Author: பதாகை

Pebbles. Shingles. கூழாங்கற்கள். சிதைகற்கள்.- மாத்யூ அர்னால்டின் டோவர் பீச்.

பதாகையில், “பூமணியின் அஞ்ஞாடி- இருட்டில் நிகழும் மோதல்கள்” என்றொரு கட்டுரை இரு பகுதிகளாக பதிப்பிக்கப்பட்டது. ஆங்கிலத்தில், “Clashing by night,” என்ற தலைப்பில் The Caravan என்ற இதழில் என்.. கல்யாணராமன் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் அது. பூமணிக்கும், அஞ்ஞாடிக்கும் இரவில் நிகழும் மோதல்களுக்கும் என்ன தொடர்பு என்று புரியாமல் வேறொரு தலைப்பு கோரப்பட்டது. அப்போது அவர், The Dover Beach, என்ற ஆங்கிலக் கவிதையைச் சுட்டிக் காட்டினார். அதன் இறுதி சொற்கள்- “And we are here as on a darkling plain/ Swept with confused alarms of struggle and flight,/ Where ignorant armies clash by night//“. “இருள்சூழும் சமவெளியில் இருப்பது போலிருக்கிறோம்’, என்கிறார் கவிஞர். “ஓட்டம் போராட்டம் என்றெழும் ஓலங்களின் குழப்பத்தில் கொண்டு செல்லப்படுகிறோம்”- இதன் முத்தாய்ப்பாய் வரும் சொற்கள்- “இங்கு சூதறியாப் படைகள் இரவில் மோதிக் கொள்கின்றன”. வரலாறோ விதியோ, மனிதர்கள் அதன் சூதறியா கைப்பாவைகள்

ஆனால் கவிதையே இரவில்தான் துவங்குகிறது- “The sea is calm tonight,” என்ற துவக்கம், “ignorant armies clash by night” என்று முடியும் கவிதைக்கு எப்படிப்பட்ட துவக்கம் அளிக்கிறது! முடிவைப் போலவே கவிதையின் துவக்கத்திலும் இரவில் நிகழும் ஒரு மோதல்- கடல்களின் நீர்ச்சந்தி, கடல் நிறைந்திருக்கிறது, அமைதியாய் இருக்கிறது, பௌர்ணமி நிலவு அதன் மேல் ஒளிர்கிறது- “The tide is full, the moon lies fair/ Upon the straits;“.

இந்தக் கவிதையை எழுதும்போது மேத்யூ ஆர்னால்டும் அவர் மனைவியும் புதுமணத் தம்பதியர், தேனிலவு கொண்டாட கடற்கரைப் பகுதிக்கு வந்திருக்கிறார்கள்- இப்போது தன் துணையை ஜன்னலுக்கு அழைக்கிறார் கவிஞர்- “Come to the window, sweet is the night-air“| தொலைதூரத்தில் தெரியும் பிரெஞ்சு கடற்கரையில் ஒளி மின்னி மறைகிறது. இங்கிலாந்தின் மலைச்சிகரங்கள் ஓங்கியுயர்ந்து நிற்கின்றன- ‘Glimmering and vast‘, என்கிறார் ஆர்னால்ட் ‘out in the tranquil bay‘, கடலும் நிச்சலனமாய் நிற்கிறது. தன் காதலியை வா என்று அழைக்கிறார், வெளியே பார், இரவின் காற்று எவ்வளவு இனிதாய் இருக்கிறது.

ஆனால் இனிதாகவா? Only, என்ற வார்த்தை ஒரு அவலக்குரலாய் வந்து விழுகிறது. நாமிருக்கும் இடத்தில் கடல் அமைதியாய் இருக்கிறது, ஆனால் தூரத்தே வேறொரு ஓசை கேட்கிறது, அது வேறொரு சந்திப்பின் ஓசை, இங்கு அங்கு என்றல்ல, ஒரு நீண்ட கோடாய், நிலவொளியில் வெளிறிக் கிடக்கும் மண்ணில் கடலலைகள் மோதும் ஓசை. “Only, from the long line of spray/ Where the sea meets the moon-blanched land,”. கேள், என்று கவிதையின் ஓட்டத்துக்குத் தடை போட்டுத் தொடர்கிறார், கூழாங்கற்கள் அரைபடும் ஓசை கேட்கிறதா,அவற்றைக் கொண்டு செல்லும் கடலலைகள் திரும்பி வரும்போது, உயர்ந்து நிற்கும் கரை மீது வீசி எறிகின்றன- “Listen! you hear the grating roar/ Of pebbles which the waves draw back, and fling,/ At their return, up the high strand,“. கவிதையின் முடிவில் வரும் வரிகளை இங்கு நோக்கலாம் – “And we are here as on a darkling plain/ Swept with confused alarms of struggle and flight“. Swept with confused alarms– இதற்கும் அதற்கும் எத்தனை பொருத்தம், நாம் சூதறியா கைப்பாவைகள் என்பதுகூட அவ்வளவு சரியில்லை, நம்மைக் காட்டிலும் ஆற்றல் வாய்ந்த சக்திகளின் போராட்டத்தில் அரைபடும் கூழாங்கற்கள்- இதுதான் நாமறியாச் சூது..

ஒளியையும் ஒலியையும் கொண்டு தெளிவையும் குழப்பத்தையும் விவரிக்கும் கவிதையில் அடுத்து வரும் வரிகள் செவிக்குரியவை- “Begin, and cease, and then again begin,/ With tremulous cadence slow, and bring/ The eternal note of sadness in.//” அலையோசை உயர்கிறது, ஓய்கிறது, மீண்டும் உயர்கிறது, அதன் தீனமாய் நடுங்கி மெல்லத் தேயும் ஒலி, நித்திய துயரத்தின் நாதத்தைக் கொணர்கிறது. பெருமளவு முரண்களைக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட இந்தக் கவிதையில், கடலின்- கர்ஜனை grating roar – தீனமாய் நடுங்கித் தேயும் கீதமாய் ஒலிப்பது – tremulous cadence slow– பொருத்தமாய் இருக்கிறது அதற்கு முன், Begin, and cease, and then again begin என்று இதற்கான சூழல் உருவாக்கப்பட்டு விட்டது.

கடலின் துயரம் காலங்காலமாய் உள்ள துயரம்- வெகுகாலம் முன்னர் ஒரு கிரேக்க காவியகர்த்தா தன் கடற்கரையில் இதைக் கேட்டு நின்றிருக்கிறான்- அது மானுட துன்பங்களின் கொந்தளிக்கும் ஏற்ற இறக்கங்களை அவனுக்கு நினைவுபடுத்தியிருக்கிறது. காலத்திலும் இடத்திலும் அவனுக்கு வெகு தொலைவில் உள்ள இந்தக் கடற்கரையில், அதன் ஓசையில் நமக்கும் ஒரு எண்ணம் கிட்டுகிறது- . “Sophocles long ago/ Heard it on the Ægean, and it brought/ Into his mind the turbid ebb and flow/ Of human misery; we/ Find also in the sound a thought,/ Hearing it by this distant northern sea.”

