Author: பதாகை

வண்ணக்கழுத்து 17உ: லாமாவின் மெய்யறிவு

மாயக்கூத்தன்

gay_neck_the_story_of_a_pigeon

இங்கு கோண்ட் வேறொரு தந்திரம் செய்தார். எதிர்த்திசையில், வெவ்வேறு மரங்களுக்கு இடையே வளைந்து நெளிந்து ஓடினார். காற்றினால் கொண்டு சேர்க்கப்படும் தன்னுடைய வாடை, அந்த எருதை அடையாமல் இருக்கவே அவர் அப்படிச் செய்தார். குழப்பமடைந்த போதும் அந்த எருது திரும்பி கோண்டைத் தொடர்ந்தது. மீண்டும் எங்கள் மரத்திற்கு கீழே கிடந்த கோண்டின் துணி மூட்டையைக் கண்டது. எருதை அது இன்னும் வெறியடையச் செய்தது. முகர்ந்து பார்த்துவிட்டு, தன் கொம்புகளால் அவற்றைக் கலைத்தது.

இப்போது கோண்ட் காற்றின் கீழ்த்திசையில் இருந்தார். என் பார்வைக்கு அவர் தெரியாத போதும், மரங்கள் ஒருவேளை அந்த எருதினை அவர் பார்வையிலிருந்து மறைத்திருந்தாலும் கூட அதன் வாடையைக் கொண்டே அவர் எருதின் இடத்தைச் சொல்லிவிடுவார் என்று நான் ஊகித்தேன். கோண்டின் துணிகளுக்கு ஊடே தன் கொம்புகளைச் செலுத்திக் கொண்டே அந்த எருது மீண்டும் முக்காரம் போட்டது. அது சுற்றியிருந்த மரங்களில் பயங்கரமாக அமளி துமளிப்பட்டது. எங்கிருந்தோ குரங்குக் கூட்டங்கள் கிளைவிட்டுக் கிளை தாவி ஓடி வந்தன. அணில்கள் சுண்டெலிகளைப்போலே ஓடி மரத்திலிருந்து காட்டின் தரையில் இறங்கி, பின் மீண்டும் மரத்திற்கே சென்றன. மேலே பறந்து கொண்டிருந்த ஜேக்கள், நாரைகள், கிளிகள் போன்ற பறவைக்கூட்டங்கள், காக்கைகள், ஆந்தைகள் மற்றும் பருந்துகளோடு க்றீச்சிட்டன.

திடீரென்று அந்த எருது மீண்டும் தாக்க விரைந்தது. கோண்ட் அமைதியாக அதன் முன்னால் நின்று கொண்டிருப்பதைக் கண்டேன். அமைதியைப் போலே அமைதியாக இருக்கும் ஒரு மனிதனை நான் பார்த்தேன் என்றால் அது கோண்ட் தான். அந்த எருதின் பின்னங்கால்கள் துடித்து வாட்களைப் போலே பறந்தன. பிறகு என்னவோ நடந்தது. அது பின்னங்கால்களை ஊன்றி காற்றில் மேலே எழுந்தது. அதன் கொம்பில் இறுக்கப்பட்டு எங்கள் மரத்தில் கட்டப்பட்டிருந்த சுருக்குக் கயிற்றால் தான் அது மேலெழுந்தது என்பதில் சந்தேகமே இல்லை. தரையிலிருந்து பல அடி உயரம் எழுந்து, பின் விழுந்தது. அந்த நொடியில், ஒரு சிறுபிள்ளையால் உடைக்கப்பட்ட மரக்குச்சி போலே, அதன் கொம்பு முறிந்து காற்றில் பறந்தது. அந்த முறிவு கட்டுப்படுத்த முடியாத வேகத்தை உண்டு பண்ணி, எருமையை ஒரு பக்கமாக தரையில் எறிந்தது. படபடவென்று கால்கள் காற்றை மிதிக்க, அது கிட்டத்தட்ட உருண்டது. அந்த நொடியில், சிக்கிமுக்கிக் கல்லிலிருந்து வரும் தீப்பொறியைப் போலே கோண்ட் முன்னால் குதித்தார். அவரைப் பார்த்தவுடன், அந்த எருமை தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டு, தன் பிட்டத்தில் உட்கார்ந்து, பெருமூச்செறிந்தது.

