பீட்டர் பொங்கல்

ஒரு நீதிக்கதை – தேஜூ கோல்

எதிரி பிற பூதங்களை உயிர்ப்பித்திருந்தான் என்பது உண்மைதான். ஒவ்வொன்றும் அதனதன் வழியில் தீமை செய்தன. ஒவ்வொன்றும் ஏழு பாபங்களில் ஏதோ ஒன்றின் முழுவுருவமாய் இருந்தன, ஒவ்வொன்றும் வலுவானதாகவும் தோற்கடிக்கக் கடினமானதாகவும் இருந்தன. சில பூதங்கள் இன்னும் மண்ணில் சுற்றித் திரிந்தன. ஆனால் இந்த பூதத்தை கவனிக்கத்தக்கதாய்ச் செய்தது எது என்று பார்த்தால், ஏன், அதற்கு தனித்தன்மை கொண்ட கள்ளத்தனம் அளிப்பதாக எது இருந்தது என்று பார்த்தால், அது சக்தியற்றது என்பதுதான். உண்மையில் அது மெலியது. பிற பூதங்கள் தோற்றுப்போகக் காரணமாக இருந்த குறைகள், இந்த பூதத்துக்கு பத்து மடங்கு அதிகம் இருந்தன. இந்தப் புதிய பூதம் ஒழுக்கமில்லாதது, ஆனால் ஒழுக்கம் பூதங்களின் இயல்பல்ல. இந்த பூதம் அழகாகவும் இல்லை, புத்திசாலியாகவும் இல்லை, வீரமாகவும் இல்லை, நன்றாக உடை அணியவுமில்லை, வசீகரமாகவும் இல்லை, பேச்சாற்றல் கொண்டதாகவும் இல்லை- எப்போதும் பூதங்களுக்கு இதில் ஏதோ ஒரு சில குணங்களாவது இருப்பது வழக்கம். எதிரி இந்தப் புது பூதத்தை அனுப்பி வைக்கும்போது அது ஒரே ஒரு இடத்திலிருந்து சக்தியை திரட்டிக் கொள்ளும் வகையில் வடிவமைத்திருந்தான், பழங்காலத்தில் சாம்சனையும் அவனது சிகையையும் பற்றிச் சொன்னது போல்தான்- அந்த ஆதார சக்தி அறுபட்டால், நண்பகல் வெயிலில் வாடிப்போகும் துண்டிக்கப்பட்ட மலர்த்துளிர் போல் இந்த பூதமும் வாடிப் போகும். புது பூதத்தின் சக்திக்கான ஆதாரம் ஓசைதான். தனக்குத் தொடர்புடையச் சிறு ஓசை கேட்டாலும் அது இன்னும் கொஞ்சம் வலுவானதாக மாறும். அது நிறைய சப்தம் கேட்கும்போது, போற்றுதலோ தூற்றுதலோ, ஆனந்தம் மிகுந்து மேலும் வலுவானதாக வளர்ந்தது. ஒட்டுமொத்த அமைதியே அதைத் தோற்கடிக்க முடியும், தியானத்தின் அமைதியும் செயல்பாடுகளுமே அதைத் தோற்கடிக்கும்.

இதுபோல் வடிவமைக்கப்பட்ட பூதத்தை எதிரி ஓசைப்பேட்டைக்கு ஏவிற்று. “புதுப்பூதம்” என்ற அலறல் எழுந்தது, பூதம் இன்னும் கொஞ்சம் பலமடைந்தது. “பூதத்துக்கு இன்னும் பலம் சேர்ந்து விட்டது,” என்று கூட்டத்தினர் கத்தினார்கள், பூதம் இன்னும் வலுவானது. இவ்வாறாகத்தான் ஓசைப்பேட்டையின் புதுப்பூதம், எதிரி அதுவரை அனுப்பிவைத்த அத்தனை பூதங்களைவிட எளிய பூதம், அங்கிருந்தவர்கள் எல்லாரும் பேசும் ஒரே விஷயமானது. காதைச் செவிடாக்கும் கூச்சலாக அந்தச் சப்தம் வளர்ந்து விட்டது. ஓசைப்பேட்டையின் ஒவ்வொரு நாளிதழிலும் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் பூதத்தைப் பற்றிய கட்டுரைகள்தான். தொலைக்காட்சியில் நிருபர்கள் பூதத்தைப் பற்றிய சப்தம் எழுப்பியபடியே பெரும்பொழுது கழித்தனர். ஊரார் தங்களோடு கொண்டு சென்ற சிறு கருவிகளை பூதம்தான் ஆக்கிரமித்திருந்தது. பூதம் சிரித்தால், அதற்கொரு எதிர்வினையாய் ஓசை எழுந்தது. பூதம் முறைத்தால், அதற்கும் பதில் சத்தம். அது இருமும்போது இருமல் கரகோஷம், பூதம் எப்படி இருமுகிறது என்பது பற்றி விவாதங்கள். தனது எளிய உத்தி எவ்வளவு வெற்றிகரமாகச் செயல்படுகிறது என்பது எதிரியையே திகைக்கச் செய்தது. பூதம் சிரித்தது, முறைத்தது, இருமியது, மேலும் மேலும் ஓசை எழுப்பக்கூடிய விஷயங்களைப் பேசக் கற்றுக் கொண்டது. இன்னும் இன்னும் அது வளர்ந்தது.

“ஆனால் இது பலமே இல்லாதது,” என்று மக்கள் கத்தினார்கள். “இது அழகாக இல்லை, இதற்கு அறிவில்லை, இதற்கு வீரமில்லை, இது நன்றாக உடுப்பதில்லை, இதற்கு வசீகரமில்லை, இதற்கு பேச்சாற்றல் இல்லை. இது எப்படி மேலும் மேலும் பலசாலியாகி நம்மை பாதிக்கிறது?” ஓசையின் அளவு இம்மி குறைந்தாலும் பூதம் ஏதாவது செய்தது, எது வேண்டுமானாலும் செய்யும், உடனே சப்தம் மீண்டும் அதிகரிக்கும். விழித்திருக்கும் பொழுதெல்லாம் இந்த பூதத்தைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதையே மக்கள் விரும்பினார்கள், தூக்கத்தில் பூதத்தைத் தவிர வேறு எந்த கனவும் இல்லை. அவ்வப்போது அவர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டார்கள், தாம் போடும் சத்தத்தில் பிறர் சேர்ந்துகொள்ளத் தவறுவது அவர்களை கோபம் கொள்ளச் செய்தது. வெறுமே யோசித்துக் கொண்டிருப்பது என்பது பூதத்தை ஏற்றுக் கொள்வதற்கு இணையானது என்று கருதப்பட்டது. கடந்த காலத்தில் இருந்த பிற பூதங்கள் போதுமான முழக்கத்தால் மூழ்கடிக்கப்பட்டிருந்தன. மேலும், இதுவோ ஓசைப்பேட்டை, ஓசை எழுப்பாமல் இருப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. உலகில் மிக உரத்த, மிகச் சிறந்த ஓசையின் தாயகம் அது, மிக அழகிய ஓசை, என்று எப்போதும் சொல்லப்பட்டது, உலக வரலாற்றில் மிகவும் மகத்தான ஓசை அதற்கேயுரியது. இவ்வாறாக ஓசைப்பேட்டையின் எல்லைகள் வரை ஓசைகள் வளர்ந்து எழுந்தன, லில்லிப்புட்டியர்களின் உலகில் கல்லிவர் வளர்ந்தது போல் புதுப்பூதமும் ராட்சத அளவுக்கு வளர்ந்தது- அவர்களிடமிருந்த கயிறுகளால் அதற்கெதிராய் எதுவும் செய்ய முடியவில்லை, அதன் வளர்ச்சிக்கும் எல்லைகள் இல்லாதது போலிருந்தது, இத்தனைக்கும் அப்போதுதான் அந்த ஆண்டின் எட்டாம் மாதம் பிறந்திருந்தது.

நன்றி – The New Inquiry

மெடுசாவின் மிதவை, ஒரு நீதிக்கதை – டாம் ஸ்டொப்பார்ட்

– பீட்டர் பொங்கல் –

அவர்களது துரதிருஷ்டம் அது. கடல் ஓதத்தின்போது கப்பல் மணற்திட்டில் மோதியது, கப்பலை விடுவிக்கும் முயற்சிகள் கடல் மேலும் மேலும் கொந்தளிக்கையில் தோற்றுப்போயின. போர்க்கப்பலை மீட்கவே முடியாது என்றானதும் மிதவை ஒன்றைக் கட்டுவது என்று முடிவானது. மிதவையொன்று செய்யப்பட்டது, அதுவும், சிறப்பாகவே செய்யப்பட்டது. நூற்றைம்பது பேர் அந்த மிதவையில் செல்வதென்றானது. மிதவையில் இருந்தவர்களிடம் ஒயின் இருந்தது, சிறிது பிராந்தி இருந்தது, சிறிதளவு தண்ணீர், நமுத்துப்போன பிஸ்கட்கள் கொஞ்சம். அவர்களுக்கு திசைகாட்டியோ வரைபடமோ அளிக்கப்படவில்லை. துடுப்பும் இல்லை, சுக்கானும் இல்லை- மிதவையைச் செலுத்த வழியேதும் இல்லை.

