Author: பதாகை

சதிக் ரீ

தி வேல்முருகன்

அந்த மிகப்பெரிய பள்ளத்தில் எச்சரிக்கையை உணர்த்தக் கட்டியிருந்த கொடி தோரணம் போல் காற்றில்  ஆடி படபடத்தது.எனக்கு சமிபத்தில் வாசித்த வடகொரியா பற்றிய செய்தியும் என் நன்பன் ரீயும் ஞாபகம் வந்தனர்.

அன்று கொரியன் ரீ முகத்தில் அன்று சிறிதும் களை இல்லை. குவைத்தின் மே மாத 50 டிகிரி வெயில் அவனது சிவந்த முகத்தை குங்குமச் சிவப்பாக்கி அதன் மேல் புழுதியைப் பூசியிருந்தது.

உலர்ந்து போயிருந்த வாயைத் திறந்து, சதிக் குவைத்தி ஆப்ரேட்டர்  எல்லோருடைய கேட் பாசையும் வாங்கிக கொண்டு, வேலையை நிறுத்திச் சென்று விட்டான், என்ன செய்வது என்று தெரியவில்லை, என்னை போன் செய்து  கூப்பிடுகிறார்கள், நீ கொஞ்சம் வர முடியுமா, நாம் போய்  பார்த்து விட்டு வரலாம், இன்று வேலை நடக்கவில்லை என்றால் மதியம் திட்டமிட்டபடி  காங்கீரிட் போடமுடியாது, என்று அவன் சொன்னதும் எனக்கு காச்மூச் என்று தேவையில்லாமல் கத்தும் கிளையன்ட் குவைத்தியின் ஞாபகம்தான் வந்தது

“ஏன் இப்பதானே அங்கிருந்து வந்தோம், என்ன  பிரச்சினையாம் கொஞ்சம் கேளு, நான்
மேனேஐரிடம் சொல்லிட்டு வரேன்,” என்றபோது எனக்கும் சூப்பர்வைசரிடமிருந்து போன் வந்தது.

“கொரியன்கள் இருவர் வேலை  செய்யும்போது சண்டை போட்டுக் கொண்டதால் கேட்பாஸ் எல்லாம் வாங்கிக் கொண்டு வேலையை நிறுத்தி விட்டார்கள். அவர்கள் பர்மிட்டில்  கையெழுத்து போட்டிருக்கும் உங்களை உடனே வரச் சொல்றான், சீக்கிரம் வாங்க,” என்றதும் எனக்கும் கவலை வந்து விட்டது

கொரியனை ஏற்றிக்கொண்டு வண்டியை எடுத்தேன்.

காலை மணி 6:10க்கு  ஸ்டார்ட் செய்த வண்டி. சாஐியை கொண்டு வந்து யார்டில் விட்டு, வேறு வண்டியில் சென்று வேலை செய்ய பர்மிட் எடுக்க GC 10 க்குச் போக சொல்லி விட்டு நான் சென்று GC 5 க்கு வேலைக்கு பர்மிட் எடுத்து சூப்பர்வைசரிடம் கொடுத்து வேலையை சொல்லி விட்டு திரும்ப சைட்டாபிஸ் யார்டு அப்போதுதான் வந்திருந்தேன்.

திரும்ப அவ்வளவு தூரம் போக வேண்டும். என்னதான் வண்டியில் சென்றாலும் வெட்டியாக அலைவதற்கு மனம் சோர்ந்தது அதுவும் மதியம் மீட்டிங் வேறு இருக்கிறது.
கிளையண்ட் ஒரு வெறிநாய் மாதிரி. அவன் முகத்தைக் கொண்டு ஒரு தீர்மானத்துக்கும் வரமுடியாது

வகை தொகையில்லாமல் பொறியில் மாட்டியது போல் இருந்தது இந்த கம்பேனிக்கு வந்ததிலிருந்து ஒன்றும் சரியில்லை. வெறும் வாய்ஐாலத்தை நம்பி இன்டர்வியூ சென்ற அன்று    பாவப்பட்ட உன்னி சொன்னான், “அண்ணாச்சி, என்கிட்ட எந்த டிகிரியும் டிப்ளாமாவும் இல்ல. எல்லா வேலையும் மனசு கொண்டு படிச்சதாக்கும் நீங்க ஒத்துக்கிட்டு வாங்க நான் கூட இருக்கேன். பிடிக்கலனா வேற வேல தேடலாம் தெய்வம் ஒன்னு இருக்குல்ல,” என்று.

தெய்வம் இருக்குதான் ஆனால் அது இல்லாதவர்களைத்தான் அதிகம் சோதிக்கிறது.. மேனேஐர் என்ன நினைத்து இந்த கம்பெனிக்கு வந்தாரோ, அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இருந்தாலும் தந்திரமாக வேலை வாங்கி விடுவார். அவர், “ என்ன செய்யறிங்க?, சும்மா கில்லி மாதிரி இருக்கனும் அந்த வேலை என்ன ஆச்சு? நான் சொன்ன வேலைய பாத்திங்களா? இப்ப இந்த வேலையும் அதோடு சேர்ந்து முடிங்க, ம்ம்… போங்க போங்க…” என்று சொல்லிக்கொண்டே போவதைக் கேட்கும் நபர் மகுடியை பார்த்தாடும் பாம்பு போல் சொல்ல வந்ததையும் கேட்க வந்ததையும் மறந்து உடன் கிளம்பி விடுவார்..

ஆனால் அவரது செயல்பாடுகள் மேலும் மேலும் அவருக்கு துன்பத்தையே அளித்தன. எங்களிடம் சொன்னது எதையும் அவரால் செய்ய  இயலவில்லை. கம்பெனிக்கு புதிய ஆட்களை கொண்டு வருவதில் சிக்கல் ஆகி மொத்த சிவில் கட்டுமான வேலைகளையும் வெளி கம்பெனி ஆட்களை கொண்டுதான் செய்ய வேண்டும் என்று முடிவாகி விட்டது

அப்படி வந்தவர்கள்தான் வடகொரியர்களும் பலுசிஸ்தான்காரர்களும். சாஐிக்கு இந்தி சரளமாக வரும். அவன் நல்ல உயரமும் கூட அதனால் அவனிடம் பலுசிஸ்தானிகளைப் பார்த்துக் கொள்ளச் சொன்னேன். .பிளான்ட் ஏரியாவில் கையால்தான் மண்ணை வெட்டி அள்ள வேண்டும். சவுல் கொண்டு பலுசிஸ்தானிகள் அள்ளி எரியும் வேகம் இயந்திரங்களுக்கு இணையாக இருக்கும். எனக்கு அரபி மற்றும் இந்தி ஒரளவு தெரியும் அதை வைத்துக் கொண்டு மேனேஜர் சொல்லும் வேலைக்கேற்ப்ப கில்லியாட்டம் ஆடிக் கொண்டிருந்தேன்..

சிந்தனை பலவிதமாக ஒடி கொண்டிருப்பதைக் கலைத்து, ரீயின் முகத்தைப் பார்த்தேன். அவரது 50 வயதுக்குரிய தோற்றம் கவலையில் பொலிவிழந்து வாடியிருந்தது. ஐந்தரை அடி உயரமும் விசாலமான  அறிவின் வெளிப்பாடான நெற்றியும் முடி அடர்ந்த புருவமும் அதன் இறக்கத்தில் நாலு கோடுகளும் மேலும் தட்டையான அந்த முகத்தில் ஒரு கோடு போட்டாற்போன்ற வாயும் அதற்க்கேற்ப மூக்கும் அமைந்து வயது தெரியா உழைப்பினால் இளமையாகத் தெரிந்தார்.

வாரத்தில் முதல் நாள் சனிக்கிழமை மாத்திரம் பளிச்சென்று வருவார்கள் பிறகு அப்படியே வேர்வையோடு குளிக்காமல்  வருவார்கள் சாஐியும் டிரைவரும் இவர்களை அருகே அமர விடமாட்டார்கள் நான் அப்படி எதுவும் செய்வது இல்லை அவர்களுக்கு என்ன
தண்ணீர் கஷ்டமோ என்று விட்டுவிடுவேன். அதுவும் ரீ அருகே அமரும்போது ஊற வைத்த ரேஷன் அரிசி வாடைதான் வரும்.  பழகிவிட்டது. வண்டி முழுவதும் அந்த ஊறல் வாடைதான்

வண்டி மெயின் ரோடிலிருந்து இறங்கி GC 5வை நோக்கிச் சென்று கொண்டு இருந்தது
ரீயிடமிருந்து, “சதிக்”, என்று சத்தம்

“என்ன?” என்றேன்.

வலதுபுறம் ரோட்டோரம் இருந்த எண்ணெய்க் கிணற்றை நோக்கி கை காட்டினார்.

அத்திசையை நோக்கினேன் கருநீல கலரில், முழுவதும் கவராலால் மறைக்கப்பட்ட, தாடி
வைத்த உருவம். தலையில் சிவப்பு கலரில்  ஹெல்மெட் அணிந்திருந்தவர், இரண்டு கைகளையும் ஆட்டி எங்களைக் கூப்பிட்டார்.

சாலையை திரும்பிப் பார்த்துவிட்டு வண்டியை  எண்ணெய் கிணற்றை நோக்கித் திருப்பி சற்று  பாதுகாப்பான தூரத்திலேயே நிறுத்திவிட்டு  ஹெல்மெட்டும் கையுறையும் அணிந்து கொண்டு அவரிடம் சென்றோம்.

