விமரிசனம்

வ.வே.சு ஐயர் எழுதிய ‘காவிய ரசனைச் சுவை’

வ.வே.சு ஐயர் தனது கம்பராமயண ஒப்பியல் ஆய்வுக்கு முன்னுரையாக எழுதிய காவிய ரசனை சட்டகம் பற்றிய கட்டுரை (தட்டச்சு உதவி – ரா. கிரிதரன்).

காவிய இலக்கணத்தை நிர்ணயிப்பதில், பாரத தேசத்து இலக்கண ஆசிரியர் நமக்குத் தெரிந்தமட்டில் விவரிக்காமல் விட்டு விட்ட சில அம்சங்களை மேனாட்டு இலக்கண ஆசிரியர் விஸ்தாரமாக விவரித்திருக்கிறார்கள். நம் நாட்டு இலக்கண ஆசிரியர் பொருள் யாப்பு அணிகளைப் பற்றி நன்றாக ஆராய்ந்திருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறோம். அலங்கார சாஸ்திரத்தை நம் நூலாசிரியர் ஆழமாக ஆய்ந்திருக்கிறார்கள் என்பதிலும் ஐயமில்லை. ஆனால், காவிய சமக்ரத்தைப் பற்றின ஆராய்ச்சிகள் இதுவரை வந்திருக்கும் நூல்களில் விஸ்தாரமாகக் காணப்படவில்லை. பெருங்காப்பியத்தில் என்ன என்ன விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று இலக்கணங்களில் ஓர் பெரிய ஜாபிதா காணப்படும். ஆனால் காவியம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், என்ன என்ன இலக்கணங்கள் பெருங்காப்பியத்துக்கு இன்றியமையாதவை, பெருங்காப்பியங்களின் போக்குக்கும் ஏனைய காவியங்களின் போக்குக்கும் என்ன வித்தியாசம், என்ற விஷயங்கள் நம் இலக்கணங்களில் விசாரிக்கப்படவில்லை. மேலை நாடுகளில் அரிஸ்தோத்தலன் காலம் முதற்கொண்டு இலக்கண நூலாசிரியர் காவிய அமைப்பைப் பற்றிப் பெரிய பெரிய ஆராய்ச்சிகள் வெளியிட்டிருக்கிறார்கள். நம்மவர் காட்டிலுள்ள மரங்களைத் தனியே கவனித்துக்கொண்டு வந்து அரணியத்தை மறந்து விட்டார்கள்; மேனாட்டவர் மரங்களை கவனித்ததோடு கூட அரணியத்தைப் பற்றியும் விசேஷமாக ஆராய்ச்சிகள் செய்துள்ளார்கள்.

காவிய சமக்ர இலக்கணத்தை தாண்டி கவி தனது அலங்கார இலக்கணத்தில் பாவிக அணியை வர்ணிக்கும் போது சில வார்த்தைகளில் சொல்லி முடித்து விடுகிறான். அரிஸ்தோத்தலன், ஓராஸியன், புவாலோ, வீதா, பெயின் முதலிய மேனாட்டு இலக்கண ஆசிரியர்கள் விரிவாகச் செய்துள்ள ஆராய்ச்சியைப் பற்றி இங்கு ஓரிரண்டு வார்த்தைகள் சொல்லுவது பொருந்தும். அவ்விலக்கணக்காரர்களுடைய பிரதான அபிப்ராயம் என்னவென்றால்,

ஓர் பெருங்காப்பியம், அனேக அவயங்கள் சேர்ந்ததாயினும் ஒரு ஜீவப் பிராணியைப் போல ஓர் தனிப்பிண்டமாயிருத்தல் வேண்டும். தலை, இடை, கடை என்ற பாகுபாடும், அனைத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது ஏகம் என்கிற உணர்ச்சியும் அக்காவியத்தில் தோன்ற வேண்டும். ஒவ்வொரு அவயமும் தன் தனக்கு முன்னே உள்ள அவயத்தோடும், பின்னேயுள்ள அவயத்தோடும் பிணைக்கப் பெற்று ஒன்று என்கிற உணர்ச்சியை வளர்க்க வேண்டும்.

பஞ்ச தந்திரக் கதை, விக்ரமாதித்தன் கதை, மதன காமராஜன் கதை, அராபியக் கதை முதலிய கதைகளை ஒரு பக்கமும், அரிச்சந்திர புராணம், கந்த புராணம், ராமாயணம் முதலிய காவியங்களை ஓர் பக்கமும் வைத்துச் சீர்தூக்கிப் பார்த்தால் நாம் மேற்காட்டிய இலக்கணத்தின் கருத்து விளங்கும். பின் சொல்லிய மூன்றிலும் ஒரே ஒரு வஸ்து தான் காவியமாக எழுதப்படுகிறது. இவற்றுள் அனேக உப கதைகள், வர்ணனைகள் உபாக்கியானங்கள் வருகின்றன என்பது வாஸ்தவம். ஆனால் இவை அனைத்தும் கதையின் மத்திய சம்பவத்துக்குத் துணையாக நிற்கின்றன. மத்திய சம்பவத்துக்கு வித்தாகவோ, மத்திய சம்பவத்தினின்று இயற்கையாக விளைந்த விளைவாகவோ விளங்குகின்றன.

முன் சொல்லப்பட்ட நூல்களோ அவை செய்யுள் நூல்கள் அல்ல என்பது ஓர் பக்கமிருக்க,, தனிக் கதைகளின் கேவலம் சேர்க்கையே ஆகும். அவைகளில் மத்திய சம்பவத்திற்கும் கதைகளுக்கும் உள்ள சம்பந்தம் மிக மிக லேசானது – அதைச் சம்பந்தம் என்று கூட சொல்லத் தகாது. மகா காவியத்தின் பகுதிகளுக்கோ இத்தகைய ஒட்டின்மை இராது. அவற்றின் சம்பந்தம் ஜீவ சம்பந்தம். உபக்கியானங்கள் முதலிய புற அணிகள் பெருங்காப்பியத்தினுள் அளவுக்கு மீறி இரா, மற்ற உறுப்புகளெல்லாம் காவியத்துக்கு அகத்துறுப்புக்களாகவே விளங்கும்.

அவ்வுறுப்புகளில் எதை எடுத்து விட்டாலும் கதை ஊனமாகிவிடும்.

பாவிக அணி என்று நாம் கூறுவதை மேனாட்டவர் ஆர்க்கிதெக்தோனிக்ஸ் (ARCHITECTONICS) என்கிறார்கள். இப்பதத்துக்கு ரசனை அல்லது காவிய நிர்மாணம் எனப் பொருள் கொள்ளலாம். இது மனைச் சிற்ப நூலினின்று எடுக்கப்பட்ட பெயராகும். ஓர் அரண்மனையையோ கட்டடத்தையோ கட்டுவதற்கு அனந்த கோடி ரீதிகள் உண்டு. ஆனால் சில ரீதிகள்  தாம் கட்டடத்துக்கு அழகு தரும். பெரும்பாலானவை வானத்தையும் சூரிய ஒளியையும் மூடுமே ஒழிய செளந்தரிய உணர்ச்சியை திருப்தி செய்யா. அப்படியே ஓர் காவியத்தைப் பல மாதிரி எழுதலாம். நள சரித்திரம், ராமாயணம், பாரதம், அரிச்சந்திர புராணம் முதலிய காவியங்களெல்லாம் அவ் அவ் ஆசிரியர்களின் மனோதர்மத்துக்கு ஏற்றபடி எழுதப்பட்டுள்ளன. சில சம்பவங்களைச் சிலர் விரிக்கிறார்கள். மற்றவற்றைச் சுருக்கி விடுகிறார்கள். வேறு சிலர் முற்சொல்லியவர்க்கு மாறாகச் செய்கிறார்கள். சிலர் சில சம்பவங்களை எடுத்து விட்டு புது சம்பவங்களைப் புகுத்துகிறார்கள். ரசிகனுடைய மனதிற்குத் திருப்தி உண்டாகும்படி எந்த கவியின் அமைப்பு அமைந்திருக்கிறதோ அவனைத்தான் ரசனையில் சிறந்தவன் என்று சொல்லலாகும். சொல்லப்போனால் பெருங்காப்பியங்களுக்கு ரசனையே இன்றியமையாதது. ரசனா சுகம் இல்லாமல் வேறு எந்த சுகம் இருப்பினும் பெருங்காப்பியங்கள் பெருமையுள்ளனவாகா.

