Author: பதாகை

செரினா

மாயக்கூத்தன்

ஷாராபோவாவின் முதல் கிராண்ட்ஸ்லாம் வெற்றி செரினாவுக்கு எதிராக 2004 விம்பிள்டனில் கிடைத்தது. அந்தப் போட்டி எனக்கு இப்போதும் நினைவில் இருக்கிறது. எப்போதுமே வில்லியம்ஸ் சகோதரிகளை எனக்குப் பிடித்ததில்லை. அவர்களுடைய தோற்றம், ஆக்ரோஷம், போட்டிகளில் அவர்கள் ஆதிக்கம் செலுத்திய விதம், நிறைய காரணங்கள் இருக்கக்கூடும். அதனால், ஷாராபோவா ஜெயிக்க வேண்டுமென்று விரும்பினேன். நினைத்தது நடந்தபோது, ரொம்பவே மகிழ்ச்சி. ஷாராபோவா, செரினாவுக்கு எல்லா விதத்திலும் மாற்றாக இருந்தார் என்பது என் நினைப்பு.

எந்த விளையாட்டை எடுத்துக் கொண்டாலும் அதன் நுட்பங்களை நான் அறியேன். எனக்கு அதுவொரு காணும் பொழுதுபோக்கு. இரண்டு பேர் விளையாடுகிறார்கள் என்றால், யாராவது ஒருவரை சப்போர்ட் பண்ணுவேன். சட்டென்று ஒரு நொடியில் இது நடக்கும். இவர் அருமையான ப்ளேயர் என்றெல்லாம் யாரைப் பற்றியும் தெரியாது. ஆக, ஒவ்வொரு முறை வில்லியம்ஸ் சகோதரிகள் ஜெயிக்கும்போதும் கடுப்பாக இருக்கும். அதனால் ஷாராபோவா ஜெயிக்க விரும்பினேன்.

சமீப வருடங்களில் செரினா ஒரு விம்பிளிண்டனில் ஜெயித்து, பின் பரிசை தலையில் வைத்து கரகம் ஆடியதுகூட ரசிக்கக்கூடியதாக இல்லை. முதன் முறை நான் சந்தோஷப்பட்டதற்கும் 2015க்கும் பதினோரு வருடங்கள். ஹிங்கிஸ், ஹெனின், டேவர்போர்ட், கிம் கிளிஸ்டர்ஸ், அனா, மெளரிஸ்மோ, இப்படி நிறைய பேர் வந்து போயிருந்தாலும், செரினா இன்னமும் வெல்கிறார் என்பது ஆச்சரியம். அதுவும் முப்பது வயதுக்கு மேல் ஒரு விளையாட்டு வீரரின் ஆதிக்கம் எப்படி செல்லுபடியாகிறது? ஃபெடரர் ரொம்பவே திணறுகிறார். நாடலின் ஃபிட்னெஸ் அவருக்கு சாதகமாக இல்லை. ஆனால், செரீனா இன்னமும் இருக்கிறார்.

2004ல் நான் கல்லூரிக்குச் செல்லத் தொடங்கவில்லை. அப்போது என்னைப் பற்றிய என் எண்ணம் ரொம்பவே வண்ணமயமாக இருந்தது. செரினாவையும் அவருடைய ஆக்ரோஷத்தையும் ஏதோ பண்படாத முரட்டுத்தனமாகத்தான் என்னால் எடுத்துக் கொள்ள முடிந்தது. ஆனால், 2015ல் அப்படியில்லை. செரினாவின் உழைப்பும் மீண்டும் மீண்டும் வெளிப்படும் ஆக்ரோஷமும் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றன. 2004ல் என்னைப்பற்றி எனக்கிருந்த நம்பிக்கை தொடரவில்லை. பத்து வருடங்களில் நான் தேங்கிவிட்டதாகவே நினைக்கிறேன்.

இப்போது செரினா எனக்கு அணுக்கமாகத் தெரிகிறார். என்னுடைய பல நண்பர்களைப் போல, சரளமான ஆங்கிலமும் அடிப்படையான ஒரு லாகவமும் எனக்கு கைவரவில்லை. நான் எத்தனை ரூபாய் கொடுத்து துணி வாங்கினாலும் அதை அடுத்தவர் போல உடுத்த முடியாது. எத்தனை கற்றுக்கொண்டாலும், பிறரைப் போல் என்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியாது. இது என் எண்ணமாக மட்டும் இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு. இன்றைக்கு புதிதாக வந்திருக்கும் வீரர்களுக்கு இடையிலேயும் செரினா தனித்தே தெரிகிறார். நம்பிக்கைகளையும் எண்ணங்களையும் திருப்பிப் போடும் ஒருவர் செரினாவுக்குப் பிறகு வரவில்லை.

