எழுத்து

நில்லா கணத்தின் கவிதை – சரவணன் அபி

சரவணன் அபி

இன்றிரவு மிகச்சரியாக
ஒரு நொடிப்பொழுதில்
இரையிட்டு நெய்சேர்த்து
அணிசேர்த்து ஊன்வளர்த்த
இளமை
முன்வாசல் வழியாக
கடந்து மறையும்
என்பது எப்படித் தெரிந்தது

பிறந்தது முதல் இக்கணம் வரை
ஏற்றிக் கனத்த அனுபவப்பொதிகளில்
கிழிந்தொழுகியது போலும்
நுண்ணுணர்வு

நோயில் புரள்பவனின் சத்தமற்ற வாதை
தொடநீளும் விரல்களின் உதாசீனங்கள்
நிறைந்திருக்கும் இந்த இரவில்
இதுபோன்று யுகங்கள்தோறும்
இளமைகள் கரைந்து வந்திருக்கின்றன
புதிதொன்றுமில்லை

கரைந்துகூடி வரும் முகிற்கருமையின் முன்னே
வாயிலை வெளிச்சப்படுத்தி
விளக்கொன்றும் ஏற்றுவதற்கில்லை
காத்திருப்பவனின் அனுபவம் என்றுமே சிறந்தது

நிலைச்சட்டத்திற்குள் நிலையாது
அசையும் திரைச்சீலையில்
அகப்படாதலையும் வண்ணக்குலைவு

இத்தனை பெரிய அறை
எத்தனையோ சன்னல்கள்
இருப்பினும்
வலமிருந்து குதித்து இடம் செல்கிறது
தொலைவில் பதிந்திருக்கும்
மின்னும் கண்களுடன்
கரிந்து கவிந்துவரும்
இருளின் நிறம்தோய்ந்த கரும்பூனை

எனைத் தவிர எதுவும்
உடைந்துவிடக்கூடாதென்பதில்
உறுதியாகவிருக்கிறேன்
வாடித்தலைக்கவிழ்ந்த பூச்சருகுகளை
மென்மையாக வருடும் இந்த இரவின்
கூதற்காற்றை என்ன சொல்வது

விளக்கின்றி என் வெம்மை மட்டுமே
துணையிருக்கும் இந்த அறையில்
கனத்த சத்தமெழுப்பாத மெத்தையில்
கால்கள் மடித்துக் காத்திருக்கிறேன்
குளிர்காற்று மெதுவே நகரும்
முன்வாசலை நோக்கியபடி

எனக்கு மிகுந்த நேரமில்லை
புலர்வதற்குள் பார்த்துவிடவேண்டும்
கடக்கும் கணத்தை ​

அவனை அவர்கள் தனியாய் விட்டுச் சென்ற இரவு -யுவான் ரூல்ஃபோ

“நீங்கள் ஏன் இவ்வளவு நிதானமாகப் போகிறீர்கள்?” என்று பெலிசியானோ ருவலஸ் முன்னால் போய்க் கொண்டிருப்பவர்களைக் கேட்டான். “இப்படிப் போய்க் கொண்டிருந்தால் கடைசியில் நமக்கு தூக்கம் வந்து விடும். நீங்கள் அங்கே சீக்கிரம் போய்ச் சேர வேண்டாமா?”

“நாளைக் காலையில் பொழுது விடியும்போது நாம் அங்கே போய்ச் சேர்ந்திருப்போம்,” என்று பதில் சொன்னார்கள்.

அவன் அவர்கள் கடைசியாய்ப் பேசிக் கேட்டது அதுதான். அவர்களது கடைசி வார்த்தைகள். ஆனால் அவற்றை அப்புறம் அவன் நினைத்துப் பார்ப்பான், மறு நாள்.

இரவின் மங்கலான ஒளியைப் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியில், தரையை உற்றுப் பார்த்தபடி அவர்கள் மூன்று பேரும் அங்கே நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

“இருட்டாக இருப்பதுதான் நல்லது. இப்படி இருந்தால் அவர்கள் நம்மைப் பார்க்க மாட்டார்கள்.” இதையும் சொன்னார்கள், சிறிது நேரம் முன்னால், அல்லது அதற்கு முந்தைய நாள் இரவு. அவனுக்கு நினைவில் இல்லை. தூக்கக் கலக்கம், சரியாய் யோசிக்க முடியவில்லை.

இப்போது, மேலே ஏறிச் செல்கையில், அது மீண்டும் இறங்கி வருவது தெரிந்தது. அது அவனை நெருங்கி வருவதை அவன் உணர்ந்தான். அவன் உடலின் மிகவும் களைத்த உறுப்பைத் தேடி அவனைச் சுற்றிக் கொண்டிருப்பது போலிருந்தது. துப்பாக்கிகள் தொங்கிக் கொண்டிருந்த அவனது முதுகில், அவன் மேல் அது இறங்கும் வரை. தரை சமதளமாக இருக்கும்போது அவன் வேகமாய் நடந்தான். சரிவு ஆரம்பிக்கும்போது, அவன் நிதானித்தான்; அவனது தலை மெல்ல துவளத் துவங்கியது. அவன் நடை தயங்கத் தயங்க அவன் எடுத்து வைக்கும் அடிகள் சிறிதாகின. மற்றவர்கள் அவனைக் கடந்து சென்றார்கள். தூக்கத்தில் அவன் தலை துவண்டு விழுகையில், அவர்கள் வெகு தூரம் முன்னே சென்றிருந்தார்கள்..

அவன் பின்தங்கிக் கொண்டிருந்தான். அவன் முன் சாலை நீண்டு சென்றது, ஏறத்தாழ அவன் கண்னளவுக்கு உயர்ந்து சென்றது. அப்புறம் துப்பாக்கிகளின் சுமை. அப்புறம் அவன் மீது, அவனது முதுகு வளைந்திருக்கும் இடத்தில் ஊறிக் கொண்டிருக்கும் தூக்கம்.

காலடி ஓசைகள் அடங்குவதை அவன் கவனித்தான்; எப்போதிருந்து, யாருக்குத் தெரியும் அவன் எத்தனை இரவுகளாய் கேட்டுக் கொண்டிருக்கிறான் அந்த வெற்றுக் காலடிகளின் ஒலிகளை: “லா மக்தலேனாவிலிருந்து இங்கு, முதல் நாள் இரவு; பின்னர் இங்கிருந்து அங்கே, இரண்டாம் நாள்; அதன்பின் இது மூன்றாம் நாள்.” அதிக நாட்கள் ஆகாது என்று அவன் நினைத்துக் கொண்டான், பகல் பொழுதில் மட்டும் நாங்கள் தூங்கியிருந்தால். ஆனால் அவர்களுக்கு அதில் விருப்பமில்லை: “தூங்கிக் கொண்டிருக்கும்போது நம்மைப் பிடித்து விடுவார்கள்,” என்று சொன்னார்கள். அப்புறம் அது மிகவும் மோசமாய்ப் போய் விடும்”

“யாருக்கு மோசமாக இருக்கும்?”

இப்போது தூக்கம் அவனைப் பேசச் செய்தது. “நான் அவர்களைக் காத்திருக்கச் சொன்னேன். இன்று நாம் ஓய்வு எடுக்கும் நாளாக இருக்கட்டும். நாளை நாம் ஒற்றை வரிசையில் செல்வோம், நமக்கு இன்னும் அதிக ஆர்வம் இருக்கும், அதிக பலம் இருக்கும். நாம் ஓட வேண்டியதாகக்கூட இருக்கலாம். என்ன வேண்டுமானால் நடக்கலாம்”

அவன் கண்களை மூடிக் கொண்டு நின்றான். “இது மிக அதிகம்,” என்றான். “அவசரப்பட்டு என்ன சாதிக்கப் போகிறோம்? ஒரு நாள். இத்தனை நாட்களை வீணாக்கி விட்டோம், இந்த ஒரு நாளில் என்ன ஆகப் போகிறது”. அவன் உடனே கத்தினான், “எங்கே இருக்கிறீர்கள்?”

