துர்க்கனவுகள் சங்கமிக்கும்
இடமாகிற்று வாழ்வு
கடவுள் வரைந்த
அவளது வாழ்வின் புதிர்களை
காலம் அவிழ்க்கத் தொடங்கியது
கடவுளால் அவளுக்கென வரையப்பட்ட வாழ்வு
இன்னும் அநாமதேயமாய் அலைந்து கொண்டிருக்கிறது
குளிரில் ஒடுங்கிய பறவையின்
மௌனச்சிறகுகளால் விசிறப்படும்
நீர்த்திவலைகளாய் அவள் கனவுகள்
ஒவ்வொன்றாய் உதிர்கின்றன
கானகத்துள் உறைந்திருக்கும்
இருட்டின் மௌனத்தை ஒத்த ஒரு மௌனம்
அவள் வாழ்வைப் போர்த்துகிறது
தனித்துப்போனவளின் துயரம் எதைப் போன்றது?
தனித்தலையும் ஒரு பறவையின் துயர் போன்றதா?
கைவிடப்பட்டவளின் மெளனம் எதைப் போன்றது?
கூரிய மலைகளின் மௌனத்தை விட கெட்டியானதா?
அவளது மௌனம் பூத்த கனவு எதை விடப் பெரியது?
மனிதர்களால் உதிர்க்கப்பட்ட
சுடு சொற்கள் அவள் இதயத்தை ஊடுறுவிய போது
தன் உடலெங்கும் பீறிட்ட கொடிய வலியை விடவும் பெரியதா?
அவளது ஏக்கம் எதை விடப் பெரியது?
எழுத்து
அழைப்பு
ஹரீஷ் கண்பத்
பேருந்து நிலையத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். வந்திறங்கி முக்கால் மணி நேரமாகியிருந்தது. வருவதாகச் சொல்லி விட்டு தாமதித்துக் கொண்டிருந்த நண்பன் மேல் கோபம் வரவேயில்லை. ஊரின் வெயில் கூட நின்று நிதானமாக உடலைத் தடவுவது போலிருந்தது. ஜனம் வெள்ளமாய் வந்து போய்க் கொண்டிருந்தது. யாரிடமும் பரபரப்பில்லை. மாறாக உற்சாகம் மண்டிக் கிடந்தது. ஊரில் வாழ்ந்த நாட்களில் இது போன்ற பண்டிகை சமயங்களில் இந்தப் பக்கம் வந்ததில்லை. பண்டிகையின் சுவடு ஊர் முழுக்கப் படர்ந்து பரவியிருப்பதாகப் பட்டது.எத்தனை வருஷங்கள் கழித்து வந்திருக்கிறேன் என்று சரியாகக் கணக்கிட்டுக் கொள்ளவில்லை. நிச்சயம் ஐந்தாறு வருஷங்கள் இருக்கும். கடைசியாக மாரியின் திருமணத்துக்கு வந்தது.
வருகிறேன் என்று சொன்னவனுக்கு மீண்டும் அழைத்தேன். எடுத்துப் பேசினான். எதிர்முனையில் காற்றின் இரைச்சல் அதீதமாக இருந்தது.வண்டியோட்டிக் கொண்டே பேசுகிறானோ என்று கவலையாக இருந்தது. “ கலெக்டரேட்ல இருக்கறண்டா பையா. வந்துர்றேன்” என்றான். எப்படியும் இருபது நிமிடங்கள் ஆகும். பசித்தது. நிலையத்தின் வெளியே எப்போதோ சாப்பிட்ட ஒரு உணவகம் இருப்பதாக ஞாபகம் வந்தது. மெதுவே நடந்து அங்கே சென்றேன். நிரம்பக் கூட்டம். மீண்டும் வெளியே வந்து நின்று கொண்டேன்.பக்கத்தில் மிட்டாய்க் கடை வாசலில் ஒரு குழந்தை அலறிக் கொண்டிருந்தது. அதன் அம்மா குழந்தையைக் கொண்டு வந்து மிட்டாய்க் கடை வாயிலில் அமர வைத்த தன் அறிவைத் தானே நொந்து கொண்டே குழந்தையைச் சமாதானம் செய்தபடி இருந்தாள்.
மெல்ல நடக்கத் துவங்கிய என்னை வழிமறித்தவாறு வண்டியை நிறுத்தினான் பிரபு. செல்லமாக அவன் தோளில் தட்டி, “இதான் வர்ற டைமாடா பையா?” என்றேன். பல வருடப் பட்டண வாசத்தால் பேச்சில் தலைகாட்டாமல் தேய்ந்தழிந்து போன ஊர் வாசம் இங்கு வந்ததும் தானாக வந்து ஒட்டிக் கொண்டு விடுவது ஆச்சரியம் தான்.”இல்லடா. நான் வந்தர்லான்னு பாத்தன். உன்னிய கிரிஸ்ணகிரி பஸ்டேண்டு வந்துட்டு போன் பண்ணுடான்னா நீயி தரும்புரி பஸ்டேண்டு வந்துட்டு போன் பண்ற. மொதுல்லயே போன் பண்ணிருந்தா கரெட்டா வந்துட்ருப்பேன்” என்றான்.“செரி ரொம்ப பேசாத. பசிக்கிது. எங்கனா சாப்புட போலாம் வா” என்றேன்.” எங்க போறது?” என்று என்னையே திருப்பிக் கேட்டான். “ அதியமான் போலாம் வா” என்று வண்டியில் ஏறி அமர்ந்தேன்.
பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் பெரிதாய் மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்திருக்கவில்லை. திடீரென்று ஞாபகம் வந்தவனைப் போல், “ டேய் நம்ம டீலக்ஸு இன்னும் இருக்குதா இழுத்து மூடிட்டானுகளா?” என்றேன். டீலக்ஸ் என்று நாங்கள் அழைப்பது எங்கள் ஊரின் பலான படத் திரையரங்கை. கல்லூரி நாட்களில் அங்கேயே பழியாய்க் கிடந்ததுண்டு.” நல்லா தான் இன்னும் ஓடினிருக்குது” என்றவன் சற்றே பேச்சை நிறுத்தி, பின் தொடர்ந்தான். “ எல்லா தேட்டரும் அப்டியே தாங்கீது. கணேசா மட்டும் மூடிட்டான்” என்றான்.அந்த அரங்கில் மௌனம் பேசியதே படத்தைத் தனியே போய்ப் பார்த்தது நினைவில் வந்து போனது.”டேய்.. அப்புறமா எங்க வீட்டுக்கு ஒரு வாட்டி போய் பாத்துட்டு வந்துரலாம்” என்றதற்கு சரி என்று தலையாட்டினான். அல்லது நான் அப்படி நினைத்துக் கொண்டேன்.
வீட்டின் நினைவுகள் மூச்சு முட்ட அழுத்தும் கொடி போல் மூளையைச் சுற்றிலும் படர்ந்து இறுக்கத் துவங்கியது. தலையை உலுக்கிக் கொண்டேன். ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டு விட்டுக் கிளம்பினோம்.” டேய் காந்தி நகருல எங்கப்பாவோட அத்த வீடு கீது. அங்க தான் போவணும். சாயந்திரமா பத்திரிக குடுக்க கெளம்பலாமா” என்றேன்.”செர்ரா.. என்னைய வீட்ல விட்டுட்டு நீ வண்டிய எட்துனு போ. சாய்ந்தரம் என்னைய கூட்டிக்கோ” என்றான்.கிளம்பினோம். கணேசா தியேட்டரின் வழியே போகும் போது அந்த இடம் பல்லெல்லாம் கொட்டிப் போய் விட்ட பின்பும் புன்னகை மாறாத பாம்படக் கிழவி போல் தோன்றியது.
அப்பாவின் அத்தை மிக மிகத் தளர்ந்திருந்தார். இன்னமும் அவர் கையில் பிரம்புடன் பாடம் எடுப்பது போலவே ஒரு பிம்பம் மனதில் பதிவாகியிருந்ததை அழிப்பது சிரமமானதாயிருந்தது.நடுங்கும் விரல்களால் தலையைத் தடவி வரவேற்றார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அறையில் புகுந்து கொண்டேன்.
எவ்வளவு நேரம் போனது தெரியவில்லை. கண் விழித்துப் பார்த்த போது மணி நாலாகியிருந்தது.தயாராகி வெளியே வந்து வண்டியை எடுத்தேன். வெயில் இறங்கிக் கொண்டிருந்தது. அப்போதே காற்றில் லேசாகக் குளிர் கலந்திருந்தது. குளிர் இந்த ஊருக்குப் புதிதில்லை. அற்புதமான சீதோஷ்ணம். சிறு வயசில் எத்தனை குளிரையும் தாங்கும் உடம்பு, இப்போதெல்லாம் முடிவதில்லை.பட்டணம் பல விதமான உபாதைகளை விதைத்திருக்கிறது.
