பீட்டர் பொங்கல்

நினைவு முள் – ஜிஃப்ரி ஹாசன் கவிதை: ஒரு குறிப்பு

பீட்டர் பொங்கல்

hand-of-memory

பதாகையில் கவிதை எழுதுபவர்களில் றியாஸ் குரானா, ஜிஃரி ஹாசன், மஜீஸ் மூவருக்கும் ஒரு தனி மொழி அமைந்திருப்பது தன்னிகழ்வா அல்லது அப்படிப்பட்ட ஒரு கவிதை மரபின் வழியில் இவர்கள் எழுதுகிறார்களா என்று தெரியவில்லை. மூவருக்கும் பொதுவாய் ஒரு தனி மொழி என்று சொல்வதில் ஒரு முரண்பாடு உள்ளது போல் தொனிக்கலாம். உண்மையில், இந்த மூவரின் கவிதைகளில் பலவும் ஒரு சிறுகதைக்குரிய இயல்பு கொண்டிருக்கின்றன.  ஒரு சில கவிதைகளை சிறுகதைகளாகவும் வளர்த்தெடுக்கலாம். ஆனால் இவர்கள் மூவரும் ஒரே மாதிரி எழுதுவதில்லை. றியாஸின் கவிதைகளில் உள்ள படிமத்தன்மை, நேர்க்கோட்டு மொழிதலின்மை பிற இருவரின் கவிதைகளிலும் இல்லை. ஜிஃப்ரி ஹாசனின் கவிதைகளில் உள்ள துயரம் நேரடியானது, அதைப் பிறரிடம் பார்க்க முடியவில்லை. மஜீஸ் வெகுச் சில கவிதைகளே பதாகையில் எழுதியிருந்தாலும் அவர் எழுதுவதிலுள்ள நுட்பமான நகைச்சுவை மிகவும் மதிப்பு மிக்கது என்று தோன்றுகிறது, அது இயல்பாய் வெளிப்படுவதாலும், அதை அதிகம் காண முடியாமையாலும்.

இவ்வாரம் ஜிஃப்ரி ஹாசன் கவிதை – நினைவுமுள்

ஜிஃப்ரி ஹாசன் பதாகையில் எழுதிய கவிதைகளில் உள்ள ஆறுதலற்ற வலி இதில் இல்லை,  ஒரு நேர்மறைத்தன்மை கொண்ட காரணத்தால் அவர் எழுதியதில் வித்தியாசமான கவிதை.  அமைதியை நாடும் வகையில், துயரை விடுபடும் வகையில் எழுதியிருக்கிறார். வழக்கமாக, துயரில் மேலும் மேலும் ஆழ்த்துவதாகவே அவர் எழுதி வருகிறார். அவர் கவிதைகளில் ஏதோ ஓர் இடத்தில் துயர் மேலோங்கி பிறவனைத்தையும் விழுங்கி விடுகிறது.

இந்தக் கவிதையில் உள்ள ‘பாதைதோறும் நினைவுகள் குடை விரித்தன’  என்பதில் உள்ள எளிய கவித்துவம் திரைப்பாடல்களுக்கு வெளியே மதிப்பிழந்து விட்டது என்று நினைக்கிறேன். அதில் ஒரு கற்பனைத்தன்மை இருக்கிறது. பாதையெங்கும் நினைவுகளின் நிழல் என் மேல் படிந்தது என்பதை இவ்வாறு உருவகப்படுத்தியிருப்பது அழகாக இருந்தாலும், இந்தக் கவிதை ஒரு பயணத்தைப் பற்றிய கவிதை என்பதால் அதற்கு இங்கு இடமில்லை என்று சொல்ல முடியாது.

எந்த இடத்தில் பிரிந்தோமோ/ அந்த இடத்தில் சேர்வோம்

என்பதைத் தொடர்ந்து அந்த வரி வருகிறது, அதன் பின் வரும் வரிகள்-

உங்கள் முகத்தில்/ நான் ஒரு களங்கமற்ற சிரிப்பையும்/ உங்கள் இதயங்களில்/ ஒரு நல்லெண்ணத்தையுமே வேண்டுகிறேன்/’

என்று செல்கின்றன.

முதலில் பிரிவு நேர்ந்த இடத்தில், அதற்கான காரணங்கள் உள்ள இடத்தில், ஒன்று சேர வேண்டும் என்ற விருப்பம். அடுத்து, பயணம், பாதை எங்கும் நினைவுகள். இவை பிரிதலின் நினைவுகள் என்பதால், ஒரு சிரிப்பும் நல்லெண்ணமும் மட்டும் போதும் என்ற இறைஞ்சுதல். இதையடுத்து, இதுவரை சொல்லப்பட்டதே மீண்டும் சொல்லப்படுகிறது-

நம் பிரிவு நிகழ்ந்த இடங்களை/ நம் சேரிடங்களாக்கி/ களங்கமற்ற ஒரு புன்னைகையை நடுவோம்

இதைக் கற்பனை கலந்த ஒரு நம்பிக்கை, எதிர்பார்ப்பு என்று கொள்ளலாம். இலக்கியத்தில் கற்பனையின் இடம் என்ன என்பதை இந்தக் கவிதை உணர்த்துகிறது. அவநம்பிக்கைகளை கற்பனை கொண்டுதான் கடந்தாக வேண்டும். எனவே புன்னகை விதைக்கப்படுகிறது (புன்னகை  மலர்தலால் நடுவோம் என்றாகும் போல)

இந்தப் புன்னகைக்குப் பின் என்ன நடக்கிறது? இனி, நம் சொற்கள் ஒவ்வொன்றும் நடந்து முடிந்த கதையைச் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. ஒரு புன்னகை நம் சொற்களின் பொருளை மாற்றி விடுகிறது.