அதன்பின் கிட்டத்தட்ட ரகசியமாய்: “அப்படியானால் போய்க் கொண்டிருங்கள். போய்க் கொண்டிருங்கள்!”

அவன் ஒரு மரத்தில் சாய்ந்து கொண்டான். அங்கு நிலம் சில்லிட்டிருந்தது, அவனது வியர்வை குளிர்ந்த நீராய் மாறியது. அவர்கள் அவனிடம் சொல்லியிருந்த சியர்ரா இதுவாகத்தான் இருக்க வேண்டும். கீழே கொஞ்சம் வெப்பமாகத்தான் இருக்கும். ஆனால் இப்போது இங்கே இந்தக் குளிர் உன் ஆடைகளுக்குள் புகுந்து கொள்கிறது: “என் சட்டையை உயர்த்தி தம் சில்லிட்ட விரல்களால் என் தோலைத் தடவுவது போல்”

பாசி படிந்திருந்த தரையில் அவன் சரிந்தான். இரவை அளவிடுவது போல் தன் கைகளை விரித்து, மரங்களாலான சுவற்றை எதிர்கொண்டான். டர்பண்டைன் மணம் கமழ்ந்திருக்கும் காற்றைச் சுவாசித்தான். அதன் பின் அவன் உறக்கத்தினுள் மெல்ல மெல்ல அமிழ்ந்தான், அங்கே அந்தக் கள்ளிகளுக்கிடையே, தன் உடல் கெட்டிப்பதை உணர்ந்தபடி.

அதிகாலைக் குளிர் அவனை எழுப்பியது. பனித்துளிகளின் ஈரம்.

அவன் தன் கண்களைத் திறந்தான். இருண்ட கிளைகளுக்கு மேலே, உயரத்தில், தெளிந்த வானில் கண்ணாடியென ஒளி ஊடுருவும் நட்சத்திரங்களைப் பார்த்தான்.

“இருட்டிக் கொண்டிருக்கிறது,” என்று நினைத்துக் கொண்டான். அதன்பின் அவன் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தான்.

உரத்த குரல்களையும் சாலையின் உலர்ந்த மண்ணில் ஒலித்த குளம்பொலிகளையும் கேட்டு அவன் விழித்துக் கொண்டான். தொடுவானின் விளிம்பில் மஞ்சள் ஒளித் தீற்றல்.

சுமைதாங்கிக் கழுதைகளை மேய்த்துக் கொண்டு வந்தவர்கள் அவனை உற்றுப் பார்த்துக் கொண்டே அவன் அருகில் வந்தார்கள். “குட் மார்னிங்,” என்று அவனை வாழ்த்தினார்கள். ஆனால் அவன் பதில் சொல்லவில்லை.

தான் என்ன செய்ய வேண்டும் என்பது அவன் நினைவுக்கு வந்தது. ஏற்கனவே பொழுதாகி விட்டது. காவல் வீரர்களைத் தவிர்க்க அவன் இரவில் சியர்ராவைக் கடந்திருக்க வேண்டும். இந்தக் கணவாய் மிகவும் பாதுகாக்கப்பட்ட ஒன்று. அப்படித்தான் அவர்கள் அவனிடம் சொல்லியிருந்தார்கள்.

கொத்தாய்க் கட்டப்பட்டிருந்த துப்பாக்கிகளை எடுத்து தன் தோளில் தொங்கவிட்டுக் கொண்டான். சாலையின் விளிம்பைத் தாண்டி, சூரியன் உயர்ந்து கொண்டிருந்த, சிகரத்தை நோக்கி நடந்தான். அவன் மேலேறினான், கீழிறங்கினான், மேடுகள் நிறைந்திருந்த மலைகளைக் கடந்து நடந்தான்.

“அவனை நாங்கள் அங்கே உயரத்தில் பார்த்தோம். அவன் இப்படி இப்படி இருக்கிறான், நிறைய ஆயுதங்கள் வைத்திருக்கிறான்,” என்று கழுதை மேய்ப்பவர்கள் சொல்வது அவன் காதில் ஒலிப்பது போலிருந்தது.

அவன் துப்பாக்கிகளை கீழே எறிந்தான். அதன்பின் கார்ட்ரிட்ஜ் பெல்ட்களையும் அகற்றினான். அச்சமயத்தில் அவன் எடை குறைந்தது போலுணர்ந்தான். கழுதை மேய்ப்பவர்களுக்கு முன் அடிவாரம் போய்ச் சேர்ந்து விட வேண்டும் என்பது போல் ஓடத் துவங்கினான்.

“மேலே போக வேண்டும், உயரத்தில் இருந்த சமதளப் பிரதேசத்தைச் சுற்றி வந்து கீழே இறங்கிப் போக வேண்டும்”. அதைதான் அவன் செய்து கொண்டிருந்தான். அவன் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் சொன்னார்களோ, அதைதான் அவன் செய்து கொண்டிருந்தான். ஆனால் அவர்களுடன், அதே சமயத்தில் அல்ல.

அவன் பள்ளத்தாக்கில் சரிந்தோடிய பிளவின் விளிம்பை அடைந்தான். தொலைவில் பழுப்பாய் அகன்று விரிந்திருந்த சமவெளியைப் பார்க்க முடிந்தது.

“அவர்கள் அங்குதான் இருக்க வேண்டும். சூரிய ஒளியில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார்கள், அவர்கள் மீது எந்த அச்சமும் கவிந்திருக்காது”, என்று நினைத்துக் கொண்டான்.

அவன் மலைச்சரிவினுள் இறங்கினான், உருண்டு புரண்டு எழுந்து ஓடி மீண்டும் உருண்டுச் சென்றான்.

“தெய்வச் சித்தம்,” என்று சொல்லிக் கொண்டான். மீண்டும் மீண்டும் உருண்டு இறங்கினான்.

இன்னமும் அவன் காதில் கழுதை மேய்ப்பவர்கள் அவனிடம் “குட் மார்னிங்!” என்று சொன்னது ஒலித்துக் கொண்டிருப்பது போலிருந்தது. அவனது கண்கள் அவனை ஏமாற்றுவது போலிருந்தது. காவல் காத்துக் கொண்டிருப்பவர்களில் முதலில் இருப்பவனிடம் போய், “அவனை இன்ன இன்ன இடத்தில் பார்த்தோம். அவன் சீக்கிரம் இங்கு வந்து விடுவான்,” என்று அவர்கள் சொல்வார்கள்.

திடீரென்று அவன் அசையாமல் நின்றான்.

கிறித்துவே!” என்றான். “விவா கிறிஸ்டோ ரே!” என்று அலறியிருப்பான், ஆனால் தன்னை அடக்கிக் கொண்டான். உறையிலிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து உள்ளே பதுக்கிக் கொண்டான், தன் சட்டைக்குள், அது தன் உடலுக்கு நெருக்கமாய் இருப்பதை உணர்வதற்காக. அது அவனுக்கு துணிச்சல் அளித்தது. மெல்ல அடியெடுத்து வைத்து, அவன் அக்வா ஜார்காவின் பண்ணை நிலங்களை நெருங்கினான். அங்கு பெரிதாய் கனன்று கொண்டிருந்த நெருப்புகளைச் சுற்றி குளிர் காய்ந்து கொண்டிருந்த ராணுவ வீரர்களின் பரபரப்பை கவனித்தான்.