காவிய ரசனையை மகா வித்துவான் ஒருவருடைய விஸ்தாரத்துக்கு ஒப்பிடுவோம். எல்லா வித்துவான்களும் ஏழு ஸ்வரங்களைத்தான் – அல்லது அர்த்த ஸ்வரங்களையும் சேர்த்துக்கொண்டால் இருபத்திரண்டு ஸ்வரங்களைத்தான் – கையாள்கிறார்கள். இந்த ஸ்வரங்கள் துவாரா நவரஸங்களைத்தான் ஊட்டுகிறார்கள். ஆனால் ஒரு வித்துவானுடைய ஆலாபனத்துக்கும், இன்னொரு வித்துவானுடைய ஆலாபனத்துக்கும் ஒரு பாடகன் ஒரு கீர்த்தனை பாடுவதற்கும் இன்னொருவன் அதே கீர்த்தனையைப் பாடுவதற்கும் எத்தனை பேதம்! ஒருவன் ராகத்தின் ஸ்வரங்களில் யாதொரு அபஸ்வரத்தையும் கொண்டு வந்து கலக்காமல் பாடி விடுகின்றான். ராகம் பிழையின்றி சாஸ்திரரோக்தமாகப் பாடப்பட்டிருக்கும். லயத்தில் யாதொரு பிசகும் இருக்காது. கேட்போர் ‘சபாஷ்’ என்று சொல்லிக்கொண்டும் சிரக்கம்பம் செய்து கொண்டும் கேட்பார்கள். ஆனால் அவர்களுடைய இருதயத்தில் யாதொரு சலனமும் ஏற்பட்டிராது. அலை வந்து மோதியும் அசையாத பாறை போல் அவர்களுடைய இருதயமும் அப்படியே இருந்துவிடும். இன்னொருவன் வருகிறான். அதே ராகத்தைப் பாடுகிறான். ஆனால், எல்லாரும் அமுத மழையில் சிக்கி அகப்பட்டவர்கள் போல் ஆகி விடுகிறார்கள். அவரவர்களுடைய சமஸ்காரத்திற்கேற்றபடி அவரவர்களுடைய இருதயம், மந்த மாருதத்தில் ஊசலாடும் பூங்கொம்பர் போலவும், சிற்றலைகளால் அசைந்தாடும் தாமரை போலவும், கருப்பஞ் சாற்றில் கரையும் கற்கண்டைப் போலவும், அக்னியின் நெகிழ்ந்து உருகும் மெழுகைப் போலவும் , தங்கத்தைப் போலவும் ஆகிவிடுகிறது.

அவர்களுடைய மனது புதிய உலகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கிவிடுகிறது. மனோ லோகத்தில் சித்திரத்துக்கு மேல் சித்திரம் தோன்றிக்கொண்டே வருகிறது. அவர்கள் லயப்பட்டு, வயப்பட்டுப் போய் விடுகிறார்கள். இந்தக் கலைஞனுக்கும் முன் சொல்லப்பட்ட கலைஞனுக்கும் உள்ள வித்தியாசம் இவனிடம் கனிவு இருந்தது, அவனிடம் அது இல்லை. ஆனால் அது மாத்திரமில்லை இவனுடைய பாட்டின் அமைப்பு மனோஹரமாக அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு ஆவிருத்தமும் அதற்கு முன்னே பாடப்பட்ட ஆவிருத்தத்தனின்று இயற்கையாக வளர்ந்த வளர்ச்சியாகும்; அதே மாதிரி தனக்குப் பின்னே வரப் போகும் ஆவிருத்தற்குத் தோற்றுவாயும் ஆகும். ஒவ்வொரு ‘சங்கதி’யும் அந்தந்தப் பதங்களை அலங்கரிக்க விழுந்த அலங்காரமாகுமேயன்றி, பதங்களையே முழுக்கி மூடிவிடும் வெறும் சப்த சாலங்களாகா. ஒவ்வோர் ரசமும் போதிய அளவு விஸ்தரிக்கப்பட்டு இயற்கையான சோபானங்கள் வழியாக அதனோடு பொருந்தக்கூடிய வேறொரு சுவைக்கு வழிகாட்டிக் கொண்டு போகும். கடைசியாக எல்லா ஆவிருத்தங்களும் எல்லாச் சுவைகளும் இன்னலன் தெரிய வல்லாருடைய இருதயம் லயித்துப் போகும். ஓர் சமஷ்டி உணர்ச்சியை உண்டாக்கும்.

அதே மாதிரித்தான் ஒரு காவிய ரசனையும். காவியத்தின் தனித்தனிப் பாகங்களிலுள்ள இன்சுவை ஒரு பக்கமிருக்க, பாகத்தும் பாகத்துக்கும் உள்ள பொருத்தம் அழகாக இருப்பதோடு காவியமானது நம்ம சமஷ்டீகரணத்தைப் பெற்றிருக்க வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு இந்த சஷ்டீகாரம் அழகாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு காவியமானது ரசிகருடைய இருதயத்தைக் கவர்ந்து எல்லாரும் விரும்பத்தக்கதாகும்.

கம்பராமாயணத்தில் உள்ள ரசனைச் சுவை மிகவும் உயர்ந்தது. ரசிகருடைய அறிவுக்கு அது அமுதமாக நிற்கின்றது. கம்பராமாயணத்தின் ரசனைச் சுவையை உணராமல் மற்ற சுகங்களை மாத்திரம் உணருகிறவர்கள் அதன் சுவையில் செம்பாதிக்கு மேல் இழந்து விடுகிறார்கள். ராமாயணத்தின் அழகை விஸ்தரிக்கிறவர்கள் ஒவ்வோர் செய்யுளின் அழகைத்தான் எடுத்துக்காட்டுகிறார்கள். ராமாயணத்தை ஓர் சிற்பியால் சமைக்கப் பெற்ற அரண்மையாகப் பாவித்து, அவ்வரண்மனையின் ஒவ்வோர் அவயத்துக்கும் மற்ற அவயங்களுக்கும் உள்ள பொருத்தத்தையும், அவயங்களுக்கும் அரண்மையின் சமக்ர அமைப்புக்கும் உள்ள பொருத்தத்தையும் வியக்தீகரித்து எடுத்துக்காட்டும் விமர்சனங்கள் இதுவரையில் வெளிவரவில்லை.

