கட்டுரை

முகிலிடை மின்னல்

பானுமதி ந

lasara

அகம் கொண்ட தரிசனம் சொல்லில் கட்டுப்படாது. அது போடும் கோலத்தின் நுனியும், அடியும் பற்றி லாசராவின் ’தரிசனம்’ நடக்கிறது.

குங்குலியச் சுடர் போன்று’ குபுக், குபுக் ஸ்வரப் பந்துகள் குபீரிடுகின்றன, குவிகின்றன, குலைகின்றன, குழைகின்றன, குமைகின்றன. இந்த ராகமுமில்லை, அந்த ராகமுமில்லை, எந்த ராகமுமில்லை, ஆத்மாவின் ராகம் ஒரே ராகம், அவரவர் உடன் கொண்டு வரும் அவரவரின் சொந்த ராகம்.”

நம்பிக்கை இன்ன உருன்னு யார் கண்டது? நாமா நினைக்கிற உருவைத் தவிர அதுவா அவாவாளுக்குத் தக்கபடி சுயமா, தானா, தனியா எடுத்து அவாளே அறியாமல் அவாளைத் தாங்கற நிஜ உரு ஒண்ணு அதுக்கிருக்கே!” ‘தயா’வின் உரையாடல் இது. ”நம் துக்கம், தோல்வி, அழிவு இவைகளே நம் பக்க பலங்கள்”. இதுவும் சாதாரண வாக்கியம் இல்லை. பெண்ணைச் சூழ்ந்துள்ள இது அவளின் பலமும்கூட. அவள் வாழத் தேவையான வைராக்கியமும்கூட. ”இதென்ன அர்த்தம் பண்ணற அனர்த்தம்” (‘தோன்றுகிறதா?’)

வேஷம் போடுவதும், போட்டுக்கறதும் நாமாத்தான் என்பதற்கு அத்தாட்சி மாதிரி, வேஷம், வேஷம் என்று கொண்டே ஒரு நாள்  வேஷம் கலைந்த பின்னும் வேஷம் மாறாமல் இருந்தால் அப்போ அது வேஷமா? நிஜமா? அப்பவும் அது வேஷந்தானா, இல்லை வேறு ஏதாவதா? எது நிஜம்?” நாம் அனைவரும் நாடக மேடை நடிகர்கள் என்பதால் வேஷம் கலைந்த பின்னும் நம் வேஷம் மாறுவதில்லை- ஆள் தான் மாறி நடிக்கிறோம். புனைவுகள் தொடர்கின்றன. தயாவின் தவிப்பான கேள்வி அவளது  தவத்தின் வேஷம் நிஜமாகிப் போகும் இடம் வேஷம் நிலைக்கிறதா இல்லையா?

இந்த வேஷ வினோதம் ‘நேரங்களில்’ அழகாகத் தொடர்கிறது. ”ஒரு ஒரு வேஷமும் ஒரு ஒரு நிழல். ஒவ்வொரு நிழலும் ஒரு ஒரு வர்ணம். அவை ஆடுவதும், பூசுவதும், வருவதும், மறைவதும் சில சமயங்கள் தெரிவதுகூட இல்லை.”

நெருப்பு உருகி ஒழுகுவது போல் சுருதியோடிழைந்து குரல் உள் வழிந்து நிரம்பி மற்ற ஓசைகளின் உணர்வை அப்புறப்படுத்தியதும், நிதானமாய், படிப்படியாய், வேகமாய், அகாரங்கள் மேலே கொக்கிகளை மாட்டி, குழந்தையைக் குளத்தில் முழுகக் கையைப் பிடித்து இழுப்பது போல், அவை அனைத்தும் அத்தனைக் கைகளாய் அவனைப் பற்றி தோட்டத்திலிருந்து வீட்டுள் இழுத்தன.” “தும்பியின் இறக்கையின் நயத்துடன் சன்னமான சல்லாக்கள் அவனைச் சுற்றிலும் மேலும் மோதி அலைந்து மிதந்தன.” “இமைகளுக்கிடையில் விழிகள் விதைகளாய் விழித்துக் கொண்டிருந்தன” காற்றில் வரும் சுருதி- இங்கே கதாநாயகனின் மன நிலைக்கேற்ப நெருப்பாக உருகி வழிகிறது. சூழ்நிலைக் கைதியாய் வாழும் மானுட அவலம் கொக்கிகளாக மாட்டி அவனை அங்கே நிலை நிறுத்துகிறது. விலக முடியாத தவிப்பு சல்லாக்களால் பிணைக்கிறது. இமை மூடியும் தூங்கா கண் பாவை அவருக்கு விழித்திருக்கும் விதை! கதையை மட்டும் சொல்லவில்லை அவர், கதையைகூட சொல்லத் தேவையில்லை, சொல் சுமக்கும் கனம் நம்மையே கதைமாந்தர் எனச் செய்துவிடுகிறது. தளையும், விடுதலையும் மானிட வரம் அல்லது சாபமோ? இரண்டுமே தேவையோ, தேவையெனில் எம்மட்டில், இல்லையெனில் எப்பொழுதிலிருந்து?

கேள்விகள்.. பதில் இருந்தும் பயப்படும், பயப்படுத்தும் கேள்விகள். ’மாயமான்’ சற்று தள்ளி நின்று பதில் சொல்கிறது. ”செயல் எனும் சிலந்திதான் என் கடவுள். செயலின் ஒடுக்கம்- புலனின் ஒடுக்கம், புலனின் ஒடுக்கம்- மனதின் ஒடுக்கம், மனதின் ஒடுக்கம்- உயிரின் அமைதி“.

இருளில் கண்கள்  தொடர முடியா அந்த ஓசையின் வளைவுகளை, வளைவுகளின் நுட்ப அழகுகளை செவியால் எப்படிப் பளிச்சென்று பார்க்க முடிகிறது, பருக முடிகிறது! தம்பூரை மீட்டினாற் போன்ற உருகோசையில் நினைவு ஒன்றுபட்டு அந்தத் தேடலின் தவிப்பில் நெஞ்சு முங்கி முங்கி எழுகையில், தன் தன்மையே துலங்கித் தனிப் பரவசமடைந்தான். தானும் அத்துடன் அதன் தேடலோடிழைந்தான்.” காதுகள் இன்னிசையில், அதைவிட உயிர் நிரப்பும் ஓசையில் அவர் எழுத்தில் கண்களுமாகி விடுகின்றன.

