தாய் தூங்கி விடுவது என வீணை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற இந்திராவின் ஆசையைப் பற்றிய கதையில் பெரும் பகுதி இத்தகைய சித்தரிப்புக்களால் தான் நிறைந்திருக்கிறது.

இலக்கில்லாமல் செல்வது போல் தோன்றினாலும் வாசகனே அறியாதவாறு அவனை தான் கொண்டு செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்வார் அசோகமித்திரன். சரோஜாவின் வாத்தியாரைப் பார்த்து விட்டு திரும்பும் இந்திராவைக் கடிந்து கொள்ளும் அவள் தாயிடம் அவள் நடத்தும் உரையாடல் இந்தக் கதையில் அத்தகைய ஒரு இடம். முதலில் இந்திராவின் விருப்பத்துக்கு ஒப்புக்கொள்பவர், வீணை கற்றுக் கொள்ள கட்டணம் 20 ரூபாய் என்றவுடன் ‘இருபது ரூபாயா’ என்று ஒரு கணம் மலைக்கிறார். அவர் தாய் கொத்தமல்லி, பச்சை மிளகாய் வாங்க பேரம் பேசுவது போல் இப்போது செய்வதாக இந்திராவுக்கு தோன்ற, தொடர்ந்து அவர் உடைந்த மூக்குக் கண்ணாடியை தொடர்ந்து உபயோகிப்பது, மாதக் கடைசியில் பக்கத்து வீட்டில் கடன் வாங்குவது நினைவில் வர இங்கு ஒரு திறப்பு அவளுக்கு கிடைக்கிறது. நிறைய செலவாகும் என்ற காரணத்தை மனதில் வைத்துக்கொண்டு, தான் இப்போது கற்றுக்கொள்ளப் போவதில்லை என அவளே, தாய் வற்புறுத்தியும் உறுதியாக இருக்கிறாள்.

குழந்தைமை மறைந்து இந்திரா முதிர்ச்சி அடையும் கணம் என்ற அளவில் முடிந்திருக்கக் கூடிய கதையில், இந்திராவிற்கும் வாசகருக்கும் இன்னொரு திறப்பை அளிக்கிறார் அசோகமித்திரன். இரவு தூக்கம் வராமல் படுத்திருக்கும் இந்திரா, அம்மா சப்தமில்லாமல் குலுங்கி அழுது கொண்டிருப்பதை உணர்வதோடு கதை முடிகிறது. தன் குழந்தையின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்பதனாலா, அல்லது இளமையில் இதே போல் நிறைவேறாமல் போன தன் ஆசையை எண்ணியா அல்லது இரண்டினாலுமா, எதனால் இந்திராவின் தாய் அழுகிறாள் என்பதற்கான பதிலை வாசகனின் யூகத்திற்கே அசோகமித்திரன் விடுகிறார்.

தாய் அழுவதைப் பார்த்துக்கொண்டிருந்த இந்திரா இப்போது மத்திம வயது பெண். (‘இந்திராவுக்கு வீணை கற்றுக் கொள்ள முடியவில்லை’). இந்தக் கதையில் அவளின் இள வயது ஆசை நிறைவேறவில்லை என்று தெரிய வருகிறது. தன் மகன் கோபுவை பாட வைக்க அவள் முயல, அவனோ கராத்தே கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறான். நிறைவேறாத ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது என்று இந்தக் கதையை விமர்சிக்கலாம். ஆனால் கதை இந்திரா தன் ஆசையை மகன் மீது திணிப்பதைப் பற்றியல்ல. அவனின் ஆர்வமின்மைக்காக வருத்தப்பட்டாலும், இந்திரா அவனைக் கடிந்து கொள்வதில்லை.

இந்திராவிற்கு அவள் சகோதரர்களின் நண்பன் சங்கரன், வீணை ராமச்சந்திரன் குறித்த அவன் கருத்துக்கள், பொதுவாகவே அவன் தரப்பை தன்மையாக எடுத்து வைக்கும் அவன் குணம் எல்லாம் இப்போது நினைவில் வருகின்றன. ஒரு நாள் நீ இல்லாமல் நான் இருக்க முடியாது என்று அவளிடம் சொல்லும் அவன், அடுத்த சில நாட்கள் கழித்து அவள் வீட்டிற்கு வருவதை நிறுத்தி விடுகிறான். இந்த நினைவலைகளைத் தொடர்ந்து அ.மியின் புனைவில் அதிகம் காண முடியாத, யதார்த்தத்தைக் கடந்து செல்லும் , பகற்கனவின் சித்தரிப்பில் சங்கரன் அவள் வீட்டிற்கு வருகிறான். இந்திரா நரைத்த தலைமுடியுடன் இருக்க அவன் மட்டும் அன்று பார்த்தது போலவே இருப்பதாகச் சுட்டப்படுவதில் உள்ள உளவியல் கவனிக்கத்தக்கது. சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பும் சங்கரனை மீண்டும் அழைத்து வருமாறு அப்போது வீட்டிற்குள் நுழையும் கோபுவை இந்திரா அனுப்ப, அவன் வெளியே யாரும் இல்லை என்கிறான்.