எழுந்து நிற்பதில் கிட்டத்தட்ட வெற்றியடைந்துவிட்டது. ஆனால், தன்னுடைய பட்டக்கத்தியால் கோண்ட் அதன் தோளுக்குப் பக்கத்தில் தாக்கினார். அதன் கூர்மையான முனை ஆழமாக வெட்டியது. தன்னுடைய மொத்த எடையையும் கொண்டு அதை அழுத்தினார் கோண்ட். எரிமலை வெடிப்பதைப் போலே ஒரு முக்காரம் காட்டை உலுக்கியதோடு, திரவ மாணிக்க ஊற்று பீச்சியடித்தது. அதற்கு மேலும் காணச் சகியாது நான் என் கண்களை மூடிக் கொண்டேன்.

சில நிமிடங்களில் என் இடத்திலிருந்து நான் கீழிறங்கி வர, அந்த எருமை ரத்தப்போக்கால் செத்துப்போய் விட்டதைக் கண்டேன். ஆழமான ரத்தக் குளத்தில் அது கிடந்தது. அதற்குப் பக்கத்தில் தரையில் உட்கார்ந்து கோண்ட், தன் செயலால் தன் மேல் படிந்திருந்த கறையை துடைத்துக் கொண்டிருந்தார். அவர் தனித்து இருப்பதையே இப்போது விரும்புவார் என்பதை நான் அறிவேன். ஆக, நான் முன்பிருந்த மரத்திற்குச் சென்று வண்ணக்கழுத்தை அழைத்தேன். ஆனால், அவனிடமிருந்து பதிலேதும் இல்லை. அந்த மரத்தில் உச்சிக் கிளை வரைக்கும் ஏறிப் பார்த்துவிட்டேன். ஆனால் அவன் அங்கு இல்லை.

நான் கீழே இறங்கி வந்தபோது, கோண்ட் தன்னை சுத்தம் செய்து முடித்திருந்தார். அவர் வானத்தை நோக்கி கை காட்டினார். இயற்கையின் தோட்டிகளை நாங்கள் கண்டோம். பருந்துகள் கீழேயும் அவற்றுக்கு வெகு மேலே பிணந்தின்னிக் கழுகுகளும் பறந்தன. யாரோ இறந்துவிட்டார்கள் என்றும் தாங்கள் காட்டைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று அவை அதற்குள் தெரிந்து கொண்டிருந்தன.

”நமது புறாவை மடாலயத்தில் தேடுவோம். சந்தேகமே இல்லை, அவன் மற்ற பறவைகளோடு பறந்து போய்விட்டான்” என்றார் கோண்ட். ஆனால் வீடு நோக்கி கிளம்புவதற்கு முன், இறந்த எருமையை அளக்கச் சென்றேன். அதை நோக்கி ஒவ்வொரு திசையிலிருந்தும் ஈக்கள் படையெடுத்துக் கொண்டிருந்தன. அந்த எருமை பத்தரை அடி நீளம் இருந்தது. அதன் முன்னங்கால்கள் மூன்று அடிக்கும் மேலே இருந்தன.

மடாலயத்திற்கு திரும்பிச் செல்லும் எங்கள் பயணம் மெளனமாகவே இருந்தது. பாதிக்கப்பட்ட அந்த கிராமத்திற்குச் சென்று, அதன் தலைவரிடம் அவர்களின் எதிரி இறந்துவிட்டது என்பதை நண்பகல் பொழுதில் சொன்ன போது மட்டுமே மெளனம் கலைந்தது. முன்தின மாலையில், சூரிய அஸ்தனமனத்திற்கு முன் பிரார்த்தனைக்காக கோவிலுக்குச் சென்ற அவரது வயதான தாயாரை அந்த எருமை கொன்றிருந்ததால் அவர் துக்கத்தில் இருந்த போதும், இதைக் கேட்ட போது அவர் நிம்மதியடைந்தார்.