குளிரை ரசித்து உணர்ந்தபடியே அவன் வீட்டுக்கு வண்டியை மெல்ல விரட்டினேன்.சத்திர மேல் தெருவும் அப்படியே தானிருந்தது. மாலை நேரம் வீட்டு வாசல்களில் முளைக்கும் பணியாரக் கடைகள் மொளகா வடைக் கடைகள் வியாபாரத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தன. பிரபு வீடு மட்டும் முற்றிலுமாக மாற்றிக் கட்டப்பட்டிருந்தது. வெளியே வந்தவனிடம் விசாரித்தேன். “ தெர்லடா பையா. ரெம்ப நாளா இப்டி தான் கீது. மின்ன எப்பிடி இரின்ச்சுனு மறந்து போச்சி” என்றான் சாதாரணமாக. நான் வந்து எவ்வளவு வருஷங்கள் ஆகி விட்டிருக்கின்றன என்று அப்போது தான் புரிந்தது..
இருவரும் கிளம்பினோம். நானே வண்டியை ஓட்டுவதாகச் சொல்லி வாங்கிக் கொண்டேன். அழுக்கடைந்த கட்டிடமென ஞாபக அடுக்குகளில் எப்போதும் பதிந்திருக்கும் அரசு மருத்துவமனை, பிரம்மாண்டமான மருத்துவக் கல்லூரியாக மாறியிருந்தது மனசை என்னவோ செய்தது. இது வழியே பிரதான சாலையிலிருந்து எத்தனை முறை வீட்டுக்கு நடந்து சென்றிருக்கிறேன். இப்போது வெறும் கட்டிடக் காடாய் கண் முன் நின்றது. ஏனோ கல்லூரி படிக்கையில் விபத்தில் இறந்து போன அடுத்த வகுப்பு மாணவனின் உடலைப் பார்க்க இங்கு வந்தது நினைவில் நிரடியது. துக்கத்தை அனுசரிக்காமல் அப்போது மனம் கவர்ந்திருந்த பக்கத்து வகுப்பின் பெண்ணை நோட்டம் விட்டபடியிருந்த குற்ற உணர்வும் துல்லியமாய் கண் முன் வந்துன் போனது.
செந்தில் நகரை அடைந்து தினேசனுக்கு தொலைபேசினேன். அவன் வீட்டுக்கு வழி சொன்னான். வீட்டைக் கண்டடைவது அவ்வளவு சிரமாகவெல்லாம் இல்லை. தெரு மூலை வீடு. அபாரமாக வரவேற்றான். பாலாஜி அங்கேயே வந்திருந்தான். அங்கேயே வைத்துப் பத்திரிகையைக் கொடுத்தேன். பெண் என்ன செய்கிறாள் , திருமணம் எங்கே போன்ற கேள்விகள் சடுதியில் முடிந்து போக, எங்கள் உரையடலில் எப்போதும் எனக்குப் பிடித்தமான பகுதியான கல்லூரி ஆசிரியர்களின் வசனங்களைக் கிண்டலடிக்கும் பகுதி துவங்கியது. பாலாஜி அதில் விற்பன்னன். நேரம் போனதே தெரியவில்லை. மணி ஆறாகி விட்டிருந்தது. சுரேஷின் வீடு அருகிலிருப்பதால் அவனைப் போய் பார்த்து வரலாம் என்று கிளம்பினோம். அவனைச் சந்தித்து பத்திரிகையைக் கொடுத்தேன். அவன் அம்மா சுரேசனுக்கும் பெண் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் இன்னும் எதுவும் தகையவில்லை எனவும் லேசான வருத்தத்துடன் கூறினார்.அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டு அடுத்து மாரியைப் பார்த்து விட்டு வந்து விடலாமென்று முடிவு செய்து கிளம்பினோம்.
ஆறு மணிக்கே இருள் முழுவதுமாகக் கவிந்திருந்தது. காற்றில் குளிர் வெகுவாக ஏறியிருந்தது.குளிரில் வண்டியைச் செலுத்துவது சிரம்மாயிருந்தது. இன்னொரு பக்கம் ஆனந்தமாயும் இருந்தது. மாரியின் ஊரருகே புதிதாக ஒரு மேம்பாலம் முளைத்திருந்தது. அதைக் கட்டிப் பல வருஷங்கள் ஆகியிருக்கக் கூடும். நான் இப்போது தான் பார்க்கிறேன். இடப்புறம் திரும்பி ஊர்ப் பாதையில் நுழைந்ததும் பழகிய வீட்டு நாய் போல் இருள் வந்து மேலெங்கும் அப்பிக் கொண்டது.மாரியின் திருமணத்துக்கு வந்த போது இருந்தது போலவே இப்போதும் ஊரில் ஏதோ திருமணம் நடந்து கொண்டிருந்தது. சீரியல் விளக்குகளின் ஒளி மினுங்கிக் கொண்டிருந்தது. ஒலிபெருக்கியில் இந்திப் பாடல் பாடிக் கொண்டிருந்த்தைக் கேட்டு சிரிப்பாக வந்தது.
மாரி வீட்டைல் அடைந்தோம். ட்யூப் லைட் பலகீனமாக எரிந்து கொண்டிருந்த வெளிப்புறத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவன் தோளில் ஏறி ஒரு சிறுவன் ஆடிக் கொண்டிருக்க, இன்னொருவன் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பிள்ளைகளாக இருக்கக் கூடும். எழுந்து வந்து முகம் மலர வரவேற்றான். அவன் மனைவி சமையலறையில் வேலையாய் இருப்பது தெரிந்தது. ஆள் தளர்ந்திருந்தான்.
சம்பிரதாய விசாரிப்புகள் முடிந்து, எழுந்து உள்ளே சென்றவன் திரும்பி வருகையில் கையில் மிக்சர் தட்டோடு வந்தான். “ என்னாயா ஆளே டல்லாயிட்ட?” என்றேன். அதேனோ எப்போதும் மாரிய மட்டும் “டா” போட்டு அழைக்க வாய் வந்ததேயில்லை. உருவம் காரணமாக இருக்கலாம்..என்னவோ போ. ஜட்ஜு எக்ஸாம் எளுதினேன். ஜஸ்டுல மிஸ்ஸாயி போச்சு. அடுத்து எப்பன்னு தெர்ல. வேலை டென்சன் வேற. பி பி கூட வந்திருச்சுன்னா பாத்துக்க” என்றான்.
“இந்த வயசுல பி பி எல்லாம் வரக் கூடாதுயா. என்னா போ நீயி. “ என்று சலித்துக் கொண்டேன். அவன் பிள்ளை ஓயாமல் சத்தம் போட்டபடி விளையாடிக் கொண்டிருந்தான். பத்திரிகையை கொடுத்து விட்டு விடை பெற்றுக் கொண்டு கிளம்பி வாசலுக்கு வந்ததும், “ந்தா.. ஒரு நிமிசம் இரு. வந்தர்ரேன்” என்றபைட் மாரி உள்ளே ஓடினான்.
சில நிமிஷங்கள் கழிந்து வந்தவன் கையில் சில பொட்டலங்களைத் திணித்தான். கைய நீட்டு என்றவன் ஒரு கயிற்றைக் கையில் கட்டி விட்டான். “ காசி போய்ருந்தன். பிரசாதம். இது கால பைரவரு கவுறு. கலியாணம் வேற நிச்சியமாயிருக்குது. இருட்டுல வேற போறீங்க. இத கட்டிக்க” என்றான்.மாரியின் கைச்சூடு குளிருக்கு இதமாக இருந்தது.
“செல்லா இங்க தான் பைபாஸுக்கு அந்தாண்ட இருக்கறானாம். பாத்துட்டு போயர்லாமா” என்றான் தினேசன்.அவனுக்குத் தொலைபேசி, அவனை பைபாஸ் முனைக்கு வரச் சொல்லி விட்டு அங்கே கொண்டு போய் வண்டியை நிறுத்தினோம்.அடுத்த சில நிமிடங்களில் செல்லா வந்தான். கல்லூரியில் பார்த்த எந்தச் சுவடுமின்றி முதிர்ந்திருந்தான். ஆனால் உற்சாகமாக இருந்தான். நெற்றியில் பெரிய சந்தனப் பொட்டு வைத்திருந்தான். ஓஷோவைப் பின்பற்றுவதாகச் சொன்னான். பத்திரிகையைக் கொடுத்ததும் அந்தத் தேதியில் பட்டணம் வரும் வேலை இருப்பதாகவும் கண்டிப்பாக திருமணத்துக்கு வந்து விடுவதாகவும் சொன்னான். பேச்சு எப்படியோ திசை திரும்பி கல்லூரியை பற்றி மாறியது. அடுத்த அரை மணி நேரம் பாலாஜி கல்லூரி வாத்தியார்களைப் பற்றி ஆற்றிய பலகுரலில் எல்லாரும் வயிறாரச் சிரித்தோம். கிளம்பும் போது பாலாஜியின் தொண்டை முழுவதுமாகக் கட்டியிருந்தது.