வீணை கற்றுக்கொள்ள முடியவில்லை என்பது இந்திராவின் நிறைவேறாத ஆசை என்று வாசகனுக்குத் தெரியும். இந்திராவின் சங்கரன் குறித்த நினைவுகளும், அதைத் தொடரும் பகற்கனவும் அது ஒன்று மட்டுமே அவளுடைய நிறைவேறாத ஆசை இல்லையோ என்ற உணர்வைத் தருகிறது. அவளில்லாமல் அவனால் இருக்க முடியாது என்று ஒரு நாள் சங்கரன் சொல்லி விட்டுச் செல்ல, இந்திராவிற்கோ தன் மீது அவன் பெரிய சுமையை தூக்கி வைப்பது போல் தோன்றுகிறது. அவன் குறித்து அவளுக்கிருக்கும் நேர்மறையான அபிப்ராயத்தை சுட்டும் சம்பவங்களை வைத்து, அது மற்றவர்கள் அறிந்து விடக் கூடாது என்ற பயம் கலந்த, அதே நேரம் இனிமையும் கூடிய சுமை தான் என்று யூகிக்க முடியும். ஆனால் அதற்கடுத்த சில நாட்களில் சங்கரன் அவள் வீட்டிற்கு வருவது நின்று விடுகிறது.

வீணை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவளின் ஆசையைப் போல் அழுத்தமானதாக இதைச் சொல்ல முடியாவிட்டாலும், சங்கரன் குறித்த நினைவுகள் இத்தனை ஆண்டுகளாக அவள் மனதின் ஒரு மூலையில் அழியாமல் இருந்தது என்பதை அவள் பகற்கனவு உணர்த்துகிறது. இருவருக்கும் ஆண் பிள்ளைகள் மட்டுமே இருப்பதால் சம்பந்தம் கூட செய்து கொள்ள முடியாது என்று சங்கரன் கூறுவதாக இந்திரா காணும் பகற்கனவில், இன்னும் சில சொல்லப்படாத விஷயங்கள் உள்ளன.
வீணை கற்றுக்கொள்ள தனக்கிருந்த ஆசையை அவள் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடும். ஆனால் சங்கரன் குறித்து? அவள் யாரைத் தேடுகிறாள் என்று கோபு கேட்பதற்கு ‘சங்கரன்’ என்று இந்திரா சொல்ல அவன் உதட்டைப் பிதுக்குகிறான். ‘அவள் சங்கரன் என்றாலும் சர்தார் சிங் என்றாலும் அவனுக்கு ஒன்று தான்’ என்று அசோகமித்திரன் சொல்லும் போது இந்திராவின் – யாருடனும் பகிர முடியாத – அந்தரங்க சோகம் தெரிகிறது.

ஒரு வேலை சங்கரனை மணந்திருந்தால் அவள் ஆசைகள் நிறைவேறி இருக்கலாம். சங்கரனுக்கு என்ன ஆனது என்பதையும் இறுதியில் புனைவு எழுத்தாளனுக்கு அளிக்கும் ‘எல்லாம் தெரிந்த கதைசொல்லி’ என்ற சலுகையின் மூலம் வாசகனுக்கு மட்டும் சொல்கிறார் அசோகமித்திரன். அதை இதுவரை அறிந்திராத இந்திரா இனியும் அறிய மாட்டாள். அவள் நினைவுகளில் எப்போதும் இனிமையை நிறைக்கும் இளைஞனாகவே சங்கரன் வலம் வருவான்.

நிறைவேறாத ஆசைகளுடன் நடுத்தர வயதை அடைந்துள்ள இந்திராவின் வாழ்வும் அவள் தாயைப் போல சப்தமில்லாமல் குலுங்கி அழுவதில் – இதே போல் யாருக்கும் வெளிக்காட்டாமல் மனதோடு குமறிக்கொண்டிருக்கும் எண்ணற்ற வாழ்க்கைகளோடு – தான் இணைய வேண்டும்.

அசோகமித்திரனின் பிற சிறுகதைகள் குறித்து- 

ஒளிப்பட உதவி – இட்லிவடை

கொண்டாட்டமும் கேளிக்கையும்

இந்த வாரம் இடுகையிடப்பட்டுள்ள “கைகால்களை நீட்டி” என்று துவங்கும் அமலன் ஸ்டான்லி கவிதையின் துவக்கம் தெளிவில்லாதது. குழந்தைகள் வகுப்பறைக்கு வெளியே பெய்யும் மழையில் கைகளையும் கால்களையும் நீட்டி ஈரமாக்கிக் கொள்கின்றன என்பது மழைக் கவிதை என்று தெரிந்தபின்தான் புரிகிறது. மேலும் கள்ளத்தனம் என்ற சொல் குற்றம் என்பதை நினைவுபடுத்தாமல் போனாலும், மறைக்கப்படும் செயலைச் சுட்டுகிறது.

அடுத்து வராண்டாவில் கேட்கும் கூக்குரல்கள் டீச்சரின் பிரம்பு வீச்சில் அடங்குகின்றன- டீச்சரின் பிரம்புவீச்சு எங்கே நடக்கிறது? வராண்டாவில் இருக்கும் மாணவர்களை அடிக்கிறாரா? ஆம் என்றால் கூக்குரல்கள் வலியின் அலறல்கள். அல்லது வகுப்பறைக்குள் அவர் பிரம்பைக் கொண்டு மேஜையில் அடித்து, அதனால் வராண்டாவில் நிற்கும் மாணவர்களின் சத்தம் நிற்கிறதா? அப்படி என்றால் கூக்குரல்கள் அதுவரை சந்தோஷமாக ஒலித்த சத்தங்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். இந்த அளவுக்கு ஏன் யோசிக்க வேண்டும் என்று கேட்டால், ஒட்டுமொத்தமாக தொகுத்து வாசிக்கும்போது இது மிகவும் மகிழ்ச்சியான கவிதையாகவே இருக்கிறது. ஒவ்வொரு வார்த்தையாக வரி வரியாகப் பிரித்து படிக்கும்போதுதான் இது போன்ற முரண்பொருள் புலப்படுகிறது.