After the women’s final, the BBC played a montage of Williams reading Maya Angelou’s poem “from a past that’s rooted in pain / I rise . . .” She never asked for this, not for the pain or hate or chance to redeem history. But, at this Wimbledon, she has owned not only her greatness but her role as a transcendent figure in society. Still, she rises. She generates her own context. I thought of that at the end of her match, as she and Kerber lingered at the net in a long, tight hug. The picture—an African-American and a blond German of Polish descent, their arms intertwined—stayed with me. There was nothing political meant by that embrace, of course. It was a gesture of admiration, affection, and respect. It was no more a political act than an ace. And yet there was something powerful to it. We sometimes project our problems onto sports. But sports can also be, in some small but real ways, where we start to work them out.

2016ல் செரினா விம்பிள்டன் வென்றபிறகு வந்த கட்டுரையின் கடைசி பத்தி இது. அவர் அளவிற்கு கஷ்டங்களையோ சாதனைகளையோ நான் கண்டதில்லை. இப்போது அவர் எனக்கு ஒரு தேவதையாகத் தெரிகிறார். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். எனக்கும்தான்.

தொடர்புடையவை
1. Kerry Howley, The Unretiring serena Williams, http://nymag.com/thecut/2015/08/serena-williams-still-has-tennis-history-to-make.html
2. Louisa Thomas, Serena Williams, Andy Murray, and a Political Wimbledon, http://www.newyorker.com/news/sporting-scene/serena-williams-andy-murray-and-a-political-wimbledon

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா

ஹைட்டியின் பூகம்பத்தில் பிழைத்தவன்

சரவணன் அபி

 

அவன்
வண்டியோட்டிக் கொண்டிருந்தான்

கனத்த குரல்
இடையறாத
உற்சாகக் குரலோசையிடையே
பரபரவென
காற்றில் அலையும்
கரங்கள்
முழுதும் பாதியுமாய்
வெண்சுண்ணம் பூசி
உயராது நிற்கும்
போர்ட் ஆ பிரின்ஸின் கட்டிடங்கள்
காட்டி
போக்குவரத்தின் நெரிசல் கண்டு
பதறி நான் அலறும்போது
சிரித்து காரை
நெறிப்படுத்தும்

இது எங்கள் தேவாலயம்
இதுதான் நாடாளுமன்றம்
இது என் தந்தை சிக்கிக் கிடந்த
சிறைச்சாலை
இது தான் என் தாய்
நிலம்விளை பொருள் விற்கும்
வாரச்சந்தை
நானும் என் தங்கையரும்
ஆடி மகிழ்ந்த பூங்கா
பாதியில் நின்ற பள்ளி
புன்சிரிப்பு வழியும்
கனத்த குரலில்
சொல்லிச்சென்றவனின்
கரம்தொடர்ந்து
பார்வை தொடர
எதுவும் இல்லை
எங்கும்

இடையில் விழுந்த
அமைதி உணராது
கூடைச்சுமை தாங்கித்திரியும்
ஆடவர் பெண்டிர்
கூட்டம் தவிர்த்து
நிலைச்சின்னம் இருமருங்கும்
தேடி
திரும்பிப் பார்த்தேன்
அவனை

கண்ணாடியின் முன்னால்
பதிந்திருந்த
அவன் பார்வையில்
இன்றுமில்லை
நாளையுமில்லை

விழித்து எழுந்தால்
ஆடியிருந்த
எந்தச்சின்னமும் இல்லை
கூடிமகிழ்ந்த
பள்ளி இல்லை பூங்கா இல்லை
சந்தை இல்லை வீடு இல்லை
ஆலயம் இல்லை சாலையும் இல்லை

பின்னிக் கிடந்த
எந்த
நினைவுகளும் இல்லை

திரும்பிக் கேட்டான்
கண்ணீர் வழிய
என் புன்னகை உறைய

துடைத்தெறியப்பட்டுவிட்ட
எங்கள் நினைவுச்சின்னங்கள்
சுவடின்றி மறைந்த  பாலியங்கள்
புரியுமோ என்னவோ
உங்களுக்கு
புரியுமோ என்னவோ

ஒளிப்பட உதவி – Radio Tginen

இராகப் பெண்கள் – 3: காம்போதி யதுகுல காம்போதி- பூவும், காயும்

பானுமதி ந

lasara

புவனா…. புவனேஸ்வரி… அகிலத்திற்கெல்லாம் தலைவி. புன்னகையும் பொறுமையும் பூண்ட பூமாதேவி. தன்னைக் காத்து, தற்கொண்டான் பேணி தகை சான்ற சொல் காத்து சோர்வில்லாமல் இருந்தவள். இவள்தான் கையகல….. இல்லை… அதைவிட அதிகமான வடிவும், நிறமும், திடமும், தனி மணமும் கொண்ட செம்பருத்தி. இந்தப் பெண்ணை தி. ஜா. எங்கே பார்த்தார்? இனிமையே உருவான இவள் எப்படியெல்லாம் அந்தக் குடும்பத்திற்குள் கலந்து விடுகிறாள்?