குளிரில் எனக்குமே தொண்டை லேசாக அடைக்கத் துவங்கியிருந்தது. ஆனால் மனசு மட்டும் ஏனோ தளும்பிக் கொண்டே இருந்தது.” டேய் எங்க வீட்ட போயி ஒரு வாட்டி பாத்துட்டு வந்தர்லாம்” என்றேன். பிரபு, தினேசன் , பாலாஜி மூவருமே ஆமோதித்தார்கள். அவர்களுக்கும் தான் எத்தனை நாட்கள் உண்டு உறங்கி, விளையாடி, கூடி களித்து ஒன்றாக திரிந்த இடம் அது. அவர்களுக்கும் நினைவுகளைக் கிளறி விட்டிருக்கக் கூடும்.
பைபாஸ் சாலையிலிருந்து ரயில் நிலையம் செல்லும் சாலை எந்த விதமான மாற்றங்களுமில்லாமல் அப்படியே பலகீனமான மஞ்சள் சோடிய வெளிச்சத்துடன் மனசை என்னவோ புரட்டியது. என் தெருவில் எதுவுமே மாறியிருக்கவில்லை. வீட்டு வாசலில் சாலையில் நின்றபடி, தெரு விளக்கொளியில் வீட்டை சற்று நேரம் வெறித்தபடி இருந்தேன்.” இங்க தான நாம கிரிக்கெட் ஆடுவோம்” என்று அவர்கள் மூவரும் அந்த வீட்டைப் பற்றியே தான் பேசிக் கொண்டிருந்தார்கள். செல்பேசியை எடுத்துப் படம் பிடிக்க முயன்றேன். இருளில் சரியாக வரவில்லை. கண் லேசாகக் கலங்கியது போல் தோன்றியது. பிரமை போல. சட்டென்று ஏதோ ஒரு நொடியில் உள்ளே போய் வீட்டை வாங்கியவர்களிடம் அறிமுகப் படுத்திக் கொண்டு சுற்றிப் பார்த்து விட்டு வரலாமா என்னும் ஆசை பூதாகாரமாக எழுந்து ஏனோ எழுந்த நொடியிலேயே அடங்கி அமிழ்ந்து போனது. கிளம்பி விட்டேன்.
வண்டியில் ஏறி நகரத் துவங்கிய பின்னும் அவ்வளவு வெட்ட வெளியிலும் வீட்டைப் பற்றின அலையலையான நினைவுகள் பின் தொடர்ந்து துரத்தி வந்து மூச்சு முட்டச் செய்தபடி இருந்தன.
வழியில் கடையில் சாப்பிடப் போன போது சாப்பாடு இறங்கவில்லை. ஏதோ பேர் பண்ணி விட்டு கிளம்பினேன். வீட்டுக்குப் போய் கட்டிலில் விழுந்த பின்னும் துரத்தல்கள் தொடர்ந்தன. எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.காலையில் எழுந்திருக்கும் போது ஏழரை ஆகியிருந்தது.இன்று காரிமங்கலம் போவதாக ஏற்பாடு. கோபுவைப் பார்க்க, கல்லூரியில் என் அருகில் மூன்று வருசங்களும் அமர்ந்திருந்தவன்.
அவன் வீட்டை அடைந்ததும் வரவேற்றான். கல்லூரி படிக்காய்யில் அவன் குரலை வெகுவாகக் கிண்டல் செய்வோம். இப்போது அவன் கல்லூரியில் விரிவுரையாளன் ஆகி விட்டிருக்கிறான். காலம் யாரை எப்படி மாற்றுகிறதென்று சொல்லவே முடிவதில்லை. குரல் நல்ல கெட்டிப்பட்டிருந்தது. பிள்ளைகள் மருண்டு விழித்தன. மாட்டுப் பொங்கல் தினமாதலால் சுடச் சுட பொங்கலும் வடையும் கொடுத்தான். பத்திரிகை வைத்து விட்டு செந்திலைப் பார்க்கக் கிளம்பினோம்.
சாலையைக் கடந்து எதிர்ப்புறம் ஏழெட்டு கிலோமீட்டர்களில் அவன் ஊர். வீட்டு வாசலை அடைந்த போது சரியாய் எங்கிருந்தோ வேகமாக வந்தான். “இன்னிக்கு மாட்டுக்கு பூசை வெச்சிருக்கறோம் கீள காட்டுல. அங்க தான் இருந்தேன். நீங்கள்லாம் வரீங்களேனு வந்தேன்” என்றவன் கொஞ்ச நேரம் எங்களோடு கதைகள் பேசிக் கொண்டிருந்தான். எழுந்தவன் “ வாங்களேண்டா. நீங்களும்? பூசை இனிமே தான் போட போறோம். அஞ்சு பத்து நிமிசம் தான், இருந்துட்டு போவீங்க” என்றான். அவன் பின்னாலேயே நடந்தோம். வீட்டைப் பூட்டி விட்டு சரிவில் நடந்தான். இரண்டு நிமிடங்கள் தான். தூரத்திலிருந்தே அவன் அப்பா அம்மா தங்கை எல்லாரும் மாட்டுக்குப் பூசை தயார் செய்து கொண்டிருப்பது தெரிந்தது.
மாட்டின் உடம்பில் வண்ணங்களை அப்பியிருந்தார்கள். விளக்கேற்றி விட்டு மாட்டின் கழுத்தில் மாலையிட்டு விட்டு, கைச் செம்பின் தண்ணீரை மாட்டைச் சுற்றித் தெளித்தபடி “ பலியோ பலி” என்றான் செந்தில். அவன் அப்பா “ பொங்கலோ பொங்கல்” என்றார். மாட்டைச் சுற்றி நடந்தபடியே “ பலியோ பலி பொங்கலோ பொங்கலு” என்று குரல் கொடுத்தனர். இதே போல் மற்ற மாடுகளுக்கும் பூசை நடந்தது. பூசை முடிந்த பின், படையலிட்டிருந்த வெல்லம், புளிக் குழம்பு, சோறு எல்லாவற்றையும் ஒன்றாய்ப் பிசைந்து இலைத் துண்டில் வைத்து எங்களுக்குக் கொண்டு வந்து கொடுத்தான்.அவ்வளவு அற்புதமான சுவையுடனிருந்தது அந்தக் கலவை.
வெயில் ஏறியிருந்தது. மணியைப் பார்த்தேன். உச்சியை அடைந்திருந்தது. இரவு பட்டணம் கிளம்ப வேண்டும். நேரம் நிறைய இருப்பது போலிருந்தது. அடுத்த நொடியே நேரம் மிகக் குறைவாயிருப்பதைப் போல் தோன்றிப் பதறச் செய்தது.பத்திரிகையைக் கொடுத்து விட்டு விடை பெற்றுக் கொண்டு கிளம்பினோம். டவுனை அடைந்ததும் தினேசனும் பாலாஜியும் கிளம்பினர். நான் பிரபுவுடன் அவன் வீட்டுக்குச் சென்று அவன் அறையில் படுத்து விட்டேன்.
தூக்கமும் விழிப்புமற்றா ஒரு மாதிரியான அரை மயக்க மந்த நிலையில் புரண்டபடிக் கிடந்தவனை பிரபு கையில் காபியுடன் எழுப்பினான். காபியை வாங்கி உறிஞ்சியபடியே “ பணியாரம் சாப்பட்லாமாடா பையா?” என்றேன். “செரி இரு வாங்கினு வரேன்” என்று கூறி விட்டுச் சென்றவன் சிறிது நேரத்தில் கையில் பொட்டலங்களுடன் வந்தான்.திருப்தியாகச் சாப்பிட்டோம். நேரம் குறைந்து கொண்டே வந்தது.