To decipher what Tolstoy wanted to say, the translator has to devise an interpretation of Tolstoy’s narrative voice in “Anna Karenina” என்கிறது ஒரு NYT கட்டுரை . ஒன்று, நாம் முதல் பத்தியில் உள்ள கள்ளத்தனம் என்பதைத் தொடர்ந்து கூக்குரல்கள் என்று வருவதால் இது மழையின் அழகை ரசிக்கும் கவிதை மட்டுமல்ல, வகுப்பறைக்குள் அடைந்து கிடக்கும், ஆசிரியர்களுக்கு பயப்படும் மாணவர்களையும் பற்றிய கவிதை என்று புரிந்து கொண்டால், மழை பெய்வதைப் பார்க்கவும் அதில் நனையவும் வகுப்பறையை விட்டு வெளியே வரும் மாணவர்களை வராண்டாவில் பிரம்பால் அடித்து ஆசிரியர் உள்ளே போகச் சொல்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். அப்போது கூக்குரல்கள் அவலக் குரல்கள் என்று அர்த்தப்படும். அப்படியில்லாமல், கள்ளத்தனம் என்பது பிஞ்சுகளைச் செல்லம் கொஞ்சுவது என்று புரிந்து கொண்டால், வராண்டாவில் மாணவர்கள் சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள், ஆசிரியர் மேஜையை பிரம்பால் அடிக்கிறார் அல்லது காற்றில் பிரம்பைச் சுழற்றிக் கொண்டு வருகிறார், அதுவரைக்கும் சந்தோஷமாக சத்தம் போட்டுக் கொண்டிற்கும் மாணவர்கள் இப்போது அடங்குகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

மேற்கண்ட இரண்டு அர்த்தங்கள் எப்படி இருந்தாலும், முதல் பத்தியில் பிஞ்சுகள் அறைக்குள் இருக்கிறார்கள், கைகால்களை நனைத்துக் கொள்கிறார்கள் இப்போது இன்னும் கொஞ்சம் வெளியே, வராண்டாவுக்கு வந்து விட்டார்கள் என்பது தெரிகிறது. அதற்கு அடுத்தபடியாக விடலைகள்.

கவிதையில் பாழ் கழிவறை என்று வருகிறது, அவசியம்தானா? எதுகை மோனையாக எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். அல்லது பாழடைந்த இடங்கள் குற்றச்செயல்களுக்கு பாதுகாப்பாக இருப்பதால் பள்ளியின் பாழ் கழிவறையில் சீட்டாடிக்கொண்டு பதுங்கியிருக்கும் விடலை மாணவர்கள் சிலர் என்று இருக்கலாம். இவர்கள், மழை பெய்வதைப் பார்த்ததும் வெளியே வருகிறார்கள் – கொடிமரத் திடலில் நன்றாக நனைந்து ஆடுகிறார்கள். அவர்கள் ஆசிரியர்களுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாய் மறைத்து வைத்திருக்கும் சீட்டுக் கட்டுகள் அவர்களுடைய ரகசியப் பைகளில் இருந்து பிதுங்கி விழுகின்றன.

இதெல்லாம் எப்படியானாலும் முதலில் மாணவர்கள் அறையில் இருந்தார்கள், கள்ளத்தனமாய் ரசித்தார்கள். அடுத்து வராந்தாவுக்கு வந்தார்கள், அடி வாங்கி அழுதார்கள் அல்லது மிரட்டலுக்கு பயந்தார்கள். இப்போது துணிச்சலாக வெளியே வந்து மழையில் ஆடுவது மட்டுமல்ல, அவர்களின் திருட்டு புத்தியும் வெளிப்பட்டு விடுகிறது – பதிவர் மொழியில் சொன்னால், பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.

அடுத்து- “மெலிந்து சிரித்து பார்வை மாற்றாது நோக்கும்/ மழலையரின் கலவர ஆர்வம்.”

-இதோ இங்கே சில பூனைக்குட்டிகள். கள்ளம் கபடமில்லாத மழலைகள்தான், ஆனால் இந்தச் சீட்டுக்கட்டு விடலைகளுக்கும் இவர்களுக்கும் எவ்வளவு தூரம்? அச்சம் அணை போடுமளவே கலவர உணர்வு, அச்சம் நீங்கினால் ஆர்வம் இவர்களை கொடிக்கம்பத்துக்குக் கொண்டு சென்று விடும்.

எதிர்பாராத குறுமழைக்கு
யாரோ தவறவிட்ட சரித்திர நூல்
மண்பட்டு நனைகிறது
மரத்தடியில் கவனிப்பாரற்று.

