விமர்சனம்

அரவிந்தனின் பயணம் நாவல்

அஜய் ஆர்

payanam

“உனக்கு நெஜமாவே ஒரு விஷயம் வேணும்னா, அதுல நீ சீரியஸா இருந்தா அது உனக்குக் கிடைக்கும்” என்று ஸ்வாமிஜி ராமநாதனிடம் சொல்வது, அவனுக்கு அவ்வப்போது நினைவுக்கு வந்து கொண்டே இருக்கிறது. ஒரு விஷயத்தின் மீது பற்று கொண்டிருந்தால், எந்த இடர்பாடுகளையும் சந்திக்க முடியும் என்றாலும், ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்ப்பையே/ புறக்கணிப்பையே சந்திக்கும் ஒருவனின் பயணம் எப்படி இருக்கும் என்பதை ‘பயணம்’ நாவல் விவரிக்கிறது.

வீட்டிலிருந்து வெளியேறி ஸ்வாமிஜியின் ஆசிரமத்தில் ராமநாதன் சேர்வதிலிருந்து நாவல் ஆரம்பிக்கிறது. நாவலின் களம் ஆசிரமமாக இருந்தாலும், ஆன்மிகம் என்றால் தவம்/ இறையை அடைய முயலுதல் என்ற தனி நபர் ஈடேற்றத்தை குறிக்கோளாக கொண்டது, என்ற பொதுவான புரிதலில் இருந்து சற்று விலகுகிறது. மக்களுக்கு சேவை செய்தல், அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல், சமூகத்தில் சில நல்ல மாற்றங்களை உருவாக்குதல் இவற்றையே ராமநாதன் தன் குறிக்கோள்களாகக் கொண்டிருக்கிறான். (more…)

அடில் ஜுஸ்ஸாவாலா – இங்கிருத்தல் 2

திரும்பிச் சென்ற காலத்தைத் தொடர்ந்து செல்லுதல்

ஜுஸ்ஸாவாலாவின் கண்கள் உற்றுநோக்கிக் காண்கின்றன என்பது மட்டுமல்ல, அதனினும் ஓர் இந்தியனிடம் காண்பதற்கரிய இயல்பு, பிற மனிதனின் திறமையை ஒப்புக் கொள்ளும் மனவிரிவு, அவரிடம் உண்டு. “சுதீரை நினைவுகூர்தல்,” என்ற கட்டுரையில் எஜகீலைக் காட்டிலும் குறைவாகவே அறியப்பட்ட, இன்று ஏறத்தாழ மறக்கப்பட்டுவிட்ட ஒரு நண்பரைக் குறித்து எழுதுகிறார் அவர். சுதிர் சொனால்கர் ஜுஸ்ஸாவாலாவின் சமவயதினர், ஜுஸ்ஸாவாலா போலவே அவரும் தனித்தியங்கும் பத்திரிகையாளராய் நீண்டகாலம் பணியாற்றி வந்தார். அவர் தன் ஐம்பதுகளின் ஆரம்பப் பருவத்தில் 1995ஆம் ஆண்டு காலமானார், மதுபானம் அவரை அழித்தது. சொனால்கர் குறித்து தாளவொண்ணா நுண்ணுணர்வுடன் எழுதுகிறார் ஜுஸ்ஸாவாலா. அவரது கட்டுரையில் இரட்டைச் சித்திரம் உருவாகிறது- ஆம், சொனால்கரின் உருவம் ஒன்று, ஆனால் அதனுடன் ஜுஸ்ஸாவாலா தீட்டும் சித்திரமும் தோன்றுகிறது, கண்ணாடியின்மீது நடந்து செல்லும் பூனையின் அமைதியுடன் அவரது வாக்கியங்கள் நம்மைக் கவர்ந்து செல்கின்றன. (more…)

அடில் ஜுஸ்ஸாவாலா – இங்கிருத்தல் 1

(அடில் ஜுஸ்ஸாவாலாவின் கட்டுரைத் தொகுப்பான Maps for a Mortal Moon என்ற நூலை முன்வைத்து அர்விந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா காரவன் பத்திரிகையில் எழுதிய  Being Here என்ற கட்டுரையின் தமிழாக்கம்)

பம்பாய் பல்கலைக்கழக மாணவனாய் புகுபதிவு செய்துகொள்ள நான் 1966ஆம் ஆண்டின் கோடைப்பருவத்தில் அலகாபாத்திலிருந்து பம்பாய் வந்தபோது எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் அந்த ஊரில் இல்லை. என் பெற்றோர்கள் முலுந்த் பகுதியில் எனக்கு இடம் பார்த்திருந்தார்கள், ஆசிரமம் போன்ற அதை ஒரு பெண் கவனித்துக் கொண்டிருந்தார், அவரை நாங்கள் மாஜி என்று அழைத்தோம். அவரது பெயர் பிரிஜ்மோகினி சரின். என் பெற்றோர் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்களுக்கு மாஜி ஒரு குருவாய் இருந்தார். மெலிந்த, கீச்சுக் குரல் கொண்ட, நாற்பதுகளின் மத்திய பருவத்தில் இருந்த அவர் டெர்ரிகாட்டில் தைக்கப்பட்ட வெளிர் வண்ண மேக்சி அணிந்திருப்பார், ஆசிரமத்தை இரும்புக் கரம் கொண்டு நிர்வகித்தார். அவர் அருகில் வரும்போது, பக்கத்தில் இருக்கும் தூணுக்குப் பின்னால் பதுங்கிக் கொள்ளத் தோன்றும். அவருக்கு மணமாகியிருந்தது. அவரது கணவர், பப்பாஜி, டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் வேலை செய்து கொண்டிருந்தார். ஆசிரமத்தில் அவருக்கென்று தனியாக ஒரு அறை இருந்தது.