அவள் ஒரெ பெண். வீட்டிலே வளர்ந்த செம்பருத்தி. பதியமிட்டு, பதியமிட்டு வளர்த்த பூ.. உள்கூடம் முழுவதும், சாமியின் அறையிலும் மலர்ந்து மலர்ந்து சிரிக்கும் பூ. அவள், குழலிலும் சூடும் அருமைப் பூ. கன்னங்கரிய கேச பாசத்தில் செம்மையாய், கம்பீரமாய் வீற்றிருக்கும் அழகுப் பூ.

திருமணம் செய்யப் பேச்சு நடக்கும் முன்னரே, கணவனாக வரப் போகிறவனின் குடும்பத்தில் இத்திருமணத்திற்கு காரணமாக இருந்தவன் மரணிக்கிறான். அடுத்தடுத்த சோதனைகள். நாயகனின் அண்ணனும் அடுத்தவன் கடனிற்கு ஈடுகட்ட அனைத்தையும் இழக்கிறான். மனித மாண்புகள் மங்காத இடங்கள் இருக்கின்றன என்று காண்பித்தது தி.ஜா வின் வெற்றி.

சொன்ன சொல், கொடுத்த வாக்கு, சொல்லாத விடயம் எல்லாம் காப்பாற்றத்தான் மனித பிறப்பே! படுக்கையில் படுத்திருந்தவன் தரையில் எழுந்தாற்போல் மாறியது சட்டனாதன் நிலை. இந்த மாறுதல் அந்தத்  திருமணத்தை நிறுத்தவில்லை. மாறாக, தயக்கங்களை அறுத்து வெளியே தெரியாத மனக் கசடுகளை அகற்றி நல்லபடியாக நடக்கிறது. இது யாருடைய வெற்றி? நாயகன் பெற்றுக் கொள்ளும் இடத்தில்: நாயகி மறுதலித்தாலும் கேட்பதற்கு ஒன்றுமில்லை. நாயகனுடன் அப்பொழுது இருக்கும் தாயும், அண்ணியும் சற்றுக் கசப்புடன்தான் இருக்கிறார்கள்.

தந்தையின் எண்ணமும், இறந்தவனின் கடைசி எண்ணமும் புவனாவை செலுத்தியதைவிட சட்டத்தின் மேல் அவள் கொண்ட காதல்… அந்தக் காதலும் மிகப் பூடகமாகக் கையாளப்படுகிறது.

அவள் காதலொருவனைக் கைப்பிடித்தாள். அவன் காரியம் யாவினும் கைகொடுத்தாள். எப்படிப்பட்ட உயர்வான பாத்திரம். அவள் வேலை செய்வதே தெரியாது… அவள் பூ வாடாது… உருவி துடைத்துவிட்டாற்போல் ஒரு தோற்றம். எல்லாக் குழந்தைகளுடனும் ஒட்டு, உறவு. கரிக்கும் முதல் ஓரகத்தியையும், காய்ந்து ஏங்கும் இரண்டாம் ஓரகத்தியையும் சாதுர்யமாகக் கையாள்கிறாள். தன் வாழ்வு என்று ஒன்று அவள் வாழ்ந்தாளா என்றால்… எனக்கு சொல்லத் தெரியவில்லை. இதைவிட நிறைந்த வாழ்க்கை உள்ளதா என்ன?

இத்தனை நிறைவான, ததும்பாத நிறைகுடமாக நம் கண் முன்னே வரும் புவனா…. கொஞ்சம்கூட அப்பழுக்கற்றவளா? மானிட இனத்தின் குறைகளை அவளிடமும் வைக்கிறார் அவர். வாழ்க்கையில் நம்ப இயலாத குணக் குன்றாக மனிதர்கள் இருப்பதில்லை என்பதையும் குணம் மிகுந்த அவள் பாத்திரத்தின் வாயிலாகவே அவர் சொல்கிறார். இதில்தான் அவர் படைப்பு முழுமை கொள்கிறது என்பேன்.

விஷாத ஸ்வரம் வராத இராகம்…. பாசாங்குகள் அற்ற இராகம்.. பாடப்பாட மெருகேறும் இராகம். தன்னுள் ஒரு ஸ்வரத்தை மறந்து மாறுபடும் ஒன்றென ஒலித்து, பின்னர் மீண்டு தன் நிலை பெறும் இராகம். இதை பெண் உடலில் நடுவயதில் ஏற்படும் இரசாயன மாறுதலுடன் இணைக்கும்  நுட்பத்தை என்னவென்று சொல்வது?

சிவனைக் கவர்ந்த இராகம். குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட இராகம். தேவாரப் பண்ணில் மணக்கும் இராகம். ”எந்தன் தாய் சீதா தேவியின் முன் உன் பாணங்கள் ஒன்றுமில்லை இராமா” என்று  தியாகையர் சொன்ன இராகம். தேவ கந்தர்வ இராகம்.

