சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ்

சந்திப்பும் சந்திப்பு நிமித்தமும் – நரோபா

நரோபா

மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசெப் அவர்களின் விஷ்ணுபுர விருது விழாவின் போது தான் முதன்முறையாக எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்தைச் சந்தித்தேன். அவருடன் ஒருங்கமைக்கப்பட்ட உரையாடல் அமர்வில் அவரது கதைகளின் பரிணாமத்தை பற்றி பேசினார். அதற்கு முன் ஒன்றிரண்டு கதைகள் உதிரியாக வாசித்திருக்கிறேன். அச்சந்திப்பின் விளைவாக அவருடைய ‘நடன மங்கை’ தொகுப்பை வாசித்தேன். அதைப்பற்றி ஒரு சிறிய அறிமுகக் குறிப்பையும் எழுதி இருந்தேன். தமிழின் தனித்துவமான குரல் அவருடையது. அதன் பொருட்டே வெகு மக்கள் பரப்பை எளிதில் அடைய முடியாததும் கூட.

பதாகை காலாண்டு எழுத்தாளர் சிறப்பிதழ் எப்போதும் பெரும் உழைப்பைக் கோருவது அதற்கிணையான நிறைவையும் அளிப்பது. எழுத்தாளர் ந. முத்துசாமிக்கு அடுத்த சிறப்பிதழ் என அறிவித்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் அதை முன்னெடுக்க இயலவில்லை. இந்நிலையில் மீண்டும் எழுத்தாளர் சிறப்பிதழ்கள் புதுப்பிப்பது பற்றி பேசினோம். சுரேஷ்குமார இந்திரஜித், யுவன் சந்திரசேகர், கீரனூர் ஜாகிர்ராஜா, திலீப் குமார், யூமா வாசுகி, தமிழ் மகன், கண்மணி குணசேகரன், விட்டல் ராவ், சுப்ரபாரதி மணியன் என்றொரு உத்தேச பட்டியல் மனதில் ஓடியது. நண்பர் எழுத்து அலெக்சின் மரணச் சடங்கில் கலந்துகொள்ள மதுரைக்குச் சென்ற போது ஜெயமோகன் அறையில் சுரேஷ்குமார இந்திரஜித்தை சந்தித்ததும் அவரே சரியான தொடக்கம் எனத் தோன்றி அவரிடம் அனுமதியும் பெற்று வந்தேன். அவருடைய சிபாரிசின் பேரில் முருகேச பாண்டியன், ஜயபாஸ்கரன், சமயவேல், தேவேந்திர பூபதி, சுகுமாரன் என பல மூத்த எழுத்தாளர்களை தொடர்புகொண்டு கட்டுரைகளைக் கேட்டேன். ராமேஸ்வரத்தை பின்புலமாகக் கொண்ட கதையில் நானறிந்த ஒருவரை அடையாளம் காண முடிந்தது, ஆர்வம் தாங்காமல் அவரிடமே கேட்டேன். வியப்படைந்தார். இது வரையிலான ஐந்து சிறுகதைத் தொகுப்புக்களையும், முந்தைய நேர்காணல்களின் பிரதிகளையும் அவரே கூரியரில் அனுப்பி வைத்தார். வாங்கிக் கொள்கிறேன் அதுவே முறை என்றேன். இலவசமாகப் பெறுவதில் ஏதோ கூச்சம், சங்கடம். தயங்க வேண்டியதில்லை என அவரே அனுப்பினார். தீராநதி, பேசும் புதிய சக்தி, காலச்சுவடு, பவுத்த அய்யனார், ஷங்கர் ராம சுப்பிரமணியன் என அவர்கள் எடுத்த நேர்காணல்களை வாசித்து முடித்த போது உண்மையில் சோர்வே உண்டானது. இக்கேள்விகளை மீறி என்ன கேட்டுவிட முடியும் என்று குழப்பம் நேரிட்டது. மேலும் நாஞ்சில் நாடன் மற்றும் சு. வேணுகோபால் ஆகியோரின் நேர்காணல் கோவை நண்பர்கள் உதவியால், குறிப்பாக கண்ணன் தண்டபாணியின் உழைப்பில் உருவானது. கடலூர் சீனுவும் கடைசி நேரத்தில் வர முடியவில்லை. சிறப்பிதழின் மிக முக்கியமான பணி என்பது நேர்காணல்தான். அதுவே இதழின் தரத்தை நிலைநிறுத்துகிறது. அவ்வகையில் இதுவரையிலான மூன்று நேர்காணல்களும் எழுத்தாளர்களின் வாழ்வை, எழுத்தை, துயரங்களை, அவர்களை எழுதத் தூண்டும் ஆற்றல்களை வெளிக்கொணர்ந்து இருக்கின்றன. இந்தக் கவலைகளை மனதில் சுமந்து கொண்டு சந்திப்புக்காக நாள் குறித்தோம்.

அரசுப் பணியிலிருந்து ஒய்வு பெற்றிருந்தாலும் கூட டிவிஎஸ் நிறுவனத்திற்கு ஆலோசகராக திகழ்கிறார் ஆகவே “ரெண்டு நாள் முன்னாடியே சொல்லுங்க” என்றார். நவம்பர் 12, ஞாயிற்றுக் கிழமை அவருடைய வீட்டிலேயே சந்திக்கலாம் என்று முடிவானது. காலையில் காரைக்குடியில் இருந்து கிளம்பி பத்தேகாலுக்கு மாட்டுத்தாவணியில் இறங்கி அவரை அழைத்தேன். வியூகம் அமைத்த ஆட்டோக்காரர்களிடம் இருந்து பிளந்து கொண்டு வெளியே வந்தேன். மதுரை வெயில் உறைக்கவில்லை. இடம் சொல்வதற்காக ஆட்டோக்காரரிடம் கொடுங்கள் என்றார். யாதவா பெண்கள் கல்லூரிக்கு அருகே,பொறியாளர் நகர் என வழி சொன்னார். ஆட்டோ புறப்பட்டதும் தான் “எவ்ளோ வேணும்” என்று கேட்டேன். “ஓங்கட்ட வாங்க வேணாம்னு சொல்லிருகாறு” என்றார் ஆட்டோகாரர்.

மதுரை புறநகர் பகுதிகளில் ஆட்டோ மேடு பள்ளங்களில் ஏறி இறங்கியது. வாசல் கம்பி கேட்டின் ஒரு எல்லையில் என்.ஆர்.சுரேஷ் குமார், தாசில்தார் எனும் சிறிய பெயர்ப்பலகை தொங்கியது, மறு எல்லையில் சுரேஷ்குமார இந்திரஜித் என்று மற்றொரு பெயர்ப்பலகை தொங்கியது. தனது கல்வி, பூர்வீகம், பதவி எல்லாவற்றையும் துறந்து நவீன எழுத்தாளராக இரட்டை வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என எண்ணிக்கொண்டேன். நேர்த்தியான சட்டை பேண்ட்டுடன் வாசலில் வந்து வரவேற்றார். அவரை எப்போதும் இப்படி நேர்த்தியான தோரணையிலேயே கண்டிருக்கிறேன் என்பது நினைவுக்கு வந்தது. அப்படி நானறிந்த மற்றொரு எழுத்தாளர் நாஞ்சில் நாடன். எப்போதும் காலுறை, சப்பாத்துக்கள் அணிந்து, முழுக்கை சட்டை போட்டுத் தான் வருவார். “வீட்ல மக வீட்டுக்கு போயிருக்காங்க. இல்லைனா ஒரு நல்ல சைவ சாப்பாடு சாப்பிட்டிருக்கலாம்.” என்றார். ஒற்றை ஆண் தனித்திருக்கும் இல்லங்களைப் போல் அல்லாமல் வீடு நேர்த்தியாக இருந்தது. சொற்சிக்கனம் அல்லது கட்டுப்பாட்டின் மீது மிகுந்த கவனம் கொள்வது என்பதும் கூட அவருடைய ஆளுமையின் நீட்சியாகவே தென்பட்டது. கூடத்தில் தட்டையான எல்.ஈ.டி தொலைக்காட்சியில் கருப்புவெள்ளைப் பாடல் ஓடிக்கொண்டிருந்தது. காரைக்குடி செட்டிநாட்டு பலகாரங்களையும் எனது இரு மொழியாக்கப் புத்தகங்களையும் அவருக்கு அளித்தேன். “பேரு சுரேஷ்குமார் இந்திரஜித் இல்ல, சுரேஷ்குமார இந்திரஜித், புத்தகத்த படிச்சவங்க கூட இந்த தப்ப பண்ணிருவாங்க” என்று எனது ஃபேஸ்புக் அறிவிப்பைச் சுட்டிக்காட்டி கூறினார். அவர் சொன்ன பிறகுதான் நான் அதைக் கவனித்தேன். ஒரு பெரிய அலுவலக மேஜை, பக்கவாட்டில் இரும்பு அலமாரி நிறையப் புத்தகங்கள் இருந்தன. அவருக்குப் பல வருடங்களாக சர்க்கரை நோய் உண்டு. ஆகவே இன்சுலின் போட்டுக் கொள்கிறார். “என்ன வேணாலும், எப்ப வேணாலும் ஆகலாம் இல்லியா, கண்ணன் கிட்ட சொன்னேன், ஒரு ஆள அனுப்பினார், வண்டில வெச்சு பைண்டு செஞ்ச சிறுபத்திரிக்கைகளை எடுத்துகிட்டு போனார். காலச்சுவடு ஆபீஸ் மாடில ஒரு லைப்ரரி இருக்கு.” என்றார். புத்தக விரும்பிகளின், இலக்கியவாதிகளின் மிக முக்கியமான சிக்கல் இது. தனக்குப் பின் வாசிக்க எவருமில்லை என்றால் இப்புத்தகங்களை என்ன செய்வது எனும் கேள்வி அவர்களைத் தொந்திரவு செய்கிறது. கடிதங்களை கவிஞர் சமயவேல் கணினியில் ஏற்றிப் பின்னர் கே.என்.செந்திலுக்கு அனுப்பியதாகச் சொன்னார். மீட்சி இதழ்கள் மட்டும் மிக முக்கியமானவை எனக் கருதியதால் அதை மட்டும் வைத்திருந்தேன், தற்பொழுது அதையும் தேவேந்திர பூபதியிடம் அளித்துவிட்டேன் என்றார். சுருக்கமாக என்னைப்பற்றி அறிமுகம் செய்துகொண்டேன்.  அவருடைய குடும்பத்தைப் பற்றி சொன்னார். கூடத்தில் அவருடைய இரு மகள்களுடன் அவரும் அவரது மனைவியும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இருந்தன. உடன் பிறந்தவர்களைப் பற்றியும் தாய் தந்தை  பற்றியும் சுருக்கமாகக் கூறினார்.