நெஞ்சையுறுத்தும் நினைவு முட்களை /உயிர்ப்பற்ற குருட்டு நம்பிக்கைகளை/ ஒரு யுகப் பின்னடைவை/ இப்போது நமது சொற்கள் தாண்டிவிட்டன

இறுதி வரிகள்-

துயர் படிந்த ஒரு காலமும்/ அதன் குரூரக் காயங்களும்/ ஒரு பயணத்தில் கடந்து விடக்கூடியவையே

இப்போது நாம் இது என்ன பயணம் என்று கேட்டுக்கொண்டால், புன்னகையையும் நல்லெண்ணத்தையும் நோக்கிய பயணம் என்று சொல்ல முடியும், இல்லையா? நாம் இந்தப் பயணத்தை மட்டும் மேற்கொள்ள முடிந்தால் கடந்த காலம் இவ்வளவு துயரம் அளிப்பதாகவும், அதன் குரூரங்கள் இவ்வளவு வலி தருவதாகவும் இருக்காது.

இது ஒரு நம்பிக்கைதான். யதார்த்தத்தில் நடக்கும், நடக்காது போகலாம். ஆனால் ஒரு கவிதை என்று வரும்போது, அதில்கூட இது போன்ற நம்பிக்கைகளை வெளிப்படுத்த முடியாது என்றால் எப்படி? நம் அறிவுக்கு எட்டாத விஷயங்களை கற்பனைதான் மெய்ப்பிக்க வேண்டும், இல்லையா?

அதை இந்தக் கவிதை செய்கிறது என்று நினைக்கிறேன். நினைவுமுள் என்ற தலைப்பு முதலில் ஒரு உறுத்தல், வலி என்பது போல் உள்ளது. அதன்பின் கடைசியில் கடிகார முள் போல் அதுவும் இடம் மாறக்கூடியதுதான் என்ற ஒரு நம்பிக்கைக்கு இடம் அளிக்கிறது. நம் துயர நினைவுகள் எப்போதும் ஒரு முள்ளாய் நமக்கு வலிக்க வேண்டியதில்லை, புன்னகையை நோக்கிய ஒரு பயணத்தில் எல்லாம் மாறலாம். நினைவுமுள் துயரிலிருந்து நம்பிக்கைக்கும், கடந்தகாலத்திலிருந்து எதிர்காலத்துக்கும் நகரக்கூடியதுதான்.

ஜிஃப்ரி ஹாசன் கவிதை – நினைவுமுள்

ஒளிப்பட உதவி – cafepress.com

ஏதுமற்று – சில குறிப்புகள்

ஏதுமற்று- சரவணன் அபி

‘மத்திய ஜாவாவின்’ என்று துவங்கும்போதே கவிதையில் ஒரு புதிய குரல் வந்து விடுகிறது. அங்கு சிறிது இடைவெளி கொடுத்து, ‘யோக்யகர்த்தா நகரில்’ என்று அடுத்த வரியைப் படிக்கும்போது, முந்தைய வரிக்கு இணையானதாகவே இதையும் படிக்கிறோம். ஆனால் அடுத்த வரியும், ‘விரைந்து சாயும்’ என்று இரு சொற்கள் மட்டும் கொண்டிருந்தாலும், அதற்கும் ‘முன்மாலைப் பொழுது’ என்ற வரிக்கும் இடையே ‘மழை அந்திகளின்’ என்று வரும்போது நம் வாசிப்பில் ஒரு தடை ஏற்படுகிறது. ‘விரைந்து சாயும் முன்மாலைப் பொழுது’ என்ற இயல்பான சொற்களுக்கு நடுவில் ‘மழை அந்திகளின்’ என்று வரும்போது அது தனித்து நிற்கிறது. நம் மனம் மழை பெய்யும் அந்திப் பொழுதுகளை நினைத்துப் பார்க்க கட்டாயப்படுத்தப்படுகிறது.

அடுத்து, ‘தொலைவில் எரிந்தடங்கும் ஒளியின் முன்’ என்பது இயல்பாக உள்ள வாக்கிய அமைப்பு. ஆனால் ‘தொலைவில் எரிந்தடங்கும்/ ஒளியின் முன்’ என்ற என்ஜாம்ப்மெண்ட், தொலைவில் எரிந்தடங்கும்’ என்ற இடத்தில் நாம் தயங்கி அடுத்த வரிக்கு விரைந்து ‘ஒளியின் முன்’ என்று பொருள் சேர்த்து நிறைவு செய்து கொள்ளச் செய்கிறது. நான்கு சொற்களும் தொடர்ந்து வந்திருந்தால், ஒளியின் மீது அழுத்தம் விழுந்திருக்கும். ஆனால் இரண்டாய் பிரியும்போது ‘எரிந்தடங்கும்’ என்ற சொல் அழுத்தம் பெற்று ஒளியால் துலக்கம் பெருகிறது.

இப்படி ‘எரிந்தடங்கும்’ என்ற சொல் அழுத்தம் பெருவதால்தான், ‘விண்ணைத் தீண்டக் கிளம்பும்/ மூன்று எரிகலன்கள்போல் நிற்கும்’ என்பதில் ‘எரிகலன்களில்’ நம் கவனம் செல்கிறது. பிரம்பனான் கோவிற் சிகரங்கள் நிலையானவை, அதன் கோபுரங்கள் வானுயர்ந்து நிற்பவை என்ற எண்ணத்துக்கு மாறாய், அவை எரிகலன்கள் போல் உயர்ந்து வீழக்கூடியவை என்ற தோற்றம் காண்கிறோம்.

‘விண்ணைத் தீண்டக் கிளம்பும்’ என்பதில் ‘கிளம்பும்’ என்ற இடத்தின் அழுத்தம், ‘ஒளியின் முன்’ என்று தாமதித்துத் தொடர்ந்து, ‘மூன்று எரிகலன்கள்போல் நிற்கும்’ என்பதில் ‘நிற்கும்’ என்ற இடத்தில் அழுத்தம் பெற்று, ‘பிரம்பனான் கோவிற் சிகரங்களை’ என்று தீர்மானமில்லாமல் நின்று, ‘நோக்கி’ என்ற ஒற்றைச் சொல்லில் உடைந்து, ‘மது அருந்திக் கொண்டிருக்கிறேன்’ என்று முடியும்போது, கவிதை பெரும்பாலும் அர்த்தமில்லாமல் உடைக்கப்பட்ட கவிதை வரிகளாய் ஆகிறது. ‘நோக்கி’ என்ற ஒற்றைச் சொல்லால் ஆன வரிக்கு கவிதையில் அதற்குத் தேவையில்லாத அழுத்தம் கிடைக்கிறது.