கண்முன் காணக்கிடைக்கும் காட்சிகள், செவிக்குரிய ஓசைகள் என்று இதுவரை விவரித்த ஆர்னால்ட் கடலின் slow, tremulous cadence என்பதை eternal note of sadness என்று உருவகித்து காலவெளியில் விலகிச் சென்று சொபோகிலஸ் என்ற தொல் காவியகர்த்தாவைத் தொடுவதால் அவர் இப்போது தனிமனித அவஸ்தைகளிலிருந்து விலகி பொதுநிலைகளைப் பேச முடிகிறது. கவிதையில் இந்த இடம் மிக அழகாக, எந்தப் பிசிறுமின்றி எட்டப்படுகிறது- ,

ஒருகாலத்தில் நம்பிக்கை ஒரு கடலாய் இருந்தது. அது நிறைந்திருந்தது. பூமியின் கரைகளை வளைத்திருந்தது.- இதன் இழப்பு சோகம் நிறைந்தது. முன்னமே நாம் ‘slow, tremulous cadence’, ‘eternal note of sadness‘, என்பதை எல்லாம் படித்துவிட்டதால், “The Sea of Faith/ Was once, too,” என்ற இடத்தில் நம்பிக்கையின்மையை ஒரு பெருஞ்சோகமாய் நாம் எதிர்கொள்கிறோம், “Was once, too, at the full, and round earth’s shore/ Lay like the folds of a bright girdle furled“” என்பதை எல்லாம் இல்லாத ஒன்றாகவே வாசிக்கிறோம். கடல் ஒரு நீண்ட பெருமூச்சு போல் பின்வாங்குவதன் சோகத்தை உணர்கிறோம்.

இதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை, சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்வது போலிருக்கலாம் – ஒரு இசைப்பாடல் போல் மாத்யூ ஆர்னால்ட் இந்தக் கவிதையில் ஆரோகண, அவரோகணங்களை அமைத்திருக்கிறார். முன்னர், “Listen! you hear the grating roar/ Of pebbles which the waves draw back, and fling,/ At their return, up the high strand,/ Begin, and cease, and then again begin,” என்பதில் நாம் ஒரு தொடர் எழுச்சியைக் கண்டோம்- ஆனால் அது எழுச்சியல்ல, வீழ்ச்சி என்பது இங்குதான் தெரிகிறது- “But now I only hear/ Its melancholy, long, withdrawing roar,/ Retreating, to the breath/ Of the night-wind, down the vast edges drear/ And naked shingles of the world.Grating roar என்பது melancholy, withdrawing roar என்றாகிறது; ‘Begin, and cease, and then again begin‘ என்று எத்தனை தொடர்ந்தாலும் அது, நீண்டகால பார்வையில், “melancholy, long, withdrawing” என்று தோற்கிறது; “pebbles which the waves draw back, and fling,” என்பது போய் கடல் எல்லாம் விட்டுச் செல்லும் பெருந்தோல்வியாகிறது- “naked shingles of the world“. “Come to the window, sweet is the night-air!” என்று சொன்னவர்தான், “Retreating, to the breath/ Of the night-wind,” என்றும் சொல்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

we/ Find also in the sound a thought,” – அலையோசை கேட்டுப் பிறந்தது ஒரு எண்ணம்தான், அது கிரேக்க துயர்காவியங்களுக்குச் சென்று அமைதியைக் குலைத்து பெருஞ்சோகத்தால் நிறைத்துவிட்டது. எழுச்சி கண்ட உணர்வுகள் வீழ்ச்சியின் முன் நிற்கின்றன.

இது ஏன் சாதாரண ஒரு காதல் கவிதையாக நிற்பதில்லை என்றால் இங்கு ஒரு சுத்திகரிப்பு நிகழ்ந்திருக்கிறது. எல்லாம் அமைதியாய், நிர்மலமாய், நிச்சலனமாய் இருக்கின்றன என்ற திரை விலகிவிட்டது. பரஸ்பர காமத்தின் நிர்வாணத்தை அல்ல, சமய நம்பிக்கை அளிக்கும் நிச்சயங்களின் உறுதிப்பாடற்ற “naked shingles of the world” என்ற நிர்மூல நிர்வாணத்தை எதிர்கொள்கிறது காதல். இனிவரும் வரிகள் மிகவும் உருக்கமானவை, அவ்வளவு எளிதில் மறக்கப்பட முடியாதவை. தேசீய கீதத்துக்குரிய உணர்ச்சி மேலீடு கொண்டவை.

Ah, love, let us be true/ To one another! for the world, which seems/ To lie before us like a land of dreams,/ So various, so beautiful, so new,”- இதில் உள்ள ah, என்ற சொல், நாம் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருப்போம் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தும்போது எவ்வளவு இனிதாய் நம் மனதில் ஒலிக்கிறது. இந்த உலகம் நம் முன் கனவுகள் நிறைந்த ஒன்றாய் காணப்படுகிறது, இதில் எத்தனை எத்தனை காட்சிகள், எத்தனை எத்தனை அழகுகள், இது எத்தனை புதிதாய்ப் பிறந்தது போலிருக்கிறது” – ஆனால். ஆனால், இங்கு ஆனந்தமில்லை, காதலில்லை, ஒலியில்லை, உறுதிப்பாடில்லை, அமைதியில்லை, வலிக்கு மருந்தில்லை “Hath really neither joy, nor love, nor light,/ Nor certitude, nor peace, nor help for pain;“. இங்கு நாம் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாய் இருப்பதைத் தவிர நமக்கு வேறென்ன மெய்ம்மை இருக்கிறது?

சமய உணர்வுகளும் சமய நம்பிக்கைகளும் வலுவாக இருந்திருந்தால் இது ஒரு கனவுலகாக இருந்திருக்குமா, இதன் அழகுகளும் அத்தனை இன்பங்களும் புதுமைகளும் நமக்குரியனவாய்க் கிடைத்திருக்குமா? Faith என்பதைக் குறிப்பிட்ட ஒரு சமயம் சார்ந்ததாய் நாம் குறுக்கிப் புரிந்துகொள்ள வேண்டாம் என்று நினைக்கிறேன் (மாத்யூ ஆர்னால்டு சமய நம்பிக்கையைதான் குறிப்பிடுகிறார் என்றாலும்). நமக்கு மிஞ்சிய எந்த விஷயத்திலும் நம்பிக்கை கொள்ளாதிருத்தல் – அது சமயமோ கோட்பாடோ லட்சியமோ ஆளுமையோ, எதிலும் நம்பிக்கை கொள்ள முடியாத நிலை, இங்கு நாம் என்ன செய்ய முடியும்? ஒருவருக்கு ஒருவர் உண்மையாய் இருக்கலாம். எல்லாம் பொய்க்கக்கூடும், ஆனால் எனக்கு நீயும் உனக்கு நானும் உண்மையாய், விசுவாசமாய் இருப்போம். இது எதையும் மாற்றப் போவதில்லை. நம்மை இருள் சூழ்கிறது, நம் பாதுகாப்புக்கு அரணில்லை. போர் ஒலியும் தப்பியோடும் பாதங்களின் ஓசையும் ஒரு கலவரமாய் நம்மைக் கொண்டு செல்கின்றன. இங்கு சூதறியா போர்ப்படைகள் இருளில் மோதிக் கொள்கின்றன. – “And we are here as on a darkling plain/ Swept with confused alarms of struggle and flight,/ Where ignorant armies clash by night.”