தான் உண்டாக்கிய நெருப்பில் நான் திருப்பித்திருப்பி தன்னயே காய்ச்சிக் கொள்கிறது. நாம் இறக்கவில்லை. ஏனெனில் நம்மால் இறக்க முடியாது. உயிர் பிறந்தது எப்படியோ ஏனோ பிறந்துவிட்டது. பிறந்தபின் அதனால் இறக்க முடியவில்லை. இருந்து தான் ஆக வேண்டும்.”

தட்டில்லாது சுடர் ஒன்று அஞ்சலியில் அவளை வட்டமிட்டு அந்தரத்தில் நீந்திற்று. கம்மென்று அகில் மணம் புகையின்றிக் கமழ்ந்தது.” ”செயலளவில் ஒன்றும் நேர்ந்து விடவில்லை, எண்ணமும் செயலே என்பது தவிர. பூக்கள் மணப்பதற்காகப் பூக்கவில்லை. தம் இயல்பில் பூக்கின்றன, அதனால் மணக்கின்றன.” (ஏகா)

செவியின் நுட்பம் இவரை வியப்பிற்குள்ளாக்குவது வியப்பில்லை இசையின், ஒலியின், கூவல்களின், கேவல்களின், மெளனம் போடும் நிசப்த சப்தத்தின் உபாசகர் வேறு எப்படி இருப்பார்? ’சப்தவேதி’ சொல்கிறது- ”கற்பனை என்பது ஆபத்து. கட்செவி போன்று, அதிசன்னமான ஓசைகளைப் பெறும் செவியையும் படைத்து, பிறகு அவ்வோசைகளின் உள்ளர்த்தங்களைக் கண்டுபிடிக்க, அவ்வழியே கற்பனையும் ஓட்டிவிட்டால் அப்புறம் தசரதனின் சப்தவேதி சமாசாரம்தான்”. “இரவில்தான் சப்தங்களின் சக்தி வலுக்கிறது. ஒளி மங்கியதும் ஒலி ஓங்குகின்றது.” ”அவளுடைய தரிசனத்தின் இன்பமே, ஒரு சகிக்கவொண்ணா துன்பம்

மின்னல் வானத்தை வெட்டும் பொழுதெல்லாம், வானம் அடிபட்ட விலங்கு போல் அலறியது

ஜதியின் ஸ்வரம் நாம் அறிவோம். சிந்தனையின் ஸ்வரம்? ’ஆஹூதி’- “அம்மாவின் கூந்தல் முடிச்சில் தாழம்பூ மடல் தகதகவென கமகமக்கும் அல்லது கமகமவென தகதகக்குமா? கம கம தக தக சிந்தனையின் ஸ்வரம் எப்படி மணக்கிறது?

அதிநுட்பமாகத் தொடுக்கப்பட்டிருக்கும் கொன்றைச்சரம்தான் மின்னல் என ஒளி காட்டி கண்ணைப் பறிக்கிறது.

கண் திறந்தால் ஒளி. மூடினால் இருள். மூடியும் திறந்தும் உழன்றால் உயிர் என எனக்கு நானே பெயர் வைத்துக் கொண்டு  செயல் வகுத்த நிலை முந்திய கர்ப்ப வெளியில் நானற்று நிறைந்திருக்கிறேன். எத்தெய்வமும் அடியூன்றிய ஆகாச கோசம் நான்.”

லாசராவின் எழுத்துக்கள்- எண்ணங்கள் முற்றுமாக ஏறி, அதன் பின்னரும் வாசகர் தன் எண்ணத்தைக் கண்டடைய  வழி வகுக்கும் வசீகரம் சொல்லில் அடங்காது. தன்னைச் சுற்றியுள்ள நிகழ்வுகளையும், காட்சிகளையும், பேச்சுக்களையும் தரிசனமாக்கும் வித்தைக்காரர். இதில், வாசகருக்கு கிட்டும் அனுபவம் அவரவர் வார்ப்பிற்கு ஏற்றபடி.

நன்றி – தி இந்து

 

 

ஹெலன் சிம்ப்ஸன் கதைகள் பற்றி ஒரு சிறு குறிப்பு

பால்கோபால் பஞ்சாட்சரம்

41xpkc6xpdl-_sx331_bo1204203200_

மௌனம், பளிச்சென்றிருக்கும் சமையலறை மேடைகள், புது ஒளி- விழித்தெழுந்து வந்ததால் கண் துல்லியமாகப் பார்க்கும் என்பதால் இப்படி எல்லாம் தெரிகிறது போலிருக்கிறது, பாத்திரங்களைக் கழுவும் எந்திரத்திலிருந்து எடுத்த பளீரில் காஃபி ஃபில்டர்கள். தியானிக்க உதவியாக ஜன்னல் திரைகளை மேலே தூக்கி விட்டதில் இன்னும் பசேலென்று உள்ள தோட்டம், புல்வெளி. பற்பசையின் தாக்கத்தால், நாக்கு துழாவினால் சிறிதும் கொழ கொழப்பு இல்லாத சுத்தத்தில் பற்கள், வாடை இல்லாத வாய், தூய காற்றுக்குத் தயாராக உள்ள மூக்கு என்று உடல் இன்னொரு நாளைக்குத் தயாராக இருக்கிற நிலை.

அடிக்கடி விழிப்பு தட்டியிருந்தாலும்கூட, உறக்கமும் இரவில் கண்ட கனவுகளின் தடயங்களும் புத்தியில் இன்னமும் இருக்கும் பொழுது. நேற்று இரவு படுக்குமுன் சமையலறை மேஜையில் அமர்ந்து படித்த ஹெலன் சிம்ப்ஸனின் மூன்று கதைகள் புத்தியில் புரளும் காலை இன்று. இந்திய பெண்ணியம் மேலை பெண்ணியம் என்று பிரித்து நோக்க முனைந்தால் வேறுபாடுகள் தெரியும் அளவு வேறான எழுத்து. விக்கட் ஹ்யூமர் என்று ஆங்கிலத்தில் ஒரு பிரயோகம் உண்டு. அந்த வகை நகைச்சுவையைக் கையாள்பவர் ஹெலன் சிம்ப்ஸன்.