“செரி நா வீட்டுக்கு போறன். என்னிய கொண்டு போயி வுடு” என்றேன். வீட்டில் என்னை இறக்கி விட்டு விட்டு “நைட்டு எத்தினி மணிக்குடா பஸ்ஸு” என்றான். பத்தே முக்காலுக்கு வண்டி. நீ வரியா.. இல்லின்னாலும் ஒண்ணும் ப்ரச்னயில்ல. நான் போய்க்கிறேன்” என்றேன். “இல்லல்ல. நான் வந்து கூட்டினு போறேன். பத்தே காலுக்கு வரன்” என்று கிளம்பினான்.
என் வீடிருந்த பகுதியில் இப்போது சதுர அடி என்ன விலைக்குப் போகிறதென்று கேட்க நினைத்தேன். கேட்கவில்லை.துணிமணிகளை எடுத்து அடுக்கிக் கொண்டு கிளம்பினேன். பழகிய பூனைக் குட்டி வீட்டை விட்டுக் கிளம்ப விடாமல் கால்களைச் சுற்றுவது போல கண்ணுக்குத் தெரியாமல் ஏதோ நினைவுச் சுழல் என்னைச் சுற்றிக் கொண்டே இருந்தது ஏதோ அசவுகரியமாக இருந்தது. பட்டணத்தை நினைத்து ஆயாசமாக இருந்தது.
இரவு உணவு எதுவும் வேண்டாமென்று சொல்லி விட்டேன். நேரம் எப்படித் தான் போனதோ தெரியவில்லை.பிரபு வந்து ஆரனடித்தான். வீட்டில் பெரியவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினேன். பேருந்து நிறுத்தம் அடைந்ததும் “ நீ வேணா கெளம்புடா பையா. உங்கூட்ல திட்ட போறாங்க” என்றேன். கொஞ்ச நாட்களுக்கு முன் தான் குடித்து விட்டு வண்டியிலிருந்து விழுந்ததால் அவன் இரவில் எங்கே போனாலும் கண் கொத்திப் பாம்பாய் அவன் வீட்டில் கவனித்து வந்தனர். “ அதெல்லாம் ஒண்ணும் பரவால. உன் கூட தான் வந்துகுறேன்னு தெரியும் .ஒண்ணியும் சொல்ல மாட்டாங்க” என்று பிடிவாதமாய் நின்றான்.
வண்டி சரியான நேரத்துக்கு வந்தது ஏனோ மனசுக்கு வருத்தமாக இருந்தது. ஏறி அமர்ந்து கையசைத்தவுடன் அவன் நகர்ந்தான்.ஊரின் குளிர் முகத்தில் பட்டால் தேவலாம் போலிருந்தது. குளிர் சாதனப் பேருந்தென்பதால் சன்னல்கள் திறக்க முடியாதபடி அமைக்கப்பட்டிருந்தன. பேருந்தின் குளிர் சாதனம் மனசுக்கு ஒப்பவில்லை. மெல்லப் பேருந்து நகரத் துவங்கியது. இருள் படிந்திருந்த திறக்க முடியாத சன்னலின் வெளியே ஊர் கொஞ்சம் கொஞ்சமாக பின் தங்கி நழுவத் துவங்கியிருந்தது.
பித்து
ரா. ராமசுப்பிரமணியன்
I
அவன் சொன்ன வாசகத்தில் இருந்து ” ஆரோஹணம்…. சிங்கம்…. அலங்காரம்…. திரிசூலம்…. ” என்பது தான் என் மனதில் நின்றது. இதை வைத்து தான் அந்த பிம்பத்தை அமைக்க வேண்டும் என்று உத்தேசித்தேன். தூரிகையை முக்கியும் அமிழ்த்தியும் பார்த்து விட்டேன். வந்து அமரவில்லை. வீட்டு முற்றத்தில் முன்தினம் பெய்த கடும் மழை தேங்கி இருந்தது. உடன் வந்திருந்த கண்ணன் இருந்த சுதேசமித்திரனை எடுத்து திண்ணைக்கு போய்விட்டார். எதிரில் இருந்த காரை சுவரில் இருந்த பிறையின் கீழ் தான் அவன் அமர்ந்திருந்தான். கோட்டும் பஞ்சகச்சமும் உடுத்தி, ஒரு காலை குத்திட்டு, அதில் கையை ஊன்றி தலையில் முண்டாசுடன் வீர பாண்டிய மீசையும் தாடியுமாய் கண் மூடி இருந்தான். பக்கத்தில் இருந்த தாம்பாளத்தில் இருந்து அவன் தாம்பூலத்தை தரித்து இருந்ததை பார்க்கும் போது கண்ணன் சொன்னது தான் ஞாபகம் வந்தது.
“ஆர்யா…. இவன் முன்ன மாதிரி கிடையாது. இப்போதெல்லாம் சிவமூலிகை பழக்கம் எல்லாம் ஆரம்பிச்சாசு”.
அந்த பிம்பத்தையே வரைந்து காட்டிவிடலாமா என்று கூட யோசனை வந்தது.
திருவல்லிக்கேணியில் இருந்து ரயில் வண்டியில் ஏறி பாண்டிச்சேரிக்கு கிளம்பினேன். அங்கு இருந்த ஆங்கிலேய ஆரக்ஷணர்கள் இருவர் எதிரில் வந்து அமர்ந்தனர். என்னையே துருவி துருவி நோட்டமிட்டனர்.
“சாமி, எங்க போறீங்க”
” நான் பாண்டிச்சேரிக்கு போறேன்”
” அங்க யார பார்க்க போறீங்க? ”
“கலவை சங்கர செட்டியாரை”
” ஓஹோ …. என்ன விஷயம் ”
” ஒரு வணிகம் சம்மந்தமா பார்க்க தான் ”
என்னையே மேலும் கீழும் நோட்டமிட்ட இன்னொருத்தன்,
” நீங்க சுதேசி இல்லையே”
” நான் சுதேசியோ விதேசியோ அல்ல. சாதாரண மனிதன். கொஞ்சம் உத்தரவு கொடுக்கரேளா ?”
“சாமி…. பத்திரம்…. அங்க தேசவிரோத கும்பல் ஒன்னு இருக்குது. சரியான கூட்டு களவாணிகள் . எல்லாரையும் கத்தியை காட்டி மெரட்டி காசு பறிக்கும் கும்பல் அது. சில துரைமார்களை எல்லாம் கொன்னுர்க்காங்க. முக்கியமா பாரதிங்க்றவன் பொல்லாதவன். எதாவது விஷயம் தெரிந்தா வரும்போது சொல்லுங்க. நல்ல சன்மானம் கிடைக்கும்”
சரியென்று தலை ஆட்டினேன் .
வீட்டுதிண்ணையில் எனக்காக காத்திருந்தவன் வண்டியை விட்டு இறங்கியவுடனேயே ட்ரங்கு பெட்டியை வாங்கிக் கொண்டு கையை பிடித்து நேராய் பூஜை பெட்டகத்தை தான் காட்டினான்.
ஒரு தத்தாத்ரேயர், சுப்ரமணியர்,துர்க்கை விக்ரகங்கள் இருந்தன .
“நான் கண்டுகொண்டு விட்டேன் ஆர்யா…. நமக்கு ஒரு புதிய தெய்வம் தேவை. அவளின் ரூபம் கூட இதோ பராசக்தியின் ரூபம் தான். அவளை பற்றி தான் இனி நான் பாடப் போகிறேன். பழம்பெரும் பாரத பூமி புத்துயிர் பெற அவளே நமக்கு தேவை. ”
சம்ப்ருதாயத்துக்கு மட்டும் ஒரு கும்பிடு போட்டேன். இப்போதெல்லாம் என்னுள் இறைமறுப்பு பொதிந்து விதைந்து விளைந்து கொண்டு இருக்கிறது. சக்தி உபாசனை செய்ய தொடங்கி விட்டதாக சொல்லி இருந்தான் . இவ்வளவு தீவிரம் என்று எதிர் பார்க்கவில்லை.
எதிரில் வந்து அமர்ந்த கண்ணன் ,
” நீங்க தான் ஆர்யாவா ?”
“ஆமாம் ”
” பாரதி உங்களையே தான் அடிக்கடி சொல்லுவான். அத்யந்த நண்பன் என்று . உங்கள் முழு பெயர் ?”
“சின்ஹகுளத்திபட்டி யதிராஜ சுரேந்தரநாத் ஆர்யா ”
” ஒ… தெலுங்காளா நீங்க….”