இப்போது இதை எழுத முக்கியமாக இருந்த காரணத்தைச் சொல்லி விடுகிறேன் – அண்மையில் பதிப்பிக்கப்பட்ட சொல்வனம் – வெங்கட் சாமிநாதன் சிறப்பிதழ் வாசித்திருப்பீர்கள். அதில் திலீப்குமார் கட்டுரை ஒன்றிருக்கிறது- “வெங்கட் சாமிநாதன் மறைவைத் தொடர்ந்து – திலீப்குமாருடன் ஓர் உரையாடல்” என்ற கட்டுரையில் எழுத்தாளர் திலீப்குமார், “இன்று நாம் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகியிருக்கிறோம். தீமை கலவாத நன்மை என்ற ஒன்றே இல்லாதது போலிருக்கிறது,” என்று சொல்லி, பின் இப்படி முடிக்கிறார்- “இன்று நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பார்க்கும்போது, இலக்கியத்தின் வாயிலாக எந்த ஒரு சமூக, அரசியல் நோக்கத்தையும் கை கொள்ள முடியாத ஒரு சூழலே நிலவுகிறது. இந்த அபத்தத்தை எதிர்கொள்ள, மற்ற எல்லாவற்றையும் விட, சாமிநாதன் பரிந்துரைத்த நேர்மையும் தனி மனித மதிப்பீடுகளும் நமக்கு ஒருவேளை உதவக்கூடும்” எது சரி, எது தவறு, எந்தப் பக்கம் திரும்பினால் நன்மை கிட்டும், எது அழிவுக்கு கொண்டு செல்லும் என்று தெரியாத நிலையில் நமக்கு ஒரு கலங்கரை விளக்கம் போலிருப்பது தனி மனித நேர்மை ஒன்றுதான். உனக்கு நானும் எனக்கு நீயும் நேர்மையாய் இருப்போம், என்று நம்பிக்கையே கொந்தளிப்புக்கும் மாய அமைதிக்கும் அப்பால், பாதுகாப்பான இடத்துக்கு நம்மைக் கொண்டு செல்வதாக இருக்கும்.

(இந்த வாசிப்பில் சில பிரச்சினைகள் இருக்கின்றன, அவை அடுத்த பகுதியில்)

கொலை இயந்திரம்

– நரோபா

போட்டிருக்கும் சட்டையை முதலில் கழட்ட வேண்டும்
கசங்கி இருந்தாலும் பரவாயில்லை,
ஈரத்தில் ஒட்டியிருந்தாலும் கூட,
காயும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.
கிழித்தாவது எறியத்தான் வேண்டும்.
ஆனால் வேறு சட்டை வேண்டுமே என கேட்பது காதில் விழுகிறது
அதற்குதான் சித்தாந்த பயிற்சி இருக்கிறதே.
தனக்கான சட்டையை தானே நெய்து கொள்பவன் மனிதன்.
முடியவில்லை என்றாலும் பாதகமில்லை.
எப்படியும் வேறொருவன் கழட்டிப் போட்டது கிடக்கும்.
கிடைக்கவில்லை என்றால்தான் என்ன?
சட்டை இருப்பது போல்
ஒரு பாவனை செய்துகொள்ளக்கூட
திராணியற்றவனா என்ன?
காலரை இழுத்துவிட்டுக் கொள்ளவும்
பித்தான்களைக் கழட்டி மாட்டவும்
வயிற்றை எக்கி உள்ளிழுத்தால்
நம்பகத்தன்மை கூடும்.
விளையாட்டாகவே செய்யலாம்
கடமையுணர்ச்சி கொஞ்சம் இருந்தால் இன்னும் உசிதம்
ஆகச்சிறந்த கொலை இயந்திரம்
இப்படித்தான் தயாராகிறது.

முறுக்கு

மு வெங்கடேஷ்

அன்று நான் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். என்னை அன்போடு அழைத்த அம்மா, “ஏல ராசா நாம இன்னைக்குப் படத்துக்குப் போகலாம்டா” என்றாள்.

எனக்கு அம்மாவோடு படத்துக்குப் போகப் பிடிக்காது.

”இல்லமா நா வரல, விளையாடிட்டு இருக்கேன் நீ போய்ட்டு வா,” என்று சொல்லிப் பார்த்தேன்.

அம்மா விடவில்லை. “போலாம்பா. ரஜினிப் படம் நல்லா இருக்கும். நா உனக்கு இடைவேளையில முறுக்கு வாங்கித் தாரேன்” என்றாள்.

அப்போதெல்லாம் வெளியே ஒரு தின்பண்டம் வாங்கித் தின்பதே அபூர்வமான விஷயம். அதிலும் தியேட்டரில் முறுக்கு சாப்பிடுவதில் எனக்கு ஒரு தனிச் சந்தோஷம் உண்டு. “சரி வாரேன்.” என்று உடனே கிளம்பிவிட்டேன்.

அம்மாவின் அத்தனை அன்பிற்கும் பின்னால், வேறொரு பெரிய காரணம் இருந்தது அப்போது எனக்குப் புரியவில்லை.

“ஏல படம் போட்ருவான், சீக்கிரம் போய் அப்பாட்டக் காசு வாங்கிட்டு வால, நாங்க முன்னால போய்ட்டு இருக்கோம். நீ சீக்கிரம் வாங்கிட்டு ஓடி வந்துருல” என்றாள் அம்மா.

எங்கள் ஊரில் இரண்டு திரையரங்குகள் இருந்தன. ஒன்று கே.ஆர். தியேட்டர், மற்றொன்று ஸ்ரீ தேவி தியேட்டர். கே.ஆர்.தியேட்டர் – ஊரின் நடுவே அமைந்திருக்கும் பெரிய தியேட்டர். பார்ப்பதற்கு திருமண மண்டபம் போல் காட்சியளிக்கும். மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்கள் இரண்டையும் மாற்றி மாற்றி வெளியிடுவார்கள். நடந்து செல்லும் தொலைவில்தான் இருக்கும். தினமும் மாலை 6 மணி ஆனதும் சொல்லி வைத்தாற் போல் இளையராஜா இசை அமைத்த, கமல்-ராதா நடித்த ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் வரும் ‘நானாக நான் இல்லைத் தாயே’ என்ற ஒரே பாடல் தான் போடுவார்கள்.எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் அந்தப் பாட்டு மட்டும் தான் கேட்டதாக ஞாபகம்.