-இறுதியில் ஒரு காட்சி. யாராலோ தவறவிடப்பட்ட சரித்திரப் புத்தகம் மழையில் நனைந்து கொண்டிருக்கிறது- இது எப்போது தவறவிடப்பட்டது? ஏன், எப்போது கைக்கொள்ளப்பட்டது என்றும்கூட கேட்கலாம். இங்கு கல்வியைச் சரித்திர நூல் பிரதிநிதிப்படுத்துகிறது- சரித்திரம் என்பது இறந்த காலம் (வாழும் வரலாறு என்றும் உண்டு, ஆனால் இந்தக் கவிதையின் கான்டக்ஸ்ட் அந்த மாதிரி அர்த்தப்படுவதில்லை), மழை நிகழ்காலம், எதிர்பாராதது, அனைத்தையும் நனைப்பது, கல்வி தொகுக்கப்பட்டது, நாலு சுவர்களுக்குள் அடைத்து வைத்திருக்கும் நெறிப்பிரதி. அறைக்கு வெளியே பெய்யும் மழை அது அளிக்கும் களிப்பால் அமைப்புக்கு வெளியே வரச் சொல்லும் அழைப்பு. மேலும், சரித்திர நூல் மண்பட்டு நனைவதில் ஒரு கவித்துவம் இருக்கிறது- மண்ணோடு பிறந்தது மண்மூடி மறைந்ததம்மா.. என்று பாடினால் அதில் ஒரு நியாயம்கூட இருக்கும்.

சுருக்கமாகச் சொன்னால், இந்தக் கவிதையில் ஓர் உணர்வு முரண்பாடு உள்ளது. இது மாணவர்களுக்கும் மழைக்கும் ஆதரவான கவிதையாக வெளிப்பார்வையில் தெரிகிறது என்றாலும் இதன் உள்ளடக்கம் ஒரு அடக்குமுறையைக் கண்டிக்காமல் சித்தரிக்கிறது. ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும், அடக்குமுறை அது இது என்று எந்த கோஷமும் இல்லாமல் மழைநாளின் களிப்பைக் கொண்டாடவே செய்கிறது.

oOo

கொண்டாட்டம் களியாட்டமாய் மாறாமல் எப்போது கேளிக்கையாய் நின்று விடுகிறது? பார்வையாளர்கள் பங்கேற்க முடியாத தொலைவில் கடைசி வரை நின்று விலகும்போது கொண்டாட்டத்துக்கு உரிய உருமாற்றம் நிகழ்வதில்லை, யார் யார் எங்கிருந்தார்களோ அங்கேயே இருந்து பிரிகிறார்கள், அப்போதிருந்த நிகழ் கணத்தின் சாட்சிகளாய் ஒரு சில தடயங்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன- இந்தக் கவிதையில் சரித்திரப் புத்தகம், மற்றொரு கவிதையில்  குழிபறித்துக் கிடக்கும் தெரு. சிவசக்தி சரவணன் மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த இரு கவிதைகளிலும் கடக்கப்படாத தொலைவைப் பார்க்க முடிகிறது.

“நான் உண்மையில் ஓரளவு ஞாபகம் இருந்த தேவதச்சனின் ஒரு கவிதையை மொழிபெயர்க்க விரும்பி, அதை எடுத்துப் பார்த்தபோது அதில் குறிப்பாக அதன் கடைசி வரிகளை எப்படி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது என்று தெரியாமல் இருந்தது. சரி, வேறு ஏதாவது எளிமையாக இருக்கிறதா என்று சில புத்தகங்களைப் புரட்டியபோதுதான் அமலன் ஸ்டான்லியின் மக்கள் கூடுமிடம் என்று துவங்கும் கவிதையும் இன்னொன்றும் அகப்பட்டன,” என்று எழுதுகிறார் சரவணன். எந்த திட்டமிடலும் இல்லாத தன்விருப்பத் தேர்வுகளிலும் ஒருமை இனங்காணப்படக்கூடும் என்பதற்கான உதாரணங்கள் இந்தக் கவிதைகள். உள்ளடக்கம் ஒரு சந்தோஷ நிகழ்வு, ஆனால் விவரிக்கப்படும் பின்னணியில் ஒரு ஏமாற்றம் நிழலாடுகிறது, களிப்பைச் சித்தரிக்கும்போதே உள்ளடங்கி நிற்கும் தடுமாற்றங்களையும் இந்தக் கவிதைகள் நிகழ்த்துகின்றன.

‘”…but paging back through the novel, I realized that I never had to worry about coming upon some disturbing sensibility, original metaphor, syntactical oddity, evidence of an intricate pattern, mysterious allusion, or alien setting. No, The Nest is formed from familiar twigs to hold in fledgling readers who cheep for their next helping of plot from the pre-digesting mother/author,” என்று ஒரு கட்டுரையில் படிக்க நேர்ந்தது. ஒரு இலக்கியப் படைப்பில் நாம் எதிர்பார்க்கக்கூடியவை எவை என்பதில் சிலவற்றை இது வசதியாக பட்டியலிட்டுத் தருகிறது- ஒரு உறுத்தலைத் தோற்றுவிக்கும் நுண்ணுணர்வு (disturbing sensibility), புதிய படிமங்கள் (original metaphor), தனித்துவம் கொண்ட மொழி (syntactical odditity). நுட்பமான கட்டமைப்பு (intricate pattern), புதிர்த்தன்மை கொண்ட சுட்டல்கள் (Mysterious allusion), அந்நிய களம் (alien setting). வெ. அமலன் ஸ்டான்லியின் இவ்விரு கவிதைகளும் ஒரு டிஸ்டர்பிங் சென்சிபிலிட்டியை உணர இடம் கொடுக்கின்றன என்று நினைக்கிறேன்.

அண்மைய பதாகை இதழ்களில் நகுல் வசன் ந. ஜெயபாஸ்கரன் கவிதைகளையும் இப்போது சரவணன் வெ. அமலன் ஸ்டான்லி கவிதைகளையும் மொழிபெயர்க்க எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இது நம் வாசிப்பைச் சிறிதளவேனும் விரிவுபடுத்துகிறது.