 

இராகப் பெண்கள் – 8: வராளி புன்னாக வராளி –அந்தி மயக்கம்

பானுமதி. ந

8: வராளி புன்னாக வராளி –அந்தி மயக்கம்

இதை நீர் சூழ்ந்த உலகு என்கிறார்கள். பனிக்குடத்துடன் பிறந்து நீர்க்குடத்துடன் நம் வாழ்வு நிறைகிறது. துவங்கும் புள்ளியும், முடியும் புள்ளியும் நீர்… நீர். நம் கடவுளின் தலையிலும் நீர்… அவன் உறைவிடமும் நீர்…

காவிரி பாயும் கன்னித் தமிழ்நாட்டில் தரங்கிணி அறிமுகமாகிறாள். அந்த ஆறுதான் அவளின் நதிமூலம்.. “எங்கம்மா என்னை எப்போ காவேரிக்குப் பெண்ணா ஆசீர்வாதம் பண்ணிவிட்டாளோ, அப்படியேதான் நான் ஆயிட்டேன்- வேண்டியவா, வேண்டாதவா எல்லாருக்கும் ஒண்ணாய், ஆத்து ஜலம் மாதிரி, எங்கெங்கே எப்படி எப்படியோ, ஒரு சமயம் ஒடுங்கி, ஒரு சமயம் பெருகி, ஒரு சமயம் ஒதுங்கி, ஒரு சமயம் நெருங்கி, எல்லோர் கைப்பட, எல்லாச் சொல்லும் பட வளர்ந்தேன்,” தரங்கிணி இராக “மாயா”.

அவள் கணவன்… தங்களிடையில் குழந்தையும் கூட தனிமையின் பங்கம் என நினைப்பவன். அவன் சொல்லும் ஒரு தொடர் நம்மைப் புரட்டிப் போட்டுவிடும். ”தனியாயிருக்கலாம். ஆனால்…தனிமையாயிருத்தல்…..அப்பா

குளிக்கப் போனவிடத்தில் மூழ்கிப் போய் தான் இறந்து போய்விட்டோம் என்பதை உணரும் உணர்வு மாத்திரமிருந்தால் எப்படி இருக்கும்?” அவனை அலைக்கும் தீயை அவள் நெருக்கத்தின் குளுமையில்தான் ஆற்றிக் கொள்ள முடிந்தது. சாவும் சத்தியமும் அவனளவில் ஒன்று.

அவள் உயிர் நீட்சி ஒன்று தான் வறட்சி தீர்க்கும் மருந்து என்கிறாள். சொல்லாலே மந்திரம் செய்யும் கதை இது. ”எனக்கு உயிர் மேல்தான் ஆசை. நான் செத்துப் போனாலும் உசிரோடு இருக்கணும். உசிர் மேலே எனக்கு அவ்வளவு உசிர்.”

இருக்குன்னா இல்லை என்போம். இல்லேன்னா இருக்கு என்போம் இப்படித்தான்”- அவள் சொல்லி, அவள் உணர்ந்து, இன்னுமொரு கல்யாணத்திற்கு அவன் செவி சாய்ப்பதை அவள் தாயாகப் போகும் தருணத்தில், தன்னை வளர்த்த ஆற்றின் கரையில் அவள் அறிவது….அப்பா! ”வானில் தங்க ரதம் ஒன்று உருவாகி எழும்பியது. கொத்துக்கொத்தாய்ச் சடை பிடித்த பிடரி மயிர் அலை மோத தலைகள்  உதறிக் கொண்டு வெள்ளை குதிரைகள் தாமே தோன்றி ரதத்துடன் தம்மைப் பூட்டிக் கொண்டன. ரதம் நகர்ந்தது. சக்கரங்களினடியில் அகிற்புழுதி தோகை தோகையாய் எழும்பிற்று.”

மாயா தரங்கிணி… ஆறு வளர்த்த இராகம்… அதுவே அவள் அகம், அதுவே அவள் புறம். அதுவே அவள் அறம் அதுவே அவள் மறம்.. அவளுயிரின் தொடர்ச்சி… தன்னை பலியிட்டாவது சாவிலும் வாழும் ஆசை.

அவள் புன்னாக வராளி..அவள் தொடங்குவதே நிஷாதத்தில்தான், முடிவதும் அதில்தான்
நி ச ரி க ம ப த நி நி த ப ம க ரி ச நி

இனி பங்கஜம்——நளபாக விருந்தில் முதன்மையான உணவு.

இவளை இனம் கண்டு கொள்வது அத்தனை எளிதில்லை.இவள் அந்த கலவையில் செய்த உணவோ, இந்தக் கலவையில் செய்த உணவோ என உண்பவனை கேட்டுக் கொள்ளச் செய்கிறார் தி. ஜா.

அதிக முதன்மையில்லாமல் அறிமுகமாகி நினைவில் நிற்கும் அற்புத ருசி. கண்களுக்கும், நாவிற்கும், வயிற்றிற்கும், மனதிற்கும் இசைவான ஒரு அமுது. ”இவளைப் பார்த்தால் இருபது வயது போல- முப்பது வயது போல- நாற்பது வயது போல-எல்லா வயதும் தெரிகிற தோற்றம்”. இது மாமியாரான ரங்கமணி மருமகளைப் பற்றி நினைக்கும் தோற்றம்.

யாத்ரா ஸ்பெஷலில் சமையல் தலைமையாக ரங்கமணி கண்ட காமேச்வரன் – ஒரு ஆசானாக, மகனாக, சமையல் கலைஞனாக, அம்பாள் உபாசகனாக, அறிவு, அழகு, ஒழுக்கம், பண்பு ஒருமித்தவனாக, தன் வம்சத்தின் சாபத்தை களைபவனாக ரங்கமணியைக் காண வைக்கிறது. அந்த யாத்திரையில் வரும் ஒரு ஜோதிடர் சொல்வது, அவளைச் சிந்திக்க வைத்து காமேச்வரனை தன் வீட்டில் தனக்கு மகனாக சமையல்காரனாக, பூஜை செய்து குல சாபம் போக்குபவனாக அழைப்பு விடுக்கிறது. இரவல் வம்சமாகவே வளரும் தன் குடியில் தன் வம்சத்து வித்து வேண்டும் என அவள் நினைக்கிறாள். அவளுக்கு ஒரு தத்துப் பிள்ளை உண்டு. அந்தப் பிள்ளை இந்த பங்கஜத்திற்கு சரியான இணை இல்லை என நினைக்கிறாள்.

ஒரே கூரையின் கீழ் வாழும் மூவரின் தனிமையைப் போக்க அவன் வருகிறான். அவர்கள் அன்பு செலுத்த அவன் வேண்டும். அவன் இது வரை அறியாத குடும்ப நேசத்தை அவர்கள் மூலம் அனுபவிக்கிறான். அவன் எல்லாமுமாக இருக்கிறான். தொட்டிச் செடியாக இருந்தவர்கள் தோட்டத்துக் கொடிகளாக, காற்றையும், சூரியனையும்,மிகும் நீர் உறிஞ்சும் மண்ணையும் அனுபவிக்கிறார்கள். இத்தனைக்கும் இடையில் ரங்கமணியும் பங்கஜமும் ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டு….