அதன் பின் வரும், ‘கருமையும் அடர்த்தியும்/ கலந்து சாயும் மழைத்தீற்றலினூடே’ என்பதில் இரண்டு வரிகளுக்குமிடையில் எந்த இசைவும் இல்லை. ஆனால், இதில் கருமையும் அடர்த்தியும் என்ற சொற்கள் துல்லியமான வண்ணங்களை உணர்த்தி, சாயம் என்பதை எதிரொலிக்கும், ‘கலந்து சாயும் மழைத்தீற்றல்’ ஒரு ஓவியத்துக்குரிய நுட்பம் கொண்டிருக்கிறது. இங்கு ஓசையால் கவிதையாகாதபோதும் கற்பனையைக் கிளர்த்துவதால் கவித்துவம் கொள்கிறது. அடுத்து, ‘தெருவின் இரைச்சலைப் பின்விட்டு/ தனித்து அமர்ந்திருக்கும்/ என்னெதிரில் அமர்கிறாள் அவள்’ என்று இயல்பாக இருக்க வேண்டிய வரிகள், ‘மழைத்தீற்றலினூடே/ தெருவின் இரைச்சலைப் பின்விட்டு/ விடுதியின் சாளரத்தில்/ தனித்து அமர்ந்திருக்கும்/ என்னெதிரில் அமர்கிறாள் அவள்’ என்று இருப்பதில் ஒரு துல்லியம் இருக்கிறது. மழைத்தீற்றல், தெருவின் இரைச்சல் எல்லாம் விடுதியின் சாளரப் பின்னணியில் இருக்கின்றன, இந்தத் தனிமையில் துணையாய் அவள் வந்து அமர்கிறாள்.

அதைத் தொடர்ந்து, ‘சிறகை சிலிர்த்து நீர்த்துளிகள்’, ‘உதிர்க்கும் பறவைபோல்’, ‘நீவிக்கொள்கிறாள்’, என்ற மூன்று தனித்தனி வரிகள் ஒரு பெண்ணை நினைக்க வைப்பதில்லை, நம் முன் ஒரு பறவைதான் நிற்கிறது.

அதன் பின் வரும், ‘இந்தியனா என்கிறாள்/ எனக்குத் தெரியும்/ இதையும் இதற்கடுத்த/ எந்த இரு கேள்விகளையும்/ நான் எதிர்பார்க்கலாமென’ என்ற ஸ்டான்ஸாவோ, அதையடுத்து வரும், ‘ஆமோதிக்கும் புன்னகைக்குப் பிறகு/ பிரம்பனான் கோவில் வளாகம் பார்த்தேனா/ என்று வினவுகிறாள்/’ என்பதுவோ கவிதைக்குத் தேவையாகத் தெரியவில்லை.

இது எதுவும் இல்லாமல், ‘மழையின் ஓசை/ ஒரு சுதியேறி சீரான கதியில் பெய்கிறது’ என்று தொடர்ந்திருக்கலாம். இடையூடாய் வரும், ‘பதிலாக அவள் அருந்த/ என்ன வேண்டுமெனக் கேட்கிறேன்’ என்பதைத் தவிர்த்து மௌனத்தில் முடித்திருக்கலாம்:

இரு கோப்பைகள்
நிறைந்தும் குறைந்தும்
மழைச்சாரலில் நனைந்த
புன்னகைகள் கடந்தும்
இருவரும் தத்தம்
கோப்பைகளை ஏந்திக்கொண்டு
கவியும் இருளில்
கரைந்து கொண்டிருக்கிறோம்.

oOo

வாழ்க்கை என்று பார்த்தால் பெரும்பாலான பொழுது அர்த்தமில்லாமலும் முக்கியமில்லாமல் அலுப்பூட்டும் வேலைகளில் கழிந்து கொண்டிருக்கிறது, எதுவும் செய்யாமலும் ஏதோ ஒன்றைச் செய்து கொண்டும் சும்மா இருக்கும் பொழுதுகளைப் பற்றி கதை கவிதைகள் எழுத முடியாது. அசாதாரண கணங்கள், அசாதாரண மனிதர்கள், அசாதாரண காட்சிகள், அசாதாரணச் செயல்களை நம்மாலும் விவரிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அவை மட்டும்தான் கவிதைத் தருணங்கள் என்ற நிலையைக் கடந்து வந்தாயிற்று. எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று இருந்தாலும் அன்றாட வாழ்க்கையில் அர்த்தமுள்ளதை, முக்கியமானதை, அழகானதைத் தேர்ந்தெடுக்கும் செயலாக கவிதை ஆகிறது- உலகும் மனமும் உறைநிலையிலிருந்து அசையும் ஒரு ஆற்றுகைத் தருணம் என்று சொல்லலாம்.

இந்தக் கவிதையில் எதுவெல்லாம் தேவையில்லை, கவிதைக்கு உரியவையாக இல்லை என்று நினைக்கிறோமோ, அதுவெல்லாம் banal என்று சொல்லக்கூடிய விஷயங்கள் (‘so lacking in originality as to be obvious and boring‘). இங்கு எதுவெல்லாம் கவித்துவ மொழியில் வெளிப்படுகிறதோ, அதுவெல்லாம் sublime என்று சொல்லக்கூடியவை (‘elevated or lofty in thought, language, etc‘).