அப்படியெனில், யதுகுல காம்போதி எப்படி?

இவள் லா.ச. ராவின் கௌரி. இமவானின் புதல்வி. தீக்குளியின் நாயகி. இவளும் ஒரே பெண்தான். ஆனால் தம்பியர் ஐவர். வாழ்க்கையின் யதார்த்தம் புரியாத மேட்டிமை மனப்போக்கு. கணவன் எத்தகைய சூழலிலும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வது இவள் நெஞ்சின் நெருடல். அவனைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனுள் தென்படும் பல்வேறு வடிவங்களில், இவளுக்கான தனிப்பட்ட வடிவம் எது? நெருக்கமாக அதே சமயம் விலகலாக ஏனிப்படி இருக்கிறான்? அவன் இவள் தவறுகளைச் சுட்டுவதில்லை. ஆனால் ஒரு புன்னகையில், ஒரு வார்த்தையில் இவளையே  தன் தோல்விக்கு வருந்துமாறும் செய்து விடுகிறான். அவன் அழகும், தெளிவும், நடத்தையும், அவன் அனைவருக்குமான ஒரு மனிதனாக இருப்பதும் இவளை பெருமையும் கொள்ளச் செய்கிறது; அவனைச் சிறுக அடிக்கவும் மனம் ஏங்குகிறது. இவள் கணவனை மனதளவில் காய்கிறாள். அதற்காக தன்னையும் நொந்து கொள்கிறாள். ஆனாலும் அந்த அசூயை போவதில்லை. இரவில் தலையணையில் ஒரு நீலமலர் போல் தூங்கும் அவன் முகத்தை சிதைத்து ஒரு கறையேனும் ஏற்படுத்த நினைக்கிறாள். நல்ல வேளை, செயல்படுத்துவதில்லை.

இவளின் எண்ணம் ஓங்கி ஓங்கி அவன் ஒரு தீபாவளியன்று தீக்குளிக்கு ஆளாகிறான். வெந்து, கருகி, அழகினை இழந்து, உடல்நலம் குலைந்து அவனும் இவளும் துன்புறுகிறார்கள். இவளின் உள் எண்ண வேட்கைக்கு தானே தன்னைக் காவு கொடுத்து  அதிலும் அவன் இவளை வீழ்த்துகிறான்- இவள் அகந்தைக்கு அவன் மனோபலமும் காணிக்கைதான். இவள் அவனுக்காக மாங்கல்யப் பிச்சை ஏந்துகிறாள். அவன் உடலில் காணும் தீ வடுக்கள் இவளின் மனப் போரின் வெளிமுகங்கள்.

இறுதியில் பெண்ணிற்கே உண்டான பரிவில் இவள் அவனைத் தழுவி தன்னையும் கரைத்துக் கொள்கிறாள். உள்ளே பொங்கிய அபரிமிதமான அன்பினை அப்பொழுது உணர்ந்து கொள்கிறாள்.

சிவமும் சக்தியும் அர்த்தநாரீஸ்வரராக இணைந்தாலும், வலமும் இடமும் முந்தைய தோற்றத்தின் எச்சங்களே.

சட்டம் தான் வாழ்வு புவனாவிற்கு.

கிலேசம் போர்த்தும் முள் ஆடை கௌரிக்கு

தவழ்ந்து, தளர் நடையிட்டு, மழலை பேசி, தென்றல் என அலையாடி, பெண் எனும் பேரழகாய் உருக்கொண்டு, தாயாகி, அன்பென உருக்கொள்ளும் காம்போதியில் ஒரு  நொடி சுர பேதம் நடந்து பின்னர் தன் முழுமைக்குத் திரும்பும் புவனா  ஒரு முழு இராகம்.

கௌரியும் அப்படித்தான். ஆனால், தன் சுயத்திற்காக சுகத்தை பலியிட்டு, தன் தீயில் தானே கருகி பின்னர் ஆறு போல் அன்பில் ஆழ்த்திவிடுகிறாள்.

இவள் யதுகுல காம்போதி. இவளும் இராக பாவங்கள் கொண்டவள். பாடுபவரை வசப்படுத்துபவள். கேட்பவருக்கு பரவசமூட்டுபவள்.

காம்போதி     ச ரி க ம ப த ச   ச நி த ப ம க ரி ச

யதுகுல காம்போதி  ச ரி ம ப த ச  ச நி த ப ம க ரி ச

oOo

அறமும் எழுத்தும் – ஜென் வெப்

இது அவ்வப்போது பேசப்படுகிறது. அறமும் எழுத்தும். பொருத்தமற்ற மணவுறவில் பிணைக்கப்பட்ட இரு கருத்துகள். அறம் சார்ந்து எழுதுவது எப்படி? அழகியல் தேவைகளுக்கும், கதைகூறலின் ஆரத்துக்கும், வாசக தேவைகளுக்கும், துரோகம் இழைக்காமல் அறம் சார்ந்து எழுதுவது எப்படி? அது தவிர, அறம் சார்ந்த எழுத்து என்றால் என்ன?