இவருக்குக் கதை சரியாக அமையும் தருணங்களில், புள்ளி போன்ற காயத்தைக் கொடுத்து, ஆனால் உள் பாகங்கள் அனைத்தையும் துணித்து விட்டு வெளிவரும் மெலிய, உறுதியான கத்தி போன்ற நகைச்சுவையாக இருக்கிறது அது. அறுபடுவது ஆண் மையப் பார்வை மட்டுமா, அல்லது சமூக உறவுகளின் கேவலங்களா, அல்லது வாழ்வின் அவலங்கள் எல்லாமா என்று நாம் யோசிக்க வேண்டிய அளவு வீச்சு கொண்டது. அதே நேரம் மட்டுப்பட்ட களம், பாத்திரங்களின் விரிவட்டம், சொற்கூட்டம் என்று அடக்கி வாசித்து சஸ்திர சிகிச்சை செய்பவர் ஹெலன் சிம்ப்ஸன்.

நேற்று வாசித்த மூன்றில் ஒன்று சாவையும் நோயையுமே மையமாகக் கொண்டு யோசித்து பயணப் பாதை பூராவும் வாசகரின் கண்ணில் நீர் வழியும் வரை சிரிக்க வைக்கும் கதை.  இரண்டாவது, முதியவர்களைப் பராமரிக்கும் நடுவயதுத் தலைமுறையினரின் அவசரங்களால் ஏற்படும் அவமானமும் அதிர்ச்சியும் பற்றிய கதை. மூன்றாவது, 30களில் நுழைந்திருக்கும் தம்பதியினரின் பிணக்கம் நிறைந்த உரையாடலை, சற்று மறைவில் இருக்கும் நான்கு பதின்ம வயதினர் கண்காணித்து, அந்த உரையாடலில் இருக்கும் சாதாரண நிலை ஒவ்வொன்றையும் ஒரு எஎறிகுண்டைப் போல உணர்வதைக் காட்டும் கதை. தம் எதிர்காலம் இப்படி எல்லாம் அமையக்கூடாது, அமைய விடமாட்டோம் என்று நினைக்கும் அந்த நால்வரும், அந்த ஆபத்தை உணரும் அதே நேரம் உள்ளில் எங்கோ இதிலிருந்து தாம் விடுபட வழியே இல்லை என்றும் உணர்வது போலச் சித்திரிக்கும் கதை. கதை முடிவில் ஒளிந்த நால்வர் ஓட வேண்டிய நேரம் வருகிறது. அவர்கள் ஓடுவதை ஒரு பத்தியில் வருணிப்பவர், என்னவொரு விடுதலை வேட்கை அந்த ஓட்டத்தில் என்பதைச் சுட்டி விடுகிறார்.

எல்லாம் உரையாடல்களும், இடைவெட்டும், அசரீரி யோசனையும் நடத்தும் கதைகள். உறவுகளே மையத்தில் இருக்கின்றன. ஆனால் எல்லாம் நம்மை விலகி நின்று கறாராகப் பார்க்க வைக்கின்றன. முடியும்போதுதான் கதைமாந்தர் வேறு யாருமில்லை நாமேதான், நாம் கடந்து வந்த பாதைகள் பலவும் இங்கு உள்ளன என்பது புரியும். ஆனால் உங்கள் வாழ்வு நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து அந்தப் பாதைகளில் நொடிக்காமல் ஓரிடத்தில் வந்து சேர்ந்திருக்கிறதில் நீங்கள் ஆசுவாசம் பெற முடியலாம், அல்லது நொடித்துப் பாதியில் வீழ்ந்து போனதைப் புரிந்து கொண்டு கழிவிரக்கமோ, அல்லது சுயத்தைக் கனிவாகப் பார்ப்பதோ மேற்கொள்ளலாம். அல்லது இத்தனை இரக்கமின்றி அறுத்துச் சிகிச்சை செய்ய வேண்டுமா என்று எழுத்தாளரிடம் சற்றாவது பொருமலாம்.

டொமஸ்டிசிடி என்பது இந்தக் கதைகளின் கரு. இன் த ட்ரைவர்ஸ் ஸீட் என்ற கதைத் தொகுப்பு. அட்டைப் படத்தை இன்று காலை பார்த்தபோது பொருத்தமின்மை பார்வையைத் தடுக்கியது. இத்தனை நுட்ப புத்தி கொண்ட எழுத்தாளர் இந்தக் கதைத் தொகுப்புக்கு இப்படி ஒரு அட்டைப் படத்தைப் போட ஏன் ஒத்துக் கொண்டார் என்று யோசிப்பதால், இதில் வேறென்ன இருக்கும் என்றும் யோசிக்க வைத்தது. வெறும் மர நாற்காலி, பின்னே சுவரில் ஒரு வட்டமான கடிகாரம். அதிலும் கடிகாரப் படங்களில் எங்கும் காணும் வழக்கமான பத்து மணி, பத்து நிமிடங்கள் என்று நேரம் காட்டும் கைகள். பின்புலம் முழுதும் வெண் சாம்பலில் மிக இலேசான நீலம் பாவித்த நிறத் திரை போன்ற தோற்றம். நாற்காலியின் கால்கள் வளைந்து தரையில் பொருந்துவது கொஞ்சம் கோமாளித்தனமாக இருக்கிறது.

நிறைய கதைகளில் கார்களில் செலுத்தப்படும் பயணங்கள் வருகின்றன. ஆனால் படத்திலோ இருப்பது சாப்பாட்டு மேஜை நாற்காலி. இருக்கையில் குஷன்கூட இல்லை. ஒரு கதையின் தலைப்பு இன் த ட்ரைவர்ஸ் ஸீட். அதுதான் புத்தகத்திலேயே சிறிய கதை. ஆறு பக்கங்கள்தான். புத்தகமும் சிறிய அளவு புத்தகம்- உயர, அகல, கன பரிமாணங்களில் சிறியது. ஆனால் விண்ணென்று இழுத்துக் கட்டப்பட்ட கதை. கதை சொல்லும் பாத்திரம் இத்தனைக்கும் காரோட்டும் பாத்திரம் இல்லை. சரி, பொருத்தம்தான் என்று தோன்றியது.

