சிறுகதை

என் பெயர் என்ன?

 

– பானுமதி ந

 

கொழு, கொழு கன்றே,

கன்றின் தாயே ,

கன்று மேய்க்கும் இடையா,

இடையன் கைக் கோலே

கோல் சார்ந்த மரமே

மரம் தரும் நிழலே

நிழல் நிற்கும் குதிரை

என் பெயர் என்ன?

ஒரு ஈக்கு தன் பெயர் மறந்துவிட்டதாம். பறந்து பறந்து கன்று முதல் குதிரை வரை எல்லோரையும் கேட்டதாம். குதிரை “ஹி … ஹி” என்று கனைத்தவுடன் ஈக்கு தன் பெயர் நினைவிற்கு வந்ததாம்.

அம்மா சொன்ன கதை.. அவள் குரலின் ஏற்ற இறக்கங்களுடன் இன்றும் விருபாக்ஷியின் காதுகளில் ஒலிக்கிறது.

“எப்படியம்மா ஈக்கெல்லாம் பெயர் உண்டு?” சற்று வளர்ந்தபின் அவள் கேட்பாள்.

”உண்டுடி. நாம் அதை மறந்துடறோம் இல்லாட்டி மறைச்சுடறோம்”

விருபாக்ஷிக்குப் புரியாது. ஆனால் அதற்கு மேல் கேட்கவும் தெரியாது.

அவளது பெயரின் அழகே அவளை மயக்கிக் கொண்டிருந்தது. அதை சுரங்களாக அவள் பகுத்துப் பார்ப்பாள்.

ச ரி க ம,

ரி க ம ப,

க ம ப த,

ம ப த நி,

ப த நி ச….

விருபாக்ஷி, ரூபாக்ஷி. விபாக்ஷி, விக்ஷிபா, விரூபா என்று சர இராகமாக அவை உருக்கொள்ளும். ஒவ்வொன்றும் ஒரு மந்திர அர்த்தத்துடன் முழங்கும். சொல்லிலிருந்து பிரியும் மௌனமாக. பின்… மௌனம் பெற்றெடுத்த சொற்களாக.. அவள் அதிலேயே ஆழ்ந்துவிடுவாள்.

அந்த பெயர் தன்னைத் தனியே நிறுவுவதாக அவள் உணரத் தலைப்பட்டாள். அடர்காட்டின் அந்தரங்கப் பகுதியில் ஒரே ஒரு பூ. நிலவின் வாசம் கொண்டு, மலை அருவியின் தோள் தொட்டு, பசும்புல்லின் திண்மையுடன், உலவும் காற்று. ஓங்கு செந்நெல் ஊடும் கயல் துள்ளியாடும் நீர்நிலை. வான் நிறைந்தவள். தன் பெயரைப் போலவே எண்ணிலடங்கா கண்கள் என வின்மீண்கள் கொண்டவள். செம்பருத்திப் பூவின் நாக்கென நீளும் வேத நெருப்பு .மழை கொணரும் மண்வாசம் .

இந்த எண்ணங்கள் தந்த மன எழுச்சி குகையினுள் ஒளிரும் இருள் போல் அவளை ஆட்கொண்டது.தான் என்றுமே அந்தப் பெயருடன் தான் இருந்திருப்பதாகப் பட்டது. ஆலிலையில் அவன் பாலனாக வந்த நேரம்… இல்லையில்லை.. அதற்கும் முன்னதாக.. அவள் மூன்று கண்களுடன் அவனுக்கு ப்ரணவம் சொல்கையில் விருபாக்ஷி. அவள் கனவின் விரிவெளி தோற்றத்திலும் அவள் அவளேதான்.

தன்னை மணம் செய்பவர் விஸ்வேஸ்வர் என்று பெயர் கொண்டவராக நிச்சயம் இருப்பார் என்றும், ஆனாலும் அவள் தன் பெயராலேயே அறியப்படுவாள் என்றும் அவள் நினைத்தாள். பேழையில் இருந்த வைரங்கள், தோடுகளாக மாற அவள் தன் சர இராகங்களை மறந்தாள். அவள் குழந்தைக்கு தன் பெயர் மறந்த ஈயின் கதையை சொல்லத் துவங்கினாள்.

பொண்டிங்

-ஜேகே –

 

 

பொண்டிங் இன்னமும் வந்துசேரவில்லை.

மழைத்தூறலும் குளிருமாய் இருந்தது. அருண் பொறுமை இழந்துகொண்டிருந்தான். “Where are you?”, மயூரிக்கு மெசேஜ் பண்ணினான். “On the way” என்று ரிப்ளை வந்தது. டிரைவ் பண்ணிக்கொண்டிருந்தால் எப்படி டெக்ஸ்ட் பண்ணுவாள்? பொய். வாய் திறந்தால் பொய். சட் பண்ணினால் பொய். எஸ்.எம்.எஸ் எல்லாம் பொய். மயூரி பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யாகி நிற்பவள். இன்னமும் அவள் கட்டிலிலேயே கிடக்கலாம். அருகிலேயே அந்தச் சூடானியன்… ச்சிக், பொண்டிங்கை நினைக்கத்தான் கவலையாக இருந்தது. அவனை எப்படி நடத்துகிறார்களோ. பாவம். பிள்ளைக்கு வாய் திறந்து சொல்லவுந் தெரியாது. அந்த சூடானியன் பொண்டிங் முன்னாலேயே மயூரியை… Stop it Arun, அப்படி எல்லாம் நடக்காது. தாம் ஏன் அவ்வாறெல்லாம் தேவையில்லாமல் யோசித்து விசனப்படுகிறோம் என்று அருண் தன்னையே நொந்துகொண்டான். மயூரி எக்கேடு கெட்டால் அவனுக்கென்ன? அவன் எண்ணம், சிந்தனை, கவலை எல்லாம் பொண்டிங்மீதே. மயூரி பொண்டிங்கைச் சரியாகக் கவனிப்பாளா? பொண்டிங் என்ற பெயரை வைத்ததே மயூரிதானே.

“ஏன் கடவுள் பெயர் வைக்கலாமே? ராம், சிவாஸ், கண்பத் என்று எத்தனை பெயர்கள் இருக்கின்றன? பிள்ளைக்குப்போய் கிரிக்கட் பிளேயர் பெயர் வைப்பார்களா? அப்படியே கிரிக்கட் பிளேயர் என்றாலும் சச்சின், சனத் என்று வைக்கலாமே? எதுக்குப் பொண்டிங்? I don’t like it. Let’s call him… Shivas”

அருண் படித்து படித்துச் சொன்னதை மயூரி கேட்கவில்லை.  அது நானூற்றி ஐம்பத்தாறாவது சண்டையாக இருக்கலாம். கணக்கு மறந்துபோய்விட்டது. ப்ரெஸ்டனில் தீப்பெட்டி சைஸ் வீட்டிலே வாழ்ந்தபோது நடந்த சண்டை அது. ஒரு கட்டத்தில் சண்டை பலத்து ஆளுக்கு ஆள் மாறி மாறி “!@#$ you” என்று கத்தவும், பக்கத்துவீட்டு எரிச்சலில் மாசிடோனியன்காரி உயர் டெசிபலில் “!@#$ you both” என்று கத்தியதும் இன்னமும் அருணுக்கு ஞாபகம் இருக்கிறது. மயூரி அன்று முழுதும் அழுதாள். சாப்பிடவில்லை. விடாப்பிடியாகப் பொண்டிங் என்ற பெயர்தான் வேண்டும் என்றாள். பொண்டிங், பொண்டிங், பொண்டிங். பொண்டிங்.

அருண் நேரத்தைப் பார்த்தான். காலை ஏழு மணி தாண்டியிருந்தது. எட்டு மணிக்கு அலுவலகத்துக்குக் கிளம்பவேண்டும். திங்கள்கிழமையே லேட்டாகப் போகமுடியாது. ஒரு மணி நேரத்துக்குள் பொண்டிங்கைக் குளிப்பாட்டி, உணவு கொடுத்து, வெளிக்கிடுத்தி, தானும் தயாராகி என்று ஆயிரம் வேலைகள் இருக்கின்றன. அவளுக்கென்ன ஹாயாக வருவாள். இந்தாப்பிடி என்று கையிலே கொடுத்துவிட்டுப் போயிடுவாள். பிளடி மயூரி. பிளடி சூடானியன். பிளடி…

வாசலில் ஹோர்ன் அடித்தது. மயூரி வந்துவிட்டாள்.

“Hay Arun, how are you mate?”

அந்தச் சூடானியன்தான் இறங்கிவந்தான். காருக்குள் மயூரி கண்ணாடி பார்த்து லிப்ஸ்டிக் சரிபார்ப்பது தெரிந்தது. அருணைக் கணக்கெடுக்கவேயில்லை.

“You alright mate?”

சூடானியனுக்கு வாயைச் சும்மா வைத்துக்கொண்டிருக்கமுடியாது. அருண் பதில் சொல்லவில்லை. அருண் என்றைக்குமே அவனுக்குப் பதில் சொல்லியதில்லை. ஆனாலும் அவன் ஒவ்வொரு திங்கள் காலையும், வெள்ளி மாலையும் தவறாமல் அருணைக் குசலம் விசாரிப்பான்.

“வெட்கம் ரோசம் கெட்ட தடித்த ஆபிரிக்கத் தோல். போ. உன்னுடைய தடிப்புக்கு அவன்தான் சரி. காலில் விழுந்து கிடப்பான். போடி. போ.”

அருணுக்கு சூடானியனைப் பார்க்கும்பொழுதெல்லாம் பற்றிக்கொண்டுவரும். இனிமேல் மயூரி தனியாகத்தான் பொண்டிங்கை அழைத்துவரவேண்டும் என்று ஒருமுறை அவளுக்கு மெசேஜ் பண்ணிக்கூடப்பார்த்தான். அவள் “Mind your business” என்று ரிப்ளை பண்ணினாள். சூடானியனைக் கொன்றுவிட்டால் என்னவென்று தோன்றும். ஏன் மயூரியைப்பற்றி தேவையேயில்லாமல் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்? அவள் சூடானியனோடு இருந்தாலோ, பிறேசிலியானோடு இருந்தாலோ நமக்கென்ன? நாம்தானே அவள் வேண்டாமென்று தலைமுழுகிவிட்டோம். அவள் போய்த்தொலைந்ததுதான் எவ்வளவு நல்லது.

அருணுக்கு அவளும் அவனும் பிடித்த இறுதிச்சண்டை ஞாபகம் வந்தது.

அது பத்தாயிரத்து முந்நூற்று நாற்பதாவது சண்டையாக இருக்கலாம். நகரத்தின் இத்தாலிய உணவுவிடுதி ஒன்றில் அவன் அலெக்சாந்திராவோடு உணவருந்திக்கொண்டிருந்தவேளையில் தற்செயலாக மயூரி அவர்களைக் கண்டதிலிருந்து முளைவிட்ட சண்டை. மாலை அருண் வீடு திரும்பியதும் சண்டை வலுப்பட்டது. மயூரி அருணின் ஐபோனை சுத்தியலால் உடைத்து நொறுக்கியதிலிருந்து சண்டை அடுத்த கட்டத்தை எட்டியது. மிகப்பெரிதாக வெடித்து அக்கம்பக்கம் எல்லாம் எட்டிப்பார்த்த சண்டை அது. முன்வீட்டு நாய்கள்கூட இவர்களின் சச்சரவால் குரைக்கத்தொடங்கிவிட்டன. எல்லா வார்த்தைகளுக்கும் “!@#$ing” அடைமொழியானது. மாறிமாறித் திட்டிக்கொண்டேயிருந்தார்கள். சண்டையின் ஒரு கட்டத்தில் அருண் மயூரியின் முடியைப்பற்றி முகத்தில் பளாரென்று அறைந்தான். அவள் அசரவில்லை. கையில் கிடைத்த பூச்சாடியால் ஓங்கி ஒரே அடி. அருணின் மூக்கு உடைந்து இரத்தம் சொட்டியது. இவர்கள் சண்டையைப்பார்த்ததில் பொண்டிங் பயத்திலே ஓடிப்போய் பக்கத்துவீட்டுக்குழந்தைகளுடன் ஒட்டிக்கொண்டுவிட்டான். இறுதியில் பொலிஸ் வந்தபின்னரேயே சத்தம் ஓய்ந்தது. பக்கத்துவீட்டுக்காரர்களே பொலிசை அழைத்திருந்தார்கள். பொலிஸ் பெரிதாக ஒன்றுமே செய்யவில்லை. “வன்முறை செய்தால் கேஸ் போடுவோம்” என்றார்கள். “தகாதவார்த்தைகளைப் பேசக்கூடாது. அதுவும் அக்கம்பக்கங்களில் குழந்தைகள் வசிக்கிறார்கள்” என்றனர். இருவருக்கும் குடும்பநல கவுன்சிலிங் ஹோட்லைன் நம்பரைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள்.