முதல் நாளிரவு  வீசிய புயல், மிதவையை பலத்த வேகத்துடன் அங்குமிங்கும் அலைக்கழித்தது. பொழுது புலர்ந்தபோது எங்கும் கூக்குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன, அனைவரும் தங்களைச் சாவுக்குத் தயார்ப்படுத்திக் கொண்டனர். மறுநாள், கடல் அமைதியாக இருந்தது. பலர் மனதில் நம்பிக்கை மீண்டும் மலர்ந்தது. மிதவையில் இருந்த பலருக்கும் மனப்பிரமைகள் இந்தப் பகலில்தான் முதலில் தோன்றின. சிலர் கரை தெரிவதாகக் கற்பனை செய்தனர், சிலர் தங்களைக் காப்பாற்ற வரும் கப்பல்கள் தெரிவதாய் நினைத்துக் கொண்டனர்.

முதல் நாள் இரவைவிட இரண்டாம் இரவு கொடூரமாய் இருந்தது. தாம் மோசம் போய் விட்டோம் என்று உறுதியாய் நம்பிய சிலர் தங்கள் கடைசி கணங்களுக்கான ஆறுதலாய் தன்னிலை மறந்திருக்க விரும்பி, ஒயின் நிரம்பிய மிடாவொன்றை உடைத்தனர். தன்னிலை மறத்தலில் வெற்றியும் பெற்ற அவர்கள் ஒயின் நிறைந்திருந்த மிடாவுள் கடல்நீர் புகுந்து அதை நீர்க்கச் செய்யும்வரை தம்மை மறந்திருந்தனர். இதனால் இரட்டிப்பு ஆத்திரமடைந்த அவர்கள், மனம் பேதலித்தவர்களாகி அத்தனை பேரையும் ஒழித்துவிடுவது என்று உறுதி பூண்டு, மிதவையைப் பிணைத்த கயிறுகளைத் தங்கள் கத்திகளால் தாக்கினர். இந்தக் கலகக்காரர்கள் எதிர்ப்பைச் சந்திக்கவும், மிதவையில் இருந்தவர்கள்  இரவின் இருளில் அலைகளுக்கிடையே இரு தரப்புகளாய் திரண்டு அமைதி நிலைநாட்டப்படும்வரை மோதிக் கொண்டனர். ஆனால் அன்று நள்ளிரவில் போர்வீரர்கள் மீண்டும் எழுந்து, தம் உயர் அதிகாரிகளைக் கத்திகளாலும் வாட்களாலும் தாக்க முற்பட்டனர். பலர் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டனர், மரக்கட்டைகளால் தாக்கப்பட்டனர், கத்தியால் குத்தப்பட்டனர். ஒயின் மிடாக்கள் இரண்டு கடலுக்குள் வீசப்பட்டன, இருந்த தண்ணீரும் இழக்கப்பட்டது. முரடர்கள் அடக்கப்பட்டபோது, மிதவை பிணங்களால் கனத்தது.

மூன்றாம் நாள் அமைதியாகவும் அருமையாகவும் இருந்தது. அனைவரும் உறங்கினார்கள், ஆனால் பசியும் தாகமும் ஏற்கனவே துன்புறுத்திய கொடூரங்கள் போதாதென்று இப்போது குரூரமான கனவுகள் அவர்களை வதைத்தன. முதலில் இருந்தவர்களில் பாதியே இப்போது அந்த மிதவையில் இருந்தார்கள்.

நான்காம் நாள் காலை, தங்கள் சகாக்களில் பன்னிருவர் இரவில் உயிர் துறந்திருப்பதைக் கண்டனர். அவர்களது உடல்கள் கடலுக்கு அளிக்கப்பட்டன. ஒன்றைத் தவிர. அது பசிக்கு இருக்கட்டும் என்று எடுத்து வைத்துக் கொள்ளப்பட்டது. இன்றுதான் அனைவரும் மனித மாமிசம் உண்ணப் பழகினர். அடுத்த நாள் இரவு புதிய உணவு கிடைத்தது: மீண்டும் ஒரு பயங்கர சண்டை நடந்தது, விதியால் சபிக்கப்பட்ட மிதவை குருதியால் கழுவப்பட்டது. இப்போது முப்பது பேருக்கு மேல் மிதவையில் இல்லை. அவர்கள் ஒவ்வொருவரும் காயப்பட்டிருந்தனர். அதனுள் உப்பு நீர் தொடர்ந்து புகுந்தது. உருக்கமான ஓலங்கள் எழுந்தன.

ஏழாம் நாள், இரு போர் வீரர்கள் கடைசி ஒயின் மிடாவின் பின் தம்மை மறைத்துக் கொண்டனர். அதில் துளையிட்டு, குடிக்க ஆரம்பித்தனர். அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதும், கடலுக்குள் வீசியெறியப்பட்டனர். இப்போது அதிபயங்கரமான ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டிய நேரம் வந்தது. இருப்பவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டபோது, இருபத்து ஏழு பேர் இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் பதினைந்து பேர் சில நாட்கள் வாழக்கூடும். பிறர், கடுமையான காயங்களால் குற்றுயிரும் குலையுயிருமாய் இருந்தனர். அவர்களில் பலர் பிதற்றிக் கொண்டிருந்தனர், பிழைக்கும் சாத்தியங்கள் மிகக் குறைவாகவே இருந்தது. பெருஞ்சோகம் கவிந்திருக்க ஒரு விவாதம் நிகழ்ந்தபின், ஆரோக்கியமாய் இருந்த பதினைந்து பேரும் நோய்வாய்ப்பட்டிருந்த சகாக்கள், பிழைக்கும் வாய்ப்புள்ளவர்களின் பொதுநலனை முன்னிட்டு, கடலுக்குள் வீசியெறியப்பட வேண்டும் என்று ஒருமனதாய் முடிவெடுத்தனர்.

இந்தக் குரூர தியாகத்துக்குப்பின், இறுதியில் பிழைத்திருந்த இந்த பதினைந்து பேரும் தங்கள் ஆயுதங்களைக் கடலில் வீசினர்- கயிறு அல்லது மரம் வெட்ட வேண்டிய தேவை எழுவதை முன்னிட்டு ஒரு குறுவாள் மட்டும் வைத்துக் கொண்டனர். சுட்டெரிக்கும் சூரியனின் கீழ், அவர்கள் உயிரை அடக்கமாட்டாத தாகம் உண்ணத் துவங்கியது. அவர்கள் தம் சிறுநீர் கொண்டு உதடுகளை நனைத்துக் கொள்ளத் துவங்கினர். இப்போது மிதவையைச் சுற்றி சுறாமீன்கள் வலம் வந்தன. சில போர் வீரர்கள், சித்தம் பேதலித்த நிலையில், மாபெரும் அந்த மீன்கள் பார்வையில் குளியல் எடுத்துக் கொண்டனர்.

பதின்மூன்றாம் நாள், மேகங்களற்ற வானில் சூரியன் உதித்தது. பாவப்பட்ட பதினைந்து பேரும் எல்லாம் வல்ல இறைவனைத் துதித்து, மிச்சமிருந்த ஒயினைப் பகிர்ந்து கொள்ளும்போது, காலாட்படைத் தலைவன் ஒருவன், தொடுவானத்தைப் பார்க்க நேரிட்டு, தொலைவில் ஒரு கப்பலைக் கண்டான். இறைவனுக்கு நன்றி சொல்லி ஒரு சிறு படையல் அளிக்கப்பட்டது. மிடாக்களின் வளையங்களை நிமிர்த்தி, அதன் முனைகளில் கைக்குட்டைகளைக் கட்டி வைத்தனர். அவர்கள் அடுத்த அரை மணி நேரம்  நம்பிக்கைக்கும் அச்சத்துக்கும் இடையில் ஊசலாடினர். அதன்பின் கப்பல் கடலைவிட்டு மறைந்தது. மிகக் குரூரமான சிந்தனைகளில் அடுத்த இரண்டு மணி நேரங்கள் கழிந்தன. அதன்பின், துப்பாக்கி வீரர் குழுத்தலைவன் ஒருவன் மேலே பார்த்தபோது, ஏறத்தாழ ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஆர்கஸ் கப்பலைக் கண்டான். அது தன் பாய்மரங்களை விரித்து வேகமாக அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. பிழைத்திருந்த பதினைந்து பேரும் அதில் ஏற்றிக் கொள்ளப்பட்டனர். கப்பல் தலைவனும் அதிகாரிகளும் அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தனர். பின்னாளில் தங்களது கொடூரமான அனுபவத்தை நினைவு கூர்ந்த இருவர் தாங்கள் காப்பற்றப்பட்ட விதம் உண்மையாகவே அதிசயமானது என்ற முடிவுக்கு வந்தனர், இந்த நிகழ்வில் இறைவனின் விரல் சுட்டுவது வெளிப்படை என்றனர்.

நடந்தது என்னவென்றால், இந்தக் கதை அளிக்கும் படிப்பினைகள் எல்லாம் நல்லபடி முடியும் என்று நினைப்பவர்களுக்கா, எல்லாம் மோசம் போகும் என்று அஞ்சுபவர்களுக்கா, இருவருக்கும் என்ன சேதி சொல்கிறது என்று நான் யோசித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது ‘மெடுசாவின் மிதவை‘ என்று நம்மால் அழைக்கப்படும் Géricaultன் மகத்தான ஓவியம் பற்றி ஜூலியன் பார்ன்ஸ் எழுதியிருந்த கட்டுரை ஒன்றை நான் வாசிக்க நேர்ந்தது (கடலில் கவிழ்ந்த கப்பல் என்று அதன் ஓவியரால் அழைக்கப்பட்ட ஓவியம் அது). அந்த மிதவையில் என்ன நடந்தது என்பதை நான் இங்கு மிகவும் சுருக்கிக் கூறியிருக்கிறேன் என்றாலும்கூட, மிதவையில் இருந்தவர்கள் எதிர்கொண்ட கொடூரங்களை நீங்கள் எளிதாய் புரிந்து கொள்ள முடியும். என்னோடு நீங்களும் இதில் உள்ள ஒரு நீதிக்கதையின் வசீகரத்தைக் கண்டிருக்கக்கூடும்: ஆம், நாமெல்லாரும் அந்த மிதவையில்தான் இருக்கிறோம்.