நாங்கள் மிகவும் பசியில் இருந்தோம், வேகமாக நடந்தோம். சீக்கிரமே மடாலயத்தை அடைந்துவிட்டோம். உடனே எனது புறாவைப் பற்றி விசாரித்தேன். வண்ணக்கழுத்து அங்கு இல்லை. மிகவும் துக்கமாக இருந்தது. அவருடைய அறையில் பேசிக் கொண்டிருந்த போது அந்த வயதான துறவி “கோண்ட், உங்களைப் போலவே அவனும் பத்திரமாக இருக்கிறான்” என்றார். பல நிமிட மெளனத்திற்குப் பிறகு, “எது உனது மன நிம்மதியைக் குலைக்கிறது?” என்று கேட்டார்.

அந்த வயதான வேடுவர் தான் சொல்லப்போவதை அமைதியாக யோசித்தார். “ஒன்றுமில்லை குருவே. எதைக் கொல்வதையும் நான் வெறுக்கிறேன். நான் அந்த எருதை உயிருடன் பிடிக்கவே விரும்பினேன். ஆனால் ஐயோ! நான் அதை அழிக்க வேண்டி வந்துவிட்டது. அதன் கொம்பு உடைந்த போது, எனக்கும் அதற்கும் இடையில் எதுவுமே இல்லை. ஒரு முக்கிய நரம்பில் எனது கத்தியைச் செருக வேண்டியதாகிவிட்டது. அவனை உயிருடன் பிடித்திருந்தால் ஒரு மிருகக்காட்சி சாலைக்காவது விற்றிருக்கலாமே என்று நான் வருந்துகிறேன்.”

”ஓ! வணிகவியலின் ஆன்மாவே!” என்று நான் கூவினேன். “அந்த எருது இறந்தது பற்றி நான் வருந்தவில்லை. மிச்ச வாழ்க்கை முழுவதும் மிருக்க்காட்சி சாலையில் ஒரு கூண்டில் இருப்பதைவிட செத்துப்போவதே நல்லது. சவ வாழ்க்கை வாழ்வதற்கு சாவே மேல்.”

“நீ மட்டும் சுருக்குக் கயிற்றை இரண்டு கொம்புகளிலும் போட்டிருந்தாயானால்” என்று கோண்ட் ஆரம்பித்தார்.

“நீங்கள் இரண்டு பேரும் வண்ணக்கழுத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். செத்துப் போன ஒன்றைப் பற்றியல்ல” என்று அந்த லாமா சத்தம் போட்டார்.

”உண்மை தான். நாளை அவனைத் தேடுவோம்” என்றார் கோண்ட்.

அதற்கு லாமா பதில் சொன்னார் “இல்லை. டெண்டாமுக்குத் திரும்பு என் மகனே. உங்கள் குடும்பம் உங்களைப் பற்றிய கவலையில் இருக்கிறது. அவர்களுடைய எண்ணங்கள் எனக்குக் கேட்கின்றன.”

அடுத்த நாள் நாங்கள் ஒரு ஜோடி குதிரையில் டெண்டாமுக்குக் கிளம்பினோம். விரைவான பயணத்தாலும், வெவ்வேறு இடங்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை குதிரைகளை மாற்றிக் கொண்டதாலும் மூன்றே நாட்களில் டெண்டாமை அடைந்துவிட்டோம். எங்கள் வீட்டை நோக்கி மேலே போகும் போது, மிகுந்த உற்சாகத்தில் இருந்த எங்கள் வீட்டு வேலைக்காரரை எதிர் கொண்டோம். மூன்று நாட்களுக்கு முன்னரே வண்ணக்கழுத்து வந்துவிட்டதாக அவர் சொன்னார். ஆனால் அவனுடன் நாங்கள் இருவரும் வரவில்லை என்பதால் என் பெற்றோர் கலவரப்படத் துவங்கி, எங்களை உயிருடனோ பிணமாகவோ தேடிக் கண்டெடுக்க குழுக்களை அனுப்பி வைத்திருந்தார்கள்.