எங்களை நோக்கி சைகையால்  எண்ணெய் கிணற்றில் இருந்து வந்த ஆயில் லைனின் கன்ட்ரோல் வால்வு வீலைச் சுற்றி மூடச் சொன்னார். கிராஸ் மறை ஏறியிருந்ததால் அதைச் செய்வது எளிதாக இல்லை. ரீ சீராக முன்னும் பின்னுமாக ஆட்டிச் சுற்றியபோது எளிதாக வந்து விட்டது.

ரீ என்னிடம் ஆயில் கிணற்றைக் காட்டி, “அது என்ன? அந்த லைன் எங்கு செல்கிறது?” என்று கேட்டபோது நான் ஒன்றும் சொல்லவில்லை. பிறகு ரீயின் அந்தச் சின்னக் கண்களைப் பார்த்ததும் என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

“ரீ, இது ஆயில் கிணறு நாம் செல்கிறோம் அல்லவா, அந்த இடம் குவைத்தின் மிகச்
செறிவான எண்ணெய் வளப்பகுதி ஒவ்வொரு 200 மீட்டருக்கும் இது போல் கிணறுகள் இருக்கு பாரு. நீ இப்போது திருகினாயே அது கிணற்றிலிருந்து வரும் எண்ணெய் லைன்தான்.  இது நேராக GC க்கு போகும். அங்கு குருடாயில், கேஸ் மற்றும் தண்ணீர் தனியாக பிரித்து டேங்க் பார்ம் அனுப்பி விடுவார்கள்.. அங்கிருந்து ஏற்றுமதியாகும்”

‘ம்ம்… நிறைய பணம்,” என்றார் ரீ. பிறகு, “சதிக் நீ எப்படியாவது பேசி கேட் பாஸை வாங்கி விடு,” என்றார்.

நான் மவுனமாக தலையாட்டினேன்.

நேற்றே அந்த பவுன்டேஷன் காங்கீரிட் முடிய வேண்டியது. மொத்தம் மூன்று பவுன்டேஷன்கள் ஒன்று ஒன்றாக மாற்றிபம்ப் வழியாக காங்கீரிட் போட்டுக் கொண்டு இருந்தோம் ரீயின் ஆட்கள்தான் வேலை செய்தனர். ரீ மேற்பார்வையிட்டு வேலை சொல்லி கொண்டு இருந்தார். நான் கிளையண்டுடன் பேசிக் கொண்டு இருந்தேன்

காங்கீரிட் முடிந்து கடைசியில் இருந்த சின்ன ஐாக்கி பம்ப் பவுன்டேஷனில் காங்கீரிட் இட மேல் இருந்த யானையின் துதிக்கைப்போல் தொங்கிய பூம்பிளேசர் பைப்பை இருவர் தள்ளி கொண்டு  வந்திருக்கின்றனர். அப்படி தள்ளும்போது முட்டுச்சட்டங்களில் காங்கீரிட் தொப் தொப் என்று விழுந்ததில் சின்னதாக ஒரு அசைவு. வேறோன்றுமில்லை, காங்கீரிட் முழுவதும் போட்டுவிட்டு வைப்ரெட்டர் போட்டு தளர்த்தி காங்கீரிட்டை இருவரும் நிரவி ஒருவர் மாற்றி ஒருவராக கீழே இறங்கியதும் ஒரு பெருமூச்சு விடுவது போல் ஒரு சத்தம் அவ்வளவுதான் பனியனை மேல்  நோக்கி கழட்டுவது போல் பலகைகள் பெட்டி போல் மேலே தூக்கிக்கொண்டன.

காங்கீரிட் நாலாபுறமும் இளகி தரையில் கொட்டிய எண்ணெய் போல் ஒடுகிறது
நாங்கள் பார்த்துக் கொண்டு இருந்தபோதே நடந்து விட்டது அதுவரை சிரித்துப் பேசிக் கொண்டு இருந்த கிளையன்ட் அவரது நிஐ ஒநாய் முகத்தை காட்டிச் சென்றார்.. நாங்கள் மவுனமாக ஆடுகள் போல் நின்றோம்.

இந்த பிரச்சனைக்கு சிறிதும் சம்பந்தமில்லாத ரீ வந்த நாள் அப்போது  ஞாபகம் வந்தது ரீதான் முதலில் பஸ்ஸிலிருந்து இறங்கினார் அவர்கள் மேனேஜர் வந்து அறிமுகப்படு்த்தும்போது, இவர்களை வைத்து எப்படி வேலை செய்யப் போகிறோம், என்று  கவலையாக இருந்தது. ஆனால் ரீ அதற்கு  வாய்ப்பே தரவில்லை. அவரது குழுவினர் அனைவருமே தேர்ந்த வேலைக்காரர்கள் வேலை முடிந்தால் அளவுகள் மிகத் துல்லியமாக இருக்கும் கிளையண்டிடம் அவர்களால் பிரச்சினை இருந்தது இல்லை. கொரியர்களைப் பற்றி. எல்லோரிடமும் பெருமையடித்து கொண்டிருந்தேன்.

முதல் முறையாக பங்கம் வந்து விட்டது.  வருத்தத்தில் இருந்த என்னைத் தட்டி, என்ன,
என்று கேட்பது போல் சைகை செய்தார். ஒன்றும் இல்லை என்று தலையாட்டி விட்டு,
வெளியேறிய காங்கீரிட் எவ்வளவு இருக்கும் என டிராயிங் பார்த்து கால்குலேட்டரில் போட்டுக் கொண்டி.ருந்தேன். என் எதிரே வந்த ரீ உற்றுப் பார்த்துவிட்டு காற்றிலே விரலால் கம்போசர் போல் எழுதி விட்டு கையில குறிப்பது தெரிந்தது.  எனக்கு கால்கேட்டரில் விடை 3.16 என்று இருந்தது. ரீ தன் கையைக் காட்டினார் அதில் 3.16 என்று இருந்தது.

“ரீ, எப்படி எப்படி எனக்கும் சொல்லிக்கொடு”, என்றதும், ரீ அவர்கள் மொழியில் ஏதோ சொன்னார்  அவர் குழுவினர் அனைவரும் சிரித்தார்கள். எனக்கு வருத்தமாக இருந்தது

எல்லோரும் சாப்பிடக் கலைந்தனர். பெரும்பாலும் அரிசி சாதம்தான். தண்ணீரோடு சேர்த்து தர்மோக்கூலரில் வைத்திருந்தனர். வெஞ்சனம் போல் தொட்டுக் கொள்ள அவித்த முட்டை, பச்சை வெங்காயம் மற்றும் தக்காளி அவ்வளவுதான் .எல்லோரும் ஒன்றாகதான் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.

நான் வருத்தத்தோடு இருப்பதைப் பார்த்த ரீ, அதிலிருந்து ஒரு முட்டையை உரித்துக் கழுவி  கொண்டு வந்து என்னை எடுத்துக்கொள்ளச் சொன்னார்.  நான், “வேண்டாம் நீ அந்தக் கணக்கைச் சொல்லிக் கொடு அப்பத்தான் சாப்பிடுவேன்,” என்றதும் ரீ, வருத்தத்துடன் கூறினார்,

“எங்கள் மொழியில் உள்ள இந்த கணக்கு போடும் முறையைப் உன்னால் கற்றுக் கொள்ள முடியாது தயவு செய்து புரிந்து கொள். மேலும் நான் உன்னிடம் அதிகம் பேச முடியாது ஏன் என்றால் நான்  கண்காணிக்கும் இவர்கள் என்னையும் கண்காணிக்கின்றனர் .நாங்கள் ராணுவ  பயிற்சி முடித்தவர்கள். ஓரளவு எல்லா வேலையும் கற்றுள்ளோம் என்னை தயவு செய்து வேறு எதுவும் கேட்காதே.. நீ என் சதிக் என்றால் இதைச் சாப்பிடவேண்டும்,”

என்று முட்டையை வைத்து விட்டுச் சென்று விட்டார்.

நான் திரும்பிப் பார்த்தேன். ரீ அவர்களிடம் ஏதோ சொல்லுகிறார் அவர்கள் என்னைப் பார்த்து சிரிக்கின்றனர். நான் முட்டையை அவர்கள் கண் முன்னே தின்றேன்.

வண்டி Gc 5ஐ  நெருங்கியது. ஓரங்கட்டி நிறுத்திவிட்டு ஹெல்மெட் அணிந்து வேலையாட்களைப் பார்க்கச் சென்றோம். நல்ல கடுமையான வெயில் உக்கிரமாக அடித்துக்கொண்டு  இருந்தது ரோட்டில் கானல் தெரிந்தது காற்று சிறிதுகூட இல்லை.. அதற்குள்ளேயே வேர்வை தலையிலும் முதுகிலும் தோன்ற ஆரம்பித்து விட்டது  அங்கிருந்த ஸ்டோரேஐ் டேங்க் ஓரம் அருநிழலில் கால்நீட்டி அமர்ந்து ஆட்கள் ரீயைப் பார்த்ததும் எழுந்து கொண்டனர்.தப்பு பண்ணிய இருவர் மட்டும் கையைக் கொண்டு முக்கோணம் போல் கழுத்தை கட்டிக் கொண்டு நின்றனர்.