ஸ்ரீ தேவி தியேட்டர் – ஊரிலிருந்து சற்று தொலைவில் தேயிலைத் தோட்டத்திற்கு நடுவில் அமைந்திருக்கும் அழகான இடம். கே. ஆர். தியேட்டரை ஒப்பிடும்போது சற்று சிறியதுதான். ஆனால் பார்ப்பதற்கோ மிகவும் அழகாக இருக்கும். தமிழ்ப் படம் மட்டுமே திரையிடுவார்கள். இத்தியேட்டருக்கு நடந்தோ அல்லது பேருந்திலோ செல்லலாம். ஆனால் தேயிலைத் தோட்டத்தின் நடுவே நடந்து செல்லத்தான் அனைவரும் விரும்புவோம். சிறு வயதில் எங்களின் ஒரே பொழுதுபோக்கு படம் பார்ப்பதுதான். அடிக்கடி படத்துக்குப் போவோம்.

அம்மா, அக்கா, சித்தி, அத்தை, அவள் மகன் முருகேசன் என அனைவரும் தேயிலைத் தோட்ட ஒற்றையடிப் பாதையில் முன்னால் நடந்து சென்றார்கள். நடந்து என்ன நடந்து, ஓடினார்கள். நான் கடை வீதியில் இருக்கும் எங்கள் கடைக்குச் சென்று அப்பாவிடம் காசு வாங்கிக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்து ஓடினேன். எவ்வளவு வேகமாக ஓடியும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. நானும் மூச்சு வாங்க பின்னாலே விரட்டிக் கொண்டு போய் அம்மாவைப் பிடிக்கும்போது அவள் டிக்கெட் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தாள். நான் வந்தவுடனே என்னை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டாள். மூச்சு வாங்க ஓடி வந்த என்னை ஆசுவாசப்படுத்தத்தான் பாசத்தோடு தூக்கி வைத்துக் கொண்டாள் என்று நினைத்தேன். வழக்கம் போல அம்மாவின் செயலுக்கான அர்த்தம் சில நிமிடங்கள் கழித்துத்தான் தெரிய வந்தது.

தியேட்டர் வாசலில் நின்று கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகர் பொங்கி வரும் காட்டாற்று வெள்ளமென போய்க் கொண்டிருந்த எங்களை மடக்கிப் பிடித்தார்.

“என்னம்மா பையனோட சேர்த்து மொத்தம் 8 பேர் வந்துருக்கீங்க, ஆனா 7 டிக்கெட் தான் இருக்கு?” என்று கேட்டார்.

அவருடைய கூர்மையான பார்வைக்கு அசராத அம்மா என்னை இன்னமும் ஏற்றி தோளில் சாய்த்துக் கொண்டு, “ஏம்பா இந்த பால் குடி கூட மறக்காத பச்ச புள்ளைக்குப் போய் டிக்கெட் கேட்குறியே?” என்றாள்.

அம்மா கொடக்கண்டவள் என்றால் அவர் விடாக்கண்டவராக இருந்தார்.

“அதெல்லாம் முடியாதும்மா போய் இன்னொரு டிக்கெட் வாங்கிட்டு வா, இல்லேன்னா பையன இங்கயே விட்டுட்டுப் போ,” என்றார் அதிரடியாக.

அடப் பாவி இப்படி முதலுக்கே மோசம் செய்கிறாரே என்று நினைத்தேன். கண்டிப்பாக டிக்கெட் வாங்கிட்டு வாவென சொல்லாமல் இப்படிச் சொன்னால், இவர்கள் வந்த வேகத்திற்கு என்னை அப்படியே விட்டுவிட்டுப் போய்விடுவார்களே என்று பயமாக இருந்தது.

நல்லவேளை, தியேட்டர் மேனேஜர் அவ்வழியே வந்தார். எங்களைப் பார்த்தவர் டிக்கெட் பரிசோதகரிடம், “சரிப்பா அவங்கள உள்ள விடு” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அவர் என் அப்பாவின் நெருங்கிய நண்பர் என்பதால் அந்தச் சலுகை. இப்படிச் சண்டை போட்டு உள்ளே செல்வதற்குள் படத்தில் 10 நிமிடம் முடிந்து விட்டது. உள்ளே சென்று இருக்கையில் உட்கார்ந்தவுடன் அம்மா பக்கத்து இருக்கையில் இருபவரிடம் பேச்சுக் கொடுத்தாள்.

“என்னக்கா படம் எவ்ளோ போச்சு?”

“ஒரு 10 நிமிஷம் போயிருக்கும்கா”

“எழுத்து போட்டு ரொம்ப நேரம் ஆச்சோ?”

“இல்லக்கா இப்போதான் போட்டு முடிச்சான்.”

“முக்கியமான சீன் ஏதும் போயிடுச்சாக்கா?”

“அதெல்லாம் ஒன்னும் போகலக்கா, இன்னும் ஹீரோ ஹீரோயனியே வரல பேசாம படத்தப் பாருவேன்” என்றாள் எரிச்சலுடன்.

படத்தில் சண்டைக் காட்சி வருவதற்குள் இங்கு ஒரு சண்டைக் காட்சி ஓடி முடிந்தது. ஒரு வழியாக படத்தின் இடைவேளையும் வந்தது. கையில் ஒரு தட்டுடன் அழகாக முறுக்குகளை அடுக்கி வைத்து முறுக்கு விற்பவன் வந்தான். நான் அவனை ஆவலோடு பார்ப்பதை மோப்பம் பிடித்தவன் போல அவனும், எங்கள் இருக்கைக்கு அருகில் வந்து, “முறுக்கு முறுக்கு முறுக்கேய்…. முறுக்கு முறுக்கு முறுக்கேய்” என்று என் ஆவலை மேலும் முறுக்க ஆரம்பித்தான்.

“எம்மா…” என்று அம்மாவின் கையைச் சுரண்டினேன். பதிலேயில்லை. சினிமா வந்து விட்டால் அம்மா இந்த உலகத்திலேயே இருக்க மாட்டாள்.

“எம்மா…. முறுக்கு வாங்கித் தாம்மா” என்று மேலும் அழுத்தமாக சுரண்டினேன். கிளம்பும்போது அவள் வாக்கு கொடுத்திருந்ததால் கொஞ்சம் தைரியம் இருந்தது.

சட்டென்று விழித்துக் கொண்ட அம்மா, ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டதுபோல் என்னைப் பார்த்து முறைத்து விட்டு, “இதான் உன்னெல்லாம் படத்துக்குக் கூட்டிட்டு வர கூடாதுன்னு சொன்னேன்” என்றவள், வீட்டில் இருந்து கொண்டு வந்திருக்கும் அவித்த கடலையை நீட்டினாள்.

“எனக்கு கடலை வேணாம் முறுக்கு தான் வேணும். நீதான விளையாடிட்டு இருந்த என்ன முறுக்கு வாங்கித் தாரேன்னு சொல்லிக் கூட்டிட்டு வந்த” என்று அழாக்குறையாகக் கேட்டேன்.

“ஆமா சொன்னேன். அது அப்போ. இப்போ ஒழுங்கா இந்தக் கடலையத் தின்னு. காசு என்ன மரத்துலயா காய்க்கி?” என்று ஒரேயடியாக அடித்து விட்டாள். என் பக்கத்தில் இருக்கும் பையனோ முறுக்கை வாங்கிக் கருக்கு முறுக்கு என்று சாப்பிட்டுக் கொண்டிருந்தான். “பணக்காரப் பையன் போல” என்று நினைத்துக் கொண்டேன். அதைப் பார்த்த எனக்கு மேலும் ஆவல் பெருகியது.