உனக்கில்லை …. எனக்குத்தான்”. இளமையும், மிக மிகத் தனிமையுமான நடுவயதும், வாழ்வின் பேழையிலிருந்து பருகத் தவிக்கின்றன. ரங்கமணியின் வயதும், நிலையும் அவளை இலைகள் மூடிய கனியெனக் காட்டுகின்றன. இளமையும், வாழ்வின் உரிமையும் பங்கஜத்தினை எண்ணத்தினால் சற்று அசைத்துப் பார்க்கின்றன. யாரும் இல்லா ஓர் முன்னிரவு சமயத்தில் காமேச்வரனின் விரல்களை பற்றச் செய்கின்றன. தனக்கு அதுவே போதும் என்று அவள் சொல்கையில் தி ஜா கத்தியின் மேல் நடந்த நம்மை பாதுகாப்பாக இறக்கி விடுகிறார். மன இயல் வல்லுனர் போல் தி ஜா போடும் கோலங்கள். உணர்ச்சியில் தடுமாறாத விவேகம்.. ஒரு சமையல காரன் சமைக்கும் மன- மண விருந்து. அவன் கரம் பட்டு அவள் தன் கணவனுடன் உடன்பட்டு காமன் எழுதும் உயிரோவியம்.

ஊரோடு உறவாகிறது அவனுக்கு. புழங்காத அறையினுள் காற்றும், வெளிச்சமும் அவனால் வருகிறது. நட்பும், நேசமும் கலகலப்பும் தனிமையைப் போக்கும் அருமருந்தென செயல்படுகிறது. பங்கஜத்திற்கு சீமந்தம் வருகிறது. அவன் அனைத்துமாக இருக்கிறான். அதில் தத்து வந்த பிள்ளையின் சொந்தக்காரர்களும், குணம் கெட்ட ஊர்க்காரரும் இவனை இணைத்துப் பேச, இந்த சின்னத்தனம் தாங்காது அவன் குமுறுகிறான். பங்கஜத்தின் கணவனோ இந்த அவப் பேச்சுக்களை ஒதுக்கி விடுகிறான். அவன் இருவரின் மேல் கொண்டுள்ள அசையாத நம்பிக்கை மிக அழகாக வெளிப்படுகிறது.

தன் இருப்பிடம் விட்டு வராத பங்கஜம். அவள் புகுந்த ஊரின் பல பகுதிகள் அவள் அறியாதவை. வறட்டு வாழ்வில் வசந்தம் என வந்தவன் அவன். ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் தோழமையானால் இந்த உலகில் தனிமை என்பதே இல்லை. உடல் கவர்ச்சியால் அவர்களின் நட்பை கொச்சைப்படுத்தும் சமூகத்தில், தனிமை என்றுமே தகிக்கும் நெருப்புதான். ஆனாலும், புனிதத்தை மட்டுமே இங்கே தி. ஜா நினைக்கவில்லை. ”உனக்கில்லை எனக்குத்தான் “ என்பதில் உளம் விழையும் நட்பை பூரணமாக அறிய உடலும் உணர வேண்டும் என்னும் மனிதர்களின் நுண்ணிய ஆவலை (ஆசை அல்ல) தி ஜா வினால் மட்டுமே விரசம் இல்லாமல் சொல்ல முடியும். சொல்லி பங்கஜத்தை, காமேஸ்வரனை, துரையை, ரங்கமணியை, ஜோசியக்காரரை வெற்றி பெறச் செய்யவும் முடியும்.

காமேச்வரன் தன் சில உடைமைகளை ரங்கமணியின் அகத்தில் வைத்துவிட்டு தன் பழைய யாத்ரா வேலைக்குத் திரும்புகிறான். கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணத்தையும் சொல்கிறான்.

வராளி… பொதுவாக கச்சேரிகளில் நடுவில் மட்டும் பாடப்படும் ஒரு இராகம். முதலில் பிடிபடாது போனாலும் பின்னர் தன் இடத்தில் கம்பீரமாக அமர்ந்துவிடும். சுரங்கள் ஆரோகணத்தில் வரிசைப்படி இல்லை. அவரோகணத்தில் இருக்கிறது. இரண்டு “க” ஏறுமுகத்தில் வருவதுதான் அதன் அழகு; அதன் எழுச்சி.. கீழே பாடுகையிலும்,நிதானமான ஆலாபனையிலும் உருவெடுத்து பின்னர் மலை அருவியிலிருந்து பெருக்கெத்தோடும் ஆறு போன்ற இராகம். எல்லோரும் எப்பொழுதும் அதைப் பாட முடியாது. தம்பூரின் சுருதியோடு தன்னைக் கலந்து அது இழையோடும்.

பங்கஜ வராளியைப் பாட தி. ஜாவால் தான் முடியும். தரங்கிணியைப் புன்னாக வராளியாகப் பாட லா.ச.ராவால் மட்டுமே முடியும்.

வராளி: ச க ரி கம ப த நி ச ச நி த ப ம க ரி ச
புன்னாக வராளி: நி ச ரி க ம ப த நி நி த ப மக ரி ச நி

வயலினில் ஒன்று. மகுடியில் மற்றொன்று. இரண்டுமே அம்சம்தான்.

oOo

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இராகப் பெண்கள் – 7: கோபிகா வசந்தம், ஹிந்தோள வசந்தம்- ஆபரணம்

பானுமதி. ந

 7. கோபிகா வசந்தம், ஹிந்தோள வசந்தம்- ஆபரணம்

துறவு என்றால் என்ன? இந்த உலகினர் அனைவரையும் துறப்பதா அல்லது ஆத்மாவைச் சுற்றியுள்ள மூன்று கவசங்களகற்றி உலகோர்க்கு நன்மை செய்து கொண்டிருப்பதா? இல்லறத்தில் துறவு கூடுமா? துறவு இல்லறத்தை நோக்கிச் செலுத்துமா?

கை பிடிக்காத கணவனுடன், மாப்பிள்ளை அழைப்பன்று ஓடியவனுடன், நினைவிலே ஒரு வாழ்வு சாத்தியமா? திலகவதியின் நாடல்லவா இது? அவனை நினைத்தும், நெருங்கியும், தனித்தும், உலகோர் வாழும் வாழ்வில்லாத வாழ்வும், ”அன்பே ஆரமுதே” ருக்குவிற்கு மட்டும் முடியும்.

இதை இன்று நாம் அறியும் (அபத்தமாக அறியும்) கற்பெனும் சிறையில் தள்ளவில்லை தி. ஜா. செந்தாழம்பூவைப் போல் கமழச் செய்கிறார். காட்டுக்குள்ளே ஒரு ஓடை. ஓடையோரம் தாழம் புதர். காற்றினிலே வரும் மணம். ஆனால் அது உனக்கில்லை. உன்னதமான ஒரு சமர்ப்பணம் முன்னரே ஆகிவிட்டது. அதன் வாசம் பிறரை இழுத்தாலும் அதன் நேர்த்தியே அவர்களை அண்ட விடுவதில்லை. பூக்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று சேரலாம், உன் வசத்தில் பூத்தால்.

அது பாரிஜாதம் போல் பூத்திருக்கிறது- பூக்கையிலே மாலையாகி தன்னளவில் தோள் சேர்ந்து விட்டது.

அந்தத் தோள்கள் அறியும் முன், அவன் கால்கள் அவனை எங்கோ ஓடிப் போகச் செய்கின்றன. அவன் ஒரு மருத்துவ சன்யாசி, அல்லது சன்யாசியாக பிறர் நலம் பேணும் மருத்துவர். அவரின் கால்கள் மூலம் சென்னையில் தி. ஜா. நடந்து கொண்டேயிருக்கிறார். பலர் பிணி போக்குகிறார். உடலோடு மனப்பிணியும் போக்கும் இந்த அற்புத மருத்துவரை யார்தான் காண விழையார்?