ஆனால், இதில் விடை காணப்படாத கேள்வி ஒன்றுக்கு நாம் பதில் கண்டாக வேண்டும். இதுதான் அது: எல்லாம் நல்லபடி நடக்கும் என்ற நம்பிக்கைக்கான நீதிக்கதையா, அல்லது, எல்லாம் மோசம் போகும் என்ற அச்சத்துக்கான நீதிக்கதையா? எல்லாம் மோசம் போகும் என்ற அச்சத்துக்கான கதை என்றால் இது அவ்வளவு மோசமானது அல்ல: சரியாவதற்கு முன் நிலைமை  மோசமாகும் என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது, ஆனால் எப்படியும் நிலைமை சரியாகும். ஆனால் எல்லாம் நல்லபடி நடக்கும் என்று நாம் நினைக்க விரும்பினால்? இந்த முடிவு அவ்வளவு நல்லதாகத் தெரியவில்லை. இருப்பதிலேயே நல்லது என்பது, தொடுவானத்தில் தெரிந்த ஆர்கஸ் அருகில் வந்து காப்பாற்றும் என்றால், அதைவிடச் சிறிய நன்மை என்பது அது வராமல் போவது என்றுதான் அர்த்தமாகும்.

ஆனால் நம்பிக்கைக்கான கதையா அல்லது அச்சத்துக்கான கதையா என்று நாம் இது குறித்து கேட்க முடியும் என்பதிலேயே ஒரு உண்மை பொதிந்திருக்கிறது. தம் மிதவையில் சிக்கிக்கொண்டிருந்த அப்பாவிகள் போல் நாம் நம் கதையாடல்களில் சிறைப்படவில்லை என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது. அந்த விபத்தின் காரணிகள் இறுதியானவை மட்டுமல்ல, நெருக்கமானவையும்கூட. முதலில் அவர்கள் கப்பலைச் செலுத்துவதில் பிழை செய்திருந்தார்கள், அடுத்தபடியாக கப்பல் மணற்திட்டில் மோதிக் கொண்டது. கப்பலில் இருந்தவர்களின் உடனடி பின்விளைவுகளுக்கான நடத்தையிலும் ஒழுங்கு கெட்டிருந்தது. எல்லாவற்றுக்கும் மேல், நாம் ஒருவருக்கொருவர் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதற்கான அண்மைக் காரணங்கள். இதுதான் இந்த நீதிக்கதையின் மையம். இதுதான் நமக்கு அர்த்தப்படவேண்டும்.

அந்த மிதவையில் இருந்தவர்களில் பத்துக்கு ஒருவர் பிழைத்துக் கொண்டார்கள். மெடுசா 1816ஆம் ஆண்டு ஜூலை மாதம் பயணத்தைத் துவங்கியது. இது எல்லாம் வெகு விரைவில் நடந்து முடிந்து விட்டன. அந்த மிதவையில் இயங்கியது எது என்று பார்த்தால், பேர் பெற்ற, அழிக்க முடியாத, உறுதியான நம் தற்காப்பு உணர்வுதான். ஒற்றுமையாய் செயல்பட்டிருந்தால், அந்த நூற்று ஐம்பது பேரில் பத்துக்கு ஒன்பது பேர் சுலபமாகவே பிழைத்திருக்கக் கூடும். ஆனால் பத்துக்கு ஒருவர்தான் பிழைக்க முடிந்தது. எதிர்காலம் நமக்கு அளிக்கக்கூடிய நன்மைகளில் மிகச் சிறந்தது எது என்றும் நமக்குச் செய்யக்கூடிய தீமைகளில் மிக மோசமானது எது என்பதையும் பார்க்க உதவும் இரட்டைப் பார்வை கொண்ட இந்தக் கதையில் நான் இதைத்தான் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். மெடுசாவின் மிதவை கதையை ஒரு நீதிக்கதையாக, நம்மை எச்சரிக்கும் கதையாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். கதை நமக்குச் சொல்வது இது என்று நினைக்கிறேன் – நாம் ஒத்துழைக்காவிட்டால் நாசமாய்ப் போவோம். நாம் மோசம் போனோம். இந்த மிதவையில் நாம் வாழும் வாழ்வில் நாம் தயையை போட்டி போட்டுக்கொண்டு வெளிப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால், அப்படிச் செய்தால் மட்டுமே, நாம் உயிர்பிழைக்க முடியும்.

நன்றி – The Raft of the Medusa: A Cautionary Tale from Tom Stoppard. Lithub 

ஒளிப்பட உதவி – The Raft of the Medusa, Wikipedia

குளக்கரையில் ஒரு மாயம் – நகுல்வசன் மொழிபெயர்ப்பில், ‘மரங்கொத்தி’

பீட்டர் பொங்கல்

The Kingfisher

The sky was clear and blue
barring the clouds gathering in the South.
No sooner the unruffled pond
entered my thoughts than the waves began;
A frog hopped into the water.
To appreciate the lotus flower, apparently.
At the sky, vacantly I stare. Ha!
Just then, out of the sky, headlong,
accursed Menaka falls,
and falls.

Dazzling with the seven colors of Indra’s Realm
her garment unfurling in the sky,
into the pond headlong Menaka falls.
No one else but me.

I waited for Menaka to rise,
into the air a Kingfisher rose.
A fish in its beak, seeking
a shadowed haunt it flew.
Clear and blue, yet again, the sky.

(ஞானக்கூத்தன் எழுதிய ‘மரங்கொத்தி’ என்ற தமிழ் கவிதையின் ஆங்கில மொழியாக்கம், நகுல் வசன்)

குறிப்புகளின் நோக்கம் இந்த மொழிபெயர்ப்பின் தரம் உயர்ந்தது என்று நிறுவுவதோ, எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறோம் என்று சொல்வதோ, எப்படியெல்லாம் புரிந்து கொண்டிருக்கிறோம் பார் என்று காட்டிக்கொள்வதோ அல்ல. ஒரு கவிதையை மொழிபெயர்க்கிறோம் என்றால் சில குறைபாடுகளைத் தவிர்க்க முடிவதில்லை என்று சொல்வதும், ஒரு கட்டத்தில் ஆங்கிலம், தமிழ் என்று மொழிகளைக் கடந்து கவிதை பொருட்படுகிறது என்று சொல்வதும்தான். அப்போது கவிதை எழுதப்பட்டதன் காரணமும் கவிஞனின் நோக்கமும் அவ்வளவு பிரமாதமாகத் தெரிவதில்லை. கவிதையைக் காட்டிலும் மொழி தனித்து உயர்ந்து நிற்கும் தருணம் அது.

இந்தக் கவிதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க சுலபமாகவே இருந்தது என்று சொல்ல வேண்டும் (இப்படிச் சொல்வது இது எவ்வளவு ‘நல்ல’ மொழிபெயர்ப்பு என்பதற்கான உத்திரவாதம் ஒன்றை முற்படவில்லை).

முதலில் ‘தெளிவாய் நீலமாய் இருந்தது வானம்‘ என்பது ‘The sky was serene and blue‘ என்று மொழிபெயர்க்கப்பட்டது. தெளிவு என்பதற்கான நேரடி தமிழ்ச்சொல் அல்ல ‘serene‘. ஆனால், அதற்கப்புறம் தவளை குதித்து குளம் கலங்கப் போகிறது, வானத்திலிருந்து மேனகை தலைகீழாக அந்தக் குளத்தில் விழப் போகிறாள், கடைசியில் ‘தெளிவாய் நீளமாய் மறுபடி வானம்‘ என்று கவிதை முடிகிறது என்பதை எல்லாம் பார்க்கும்போது ‘serene‘ என்பது அப்படி ஒன்றும் மோசமான தேர்வல்ல என்று தோன்றுகிறது. ஆனாலும் ஒரு எச்சரிக்கை உணர்வு காரணமாக, ‘The sky was clear and blue’ என்று தமிழாக்கம் செய்யப்பட்டது. எனினும் இந்தக் கவிதை தெளிவைவிட அமைதி குறித்ததுதான், ‘serene‘ என்று மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் ஒன்றும் மோசம் போயிருக்காது.

அடுத்த வாக்கியம், ‘தெற்கில் மேகத் திரட்டைத் தவிர்த்தால்,’ என்பது ‘barring the patch of cloud in the South,’ என்று இருந்து, ‘barring the clouds gathering in the South‘ என்று மாறியிருக்கிறது. மேகத்திரட்டு என்பதை patch of cloud என்று மொழிபெயர்ப்பது அவ்வளவு மோசமாகத் தெரியவில்லை. வானம் தெளிவாக இருந்தது, தெற்கில் சில மேகங்கள் இருந்தன என்பதை ஒரு காட்சியாய்க் கற்பனை செய்ய இது போதும். ஆனால் மேகம் திரண்டு வருவதில் மழை இருக்கிறதோ இல்லையோ ஒரு இருண்மைக்கான சாத்தியம் இருக்கிறது. தெளிவான வானத்தில் ஏற்படக்கூடிய மூட்டமாகவும் Serene என்ற உணர்வுநிலைக்குப் பொருந்தாத வகையிலும் மேகங்கள் திரள்கின்றன. ஒரு அச்சுறுத்தல் இருக்கிறது அல்லவா, சினிமா என்றால் பின்னணியில் இசையால் கொடுக்கப்படும் பில்ட்-அப் மாதிரி?