அதுதான் அருண் மயூரிக்கிடையிலான இறுதிச் சண்டை. அதற்குப்பின்னரெல்லாம் அருணும் மயூரியும் சண்டை பிடிக்கவேயில்லை. அன்றைக்கே மயூரி வீட்டிலிருந்து வெளியேறிவிட்டாள். கூடவே பொண்டிங்கையும் அழைத்துக்கொண்டு. அருண் விவாகரத்து நோட்டிஸ் அனுப்பும்போதுங்கூட மயூரி அலட்டிக்கொள்ளாமல் நிதானம் காட்டினாள். பின்னர் எல்லாவற்றையும் அவரவரது வழக்கறிஞர்களுக்கூடாகவே அணுகிக்கொண்டார்கள். எல்லா உடன்படிக்கைகளும் ஓரளவுக்கு சுமூகமாகவே நிகழ்ந்தன. அருணின் வக்கீல். அருண். மயூரியின் வக்கீல். மயூரி. நால்வரும் சந்தித்து, ஹாய் சொல்லி, காலநிலையை நொந்து, கோப்பி குடித்தபடியே விவாகரத்தைப் பேசித்தீர்த்தார்கள். வீட்டை விற்பது என்று முடிவானது. எல்லாமே இரண்டாகப் பிரிந்தன. கோப்பி மெஷின், பிரிட்ஜ், வோஷிங்மெஷின் எல்லாம் அருணுக்குப் போனது. சோபா, டிவி, கட்டில்கள் எல்லாம் மயூரிக்குத் தீர்த்தார்கள். அவளுக்கு அவை எதுவும் தேவையாய் இருக்கவில்லை. மயூரி தனக்குத் தீர்க்கப்பட்ட பொருட்கள் எல்லாவற்றையும் நான்காயிரம் டொலர்களுக்கு அருணுக்கே திரும்பவும் விற்றாள். சாமியறைப் படங்களை இலவசமாகக் கொடுப்பதாகச் சொல்லிவிட்டாள். ஒரு பென்சும், டொயோட்டாவும் வீட்டில் நின்றது. மயூரி பென்ஸ் தராவிட்டால் விவாகரத்தை இழுத்தடிப்பேன் என்று அடம்பிடித்தாள். நம்பர் பிளேட்டில்கூட “MAYURI3” என்று இருந்தது. அருணுக்கு அவள் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வைத்தாலேபோதும் என்ற நிலை. பென்ஸ் மயூரிக்குப்போனது. வங்கி வைப்பில் எழுபதுவீதம் தனக்கு வேண்டும் என்றும் அவள் கேட்டாள். அருணின் அவசரத்துக்கு எல்லாவற்றுக்கும் சம்மதம் சொன்னான். கிரெடிட்கார்ட் மீதியைக்கூட அவனே கட்டுவதாக உறுதியளித்தான். விவாகரத்து உடன்பாடு சுமூகமாகத்தான் போய்க்கொண்டிருந்தது.

பொண்டிங் யாருக்கு என்ற குழப்பம் வரும்வரையில்.

சூடானியன் பொண்டிங்கைக் கையில் கொடுத்துவிட்டுக் “ஸீ யூ” சொன்னான். இரண்டு நாட்கள்தாம். இரண்டே இரண்டு நாட்கள். ஆனால் அருணால் பொண்டிங்கை விட்டுப் பிரிந்திருக்கவே முடிவதில்லை. என்னவோ தெரியாது. அவனுக்கு இப்போதெல்லாம் பொண்டிங்கை விட்டால் தனக்கு வேறு யாரும் இல்லையோ என்ற எண்ணம் வாட்டத்தொடங்கியிருந்தது. பொண்டிங் மீது அருணுக்கு அப்படி ஒரு பாசம். காலை எழுந்ததும் கை தன்னிச்சையாக அருகில் கிடக்கும் பொண்டிங்கைத்தான் தேடும். அவன் இல்லை என்றதும் சடக்கென்று ஒரு பதட்டம் தொற்றிக்கொள்ளும். ஆரம்பத்தில் மயூரிதான் பொண்டிங்மீது மிகவும் பாசமாக இருந்தவள். அவன் குழந்தையாக இருக்கும்போது குளிப்பாட்டி பாலூட்டுவது முதல் எங்குபோனாலும் அவனையும் கொண்டுசெல்வதுவரை மயூரி பொண்டிங்மீது அபரிமிதமான பாசத்தைப் பொழிந்தாள். பொண்டிங் வந்து முதல் மூன்று மாதங்களுக்கு அவர்களுக்கிடையேயான சண்டைகளின் எண்ணிக்கை நானூற்றி ஐம்பத்தாறிலிருந்து வெறுமனே ஐந்துதான் கூடியிருந்தது. இருவரும் பொண்டிங்கை அழைத்துக்கொண்டு பூங்காவுக்கு நடையெல்லாம் போயிருக்கிறார்கள். குழந்தை என்றாலும் பெயருக்குத் தகுந்தமாதிரி பொண்டிங் நன்றாக பந்து விளையாடுவான். “கட்ச் இட்” என்று சொல்லி பந்தை வீசுகையில் குழந்தை ஆர்வத்தோடு பந்தை நோக்கிப் பாய்கையில் நிஜ ரிக்கி பொண்டிங் போய்ண்டில் கட்ச் பிடிப்பதுபோலவே இருக்கும். ஆனால் குளிர்காலம் வந்ததும் எல்லாமே மாற ஆரம்பித்துவிட்டது. இருவருமே பிசியானார்கள். அருணும் மயூரியும் பேசிக்கொள்வதே குறைந்தது. காலையில் அருண் எழும்புவதற்கு முன்னமேயே மயூரி கிளினிக்குக்கு கிளம்பிச் சென்றுவிடுவாள். இரவு அவள் வீடு திரும்புவதற்குள் அருண் தூங்கிவிடுவான். ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரமே இருவரும் முகம் கொடுத்துப் பேசுவார்கள். பொண்டிங்கைக் கவனிக்கும் பொறுப்பும் அருண் தலையிலேயே விழுந்தது. பாலூட்டுவதிலிருந்து சாப்பாடு கொடுப்பது, பொண்டிங்குக்கு ஏதும் சுகவீனம் என்றால் வைத்தியரிடம் கொண்டுபோவது என்று அருணின் வாழ்க்கை வேலை, வேலை முடிந்து வந்தால் பொண்டிங் என்று மாற ஆரம்பித்தது. கூடவே அருணுக்கும் பொண்டிங்குக்கும் இடையில் இன்னதென்று விளக்கமுடியாத பாசம். அருணாலும் பொண்டிங்கை விட்டு இருக்கமுடியாது. பொண்டிங்காலும் அருணை விட்டுக் கணமேனும் இருக்கமுடியாது.

அருண் பொண்டிங்கை அலேக்காகத் தூக்கிக்கொண்டான். இரண்டு நாட்களுக்குப்பின்னர் அப்பாவைக் கண்ட சந்தோசத்தில் பொண்டிங்கின் உடல்பூராவும் சிலிர்த்தது.

“என்னடா கண்ணா, அப்பாவை விட்டிட்டு எப்பிடி இரண்டு நாள் சமாளிச்சாய்?”

பொண்டிங் சந்தோசத்தில் அருணின் கன்னம், நெற்றி, தாடை, கழுத்து என்று முத்தங்களைப் பொழிந்தான். அவன் உடல் அதிர்ந்துகொண்டிருந்தது. சூடானியன் காரை ஸ்டார்ட் பண்ணி, புறப்படுவதற்கு முன்னர் அருகில் இருந்த மயூரிக்கு எட்டி முத்தம் கொடுத்தான். வேண்டுமென்றே செய்கிறார்கள். அருணுக்குத் தெரிந்ததுதான். கடைசிவரை மயூரி அருணைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. பார்க்கமாட்டாள். அவளுக்கு அருணின் ஒவ்வொரு அசைவும் விளங்கும். அருண் எப்போதெல்லாம் அவளைக் கவனிப்பான் என்று அவள் தெரிந்தே வைத்திருந்தாள். வெறுப்பேற்றுவதற்காகவே முத்தம் கொடுத்தார்கள். வெறுப்பேற்றுவதற்காகவே இருவரும் ஒன்றாக வருகிறார்கள். அதில் என்ன சந்தோசம் அவர்களுக்கு? அருணுக்குக் கோபம் வந்தது. பொண்டிங் அருணின் தோளில் தலைவைத்துத் தூங்கிவிட்டான். அருண் மயூரியையும் சூடானியனையுமே நினைத்துக்கொண்டிருந்தான். இப்பொழுது இருவருமே அவனைப்பற்றி ஏதாவது புரளிபேசிச் சிரித்துக்கொண்டிருக்கலாம். “He is such a loser” என்று மயூரி அருணைப்பற்றி எள்ளி நகையாடக்கூடும். அந்த சூடானியன் காவிப்பல் தெரியச் சிரிக்கலாம். கார் முழுதும் அவன் வாய் நாறலாம்.  அந்த சூடானியனின் காவி பிடித்த பல்லில் அப்படி என்னத்தைத்தான் மயூரி கண்டாள்? எப்போது இருவரும் சந்தித்துக்கொண்டார்கள்? நேற்று வந்த கறுப்பனுக்கு முன்னே எப்படி மயூரி அருணை அவமானப்படுத்தலாம்? அருண் ஆபிரிக்கர்களை கிண்டலடிப்பதை மயூரி என்றைக்கும் ரசித்ததில்லை. ஆ, ஊ என்றவுடன் அருணை ரெசிஸ்ட் என்பாள்.

பொண்டிங் இப்போது அருணின் காதைக்கடிக்க ஆரம்பித்தான். கூசியது.

அவர்களின் நானூற்றி அறுபத்தியிரண்டாவது சண்டை அருணுக்கு நன்றாகவே ஞாபகம் இருந்தது. குடும்பப் புகைப்படம் எடுக்கும்போது ஆரம்பித்து மூன்று நாட்கள் இரவு பகலாக நீடித்த சண்டை அது. சாதாரண குடும்பப்படம் அது. அருண், மயூரி, நடுவில் பொண்டிங். பொண்டிங் சிரிக்காமல் உர்ர்ரெண்டு முறைத்துக்கொண்டிருக்க இருவரும் அவனைத் தாங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்.  படம் கன்வாஸ் செய்யப்பட்டு வீட்டுக்கு வந்தது. மயூரியின் படத்துக்குக் கீழே “மயூரி ரட்ணம்”, அருணுக்குக் கீழே “அருண் இளையதம்பி”, பொண்டிங்குக் கீழே “பொண்டிங் மயூரி” என்று எழுதிக்கிடந்தது. அருணுக்குக் கோபமோ கோபம். “பொண்டிங் அருண்” என்று எழுதியிருக்கவேண்டும் என்றான். மயூரி அவனை ஷாவனிஸ்ட் என்று திட்டினாள். “ஏன் குழந்தைக்கு அப்பா பெயர்மாத்திரம் வைக்கவேண்டும்?” என்று வாதம் செய்தாள். சரி, அப்படியென்றால் “பொண்டிங் அருண் மயூரி” என்றாவது இருந்திருக்கவேண்டும் என்றான் இவன். அதுவும் ஆணாதிக்கம் என்றாள் மயூரி. வேண்டுமானால் “பொண்டிங் மயூரி அருண்” என்று மாற்றலாம் என்றாள். சண்டை வெடித்தது. முடிவில் “வெறும் பொண்டிங்கே போதும், முழுப்பெயரே போடவேண்டாம்” என்று அருண் சொன்னான். “குடும்பமே குலைந்துகொண்டிருக்கிறது, இதில என்ன மண்ணுக்கு குடும்பப்படம்” என்று மயூரி கன்வாசை உடைத்துக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டாள். அன்றிலிருந்து மயூரி எப்போது பார்த்தாலும் பொண்டிங்கை “பொண்டிங் மயூரி” என்றே அழைக்க ஆரம்பித்தாள். வைத்தியசாலைகளில் விண்ணப்பம் நிரப்பும்போது “மாஸ்டர் மயூரி” என்று பொண்டிங்கைப் பதிந்தாள். அருண் எதுக்கு வீண்வேலை என்று இந்த விவகாரத்தை அப்படியே தூக்கிப்போட்டுவிட்டான். ஆனால் அதுவே அவனுக்கு ஈற்றில் எமனாக வந்தமைந்தது.

விவாகரத்தின்போது பொண்டிங் யாருக்கென்ற விவகாரம் பூதாகரமாக வெடித்தது. பொண்டிங் தனக்குத்தான் வேண்டும் என்று மயூரி அடம் பிடித்தாள். அருண் எவ்வளவோ வாதாடிப்பார்த்தான். ஆனால் மயூரியிடம் அத்தனை சான்றுகளும் இருந்தன. அவன் உடைத்துப்போட்டதாகச் சொன்ன புகைப்படம் புதிதாக மீள அவதாரம் எடுத்தது. “பொண்டிங் மயூரி” என்று எழுதியிருந்த பெயரே போதுமானதாக இருந்தது. கன்வாஸ் கொம்பனியில் ஆதாரம் கொடுத்தார்கள். வைத்தியசாலைப்பதிவுகளில் எல்லாம் மாஸ்டர் மயூரி என்றிருந்ததும் அவளுக்கு வசதியாகப்போனது. அருணின் நிலைமை கௌரவர்களிடம் நாடு கேட்ட தருமனின் நிலையானது. கெஞ்சிப்பார்த்தான். ஐந்துநாள் கேட்டான். மூன்று நாள் கேட்டான். இரண்டு நாள் கேட்டான். கடைசியில் ஒரு உடன்பாட்டுக்கு வந்தார்கள்.

வாரநாள்கள் முழுதும் பொண்டிங்கை அருணே பராமரிக்கவேண்டும். வார இறுதி நாட்களில் அவனை மயூரியிடம் ஒப்படைத்துவிடவேண்டும். அவனுடைய இன்சூரன்ஸ், வைத்தியச்செலவுகள், மயூரி விடுமுறையில் போனால் அவனைக் கவனிப்பது, காப்பகச் செலவு என்று எல்லாவற்றையும் அருணே கவனித்துக்கொள்ளவேண்டும். மயூரிக்கு எப்போது பொண்டிங் வேண்டுமென்று தோன்றினாலும் கொடுத்துவிடவேண்டும். தவிரவும் வாரநாட்களில் பொண்டிங்கை மயூரி பிரிந்திருக்கவேண்டியிருப்பதற்கான இழப்பீடாக நாளுக்கு ஐம்பது டொலர்வீதம் அருண் அவளுக்கு வாரம் இருநூற்றைம்பது டொலர்கள் கொடுக்கவேண்டும். அருணுக்குக் கெட்ட கோபம் வந்தது. முடியவே முடியாது என்று மறுத்தான். மயூரி கேட்கவில்லை. நாளுக்கு முப்பது டொலர் கொடுக்கலாமா என்று அருணின் வழக்கறிஞர் பேரம் பேசிப்பார்த்தார். அவள் மசியவில்லை. ஈற்றில் நாளுக்கு நாற்பத்தேழு டொலர்களுக்கு இணங்கினார்கள்.

