Author: பதாகை

மானுடத் துயர்- பால்கனிகள் தொகுதியை முன்வைத்து….

கடலூர் சீனு

cuddalore seenu

மானுட துக்கம் என்றொரு சொல் உண்டு, இந்த உடல் கொண்டு இங்கு பிறந்து வருவதனாலேயே, அதன் எல்லைகள் காரணமாக , மானுட உடலம் உருவாகும்போதே அதன் கட்டமைப்புக்குள் எழுதப்பட்டுவிட்ட துக்கம். மானுடம் அனுபவிக்கும் அனைத்து துக்கங்களும், அதன் பிரதிபலிப்பு மட்டுமே என்று தத்துவ ஆய்வுகள் உரைக்கின்றன. இந்த பிரதிபலிப்பு துக்கங்களைத் தொகுத்து சாரமான மானுட துக்கத்துக்கு வந்து விழுபவனே ஆத்ம சாதகன்.

இவை எல்லாம் உயர் தளத்தில், இவை குறித்த எந்த பிரக்ஞையும் இன்றி இந்த துக்கத்தில் தவறி விழுவது இருக்கிறதே. அந்தத் துயர் இணையே அற்ற ஆறுதலே அற்ற துயர். நமக்கு மிக அருகே அத்துயரில் விழுபவர்கள். உலவிக் கொண்டிருக்கிறார்கள். அரவாணிகள். நீ ஒரு ஆம்பளையா என்ற வினாவை எதிர்கொண்டு கொலைகள் நிகந்திருக்கின்றன. நீயெல்லாம் ஒரு பெண்ணா எனும் ஒற்றை சொல்லில் பல தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. அடையாளத்தைச் சந்தேகிக்கும் ஒரு சொல்லை சமூகத்தால் தாள இயலாது. எனில் தனக்கான அடையாளத்தை இந்த உடலுக்குள்ளிருந்து, உறவுகளுக்குள்ளிருந்து, சமூகத்திலிருந்து கணம்கணமாய் நித்தம் துயரத்தையும் அவமதிப்பையும் உண்டு செறித்தபடி, நிறுவ முயல்கிறார்களே அரவாணிகள் அவர்களின் துக்கம் , புத்தன் அடைந்த துக்கத்தைவிடப் புனிதமானதுதான்.

அரவாணிகள் குறித்த பதிவுகளும் ,ஆவணங்களும் நிறைய கண்டிருந்தாலும் , அவர்கள் குறித்த புனைவுகளில் ஆழமான ஒன்றென ,சு .வேணுகோபால் அவர்களின் சமீபத்திய நெடுங்கதையான ‘பால்கனிகள் ‘ புனைவையே சொல்வேன் .

மதுரை கம்பம் ஆகிய ஊர்களில் பரவி வாழும் , விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட , [இந்தத் தலைமுறையில் வேலைக்கு செல்லும்] கூட்டுக் குடும்பம் ஒன்றினில் நிகழும் கதை . கிட்ணா [ஊராருக்கு மோகினி] அவர்களின் செல்லக் குழந்தை . அவன் வளர வளர அவன் பால் திரிபு கண்டிக்கப்படுகிறது . ஒரு சூழலில் தான் ஒரு பெண் என திட்டவட்டமாக அறிந்து , தன பெண்மையைக் காத்துக்கொள்ள வீட்டை விட்டு வெளியேறுகிறான் கிட்ணா . அதன் விளைவாக அவனுக்கான சொத்தையும் இழக்கிறான் .

நெடுநாள் கழிந்து ஒரு பெண்ணாக , தனது குலதெய்வ வழிபாட்டில் தனது குடும்பத்தைக் காண வருகிறான் . அவமானப்படுத்தி விரட்டப்படுகிறான் . மீண்டும் பல வருடம் கழித்து கிட்னாவை அவனது அக்கா ஒரு பதட்டமான சூழலில் சந்திக்கிறாள் . கிட்னா அவனது இயல்பான சமையல் திறமையால் ஒரு உணவகத்தில் மாஸ்டராக இருக்கிறான் . அவனது பாலியல் தோழன் அவனை ஏமாற்றிவிட்டுச் சென்ற சூழலில், ஒரு மகனைத் தத்தெடுத்து ,தனிமையில் வாழ்ந்து வருகிறான் .

திவ்யாவின் நோக்கில் சொல்லப்படும் புனைவு , ஒரு பெண்ணாக தனது தம்பியை நினைத்துக்கூட பார்க்க இயலாத திவ்யா , இறுதியில் அவனுக்குள் உறையும் தாய்மையைக் கண்டு , அதன் வாயிலாக அவனது ஆளுமையை அவள் அங்கீகரிப்பதுடன் நிறைவு கொள்கிறது .

பால்கனிகள் தமிழின் யதார்த்தவாதம் ,இயல்புவாதம் முயங்கிய புனைவு .நவீன தமிழ் இலக்கியம் அதன் வரலாற்றுப் போக்கில் இயல்புவாத , புனைவுகளில் உச்சம் தொட என்ன தேவையோ அதை மட்டும் ‘கண்டுபிடித்து ‘ நீக்கி படைப்புகளை உருவாக்கி முன் செல்ல . மாறாக பிற மொழிகளில் அது செழித்தது . பைரப்பாவின் ஒரு குடும்பம் சிதைகிறது புனைவின் வீச்சை தமிழில் தேடினால் , எதுவும் தேறாது என்பது ஒரு அப்பட்டமான உண்மை .

ஒரு காலகட்டம் பின்வாங்கி , அடுத்த நகர்வு துவங்கும் இச்சூழலின் பதாகை என நாஞ்சிலின் ‘யாம் உண்பேம் ‘ போல சில புனைவுகளை பட்டியல் இட்டால் அதில் இணையும் ஒன்றாக ‘பால்கனிகள் ‘ இருக்கும் . இக் குறுநாவல் அதன் அடிப்படைக் கட்டமைப்பால் செறிவாக உருவாகி , பாத்திரங்களை குறைந்த சொற்களில் முன்வைத்து புனைவின் வளர்ச்சிப் போக்கில் அவர்களின் ,மாறும் ,மாறாத குண இயல்புகள் துலங்குவதன் வழியே வாழ்வுக்கு இணையான நிகர் அனுபவமாக விரிகிறது .

திவ்யாவின் நோக்கில் சொல்லப்படும் இப்புனைவு , அவளது நோக்கில் கிட்ணா மெல்ல மெல்ல திரிபடைவதை ,அவள் அடையும் அதே குறுகுறுப்புடன் வாசகருக்குள் நிகழ்கிறது . குறிப்பாக தன மகளுக்கு பால் தர இயலாமல் ,தகிக்கும் தனங்களுடன் திவ்யா வீட்டுக்கு வரும்போது , கிட்ணா தன் மகளுக்கு அவனது முலைக் காம்பை சுவைக்கக் கொடுத்து , ஆறுதல் செய்வதைக் காணும் தருணம் , அவளது திகைப்பு வாசகனுக்கும் தொற்றுகிறது . புனைவின் இறுதியில் மோகினியின் குழந்தை பரிதியை இவன் கொடுத்து வைத்தவன் எனும் மனதுடன் எடுத்து கொஞ்சுகிறாள் . இந்த மெல்லிய மாற்றம் இங்கும் நிகழ ,இதுவே இந்தப் புனைவை கலைத் தருணம் கூடிய படைப்பாக மாற்றுகிறது .