கல்வித்துறையில் இதற்கான பதில் நேரடியானது: அறம் சார்ந்து எழுதுவது என்பது பிறர் எழுத்தைத் திருடாமல் இருப்பது, பொய்த் ‘தகவல்களை’ அளிக்காமல் இருப்பது.

மிலன் குந்தேராவைப் பொறுத்தவரை இதற்கான பதில் நேரடியானது.

“இருத்தலில் இதுவரை அறியப்படாதிருக்கும் கூறொன்றைக் கண்டு சொல்லாத நாவல் அறமற்றது. அறிவொன்றே நாவலில் அறம்”

ஆஸ்கார் வைல்டுக்கும் நேரடி பதில் இருந்தது- “அறம் சார்ந்த, அல்லது அறமற்ற புத்தகம் என்பது கிடையாது,” என்று அவர் ‘தி பிக்சர் ஆஃப் கிரே‘யின் முன்னுரையில் எழுதுகிறார்.

நன்றாக எழுதப்பட்ட புத்தகங்கள், மோசமாக எழுதப்பட்ட புத்தகங்கள். அவ்வளவுதான்.

இந்தப் பதில்கள் அவ்வளவு பயனுள்ளதாய் இல்லை. படைப்பெழுத்தாளர்கள் அவசியம் பிறர் எழுத்தைத் திருடக்கூடாதுதான், ஆனால் நாம் நிச்சயம் புது விஷயங்களை புனைந்தாக வேண்டும். எல்லா எழுத்தாளர்களும் அறிவூட்டும் உந்துதலை உணர்வதில்லை. வைல்ட், ‘நன்றாக எழுதப்பட்ட’ புத்தகத்துக்கும், ‘மோசமாக எழுதப்பட்ட’ புத்தகத்துக்கும் என்ற வேறுபாடு?

நல்லது; கெட்டது: ‘அறம்’ என்பதைப் போல் இந்தச் சொற்களை ‘வெற்று குறிப்பான்கள்” (“empty signifiers”) என்று மொழியமைப்பியல் வல்லுனர்கள் அழைக்கின்றனர். அது சுட்டும் பொருள் அல்லது விஷயத்தை எந்த ஒரு சொல்லும் குறிக்கலாம். உரித்தான பெயர்ச்சொற்கள் தவிர பிற சொற்கள் எதுவும் வேறு எதற்கும்மட்டுமே உரியவையல்ல. அவையனைத்தும் எந்தப் பொருளை அல்லது கருத்தைப் பெயரிட்டு அழைக்கின்றனவோ, அவற்றால் அதைச் சுட்டும் வகையில் நம் கவனத்தைத் திருப்ப மட்டுமே முடியும். வெற்று குறிப்பான்கள் திண்மம் கொண்ட பொருள், அல்லது, ஏற்றுக்கொள்ளப்பட்ட அர்த்தம் எதையும் சுட்டுவதில்லை. அவை, “அர்த்தத்தை உமிழ்கின்றன என்பதை விட, உறிஞ்சிக் கொள்கின்றன”

“நல்ல எழுத்து”, “அறம் சார்ந்த எழுத்து” என்றெல்லாம் சொல்வது, ‘நாமனைவரும்’ புரிந்துகொள்ளும் கருத்துகளுக்கு பெயர் சூட்டுவது போல்தான் தெரிகிறது; ஆனால் ‘நாமனைவரும்’ நம் தேர்வுகளை ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. (நான் ‘நல்ல எழுத்து’ என்று அழைப்பது உங்களுக்கு குப்பையாய் இருக்கும்)

ஓரளவுக்கு இது ரசனை சார்ந்த விஷயம்; அல்லது சமகால விழுமியங்கள் சார்ந்த விஷயம்; அல்லது அரசியல். இங்கேதான் நாம் அறம் நோக்கித் திரும்புகிறோம். இங்கு நான் அறம் பற்றி எழுதப்பட்ட மிகப்பெரும் தொகுதியைச் சுருக்கித் தர முயற்சி செய்யப்போவதில்லை. நாம் உயிருள்ள ஒரு குறிப்பிட்ட ‘உண்மையை’ கொண்ட கதைகளை போதனைகளாய் இல்லாத வகையில் எப்படிச் சொல்கிறோம், பிம்பங்களாய் எப்படி உருவாக்குகிறோம், என்பதுதான் இங்கு என் அக்கறை (‘உண்மை’ என்ற சொல்லை நான் வேண்டுமென்றேதான் மேற்கோள்களுக்குள் தந்திருக்கிறேன், அதுவும் ஒரு வெற்று குறிப்பான் என்பதால்)

நான் ஏன் எழுதுகிறேன்‘ என்ற தன் கட்டுரையின் துவக்கத்தில் ஜோன் டிடியன், எழுத்தென்பது பிறர் மீது தன்னை வலியுறுத்தும் கலை என்கிறார், நான் சொல்வதைக் கேள், நான் பார்க்கும் வகையில் பார், உன் மனதை மாற்றிக் கொள் என்று சொல்வது அது.