“பிரசுரமான நேர்காணல்கள அனுப்பிச்ச உடனேதான் யோசிச்சேன், அனுப்பியிருக்க வேணாம்னு, ஆனா ஒரே கேள்விகளுக்கு வேற பதில்கள் கூட வரலாம்” என்றார். பதினோரு மணியிருக்கும். நேர்காணல் துவங்கலாம் என்றேன். உள்ளே ஒரு ஏ.சி அறையில் துல்லிய நிசப்தத்தில் உரையாடத் துவங்கினோம். ஒரு தட்டில் தட்டுசீடை, முறுக்கு சகிதம் இரண்டு பீர் புட்டி மற்றும் கண்ணாடி லோட்டாவுடன் அமர்ந்தார். என்னிடம் முன்னரே “பீர் சாப்பிடலாமா?” என கேட்டிருந்தார். வழக்கமில்லை என்றேன். “கொஞ்சம் சாப்டாதான் பேச வசதியா இருக்கும்” என்றார். உரையாடலுக்குத் தேவையான ஒரு மனநிலையை உருவாக்கிக் கொண்டார். செல்போனில் குரல் பதிவு ஆப்பை தரவிறக்கி வைத்திருந்தேன். சிறு சிறு பகுதிகளாக சேமித்து அவ்வப்போது பதாகை குழுவில் ஏற்றினேன்.

பேச்சு நீண்டு சுவாரசியமாகச் சென்று கொண்டிருந்தது. இடையிடையே சில குடும்பச் சிக்கலுக்கு சட்ட ஆலோசனைகள் கோரி அவருக்கு அழைப்புகள் வந்தன. தற்செயலாக அறையிலிருந்த கடிகாரத்தை நோக்கினால் மணி இரண்டரை ஆகியிருந்தது. அதுவரை மறைந்திருந்த பசி சட்டென ஆட்கொண்டது. பேச்சு வாக்கில் ஒரு பாக்கெட் தட்டு சீதையை உண்டிருந்தேன். அவரும் இதை கவனித்தார். “சாப்புட போவோமா?” என்று அவருக்குத் தெரிந்த ஆட்டோக்காரரை அழைத்தார். கொஞ்சம் உடல் வெடவெடக்கத் துவங்கியது. “ஒங்களுக்கு சுகர் இல்லையே ..” என்றபடி இரண்டு க்ளுகோவிட்டா மிட்டாய்களை அளித்தார். வாயில் அதக்கிக்கொண்டதும்தான் சற்று சோர்வு நீங்கியது. “வீட்ல அவுங்களுக்கு ஒன்னும் தெரியாது, ஏதாவது ஆச்சுனா, என்ன பண்ணனும்னு சொல்லிருக்கேன், ஒரு பையில என்னோட புத்தகங்கள், நேர்காணல் ஜெராக்ஸ், இன்னும் புத்தகமா ஆகாத எழுத்துக்கள் என்று எல்லாத்தையும் போட்டு வெச்சுருக்கேன், காலச்சுவடு கண்ணன் கிட்ட அதைக் கொடுத்துருன்னு சொல்லிருக்கேன்” என்றார். ஆட்டோவிலும் பேசிக்கொண்டே போனோம். சற்றுத் தொலைவில் புது நத்தம் சாலையில் உள்ள ரமணா ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். அவருக்குப் பிடித்த பிடிக்காத தமிழ் எழுத்தாளர்கள் பற்றிப் பேசிக்கொண்டோம். “இதையெல்லாம் நேர்காணல்ல கொண்டு வந்துராதீங்க” எனச் சிரித்தார். சேமியா பாயாசம், வாழக்காய் பஜ்ஜி, மைசூர் பாகு, கூட்டு , கறி என வயிறு புடைக்க உண்டேன். அவருடைய மைசூர் பாகையும் எனக்கே வைக்கச் சொன்னார். மீண்டும் அதே ஆட்டோவில் திரும்பினோம். தெளிவத்தை ஜோசெப் விழாவிற்கு அவர் வந்ததன் நினைவுகளைப் பற்றிப் பேசினோம். “மண்டபம் பிடிச்சு நல்லா பெரிய லெவல்ல கல்யாணம் மாதிரில நடக்குது” என்றார். “ராயல்டி எல்லாம் வருதா?” என்று கேட்டேன். “புத்தகம் வர்றதே பெருசு” எனச் சிரித்தார். எப்போதும் ஒரு கதையை எழுதத் துவங்கினால் முடித்துவிட்டுத் தான் அடுத்த கதைக்குச் செல்வேன் என்றார். ஒரு தருணத்தில் கதை நகராமல் நின்ற போது சரோஜா தேவியின் கருப்பு வெள்ளை நடனம் அந்தத் தடையை உடைத்தது என்று சொல்லிச் சிரித்தார். நடனமங்கை கதையே கூட “ரங்கு ரங்கம்மா” பாடலின் ஒரு காட்சியின் தூண்டுதலில் உருவனாது தான் என்றார்