“எம்மா எனக்குத்தான் நீ டிக்கெட் எடுக்கலையே, அந்த காசுலயாது முறுக்கு வாங்கித் தாம்மா” என்றேன் பரிதாபமாக.

“பேசாம இருக்கியா இல்லையா? உன்ன அங்க வெளிலையே விட்டுட்டு வந்திருக்கணும். அப்போதான் நான் நிம்மதியா படம் பாக்க முடியும்” என்று அம்மா அதட்டினாள்.

நானும் விடுவதாக இல்லை. முறுக்குப் பையனின் கூவலும் என்னை விடுவதாக இல்லை.

“எம்மா வாங்கித் தாம்மா” என்றேன்.

குஷ்பு நடித்த ஒரு படத்தில் 108 சாமி பெயர் சொல்லி ஒரு பாடல் வருமே அதில் வரும் அத்தனை சாமிகளின் மொத்த ஆங்கார உருவமாய் மாறிய அம்மா, “பேசாம இருக்கியா இல்ல அந்தக் கடலையையும் புடுங்கிரவா? உன்னப் பட்னி போட்டாத்தான் சரி வருவ, பெரிய ராசா வீட்டு கன்னுக்குட்டி இவரு, படத்துக்கு வந்தா முறுக்கு வாங்கித் திங்காம இருக்க முடியாதோ தொரைக்கு? எத்தனை பேர் படத்துக்குக்கூட வர வழி இல்லாம இருக்காங்க?” என்றாள்.

இதற்கு மேல் அழுத்திக் கேட்க முடியாது. அப்புறம் கையில் இருக்கிற கடலைக்கும் ஆபத்து வந்துவிடும் என்றெண்ணிக் கொண்டு என் முறுக்கு ஆசையை குழிதோண்டி புதைத்தேன்.

மறுநாள் மதியம் அப்பா சாப்பிட்டுவிட்டு கடைக்குச் சென்றதும், பக்கத்துக்கு வீட்டு மாலதி அத்தை வந்தாள். அதெல்லாம் கணக்காக அப்பாவின் நடமாட்டம் தெரிந்துதான் வருவாள்.

“எக்கா இன்னைக்குப் படத்துக்குப் போலாமா?”

நேற்றைக்கு தியேட்டருக்கு பாய்ந்த காட்டாற்று வெள்ளத்தில் மாலதி அத்தையும் இருந்தாள்தான். மாலதி அத்தையின் கேள்வியைக் கேட்டதும், உற்சாகத்தின் எல்லைக்கே சென்றுவிட்ட அம்மா, “சரிடி போலாம். நேத்து வேற படத்தை மொத 10 நிமிஷம் பாக்காம விட்டுடோம். இன்னைக்காவது சீக்கிரமா கிளம்பி போலாம்டி” என்று சந்தோஷமாகத் தயாரானாள்.

இதை நானும் என் அக்காவும் கேட்டுக் கொண்டிருந்தோம். எப்படியும் இன்று எங்களைக் கூட்டிச் செல்ல மாட்டாள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதனால் எதுவும் பேசாமல் இருந்தேன். ஆனால் அக்காவால் வாயைக் கட்டி வைக்க முடியவில்லை, பாவம்.

“எம்மா நானும் படத்துக்கு…” என்று கேட்டு முடிப்பதற்குள், “தெனமும் படம் கேக்குதோ உனக்கு? பெரிய மகாராணி இவ. போய் ஒழுங்கா வீட்டு வேலையப் பாரு,” என்று அக்காவின் ஆசையில் மண்ணளிப் போட்டாள் அம்மா.

நேற்று நான் தியேட்டரில் வாங்கிய அதேப் பரிசு இன்று என் அக்காவுக்கும் கிடைத்ததில் எனக்கு கொஞ்சம் சந்தோசம்தான்.

சிறிது நேரத்தில் மாலதி அத்தை கிளம்பி வந்தாள்.

“என்னடி இவளே… இம்புட்டு நேரமா கெளம்பிட்டிருக்கே… சரி வா, இன்னைக்காவது சீக்கிரம் போய், படத்த முதல்ல இருந்து பார்க்கலாம்”, என்று கால்களை வீசிப்போட்டுக் கிளம்பினாள் அம்மா.

“சரிக்கா,” என்று கிட்டத்தட்ட கூடவே ஓடிய அத்தை, ”இருந்தாலும் உங்க வீட்டுக்காரருக்கு ரொம்ப தாராள மனசுக்கா, தெனமும் படத்துக்குக் காசு கொடுக்கிறாரு” என்று ஆச்சரியப்பட்டாள்.

“அடிப் போடி பைத்தியக்காரி, நல்லா சொன்ன போ. உனக்குத்தான் நல்லா தெரியுமே எங்க வீட்டுகாரரப்பத்தி. அவர் ஒரு கடைஞ்செடுத்த கஞ்சாம்பட்டினு… அவராச்சும் காசு குடுக்குறதாச்சும். நேத்து இந்தப் பயலுக்கு டிக்கெட் எடுக்கலேல்ல அந்தக் காசுதாண்டி” என்று அம்மா தன் ராஜதந்திரத்தைப் போட்டுடைத்து என்னை அதிர வைத்தாள்.

“ஆமா உனக்கு ஏதுடி காசு?” என்று அத்தையிடம் கேட்க, அவள் பதில் சொல்வதற்குள் அவர்கள் சிறிது தூரம் சென்று விட்டதால் எனக்கு என்ன பேசிக் கொண்டார்கள் என்பது கேட்கவில்லை. ஆனால் மாலதி அத்தையின் மகன் முருகேசனும் முறுக்கும் தான் நினைவுக்கு வந்தார்கள். அவனையும் இன்றைக்குக் காணோம்.

தற்கொலைக் குறிப்பு

நம்பி கிருஷ்ணன்

அமைதியான,
குளிர்ந்த நீரின் முகம்
என்னிடம் கேட்டது
ஒரு முத்தத்தை.