கிட்ணா கோவில் கொடைக்கு வருகிறான் , தகராறில் பொறுத்துப் போகும் கிட்ணா ‘போடா அலிப்பயலே ‘ என்ற வசவு காதில் விழுந்ததும் ‘ஆமாண்டா அது என்ன நொட்ட வரும்போது தெரியலையோ ? இன்னொருக்கா சொல்லிப்பாரேன் ,கொட்டையில மிதிக்கிறேன் ‘ என ஆவேசமாக புடவை வழித்துக் கிளம்பும்போது , ” எப்டிக்கா மனுஷனால வெறுக்க முடியுது ? வெறுக்கறதுக்காக வாழ முடியுமா ?” எனக் கேட்கும்போது , உண்மையில் உடன் வாழும் சக மனிதன் என்றே மனம் ஏற்கிறது .

நவீன காவிய நடையின் உச்சம் வெண் முரசு சிகண்டினி எனில் , எதார்த்தவாதத்தின் முகம் மோகினி . இன்றைய தமிழ்நாவல் இலக்கிய வகை பேதங்கள் செழிப்பாக இயங்கும் ,வரலாற்று சாட்சியம் இவை இரண்டும் .
பால்கனிகள் கதையில் ஒரு வரி வருகிறது ”இயற்கை சிலருக்கு மட்டும் தனது சாரமான காருண்யத்தை ,அவர்களின் இயல்பாக பொதிந்து வாழ அனுப்பி விடுகிறது ”. பால்கனிகள் நாம் கட்டி உருவாக்கிய அறம் ,மனித நேயம் இவற்றுக்குப் பின்னுள்ள அற்பமான ‘மையத்தை ‘ ஒரு மிகைச் சொல்லுமின்றி பரிசீலிக்க வைக்கிறது .

மார்பகங்கள் பால்தரும் கனிகள் எனில் , குழந்தையைத் தந்து ,தாய்மையைத் தந்து , பால் புகட்ட இயலா மார்பகங்களைத் தந்த , இந்த இயற்கைப் பிறழ்வை எதில் சேர்க்க ?

இந்த வாதையின் கலை வெற்றியே பால்கனிகள் .

இரு நெடுங்கதைகள் அடங்கிய பால்கனிகள் தொகுதில் இரண்டாவது நெடுங்கதை ‘இழைகள்’. அவமதிப்பும், புறக்கணிப்பும், கீழ்மையும், கொஞ்சம் காருண்யமும் இழைகளாகக் கொண்டு நெய்யப்பட்ட வாழ்க்கையைச் சுமக்கும் ராமமூர்த்தி எனும் அரசுப்பள்ளி ஆசிரியரின் நினைவுகளாக விரியும் கதை.

தமிழக அரசு பாடப்புத்தக அட்டைகளில் ஒரு தொடர் வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும். தீண்டாமை ஒரு பாவச்செயல். தீண்டாமை பெருங்குற்றம். தீண்டாமை மனிதத்தன்மை அற்ற செயல். இந்த வாசகங்கள் என்று காலாவதி ஆகும்? தீண்டாமை என்பது சொரியாசிஸ் போல வெளியே தெரியும் அடையாளம் மட்டுமே. நோயின் வேர் எந்தக் கலாச்சாரமும், பண்பாடும் சென்று தீண்ட இயலா மானுட மனத்தின் இருண்ட ஆழத்தில் எங்கோ உள்ளது.

ஜீன் குடால் தனது ஆவணம் ஒன்றினில் மனிதனுக்கும் குரங்குக்குமான ஆச்சர்யகரமான ஒற்றுமை என வன்புணர்வு உள்ளிட்ட சில அடிப்படை அலகுகளை விவரிக்கிறார். அதில் ஒன்று ‘வலுத்த’ குரங்கு இளம் பெண்கள் கூட்டத்துடன், பாதுகாப்பு மிகுந்த வலுவான கிளையில் தங்குகிறது. தசை புடைத்த ருசியான பழங்கள் அதற்கு மட்டுமே. ‘இளைத்த’ குரங்குகள் வலுத்தவனுக்கு அடிமை சேவகம் செய்து, அண்டி வாழ்ந்து , அவன் விட்டுத் தரும் உணவுகளை உண்டு ஜீவித்துக் கிடக்கின்றன.

இக் கீழ்மையின் வேர்கள் மானுடத்துக்கும் அப்பால் உள்ளதோ என்றும் தோன்றுகிறது. அடிமைகள் இன்றி உபரி இல்லை. உபரி இன்றி உடமை இல்லை. குடும்பம், தனிச் சொத்து, அரசு, கடந்தகாலம் எதுவுமே இல்லை. அடிமைகளை வெறுக்காமல் சக மனிதனை ஒரு மனிதனால் அடிமையாக நடத்த இயலாது. இது மற்றொரு அடிப்படை உளவியல் சிக்கல்.

நில உடமை சமுதாயம் மாறி, ஜனநாயக யுகத்துக்குள் நுழைந்துவிட்டோம். ஆனால் நமது சமூக ஆழ்மனம் இந்த நிலப்பிரபுத்துவ மனநிலையில் இருந்து முற்றாக வெளியேறி ஜனநாயகப் பண்பை எய்திவிட்டதா? என்று வினவினால், விடை மழுப்பலாகவே அமையும்.

எனது நண்பர் அமெரிக்கா சென்று இறங்கிய முதல் நாள், முதன் முதலாக கேட்ட அறிவுறுத்தல் இது. ”நீங்க பாட்டுக்கு கேஷுவலா , கைகுலுக்க கை நீட்றதோ, தொட முயற்சி பண்றதோ பண்ணிடாதீங்க. அவங்க வெள்ளக்காரங்க, நீங்க அவங்ககிட்ட அப்டி நடந்துக்கறது இங்க சட்டப்படி குற்றம்.”

வேறொரு நண்பர் சொன்னார் ”பலநாள் சொந்தம் போல முகம் பூரிக்க ஹாய் என்று சொல்வார்கள். அவ்வளவுதான் அத்துடன் முகத்தை திருப்பிக் கொள்வார்கள். நீங்கள் என்றொரு ஜீவன் அங்கிருப்பதே அவர்களுக்கு தெரியாது. அவர்களின் பிளைன்ட் ஸ்பாட் அத்தனை வலுவானது”

சமீபத்தில் வெள்ளையானை நாவல் மீதான உரையாடல் ஒன்றினில் ஜெயமோகன் சொன்னார் ” ஒரு தலித்தால்தான் தலித்தின் துயரை எழுத முடியும் எனும் கூற்று உண்மையானால், ஒரு தலித்தால் மட்டுமே அந்த எழுத்திலுள்ள வலியை உணரமுடியும் என்றாகிறது. இது இலக்கியத்துக்கே புறம்பானது. தலித் இலக்கியம் எனும் வகைப்படுத்தலால் [ சமூகத்தில் அவர்கள் எப்படி தனிமைப்படுத்தப்படுகிறார்களோ ], தனிமைப்டும் போக்கே இறுதியில் எஞ்சும் ”.

சாதிக் கீழ்மையால், தனிமைப்படுத்த்ப்படும், புறக்கணிக்கப்படும், ஒருவன் குருதி ஈரம் உலராத தனது காயத்தை, அதன் வலியை, நினைத்துப் பார்ப்பதே ‘இழைகள்’ எனும் நெடுங்கதை. துயரத்தில் மேல் சாதி, கீழ் சாதி உண்டா என்ன? அது மானுடப் பொது. சாதியின் பெயரால் தான் அடைந்த கீழ்மைகள், அது ஏன் அதன் வேர்கள் எங்கே என்று புரியாமல் திகைத்து நிற்கும் ஒரு மிடில்க்ளாஸ் மனதின் நினைவலைகளே இக் கதை.