ரீ அவர்கள் மொழியில் கிட்டத்தட்ட உருமினார். அவர்கள் பயந்து நடுங்குவதைப் பார்த்தால்  என்னவிதமான தண்டனை தருகிறார் என ஊகிக்க முடியவில்லை. இருவரையும் பார்க்க மிக பரிதாபமாக இருந்தது

நான் அப்போது ரீயைப் பார்த்தேன். மிகுந்த வருத்தத்துடன் கோபமாக தெரிந்ததார்  இன்று இந்த வேலையை முடித்துவிட வேண்டும்  மேலும் கிளையண்ட்டுக்கு கேட்ப்பாஸ் பிரச்சினையும் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கவலையாக இருந்தது.

சரி நாம் சென்று ஆப்ரேட்டரிடம் விளக்கம் சொல்லி கேட் பாசை வாங்குவோம் இங்கு நின்று ஆவப்போவது ஒன்றுமில்லை என்று கன்ட்ரோல் பில்டிங் உள் நுழைந்தேன். அங்கு நின்றிருந்த எங்களது சூப்பர்வைசரை வெளியே அனுப்பி விட்டு ஆப்ரேட்டர் ரூம் உள் நுழைந்தேன்.

முழுவதும் குளுகுளு வசதி செய்யப்பட்டு ஜில் என்று காற்று வீசிக்கொண்டு இருந்தது

வயதான ஆப்ரேட்டர் ஒரு நொடி என்னைப் பார்த்துவிட்டு திரும்பி எதிரில் இருந்த கம்ப்யூட்டரில் சீட்டாட்டத்தை தொடர்ந்தார். அவருக்கு எதிரில் அரைவட்ட டேபிளில் வரிசையாக பதிக்கப்பட்டிருந்த மானிட்டரில் கன்ட்ரோல் புரோகிராம் டிஸ்ப்ளே ஆகிக்கொண்டு இருந்தது. அவர் ஸ்பேடு ஆட்டினுக்கு ஐோடியை தேடிக்கொண்டு இருந்தார். மேலும் இரண்டு இளம் ஆப்ரெட்டரும் சற்று தள்ளியிருந்த  கம்யூட்டரில் எதிர் புறம் அமர்ந்து இருந்தனர். அவர்களுக்கு பின்னால் இருந்த மிகப்பெரிய கண்ணாடி சுவரில் GC 5 மொத்தமும் தெரிந்தது.

நான் செய்த வணக்கத்திற்கு பதிலோ அல்லது நீ யார் என்றோ கூட கேட்கவில்லை.
நான் அமைதியாக அவர் முகத்தைப் பார்த்து க் கொண்டு நின்றேன் நிமிடங்கள் ஒடிக்
கொண்டு இருந்தன.

“சார் அவர்கள் இது போலெல்லாம் எப்போதும்  நடந்து கொண்டதில்லை இதுதான் முதல் தடவை எங்களுக்கு அந்த வேலையை முடித்துக் காங்கீரிட் இடவேண்டும் இல்லை என்றால் எங்களால் கிளையன்டை சமாளிக்க  முடியாது நீங்கள் கொஞ்சம் பெரிய மனது பண்ணி உதவ வேண்டும்,” என்றதற்கு  அவரிடம் இருந்து எந்த அசைவும் இல்லை.

சரி நாம் மேலும் கெஞ்ச வேண்டும் என எதிர்பார்க்கிறார், என்று நினைத்து திரும்பவும் சொல்ல தொடங்கியதும், “ஸ்டாப் இட்!”  என்று கத்தினார். அவர்  கண்கள் முழுவதும் ஏளனமும் வெறுப்பும் நிறைந்திருந்தது..டீ கொண்டு வந்த பங்காளதேஷி முகம் கலவரத்தைக் காட்டியது.. இளம் ஆப்ரேட்டர் இருவரும் தலையைத் தூக்கிப் பார்த்து  தொடர்ந்தனர்.

உள்ளுணர்வு. “போய் விடு, போ” என்றது. கேட்காத நான் திரும்பவும், “சார்…” என்றேன்.

“கெட் அவுட்!”

“சார்…”

“தர முடியாது நீ போய் உன் கிளையண்ட்டை அழைத்து வா,” என்று என்னைத் தள்ளிக்கொண்டு ரூமுக்கு வெளியில் விட்டு கதவை அறைந்து சாத்தினார். படீர் சத்தத்துடன் கதவு மூடிக்கொண்டது என் முகத்தில் அடித்ததுப்போல் இருந்தது. அதிச்சியாகி இந்த சின்ன பிரச்சினையை இவ்வளவு பெரிதாக ஆக்குறானே,.
கிளையண்ட் குவைத்தி இப்போது எங்கே இருக்கிறானோ சும்மாவே அவன் வெறிநாய் இப்போது என்ன செய்வது தெரியவில்லையே, என்று திரும்பி வெளியில் வந்தேன்.

ரீயும் ஆட்களும் நின்று கொண்டிருந்தனர்.  கேட் பாஸ் கிடைக்கவில்லை என்று உதட்டைப் பிதுக்கியதும் எல்லாருடைய முகமும் வாடியது. .சாப்பாட்டு நேரம் தாண்டிக்
கொண்டிருந்தது. யாருக்கும் சாப்பிடும்  எண்ணம் இல்லாமல் என் முகத்தைப் பார்த்து கொண்டு இருந்தனர். நான், என்ன செய்யலாம், என்று வண்டியை திறந்து மோபைலை எடுத்தேன். வரிசையாக மிஸ்டு கால்கள் கிடந்தன.

பின்னால் ஒரு வண்டி வந்த சத்தம் கேட்டது

ரீ என் முதுகில் தட்டினார்

திரும்பினேன் அப்போது நாங்கள் காலையில்  பார்த்த கன்ட்ரோலர் உள்ளே சென்று கொண்டிருந்தார். எனக்கு குழப்பமாக இருந்தது நான் யோசித்ததைப் பார்த்து ரீ என்னிடம், “நான் கேட்கிறேன் நீ என்னை அழைத்துச் செல் நீ பேச வேண்டாம் நான் பேசுகிறேன்,” என்றார்.

சரி வயதில் மூத்தவர் என்ன நடக்கிறது பார்ப்போம், என்று அழைத்துக்கொண்டு திரும்பவும் உள்ளே சென்று ஆப்ரேட்டரிடம் செல்லாமல் வலதுபுறம் இருந்த கன்ட்ரோலர் ரூம் சென்றென் வாசலில் நின்று ரீ கம்பீரமாக கமாண்டோ போல் வணக்கம் சொன்னார்
என் வணக்கம் எனக்கே கேட்கவில்லை.

திரும்பிய கன்ட்ரோலர் எங்களை அடையாளம் கண்டுகொண்டு உள்ளே அழைத்தார்.

நான் நடந்தவற்றைப் பணிவாக சொன்னேன்.

கன்ட்ரோலர் ஆப்ரேட்டரின் மேல் அதிகாரி ஆதலால் அவரை வரச்சொல்லி இன்டர்காமில்
அழைத்தார்.. என்னை முறைத்துக் கொண்டே உள்நுழைந்த ஆப்ரேட்டர் காதில் அந்த வருடம் புதிதாக வந்த புளூடூத் காதில் கொம்பு முளைத்தது போல் வினோதமாக தெரிந்தது.

யாரிடமோ தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்த அவர், பிறகு பேசுவதாக சொல்லிவிட்டு
கடுமையாக என்னை பார்த்தார். பின்னர், கன்ட்ரோலரிடம் அலட்சியமாக, “இவர்கள் இருவரும் சைட்டில் இல்லை. அங்கு நடந்தது உங்களுக்குத் தெரியாது மறுநாள் காலை போலிசோ அல்லது செக்யூரிட்டியோ வரும்படி ஆயிருக்கும்.  நல்லவேளை நான் பார்த்து தடுத்து விட்டேன்” இவர்களின் மேலதிகாரிகளையும் வரச் சொல்லியிருக்கிறேன். வந்தால் தரலாம், அது வரை பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த ரீ பேச ஆரம்பித்தார்.

“சார் வணக்கம்.  என் பேர் ரீ. வட கொரியாவிலிருந்து வேலைக்கு வந்திருக்கிறேன்.. அவர்கள் எல்லாம் எனது ஆட்கள்தான் நான்தான் அவர்களின் லீடர். நீங்கள் சொல்வது போல் அவர்கள் சன்டை எல்லாம் போட்டுக் கொள்ளவில்லை..  தயவு செய்து என் கையைப் பாருங்கள் அவர்களில் வயது குறைந்த அந்தச் சின்னவன்  சட்டங்களை முதுகில் அடுக்கி கொண்டு திரும்பும்போது வயது மூத்தவன் மேல் சட்டம் தட்டியிருக்கிறது. அதனால் அந்த மூத்தவன் சின்னவனை தள்ளியிருக்கிறான். அவர்களுக்குள் எந்த சண்டையுமில்லை நீங்கள்தான் பெரிதாக  நினைத்துக் கொண்டு விட்டீர்கள்”

“ரீ இப்படி கோமாளி போல் அவர்கள் முன்னால் செய்ததால் என் மனம் தவித்து அவமரியாதை செய்வார்களோ என்று அஞ்சியது  நல்ல வேளை, எதுவும் நடக்கவில்லை.. நான் அவர்கள் கண்களைப் பார்த்தேன். இருவர் கண்களும் ரீ  மேல் நிலைகுத்தி இருந்தது.

ரீ தொடர்ந்தார்.