கதையின் நாயகி அவரைச் சந்திப்பதும், இயல்பாகவும் கம்பீரம் குறையாமலும் தன்னை இன்னார் என்று அறிமுகப்படுத்திக் கொள்வதும் அழகோ அழகு! தனக்கு நல்லதெல்லாம் செய்யும் குடும்பத்திற்கு அவளும் நல்லது செய்ய நினைக்கிறாள்; செய்யவும் செய்கிறாள்.

அவரை, தான் குடி போகும் வீட்டின் மாடியில் இருத்தி அவரது மருத்துவப் பணி சிறக்க எல்லாமாகவும் நிற்கிறாள். அவளும், அவரும் பந்தமில்லாப் பந்தத்தில், உறவான தோழமையுடன், தோழமையான உறவுடன் இருக்க மிக  நேர்மையுடன் செயல்படுகிறாள். தூற்றும் ஒரு வாய்க்காக அவள் சோரவில்லை. தன் நண்பரின் குடும்பத்திற்காக அவரை அந்த நபரிடமும் அனுப்ப அவள் தயங்கவில்லை. அன்பும் ஆருயிரும் …

இதில் இருளும் ஒளியுமென, பகல் இரவு என, நல்லது, கெட்டது என இரு பிரிவுகளும் கைகூடும் மனிதர்களைப் பார்க்கிறோம். நடந்து செல்லும் ஒரு மழை மாலயில், பார்க்கும் வானவில்லென பரவசம் ஊட்டும் மனிதர்கள். வியப்பும், கவலையும் அளிப்பவர்கள். தன்னைத் தானே உணரப் பார்க்கும் முயற்சிகள்.

ருக்கு, தன்னை மணக்க இருந்தவரை தன் வாடகை வீட்டில் குடியமர்த்துவது தான் வெற்றி பெற்றோம் என்பதற்கு அல்ல. அது ஒரு தவம், சபரியின் தவம், திலகவதியின் தவம். சபரி மோட்சம் பெற்றாள்; திலகம் சிவனடியாரானாள். ருக்கு மருத்துவ சன்யாசிக்கு உதவுகிறாள். ஒரு பெண்ணை மீட்கவும், தன்னைப்போலவே ஆகப்போகும் ஒரு பெண்ணிற்கு தோள் கொடுக்கவும் அவள் தயங்கவில்லை. முகம் அறியா மனிதர்களின் உடல் நோய்க்கும் மன நோய்க்கும் உதவிட அந்த சன்யாசியுடன் இந்த சன்யாசி நிற்கிறாள்.

ஒரு உன்னதமான பாத்திரப் படைப்பு. இவள் கோபிகா வசந்தம். கண்ணன் ஆயர்பாடியில் இருந்த பொழுதெல்லாம் கோபிகைகளுக்கு வசந்தம். அவன் மதுரா சென்ற பிறகோ அந்த நினைவுகளே வசந்தம். நினைவுகள் தரும் புனைவுகள் கோபிகா வசந்தம்,

ச ம ப நி த நி த ச   ச நி த ப ம க ச  

பச்சைக் கனவு

அன்பின் தராசு மிகவும் வலிமையற்றது. ஒரு சிறு தவற்றில் அது உறவில் ஒரு நிரந்தரப் பகையை உண்டு செய்து விடும். ”உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது” என்றாலும் சற்று உடைந்த அல்லது விரிசல் கண்ட கண்ணாடிதான்.

பசுமை என்று சொல்கையில் இருக்கும் நிறைவு பச்சையில் இருப்பதில்லை. பச்சையுடன் ஏதேனும் ஒன்று சேரவேண்டும்- “பச்சைப் பசேல்”, “ பச்சைக் காய்கறி”, “பச்சைப் புல்”, “பச்சை விளக்கு”, “பச்சைப் பொய்”.

மனக்கண் குருடாய், மனமொழி பேசாமல், மனச்செவிடராய் இருக்கும் மாந்தர்களை லா.ச ரா “பச்சைச் கனவில்” காண்பிக்கிறார். கதையின் நாயகன் சிறு வயதில் ஆதவனை உற்று உற்று நோக்கி, பின் சுற்றும் முற்றும் பார்க்கையில் காணும் பச்சைக் கோலங்களை வியக்கிறான். பச்சை தங்கிவிட வாழ்வு குருட்டுத்தனமாக  நீள்கிறது. அவனுக்கு சிறு வயது கல்யாணம். அந்தப் பெண் ஊமையும் செவிடுமாக வாய்க்கிறாள். ஆணின் குறை பாராட்டப்படாமல் பெண்ணின் குறை வாழ்வை சூறையாடுகிறது. பலன் பிரிவு.

இளமை, தன் இணை தேடும் தவிப்பு, தன் சொந்தம் என்ற நினைப்பு, உயிர் உருகும் ஏக்கம், அது அவர்களை ஊர் அறியா வண்ணம் சேர்க்கிறது.

அவர்களிருவரின் ஆயுளின் இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மூச்சில் அளந்துவிட முயல்வது போன்ற ஆலிங்கனத்தின் அவஸ்தையிது…

3 மாத கர்ப்பத்துடன் அவள் இறக்க, ஊர் சிரிக்க அந்த நேச இழை வெளியே அறுந்து உள்ளே பச்சையாகத் தொடர்கிறது.

ஊமை கண்ட கனவினை யாரிடம் சொல்வாள்? இல்லை.. “அந்த நினைவு அவர்கள் இருவருக்கும் மட்டுமே சொந்தமாயிருக்க அவள் எண்ணியிருக்கக் கூடும். பகை நடுவில் பயிரான உறவைப் பாதுகாப்பதில் சட்டென்று சலிப்பேற்பட்டுவிட்டதோ? உயிர் நிலையின் ஒரே மூச்சுப் போன்ற அம்மூன்று மாதப் பச்சைக் கனவின் மிச்சம்”- நாயகன்தான்.

மானம், மானம் என்பதெல்லாம் வகையாக வாழ்பவருக்கோ? கண்டு, கேட்டு, பேச இயலாத உறவின் தனிமைகளை ஊர் அறிய ஏன் சொல்லவேண்டும்? வாழ வைக்காதவர்கள் தூற்ற மட்டும் எங்கிருந்து வருகிறார்கள்? உயிர் உருகும் ஓசை கேட்காதவர்கள் வாய் திறந்து பேச மட்டும் செய்கிறார்களே? லா. ச.ரா அவன் மூலம் இந்தக் கேள்விகளைக் கேட்கிறார். அந்த உறவின் அர்த்தத்தை, அவர்கள் கண்டு கொண்ட உயிரின் மீதியை, இளமைக் கொண்டாட்டங்கள் மீறிய சிலிர்ப்பை அவன் பகிரங்கப்படுத்தவில்லை.

இந்தக் கதையும் நாயகனின் போக்கிலே சொல்லப்படுகிறது. அதுவும் தன் இரண்டாம் மனைவியிடம்..