“ஆமாம்….. பூர்வீகம் எல்லாம் தெலுங்கு தான். ஆனால் நான் சென்னையில் தான் வளர்ந்தேன்”
“ஒ அப்படியா… அடுத்தாப்ல இருக்கற தெரு முக்குல வரதராஜ பெருமாள் கோவில் இருக்கு. நெறைய கச்சேரி எல்லாம் ஜோரா நடக்கும். தெலுங்கு கச்சேரி கூட கேட்டிருக்கேன். அன்னமாச்சாரியார், பத்ராசல ராமதாசர் கிருதி எல்லாம் கூட தெரியும். நான் பாடி நீங்க கேட்டதிலேயே ”
“இல்லை”
“பாடவா”
“பாடுங்கோ….”
கொஞ்சம் சுருதி பிடித்தார்…..
” பிரம்மமொக்கட்டே பர பிரம்மமொக்கட்டே பர ” என்று இழுத்துப் பாடினார். சுருதி சுத்தம் இல்லை என்றாலும் தெலுங்கு சாஹித்தியம் அக்ஷர சுத்தமாக இருந்தது”
II
காலையில் இவன் கிளம்பும் பௌசிலியே தெரியும் பத்திரிகை காரியாலயத்துக்கு அவ்வளவு சீக்கிரம் போகபோவதில்லை என்று. ஈஸ்வர தர்மராஜர் தெருவில் இருந்து நேராய் வேதபுரீஸ்வரர் கோயில் வாசலுக்கு வந்து ராஜ கோபுரத்தையே மேலும் கீழும் பார்த்து விட்டு “நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய ” என்று துதி பாடி ஒரு நாழிகை கைகூப்பி கண்மூடி இருந்தான். இவனுடன் சேர்ந்தது தான் சேர்ந்தேன் . நான் படும் பாடு எனக்குத் தான் தெரியும் . என்னை சீண்டி பார்ப்பதில் அவனுக்கு கொள்ளை பிரியம்.
” பாரதி நாம வங்காளத்தார் ஆஷ்ராமதுக்குன்னா போறோம்ன்னு நினைச்சேன்”
” இவன் என் நண்பன் சுரேந்திரநாத் ஆர்யா தங்கி இருக்கும் வீடு ஓய். நீர் நேற்று கூட பார்த்திருப்பீரே. ”
என் பெயர் கண்ணன். குவளை கண்ணன் என்று தான் என்னை அழைப்பார்கள். இவன் எழுதிய கவிதைகளை படித்து விட்டு பாண்டிச்சேரியில் இந்தியா பத்திரிக்கையில் உபகாரம் செய்ய ஆள் வேண்டும் என்று இங்கு வந்து இப்போது இவனிடம் மாட்டிக் கொண்டு விட்டேன்.
இந்தியா பத்திரிக்கைக்கு மேற்காய் செல்லவேண்டும். கிழக்காய் இவன் கூட்டிக்கொண்டு போகும்போதே தெரியும். வங்கத்தில் ஒரு பிரிட்டிஷ் துரையை கொன்னுட்டு இங்கே தஞ்சம் புகுந்துருக்காருன்னு கேள்விபட்டேன் . எப்படியும் வா.வே.சு அய்யர் வந்து விடுவார். கச்சேரியும் ஆரம்பித்துவிடும் . அரவிந்தர் வேதம், வேதாந்தம், யோக சூத்திரம் என்று பேசிக்கொண்டு ஒரு ஸ்லோகத்துக்கு ஒரு மணி நேர வியாக்யானம் சொல்லுவார். நடுவில் சாக்த போதனை வேறு நடக்கும். அங்கே போகுவதற்கே எனக்கு பிடிக்காது. அவர்கள் பேசுவது புரியாது. சம்பாஷனை எல்லாம் இந்துஸ்தானத்தில் தான். எனக்கு தேவநாகிரி லிபியை மட்டும் எழுத்துக் கூட்டி அக்ஷரங்களை வாசிக்க தெரியும். நான் கண்டது எல்லாம் நாலாயிரம் தான். அய்யர் உலக இலக்கியம்ன்னு ஆங்கிலத்தில் உரையும் சொல்லுவார். எப்போதாவது கம்பராமாயணம் பற்றி பேசினால் தான் உண்டு.
III
பூஜை பெட்டகம் திறந்தே இருந்தது. ஓரமாய் இருந்த காமாக்ஷி விளக்கில் ஒரு ஜோதி தெரிந்தது. குழந்தை பறித்து தொடுத்து வைத்திருந்த பவழமல்லி மாலையை தரித்த தத்தாத்ரேயர் விக்ரஹம் பொலிந்து நின்று இருந்தார். ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற பேரூழியம் செய்யும் மூவர் ஓருருவம் கொண்டு திகழும் அழகிய தத்துவ பிம்பம். ஆனால் புராணம் சொல்லும் கதை மட்டும் எனக்கு உவப்பானதில்லை. அருகில் வேலேந்திய செந்திலாண்டவரும் சிறிய துர்க்கை விக்ரஹமும் ஒரு வாளும் தென்பட்டது . அந்த வாளை பார்க்கும் போதெல்லாம் அய்யர் குயில்தோப்பில் நடத்தி இருந்த களரிபயத்து பயிற்சியில் கேடயமும் வாளும் தாங்கி போர் தொழில் பழகிய எழுச்சி என்னுள் பரவும் .
முன்தினம் பெய்த அடைமழையில், கேட்ட இடி சத்தமும், தரையில் ஒளிரிய மின்னலையும், வீட்டின் கதவுகள் ஓங்கி அடிப்பதையும், வீட்டின் படியில் ஏறிய மழை நீரையும் பார்த்தபடி நான் எங்கேயோ தொலைத்த உற்சாகம் மீண்டது.
காற்றடிக்குது ….. கடலும் குமுறுது ….. தூற்றல் கதவு சாளரம் எல்லாம் தொலைத்தடிக்குது….. நான் கண்விழித்தேன்……..
அந்த உற்சாகம் காலையில் சூர்ய வந்தனம் செய்த போது ஓங்கி பெருத்தது. ஆனால் கண்ணனின் பதறிய முகம் கண்டு மீண்டும் தொலைத்தேன்.
“பாரதி…… குழந்தைக்கு ஜுரமோ ஜுரம். நம்ம கஷாயம்லாம் ஒத்து வரலை. இங்க எதோ லோபித்தால்ன்னு சொல்றா. பிரெஞ்சு வைதியசாலையாம். இங்க்லீஷ் மருத்துவருக்கு சொல்லி இருக்கு”
நார்கட்டிலில் படுத்திருந்த தங்கம்மாளுக்கு நெற்றி அனலாய் தொதித்ததை என் புறங்கை விரல்கள் உணர்ந்தன.
செல்லமாள் அடுக்களைக்கு போயும் வந்த படி முந்தானையால் முகத்தை துடைத்த படி முனகிக் கொண்டு இருந்தாள். கிணத்தடியில் குளிக்க செல்லும் போது தான் என் லௌகீக கர்மா பற்றிய சிந்தனை வந்தது. குயில் தோப்பில் கூடியிருந்த சகாக்களுடன் பத்திரிக்கைக்கு வந்த ஊதிய பணத்தை மாங்காய் வாங்கி பந்தாடியது, அவள் கைமாற்றாக வாங்கி வந்திருந்த அரிசி பருப்புக்களை ஓர் கவித்துவ வீரியத்தில் முற்றத்தில் வீசியது , எதை பற்றியும் கவலை இல்லாமால் சித்தானந்தா கோவிலில் த்யானித்து பிரம்மத்தில் லயித்தது எல்லாம் பிழை என்று பட்டது. ஆனால் அவளுடைய குறை இது எல்லாம் கிடையாது. கனகலிங்கத்துக்கு உபவீதம் அணிவித்தது தான்.
” நமஸ்தே அஸ்து மகா மாயே ஸ்ரீபீடே ஸ்வரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
நமஸ்தே கருடாரூடே கோலாசுர பயங்கரி
சர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ”
எப்பொழுதும் காலையில் நான் எழுதிய துதி பாடல்களோ , வேத மந்திரங்களோ, உபநிஷத்களின் சாந்தி மந்திரங்களோ என் நாவில் துலங்கும். இன்று ஏனோ இப்படியாக ஒரு ஸ்தோத்திரம். திடீர் என்று இடி சத்தம் கேட்டது. வீட்டின் கல் தளத்தில் மெல்லிய ஒரு அதிர்வு . மேலே இருந்த மண் ஓடுகள் திடீர் என்று பிரிந்து. வானத்தில் இருந்து பொன்மழை வந்து கொட்ட ஆரம்பித்தது. இப்போதைக்கு மட்டும் கலவை சங்கர செட்டியாரிடம் வாங்கிய கைமாற்று பணத்தை கொடுத்து விடலாம் என்று கொஞ்சம் எடுத்து கோட்டில் வைத்துக் கொண்டேன்.