“நான் பொதுமான தன்டனையைச் சொல்லி விட்டேன். இப்போது நீங்கள் கிளையண்ட்டை கூப்பிட்டு வரச் சொல்லியுள்ளீர்கள் அவர் வந்தால் பிரச்சினை இன்னும் பெரிதாகிவிடும். ஏன் என்றால் இந்த காங்கீரிட் நேற்றே முடிய வேண்டியது. துரதிருஷ்டவசமாக அந்த எகிப்திய காங்கீரிட் பூம் பிளேசர் ஆப்ரேட்டர் யானையின் துதிக்கை போல் தொங்கிய அந்த பைப்பை தாங்கு கட்டையில் விழும்படி காங்கீரிட்டை பிடித்து விட்டதால் கட்டைகள் நெகிழ்ந்து இடம் மாறியதால் பலகை திறந்து கொண்டு காங்கீரிட் எல்லாம் வெளியேறி விட்டது அதனால் இதோ நிற்கிறாரே இந்த லீடரும் நானும் எனது ஆட்களும் மேலும் மேலும் தண்டிக்கப்படுகிறோம்.

“நான் இன்று போல் எப்போதும் எனது ஆட்களைப் பேசியது இல்லை. அதுவும் குற்றமிழைக்காத அவர்களுக்கு ஆத்திரத்தில் தண்டனை சொல்லிவிட்ட நான் எப்படி உறங்குவேன் என்று தெரியவில்லை.”

“அப்படி என்ன தண்டனை?” என்று கேட்டார் கன்ட்ரோலர்

சிறிது செருமி ரீ தொண்டையைச் சரி செய்து கொண்டார்.

“சார் நாங்கள் அதிகாலை 5 மணிக்கு எழுந்து வரிசையாக ஒவ்வொருவராக காலைக் கடனை முடித்து  6 மணிக்கு பஸ் ஏறி 7 மணிக்கு வந்திறங்கி வே;லை தொடங்குகிறோம் .  தொடர்ந்து வேலைதான் 12 மணிக்குதான் சாப்பாட்டுக்கு கலைவோம் அதுவரை வெறும் தண்ணீர்தான்  பிறகு இரவு சாப்பாடு 9 மணிக்குதான் இடையில் எங்களுக்கு ஒன்றும் கிடையாது.. நான் இன்று இரவு அவர்களுக்கு சாப்பாடு இல்லை என்று சொல்லி விட்டேன்,”  என்று அவர் சொல்லி நிறுத்தியதும் பல நாட்டினரும் வந்து சேவை செய்வதனால் சுல்தானைப்போல் வாழும் இருவரும் அதிர்ந்து பார்த்தனர். இருவருக்கும் முகம் வாடி விட்டது என்ன சொல்வார்களோ என்று நான் அதிர்ச்சியோடு ரீயை பார்த்தேன்

ரீ தொடர்ந்து, “சார் என்னை நம்புங்கள் நாங்கள் பல ஆயிரம் மைல் தூரம் தாண்டி இங்கு வேலை செய்வது எதற்கு தெரியுமா உங்களுக்கு? எங்கள் அரசுதான் எங்களை இங்கு வேலை செய்ய அனுப்பி உள்ளது. நாங்கள்  வேலை செய்வது அரசுக்குதான் செல்லும்
மக்கள் எல்லாருக்கும் கிடைப்பதுதான் எங்களுக்கும் சிறிதும் அதிகம் கிடைக்காது”,, என்று சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார்.

ஆப்ரேட்டரும் கன்ட்ரோலரும் எழுந்து விட்டனர்,

ரீ, “சதிக்” என்று சின்னதாகப் புன்னகைத்தார்…

சதிக் என்றால் நண்பன்….

 

 

கோஷ இடையீடு

பெருந்தேவி

தோற்றாலும்
முயற்சிப்போம்
மட்டையாகிக்
குப்புற விழும்வரை
மண்ணுக்கு உரமாகட்டும்
நம்
சப்பை மூக்குகள்

 

புனைவும் நிஜமும் – அசோகமித்திரன் படைப்புலகின் நெருங்கிய இரு வடிவங்கள்

 அஜய் ஆர்

நான் அமெரிக்கா பற்றி எழுதுவதாகவே இல்லை. அன்று பயணக்கட்டுரைகள் ஒவ்வொரு பிரபல பத்திரிகையிலும் தொடராக வெளிவந்துகொண்டிருந்தன. புதுடில்லி ஸ்பான் பத்திரிகை என்னை அயோவா குறித்து ஒரு கட்டுரை கேட்டது. நான் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கட்டுரை எழுதி அனுப்பி வைத்தேன். அதைச் சிறுகதை என்று அப்பத்திரிக்கை வெளியிட்டது. ‘ஒற்றன்!’ பிறந்தான்.
– (ஒற்றன் நூலின் காலச்சுவடு பதிப்பிற்கான அசோகமித்திரனின் முன்னுரையில் இருந்து)

ashokamithiran-04

கல்லூரிக்குச் செல்ல ஹூசேன் சாகர் டாங்க் பண்ட் வழியாகவோ, பப்ளிக் கார்டன்ஸ் வழியாகவோ செல்வது, அந்தப் பாதையில் உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நீச்சல் குளம் அதில் குளித்த அனுபவம் என அசோகமித்திரனின் ‘கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாள்’ துவங்குகிறது. இந்தியா மட்டுமல்ல ஐதராபாத்தும் சுதந்திரம் அடைந்த காலம். கடந்த ஒரு மாதமாகவே வகுப்புக்கள் சரியாக நடக்காதது, தொடர் பிரிவுபசார விழாக்கள் என இதில் விவரிக்கப்படுவதை ‘கதை’ என்று ஏற்றுக்கொள்ள வாசகனுக்கு அதிக சிரமம் இருக்காது. ஆனால் இதை கட்டுரை என்றே அசோகமித்திரன் வரையறுக்கிறார்.

அ.மியின் சிறுகதைத் தொகுதிகளிலும், ‘ஒற்றன்‘ நூலின் ஒரு அத்தியாயமாகவும் சேர்க்கப்பட்டுள்ள ‘அம்மாவின் பொய்கள்‘ ‘கதை’யில், ஞானக்கூத்தனின் ‘அம்மாவின் பொய்கள்‘ கவிதையின் முதல் பகுதி தாய் தன் சிறு வயது மகனைப் பார்த்து சொல்வதாகவும், பின்னர் அவன் பெரியவனாகிய பின் முழு கவிதையைச் சொல்வது போலவும் நாடகமாக்கப்படுகிறது. அயோவாவில் ‘உறைவிட எழுத்தாளராக’ அசோகமித்திரன் இருந்தபோது நடந்த உண்மைச் சம்பவத்தைப் பற்றிய கட்டுரை என்று முதற் பார்வையில் இதை வரையறுக்க முடியும். அதே நேரம் ஞானக்கூத்தனின் கவிதையை வேறொரு சந்தர்ப்பத்தில் கதைசொல்லி மொழிபெயர்த்து வாசிக்க, அது ‘விக்டோரியா’ என்பவரிடம் கிடைத்து அதை அவர் நாடகத்தில் உபயோகிக்கிறார் என்பதை புனைவின் உத்தியாகப் பார்க்கலாம். ஒற்றன் நூலிலேயே ‘கவிதை வாசிப்பு’ என்ற அத்தியாயத்தில் அசோகமித்திரன் கவிதையை மொழிபெயர்த்து வாசித்தது குறித்து உள்ளது, ஆனால் அதில் கதைசொல்லி வாசிப்பது ஞானக்கூத்தனின் ‘அன்று வேறு கிழமை‘ கவிதையை. இதுவும் இந்த படைப்பிற்கு புனைவின் சாயலையே தருகிறது. இந்த இரண்டு படைப்புக்களையும், யார் எழுதியது என்று சொல்லாமல், கதையா/ கட்டுரையா என்பதை மாற்றிக் குறிப்பிட்டு படிக்கக் கொடுத்தால், பலர் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

அசோகமித்திரனின் படைப்புகளில் இப்படிப்பட்ட மயக்கம் ஏற்படுவதற்கு காரணங்கள் என்னவாக இருக்கும்? கதைக்கென்று ஒரு நடையையும் கட்டுரைக்கென்று இன்னொன்றையும் அ.மி வைத்துக் கொள்வதில்லை. இரண்டிலும், மெல்ல ஒரே சரடாக இணையும் சம்பவங்கள், நுண்ணிய விவரிப்புக்கள், இதழோரச் சிரிப்பை ஏற்படுத்தும் நகைச்சுவை என்ற பொதுவான – ஒரே படைப்பில் புனைவாகவும், அபுனைவாகவும் உணரக்கூடிய – தொனி உள்ளது. அசோகமித்திரன் ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே‘ பாடலை ( ‘கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாள்‘) பாடிய விதத்தை சொல்லும்போது (‘ஒவ்வொரு சரணத்தையும் வெவ்வேறு கதியில் பாடினோம். பாரதியார் சிறிது சுருக்கமாகவே பள்ளு பாடியிருக்கலாமென்று தோன்றிற்று‘) , அதைப் பாடியது தமிழ் மன்ற விழாவில், சாமி பாட்டு பாட பணிக்கப்பட்டு ‘சகுந்தலை‘ படத்தின் பாடலைப் பாடிய 18வது அட்சக்கோட்டின் சந்திரசேகரனாக இருக்கக் கூடும் என்றே அவரை பின்தொடர்ந்து வரும் வாசகன் எண்ணினால் அதில் பிழையேதும் இருக்க முடியாது.

