
கடந்த ஒரு வருஷத்துக்கும் மேலாக பதாகை இணைய இதழில் நான் மிருகக் கவிதைகள் எழுதி வந்திருக்கிறேன், இனியும் எழுதுவேன் என்று நினைக்கிறேன். அவற்றில் சில இந்த மின்னூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நான் ஏன் இந்தக் கவிதைகளை எழுதினேன், அதுவும் ஏன் இப்படி எழுதினேன் என்பதை விளக்கக் கொஞ்சம் முயற்சி செய்யப் போகிறேன்.
இந்தக் கவிதைகளை மிருகக் கவிதைகள் என்று நண்பர்கள்தான் சொல்கிறார்கள், நான் அப்படிச் சொல்ல மாட்டேன். இவற்றை நான் உறைபடிமங்களாகவே பார்க்கிறேன். பொதுவாக, ஒரு கவிதை என்றால் அது பல்பொருள் உணர்த்த வேண்டும், அதில் உள்ள படிமங்கள் நம் மனதில் ஒரு நகர்வை ஏற்படுத்த வேண்டும், அதன் மொழி நம்மை வசீகரிக்க வேண்டும் என்றும் இன்னும் பலவாறாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் ஒன்றுகூட அப்படி எதுவும் செய்யாது. அது போன்ற பயன்மதிப்பு எதையும் முன்னிட்டு இந்தக் கவிதைகளை எழுதவில்லை. அடிப்படையில் இவை, சலனமற்ற பிம்பங்கள்- எழுதப்பட்ட பக்கத்தின் எல்லைகளுக்கு அப்பால் செல்லாதவை. வாசகன் மனதினுள் வளர வேண்டும், ஆழமான உண்மையை உணர்ந்த வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட மறுக்கும் பிம்பங்கள். (more…)