உயர்ந்த கவிதை, உயர்ந்த கதை, உயர்ந்த இலக்கியம் என்று நாம் சொல்வது இந்த ”elevated or lofty‘ என்ற அர்த்தத்தில்தான். சராசரியிலிருந்து அந்த அளவுக்காவது மேலெழும்பி நிற்பதால்தான், அதன் உயரத்துக்கு ஏற்ப, ‘excellence‘, ‘grand‘, ‘outstanding‘ முதலிய வியப்புணர்வுக்கு sublime என்ற சொல் இடம் கொடுக்கிறது. இந்த அர்த்தத்தில் எல்லா கவிதைகளும் சப்லைமாக இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், நம் அனுபவ வாழ்வில் எதுவொன்று மிகச் சாதாரணமாக, செய்வதையே திரும்பத் திரும்பச் செய்வதாக இருக்கிறதோ, அதிலிருந்து உயர்ந்த இலக்கியத்துக்கு உரிய விஷயங்களை கடைந்தெடுக்க வேண்டியதாக இருக்கிறது. அது சில சமயம் சாதாரண விஷயங்களை அசாதாரண வண்ணங்களில் காணச் செய்வதாக இருக்கிறது, சில சமயம் அசாதாரண கணங்கள் நம் சாதாரணத்துவத்தில் காணாமல் போகிய பின்னர் நினைவின் துணையோடு மீட்டெடுக்கப்படுவதாகவும் ஆகிறது.

தொடர்புடைய பதிவு-

ஆற்றுகை – சில குறிப்புகள்

ஆற்றுகை – சில குறிப்புகள்

பீட்டர் பொங்கல்

I

நாமெல்லாம் ஒரு காட்சி அல்லது ஒரு எண்ணம் அல்லது ஒரு உணர்வு என்று ஏதேனும் ஒன்று சிக்கினால் அதைக் கவிதையாக்கப் பார்ப்பவர்கள். கணங்களைப் பகிரும் யுகம் இது. சாமானியர்கள் மொபைலில் போட்டோ பிடித்து போட்டால், கவிஞர்கள் சொற்சிலம்பம் ஆடப் புறப்பட்டு விடுகிறார்கள். நன்றாக எழுதப்பட்டால் இந்த ஸ்நாப்ஷாட்டுகள் ரசிக்கும்படியாகவே உள்ளன.

போட்டோவுக்கும் ஓவியத்துக்கும் என்ன ஒரு வித்தியாசம் என்று யோசித்துப் பார்த்தால் நிகழ்கணத்தை உறையச் செய்வதுதான் புகைப்படத்தின் தனித்தன்மை என்று தோன்றுகிறது- இங்கிருக்கும் புகைப்படம் அதற்கு ஒரு உதாரணம் The Falling Man. இங்கு காலம் உறைந்திருக்கிறது, இல்லையா? இது எத்தனையோ உணர்வுகளையும் எண்ணங்களையும் தூண்டுகிறது.

அது தவிர அழகான புகைப்படங்களும் இருக்கின்றன. பில்டர் சேர்த்தும் சேர்க்காமலும் நாம் பகிரும் புகைப்படங்கள் இப்படிப்பட்டவை, நம் ரசனை குறித்த அறிவிப்புகள். நம்மைப் பொறுத்தவரை இவையும் காலம் உறைந்திருக்கும் கணங்கள். ஆனால் பிறருக்கு வெறும் போட்டோவாக இருக்கலாம் – எல்லாரும்தான் அழகான போட்டோ எடுக்கிறார்கள். ஏன், அதற்கப்புறம் நூறு போட்டோ எடுத்து பகிர்ந்தபின் இது நமக்கும் சாதாரணமாய்ப் போய் விடுகிறது.

முக்கியமான ஒரு காட்சி அல்லது ஒரு எண்ணம் அல்லது ஒரு உணர்வு என்று எதையாவது கவிதையாக எழுதும்போது அது ஒரு ஸ்னாப்ஷாட் என்ற அளவில் அப்போது நமக்கு முக்கியமாக இருக்கலாம். ஆனால் அது போன்ற எத்தனையோ நம்மிடமிருந்தும் பிறரிடமிருந்து எடுத்தடுத்து வரும்போது நமக்கே அதன் கூர்மை மழுங்கிப் போகிறது. அது, நான் அழகாய் இருக்கிறேன், என்று சொல்கிறது. அதற்கு மேல் எதுவும் பேசக்கூடியதாக இல்லை. காரணம், காலம் அதில் உறையவில்லை. புகைப்படம் போலவே இப்படிப்பட்ட கவிதைகளில் காலத்தைக் கைப்பற்றுவதில்தான் இருக்கிறது கலை.

ஸ்ரீதர் நாராயணன் அண்மையில் எழுதிய கவிதை, ஆற்றுகை.

துவக்கத்தில் வருவது ஒவ்வொன்றும் ஒரு கணத்தைக் கைப்பற்றுகிறது.

ஆனால் தொடர்ந்து வரும் வரிகள்தான் கவிதையின் இதயம்.

இனிமையாக ஆரம்பிக்கிறது
இக்கணத்தின் நிலையுறுதி.

எதிர்நோக்கும் தருணங்களின்
அநிச்சயத்தால் கிளர்ச்சியுற்று
ஆற்றுகையின் அடுத்த படியென
அலையும் கடல் நீர்ப்பரப்பின்மீது
கால் பதிக்கிறேன்.

இப்படிப்பட்ட கவிதை ஒவ்வொன்றும் இது போன்ற ஒரு ஆற்றுகையின் துவக்க கணத்தில்தான் நிற்கிறது. அந்தக் கணம் தவறினால் காலம் தப்பி விடுகிறது, பத்தோடு பதினொன்றாகிறது.

அழகல்ல இக்கவிதைகளின் நியாயம் – அநிச்சயத்தின் கிளர்ச்சி. எளிமையாக இருக்கிறதோ, சிக்கலாக இருக்கிறதோ எது எப்படி இருந்தாலும், இந்த ஸ்நாப்ஷாட் கவிதைகளில் உள்ள சொற்களும் படிமங்களும் அர்த்தங்களும் நம் உள்ளத்தில் புரள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு உயிர்ப்பு நிலையில் காலத்தை உறையச் செய்திருப்பதே இக்கவிதையின் வெற்றி.