பார்வையற்ற அவனுக்கு இறந்தவள் பாலைவன நீரூற்று. தாகம் தணித்தவள். அன்பால் நிறைத்தவள். அந்த அன்பாலேயே பிரிந்தும் சென்றவள். குறைகளைக் கொண்டாடும் சமுதாயத்தில் விடை சொல்லாத வினாவாக அவள் வெற்றி பெறுகிறாள். அதற்கு மதிப்பளித்து அவனும் மௌனிக்கிறான். அவன் மட்டுமே கேட்ட வசந்தம்… ஹிந்தோள வசந்தம்.. வசந்த மாதவம்… ஜானகி தவம்… சச்சிதானந்த வைபவம் (முத்துஸ்வாமி தீஷதர் கிருதி…  சந்தான இராமனைக் கொண்டாடும் இந்தக் கிருதி).இவன் பச்சைக் கனவின் நாயகியை மனதால் பார்த்துக் கொண்டேயிருக்கிறான்.

பெயரில்லாத இந்தப் பெண்… வாய் பேச இயலாத இந்தப் பெண் தன் பிறப்பின் பலனை உரக்கச் சொன்னாள். உயிர் தாங்கும் உரிமை பெண்ணிற்கு அன்றி யாருக்கும் இல்லை. அவள் வசந்தம்.. பூவாகிக் காயாகிக் கனிந்த மரம்… தன்னையன்றி யாருக்கு அவள் தன்னை மெய்ப்பிக்க வேண்டும்?

ச ரி ம ப த நி த ச  ச நி த ப ம த ம க ச  – ஹிந்தோள வசந்தம்.

ருக்குமணி– கோபிகா வசந்தம்: இன்பமும் துன்பமும் வெளிப்படை.

பச்சைக் கனவின் நாயகி- ஹிந்தோள வசந்தம்: இன்பமும் துன்பமும் உள்ளிடை.

oOo

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிரேக்க அவல நாடகங்கள் – மேரி லெஃப்கோவிச்

220px-Sophocles_pushkin

கிரேக்க நாடகங்கள் ஏன் முக்கியமாய் இருக்கின்றன?

பல காரணங்கள்.

கிரேக்க நாடகங்கள் சுவாரசியமாக இருக்கலாம்; அவை நம்மை வேறொரு, வித்தியாசமான உலகுக்குக் கொண்டு செல்லலாம். அவை, அவ்வப்போது, நம்மை நன்றாகச் சிரிக்கவும் வைக்கலாம். ஆனால் முக்கியமான காரணம், பார்வையாளர்களை அவை வாழ்க்கைக்குத் தயார் செய்கின்றன- நாம் விரும்பும் வாழ்க்கைக்கல்ல, உள்ளபடியே உள்ள வாழ்க்கைக்கு. நாம் நினைத்துப் பார்க்கவும் விரும்பாத பிரச்சினைகளை இந்த நாடகங்கள் பேசுகின்றன: நோய்மை, மரணம், குரூரம், மரணத்துக்கும் பேரழிவுக்கும் இட்டுச் செல்லக்கூடிய, தவிர்க்க முடியாத, மோசமான பிழைகளை தன்னம்பிக்கையுடன் இழைக்கும் மானுட இயல்பு. நம்மை அச்சுறுத்தக்கூடிய எந்த ஒரு சாத்தியமும் தவற விடப்படுவதில்லை: திடீர் மரணம், தற்கொலை, மரணப்பிணி, துரோகம், நேசத்துக்குரிய ஒருவர் அல்லது பலரின் இழப்பு.

ஆனால் அவல நாடகங்கள் மானுட துயரின் காரணங்களை விவரிப்பதோடு நின்றுவிடுவதில்லை. மானுடத்தின் மிகப்பெரிய குறைகளுடன், அதன் குறிப்பிடத்தக்க வலிமைகளையும் நாம் காண அவல நாடகங்கள் அனுமதிக்கின்றன: புரிந்துணர்வு, கருணை, உடலின் துன்பம் மற்றும் வறுமையை எதிர்த்து நிற்கும் இயல்பு. துயரிலும் தோல்வியிலும், நண்பர்கள் மட்டுமல்ல, அந்நியர்களும் ஆறுதலும் இரக்கமும் காட்ட வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த நாடகங்கள் எடுத்துரைக்கின்றன.

பண்டைக்கால ஏதனியர்கள் தம் வாழ்வின் நிதர்சன உண்மைகளைப் புரிந்து கொள்ள இந்த நாடகங்கள் உதவின, அவை, இன்று நமக்கும் உதவக்கூடும். துயரையும் வருத்தத்தையும் வெளிப்படுத்த இவை நமக்கான சொற்களை அளிக்கக்கூடும், மானுட அனுபவத்தை நாம் புரிந்து கொள்ள உதவும் சொற்கள் இவை. நாடகத்தின் பின்னுள்ள தொன்மத்தின் கருப்பொருளை அறிந்து கொள்வதால் மட்டும் இதைத் தெரிந்து கொண்டுவிட முடியாது.

ஆம், ஈடிபஸ் தன் தந்தையைக் கொன்று தாயை மணந்தான். ஆனால் சோபோக்ளஸின் ‘அரசன் ஈடிபஸ்‘ தாய்களின் பால் மக்கள் கொள்ளும் காமம் பற்றிய ஃபிராய்டின் கதையல்ல. சோபோக்ளஸின் நாடகத்தில் ஈடிபஸ் தான் என்ன செய்கிறோம் என்பதை அறியாதிருக்கிறான். டெல்ஃபியில் குறி கேட்கும் அவன் தன் விதியை அறிய வந்தபின் தன்னாலான அனைத்தையும் செய்து தனக்கு விதிக்கப்பட்ட முடிவைத் தவிர்க்க முயற்சி செய்கிறான். தான் தவிர்க்க நினைத்த குற்றங்களைத் தன்னையறியாமலே செய்து விட்டதை அவன் உணர்வதன் வியப்பையும் அதிர்ச்சியையும் நாடகம் விவரிக்கிறது. அப்பல்லோவால் தீர்மானிக்கப்பட்டுவிட்ட தெய்வச்சித்தம்தான் அவனுக்கு விதிக்கப்பட்ட கதி என்றாலும் அவன் தன் குற்றங்களுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறான். அவன் தன்னைக் குருடாக்கிக் கொள்கிறான் – “தான் இழைத்த, தனக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை” அவனால் கண் கொண்டு காணத் தாள முடிவதில்லை. அவனது துயர்நிலையில் தீபஸின் முதியவர்களாலான கோரஸ் அவனைத் தேற்ற முயல்கிறது- கடந்த காலத்தில் அவன் அவர்களையும் அவர்களது நகரையும் காத்திருக்கிறான் என்பதால். ஆனால் அவர்களோ, நாடகத்தில் உள்ள வேறெந்த பாத்திரமோ, ஈடிபஸ்சுக்கு மீட்சிக்கான சாத்தியத்தை அளிப்பதில்லை, எதிர்காலத்தில் அவன் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று எந்த நம்பிக்கையையும் அளிப்பதில்லை.

கோரஸ் போலவே, பார்வையாளர்களாய் உள்ள நாமும் சாட்சிகள்- கண்டு நிற்கும் நாம் இரக்கப்பட முடியும், ஆனால் நிகழ்வுகளின் பயங்கர போக்கை மாற்றும் ஆற்றல் இல்லாதவர்கள். கோரஸ் போல், நாடகத்தின் நிகழ்வுகளைக் கொண்டு நாம் எவ்வளவு குறைவாய் அறிந்திருக்கிறோம் என்பதையும் நம் கட்டுக்குள் எவ்வளவு குறைவான விஷயங்கள் இருக்கின்றன என்பதையும் கற்றுக்கொள்ளவே இயலும். எனினும், மானுட அறிவு மற்றும் சக்தியின் எல்லைகளைக் கண்டுகொள்வதில் ஒரு இன்பம் கிட்டலாம், அந்த இன்பம் உரைக்கப்படும் சொற்களில் பிறப்பதுதான் என்றாலும்.