இந்தப் படத்தால் நான் தண்டவாளத்தை விட்டு விலகி வந்திருக்கிறேன். மறுபடி பெட்டிகளைத் தடத்தில் ஏற்றினால், காஃபி போடும்போது, ஹெலன் சிம்ப்ஸனின் கதைகள் மனதில் இன்னும் உலா வந்து கொண்டிருந்தன. அவர் தன் பெண்ணியப் பார்வையில் இந்தச் சமூக அமைப்பு இப்படி பெண் எதிரியாக இருப்பதாகச் சித்திரிக்காமல், அதே நேரம் பெண் எதிர்ப்புத்தனம் அதில் ஊறி வருவதையும் மறுக்காமல் கதை சொல்கிறார். எப்படி பெண்கள் இந்த எதிரி நிலைக்குத் தாமும் துணை போகிறார்கள், அது எதனால் இருக்கும் என்பதையும் அவருடைய அறுக்கும் கத்தி பிளந்து பார்வைக்கு வைக்கிறது.

ஒளிப்பட உதவி- Amazon 

செரினா

மாயக்கூத்தன்

ஷாராபோவாவின் முதல் கிராண்ட்ஸ்லாம் வெற்றி செரினாவுக்கு எதிராக 2004 விம்பிள்டனில் கிடைத்தது. அந்தப் போட்டி எனக்கு இப்போதும் நினைவில் இருக்கிறது. எப்போதுமே வில்லியம்ஸ் சகோதரிகளை எனக்குப் பிடித்ததில்லை. அவர்களுடைய தோற்றம், ஆக்ரோஷம், போட்டிகளில் அவர்கள் ஆதிக்கம் செலுத்திய விதம், நிறைய காரணங்கள் இருக்கக்கூடும். அதனால், ஷாராபோவா ஜெயிக்க வேண்டுமென்று விரும்பினேன். நினைத்தது நடந்தபோது, ரொம்பவே மகிழ்ச்சி. ஷாராபோவா, செரினாவுக்கு எல்லா விதத்திலும் மாற்றாக இருந்தார் என்பது என் நினைப்பு.

எந்த விளையாட்டை எடுத்துக் கொண்டாலும் அதன் நுட்பங்களை நான் அறியேன். எனக்கு அதுவொரு காணும் பொழுதுபோக்கு. இரண்டு பேர் விளையாடுகிறார்கள் என்றால், யாராவது ஒருவரை சப்போர்ட் பண்ணுவேன். சட்டென்று ஒரு நொடியில் இது நடக்கும். இவர் அருமையான ப்ளேயர் என்றெல்லாம் யாரைப் பற்றியும் தெரியாது. ஆக, ஒவ்வொரு முறை வில்லியம்ஸ் சகோதரிகள் ஜெயிக்கும்போதும் கடுப்பாக இருக்கும். அதனால் ஷாராபோவா ஜெயிக்க விரும்பினேன்.

சமீப வருடங்களில் செரினா ஒரு விம்பிளிண்டனில் ஜெயித்து, பின் பரிசை தலையில் வைத்து கரகம் ஆடியதுகூட ரசிக்கக்கூடியதாக இல்லை. முதன் முறை நான் சந்தோஷப்பட்டதற்கும் 2015க்கும் பதினோரு வருடங்கள். ஹிங்கிஸ், ஹெனின், டேவர்போர்ட், கிம் கிளிஸ்டர்ஸ், அனா, மெளரிஸ்மோ, இப்படி நிறைய பேர் வந்து போயிருந்தாலும், செரினா இன்னமும் வெல்கிறார் என்பது ஆச்சரியம். அதுவும் முப்பது வயதுக்கு மேல் ஒரு விளையாட்டு வீரரின் ஆதிக்கம் எப்படி செல்லுபடியாகிறது? ஃபெடரர் ரொம்பவே திணறுகிறார். நாடலின் ஃபிட்னெஸ் அவருக்கு சாதகமாக இல்லை. ஆனால், செரீனா இன்னமும் இருக்கிறார்.

2004ல் நான் கல்லூரிக்குச் செல்லத் தொடங்கவில்லை. அப்போது என்னைப் பற்றிய என் எண்ணம் ரொம்பவே வண்ணமயமாக இருந்தது. செரினாவையும் அவருடைய ஆக்ரோஷத்தையும் ஏதோ பண்படாத முரட்டுத்தனமாகத்தான் என்னால் எடுத்துக் கொள்ள முடிந்தது. ஆனால், 2015ல் அப்படியில்லை. செரினாவின் உழைப்பும் மீண்டும் மீண்டும் வெளிப்படும் ஆக்ரோஷமும் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றன. 2004ல் என்னைப்பற்றி எனக்கிருந்த நம்பிக்கை தொடரவில்லை. பத்து வருடங்களில் நான் தேங்கிவிட்டதாகவே நினைக்கிறேன்.

இப்போது செரினா எனக்கு அணுக்கமாகத் தெரிகிறார். என்னுடைய பல நண்பர்களைப் போல, சரளமான ஆங்கிலமும் அடிப்படையான ஒரு லாகவமும் எனக்கு கைவரவில்லை. நான் எத்தனை ரூபாய் கொடுத்து துணி வாங்கினாலும் அதை அடுத்தவர் போல உடுத்த முடியாது. எத்தனை கற்றுக்கொண்டாலும், பிறரைப் போல் என்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியாது. இது என் எண்ணமாக மட்டும் இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு. இன்றைக்கு புதிதாக வந்திருக்கும் வீரர்களுக்கு இடையிலேயும் செரினா தனித்தே தெரிகிறார். நம்பிக்கைகளையும் எண்ணங்களையும் திருப்பிப் போடும் ஒருவர் செரினாவுக்குப் பிறகு வரவில்லை.

After the women’s final, the BBC played a montage of Williams reading Maya Angelou’s poem “from a past that’s rooted in pain / I rise . . .” She never asked for this, not for the pain or hate or chance to redeem history. But, at this Wimbledon, she has owned not only her greatness but her role as a transcendent figure in society. Still, she rises. She generates her own context. I thought of that at the end of her match, as she and Kerber lingered at the net in a long, tight hug. The picture—an African-American and a blond German of Polish descent, their arms intertwined—stayed with me. There was nothing political meant by that embrace, of course. It was a gesture of admiration, affection, and respect. It was no more a political act than an ace. And yet there was something powerful to it. We sometimes project our problems onto sports. But sports can also be, in some small but real ways, where we start to work them out.