அடுத்த வரியில், ‘சலனம் குளத்தில் சிறிதும் இல்லை‘ என்று ஞானக்கூத்தன் எழுதும்போது, தெளிவான வானம், திரளும் மேகம்,  சலனமற்ற குளம் என்று நம் கவனத்துக்கு வருகிறது. அடுத்தபடியாக, ‘என்று நான் நினைத்த போதில் அலைகள்‘ என்று திரும்பி, ‘தவளை ஒன்று நீரில் பாய்ந்தது‘ என்று வரும்போது அதுவரை இருந்த காட்சி முற்றிலும் குலைகிறது. பொதுவாக, கவிதையில் காட்சிகளின் வரிசைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று முயற்சிப்பவர் நகுல்வசன். எனவே, ”சலனம் குளத்தில் சிறிதும் இல்லை”, என்பதை ‘Not even the hint of a ripple in the pond,’ என்றும், ‘என்று நான் நினைத்த போதில் அலைகள்‘ என்பதை, ‘I was just thinking that, when/ all of a sudden there were waves,‘ என்றும் மொழிபெயர்த்திருந்தார். இது ஒரு மொண்ணைத்தனமான முயற்சி என்பதை நாமெல்லாரும் ஒப்புக்கொள்வோம். ”சலனம் குளத்தில் சிறிதும் இல்லை”, என்பதை முதலில் சொல்ல வேண்டும் என்று முயற்சித்ததால்தான் இப்படியாயிற்று- ஆங்கில வாக்கிய அமைப்பில் இதை முன்கூட்டியே சொல்லிவிடுவது அடுத்து வரும் சொற்களுக்கு அதிக வேலை வைக்கிறது. எனவே ஒரு சமரசமாக, ‘No sooner the unruffled pond/ entered my thoughts than the waves began;‘ என்று முடிவாயிற்று. தமிழில் உள்ள அடர்த்தி ஆங்கில மொழிபெயர்ப்பில் இல்லை என்றாலும் சொற்கள் அவற்றுக்கு அளிக்கப்பட்ட வேலையைச் சரியான சமயத்தில் செவ்வனே செய்கின்றன என்றுதான் நினைக்கிறேன். சொல்லப்போனால், no sooner -> the unruffled pond என்பதில் உள்ள மிரட்டலும், entered my thoughts -> than the waves began என்ற அதன் நிறைவேற்றலும் இதற்கு முந்தைய வரிகளுடன் ஒத்துப் போகின்றன என்றும் தோன்றுகிறது. மொத்தத்தில், சில லாபநஷ்டங்கள் இந்தப் பரிமாற்றத்தில் ஏற்பட்டிருக்கின்றன.

(‘தவளை ஒன்று நீரில் பாய்ந்தது‘ என்பதற்கு ‘A frog had dived into the water,’ என்பது பரிசீலிக்கப்பட்டு, தவளை டைவ் அடிக்குமா என்ற யோசனையின் பேரில் ‘A frog hopped into the water,’ என்று மாற்றப்பட்டது. ‘Dived‘ என்பதில் உள்ள தீர்மானமும் விசையும் ‘hopped‘ என்பதில் இல்லைதான். ‘hopped‘ என்றால் தவளை  அலட்சியமாக அடுத்த அடி எடுத்து வைப்பதுபோல் தண்ணீருக்குள் இறங்கிற்று என்று தோன்றுகிறது – அடுத்த வரி, ‘தாமரைப் பூவை ரசிக்கப் போகிறதாம்.’ என்பதில் உள்ள விளையாட்டுத்தனம் இதற்குப் பொருந்துகிறது. ‘To appreciate the lotus flower, apparently. ‘)

(தாமரைப்பூ என்பதை lotus என்று சொன்னால் போதாதா, அது என்ன lotus flower என்று கேட்கலாம், நியாயமான கேள்விதான்)

oOo

சும்மா இருக்கும்போதுகூட சும்மா இருக்க முடியாதவர் கவிஞர் என்பதை அறிந்தோம் – மேலுக்கும் கீழுக்கும் பார்த்துக் கொண்டேயிருப்பவர் இப்போது வானத்தைப் பார்க்கிறார். அங்கு அவருக்குக் காத்திருக்கிறது ஓர் அதிர்ச்சி – ‘வெறுமனே வானத்தைப் பார்த்தேன். ஹா!‘. இதற்கான முதல் முயற்சி, ‘I was staring at the sky vacantly. And Lo!‘- ரொம்ப உரையாடலாக இருக்கிறது, அது தவிர “Lo!” என்றெல்லாம் ஆச்சரியப்படுவது ஒரு மந்திரவாதியை ஞாபகப்படுத்துகிறது என்றெல்லாம் யோசித்து, ‘At the sky, vacantly I stare. Ha!‘. என்பது முடிவாயிற்று. நியாயப்படி பார்த்தால் ‘பார்த்தேன்‘ என்பது ‘stared‘ என்றுதான் மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பாருங்கள், தமிழில் காலம் ஒரு ஆஸ்மாட்டிக் தன்மை கொண்டது. நிகழ்காலம் என்பது கடந்த காலமும் எதிர்காலமும் சந்திக்கும் கூடுதுறை, இது கொஞ்சம் அது கொஞ்சம் என்று ஒரு ரேஞ்சுக்குள்தான் எதுவும் நடக்கிறது. தமிழில், ‘வானத்தைப் பார்த்தேன்… மேனகை அப்பத்தான் விழுகிறாள்’ என்று எழுதலாம். நம் அனுபவ காலவரிசைக்கிரமம் இப்படிதான் இருக்கிறது. ஒரு விஷயம் முடிந்து போகும்போது அதன் அனுபவஸ்தர்களாகிய நாம் முடிந்து விடுவதில்லை, அடுத்து என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க தொடர்ந்து இருக்கிறோம். ஆனால் ஆங்கிலத்தில், “I looked… Menaka was just then falling” என்றெல்லாம் எழுதினால் தமிழிஷாக இருக்கும், tense agree ஆகவில்லையே என்று சந்தேகப்படுவார்கள். சில பேருக்கு படிக்கவும் நன்றாக இருக்காது. எனவேதான் எதற்கு வம்பு என்று, ‘vacantly I stare,’ நாம் நிகழ்காலத்தில்தான் இருக்கிறோம்.

இப்போது என்ன நடக்கிறது? ‘வானத்தை விட்டுத் தலைகீழாக/ சாபம் கொண்ட மேனகை அப்பதான்/ விழுகிறாள். இருக்கிறாள் விழுந்து கொண்டே.’ இது ஆங்கிலத்தில் முதலில், ‘Out of the sky, upside down/ I saw accursed Menaka fall. / She kept on falling. ‘ ரொம்பவே தமிழிஷாக இருக்கிறது, காலவழு ஏதோ இருக்கிற மாதிரி இருக்கிறது என்று யோசித்துப் பார்த்தபின், ‘Just then, out of the sky, headlong,/ accursed Menaka falls,/ and falls.‘ இப்போதும்கூட ‘just then‘ என்பது அந்த அளவுக்குச் சரியான ஆங்கிலமா என்ற சந்தேகம் இருந்தாலும், ‘அப்பதான்‘ என்பதில் உள்ள பேச்சுத்தன்மை அதில் இருப்பதால் சரியான தேர்வுதான் என்று பாராட்டிக்கொள்ளலாம், தப்பில்லை.

oOo

இனி வரும் மூன்று வரிகளும் மிக அழகியவை – ‘இந்திர லோகத்து எழுவகை வண்ணம்/ மிளிரும் ஆடை விண்ணிலே அவிழ/ விழுகிறாள் குளத்தில் மேனகை தலைகீழாய்‘ வானத்தில் வண்ண ஆடைகள் அவிழ்ந்து பறக்கின்றன, ஒளியில் அவை மிளிர்கின்றன. ஆடைகள் விலகி நிலைகுலைந்து தலைகீழாய் குளத்தில் விழுகிறாள் மேனகை.

இந்த மூன்று வரிகளும் எவ்வளவு குறைவான சொற்களில் எவ்வளவு விஷயங்களை உணர்த்துகின்றன என்பதை எழுதுவதானால் அதற்கு ஒரு தனிப்பதிவு வேண்டும். அது எதுவும் இல்லாமலேயே நாம் சுலபமாக, ‘தன் நிலை குலைந்து மேனகை விண்ணிலிருந்து வீழ்ந்தாள்‘, என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். ஆனால் அது சொல்லப்பட்ட விதம், அதன் அழகும் அவலமும் உணர்வுடன் காட்சிப்படுத்தப்படும் பன்னிரண்டே சொற்கள், இது கவிதையிலன்றி வேறெங்கு சாத்தியம்? புத்திசாலித்தனம், ஆழமான சிந்தனை, மெய்ம்மை, உண்மைக் குரல் என்ற விஷயங்களுக்குப் போவதற்கு முன் இப்படி எழுத முடிவதுதான் கவிஞனின் முதல் தகுதி, சொற்களை இப்படி கட்டமைப்பதுதான் அவனது கற்பனைத்திறன்.