இலக்கியப் புனைவுகளில், குறிப்பிட்ட இரண்டு கதைகள் மிக தனித்துவமானது. முதலாவது தோப்பில் முகமது மீரானின் சன்னதியில் எனும் கதை. அடுத்தது ஜெயமோகன் எழுதிய வணங்கான் எனும் கதை.

சன்னதியில் கதையில் அத்தத் ஊரின் [கப்பலில் போய் சம்பாதித்த] பணக்கார பாய். அவருக்கு இரண்டு மகன்கள். வள்ளி துவங்கி அவளது பேரன் வரை அனைவரும் அவரது குடும்பத்தின் வேலையாட்கள். ராஜா போல வாழ்கிறார் பாய். வேலைக்காரர்களை மனிதர்களாக மதிக்காதவர். குடும்ப சண்டை உக்கிரம் அடைந்து தனது சொத்துக்களை இரு மகன்களுக்கும் எழுதி வைக்கிறார். வள்ளி குடும்பம். இரு மகன்மார் வீடுகளுக்கும் மாறி மாறி அடிமை சேவகம் செய்கிறது. நோய் முதுமை இரண்டும் பாயை குடும்பத்தினரின் புறக்கணிப்புக்கு ஆளாக்குகிறது.

ஒரு நாள் காலை பாய் கண்விழித்துப் பார்க்கிறார். நடக்க இயலாத நோய் முற்றிய பாய், மசூதி வாசலில் அனாதையாக கைவிடப்பட்டுக் கிடக்கிறார். அழுது புலம்புகிறார். எவரும் அவருக்கு உதவும் நிலையில் இல்லை. வள்ளி மட்டும் ஒவ்வொரு நாளும் அவரைக் கடந்து செல்லும்போதும் அவரை சுத்தம் செய்து, ஏமான்கள் தன் குடும்பத்துக்கு அளிக்கும் மிச்சிலில் கொஞ்சத்தை அவரது வட்டிலில் வார்த்துவிட்டு செல்கிறாள்.

ஒரு நாள் புயலும் மழையும் வலுக்கிறது. பாய் அழும் குரல் மழையின் ஓலத்தையும் தாண்டி, சேரியில் இருக்கும் வள்ளியின் வீடு வரை கேட்கிறது. சிறுவன் முருகன் திண்ணையில் இருந்து குதித்து இறங்குகிறான். ”அம்மா நம்ம எஜமான்மா” என்று கூவியபடி மழைக்குள் புகுந்து ஓடுகிறான். ஒரு கணம் யோசிக்கும் வள்ளி, புடவையை இழுத்து செருகி தானும் எஜமான் நோக்கி ஓடுகிறாள். நிர்வாணமாகக் கிடக்கும் தன் எஜமானை தாய் போல ஏந்திக்கொண்டு வீடு வருகிறாள்.

வணங்கான் கதை கறுத்தான் எனும் பண்ணை அடிமை, ஒவ்வொரு கணமும் எதிர்ப்பால் மீண்டெழுந்து கறுத்தான் எனும் ஆளுமையாக உயரும் பரிணாம கதியை எழுச்சியுடன் முன்வைக்கும் கதை.

முதல் கதை தமிழில் நிகழ்ந்த அபூர்வங்களில் ஒன்று. நில உடமைச் சமூகம் எனும் கலாச்சாரம் ஒன்றினை கட்டிவைத்த அடிப்படை சரடு ஒன்றினை, நேர் நிலை அம்சம் ஒன்றினை இத்தனை வலுவாக, உளம்பொங்கும் வண்ணம் சொன்ன கதைகள் குறைவே.

இரண்டாவது கதை மீறலின் கதை. என்னை உன்னால் அவமதிக்க முடியாது எனும் நிலைக்கு , ஒவ்வொரு கணமும் தன்னைச் சூழும் கீழ்மைகளைச் சுட்டெரித்து மீண்டெழும் ஆளுமை ஒன்றின் கதை.

இந்த இரண்டு எல்லைகளுக்கும் இடைப்பட்ட நிலை ஒன்று உண்டு. தனக்கு நிகழ்வதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், மீறிச்செல்லவும் வகையறியாமல் , கிடந்துழலும் நிலை. இந்த நிலையில் நிற்கும் ராமமூர்த்தி எனும் ஆசிரியர், தனக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட நாளில், தான் கடந்து வந்த பாதையை எண்ணிப்பார்க்கும் வகையில் கூறப்பட்ட கதை.

போடிநாயக்கனூர் அருகே, வேலுப்பிள்ளையின் பண்ணையாள் சடையாண்டி மாரி தம்பதி. அவர்களுக்கு இரண்டு மகன் இரண்டு மகள். மூத்தவன் பரமன். ரேணுகா டீச்சர் அவனுக்கு ராமமூர்த்தி என பெயரிட்டு பள்ளியில் சேர்க்கிறாள். காளிமுத்து எனும் கருப்புச் சட்டைக்காரர் ‘நீங்கள்லாம் படிச்சாத்தான் இனிமே உங்களுக்கு விடிவு காலம்’ என்று சொல்லி ராமனை ஆசிரியர் பயிற்சி கல்வியில் சேர்க்கிறார்.

ராமமூர்த்தியின் குடும்பம் மொத்தமும் , பண்ணண வேலை, கடன் என உழைத்து களைத்து அவனை ஆசிரியர் ஆக்குகிறார்கள். ராமன் ஆசிரியர் ஆகிறான் வீடு கட்டுகிறான். குழந்தைகள் வளர்கிறார்கள். ராமமூர்த்தியின் மனைவி முத்துலட்சுமி, கணவரின் தம்பி, தங்கைகளை சண்டை போட்டு விரட்டி விடுகிறாள். மூத்த தங்கையின் மகளை, மனைவிக்கு தெரியாமல் செலவு செய்து டீச்சர் ட்ரைனிங் சேர்க்கிறார். ராமமூர்த்தி. பணி நிறைவு எய்த ஆறு வருடங்கள் இருக்கும் நிலையில் அவருக்கு நல்லாசிரியர் விருது கிடைக்கிறது. தான் வாழ்ந்த, கீழ்மைகளும் அவமதிப்புகளும், கொஞ்சம் கருணையும் கவிந்த இந்த நடுத்தர வாழ்வை , விருது கிடைத்ததால் வந்த சிறு உவகையின் பின்னணியில் நினைவில் புரட்டியபடி வீடு நோக்கி நடக்கிறார் ராமமூர்த்தி.

கதையின் பல இழைகளில் ஒன்றாக, அரசுப் பள்ளி, அதன் சுகாதாரம், ஆசிரியர்கள் தொடங்கி மாணவர்கள் வரை கடைபிடிக்கப்படும் சாதிப் பாகுபாடு என சமகால கீழ்மையின் வரலாறு ஒன்று, கொஞ்சமே சொல்லி மீதியை விட்டு கலாபூர்வமாக ஆவணப்பதிவாகிறது.

ராமமூர்த்திக்கு சுயமாக வந்ததா, அல்லது கல்வியால் விளைந்ததா இந்த சுயமானம். அப்பாவையும் அம்மாவையும் வயது பேதமின்றி முதலாளி வீட்டில், எல்லோரும் பெயர் சொல்லி அழைப்பதில் அவனுக்கு வருகிறது முதல் கோபம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அவன் கோபம் புரிவதே இல்லை. இதுல என்ன கிடக்கு என்றே நினைக்கிறார்கள்.

