2012ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியின் அதிகாலைப் பொழுதொன்றில் நான் கோவில்பட்டி வந்திறங்கினேன். தென் தமிழகத்தில் உள்ள சிறிய, ஆனால் பரபரப்பான, தொழில் நகரம். அதன் மக்கள்தொகை ஏறக்குறைய ஒரு இலட்சம் இருக்கலாம். தென் இந்தியாவில் உள்ள பல மொபசல் நகரங்களைப் போலவே கோவில்பட்டியும் முதல் பார்வையில் ஒழுங்கற்ற, சீர்குலைந்த தோற்றத்தை அளித்தது. மற்ற நகரங்களைப் போலவே இங்கும் சமநிலை குலைந்த பொருளாதாரச் செழிப்பையும் அபரித நுகர்வையும் சுட்டும் அடையாளப் புள்ளிகளை அண்மைக் காலங்களில் காண முடிந்தது: பகட்டான தங்கும் விடுதிகள், கார் விற்பனைக் கூடங்கள், சாலையின் இருபுறங்களிலும் வரிசை கட்டி நிற்கும் வாடகைக் கார்கள், தனியார் மருத்துவமனைகள், நிரம்பி வழியும் அலமாரிகளைக் கொண்ட மருந்துக்கடைகள். துணிகள், தீப்பெட்டிகள், பட்டாசுகள் ஆகியவற்றைத் தயாரிப்பதை நீண்ட பாரம்பரியமாகக் கொண்டுள்ள இந்தத் தொழில் நகரம், திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கிய மிகப் பெரும் பரப்பில் விரிந்திருக்கும் கரிசல் மண்வெளியின் மையத்தில் அமைந்துள்ளது- இந்தப் பிரதேசத்தை கரிசல் பூமி என்று அழைக்கிறார்கள். மழைநீர்ப் பாசனம் மட்டுமே சாத்தியப்படும் இப்பூமியில் விவசாயம் நெல்லைவிட சாமைப் பயிர்களுக்கே உகந்தது. பருவநிலைக்கேற்ப வறட்சியையும், கடந்த காலத்தில் அவ்வப்போது நேர்ந்த பஞ்சத்தையும் எதிர்கொண்டாக வேண்டிய பிழைப்பு. மதுரை (100 கி.மீ.), திருநெல்வேலி (55 கி.மீ.), துறைமுக நகரம் தூத்துக்குடி (60 கி.மீ.) என்று பெருநகரங்கள் பலவும் அண்மையில் இருப்பது போதாதென்று கரிசல் பூமியின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கும் எட்டயபுரம், கழுகுமலை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில் போன்ற பிற மையங்களும் கோவில்பட்டிக்கு வெகு அருகில் அமைந்துள்ளன. (more…)
விமர்சனம்
ஞானக்கூத்தன்: காலத்தின் குரல் – 2
யவனிகா ஸ்ரீராம் ஞானகூத்தனை பற்றிய அவரது கட்டுரையில், 80களிலும் 90களிலும் மிக அதிகமாக விமர்சிக்கப்பட்டவரும், அவற்றுக்கு கவிதைகள் வழியாக எதிர்வினையாற்றியவரும் ஞானக்கூத்தன்தான் என குறிப்பிடுகிறார். அதற்கான காரணங்களை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது.
“நான் காப்பியங்களில் நம்பிக்கை கொண்ட கவிஞன்” என வெளிப்படையாக அறிவித்துகொள்ளும் அவர் “கவிதைன்னு வரும்போது அப்போ திராவிட இயக்கம் உதிக்குது. திராவிட இயக்கத்தின் கொள்கைகள் கிட்டத்தட்ட பிரிட்டீஷ் கொள்கையை ஒட்டி இருந்தன. நம்ம கலை இலக்கியங்கள் மேல நமக்கு மதிப்பு குன்றச் செய்யறது, அவற்றால நமக்குப் பிரயோஜனம் இல்லை, நமக்கு அவமானமே தவிர வேறொண்ணுமில்ல அப்படிங்கற கருத்த அறிமுகம் செய்தது” எனவும், “அதுக்கு தமிழ்லயெல்லாம் ஆர்வம் கிடையாது. திமுக தமிழப் பத்தி பேசுச்சே தவிர தமிழுக்கு உருப்படியான காரியம் எதுவும் செய்தது கிடையாது” எனவும் திராவிட இயக்கங்களை பற்றி தீவிரமாக விமர்சிக்கிறார் (காலச்சுவடு நேர்காணல்). (more…)
Standing in Another Man’s Grave- ரீபஸின் மீள்வருகை
ரான்கின் பற்றிய சொல்வனம் கட்டுரையிலிருந்து சில பத்திகள்–
1987-இல் முதல் ரீபஸ் நாவல் வெளிவந்தபோது, ரீபஸின் வயது நாற்பது. இதனால் 2007-இல் வெளி வந்த எக்ஸிட் ம்யூஸிக் (Exit Music) நாவலின்போது அவருக்கு அறுபது வயதாகி விட, பணி ஒய்வு பெறுகிறார். இந்தத் தொடரும் (இப்போதைக்கு?) முடிவடைகிறது……
ஷுவான் இன்னும் பணியில் இருப்பதால் அவருக்கு வெளியில் இருந்து ரீபஸ் உதவுவதாக நாவல்கள் வெளிவரும் என்னும் நம்பிக்கை உள்ளது. “ரீபஸ் வெளியேயிருந்து ஷுவானுக்கு உதவுவதன் மூலம் இத்தொடரை நகர்த்தப் பல வழிகள் இருக்கின்றன,” என்று ரான்கின் முன்பு ஒரு நேர்காணலில் கூறியது அதற்கு வலு சேர்க்கின்றது.