ஆங்கிலத்தில் இது எப்படி இருக்கிறது? ‘Dazzling with the seven colors of Indra’s Realm/ her garment unfurling in the sky,/ into the pond headlong Menaka falls.‘ எனக்குத் தெரிந்தவரை இது குறை சொல்ல முடியாதபடிதான் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழின் கச்சிதம் எங்கே? நமக்கு மிகவும் பழக்கப்பட்ட ‘இந்திர லோகத்து எழுவகை வண்ணம்‘, ‘the seven colors of Indra’s Realm‘ என்று அந்நியப்படுவது ஒரு மாதிரி பில்டர் காப்பி கேட்ட இடத்தில் இன்ஸ்டன்ட் காபியைக் கொண்டு வந்து வைத்தது மாதிரிதான் இருக்கிறது. ஆனால் மொழிபெயர்ப்பு முயற்சியே ஒரு வகையில் பில்டர் காபியை இன்ஸ்டண்ட் காப்பி ஆக்கும் முயற்சி என்று சொல்லலாம். ஆங்கில மொழி வரலாற்றில் இந்திரலோகம் இடம் பெறவில்லை என்பது நம் குறையல்ல, ஆனால் இந்த மொழிபெயர்ப்பு விஷயத்தில் அதனால் குறைபட்டுதான் நிற்க வேண்டும்.

இதற்கு அடுத்த வரி, ‘எவரும் இல்லை என்னைத் தவிர.’ மொழிபெயர்க்க எளிது. ஆனால், ‘There was no one else but me,’ என்பது சரியா அல்லது ‘There is no one else but me‘ என்பது சரியா என்று யோசித்துப் பார்க்கப்பட்டு, ‘No one else but me,’ என்ற இடத்தில் வந்து நின்றிருக்கிறது. இதுவே, ‘None, but me‘ என்றும் இருக்கலாம், ஆனால் பிறர் இல்லை என்ற சுட்டுதல் இருக்குமா, தெரியவில்லை.

oOo

அடுத்து, ‘காத்திருந்தேன் மேனகை வெளிப்பட,/ வெளியில் எழுந்தது மீன்கொத்திப் பறவை.” ஆங்கிலத்தில் நிறைய காலவழுக்களை உருவாக்குகிறது. தமிழில், காத்திருந்தேன், என்பது காத்துக்கொண்டிருந்தேன் என்ற அர்த்தத்திலும் படிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். ‘காத்திருந்தேன்‘ என்பதை நேரடியாக ‘I waited‘ என்று மொழிபெயர்த்தால் அடுத்து நடப்பது எல்லாமும் கடந்த காலத்தில் நடப்பவையாய் இருந்தால்தான் அங்கே சரிப்படும். எனவே, ‘I was waiting for her to emerge when/ into the air a Kingfisher rose,‘ என்று மிகச் சரியாகவே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆனால் பின்னர் வாசித்துப் பார்க்கும்போது இது கொஞ்சம் இயந்திர மொழியாக்கம் போலிருப்பதாய் தோன்றிய காரணத்தால், ‘I waited for Menaka to rise,/ into the air a Kingfisher rose,’ என்று மாற்றப்பட்டது. இது பிரச்சினையான மொழிபெயர்ப்புதான், யாராவது கேள்வி கேட்டாலும் சரியான பதில் சொல்ல முடியாது. ஆனால் இப்படி மொழிபெயர்க்கப்பட்டிருப்பதில் ஒரு அழகு இருக்கிறது என்று தோன்றுகிறது. ”I wait for Menaka to rise,/ into the air a Kingfisher rose,’ என்றும் எழுதலாம். இன்னும் பல சாத்தியங்களும் இருக்கின்றன. எதை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பது நம் கற்பனையைப் பொருத்தது. ஆனால் எதுவும் முழுத்திருப்தி கொடுக்காது என்று தோன்றுகிறது.

கவிதை, ‘அலகிலே மீனுடன் நிழலுக்குப் பறந்தது./ தெளிவாய் நீளமாய் மறுபடி வானம்.’ என்று முடிந்து விடுகிறது. இதுவே ஆங்கிலத்தில், ‘A fish in its beak, seeking/ a shadowed haunt it flew./ Clear and blue, yet again, the sky’ என்று ஆகியிருக்கிறது. ‘நிழலுக்குப் பறந்தது‘ என்பது எப்படி ‘seeking a shadowed haunt it flew,’ என்று ஆகும் என்பது சரியான கேள்வி.  flew into shadows என்று நானானால் செய்திருப்பேன். ஆனால் நகுல்வசன் இந்தக் கவிதையில் சொல்லப்படாத, ஆனால் கவிதையால் சொல்லப்படும் முக்கியமான ஒன்றைச் சுட்ட விரும்புகிறார் என்று நினைக்கிறேன். இங்கு கொஞ்சம் மிகையான சுதந்திரம் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டலாம், அல்லது, அது shadowed haunt என்பது எதைச் சொல்கிறது என்று யோசிக்கலாம். என் பாணியில் அதைச் செய்கிறேன்.

oOo

பதாகையில் ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரை வந்தது- இவ்வுலகை மீண்டும் மாயங்களால் நிறைத்தல். ந்யூஸ்டாட் பரிசு பெற்ற போர்ச்சுகீசிய மொழி எழுத்தாளரும் மொசாம்பிக் தேசத்தவருமான மியா கோடோ அளித்த நன்றியுரையின் தமிழாக்கம். அதன் முடிவில் அவர் ஒரு கவிதையை வாசிக்கிறார், அதன் அவ்வளவு பிரமாதமாய் இல்லாத தமிழாக்கம் இது –

வேறொரு வாழ்வில் நான் பறவையாய் இருந்தேன்

பரந்து விரிந்த சூழ்நிலங்களையும்
பறத்தலில் தொட்டுச் சென்ற சரிவுகளையும்
நினைவில் பாதுகாத்து வைத்திருக்கின்றேன்.

ஒற்றை மேகமும் அதன் அலட்சிய வெண்தடமும்
என்னை மண்ணில் பிணைத்திருக்கின்றன.

பறவைச் சிறகின் இதயத்துடிப்பாய் வாழ்ந்தேன்,
மண்ணைப் பசித்து வீழும் மின்னலென வீழ்ந்தேன்.

என் இதயத்தில் இருக்கும் அந்தச் சிறகை.
தன் நினைவைக் காலத்தில் பாதுகாப்பவனாய்
பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றேன்,

வேறொரு வாழ்வில் நான் பறவையாய் இருந்தேன்,
வேறொரு பறவையில் நான் உயிராய் இருந்தேன்.

World Literature Today 

நினைவென்பது மறைவில் இருப்பது. அன்றொரு நாள் மேனகை வீழ்ந்தாள், மரங்கொத்தியாய் மாறி மறைந்தாள், என்பதல்ல இக்கவிதை சொல்வது. அவள் ஒரு shadowed hauntல் வாழ்கிறாள். ‘தெளிவாய் நீலமாய் மறுபடி வானம்‘, என்றாலும் இது முன்னிருந்த வானல்ல. மேனகை வீழ்ந்த வானம், மரங்கொத்தி பறக்கும் வானம். நினைவின் சுவடு கொண்ட, ஆனால் அதன் மூட்டமில்லாத வானம்.

Re-enchanting the World‘ என்ற தன் உரையில், மியா கோடோ, ‘ஒவ்வொரு கண்டத்திலும், பல்வேறு தேசங்களைத் தன்னுள் கொண்ட தேசமாய் நாம் ஒவ்வொருவரும் இருக்கிறோம்,’ என்று சொல்கிறார். அவற்றை உயிர்ப்பிப்பதுதான் கலைஞனின் பணி,மீண்டும் மாயத்தால் நிறைத்தல் (Re-enchantment) என்பது இதுதான். இதுவே மொழிபெயர்ப்புக்கான தேவையும்கூட.

மறைந்த கவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு மனமார்ந்த அஞ்சலிகள்.

ஒளிப்பட உதவி – Alcyone, The Kingfisher

மொழிபெயர்ப்பு – கற்பனைக்கான வெளி

 
The Lights of Brindisi
 
At night, in the harbour of Brindisi,
Angels bearing lamps were flying, and fires
Revealed their faces upturned on the sea.
– O real leaves, the walls of the closed garden
Distance you always; smiling face,
Tilted, silver in the summit of the trees,
You always keep the stormy gate shut.
But I can see you tonight; signature of foam
That the boat crosses and leaves, in the night.
 
Yves Bonnefoy, Translated by Anthony Rudolf, 1966, The Times Literary Supplement
 
ப்ரின்டீசியின் விளக்குகள்
 
இரவில், ப்ரின்டீசி துறைமுகத்தில்,
தேவதைகள் அகலேந்திப் பறந்து கொண்டிருந்தன, அழல்கள்
அவற்றின் மேல்நோக்கும் முகங்களைக் காட்டின, கடலில்.
-ஓ! நிஜ இலைகளே, 
பூட்டிய தோட்டத்தின் சுவர்கள்
உங்களைத் தொலைவிலிருத்தும், எப்போதுமே;
மரங்களின் சிகர வெள்ளியாய்
தலை சாய்த்திருக்கும் நகைமுகமே,
புயற்கதவை நீ அடைத்து விடுகிறாய், எப்போதுமே.
ஆனால் இன்றிரவு என்னால் உன்னைப் பார்க்கமுடிகிறது; 
நுரையின் முத்திரையே,
கடக்கும் படகு உன்னை விட்டும் செல்கிறது, இரவில்.
 
 
முதலில் ஒரு குறிப்பு. இது ஈஃப் பன்ஃபுவா (Yves Bonnefoy) எழுதிய பிரஞ்சு கவிதையின் நேரடி மொழிபெயர்ப்பல்ல. அந்தோணி ருடால்ப் செய்த ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்தான். எனவே, பிரஞ்சு கவிதைக்கும் தமிழாக்கத்துக்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் இருக்கலாம்.
 