பள்ளியில், இளம்பிராயக் காதலில், ஆசிரியர் பணியில், தேநீர்க்கடையில் என ராமமூர்த்தி தன் வாழ்வு நகரும் அத்தனை எல்லைகளிலும் புறக்கணிப்பின் வேதனையை எதிர்கொள்கிறான். கதைக்குள் ஒரு மிகைச்சொல்லுமின்றி நம்மை நிம்மதி இழக்க வைக்கும் தருணங்கள் பல வருகின்றன. குறிப்பாக ராமமூர்த்தியின் கறிக்குழம்பு மோகம் அவனை அலைக்கழிக்கும் தருணங்கள். மதியம் வீட்டுக்கு வரும் அப்பா களியை சட்டியில் வைத்து கரைத்தபடி பிள்ளைகளை அழைக்கிறார். பிள்ளைகளோ இன்று அம்மா சாயிபு வீட்டிலிருந்து கறி பிரியாணி கொண்டு வருவதாகவும் அதற்காக காத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். பிள்ளைகள் இன்று ”நல்ல சோறு ” சாப்பிடப் போகிறார்கள் என்று உவகையுடனும், பங்குவைக்க வேண்டிய தேவை இல்லாததாலும் அன்று வயிறார சாப்பிடுகிறார் அப்பா. பஞ்சு போன்ற கறி ருசி இழுக்க, பிள்ளைகள் நால்வரும் அம்மாவை தேடி போகிறார்கள். அம்மா வழியில் எதிர்படுகிறார்கள். மீந்த குழம்பிலும், பிரியாணியிலும் கறியைத் தேடி பிள்ளைகள் [குறிப்பாக ராமமூர்த்தி] ஏமாறுகிறார்கள்.தம்பியும் தங்கைகளும் அள்ளி அள்ளி உண்கிறார்கள், அம்மா தங்கைகளின் தலையை தடவியபடி அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அனைத்துக்கும் மேல் ராமமூர்த்திக்கு வலி தரும் நினைவாக நிரந்தரமாக தங்குவது, அந்த பிரியாணி அடி பிடித்த பகுதி. அதை ஒரு பழைய வட்டிலில் கூட கொடுக்காமல், அம்மாவின் முந்தானையையே பையாக மாற்றி அதில் கொடுத்து அனுப்புகிறார்கள். அன்று அந்த பிரியாணி அவனுக்கு ருசிக்காமல் போனதற்கு அதுவும் ஒரு காரணம்.

ஊர் திருவிழா நெருங்க, சக மாணவர்களுடன் கிளம்ப எத்தனிக்கிறான். நினைவில் கிடாவெட்டு, கறிக் குழம்பு. அவர்களோ ராமமூர்த்தியும் உடன் வரப்போகிறான் என அறிந்து குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே அவனை புறக்கணித்துவிட்டு போய் விடுகிறார்கள். யாருமற்ற வீட்டின் முன் அவமானத்தை சுமந்து தனித்து நிற்கிறான்.

உறவில் அவனுக்கு தாத்தா முறை. வாரம் ஒரு முறை கறிக் குழம்பு சாப்பிடும் அளவு வசதி கொண்டவர். கறிக்குழம்பு வாசனையை பின்பற்றி அவன் வீட்டுக்கு வரும்போதெல்லாம் [சாதி சொல்லி திட்டி] ‘அடிச்சி பத்து நாயை’ என்கிறார். அந்த வீட்டு செண்பகத்துடன் அவளுக்கு திருமணம் முடிந்த பின்னும் ராமமூர்த்திக்கு உறவு தொடர்கிறது. நாக்கு ருசி, காமப் பசியில் வந்து நிற்கிறது.

சாதி மதம் பாராமல் நிகழ்வது கலவி மட்டுமே. சின்ன முதலாளி, ராமமூர்த்தியின் பெரிய தங்கையை சுகிக்கிறான். அங்கே சாதி தடை இல்லை. ராமமூர்த்தி நசீமாவை சுகிக்கிறான். அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. அங்கு மதமும் தடை இல்லை.

சாதிப் படி நிலையில் கீழே உள்ளவனால் ஊருக்கு வெளியில்தான் மனை வாங்கி வீடு கட்ட முடியும். மின்சாரமே இல்லாமல், கூடவே புதிதாக வரும் அண்டை வீட்டாரின் புறக்கணிப்புடனும் பல நாட்கள் கழிக்கிறார்கள். கட்டிய வீட்டில் மாட்டி வைக்க அப்பா அம்மாவின் ஒரு புகைப்படம் கூட இல்லை.

அவனது ஆசிரியர் பயிற்சி விடுதிக்கு அவன் கேட்ட பணத்துடன் அப்பா வருகிறார். ராமமூர்த்திக்கோ அவன் விட்டு விலக விரும்பும் கீழ்மையை மீண்டும் அவன் மேல் சுமத்த வந்தவராக அப்பா தெரிகிறார். அப்பாவை யாரோ என்பதுபோல நோக்கி, கண்ணால் வெளியே வர சொல்கிறான். வந்ததும் அப்பா குறுகி நின்று கேட்கிறார் ‘ஏம்ப்பா நான் உள்ள வரக் கூடாதா’. அப்பா கொண்டுவந்த காசு ஜெயசுதாவை கவர்வதற்காக சட்டை பேன்ட்டாக மாறுகிறது. அந்தக் காசு கருங்கண்ணியை குட்டியுடன் விற்று கிடைத்த காசு.

கதையின் வலி மிகுந்த சித்திரம் கருங்கண்ணி ஆட்டுக்கும் அதன் குட்டிகளுக்கும் அம்மாவுக்குமான உறவு. அம்மா ஆடு வளர்க்கிறாள். அதில் பொருளாதார விடுதலை உள்ளது. ஆகவே அது முதலாளிக்கு பிடிக்காது. ஆகவே ஒரு ஆடு இரு குட்டிகளுக்கு மேல் அவளால் எப்போதுமே வளர்க்க இயலாது. ஒரு ஆடு, அதன் அடுத்த தலைமுறை வந்தபிறகு முந்திய தலைமுறையை அம்மா விற்று விடுவாள். மந்தையாக வளர்க்கையில் அப்படி ஒரு ஆடு மீது பாசம் படியாது. ஒற்றையாக வளர்க்கும்போது கிட்டத்தட்ட அது பிள்ளைகளுக்கு இணையான உறவாக மாறிவிடுகிறது. அதுவும் கருங்கண்ணி குட்டிபோட்ட ஆடு. அம்மா மதியம் தனது உணவைக்கூட பட்டினி கிடந்து கருங்கண்ணிக்கு அளித்து வளர்க்கிறாள். மகன் படிப்புக்காக அதை விற்கிறாள். மகள் ஒன்றினை இழந்தவள் போல ஆடு பிரிகையில் ஏங்கி அழுகிறாள். அனைத்தும் அறிந்தும் அந்தப் பணத்தைக் கொண்டே ராமமூர்த்தி , ஜெயசுதா முன் கெத்தாக நிற்க புதிய உடை வாங்குகிறான். ஜெயசுதா அவனின் குலதெய்வம் பெயர் கேட்கிறாள். அத்துடன் அவனை புறக்கணிக்கிறாள். நசீமாவுடனான கூடலில் அவனுக்குள் ஜெயசுதாவே எழுந்து வருகிறாள். நசீமாவின் பிள்ளைகள் அவனுடையவை. ஆனால் அவனால் ஒருபோதும் அள்ளிக் கொஞ்ச முடியாத, ஒரு மர்மக்கோட்டுக்கு அப்பால் இருப்பவை.