(Suicide’s Notes, என்ற Langston Hughes கவிதையின் தமிழாக்கம்)

‘நவீன தேவதைக் கதைகள் 2 – ஆஞ்செலா கார்டரின் ‘The Bloody Chamber’ சிறுகதைத் தொகுப்பின் நவ யுக தேவதைகள்’

அஜய் ஆர்

இளவரசியால் முத்தமிடப்பட்ட தவளையும் (‘Frog Prince‘ கதையின் மூலப் பிரதியில் இளவரசி தவளையை தூக்கி எறிவதாக வருகிறது), அழகியின் கண்ணீரில் நனையும் Beastம் ராஜகுமாரனாக தங்கள் நிஜ உருவைப் பெறுகிறார்கள். இப்படிப்பட்ட நிகழ்வுகளை தேவதைக் கதைகளில் நாம் அடிக்கடி காண முடிகிறது. பிறகு ராஜகுமாரன் இளவரசியை/ ஏழைப்பெண்ணை மணந்து கொள்ள, அனைவரும் சந்தோஷமாக வாழ்வதாக முடியும் கதைகளில், இளவரசியோ ஏழையோ பொதுவாக பெண்தான் தன் கனவுகளை அடைவதாக, அவளே அதிர்ஷ்டசாலி என்ற கற்பிதம், வெகுஜனப் பிரக்ஞையில் உள்ளது. இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது? இளவரசி முத்தமிடாமலோ/ தூக்கி எறியாமலோ, அல்லது Beauty கண்ணீர் சிந்தாமலோ இருந்திருந்தால், ராஜகுமாரர்களுக்கு விமோசனமே கிடைத்திருக்காது அல்லவா? எனில், இந்தக் கதைகளில் அதிக நன்மை அடைந்தவர்கள், அதிர்ஷ்டசாலிகள் யார் என்ற கேள்வி எழுகிறது. ஆண்/ பெண் இருவருமே நன்மை அடைகிறார்கள் என்றும், ஆணுக்குச் சமமான, அவர்களுக்கு மீட்சியளிக்கும் சக்தியாக, பெண்ணும் இருக்கிறாள் என்றும் சொல்வதே சரியானதாக இருக்கும். இத்தகைய காக்கும்/ அழிக்கும் சக்தி பெற்ற பெண்களை ஆஞ்செலா கார்டரின் ‘The Bloody Chamber‘ சிறுகதைத் தொகுப்பின் சிலக் கதைகளில் பார்க்கிறோம்.

Beauty and the Beast‘ கதையின் மறு ஆக்கமான ‘The Courtship of Mr Lyon‘ கதையில், அழகி தன் தந்தை செய்த தவறுக்காக பீஸ்ட்டின் இருப்பிடத்தில் வசிக்க வேண்டியுள்ளது. அவள் அது குறித்து முதலில் அச்சுறுவது இயல்பான ஒன்று. ஆனால் ‘பீஸ்ட்’, அவள் மடியில் தலை புதைத்து கைகளை முத்தமிட்டபின் வெட்கி ஓடுவது, தன் தந்தை வீட்டிற்கு அவள் திரும்பும்போது அவள் கண்களைச் சந்திக்க இயலாமல் பாதங்களில் தலையைப் புதைத்துக் கொள்வது என அவன் அழகி மீது கொண்டுள்ள உணர்வை வழிபாடு என்றே சொல்லலாம். (as if he himself were in awe of a young girl). “Do not think she had no will of her own; only, she was possessed by a sense of obligation to an unusual degree and, besides, she would gladly have gone to the ends of the earth for her father, whom she loved dearly.” என்ற உணர்வோடு அங்கு வசிக்கும் அழகியை விட, பீஸ்ட்டே தப்பிக்க முடியாத/ விரும்பாத சூழலில் இருப்பவனாகத் தெரிகிறான்.

தேவதைக் கதைகளின் மறு ஆக்கமாக இல்லாதிருந்தாலும், அந்த வகைமையின் சிலக் கூறுகளைக் கொண்ட ‘The Lady of the House of Love’ மற்றும் ‘Wolf-Alice‘ கதைகளிலும் ஆணை காப்பாற்றும் பெண்மையைக் காண்கிறோம். முதல் கதையில், இளைஞர்களை உண்டு பசியாறும் இரத்தக் காட்டேரியான (vampire) சீமாட்டியின்/ Countess) மாளிகைக்கு ராணுவத்தில் பணியாற்றும் இளைஞன் ஒருவன் வருகிறான். தன் வாழ்க்கை முறையை வெறுக்கும் அந்தச் சீமாட்டி தனக்கு விதிக்கப்பட்டதைத் தாண்டி செல்ல இயலாமலும் இருக்கிறாள். இளைஞன் அவள் மீது (அவள் காட்டேரி என்று அறியாமல்) கரிசனம் கொள்கிறான். அவனை பள்ளியறைக்கு அழைத்துச் செல்லும் சீமாட்டிக்கு விரலில் காயம் ஏற்பட்டு உதிரம் வெளிவர, இளைஞன் அதை முதலில் கைக்குட்டையால் துடைத்தும் பிறகு விரலை உறிஞ்சியும் / முத்தமிட்டும் அவளைத் தேற்ற, அவனது\ களங்கமின்மை, இறுதியில் சீமாட்டி அவனைக் கொல்லாமல், தன்னைத் தானே அழித்துக்கொள்ளச் செய்கிறது. இளைஞன் கன்னித்தன்மையை இழக்காதவன் என்பதால், ‘கன்னிமை’ பெண்களுக்கு மட்டும் தான் பாதுகாப்பு என்பது ஆணுக்கும் பொருந்தலாம் என்று ஆஞ்செலா சுட்டுகிறார் என்றும் கருதலாம்.

ஆணால் அணைக்கப்படுவது வரை ஒன்றுமறியாதவர்களாக/ உணராதவர்களாக இல்லாமல் அவர்களுக்குள் இயல்பாகத் தோன்றும் பாலியல் விழைவுகள், அது ஏற்படுத்தும் ஆர்வம் – அவற்றால் ஆபத்து ஏற்பட்டாலும், அதைக் கடந்தால் அடையக் கூடிய பரவசம் குறித்த எதிர்பார்ப்பு – குறித்தும் பதின் பருவம் அல்லது அதன் வாசலில் நிற்கும் இந்தக் கதைகளின் சிறுமிகள்/ யுவதிகள் தெளிவாக உள்ளார்கள். தேவதைக் கதைகளில் இதற்கு இடமிருக்கக் கூடும் என நாம் எண்ணிக் கூட பார்த்திராத, ஆணுக்கும் பெண்ணிற்கும் இடையே உருவாகி அவர்களைச் சுற்றிப் படர்ந்து மூச்சடைக்க வைக்கும் ‘sexual tension’ இந்தக் கதைகள் அனைத்திலும் ஊடுருவிச் சென்று தன் இருப்பை, பாத்திரங்களுக்கும் வாசகனுக்கும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது.

Red Riding Hood கதையை மறு ஆக்கம் செய்யும் ‘The Company of Wolves‘ல் வரும் சிறுமிக்கு/ பதின்பருவத்தின் வாசலில் இருப்பவளுக்கு, இளைஞன் உருவத்தில் வருவது ‘ஓநாய்’ தான் என்று தெரிந்து விடுகிறது. காட்டிற்குள் வேறு பாதையில் அழைத்துச் செல்வதாக அவன் கூறுவது ஆபத்தில் முடியும் என்றாலும், அவனுடன் செல்கிறாள். அவள் பாட்டியின் வீட்டிற்கு யார் முதலில் செல்கிறார்கள் என்ற பந்தயத்தை முன்வைத்து, தோற்றால் என்ன தருவாய் என அவன் கேட்க, அவன் என்ன கேட்பான் என்று தெரியாத அப்பாவி போல் என்ன வேண்டும் என்று கேட்கும் (அவன் முத்தம் வேண்டுகிறான்) சிறுமி வேண்டுமென்றே பந்தயத்தில் தோற்கிறாள். அவளுக்கு முன் பாட்டி வீட்டிற்கு சென்று அவரைப் புசித்து காத்திருக்கும் இளைஞனைக் கண்டு பயம் கொள்ளாமல் (she knew she was nobody’s meat) அவனை அணைத்துக் கொள்கிறாள். நடுநிசியில் அவன் கைகளுக்கிடையில் அச்சிறுமி உறங்குவதோடு முடியும் கதை எழுப்பும் கேள்விகளும், அதற்கான விடைகளும் பல. “between the paws of the tender wolf” அவள் உறங்குவது அவனை அவள் அடக்கி விட்டால் என்பதைக் குறிக்கிறதா?. ”nobody’s meat‘ என்பதை இங்கு இணைத்துப் பார்க்கலாம்.