  • ஜெயபாஸ்கரன் கவிதைகள்-

இந்தக் கணம்
ஐந்தேகால் ரூபாய்க்கு

  • வெ. அமலன் ஸ்டான்லி கவிதைகள்-

மக்கள் கூடுமிடம் 
கைகால்களை நீட்டி

அசோகமித்திரனின் ‘மாலதி’ – ஒரு குறிப்பு

 அஜய் ஆர்

ami

தான் பணிபுரியும் மருத்துவ மையத்தில் ஒரு மணி நேரத்திற்குள், அன்று அங்கு வந்துபோனவர்களைப் பற்றிய அட்டவணை பதிவு செய்தல், மாதா மாதம் வர வேண்டிய பணம் பற்றிய கணக்கு எழுதுதல், சிறப்பு மருத்துவர் ஒருவரை மையத்திற்கு வரச் செய்ய ஏற்பாடு செய்தல், மையத்திலிருந்து நோய் குணமாகிச் செல்பவர்களுக்கான ரசீது தயார் செய்தல், பழுதடைந்திருக்கும் குழாயை சரி செய்வது போன்ற தொடர் வேலைகளை முடிக்கும் மாலதி, அசோகமித்திரனின் புனைவு வெளியில் வாசகன் அடிக்கடி சந்திக்கும், இருபதுகளின் மத்தியில்/ இறுதியில் இருக்கும், வேலைக்குச் செல்லும் கீழ் மத்திய வர்க்கப் பெண்களின் மிக முக்கியமான பிரதிநிதி.

மருத்துவமனையின் ஒரு காலை நேரக் காட்சிகளோடு ஆரம்பிக்கும் ‘மாலதி’ நெடுங்கதை/ குறுநாவல், வெறும் புறச்சூழலை உருவாக்கி மட்டுமல்ல. அதன் உடல் /மன அயர்ச்சியை மாலதியோடு வாசகனும் உணரச் செய்வதால்தான், வேலை அனைத்தையும் முடித்து விட்டு கண்ணாடியில் எத்தேச்சையாக ஒரு கணம் தன் முகத்தைப் பார்த்து, பெண்கள் எப்போதுமே கண்ணாடியின் முன்பு தான் நின்றிருக்கிறார்கள் என்று எழுதப்படும் துணுக்குகள் பற்றி “… எவ்வளவு பெண்களுக்கு கண்ணாடியை ஒழுங்காகப் பார்க்கும் வாய்ப்பே கிடையாது என்று இவர்களுக்குத் தெரியுமா… வீட்டில் கூட ஒரு ஓட்டைக் கண்ணாடிதான். அதில் தெரியும் பிம்பம் எல்லாமே அரைகுறை தான்” என்று அவள் எண்ணும்போது, அதில் உள்ள உண்மையை நாம் உணர முடிகிறது.

மருத்துவனை நிகழ்வுகளோடு மாலதிக்கும் அவள் தாய்க்கும் இடையே உள்ள உறவுச் சிக்கல் இன்னொரு இழை. அவள் இல்லாவிட்டால் மருத்துவமனையின் அன்றாட அலுவல்கள் ஸ்தம்பித்து விடும் என்ற அளவிற்கு அத்தனை வேலைகளையும் செய்யும் மாலதியிடம் அது எதுவும் தெரியாத, தெரிந்து கொள்ளும் அக்கறைகூட இல்லாத அவள் தாய் “நீ பண்ணற பெரிய உத்தியோகத்துக்கு சிநேகிதி கல்யாணத்துக்குக் கூட போகக் கூடாது? அப்படி என்ன பெரிசா அந்த டாக்டர் கொட்டிக் கொடுத்துடறார்” என்று அவள் உணர்வுகளைக் காயப்படுத்துகிறார். தன் கணவன் வேலை செய்த இடத்திற்கு மாலதி வேலைக்குச் செல்லவில்லை என்ற கோபம் அவருக்கு. தந்தை அங்கு அனைவரிடமும் கடன் வாங்கியுள்ளதால், அவர்கள் முன்னால் நிற்பதற்குக்கூட கூசுகிறது என்பது மாலதியின் தரப்பு.

அசோகமித்திரனின் புனைவுகளில் நாம் சந்திக்கும் கணவனை இழந்த, ஆனால் மன உறுதியை இழக்காத அம்மாக்களில் ஒருவர் மாலதியின் தாய். கல்யாணத்திற்கு மாலதி செல்லவில்லையென்றால் ‘வயிற்றெரிச்சல்’ காரணமாக வரவில்லை என்று மற்றவர்கள் நினைப்பார்கள் என்று கூறி, மகளை அழ வைக்கும் அளவிற்கு உளவியல் நுட்பமும், கடுமையும் நிறைந்தவர் போல் முதல் தோற்றத்தில் தெரிகிறார். ஆனால் அவருடைய கோணத்தில், மற்றவர்கள் மனதில் என்ன நினைப்பார்களோ என்பதற்காக ஒரு வேலையை விடுவது முட்டாள்தனமான ஒன்றாக இருக்கக்கூடும். யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், தேவையில்லாமல் எதை எதையோ எண்ணி நல்ல (அதிக ஊதியம் கொடுக்கக்கூடிய) வேலைக்குச் செல்லாமல், தன் எதிர்காலத்தை மகள் வீணடிக்கிறாளே என்ற ஆதங்கம் கூட இத்தகைய கடுஞ்சொற்களாக வெளிவரலாம்.