வீடு திரும்பியதும் மீண்டும் நேர்காணல் தொடர்ந்தது. நாலறை வரை பேசிக்கொண்டிருந்தோம். பிறகு ஆட்டோவை அழைத்தார். மீண்டும் அலுவலக மேஜைக்கு வந்தோம். அவருடைய முதல் தொகுப்பு அலையும் சிறகுகள், நேர்காணலில் அவர் குறிப்பிட்ட லாவண்யாவின் ‘the clowns’ , வண்ணநிலவனின் அக்காலகட்டத்து ‘பாம்பும் பிடாரனும்’ (விலை 2 ரூ), ஜெயகாந்தனின் புத்தகங்கள் என எல்லாவற்றையும் காண்பித்தார். அழகாக பைண்டு செய்யபட்டிருந்தது. திலீப்குமார் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கும் தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பில் அவருடையதும் இடம் பெற்றிருக்கிறது எனக் கூறித் தொகுப்பைக் காண்பித்தார். மறைந்து திரியும் கிழவன் தொகுப்பு சுந்தர ராமசாமிக்குப் பிடித்திருந்தது, அவர் எழுதிய கடிதத்தை பத்திரமாக வைத்துள்ளேன் என்றார். அவரிடம் இருக்கும் இரண்டு கைபேசிகளைக் காண்பித்தார். “நீங்க எதாவது சொல்லனும்னா, போன் அடிச்சுருங்க இல்லன்ன மெசேஜ் போட்ருங்க, வாட்சப் அப்பப்பத்தான் பாப்பேன்” என்றார். நீண்டநேரம் நாற்காலியில் இப்போதெல்லாம் அமர்வதில்லை. முதுகு வலி வந்து விடுகிறது. இன்று ஏதோ ஆர்வத்தில் அமர்ந்து விட்டேன் என்றார். “நீங்க அந்த கட்டில்ல சாஞ்சு வசதியா உக்காந்து இருக்கலாமே சார்” என்றேன். “உக்காந்திருக்கலாம்ல” என்றார். “வீடு சொந்தவீடா?” என கேட்டேன். “அதெல்லாம் இல்ல, வாடக தான்” என்றார். ஆச்சரியமாக இருந்தது. தாசில்தார்,, சிரஸ்தாராக இருந்து ஒய்வு பெற்றவர். அதுவும் மதுரைப் பகுதியில். “தீது செய்யாம இருந்தா அதெல்லாம் அடைய முடியாது” என்றார். ஆறு வருடங்களுக்கு முன் நில விவகாரத்திற்கு ஆதரவு வேண்டும் என கண் முன் இருபது லட்சங்களை கொண்டு வந்து காட்டினார்கள். கோடி வரை தருவதாக சொன்னார்கள். ஆனால அவர்களுக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் வழக்குப் போட்டுத் திருப்பிவிட்டேன் என்றார். “இதுவரை விருதுகள் எதாவது வாங்கியதுண்டா?” என கேட்டேன்.”இல்லை” என்றார். “ஆனால் அதற்காக வருத்தமெல்லாம் இல்லை, தமிழில் கிளாசிக் கதைகளே எப்போதும் விரும்பி வாசிக்கபடுகின்றன, நானே கூட கிளாசிக் கதைகளின் ரசிகன் தான்” என்றார். ஒரு மாதிரி மனம் அமைதி இழந்தது. ஆட்டோ வந்தது. வாசல் வரை வந்து வழியனுப்பினார். “வேற நேர்காணல் எல்லாம் கேள்வி கேப்பாங்க , பதில் சொல்லிட்டு அமைதி ஆய்டுவேன், ஆனா இது சம்பாஷன மாறி ஆய்டுச்சு, சரியா வந்திருக்கான்னு தெரியல, இப்பல்லாம் கொஞ்சம் நியாபகம் குறையுற மாதிரி இருக்கு, பேசினதையே திரும்ப திரும்ப சொன்ன மாதிரி இருக்கு” என்றார். எல்லாம் சரி செய்துகொள்ளலாம் என்று சொல்லிவிட்டு ஆட்டோவில் கிளம்பினேன். ஆட்டோக்காரர் பணம் வாங்கவில்லை. காரைக்குடி பேருந்தில் ஏறியதும் அன்றைய நாளின் நினைவுகளை மனம் ஒட்டிக்கொண்டிருந்தது. நிறைவும், அமைதியின்மையும் ஒருங்கே மனதைக் குடைந்தது. எழுத்துக், கலை என்பதொரு மாபெரும் சூதாட்டம். எழுத்தாளன் எனும் சூதாடி எப்போதும் தோற்கிறான். ஒருக்கால் அவனுடைய இன்மையில் அவன் வென்றவனாகக் கூடும். ஆனால் அவனால் ஒருநாளும் சூதாடாமல் இருக்க முடிவதில்லை.

 

மனக்குமிழ் பிம்பங்கள் -கே.என். செந்தில்: சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘நடன மங்கை’

 கே. என். செந்தில்

”அர்த்தங்கள் சார்ந்த புதிய கோணங்களையும் அவற்றுடன் இணைந்த வெளிப்பாட்டு முறையையுமே நான் எப்போதும் விரும்பிக் கொண்டிருக்கிறேன்”
-’மறைந்து திரியும் கிழவன்’ தொகுப்பின் முன்னுரையில்.

Image result for k.n senthil

வர்ணணைகளையும் அலங்காரங்களையும் தவிர்த்துவிட்டு நேரடியான சித்தரிப்புகளின் வழி உருக்கொள்ளும் காட்சிகளிலிருந்து விரிபவை சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள். அந்தக் காட்சிகளிலிருந்து திரண்டு வரும் ஏதேனுமொன்று (அது சேதனமாகவோ அசேதனமாகவோ இருக்கலாம்) படிமமாக ஆகி அந்த மொத்தக் கதையையும் குவியாடி போல பிரதிபலிக்கச் செய்கின்றது. அவரது புகழ்பெற்ற ‘விரிந்த கூந்தல்’ முதல் இத்தொகுதியிலுள்ள ‘நடன மங்கை’ வரை இதைக் காணலாம். பொறுக்கியெடுத்த அளவான சொற்களால் எதையும் கூடுதலாகச் சொல்லி விடக்கூடாது எனும் பிரக்ஞையுடன் எழுதப்பட்ட ஆக்கங்கள் இவருடையவை. இந்த பிரக்ஞையே, தான் அதிகம் எழுத முடியாததற்கு, பெரிய வடிவமாக யோசிக்க முடியாததற்கான காரணியென நேர்காணலொன்றில் சுரேஷ் சொல்கிறார். அவர் சொல்லும் அந்த பிரக்ஞையை ‘இறுகிய’ பிரக்ஞை என அர்த்தப்படுத்திக் கொண்டேன்.

மெளனியும் சா. கந்தசாமியும் இணையும் புள்ளி என இவ்வுலகை தோராயமாக வரையறுக்கத் தோன்றுகிறது. ஏன் ‘தோராயமாக’ என்றால் அதிலிருந்து விலகி கிளை பிரிந்து தன் பிரத்யேக கூறுமுறை நோக்கிச் சுரேஷ் சென்றுவிடுவதே காரணம். ஏனெனில் அகச்சலனங்களை, ஓரிடத்திலிருக்கும்போதே வேறிடத்துக்கு கற்பனையின் துணையால் சட்டென்று போய் அமர்ந்து கொள்வதை, அங்கு ஒரு முழு வாழ்க்கையையே சில நிமிடங்களில் வாழ்ந்து விட்டு திரும்பி வரும் வினோதங்களை, நோக்கிச் செல்பவராக இருக்கிறார் என்பதே. இவர் கூறுமுறையின் தொடர்ச்சியும் அதன் சில சாயைகளும் அடுத்தடுத்த தலைமுறைகளில் எழுத வந்த குலசேகரன், எஸ்.செந்தில்குமார் (எஸ்.ரா-வின் பாதிப்பும் இவருக்குண்டு) ஆகியோரிடம் காணக் கிடைக்கின்றன.

‘நானும் ஒருவன்’ என்னும் சுரேஷின் ஐந்தாவது சிறுகதைத் தொகுப்பு வெளியான ஓராண்டுக்குள் வந்திருக்கும் ’நடனமங்கை’யில் பத்துக் கதைகள் இருக்கின்றன. தொடர்ந்து எழுதி வரும் காலகட்டத்தின் பகுதியிலிருந்து கிட்டியிருக்கும் தொகுப்பு எனக் கொள்ள முடியும். மனப்புதிர்களின் மேல் அதன் மர்மமான நகர்வுகளின் மேல் ஈடுபாடுடையவர் சுரேஷ். முந்தையக் கணத்தில் தோன்றிய எண்ணத்துக்கு நேரெதிராக அல்லது சம்பந்தமற்ற எண்ணத்திற்குள் செல்லும் மனதை காட்டும் தருணங்கள் கதைகளுக்குள் கலந்து வருகின்றன. (“ஏமாற்றப்பட்டு கையறு நிலையில் செய்வதறியாது அமரும்போது, மறுவினாடியே டெலிபோன் பில் கட்டவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது கோவில் பிரகாரம்’). இந்த புரிபடா நிலையை நிறமற்ற மொழிநடையில் அவரது முந்தைய தொகுதிகளிலிருந்து ஒரு வித தொடர்ச்சி போலவும் (கதை சொல்லும் முறையில்) ஒரு அர்த்தத்தில் தொடர்பற்றும் (கதைக்கருக்களின் தேர்வில்) எழுதப்பட்டுள்ள ஆக்கங்கள் இவை.