மிகவும் மாறுபட்ட நம் மொழியிலும், பண்டைக்கால கிரேக்க மூலமொழியின் கவித்துவத்தையும் ஆற்றலையும் நாம் ஓரளவு உணர்த்துவது சாத்தியமாகவே இருக்கிறது. இதோ, ஏஸ்ஷிலஸின் ‘அகாமெம்னோன்‘ நாடகத்தின் கோரஸ், ட்ரோஜன் போர் பற்றி பேசிக் கொள்கிறார்கள் (‘கிரேக்க நாடகங்கள்‘ என்ற நூலில் சாரா ருடன் செய்த மொழியாக்கத்தையொட்டி)

ஜ்யூஸ் நம்மை அழைத்துச் செல்கிறான்,
விழிப்புணர்வுக்கான பாதையில்;
துன்பங்களே நம் படிப்பினைகள்
என்று ஆணையிட்டான் ஜ்யூஸ்.
இதயத்துக்கு இல்லை உறக்கம், மாறாய்
காயங்களை நினைவுறுத்தும் வலி
துளித்துளியாய் இறங்கிக் கொண்டிருக்கிறது.
விருப்பமில்லா உள்ளங்களும்
எச்சரிக்கையுணர்வை அடைகின்றன.

காயங்களை நினைவுகூர்கின்ற வலி பற்றிய வரிகளை மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கொலையானது பற்றி ஒரு கூட்டத்தில் பேசும்போது ராபர்ட் கென்னடி மேற்கோள் காட்டினார்.

தன் வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் வலியையும் இழப்பையும் உணர்கிறான், அதிலும் குறிப்பாக மிக மோசமான அநீதியின் முன். ஆனால் ஏஸ்ஷிலஸ் அளவுக்குச் சிறப்பாய் வேறு யாரும் அதை விவரித்ததாய்த் தெரியவில்லை. அவர் வலிக்கு நினைவாற்றலை அளிக்கிறார். அதற்கு ஒரு பௌதீக இருப்பையும் அளிக்கிறார்- அதன் வாதை துளித்துளியாய், நமக்கு அவ்வாறு உணரவும் அறியவும் விருப்பம் இல்லாதபோதும், புரிதலை மெல்ல மெல்ல கற்பித்துக் கொண்டிருக்கிறது.

நன்றி – Why Are Greek Plays Important? They Prepare You For Life, Mary Lefkowitz, Signature 

ஒளிப்பட உதவி – Wikipedia

இராகப் பெண்கள் – 6: அமிர்த வர்ஷினி- மீறும் அளவுகள்

பானுமதி. ந

6. அமிர்த வர்ஷினி- மீறும் அளவுகள்

அமிர்த தாரை. வானம் கொடுக்கும் உயிர். நீரின்றி அமையாத உலகின் அச்சாணி. இத்தனை சிறப்பு— “ஆழியில் புக்கு முகர்ந்து கொடார்த்தேரி” வரும் வருணனுக்கு. ஆனால், அவன் நினைக்கையில் மட்டும்தான் வருவான். அளவின் கட்டுப்பாடுகள் அவனுக்கு இல்லை. குறைவாய், அதிகமாய், சரியாய், விளைநிலத்தில், காடுகளில், கடலில் பெய்யும் பெருமழை. வருவது போல் தோன்றி, போக்குக் காட்டி பின்னர் எதிர்பாராது  வந்து… மகேசன் அறியா மாமழை.

ஆழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து” லா. ச. ரா.வின் “அபூர்வ இராகம்” நாயகி பெய்யும் பெரு மழை. முழங்காலுக்கும் கீழே தொங்கும் கூந்தல், இயல்பாக இருத்தல் அவள் வழி. பெண் பார்க்கையிலேயே “பஜ்ஜிக்கு உப்பு போதுமா?” என்று கேட்க வைத்து அவள் தன்மையை உணர்த்தி விடுகிறார் லா. ச. ரா. தீயில் இருக்கும் குளிராக, குளிரில் உறையும் நெருப்பாக அவனும், அவளும். அவர்களின் ஆழம் காணும் போக்கு அவர்களை சிறிது காலம் பிரிக்கிறது. ஒருவரை ஒருவர் வரவழைக்க பொய்யான செய்தி சொல்லி தந்திகள் பறக்கின்றன. ஊர் பார்க்கும் கவலையின்றி இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி, கண்ணீரில் கரைந்து அந்தப் புகை வண்டி நிலையத்தில் ஒன்றேயான இரண்டாக நிற்கின்றனர்.

அவளின் கூந்தல் அவனின் பிரமிப்பு. அவளின் அலாதியான மௌனமும், சிறு பேச்சுக்களும் அவனின் வியப்பு. மாமழை தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கும் ஒரு மாலையில் இருவரும் கடற்கரைக்குச் சென்று பேரழகின் அச்சத்தை, ஆழத்தை, இயற்கையின் விளையாட்டை, காட்சி தெளிவாக இல்லாத ஒளிமயக்கை, அனுபவிக்கிறார்கள். அதிலும் அவள் கொள்ளும் உற்சாகம் மிகுதி. உள்ளம் அனுபவித்ததற்கு உடல் விலை கொடுக்கிறது. அவள் நோயுற்று சாகப் பிழைக்கக் கடந்து தேறுகிறாள்.

அவன் அன்னையின் வேண்டுதல்படி அவள் தன் கூந்தலை காணிக்கையாக ஏழுமலையானுக்கு செலுத்த வேண்டும். இருவருக்குமே இது தாள இயலாத அதிர்ச்சி. ஆனால் இதெல்லாம் இவர்களுக்கு வேண்டாம். அந்தந்த நிமிட வாழ்வில்தான் இருவருக்குமே அக்கறை.

அபூர்வ இராகத்தின் உயிர் நாடி அந்த அளகபாரம்தான். ”பின்னாது வெறுமனே முடிந்தால் ஒரு பெரும் இளனீர் கனத்துக்கு கழுத்தை அழுத்திக் கொண்டிருக்கும். பின்னலை எடுத்துக் கட்டினால், கூடை திராஷையை அப்படியே தலையில் கவிழ்த்தது போலிருக்கும்.” தன் நிலை தாழ அது விரும்பவில்லை. உயிர் ஸ்வரம் இல்லாமல் இராகம் என்ன, தாளம் என்ன? பாவ பூர்வமாக, ஸ்ருதி சேர்ந்ததாக, அந்த ஸ்வ்ரத்தில் மட்டும் நின்று கார்வை கொடுக்கையில் வீணையின் தந்தி அறுந்துவிடுகிறது.

“அபூர்வ இராகம், அதே வக்கரிப்பு, பிடாரன் கை படாத பாம்பு போல், அபாயம் கலந்த படபடப்பு, ஸ்வர ஸ்தானங்கள் பிடிபடாது, பழகப் பழக எல்லையேயற்றது போல், நடையுடை பாவனைகளில் சிந்தும் ஒரு கவர்ச்சி, வேட்டையில் வேடுவன் மேல் பாயத் திரும்பிய மிருகம் போல் பயந்த ஒரு முரட்டுத்தனம் சிலிர்சிலிப்பு”

“இயல்பு என்று சொல்வதன் அர்த்தம் என்ன? பட்சிகளுக்குப் பறப்பதுதான் இயல்பு. இறக்கையை ஒடித்துவிட்டு இயல்பு மாறாதவரை பட்சி பட்சிதான் என்றால் என்ன சரி? இராகத்திற்கும், பட்சிக்கும் என்ன வித்தியாசம்? இரண்டிற்கும் மேல் சஞ்சாரம்தானே?”