மருத்துவமனையின் உரிமையாளரான டாக்டர் மணமானவர், அவருக்கு சுஜனா என்ற பெண்ணுடன் தொடர்பிருக்கிறது. அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி டாக்டரை வற்புறுத்துவது மாலதிக்குத் தெரியும். இந்த விஷயம் டாக்டரின் மனைவிக்கும் தெரிந்து, டாக்டர் மிகப் பெரிய நெருக்கடியில் விழப்போகிறார் என்று மாலதி நினைக்கிறாள். அதற்கேற்றார் போல், டாக்டர் மருத்துவமனையில் இல்லாதபோது அவர் மனைவியும், சுஜனாவும் சந்தித்து வாக்குவாதம் செய்ய ஆரம்பிக்க, அந்த இடத்தில் மிகவும் அசௌகரியமான சூழல் உருவாகிறது. இதில் எந்த சம்பந்தமும் இல்லாத மாலதி அவமானப்படுத்தப்பட, அவள் வேலையை விட்டுவிடலாம் என்று முடிவு செய்கிறாள். (தந்தையின் பணியிடத்திற்கு அவள் செல்ல விரும்பாததற்கான காரணத்தின் உளவியலை புரிந்து கொண்டால், அவளின் இந்த முடிவையும் புரிந்து கொள்ள முடியும்). அதே நேரம் அவள் யதார்த்தத்தையும் ஒரு புறம் உணர்ந்தேயிருக்கிறாள் என்பதால் கிளம்பும்போது, தான் திரும்பவும் வேலைக்கு வர வேண்டும் என்ற தேவை ஏற்பட்டால் சொல்லியனுப்புமாறு கூறுகிறாள்.

நாம் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பார்க்கும் தெருக்களும், அதன் வீடுகளும், கடைகளும், அந்த மொத்தச் சூழலும் பிறிதொரு நேரத்தில் பார்க்கப்படும்போது நாம் அதுவரை அவற்றை கண்டிராதது போல் வேறொரு தோற்றம் கொள்ளக்கூடியவை. மாலதி தன் வேலையின் இயல்பால் தினமும் நகரம் உயிர் கொள்ளும் முன்பே மருத்துவனைக்குச் சென்று மாலைதான் திரும்புகிறாள். இன்று வேலையை விட்டுவிட்டதால், நீண்ட நாட்கள் கழித்து 9-10 வாக்கில் தெருக்களில் செல்லும் அவள், புதிதானவை போல் அனைத்தையும் கவனிக்கிறாள். இக்கட்டான சூழலிலும் மாலதி உணரும் இந்தக் காட்சி பேதத்தின் நுட்பம் ஒருபுறமிருக்க, அனைவரும் அந்த நாளை எதிர்கொள்ள தயாராகிச் சென்றுகொண்டிருக்க, அயர்ச்சியுடன் சென்று கொண்டிருக்கும் மாலதிக்கோ அந்த நாள் முடிந்தே விட்ட மாதிரிதான் என்பதில் முரணும் உள்ளது.

வீட்டிற்கு திரும்பும் போது, தான் எந்த பெண்ணிற்கும் எதிரியாகக் கூடாது என்று மாலதி நினைக்கும் அதே நேரம், தன் உறுதி திடமானதா என்பதை ஒரு சிறு பரிசோதனைக்குக்கூட உட்படுத்த முடியாது என்று உணரும் போது வருந்துகிறாள். கதை இங்கு முடிகிறது. பெண்களின் துயரை கனிவுடன் பேசுவது என்ற அளவிலேயே சிறந்த கதையாக இருந்திருக்கக் கூடியதை இன்னொரு கோணத்தில் பார்க்க கதையில் உள்ள ஒரு நிகழ்வு உதவுகிறது.

டாக்டரின் மனைவிக்கும் சுஜனாவுக்கும் வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்ற, சுஜானா அவளை அடித்து விடுகிறாள். டாக்டர் மனைவி ஸ்தம்பித்து வேறெதுவும் செய்ய முடியாத நிலையில், தன் தோளைத் தொட வரும் மாலதியை நோக்கி “.. நீ வேலை பண்ண வந்திருக்கையா, வசியம் பண்ண வந்திருக்கயா..” என்று கோபப்படுகிறாள். 18வது அட்சக்கோடு நாவலில் ஒரு நிகழ்வு. ஹைதராபாத் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று நடக்கும் போராட்டத்தின் போது, சந்திரசேகரனின் கல்லூரியில் படிக்கும் சில பெண்கள், வகுப்புக்களுக்குச் செல்லும் அவனைப் போன்றவர்களிடம், வளையல் தந்து கேலி செய்கிறார்கள். அந்த இடத்திலிருந்து ஓடி வந்து விடும் அவன் அவர்களை தொலைவில் இருந்து கவனிக்கும்போது, காரில் வருபவர்களிடமோ, சிரித்துப் பேசிக்கொண்டு வருபவர்களிடமோ அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதில்லை என்று தெரிகிறது.