அதே போல் விழா முடிந்து கதைசொல்லி சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தனியாக வீடு திரும்பும்போது அது “இனி கல்லூரி கிடையாது, இனி கல்லூரி கிடையாது’ என சொல்வது போல உணர்ந்து ஆறுதல் கொள்வது புனைவின் உத்தியாகவே உள்ளது. இன்னொரு புறம் வில்லியம் டெல் பிறந்த சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரின்ஸ்பாலின் மனைவி, அவரின் ‘கலைந்த தலையுடன் போரிலிருந்து திரும்பிய ஜோன் ஆப் ஆர்க்’ போலிருக்கும் மகள் போன்ற விவரிப்புக்கள் புனைவு/அ-புனைவு இரண்டிற்கும் பொருந்துகின்றன. இந்தக் கட்டுரையில் உரையாடல்களே இல்லை என்பதும், இதன் அளவும், இந்தப் படைப்பு கட்டுரை என்ற தரப்பின் வாதத்திற்கு வலு சேர்க்கக் கூடும். கதை என்றால் கண்டிப்பாக உரையாடல் இருக்க வேண்டும் போன்ற அளவுகோலை இங்கு முன்வைக்கவில்லை, ஆனால் ஒரு படைப்பில் உரையாடல்கள் அதிகமிருப்பின் அதை ‘புனைவு’ என்ற கோணத்தில் வாசக மனம் அணுக சாத்தியமுண்டா என்று சந்தேகத்தை இங்கு முன்வைக்கிறேன்.

கதை, கட்டுரை எதுவாக இருந்தாலும் அ.மியின் நுண்ணிய நகைச்சுவையை அனைத்திலும் உணர்ந்து கொண்டே தான் இருக்கிறோம். எடுத்துக்கொள்ளும் புகைப்படம் கௌரவமாக இருக்க வேண்டும் என்பதற்காக கண்ணில் பட்டவர்களையெல்லாம் சேர்த்துக்கொண்டு நிற்பதில் உள்ள ஹாஸ்யம் கட்டுரை/கதை இரண்டிற்கும் பொருந்துவதாகத் தான் உள்ளது. அம்மாவின் பொய்களில் நாடகம் நடக்கும் போது, அப்போது வாசிக்கப்படும் கவிதையை எழுதியவரிடம் கதைசொல்லி ஒரு கேள்வி கேட்க அவர் “..யமதர்மராஜன் போல் ‘ஆமாம்‘” என்று சொல்வதை நிஜத்திலும் நடந்திருக்கக்கூடியதாய் ஏற்றுக்கொள்வதில் கடினம் ஏதும் இருக்காது. எந்த எழுத்தாளர்தான் தன் படைப்பு அரங்கேற்றப்படுவதை பார்த்துக் கொண்டிருக்கும்போது தன் கவனம் குலைக்கப்படுவதை பொறுத்துக் கொள்வார்? இந்தக் கதையில் ஒப்பீட்டளவில் உரையாடல்கள் அதிகம் இருப்பதும் இதை கதையாக உள்வாங்கிக்கொள்ளச் செய்யக் கூடும். கதைசொல்லி வசிக்குமிடத்தில் உள்ள வங்கி மேலாளரின் மூக்கைப் பற்றிய விவரிப்பிலும் , ‘பறவை மனிதன்’ என அவரை கதைசொல்லி அழைப்பதிலும் humorஐ விட comedyஏ சற்று தூக்கலாக தெரிவதால் இந்தப் படைப்பிற்கு புனைவின் சாயல் வருகிறது.

காபி க்ரீம் – கமலதாஸ்‘ என்ற கட்டுரையின் மூன்றில் இரண்டு பகுதி வரை, அசோகமித்திரன் பிராங்க்பர்ட் புத்தகச் சந்தை, அதில் பங்கேற்க  பிராங்க்பர்ட் சென்றது, ஹோட்டலில் தங்கியது என்று கட்டுரையின் வரையறைக்குள் பயணம் செய்து, அ.மி கமலாதாஸ் மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய பிரசுர நிறுவனத்தின் உரிமையாளர் மல்ஹோத்ராவும் ஒன்றாக காலையுணவு உண்ட/உண்ண ஆரம்பித்தபோது நடந்த – உதவி செய்யப் போய் மல்ஹோத்ரா மீது அ.மி க்ரீமை கொட்டி விடும் – நிகழ்வுடன், “என்றென்றும் மல்ஹோத்ரா என் நூல்களை வெளியிட மாட்டார் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால், எனக்குக் கமலாதாஸ் பற்றியும் சந்தேகம் வந்தது. காரணம் அன்று அதிகமாகச் சிரித்தது அவர் தான்” முடிகிறது. இந்த நிகழ்வு நடந்திருக்காது என்பதோ, அப்படியே நடந்திருந்தாலும் கமலாதாஸ் வெடிச் சிரிப்பை உதிர்த்திருக்க மாட்டார் என்றோ சொல்ல முடியாது. புனைவை விட நிஜம் விசித்திரமானது தான் என்றாலும், இந்நிகழ்வில் வாசகன் உணரக் கூடிய slapstick அம்சம், அதை வாசிக்கும் முதற்கணத்தில், கட்டுரை புனைவின் பாதைக்கு தடம் மாறுகிறதோ என்ற சந்தேகத்தை அவனுள் எழுப்பக்கூடும்.

ஒரு ஆக்கம் புனைவா அல்லது அ-புனைவா என்பதைப் பற்றிய உரையாடல் ஒரு கட்டத்திற்கு மேல் வெறும் கல்விசார் பயிற்சியாக (‘academic exercise’) மட்டுமே முடியக் கூடும் என்றாலும், பல பொது அம்சங்களைக் கொண்ட இரு எழுத்து வகைமைகள் எந்த இடத்தில் தமக்குரிய இடத்தை (கதை/கட்டுரை) தேர்வு செய்கின்றன என வாசகன் புரிந்து கொள்ள முயல்வது அவன் வாசிப்பை நுட்பமாக்க உதவக் கூடும். மொத்தமாக பார்க்கும்போது அ.மி எழுதியுள்ள கதைகளை/ கட்டுரைகளை ஒரு முழு வாழ்க்கையின் சிதறல்களாக – வேறு வேறு பெயர்களில் வரும் அவர் பாத்திரங்களையும், நாம் ஒருவருடன் ஒருவரை முடிச்சு போட முடிகிறது – ஒருவர் உணரக் கூடும். அவருடைய கட்டுரைகள் மட்டுமே படித்தவரும், கதைகள் மட்டுமே படித்த இன்னொருவரும் உரையாடினால், ஐதராபாத் இந்தியாவுடன் இணைந்ததைப் பற்றிய தகவல்களை பரிமாறிக்கொள்ள முடிவதோடு, ஹுசேன் சாகர் டாங்க் பண்ட்டையும், லான்சர் பாரகஸையும் எளிதில் அடையாளம் காண முடியும். அ.மியின் மாடு (கோணல் கொம்பு) வளர்ப்பு புராணத்தையும், மாரிஸ், லாரா, டெரின்ஸ், போன்றோரையும் அவர்கள் அறிந்திருப்பார்கள். எனவே அ.மியின் படைப்புலகம் குறித்து எந்த தடையும் இன்றி உரையாட முடிவதோடு அதில் ஒரு பொது தளத்தையும் அவர்கள் கண்டடையக் கூடும் என்றே தோன்றுகிறது.

அசோகமித்திரனின் குறும்புனைவுகள் குறித்து- 

ஒளிப்பட உதவி- காலச்சுவடு

2024

எஸ். சுரேஷ்

“ஃபோன் அடிக்கறது கேக்கல? ஃபோன எடு” அம்மாவின் குரல் என்னை அதட்டியது. அம்மா பக்கத்து அறையிலிருந்து பேசவில்லை. ஃபோன்னிலிருந்து பேசினாள்.

நீங்கள் இன்னும் 2016இல் இருப்பதால் உங்களுக்கு நான் இதை விளக்க வேண்டும். நீங்க ஏதோ நான் அம்மாவின் குரலை ரிங்டோன்னாக வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கக்கூடும். அதெல்லாம் உங்கள் காலம். இப்பொழுது காலம் மாறிவிட்டது.

‘Machine Learning’ என்று சொல்வதை வைத்து கூகிள் போன்றவர்கள் முதலில் உங்கள் மெயில் படிக்க ஆரம்பித்தார்கள். நீங்கள் ‘Please find attached’ என்று எழுதி attachment இல்லையென்றால், அட்டாச்மென்ட் எங்கே என்று ஜீமெயில் கேட்க ஆரம்பித்தது. அதே போல் விளம்பரத்துக்காக பலர் அனுப்பும் மெயில்களை தானாகவே ஸ்பாம் என்று குறிப்பிட்டு தள்ளி வைத்தது. இப்பொழுது அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கிறது.

மெயிலை படிப்பதுடன் நிற்காமல் இப்பொழுது வந்துள்ள ஒரு ஆப் நாம் ஃபோனில் பிறருடன் பேசுவதை ஒட்டு கேட்கிறது. நம்முடன் பேசுபவர்களின் குரலை அது ஞாபகம் வைத்துக்கொள்கிறது. அவர்களின் குரலை அது reproduce செய்கிறது. அவர்கள் அடிக்கடி பேசும் வார்த்தைகளையும், அவர்கள் உபயோகிக்கும் சொலவடைகளையும் வைத்து அவர்களைப் போலவே அது பேசுகிறது. அம்மாவின் ஃபோன் வந்தால் அம்மாவின் குரலில், அவள் பேசுவது போலவே என்னை அழைக்கிறது. இதை ‘Synthesis of Sound with Machine Learning’ என்கிறார்கள்.