IV
” சுப்பையா…… ஓய் …. சுப்பையா….”
கண்முடி தாம்பூலம் தரித்து தடித்திருந்த நாக்கில் அரி நெல்லியை வைத்து கடித்துக் கொண்டு வந்தான்.
நான் வரைந்த படத்தை மறுபடியும் மறுபடியும் உற்று பார்த்து என்னை ஆர தழுவினான்.
ஓரமாய் கட்டிலில் நான் விரித்து இருந்த வெள்ளை அட்டையை மீண்டும் பார்த்தேன். அவன் வீட்டிற்கு வந்திருந்த போது அதை தான் அவனிடம் காட்டினேன். அந்த படத்தில் ஒரு பெண்ணும் எண்ணற்ற குழந்தைகளும் இருந்தனர் . குழந்தைகள் எல்லாம் ஒரு வெள்ளை துண்டை இடிப்பிலும், ருத்ராக்ஷ கொட்டையை கழுத்திலும் , தலையை சவரம் செய்து கையில் ஒரு தட்டத்துடன் சோணித்து இருந்தார்கள். அவர்களுக்கு பின்னால் ஒரு பெண் கசங்கிய கருஞ்சேலையில், தலையில் இருந்த கிரீடம் சரிந்து காதில் லோலாக்குகளில் இருந்த கற்கள் விழுந்து கழுத்தில் உள்ள ஆரத்தில் இருந்த பதக்கமெல்லாம் போய் வெற்று கயிறுடன் இருந்தாள் . அந்த ஓவியத்துக்கு பாரத தாய் என்று பெயரிடப்பட்டிருந்தது. அப்போது தான் அவன் அந்த வாசகம் சொன்னான்.
” அவள் சிங்கத்தின் மேல் ஆரோஹரித்து இருப்பாள். கையில் திரிசூலம் ஏந்திருப்பாள். இப்போது அன்னியர்க்கு அடிமை பட்டிருந்ததால் கங்கையும் இமயமும் எங்கே போயிற்று…. அவளை அலங்கார பூஷிதையாக பராசக்தியாக என்முன் வரைந்து காட்டு ……” என்று எதிரில் முக்காலியில் போய் அமர்ந்தபடி பாதத்தால் தரையில் தாளம் போட்டுக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டு இருந்தான். விடுக்கென்று சவரில் போய் சாய்ந்து கண் அசந்தான்.
மறுபடியும் மறுபடியும் என் காதில் அந்த வாசகம் பிரவாகித்தது. முண்டாசும் , கோட்டும் , பஞ்சகச்சமும் அங்கிருந்து அகன்றிருந்தது.
மாப்பஸான் – ஸ்லோன் கிராஸ்லி

Image Credit: americanliterature.com
மாப்பஸானைக் கண்டுகொள்வதற்கு முன், நான் முதலில் ஜேம்ஸ் ஜாய்ஸ் படிக்க வேண்டியிருந்தது. பிரான்சுக்குப் போவதானால் அயர்லாந்தைக் கடந்து செல்ல வேண்டும் என்ற அளவில்தான் இதற்கு அர்த்தம் இருக்க முடியும். ஏனெனில், நானறிந்து ஜேம்ஸ் ஜாய்ஸுக்கும் மாப்பஸானுக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமில்லை. ‘க்ளே‘ என்ற கதைக்கும் ‘தி நெக்லஸ்‘ என்ற கதைக்கும் இடையே சில மெல்லிய இணைகோடுகள் இருக்கலாம் (சலிப்பில் ஆழ்ந்திருக்கும் அழகிய பெண்ணின் தாளவொண்ணா குமுறல்). மாப்பஸான், ஜாய்ஸ் இருவரும் காத்திரமான மீசை வைத்திருந்தார்கள், இருவருக்கும் மேக நோய் இருந்தது. ஆனால் இதில் கடைசியாகச் சொன்ன நிலை இருவரையும் பிணைக்கக்கூடிய உரமாக முடியாது; மேக நோய் என்பது மறைந்த ஆண் எழுத்தாளர்கள் விஷயத்தில், சாட் பரிட்சைகளில் உன் பெயரைப் பிழையின்றி எழுதுவதற்கு இணையான ஒன்று. ஆனால்கூட, எட்டாம் வகுப்பு ஆசிரியராய் இருப்பதற்கு அநியாயத்துக்கு தகுதியற்றிருந்த என் ஆங்கில ஆசிரியைக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும் – இந்த இரு படைப்பாளிகளும் என் நினைவில் பிரிக்க முடியாதபடி பிணைந்திருக்கிறார்கள்.
முதலில், அவள் ‘டப்ளினர்ஸ்‘ கதையை நாசம் செய்தாள். ‘தி டெட்‘ கதைக்கு அவள் தந்த விளக்கம்? சோகம். பனிப்பொழிவு. அடுத்தது. ‘எவலைன்‘? ரயில் பயணம். பெண்கள். அடுத்தது. ஒரு கதையின் சாரத்தை அளிப்பதற்கும் சோம்பேறித்தனத்திற்கும் வேறுபாடு இருக்கும் என்றால், அவளது வகுப்புகள்தான் அதன் அளவை. ஒருவேளை, இந்த அம்மணி வேறெங்காகிலும் இருக்க வேண்டியவளாய் இருக்கலாம். இங்கு இருப்பதற்கு பதில், இந்நேரம் “ஹேங் இன் தேர்” என்று எழுதப்பட்ட பூனை போஸ்டர்களைத் தன் விரல் நகங்களால் கிழித்துக் கொண்டு ஆசிரியர்களுக்கான அறையில் அவள் ஒரு சந்திப்பிற்காகக் காத்திருப்பாளாக இருக்கும். நான் சொல்ல வருவது இதுதான் – எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில வகுப்புகள், அதன் ஆசிரியர்களுக்கு நிறைவளிக்க வாய்ப்பில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் அவள் கதை குறித்த விவாதங்களை வெகு வேகமாகக் கடந்து சென்றாள் என்பதுதான் – எங்களில் மோசமானவர்களைக்கூட அவளது வேகம் ஆச்சரியப்படுத்தியது. ‘அரபி’‘ கதைக்கு அவள் அளித்த விளக்கம்தான் என்னைத் தீர்த்துக் கட்டியது. தன்னைவிட வயதில் மூத்த பெண் மீது மோகம் கொண்ட ஒரு சிறுவனின் கதை ‘அரபி‘. கிராமத்தில் நடக்கும் சந்தைக்கு தான் போகப் போவதாக அவளிடம் சொல்கிறான், பதிலுக்கு நினைவுப் பொருள் ஏதேனும் வாங்கிவரச் சொல்கிறாள் அவள். அவள் பணித்த செயலால் குதூகலிக்கும் அவன், மிகப் பொருத்தமான ஒரு பரிசைத் தேடி இறுதியில் கண்டெடுக்கிறான். ஆனால், அந்தக் கடையை நடத்தும் பெண்மணி அவனைப் பார்த்துச் சிரித்தபடி உதவி வேண்டுமா என்று கேட்கும்போது அவன், இல்லை, வேண்டாம், நன்றி என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறான்.
“பார்த்தீர்களா,” என்று என் ஆசிரியை கதையை முடித்தாள், “சில சமயம் ஜாய்ஸ் கதைகளில் அர்த்தமே இருப்பதில்லை, அதுதான் விஷயம்”
நிச்சயம் அதுவல்ல விஷயம். தனியார் பள்ளி அமைப்பில் பணியமர்த்தப்பட்டிருக்கும் அமெச்சூர் நிஹிலிஸ்ட் நீயென்றால், அப்போது வேண்டுமானால் அதுதான் உனக்கு விஷயமாக தெரியலாம். ஆனால் உலகில் ஒருவர் மீதொருவர் ஒருதலைக்காதல் கொண்ட எந்த ஒரு பதின்பருவ கும்பலாக இருந்தாலும் அவர்களுக்கு இந்தக் கதை புரிந்திருக்கும்: கடையை கவனித்துக் கொண்டிருக்கும் பெண்மணி அவன் திசையில் தன் வசீகரப் புன்னகையை வீசும்போது, நம் நாயகன் தன் காதலி நாகரீகமாகப் பேசியிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொள்கிறாள், அவள் அவனிடம் சல்லாபிக்கவில்லை. அப்போதே அவனது காதல் ஜோதி அணைந்து போகிறது, அதனிடத்தில் சங்கடப் புகைதான் மிஞ்சி நிற்கிறது. நான் அப்போது ‘ஆனி ஹால்‘ பார்த்திருக்கவில்லை, ஆனால் பார்த்திருந்தால், ஜேம்ஸ் ஜாய்ஸ் என் வகுப்பறைக்குள் நுழைந்து அந்த மார்ஷல் மக்லூஹன் காட்சியை அரங்கேற்றியிருக்க வேண்டும் என்று விரும்பியிருப்பேன். ‘அரபி‘ அப்போதே எனக்கு மிக முக்கியமான கதையாகிப் போனது, பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டிய ஒரு சிறு இலக்கியப் பொருள் அது. (பதின்பருவ உள்ளத்தின் வினையை என்னவென்று சொல்ல- அஞ்சாதே, ஜேம்ஸ், நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்!). எனவே, அடுத்து கிழிபடப் போவது கை டி மாப்பஸான் என்ற ஒரு பிரெஞ்சுக்காரன் என்பதை பாடத்திட்டத்தில் பார்த்ததும் எனக்குக் கவலை வந்துவிட்டது.