அருண் பொண்டிங்கின் முகத்தில் முத்தம்கொடுத்தான். பொண்டிங் உற்சாகம் தாளாமல் மீண்டும் அருணின் முகமெங்கும் முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். இந்தப் பிள்ளைக்காகச் சொத்தையே எழுதிக்கொடுத்தாலும் தகும் என்று அருணுக்குத் தோன்றியது. மயூரி ஏன் இப்படி மாறிப்போனாள் என்றுதான் தெரியவில்லை. ஏன் அருண்மீது அவளுக்கு அவ்வளவு வன்மம்? அருணின் ஒவ்வொரு டொலரையும் குறிவைத்துத் தாக்கிக்கொண்டேயிருந்தாள். அருணுடைய பலவீனங்கள் அத்தனையையும் நுணுக்கமாகப் பயன்படுத்தினாள். இத்தனைக்கும் மயூரி ஒரு டென்டிஸ்ட். பணத்துக்குப் பஞ்சமில்லை. பிரேஸ்டனில் அவளுடைய கிளினிக்கில் நாளுக்கு நூறு பேராவது பல்லைக்காட்ட வருகிறார்கள். அப்புறம் எதற்கு அவள் அருணை இம்மி இம்மியாக வறுத்தெடுத்தாள்? அருணைப் பிச்சைக்காரனாக நடுரோட்டில் நிறுத்தவேண்டும் என்று எதற்காகக் கங்கணம் கட்டினாள்? அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தகாலத்தில் மயூரியிடம் அப்படியான குணம் எதனையும் அருண் கண்டானில்லை. பிறகெப்படி? அருணுக்கு மயூரி அப்படி ஏன் செயற்பட்டாள் என்று இறுதிவரைக்கும் புரியவேயில்லை.

மழை பலத்துப்பெய்ய ஆரம்பித்தது. அருண் பெருமூச்சுடன் பொண்டிங்கை அணைத்தபடியே வீட்டுக்கதவைத் திறந்துகொண்டு மெதுவாக உள்ளே நுழைய…

“அந்தநாயை நடுவீட்டுக்குள் கூட்டிவரக்கூடாது என்று உனக்கு எவ்வளவுதரம்தான் நான் சொல்லுவது? இனியொருமுறை அது உள்ளுக்குள்ளே வந்துது என்றால் இரண்டு பேருடைய காலையும் முறிக்கவேண்டிவரும். Get out you idiots…”

வீட்டுக்குள்ளிருந்து அலெக்சாந்தராவின் சத்தம் கேட்கவும் பொண்டிங் துணுக்குற்றவனாய் அருணின் பிடியிலிருந்து விலகி ஓடி வீட்டுக்குப் பின்பக்கம் இருந்த கூண்டினுள் சென்று ஒளிந்துகொண்டான்.

****

நிழல் தின்றவள்

ந. பானுமதி

கனமான போர்வையென இருள் அவளைச் சூழ்ந்தது. ஒளியின் எந்த ஒரு சாகசமும் செல்லுபடியாகாத இருட்டு. கோளறு வான்வெளி. விண்மீன்கள் உமிழும் ஒளிக் குளிகைகளை வாங்கிப் பரவசப்படுத்த கோள்கள் இல்லை. தானே ஒளிரும் விண்மீன்கள் திகைத்தன. இதென்ன ஒளியை வெறுக்கும் உயிரினங்கள் வந்து விட்டனவா? இல்லை இல்லை… இவைகள் ஒளியை மறுக்கும் கோள்கள்.

ஒளியின் நிழல் அல்லவா இருள். நிழலில் எப்படி ஒளியேற்றுவேன்? ஒளிரும் நிழல்… நிழலில் ஒளி; இரண்டும் சங்கமிக்கும் புள்ளியை இந்த இருள் தாண்டியே தண்டிக்கிறது. ஒளி பரவ விலகும் இருளில்லை இது. இருள் நிறைக்க மறையும் ஒளி. தன் இருப்பின் பயனறியாமல் ஒளி உள் வாங்குகிறது. அருணா தன் சிந்தையின் போக்கை நினைத்து வியந்தாள். நம்மைச் சூழும் இருள் உலகின் மேல் கவிய ஏன் ஆசைப்படுகிறோம்? ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலல்லவா அவை இரண்டும்? அதனதன் நியதியில் அவை அவை அததற்கான மதிப்பைப் பெறுகின்றன. ஒளி இல்லையேல் உயிர்ப்பு இல்லை. ஆனால் அந்த உயிர் பயிராவதோ இருளில். இயக்கம் ஒன்று, அமைதி ஒன்று.

மீண்டும் சிரிப்பு வந்தது அவளுக்கு. அவள் இருளைக் குடைந்து குடைந்து அந்த குகையினுள் இருக்கப் பிறந்திருக்கிறாள். ஆம்… இருக்கத்தான்… வாழ அல்ல. ஒளி இல்லாமல் இந்த இருளிற்கும் அர்த்தமில்லை என்று  புரிகிறது.

குளிர்ந்த ஒளி வீசிய அந்த நாள்… இன்றைய இருளிற்கு வித்திட்ட காலத்தின் நாள். விசையில் அகப்பட்ட பொருள் போல அந்த வேகத்தின் சுழலில் சிக்கிய நாள். இன்றும் அக்கணம் அந்தக்கரணத்தில் நிற்கிறது. திரிசங்குவின் உலகம் போல் தனியானது, ஆனால் அதை சுவர்க்கம் என்று சொல்கிறார்கள். தனிமையானது அப்படி ஆகுமா?

அந்த மாலை அவள் நினைவில் கிளர்ச்சியை உண்டாக்கியது. முழு மதி அன்று. சோம்பும் மேகங்களிடையே சந்திரனும் சற்று சோகமாக வலம் வந்தான். மணல்பரப்பும், சிறு குன்றுகளும் அவன் ஒளி படர, அட்சதை சிதறிய மண மண்டபம் போலவும், சூடக் காத்திருக்கும் மலர் மாலைகள் போலவும் காட்சி அளித்தன.

மூன்று கடல்களின் சங்கமம்; முத்தான கூடல். அலைகள் வெண்ணிலாவைத் தொடும் ஆசையில் மேலெழும்பி, தளர்ந்து, கரையை அறைந்து, அறைந்து திரும்பின.

அவள் மரகதப் பச்சையில் ஒளிர்ந்தாள். மணப்பெண் அலங்காரம். முத்துச் சுடராய் மூக்குத்தி. கண்களில் கனவும், கவிதையும். ஒசிந்த இடையில் வைர ஒட்டியாணம். அணிகலன்கள் அவள் புன்னகை முன் மதிப்பிழந்தன.

காலம் தன் போக்கில் நெய்து கொண்டே இருக்கும் இழையறா ஆடைகளில், பருவங்கள் தம் பதிவைத் திரும்பத் திரும்பச் செய்தாலும் சிலது பொங்குகிறது, சிலது மங்குகிறது, சிலதோ உறைந்துவிடுகிறது.

அவர்களுடைய குடும்பத்தின் தோட்டக் கோயிலுக்குச் சென்றிருந்தபோது  உண்மை போல் தோற்றமளித்த கல் குருவியை ஒரு உயிர்க்குருவி அலகால் கொத்திக் கொத்தி புண்ணானதைப் பார்த்தாள். கல் குருவியும், உயிர்க் குருவியும் என்ன ஒரு இணை! நினைவிலேயே சுவைக்கும் ஒளி; நிழல் தின்னும் வாழ்வின் வலி.

அவள் மேல் இருள் மிகக் கனமான போர்வையென இறங்கியது.

ஒளிப்பட உதவி – eugene stickland

மஞ்சுக் குட்டி

கலைச்செல்வி

sometimes__when_i_m_alone_in_my_mind_by_narcissagrey-d736dtd

இரு பக்கமும் காதுகள் வைத்த சில்வர் அண்டா நிறைய பிரியாணி இருந்தாலும் அளவு தட்டில் கூம்பாக எடுத்து கரண்டியால் வழித்து விடும் போது பாதி மீண்டும் அண்டாவுக்குள் விழுந்து விடுகிறது. தட்டில் இருந்த பிரியாணியை சதுரமாக வெட்டப்பட்ட செய்தித்தாளின் மீது வைக்கப்பட்ட சருகு இலையில் கொட்டி கவிழ்த்த போது ஜிவ்வென்று எழுந்த வாசம் நாசிகளை சுண்டி இழுத்தது. எந்த கவனமும் எடுத்ததாக தெரியவில்லை. ஆனாலும் பொட்டலத்தில் கோழியின் எலும்பு பகுதி எடுத்து சாப்பிட தோதாக ஸ்பூன் போல வைக்கப்பட்டு இருந்தது. கொதிக்கும் பிரியாணியில் அமிழ்த்தி வைக்கப்பட்ட முட்டை பருக்கையின் வடிவத்தை உள் வாங்கி கொண்டது.. ஏற்கனவே கட்டப்பட்ட தாள்ச்சாவில் ஒரு பாக்கெட்டும் வெங்காய பச்சடியில் ஒரு பாக்கெட்டையும் அனிச்சையாக எடுத்து போட்டு பிரியாணி கவரை அவனிடம் நீட்ட, அவனும் நுாறு ரூபாய் தாளை நீட்டிக் கொண்டே கவரை வாங்கினான். தெருவோர கடை அது. “ஒண்ணு போதுமா.. இன்னொன்னு கட்டுட்டுமா..”

வழக்கமாக இந்த வாசத்துக்கு இன்னொன்னு கட்டு என்பான். இன்று சாப்பிடும் உடல்நிலையில் இல்லை. வயிறு பிரட்டிக் கொண்டிருக்கிறது. ஒண்ணு போதும்.. சொல்ல வாயெடுத்தான். அலைபேசி ஒலித்தது. அவள்தான்.

”ஆங்.. என்னாது..?”

”குமாரு வந்துருக்கான்.. காசு நாளக்கு தாரேன்னுட்டு இன்னொன்னு கட்டிக்க..”

”காசெல்லாம் இருக்கு..”

”நுார்றுவா தான குடுத்தேன்.. நீ சாப்புடுல..”

”எனக்கு வேணாம்.. வவுறு கொடயறாப்பல இருக்கு.. கஞ்சி எதுனா போட்டுக் குடேன்..”

கஞ்சியெல்லாம் போட்டுக் கொடுக்க மாட்டாள் என்று தெரிந்தும் கேட்டான்.

”சும்மா கெடக்கன் பாரு..” நொடித்தாள். அவள் எப்போதும் சும்மாயிருப்பதில்லை. சில சமயங்களில் சுமந்தும் கொண்டிருப்பாள் என்பது அவனுக்கு தெரியும்.. எப்போதாவது குரூப் ஆர்டிஸ்ட் வாய்ப்பு கிடைக்கும். கவரிங் நகை செட் வாடகைக்கு விடுவாள். அந்த நகை செட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் முதலீடு போட்டது கூட அவன்தான். மனைவி காந்திமதி சிறுவாடாய் சேர்த்து வைத்த தொகை அது. வாயிலும் வயிற்றிலும் அறைந்துக் கொண்டு கதறுவாள் என்பது அவனுக்கும் தெரியும். ஆனாலும் அவனால் எடுக்காமல் இருக்க முடியவில்லை. எப்படியோ பாடுபட்டு பிள்ளைகளை வளர்த்திருப்பாள். பிறந்தது மூன்றுமே ஆண்பிள்ளைகள். ஐந்தும் நான்கும் ஒன்றுமான வயதிலிருந்தன இவன் அவர்களை விட்டு பிரியும் போது. இப்போது பெரியவனுக்கு பனிரெண்டு வயதிருக்கும். தாயுடன் கட்டட வேலைக்கு செல்ல தொடங்கியிருப்பான். நடுவுள்ளவனும் பதினோரு வயதிலிருப்பான். தகப்பனை போல வளர்த்தியான பிள்ளைகள். காந்திமதி அவனையும் தன்னோடு வேலைக்கு அழைத்து சென்றிருப்பாள். வீட்டை விட்டுக் கிளம்பும் போது இவன் தான் எப்பா போவதப்பா.. போவதப்பா.. என்று கதறினான். காந்திமதி கல்லால் அடித்து வைத்தது போல சமைந்திருந்தாள்.. தடுக்கவுமில்லை..கதறவுமில்லை.

குருவிக்கூடு போலெல்லாம் ஒன்றி வாழ்ந்தவர்களில்லை என்றாலும் இப்படி ஓரேயடியாக பிரிந்தும் வந்ததில்லை. மஞ்சுளா என்ற பெயரே அவனை கவரப் போதுமானதாக இருந்தது. பார்த்திபன் ஒரு சினிமாவில் ரம்பாவுக்கு குழி பணியாரம் கொண்டு வந்து நீட்டுவாரே.. அது மாதிரியான ஒரு பரவச நிலையில்தான் இருந்தான் இவனும். இத்தனைக்கும் மஞ்சுளா குரூப் டான்சர்களில் ஒருத்தி. தாயும் மகளுமாக வந்திருந்தார்கள். இருவருமே டான்சர்கள்தான். மஞ்சுளா இருபத்தைந்திலிருந்து முப்பது வயதிற்குள்ளிருந்தாள். மாநிறமான உடல். கல் மாதிரி தேகம். முன்னழகுக்கு பிரத்யேக ஒப்பனைகள் செய்வதில்லை என்பது அவளுடன் நெருங்கி பழகிய பிறகு தெரிந்தது. நல்ல உயரமாக இருப்பாள். அதனாலேயே நடனங்களில் பின் வரிசையில் இருக்க வேண்டிய கட்டாயம்.