முதல் பார்வையில் இரு நிகழ்வுகளுக்கும் சம்பந்தமே இல்லாதது போல் தோன்றினாலும், இரண்டும் ஒன்றையே சுட்டுகின்றன. சந்திரசேகரனின் கல்லூரி பெண்களுக்கு காரில் வருபவர்களை எதிர்கொள்ள திராணி இல்லையென்றால், டாக்டரின் மனைவிக்கு சுஜனாவை ஒரு கட்டத்திற்கு மேல் எதிர்கொள்ள முடிவதில்லை. இரண்டு நிகழ்வுகளிலும் தாங்கள் எதிர்கொள்ள முடியாதவர்களை தவிர்ப்பவர்கள், தங்களுக்கு கீழே உள்ளவர்கள் என அவர்கள் வரையறுக்கும் எளியவர்கள் மேல் எந்த தயக்கமும் இல்லாமல் வன்முறையைப் பிரயோகிக்கிறார்கள். நாளை டாக்டர் சுஜனாவையும், மனைவியையும் சமாதானப் படுத்தக் கூடும். அவர் மாலதியை வேலைக்கு வருமாறு அழைத்து அவளும் யதார்த்த நிலையை எண்ணி மீண்டும் செல்லக்கூடும். ஆனால் எந்த காரணமோ, குற்றவுணர்வோ இல்லாமல் தன் மீது எப்போது வேண்டுமானாலும் சுமத்தப்படக்கூடிய இழிவுக்கு அவள் ஒவ்வொரு கணமும் தயாராக இருக்க வேண்டும்.

எளியவர்கள் அன்றாடம் சந்திக்கும் இழிவுகளை பரிவுடன் சுட்டும் இந்த நிகழ்வு, பெண்கள், ஆண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என யாரைப் பற்றியதாக இருந்தாலும் அனைவருக்கும் பொதுவான மானுடத்தைத் தொட்டு, அதனுடன் உரையாடுவதால் அசோகமித்திரனின் புனைவு வெளியில் இந்தக் கதை முக்கியமான மைல்கல்லாகிறது.

நூலகத்துக்குப் போகும் வழியில் ஒரு கிரிக்கெட் மாட்சைப் பார்க்க நின்றபோது- அசோகமித்திரன் சிறுகதை குறித்து

 அஜய் ஆர்

ami

PDF

ஒரு ஓவரின் இறுதி இரு பந்துகளில் அடுத்தடுத்து இருவரை ஆட்டமிழக்கச் செய்கிறான் ஒரு போலர். இன்னொரு போலர் வீசும் அடுத்த ஓவர் முடித்த பின் ‘ஹாட்ரிக்’ செய்யும் சாத்தியத்துடன் முதல் போலர் மீண்டும் பந்து வீசத் தயாராகிறான். எதிரணிக்கும் அதனுடைய ஆதரவாளர்களுக்கு மட்டும் உவப்பாக இருக்க முடியாத ‘ஹாட்ரிக்கை’ அவன் அடையக் கூடாது என்று கதைசொல்லி ஏன் எண்ணுகிறான்?

மனக்கோணல் பற்றிய இந்தச் சிறிய கதையில் கணிசமானப் பகுதியை அதன் புறச்சூழலைக் கட்டமைப்பதில் செலவிடுகிறார் அசோகமித்திரன். மாலைநேரத்தில் நூலகத்துக்குச் செல்லும் வழியில் உள்ள பள்ளிக்கூட மைதானத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை கவனிப்பது கதைசொல்லியின் வழக்கம். இப்படி எந்த ஆரவாரமுமற்ற காட்சியோடு ஆரம்பிக்கும் கதையில் ஒரு மாலை அவன் கவனிக்க நேர்வதுதான் இந்த ஆட்டமும். ‘நான் உத்தியோகமின்றி இருந்த பல தருணங்களில் அதுவம் ஒன்று’ என்று அந்த தினத்தைப் பற்றி அவன் சொல்லும் ஒரு வரியிலிருந்தே, கதைசொல்லி தொடர்ந்து வேலை தேடிக் கொண்டிருப்பவன், ஆனால் ஏதோ காரணத்தால் அடிக்கடி வேலையை இழப்பவன் என்று அவன் பின்னணி குறித்து யூகிக்க முடிகிறது (அவனுடைய குணாதிசயம் இதற்கு காரணமாக இருக்கலாம்) . இரண்டு மணி நேரம் தேடி ஒரு நூலை தேர்வு செய்பவன் என்பது அவன் வாசிப்பு குறித்து நாம் யோசிக்கச் செய்கிறது. பள்ளி மைதானத்தைச் சுற்றியுள்ள வேலியில் ஒரு சில இடங்கள் மட்டும் – மாணவர்கள் குறுக்கு வழியில் வெளியேற/ நுழைய – அகலப்படுத்தப்பட்டிருப்பது, கதைசொல்லி பள்ளி நாட்களில் வாயில் வழியாகச் செல்லாமல் சுவர் ஏறிக் குதித்துச் சென்றது குறித்த நினைவுகள் என்றுஅனைவருக்கும் பொதுவான பள்ளி நிகழ்வுகளை மீட்டெடுக்கின்றது.

இவற்றைத் தொடர்ந்து ஆட்டக்காரர்களைப் பற்றிய கதைசொல்லியின் அவதானிப்புக்கள் கதையின் மையத்திற்கு அருகில் வாசகனை இட்டுச் செல்கின்றன. அந்த போலர் அடுத்தடுத்து இரண்டு ஆட்டக்காரர்களை ஆட்டமிழக்கச் செய்கிறான். பிறகு அவன் மீண்டும் பந்து வீசத் துவங்கும் முன் அவனும் அணியின் தலைவனும் மற்றவர்களை எந்த இடங்களில் நிறுத்த வேண்டும் என்று நேரமெடுத்துக் கொண்டு முடிவுசெய்கிறார்கள். ஹாட்ரிக் என்பது அரிய நிகழ்வல்லவா. இப்போது தான் கதைசொல்லி போலரின் தோல்வியை விரும்புகிறான். வாசகன் இப்போது கதையின் மையத்தை அடைந்து விட்டான்.