2016ல் செரினா விம்பிள்டன் வென்றபிறகு வந்த கட்டுரையின் கடைசி பத்தி இது. அவர் அளவிற்கு கஷ்டங்களையோ சாதனைகளையோ நான் கண்டதில்லை. இப்போது அவர் எனக்கு ஒரு தேவதையாகத் தெரிகிறார். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். எனக்கும்தான்.

தொடர்புடையவை
1. Kerry Howley, The Unretiring serena Williams, http://nymag.com/thecut/2015/08/serena-williams-still-has-tennis-history-to-make.html
2. Louisa Thomas, Serena Williams, Andy Murray, and a Political Wimbledon, http://www.newyorker.com/news/sporting-scene/serena-williams-andy-murray-and-a-political-wimbledon

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா

மொழிபெயர்ப்பு – கற்பனைக்கான வெளி

 
The Lights of Brindisi
 
At night, in the harbour of Brindisi,
Angels bearing lamps were flying, and fires
Revealed their faces upturned on the sea.
– O real leaves, the walls of the closed garden
Distance you always; smiling face,
Tilted, silver in the summit of the trees,
You always keep the stormy gate shut.
But I can see you tonight; signature of foam
That the boat crosses and leaves, in the night.
 
Yves Bonnefoy, Translated by Anthony Rudolf, 1966, The Times Literary Supplement
 
ப்ரின்டீசியின் விளக்குகள்
 
இரவில், ப்ரின்டீசி துறைமுகத்தில்,
தேவதைகள் அகலேந்திப் பறந்து கொண்டிருந்தன, அழல்கள்
அவற்றின் மேல்நோக்கும் முகங்களைக் காட்டின, கடலில்.
-ஓ! நிஜ இலைகளே, 
பூட்டிய தோட்டத்தின் சுவர்கள்
உங்களைத் தொலைவிலிருத்தும், எப்போதுமே;
மரங்களின் சிகர வெள்ளியாய்
தலை சாய்த்திருக்கும் நகைமுகமே,
புயற்கதவை நீ அடைத்து விடுகிறாய், எப்போதுமே.
ஆனால் இன்றிரவு என்னால் உன்னைப் பார்க்கமுடிகிறது; 
நுரையின் முத்திரையே,
கடக்கும் படகு உன்னை விட்டும் செல்கிறது, இரவில்.
 
 
முதலில் ஒரு குறிப்பு. இது ஈஃப் பன்ஃபுவா (Yves Bonnefoy) எழுதிய பிரஞ்சு கவிதையின் நேரடி மொழிபெயர்ப்பல்ல. அந்தோணி ருடால்ப் செய்த ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்தான். எனவே, பிரஞ்சு கவிதைக்கும் தமிழாக்கத்துக்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் இருக்கலாம்.
 
குறிப்பாக, ‘O real leaves‘ என்பதை, ‘ஓ! நிஜ இலைகளே’ என்று மொழிபெயர்த்திருக்கும் நகுல்வசன், அதைத் தொடர்ந்து ‘smiling face,’ என்பதை ‘நகைமுகமே’ என்றும், ‘signature of foam‘ என்பதை ‘நுரையின் முத்திரையே,’ என்றும் மொழிபெயர்த்திருக்கிறார். இதற்கான சமாதானம்- ஆங்கிலத்தில், ‘smiling face… you‘, என்று சொல்வதும், ‘signature of foam‘ என்பதற்கு முன் ‘But I can see you tonight;‘ என்று வந்திருப்பதும். இதில் முந்தைய சமாதானத்தை எந்த சங்கடமும் இன்றி ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் பிந்தையது, சிறிது பிரச்சினைக்குரியது: ‘நான் உன்னைப் பார்க்கிறேன்’ என்பதைத் தொடர்ந்து ‘:’ என்று வந்திருந்தால் பரவாயில்லை, அது அடுத்து வருவதைச் சுட்டுவதாய் இருக்கும். ஆனால் ‘;’ என்ற குறியல்லவா வந்திருக்கிறது? பிரெஞ்சு கவிதையுடன் ஒப்பிட்டுப் பார்த்திருந்தால் இந்தக் கேள்விகளுக்கு விடை எளிதில் கிடைத்திருக்கும். இதையெல்லாம் இன்னொருவர் தமிழில் வேறு மாதிரி மொழிபெயர்க்கலாம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இது, இந்த மொழிபெயர்ப்புக்கான நியாயம்.
 
நகுல்வசன், முடிந்த அளவு, ஆங்கிலத்தில் உள்ள காட்சிகளின் வரிசை தமிழிலும் வர வேண்டும் என்று முயற்சிப்பவர். “At night, in the harbour of Brindisi,/ Angels bearing lamps were flying, and fires/ Revealed their faces upturned on the sea.” இதை நிதானமாகப் படிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். At night, in the harbour of Brindisi– என்பது ப்ரின்டீசி துறைமுகம் இருளில் இருப்பதைக் காட்சிப்படுத்துகிறது. தலைப்பு, The Lights of Brindisi என்று இருப்பதால், இந்த இருளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வெளிச்சம் தெரிகிறது என்றும் நினைத்துக் கொள்வோம். அடுத்து, ‘Angels bearing lamps were flying‘ என்ற புதிரான வரியை நாம் அப்படியே கற்பனை செய்து பார்க்கும்போது விளக்கேந்திச் செல்லும் தேவதைகள் புலப்படுகிறார்கள். ஆனால் ஒரு காற்புள்ளிக்குப் பின், ‘and fires‘ என்று அந்த வரி துண்டாவதில் நெருப்புக்கு ஒரு அழுத்தம் கிடைக்கிறது. ‘Revealed their faces upturned on the sea.’ அவர்கள் முகங்களை வெளிப்படுத்தின- அவை கடலில் மேல்நோக்கிக் கிடந்தன. இப்போது நமக்குப் புரிகிறது, நாம் வானில் பார்த்தது விளக்கொளியை, கடல் நீரில் பார்ப்பது அவற்றின் வெளிச்சத்தில் பிரதிபலிக்கப்படும் தேவதைகளின் முகங்களை. இந்தக் காட்சியின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாதபோதும் ஒன்று சொல்லலாம். எது ஆகாயத்துக்கு உரியதோ, அது கடல் நீரில் உள்ளது, ஒளியின் பிரதிபலிப்பில். 
 