விலங்குகளைப் பூட்டி வைத்திருந்த கிடையின் வேலிகள் வரை அவன் சென்றான், அவர்களை இப்போது அவனால் இன்னும் தெளிவாய்ப் பார்க்க முடிந்தது. அவர்கள் முகங்களை அடையாளம் காண முடிந்தது. அது அவர்கள்தான், அவனது மாமா டானிஸ்சும் மாமா லிப்ராடோவும். ராணுவ வீரர்கள் நெருப்பைச் சுற்றி வந்து கொண்டிருக்கையில், அவர்கள் முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருந்தார்கள்- கிடையின் மத்தியில் ஒரு சீமைக்கருவேலி மரத்தில் தொங்க விடப்பட்டு. கணப்புக்கு ஏற்றப்பட்ட நெருப்பிலிருந்து எழும் புகை குறித்த உணர்வை இழந்து விட்டது போலிருந்தார்கள், கண்ணாடி போல் வெறித்திருந்த அவர்கள் விழிகளில் புகை மூட்டமிட்டது, முகங்களில் சாம்பல் பூசியது.

அவன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. வேலியோரமாய் அவன் மெல்ல ஊர்ந்து சென்றான், ஒரு மூலையில் பதுங்கிக் கிடந்தான். அவன் உடலின் இறுக்கத்தை மெல்லத் தளர்த்திக் கொண்டான், தன் வயிற்றில் ஒரு புழு நெளிவதை உணர்ந்தாலும்.

அவனுக்கு மேல், உயரத்தில் யாரோ பேசக் கேட்டான்:

“இவர்களைக் கீழே இறக்காமல் எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

“இன்னொருவன் வருவதற்காகக் காத்திருக்கிறோம். மூன்று பேர் இருந்ததாகச் சொல்கிறார்கள், எனவே மூன்று பேர் இருந்தாக வேண்டும். தப்பித்தவன் ஒரு சிறுவன்தான் என்று சொல்கிறார்கள்; சிறுவனோ இல்லையோ, என் லெப்டினென்ட் பர்ராவைவும் அவரோடிருந்தவர்களையும் மறைந்திருந்து தாக்கி அழித்தவன் அவன்தான். இந்த வழியில்தான் அவன் வந்தாக வேண்டும், அவனைவிட வயதானவர்கள், அனுபவம் அதிகம் இருந்தவர்கள் மற்ற இருவரும் இந்த வழியில்தான் வந்திருக்கிறார்கள். இன்று அல்லது நாளை அவன் வராவிட்டால் இந்த வழியாக வரும் முதல் ஆளைக் கொன்றுவிட வேண்டியதுதான் என்று என் மேஜர் சொல்கிறார். அவரது ஆணையை அப்படி நிறைவேற்றிவிட வேண்டியதுதான்”.

“ஆனால் நாம் ஏன் அவனைத் தேடிக் கொண்டு போகக்கூடாது? அதைச் செய்தால் நம் சலிப்பாவது தீரும்”

“அதற்கெல்லாம் அவசியமில்லை. அவன் இந்த வழியாகத்தான் வந்தாக வேண்டும். கடோர்சில் இருக்கும் கிறிஸ்டரோக்களுடன் சேர அவர்கள் எல்லாரும் கொமாஞ்சாவில் உள்ள சியர்ராவுக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போகவிடுவதும் நல்லதாகத்தான் இருக்கும். அவர்களுடைய கூட்டாளிகள் லாஸ் ஆல்டோஸ் உடன் போரிடப் போகிறார்கள்”

“அதுதான் சரியாக இருக்கும். இறுதியில் நம்மையும் அந்தத் திசையில் செல்லச் சொல்கிறார்களா என்பதையும் பார்க்க வேண்டும்”

பெலிசியானோ ருவலஸ் தன் வயிற்றில் புரண்டு கொண்டிருந்த கொந்தளிப்பு அடங்கச் சிறிது நேரம் காத்திருந்தான். அதன்பின் ஒரு வாய் காற்றை முழுங்கினான், தண்ணீருக்குள் ஆழச் செல்லப் போகிறவன் போல. அதன்பின், தரையோடு தரையில் ஊர்வது போன்ற அளவு பதுங்கி, கைகளால் தன் உடலை உந்தித் தள்ளி நடக்க ஆரம்பித்தான்.

ஓடைப் பள்ளத்தின் விளிம்புக்கு வந்ததும் அவன் அதனுள் இறங்கி நிமிர்ந்து நின்று ஓட ஆரம்பித்தான், அதன் புதர்களிடையே ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டு. ஓடைப் பள்ளம் சமவெளியில் தன்னைக் கரைத்துக் கொள்வதை உணரும் வரை அவன் திரும்பிப் பார்க்கவில்லை, நிற்கவுமில்லை.

அதன் பின் நின்றான். அவனுக்கு மூச்சிரைத்துக் கொண்டிருந்தது. அவன் உடல் அதிர்ந்து கொண்டிருந்தது.

(This is an unauthorised translation of the short story, “The Night they Left him Alone”, originally written in Spanish by Juan Rolfo, and translated into English by George D. Schade. This Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only).

விஷால் ராஜாவிடம் சில கேள்விகள் – நரோபா

நரோபா

புதிய குரல்கள் – 1 – விஷால் ராஜாவின் ‘எனும்போது உனக்கு நன்றி’யை முன்வைத்து’ – நரோபா 

உங்களைப்பற்றி- பிறப்பு, கல்வி…?

விஷால் ராஜா: 1993ம் வருடம் பிறந்தேன். படித்து வளர்ந்தது முழுக்க சென்னை புறநகரை சேர்ந்த திருநின்றவூரில். 2014ம் வருடம் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தேன். 3 வருடங்களாக தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இலக்கிய பரிச்சயம் எப்படி? எப்போது?

விஷால் ராஜா: சிறு வயதிலேயே நூலகம் அறிமுகம் ஆகிவிட்டது. இலக்கியம் சார்ந்த வாசிப்பு பள்ளி இறுதி ஆண்டுகளில் தொடங்கியது. கல்லூரி காலத்தில் தீவிரம் பெற்றது.

உங்கள்  முதல் கதை எப்போது வெளியானது?

விஷால் ராஜா:  2012 என நினைக்கிறேன். அச்சில் வெளியான முதல் கதை “ஞாபகங்களின் கல்லறை”. உயிர் எழுத்து பத்திரிக்கை.

எது உங்களை எழுதத் தூண்டியது? அல்லது ஏன் எழுதுகிறீர்கள்?

விஷால் ராஜா: எழுத்தைத் தவிர வேறெதுவும் அர்த்தமோ மன நிறைவோ அளிப்பதாக இல்லை.

உங்கள் ஆதர்ச எழுத்தாளர்கள் யார் ?

விஷால் ராஜா: ஒவ்வொரு நல்ல படைப்புமே எனக்கு ஏதோவொரு வகையில் உந்துதல் கொடுக்கிறது. எனவே ஆதர்சங்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் அசோகமித்திரன் மற்றும் ஜெயமோகன்.

கவிதைகள் எழுதியதுண்டா?

விஷால் ராஜா: ஆம். ஆரம்ப காலத்தில் நிறைய எழுதியிருக்கிறேன். சொல்வனம், வல்லினம் போன்ற இணைய இதழ்களில் அவை பிரசுரம்கூட ஆகியிருக்கின்றன. கவிதைகளை விரும்பி வாசிக்கிற ஒருவனாகவே நான் எப்போதும் இருந்திருக்கிறேன். ஆனால் புனைவே என்னுடைய வடிவம் என்பதில் எனக்கு தொடக்கம் முதலே தீர்மானமான எண்ணம் உண்டு.

சிறுகதைகள் உங்களுக்குரிய வடிவமாக உணர்கிறீர்களா?

விஷால் ராஜா: இப்போது யாரும் ஒற்றைச் சம்பவத்தையோ அல்லது ஒரு முரண்பாட்டையோ மட்டுமே குறிப்பிட சிறுகதை வடிவத்தை பயன்படுத்துவதில்லை. அப்படி இறுக்கத்திற்கும் கச்சிதத்திற்குமான வடிவம்தான் சிறுகதை என்று கூறினால் அது நிச்சயம் எனக்கான வடிவம் இல்லை. மாறாக அதன் எல்லைகள் விஸ்தீரணம் அடைந்திருக்கும் இன்றையச் சூழலில் சிறுகதையை நான் எனக்கான வடிவமாகவே உணர்கிறேன்.

