பீட்டர் பொங்கல்

அகத்துக்கு நெருக்கமான வடிவம் – டோர்தா நோர்ஸ்

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் டேனிஷ் சகா ஒருவர், நான் நல்ல சிறுகதை எழுத்தாளராக வருவேன் என்று தான் நினைப்பதாகச் சொன்னபோது, அதை மறுத்து தலையசைத்தேன்- அதெல்லாம் இல்லை. ஆனால் அவர் தான் சொன்னதை மீண்டும் வலியுறுத்தினார். நான் பேசும் விதத்தில் ஒரு துல்லியம் இருக்கிறது, ஆணித்தரமாகப் பேசுகிறேன், இவை சிறுகதை வடிவத்துக்கு கச்சிதமாகப் பொருந்தக்கூடும். நான் திரும்பவும் சொன்னேன்: அதெல்லாம் இல்லை.
 
அச்சமும் அனுபவமின்மையும்தான் என் மறுப்புக்கான காரணங்கள் என்று நினைக்கிறேன். எனக்கு எழுத்துத் திறமை போதாது என்று அஞ்சினேன், எல்லாவற்றையும்விட சிறுகதை வடிவம்தான் மிகக் கடினமானது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஏன்? சிறுகதையில் பிழை செய்ய இடமில்லை. நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்ற விஷயத்தில் ஒவ்வொரு நொடியும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கிட்டத்தட்ட ஒவ்வொரு வாக்கியமும் பாத்திரப்படைப்புக்கு உதவக்கூடிய, ஒரு கிராமத்தைக் கொளுத்தக்கூடிய, ஆற்றல் கொண்டதாக இருக்க வேண்டும்- இதை எல்லாம் சிரமம் தெரியாத வகையில் செய்ய வேண்டும். துல்லியமாய் எழுதக்கூடிய திறமை வாய்க்கப்பெற்ற ஒரு சில எழுத்தாளர்களால் மட்டுமே இதைச் சாதிக்க முடிந்திருக்கிறது, இதில் தோற்றுப் போவது குறித்து எனக்கு அச்சம் இருந்தது.

(more…)

“இன்று எழுதப்படுவது இலக்கியம் அல்ல, பொழுதுபோக்கு மட்டும்தான் இருக்கிறது”” – மரியோ வர்காஸ் லோசா நேர்முகம் – டிம் மார்டின்

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பெருவிய எழுத்தாளர் மரியோ வர்காஸ் லோசா தன் 78வது வயதில் நடிக்கத் துவங்கியிருக்கிறார். நடிகர் லோசா? “இல்லை, இல்லை, இல்லை”, என்று சந்தோஷமாகச் சிரிக்கிறார் அவர். நைட்ஸ்பிரிட்ஜில் வாடகைக்கு எடுத்துள்ள அபார்ட்மெண்டில் உள்ள சோபாவில் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தபடி அமர்ந்திருக்கிறார் லோசா. “எனது நடிப்புத் தொழில் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் என்னவொரு அருமையான, செறிவான அனுபவம்- வாழ்க்கையில் நான் இந்த அளவுக்கு பயந்ததே கிடையாது,” என்று சிரிக்கிறார்.
 
அவரது சிரிப்புதான் எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறது: ஆனந்தம் நிறைந்த, அடக்க மாட்டாத, அறையை நிறைக்கும் ஓசை, மூட்டம் போட்டிருந்த வசந்த கால மதியத்தில் அவரைச் சந்தித்து பல நாட்கள் சென்றபின் இந்த நேர்முகத்தின் பதிவைக் கேட்கும்போது அடக்கமாட்டாமல் நான் சிரித்துக் கொண்டிருக்கிறேன். 