என்னுடன் பணிபுரியும் முருகேசன் எனக்கு இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து தந்தான். அவன் இந்த ஆப்பை அடிக்கடி உபயோகப்படுத்துவான். புதிதாக கல்யாணம் ஆனவன். அவனுக்கு ஃபோன் வந்தால், “டார்லிங். ப்ரீயா இருக்கீங்களா? என்னோட பேச முடியுமா?” என்று அவன் புதுப் பெண்டாட்டி பேசுவாள். அவன் எல்லோரையும் பார்த்து பெருமிதமாகச் சிரிப்பான். அவன் பெண்டாட்டி போல் ஆப்பும் புதியது. இன்னும் பீடா டெஸ்டிங் நிலைமையில் உள்ளது பக்ஸ் இருக்கலாம் ஆனால் பலர் இதை யூஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

நான் ஒரு நாள் அவன் பெண்டாட்டி குரலை என் மொபைலில் ரெகார்ட் செய்து ஆபிசில் அதை ஒலிக்க விட்டேன். முருகேசன் அவசரமாக மொபைலை எடுத்து விழித்தான். ஆபிசில் எல்லோரும் சிரித்தார்கள்.

 

அம்மா என்னை மதுமிதாவுடன் வெள்ளிக்கிழமை முருகன் கோவிலுக்கு வரச்சொன்னாள். நல்ல நாளாம். ஏதோ ஸ்பெஷல் பூஜை செய்கிறார்களாம். நான் சரி என்று சொன்னேன்.

“டேய். வெள்ளிக்கிழமை ஆறு மணிய உன் காலெண்டர்ல குறிச்சி வச்சுக்கோ. என் காலண்டர் ரிக்வெஸ்ட் ஆக்செப்ட் பண்ணு” என்று ஃபோன் அம்மா குரலில் பேசியது. நான் ஒரு நிமிடத்திற்கு எதுவும் செய்யவில்லை என்றால் அதுவே ரிக்வெஸ்ட் அக்செப்ட் செய்துவிடும். நான் ஒன்றும் செய்யவில்லை.

“எப்படி நீங்க வேற ஒருத்தருக்கு வெள்ளிக்கிழமை ஆறு மணிக்கு appointment கொடுக்கலாம். என்னைப் படத்துக்கு அழைத்து போறேன்னு சொல்லியிருக்கீங்க” என்று என் மனைவி மதுமிதாவின் குரலில் ஃபோன் பேசியது.

நான் இதை முழுவதாக மறந்துவிட்டிருந்தேன். அவளுக்கு புதிதாய் வரப்போகும் கமல் படத்தை முதல் நாள் பார்க்கவேண்டும். அவள் என் காலண்டரில் appointment schedule செய்திருந்தாள்.

“என்ன. ஒண்ணுமே பேச்சில்ல? அம்மாவுக்கு என்ன சொல்ல போறீங்க?” மறுபடியும் மதுமிதாவின் குரல்.

அம்மாவுக்கு காலேண்டர் ரிக்வெஸ்ட் ரிஜெக்ட் ஆகிவிடும். அவள் மறுபடியும் கூப்பிடுவாள். கோவிலை விட சினிமா முக்கியமா என்ற கேள்வி வரும். இப்பொழுது என்ன செய்வது என்று நான் தலையை சொறிந்து கொண்டிருக்கும்போது மதுமிதா உள்ளே வந்தாள்.

“படம் செம கலக்கலாம். துபாய்ல என் friend பார்த்துட்டு சொன்னான். I am waiting, I am waiting, I am waiting” என்று துள்ளினாள்.

“டேய். ஏன் என் ரிக்வஸ்ட் ரிஜெக்ட் பண்ண? உன்னோட பேசணும் ஃபோன எடு”. கொய்யால. இந்த machine learning ஆளுங்க ஒரு லெவலுக்கு மேலயே போயிட்டாங்க. அம்மா எதுக்கு ஃபோன் பண்றான்னு இவனுக்கு எப்படி தெரியும்? Machine learning தலையில் கல்லப் போட.

“என்ன ரிக்வெஸ்ட்?” என்றாள் மதுமிதா

“சொல்றேன். சொல்றேன். ஒரு சின்ன confusion”

“என்ன confusion?”

“ஏன்டா ஃபோன் எடுக்க மாட்டேங்கற. நீ இல்லேன்னா உன் பொண்டாட்டி இருப்பாளே? அவளுக்கு என்ன அப்படி உயிர் போற வேல. ஃபோன் எடுக்க முடியாதா அவளால?”

மதுமிதாவுக்கு முகம் சிவந்துவிட்டது. “என்ன? உங்க அம்மா எனக்கு வேலையில்லன்னு நினைக்கறாங்கள? அவங்களுக்கு வேணா நீங்க இன்னும் கைக்குழந்தையா இருக்கலாம். அதுக்காக நானும் உங்கள கைக்குழந்தையா நடத்தணுமா. கழுத போல் வளர்ந்துட்டீங்க. உங்களுக்கு ஃபோன் எடுக்க வராதா?”

“அது அம்மா இல்ல மது. ஃபோன் தானே சொல்லுது. எல்லாம் machine learning”

“அது எப்படி learn பண்ணும். உங்க அம்மா இது போல் அடிக்கடி பேசறாங்க. அது வச்சி ஃபோன் learn பண்ணுது.”

“அப்படி இல்லமா. அந்த ஆப் இப்படி பேசக்கூடும்னு ஒரு மாதிரி ப்ரெடிக்ட் பண்ணுது”

“கரெட்டா தான் பண்ணுது. உங்க அம்மா இப்படி தான் பேசுவாங்க”

நான் பதில் சொல்வதற்குள் ஃபோன் மதுமிதா குரலில் பேசியது, “உங்க அம்மா மறுபடியும் ரிக்வெஸ்ட் அனுப்பியிருக்காங்க. நாம சினிமா போறோம்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அத தடுக்கறதுக்கு இப்படி எதாவது டிராமா பண்ணுவாங்க”

மதுமிதா என்னை முறைத்தாள். “நான் இப்படி தான் பேசுவேனா? நீங்க தான் ஃபோனுக்கு சொல்லிக் கொடுத்தீங்களா?”

“இல்லமாஆஆ. இது machine..”

“machineஆ மண்ணாங்கட்டியா. சும்மா பொய் சொல்லாதீங்க. நீங்க என்ன ஒரு ராக்ஷஷி மாதிரி பார்கிறீங்க நல்லா தெரியுது”

“அந்த கிழவி ரிக்வெஸ்ட்ட மறுபடியும் ரிஜெக்ட் பண்ணிடறேன்.”, என்றது ஃபோன் மதுமிதா குரலில.

மதுமிதாவிற்கு அப்பொழுதுதான் ஞானோதயம் வந்தது. “என்ன. நீங்க வெள்ளிகிழமை அம்மா கிட்ட வரேன்னு எதாவது சொன்னிங்களா? நீங்க போறதுன்னா போங்க. நான் தனியா சினிமா போறேன். உங்கள நம்பினா ஒரு பிரயோஜனமும் இல்ல”

“அம்மாவிடமிருந்து ஒரு வாய்ஸ் மெசேஜ்” என்றது ஃபோன் ஏதோ ஒரு அமெரிக்க குரலில். “மெசேஜ் படிக்கட்டுமா?”

“வேண்டாம்” என்று சொல்ல வாயெடுக்கும்முன் மதுமிதா “படி” என்றாள். எங்கள் இருவர் குரலாணைக்கும் தலை வணங்குவார். ஃபோனாண்டவர்.

“வெள்ளிக்கிழமை கோவிலுக்கு வரத மறக்காத. உன் பெண்டாட்டி எதாவது படத்துக்கு போகணும்னு அடம் பிடிப்பா. ஒரு நாள் கோவிலுக்கு வந்தா அவ ஒண்ணும் குறைஞ்சு போக மாட்டா. ஏதோ சொத்த சினிமாவுக்கு போகிறத விட கோவிலுக்கு வந்தா புண்ணியம் வரும்” அம்மாவின் குரல் துல்லியமாக கேட்டது.

மதுமிதாவின் பார்வை எப்படி இருந்திருக்கும் என்று நான் உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா? அவள் ஏதோ கோவமாக சொல்ல ஆரம்பித்தபோது அவள் மொபைலில் என் குரல் கேட்டது. “மது உங்க அம்மா ஃபோன்”

அவளுக்கு மொபைலை எடுப்பதை விட என்னை திட்ட வேண்டும் என்ற ஆசை தான் அதிகம் இருந்தது. “நான் என்னிக்கோ ஒரு நாள் சினிமா போகலாம் …” கோவம் அவள் தொண்டையை அடைத்தது. அவள் அழுதுவிடுவாள் போல் இருந்தது. கோவமும் அழுகையும் சேர்ந்தால் எனக்கு சங்கு தான்.

அப்பொழுது அவள் மொபைல் மறுபடியும் என் குரலில் பேசியது. “ஃபோன் எடு மது. இல்லைனா உங்க அம்மா எனக்கு ஃபோன் பண்ணிவிடுவா. சீக்கிரம் எடு” என்றேன்.