நிச்சயம் உண்மைதான். ஆனால் தொடர்ந்து நம்மைப் பிறர் மீது வலியுறுத்துவது என்பது ‘மாண்ட்டி பைதன் அண்ட் தி ஹோலி கிரெயிலில்‘ வரும் சாமியார்கள் போல் நம்மை மாற்றிவிடும்: முடிவில்லாமல் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டு, நம்மையும் (நம் வாசகர்களையும்) முடிவில்லாமல் தலையில் அடித்துக் கொண்டிருக்கச் செய்யும்.

அறம் சார்ந்த எழுத்து எது என்பதற்கு முழு விடை இல்லை, ஆனால் மிசேல் பூக்கோ, சிந்தனையால் தெளிவடைந்த விடுதலையுணர்வு அற வடிவைத் தேர்ந்தெடுக்கிறது என்று சொல்லும்போது இதற்கு அருகே வருகிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அதாவது, நாம் உருவாக்கும் அர்த்தங்கள், நாம் உருவம் அளிக்கும் உலகம் குறித்து பிரக்ஞைப்பூர்வமாக சிந்தித்து எழுதப்படும் எழுத்தே அறம் சார்ந்த எழுத்து. நான் ஒரு படைப்பை விரும்பாமல் இருக்கலாம், அதன் உலகப் பார்வையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போகலாம். ஆனால், வைல்ட் சொன்னதற்கு மாறாக, யோசித்து எழுதப்படும் சூழலில் அது நிச்சயம் அறம் சார்ந்த எழுத்துதான்.

எழுத்தாளர்கள் எப்போதும் பிரதிமைப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்: உலகுக்கும் அதனுள்ளிருக்கும் உறவுகளுக்கும் உருவம் அளித்துக் கொண்டேயிருக்கிறார்கள்; வார்த்தைகள் தாம் எவற்றின் குறிகளாய்ப் பெயர் சூட்டி நிற்கின்றனவோ அவற்றுக்கு அப்பாலும் செயலாற்றுகின்றன. சொற்றொடர்களாய், வாக்கியங்களாய், பத்திகளாய், முழு படைப்புகளாய் ஒருங்கமைப்பட்ட வடிவில், வாசகர்கள் உணர்ந்து, கண்டு, செவித்து, முகரக்கூடிய சூழலைச் சொற்கள் அளிக்க முடியும்.

இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட சொற்கள், மொழியின் அருவ நிலைக்கும், பருண்ம உலகின் திண்மத்தன்மைக்கும் இடையில் உள்ள வெளியை இணைக்க முடியும். தன்னால் விவரிக்கப்படும் உலகை இருப்பதாய்ச் செய்ய முடியும், மெய்ம்மை கொண்டதாய் உணர்த்த முடியும்.

அறம் சார்ந்த எழுத்தை நாம் இப்படிச் சொல்லலாம்: திண்ம உலகை எதிர்கொண்டு, பல்கூட்ட மக்களின் வாழ்வனுபவத்தை விவரிக்கும் வகையில் மொழிகளைப் பயன்படுத்தும் படைப்பு.

கதைசொல்லல் மற்றும் கவிதையின் பிரதிமைப்படுத்தும் ஆற்றலை, பருண்மத்தன்மையைச் சிறப்பாய்க் கையாளும் படைப்புகளின் முன் தம் உணர்வாலும் புலனனுபவத்தாலும் வாசகர்கள் எதிர்வினையாற்றும்போது நாம் காண முடிகிறது. சிரிப்பாகட்டும், அழுகையாகட்டும், நம் அனுபவத்தை நண்பர்களுடன் பகிர்வதாகட்டும்- ‘நல்ல’ எழுத்து நம்மை நெகிழச் செய்கிறது.

வெவ்வேறு மக்களின் பங்களிப்பை ஆவணப்படுத்தும் படைப்புக்களைத் தணிக்கை செய்ய அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகள் அவற்றின் ஆற்றலைச் சுட்டுகின்றன. 2001ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசு, அகதிகள் குறித்து, ‘தனிநபர்களாய் உணர்த்தும், அவர்களின் மானுடத்தன்மையை வெளிப்படுத்தும் சித்தரிப்புகள்” நிராகரிக்கப்பட வேண்டும் என்று மேற்கொண்ட முயற்சிகள் இப்படிப்பட்ட ஒரு உதாரணம்.