(more…)

கலங்கிய நதி- வர்லாம் ஷாலமோவின் கொலிமா கதைகள்

கார்டியன் இதழில் முன்னோடிச் சிறுகதைகள் குறித்து ஒரு தொடர் வெளியிடுகிறார்கள். அந்த வரிசையில் வர்லாம்  சிறுகதைகள் குறித்து கிரிஸ் பவர் எழுதிய பகுதி இது.
“நான் இலக்கியத்தை வெறுக்கிறேன்,” என்று 1965ஆம் ஆண்டு கடிதம் ஒன்றில் எழுதினார் வர்லாம் ஷாலமோவ். “நான் என் வாழ்க்கை அனுபவங்களை எழுதுவதில்லை; நான் சிறுகதைகளும் எழுதுவதில்லை. நான் சிறுகதை எழுதுவதை, இலக்கியமாய் இருக்கக்கூடியதை எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்கிறேன்”. ஷாலமோவ்வின் தயக்கங்கள் இவ்வாறு இருப்பினும், கொலிமா கதைகள் (Kolyma Tales) என்ற அவரது சிறுகதைத் தொகுப்பு, குலாக் அனுபவத்தில் உருவான மிகச் சிறந்த எழுத்துகளில் சிலவற்றைக் கொண்டிருக்கிறது.

(more…)

அடில் ஜுஸ்ஸாவாலா – இங்கிருத்தல் 3

பீட்டர் பொங்கல்

(அடில் ஜுஸ்ஸாவாலாவின் கட்டுரைத் தொகுப்பான Maps for a Mortal Moon என்ற நூலை முன்வைத்து அர்விந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா காரவன் பத்திரிகையில் எழுதிய  Being Here என்ற கட்டுரையின் தமிழாக்கம்)

அடில் ஜுஸ்ஸாவாலா – இங்கிருத்தல் | 1 | 2 |

இத்தனை ஆண்டுகாலமாக பராக்கு பார்ப்பவர் என்று பம்பாயில் அருண் கொலாட்கர் ஒருவர்தான் இருந்தார் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். அவர் கால கோடாவை நமக்காகக் கவிதையாக்கினார். அதன் கட்டிடங்கள், தெருக்கள், மக்கள், ரெஸ்டாரண்ட்டுகள், கலைக்கூடங்கள், தெரு நாய்கள், பூனைகள், காகங்களை மறக்க முடியாத உயிர்ப்புடன் சித்தரித்தார். மேப்ஸ் பார் எ மார்டல் மூனின் ஆச்சரியங்களில் ஒன்று, ஜுஸ்ஸாவாலாவில் பம்பாய் இன்னொரு சோம்பேறியைப பெற்றிருக்கிறது என்பதுதான், இந்நகரத்தின் தெருக்கள் அளிக்கக்கூடியது எதுவாயிருந்தாலும் அதை எடுத்துக் கொள்ளக்கூடிய இன்னொருத்தர் இங்கு இருந்திருக்கிறார். சில சமயம், மழைக்காலப் பருவம் போன்றவொன்றில், அது தரக்கூடிய அனைத்தும் மகிழ்விப்பதாக இருக்காது. ஜுஸ்ஸாவாலாவின் பராக்கு பார்வை கொலாட்கரின் பார்வையைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது; மேலும், இங்கே உள்ளது போல், அவரது ஊடகமான உரைநடையும், மாறுபட்ட ஒன்றே. இந்த இரண்டும்- பராக்கு பார்வையும் ஊடகமும், ஒன்றோடொன்று தொடர்புடையவை. (more…)

காலத்தின் கடைக்கோடியில் தோட்டமும் ஒரு கிழவனும்

(மியா கோடோவின் சிறுகதையை போர்ச்சுகீசிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர் டேவிட் ப்ரூக்’ஷா)