என் வாழ்க்கையில் முதல் முறையாக நான் பாடம் நடத்தப்படும் பக்கங்களைக் கடந்து வாசித்துப் பார்க்கிறேன். முதலில் ‘தி நெக்லஸ்‘ கதையில் துவங்குகிறேன் (அதுதான் சிறிதாக இருக்கிறது). அதன்பின் ரத்தத்தை உறைய வைக்கும் ‘பூல் டி ஸ்வூஃப்‘ (Boule de Suif). இரு கதைகளின் முடிவுகளும், அவற்றின் தாங்கிக்கொள்ள முடியாத அளவு கச்சிதமான திருப்பங்களும், எனக்கு அதிர்ச்சியளித்தது நினைவிருக்கிறது. நான் அந்தப் புத்தகத்தின் பக்கங்களையும் நினைவில் வைத்திருக்கிறேன், அவற்றின் அளவையும்கூட. அதன் எழுத்துரு எனக்கு நினைவிருக்கிறது என்று எண்ண விரும்புகிறேன், ஆனால் அதை மறந்துவிட்டேன் என்பதுதான் உண்மையாக இருக்கும். ஆனால் இப்போதும் பார்க்க முடிகிறது, நான் என் படுக்கையில் உட்கார்ந்திருக்கிறேன், திறந்த வாய் மூட மறந்து அமர்ந்திருக்கிறேன், ஒரு தந்திரக் காட்சியை இப்போதுதான் கண்டதுபோல். மீண்டும் ‘தி நெக்லஸ்‘ கதையைப் படிக்கிறேன். மாப்பஸான் கதைகளை எனக்கு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலை உணர்கிறேன், அவற்றை நானாகவே புரிந்து கொள்ள வேண்டும், அவற்றின் ஆசிரியர் என்னிடம் நேரடியாகப் பேச வேண்டும். ஏன், அந்த போஸ்டர்- கிழிக்கும் கள்ளக் காட்டுப்பூனை. கடைசியில் அவள்தான் என் ஆசிரியர்களில் மிகச் சிறந்தவராக இருந்தார். கொஞ்சமும் ஒளிவுமறைவற்ற அவளது ஆர்வமின்மைக்கு அப்பால் அவள் என்னைக் கதைகளை நேசிக்கச் செய்துவிட்டாள்.
‘பூல் டி ஸ்வூஃப்‘ கதைக்கு அவளது விளக்கம்? விபசாரம். யுத்தம்.
நன்றி, இப்போது என் முறை.
நான் வளர்ந்து விட்ட நிலையில் என் இப்போதைய பிரச்சனை, இந்தக் கதைகளின் ஆற்றல் குறைந்து வருகிறது என்பதுதான் – அதிலும் குறிப்பாக, ‘தி நெக்லஸ்‘ கதை. காலம் போகிறது, முதல் காதல்களின் நினைவழிகிறது என்பதும் இதற்கொரு காரணம். ஆனால் என் தேர்வுகளும் இதற்கான காரணம்தான். கடந்த சில ஆண்டுகளாக நான் வேறெதையும் நினைத்துப் பார்க்கவில்லை என்பதைச் சொல்ல வேண்டும். ‘தி நெக்லஸ்‘ கதையை என் நாவலுக்கான இன்ஸ்பிரேஷனாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்தக் கதையைத் தனித்தனியாய்ப் பிரித்து ஒவ்வொரு பகுதியையும் திருப்பிப் பார்த்து மீண்டும் இணைத்திருக்கிறேன். ‘தி க்ளாஸ்ப்‘ கதையின் பிரதான பாத்திரங்கள் பொய்யான லட்சியங்களை ஒரு சங்கிலித் தொடராய்த் விரட்டிச் செல்கின்றனர்- ‘தி நெக்லஸ்‘ கதையின் அரைகுறை இரக்கம் கொண்ட நாயகியைப் போலவே. கதை பற்றிய என் முதல் உணர்வுகளைப் பொடிப்பொடியாய்த் துகளாக்க, நான் அந்தக் கதையைப் பற்றி சிலரிடம் நேர்முகம் காண்கிறேன்- நினைத்துப் பார்க்குமிடத்தில் திரும்பச் சொல்லச் செய்கிறேன். அவ்வளவு முக்கியமாய் இருந்த இந்தக் கதை எனக்கு ஒன்றுமில்லாமல் போகும்வரை நான் மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டேயிருக்கிறேன். இயல்பாகவே, எனக்கு இந்தப் பரிமாற்றம் பிடித்திருக்கிறது. இதிலிருந்து எனக்கு ஒரு முழு புத்தகமே கிடைத்திருக்கிறது. காமத்துக்குரிய பதார்த்தங்கள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன.
வேறொரு கதையைத் தன்னிகழ்வாய் வாசிக்கும்போதுதான் இந்தக் கதையை மீட்க நேர்ந்தது. ஒரு ஜனவரி மாதப் பனிப்புயலில், ஐசாக் பாபெலின் “கை டி மாப்பஸான்” என்ற கதை எதிர்ப்பட்டது. மாப்பஸான் வெறியள் என்று சொல்லிக்கொண்டு திரியும் என்னைப் போன்ற ஒருத்திக்கு இந்தக் கதையைப் படித்ததேயில்லை என்பது கேலிக்குரிய விஷயம்தான். மாப்பஸான் கதைகளை மொழிபெயர்த்து ஒரு பணக்கார போஷகருக்கு காதல் வலை விரிக்கும் ரஷ்ய இளைஞன் ஒருவனைப் பற்றிய இந்தக் கதையில் அவன் வீடு திரும்பி, மாப்பஸானின் கொடூர மரணம் பற்றிய தகவலை வாசிக்கிறான் (மாப்பஸானின் மரணத்தின் மிகக் குரூரமான விஷயம் அவரது பால்வினை நோயல்ல). காமம். உயர்குடிகள். பிரெஞ்சு விஷயங்கள். ஆம், அந்தத் தளங்கள் அத்தனையையும் அந்தக் கதை கையைப் பிடித்து இழுத்தது. ஆனால், பாபெலின் கதை உண்மையில் வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலுள்ள அந்த மெல்லிய இழை பற்றியது, உயர் கலையையும் அடிமட்டக் குப்பையையும் பிரிக்கும் மெல்லிய இழை. “சொற்றொடர் ஒன்று இவ்வுலகில் பிறக்கிறது, அது நன்றும் தீதுமாய் ஒரே சமயத்தில் இருக்கிறது. ரகசியம் ஒரு சிறிய, ஏறத்தாழ கண்ணுக்கே தெரியாத திருகலில் இருக்கிறது. அதைத் திருப்பும் கோலை நீ உன் கரங்களில் ஏந்தியிருக்க வேண்டும், மெல்ல மெல்ல வெம்மை அடையும் அதை நீ ஒரு முறைதான் திருப்ப முடியும், இரண்டாம் முறை திரும்பாது”. நான் என் பதின்பருவத்தில் சிறுகதைகள் வாசிக்கும்போது அடைந்த தூய நேசத்துக்கு “கை டி மாப்பஸான்” கதை என்னை மீண்டும் அழைத்துச் சென்றது. மாப்பஸான் கதைகளில் ஒன்றை நான் என் புனைவுக்குள் சேர்த்துக் கொள்ள நினைப்பதற்கு முன்பான காலம் அது.