இவள் வர்ஷிப்பவள். பொழிந்து ஆள்பவள். ஆனால் கட்டுக்குள் அடங்காதவள், அதுதான் அவளது இயல்பு. அந்தந்த நொடியில் வாழ்பவள். தன் இயற்கையில்  இருப்பவள். இவள் அம்ருத வர்ஷினி

அவுடத இராகம். பிறப்பெடுத்து தோன்றும் உருக் கொள்பவள்

ச க ம ப நி ச     ச நி ப ம க ச

அமிர்தம்

நிறைகுடம். தெவிட்டாதது. காலம் தோறும் வெல்லும் உண்மைகளின் உரைகல். அழகும், அறிவும், ஆற்றலும் திரண்ட அமுது. சேற்றிடை செந்தாமரையென மலர்ந்தவள். அழுக்கு அண்டாமல் வாழத் துடித்தவள். தன் தாயை மீற இயலவில்லை. தன்னை ஊர் அறியாத் துணையாக வைத்துக் கொள்ளத் துடிக்கும் முதலியாரிடம் காதலில்லை. அவர் பால் கழிவிரக்கம்தான். தன்னைக் கொடுக்காமல் அவரிடமிருந்தே தவணை பெறுகிறாள். முதலியாரின் பெரும் போக்கான மேம் குணங்களை அழகாகச் சொல்லிச் செல்கிறார் தி. ஜா. கெட்டவன் நல்லவன் என்ற இரு கூறான பிரிவு இல்லை. அனைத்து  மனிதர்களிடத்திலும் இருக்கும் கலவை. அமிர்தமும் அதனை நினைக்கிறாள். ஆனால், காதலாகிக் கசிந்துருக அவளால் இயலவில்லை. இச் சூழ்நிலையில் தாயும் இறந்து விடவே, அவள் தனியாகிறாள். முதலியார் துக்கம் கேட்க வராதது அவளை  வாட்டுகிறது. ஊரறிய சொல்லிக் கொள்ள விரும்பாத உறவாக  தன்னை முதலியார் கருதுவது அவளது தன்மானத்தைப் பாதிக்கிறது. ஆனாலும், ஒரு சக மனிதனாக அவர் நடந்து கொள்ளாதது அவளை வருத்துகிறதே தவிர அவர் பால் அவள் உள்ளம் ஈடுபடவில்லை. இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டை தி. ஜா. கதைப் போக்கிலேயே சொல்லிவிடுகிறார்.

இரு மாதங்களாகக் கோயிலில் பார்க்கும் ஒரு இளைஞனின் உருவமும், பருவமும், அவன் நடத்தையும் அவளை இயல்பான வெட்கத்தை மீறி அவனுடன் பேசவைக்கின்றன. அவன் இந்த ஊரைச் சேர்ந்த ரங்கூன்வாசி. ஊரில் அவனுக்கு நண்பர்கள் இல்லை. எப்பொழுதாவது இங்கே வரும் அவனுக்கு நெருக்கமானவர்களில்லை. அவளுடைய ஆற்றலும், அழகும், அறிவும் அவனைக் கொள்ளை கொள்கின்றன. சட்டம் படித்த அவன் அவளைக் கல்யாணம் செய்ய விரும்புகிறான். அவளுடைய வாழ்க்கைச் சம்பவங்கள் சமுதாயத்தின் நீதி குறித்து அவனைச் சினமடைய வைக்கின்றன.

அவளை அவன் அவள் வீட்டில் சந்தித்து தங்கள் மணம் குறித்து பேசுகையில் அவனது தந்தையான முதலியார் அங்கே வருகிறார். தன் தந்தைதான் அவளை அடைய ஆவல் கொண்டவர் என அறிகையில் தவிக்கிறான், திகைக்கிறான், வெறுக்கிறான். தந்தைக்கும் அதிர்ச்சி. பூங்காவில் சந்திக்கும் முதியவர் அவன் அமிர்தத்தை  மணம் செய்யவேண்டுமென்றும், இதில் அவன் மற்றும் அவளது விருப்பம் தான் முதன்மையானதென்றும், தந்தை மகன் நன்றிக் கடன் எல்லாம் அவனை கட்டுப்படுத்தினால் கூட அமிர்தத்தின் காதல் வலிமையானது என்றும் உணர்த்துகிறார்.

முதலியார் அவன் காஃபியில் நஞ்சு கலந்து அதை அவன் குடிக்கப் போகையில் தானே தட்டியும் விடுகிறார். சொத்தில் பங்கில்லை என்கிறார். அமிர்தத்தின் மீது அவதூறும் சொல்கிறார். கடிதத்திலும் சேற்றை வாரி இறைக்கிறார். அவன் துணிவாக நிற்கிறான். அன்று மாலை கோயிலில் சந்தித்து விரைவில் மணம் முடித்து ஊரை விட்டுப் போகத் தீர்மானிக்கிறான். அவன் ஆலயத்தில் காத்திருக்கையில் கடிதம் அவளிடமிருந்து வருகிறது. சில சிக்கல்களுக்கு மிகச் சரியான விடை கிடைத்தாலும், அந்த விடைகளே முடிச்சுக்களாக மாறி இறுக்கி விடும் என்று சொல்லி தான் ஊரை விட்டு நீங்குவதாகவும், மேலே படித்து தன் வாழ்வை அமைத்துக் கொள்வதாகவும், அடுத்த பிறவியில் அவர்கள் நிச்சயமாக இணைவார்கள் என்றும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது.

பிறப்பால் தொடரும் ஒரு கறை. அதைப் போக்கி தூயதான வாழ்வு தேடும் ஒரு சிறு பெண். அவளை வென்று விடத் துடிக்கும் பணம், உறவு. அதை வெற்றி கொள்ளும் அவள் சாமர்த்தியம், தன் கணவனாக அவனை நினக்கும் பாங்கு, எதையுமே மறைக்காத உண்மை, பணத்தை முதலியாரிடமே சேர்க்க நினைக்கும் நேர்மை, தகப்பன், மைந்தன் இருவரையுமே விட்டுச் செல்லும் தீர்மானம்…. இந்த சிறு பெண்தான் தூய அமுதம். மென்மை, கம்பீரம், தெளிவு, புத்தி கூர்மை, இனிமை, இளமை, துயரங்களைக் கடக்கும் திண்மை, பாலைவனத்து நிலாவானால் என்ன? நிலவின் இயல்பு ஒளிர்வது தானே?

இவளும் அமிர்த வர்ஷினிதான். மாதம் மும்மாரி பெய்பவள். உலகோர்க்கு உயிரானவள். தன் இயல்பை மீறாதவள். கண்ணனுடன் கலந்து தீப ஒளியாய்த் திகழும் ஆண்டாள், கண்ணனுடன் ஆயர்பாடியில் சிறிது காலமே இருந்த இராதை . இருவர் காதலும் உவப்பானதே.

அவள் “ஆனந்தாமிருகர்ஷினி

இவள்”சுதாமயீ

ஏழு ஸ்வ்ரங்களும் வரவில்லை என்றாலும் அழகான இராகங்கள்.

oOo