நாவல் எழுதும் எண்ணமுண்டா?

விஷால் ராஜா: உறுதியாக உண்டு.

தமிழின் தற்கால இலக்கிய போக்கு குறித்து உங்கள் அவதானிப்பு என்ன?

விஷால் ராஜா: குழப்பமாக இருக்கிறது. நிறைய விஷயங்களை எதிர்மறையாக சொல்லலாம். ஒரு எழுத்தாளனாக என் மேலேயே எனக்கு பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.  சமூக வலைதளங்கள் பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கும் நிலையில் பொழுதுபோக்கு என்கிற அம்சம் எல்லா மட்டங்களிலும் தீவிரத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. நாம் கேளிக்கையை மட்டும் விரும்புகிறவர்களாக மாறிக் கொண்டிருக்கிறோம். பொதுபுத்தி என்பது இனிமேல் மசாலா திரைப்படங்களை மட்டும் சார்ந்தது அல்ல. வாசிப்பு மற்றும் எழுத்து செயல்பாடுகளுக்குள் நுழைந்துக் கொண்டிருக்கும் விட்டேத்தித்தனமும்தான்.  இக்கருத்தை சமீபத்தில் சபரிநாதன் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

உங்கள் முதல் சிறுகதை தொகுப்புக்கு எத்தகைய எதிர்வினைகள் வந்தன?

விஷால் ராஜா: நூல் வெளியாகி ஆறு மாதங்கள் ஆகியிருக்கின்றன. பெரிதாக கவனிக்கப்பட்டது என்று சொல்ல முடியாது. எழுத்தாளர்கள் ஜீ.முருகனும் கார்த்திகை பாண்டியனும் செல்பேசியில் அழைத்துப் பேசினார்கள். அது சந்தோஷமாக இருந்தது. மற்றபடி எந்த எதிர்வினையும் இல்லை. ஆனால் எனக்கு இப்புத்தகம் ஒரு சிறு அடையாளத்தை பெற்றுத் தந்துள்ளது. அதிகம் வாசிக்கப்படவில்லை என்றாலும்கூட.

நவீன தொழில்நுட்பம் இலக்கியத்தின் மீது என்ன வகையான தாக்கத்தைச் செலுத்தியுள்ளதாக எண்ணுகிறீர்கள்?

விஷால் ராஜா: நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் நம் வாழ்க்கையே முற்றிலுமாக உருமாறி கலவையான புது வடிவத்தை எட்டியுள்ளது. அது நம் சிந்தனை முறையிலும் மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறது. எனவே இலக்கியத்திலும் பேசுபொருள் சார்ந்து அது அதிக தாக்கத்தை உண்டு பண்ணும் என நான் நம்புகிறேன். தொழில்நுட்ப முன்னேற்றத்தோடு சமூக அழுத்தங்களும் உறவுச் சிக்கல்களும் புதுப்புது உருவங்கள் பெறுகின்றன. அவற்றை எழுத்தில் பேசாமல் இருக்க முடியாது. அதுவே தாக்கத்தின் முதல் படிதான்.

எழுதி முடித்த கதைகளை திருத்துவது வழக்கமா? வெளியான பின்னர் தொகுப்புக்காக திருத்துவது உண்டா?

விஷால் ராஜா: எழுதி முடித்த பிறகும் வாக்கிய அமைப்பிலும் வார்த்தைத் தேர்வுகளிலும் நிறைய திருத்தங்கள் செய்வேன். முதல் தொகுப்பிற்காக கதைகளை சேர்த்தபோது அதிகம் மாற்றங்கள் தோன்றவில்லை. ஆனால் கதைகளைத் திருத்துவதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.

அடுத்தடுத்த திட்டங்கள் என்ன?

விஷால் ராஜா: முதல் புத்தகத்தின் மீது எனக்கே அவ்வப்போது சின்ன சந்தேகமும் விலக்கமும் தோன்றுகின்றன. அப்படியான எந்த ஐயப்பாடும் இனி எழாத வகையில் தொடர்ந்து எழுத வேண்டும். இப்போது ஒரு குறுநாவல் எழுத ஆரம்பித்திருக்கிறேன். சிறுகதை, நாவல் என்று தீவிரமாகச் செயல்பட விரும்புகிறேன்.

நன்றி, வாழ்த்துகள் விஷால்.

அப்போதும் மரணம் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தது – -ஜிஃப்ரி ஹாஸன்

-ஜிஃப்ரி ஹாஸன் – 

பரபரப்பான சாலையில்
அவனுக்கும் சாவுக்குமான இடைவெளி
ஒரு சாண் தூரத்தில் இருந்தது
பரபரப்பான சாலையோரத்துக் கடைகளில்
அவன் ஜீவிதத்துக்கான
பொருட்களைத் தேடிக் கொண்டிருந்தான்
அப்போதும் சாவுக்கும் அவனுக்குமான
இடைவெளி
ஒரு சாண் தூரத்தில்தான் இருந்தது

சாலையோரப் பூங்காக்களை
வழமை போன்று இரசித்தான்
சாலையின் இரைச்சல்களை
வழமை போன்று செவிமடுத்தான்
தன் பயணப் பைக்குள்
வழமை போன்று கனவுகளைப் பத்திரப்படுத்தினான்

ஞாபகமாகக் குழந்தைகளுக்கு
வாங்கிய பலூன்களும் மிட்டாய்களும்
பையை நிறைத்ததும்
பரபரப்பான சாலையில் பறந்தான்
அப்போதும்
அவனுக்கும் சாவுக்குமிடையிலான இடைவெளி
ஒரு சாண் தூரத்தில்தான் இருந்தது

அவன் ஜீவிதத்துக்கான பொருட்களை
பையில் சுமந்து கொண்டு பறந்தான்
அவன் சாவு கனரக வாகனமொன்றின்
சில்லுகளில் ஒட்டியிருந்தது
நொறுங்கும் கண்ணாடிச் சில்லுகளின்
ஒலியும் அவனது கடைசி குரலும்
பரபரப்பான சாலையை ஆக்கிரமித்தபோது
சாவுக்கும் அவனுக்குமிடையிலான
இடைவெளி
ஒரு சாண் தூரத்தைக் கடந்து விட்டிருந்தது

அரிநிழல் -காலத்துகள்

காலத்துகள்

நாடார் பத்து பைசாவிற்கு இங்க் ஊற்றிக் கொண்டிருக்க, பின்னணியில் ராதா மாணிக்கம் இயேசுவின் ஜீவித சரிதத்தை பாடிக் கொண்டிருந்தார். அடுத்து ஜாலி அப்ரஹாம் பாட ஆரம்பிப்பார். ‘ஜாலி’ என்பது பெயரின் பகுதியா அல்லது அடைமொழியா என்பது நாடாருக்கும் தெரியவில்லை. தினமும் காலையில் இரண்டு மூன்று முறையாவது நாடார் கடைக்கு வருவது வாடிக்கை, பாடல் வரிகளும், அவை ஒலிபரப்பாகும் வரிசையும் அத்துப்படி. அடுத்த வருடத்தில் இருந்து இவனும் பேனா உபயோகிக்கலாம். இன்று ஒரு தகவல் ஆரம்பித்திருக்கக்கூடும், அதன் இறுதியில் வரும் குட்டிக்கதையையேனும் கேட்டு விட வேண்டும்.