மலையடிவார கிராமம் அவனுடையது. ஊரில் அவ்வப்போது படப்பிடிப்புகள் நடக்கும். .அதில் அத்தனை ஆர்வம் இருப்பதில்லை அவனுக்கு. சைக்கிள் கடை வைத்திருந்தான். அவனிடம் வாடகைக்கு சைக்கிள் எடுக்க வந்த பையனுடன் இவளும் வந்திருந்தாள். “வெய்யிலு இம்மாம் கொளுத்துது.. ஆனா ரவக் கூட வேக்லியே..” என்றாள் அவனிடம் பழகியவள் போல. ”மல பக்கம்ல்லாம் அப்டிதான இருக்கும்.. பச்சப்புள்ளயாட்டம் கேக்கறக்கா..“ என்றான் கூட வந்தவன். பத்து சைக்கிள்கள் இருந்தது அவனிடம். மொத்தமாக ஆறு நாள் வாடகைக்கு எடுத்துக் கொண்டார்கள். இரண்டு மடங்கு வாடகை தேறிய சந்தோஷத்தில் இருவருக்கும் டீ வாங்கிக் கொடுத்தான். மலை வாழைப்பழம் கொடுத்தான். மலம் இறுகலாகப் போகிறது. என்பதால் காந்திமதி மதிய உணவோடு கொடுத்தனுப்பியிருந்தாள். வாழைப்பழத்தை தின்று விட்டு சதைப் பற்றான தோலை நகத்தால் வழித்து சாப்பிட்டாள் மஞ்சுளா. “எக்கா.. அதுக்கெல்லாம் கொரங்கு இருக்கு.. பூரா தோலயும் நீயே தின்னுடாத..“ கிண்டலடித்தான் பையன். “அப்டியா… தோலெல்லாம் கொரங்கு சாப்டுடுமா..” என்றாள். தெரிந்த விஷயத்தை புதுசு போல கேட்பதை வைத்து இவளை விவரமில்லாதவள் என்பதா.. பேரம் பேசி சைக்கிளுக்கான முன் பணத்தை கணக்காக எண்ணி வைத்ததில் விவரமானவள் என்பதா என்று கணிக்க முடியவில்லை அவனால். காதின் முன்புறம் வழியே சுருண்டிருந்த முடி அவள் முகத்துக்கு களையைக் கூட்டியது. சற்றே விலகியிருந்தது தெரிந்தும் சேலையை இழுத்து விட்டுக் கொள்ளவில்லை. தாழ்வாக படர்ந்திருந்த மரக்கிளையின் இலையொன்றின் நுனியைக் கிள்ளி காற்றில் பறக்க விட்ட நேரத்தில் அவள் மீது காதல் கொண்டான்.

”பிரியாணி வாங்கியார எம்மா நேரமாக்குவே..?” மஞ்சுளா அலைபேசியில் கடிந்துக் கொண்டாள். எப்போதும் சிடுசிடுப்பாகதான் பேசுவாள். உடம்பு காந்துவது போலிருந்தது அவனுக்கு. கஞ்சியோ ரொட்டியோ வயிற்றை நிரப்பிக் கொண்டு அப்படியே காய்ச்சலில் மல்லாந்து விடுவது ஒரு சுகம். மஞ்சுளாவிடம் வந்து சேரும் வரை அவனது காய்ச்சல் காலம் அப்படிதான் கழிந்தது. இருப்பது ஒரே அறை. அதை மஞ்சுளாவும் குமாரும் நிறைத்திருப்பார்கள். வாசற்படியில் உட்காரலாம்தான். மஞ்சு.. மஞ்சு.. என்று குமார் குழைவது எரிச்சலாக வரும். குமாரை அவளுக்கு பிடிக்காது என்றாலும் ஒன்றிரண்டு பட வாய்ப்புகள் அவனால் வருவதால் அவனை தவிர்க்க முடிவதில்லை.

”மஞ்சு..” அவனின் குரலுக்காக காத்திருந்தவள் போல விரைந்து வந்தாள் மஞ்சுளா. நீட்டிய பையை வாங்கும் போது அவன் கையின் சூடு தெரிந்தது. ஆனாலும் அவனிடம் எதுவும் கேட்கவில்லை.

”காசிருந்தா குடு.. டீயும் பன்னும் வாங்கிக்கிறேன்.. வாயி நரவலா கெடக்கு..” என்றான்.

”காசு.. காசு.. புடுங்கியெடு..” கோபமாக உள்ளே சென்றாள்.

மஞ்சுவுக்கு பூஞ்சை உடம்பு. அடிக்கடி முடியாமல் போய் விடும். சீசனுக்கு வருகிற சாதாரணக் காய்ச்சல் கூட அவளுக்கென்றால் ஆரவாரமாகதான் வரும். மஞ்சள்காமாலை வந்த போது பிழைத்தெழுவாள் என்ற நம்பிக்கையே அற்று போய் அழ தொடங்கி விட்டான். தெரிந்த.. தெரியாத இடமெல்லாம் அலைந்தும் பைசா பெயரவில்லை. கந்து வட்டிக்கு கடன் வாங்க போக வட்டிக்காரன் கை கால்களை முறித்து அடைத்து போட்டு விட்டான். மஞ்சுவோ தனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என ஒதுங்கி கொண்டாள். அந்த கடனுக்குதான் இன்னும் ஓட்டல்காரனின் உழைக்க வேண்டியிருக்கிறது.

ஓட்டல் கடையில் விறகு பிளந்து தருவான். அல்லது மூன்று சக்கர வண்டியில் மாவு அண்டாக்களை வைத்து ஓட்டிக் கொண்டு வருவான். தண்ணீர் எடுத்துத் தருவான். மரக்கட்டைகளை லாரியிலிருந்து இறக்கி அடுக்குவான். சிலசமயங்களில் சாக்கடை அடைத்துக் கொண்டால் உள்ளிறங்கி அடைப்பை எடுத்து விடவும் தயங்குவதில்லை. காந்திமதி பார்த்தால் உயிரையே விட்டு விடுவாள் என்று அப்போதெல்லாம் தோன்றும் அவனுக்கு. காந்திமதி பெற்றோருக்கு ஒரே மகள். சிறு வயதிலேயே தகப்பன் இறந்து விட அண்ணன் மகனுக்கு மகளை கொடுத்து விட்ட திருப்தியில் காந்திமதியின் அம்மாவும் போய் சேர்ந்து விட்டாள். அவளின் சேமிப்புதான் அவனுக்கு சைக்கிள் கடை வைக்க உதவியது. குடியிருக்கும் ஓட்டு வீடும் அவளுடையதுதான். மருமகன் கோர்ட் ஆபிசுக்கு முன் அமர்ந்து வாடகை தட்டச்சுப் பொறியில் தட்டச்சு செய்வது அவளுக்கு அத்தனை பெருமையாக இருக்கும். பரம்பரையிலேயே இல்லாத வழக்கமாய் மருமகன் பத்தாவது பாஸ் பண்ணி தட்டச்சு கற்றுக் கொண்டது குறித்தும் முதல் வாரிசே பேரனாக பிறந்தது குறித்தும் பெருமைப்பட்டுக் கொண்டே நிறைவாக இறந்து போனாள்.

காலி சருகுகளை வெளியே வீச வரும்போது இவன் இன்னும் அங்கேயே உட்கார்ந்திருப்பதை பார்த்தாள் மஞ்சுளா. “உசுர வாங்கன்னே வந்து சேந்துருக்க..” முனகிக் கொண்டே உள்ளே சென்றவள் இருபது ரூபாய் தாள் ஒன்றை எடுத்து வந்தாள். குமாரிடம் வாங்கியிருக்கலாம். “இந்தா.. பன்னு வாங்கி தின்னுட்டு எங்கயாவது இருந்துட்டு வா..” என்றாள். இந்த மாதிரி சமயங்களில் இவனே கௌரவமாகதான் நடந்துக் கொள்வான். இன்று உடம்பு அத்தனை துாரம் ஒத்துழைக்கவில்லை.

”வாபார டயத்துல இங்ஙன ஒக்காரதேங்கிறேன்ல்ல..” நீளமான வாசற்படிக் கொண்ட பழைய காலத்து காபிக் கடை. காலத்திற்கேற்ப டைல்ஸ் பதித்து டேபிள் சேர் பளபளப்போடு ஓட்டல் கடையாக மாறியிருந்தது.

ஓட்டல்காரரின் சத்தம் கேட்டு சுதாரிப்பாய் எழுந்தான். மூன்று நாளைய தாடி என்றாலும் சற்று அதிகமாகவே இருந்தது. நாற்பதை தாண்டவில்லை. அதற்குள்ளேயே கண்கள் உள்ளோடி கிடந்தன. அளவுக்கதிகமான உயரம் கொண்ட நாசியும் சிரிப்பது போலவே தோற்றமளிக்கும் அதரங்களும் ஒழுங்கற்றிருந்த மீசை முடிக்குள் பொலிவை இழந்திருந்தன. பவிசோடு இருந்திருந்தால் உடலின் வெண்மை நன்றாகவே பளிச்சிட்டிருக்கும்.

”ஓரமாதானே குந்தியிருக்கன்..” என்றான். கண்கள் கதகதப்பாக இருந்தன. மஞ்சுவோடு தனிக்குடித்தனம் வந்த அன்று பாய்.. தலையணை.. வாளி.. சமையல் பாத்திரம் என துாக்கு சுமைகளை இந்த படிக்கட்டில்தான் இறக்கி வைத்திருந்தான். அன்று மொத்தம் பனிரெண்டு பேருக்கு டிபன் வாங்கிக் கொடுத்தான்.

”பின்னால போய் ஒக்காந்துக்க..” என்றான் ஓட்டல்காரன் சற்று கரிசனமாய். இவனோடு நெருக்கமாகதான் பழகுவான். வியாபாரம் மந்தமாகிப் போனால் இவனிடம் புலம்ப கூட செய்வான். என்றாவது ஒருநாள் ஓசி டீ கொடுப்பான். ஆனால் வியாபாரம் என்று வந்து விட்டால் ஆள் கறார்தான். ஒருமுறை காந்திமதி எப்படியோ தேடி பிடித்து இந்த ஓட்டலுக்கு வந்து விட்டாள். சாயங்கால சமையலுக்கு தயாராகிக் கொண்டிருந்த மதிய நேரம் அது. கொத்தோடு அவன் சட்டையை இழுத்து பிடித்துக் கொண்டு நின்றவளை பார்த்ததுமே புரிந்து போனது எல்லோருக்கும். வாய் வார்த்தையாக பேசாமல் படாரென அவள் கையை உதறிக் கொண்டு ஓடினான் இவன். துரத்திக் கொண்டே ஓடி போய் அவனை இழுத்து வந்தாள். கல்லுளிமங்கனாய் நின்றவனிடம் பேசி அலுத்த ஒரு தருணத்தில் கழுத்தில் கிடந்த மஞ்சள் துண்டு கோர்த்த மஞ்சள் கயிற்றை கழற்றி வீசினாள். அவன் தலையை நிமிரவேயில்லை.

அடுத்த இரண்டு மாதங்களில் மீண்டும் வந்தாள் காந்திமதி. இந்த முறை அவன் வீட்டில் இருந்தான். ஆவேசமாக கத்தியதில் காந்திமதிக்கு மூக்கிலிருந்து தண்ணீர் வழிந்தது. இந்த முறையும் மஞ்சள் கயிறை கழற்றி வீசினாள். மண்ணை வாரி இறைத்து விட்டு கதறிக் கொண்டே போனாள். இத்தனை சத்தத்திற்கும் மஞ்சுளா வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை. அதற்கு பிறகு காந்திமதியும் அவனை தேடி வரவேயில்லை.

இரவு மணி எட்டை தொட்டிருந்தது. சப்ளையர் ஒருவன் பராசிட்டமால் மாத்திரையும் டீயும் கொடுத்தான். சட்டையில் கிடந்த அலைபேசி அலற பிரயத்தனப்பட்டு எழுந்து உட்கார்ந்து எடுத்தான். “நாளக்கு வெளியூர்ல சூட்டிங்கு இருக்கு.. ராத்திரி பன்னெண்டு மணிக்கு பொறப்புடுணுமாம்.. செத்த கண்ணசந்தாதான் ஒடம்பு தோதுப்படும்.. வாரதுன்னா சீக்ரம் வந்து சேரு.. கதவ சாத்தீட்டு படுக்கப் போறேன்..” என்றாள். அவளை நம்ப முடியாது. பொய்யை கூட நிஜம் போலவே சொல்வாள்.

ஆனாலும் அவளை நினைத்தால் பாவமாக இருந்தது அவனுக்கு. வெளியூர் படப்பிடிப்பு என்றால் சில சமயம் ஒரு வாரம் கூட ஆகி விடும். “ஒடம்பெல்லாம் அடிச்சு போட்டப்பல இருக்கு..“ என்பாள். சுடுதண்ணீர் விளாவித் தருவான். குளித்து முடித்து வருபவளுக்கு ஆட்டுக்கால் சூப் வாங்கி தயாராக வைத்திருப்பான். தலையை ஈரம் போக துவட்டி விடும் போதே அவளின் நெருக்கம் தேவைப்படும் அவனுக்கு. அப்போது மஞ்சுக்குட்டி என்று அழைப்பான். அவளும் மறுப்பு சொல்வதில்லை. அன்றுதான் புதிது என்பது போன்ற ஆவேசம் இருக்கும் இருவரிடமும். எப்போதாவது எழும் மகன்களின் நினைப்பு கூட மஞ்சுக்குட்டியின் அணைப்பில் பஸ்பமாகி விடும்.