II

முதல் நான்கு பத்திகள் காட்சி விவரிப்புகள். தராசு முள் சாய்வதற்கு முந்தைய கணத்தைப் போன்ற, ஆற்றலின் சாத்தியங்கள் அத்தனையும் கைகூடி நிற்கும் தருணம்- பல்லவி முடிந்து ஒலிக்கும் கார்வை அடுத்த இடத்துக்குப் போகப் போகிறது. ஜிம்னாஸ்டிக்ஸ் பெண், குறுகிய கட்டைகளில் கைவிரித்து நடக்கிறாள்- அதிலிருந்து தாவிக் குட்டிக்கரணம் அடித்துப் பாயப் போகிறாள். அவநம்பிக்கையுடன் பேசிக் கொண்டிருப்பவர் மனம் மாறும் தருணம். வாண வேடிக்கைகளின் முதல் தீப்பொறி என்று நினைக்கிறேன், இனி அதன் ஒளி வானில் ஒரு சித்திரம் வரையும்.

“கடற்கரை மணலை
குழைத்து எழுப்பும்
சிறு கோபுரம்.”

இதுவரை வந்தது எல்லாம் வெற்றியை நோக்கிய முயற்சிகள் என்றால், இங்கு மட்டும் தோல்வியின் சாயை. கடற்கரை மணலில் எழுப்பும் கோபுரத்தை கடல் நீர் கொள்ளாமல் போனாலும் நாம் கொண்டு போக முடியாது, இல்லையா? ஒரு வியர்த்தச் செயல், இருந்தாலும் இதிலும் ஒரு காரியத்தைச் செய்து முடித்த சந்தோஷம்.

இத்தனைக்கும் அப்புறம்தான்-

“இனிமையாக ஆரம்பிக்கிறது
இக்கணத்தின் நிலையுறுதி.”

நான் துவங்கும் முயற்சிக்கு இது ஒரு இனிமையான ஆரம்பம்தான், இக்கணம் என் மனம் உறுதியாக இருக்கிறது. ஆங்கிலத்தில் Poise என்று ஒரு சொல் உண்டு. ‘balance; equilibrium,‘ என்று ஒரு பொருள். தராசு முள் நிமிர்ந்து நிலையாய் நிற்கிறது. அதே சொல், ‘Poised for growth‘, ‘poised for success‘ என்று ஒரு வழக்காகவும் புழங்குகிறது- ‘ready for something; in the right position and waiting for something,’ என்ற அர்த்தத்தில்.

இனி வருகின்றன இந்த வரிகள்-

“எதிர்நோக்கும் தருணங்களின்
அநிச்சயத்தால் கிளர்ச்சியுற்று
ஆற்றுகையின் அடுத்த படியென
அலையும் கடல் நீர்ப்பரப்பின்மீது
கால் பதிக்கிறேன்.”

தமிழில் ஆற்றுகை என்றால் ஆங்கிலத்தில் performance- adventure sportsகளில் ஈடுபடுபவர்களின் த்ரில் என்ன? உயரத்தில் கட்டப்பட்ட கம்பி அறுபடலாம், நம் படகு காட்டாற்றில் கவிழலாம், கால் பிசகி நாம் கீழே விழலாம்- இந்த ஆபத்து ஒரு கிளர்ச்சியளிக்கிறது, இல்லையா? அந்தக் கிளர்ச்சியே என்னை ஆற்றுகையின் அடுத்த படிக்கும் கொண்டு செல்கிறது-

“அலையும் கடல் நீர்ப்பரப்பின்மீது
கால் பதிக்கிறேன்.”

புதிய ஊர், புதிய உறவு, புதிய வேலை- பழக்கமில்லாத எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்: நீர்ப்பரப்பின் அலைகளைத்தான் நான் அறிகிறேன், அதன் ஆழங்கள் எனக்குத் தெரியாது. ஆனாலும் என் முதல் அடியை இப்போது எடுத்து வைக்கிறேன்.

ஆற்றுகை.

கிரேக்க அவல நாடகங்கள் – மேரி லெஃப்கோவிச்

220px-Sophocles_pushkin

கிரேக்க நாடகங்கள் ஏன் முக்கியமாய் இருக்கின்றன?

பல காரணங்கள்.

கிரேக்க நாடகங்கள் சுவாரசியமாக இருக்கலாம்; அவை நம்மை வேறொரு, வித்தியாசமான உலகுக்குக் கொண்டு செல்லலாம். அவை, அவ்வப்போது, நம்மை நன்றாகச் சிரிக்கவும் வைக்கலாம். ஆனால் முக்கியமான காரணம், பார்வையாளர்களை அவை வாழ்க்கைக்குத் தயார் செய்கின்றன- நாம் விரும்பும் வாழ்க்கைக்கல்ல, உள்ளபடியே உள்ள வாழ்க்கைக்கு. நாம் நினைத்துப் பார்க்கவும் விரும்பாத பிரச்சினைகளை இந்த நாடகங்கள் பேசுகின்றன: நோய்மை, மரணம், குரூரம், மரணத்துக்கும் பேரழிவுக்கும் இட்டுச் செல்லக்கூடிய, தவிர்க்க முடியாத, மோசமான பிழைகளை தன்னம்பிக்கையுடன் இழைக்கும் மானுட இயல்பு. நம்மை அச்சுறுத்தக்கூடிய எந்த ஒரு சாத்தியமும் தவற விடப்படுவதில்லை: திடீர் மரணம், தற்கொலை, மரணப்பிணி, துரோகம், நேசத்துக்குரிய ஒருவர் அல்லது பலரின் இழப்பு.

ஆனால் அவல நாடகங்கள் மானுட துயரின் காரணங்களை விவரிப்பதோடு நின்றுவிடுவதில்லை. மானுடத்தின் மிகப்பெரிய குறைகளுடன், அதன் குறிப்பிடத்தக்க வலிமைகளையும் நாம் காண அவல நாடகங்கள் அனுமதிக்கின்றன: புரிந்துணர்வு, கருணை, உடலின் துன்பம் மற்றும் வறுமையை எதிர்த்து நிற்கும் இயல்பு. துயரிலும் தோல்வியிலும், நண்பர்கள் மட்டுமல்ல, அந்நியர்களும் ஆறுதலும் இரக்கமும் காட்ட வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த நாடகங்கள் எடுத்துரைக்கின்றன.