தேங்காய் பத்தைகளை வாங்கிக் கொண்டு திரும்பினான், மதியம் மிளகாய்ப்பொடி தடவிய இட்லிகள். இரண்டு அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும், சந்துருவுக்கு பிடிக்கும். நாளை சனி, பள்ளி இல்லை, இன்று மாலையே எல்லா வீட்டுப்பாடத்தையும் எழுதி முடித்து விட வேண்டும், பின் இரண்டு நாட்கள் செய்ய நிறைய உள்ளது. அடுத்த தெருவில் இருக்கும், வெளியிலிருந்து மட்டும்எ ட்டிப் பார்த்திருக்கும் ஐஸ் பேக்டரிக்குச் சென்று உள்ளே விடுவார்களா என்று கேட்டுப் பார்க்கலாம், டப்பா ஸ்கூலும், ஸ்ரீனிவாசா தியேட்டர் மைதானமும் தவிர்த்து ஆர்ட்ஸ் காலேஜ் க்ரவுண்டிற்கு செல்லலாம், எதுவும் இல்லாவிட்டால் வீட்டின் பின்னாலேயே விளையாடலாம். எதிரே பாட்டி வந்து கொண்டிருப்பதைப் பார்த்து அவரிடம் ஓடிச்சென்று ‘என்ன தாத்தி, வேறேதாவது வாங்கணுமா’ என்று கேட்டான். தலையசைத்து திரும்பி நடக்க ஆரம்பித்தவர், இவன் முழங்கையை பற்றிக் கொண்டு ‘தாத்தி ஒண்ணு கேட்டா உண்மையைச் சொல்லணும் என்ன. நீதானே சாவி மேகஜீன்ல வரஞ்சு வெச்சிருக்க’ என்று கேட்டார்.

‘ஹிந்து’ மற்றும் ‘எக்ஸ்பிரஸ்’ மட்டும் வீட்டில் அதிகாரபூர்வமாக வாங்குவது. பேப்பர் விநியோகிக்கும் ஸ்ரீதர் கிட்டத்தட்ட அனைத்து மாத வார- ராணி காமிக்ஸ், பூந்தளிர் போன்ற சிறார்- இதழ்களையும் போட்டுவிடுவார். ‘ஞான பூமியை’கூட வீட்டில் பார்க்க முடியும். இதற்காக தனியாக ஏதேனும் பணம் வாங்கிக் கொள்வாரா என்று தெரியவில்லை. சாவியில் ஆறேழு வாரமாக மாந்த்ரீகத் தொடர் ஒன்று வந்து கொண்டிருக்கிறது. கல்லூரி விரிவுரையாளர், அவரிடம் பயில்பவர்கள், இன்னும் சில பாத்திரங்கள். இதுவரை யார் நல்லவர், கெட்டவர் என்பது பிடிபடவில்லை.

‘நா எதுவும் பண்ணலயே தாத்தி’ என்று சொன்னதற்கு, ‘ஏய்ய் பொய்ய் சொல்லக்கூடாது, வேற யார் பண்ணிருப்பா அப்ப, நீ சொல்லு’ என்றார்.

‘என்ன சொல்றேன்னே புரியல தாத்தி, அந்த புக்குக்கு என்னாச்சு’. இதையே மீண்டும் மீண்டும் பேசியபடி சந்தினுள் நுழைந்திருந்தார்கள்.

இந்த வார அத்தியாயத்தில் படுக்கையின்மீது ஒரு காலை முட்டி போட்டபடி இரவு ஆடை அணிந்து கொண்டிருக்கும் பெண்ணொருத்தி எழும் ஓவியம். ஆடையினுள் அவள் அணிந்திருக்கும் உள்ளாடையின் உருவரை தெளிவாகத் தெரிந்தது. பெண்களும் ஜட்டி அணிவார்கள் என்றும், அதை ‘பேண்டீஸ்’ என்று கூறுவார்கள் என்றும் இரண்டு வருஷம் முன்னால்தான் அறிந்து கொண்டான். முக்கோணத்தை திருப்பிப் போட்டது போன்ற பேண்டீஸின் உருவரையை அவ்வப்போது யாரும் கவனிக்காதவாறு பார்த்துக் கொண்டிருந்தான். இன்னும் இரு நாட்களில் அடுத்த இதழ் வந்து விடும், நேற்று இரவுதான் அந்த உருவரையின் கோடுகளின் மீது சிவப்பு நிற ஸ்கெட்ச் பென்னினால் அழுத்தி முக்கோணத்தை இன்னும் அடர்த்தியாகவும், துல்லியமாகவும் ஆக்கினான்.

சுந்தரி அக்கா போர்ஷனை தாண்டும்போதே வீட்டினுள் உரத்த குரலில் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருப்பது கேட்டது. உள்ளே நுழையும்போது ‘சாவியை’ கையில் வைத்துக் கொண்டு ‘அதான் சொல்றேனே, இந்த வார இஷ்யு காணலையேன்னு தேடும்போது புக்ஸ்ல எங்கேயாவது போட்டிருப்பானோன்னு பாத்தா கெடச்சுது, அட்டைல இருக்கற பொண்ணு மூஞ்சில ரெட் ஸ்கெட்ச்ல நாமம் போட்டிருக்கான், எதோ விளையாட்டா பண்ணிருக்கான்னு நெனச்சேன், அப்பறம் உள்ள பாத்தா இப்படி பண்ணிருக்கான்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். இவனைப் பார்த்ததும் ‘ஏண்டா இப்படி பண்ணின?’

“…”

‘நீ பண்ணலனா யார் பண்ணா, நைட் பூதம் வந்து வரஞ்சுதா’

“…”

‘புஸ்தகத்துக்கு கால் மொளச்சு தானா நடந்து வந்து ஒன் புக்ஸ்ஸோட வந்து ஒக்காந்துகிச்சா’

அனைத்திற்கும் ‘எனக்கு தெரியாதுமா’, ‘நா பண்ணல’, ‘அது எப்படி என் புக்ஸ் வந்துதுன்னு தெரியாது’, ‘வந்தனிக்கே அத படிச்சு முடிச்சுட்டேன்’ என்று பதில் சொல்லிக் கொண்டிருந்தான். சத்தம் கேட்டு வந்த சுந்தரி அக்காவிடமும் விஷயத்தைச் சொல்ல புத்தகத்தை புரட்டி உடனேயே திருப்பித் தந்து விட்டார்.

‘என்ன சுந்தரி சிரிக்கற’ என்று அம்மா கேட்க, ‘சின்ன பையன்தானே தெரியாம செஞ்சிருப்பான், விட்ருங்கக்கா’ என்றார். ‘அதில்ல சுந்தரி, சரி ஏதோ பண்ணிட்டான், அத ஒத்துக்கலாம்ல ஒழக்கு மாதிரி இருந்துட்டு என்ன அழுத்தம், தெரியாது தெரியாதுன்னு சொல்லிட்டே இருக்கான்’ என்றார். அவர் தன் போர்ஷனுக்குச் செல்லும்வரை தலை நிமிராமல் இருந்தான்.

‘தோ பார்டா அம்மா அடிக்க மாட்டேன், அப்பாவும் மாட்டா, தப்பு செஞ்சிருந்தா ஒத்துக்கணும், அதுதான் நல்ல மனுஷத்தனம்’ என்பதை திரும்பத் திரும்ப சிற்சில மாற்றங்களுடன் சொல்லிக் கொண்டிருந்த அம்மா எட்டு மணிக்கு மேல் பள்ளிக்கு கிளம்பினார்.

இன்னும் குளிக்கக்கூட இல்லை. ‘போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடுடா’ என்றார் பாட்டி. தட்டில் இட்லியை வைத்து விட்டு, தன் நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு, ‘தாத்தி சொன்னா கேக்கணும் சரியா, தாத்திய ஒனக்கு பிடிக்கும்ல’ என்று சொல்ல தலையாட்டினான். ‘அப்போ ஏன் அப்படி பண்ணினே சொல்லு, அப்பத்தான் தாத்திய ஒனக்கு பிடிக்கும்னு நம்புவேன்’.