இந்த ஆணையைக் கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஆஸ்திரேலிய எழுத்தாளர்களும் கலைஞர்களும் மௌனத்தாலோ பொதுமைப்படுத்தப்பட்ட கருத்தாக்கங்களாலோ எதிர்கொள்ளவில்லை; மாறாய், தனியாளுமைகளாய், தனித்தன்மை கொண்டவர்களாய் உணர்த்தும் படைப்புகளை உருவாக்கினார்கள். ஆஸ்திரேலியாவிலும் பசிபிக் பகுதிகளிலும் சிறைப்படுத்தப்பட்டுள்ள எழுத்தாளர்கள் தம் சமூகங்களை தனி நபர்கள் கொண்டதாய், அவர்கள் ஆளுமைகளை வெளிப்படுத்துவதாய், மானுடத்தன்மையை உணர்த்துவதாய் தம் கவிதைகளாலும் கதைகளாலும் நினைவுக் குறிப்புகளாலும் சித்தரித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட படைப்புகளில் சில கொள்கை பிரசார வகைமையைச் சேர்ந்ததாக இருக்கலாம், சில பேதைத்தன்மை கொண்டிருக்கலாம், சில படிப்பினைகளை உணர்த்துவதை நோக்கமாய் கொண்டிருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, வைல்டும் குந்தேராவும் வரையறை செய்த பொருளில் இவற்றில் பலவும் அறம் சார்ந்தவையே: இவை, நளினமான வாக்கியங்களும் புதிய அணுகுமுறைகளும் கொண்டு ‘நன்றாக எழுதப்பட்டிருக்கின்றன,’ ‘இருப்பின் இதுவரை அறியப்படாத கூறொன்றை” அம்பலம் செய்கின்றன.

நன்றி, The Conversation – http://theconversation.com/ethics-and-writing-63399

ஒரு நீதிக்கதை – தேஜூ கோல்

எதிரி பிற பூதங்களை உயிர்ப்பித்திருந்தான் என்பது உண்மைதான். ஒவ்வொன்றும் அதனதன் வழியில் தீமை செய்தன. ஒவ்வொன்றும் ஏழு பாபங்களில் ஏதோ ஒன்றின் முழுவுருவமாய் இருந்தன, ஒவ்வொன்றும் வலுவானதாகவும் தோற்கடிக்கக் கடினமானதாகவும் இருந்தன. சில பூதங்கள் இன்னும் மண்ணில் சுற்றித் திரிந்தன. ஆனால் இந்த பூதத்தை கவனிக்கத்தக்கதாய்ச் செய்தது எது என்று பார்த்தால், ஏன், அதற்கு தனித்தன்மை கொண்ட கள்ளத்தனம் அளிப்பதாக எது இருந்தது என்று பார்த்தால், அது சக்தியற்றது என்பதுதான். உண்மையில் அது மெலியது. பிற பூதங்கள் தோற்றுப்போகக் காரணமாக இருந்த குறைகள், இந்த பூதத்துக்கு பத்து மடங்கு அதிகம் இருந்தன. இந்தப் புதிய பூதம் ஒழுக்கமில்லாதது, ஆனால் ஒழுக்கம் பூதங்களின் இயல்பல்ல. இந்த பூதம் அழகாகவும் இல்லை, புத்திசாலியாகவும் இல்லை, வீரமாகவும் இல்லை, நன்றாக உடை அணியவுமில்லை, வசீகரமாகவும் இல்லை, பேச்சாற்றல் கொண்டதாகவும் இல்லை- எப்போதும் பூதங்களுக்கு இதில் ஏதோ ஒரு சில குணங்களாவது இருப்பது வழக்கம். எதிரி இந்தப் புது பூதத்தை அனுப்பி வைக்கும்போது அது ஒரே ஒரு இடத்திலிருந்து சக்தியை திரட்டிக் கொள்ளும் வகையில் வடிவமைத்திருந்தான், பழங்காலத்தில் சாம்சனையும் அவனது சிகையையும் பற்றிச் சொன்னது போல்தான்- அந்த ஆதார சக்தி அறுபட்டால், நண்பகல் வெயிலில் வாடிப்போகும் துண்டிக்கப்பட்ட மலர்த்துளிர் போல் இந்த பூதமும் வாடிப் போகும். புது பூதத்தின் சக்திக்கான ஆதாரம் ஓசைதான். தனக்குத் தொடர்புடையச் சிறு ஓசை கேட்டாலும் அது இன்னும் கொஞ்சம் வலுவானதாக மாறும். அது நிறைய சப்தம் கேட்கும்போது, போற்றுதலோ தூற்றுதலோ, ஆனந்தம் மிகுந்து மேலும் வலுவானதாக வளர்ந்தது. ஒட்டுமொத்த அமைதியே அதைத் தோற்கடிக்க முடியும், தியானத்தின் அமைதியும் செயல்பாடுகளுமே அதைத் தோற்கடிக்கும்.