நான் மதுமிதாவுடன் இது போல் பேசியிருக்க மாட்டேன் என்று உங்களுக்கு தெரியும். பிறகு ஏன் மொபைல் அப்படி பேசுகிறது?. நான் யாருடன் எல்லாம் பேசுகிறேனோ அதை எல்லாம் analyze செய்து வரும் resultஐ cloud எனப்படும் ஒரு பொது இடத்தில் இந்த ஆப் வைத்துவிடும். யாரெல்லாம் என் பெயரை அவர்கள் மொபைலில் வைக்கிறார்களோ அவர்கள் எல்லோருக்கும் இந்த cloud செனட்டரிலிருந்து தான் என் குரலும் நான் பேசும் விதமும் செல்லும்.

“ஓஹோ. ஏன், எங்கம்மா உங்கள கூப்பிட கூடாதா?”

“அப்படி இல்ல மது. நான் என்ன சொல்ல வரேன்னா இது machine..”

“Machine learning. Machine Learning. Machine Learning. இதையே சொல்லிண்டிருங்க.”

“நாம சினிமா போறோம்னு தெரிஞ்சா உங்கம்மாவும் கூட வரேன்னு கழுத்தறுப்பாங்க. சீக்கிரம் ஃபோன் எடு” என் குரலில் ஃபோன் மதுமிதாவிடம் கூறியது

இப்பொழுது அவள் கண்களில் நீர் தேங்க ஆரம்பித்தது. அவள் கோபமாக மொபைல் பட்டனை அழுத்தி “ஹலோ” என்று கூறிக்கொண்டே பெட்ரூம் பக்கம் சென்று கொண்டிருந்தவள் என்ன தோன்றியதோ, “நான் உன்னோட அப்புறம் பேசறேன்” என்று மொபைலை கட் செய்துவிட்டு என்னிடம் வந்தாள். “உங்க சாயம் நல்லா வெளுத்து போச்சு. நீங்க உங்க அம்மாகூட கோவிலுக்கு போங்க. நான் எங்க அம்மாவோட சினிமாவுக்கு போறேன். இப்போ சந்தோஷமா. சந்தோஷமா?” என்று கேட்டுவிட்டு என் பதிலுக்கு காத்திராமல் சமையலறைய நோக்கி நடந்தாள்.

அப்பொழுது பளிச் என்று என் மொபைல் ஒளிர்ந்தது. முருகேசன் அழைக்கிறான். “டார்லிங். பிஸியா? என்னோட ரெண்டு நிமிஷம் பேசமுடியுமா?” என்று முருகேசன் பெண்டாட்டி குரலில் ஃபோன் என்னை கேட்டது. சாப்ட்வேர் பக். முருகேசன் குரலுக்கு பதில் அவன் மனைவியின் குரலில் பேசுகிறது மொபைல்! இந்த பக் எவனால் வந்ததோ அவனைக் கண்டுபிடிக்க வேண்டும். பொழச்சி இருந்தா. செத்தடா மவனே நீ.

வேகமாக சமையலறைக்கு சென்றுக்கொண்டிருந்த மதுமிதா சட்டென்று நின்று, நிதானமாக திரும்பி என்னை நோக்கி மெதுவாக நடந்து வந்து கொண்டிருக்கிறாள்..

Juxtaposition/ பக்க அணிமை

 

அமில ஆவி பறக்கிறது
கடையைச் சுற்றிலும்

ரசாயனப் பொடியின் வெண்மை நெடி
கடை முழுவதும்

கருத்துக் கொண்டிருக்கின்றன
பித்தளை வெண்கலப்
பாத்திரங்கள்

அரித்துச் செல்கிறது அனைத்தையும்
திருகல் காமம்

ந.ஜயபாஸ்கரன்
(சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம் தொகுப்பு)

நாம் எதையும் எப்படி வேண்டுமானாலும் வாசிக்கலாம். ஆனால், வாசிப்பின் பயன் என்ன என்ற கேள்வி ஒரு சில வாசிப்புகளுக்கு இடமில்லாமல் செய்கிறது: மாறாய், குறிப்பிட்ட ஒரு வாசிப்பின் விளைவு என்ன என்ற கேள்வி நம் கற்பனையை இது போல் குறுக்குவதில்லை. அங்கிருந்து வேண்டுமானால், எந்த வாசிப்பில் என்ன பயன், எந்த வாசிப்பு பொருத்தமாக இருக்கும் என்ற இடத்துக்குப் போவது சரியாக இருக்கலாம்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் சரியா, தப்பா, தேவையா, இல்லையா என்றெல்லாம் கவலைப்படாமல் பக்க அணிமை (Juxtaposition) என்ற இலக்கிய கருதுகோள் இந்த வாசிப்புக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. “The arrangement of two or more ideas, characters, actions, settings, phrases, or words side-by-side or in similar narrative moments for the purpose of comparison, contrast, rhetorical effect, suspense, or character development,” என்று ஒரு தளத்தில் இந்தப் பதம் வரையறை செய்யப்படுகிறது. தமிழில் இதற்கு இணையான யாப்பிலக்கணச் சொல் நிச்சயம் இருக்கும், எனக்குத் தெரியவில்லை.

தூஷன் மகவேவ் எனும் மனோவசியக்காரன்”” என்ற தலைப்பில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரையொன்றில் “Man is not a Bird” என்ற கிழக்கு ஐரோப்பிய திரைப்படம் ஒன்றைப் பேச இந்தப் பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதை முதலில் படித்துப் பார்க்கலாம்.

ந. ஜயபாஸ்கரன் கவிதை, “அரித்துச் செல்கிறது அனைத்தையும்/ திருகல் காமம்“ என்று ஆச்சரியமாய் முடிகிறது. பொதுவாக, காமம் வெம்மையுடன் தொடர்புபடுத்தப்படுவது, கொந்தளிப்பு, தகிப்பு, தழல், உருக்குதல் போன்றவை காமத்துக்கு உரியவை. அரித்தல் நீரின் இயல்பு. எரிமலைக் குழம்பு, கொதிநீர் போன்றவற்றைத் தவிர நீர் குளிர்விப்பது அல்லது ஆற்றுவது- காமம் எதையும் அரித்துச் செல்லும் என்று நாம் எதிர்பார்க்க மாட்டோம்.

போதாக்குறைக்கு திருகல் காமம் என்று வேறு எழுதுகிறார் ஜயபாஸ்கரன். இதை எப்படி புரிந்து கொள்வது என்பதற்கு கவிதையில் குறிப்புகள் இல்லை. இதற்கு முன் உள்ள எதுவும் காமத்தைப் பேசுவதில்லை. இந்த இரு வரிகள் தனித்து நிற்கின்றன, எப்படி வேண்டுமானால் புரிந்து கொள்ளலாம் என்பது போல். அரித்துச் செல்கிறது என்பதால் இந்தக் காமத்தை, அதன் அழகற்ற பொருளில்தான் புரிந்து கொள்ள முற்படுவோம், உதாரணத்துக்கு, வக்கிரம் என்ற அர்த்தத்தில் perverted என்று. ஆனால் அப்படி எதுவும் இருந்தால் வக்கிரம் என்றே அவர் எழுதியிருக்கலாம், நிற்க.

கவிதை, ‘அமில ஆவி பறக்கிறது’, என்று துவங்குகிறது. அமிலம் ஒரு கரைப்பான், வெம்மை கூடிய, ஆவி பறக்கும் கரைப்பான். இப்போது மிக எளிதாக நாம் காமத்தையும் அமிலத்தையும் இணைத்துப் பார்க்க முடிகிறது. ஜெயபாஸ்கரன் அமிலத்தை துவக்கத்திலும் காமத்தை முடிவிலும் வைத்திருப்பதால் இந்த இரண்டுக்கும் இடையில் தொலைவு அதிகம் என்று பொருள் கொள்ள வேண்டியதில்லை. துவக்கம்- முடிவு என்ற உறவில் அமிலமும் காமமும் மிகவும் நெருங்கி நிற்கின்றன.

கடையைச் சுற்றிலும் அமில ஆவி பறப்பது அவ்வளவு சந்தோஷமான விஷயமல்ல. அமிலம் ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்குப் பயன்பட்டாலும், கரைப்பது அதன் குணம், காரம் அதன் மணம் என்று நினைக்கிறேன். இது கடைக்கு வெளியே- நாம் அடுத்து கடைக்குள் நுழைகிறோம்.

‘ரசாயனப் பொடியின் வெண்மை நெடி/ கடை முழுவதும்’ என்று அடுத்த வரிகள் வந்து விழுகின்றன. இப்போது நம் சித்திரம் இன்னும் தெளிவடைகிறது- அமில ஆவி வெளி வஸ்து அல்ல, உள்ளே கடையை நிறைத்திருக்கிறது. வெளியே நாம் காண்பது கசிவு, உள்ளேதான் ரசாயனப்பொடியின் காட்டமான வெண்மை நெடி.

வெண்மை நெடி என்பது ஒரு சுவாரசியமான பயன்பாடு. நீல நெடி, சிவப்பு நெடி, வெண்மை நெடி என்றெல்லாம் ஒவ்வொரு வண்ணத்துக்கும் ஒவ்வொரு நெடி உண்டா? இருக்காது என்றுதான் நினைப்போம். ஆனால் சூடுபடுத்துபவர்கள் இடுபொருள் வெவ்வேறு வண்ணங்களில் எரியும்போது அது வெவ்வேறு மணம் கொள்வதை அறிவார்கள் என்று நினைக்கிறேன். அதாவது ரசாயனப் பொடி நெருப்பில் இடப்பட்டு எரியும்போது அந்த நெருப்பு செந்தழல் என்ற நிலையில் ஒரு மணம் வீசும், வெண்ணிறச் சுவாலையாய் வேறு மணம் வீசும் என்று நினைக்கிறேன் – இந்த வெண்சுவாலையின் ரசாயன நெடியை கவிஞர் வெண்மை நெடி என்று சொல்வதாக ஊகிக்கிறேன். இந்த உஷ்ணத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லும் சுவாரசியமானது – white heat:

இதற்கு அகராதியில்,

1. (General Physics) intense heat or a very high temperature, characterized by emission of white light
2. (informal) a state of intense excitement or activity

என்று அர்த்தம் போட்டிருக்கிறது.