முப்பரிமாணம் கொண்டு ராமமூர்த்தியின் வாழ்வை சித்தரித்துக் காட்டி ,புறக்கணிப்பின் வலியை துல்லியமாக நமக்கு கடத்தி , புறக்கணிப்பதன் பின் உள்ள சிறுமையை, நமது அற உணர்வை மௌனமாக கேள்வி கேட்கிறது இந்தக் கதை.

தெணியான் எனும் இலங்கை எழுத்தாளரின் வாழ்வனுபவங்களில் ஒரு சம்பவம் . சாதிப் படிநிலையில் கீழ் படியில் இருப்பவர் தெணியான். ஊருக்குள் பெரிய சாதி எப்போதும் சாதி சண்டையில் திளைத்துக் கொண்டிருக்கிறது. தெணியானின் அம்மா குழந்தை பெற்றிருக்கிறார்கள். பெரிய சாதியில் குழந்தை பெற்ற ஒரு பெண் பிரசவத்தில் இறந்துவிடுகிறாள். வெளியே சாதியின் படிநிலை சண்டைகள் பிரிவுகள்.

தெணியான் வீட்டுக்கு பின் வாசலில், பெரிய சாதியின் ஆச்சி வந்து நிற்கிறாள். தாயை இழந்த குழந்தைக்கு, தெணியானின் அம்மா தனது தாய்ப்பாலை ஒரு கிண்ணத்தில் வார்த்து ஆச்சி வசம் கொடுத்து அனுப்புகிறாள்.

இலக்கியமும் கலைகளும், கால காலமாக புறக்கணிக்கப்பட்டவர்கள், வஞ்சிக்கப்பட்டவர்கள் பின் நின்று மானுடத்தை கேட்கும் கருணை அதுதான். தாய்ப் பாலுக்கு எங்கும் பசித்திருக்கும் குழந்தைபோல, புறக்கணிக்கப்பட்ட ஒருவனின் கருணைக்காண ஏக்கமே இந்த ‘இழைகள்’.

சு. வேணுகோபாலின் புது வாசகன்

டி. கே. அகிலன்

படம்: www.discoverybookpalace.com

அனைத்துச் செயல்களுக்கும் எங்கோ நிகழும் சிறு தூண்டுதலை அவற்றின் தொடக்கப்புள்ளியாக வரையறுக்கலாம். வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள் என்று இருப்பு ஒவ்வொரு மனிதனையும் அதன் மெல்லிய அழைப்புகளால் கணம்தோறும் தூண்டிக்கொண்டிருக்கிறது. தனிமனிதன் அவன் இயல்பிற்கேற்ப, தூண்டுதலை அறிந்து கொள்ளும் உணர்திறனின் வீரியத்திற்கேற்ப சில தூண்டுதல்களை மனதில் அடைகிறான். அவற்றிலும் மிகச் சிலவையே செயல்களாக தம்மை வெளிப்படுத்துகின்றன. மற்றவை அனைத்தும் அவன் மனதுக்குள்ளேயே அழிந்து விடுகின்றன. செயல்களின் அனுபவத்தில் வாழ்க்கை நிகழ்கிறது.

ஜூலை முதல் தேதியன்று மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தபோது,  எனக்கேயான ஒரு தூண்டுதல் காத்திருந்தது. அது என்ன என்பதில் முக்கியத்துவம் ஒன்றும் இல்லை. அப்போதிருந்த மனநிலை அத்தூண்டுதலை செயலாக மாற்றும் உத்வேகத்தையும் அளித்தது. ஒரு வேளை அந்நேரத்தில் வேறு மனநிலையில் இருந்திருந்தால் அது அப்போதே மரணத்தைக் கண்டிருக்கும். சு. வேணுகோபாலின் எழுத்துக்கள் குறித்து சில கட்டுரைகள் வழியாகக் கேள்விப்பட்டிருந்தவை, அந்தத் தூண்டுதலை உயிர்ப்புடன் வைத்திருந்து. அவருடைய சில புத்தகங்களை இணையம் வழியாக வாங்கினேன். தூண்டுதல் செயலாகத் தொடங்கி விட்டது. அதன் விளைவு எதுவாக இருந்தாலும் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். எல்லா அனுபவங்களும் கணநேர தூண்டுதல்களின் கண்ணிச்சரடுதானே!

இவ்வாறு மிகசமீபத்தில் நானும் சு. வேணுகோபாலின் வாசகன் ஆகி விட்டேன். முதலில் படிக்கத் தொடங்கியது, கூந்தப்பனை குறுநாவல் தொகுதி. கதைமாந்தர்களின் செயல்களும், அந்தச்செயல்களுக்குப்பின் இருக்கும் எண்ண ஓட்டங்களும், எண்ண ஓட்டங்களை வடிவமைத்த மனிதர்களின் இயல்புகளும், கதைமாந்தர்கள் வாழ்வில் ஆடும் ஆட்டத்தை இந்தக் கதைகள் விவரிக்கின்றன. நுண்ணிய மன இயக்கங்களின் விவரிப்புகள், மனித மனதின் அழகுகளையும் முடிச்சுகளையும் வெளிப்படுத்துவதுடன், இவைகளைப் பற்றிய வாசிப்புக்கும் உதவுகின்றன..

‘ஜக்கையன் அவர் முகத்தைப் பார்த்தான் இமைகளில் ஈரம் மினுமினுத்தது’ என்று முடிகிறது கண்ணிகள் என்னும் கூந்தப்பனைத் தொகுதியின் முதல் கதை. விவசாயம் செய்து வரும் நிலத்தில், விவசாய ஆட்கள் பற்றாக்குறையால் வட்டிக்குக் கடன் வாங்கி, ஏற்கனவே இருக்கும் கிணற்றை விட்டுவிட்டு புது போர்வெல் வைத்து தென்னைகள் நடுகிறார் ரங்கராஜன். இந்த நிலையில் மகனை கல்லூரியில் சேர்க்க மாத வட்டியில் ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கி, வட்டிக்காரன் கெடுபிடியால் அது வாரவட்டிக் கடனாக மாறி, சில வாரங்களில் வட்டி அசலைத் தின்று விடுகிறது. வட்டி கொடுக்க முடியாததால் பொது இடத்தில் வைத்துத் தாக்கப்பட்டு, மரியாதையை இழந்து தோட்டத்தையும் இழக்கும் நிலைக்கு வருகிறார். ஒரே நம்பிக்கை அறுவடைக்கு வரப்போகும் திராட்சைத் தோட்டம். திராட்சை விளைச்சலை நல்ல விலைக்கு எடுப்பதாக ஆசை காட்டுகிறார், ஜார்ஜ் என்னும் வியாபாரியின் கணக்கப்பிள்ளை. ஆனால் இறுதியில் கிறிஸ்தவனாக மாறினால்தான் அவர்களால் திராட்சைகளை விலைக்கு எடுத்துக்கொள்ள முடியும் என்னும் கண்ணியை வீசுகிறார்கள். மிக மென்மையாக அதைத்தவிர்த்து விட்டு ரங்கராஜன் வெளியே வருகிறார்.