இந்த வரிகள், “இரவில், ப்ரின்டீசி துறைமுகத்தில்,/ தேவதைகள் அகலேந்திப் பறந்து கொண்டிருந்தன, அழல்கள்/ அவற்றின் மேல்நோக்கும் முகங்களைக் காட்டின, கடலில்,’ என்று சரியாகவே தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன என்று நினைக்கிறேன். ‘அழல்கள்‘ என்ற சொல்லைக் கண்டு வேண்டுமானால் புருவம் உயர்த்தலாம். 
 
அடுத்து, ‘– O real leaves, the walls of the closed garden/ Distance you always;‘ என்பதை ‘-ஓ! நிஜ இலைகளே,/ பூட்டிய தோட்டத்தின் சுவர்கள்/ உங்களைத் தொலைவிலிருத்தும், எப்போதுமே;‘ என்றுதான் மொழிபெயர்க்க வேண்டுமா? ‘நிஜ இலைகளே,’ என்று அழைத்தால் போதுமே, ‘‘ என்று ஏன் கூவ வேண்டும்? ‘ஓ!‘ என்பதில் ஓர் அவலத் தொனியும், அதைத் தொடரும், ‘நிஜ இலைகளே,‘ என்ற அழைப்பில் ஒரு மென்சோகமும் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்கிறேன். கற்பனைதான், அப்படிதான் இருக்கிறது என்று சொல்லவில்லை. பூட்டப்பட்ட தோட்டத்தின் சுவர்கள் இலைகளை எப்போதும் தொலைவில்தான் இருத்துகின்றன- நெருக்கமில்லாத காரணத்தால் அவை உள்ளவாறே அறியப்படுவதில்லை. இது தோட்டத்து மரங்களின் இலைகளை நோக்கிப் பேசப்படுவதில்லை. அறியப்படாத, ஆனால் உணர்வின் எல்லையில் நிழலாடும் ‘நிஜ’ இலைகளே அழைக்கப்படுகின்றன, துல்லியமாகப் பேசுவதானால் ‘invoke,’ செய்யப்படுகின்றன என்றுகூடச் சொல்லலாம். 
 
முதலில் ‘எது ஆகாயத்துக்கு உரியதோ, அது கடல் நீரில் உள்ளது, ஒளியின் பிரதிபலிப்பில்,’ என்று கண்டோம். அடுத்து, எது தொலைவில் உள்ளதோ, அதன் மெய்வடிவம் நிழலாட்டமாய் உணர்ந்து, அழைக்கப்படுகிறது என்று காண்கிறோம். சேய்மையில் இருப்பினும் நிஜத்தின் அண்மை உணரப்படாமல் இல்லை, அதன் வடிவம் பூரணமாய் வெளிப்படுவதில்லை, அவ்வளவுதான். 
 
smiling face,/ Tilted, silver in the summit of the trees,/ You always keep the stormy gate shut‘ – எத்தனை அழகிய வரிகள். நிலவைப் பேசுகிறார் என்று நினைக்கிறேன். ஆனால் ‘stormy gate‘? இன்னதுதான் என்று தீர்மானமாகச் சொல்லவே முடியாது என்று தோன்றுகிறது. மூடப்பட்ட கதவுகளுக்குப்பின் எப்போதும் தொலைவில் இருக்கும் நிஜ இலைகள், என்பதைத் தொடர்ந்து, மரங்களின் உச்சியில் சிரிக்கும் நிலவு புயற்கதவை எப்போதும் பூட்டி வைத்திருக்கிறது என்பதில் ஏதோ ஒரு ஆசுவாசம் தொனிப்பது போல்தான் தோன்றுகிறது. “மரங்களின் சிகர வெள்ளியாய்/ தலை சாய்த்திருக்கும் நகைமுகமே,/ புயற்கதவை நீ அடைத்து விடுகிறாய், எப்போதுமே,” என்ற தமிழாக்கம் சிக்கலற்றது போல்தான் தெரிகிறது. ஆனால், ‘You always keep the stormy gate shut‘ என்பதை ‘நீ எப்போதும் புயற்கதவைப் பூட்டி வைத்திருக்கிறாய்” என்பதற்கும் “நீ எப்போதும் புயற்கதவை அடைத்து விடுகிறாய்,” என்பதற்கும் ஒரு நுண்ணிய வேறுபாடு இருக்கிறது. புயற்கதவை பூட்டி வைத்திருக்கிறாய் என்பதில் தெரியும் ஆசுவாசம், புயற்கதவை அடைத்து விடுகிறாய் என்பதில் இல்லை – உடைத்துப் பீறிட்டெழுக் காத்திருக்கும் உணர்வுகளின் அழுத்தம் தெரிகிறது என்றே சொல்லலாம். இந்த இரு வாசிப்புகளும் கவிதையின் பொருளையே மாற்றிவிடக் கூடியவை. இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது மொழிபெயர்ப்பாளனின் முடிவு. இங்குதான் மொழிபெயர்ப்பாளனின் கற்பனையும் படைப்பூக்கமும் செயல்படுகின்றன. 
 
ஏனெனில், “But I can see you tonight; signature of foam/ That the boat crosses and leaves, in the night,” இன்னும் பல தேர்வுகளுக்கு இடம் கொடுப்பது. ‘But I can see you tonight;‘, என்பதை, ‘நான் இந்த இரவில் உன்னைக் காண்கிறேன்‘ என்ற இடைநிறுத்தத்தோடு விட்டுவிடலாம். யாரை என்ற கேள்விக்குச் செல்லாமல், கடல் நுரைத்துக் கொண்டிருக்கிறது, அதைக் கடந்து செல்லும் படகு, அது விட்டுச் செல்லும் நுரைகளாய் தன் கையொப்பத்தையும் இட்டுச் செல்கிறது. இந்த நுரைகளில்தான், நான் உன்னைக் காண்கிறேன் என்று சொல்கிறார் பன்ஃபுவா என்று புரிந்து கொள்ளலாம். அப்படி யாரைத்தான் காண்கிறார் என்றால், முதலில் பார்த்த கடலில் தெரியும் தேவதை பிம்பங்களுக்குப் போகலாம். அது போன்ற ஏதோ ஒன்றைக் காண்கிறார்.  
 