பாபெல் கதையைப் படித்து முடித்தபின், நான் என் அறையின் குறுக்கே நடந்து, அலமாரியில் இருந்த ஒரு தொகுப்பை எடுத்து, ‘தி நெக்லஸ்‘ கதை இருக்கும் பக்கத்தைப் புரட்டிப் பிரித்தேன். அதை வாசித்தேன் – உண்மையாகவே வாசித்தேன்- முன் எப்போதும் நான் அதை வாசித்திராதது போல். தலைக்கனம். இழப்பு. பாரிஸ். உண்மையைச் சொன்னால், இது ஒன்றும் அவ்வளவு மோசமான விளக்கம் அல்ல.
(ஸ்லோன் கிராஸ்லியின் நாவல், ‘தி க்லாஸ்ப்’ இம்மாதம் பேப்பர்பாக் வடிவில் பதிப்பிக்கப்படுகிறது)
இலக்கியத்தை அறிதல்
அமரநாதன்
இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்கள் சிலர் ஒவ்வொரு வாரமும் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அது போல் இம்முறை சந்தித்தபோது பன்னிரு படைக்களத்தின் இறுதி அத்தியாயங்கள் பற்றிய பேச்சு வந்தது. அதை வாசித்தபொழுது தவிர்க்க இயலாமல் அண்ணா இறந்ததும் கருணாநிதி எழுதிய இரங்கற்பாவும் நினைவுக்கு வந்தது. அது கவிதை என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. பன்னிரு படைக்களத்தில் பீமன், “நீங்கள் வென்று தருக்கியது உங்களுக்கு ஊட்டப்பட்ட முலைப்பாலை. கொன்று உண்டது (தின்றது!) கொல்லையில் நின்றிருந்த காமதேனுவை,” என்று கூறுவதை மொழிவளம் என்று என்று ஒரு நண்பர் பாராட்டியபோது “அடுக்குமொழி” இலக்கியத்தின் பொற்காலத்தை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
நண்பர்கள் சிலரின் பார்வையில் இந்த “மொழிவளமே” ஒட்டுமொத்தமான அளவுகோலாகி நாவல் தேர்ச்சி பெற்று விடுகிறது. இது போலொன்று வெவ்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் எல்லா எழுத்தாளர்கள் விஷயத்திலும் நடந்தேறி வருகிறது. மிகச் சாதாரணமான நாவல்கள்கூட இலக்கியமல்லாத காரணங்களுக்காக – 31 வயதாகியும் பூப்படையாத பெண்ணைப் பற்றிய முதல் நாவல், தேனி மாவட்டத்தில் இரண்டு மலைகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்கில் வாழும் ஏதோ ஒரு பழங்குடியினப் பெண்களைப் பற்றிய முதல் நாவல் – இலக்கியம் என்று போற்றப்படுகிறது. மொழிவளம் வேறு இலக்கியம் வேறு. உண்மையில் மொழிவளமோ, அல்லது யாரும் எழுதாத ஒன்றை எழுதுவது என்பதோ மட்டும் ஒரு படைப்புக்கு இலக்கிய அந்தஸ்து பெற்றுத் தந்து விடுவதில்லை.
எதார்த்த எழுத்தை, அது யதார்த்தமாய் இருக்கிறது என்பதாலேயே உயர்ந்த இலக்கியம் என்று ஏற்றுக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். இலக்கியம் வாழ்க்கையைப் பிரதிபலிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் இலக்கியமல்லாத காரணங்களைக் கொண்டு இலக்கியத்தைக் கண்டடையும் முயற்சிதான். வாழ்க்கை அனுபவம், வாசிப்பனுபவம் இரண்டிற்கும் தவிர்க்க இயலாததொரு தொடர்பு உண்டு என்ற சிந்தனை எழுத்தாளனுக்கு இருக்குமா என்று தெரியவில்லை. அசோகமித்திரன் ஒரு நேர்காணலில், “அது கதை அய்யா,” என்றார்.
வாழ்வனுபவத்தையும் வாசிப்பனுபவத்தையும் எதிரெதிர் தட்டுகளில் வைப்பதானால் எங்கே அனுபவம் முடிகிறது, எங்கே கற்பனை துவங்குகிறது என்ற கேள்வி எழுகிறது. இப்படிப்பட்ட சிந்தனை ஒரு படைப்பாளியைக் குழப்பவே செய்யும். வாழ்க்கை என்று கருதியதால்தான் ஜெயமோகன் ‘அறம்’ தொகுதியில் உள்ள கதைகளை எழுத முடிந்தது. இதே காரணத்தினாலேயே ‘தோல்’ போன்ற நாவல்களும் எழுதப்படுகின்றன. அனுபவ வாழ்க்கை ஒரு புனைவினுள் எவ்வளவு இருக்கலாம்? புனைபடைப்பு என்றாலும் சிக்கல்தான். அது வாசிப்பனுபவத்தினுள் வருவது கடினம்.
இப்படிக் கூறலாம்: புனைவின் களத்தில், அதன் தருணத்தில் நடக்கச் சாத்தியமுள்ளவற்றைப் பற்றி படிப்பது நமக்கு நல்ல வாசிப்பனுபவமாகிறது. நாம் படிப்பது மகிழ்ச்சிக்காகவே என்று கூறுவது ஒரு ஹெடானிச சித்தாந்தம் என்றாகிவிடலாம். ஆனால் இப்படி ஒரு கருத்து இலக்கிய கோட்பாடுகளில் விவாதிக்கப்படுகிறது. Pleasure என்பது வெறும் புலனின்பம் மட்டுமல்ல- அறிவு, ஆன்மா சார்ந்த விஷயம் என்று கொள்வோமானால் அதன் பொருள் வேறாகிவிடலாம். இந்நிலையில் இன்பம் X துன்பம் என்ற இருமை இல்லாமலாகி விடலாம்; உதாரணமாக திருமணம் – பிரிவு, குழந்தையின் பிறப்பு – தாயின் பிரசவ வலி. இது பற்றி நிறைய விவாதங்கள் உண்டு.
கனிவு, புரிந்துணர்வு, போன்ற விஷயங்களைக் கொண்ட கதைகளுக்கு நாம் அளிக்காத சலுகையை வன்முறை, குரூரம், துரோகம், காழ்ப்புணர்வு போன்ற எதிர்மறை உணர்வுகளை இரக்கமின்றிச் சித்தரிக்கும் கதைகளுக்கு அளித்து நாம் அவற்றிற்கு இலக்கிய மதிப்பு தருகிறோம் என்றொரு கருத்தும் இருக்கிறது. ஆனால், எந்த ஒரு இலக்கியப் படைப்பையும் அதனுள் உள்ள தர்க்கத்தினடிப்படியில்தான் பார்க்க வேண்டும் என்று கருதுகிறேன். அப்படிச் செய்யும்போது இப்படியொரு எண்ணம் எழ வாய்ப்பில்லை. வாழ்க்கை X இலக்கியம் விவாதம் நிறைய பேசப்பட்டுவிட்ட ஒன்று. அந்த இருமை அவசியமில்லை.
வாழ்க்கை என்றால் யாருடைய வாழ்க்கை? விஜய் மல்லையா நன்றாகவே வாழ்கிறார். தினந்தோறும் நூறு இருநூறு சம்பாதிக்கும் ஆட்டோ டிரைவர் யாரோ தவறுதலாக விட்டுச் சென்ற லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளை திரும்பக் கொடுக்கிறார். இதில் எது வாழ்க்கை? நேரடி அனுபவம் எப்போதும் இலக்கியமாவதில்லை.
‘அப்பாவின் நண்பர்’ கதையில் தேவை நிர்பந்தத்தால் அப்பாவின் நண்பரைத் திட்டித் தீர்க்க வேண்டுமென்று எண்ணுகிறான் மகன். அவனது அம்மாவுமே அப்பாவின் சிநேகிதரைத் திட்டிக் கொண்டுதான் இருப்பாள், ஆபத்து காலத்தில் உதவவில்லை என்ற ஆதங்கத்தில். உண்மையில் மகன் அவர்களின் சந்திப்பை அஞ்சுவான். ஆனால் அவன் அச்சத்துக்கு மாறாக அம்மாவுக்கோ அப்பாவின் சிநேகிதரைப் பார்த்தவுடன், “இவ்வளவு நல்லவங்களையெல்லாம் விட்டுவிட்டுப் பிரிந்து செல்ல உங்கள் நண்பருக்கு எப்படி மனது வந்தது,” என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. இதைப் பல்வேறு வகைகளில் புரிந்து கொள்ள முடியும் என்பதில்தான் இலக்கிய அனுபவம் இருக்கிறது. அது வாழ்க்கை தரும் நேர்க்கோட்டிலான அனுபவமல்ல.
ஒளிப்பட உதவி – The Nonist