தொகுப்பின் தலைப்புக் கதையான ‘நடன மங்கை’ மற்றும் ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்து…’ ஆகிய இரண்டையும் அருகருகே வைக்க முடியும். ஏனெனில் பிரதான பாத்திரத்தின் கற்பனை மேற்கொள்ளும் மனப்பயணமே- அதுவும் பெண்ணின் ‘வசீகரம்’ சார்ந்து- இவ்விரு கதைகளும் தொட்டுக் கொள்ளும் அண்மையில் இருப்பதை உணர்த்துகிறது. ஓரிடத்தில் ’இருந்து’ கொண்டே தான் ஆசைப்படுவது பலவும் அடுத்தடுத்து நடப்பதாக எண்ணி மகிழ்ந்து கொள்வது மனித இயல்பிற்குள் உள்ள அம்சமே. ஆனால் அதை கதையினுள் கொண்டு வந்தவர்/ வருபவர் சுரேஷ்குமார இந்திரஜித். சில வாக்கியங்களுக்குள் ஒருவனின் கதையை சொல்லி முடித்து வைப்பதையும் சுட்டத் தோன்றுகிறது. இக்கதைகளில் மனக்கோலங்களின் புள்ளிகளை காண்பதிலிருந்து நகர்ந்து அவற்றைக் கதைகளாகச் சொல்லியிருக்கிறார்.

இத்தொகுதி கதைகளுக்குள் காணக் கிடைக்கும் ஒற்றுமை, பெரும்பாலான மையப் பாத்திரங்கள் பெண்களே. அவர்களே கதையை நகர்த்திச் செல்வதற்கான ஆதார விசையாக இருக்கிறார்கள். ‘புன்னகை’, ‘கணவன் மனைவி’, ‘கால்பந்தும் அவளும்’, போன்றவை அத்தகையவையே. இவற்றுக்குள் தற்செயல்கள் பிரதான காரணியாக இருக்கின்றன. பெரியாரின் பேச்சை அகஸ்மாத்தமாக கேட்க நேரும் நீலமேகம் பத்தொன்பது வயதில் விதவையாகிவிட்ட தன் மகளுக்கு மறுமணம் செய்து வைக்கிறார். பிறகு அவளது வாழ்க்கையில் விரும்பத்தக்க மாற்றங்கள் நிகழ்கின்றன. இக்கதை அவளது மரணத்திலிருந்து தொடங்கினாலும் நீலமேகம் அந்த உரையைக் கேட்பது தற்செயலே. போலவே ‘கால்பந்தும் அவளும்’. ‘கணவன் மனைவி’ சிறுகதையை வாசித்ததும், தட்டையாக, பல பத்தாண்டுகளுக்கு முன்பே எழுதி ஓய்ந்த சக்கையை மீண்டும் மென்று பார்க்கும் உணர்வையே அளித்தது. வெகு சுமாரான கதை. அசேதனப் பொருட்களான டிரான்சிஸ்டர் (’வீடு திரும்புதல்’), கால்பந்து (கால்பந்தும் அவளும்), விசிறியடிக்கப்பட்ட துணி (நடன மங்கை) போன்றவை ஒரு கட்டத்தில் நினைவின் குறியீடுகளாக ஆகிவிடுவதையும் குறிப்பிட வேண்டும்.

இரு பெண்களும் தங்களது வேறுபட்ட தனிமைகளுக்குள் இருந்து விடுபடுவதை (விடுதலை பெறுவதை?) காட்டும் கதைகள் ‘கோவில் பிரகாரம்’, ‘வீடு திரும்புதல்’. இவ்விரு கதைகளும் இயலாமையின் மேல் எழுதப்பட்டிருப்பினும்கூட மனிதனின் விசித்திரச் செயல்களைக் காட்டுகின்றன. ஆயினும் சில ஒளிப்புள்ளிகளை மட்டும் தந்துவிட்டு உடனே அணைந்து விடுகின்றன.

மிகுபுனைவு கதைகளிலும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் மொழியில் மாற்றமேதுமில்லை. அதே சட்டகத்துக்குள்ளேயே நடை போடுகிறது. இது பெரும் குறை. ஆனால் பெண்களின் மீதான ஈர்ப்பைச் சுட்டும் நடையில் ‘மெளனி’யின் நிழல் விழுந்து கிடக்கிறது. மனதில் உள் அசைவுகளை, விளங்காப் புதிரை அறியத்தரும் சில கதைகளே நல்ல வாசிப்பை அளிக்கின்றன. பிற கதைகளைப் பற்றி சொல்ல பெரிதாக ஏதுமில்லை.

சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ்: அறிமுக கட்டுரை- நரோபா

நரோபா

‘தற்செயல் என்பது ஒரு சொகுசு அல்ல, அது விதியின் மறுபக்கம், அதைத் தவிரவும் வேறேதோவும்கூட… மறு எல்லையில் தற்செயல் என்பது பூரண சுதந்திரம். தற்செயல் எந்த விதிகளுக்கும் உட்பட்டதில்லை, ஒருவேளை அப்படியே கட்டுப்பட்டாலும் அவை எவை என்று நாமறிய முடியாது. தற்செயல், இந்த உவமையை பயன்படுத்த நீங்கள் அனுமதித்தால், நமது கோளில் ஒவ்வொரு நொடியும் கடவுளின் இருப்பை பறை சாற்றுவதை போன்றது. நோக்கமற்ற கடவுள் நோக்கமற்ற சமிக்ஞைகளை நோக்கமற்ற ஜீவராசிகளை நோக்கிப் புரிகிறார்.’ – ராபர்டோ போலனோ, 2666

‘எந்தப் போக்கும், வாழ்வினுடைய காலத்தினுடைய சூதாட்டங்களினால் கணிப்பிற்குட்படுவதில்லை. நடந்த காரியத்தின் காரணங்களை ஆராய்ந்து அடுக்குவது சுலபம். வலுவான காரணங்கள் இருக்க, அவற்றிற்கான காரியங்கள் ஏன் நடக்கவில்லை என்பதை எவரும் அறிய முடியாது. நடந்ததை நடக்க விதிக்கப்பட்டதாக நினைத்து ஏற்றுக்கொள்ள, சூதாட்டம் வெற்றிகரமாக ஆட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது’- மாபெரும் சூதாட்டம், சுரேஷ்குமார இந்திரஜித்

சுரேஷ்குமார இந்திரஜித் தமிழில் தனித்துவமான எழுத்தாளர். தமிழில் உருவாகியுள்ள எந்த படைப்பாளி வரிசையிலும் அவரை அத்தனை சுலபமாக பொருத்த முடியாது. கதைக் களம் மற்றும் கூறுமுறை காரணமாக சிறிய நவீன தமிழ் இலக்கிய பரப்பில்கூட மிகச் சிலர் மட்டுமே அவரை தொடர்ச்சியாக வாசித்தவர்கள். அவர் வாசிக்கப்பட வேண்டியவர், விவாதிக்கப்பட வேண்டியவர், அதற்கொரு தொடக்கமாக பதாகை இந்த எளிய முயற்சியை முன்னெடுப்பதில் பெருமை கொள்கிறது. சிறப்பிதழ் முடிவாகி அது வெளியாவதற்கு ஏறத்தாழ ஆறு மாதங்கள் எடுத்துக்கொண்டோம். தங்கள் கட்டுரைகளை எங்களுக்கு அளித்த படைப்பாளிகளிடம் கால தாமதத்திற்காக மன்னிப்பு கோருகிறோம். படைப்பாளிகளாக இத்தகைய சிறப்பிதழை கொணர்வதில் உள்ள சவால்களை அவர்கள் அறிந்தவர்கள் என்பதால் எங்கள் நிலையை புரிந்து கொள்வார்கள். இன்னும் பல செறிவான கட்டுரைகள் வந்திருக்க வேண்டியது. ஆனால் இனியும் காத்திருந்து காலம் தாழ்த்த முடியாது என்பதால் இப்போது கொணர்ந்துள்ளோம். கட்டுரைகளை அளித்த, அளிக்க எண்ணிய, அத்தனை எழுத்தாளர்களுக்கும் எங்கள் நன்றிகள்.

எனது வாசிப்பின் எல்லையில் சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளை முழுக்க பின்நவீனத்துவமாக அடையாளப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. நவீனத்துவத்தின் பேசுபொருளையே புதிய கதைசொல்லல் உத்தியில் கொண்டு சேர்த்தவர் என்று சொல்லலாம். சொற்சிக்கனமும் மொழி மற்றும் கதைகள் குறித்தும் தீவிர பிரக்ஞை உடையவர். இவைகூட நவீனத்துவ எழுத்தின் முக்கிய தன்மைகளில் ஒன்று. இந்த பிரக்ஞையே நாவல்கள் எழுத முடியாததற்கு காரணம் என்று அவரே ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார். அவ்வகையில் இது அவருடைய தனித்துவமும் எல்லையும் ஆகிறது. அவருடைய கதைகளில் சூழல் விவரணை என்பது அறவே இல்லை. புறத்திணை மறைந்து அகத்திணை மட்டுமே உள்ளது. இந்த தன்மையில்கூட காஃப்கா பாணியை அவர் கைகொள்ளவில்லை. காஃப்கா அளிக்கும் பீதி உணர்வை, நம்பிக்கையின்மையை சுரேஷ்குமார இந்திரஜித் கதைகள் அளிப்பதில்லை. மாறாக பெரும்பாலான கதைகள் உணர்வு நீக்கம் செய்யப்பட்டுள்ளன. சில மெல்லிய கோடுகள் மட்டுமே தீட்டப்படுகின்றன. வாசகனே முழு உருவையும், விழைவையும் கற்பனை செய்து கொள்ள வேண்டும். உணர்வுகளின் தீவிரத்தை அடைய வேண்டிய பொறுப்பும் அவனைச் சார்ந்ததே.