பண்டைக்கால ஏதனியர்கள் தம் வாழ்வின் நிதர்சன உண்மைகளைப் புரிந்து கொள்ள இந்த நாடகங்கள் உதவின, அவை, இன்று நமக்கும் உதவக்கூடும். துயரையும் வருத்தத்தையும் வெளிப்படுத்த இவை நமக்கான சொற்களை அளிக்கக்கூடும், மானுட அனுபவத்தை நாம் புரிந்து கொள்ள உதவும் சொற்கள் இவை. நாடகத்தின் பின்னுள்ள தொன்மத்தின் கருப்பொருளை அறிந்து கொள்வதால் மட்டும் இதைத் தெரிந்து கொண்டுவிட முடியாது.

ஆம், ஈடிபஸ் தன் தந்தையைக் கொன்று தாயை மணந்தான். ஆனால் சோபோக்ளஸின் ‘அரசன் ஈடிபஸ்‘ தாய்களின் பால் மக்கள் கொள்ளும் காமம் பற்றிய ஃபிராய்டின் கதையல்ல. சோபோக்ளஸின் நாடகத்தில் ஈடிபஸ் தான் என்ன செய்கிறோம் என்பதை அறியாதிருக்கிறான். டெல்ஃபியில் குறி கேட்கும் அவன் தன் விதியை அறிய வந்தபின் தன்னாலான அனைத்தையும் செய்து தனக்கு விதிக்கப்பட்ட முடிவைத் தவிர்க்க முயற்சி செய்கிறான். தான் தவிர்க்க நினைத்த குற்றங்களைத் தன்னையறியாமலே செய்து விட்டதை அவன் உணர்வதன் வியப்பையும் அதிர்ச்சியையும் நாடகம் விவரிக்கிறது. அப்பல்லோவால் தீர்மானிக்கப்பட்டுவிட்ட தெய்வச்சித்தம்தான் அவனுக்கு விதிக்கப்பட்ட கதி என்றாலும் அவன் தன் குற்றங்களுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறான். அவன் தன்னைக் குருடாக்கிக் கொள்கிறான் – “தான் இழைத்த, தனக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை” அவனால் கண் கொண்டு காணத் தாள முடிவதில்லை. அவனது துயர்நிலையில் தீபஸின் முதியவர்களாலான கோரஸ் அவனைத் தேற்ற முயல்கிறது- கடந்த காலத்தில் அவன் அவர்களையும் அவர்களது நகரையும் காத்திருக்கிறான் என்பதால். ஆனால் அவர்களோ, நாடகத்தில் உள்ள வேறெந்த பாத்திரமோ, ஈடிபஸ்சுக்கு மீட்சிக்கான சாத்தியத்தை அளிப்பதில்லை, எதிர்காலத்தில் அவன் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று எந்த நம்பிக்கையையும் அளிப்பதில்லை.

கோரஸ் போலவே, பார்வையாளர்களாய் உள்ள நாமும் சாட்சிகள்- கண்டு நிற்கும் நாம் இரக்கப்பட முடியும், ஆனால் நிகழ்வுகளின் பயங்கர போக்கை மாற்றும் ஆற்றல் இல்லாதவர்கள். கோரஸ் போல், நாடகத்தின் நிகழ்வுகளைக் கொண்டு நாம் எவ்வளவு குறைவாய் அறிந்திருக்கிறோம் என்பதையும் நம் கட்டுக்குள் எவ்வளவு குறைவான விஷயங்கள் இருக்கின்றன என்பதையும் கற்றுக்கொள்ளவே இயலும். எனினும், மானுட அறிவு மற்றும் சக்தியின் எல்லைகளைக் கண்டுகொள்வதில் ஒரு இன்பம் கிட்டலாம், அந்த இன்பம் உரைக்கப்படும் சொற்களில் பிறப்பதுதான் என்றாலும்.

மிகவும் மாறுபட்ட நம் மொழியிலும், பண்டைக்கால கிரேக்க மூலமொழியின் கவித்துவத்தையும் ஆற்றலையும் நாம் ஓரளவு உணர்த்துவது சாத்தியமாகவே இருக்கிறது. இதோ, ஏஸ்ஷிலஸின் ‘அகாமெம்னோன்‘ நாடகத்தின் கோரஸ், ட்ரோஜன் போர் பற்றி பேசிக் கொள்கிறார்கள் (‘கிரேக்க நாடகங்கள்‘ என்ற நூலில் சாரா ருடன் செய்த மொழியாக்கத்தையொட்டி)

ஜ்யூஸ் நம்மை அழைத்துச் செல்கிறான்,
விழிப்புணர்வுக்கான பாதையில்;
துன்பங்களே நம் படிப்பினைகள்
என்று ஆணையிட்டான் ஜ்யூஸ்.
இதயத்துக்கு இல்லை உறக்கம், மாறாய்
காயங்களை நினைவுறுத்தும் வலி
துளித்துளியாய் இறங்கிக் கொண்டிருக்கிறது.
விருப்பமில்லா உள்ளங்களும்
எச்சரிக்கையுணர்வை அடைகின்றன.

காயங்களை நினைவுகூர்கின்ற வலி பற்றிய வரிகளை மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கொலையானது பற்றி ஒரு கூட்டத்தில் பேசும்போது ராபர்ட் கென்னடி மேற்கோள் காட்டினார்.

தன் வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் வலியையும் இழப்பையும் உணர்கிறான், அதிலும் குறிப்பாக மிக மோசமான அநீதியின் முன். ஆனால் ஏஸ்ஷிலஸ் அளவுக்குச் சிறப்பாய் வேறு யாரும் அதை விவரித்ததாய்த் தெரியவில்லை. அவர் வலிக்கு நினைவாற்றலை அளிக்கிறார். அதற்கு ஒரு பௌதீக இருப்பையும் அளிக்கிறார்- அதன் வாதை துளித்துளியாய், நமக்கு அவ்வாறு உணரவும் அறியவும் விருப்பம் இல்லாதபோதும், புரிதலை மெல்ல மெல்ல கற்பித்துக் கொண்டிருக்கிறது.