“—“

‘இது ஒண்ணு பெரிய தப்பில்லையே, நா ஸ்கூல்ல படிக்கும் போது எங்க மிஸ் ஸ்கர்ட்லதான் வருவா, சைக்கிள்ள அவங்க ஏறர டைம்ல நாங்க குனிஞ்சு பாப்போம்’ என்று அப்பா சொன்னதை இடைமறித்து ‘ஏண்டா கொழந்தட்ட பேசற பேச்சா இது’ என்றார் பாட்டி. ‘அதுக்கில்லமா, இது ஒரு நேச்சுரல் க்யுரியாசிடி தான்னு சொல்ல வரேன், ஆனா அத நான் பண்ணலேன்னு சாதிக்கறான் பாரு அது தான் தப்பு’.

‘ஏண்டா நாலு இட்லியோட நிறுத்திட்ட’ என்று பாட்டி சொல்லச் சொல்ல கையலம்ப வெளியே சென்றான். கிணற்றடியில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த சுந்தரி அக்கா நிமிர்ந்து பார்க்க, அவர் பார்வையைத் தவிர்த்து விட்டு கைகழுவிக் கொண்டு உள்ளே வந்து பள்ளி சீருடையை அணிந்தான்.

ஷூ போட்டுக் கொண்டிருக்கும்போது மீண்டும் அருகே வந்த பாட்டி ‘அப்போ நீ சொல்ல மாட்டேல்ல, பாட்டி மேல ஒனக்கு அப்போ கொஞ்சம் கூட பாசம் கெடையாது அப்படித்தானே’ என்றார். ‘என்ன பாட்டி, நான் தான் செய்யலங்கறேனே, யார் அத பண்ணாங்கன்னு எனக்கு தெரியாது’

‘அப்போ நான், ஒன் ஸ்கூலுக்கு வந்து டீச்சர்ட்ட, ஹெச்.எம்கிட்ட சொல்றேன், அவங்க கண்டுபிடிப்பாங்க’ என்று அவர் சொல்ல, ‘என்ன பாட்டி இதெல்லாம் போய் ஸ்கூலுக்கு வரேங்கற, அவங்க என்ன பண்ணுவாங்க’ என்று ஒரு காலில் மட்டும் ஷூவோடு எழுந்து நின்றபடி கத்தினான். ‘அப்ப நீ உண்மைய சொல்லு, இல்லேனா நான் கண்டிப்பா ஸ்கூலுக்கு வருவேன், எனக்கென்ன’ என்று பாட்டி மீண்டும் சொல்ல, ‘நீ என்ன வேணா பண்ணிக்கோ’ என்று சொல்லியபடி மீண்டும் அமர்ந்து மற்றொரு காலிலும் ஷூவை அணிந்தான். வாசற்படியை தாண்டியபின் மீண்டும் உள்ளே வந்து ‘ஸ்கூலுக்குலாம் வராதே தாத்தி’ என்று சொல்ல, ‘நீ தான் ஒத்துக்க மாட்டேங்கறல, அப்ப நான் கண்டிப்பா வருவேன்’ என்றார்.

ஐந்து நிமிட நடை தூரத்தில்தான் பள்ளி என்றாலும் எட்டரை, அதிகபட்சம் எட்டே முக்கால் மணிக்கெல்லாம் மதிய உணவை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவது வழக்கம். முதல் மணி அடிக்கும்வரை விளையாட்டும், மதிய உணவு இடைவேளையின்போது பத்து நிமிடங்களுக்குள் சாப்பிட்டு முடித்து பின் மீண்டும் ஆட்டம். இன்று கிளம்ப ஒன்பது ஐந்தாகி விட்டது. சந்தைக் கடந்து மெதுவாக நடந்து சென்றுகொண்டிருந்தான்.

போன வருடம் மரத்தடியில் வினோலியா மிஸ் க்ளாஸ் எடுத்துக்கொண்டிருக்கும் போது எதிரே இருந்த ஐந்தாம் வகுப்பு பி பிரிவில் இருந்து பத்மினி மிஸ் வெளியேறி வேகமாக நடக்க ஆரம்பிக்க பின்னால் இரு மாணவர்கள். ஒருவனின் பெயர் விக்கி என்பதைத் தவிர அவர்களைப் பற்றி வேறு எதுவும் தெரியாது. பத்மினி மிஸ் கையில் ஏதோ புத்தகம். இவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அருகில் வரும்போது, இரு மாணவர்களும் அழ ஆரம்பித்திருந்தார்கள். வினோலியா மிஸ் என்னவென்று கேட்க ‘க்ளாஸ்ல பாருங்க மிஸ், மேகஸின் படிக்கறாங்க’ என்று அந்த புத்தகத்தை உயர்த்திக் காட்டினார். ‘ஆனந்த விகடன்’. இவர்களைக் கடந்து தலைமையாசிரியர் அறை நோக்கி மிஸ் செல்வதை, இருவரும் அவரின் முன்னால் சென்று மன்றாடுவதை, மிஸ் விலகி முன்னே செல்ல, பின்னால் சில அடிகள்நடந்து மீண்டும் அவர் முன்னே சென்று கெஞ்சுவதை குனிந்தபடி ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான். வாயசைப்பில் இருந்து அவர்கள் ‘ஸாரி மிஸ், வேணாம் மிஸ்’ என்று மீண்டும் மீண்டும் சொல்வது தெரிந்து.

சாலையைக் கடப்பதற்கு பதில் பள்ளியை தாண்டிவிட்டிருந்தான். திரும்பி சில அடிகள் எடுத்து வைத்து நின்றான். முதல் மணி அடித்திருப்பார்கள். பள்ளி வாசலில் கூட்டம் அதிகமாக இல்லை, கடைசி நேரத்தில் வரும் ஒரு சிலர் மட்டும். இப்போது சென்றாலும், காலை வழிபாட்டில் கலந்து கொள்ள முடியாது, வெளியில்தான் நின்றிருக்க வேண்டும். ப்ரேயர் முடிந்து தலைமையாசிரியை வந்து தாமதமாக வந்ததற்கு கொடுக்கும் தண்டனையை வாங்கியபின் தான் உள்ளே செல்ல முடியும். அதற்குள் பாட்டியும் பள்ளிக்கு வந்து விடலாம், இந்நேரம் கிளம்புவதற்கு தயாராகிக் கொண்டிருப்பார், கிளம்பிக்கூட இருக்கலாம். மீண்டும் திரும்பி வேதாச்சல நகருக்குள் நுழைந்து நடக்க ஆரம்பித்தவன், புதிய பேருந்து நிலையம் வர அதனுள் நுழைந்தான்.

தாம்பரம் செல்லும், டி.சிக்ஸ்டி, அம்மா பெரும்பாலும் பள்ளிக்கு இதில்தான் செல்வார். நிறைய தனியார் பேருந்துகள். பயணிகள் அமரும் இடத்தில் இருந்த பெஞ்சில் அமர்ந்து, வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்தான். சிறிது நேரத்தில் நிலையம் சற்று அமைதியடைய ஆரம்பித்தது. அருகில் அமர்ந்திருந்தவர் கையில் கடிகாரம் இல்லை, எழுந்து அங்கிருப்பவர்களின் மணிக்கட்டை பார்த்தபடி நடந்தான். பத்தேகால். மீண்டும் அதே பெஞ்சிற்கு வந்தமர்ந்தான். எதிரே பூ விற்றுக் கொண்டிருந்த பெண் இவனையே கவனிக்க எழுந்து வேறு இடத்திற்கு செல்லும் போது டையை அவிழ்த்துக் கொண்டபின், சட்டையை ட்ரவுசரில் இருந்து வெளியே எடுத்துவிட்டுக் கொண்டான்.

