ரா.கிரிதரன்

ஞாபகம்

ரா. கிரிதரன்

soccer memoirs

எனது எதிர்வீட்டில் இருக்கும் தொண்ணூறு வயது தாத்தா கால்பந்து போட்டிக்காக இன்று பளபளா இங்கிலாந்து கொடியைக் கட்டிக்கொண்டிருந்தார். அவரது செய்கை எனக்குக்கொஞ்சமும் ஆச்சர்யத்தைக் கொடுக்கவில்லை. மழை பெய்தபின் பூக்களுக்குத் தண்ணீர் விடுவார், என் வீட்டின் தரையைச் சரிசெய்து முடித்த அன்று சாம்பிள்களை எடுத்து வந்தவர். ராணுவ அணிவரிசையைப் பார்ப்பது போல மெல்ல இடம் வலம் நடந்து கொடியைக் கோணலாகாமல் சுவரில் அடித்துமுடித்தார்.

`நேற்று இத்தாலி தோற்றுப்போச்சு, இருந்த ஒரே சான்ஸும் போச்சே பார்த்தீங்களா?` , எனச் சொன்னேன்.

அவரது பதில் தான் மிக முக்கியமானது. என்ன சொல்கிறார் என ஒரு முறை கேட்டால் தான் நகர்வதா, பேச்சைத் தொடர்வதா என முடிவு செய்வேன்.

`ஆர்.ஏ.எஃப் ப்ளைட்டுகள் வந்தபுதிதில் ஒரு பழக்கம் இருந்தது. நான் சொல்வது ஐம்பதுகளில். நான் அப்போதுதான் லிமரிக்கிலிருந்து லண்டனுக்கு வந்திருந்தேன். சைனா மார்க்கெட்டில் வாங்கிய இனிப்பை ருசித்தபடிப் பட்டிக்காட்டான் முட்டாய் கடையைப் பார்ப்பது போல லண்டன் ப்ரிட்ஜ், லீடன்ஹால் மார்க்கெட்டை சுத்தி சுத்தி வருவேன். அப்போதெல்லாம் இந்த மாதிரி ஒரு கொடி கட்டின வண்டிகள் ரோந்து வரும். என்னிக்காவது நேரம் இருந்தா காட்டுறேன்.`

நான் கால்பந்து பற்றிப் பேசியது எனக்கே மறக்குமளவு எங்கேயோ சென்று நிறுத்திவிடுவார். இதுதான் வில்சன் தாத்தா. (more…)

ஒற்றைப் புன்னகை வெளிச்சம் – ராண்டோ

 

 

நடுநிசி நேரத்தில் நான் அங்கு வந்து சேர்ந்தேன்.
காரிருளில் மூழ்கி இருந்த அந்த பங்களாவுக்குள்
பணியாள் காட்டிய மெல்லிய டார்ச் ஒளியில்
தட்டுத் தடுமாறி பயத்துடன் சென்று கொண்டிருந்தவனுக்கு
பரவசம் அளித்தது பக்கத்து அறையில் இருந்த
சுந்தரியின் ஒற்றை புன்னகை

வெளிச்சத்தில் அடுத்த நாள் காலை பார்த்தபோதுதான்
தெரிந்தது அது ஒரு சிரிக்கும் கருங்குரங்கு பொம்மை.

– எஸ். சுரேஷ் (more…)

அன்பெனும் மழை – ராண்டோ

 

“மேகங்கள் கறுத்து மழை பெய்யாவிட்டால் என்ன?
நம் ஊரில் என்றும் பெய்கிறது அன்பெனும் மழை”
என்று முழங்கிக் கொண்டிருந்தார் பேச்சாளர்

அந்த வழியாக சென்றுகொண்டிருந்த
அழுக்கு வெள்ளை நாய் ஒன்று
அவரைப் பார்த்து ஆக்ரோஷமாக குரைத்தது

பேச்சை நிறுத்திவிட்டு அவர் நாயை முறைத்தார்
குரைப்பதை நிறுத்திவிட்டு நாய் அவரை முறைத்தது

நாய் ஒய்ந்துவிட்டதாக நினைத்து அவர் பேச்சை தொடந்தார்
நாய் மறுபடியும் கோபமாக குரைத்தது

கீழே குனிந்து ஒரு கல்லை எடுத்தார்
நாய் அவரைப் பார்த்து பலமாக சிரித்துக்கொண்டே
அங்கிருந்து ஓடி விட்டது.

ஒரு கையில் கல்லும்
மறு கையில் மைக்கும் வைத்துக் கொண்டு
பிரசங்கத்தை தொடர்ந்தார் பேச்சாளர்

(எஸ். சுரேஷ்) (more…)

புலியின் வாயில் – ராண்டோ

 

புலியின் வாயில் சிக்கிய முள்கரண்டி.
வாய்மூட முடியாதபடி படுவேதனை.
மரத்தடியில் இளைப்பாறிய புலி
சங்கடவிழிகள் மின்னுவதை
ஊரார் கண்டனர்.

அன்று ஒரு நாளைக்கு
அடர்கானகம் சற்றே தளர்ந்தது.

நீர் சொட்டி சடைதரித்த
பக்கத்து காட்டுப் புனுகுப்பூனை
அடங்கமாட்டாமல் சிரித்தது.

தலையைத் தூக்கி முதலைகள் விசாரித்தன.
இளைய இருமுயல்கள்
சற்றே கூடிநின்று ஒளிமணி மூக்கு
சுழித்துச் சென்றன.

மரக்கிளைமேல் குரங்கு;புதர் மறைவில் மான்
ராச்சுற்றி திரும்பிய ஓநாய்.

சில நிமிட சிரிப்புக்குப்பின்
எல்லாவற்றுக்கும் ஒரே கேள்வி
மீதமிருக்கும் கேக் எங்கே?

(ரா கிரிதரன்) (more…)

திறந்த கதவில் பூட்டு

ஏம்பலத்தானின் முகத்தில் எப்போதும் பார்த்திராத சிரிப்பு படர்ந்திருந்தது. கண்ணில் தெரிந்த விஸ்கியினால் உறைந்த சிரிப்பு என முதலில் நினைத்தேன். சோகையான விளக்குகளில் அவன் முகத்தில் வரிக்குதிரை பதற்றம் அவ்வப்போது பொசிங்கியது. நான் டாவர்ன் பாருக்கு வந்ததும் குடிக்கத்தொடங்கி மூன்றாவது லார்ஜ் வரைதான் காலியாயிருக்க அதற்குள் அண்டை டேபிளில் `மாப்ள, மச்சி` எனக்கூப்பிடும் நான்கு நண்பர்களை சம்பாதித்திருந்தான் சிகரெட் வாங்கக்கூட பணமில்லாத ஏம்பலத்தான். அடிபட்ட தெருநாயின் மெல்லிய தொடர் ஓலம்போல பார் வாசனையை மீறி அவனிடம் மருந்து வாடை.

`கண்ணமெல்லாம் ஆப்பிள் மாதிரி புசுபுசுன்னு எப்படிடா இப்படி இருக்கே?` , என கார மல்லாட்டை ஒட்டியிருந்த ஈர விரல்களால் என் கன்னம் தடவினான். நான் ஊரை விட்டுப் போன நாட்களிலிருந்து அவனது கையில் ஒட்டியிருந்த சாயகட்டை வாசம் அப்படியே இருந்தது. (more…)