குறிப்பாக, ‘O real leaves‘ என்பதை, ‘ஓ! நிஜ இலைகளே’ என்று மொழிபெயர்த்திருக்கும் நகுல்வசன், அதைத் தொடர்ந்து ‘smiling face,’ என்பதை ‘நகைமுகமே’ என்றும், ‘signature of foam‘ என்பதை ‘நுரையின் முத்திரையே,’ என்றும் மொழிபெயர்த்திருக்கிறார். இதற்கான சமாதானம்- ஆங்கிலத்தில், ‘smiling face… you‘, என்று சொல்வதும், ‘signature of foam‘ என்பதற்கு முன் ‘But I can see you tonight;‘ என்று வந்திருப்பதும். இதில் முந்தைய சமாதானத்தை எந்த சங்கடமும் இன்றி ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் பிந்தையது, சிறிது பிரச்சினைக்குரியது: ‘நான் உன்னைப் பார்க்கிறேன்’ என்பதைத் தொடர்ந்து ‘:’ என்று வந்திருந்தால் பரவாயில்லை, அது அடுத்து வருவதைச் சுட்டுவதாய் இருக்கும். ஆனால் ‘;’ என்ற குறியல்லவா வந்திருக்கிறது? பிரெஞ்சு கவிதையுடன் ஒப்பிட்டுப் பார்த்திருந்தால் இந்தக் கேள்விகளுக்கு விடை எளிதில் கிடைத்திருக்கும். இதையெல்லாம் இன்னொருவர் தமிழில் வேறு மாதிரி மொழிபெயர்க்கலாம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இது, இந்த மொழிபெயர்ப்புக்கான நியாயம்.
 
நகுல்வசன், முடிந்த அளவு, ஆங்கிலத்தில் உள்ள காட்சிகளின் வரிசை தமிழிலும் வர வேண்டும் என்று முயற்சிப்பவர். “At night, in the harbour of Brindisi,/ Angels bearing lamps were flying, and fires/ Revealed their faces upturned on the sea.” இதை நிதானமாகப் படிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். At night, in the harbour of Brindisi– என்பது ப்ரின்டீசி துறைமுகம் இருளில் இருப்பதைக் காட்சிப்படுத்துகிறது. தலைப்பு, The Lights of Brindisi என்று இருப்பதால், இந்த இருளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வெளிச்சம் தெரிகிறது என்றும் நினைத்துக் கொள்வோம். அடுத்து, ‘Angels bearing lamps were flying‘ என்ற புதிரான வரியை நாம் அப்படியே கற்பனை செய்து பார்க்கும்போது விளக்கேந்திச் செல்லும் தேவதைகள் புலப்படுகிறார்கள். ஆனால் ஒரு காற்புள்ளிக்குப் பின், ‘and fires‘ என்று அந்த வரி துண்டாவதில் நெருப்புக்கு ஒரு அழுத்தம் கிடைக்கிறது. ‘Revealed their faces upturned on the sea.’ அவர்கள் முகங்களை வெளிப்படுத்தின- அவை கடலில் மேல்நோக்கிக் கிடந்தன. இப்போது நமக்குப் புரிகிறது, நாம் வானில் பார்த்தது விளக்கொளியை, கடல் நீரில் பார்ப்பது அவற்றின் வெளிச்சத்தில் பிரதிபலிக்கப்படும் தேவதைகளின் முகங்களை. இந்தக் காட்சியின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாதபோதும் ஒன்று சொல்லலாம். எது ஆகாயத்துக்கு உரியதோ, அது கடல் நீரில் உள்ளது, ஒளியின் பிரதிபலிப்பில். 
 
இந்த வரிகள், “இரவில், ப்ரின்டீசி துறைமுகத்தில்,/ தேவதைகள் அகலேந்திப் பறந்து கொண்டிருந்தன, அழல்கள்/ அவற்றின் மேல்நோக்கும் முகங்களைக் காட்டின, கடலில்,’ என்று சரியாகவே தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன என்று நினைக்கிறேன். ‘அழல்கள்‘ என்ற சொல்லைக் கண்டு வேண்டுமானால் புருவம் உயர்த்தலாம். 
 
அடுத்து, ‘– O real leaves, the walls of the closed garden/ Distance you always;‘ என்பதை ‘-ஓ! நிஜ இலைகளே,/ பூட்டிய தோட்டத்தின் சுவர்கள்/ உங்களைத் தொலைவிலிருத்தும், எப்போதுமே;‘ என்றுதான் மொழிபெயர்க்க வேண்டுமா? ‘நிஜ இலைகளே,’ என்று அழைத்தால் போதுமே, ‘‘ என்று ஏன் கூவ வேண்டும்? ‘ஓ!‘ என்பதில் ஓர் அவலத் தொனியும், அதைத் தொடரும், ‘நிஜ இலைகளே,‘ என்ற அழைப்பில் ஒரு மென்சோகமும் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்கிறேன். கற்பனைதான், அப்படிதான் இருக்கிறது என்று சொல்லவில்லை. பூட்டப்பட்ட தோட்டத்தின் சுவர்கள் இலைகளை எப்போதும் தொலைவில்தான் இருத்துகின்றன- நெருக்கமில்லாத காரணத்தால் அவை உள்ளவாறே அறியப்படுவதில்லை. இது தோட்டத்து மரங்களின் இலைகளை நோக்கிப் பேசப்படுவதில்லை. அறியப்படாத, ஆனால் உணர்வின் எல்லையில் நிழலாடும் ‘நிஜ’ இலைகளே அழைக்கப்படுகின்றன, துல்லியமாகப் பேசுவதானால் ‘invoke,’ செய்யப்படுகின்றன என்றுகூடச் சொல்லலாம். 
 
முதலில் ‘எது ஆகாயத்துக்கு உரியதோ, அது கடல் நீரில் உள்ளது, ஒளியின் பிரதிபலிப்பில்,’ என்று கண்டோம். அடுத்து, எது தொலைவில் உள்ளதோ, அதன் மெய்வடிவம் நிழலாட்டமாய் உணர்ந்து, அழைக்கப்படுகிறது என்று காண்கிறோம். சேய்மையில் இருப்பினும் நிஜத்தின் அண்மை உணரப்படாமல் இல்லை, அதன் வடிவம் பூரணமாய் வெளிப்படுவதில்லை, அவ்வளவுதான். 
 
smiling face,/ Tilted, silver in the summit of the trees,/ You always keep the stormy gate shut‘ – எத்தனை அழகிய வரிகள். நிலவைப் பேசுகிறார் என்று நினைக்கிறேன். ஆனால் ‘stormy gate‘? இன்னதுதான் என்று தீர்மானமாகச் சொல்லவே முடியாது என்று தோன்றுகிறது. மூடப்பட்ட கதவுகளுக்குப்பின் எப்போதும் தொலைவில் இருக்கும் நிஜ இலைகள், என்பதைத் தொடர்ந்து, மரங்களின் உச்சியில் சிரிக்கும் நிலவு புயற்கதவை எப்போதும் பூட்டி வைத்திருக்கிறது என்பதில் ஏதோ ஒரு ஆசுவாசம் தொனிப்பது போல்தான் தோன்றுகிறது. “மரங்களின் சிகர வெள்ளியாய்/ தலை சாய்த்திருக்கும் நகைமுகமே,/ புயற்கதவை நீ அடைத்து விடுகிறாய், எப்போதுமே,” என்ற தமிழாக்கம் சிக்கலற்றது போல்தான் தெரிகிறது. ஆனால், ‘You always keep the stormy gate shut‘ என்பதை ‘நீ எப்போதும் புயற்கதவைப் பூட்டி வைத்திருக்கிறாய்” என்பதற்கும் “நீ எப்போதும் புயற்கதவை அடைத்து விடுகிறாய்,” என்பதற்கும் ஒரு நுண்ணிய வேறுபாடு இருக்கிறது. புயற்கதவை பூட்டி வைத்திருக்கிறாய் என்பதில் தெரியும் ஆசுவாசம், புயற்கதவை அடைத்து விடுகிறாய் என்பதில் இல்லை – உடைத்துப் பீறிட்டெழுக் காத்திருக்கும் உணர்வுகளின் அழுத்தம் தெரிகிறது என்றே சொல்லலாம். இந்த இரு வாசிப்புகளும் கவிதையின் பொருளையே மாற்றிவிடக் கூடியவை. இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது மொழிபெயர்ப்பாளனின் முடிவு. இங்குதான் மொழிபெயர்ப்பாளனின் கற்பனையும் படைப்பூக்கமும் செயல்படுகின்றன. 
 
ஏனெனில், “But I can see you tonight; signature of foam/ That the boat crosses and leaves, in the night,” இன்னும் பல தேர்வுகளுக்கு இடம் கொடுப்பது. ‘But I can see you tonight;‘, என்பதை, ‘நான் இந்த இரவில் உன்னைக் காண்கிறேன்‘ என்ற இடைநிறுத்தத்தோடு விட்டுவிடலாம். யாரை என்ற கேள்விக்குச் செல்லாமல், கடல் நுரைத்துக் கொண்டிருக்கிறது, அதைக் கடந்து செல்லும் படகு, அது விட்டுச் செல்லும் நுரைகளாய் தன் கையொப்பத்தையும் இட்டுச் செல்கிறது. இந்த நுரைகளில்தான், நான் உன்னைக் காண்கிறேன் என்று சொல்கிறார் பன்ஃபுவா என்று புரிந்து கொள்ளலாம். அப்படி யாரைத்தான் காண்கிறார் என்றால், முதலில் பார்த்த கடலில் தெரியும் தேவதை பிம்பங்களுக்குப் போகலாம். அது போன்ற ஏதோ ஒன்றைக் காண்கிறார்.  
 