டோனா பெர்டா தோட்டத்தில் ஒரு பெஞ்ச் இருக்கிறது. அது ஒன்றுதான் மிச்சம். பிற அனைத்தையும் உடைத்து, விறகாகப் பயன்படுத்திக் கொள்ள ஒற்றை பலகைகளாக்கி கட்டி வைத்திருந்தார்கள். மிச்சமிருந்த இந்த பெஞ்சில் ஒரு கிழவன் வசிக்கிறான். ஒவ்வொரு இரவும், ஆசனமும் மனிதனும், மரமும் சதையும், அணைத்துப் படுத்துக் கொள்வார்கள். கிழவனின் தோல் வரியோடிப் போயிருக்கிறது என்று சொல்வார்கள். அவனது புறக்கூட்டில் பலகைகளின் வடிவம் தன் தடத்தைப பதித்திருக்கிறது. பெரியவரை விளாடிமிரோ என்று பெயர் வைத்து அழைத்தார்கள். அவனது தனிமையை உரசிக் கொண்டு அந்த வழியாகச் செல்லும் தெருவின் பெயர் அது- விளாடிமிர் லெனின் அவென்யூ.

அந்த பெஞ்சை அப்புறப்படுத்தப் போகிறார்கள் என்று இன்று சொன்னார்கள். அந்த இடத்தில் ஒரு வங்கியின் புதுக்கிளை அமைக்கப்போகிறார்கள். இந்தச் செய்தியைக் கேட்டதும் நிலைகுலைந்து போனேன்: என் நண்பனுக்கு இருந்த ஒரே உலகம் இந்தச் சிறு தோட்டம்தான், அவனது இறுதி புகலிடம் இது. விளாடிமிரோவைப் போய் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இந்தப் பயணம் என் இதயத்துக்கு மிக நெருக்கமான ஒன்று.

– வருத்தமா? நான் வருத்தமாக இருப்பதாக யார் சொன்னது?

என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை. இந்தச் செய்தி அவனுக்கு மிகப்பெரிய ஆனந்தமாய் இருக்கிறது. ஒரு வங்கிக் கிளை, நிதிநிறுவனங்களில் ஒன்று, காத்திரமான, கான்கிரீட் கட்டிடம்- ஒரு மரத்தின் கிளையைவிட அதன் மதிப்பு அதிகம். அது எவ்வளவு பெரிதாக இருக்கப் போகிறது என்பதை அவனிடம் சொல்லி விட்டார்கள், அவனும் அவனது வளர்ப்புப் பிராணியும் தங்குவதற்கு நிறைய இடம் இருக்கும். யாருக்குத் தெரியும்,அவனுக்கு அங்கே வேலை கிடைத்தாலும் கிடைக்கும். சுற்றிலும் இருக்கும் மலர்ப் பதியன்களைப் பார்த்துக்கொள்ளும் வேலையாகத்தான் இருக்கட்டும், அதனால் ஒன்றுமில்லை. எனவே, கிளைகள் நிறைந்த தோட்டத்திலிருந்து, தோட்டங்கள் நிறைந்த கிளைக்குச் செல்லப் போகிறான். .

– கிளைவிட்டுக் கிளைக்குப் போகிறேன்

அவனது சிரிப்பு சோகமாக இருந்தது, உலர்ந்த சிரிப்பு.

இன்னும் சிறிது நேரத்தில் இருட்டி விடும். இரவானதும், விளாடிமிரோ சாராயத்தில் மூழ்குவான், பாட்டில்களில் மிஞ்சியிருயிருக்கும் வண்டல்களையும் விட மாட்டான். போதை தலைக்கேறியதும், அவன் இரவைக் கடந்து செல்வான், ஒரு நண்டு போல், குறுக்காக. சாலையின் மறுபுறத்தில் வேசிகள் நிற்கின்றனர். ஆம், வேசிகள் என்று அவன் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறான். அவர்கள் அனைவரையும் அவன் பெயர் சொல்லி அழைக்கிறான். வாடிக்கையாளர்கள் இல்லாதபோது அவர்கள் தோட்டத்துக்குள் வந்து, அவனருகில் பெஞ்சில் அமர்கின்றனர். விளாடிமிரோ தனது சாகசக் கதைகளை அவர்களிடம் சொல்கிறான், அவர்கள் அவனது அபத்தங்களைத் தாலாட்டாய் எடுத்துக் கொள்கிறார்கள். சில சமயம், இந்தப் பெண்கள் இரவில் சத்தம் போட்டு அலறுவதை கேட்டுக் கொண்டிருக்கிறான் யாரோ அவர்களை அடிக்கிறார்கள். கையாலாகதவனாய், முகத்தைத் தன் கரங்களில் புதைத்துக் கொள்கிறான், உதவிக்கு அழைக்கும் அவர்களின் குரல்களுக்கு அவனால் செவி சாய்க்க முடியாமல், கடவுளைக் குற்றம் சாட்டுகிறான்.