ஒவ்வொரு இடத்திலும் கொஞ்ச நேரம் அமர்ந்திருப்பது, பின் நிலையத்தினுள் சுற்றி வருவது. பேருந்து நிலைய கழிப்பறைக்குள் நுழையாமல், அதன் முன் சில கணங்கள் நின்றிருந்தான். புத்தகப்பையுடன் எப்படி உள்ளே செல்ல. சற்று தள்ளி வைத்து விட்டு அவசரமாக உள்ளே நுழைந்தான். மலம் கழிக்கும் அறைகள் மட்டும்தான். நுரைத்துத் தள்ளி கழிவறை துளை வரை வந்திருக்கும் மலம். சட்டையின் மேற்பகுதியை மூக்கின் மீது இழுத்து விட்டுக் கொண்டான். வெளியே வந்து சட்டையை மூக்கிலிருந்து எடுத்துவிட்டு நன்கு மூச்சை உள்ளிழுத்துக் கொண்டபோது, இன்னும் கடுத்தது. இன்னும் சிறிது நேரத்தில் கழிவறையை சுத்தம் செய்யக் கூடும், அதன் பின் மீண்டும் செல்லலாம்.

கூட்டம் குறைவாக இருந்த இடத்திற்கு சென்றான், அங்கு அமர்ந்திருந்தவரின் மணிக்கட்டில் பன்னிரெண்டரை ஆகியிருந்தது. பொதுவாக ஒரு மணிக்கு சாப்பிடும்போதுகூட இப்படி பசித்ததில்லை. சாப்பிட ஆரம்பித்தவன் நிமிரும்போது நிலைய வளாகத்தின் மறு முனையில் கழிவறையில் இருந்து வெளியே வருபவரைப் பார்த்தான். இரண்டு இட்லிகளுடன் எழுந்தவன், மீதி இட்லிகளை அங்கு அலைந்து கொண்டிருந்த நாயின் முன் வைக்க அது உண்டு முடித்தது. டிபன் பாக்ஸ்சை கழுவியபின், நிலையத்தில் நின்றிருந்த பேருந்தொன்றில் சென்றமர்ந்தான். உள்ளே இவனும் காக்காயொன்றும்.

போன வருடம் ஸ்டவ் எரியாமல் தொல்லை கொடுக்க, காலை விடுமுறை எடுக்கச் சொன்னார்கள் வீட்டில். மறுத்து விட்டு பள்ளிக்குச் சென்றவனின் வகுப்பிற்கு, இரண்டாம் பீரியட் முடியும் தருவாயில் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வந்துவிட்ட பாட்டி, முதல் இன்டர்வெல்லின்போது அனைவரும் பார்த்தபடி இருக்க, இவனை சாப்பிடச் செய்த பின்னரே கிளம்பினார், மதிய உணவிற்கான டிபன் பாக்ஸை வைத்து விட்டு. அதன் பின் ‘பப்பா’, ‘கொயந்த’, ‘வீட்லனா ஊட்டி விட்டுருப்பாங்கல’ என்று நண்பர்களின் கேள்விகள்.

இந்நேரத்திற்கு பள்ளிக்குச் சென்றிருப்பார். வகுப்பில் இல்லை என்பதை அறிந்தவுடன் அம்மாவிற்கு தகவல் சொல்லிவிடுவார்கள். அவர் வேலை செய்யும் பள்ளியில் தொலைபேசி உண்டு, வீட்டிலோ, தெரிந்தவர்களிடமோ கிடையாது. டெலிக்ராம் ஆபிஸ் சென்றுதான் அழைக்க முடியும். அம்மா அடித்துப் பிடித்துக் கொண்டு வரும்போது இங்குதான் இறங்க வேண்டும். பள்ளியில் இந்த விஷயம் பரவியிருக்கும், வினோலியா மிஸ்தான் இந்த வருடம் க்ளாஸ் டீச்சர், மிகவும் அன்பானவர், கோபப்பட்டு பார்த்ததில்லை.

இவனுக்கு மிகவும் பிடித்த டீச்சர். ஏதேனும் பேருந்தில் ஏறி எங்கேயாவது சென்று விடலாம், கையில் கொஞ்சம்கூட காசு இல்லை. பேருந்தினுள் பயணிகள் வந்தமர ஆரம்பிக்க இறங்கி காலியாக இருந்த இன்னொரு பேருந்தினுள் ஏறினான்.

வரலாற்றுப் புத்தகத்தை திறந்தால், இடது பக்கத்தின் எண் ஐம்பத்தி நான்கு, நான்கு ரன். புத்தகத்தை மூடித் திறந்தான், எழுவத்தி இரண்டு, ஸ்கோர் ஆறு. அடுத்தது தொண்ணூற்றி ஆறாம் பக்கம். ஸ்கோர் பண்ணிரண்டு. அடுத்து நாற்பது. முதல் விக்கெட் அவுட். பத்தாவது விக்கெட் விழும்போது ஸ்கோர் எழுவத்தி எட்டு, தொடர்ந்து மூன்று முறை பூஜ்யத்தில் முடியும் பக்க எண்கள் வந்துவிட்டன.

எழுவத்தியெட்டை இலக்காக கொண்டு அடுத்த இன்னிங்க்ஸ் ஆரம்பிக்கும்போது ‘சீக்கரம் ஏறித் தொலை’ என்று கத்தியபடி வண்டியினுள் ஏறியவருக்குப் பின் கையில் இரு மூட்டைகளுடன் ஒரு பெண்ணும் இவனை விட ரெண்டு மூன்று வயது கூடுதலாக இருக்கக்கூடிய சிறுவனொருவனும் வந்தார்கள். அவனும் பையொன்றை வைத்திருந்தான். முன்னிருக்கையில் அமர்ந்தபடி ‘பால்லாம் கரெக்ட்டா உற குத்தி வெச்சியா, கெட்டுபோவப் போகுது, சாம்பார், கொழும்புன்னு எதையாவது அப்படியே வெச்சுட்டு வந்திருக்கப் போற, திங்கக்கெழம வரும்போது கப்படிக்கும், ‘அந்தப் பையை நல்லா உள்ள வை, இல்லனா கால்ல இடிக்கும்.’ என்று உரத்த குரலில் அம்மனிதர் சொல்ல ஜன்னல் வழியே வெளியே பார்த்தபடி தலையை மட்டும் அசைத்தார் அந்தப் பெண். ‘டேய் ஜன்னல் சீட்ல ஒக்காராத இங்க வா’ என்று சிறுவனை இவனருகில் உட்காரச் செய்தார். ‘கையை ஜன்னல் கம்பி மேல வெக்காத வண்டி ஓட்டும்போது சைட்ல வேற வண்டி வந்தா அடிபடும்’ என்று அந்தப் பெண்ணிடம் அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது பேருந்தை விட்டு இறங்கினான்.

சிறுநீர் முட்டிக் கொண்டு வந்தது, கழிவறையின் அருகே செல்லும்போதே நாற்றமடித்தது. விலகிச் சென்று சுற்றிப் பார்த்தான். நிலையத்தின் ஒரு ஓரத்தில் வெளியிலேயே சுவரோரம் சிறுநீர் கழிக்கிறார்கள். சிறிது நேரத்திற்குப்பின் அங்கு சென்றான். அடிவயிற்றில் வலியுடன் இணைந்த கிளர்ச்சி, வலது கையை சுவற்றில் வைத்துக் கொண்டான். சிறுநீர் கழித்து முடித்த பின்பும் குறியின் நுனியில் ஊசி குத்துவது போன்ற வலி. நிலையத்தில் இருந்த கடையின் முன் டீ குடிக்கும் கூட்டம், கோகுலத்தின் இந்த இதழ் வந்து விட்டது, ஸ்ரீதர் நாளை போட்டு விடுவார், இந்த வார சாவியை பார்த்ததும் அங்கிருந்து விலகி முதலில் அமர்ந்த இடத்திற்கே வந்தான்.

‘என்ன தம்பி காத்தாலேந்து இங்கயே சுத்திட்டு இருக்க, இஸ்கூலுக்கு போலையா’ என்றார் பூக்காரம்மா. ‘இல்லையே கொஞ்ச நேரம்தான் இங்க இருந்தேன், ஒடம்பு சரில. அப்பறம் ஸ்கூல் போயிட்டேன்’.