மகாராணியின் தோழிப் பெண்ணாக வேடம் கிடைத்த தனது தோழி ஒருத்திக்கு மஞ்சுளா நகையை வாடகைக்கு விட போக கொத்தாக எங்கோ தொலைத்து விட்டு நின்றாள் அந்த பெண். சண்டையில் மண்டை உடைய பாதிக்கு பாதி பணம் தேறியது. அதுவும் பிரியாணி தின்றே தீர்ந்து போனது. சம்பாதிக்கும் பணத்தை அப்படியே அவளிடம் கொடுத்து விடுவான். இன்று அவள் கொடுத்த நுாறு ரூபாய் கூட நேற்று முன்தினம் அவன் கொடுத்ததுதான். அவனுக்கு குடிப்பழக்கம் இல்லாதது இருவருக்குமே வசதிதான். ஆனால் அவளுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவன் நிறைய சம்பாதிக்க வேண்டியிருந்தது.

தட்டு தடுமாறி வீட்டுக்கு செல்லும் போது குளித்து முடித்து புத்துணர்வோடு இருந்தாள் மஞ்சுளா. இப்போதுதான் குமார் சென்றிருப்பானாக இருக்கும். தலையில் ஈரத்துண்டோடு “எனக்கு துாக்கம் வருது.. எங்க போய் தொலஞ்ச..“ என்றாள் கோபமாக. குளித்திருந்தாலும் குடி நாற்றம் மிச்சமிருந்தது. பரோட்டா வாங்கி சாப்பிட்டுருப்பாள் போல. தீர்ந்து போன பார்சல் கவர்கள் அங்கேயே கிடந்தன. அதை அப்படியே அள்ளிக் கொண்டு வந்து தெருவில் எறிந்தான். பிறகு வலதுகையை நீட்டி அதன் மீதே தலையை சாய்த்துக் கொண்டு படுத்துக் கொண்டான். உடல் அசந்திருந்தாலும் கை கால்கள் முறித்தெடுத்ததில் துாங்க இயலவில்லை.

தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து அங்கிருந்து நாற்காலியில் எறிந்துவிட்டு புளிச்.. புளிச்.. என்று தட்டினாள். அவன் மீது நீர் தெளித்ததில் கண்களை சுழித்து முகத்தை மறுபக்கமாக திருப்பிக் கொண்டான். கிளிப்புக்குள் முடியை அடக்கிக் கொண்டாள். பானை மீது கவிழ்த்திருந்த டம்ளரை எடுத்து அதில் பாட்டிலில் மீதமிருந்த சரக்கை ஊற்றினாள். சிறிது தண்ணீரை எடுத்து அதில் கலந்து வாயில் சரித்துக் கொண்டாள். கைகளை ஊன்றி மண்டியிட்டுக் கொண்டே அவனிடம் வந்து ஒருக்களித்து கிடந்த அவனின் இடுப்பில் தலையை சாய்த்துக் கொண்டாள். இடது கை அவன் தோளை அணைத்துக் கொண்டது. வலது கையால் காலருக்குள் கை விட்டு கழுத்தைத் தொட்டாள்.

”ரொம்ப சூடாருக்கு.. டாட்டருட்ட போவமா..?” என்றாள் சற்றே குளறலாக.

”மாத்தர போட்டுருக்கன்..” என்றான். அனிச்சையாக இடது கையை அவள் மீது படரவிட்டான். அவள் அப்படி கவிழ்ந்திருந்தது உடல் வலிக்கு இதமாக இருந்தது.

”கட்டங்கடசீல ஒம் பயலுவ இருக்கானுங்க ஒன்ன பாத்துக்க..” என்றாள்.

”ஆமா.. நாந்தேன் வளத்தேன் பாரு.. அவனுங்க என்ன பாத்துக்க..” என்றான்.

”வளக்காட்டீ.. நீ தகப்பன் இல்லேன்னு ஆயிடுமா..”

சட்டென்று ஜாக்கிரதையானான். குடித்து விட்டால் நிறைய பேசுவாள். நீதிபோதனை வகுப்பெல்லாம் கூட நடக்கும். தெளிந்ததும் இவன் சொன்ன பதில்களாலேயே இவனை மடக்கி போட்டு பிடித்து விடுவாள்.

”அப்ப நீ கை நெறய சம்பாதிச்சும் எங்கிட்ட பிச்ச எடுக்கறாப்பல கெடக்கற.. அப்டிதானே..?”

”அடீப்போடீ.. எல்லா ஆம்பளப்பய பொழப்பும் அதான்..” என்றான் மழுப்பலாக.

”அத அவனுங்க தெனமும் சொல்லிக் காட்டுவானுங்க.. ஒன்ன மாதிரி நெஞ்சுலயே வச்சுக்கிட்டு கழுத்தறுக்க மாட்டானுங்க.. வீடு புடிச்சு கௌரதியா வச்சிருக்க.. நாந்தா ஒன்ன தெரத்தி தெரத்தி வுடுறேன்.. ஏன் இப்டி செய்றடீ பொம்பளேன்னு கைய நீட்டி அடிச்சாலும் அடங்கி போவும் மனசு..”

”நாந்தானே ஒன்ன கூட்டியாந்தேன்.. சோறு போட்டுதானே ஆவுணும்.. சும்மா பேசாம போய் படு..” என்றான்.

”எங்காச ஒனக்கு குடுக்கறதுக்கு நீ என்ன தாலி கட்டுன புருசனா..? நாள மக்காநாளு ஒம் பொண்டாட்டி கூப்டா மசிரே போச்சுன்னு ஓடிப் போயீடுவே..”

”ஆமா போறாங்க.. அவள புடிச்சிருந்தா நா ஏன் ஒம் பின்னாடி ஓடியார்றேன்..?”

உடலை மேலே உயர்த்தி அவன் கன்னத்தி்ல் மெலிதாக முத்தமிட்டாள். ”அப்ப புடிக்காமதான் புள்ள பெத்துக்கிட்டியா..?” அதே கன்னத்தை வலிக்காமல் நிமிண்டினாள்

”இருட்டுல எல்லா பொம்பளங்களும் ஒண்ணுதான்.. ஆனா நீ ரொம்ப பெசலு..” என்றான் உஷாராக. காந்திமதியை பற்றிய பேச்சு எப்போதாவதுதான் வரும். அதுவும் அவளே இழுத்தால்தான் உண்டு. போன முறை குடித்து விட்டு புரண்டுக் கொண்டு கிடந்தபோதும் இப்படிதான் வலிய பேசினாள். அந்த மாதிரி நேரங்களில்தான் அவளிடமிருந்து அன்பான வார்த்தைகள் வரும் என்பதால் அவனுக்கும் சற்றே விட்டு பிடிக்கத் தோன்றும். “ஒன் பொண்டாட்டி புள்ளய பாக்கணும்னு தோணுல..” என்றாள்.

”அத்த வுடு.. வேறா எதுனா பேசு..”

”வேறு என்னாத்த பேச சொல்ற.. அதுங்க கூட போறதுன்னா சொல்லு.. நா பேசி பாக்றேன்..”

”பேசாம இருக்க மாட்டே..” விருட்டென்று வெளியே வந்து விட்டான். எழுந்து போவதற்கும் இன்று உடம்பு ஒத்துழைக்கவில்லை.

”கேக்க நாதியத்து அனாத பொம்பளயா சுத்திக்கிட்டு கெடக்கேன்.. நாலு காசு சேத்து வச்சாதான எம் பொணம் சுடுக்காடு போவும்..”

”இப்ப என்ன சொல்லீட்டேன்னு பெரும்புடியா பேசுற..?” என்றான். இந்த மாதிரி நேரங்களில் அவனின் எந்த பேச்சுக்கும் சமாதானமாக மாட்டாள். வாய் வார்த்தை வலுத்து ஒரு வாரமோ.. பத்து நாட்களோ.. அவன் ஓட்டல் கடையின் ஓரமாக முடங்கிக் கொள்ள வேண்டியிருக்கும்.. இவளாக பார்த்து கூப்பிடும் வரை வரக்கூடாது என்ற அவன் பிடிவாதத்தை மழையோ பனியோ கூட அசைத்துப் பார்த்ததில்லை. சில சமயம் மாதக் கணக்கில் கூட பாராமுகமாக இருப்பாள். ஒருமுறை தெருவோர கடையின் சாக்குப்படுதா மறைவில் கிடந்தவனை போலீஸ் தட்டியெழுப்ப, ரயிலடிக்கு போனான். நல்ல துாக்கம் வேறு. அன்று அவனுக்கு சோதனையான காலக்கட்டம் போல. அங்கும் போலீஸ் துரத்தியடிக்க மேம்பாலத்திற்கடியில்தான் அன்று அவனுக்கு வாய்த்தது. விழித்துப் பார்த்த போது மலங்களுக்கு மத்தியில் கிடந்தது தெரிந்தது. பன்றிகள் அசிங்கமாக கடையோர பல்வரை காட்டிக் கொண்டு ஒரு மாதிரியான உருமலில் மலத்தை உண்ண, நாற்றம் சகிக்கவில்லை அவனுக்கு. ஏனோ அன்று நெடுநேரம் வாய் விட்டு அழுதான். அன்று வழக்கத்தை விட அதிகமான விறகுகளை பிளந்துப் போட்டதில் ஓட்டல் முதலாளி மூன்று நேர சாப்பாடும் சொல்லிக் கொள்ளும்படியான கூலியும் கொடுத்தான். மஞ்சுவும் அவனும் பெரிய ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டார்கள்.

காய்ச்சலில் ஏற்பட்ட கையாலாகததனத்தில் அவளை மெல்ல அணைத்துக் கொண்டான்.

”ஒடம்பு ரொம்ப காந்துதுய்யா.. இரு மாத்ர இருந்தா வாங்கியாரேன்..”

கையை விலக்கி விட்டு எழுந்து எங்கோ சென்றாள். வரும்போது கையில் ஒரு டம்ளர் பாலும் இரண்டு மாத்திரைகளும் இருந்தன. மாத்திரையை படக் படக்கென்று விழுங்கினான். தண்ணியாக ருசியற்று இருந்த பால் அவனுக்கு அமிர்தமாக தோன்ற நாக்கில் சூடு பறக்க பறக்க குடித்து விட்டு அவளிடம் டம்ளரை நீட்டினான். அதை வாங்கி ஒரு ஓரமாக வைத்தவள் பாயை விரித்து அவனை படுக்க வைத்துவிட்டு அவன் தலையணையிலேயே தலையை வைத்து அவனை கட்டிக் கொண்டு படுத்தாள். இருவரும் ஏதும் பேசவில்லை என்றாலும் உடல்கள் தன்னிச்சையாக இயங்கின.

அவனும் அவளும் அருகருகே அமர்ந்து சூடாக டீ பருகினார்கள். இந்த மாதம் அவளுக்கு இரண்டு படப்பிடிப்புகள் ஒப்பந்தமாயிருந்தன. அன்று ஒருநாள் படப்பிடிப்பு ஒன்றில் கைரேகை ஜோதிடர் ஒருவர் அவள் கையை நெடுநேரம் பிடித்து திருப்பி திருப்பி பார்த்து விட்டு ஒனக்கு சனிதான் பிரச்சன.. ஒருக்கா திருநள்ளாறு போய்ட்டு வந்துடு.. என்று சொன்னது அவள் நினைவிலேயே இருந்தது. அதை அவனிடம் சொல்ல இருவரும் பஸ்ஸில் அருகருகே அமர்ந்து திருநள்ளாறுக்கு பயணம் செய்தனர்.

ம்ம்ம்.. லேசான முனகலில் விழித்துக் கொண்டாள். “அய்ய.. அம்புட்டும் கனவாக்கும்..“ சலிப்பாக வந்தது அவளுக்கு. மாத்திரையின் வேகம் குறைந்ததில் அவன்தான் முனகிக் கொண்டிருந்தான்.

துாக்கு வாளியை எடுத்துக் கொண்டு டீக்கடைக்கு புறப்பட்டாள். டிரெயின் சத்தம் கேட்டது. மணி அஞ்சாயிடுச்சா.. ஆறு மணிக்கு புது டைரக்டரை பார்க்க குமார் அவளை வரச் சொல்லியிருந்தான். நடையை எட்டிப் போட்டாள். பன்னும் டீயும் வாங்கிக் கொண்டு திரும்பினாள்.

அவனது முனகல் குளறலாக வந்தது போலிருந்தது. என்னாச்சு இந்தாளுக்கு.. ஏழு வருசத்துல ஆள் இப்டி சொணங்கி பாத்ததேயில்லயே.. குனிந்து நெருங்கி அவன் கன்னத்தோடு கன்னம் வைத்து சூடு பார்த்தாள். அந்த முனகல் காந்தி.. காந்தி.. என்று கேட்டது. மீண்டும் உற்றுக் கேட்டாள். காந்திமதியைதான் அழைக்கிறான்.

அவனை எழுப்பினாள். “இந்தாய்யா.. எந்திரி.. இத சாப்டுட்டு படு..” என்றாள். மலங்க விழித்தவன் மறுப்பு சொல்லாமல் வாங்கி தின்றான். “மொத வேலயா டாக்டர்ட்ட போவுணும்..“ என்றாள்.

“ஆமா.. காச்சலுக்கெல்லாம் களுத டாக்டர்ட்ட போறதா..? ரெண்டு நாள்ல்ல எல்லாம் சரியாயிடும்..” என்றான்.

“நா வெள்ளன கௌம்புணும்.. வர ரெண்டு நாளாவும்.. இந்தா காசு.. காச்ச வுட்டோன்ன நீ கௌம்பி உங்கூருக்கு போயீடு..”

அதிர்வாக நிமிர்ந்தான். ”என்னன்னமோ பேசுற..?”

”அதெல்லாம் ஒண்ணுல்ல.. வூட்ட காலி பண்ண சொல்றாங்க.. பேசாம எங்காளுங்களோடு சேந்துக்கலாம்னு பாக்றேன்..”

”நா வேணா ஓட்டல் கடயிலயே தங்கிக்கிறன்.. நீ அப்பப்ப பாத்துட்டு போ..”