ஆனால் நகுல்வசன் தமிழாக்கம், “புயற்கதவை நீ அடைத்து விடுகிறாய், எப்போதுமே,” என்பதைத் தொடர்ந்து, “நுரையின் முத்திரையே,/ கடக்கும் படகு உன்னை விட்டும் செல்கிறது, இரவில்,” என்று இரட்டிக்கிறார். இலைகளையும், நிலவையும் அழைத்துப் பேசியதுபோல், கடல் நுரையையும் அழைக்கிறார். கடக்கும் படகு உன்னையும் விட்டுச் செல்கிறது.
 
கவிதையின் பொருள் தர்க்கத்தின் பாற்பட்டதல்ல. சொல்லப்போனால் எதுவொன்று சொற்களின் நேரடிப் பொருளாகிறதோ அது கவித்துவத்துக்கு எதிரானது. கவிதை, சுட்டல்களைக் கொண்டு சொல்லின் பொருளை அதன் அகராதிக் குறிப்புகளுக்கு அப்பால், சொற்களின் பொருளை அவற்றின் கூட்டுத்தொகைக்கு அப்பால் கொண்டு செல்கிறது. அவ்வாறே கவிதை ஒருமையடைகிறது. இந்தக் கவிதையில் சொற்கள் அடுத்தடுத்த அறிவிப்புகளால் பொருள் பெறுவதில்லை, ஒன்றன்மீது ஒன்று அடுக்கப்பட்ட பிம்பங்களாய் பொருள் கொள்கிறது. அதன் பொருள் கற்பனையால் மட்டுமே உணரப்படக்கூடியது. அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் தொனிக்கலாம்- ஆனால் கவிதையை வாசிப்பவனானாலும் சரி, மொழிபெயர்ப்பவனானாலும் சரி, அவனது திறன்களில் மிக முதன்மையானது கற்பனையே. அதைக் குறைத்து மதிப்பிடுவது மொழியின் இயல்பை புரிந்து கொள்ளத் தவறுவதாகும்.
 
இந்தக் கவிதையைப் பேசும்போது நகுல்வசன் எழுப்பிய கேள்வி- இந்தப் பதிவுக்குப் பொருத்தமான முடிவாக இருக்குமென்று நினைக்கிறேன்: 
“அல்லது, இது அன்றாட பிரத்யட்ச உண்மையைக் காட்டிலும் செறிவார்ந்த ஒரு ஸ்டீவென்ஸிய ‘உன்னதத்தை’ நோக்கிய தேடலுக்கு இணையானதாய் இருக்கலாமல்லவா? “நாம் கட்டியெழுப்புவன, வளர்ப்பன, செய்வன, இவை எல்லாம் நாம் சுட்டுவன, நம்புவன அல்லது வேட்பனவுடன் ஒப்பிட்டால் மிகச் சிறியவை,” என்று வாலஸ் ஸ்டீவன்ஸ் ஒரு கடிதத்தில் எழுதினார். “தட்பவெப்பம் பழகிப் போகிறது/ சூழ்நிலமும் மற்றவையும்;/ ஆன்மாவை சன்னதம் கொள்வதற்காகவே/ உன்னதம் கீழிறங்கி வருகிறது,/ ஆன்மாவும் வெட்டவெளியும், / வெறுமையான ஆன்மா/ சூன்யமான வெளியில்.” மகத்தான மனிதர்களின் பீடங்களில் பறவைகள் மலம் கழிக்குமானால், உன்னதமென்பது வேறெங்கிருந்தோதான் வந்தாக வேண்டும். உள்ளத்தின் எல்லையில் தன் கரம் நோக்கும் கற்பனைக்கே அது சாத்தியமல்லவா? நிஜமான இலையும் நிஜமான நிலவும்கூடப் போதாது, நுரைத்தெழும் முத்திரைகளையும் விட்டுச் சென்றாக வேண்டும், புலப்படும் ஒளியைப் பிரிந்தாக வேண்டும், பிம்பத்தின் மெய்ம்மை மட்டுமே கைப்பற்றத்தக்கது”.

மாப்பஸான் – ஸ்லோன் கிராஸ்லி

தமிழில்: பீட்டர் பொங்கல்

guy-de-maupassant

Image Credit: americanliterature.com

மாப்பஸானைக் கண்டுகொள்வதற்கு முன், நான் முதலில் ஜேம்ஸ் ஜாய்ஸ் படிக்க வேண்டியிருந்தது. பிரான்சுக்குப் போவதானால் அயர்லாந்தைக் கடந்து செல்ல வேண்டும் என்ற அளவில்தான் இதற்கு அர்த்தம் இருக்க முடியும். ஏனெனில், நானறிந்து ஜேம்ஸ் ஜாய்ஸுக்கும் மாப்பஸானுக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமில்லை. ‘க்ளே‘ என்ற கதைக்கும் ‘தி நெக்லஸ்‘ என்ற கதைக்கும் இடையே சில மெல்லிய இணைகோடுகள் இருக்கலாம் (சலிப்பில் ஆழ்ந்திருக்கும் அழகிய பெண்ணின் தாளவொண்ணா குமுறல்). மாப்பஸான், ஜாய்ஸ் இருவரும் காத்திரமான மீசை வைத்திருந்தார்கள், இருவருக்கும் மேக நோய் இருந்தது. ஆனால் இதில் கடைசியாகச் சொன்ன நிலை இருவரையும் பிணைக்கக்கூடிய உரமாக முடியாது; மேக நோய் என்பது மறைந்த ஆண் எழுத்தாளர்கள் விஷயத்தில், சாட் பரிட்சைகளில் உன் பெயரைப் பிழையின்றி எழுதுவதற்கு இணையான ஒன்று. ஆனால்கூட, எட்டாம் வகுப்பு ஆசிரியராய் இருப்பதற்கு அநியாயத்துக்கு தகுதியற்றிருந்த என் ஆங்கில ஆசிரியைக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும் – இந்த இரு படைப்பாளிகளும் என் நினைவில் பிரிக்க முடியாதபடி பிணைந்திருக்கிறார்கள்.

முதலில், அவள் ‘டப்ளினர்ஸ்‘ கதையை நாசம் செய்தாள். ‘தி டெட்‘ கதைக்கு அவள் தந்த விளக்கம்? சோகம். பனிப்பொழிவு. அடுத்தது. ‘எவலைன்‘? ரயில் பயணம். பெண்கள். அடுத்தது. ஒரு கதையின் சாரத்தை அளிப்பதற்கும் சோம்பேறித்தனத்திற்கும் வேறுபாடு இருக்கும் என்றால், அவளது வகுப்புகள்தான் அதன் அளவை. ஒருவேளை, இந்த அம்மணி வேறெங்காகிலும் இருக்க வேண்டியவளாய் இருக்கலாம். இங்கு இருப்பதற்கு பதில், இந்நேரம் “ஹேங் இன் தேர்” என்று எழுதப்பட்ட பூனை போஸ்டர்களைத் தன் விரல் நகங்களால் கிழித்துக் கொண்டு ஆசிரியர்களுக்கான அறையில் அவள் ஒரு சந்திப்பிற்காகக் காத்திருப்பாளாக இருக்கும். நான் சொல்ல வருவது இதுதான் – எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில வகுப்புகள், அதன் ஆசிரியர்களுக்கு நிறைவளிக்க வாய்ப்பில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் அவள் கதை குறித்த விவாதங்களை வெகு வேகமாகக் கடந்து சென்றாள் என்பதுதான் – எங்களில் மோசமானவர்களைக்கூட அவளது வேகம் ஆச்சரியப்படுத்தியது. ‘அரபி’‘ கதைக்கு அவள் அளித்த விளக்கம்தான் என்னைத் தீர்த்துக் கட்டியது. தன்னைவிட வயதில் மூத்த பெண் மீது மோகம் கொண்ட ஒரு சிறுவனின் கதை ‘அரபி‘. கிராமத்தில் நடக்கும் சந்தைக்கு தான் போகப் போவதாக அவளிடம் சொல்கிறான், பதிலுக்கு நினைவுப் பொருள் ஏதேனும் வாங்கிவரச் சொல்கிறாள் அவள். அவள் பணித்த செயலால் குதூகலிக்கும் அவன், மிகப் பொருத்தமான ஒரு பரிசைத் தேடி இறுதியில் கண்டெடுக்கிறான். ஆனால், அந்தக் கடையை நடத்தும் பெண்மணி அவனைப் பார்த்துச் சிரித்தபடி உதவி வேண்டுமா என்று கேட்கும்போது அவன், இல்லை, வேண்டாம், நன்றி என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறான்.