நன்றி – Why Are Greek Plays Important? They Prepare You For Life, Mary Lefkowitz, Signature 

ஒளிப்பட உதவி – Wikipedia

அறமும் எழுத்தும் – ஜென் வெப்

இது அவ்வப்போது பேசப்படுகிறது. அறமும் எழுத்தும். பொருத்தமற்ற மணவுறவில் பிணைக்கப்பட்ட இரு கருத்துகள். அறம் சார்ந்து எழுதுவது எப்படி? அழகியல் தேவைகளுக்கும், கதைகூறலின் ஆரத்துக்கும், வாசக தேவைகளுக்கும், துரோகம் இழைக்காமல் அறம் சார்ந்து எழுதுவது எப்படி? அது தவிர, அறம் சார்ந்த எழுத்து என்றால் என்ன?

கல்வித்துறையில் இதற்கான பதில் நேரடியானது: அறம் சார்ந்து எழுதுவது என்பது பிறர் எழுத்தைத் திருடாமல் இருப்பது, பொய்த் ‘தகவல்களை’ அளிக்காமல் இருப்பது.

மிலன் குந்தேராவைப் பொறுத்தவரை இதற்கான பதில் நேரடியானது.

“இருத்தலில் இதுவரை அறியப்படாதிருக்கும் கூறொன்றைக் கண்டு சொல்லாத நாவல் அறமற்றது. அறிவொன்றே நாவலில் அறம்”

ஆஸ்கார் வைல்டுக்கும் நேரடி பதில் இருந்தது- “அறம் சார்ந்த, அல்லது அறமற்ற புத்தகம் என்பது கிடையாது,” என்று அவர் ‘தி பிக்சர் ஆஃப் கிரே‘யின் முன்னுரையில் எழுதுகிறார்.

நன்றாக எழுதப்பட்ட புத்தகங்கள், மோசமாக எழுதப்பட்ட புத்தகங்கள். அவ்வளவுதான்.

இந்தப் பதில்கள் அவ்வளவு பயனுள்ளதாய் இல்லை. படைப்பெழுத்தாளர்கள் அவசியம் பிறர் எழுத்தைத் திருடக்கூடாதுதான், ஆனால் நாம் நிச்சயம் புது விஷயங்களை புனைந்தாக வேண்டும். எல்லா எழுத்தாளர்களும் அறிவூட்டும் உந்துதலை உணர்வதில்லை. வைல்ட், ‘நன்றாக எழுதப்பட்ட’ புத்தகத்துக்கும், ‘மோசமாக எழுதப்பட்ட’ புத்தகத்துக்கும் என்ற வேறுபாடு?

நல்லது; கெட்டது: ‘அறம்’ என்பதைப் போல் இந்தச் சொற்களை ‘வெற்று குறிப்பான்கள்” (“empty signifiers”) என்று மொழியமைப்பியல் வல்லுனர்கள் அழைக்கின்றனர். அது சுட்டும் பொருள் அல்லது விஷயத்தை எந்த ஒரு சொல்லும் குறிக்கலாம். உரித்தான பெயர்ச்சொற்கள் தவிர பிற சொற்கள் எதுவும் வேறு எதற்கும்மட்டுமே உரியவையல்ல. அவையனைத்தும் எந்தப் பொருளை அல்லது கருத்தைப் பெயரிட்டு அழைக்கின்றனவோ, அவற்றால் அதைச் சுட்டும் வகையில் நம் கவனத்தைத் திருப்ப மட்டுமே முடியும். வெற்று குறிப்பான்கள் திண்மம் கொண்ட பொருள், அல்லது, ஏற்றுக்கொள்ளப்பட்ட அர்த்தம் எதையும் சுட்டுவதில்லை. அவை, “அர்த்தத்தை உமிழ்கின்றன என்பதை விட, உறிஞ்சிக் கொள்கின்றன”

“நல்ல எழுத்து”, “அறம் சார்ந்த எழுத்து” என்றெல்லாம் சொல்வது, ‘நாமனைவரும்’ புரிந்துகொள்ளும் கருத்துகளுக்கு பெயர் சூட்டுவது போல்தான் தெரிகிறது; ஆனால் ‘நாமனைவரும்’ நம் தேர்வுகளை ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. (நான் ‘நல்ல எழுத்து’ என்று அழைப்பது உங்களுக்கு குப்பையாய் இருக்கும்)

ஓரளவுக்கு இது ரசனை சார்ந்த விஷயம்; அல்லது சமகால விழுமியங்கள் சார்ந்த விஷயம்; அல்லது அரசியல். இங்கேதான் நாம் அறம் நோக்கித் திரும்புகிறோம். இங்கு நான் அறம் பற்றி எழுதப்பட்ட மிகப்பெரும் தொகுதியைச் சுருக்கித் தர முயற்சி செய்யப்போவதில்லை. நாம் உயிருள்ள ஒரு குறிப்பிட்ட ‘உண்மையை’ கொண்ட கதைகளை போதனைகளாய் இல்லாத வகையில் எப்படிச் சொல்கிறோம், பிம்பங்களாய் எப்படி உருவாக்குகிறோம், என்பதுதான் இங்கு என் அக்கறை (‘உண்மை’ என்ற சொல்லை நான் வேண்டுமென்றேதான் மேற்கோள்களுக்குள் தந்திருக்கிறேன், அதுவும் ஒரு வெற்று குறிப்பான் என்பதால்)

நான் ஏன் எழுதுகிறேன்‘ என்ற தன் கட்டுரையின் துவக்கத்தில் ஜோன் டிடியன், எழுத்தென்பது பிறர் மீது தன்னை வலியுறுத்தும் கலை என்கிறார், நான் சொல்வதைக் கேள், நான் பார்க்கும் வகையில் பார், உன் மனதை மாற்றிக் கொள் என்று சொல்வது அது.