இதுபோல் வடிவமைக்கப்பட்ட பூதத்தை எதிரி ஓசைப்பேட்டைக்கு ஏவிற்று. “புதுப்பூதம்” என்ற அலறல் எழுந்தது, பூதம் இன்னும் கொஞ்சம் பலமடைந்தது. “பூதத்துக்கு இன்னும் பலம் சேர்ந்து விட்டது,” என்று கூட்டத்தினர் கத்தினார்கள், பூதம் இன்னும் வலுவானது. இவ்வாறாகத்தான் ஓசைப்பேட்டையின் புதுப்பூதம், எதிரி அதுவரை அனுப்பிவைத்த அத்தனை பூதங்களைவிட எளிய பூதம், அங்கிருந்தவர்கள் எல்லாரும் பேசும் ஒரே விஷயமானது. காதைச் செவிடாக்கும் கூச்சலாக அந்தச் சப்தம் வளர்ந்து விட்டது. ஓசைப்பேட்டையின் ஒவ்வொரு நாளிதழிலும் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் பூதத்தைப் பற்றிய கட்டுரைகள்தான். தொலைக்காட்சியில் நிருபர்கள் பூதத்தைப் பற்றிய சப்தம் எழுப்பியபடியே பெரும்பொழுது கழித்தனர். ஊரார் தங்களோடு கொண்டு சென்ற சிறு கருவிகளை பூதம்தான் ஆக்கிரமித்திருந்தது. பூதம் சிரித்தால், அதற்கொரு எதிர்வினையாய் ஓசை எழுந்தது. பூதம் முறைத்தால், அதற்கும் பதில் சத்தம். அது இருமும்போது இருமல் கரகோஷம், பூதம் எப்படி இருமுகிறது என்பது பற்றி விவாதங்கள். தனது எளிய உத்தி எவ்வளவு வெற்றிகரமாகச் செயல்படுகிறது என்பது எதிரியையே திகைக்கச் செய்தது. பூதம் சிரித்தது, முறைத்தது, இருமியது, மேலும் மேலும் ஓசை எழுப்பக்கூடிய விஷயங்களைப் பேசக் கற்றுக் கொண்டது. இன்னும் இன்னும் அது வளர்ந்தது.

“ஆனால் இது பலமே இல்லாதது,” என்று மக்கள் கத்தினார்கள். “இது அழகாக இல்லை, இதற்கு அறிவில்லை, இதற்கு வீரமில்லை, இது நன்றாக உடுப்பதில்லை, இதற்கு வசீகரமில்லை, இதற்கு பேச்சாற்றல் இல்லை. இது எப்படி மேலும் மேலும் பலசாலியாகி நம்மை பாதிக்கிறது?” ஓசையின் அளவு இம்மி குறைந்தாலும் பூதம் ஏதாவது செய்தது, எது வேண்டுமானாலும் செய்யும், உடனே சப்தம் மீண்டும் அதிகரிக்கும். விழித்திருக்கும் பொழுதெல்லாம் இந்த பூதத்தைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதையே மக்கள் விரும்பினார்கள், தூக்கத்தில் பூதத்தைத் தவிர வேறு எந்த கனவும் இல்லை. அவ்வப்போது அவர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டார்கள், தாம் போடும் சத்தத்தில் பிறர் சேர்ந்துகொள்ளத் தவறுவது அவர்களை கோபம் கொள்ளச் செய்தது. வெறுமே யோசித்துக் கொண்டிருப்பது என்பது பூதத்தை ஏற்றுக் கொள்வதற்கு இணையானது என்று கருதப்பட்டது. கடந்த காலத்தில் இருந்த பிற பூதங்கள் போதுமான முழக்கத்தால் மூழ்கடிக்கப்பட்டிருந்தன. மேலும், இதுவோ ஓசைப்பேட்டை, ஓசை எழுப்பாமல் இருப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. உலகில் மிக உரத்த, மிகச் சிறந்த ஓசையின் தாயகம் அது, மிக அழகிய ஓசை, என்று எப்போதும் சொல்லப்பட்டது, உலக வரலாற்றில் மிகவும் மகத்தான ஓசை அதற்கேயுரியது. இவ்வாறாக ஓசைப்பேட்டையின் எல்லைகள் வரை ஓசைகள் வளர்ந்து எழுந்தன, லில்லிப்புட்டியர்களின் உலகில் கல்லிவர் வளர்ந்தது போல் புதுப்பூதமும் ராட்சத அளவுக்கு வளர்ந்தது- அவர்களிடமிருந்த கயிறுகளால் அதற்கெதிராய் எதுவும் செய்ய முடியவில்லை, அதன் வளர்ச்சிக்கும் எல்லைகள் இல்லாதது போலிருந்தது, இத்தனைக்கும் அப்போதுதான் அந்த ஆண்டின் எட்டாம் மாதம் பிறந்திருந்தது.

நன்றி – The New Inquiry