ஆனால் நகுல்வசன் தமிழாக்கம், “புயற்கதவை நீ அடைத்து விடுகிறாய், எப்போதுமே,” என்பதைத் தொடர்ந்து, “நுரையின் முத்திரையே,/ கடக்கும் படகு உன்னை விட்டும் செல்கிறது, இரவில்,” என்று இரட்டிக்கிறார். இலைகளையும், நிலவையும் அழைத்துப் பேசியதுபோல், கடல் நுரையையும் அழைக்கிறார். கடக்கும் படகு உன்னையும் விட்டுச் செல்கிறது.
 
கவிதையின் பொருள் தர்க்கத்தின் பாற்பட்டதல்ல. சொல்லப்போனால் எதுவொன்று சொற்களின் நேரடிப் பொருளாகிறதோ அது கவித்துவத்துக்கு எதிரானது. கவிதை, சுட்டல்களைக் கொண்டு சொல்லின் பொருளை அதன் அகராதிக் குறிப்புகளுக்கு அப்பால், சொற்களின் பொருளை அவற்றின் கூட்டுத்தொகைக்கு அப்பால் கொண்டு செல்கிறது. அவ்வாறே கவிதை ஒருமையடைகிறது. இந்தக் கவிதையில் சொற்கள் அடுத்தடுத்த அறிவிப்புகளால் பொருள் பெறுவதில்லை, ஒன்றன்மீது ஒன்று அடுக்கப்பட்ட பிம்பங்களாய் பொருள் கொள்கிறது. அதன் பொருள் கற்பனையால் மட்டுமே உணரப்படக்கூடியது. அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் தொனிக்கலாம்- ஆனால் கவிதையை வாசிப்பவனானாலும் சரி, மொழிபெயர்ப்பவனானாலும் சரி, அவனது திறன்களில் மிக முதன்மையானது கற்பனையே. அதைக் குறைத்து மதிப்பிடுவது மொழியின் இயல்பை புரிந்து கொள்ளத் தவறுவதாகும்.
 
இந்தக் கவிதையைப் பேசும்போது நகுல்வசன் எழுப்பிய கேள்வி- இந்தப் பதிவுக்குப் பொருத்தமான முடிவாக இருக்குமென்று நினைக்கிறேன்: 
“அல்லது, இது அன்றாட பிரத்யட்ச உண்மையைக் காட்டிலும் செறிவார்ந்த ஒரு ஸ்டீவென்ஸிய ‘உன்னதத்தை’ நோக்கிய தேடலுக்கு இணையானதாய் இருக்கலாமல்லவா? “நாம் கட்டியெழுப்புவன, வளர்ப்பன, செய்வன, இவை எல்லாம் நாம் சுட்டுவன, நம்புவன அல்லது வேட்பனவுடன் ஒப்பிட்டால் மிகச் சிறியவை,” என்று வாலஸ் ஸ்டீவன்ஸ் ஒரு கடிதத்தில் எழுதினார். “தட்பவெப்பம் பழகிப் போகிறது/ சூழ்நிலமும் மற்றவையும்;/ ஆன்மாவை சன்னதம் கொள்வதற்காகவே/ உன்னதம் கீழிறங்கி வருகிறது,/ ஆன்மாவும் வெட்டவெளியும், / வெறுமையான ஆன்மா/ சூன்யமான வெளியில்.” மகத்தான மனிதர்களின் பீடங்களில் பறவைகள் மலம் கழிக்குமானால், உன்னதமென்பது வேறெங்கிருந்தோதான் வந்தாக வேண்டும். உள்ளத்தின் எல்லையில் தன் கரம் நோக்கும் கற்பனைக்கே அது சாத்தியமல்லவா? நிஜமான இலையும் நிஜமான நிலவும்கூடப் போதாது, நுரைத்தெழும் முத்திரைகளையும் விட்டுச் சென்றாக வேண்டும், புலப்படும் ஒளியைப் பிரிந்தாக வேண்டும், பிம்பத்தின் மெய்ம்மை மட்டுமே கைப்பற்றத்தக்கது”.

இலக்கியத்தை அறிதல்

அமரநாதன்

இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்கள் சிலர் ஒவ்வொரு வாரமும் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அது போல் இம்முறை சந்தித்தபோது பன்னிரு படைக்களத்தின் இறுதி அத்தியாயங்கள் பற்றிய பேச்சு வந்தது. அதை வாசித்தபொழுது தவிர்க்க இயலாமல் அண்ணா இறந்ததும் கருணாநிதி எழுதிய இரங்கற்பாவும் நினைவுக்கு வந்தது. அது கவிதை என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. பன்னிரு படைக்களத்தில் பீமன், “நீங்கள் வென்று தருக்கியது உங்களுக்கு ஊட்டப்பட்ட முலைப்பாலை. கொன்று உண்டது (தின்றது!) கொல்லையில் நின்றிருந்த காமதேனுவை,” என்று கூறுவதை மொழிவளம் என்று என்று ஒரு நண்பர் பாராட்டியபோது “அடுக்குமொழி” இலக்கியத்தின் பொற்காலத்தை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

நண்பர்கள் சிலரின் பார்வையில் இந்த “மொழிவளமே” ஒட்டுமொத்தமான அளவுகோலாகி நாவல் தேர்ச்சி பெற்று விடுகிறது. இது போலொன்று வெவ்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் எல்லா எழுத்தாளர்கள் விஷயத்திலும் நடந்தேறி வருகிறது. மிகச் சாதாரணமான நாவல்கள்கூட இலக்கியமல்லாத காரணங்களுக்காக – 31 வயதாகியும் பூப்படையாத பெண்ணைப் பற்றிய முதல் நாவல், தேனி மாவட்டத்தில் இரண்டு மலைகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்கில் வாழும் ஏதோ ஒரு பழங்குடியினப் பெண்களைப் பற்றிய முதல் நாவல் – இலக்கியம் என்று போற்றப்படுகிறது. மொழிவளம் வேறு இலக்கியம் வேறு. உண்மையில் மொழிவளமோ, அல்லது யாரும் எழுதாத ஒன்றை எழுதுவது என்பதோ மட்டும் ஒரு படைப்புக்கு இலக்கிய அந்தஸ்து பெற்றுத் தந்து விடுவதில்லை.