”அதெல்லாம் தோதுப்பட்டு வராது.. நீ கௌம்பு..”

”அய்ய்.. இப்டிதான் சொல்லுவ.. அப்றம் எங்கன்னாலும் என்ன தேடி புடிச்சு ஒடியாந்துடுவ.. லுாசு.. போடீ.. என்ன துாங்க வுடு..” என்றான்.

”இல்ல.. நீ கௌம்பு.. ரெண்டு நாளு கழிச்சு நான் வாரதுக்குள்ள ஒன் சட்டத்துணிமணிய எடுத்துக்கிட்டு கௌம்பிப் போயிடு.. நானும் குமாரும் கல்யாணம் கட்டிக்கலாம்னு இருக்கோம்.. நீ இங்கருந்தா தோதுப்பட்டு வராது..“ என்றாள் திடீரென்று தோன்றிய எண்ணத்தை பேச்சாக்கி.

இந்த இரண்டு நாட்களுக்கு எங்கு தங்குவது என்பதுதான் அவளது அப்போதைய சிந்தனையாக இருந்தது.

picture courtesy: Deviant Art

சூடிக் கொடுத்த பாவை- தி. வேல்முருகன்

தி. வேல்முருகன்

“ஒங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி எம்பாவாய்…”

“ஆண்டாள் திருவடிகளே சரணம்”

ஒருமித்த பலரின் குரல்கள் சேர்ந்து ஒலித்து நின்றது தொடர்ந்து தீபாராதனை மணிச்சத்தம். பிறகு சட்டென்று நிசப்தம். பெருமாள் கோயில் காலை மார்கழி பஐனை முடிந்து தீபாராதனையும் முடிந்து விட்டது மனதில் வெறுமை. பிள்ளைகள் பள்ளிக்குப் கிளம்பிச் சென்று விட்டார்கள்  காலை நாலரை மணிக்கு எழுந்து தெருக்கூட்டி கோலம் போட்டு காலைக்கு இட்டிலியும் சட்டினியும் மதியத்திற்கு சாப்பாடும் செய்து அனுப்பியாயிற்று ‘நல்ல சோத்துக்கு ஆளாய்ப் பறக்கும் இந்த மனுசன் வீட்டுக்கு வந்து போயி மூணு மாசமாவது. நம்ம நினைப்புதான் கிடந்து அல்லாடுது, எங்க சாப்டூதோ எங்க நிக்குதோ’ என்று தன் கணவன் நினைப்பு வந்து அவள் மனம் அல்லாடியது.

“எம்மா? எம்மோவ்…” என்று சத்தம் வந்த திசையை நோக்கி அடுக்களையிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தாள்.

இடுப்பில் ஒரு குழந்தையோடு தலையில் சிறு கூடை வைத்துக்கொண்டு அந்தக் கிழவி காலை இளம் வெயிலில் ஓவியம் போல் நிற்பதை திறந்திருந்த ஒற்றை நிலைக்கதவின் வழியாகப் பார்க்க முடிந்தது. அவள் இடுப்பில் இருந்த குழந்தை சிணுங்கி, “ஆயா… ஆயா…” என்றது.

“கூட, மொரம் இருந்தா குடும்மா. கட்டி மொழுவி தரேன்”

“இல்லைம்மா”

“என்ன தாயி அப்படி சொல்லிப்புட்ட, குடியான வூட்டுல கூடை மொரம் இல்லைன்னு!”

“இல்லம்மா இப்ப கூட, மொரம் எங்க வருது? அதுக்குதான் இப்ப வேலையும் இல்லையே”

கைக்குழந்தை மேலும் சிணுங்கி அழுது, “ஆயா… ஆயா…” என்று கிழக்கு நோக்கி கை காட்டியது.

“ஏம்மா அழுவூது?”

“இட்டிலி கேக்கறா. கடையில தீர்ந்துடுச்சு. ரெண்டு வயசாகப் போவுது பேச்சு வரல அதான் கையை ஆட்டிக்கிட்டு இருக்கா”

“இரு… நான் தரேன்”

இரண்டு இட்டிலியும் சட்டினியும் வைத்துத் தந்ததை குழந்தை ஆவலுடன் தின்றது.

“எந்த ஊரு?”

“தாழம்பேட்டைம்மா”

“அங்கே இருந்தா வர?”

“இல்லை தாயி, புதுப்பேட்டை தாண்டி பெரிய மதுவு இல்லை அங்கதான் பொண்ண கட்டிக் குடுத்துருக்கேன், பேரப் பிள்ளைய பாக்க வந்தேன், எல்லாம் வேலைக்கு போயிடுச்சுங்க நான் சரி பாக்கத் தெரிஞ்ச வேலையை பார்ப்போம்னு வந்தா காலையிலேருந்து பச்சத் தண்ணி பள்ளுல படாம சுத்துறேன் ஒரு மானுடம் கூப்டலம்மா”

மேலும் மூன்று இட்டிலியும் தண்ணீரும் கொடுத்து, “சாப்பிட்டுட்டு பேசு,” என்றதும் மவுனம்.

“சரி, நீ சாப்பிட்டுட்டு கூப்பிடு ஆயா, நான் கைவேலையை முடிச்சுட்டு வரேன்”

அவதி அவதி என்று அள்ளிப் போட்டு கொண்டபின் போய் பார்க்கும்போது சாப்பிட்ட இரண்டு தட்டும் கழுவி இருந்தது. கூடையில் இருந்த சின்ன கொட்டுக்கூடையை எடுத்து, “எம்மா இதை கொண்டு உள்ள வை,” என்று கொடுத்தாள்.

“இது ஏதாயா?”

“கத்தி புடிச்ச கை சும்மா இருக்குமாம்மா நான்தான் செஞ்சேன். இந்தக் கையால எவ்வளவு கூட மொரம் பின்னியிருப்பேன் தெரியுமா?”

“அப்பிடியா ஆயா?”

“என்ன தாயி அப்படி சொல்லிப்புட்ட?  இந்த ஊரு வியாழக்கிழமை சந்தைக்கு வருவேன், வெள்ளிக்கிழமை சேத்தியாதோப்பு சந்தைக்கு போயிட்டு சனிக்கிழமை வடலூர் சந்தை ஞாயிறு குள்ளஞ்சாவடி ரெண்டு நாள் வூட்டுள இருந்து கூட மொரம் பின்னி எடுத்துக்கிட்டு செவ்வாய்க்கிழமை குள்ளஞ்சாவடி புதன்கிழமை புதுச்சத்திரம் சந்தை அப்படியே ஓட்டமா ஒடுச்சு தாயி 30 வருசம் ஒரே வட்டமா குடிச்சு குடிச்சு குறவன் செத்துப் போனான், கூட மொரமும் செத்து போச்சு. நான் கிடந்து அல்லாடுடறன் இதை எடுத்து உள்ள வை, பிறகு வரும்போது கூட மொடஞ்சு கொண்டு வாரேன். பிளாஸ்டிக் வந்துதான் எங்க வாயில மண்ண போட்டுது. நான் வரேன் தாயீ, திரும்ப வந்தா நீ ஒரு வா சோறு போடு, என்ன?”

“ஆயா, இந்தா… இந்தா…”

“ஏம்மா, காசா? அட வாணாம்மா!”

“அட, வைச்சுக்க ஆயா…எதாவது செலவுக்கு ஆவும்”

30 வருட வாழ்க்கையை ஒரு சொல்லில் சொன்ன ஆயா தனக்குள் ஆழ்ந்து நடக்க ஆரம்பித்து விட்டாள். “இந்த புள்ள பொன்னாயா மாதிரி இருக்கே, கேட்டு இருக்கலாம் இந்தக் காலத்திலும் திருந்தாம கிடக்கிறேன் பாரு,” என்று அவளது எண்ணங்கள் திரண்டு வந்தன.

எப்பேர்ப்பட்ட குடும்பம். இந்தப் புள்ள இங்கேதான் கட்டிட்டுருக்கா நம்மள தெரியுமோ? தெரியல போலிருக்கு. பொன்னாயா பேத்தியா இருக்குமோ? அப்படிதான் இருக்கனும்.

கட்டிக்கிட்ட புதுசுல மப்பும் மந்தாரமா இருந்த ஒரு நாள் காலையில, ‘கலியா கலியா’ என்று பொன்னாயா  அப்பன் கூப்பிட்டாங்க ரோட்டுல வில்வண்டி நின்னுருந்துச்சு.

“கலியன் இல்லையா?”

“இல்லிங்க?”

“நீ யாரும்மா?”

“அவரு பொஞ்சாதிங்க”

அவரு அப்படியே போயிட்டாங்க. ஆளு தோரணைய பார்த்ததும் யாருன்னு கேட்க முடியல பார்த்துக் கொண்டிருக்கும்போதே வண்டி மறைஞ்சு போச்சு. வூட்டூகாரர் வந்ததும் சொன்னாள். அப்ப போன மனுசன் மறுநாள்தான் வந்தாரு, தலையில கள நெல்லோடு. என்ன, என்று கேட்டாள்.

“முதலாளி வூட்டு கோழி பிராந்துட்ட குஞ்சைப் பறி கொடுத்துட்டு நாள் முச்சுடும் கோ கோன்னு கத்திருக்கு, அதான் கூண்டு செய்யச் சொன்னாங்க”

“அதுக்கு இம்மாம் நேரமா?”

ஏ”க்கழுதை நம்ம கல்யாணத்துக்கு காசு பணம் கொடுத்து உதவுனது அவுங்கதான். மூங்கி கழி வெட்டி போட்டு வந்துருக்கேன் வேலை கொடுத்து இருக்காங்க நாளைக்கு போவும்”னாங்க

போய்ப் பார்த்தால், இன்னைக்கெல்லாம் பார்க்கலாம் போலிருந்தது.. தலை வாசல! அரிக்கால! மாலை சூடிய பூர்ண கும்பத்தை ஆனைவோ இரண்டு பக்கமும் மாலையை உயர்த்தி போட அப்படியே நெருங்குது. அவள் பார்த்து திகைத்து நின்றுவிட்டாள். இம்மாம் பெரிய வாசலும் இரண்டு பக்கமும் தின்னைவோ முன்ன பின்ன பார்த்து இல்ல, அப்படியே கன்னத்துல கை வச்சிகிட்டு நிற்கிறாள்.

அவளைப் பார்த்து, “இங்க எங்கடி வந்த?” என்று ஒரு குரல் கேட்கிறது.

யாருன்னு பார்த்தா பொன்னாயா வெளியே வருது, “ஏ ஆண்டாளு நீ எங்க இங்க?” என்கிறது.

“இங்கேதான் தாழம்பேட்டைல இவரத்தான் கட்டிக்கிட்டேன் ஆயா!”

“ஏலேய் கலியா இவ அப்பன் வீரன் சின்னப்புள்ளைலேருந்து தெரியும் ஒழுங்கா பார்த்துக்கோ”

“சரிங்க”

“முதல்ல வயிறார சாப்பிடுங்க காதடைச்சு வந்திருப்பிங்க”

இரண்டு பித்தளைத் தூக்கு வாளிகளில் சோறும் பூவரசு இலையில் துவரரிசி துவையலும் இப்ப பார்த்த அந்தப் புள்ளதான் கொடுக்குது, அப்படியே பொன்னாயா சாடை. கட்டசம்பா அரிசி இன்னும் போட்டாலும் சாப்பிடுலாம் அம்மாம் ருசி!. அது எல்லாம் ஒரு காலம், என்று நினைத்துக் கொண்டே கிழவி மகள் வீடு வந்து விட்டது

வாசலில் நிற்க்கும் மகளிட,ம் “ஏய் இங்க எங்கடி ஈச்சம் மட்டை கிடைக்கும்?” என்று கேட்டுக்கொண்ட உள்ளே போனாள்.

“ஏன் உனக்கு சும்மா இருக்க முடியாதா, உன் தொழிலத் தூக்கிட்டியா?

“ஆமான்டி அதான் உங்களுக்கு கஞ்சி ஊத்துச்சி. பிள்ளையக் குடுத்துட்டு பக்கத்துல போயி கேளு. எனக்கு தெரியும்டி யாரும் சொல்ல வாணாம், நான் பார்த்துக்கறன்,” என்றாள்.

எப்ப விடியும்னு பார்த்த கிழவி விடிந்ததும் முதல் வேலையாக மகளிடம், “கொஞ்சம் வேலை இருக்கு,” என்று ஆரம்பித்தாள். “நீ என்னை எதிர்பார்க்காத, புள்ளைய பார்த்துக்க. நான் பொறைக்கு வந்துடறேன்”

கிழவி விறுவிறுவென்று, வெள்ளாத்து ஓரம் நடைய எட்டி போட்டால் கிரேடர் போயிடலாம், எப்படியும் ரயில் ரோட்டு ஓரம் கிடக்கும் தேறினதா முத்தலும் இல்லாமல் இளசும் இல்லாம ஒரு அம்பது ஈச்சம் மட்டை, கொஞ்சம் கட்டுக்கொடி பதமானதா வெட்டிக் கொண்டு போவணும், என்று நினைத்துக் கொண்டே நடந்தாள். செத்த வெயில்ல போட்டு எடுத்தா மனசுபோல வணங்கும். பேசிக்கிட்டே செய்ய ஆரம்பிச்சா ஒரு இரண்டு மணி நேரம் அதுக்கு மேல பார்ப்போம், என்று சொல்லிக்கொண்டே வந்தவள், நெனப்பு தான் பொழப்ப கெடுக்கும் போல, இது என்ன இப்படி காடா கிடக்கு, கடவுளே!, என்று திகைத்து நின்றாள்.

“யம்மா… யம்மோவ்!”

“யாரு?”

“நான்தாம்மா”

“ஆயாவா? வா ஆயா! உனக்கு ஏன் இந்த வேலை?”