அவருடைய கதைகள் நுட்பங்கள் புதைந்த ‘புதையல் வேட்டை’ விளையாட்டை ஒத்தது. வாசகன் சிறு சிறு குறிப்புகளைக் கொண்டு கதையை தன் மனதில் பின்னியபடி வருகிறான். நுட்பங்களின் சங்கிலிப் பிணைப்பு இதில் முக்கியம். நுட்பங்களைத் தவறவிட தவறவிட கதை அவனுக்கு பிடிபடாமல் ஆகிறது. இறுதியில் அவன் இலக்கை அடையும்போது அது கதாசிரியர் உத்தேசித்த இலக்காக இருக்க வேண்டியதில்லை. இன்னும் சொல்வதானால் எழுத்தாளன் எந்த இலக்கையுமே உத்தேசிக்கவில்லை என்பதே உண்மை. ஜெயமோகன் ‘இடப்பக்க மூக்குத்தி’ தொகுப்பின் வெளியீட்டின்போது சுரேஷ்குமார இந்திரஜித் வரைபடம் மட்டுமே அளிக்கிறார், வாசகரே பயணித்து தங்களது இலக்குகளை அடைய வேண்டும், என்று கூறினார். அவருடைய கதைகளின் ஒன்றிற்கு தலைப்பே அவருடைய கதைகளின் இந்தத் தன்மையை சுட்டுகிறது. ‘ஓர் இடத்திற்குப் பல வரைபடங்கள் ஒரு காலத்திற்குப் பல சரித்திரங்கள்’ (மாபெரும் சூதாட்டம் தொகுப்பு). தமிழில் வாசக சுதந்திரத்தை அதிகமாக அளிக்கும் எழுத்துக்கள் என்று சுரேஷ்குமார இந்திரஜித் மற்றும் யுவன் சந்திரசேகரின் எழுத்துக்களை கூறலாம். நாம் எண்ணுவது போல் வாழ்க்கையோ காலமோ நேர்க்கோட்டில் இல்லை. எத்தனையோ தளங்கள் உள்ளன. இணை வரலாறுகள் இயங்குகின்றன. ’மறைந்து திரியும் கிழவன்’, சமூரியா கதைகள், போன்றவை அப்படி அவர் உருவாக்க முனையும் இணை வரலாறின் பிரதிகள். நியதிகள் அற்ற அல்லது நியதிகள் பிடிபடாத இந்தச் சிடுக்குகள் மிகுந்த பேரியக்கத்தின் குறுக்குவெட்டு தோற்றத்தை காணும்போது ஏற்படும் பிரமிப்பை சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் வாசகருக்கு கடத்த முயல்கின்றன.

அவருடைய ‘புனைவுகளின் உரையாடல்’ கதையில் கதைசொல்லி ஒரு கதையை சொல்லிக்கொண்டே வருகிறார், அந்தக் கதை முடிவதற்குமுன் இப்படி எழுதுகிறார்- “நடந்த சம்பவமாக நான் கூறியது அனைத்தும் புனைவு என்று கூறினேன். நண்பர் சிகரெட்டை இழுத்து புகையை விட்டார். ‘உண்மையைச் சொல்லிவிட்டுப் புனைவு என்று ஏமாற்றுகிறீர்களா?’ என்றார். ‘இல்லை; புனைவை உண்மை போலச் சொன்னேன்’ என்றேன். நண்பர் மௌனமாக சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார்”’. இது சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகளை புரிந்துகொள்ள உதவும் மிக முக்கியமான பகுதி. நம்பகமற்ற கதைசொல்லி நம்முடன் விளையாடுகிறான் எனும் பிரக்ஞை வந்துவிடுகிறது. ‘நள்ளிரவில் சூரியன்’, ‘ஆங்கிலப் புத்தகம் வாசிக்கும் பெண்’ இப்படி பல கதைகளை இதற்கு உதாரணம் அளிக்கலாம். நேர்காணலில் அவரே தனக்கு ‘ரீல்’ விடுவது பிடிக்கும் என்று சொல்கிறார். புனைவு உண்மையை சொல்லவில்லை என்றாலும் உண்மையின் சாரத்தை வெளிப்படுத்துகிறது என்பது பரவலான கூற்று. ஆனால் சுரேஷ்குமார இந்திரஜித் உண்மை, பொய், புனைவு, எனும் பிரிவினையை அழித்து வாசகனுடன் விளையாடுகிறார். இதை உணர்ந்து தானும் விளையாட்டில் பங்கு பெரும் வாசகனுக்கு அவர் கதைகள் அளிக்கும் வாசிப்பின்பம் வேறு வகையானது. ஒரு வகையில் நவீனத்துவ எழுத்துக்களின் சத்தியம், தரிசனம் போன்றவற்றின் பகடி என இவற்றைச் சொல்லலாம். இத்தன்மை காரணமாகவே அவரது எழுத்து பிற நவீனத்துவ எழுத்துக்களில் இருந்து பெரிதும் வேறுபடுகிறது. உண்மைக்கும் பொய்க்குமான இடைவெளிகள் மறைந்து, அவரவர் அவரவருக்கான உண்மையை உற்பத்தி செய்துகொள்ளும் இந்த காலகட்டத்தில் சுரேஷ்குமார இந்திரஜித்தை தமிழின் பின்னை வாய்மைக்கால எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தலாமா என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும்.

பதாகை சிறப்பிதழின் தனித்துவம் என்பது எழுத்தாளரின் விரிவான நேர்காணல்தான். ‘பாரிஸ் ரிவ்யு’ நேர்காணலை லட்சியமாகக் கொண்டு எழுத்தாளரின் படைப்பு விசையை வெளிக்கொணர்வதே விரிவான நேர்காணலின் நோக்கம். அவ்வகையில் இந்த நேர்காணல் மிகுந்த நிறைவை அளித்தது. கதைகளின் பின்னணி, அவற்றின் நுட்பங்கள் பற்றி விரிவாக உரையாடியுள்ளார். ராமேஸ்வர வாழ்க்கை, அவருடைய பணிச்சூழல், அவர் வாசித்த எழுத்தாளர்கள் என அவர் எழுத்தை பாதித்த, உருவாக்கிய அம்சங்களை அடையாளம் காண முடியும். “நான் எழுதும்போது மிக கவனமாகத்தான் எழுதுவேன், வாக்கியங்கள் சரியாக அமைகிறதா, என்று பார்ப்பேன். செண்டன்ஸ் சரியா அமையுதா, என்னன்னு. அப்படியும் பிரசுரம் ஆன பிறகு வாக்கியங்களை மாற்றிப் போட்டிருக்கலாமோ என்று நினைப்பேன். அதில மிகவும் பிரக்ஞைபூர்வமாகத்தான் இருப்பேன். எனக்கு வளவள என்று சொல்வது ஒத்து வராது. ஒரு விஷயத்தைச் சுருக்கமாக சொல்ல வேண்டும் என பார்ப்பேன். எதற்காக வளவள என்று இழுக்க வேண்டும்? சுருக்கமாகச் சொல்லுங்கள்,” என்று நேர்காணலில் தனது மொழியைப் பற்றி சொல்கிறார். “என்னுடைய எழுத்து மற்றும் பாணி கொஞ்சம் அறிவார்ந்த எழுத்தாளர்கள், அறிவார்ந்த வாசகர்களுக்குதான் பிடிக்கும் எனும் எண்ணம் எனக்குண்டு. பெரிய பரப்பை என்னால் அடைய முடியாது எனும் எண்ணமும் உண்டு. இதுதான் தலை எழுத்து என்று ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்,.” என்று தனது விசனத்தைப் பதிவு செய்கிறார். அவருடைய படைப்புலகின் அலகுகளை அவரே ஒட்டுமொத்தமாக இப்படி சாராம்சப்படுத்தியிருக்கிறார்- “பழைய சமூக மதிப்பீடுகளைக் கலைப்பதிலும், மாயத்தன்மை வாய்ந்த பாணியினால் பல வழிகளைத் திறப்பதிலும், தர்க்கத்திற்கு புலப்படாத வாழ்வின் அபத்த திருப்பங்களைக் கூறுவதிலும், பிடிபடாத வாழ்வின் மர்மங்களைக் காண்பிப்பதிலும் நான் ஈடுபாடாக இருந்தேன்.”