பன்முகப்பண்பாட்டிலிருந்து ஒருமுகப்பண்பாட்டிற்கு அவர்களுக்கேயான காரணங்களால் நகர்ந்தவர்கள், அந்தப் பன்முகப்பண்பாட்டின் கூறுகளை இழந்து விடுவார்களா? அவர்கள் நோக்கமும் ஒருமுகத்தன்மையை அடைந்து விடுமா? அல்லது பன்முகத்தன்மையுடன் இருக்க இயலாதவர்கள்தான் அந்தப் பண்பாட்டை துறந்து விட்டு செல்கிறார்களா? அப்படி பொதுமைப்படுத்த முடியாதுதான். ஆனாலும் அது ஒரு காரணமாகவும் இருக்கக் கூடும். கண்ணிகளின் இறுதி வரிகள் இந்தத் திசையையும் சற்றுத் திரும்பிப்பார்க்கத் தூண்டுகின்றன. அவர் கண்களில் கசிந்த ஈர மினுமினுப்பு இயலாமையினாலா,  பன்முகத்தன்மையின் மனவிரிவு அளிக்கும் இரக்கத்தினாலா அதுவும் இல்லையெனில் ஒருமுகத்தன்மையின் கூர்முனைத் தாக்குதலினாலா?

இந்தக் கதையில், துயரத்தை நோக்கி இட்டுச் சென்றாலும் மனம் ஆடும் விளையாட்டுகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. ரங்கராஜன் மகனை கல்லூரியில் சேர்க்க வட்டிக்கடன் வாங்க தானாகவே முடிவு செய்து விட்ட பின்னும் அவருக்கு ஜக்கையனின் ஆலோசனை தேவைப்படுகிறது. ஜக்கையன் அவரை யோசனை செய்யச் சொல்லும் ஒவ்வொரு முறையும், அவருக்கேயான சாக்குபோக்குகள் வழியாக எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறார். ஆனாலும் ஆலோசனை தேவைப்படுகிறது. இது சாதாரண மனிதர்கள் ஒவ்வொருவரும் நடிக்கும் மனநாடகம்தானே? நாமே நடிக்கும்போது அது நாடகமாகத் தெரிவதில்லை. கதையில் அத்தகைய தருணத்தின் விவரிப்பு நம் இயல்பை உணரச் செய்து ரசிக்க வைக்கிறது.

மனிதர்கள் ஒருவருக்கொருவர், சிறு உதவிகளைச் செய்து அந்தச் செயல் அளிக்கும் மனநிறைவில் நிறைந்திருப்பது மிகவும் இயல்பானது. சமயங்களில் அதீத தன்முனைப்போ அல்லது தயக்கமோ அவற்றைச் செய்ய விடாமல் தடுக்கலாம். சு. வேணுகோபாலின் கதைகளில், தயக்கத்தின் மூலம் உதவிகளைத் தள்ளிப்போடுவதும், மற்றொருவர் தயக்கமின்றி அதே உதவியைச் செய்வதைக் கண்டு, தன் தயக்கத்தையும் அதற்கான காரணத்தையும் கண்டடைவதும் மிக இயல்பாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய விவரிப்புகள் இந்தக் கதைகளின் அழகுகள் எனத் தோன்றுகிறது. ‘வேதாளம் ஒளிந்திருக்கும்’ கதையில் இதைப்போன்ற இரண்டு தருணங்கள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. பஸ்-ல் ஏறும் கால் ஊனமுற்றவர், ஊனமுற்றவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் இருப்பவரை வலுக்கட்டாயமாக எழுப்பி விட்டு அதில் அமர்கிறார். கொஞ்ச நேரத்தில் ஒரு பெண் இடுப்பில் கைக்குழந்தையுடன் ஏறி நெருக்கத்தில் அல்லாடுகிறார். சற்றுப் பின்னால் அமர்ந்திருக்கும் கதைச்சொல்லி, தன் அருகில் வந்தால் எழும்பி இருக்கையை அளிக்கலாம் என எண்ணிக்கொண்டிருக்கையில், அந்த ஊனமுற்றவர் தன் இருக்கையிலிருந்து எழுந்து அதில் அந்தப்பெண்ணை அமரச் செய்கிறார். இதே கதையில், இன்னொரு பஸ் பிரயாணத்தில் தன்னிடம் இருந்த பணம் திருடப்பட்ட நிலையில் ஒரு முதியவர் டிக்கெட் எடுக்க முடியாத காரணத்தால் கண்டக்டரிடம் இருந்து வசையைப் பெற்றுக்கொண்டிருக்கிறார். கதைச்சொல்லி அவருக்கு உதவலாமா என எண்ணிக்கொண்டே, இது போன்ற சந்தர்ப்பங்களில் ஏமாந்து போன ஒரு நிகழ்வை அசைபோட்டுக் கொண்டிருக்கும்போது, ஒரு பள்ளி மாணவன் முதியவருக்கான டிக்கெட் வாங்கி விடுகிறான். மனதின் அழகுகளையும், அவற்றை வெளிப்படுத்தும் தயக்கங்களையும் இத்தகைய நிகழ்வுகளின் விவரிப்புகள் மூலம் சு. வேணுகோபால் அங்கிங்கு சித்தரிக்கிறார்..

‘மெலிதாக கைகளில் படிந்திருக்கும்  ரோமங்களிலும், தோலிலும், எலும்பிலும்,  திசுவிலும், திசுவுக்குள் அணுவிலும், நகங்களிலும், உடலை முழுவதும் சுற்றி வரும் இரத்தத்திலும், இன்ன இடமென்று இல்லாமல் அவனுக்குள் அந்த வியாதி பதுங்கியிருந்தது’. ‘அபாயச் சங்கு’ கதையில் கதைநாயகனான சுரேந்திரனின் காமநோய் இப்படி விவரிக்கப்படுகிறது. காமம் மட்டும்தான் இப்படிப் பதுங்கியிருக்க வேண்டுமா? பொறாமை, பயம், பேராசை, வஞ்சகம் என எது வேண்டுமானாலும் உடலின் ஒவ்வொரு அணுவிலும் படர்ந்திருக்கும் வியாதியாகவும் இருக்கலாமே. அடுத்த வரியில் ‘மோகம் என்று சொல்வதைவிட அவமானத்தின் பிரதிபிம்பம் என்று சொல்லலாம்’ என்று கூறி, நோயின் மூலமும் உணர்த்தபபடுகிறது.

சுரேந்திரன் கல்லூரியில் படிக்கும் வயதில் அந்த வீட்டிற்குக் குடிவருகிறார்கள். எதிர் வீட்டில் கோகிலா குடியிருக்கிறாள். அவளின் அம்மா ரத்னமணி. கோகிலா சுரேந்திரனை உசுப்பேற்ற, அவர்களுக்குள் காதல் வருகிறது. அரசாங்க வேலைக்கு லஞ்சம் கொடுத்து, அது தற்காலிக வேலை என்பது தெரியாமல், வேலையில் சேர்கிறான். அரசாங்க வேலை கிடைத்ததும், ரத்தனமணியும் அவர்கள் காதலை ஏற்பதுடன் ஊக்குவிக்கிறாள். ஆனால் தற்காலிக பணிக்காலம் முடிந்ததும் சுரேந்திரனுக்கு வேறு வேலைகள் கிடைக்கவில்லை. கோகிலாவுக்கு வேறு திருமணம் அவள் ஒப்புதலுடன் செய்து வைக்கப்படுகிறது. சுரேந்திரன் அவமானப்படுத்தப்படுகிறான், அவமானமடைகிறான். இதற்கு வடிகாலாக ரத்னமணியைக் காமத்தால் ஆள நினைக்கிறான்.. அவளும் உடன்படுகிறாள். காமம் அவனையே முழுமையாக ஆக்கிரமிக்கும் வியாதியாகப் பரவுகிறது. தன் நோயின் தீவிரத்தையும், அதன் காரணத்தையும் விளைவுகளையும் உணரும் தருணத்தில் நோயை அழிக்க, தற்கொலை செய்து கொள்கிறான்.