Beauty and the Beast‘/ The Courtship of Mr Lyon கதைகளின் இன்னொரு மறு ஆக்கமான ‘The Tiger Bride‘ கதையிலும் ஆபத்தும் பரவசமும் முயங்குவதைப் பார்க்கிறோம். அருகில் வரும் சிங்க மணமகன், ‘He will lick the skin off me!’ என்று தெரிந்திருந்தும் அதை அனுமதித்து And each stroke of his tongue ripped off skin after successive skin, all the skins of a life in the world, and left behind a nascent patina of shining hairs. My earrings turned back to water and trickled down my shoulders; I shrugged the drops off my beautiful fur“, என்று முடியும் ‘The Tiger’s Bride‘ கதையிலும் சரி, ”The Bloody Chamber‘ புது மணப்பெண் ஆடிகள் சூழ்ந்த அறையில், கணவன் தன்னை நோக்கி வர, (பல) கணவன்(கள் நெருங்குவதாக கற்பனை செய்வதும், அவன் செயல்களை “He in his London tailoring; she, bare as a lamb chop. Most pornographic of all confrontations.” என்று (அவன் குறித்த சில சந்தேகங்களையும்) உணர்ந்தாலும், அதை எதிர்நோக்கும் ஆவலிலும் சரி, தங்களின் பாலியல் விழைவு தரக்கூடிய எதிர்மறை விளைவுகளைப் பொருட்படுத்தாமல் அதைக் கம்பீரமாகக் கொண்டாடும் பெண்ணையே பார்க்கிறோம்.

Erl-king’ என்ற நாட்டுப்புற/ தேவதைக் கதையான ‘The Erl-King‘ல் காட்டில் வாழும் – இளம் பெண்களை வசீகரித்து பறவைகளாக மாற்றும் – அமானுஷ்யப் பிறவியுடன் தெரிந்தே சேர்கிறாள். ஆனால் தன் சுயத்தை இழக்க விரும்பாமல் அவனை இறுதியில் கொன்றும் விடுகிறாள்.

ஒரு எளிய நிகழ்வை விவரிக்கும் வாக்கியத்தில் கூட, அதன் ஒரு வார்த்தையை, அது உணர்த்துவதை, உபயோகிக்கப்பட்டிருக்கும் விதத்தை எளிதில் கடந்து விடச் செய்யும் ஆஞ்செலாவின் அடர்த்தியான உரைநடை கவனமான வாசிப்பைக் கோருவது . ‘The Lady of the House of Love‘ கதையில் சீமாட்டியின் கிராமத்தை விவரிக்கும் போது “A cat prowls in a weedy garden; he grins and spits, arches his back, bounces away from an intangible on four fear-stiffened legs.” என்று ஆஞ்செலா எழுதுகிறார். இதில் intangible என்று ‘உணர/ விளக்க முடியாத’ என்ற அர்த்தத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள இந்த வார்த்தைக்கு பதில் unknown, invisible போன்ற வார்த்தைகளைப் பொருத்தி அதே வாக்கியத்தைப் படித்தால் வரும் உணர்வு கண்டிப்பாக வேறு தான். ‘intangible’ என்பது கூடுதல் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது.

சிங்க மணமகன் கதைசொல்லியை நெருங்கும் “A tremendous throbbing, as of the engine that makes the earth turn, filled the little room; he had begun to purr. The sweet thunder of this purr shook the old walls, made the shutters batter the windows until they burst apart and let in the white light of the snowy moon. Tiles came crashing down from the roof; I heard them fall into the courtyard far below. The reverberations of his purring rocked the foundations of the house, the walls began to dance. I thought: ‘It will all fall, everything will disintegrate‘, இறுதிக் காட்சியில் tremendous throbbing‘,’ everything will disintegrate‘ போன்றப் பதங்கள் வரப்போகும் ஆபத்தை சுட்டுவதாக மட்டும் தோன்றினாலும் , ‘The Bloody Chamber‘ கதையிலும் புது – அதுவரை பாலுறவு கொள்ளாத – மணப்பெண் தன் கணவனுடன் இரயிலில் அவன் கோட்டைக்குச் செல்லும் போது, தனித்தனியே படுத்திருக்க, அவள் உணர்வுகளோடு, அங்கும் இரயிலின் துடிப்பு/ throbbing குறிப்பிடப்படும்போது, இந்த இயந்திர/அக்றிணை இயக்கங்களையும் கதைசொல்லி பெண்ணின் பாலியல் விழைவுகளின் பிரதிபலிப்பாகவும் கொள்ளலாம் இல்லையா.

The Lady of the House of Love‘ கதையில், இளைஞன் விழிக்கும் போது அவன் சீமாட்டியுடன் வந்த பள்ளியறை பற்றி The shutters, the curtains, even the long-sealed windows of the horrid bedroom were all opened up and light and air streamed in; now you could see how tawdry it all was, how thin and cheap the satin, the catafalque not ebony at all but black-painted paper stretched on struts of wood, as in the theatre. The wind had blown droves of petals from the roses outside into the room and this crimson residue swirled fragrantly about the floor, என்று ஆஞ்செலா விவரிக்கிறார். வெளிச்சம் வீசும் அறை என்பது பொதுவாக மகிழ்வான மனநிலையோடு பொருந்தக்கூடியது. ஆனால் வெளிச்சத்தில் இரத்தக் காட்டேரிகள் அழிந்து விடுவார்கள் என்ற தொன்மத்தின் படி, சீமாட்டியோ தன் உயிருக்கு ஆபத்து அளிக்கக்கூடியது என்பதால் வெளிச்சத்தை முற்றிலும் தவிர்க்கிறார். எனில் வெளிச்சம் உள்நுழைந்தது எப்படி, சீமாட்டி ஏன் அறையில் இல்லை? எதுவும் சொல்லப்படாமலேயே நமக்குப் புரிகிறது. சீமாட்டி இளைஞனுக்கு ஊறு விளைவிக்க விரும்பாமல், தன்னை அழித்துக் கொள்ளும் விதமாக வெளிச்சத்தை உள்ளே அனுமதித்திருப்பார். இப்போது வெளிச்சம் புத்துணர்வூட்டுவதாக இல்லாமல், துயரத்தின்/சீமாட்டியின் காதலின் (கரிசனத்தின்) சுமையைக் கொண்டதாக மாறுகிறது.