நேர்காணலுக்காக அவரைச் சந்தித்து வந்த அனுபவத்தை ஒரு கட்டுரையாக எழுதி இருக்கிறேன். “மதுரை புறநகர் பகுதிகளில் ஆட்டோ மேடு பள்ளங்களில் ஏறி இறங்கியது. வாசல் கம்பி கேட்டின் ஒரு எல்லையில் என். ஆர். சுரேஷ் குமார், தாசில்தார், எனும் சிறிய பெயர்ப்பலகை தொங்கியது, மறு எல்லையில் சுரேஷ்குமார இந்திரஜித் என்று மற்றொரு பெயர்ப்பலகை தொங்கியது. தனது கல்வி, பூர்வீகம், பதவி எல்லாவற்றையும் துறந்து நவீன எழுத்தாளராக இரட்டை வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என எண்ணிக் கொண்டேன்.” அவருடைய ஆளுமையின் சில அம்சங்களை அதில்கொண்டு வர முடிந்தது.

மொழியாக்கங்கள் பிற மொழியிலிருந்து தமிழுக்கு வருகின்ற அளவில் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு மொழியாக்கம் செய்யப்படுவதில்லை எனும் குறை நெடுங்காலமாகவே உள்ளதுதான். இம்முறை சிறப்பிதழுடன் தேர்ந்தெடுத்த கதையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யலாம் என்று ஒரு எண்ணம் வந்தது. இச்சிறப்பிதழில் முதன் முதலில் தயாரானது ‘விரித்த கூந்தல்’ மொழியாக்கமே. மொழியாக்கத்தில் மிகுந்த தேர்ச்சியும் மொழிவளமும் கொண்ட நண்பர் நகுல் வசன் (Nakul Vāc) இக்கதையை மொழியாக்கம் செய்துள்ளார்.

நண்பர் வெங்கடேஷ் ஸ்ரீனிவாசகம் ”இயல்பான காமத்தை காலந்தோறும் விதம் விதமாய் இலக்கியம் பதிவு செய்துகொண்டுதானிருக்கிறது. காதலும், அழகின் தரிசன மனவெழுச்சியும் எந்த மென் புள்ளியில்/கோட்டிற்கு அப்பால், காமத்தைத் தொடுகிறது என்பது இன்னும் பலரும் அறியாத புதிராகத் தானிருக்கிறது,” என்று அவருடைய நினைவுகளுடன் தொடர்புபடுத்தி ‘விரித்த கூந்தல்’ கதையை பற்றிய தனது வாசிப்பையும் எழுதி இருக்கிறார்.

எழுத்தாளர் சுகுமாரன் எண்பதுகளின் தமிழ் இலக்கிய சூழலில் சுரேஷ்குமார இந்திரஜித் எழுத வந்ததில் இருந்து தனது அவதானிப்புகளை துவங்குகிறார். மௌனியின் தொடர்ச்சியாகவும், அவரிடமிருந்து வேறு பார்வையை தேர்ந்தவராகவும் சுரேஷ்குமார இந்திரஜித்தை அடையாளம் காண்கிறார். “’முன்னோடிகளின் பாதிப்பில்லாத தடம்’ என்ற வாசகமே என்னை சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைவழியைத் தேடத் தூண்டியது. அப்படி ஒரு தடம் இலக்கியத்தில் சாத்தியமில்லை என்ற நம்பிக்கையே தூண்டுதலுக்கு முகாந்திரம். மௌனி எழுத்தின் நேர் பாதிப்பு சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு இல்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அவர் இயங்கும் மொழியில் ஓட்டத்தில் அவர் மேற்கொண்ட தேர்வில் மறைமுகமாக நிகழச் சாத்தியங்கள் அதிகம். இது ஒரு பொருளில் மொழியின் வலு. இன்னொரு பொருளில் படைப்பாக்கத்தின் தவிர்க்கவியலாமை. இந்த்த் தொடர்ச்சிதான் இலக்கியத்தை நிலைநிறுத்தவும் செய்கிறது.”

எழுத்தாளர் கே. என். செந்தில் ஏறத்தாழ சுகுமாரன் முன்வைத்த அதே கருத்தை எழுதுகிறார். சுகுமாரன் அடையாளம் காட்டியது போல் இவரும் குலசேகரன் மற்றும் எஸ். செந்தில்குமார் ஆகியோரை சுரேஷ்குமார இந்திரஜித்தின் நீட்சியாக காண்கிறார். ‘நடன மங்கை’ தொகுப்பை முன்வைத்து எழுதிய கட்டுரையில் “வர்ணணைகளையும் அலங்காரங்களையும் தவிர்த்து விட்டு நேரடியான சித்தரிப்புகளின் வழி உருக்கொள்ளும் காட்சிகளிலிருந்து விரிபவை சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள். அந்தக் காட்சிகளிலிருந்து திரண்டு வரும் ஏதேனுமொன்று (அது சேதனமாகவோ அசேதனமாகவோ இருக்கலாம்) படிமமாக ஆகி அந்த மொத்தக் கதையையும் குவியாடி போல பிரதிபலிக்கச் செய்கின்றது. அவரது புகழ் பெற்ற ‘விரிந்த கூந்தல்’ முதல் இத்தொகுதியிலுள்ள ‘நடன மங்கை’ வரை இதைக் காணலாம்,” என்று எழுதுகிறார். மேலும் “மெளனியும் சா.கந்தசாமியும் இணையும் புள்ளி என இவ்வுலகை தோராயமாக வரையறுக்கத் தோன்றுகிறது. ஏன் ‘தோராயமாக’ என்றால் அதிலிருந்து விலகி கிளை பிரிந்து தன் பிரத்யேக கூறுமுறை நோக்கி சுரேஷ் சென்றுவிடுவதே காரணம்,” என சுரேஷ்குமார இந்திரஜித்தை தமிழ் இலக்கிய மரபில் பொருத்திப் பார்க்கிறார்.

எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் தமிழ் இலக்கிய வரலாற்றின் சித்திரத்தை அளித்துவிட்டு அதில் சுரேஷ்குமார இந்திரஜித்தை அவருடைய ‘நானும் ஒருவன்’ தொகுப்பைக் கொண்டு வரையறை செய்ய முயல்கிறார். “மனம் கொள்ளும் நுட்பமான சஞ்சலங்களை இக்கதைகள் காட்சிப்படுத்துகின்றன. எளிமையின் மூலமாகவே நமக்குள் நுழையும் தன்மை கொண்டிருக்கின்றன. தமிழ்ச் சிறுகதை மரபின் வலுவான பின்னணியில் தன் குரலை மென்மையாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்கின்றார் சுரேஷ்குமார இந்திரஜித்,” என்று சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகளில் உள்ள உளவியல் நுட்பங்களை அடையாளப்படுத்துகிறார்.

விஞரும் விமர்சகருமான க. மோகனரங்கன் மதுரை வட்டார எழுத்தாளர்கள் பற்றிய கருத்தரங்கில் சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் பற்றி வாசித்த கட்டுரையை இச்சிறப்பிதழுக்காக பயன்படுத்திக்கொள்ள அனுமதித்துள்ளார். ஒட்டுமொத்தமாக அவருடைய புனைவுலகைப் பற்றிய பருந்துப் பார்வை அளிக்கும் முக்கியமான கட்டுரை. “தமிழில் பெரும்போக்கிலான யதார்த்தவாத கதைகளுக்கே உரிய நாடகீயமான திருப்பங்களோ, கதாபாத்திரங்களின் உள் மனமோதல்களோ, சூழல் வர்ணனைகளோ அதிகம் இல்லாத இவர் கதைகள் கடல் மீது மிதக்கும் தனிப் பாறைகளை ஒத்தவை. கண்ணுக்கு புலனாகும் அளவை விடவும் நீரில் மறைந்திருக்கும் பகுதி கூடுதலாக இருக்கும். அவற்றைப் போலவே இவர் கதைகளிலும் தட்டுப்படுவதைக் காட்டிலும் மறைந்திருப்பன அதிகம் எனலாம். சொல்லும் விஷயத்தினால் அல்ல, சொல்லிய விதத்தாலேயே தம்மை கதைகளாக ஒருங்கிணைத்துக் கொள்ளும் தன்மை கொண்ட இக்கதைகள் சமகால நடப்புகளின் மீதான விமர்சனத்தையும் உட்கிடையாக கொண்டவை என்பதே இவற்றின் சிறப்பு,” என்று அவருடைய புனைவுலகின் தனித்தன்மையை சுட்டிக்காட்டுகிறார்.