“இரு, தாயி. குச்சிய வெய்யல்ல போட்டு வரேன்”

“நேத்திலிருந்து நினைப்பு கிடந்து அடிக்குது ஆயா உன்னை எங்கியோ பார்த்து இருக்கேன் எங்கேன்னுதான் தெரியல”

“நீ பொன்னாயா பேத்தியா?”

“ஆமாம் ஆயா”

“அப்படி சொல்லு ஏன் ராசாத்தி, நேத்தி உன் கையால சாப்பிட்டதுமே நாக்கு சொல்லிடுச்சு அதே பொன்னாயா கை பக்குவம் புத்திக்கு தான் உரைக்கல. தாவத்துக்கு எதாவது குடு பிறகு சொல்றேன்”

“இந்தா ஆயா, கூச்சப்படாம சாப்பிடு”

“ஏம்மா இவ்வளளோ குடுக்குற, வயிறு சுருங்கிப் போச்சு, ருசிதான் கேக்குது நாக்கு”

“சரி ஆயா, சாப்பிடு! நான் மதிய வேலைய நெருக்கிட்டு வரேன்”

“ஆகட்டும் தாயி!” என்று சொல்லிவிட்டு வேலையைப் பார்க்கப் போனாள்.

“அம்மா, கொஞ்சம் குடிக்க தண்ணி குடு”

“தே வந்துட்டன் ஆயா, சாப்டியா”

“சாப்ட்டேன் ஆயி”

“பொன்னாயா கைப்பக்குவம் அப்படியே இருக்கு. என்னதான் மாயம் பண்ணுமோ தெரியாது, அம்மாம் ருசி”

“ஆயா பாடம்தான் எல்லாம்”

“சொல்லாயி குடும்பம் ஏன் அப்படி ஆச்சு?”

“தெரில ஆயா! அது பெரிய கதை”

“சொல்லாயி பெராக்க கேட்டுகிட்டே செய்யறேன்”

“ஒரு ராத்திரி தீடிர் தடார்ன்னு இடி மின்னலோட பெரிய மழை. ஒரு பக்க கூரை ஓட்டோடு உள்ள விழுந்துச்சு. அந்த பெரிய மழையில சுவரு விழுந்துடுச்சு. சுவருல பதிச்சிருந்த துயிலம் தூணும் அதோடு நாங்க ஆடும் ஊஞ்சல் அறுந்து பலகை  மேலே கிடந்தது ஆயா…

“எனக்கு நல்லா நியாபகம் இருக்கு பொன்னாயா உடம்பு நடுங்குது எங்கள கைல அணைச்சுகிட்டு சுவத்துல சரிஞ்சு, கடவுளேன்னே உக்காந்தது. பிறகு எதுவும் கைகூடல பங்காளி பகைச்சல். போற எடம்ல்லாம் சன்டை சச்சரவுன்னு ஆயிப் போனதுல ஆயா ஊட்ட சரி பன்ன சொன்னத அப்பா கேட்கல

“ஒரு ராத்திரி வயித்துப் போக்குல ஆயா போயிடுச்சு பிறகு அப்பா, ஆயாவ நான்தான் கொன்னுட்டேன் பாவி பாவின்னு குடிக்க ஆரம்பிச்சு குடிப்பழக்கம் ஆகி குடியில் விழுந்துச்சு பிறகு வீடு எழுந்திருக்கவே இல்லை. மிச்சம் மீதி இருந்தத வச்சு என்னை கட்டிக்கொடுத்த கையோடு எனக்கு புள்ள பொறந்த மறுவருசம் அப்பாவும் போயி சேந்துச்சு”

உணர்ச்சி மேலிட்டால் அவள் அழுவதைப் பார்த்து, “அழுவாத ஆயி முப்பது வருசம் கெட்டவங்களும் இல்ல முப்பது வருசம் வாழ்ந்தவங்களும் இல்லை. உன் புள்ள தலை எடுத்து பேரப்பிள்ளைவோ காலத்தில நல்லா வந்துடும் ஆயி. அழுவாத, அழுவாத, சொன்னா கேளு,” என்று ஆறுதல் சொன்னாள் கிழவி.

“சரி ஆயா, உனக்கு பொன்னாயாவ எப்படி தெரியும்?’

“நல்லா கேட்ட போ. நான் பொறந்து வளர்ந்தது ஆயா பொறந்த ஊருதான். எம்மாம் பெரிய ஊடு அவுங்க ஊடு நாளுகை தாழ்வாரம் வச்ச இரண்டு கட்டு வீடு இரண்டு பக்கமும் முழுசும் நெல் மூட்டைவளும் அடுத்த பக்கம் வரிசையாக  மரப்பத்தாயமும் இருக்கும். ஊருக்கு வந்துச்சுனா சொல்லி அனுப்பும். அப்பா கூட நான் பார்க்கப் போனா சாப்பிடச் சொல்லி எதாவது கையில கொடுக்கும் முருக்கோ, அதிரசமோ, சோறோ எதா இருந்தாலும் அம்மாம் ருசி.

“என் அப்பன வீரா வீரான்னு சொந்த தம்பி மாதிரிதான் பேசும். எங்கள்ட்ட கூடை மோரம் வாங்குனா கூடதான் காசி கொடுக்கும் தாயில்லா பொன்னு நான்னு எம் மேல தனி பாசம்மா அதுக்கு”, என்று முடித்தாள்.

சரி ஆயா நீ என்ன எங்க பார்த்த?”

“உன் கையால சாப்ட்டே இருக்கேன் உனக்கு பத்து வயசு இருக்கும். உங்க அப்பா எங்க ஊட்டுக்காரரத் தேடி தாழம்பேட்டை வந்துட்டாங்க இரண்டு நாள் சென்னு  கோழிக்கூண்டு செய்ய வந்தோம்”

“ஆமாம் ஆயா. என் கண் எதிரே கோழி கூண்டு செஞ்சிங்க. மூங்கிப் பட்டை ஈச்சம் பட்டை, பூலாக்குச்சி கட்டுக்கொடிலாம் காய வச்சிங்க அதான் நியாபகம் இருக்கு”

“இரண்டு கூண்டு செஞ்சோம் ஆயி. நீயும் ஒந்தங்கச்சியும் அதுல பதுங்கி விளாண்டிங்க பொன்னாயாக்கூட ஏசுச்சு”

“எனக்கு நியாபகம் இல்ல ஆயா”

“அப்ப நீலாம் வெளாட்டு பிள்ளைவோ என்னமோ போ ஆயி… போன வாரம் நடந்தது எதும் ஞாபகம் இல்ல பத்து இருபது வருசத்துக்கு முன்னாடி உள்ளது எல்லாம் அப்படியே ஞாபகம் வருது சரியா போச்சு போ!. சரி ஆயா, கட்டிகிட்டது என்னா ஊரு? உம் வீட்டுகாரர் என்ன ஆனாரு?”

“கட்டிக்கிட்டது தாழம்பேட்டை பொறந்தது மூங்கிலடி. ஊட்டுக்காரர் கத வேண்டாம்மா, நான் டீ போட்டு எடுத்தாரன்”

ஆயா சரிந்து அமர்ந்தாள் கூடை பாதி வரை ஆகி இருந்தது.

“இந்தா ஆயா, டீ குடி. சீனி போட்டுப்பல்ல?”

“அதெல்லாம் குடிப்பம்மா”

“யான் ஆயா முகமெல்லாம் மாறிடுச்சு?”

ஹூம் என்று ஆயா அழ ஆரம்பித்தார். “நான் வேற உன்ன கேட்டிருக்கக்கூடாது”

“இங்க பாரு ஆயா அழுவாத உடம்பு ஏதாவது ஆயிட போவுது”

ஆயா, “ஏன் சாமி இருக்கும்போது அருமை தெரியல…” என்று தேம்பினாள்.

“சரி ஆயா அழுவாத டீயக் குடி ஆறிட போவுது. கொஞ்சம் தெம்பா இருக்கும்,” என்றாள்.

ஆனால, “ம்க்கும்” என்று கனைத்து கொண்டு, “என் கதைய சொல்றன், கேளும்மா,” என்று ஆரம்பித்தாள். “யார்ட்டையாவது சொன்னாதான் மனசு ஆறும் நான் வாழ்ந்துட்டன்மா எனக்கு போதும். வூட்டுக்காரர் பேரு கலியன். நான் அவங்கள இந்த ஊரு பரங்கிப்பேட்டை சந்தைல வச்சிதான் பார்த்தன். நான் பார்த்தப்போ ஒரு தோளில் துப்பாக்கி, பையி மறுதோள்ல காட்டுப்பூனை தொங்குது. ஆறு அடிக்கு மேல உயரம் கைல அதே உயரத்துக்கு மூங்கிக் கழி அப்படியே வீமன் மேறி நடந்து போறாரு, நான் திகைச்சு பார்க்கிறேன்”

“அப்பிடியே உழுந்துட்டன்னு சொல்லு”

“ம்க்கும் கிண்டல் பண்ணாதம்மா”

“இல்லை, இல்லை. சொல்லு ஆயா”

“சனம் கூட்டமா அப்படியே அவரு பின்னாடி போவுது. இவரு காட்டுப்பூனைய தொளில் இருந்து எடுத்து கருவைல மாட்ராரு. அப்படியே சட்டையும் கழட்டி வச்சிட்டு பைல இருந்து பேனாக்கத்தி எடுத்து வால்ல தொடங்கி பின் வரக்கும் ஒரு கோடு. அப்படியே கத்தியால நெம்பி ஒரு காலு அடுத்த காலு பின்னாடி வால்ல இருந்து தோல பனியன் கயிட்டர மாதிரி தலை வரைக்கும் கொண்டு வந்து கழுத்த அறத்து தலையும் தொலயும் பையில்ல வைக்கிறாங்க. அதுக்குள்ள ஆளாளுக்கு எட்டு கிலோ இருக்கும் இல்லை இல்லை ஆறு கிலோதான் இருக்கும். ‘ஏக்கொறவா, வில சொல்லப்பா’ன்னு சத்தம். இவங்க ஒன்னும் சொல்லல சுவத்துல இருந்து ஒரு பழைய போஸ்டர பிச்சி கீழே போட்டாங்க. பூனைவயித்துல கத்திய வச்சாங்க கூட்டத்துல இருந்த ஒரு ஆளு ‘ஏய் கொறவா, கேட்டுக்கிட்டே இருக்கோம் நீ பாட்டுக்கு இருக்க? உதை வேனும உனக்கு’ன்னு சத்தம் போடவும், ‘என்ன அடிக்கறவன் இந்த கழிய தொடுங்குடா முதல்ல’ன்னு ஒரு சலாம் வரிசை சுத்தி முங்கிய தரையில ஊனறாரு பாராயி ஒரு பய கிட்ட போவல.

“சந்தைல ஒரே பரபரப்பு மொத்த கறியும் அறிஞ்சு பத்து கூறு வச்சாறு நான் பார்க்கறத கவனிச்சு என்ன குறுகுறுன்னு பார்க்கறாரு “ஒரு கூறு இரண்டு ரூபாய் யாருக்கு வேனுமோ காச வச்சிட்டு எடுத்துக்கங்க”ன்னு பத்து நிமிஷத்தில் எல்லாம் வித்துப் போச்சு. அப்பன் என்னத் தேடி வந்துட்டுது ‘இங்கே என்ன பன்ற யாவரம் முடிச்சு போற எண்ணம் இல்லியா?’ன்னு கேக்குது. நான் திரும்பிப் பாக்கறேன். இவரு என்னைய பார்க்கறாரு. நான் என் அப்பன்கூட மொரம் விக்க வந்துட்டன்

“கொஞ்ச நேரத்தில் இவரு கைகால் எல்லாம் கழுவிட்டு துணிய போட்டுகிட்டு வந்துட்டாரு வந்து எதுத்தால சாடை மாடையா பார்த்துட்டு அப்பன் எட்டப் போனப்ப கிட்ட வந்து, “என்ன ஊரு புள்ள?”ன்னு கேட்டாரு. மூங்கிலடின்னு சொன்னேன்

“”அப்பன் பேரு?”

“”வீரன்ங்க”

“”ஊம் பேரு?”

“”ஆண்டாளு”

“அடுத்த கேள்வி கேட்டாரு பாரும்மா நேத்து கேட்ட மாதிரி இருக்கும்மா… இரு வாரேன் இன்னைக்கு கதையாதாம் போகும் போலருக்கு”

“ஆயா எங்க கிளம்பிட்ட, சொல்லு?”

“ஆயி வெத்தலை போட்டுட்டு சொல்றேன்”

“ஏன் வேலைல்லாம் கெட்டு போச்சு ஆயா இன்னைக்கு”

“கிடக்கு போ”

“சரி, சொல்லேன்”

“ம் நேரா மூஞ்சிய பார்த்து, ‘ஏ புள்ள ஆண்டாளு என்ன கட்டிக்கிரியா எனக்கு யாரும் இல்லை சொல்லு,’ ங்கிறாரு”

“நீதான் மொதல்லிய கழி சுத்துனப்பய உழுந்துட்டிய”

“இல்ல ஆயி, அவரு யாரும் இல்லன்னு சொன்னார் பாரு அப்பத்தான். எனக்கு ஆத்தா இல்லியா, நான் கட்டிக்கிறேன்னு சொல்லிப்புட்டேன். அப்பன் வரத பார்த்துட்டு அப்படியே போயிட்டாரு. அப்புறம் நாங்க போற சந்தைக்கு எல்லாம் அவரும் சைக்கிள்ள வராரு. இரண்டே நாள்ல அப்பனுக்கு தெரிஞ்சு போச்சு என்ன மொத தடவையா அடிச்சுட்டாரு. நான் சொல்லிப்புட்டேன் உன் மகள நீ பாக்கனுமுன்னா நான் அவரதான் கட்டிப்பேன்னு சொன்னதும் பச்சைப்புள்ள மாதிரி தேம்பி அழுவுறாரு. அப்புறம், நின்னுட்ட இருந்தவர கைகாட்டி கூப்டாரு அப்பதாம்மா பார்த்தேன் இவரு பயந்தத!