– ஆண்டவன் அளவற்ற கருணை கொண்டவன், யாரையும் இப்போதெல்லாம் அவன் தண்டிப்பதில்லை.

அழைத்துப் பேசிக் கொண்டிருக்கும் அளவு கடவுளுக்கு நெருக்கமானவன் விளாடிமிரோ. ஆண்டவனுடன் அவன் இப்படி வம்படித்துக் கொண்டிருப்பது எனக்கு வியப்பாக இருந்தது. விளாடிமிரோ ஒரு காலத்தில் ஆண்டவனின் மிகத் தீவிரமான பக்தனாக இருந்தான். ஆனால், இதற்கும் அந்தக் கிழவன் பதில் வைத்திருக்கிறான்: வயதாக வயதாக புனிதமான விஷயங்களில் நாம் சுதந்திரம் எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கிறோம். நம் அச்சத்தை வெற்றி கொண்டு விடுவதால்தான் இப்படி. நமக்கு எவ்வளவு தெரியுமோ, அவ்வளவு அச்சம் குறையும் என்பதுதான் விஷயமா? தெரியும் என்றோ நம்புகிறேன் என்றோ எதுவும் அவனால் சொல்ல முடியாது. சில சமயம் அவனுக்கே சந்தேகமாய்தான் இருக்கிறது.

– கடவுள் நாத்திகராகி விட்டாரா?

கிழவன் இனி வாழ்வில் பயப்பட வேண்டியதில்லை, என்று விலக்கு பெற்று விட்டானா? இப்படி தனியாக இருக்கிறான், தனக்கென்று சொல்லிக் கொள்ள வீடில்லை, ஒழுங்கான ஒரு வீடில்லை. இதைச் சொன்னால் அவன் எதிர்க்கேள்வி கேட்கிறான்:

– ஒழுங்கான ஒரு வீடா? என்னைவிட ஒழுங்கான வீடு வேறு யாருக்காவது இருக்கிறதா?

சில சமயம், காய்ச்சலில், மரணம் தனக்கு மிக அருகில் இருப்பதை அவன் உணர்கிறான், அது அவனைச் சுற்றி வந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் விளாடிமிரோ சில சாமர்த்தியமான காரியங்களைச் செய்யக்கூடியவன், தன்னை அழைத்துப் போக வந்தவனுக்குப் போக்கு காட்டிவிடுகிறான். பல்லெல்லாம் கிட்டிக்கொண்டிருக்கும்போதும், கண்கள் காய்ச்சலில் அனலாய் ஜொலிக்கும்போதும், அவன் பாடுகிறான். தான் ஒரு பெண் என்று பாவித்துக் கொண்டு நடுங்கும் குரலில் பாடுகிறான். பெண்கள், சாவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள், என்று சொல்கிறான்.

– சாவுக்கு பாட்டு கேட்க பிடிக்கும். என்னைப் பற்றி யோசிப்பதை விட்டுவிட்டு ஆடுகிறான்.

இவ்வாறாகத்தான் வாழ்க்கை போகிறது, ஒளிந்து விளையாடுவது போல. ஆனால் ஒரு நாள், சாவு அவனை முந்திக் கொண்டு முதலில் பாடத் துவங்கி விடுகிறது. ஆனால், அவனை அசைப்பதானால் சாவு தன் பாடலை நிறுத்தக்கூடாது. விளாடிமிரோ தன் பெஞ்சை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறான். இன்னும் சாகும் வயசு தனக்கு வரவில்லை என்று வலியுறுத்துகிறான். முதியவர்கள் தாங்கள் கடந்து வந்த ஆண்டுகளைச் சென்று காண்பதில்லை.