இணையமோ நவீன தொழில்நுட்பமோ அண்டாத மாறுபட்ட கவிஞர் ந. ஜயபாஸ்கரன். அவரிடம் கட்டுரை கேட்டு அவருடைய மதுரை கடைக்கு தொலைபேசி செய்யும்போதும் பின்னர் அவரே அழைக்கும்போதும் அவருடைய குரலில் உள்ள தயக்கமும் மென்மையும் என்னை வியப்பில் ஆழ்த்தின. அவருடைய கட்டுரையும் கவிஞருக்கு உரிய அடங்கிய தொனியில், அதே வேளை கவித்துவமாக, சுரேஷ்குமார இந்திரஜித்தின் ஆளுமையையும் அவருடைய படைப்புலகையும் நுட்பமாக இணைக்கிறது. ‘பகலில் மட்டும் தெரியும் வாண வேடிக்கை’ எனும் கவித்துவமான தலைப்புள்ள கட்டுரையில் சுரேஷ்குமார இந்திரஜித்தின் மொழியைப் பற்றி இப்படி சொல்கிறார் “குறைச் சொல் மூலமே வெற்றி கண்டவர்” என்று கு.ப.ரா.வைப் பற்றி சிட்டி செய்திருக்கும் மதிப்பீடு, சுரேஷ்குமாருக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது. எந்தக் கணத்திலும் சொற்கள் தன்னை மீறிச் செல்வதை சுரேஷ்குமார் அனுமதிப்பதில்லை- ஒரு கறாரான அதிகாரியைப் போல எந்த இடத்திலும் அவர் சொற்களை அழுத்துவது இல்லை; திருகுவதும் இல்லை. உணர்ச்சி அதிகம் கலக்காத சிறிய சொற்கள்; சிறிய தொடர்கள்; சிறிய அசைவுகள்- இவற்றின் மூலமே ஒரு புதிரான அக உலகத்தை சிருஷ்டிக்க அவரால் முடிந்திருக்கிறது.

“சுரேஷ்குமார இந்திரஜித் யதார்த்த உலகில், யதார்த்த சமூகத்தில், உறவுகளுக்குள் இருக்கும் சிடுக்குகளை, மாயம் காட்டும் அகவுலக யதார்த்தங்களை, அதன் பிரதிபலிப்புகளை, புனைவு வெளியில் நிகழ்த்துகிறார்… உளவியல் ரீதியாக அலசுதல், புரிந்துகொள்ள முயலுதல், அற விழுமியங்களற்ற வாழ்வின் ஒழுங்கின்மையின் ஒழுங்கை, நித்தனத்துடன் ஒருவித விலைகளோடு அவதானித்து முன்வைப்பவையாக இவரது படைப்புகள் உள்ளன,” என்று தன் அவதானிப்புகளையும் சில விமர்சனங்களையும் கவிஞர் பாலா கருப்பசாமி தனது கட்டுரையில் எழுதுகிறார். சுரேஷ்குமார இந்திரஜித்தின் மூன்று தொகுதிகளை வாசித்து இக்கட்டுரையை எழுதி இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

ஈழ எழுத்தாளர் ஜிஃப்ரி ஹாசன் எழுதிய கட்டுரையில், “இவரது கதைகளில் நவீன, பின்-நவீனத்தன்மைகள் ஒருசேர கலந்திருப்பதைக் காண முடியும். ஒரு படைப்பின் கோட்பாட்டுத் தனித்துவத்தை மீறினாலும் கலைப் படைப்பு எனும் நிலையில் அது ஒரு வெற்றியாகும். ஒரு வகையில் பார்த்தால் அது கோட்பாட்டு வரையறைகளை மீறி மனிதர்களை, நிகழ்வுகளை, இலக்கியத்தைப் பார்க்கும் ஒரு செயல்பாடு. ஒன்றை முழுமையாகப் புறக்கணித்து இன்னொன்றில் முழுமையாக அமிழ்ந்து செல்லும் போக்கைப் புறக்கணித்த ஒரு தனித்துவமான போக்கு. தமிழ் படைப்புலகை மேலும் முன்கொண்டு செல்லும் முயற்சி இது,” என சுரேஷ்குமார இந்திரஜித்தின் தனித்துவத்தை, அவரது எழுத்து கோட்பாட்டு புட்டியில் அடைபடாததை சுட்டிக் காட்டுகிறார்.

வளரும் எழுத்தாளர் அரிசங்கர் ஒரு வாசகராக தான் முதன்முதலாக வாசித்த ‘அவரவர் வழி’ தொகுப்பை முன்வைத்து தனது பார்வையை இப்படி எழுதி இருக்கிறார். “பல நேரங்களில் என்ன இது இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே என ஏங்க வைக்கும். திரும்பத் திரும்ப அதை நோக்கியே நம்மை இழுக்கும். அப்படிப்பட்ட ஒரு நடனத்தைத்தான் சுரேஷ்குமார இந்திரஜித் தன் கதைகளின் மூலமாக நிகழ்த்தியிருக்கிறார்.”

நண்பர் ஆர். அஜய் சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘மாய யதார்த்தம்’ மற்றும் ‘ஒரு காதல் கதை’ ஆகிய இரண்டு கதைகளை மட்டும் எடுத்துக்கொண்டு சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளில் உள்ள ஆண் பெண் உறவு, பாலியல் சிடுக்குகள் குறித்து தனது அவதானிப்புகளை கட்டுரையாக்கியிருக்கிறார்.

“சர்வாதிகாரிகள் தம் அதிகாரத்தின் எல்லையைச் சோதிப்பது வன்முறையால் அல்ல- தாம் நிர்ணயிக்கும் உண்மையை யார் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைக் கொண்டுதான்,” என்று பீட்டர் பொங்கல் ‘எலும்புக்கூடுகள்’ கதை குறித்து தனது பார்வையை எழுதியிருக்கிறார்.

நேர்காணலும், ஒரு மொழியாக்கமும், பனிரெண்டு கட்டுரைகளும் கொண்ட காத்திரமான தொகுப்பாக இச்சிறப்பிதழ் மலர்ந்திருக்கிறது. சிறப்பிதழைக் கொண்டு வருவதற்கு ஒத்துழைத்த சக பதாகை நண்பர்களுக்கு நன்றி. தங்கள் கட்டுரைகளை அளித்த படைப்பாளிகளுக்கும், விரிவான நேர்காணல் அளித்து சிறப்பிதழுக்கு மதிப்பளித்த எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

கதைகளின் நடனம்-.சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘அவரவர் வழி’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து- அரிசங்கர்

அரிசங்கர்

சில கலைஞர்களின் நடனம் நம்மை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். அந்த நடனத்தில் நாம் நம்மை மறந்து திளைத்திருப்போம். அருகில் யார் இருந்தால் என்ன, எது நடந்தால் என்ன என்று அந்த நடனம் நம்மைக் கட்டிப்போடும். சில அசைவுகள் நம் உணர்ச்சிகள் பலவற்றைத் தூண்டிவிடும். அந்த நடனம் நம்மை அவ்வாறு கட்டிப் போட்டிருக்கும். பல நேரங்களில், என்ன இது, இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே, என ஏங்க வைக்கும். திரும்பத் திரும்ப அதை நோக்கியே நம்மை இழுக்கும். அப்படிப்பட்ட ஒரு நடனத்தைத்தான் சுரேஷ்குமார இந்திரஜித் தன் கதைகளின் மூலமாக நிகழ்த்தியிடுக்கிறார்.

புத்தகத்தின் தரத்தை அதன் பக்க அளவைக் கொண்டோ, அல்லது கதைகளின் எண்ணிக்கையைக் கொண்டோ வகைப்படுத்த முடியாது என்பதை இந்தத் தொகுப்பு நிறுவியிருக்கிறது. மிகவும் சிறிய அளவிலான இந்தத் தொகுப்பு பத்து கதைகள் கொண்டது. அனைத்து கதைகளும் இதழ்களுக்காக எழுதப்பட்டவை. அதனாலேயோ என்னவோ, ஒவ்வொரு கதையும் கிட்டத்தட்ட ஒரே அளவைக் கொண்டு இருக்கிறது. பல கதைகள் விரைவில் முடிந்துவிட்டதே என்ற குறை நிச்சயம் படிப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும்.