கதைசொல்லி விரும்பியதைப் போலவே அந்த பந்தில் விக்கெட் விழுவதில்லை. ஆனால் இப்போது கதைசொல்லி போலருக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறான். தொடர்ந்து ஆட்டத்தைப் பார்க்க விரும்பாமல் நூலகத்திற்குச் செல்கிறான். கதைசொல்லி தன் வெறுப்பைக் கடந்து வந்து விட்டானா அல்லது தான் நினைத்தது நடந்து விட்டது என்ற வெற்றி உருவாக்கும் பெருந்தன்மையில்தான் அவ்வாறு எண்ணுகிறானா என்ற கேள்விகள் எழும் அதே நேரம் கதை அதைப் பற்றியதல்ல என்ற எண்ணமும் ஏற்படுகிறது. கதைசொல்லி தான் சிக்கிய சுழலிலிருந்து தன்னை மீட்டெடுக்கிறான் என்பதாக கதையின் முடிவைப் நாம் புரிந்து கொண்டாலும், அவனிடம் போலரின் கொண்டாட்டம் (அல்லது பிறிதொன்று) ஏற்படுத்தும் மனக் கோணலிற்கான உண்மையான காரணம் எளிதில் புலப்படுவதில்லை.

வேறெங்கோ சென்றுகொண்டிருக்கும்போது தனக்கு நேரடியாக சம்பந்தமில்லாத ஆட்டத்தை கவனிக்க ஆரம்பித்த – பொதுவாக கிரிக்கெட் என்றில்லாமல் விளையாட்டு மேல் கதைசொல்லிக்கு பெரிய விருப்பு இல்லாத நிலையில் (புகழ் பெற்ற ஆட்டக்கார்களை தெரிந்து வைத்திருப்பதைத் தவிர) – ‘எளிய ஓடிப் பிடிப்பது தவிர வேறு விளையாட்டு நான் ஆடினதாக ஞாபகம் இல்லை’ என்று அவன் சொல்வதிலிருந்து இதை புரிந்து கொள்ள முடிகிறது – மிகக் குறைவான நேரத்திற்கே என்றாலும், முகம் கூட சரியாக பார்க்க முடியாத ஆட்டக்காரனின் தோல்வியை அவன் விரும்பும் அளவிற்கு அவனுள் வெறுப்பு குடிகொண்டு, அதன் கசப்பினால் அவன் தன்னையே ஏன் சுயவதை செய்து கொள்ள வேண்டும்.

‘First impression is the best impression’ என்று அடிக்கடி சொல்லப்படுவதற்கேற்ப விளையாட்டைப் பார்க்க ஆரம்பித்த குறைந்த நேரத்திலேயே அந்த போலரிடம் கதைசொல்லிக்கு – அவன் யாரென்று தெரியாமலேயே – மனவிலக்கு ஏற்பட்டுவிடுகிறது. முதல் இரு விக்கட்டை வீழ்த்தியவுடன் போலரின் உற்சாகமான – மற்ற பார்வையாளர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கக்கூடிய – கொண்டாட்டம் கதைசொல்லிக்கு மட்டும் இவ்வளவு பெரிய அசூயையையும், மன விலக்கத்தையும் ஏன் உருவாக்க வேண்டும். கதைசொல்லியும் இதை உணர்ந்தே இருக்கிறான். அந்த போலரால் இப்படி சம்பந்தமேயில்லாத ஒருவன் தன் தோல்வியை விரும்புவான் என்று கற்பனைகூட செய்ய முடியாது.

ஆனால் கதைசொல்லியை பொறாமைக்காரனாகவோ மற்றவர்கள் மகிழ்ச்சியை தாள முடியாத மனப் பிழற்சி கொண்டவனாகவோ அசோகமித்திரன் சித்தரிப்பதில்லை. தான் சுட்ட விரும்புவதை முன்வைக்க அத்தகைய வழமையான பாத்திர வார்ப்பு அவருக்குத் தேவைப்படுவதும் இல்லை. ஒரு சில கணங்கள் மட்டும் தன் அகத்தில் இருள் குடிகொள்ளும் சராசரி ஆசாமி தான் நம் கதைசொல்லி. அப்படி அவன் இருப்பதாலேயே அவன் கொள்ளும் உணர்வுகள் அதிக கூர்மை கொள்வதோடு, அவ்வுணர்வுகளுக்கான உந்துதல் புரியாவிட்டாலும், நம்மை அவற்றுடன் அடையாளப்படுத்திக் கொண்டு அணுக்கமாகவும் உணர முடிவதோடு, கதைசொல்லி கதையைப் படிக்கும் வாசகர்களில் ஒருவராகவும் இருக்கலாம் என்ற சுயபரிசோதனையை செய்யவும் தூண்டுகிறது. ஏளனத்தை, அகம்பாவத்தை வெளிக்காட்டுபவை என ஒருவரின் புன்சிரிப்பை, உடலசைவை இன்னொருவர் (தவறாக) புரிந்து கொண்டு ,முதாலமவர் மீது காழ்ப்பு கொண்டு அதை விருட்சமாக வளர்க்கும் நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன.

அசோகமித்திரனின் பிற சிறுகதைகள் குறித்து- 

இரு திருமணங்கள்

இரண்டு விரல் தட்டச்சு

இன்று நிம்மதியாகத் தூங்க வேண்டும்

oOo

ஒளிப்பட உதவி – Vaidheeswaran Voices…