‘இஸ்கூல்லு வுட்ற நேரமாலியே’ என்றவர், அங்கு பேருந்திற்காக நின்றிருந்தவரிடம் மணி கேட்டுவிட்டு,. ‘நாலற ஆவலியே அதுக்குள்ள வந்துட்ட’ என்று சொன்னார்.

‘கட் அடிச்சிருப்பான், இந்த வயசுலேயே’ என்றார் மணி சொன்னவர்.

‘எந்த ஊரு ஒனக்கு, வீட்ட விட்டு ஓடி வந்துட்டியா, இந்த நேரம்னு பாத்து எந்த போலீஸும் இல்லை’ என்று பூக்காரம்மா ஆரம்பிக்க, ‘ஐயோ இல்ல, நெஜமா எனக்கு ஒடம்பு சரியில்ல’ என்றான்.

அங்கு வந்து நின்ற பேருந்தில் மணி சொன்னவர் ஏற, ஒரு பெண் பூ வாங்க வந்தார். வீட்டிற்குச் செல்ல திரும்பினான். ஒருவேளை இவனைக் காணாமல் வீட்டினர் பயந்து போய் எதுவும் சொல்லாமல் விட்டுவிடக் கூடும். நிலையத்தின் வாயிலை அடைந்தவுடன் திரும்பிப் பார்த்தான். இன்னுமொரு பெண் பூ வாங்க வந்திருக்க பூக்காரம்மா அவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

வேதாச்சல நகர் முனையில் இருந்து பார்த்தபோது பள்ளி வாசலில் எந்த அரவமும் இல்லை. டையை கட்டிக் கொண்டு, சட்டையை உள்ளே திணித்துக் கொண்டு, சற்று தூரம் சென்று காப்பி அரைக்கும் கடைக்கு சற்று முன்பு மரத்தடியில் நின்று கொண்டான். மூன்றாம் வகுப்புக்களுக்கு நேர் எதிரேதான் கடை, பாட்டி ஒரு முறை காப்பி அரைக்க வந்ததை வகுப்பின் ஜன்னல் வழியாக பார்த்திருக்கிறான்.

மணி அடிக்கும் சப்தம் மிக மெல்லியதாக. முதல் மாணவர்கள் வெளியே வர ஆரம்பிக்கிறார்கள், ஓட்டமும் நடையுமாக சென்று ரோட்டை கடப்பவர்களுடன் சேர்ந்து கொண்டான். கூடப் படிப்பவர்கள் பார்க்கும்முன் வீட்டிற்குச் சென்று விட வேண்டும். இவனுக்கு என்னவாயிற்று என்று சந்துரு யோசித்துக் கொண்டிருந்திருப்பான். சந்து முனையில் யாரும் நிற்கவில்லை, உள்ளே காத்துக் கொண்டிருக்கக்கூடும்.

தன் போர்ஷனின் முன் மல்லாட்டை உடைத்துக் கொண்டிருந்த சுந்தரி அக்கா அவற்றை கையில் அள்ளி நீட்டி ‘இந்தா எடுத்துக்கோ’ என்றார். ‘பசிக்கலக்கா’ என்று விட்டு தன் போர்ஷனுள் நுழைந்தான்.

‘டூ இன் ஒன்னில்’ அப்பா பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார், ‘ட்ரெஸ் மாத்திட்டு வா காபி தரேன். புள்ளாண்டான் சட்ட காத்தால இன் பண்ணினது அப்படியே இருக்கு மழதான் பெய்யப் போறது போ’ என்றார் பாட்டி. தெரியாதது போல் நடிக்கிறார். தனியாக கூப்பிட்டுக் கேட்கக் கூடும் அல்லது அம்மா வருவதற்காக காத்துக் கொண்டிருக்கலாம். ஒரு வேளை தலைமையாசிரியை இவன் பள்ளிக்கு வராதது குறித்து அறிந்திராமல் பாட்டியுடன் பேசியிருக்கக் கூடும்.

சிறிது நேரம் கழித்து ‘என்ன ஹோம்வர்க் எழுத ஆரம்பிக்கல, ப்ரைடே சாங்காலமே முடிச்சுடுவே அப்பத்தான் ரெண்டு நாளு ஜாலியா இருக்கலாம்ப’ என்று பாட்டி கேட்க புத்தகங்களை எடுத்துக் கொண்டு அமர்ந்தான். நாளை சந்துரு வீட்டிற்குச் சென்று என்ன வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று கேட்டுக் கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களாக செய்து கொண்டிருக்கும் ஸ்வெட்டர் பின்னும் வேலையை பாட்டி தொடர்ந்தார். நடுவில் ஊசியில் நூலைக் கோர்க்கும்படி இவனிடம் கேட்டார். கண்டிப்பாக அம்மாவிற்குத்தான் காத்திருக்கிறார்கள்.

அம்மா வந்த பின் உடை மாற்றிக்கொள்ள உள்ளே செல்ல, சிறிது நேரம் கழித்து பாட்டியும் அங்கு போனார். இனி அவர்களுக்குள் பேசி விட்டு ஆரம்பிப்பார்கள். வெளியே வந்த பின் சிறிது நேரம் இவனுடன் பேசிக்கொண்டிருந்தார் அம்மா.

திங்கட்கிழமை பள்ளிக்கு வரத்தான் திட்டமிட்டிருக்கிறார்கள். ஹெச்.எம் கண்டிப்பானவர், காலை இறைவணக்கத்தின்போது ஸ்டேஜிற்கு வரச் செய்து எல்லோர் முன்னிலையிலும் இவன் செய்ததை சொல்லக்கூடும், அவர் கையில் சாவி, அனைவர் பார்வையும் இவன் மீது. நிறைய வீட்டுப்பாடங்கள் கொடுத்துள்ளார்களா, சந்துரு இன்று மாலை வர வாய்ப்பில்லை, நாளை காலை முதல் வேலையாக அவன் வீட்டிற்குச் சென்று அது குறித்து கேட்டு விட்டு, இன்று வராததற்கு ஏதேனும் காரணம் சொல்லி விட வேண்டும்.

மாலையில் பாட்டி வீட்டு உரிமையாளர் மனைவியுடன் அரட்டையடிக்கக் கிளம்பினார், அப்பா உள்ளறையில் அன்றைய தினசரியை மீண்டும் புரட்டியபடி. அம்மா சமையலறையில், அங்கு சென்றான். வேக வைத்த உருளைக்கிழங்குகளை தோலுரித்து உப்பு தடவிக் கொண்டிருந்தவர் ‘எடுத்துக்கடா’ என்றார். எதுவும் சொல்லாமல் திரும்பியவன், சில நிமிடங்கள் கழித்து மீண்டும் சென்று ‘தாத்தி ஸ்கூலுக்கு வந்து ஹெச்.எம்ம பாத்து சொல்லப் போறேன்னு சொன்னாம்மா’ என்றான். தக்காளி துண்டுகளை தள்ளி வைத்து விட்டு வெங்காயத்தை நறுக்க ஆரம்பித்தவர் திரும்பாமல் ‘பின்ன நீ இப்படி பண்ணினா அப்படித்தான் செய்வா’ என்றார்.

‘தாத்தி ஸ்கூலுக்கு வந்தாளாமா, நா ஒண்ணும் பண்ணலமா, அங்கெல்லாம் வர வேணாம்னு சொல்லுமா’ என்றிவன் சொல்ல கத்தியை மேடையில் வைத்து விட்டு முன்னே வந்து இவனை இழுத்து அணைத்துக் கொண்டவர், சில கணங்கள் கழித்து இவன் விலக மீண்டும் தக்காளி நறுக்க தொடங்கினார். ‘தாத்தி வரல இல்லமா’ என்று மீண்டும் கேட்டுவிட்டு வெங்காயத்தின் பச்சை வீச்சத்துடன் முன்னறைக்கு வந்தான்.