இந்தத் தொகுப்பில் இருக்கும் அனைத்து கதைகளுக்கும் பொதுவானது என்னவென்றால் நாம் பார்க்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் வேறு ஒரு கோணம் இருப்பதுதான். பெரும்பாலான கதைகள் ஒருவர் பார்வையில் மட்டுமே நிகழ்வதில்லை. வாழ்க்கையின் வேறு ஒரு பரிமாணத்தை தன் கதைகளில் திறந்துவைக்கிறார். ஒருவரைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் பார்வை மற்றொருவருக்கு இருக்காது என்பதே பல கதைகளின் ஆதார முடிச்சாக இருக்கிறது.

இந்தத் தொகுப்பில் நான் முதலில் படித்தது தொகுப்பின் கடைசி கதையை. சிறிய கதை என்பதால் வாங்கியவுடன் நின்றுகொண்டே படித்தேன். ஒரு மனிதனுக்கு மிகவும் படபடப்பை ஏற்படுத்தக்கூடிய விஷயங்கள் சிலவற்றில் (முக்கியமாக ஆண்களுக்கு) ஒன்று, தன் மனைவி அருகில் இருக்கும்போது முன்னாள் காதலியைச் சந்திப்பது. ‘அவரவர் வழி’ என்கின்ற இந்தத் தொகுப்பின் தலைப்புக் கதை இதைப் பற்றியதே. இந்தக் கதையும் அதன் முடிவும் தந்த பரவசமே அடுத்தடுத்த கதைகளை நோக்கி என்னை நகர்த்தியது. எதிர்பார்க்காத ஒரு விஷயம் நம் எல்லோர் வாழ்விலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கண்டிப்பாக நடந்ததே தீரும். அந்த நொடியில் நடக்கும் அந்த மாயாஜாலத்தையே பெரும்பாலும் தன் கதைகளாக்குகிறார்.

அந்தத் தருணம் எல்லா நேரத்திலும் நமக்கு பரவசமூட்டுவதாக அமைவதில்லை. சில நேரம் அது நம்மை மரணத்தின் விளிம்பிற்கே அழைத்துச் செல்கிறது. வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்குகிறது. வாழ்வின் முடிவை நோக்கி நகர்த்தக்கூடியதாகவும் அமைகிறது. இதை தன் ‘பங்குப் பணம்’ கதையில் நிகழ்த்துகிறார். இந்தக் கதையில் ஒரு திருடனுக்கும் பெருமாளுக்கும் இருக்கும் ஒப்பந்தம்தான் மையம். தான் திருடுவதில் பத்து சதவீதம் பெருமாளுக்குத் தந்துவிடுவதாக வேண்டிக் கொள்ள அன்றிலிருந்து திருட்டுத் தொழில் அமோகமாக நடக்கிறத. சொன்னபடி முதலில் செய்யும் திருடன் பிறகு தன வேண்டுதலை நிறைவேற்றுவதில்லை. அதன் பிறகு திருடப்போகும் இடத்தில் அவன் கால் பிசகிவிட ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாதவனாகிறான். விடியத் துவங்குகிறது. விடிந்ததும் தான் மாட்டிக்கொள்வோம் என்று அவனுக்குத் தெரிந்துவிடுகிறது. தான் பங்குப் பணத்தை தராததினாலேயே தண்டிக்கப்பட்டதாக அவன் நம்புகிறான்.

மனிதனுக்குள் ஏற்படும் மனத்தடையும், மனக்குழப்பமுமே இன்றைய நவீன வாழ்வின் பெரும் சிக்கலாக இருக்கிறது. இத்தகைய விஷயங்களையே இந்தத் தொகுப்பு கையாள்கிறது. மனிதன் எதிலுமே திருப்தியடைவதில்லை. ஆனாலும் அவன் விட்டுக் கொடுப்பதுமில்லை. அவன் தன் ரகசியங்கள்தான் உலகின் மிக முக்கியமாக ரகசியம் என்று நினைக்கிறான். ஆனால் அது அடுத்தவர் பார்வையில் ஒன்றுமே இல்லாத ஒன்றாகத்தான் இருக்கிறது. ‘நிகழ்காலமும் இறந்தகாலமும்’ என்ற கதையும், ‘மாய எதார்த்தம்’ என்ற கதையும் அப்படித்தான்.

இந்தத் தொகுப்பில் முக்கியமான கதையாக நான் கருதுவது ‘அழியாத சித்திரங்கள்’ என்ற கதைதான். எனக்கு மிகப் பிடித்தமாக கதையும் இதுதான். நமக்கு பிடித்தமானவர்களின் மனதில் நாம்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பதோ அல்லது நாம்தான் இருக்கிறோம் என்று நம்புவதோ எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதே இந்தக் கதையின் மையம். சிரித்துப் பேசுவதினாலும், கூடப படுப்பதினாலும், உடன் வாழ்வதினாலும்கூட அவர்கள் நமக்கானவர்கள் என்று நம்புகிறோம். இன்றைய நவீன உலகத்தில் வேலை, தொழில் என மனிதன் அலைந்துகொண்டே இருக்கிறான். சேர்ந்து வாழ்வது என்பதோ, கணவன் காலையில் சென்று மாலையில் வீட்டுக்கு வரவேண்டும் என்பதோ நகர வாழ்க்கையில் எல்லாருக்கும் நடக்காதது. இப்படியான காலகட்டத்தில் அவரவர்களுக்கான ரகசியங்கள் இருந்தே தீரும். ஆனால் இந்தக் கதை இன்றைய மன ரகசியங்களை பற்றியது அல்ல. அன்றைய மன ரகசியங்களை பற்றியது. போன தலைமுறையை பற்றியது. அவர்கள் ஆழ்மன ரகசியங்களைப் பற்றியது.

இதுதான் நான் வாசிக்கும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் முதல் தொகுப்பு. நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரிலேயே இதை துவங்கினேன். மேலும் சில கதைகளை இணையத்தில் வாசித்தேன்.

நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது முதன் முதலில் ‘மாயப்படகு’ என்ற பெயரில் ஒரு மாயாஜால கதையை எழுதினேன். அது நண்பர்களிடத்தில் ரசிக்கப்பட்டது. அது மேலும் கொஞ்சம் மெருகேற்றியபின் ‘புதுவை பாரதி’ என்ற சிற்றிதழில் 12 வாரம் தொடராக வெளிவந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘புதுவை பாமரன்’ என்ற சிற்றிதழில் மூன்று சிறுகதைகள் வந்தன. அதன் பிறகு எழுதவில்லை. பிறகு 2013 ல் சென்னைக்கு குடிபெயர்ந்த பிறகு தனிமை என்னை மீண்டும் எழுதத் தூண்டியது. இருப்பினும் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் எதையும் வெளியிடவில்லை. 2018 பிப்ரவரி மாதம் ‘மலைகள்’ இதழில் என் முதல் கதை வந்தது. இந்த மூன்று மாதத்தில் ‘பதாகை’, ‘மலைகள்’ மற்றும் ‘திண்ணை’ இணைய இதழ்களில் பத்து கதைகள் வெளிவந்துள்ளன. அனைத்தும் பல்வேறு காலகட்டத்தில் எழுதியது.

வாசிப்பையும் அதன் தொடர்ச்சியாக எழுத்தையும் நோக்கி என்னை நகர்த்தியது எனது தனிமையே. இதுவரை எழுத வருகிறதா என்று தெரியவில்லை. இருந்தாலும் சில கடினமான விஷயங்களைக் கடந்து செல்ல எளிதாக முடியவில்லை. மனிதர்கள் எளிதாகக் கடந்து சென்றுவிடும் அடுத்தவர்களின் துயரங்களை நான் கொஞ்சம் அருகில் சென்று பார்க்க விரும்புகிறேன். எதுவும் செய்ய முடியாத இந்த கையாலாகாத்தனம்  குறித்து எனக்குள் இருக்கும் குற்ற உணர்விலிருந்து மீள எழுதுவது எனக்குக் கொஞ்சம் உதவுகிறது. மனிதர்களை எப்படி அணுகுவது, அனுபவங்களைச் சுவையான கதையாக மாற்றுவது எனச் சில விஷயங்களை நான் சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகளில் இருந்து கற்றேன். அவ்வகையில், தமிழ்ச் சிறுகதையின் தவிர்க்க முடியாத மாயாஜாலக்காரர் சுரேஷ்குமார இந்திரஜித்.