ரசாயனப்பொடியை உயர் வெப்பத்தில் சூடுபடுத்தும்போது எழும் அமில நெடி கடைக்குள் நிறைந்திருக்கிறது. கடைக்கு வெளியே அதன் ஆவி கசிகிறது, ஒரு வெண் புகை வருகிறது என்று நினைக்கிறேன், இப்படி எல்லாம் நடக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இப்படிப்பட்ட காட்சிதான் மனதில் தோன்றுகிறது.

இதற்கு அடுத்து, “கருத்துக் கொண்டிருக்கின்றன/ பித்தளை வெண்கலப்/ பாத்திரங்கள்” என்று வந்து விடுகிறது, நாம் ஏதோ ஒரு பாத்திரக்கடையில் இருக்கிறோம் என்பதை இப்போது புரிந்து கொள்கிறோம். ஆனால் உடனே ஒரு சந்தேகம், இந்த ரசாயனப் புகையால்தான் பாத்திரங்கள் கருக்கின்றனவா, ஆக்சிடேஷன் ஆவது மாதிரி? இருக்காது என்று நினைக்கிறேன், கடை மாதிரியான இடத்தில் அந்த மாதிரி வேலையைச் செய்ய மாட்டார்கள். பாத்திரங்களுக்கு முலாம் போடத்தான் இதைச் செய்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும், ஒரு பாத்திரம் பிரகாசிக்கும்போதே கடையிலுள்ள மற்ற பாத்திரங்கள் சோபையிழந்து கருத்துப் போகுமே, எந்தக் கடைக்காரன் இப்படி ஒரு வேலையைச் செய்வான், இதில் லாபத்தைவிட நஷ்டம்தானே அதிகம்?

இரண்டு சாத்தியங்கள் – இது போல் எத்தனைதான் மறுபடியும் மறுபடியும் முலாம் பூசிக் கொண்டிருந்தாலும் பாத்திரங்கள் கருத்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பது ஒன்று. இரண்டாவது சாத்தியம், முலாம் பூசும்போது பாத்திரம் பளபளப்பது கண்கூடாகத் தெரிகிறது, ஆனால் இன்னது நடக்கிறது என்பது வெளியே தெரியாமல்தானே மெல்ல மெல்ல மற்ற பாத்திரங்கள் கருக்கின்றன? அதாவது, இதன் சாதக விளைவுகள் உடனே கிடைக்கின்றன, பாதக விளைவுகள் தாமதமாக ஏற்படுகின்றன (அதற்குள் பாத்திரங்கள் விற்றுப் போகலாம் என்பதால் இது கடைக்காரர் கையைக் கடிக்கும் வேலையல்ல).

இந்த இரண்டில் எதை எடுத்துக் கொள்வது? முதலில் முன்னதை எடுத்துக் கொள்வது சரியாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் அரித்துச் செல்கிறது என்றும் இந்தக் கவிதையில் வருவதால், அமிலத்தின் corrosive தன்மையைக் கணக்கில் கொண்டு, இரண்டாம் பொருள் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

சரி, இங்கு என்னதான் நடக்கிறது? ஒரு சாதாரண, அன்றாட கடைத்தெரு காட்சி, “அரித்துச் செல்கிறது அனைத்தையும்/ திருகல் காமம்” என்று முடிக்கும்போது கவிதை வேறொரு இடத்துக்குப் போய்விடுகிறது. திருகல் காமம் என்று வேறு சொல்கிறார்- திருகல் காலம் என்று சொன்னாலாவது புரிந்து கொள்ளலாம், entropy பற்றி ஏதோ சொல்கிறார் என்று.

இத்தனை நேரம் அமில ஆவி, வெண்மை நெடி என்று எல்லாவற்றையும் ஒரு ரசாயன வினையாக வாசித்துக் கொண்டிருந்தோம், இப்போது white heat என்பதன் இரண்டாம் பொருளையும் பார்க்கலாம் – (informal) a state of intense excitement or activity.

Merriam Webster அகராதியில் passion என்ற சொல், 5. depth of feeling என்ற பொருளுக்கு, white heat என்பதை ஒரு synonymஆகக் கொடுத்திருக்கிறார்கள்.

பொதுவாக வெப்பம் உருக வைப்பது, அரிக்கும் செயல் நீருக்கு உரியது (அமிலத்துக்கும் உரியது). காமம் அரித்துச் செல்கிறது என்பதால்தான் அதை திருகல் காமம் என்று சொல்கிறார் போலிருக்கிறது என்று இதை எல்லாம் ஆரம்பத்திலேயே சொல்லியாகி விட்டது.

இப்போது பக்க அணிமை என்ற விஷயத்துக்கு வரலாம் – காமத்தை அமிலத்துடன் இணைத்துப் பேச வைப்பதுதான் இந்தக் கவிதையில் ஜயபாஸ்கரனின் ஸ்ட்ரோக் ஆப் ஜீனியஸ். எந்த ரசாயனம் வெண்மை நெடியாகவும் அமில ஆவியாகவும் இருக்கிறதோ அதேதான் கருத்துப் போவதற்கும், அரித்து அழிப்பதற்கும் காரணமாகிறது (இதை அவர் நேரடியாகச் சொல்லவில்லை, மறைமுகமாகவும்கூட உணர்த்தவில்லை, அவர் அமிலத்தையும் காமத்தையும் பக்கத்தில் வைத்து வாசிக்கச் செய்வதால், நாம் அந்த மாதிரி நினைக்க முற்படுகிறோம்). காமம்தான் அந்த ரசாயனம் என்ற சுட்டலும் கவிதையில் சொல்லாத, ஆனால் நாமே மேற்கொள்ளும் ஒரு எளிய தாவல்.

கடைசி இரு வரிகள் இதற்கு முன் வந்த, அதுவரை ஒரு காட்சியாய் இருந்த, அத்தனையையும் ஒரு படிமம் ஆக்கி விடுகின்றன.

இனி ஒன்றுதான் மிச்சம் இருக்கிறது- திருகல் காமம் என்பதில் திருகலை என்னவென்று புரிந்து கொள்வது? இந்தக் கேள்வி மொழிபெயர்ப்பாளனின் கவலை. நம்மைப் பொறுத்தவரை. எது சோபை சேர்க்கிறதோ அதுவே மாசும் சேர்க்கிறது என்பதே திருகல் காமம் என்பதைப் புரிந்து கொள்ளப் போதுமானதாக இருக்கிறது. அந்தக் காமம், passion, நேரானதாக இருக்கலாம், வக்கிரப்பட்டதாக இருக்கலாம், மொழிபெயர்ப்பவனைத் தவிர நமக்கு எதுவானால் என்ன, எல்லாம் ஒன்றுதான்.

இங்கு ஷேக்ஸ்பியரின் 129ஆம் சானட், “The expense of spirit in a waste of shame” என்று துவங்கும் கவிதையை ஒப்பிடலாம். அவர் காமத்தைப் பேசுகிறார் , அவ்வளவுதான். எந்த வகை காமமாய் இருந்தாலும் அத்தனைக்கும் அது பொருந்தும். இந்தக் கவிதையும் அப்படிப்பட்ட ஒன்றுதான். இது என்ன சொல்கிறது, எதைச் சொல்கிறது என்று பேசுவதைவிட, எப்படிச் சொல்கிறது என்று பேசுவதுதான் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

பின்குறிப்பு:

1. அரிக்கும் காமம் குறித்து நண்பர் ஒருவர் எழுதியது:

“‘அனைத்தையும் அரிக்கும்’ என்பது எதையெல்லாம் குறிக்கக்கூடும் என்று யோசித்தேன். தன்மதிப்பு, வெட்கம், சமூகத்திற்காக ஏற்றிருக்கும் பாத்திரம் அனைத்தையும் காமம் அரிக்ககூடும். எந்த கீழ்மைக்கும் காமம் நம்மைத் துணியச் செய்யும். ஒரு பக்கம் காமத்தால் உள்ளம் பொலிவுறும்போது, இன்னொரு பக்கம் மனம் கருத்துக் கொண்டிருக்கிறது, காமம் அரித்துக் கொண்டிருக்கிறது என்பதை இவ்வாறாக புரிந்து கொண்டேன்.

2. ரசவாதம்

Part One: Life, XXXIII

DARE you see a soul at the white heat?
Then crouch within the door.
Red is the fire’s common tint;
But when the vivid ore

Has sated flame’s conditions,
Its quivering substance plays
Without a color but the light
Of unanointed blaze.

Least village boasts its blacksmith,
Whose anvil’s even din
Stands symbol for the finer forge
That soundless tugs within,

Refining these impatient ores
With hammer and with blaze,
Until the designated light
Repudiate the forge.

Emily Dickinson

. ஒளிப்பட உதவி – ‘Emily Dickinson’, Maira Kalman, Venetian Red