தன் இயலாமையை அறியும் சாதாரண மனிதன் அதை மறைக்கும் பாவனைகளை நடிப்பதும், அவை வாழ்க்கையை மேலும் சிக்கலாக்குவதையும்தான் நடைமுறை வாழ்க்கையில் பெரும்பாலும் காண்கிறோம். ஆனால் தன் இயலாமையை காலம் கடந்து அறியும் ‘கூந்தப்பனை’ கதையின் நாயகன் சதீஷ், அந்த இயலாமையை வெற்றி கொள்ள முயல்கிறான். அது இயலாமை மட்டும் அல்ல தன் உடலின் இயல்பும் அதுதான் என அறியும்போது அதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தன்னிடமிருந்து மனமுவந்து விடுதலை அளிக்கிறான். அவன் பெருந்தன்மையை காண மறுக்கும் சமூகம் அதற்காக அவனை அவமதிக்கிறது. அதைவிட விடுதலை பெற்ற பெண்ணிடமிருந்தும் இயல்பாக வரும் அவமதிப்பு அவனைத் துரத்துகிறது. அவமதிப்பையும் இயலாமையும் சதீஷ் கடந்து சென்றடைந்த இடம், சற்றே நுண்ணுணர்வு கொண்ட வாசகனுக்கு, எந்த சுயமுன்னேற்றம் குறித்த படைப்புகளும் அளிக்காத வாசிப்பனுபவத்தை அளிக்கும் சாத்தியமுள்ளது. கூந்தப்பனை என்னும் சொல், தன் வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டும் பூத்துக் காய்க்கும் ஒரு வகையான பனை மரத்தின் பெயர் என்று இணையத் தேடுதல் மூலம் அறிந்தேன்.

சதீஷ், உடல் உறுதி உடையவன். அவன் உடல் பெண்களை மோகம் கொள்ள வைக்கிறது. ஹேமலதாவுடன் சதீஷுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அவளும் அவன் உடலைக்கண்டு மோகிக்கிறாள். திருமணத்திற்குப்பின்தான் சதீஷின் இயலாமை அவனுக்குத் தெரிய வருகிறது. அவனால் முழுமையான உடலுறவு கொள்ள முடியாது. ஏமாற்றத்தில் ஹேமலதா இடிந்து விட்டாலும் சமாளித்துக்கொள்கிறாள். அவனுடன் இயல்பான வாழ்க்கையை வாழ முயற்சித்து, அவனையும் இயல்பாக்க முயற்சிக்கிறாள். ஆனால் சதீஷ் தன்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை பாழாவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறான். தன் நண்பனுக்கும் ஹேமலதாவுக்கும் திருமணம் செய்வித்து அவர்களுடனே வாழ்கிறான். சமூகம் அவன் பெருந்தன்மையை ஏற்றுக்கொள்ளாமல், அவன் இயலாமையை மட்டும் அவனுடன் அடையாளப்படுத்துகிறது. தன்மனைவிக்கும் அவள் புதுக்கணவனுக்கும் தான் இடைஞ்சலாக இருப்பதை உணர்ந்து, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் அவன் தன் வீட்டிலிருந்து வெளியேறுகிறான். ஆனால் தன் இயல்பிற்கேற்ற வாழ்க்கையை அடைந்து, தன்னுள் இருக்கும் கருணையை வெளிப்படுத்தும் உச்ச கணத்தில்  கதை முடிகிறது. இந்த உச்சகணம்தான் அவனில் மலர்ந்த ஒரே மலர் என்பதைத்தான் கதை சொல்கிறது.

‘வெண்ணிலை’ சிறுகதைத் தொகுதி, முற்றிலும் வேறான வாசிப்பனுபவத்தை அளித்தது. என் பார்வையில், ஒவ்வொரு கதையும் மனிதனின் ஒரு சிறு தன்மையை, பெரும்பாலும் கவனிக்கப்படாத அல்லது எதிர்மறையாக பொதுபுத்தியில் விளங்கிக்கொள்ளப்படும் தன்மையின் அடிப்படையாக இருக்கும் அழகை விவரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. உதாரணமாக ‘வெண்ணிலை’ சிறுகதை. நண்பர்கள் சிலர் சினிமாவிற்கு மோட்டார் சைக்கிளில், மருத்துவமனை வாசல் வழியாகச் செல்கிறார்கள். ‘சிக்னல்’-ல் கடந்து செல்லும்போது, ஒரு பெண் இவர்களைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனிக்கிறார்கள். அந்தப்பெண் விபச்சாரியாக இருப்பாளோ, சினிமாவுக்குச் செல்லாமல் அவளை அழைத்துக்கொண்டு சுற்றலாமா என்னும் ரீதியில் இருவரும் பேசியவாறு தியேட்டருக்கும் சென்று சேர்ந்து விடுகிறார்கள். அந்தப் பெண், அவர்களுக்குத் தெரிந்தவள்தான் என்பதும் பின்னர் நினைவுக்கு வருகிறது. எதிர்பார்த்துச் சென்ற சினிமா மாற்றப்பட்டு விட்டதால், அதே வழியில் திரும்பி வருகிறார்கள். அந்தப்பெண் இன்னும் அங்கு நிற்கிறாள். இவர்களைக் கண்டதும், ஏதோ கேட்பதைப்போல பார்க்கிறாள். இவர்கள் சென்று விசாரிக்கும்போதுதான் அவள் இருக்கும் இக்கட்டு புரிந்து, அவளுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறார்கள். ஒரு செயலின் பின்னால் இருக்கும் நோக்கம் அறியப்படாமல் இருக்கும்வரை, அந்தச் செயல் மற்றவர் எண்ணங்களை எவ்வாறு அலைக்கழிக்கிறது, செயலின் பின் இருக்கும் உண்மை வெளிப்படும்போது, அது எவ்வாறு மற்றவர்களைத் தாக்குகிறது என்பது, கதையின் விவரிப்பில் இன்னும் அழகாக வாசகர்களைத் தொடுகிறது. அந்தத் தொடுதல் நிகழ்ந்தால், எண்ணங்களை உண்மையிலிருந்து பிரித்துப் பார்ப்பது சாத்தியமாகலாம்.

‘வெண்ணிலை’ தொகுதியில் வரும் ‘சந்தர்ப்பம்’ சிறுகதையை, அதைப் படிக்கும்போது இருந்த மனநிலை என்னை ரசிக்க வைத்தது. பள்ளி இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், தங்கள் வகுப்புத்தோழனின் அக்கா திருமணத்துக்காக பக்கத்து ஊருக்குச் சென்று, ஒரு இரவு அங்கு தங்குகிறார்கள். அங்கிருக்கும் நேரம் முழுவதும், அந்த வயதுக்கேயான கொண்டாட்டங்களை நிகழ்த்துகிறார்கள். அவர்களில் ஒருவன் கதிரேசன். அவன் எல்லா எல்லைமீறல்களிலிருந்தும் ஒதுங்கியிருப்பதால் ‘பிள்ளைப்பூச்சி’ எனப்பெயர்பெற்றவன். கொண்டாட்டங்களை முடித்துவிட்டு, அடுத்தநாள் வீடு திரும்புகிறார்கள். கதிரேசனும் இன்னொருவனும் தவிர அனைவரும் வழியில் இறங்கிச் சென்று விடுகின்றனர். அவர்கள் இருவரும் பஸ்நிலையத்தில் இறங்கிச் செல்லும்போது, ஒரு இளைஞன் பெண் ஒருத்தியை மானபங்கப்படுத்துகிறான். கூட்டம் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறது. கொதிக்கும் ஒரு சிலரும் அவன் தன் கையில் வைத்திருக்கும், ஆயுதத்தைக் கண்டு பயந்து ஒதுங்குகிறார்கள். கதிரேசன் எதிர்பாராத ஒரு தருணத்தில், ஏதோ ஒரு தூண்டுதலில் பாய்ந்து அந்த இளைஞனை வீழ்த்துகிறான். அவன் நண்பனும் அவனுக்கு உதவுகிறான். அனைத்தும் முடிந்து விடுகிறது. ஆனால் அவன் இயல்பான பயம் மீண்டும் அவனிடம் ஒட்டிக்கொள்கிறது. தங்களை வீரர்களாக வரித்துக் கொள்பவர்கள், வீரம் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் அதை ஒளித்து வைத்து விடுகிறார்கள். ஆனால் இயல்பிலேயே பயத்துடன் இருப்பவன், தேவையான நேரத்தில் பயத்தை மறந்து, வாழ்வின் தேவைக்கு தன்னை ஒப்புக் கொடுக்கிறான்.