“அம்மாம் பெரிய ஆளு இந்த ஊரு சந்தை சனம் பூரா வேடிக்கை பார்க்குது அப்படியே அப்பா கால்ல உழுந்துட்டாறு. அப்பனுக்கு ஒன்னும் புரியல. நான் ஓன்னு சத்தம் போட்டு அழுதத பார்த்ததும் அப்பன் வர முகூர்த்தத்திலே கல்யாணத்த வச்சிடுவம் பெரியவங்கள கூட்டிக்கிட்டு வா அப்படின்னு சொல்லிடுச்சு. வர போற சனம் எல்லாம், ‘எப்பா வீரா பொண்ணு கல்யாணத்துக்கு என்னியும் கூப்டு’ன்னாங்க அப்புறம் இவரு சார்பா உங்கப்பா தாழம்பேட்டை நாட்டாமைகிட்ட சொல்லி புதன்கிழமை புவனகிரி சந்தைல வச்சி பேசி முடிச்சாங்க. சேத்தியாதோப்பு தீ பாஞ்சாலி கோயில்ல தாலி கட்டிக்கிட்டோம்.

“கல்யாணம் முடிஞ்ச பிறகு கேட்டேன் “ஏன்யா இவ்வளவு சனம் எதுத்தாப்பல சந்தைல போய் கால்ல உழுந்தியே, ஏன்யா?” அப்படின்னு. அதுக்கு அவரு சொல்றார், “இல்ல கழுதை ஒப்பன அடிச்சுப் போட்டுட்டு தூக்கிட்டு போவனும்னு நினைச்சு இருந்தேன் ஆனா உங்கப்பன் அழுதத பார்த்ததும் எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல,’ அப்படின்னு. “சரியாதான்யா  செஞ்ச”ன்னு சொன்னேன். அப்புறம் இரண்டு மூணு மாசத்துக்கு பிறகு தான் ஒங்க வூட்டுக்கு வந்தது”

“ஞாபகம் வருது ஆயா நீ சாப்புடு, கூடதான் முடிஞ்சுடும் போல இருக்கு”

“ஆமாம் ஆயி கை செத்து போச்சுன்னு நினைச்சேன்  30 வருச பழக்கம் இல்ல எனக்கு அதான் பூக்கூடையா பிடி வச்சி செய்யறேன் அழவா பாந்தமா இருக்கு”

“ஆயா சாப்பிட்டு பேசு”

“மகராசி கொண்டா நான் இருந்து சாப்புட்டு பூரா கதையும் சொல்லிட்டு போறேன்”

“கத்திரிக்காய் போட்ட நெத்திலி கொழம்பு வச்சிருக்கேன், சாப்பிடு”

“கொண்டா ஆயி பொன்னாயா ருசிய பார்க்கனும் அதுக்கு தான் வந்ததே”

“நானும் சாப்பாடு எடுத்துட்டு வரேன் ஆயா”

“… ம் சொல்லு ஆயா”

“நீ பார்த்தன்னு சொன்னிய அப்பத்தான் பின்னாடி உங்க ஊட்டு குளத்தில இவரு விராலு மீனு ரெண்டு குத்துனாரு நான் தான் ஆஞ்சு கொடுத்தேன். பொன்னாயா வச்சிருந்தது பாரும்மா கொழம்பு அப்படி ஒரு ருசி அது உன்கிட்டேயும் இருக்கு ஆயி”

“அது வேற ஒன்னும் இல்ல ஆயா திட்டமா உப்பு உறப்பு போடரதுதான் சில பேர் திரும்ப திரும்ப பார்த்து போடுங்க அதான் வித்தியாசம். ஆயா நல்லா கூச்சப்படாம சாப்பிடு உன் ஊடு இது எப்ப வேணும்னாலும் வா போ.

“இந்தா இந்த புடவையை நீ கட்ட மாட்ட உன் மகளுக்கு கொடு”

“ஏன் ஆயி, புதுசாருக்கு…”

“‘ஆமாம் ஆயா உம் பொண்ணுக்கு எங்கூட்டு சீதனம்தான்”

“அப்படியே பொன்னாயா கொணம் ஆயி உனக்கு”

“சரி சொச்ச கதையும் சொல்லு”

“எந்த கதைய கேட்கற?”

“விராலு மீனு கொழம்பு சாப்ட்டிய..”.

“ஆமாம் தாயி ஒரு வாரம் தொடர்ந்து வந்து தங்கி வேலை செஞ்சோம். பொன்னாயா எங்கள கூலி நெல் அள்ள அளக்க என்று மூன்று மரக்கால் ஆறு மரக்கால் என்று  பல அளவுகளில் கூடைவ செய்ய சொல்லுச்சு. வாசல்ல மாமரம் இலுப்பை மரம் இருந்தது”

“ஆமாம் ஆயா திண்ணைல பொன்னாயா மடில படுத்துகிட்டு கதை கேப்போம். மரத்து மேல மினுக்கெட்டாம் பூச்சிவ மினுக்கி பறக்கும்”

“ஆயி அதுல பழந்தின்னி வவ்வால் வந்துச்சுவல்லா இவரு சும்மா இல்லாம அத சுட்டுப்பிட்டாரு. காலையிலே பொன்னாயா எங்கள கூப்ட்டு 100 ரூபாய் பணத்தை கொடுத்து போய் கூட மொரம் யாவாரம் பண்ணி ஒப்பனாட்டம் கெளரமா பொழைச்சுக்க சாப்ட்டு இரண்டு பேரும் கிளம்புங்க,” அப்படின்னு சொல்லுச்சு. அப்ப படி அரிசி 2 ரூபாய் வித்த காலம். இவரு பணத்தை அப்படியே சாமி படத்துக்கு பின்னாடி வை பிறகு பாப்பும்னு\ட்டாரு”

“சாப்பாட்டுக்கு என்ன செஞ்சிங்க ஆயா?”

“அட நீ வேற ஆயி இரண்டு வயிறு சோத்துக்கா பஞ்சம்? கொன்னா பாவம் தின்னா தீரும் கிளம்புடிம்பாரு. ராத்திரி ஆகாரத்த முடிச்சுட்டு துப்பாக்கி எடுத்து தோளில் மாட்டுவாரு நான் பைய மாட்டிப்பேன் வேட்டைக்கு”

“ம்ஹும் நீயுமா ஆயா?”

“ஆமாம் ஆயி. கைல ஆளுக்கொரு கழி. மறுநாள் எங்க சந்தைன்னு பார்ப்போம். சைக்கிள எடுத்து கிளம்புவோம். நான் பின்னாடி உக்காந்துடுவேன். புவனகிரி சந்தையா இருந்தால் சாத்தப்பாடி ஏரி பக்கம் போவோம். சேத்தியாதோப்பா இருந்தா வீராணம் ஏரி. பரங்கிப்பேட்டைய இருந்தா பிச்சாவரம் காடு பக்கம் விளைச்சல் நாள்ல வயகாட்டுல  காட்டுப்பூனை வேட்டைக்கு போவோம். ஏதாவது மாட்டும் சம்பு கோழி,உடும்பு, கௌதாரி காட்டு முசலு, நீர்க்கோழி, நாரை காட்டுப்பூனை வித்து காசாக்கி வீட்டுக்கு வருவோம். நான் சோறாக்குவேன். ஒரு கலயம் கள்ள வாங்கிட்டு வந்து வச்சிட்டு கறிய அவருதான் வைப்பாரு. ரெண்டு பேரும் குடிச்சு சாப்ட்டு படுத்தோம்னோ பொணம் மாதிரி கிடப்போம்”

“குடிக்க வேற செய்வியா நீ?’

“இல்ல ஆயி கள்ளு உடம்புக்கு நல்லதுல்ல, அத சின்னப் புள்ளயில குடிப்போம் அதான்”

“சரி சரி மேல சொல்லு”

“இப்படியே காட்ல மோட்லன்னு இரண்டு வருசம் போச்சு. ஒரு நாள் கன்னி வச்சு கௌதாரி புடிச்சுருந்தொம் 4 ஜோடிவோ காலக்கட்டி கூண்டுல போட்டு வயலூருக்கு நேர் வாய்க்கால் உள்ளேருந்து ரோடு ஏர்றோம், கூண்டு வண்டி வந்து நிக்கிது. ரெண்டு பேரும் கையும் களவுமா பொன்னாயா கிட்ட மாட்டிகிட்டோம்”

“நினைச்சன் ஆயாகிட்ட மாட்னிங்களா!”

“சொச்சத்தையும் கேளு ஆயி”

“ம்ம் சொல்லு, சொல்லு”

“பொன்னாயா ஏய் கலியான்னுச்சு. இந்த குருவி எவ்வள காசுடான்னாச்சு அவரு வாய தொரக்கல என்ன எவ்வளவு காசிடின்னிச்சு நானும் வாய தொரக்கல மஞ்சப் பையிலேருந்து 100 ரூபாய் எடுத்தது “முதல்ல அத பூரா அவுத்து வுடு”

“ஆளுக்கொன்னா அவத்து வுடறோம். சடசடன்னு பறந்தத வர சனம் எல்லாம் பார்க்குது.  “புள்ளைவோ இருக்கா?”

“இரண்டு பேரும் திருடி மாட்டின சின்னப்பிள்ளைவோ மாதிரி தல ஆட்ரோம், இல்லைன்னு.

“”எப்படி இருக்கும்? இரண்டு பேரும் தாயில்லா பிள்ளைங்க அதான் இப்படி பண்றீங்க. அதுவோ குஞ்சுவோ என்னாவும்? உங்களவிட தாண்டி கஷ்டப்படாது? இந்த காச எடுத்துட்டு போயி உங்களுக்கு தெரிஞ்ச கூடை மொரம் பின்னி பொழைங்க” ன்னுச்சு.

“”திரும்பச் சொல்றேன் கேளுங்க, நல்ல மாட்டுக்கு ஒரு சூடுதான். ஓட்டுப்பா வண்டிய”ன்னு போயே சேர்ந்துடுச்சு. ஊரு சனமே தெவச்சு பார்க்குது”

“அப்புறம் ஆயா?”

“அப்புறம் என்ன, குறவன் சாவற வரைக்கும் வேட்டைக்கே போவல. கூட மொரம் பின்னி வித்துதான் சாப்பிட்டோம் அப்புறம் நாலு வருசம் சென்னுதான் இங்கே கட்டிக்கிட்ட பொட்டப்புள்ள பிறந்துச்சு”

“வேற புள்ள இல்லியா? வூட்டூகாரர் எப்படி செத்து போனாரு?”

“வேற புள்ளைவோ இல்லை. இரண்டு வருசமாவது அவரு செத்து. குள்ளஞ்சாவடி சந்தைக்கு யாவரத்துக்கு போயிட்டு திரும்புறோம். பெருமாத்துர் இறங்கி ஆத்த குறுக்கால தாண்டுனா ஒரு மைலு துலுக்கம்பாளையம் அடுத்தது தாழம்பேட்டை ஆத்தங்கரையில தான் ஊடு. “நீ முன்ன போயி உள்ள வையி புள்ள, நான் குவார்ட்டர் வாங்கிட்டு வரேன்”னாரு சூரியன் கரகரன்னு கீழே இறங்குது சரி நேரத்த போயி விளக்கு வைப்போம்,னு நடையை எட்டிப்போட்டு போயிட்டேன். விளக்கு வச்சிட்டு அடுப்புல உளைய வச்சிட்டு சுடுதண்ணி போடுமுன்னு ஈயப் பானைல பைப் தண்ணி அடிக்கிறன், “ஆண்டாளு ஆண்டாளு போனு வந்துருக்கு, ஓடியா ஒடியா”ங்கறாங்க.

“”என்னன்னு சொல்றது எல்லாம் விதி மனச தேத்திக்க”ங்கறாங்க. “சொல்லுங்க சொல்லுங்க,”ங்கறேன், “கலியன் ஏமாத்திட்டு போயிட்டான்”ங்கறாங்க. அப்படியே இடிஞ்சு போயிட்டேன்

“எப்படி ஆச்சுன்னு கேக்கறேன். போதைல தடுமாறி ஆத்துல முட்டி தண்ணியில்ல விழுந்ததுதான் தலை தூக்க முடியல அப்படியே கிடந்து அடங்கியிருக்கு. மையிருட்டு நேரம் யாரும் பார்க்கல. பிறகு வந்தவங்க பாத்துப்புட்டு வூட்டுக்கு போன் பண்ணிசொல்லிட்டு தூக்கி வந்தது.

“நீ யான் அழுவுற ஆயி, நானே அழுவுல பாரு… கிடக்கு வுடு தாயி, எல்லாம் பிளாஷ்டிக் கூட மொரத்தால வந்ததுதான். நாலு அஞ்சு வருஷமாவே நல்ல யாவாரம் இல்ல ஆயி. அதான் அதிகமா குடிச்சு போயி சேர்ந்துட்டாரு. சாவமோது 62 வயசு. என்ன விட பத்து வயசு மூத்தவரு. ஏன் கதைதான் என்னாவுமுன்னு தெரியல. மகளும் மருமகனும் மெட்ராஸ் போவுதுவோ. வேலைக்கு என்னையும் கூப்டுதுவோ. எனக்கு வேற போக்கிடம் இல்ல ஆயி…

“இந்தா ஆயி இந்தக் கூடையப் புடி உன் கையில புள்ள குட்டியோடு என் பொன்னாயா மாதிரி நீயும் உன் குலமும் வாழனும்”

ஆயா கூந்தலைக் கொண்டையாக முடிந்து காதோரம் விழுந்த முடிகளை அள்ளிக் கொண்டையில் மறைத்துச் சொருகி தெருவில் இறங்கி நடந்தாள்

இவள் திகைத்து கிழவியை பொன்னாயாவாகவே பார்த்தாள் ….