நிச்சயம் உண்மைதான். ஆனால் தொடர்ந்து நம்மைப் பிறர் மீது வலியுறுத்துவது என்பது ‘மாண்ட்டி பைதன் அண்ட் தி ஹோலி கிரெயிலில்‘ வரும் சாமியார்கள் போல் நம்மை மாற்றிவிடும்: முடிவில்லாமல் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டு, நம்மையும் (நம் வாசகர்களையும்) முடிவில்லாமல் தலையில் அடித்துக் கொண்டிருக்கச் செய்யும்.

அறம் சார்ந்த எழுத்து எது என்பதற்கு முழு விடை இல்லை, ஆனால் மிசேல் பூக்கோ, சிந்தனையால் தெளிவடைந்த விடுதலையுணர்வு அற வடிவைத் தேர்ந்தெடுக்கிறது என்று சொல்லும்போது இதற்கு அருகே வருகிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அதாவது, நாம் உருவாக்கும் அர்த்தங்கள், நாம் உருவம் அளிக்கும் உலகம் குறித்து பிரக்ஞைப்பூர்வமாக சிந்தித்து எழுதப்படும் எழுத்தே அறம் சார்ந்த எழுத்து. நான் ஒரு படைப்பை விரும்பாமல் இருக்கலாம், அதன் உலகப் பார்வையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போகலாம். ஆனால், வைல்ட் சொன்னதற்கு மாறாக, யோசித்து எழுதப்படும் சூழலில் அது நிச்சயம் அறம் சார்ந்த எழுத்துதான்.

எழுத்தாளர்கள் எப்போதும் பிரதிமைப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்: உலகுக்கும் அதனுள்ளிருக்கும் உறவுகளுக்கும் உருவம் அளித்துக் கொண்டேயிருக்கிறார்கள்; வார்த்தைகள் தாம் எவற்றின் குறிகளாய்ப் பெயர் சூட்டி நிற்கின்றனவோ அவற்றுக்கு அப்பாலும் செயலாற்றுகின்றன. சொற்றொடர்களாய், வாக்கியங்களாய், பத்திகளாய், முழு படைப்புகளாய் ஒருங்கமைப்பட்ட வடிவில், வாசகர்கள் உணர்ந்து, கண்டு, செவித்து, முகரக்கூடிய சூழலைச் சொற்கள் அளிக்க முடியும்.

இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட சொற்கள், மொழியின் அருவ நிலைக்கும், பருண்ம உலகின் திண்மத்தன்மைக்கும் இடையில் உள்ள வெளியை இணைக்க முடியும். தன்னால் விவரிக்கப்படும் உலகை இருப்பதாய்ச் செய்ய முடியும், மெய்ம்மை கொண்டதாய் உணர்த்த முடியும்.

அறம் சார்ந்த எழுத்தை நாம் இப்படிச் சொல்லலாம்: திண்ம உலகை எதிர்கொண்டு, பல்கூட்ட மக்களின் வாழ்வனுபவத்தை விவரிக்கும் வகையில் மொழிகளைப் பயன்படுத்தும் படைப்பு.

கதைசொல்லல் மற்றும் கவிதையின் பிரதிமைப்படுத்தும் ஆற்றலை, பருண்மத்தன்மையைச் சிறப்பாய்க் கையாளும் படைப்புகளின் முன் தம் உணர்வாலும் புலனனுபவத்தாலும் வாசகர்கள் எதிர்வினையாற்றும்போது நாம் காண முடிகிறது. சிரிப்பாகட்டும், அழுகையாகட்டும், நம் அனுபவத்தை நண்பர்களுடன் பகிர்வதாகட்டும்- ‘நல்ல’ எழுத்து நம்மை நெகிழச் செய்கிறது.

வெவ்வேறு மக்களின் பங்களிப்பை ஆவணப்படுத்தும் படைப்புக்களைத் தணிக்கை செய்ய அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகள் அவற்றின் ஆற்றலைச் சுட்டுகின்றன. 2001ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசு, அகதிகள் குறித்து, ‘தனிநபர்களாய் உணர்த்தும், அவர்களின் மானுடத்தன்மையை வெளிப்படுத்தும் சித்தரிப்புகள்” நிராகரிக்கப்பட வேண்டும் என்று மேற்கொண்ட முயற்சிகள் இப்படிப்பட்ட ஒரு உதாரணம்.

இந்த ஆணையைக் கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஆஸ்திரேலிய எழுத்தாளர்களும் கலைஞர்களும் மௌனத்தாலோ பொதுமைப்படுத்தப்பட்ட கருத்தாக்கங்களாலோ எதிர்கொள்ளவில்லை; மாறாய், தனியாளுமைகளாய், தனித்தன்மை கொண்டவர்களாய் உணர்த்தும் படைப்புகளை உருவாக்கினார்கள். ஆஸ்திரேலியாவிலும் பசிபிக் பகுதிகளிலும் சிறைப்படுத்தப்பட்டுள்ள எழுத்தாளர்கள் தம் சமூகங்களை தனி நபர்கள் கொண்டதாய், அவர்கள் ஆளுமைகளை வெளிப்படுத்துவதாய், மானுடத்தன்மையை உணர்த்துவதாய் தம் கவிதைகளாலும் கதைகளாலும் நினைவுக் குறிப்புகளாலும் சித்தரித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட படைப்புகளில் சில கொள்கை பிரசார வகைமையைச் சேர்ந்ததாக இருக்கலாம், சில பேதைத்தன்மை கொண்டிருக்கலாம், சில படிப்பினைகளை உணர்த்துவதை நோக்கமாய் கொண்டிருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, வைல்டும் குந்தேராவும் வரையறை செய்த பொருளில் இவற்றில் பலவும் அறம் சார்ந்தவையே: இவை, நளினமான வாக்கியங்களும் புதிய அணுகுமுறைகளும் கொண்டு ‘நன்றாக எழுதப்பட்டிருக்கின்றன,’ ‘இருப்பின் இதுவரை அறியப்படாத கூறொன்றை” அம்பலம் செய்கின்றன.

நன்றி, The Conversation – http://theconversation.com/ethics-and-writing-63399