தேவதைக் கதைகளை மறு ஆக்கம் செய்யும் போது, அதை பழங்காலத்திலேயே அமைப்பதோ அல்லது நவீன காலத்தில் அமைப்பதோ நடக்கிறது. இந்தக் கதைகளின் காலகட்டம் பொதுவாக 18ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 19ஆம் நூற்றாண்டின் முதல் கால் பகுதி என சில கதைகளில் யூகிக்க முடிந்தாலும், முன்பொரு காலத்தில் நடந்தவை என்றோ, தற்காலத்தில் நடப்பவை (கார், இரயில் பற்றிய குறிப்புகள் ஓரிரு கதைகளில் உள்ளன ) என்றோ ஆஞ்செலா வெளிப்படையாக சொல்வதில்லை என்பதால் இவற்றில் காலம் குறித்த துல்லியமான ‘பிரக்ஞை’ இல்லை. அதே நேரம், ‘The Bloody Chamber’ கதையில் வருவது போல் ஒரு கோட்டையை (castle)

Sea; sand; a sky that melts into the sea–a landscape of misty pastels with a look about it of being continuously on the point of melting
And, ah! his castle. The faery solitude of the place; with its turrets of misty blue,
………….his castle that lay on the very bosom of the sea with seabirds mewing about its attics,
……, evanescent departures of the ocean, cut off by the tide from land for half a day …
that castle, at home neither on the land nor on the water, a mysterious, amphibious place, contravening the materiality of both earth and the waves, with the melancholy of a mermaiden who perches on her rock and waits, endlessly, for a lover who had drowned far away, long ago. That lovely, sad, sea-siren of a place!

என்று விவரித்து கதைகளின் புறச் சூழலை அவர் உருவாக்கும் போது, காலம் குறித்த பிரக்ஞை முக்கியமானதாகத் தோன்றுவதில்லை. எளிதில் பிரித்தறிய முடியாதப்படி பழங்காலமும்- நிகழ்காலமும் தொட்டுச் செல்லும் வினோத காலத்திற்குள் வாசகன் எளிதில் நுழைவதோடு, இயல்பாக தன்னை அதில் பொருத்திக் கொள்ள முடிகிறது.

ஓரிரு படிமங்கள் பல கதைகளில் எடுத்தாளப்பட்டுள்ளன. நாவால் தோலை/ உடலை வருடுவது/ சுவைப்பது அப்படிப்பட்ட ஒன்று. ‘Wolf-Alice’ கதையில் காயமடைந்த ட்யூக்கின் (Duke) உடலை நாவால் வருடி ஆற்றுப்படுத்தினால், ‘The Tiger Bride‘ கதையில் அது காமத்தில் உச்சகட்டமாக உள்ளது. பெண்ணின் மடி மீது ஆண்/ மிருகம் தலைவைப்பது காதலின்/ சரணடைவதின், இணைவின் அடையாளமாக சில கதைகளின் இருந்தால் (The Courtship of Mr Lyon, The Company of Wolves), ‘The Erl-King‘ கதையில், கதைசொல்லி தன்னை மயக்கி பறவையாக மாற்ற நினைப்பவனைக் கழுத்தை நெரித்துக் கொல்ல வழி செய்கிறது.

ஆடிகளில் விழாத பிம்பங்களோடு, ஆடிகளை நிறைத்துப் பெருகும் பிம்பங்களும் இந்தக் கதைகளில் உள்ளன. ‘Wolf-Alice‘ கதையில் வரும் பதின்பருவப் பெண் ஆடியில் தன் பிம்பத்தைப் பார்த்து முதலில் திடுக்கிடுவதையும் , அப்பிம்பத்தைத் தன் தோழியாக பிறகு எண்ணுவதையும், கதையின் தலைப்போடு ஒப்பிட்டுப் பார்ப்பது சில புரிதல்களைத் தரக்கூடியது.

அடர் சிவப்பு ரோஜாக்கள், அவற்றின் முள் பதிந்து வெண்பனியில் சிந்தும் உதிரம், வாடிய செடிகளுக்கிடையே பூத்திருக்கும் ஒற்றை வெள்ளை ரோஜா, காற்றில் எங்கும் நிறைந்திருக்கும் -மனதை மயக்கும் – ரோஜாக்களின் நறுமணம் என ரோஜாக்கள் பல கதைகளில் (தன்னை அழித்துக்கொள்ளும் சீமாட்டி இளைஞனுக்கு விட்டுச் செல்வதும் ஒரு ரோஜா மலர் தான்) குறிப்பிடப்படுவது, தேவதைக் கதைகளில் பல இடங்களில் தென்படும் ரோஜாக்களுக்கு ஆஞ்செலா செலுத்தும் அஞ்சலி என்பதோடு அவை பாரம்பர்ய தேவதைக் கதைகளின் உணர்வு நிலையை இந்த நவீன கதைகளிலும் உருவாக்குகின்றன.

பல முறை பார்த்துப் பழகிய ஓவியத்தை புதிய கோணத்தில் பார்க்கும் போது அதுவரை கவனிக்கத் தவறியவை தென்படுவது போல, ஏற்கனவே அறிந்திருந்தக் கதைகளைப் பற்றிய – பெண்மை/ பெண்மையின் பாலியல் விழைவு ஆணை அரவணைக்கும் அதே நேரம் அச்சுறுத்தும் ஆற்றலும் கொண்டது – என்ற கோணத்தை (இதில் ஆணும் பெண் போலவே விருப்பு/ பயம் என்ற இரட்டை நிலையில் உள்ளான்) , தேவதைக் கதைகளின் இயல்பான கனவுத் தன்மையை காவு கொடுக்காத உரைநடையோடு, நவீன தேவதைகள் ஆளும் உலகை உருவாக்குவதால் இந்தத் தொகுதி இத்தகைய மறு ஆக்க கதைகளில் தனித்துவமான இடத்தைக் கொண்டுள்ளது.

பின்குறிப்பு:

மூலப் பிரதியில் செய்யப்பட்ட மாற்றங்களால் சற்றே நீர்த்துப் போன தேவதைக் கதைகளின் பிரதிகளே அதிகம் படிக்கப்படுகின்றன. (Frog Prince கதை ஒரு உதாரணம்). Grimm சகோதரர்களின் தொகுக்கப்பட்ட தேவதைக் மூல கதைகளுக்கு அணுக்கமானவை என்று இரு தொகுப்புக்கள் பொதுவாகக் குறிப்பிடப்படுகின்றன.

The Complete Grimm’s Fairy Tales – Pantheon Edition.

Jack Zipes தொகுத்து சென்ற ஆண்டு வெளிவந்த The Original Folk and Fairy Tales of the Brothers Grimm:The Complete First Edition, இதுவரை வெளிவந்தவற்றுள், மூலத் தொகுப்பை சிதைக்காத, அதற்கு மிக நெருக்கமான தொகுப்பாக கருதப்படுகிறது.

(தொடரும்)

தொடர்புடைய பதிவு – நவீன தேவதைக் கதைகள் சில