“பார்த்தீர்களா,” என்று என் ஆசிரியை கதையை முடித்தாள், “சில சமயம் ஜாய்ஸ் கதைகளில் அர்த்தமே இருப்பதில்லை, அதுதான் விஷயம்”

நிச்சயம் அதுவல்ல விஷயம். தனியார் பள்ளி அமைப்பில் பணியமர்த்தப்பட்டிருக்கும் அமெச்சூர் நிஹிலிஸ்ட் நீயென்றால், அப்போது வேண்டுமானால் அதுதான் உனக்கு விஷயமாக தெரியலாம். ஆனால் உலகில் ஒருவர் மீதொருவர் ஒருதலைக்காதல் கொண்ட எந்த ஒரு பதின்பருவ கும்பலாக இருந்தாலும் அவர்களுக்கு இந்தக் கதை புரிந்திருக்கும்: கடையை கவனித்துக் கொண்டிருக்கும் பெண்மணி அவன் திசையில் தன் வசீகரப் புன்னகையை வீசும்போது, நம் நாயகன் தன் காதலி நாகரீகமாகப் பேசியிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொள்கிறாள், அவள் அவனிடம் சல்லாபிக்கவில்லை. அப்போதே அவனது காதல் ஜோதி அணைந்து போகிறது, அதனிடத்தில் சங்கடப் புகைதான் மிஞ்சி நிற்கிறது. நான் அப்போது ‘ஆனி ஹால்‘ பார்த்திருக்கவில்லை, ஆனால் பார்த்திருந்தால், ஜேம்ஸ் ஜாய்ஸ் என் வகுப்பறைக்குள் நுழைந்து அந்த மார்ஷல் மக்லூஹன் காட்சியை அரங்கேற்றியிருக்க வேண்டும் என்று விரும்பியிருப்பேன். ‘அரபி‘ அப்போதே எனக்கு மிக முக்கியமான கதையாகிப் போனது, பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டிய ஒரு சிறு இலக்கியப் பொருள் அது. (பதின்பருவ உள்ளத்தின் வினையை என்னவென்று சொல்ல- அஞ்சாதே, ஜேம்ஸ், நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்!). எனவே, அடுத்து கிழிபடப் போவது கை டி மாப்பஸான் என்ற ஒரு பிரெஞ்சுக்காரன் என்பதை பாடத்திட்டத்தில் பார்த்ததும் எனக்குக் கவலை வந்துவிட்டது.

என் வாழ்க்கையில் முதல் முறையாக நான் பாடம் நடத்தப்படும் பக்கங்களைக் கடந்து வாசித்துப் பார்க்கிறேன். முதலில் ‘தி நெக்லஸ்‘ கதையில் துவங்குகிறேன் (அதுதான் சிறிதாக இருக்கிறது). அதன்பின் ரத்தத்தை உறைய வைக்கும் ‘பூல் டி ஸ்வூஃப்‘ (Boule de Suif). இரு கதைகளின் முடிவுகளும், அவற்றின் தாங்கிக்கொள்ள முடியாத அளவு கச்சிதமான திருப்பங்களும், எனக்கு அதிர்ச்சியளித்தது நினைவிருக்கிறது. நான் அந்தப் புத்தகத்தின் பக்கங்களையும் நினைவில் வைத்திருக்கிறேன், அவற்றின் அளவையும்கூட. அதன் எழுத்துரு எனக்கு நினைவிருக்கிறது என்று எண்ண விரும்புகிறேன், ஆனால் அதை மறந்துவிட்டேன் என்பதுதான் உண்மையாக இருக்கும். ஆனால் இப்போதும் பார்க்க முடிகிறது, நான் என் படுக்கையில் உட்கார்ந்திருக்கிறேன், திறந்த வாய் மூட மறந்து அமர்ந்திருக்கிறேன், ஒரு தந்திரக் காட்சியை இப்போதுதான் கண்டதுபோல். மீண்டும் ‘தி நெக்லஸ்‘ கதையைப் படிக்கிறேன். மாப்பஸான் கதைகளை எனக்கு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலை உணர்கிறேன், அவற்றை நானாகவே புரிந்து கொள்ள வேண்டும், அவற்றின் ஆசிரியர் என்னிடம் நேரடியாகப் பேச வேண்டும். ஏன், அந்த போஸ்டர்- கிழிக்கும் கள்ளக் காட்டுப்பூனை. கடைசியில் அவள்தான் என் ஆசிரியர்களில் மிகச் சிறந்தவராக இருந்தார். கொஞ்சமும் ஒளிவுமறைவற்ற அவளது ஆர்வமின்மைக்கு அப்பால் அவள் என்னைக் கதைகளை நேசிக்கச் செய்துவிட்டாள்.

பூல் டி  ஸ்வூஃப்‘ கதைக்கு அவளது விளக்கம்? விபசாரம். யுத்தம்.

நன்றி, இப்போது என் முறை.

நான் வளர்ந்து விட்ட நிலையில் என் இப்போதைய பிரச்சனை, இந்தக் கதைகளின் ஆற்றல் குறைந்து வருகிறது என்பதுதான் – அதிலும் குறிப்பாக, ‘தி நெக்லஸ்‘ கதை. காலம் போகிறது, முதல் காதல்களின் நினைவழிகிறது என்பதும் இதற்கொரு காரணம். ஆனால் என் தேர்வுகளும் இதற்கான காரணம்தான். கடந்த சில ஆண்டுகளாக நான் வேறெதையும் நினைத்துப் பார்க்கவில்லை என்பதைச் சொல்ல வேண்டும். ‘தி நெக்லஸ்‘ கதையை என் நாவலுக்கான இன்ஸ்பிரேஷனாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்தக் கதையைத் தனித்தனியாய்ப் பிரித்து ஒவ்வொரு பகுதியையும் திருப்பிப் பார்த்து மீண்டும் இணைத்திருக்கிறேன். ‘தி க்ளாஸ்ப்‘ கதையின் பிரதான பாத்திரங்கள் பொய்யான லட்சியங்களை ஒரு சங்கிலித் தொடராய்த் விரட்டிச் செல்கின்றனர்- ‘தி நெக்லஸ்‘ கதையின் அரைகுறை இரக்கம் கொண்ட நாயகியைப் போலவே. கதை பற்றிய என் முதல் உணர்வுகளைப் பொடிப்பொடியாய்த் துகளாக்க, நான் அந்தக் கதையைப் பற்றி சிலரிடம் நேர்முகம் காண்கிறேன்- நினைத்துப் பார்க்குமிடத்தில் திரும்பச் சொல்லச் செய்கிறேன். அவ்வளவு முக்கியமாய் இருந்த இந்தக் கதை எனக்கு ஒன்றுமில்லாமல் போகும்வரை நான் மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டேயிருக்கிறேன். இயல்பாகவே, எனக்கு இந்தப் பரிமாற்றம் பிடித்திருக்கிறது. இதிலிருந்து எனக்கு ஒரு முழு புத்தகமே கிடைத்திருக்கிறது. காமத்துக்குரிய பதார்த்தங்கள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன.

வேறொரு கதையைத் தன்னிகழ்வாய் வாசிக்கும்போதுதான் இந்தக் கதையை மீட்க நேர்ந்தது. ஒரு ஜனவரி மாதப் பனிப்புயலில், ஐசாக் பாபெலின் “கை டி மாப்பஸான்” என்ற கதை எதிர்ப்பட்டது. மாப்பஸான் வெறியள் என்று சொல்லிக்கொண்டு திரியும் என்னைப் போன்ற ஒருத்திக்கு இந்தக் கதையைப் படித்ததேயில்லை என்பது கேலிக்குரிய விஷயம்தான். மாப்பஸான் கதைகளை மொழிபெயர்த்து ஒரு பணக்கார போஷகருக்கு காதல் வலை விரிக்கும் ரஷ்ய இளைஞன் ஒருவனைப் பற்றிய இந்தக் கதையில் அவன் வீடு திரும்பி, மாப்பஸானின் கொடூர மரணம் பற்றிய தகவலை வாசிக்கிறான் (மாப்பஸானின் மரணத்தின் மிகக் குரூரமான விஷயம் அவரது பால்வினை நோயல்ல). காமம். உயர்குடிகள். பிரெஞ்சு விஷயங்கள். ஆம், அந்தத் தளங்கள் அத்தனையையும் அந்தக் கதை கையைப் பிடித்து இழுத்தது. ஆனால், பாபெலின் கதை உண்மையில் வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலுள்ள அந்த மெல்லிய இழை பற்றியது, உயர் கலையையும் அடிமட்டக் குப்பையையும் பிரிக்கும் மெல்லிய இழை. “சொற்றொடர் ஒன்று இவ்வுலகில் பிறக்கிறது, அது நன்றும் தீதுமாய் ஒரே சமயத்தில் இருக்கிறது. ரகசியம் ஒரு சிறிய, ஏறத்தாழ கண்ணுக்கே தெரியாத  திருகலில் இருக்கிறது. அதைத் திருப்பும் கோலை நீ உன் கரங்களில் ஏந்தியிருக்க வேண்டும், மெல்ல மெல்ல வெம்மை அடையும் அதை நீ ஒரு முறைதான் திருப்ப முடியும், இரண்டாம் முறை திரும்பாது”. நான் என் பதின்பருவத்தில் சிறுகதைகள் வாசிக்கும்போது அடைந்த தூய நேசத்துக்கு “கை டி மாப்பஸான்” கதை என்னை மீண்டும் அழைத்துச் சென்றது. மாப்பஸான் கதைகளில் ஒன்றை நான் என் புனைவுக்குள் சேர்த்துக் கொள்ள நினைப்பதற்கு முன்பான காலம் அது.

பாபெல் கதையைப் படித்து முடித்தபின், நான் என் அறையின் குறுக்கே நடந்து, அலமாரியில் இருந்த ஒரு தொகுப்பை எடுத்து, ‘தி நெக்லஸ்‘ கதை இருக்கும் பக்கத்தைப் புரட்டிப் பிரித்தேன். அதை வாசித்தேன் – உண்மையாகவே வாசித்தேன்- முன் எப்போதும் நான் அதை வாசித்திராதது போல். தலைக்கனம். இழப்பு. பாரிஸ். உண்மையைச் சொன்னால், இது ஒன்றும் அவ்வளவு மோசமான விளக்கம் அல்ல.

(ஸ்லோன் கிராஸ்லியின் நாவல், ‘தி க்லாஸ்ப்’ இம்மாதம் பேப்பர்பாக் வடிவில் பதிப்பிக்கப்படுகிறது)

நன்றி – The Necklace, Sloan Crossley, The Paris Review