என் வாசிப்பும், ரசனையின் விரிவும் எல்லைக்குட்பட்டது.  அந்த எல்லைக்குள் அடைந்த வாசிப்பனுபவம், என்னளவில் குறிப்பிடத்தக்கதாகவே இருந்தது. என் ரசனை பெரும்பாலும் புறச்செயல்களை விட அக இயக்கங்களைப் புரிந்து கொள்ளும் நாட்டம் கொண்டதாக இருக்கும். அந்த வகையில் காணும்போது இவ்வாசிப்பு ஒரு முழுமையான அனுபவமாக இருந்தது என்றுதான் கூறவேண்டும். பெரும்பாலான கதைத்தருணங்கள் புற இயக்கங்களாக இருந்தாலும் அவற்றுக்குக் காரணமாக இருந்திருக்கும் எண்ண ஓட்டங்களை கற்பனை செய்வது ஒரு இனிய அனுபவமாகவே இருந்தது.

நீலக்குதிரை (கவிதை) – காஸ்மிக் தூசி

  காஸ்மிக் தூசி

பல்லில்லாத பாடகி
பொக்கை வாய் திறந்து
பற்ற வைக்கிறாள் நெருப்பை.
குரல்வளையின்
நரம்பு முடிச்சுகளில் மின்சாரம்.
அவளின்
பாதி கருகிய நாவில்
பறந்து வருகின்றன
தீப்பொறிகள்

தானாகவே
இயைந்து கொள்கிறது முகம்.
சூரியன் சுட்டெரித்ததில்
மேலும் கருகிய கருந்தோல்
முகத்தில் நீலம் பாரிக்க
கஞ்சிராவை அறைந்து அடிக்கிறான்
வாசிப்பவன்.

சற்றும்
சுருதியற்ற தாபத்துடன்
பாடலில் இணைந்து கொள்கிறான்
அம்மைத்தழும்புகள் நிறைந்த
ஒன்று விட்ட சகோதரன்.
தந்தி கொண்ட கருவியின்மீது
மேலும் கீழுமாய் கரகரத்து
கவனமில்லாமல்
எதிரொலிக்கிறது பாட்டு.
இசை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்,
கடவுளின் சொந்தக் குழந்தைகள்.

இதைப்போன்ற ஒரு
புனிதகேளிக்கையை –
தன் வீட்டில் வைத்து
ஏற்பாடு செய்யுமளவுக்கு
நல்லவரான பூசாரியிடம்
பேச்சுக்கொடுத்து,
பாடியவர்கள்
நீலக்குதிரை என்றார்களே,
உங்கள் சுவரில்
இருக்கும் படத்தில்
குதிரை வெள்ளையாக இருப்பது
எங்ஙனம்? என்றால்,

வாயின்
இடமிருந்து வலதுக்கு
பாக்குத்துண்டை
மாற்றிக்கொண்டு.
எனக்கு நீலமாகத்தான் தெரிகிறது
என்கிறார் பூசாரி.
புகழ்பெற்ற ஓவியர்
வரைய விரும்பும்
நீல வண்ணத்தின் ஒருநிறத்தை,
புனிதவிலங்கின்
வெள்ளை நிற
அடிவயிற்றில்,
பாக்குவெட்டியால்
தொட்டுக்காட்டி..
கஞ்சிரா
தன் நெஞ்சில்
அடித்துக்கொள்ள ஆரம்பிக்கிறது.

oOo

(“The Blue Horse” என்ற அருண் கொலாட்கர் கவிதை தமிழாக்கம்)

ஒளிப்பட உதவி – விக்கிமீடியா

பூந்தொட்டி நம் உறவின் படிமம் (புனைவு) – எமில் ஒஸ்ட்ரோஸ்கி

(Wordriot என்ற தளத்தில் Emil Ostrovski எழுதிய “His Vase is a Metaphor for Our Relationship” என்ற குறுங்கதையின் தமிழாக்கம்)

நாங்கள் ஒரு மாதம் போல் இணைந்து வாழ்ந்து கொண்டிருந்தோம். அப்போதுதான் அவன் ஒரு பூந்தொட்டியை வீட்டுக்கு கொண்டு வருகிறான். எனக்கு அந்தப் பூந்தொட்டி பிடித்திருக்கிறதா என்று கேட்கிறான். “தெரியவில்லை,” என்று சொல்கிறேன்.

“தெரியவில்லை என்றால் என்ன அர்த்தம்? இது ஒரு பூந்தொட்டி”

“இது பூந்தொட்டி என்று எனக்குத் தெரியும்”.

“உனக்கு பூந்தொட்டிகளைப் பிடிக்காதா? உனக்குப் பிடிக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்… இது.- இது உன்னை எனக்கு நினைவுபடுத்தியது…” (more…)

ஞானத்தெருநாய் (கவிதை)

சோழகக்கொண்டல்

 

வெளிர்க்காவி நிறத்தில்
வற்றிய வயிறும்
ஒடுங்கி ஒளிரும் கண்களுமாய்
குத்துக்கால் ஆசனத்தில்
மானுடத்தை நோட்டமிட்டபடி
மோனத்தில் வீற்றிருக்கிறது
ஞானத்தெருநாய்

திறந்த வானின்கீழ்
திசையெங்கும் வீடென்றலைந்தும்
தன் எல்லைவரை மட்டுமே
அருள்பாலித்து மீளும்
சிறுநீர்க்குறிச் சித்தன்

கயமையை கண்டவிடத்து
காலபைரவன் ஆகிவிடக்கூடும் இருந்தும்
கைப்பிடிச் சோற்றுக்கே
காவல்தெய்வமாகிவிடும்
தனிப்பெருங்கருணை இந்த
அருட்பெருஞ்சோதி

பால்குடி மறக்கும்முன்பே
பந்தம் அறுபட்ட பிக்கு
ஏந்தி அலைவதெல்லாம்
எச்சில் பொங்கி வழியும் ஒரு
யாக குண்டம் மட்டுமே

அதனுள் அவியிடும்
அருகதையில்லாதவர்
இல்லங்களுக்கு முன்னாலும்
வந்து நிற்பான்
இரக்கத்தின் கடைசி பருக்கையை
எதிர்பார்த்து

விரட்டும் கைகளையும்
விருந்திடும் கைகளையும்
விண்ணே அறியும்படி பார்க்கும் முகத்தில்
என்றுமே தரிசனமாவது ஒரு
நெடுந்தவத்தின் நிச்சலனம் மட்டுமே.

ஓம் ஓம் ஓம்.