இதற்கு இடைப்பட்ட காலத்தில், விளாடிமிரோ கொஞ்சம் உறங்குகிறான், பூனைத்தூக்கம். அலாரம் அடிக்கும் அவனது கடிகாரம் ஒரு தவளை. தன் காலில் ஒரு தவளையைக் கட்டிக் கொண்டு தூங்குகிறான். மிகத் தீவிரமான தொனியில் அவன் இதற்கு விளக்கம் சொல்கிறான்: அது ஓடிப் போய்விடாதபடிக்குதான் அதை கட்டி வைத்திருக்கிறான்.

– தன் இதயத்தில் தண்ணீர் புக அனுமதித்துவிட்ட காரணத்தால் தவளை பறக்க வேண்டுமென்பதில்லை.

இப்போது எல்லாம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது,. தோட்டத்தை இடிக்கப் போகிறார்கள். ஊர் இன்னும் நகரமயமாகப் போகிறது, அதன் மனிதம் இன்னும் குறையப்போகிறது. அதனால்தான் நான் கிழவனிப் பார்க்கப் போகிறேன். நான் ஏன் அவனைப் பார்க்கச் செல்கிறேனோ, அதே காரணத்துக்காகதான் திரும்பி வருகிறேன்.

– இந்த வங்கி விவகாரம் பற்றிச் சொல். நீ உண்மையாகவே சந்தோஷமாக இருக்கிறாயா?

விளாடிமிரோ பதில் சொல்ல அவகாசம் எடுத்துக் கொள்கிறான். தான் கண்டடையக்கூடிய ஆகச்சிறந்த உண்மையைத் தேடிக் கொண்டிருக்கிறான். அவன் முகத்தில் இருக்கும் சிரிப்பு மறைகிறது.

– நீ சொல்வது உண்மைதான். நான் கலகலப்பாய் இருப்பது ஒரு நாடகம்.

– நீ ஏன் அப்படி நடிக்க வேண்டும்?

– இறந்து போன என் மனைவி பற்றி உனக்குச் சொல்லியிருக்கிறேனா?

இல்லை, என்று தலையசைக்கிறேன். துயரம் நிறைந்த, வெகு காலம் நோய்மையுற்றிந்த தனது மனைவியின் கதையைச் சொல்கிறான். தீவிரமற்ற, சீழ்பிடித்த சாவு. அவள் முன் நாளெல்லாம் கோமாளித்தனமான சேட்டைகள் செய்வான், சன்னமாய் திறந்து கொண்ட இருண்மையை மிரட்டி விரட்ட நகைச்சுவை துணுக்குகள் சொல்வான். அந்தப் பெண் சிரிப்பாள், யாருக்குத் தெரியும், அவனது இரக்க குணத்துக்காக அல்லாமல், அவன் மீது பரிதாபப்பட்டு அவள் சிரித்திருக்கலாம். இரவில், அவள் உறங்கிக் கொண்டிருக்கும்போதுதான், அவன் அழுவான், வேதனையில் பித்தாகி.

– இப்போதும் அப்படிதான்: இந்தத் தோட்டம் உறங்கும்போதுதான் நான் அழுகிறேன்.

என் கரம் அவன் தோளை வளைத்து உரையாடுகிறது. விடைபிரியும் காலம் வந்துவிட்டது. கையறு நிலை குறித்து இன்னும் ஆழமான புரிதலுடன் எனக்கு நினைவு திரும்புகிறது. எனக்குப் பின்னால், நான் விளாடிமிரோவை விட்டுச் செல்கிறேன், அவனோடு இந்தச் சாலையையும், ஒற்றை பெஞ்ச் கொண்ட தோட்டத்தையும். அந்தத் தோட்டத்தின் கடைசி பெஞ்ச் அது.

நன்றி – Words Without Borders