அந்த இடத்தில் நிரந்தரமாக இருந்த மற்றவர்களில் பணக்கார மார்வாரி விதவைகள் இருவரும் அடக்கம், சர்ச்கேட்டில் ரிட்ஸ் ஹோட்டலுக்குப் பின்புறம் இருந்த ஆர்ட் டிகோ கட்டிடங்களில் ஒன்றின் உரிமையாளர்கள் இவர்கள் பொழுதெல்லாம் சமையலறையில் இருந்தனர், பாத்திரம் தேய்த்துக் கொடுத்து சில்லறை வேலைகளைச் செய்யும் பணிப்பெண்கள் என்று எளிதாக அவர்களை நினைத்துவிட முடியும். ஆசிரமத்துக்கு விருந்தினர்கள் அவ்வப்போது வந்து சிறிது காலம் தங்கிவிட்டுப் போவார்கள், மாஜி ஆசிரமத்தைச் சுற்றிக் காட்டும்போது, விதவைகளைச் சுட்டிக் காட்டி, வைரங்களை விட்டுவிட்டு ஆத்ம ஞானத்தைத் தேடிச் செல்ல வந்திருக்கின்றனர் என்று அவர்களிடம் பாராட்டிச் சொல்வார். முடிந்த அளவுக்கு நான் ஆசிரமத்தைவிட்டு வெளியே இருந்தேன்; எனக்கு அப்போது பத்தொன்பது வயது. (more…)

எஞ்சிய சாம்பலிலிருந்து…

ஸ்ரீதர் நாராயணன்

bookashes

ஒரு சொல்லை மட்டும்
பிரித்தெடுத்து கொண்டு
எங்கே போகிறாய்?

எழுதியது மொத்தமும் உனக்குத்தான்.
எல்லாவற்றையும் எடுத்து சென்று
எரிதழலில் இட்டுவிடு.

எழுத்தை சூழும் நெருப்பு
தின்று தீர்க்கட்டும்
உன்னையும் என்னையும்!

மாதொருபாகன் நூலுக்கான எதிர்ப்பை தொடர்ந்து நடக்கும் சர்ச்சையை ஒட்டி நிறைய அலசல்களும் கருத்து பரிமாற்றங்களையும் கவனிக்கிறோம். அழிப்பதற்காக இட்ட நெருப்பே அந்த எழுத்தை பெரும் வீச்சோடு பரப்பிச் செல்கிறது. எஞ்சிய சாம்பலிலிருந்து சில கேள்விகளும் அதற்கான விளக்கங்களையும் இப்படி தொகுத்து வைத்துக் கொள்ளலாம்.

இலக்கியம் என்பதற்கான வரையறை என்ன? இன்றைய புனைவுகள் நாளைய கலாச்சார, சமூக ஆவணமாக பேசப்படும் என்றெல்லாம் சொல்கிறார்கள். அத்தகைய படைப்புகளுக்கு கட்டுபாடுகள் தேவையில்லையா? (more…)

மண்ட்டோவும் ஜி நாகராஜனும் – ஒரு பார்வை

வெ. கணேஷ்

Manto g-nagaraajan-aakkangal-215x315

முதலில் எனக்கு அறிமுகமானவர் மண்ட்டோ. காலித் ஹசனின் ஆங்கில மொழிபெயர்ப்பு வாயிலாகத்தான் மண்ட்டோவின் உலகு எனக்கு அறிமுகமானது. டோபா டெக் சிங் – சிறுகதைதான் நான் படித்த முதல் மண்ட்டோ படைப்பு. அந்தச் சிறுகதையை வாசிப்பதற்கு முன், இந்தி மொழி நாடகமாக டோபா டேக் சிங்-கை காணும் சந்தர்ப்பம் அமைந்திருந்தது. மனநல மருத்துவமனையை இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் அரசியல் வக்கிரங்களின் படிமமாக மாற்றிய கச்சிதமான சிறுகதை அது. நகைச்சுவை, யதார்த்தம், நகைமுரண், வரலாற்றுச் சோகம் மற்றும் துன்பியல் – மானுட வலியின் பல அடுக்குகளையும் அழகாய்ச் சொன்ன அற்புதச் சிறுகதை. டோபா டேக் சிங் பானையின் ஒரு சோறு. பிரிவினைக்கால வன்முறை நிகழ்வுகளின் அடிப்படையில் மண்ட்டோ எழுதிய “திற”, “சில்லிட்டுப் போன சதைப் பண்டம்” “டிட்வாலின் நாய்” “மோஸல்” முதலான சிறுகதைகள் பெரிதும் பேசப்படுபவை.

ஜி.நாகராஜன் மண்ட்டோவுக்குப் பிறகுதான் எனக்கு அறிமுகமானார். 2012- தில்லி புத்தக விழாவில் ஜி நாகராஜனின் முழு ஆக்கங்கள் (காலச்சுவடு பதிப்பக வெளியீடு) என்ற நூலை வாங்கினேன். அவருடைய எல்லா சிறுகதைகளையும் படித்து விட்டேன் என்று சொல்ல முடியாது. அவர் எழுதிய இரண்டு நாவல்களையும் – ”நாளை மற்றுமொரு நாளே” மற்றும் “குறத்தி முடுக்கு” – உடனே வாசித்து முடித்தேன். இக்கால பெரிய எழுத்தாளர்கள் யானைக்கால் சைஸில் எழுதும் நாவல்களின் பக்க எண்ணிக்கையைப் பார்த்தால் நாகராஜன் எழுதியவற்றை குறுநாவல்கள் என்றே குறிப்பிட வேண்டும் (more…)