எதார்த்த எழுத்தை, அது யதார்த்தமாய் இருக்கிறது என்பதாலேயே உயர்ந்த இலக்கியம் என்று ஏற்றுக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். இலக்கியம் வாழ்க்கையைப் பிரதிபலிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் இலக்கியமல்லாத காரணங்களைக் கொண்டு இலக்கியத்தைக் கண்டடையும் முயற்சிதான். வாழ்க்கை அனுபவம், வாசிப்பனுபவம் இரண்டிற்கும் தவிர்க்க இயலாததொரு தொடர்பு உண்டு என்ற சிந்தனை எழுத்தாளனுக்கு இருக்குமா என்று தெரியவில்லை. அசோகமித்திரன் ஒரு நேர்காணலில், “அது கதை அய்யா,” என்றார்.

வாழ்வனுபவத்தையும் வாசிப்பனுபவத்தையும் எதிரெதிர் தட்டுகளில் வைப்பதானால் எங்கே அனுபவம் முடிகிறது, எங்கே கற்பனை துவங்குகிறது என்ற கேள்வி எழுகிறது. இப்படிப்பட்ட சிந்தனை ஒரு படைப்பாளியைக் குழப்பவே செய்யும். வாழ்க்கை என்று கருதியதால்தான் ஜெயமோகன் ‘அறம்’ தொகுதியில் உள்ள கதைகளை எழுத முடிந்தது. இதே காரணத்தினாலேயே ‘தோல்’ போன்ற நாவல்களும் எழுதப்படுகின்றன. அனுபவ வாழ்க்கை ஒரு புனைவினுள் எவ்வளவு இருக்கலாம்? புனைபடைப்பு என்றாலும் சிக்கல்தான். அது வாசிப்பனுபவத்தினுள் வருவது கடினம்.

இப்படிக் கூறலாம்: புனைவின் களத்தில், அதன் தருணத்தில் நடக்கச் சாத்தியமுள்ளவற்றைப் பற்றி படிப்பது நமக்கு நல்ல வாசிப்பனுபவமாகிறது. நாம் படிப்பது மகிழ்ச்சிக்காகவே என்று கூறுவது ஒரு ஹெடானிச சித்தாந்தம் என்றாகிவிடலாம். ஆனால் இப்படி ஒரு கருத்து இலக்கிய கோட்பாடுகளில் விவாதிக்கப்படுகிறது. Pleasure என்பது வெறும் புலனின்பம் மட்டுமல்ல- அறிவு, ஆன்மா சார்ந்த விஷயம் என்று கொள்வோமானால் அதன் பொருள் வேறாகிவிடலாம். இந்நிலையில் இன்பம் X துன்பம் என்ற இருமை இல்லாமலாகி விடலாம்; உதாரணமாக திருமணம் – பிரிவு, குழந்தையின் பிறப்பு – தாயின் பிரசவ வலி. இது பற்றி நிறைய விவாதங்கள் உண்டு.

கனிவு, புரிந்துணர்வு, போன்ற விஷயங்களைக் கொண்ட கதைகளுக்கு நாம் அளிக்காத சலுகையை வன்முறை, குரூரம், துரோகம், காழ்ப்புணர்வு போன்ற எதிர்மறை உணர்வுகளை இரக்கமின்றிச் சித்தரிக்கும் கதைகளுக்கு அளித்து நாம் அவற்றிற்கு இலக்கிய மதிப்பு தருகிறோம் என்றொரு கருத்தும் இருக்கிறது. ஆனால், எந்த ஒரு இலக்கியப் படைப்பையும் அதனுள் உள்ள தர்க்கத்தினடிப்படியில்தான் பார்க்க வேண்டும் என்று கருதுகிறேன். அப்படிச் செய்யும்போது இப்படியொரு எண்ணம் எழ வாய்ப்பில்லை. வாழ்க்கை X இலக்கியம் விவாதம் நிறைய பேசப்பட்டுவிட்ட ஒன்று. அந்த இருமை அவசியமில்லை.

வாழ்க்கை என்றால் யாருடைய வாழ்க்கை? விஜய் மல்லையா நன்றாகவே வாழ்கிறார். தினந்தோறும் நூறு இருநூறு சம்பாதிக்கும் ஆட்டோ டிரைவர் யாரோ தவறுதலாக விட்டுச் சென்ற லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளை திரும்பக் கொடுக்கிறார். இதில் எது வாழ்க்கை? நேரடி அனுபவம் எப்போதும் இலக்கியமாவதில்லை.

‘அப்பாவின் நண்பர்’ கதையில் தேவை நிர்பந்தத்தால் அப்பாவின் நண்பரைத் திட்டித் தீர்க்க வேண்டுமென்று எண்ணுகிறான் மகன். அவனது அம்மாவுமே அப்பாவின் சிநேகிதரைத் திட்டிக் கொண்டுதான் இருப்பாள், ஆபத்து காலத்தில் உதவவில்லை என்ற ஆதங்கத்தில். உண்மையில் மகன் அவர்களின் சந்திப்பை அஞ்சுவான். ஆனால் அவன் அச்சத்துக்கு மாறாக அம்மாவுக்கோ அப்பாவின் சிநேகிதரைப் பார்த்தவுடன், “இவ்வளவு நல்லவங்களையெல்லாம் விட்டுவிட்டுப் பிரிந்து செல்ல உங்கள் நண்பருக்கு எப்படி மனது வந்தது,” என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. இதைப் பல்வேறு வகைகளில் புரிந்து கொள்ள முடியும் என்பதில்தான் இலக்கிய அனுபவம் இருக்கிறது. அது வாழ்க்கை தரும் நேர்க்கோட்டிலான அனுபவமல்ல.

ஒளிப்பட உதவி – The Nonist