ஒரு தொடரை முடித்தபின் அதன் முக்கியப் பாத்திரத்தை உயிர்த்தெழச் செய்வதென்பது, இலக்கியத்தில் அவ்வப்போது நடக்கும் ஒன்றுதான். ஹோல்ம்ஸ் (வாசகரின் ஏகோபித்த விருப்பத்தின் பேரில்) துவங்கி வாலண்டர் வரை இதற்கு உதாரணங்கள் உள்ளன. அந்த வழியில் இப்போது ரீபஸ் (more…)
நீதியின் சவால் – Etgar Keret எழுதிய One Gram Short சிறுகதையை முன்வைத்து
அமெரிக்காவில் இப்பொழுது கொண்டாட்ட காலம். நன்றியறிவித்தலையொட்டி நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்து விருந்து கொடுக்கிறேன். கிறிஸ்துமஸ் விழாவையொட்டி அலுவலில் நடக்கும் களியாட்டுகளுக்குச் செல்கிறேன். ரொம்ப நாளாகத் தொடர்பில் இல்லாதவர்களையும் புத்தாண்டை முன்னிட்டு ஏதாவதொரு ஜமா சந்திப்பில் முகமன் சொல்லி சந்திக்கிறேன். கையில் போஜனம்; முகத்தில் புன்னகை; எப்பொழுதோ தொடர்பறுந்த கிரிக்கெட்டோ, யாரோ கண்டுபிடித்த ஆங்ரி பேர்ட்ஸ் நிரலியோ, ஏதோ ஒன்றை விவரித்து சாப்பாட்டை உள்ளே தள்ளுகிறேன்.
டிசம்பர் முதல் வார நியு யார்க்கரில் எட்கர் (Etgar Keret) எழுதிய ”ஒரு கிராம் குறைகிறது” (One Gram Short) இது போன்ற மனநிலை கொண்ட நாயகனையும் ஊட்டமற்ற சம்பாஷணையில் இயங்கும் வாழ்க்கையையும் சிறுகதை ஆக்குகிறது.
காபி கடையில் பணிபுரியும் பெண்ணை ஒருவன் விரும்புகிறான். அவளோடு திரைப்படம் பார்க்க ஆசைப்படுகிறான். ஆனால், “படம் போகலாம், வருகிறாயா?” என பட்டென்று கேட்டால், அது அவனது ஆசையைப் பட்டென்று போட்டு உடைத்து நிராகரிப்பிற்குக்கூட வழிவகுக்கும். அதனால், நாசூக்காக, மீசையில் மண் ஒட்டாமல் வினவ விரும்புகிறான். சினிமாவிற்கு பதில் போதை மருந்தடிக்க அழைக்க முடிவெடுக்கிறான். அவனுக்கு போதை சரக்கு எப்படி கிடைத்தது? அவள் அவனுடைய கேள்விக்கு என்ன பதில் சொன்னாள் என்பது பாக்கி கதை. (more…)
ஞானக்கூத்தன்- காலத்தின் குரல்
அன்பைத் தவிர வேறொரு செய்தி
விளம்பத் தகுந்ததாய் உலகிலே இல்லை
நீண்டதாய் எங்கும் செல்வதாய்
இருக்க வேண்டும் என் அன்பு
சக்கரம் பொருந்தி சுமையை
எல்லாப் பொழுதும் எதிர்பார்த்துக் கொண்டு.
– உபதேசம், ஞானக்கூத்தன்
ஞானக்கூத்தன் எனும் கவிஞர் எனக்கு பரிச்சயமானது என்னவோ அசோகமித்திரனின் ஒற்றன் நாவலின் வழியாகத்தான். எழுத்தாளர்கள் அவையில் ஞானக்கூத்தனின் ‘அம்மாவின் பொய்கள்’ கவிதையை தியாகராஜன் மேடையில் வாசிப்பார். பின்னர் அங்கு விக்டோரியா இயக்கிய நாடகத்திலும் அந்தக் கவிதை உணர்ச்சிகரமான ஒரு தருணத்தில் இடம்பெறும். அதில் ஒரு உணர்வுபூர்வமான மன்றாடல் இருக்கும். அம்மாவிடம், “வயதானவர்களுக்கு பொய் சொல்லும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உரியது என எண்ணினாயா?” எனக் கேட்பார்.
அவருடைய எனது பிள்ளைத்தமிழ் எனும் கட்டுரையில் இப்படி ஒரு வரி எழுதுகிறார்- “பௌராணிகச் சூழலில் வாழ்ந்ததால் நான் எதையும் நம்பினேன். தகுந்தவர் சொன்னால் போதும், நான் நம்புவேன். பகுத்தறியப்பட்டால் வீணாகிவிடும் அந்தக் கதைகள் ஏராளம்”. பொய்கள் வாழ்க்கையை எத்தனை எளிதாக்குகின்றன, அழகாக்குகின்றன. கொஞ்சம் இளைப்பாற அவகாசம் அளிக்கின்றன என எண்ணிக்கொண்டேன். அம்மாவின் பொய்கள் என்றென்றைக்கும் நம்மை பிள்ளைகளாகவே வைத்திருக்கின்றன. (more…)