கோண்டும் நானும் என் வீடு நோக்கி கிட்டத்தட்ட ஓடினோம். அடுத்த பத்து நிமிடத்தில் என் அம்மாவின் கைகள் என்னைச் சுற்றியிருந்தன. அவனுடைய கால்கள் என் தலையில் இருக்க, வண்ணக்கழுத்து தன்னை சமநிலையில் இருத்திக்கொள்ள தன் இறக்கைகளை அடித்துக் கொண்டிருந்தான்.

வண்ணக்கழுத்து ஒரு வழியாக பறக்கத் துவங்கிவிட்டான் என்பதைப் கேட்டபோது நான் அடைந்த உற்சாகத்தைச் சொல்லத் தொடங்கினால் நிறுத்த முடியாது. மடாலயத்திலிருந்து டெண்டாமில் எங்கள் வீடுவரைக்கும் அவன் பறந்து வந்திருக்கிறான். தடுமாறவில்லை,. தோற்றுப் போகவும் இல்லை. “ஓ! பறத்தலின் ஆன்மாவே, புறக்களுக்கு மத்தியில் ஒரு முத்தே” என்று நானும் கோண்டும் விரைந்து நடக்கும் போது வியந்து கொண்டேன்.

இப்படி முடிந்தது சிங்காலிலாவிற்கான எங்கள் யாத்திரை. வண்ணக்கழுத்தையும் கோண்டையும் போர்க்களத்தில் பீடித்திருந்த நோய்களான பயத்தையும் வெறுப்பையும் இந்த யாத்திரை குணப்படுத்திவிட்டது. வாழ்வின் மிகக் கொடிய இந்த நோய்மைகளிலிருந்து ஒரு ஆன்மாவையேனும் மீட்குமெனில் அதற்கான எந்தவொரு உழைப்பும் வீண் இல்லை.

இந்தக் கதையின் இறுதியில் ஒரு உபதேசத்தைச் சொல்வதற்கு பதிலாக நான் இதைச் சொல்கிறேன்,

“நாம் எதை யோசிக்கிறோமோ, எதை உணர்கிறோமோ அதன் சாயல் நமது வாக்கிலும் செயலிலும் படியும். பிரக்ஞையற்ற நிலையில் கூட ஒருவன் பயப்பட்டாலோ அல்லது அவனுடைய சிறிய கனவு கூட வெறுப்பில் தோய்ந்திருந்தாலோ, விரைவிலோ அல்லது பின்னரோ, அவனால் இந்த இரண்டு குணங்களையும் தன் செய்கையில் வெளிப்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்று. ஆக, என் சகோதரர்களே, துணிவோடு வாழுங்கள், துணிவைச் சுவாசியுங்கள், துணிவே அளியுங்கள். அன்பை தியானிப்பதன் மூலமும் அன்பை உணர்வதன் மூலமும், ஒரு மலர் வாசம் தருவதைப் போலே இயற்கையாகவே சமாதானமும் அமைதியும் உங்களிடமிருந்து பொழியும்.

“எல்லோருக்கும் அமைதி கிட்டட்டும்.”

(முற்றும்)

சீருடை

மு வெங்கடேஷ்

கொசுவத்தை நீவிவிட்டு வயிற்றை எக்கி செருகிக் கொண்ட பிறகு, மடிப்புக் கலையாமலிருக்க, அம்மா பற்களில் இடுக்கிக் கொண்டிருந்த ஊக்கை வைத்து மொத்த கொசுவத்தையும் சேர்த்து பிணைத்துக் கொண்டாள். உடலை அப்படி இப்படி திருப்பி புடவை சுற்றின் நேர்த்தியை பார்த்துக் கொண்டிருந்தவளிடம், மாரி மெதுவாக “அம்மா, பாவாடை தைக்கனும்மா. கிழிசல்ல ஊக்கை மாட்டிக்கிட்டு பள்ளியோடவத்துக்கு போ முடிலம்மா” என்றாள்.

“எல்லாம் பாத்துக்கலாம்டி. தம்பி இப்ப வந்திருவான். ஏதாச்சும் இட்லி கிட்லி வச்சுக் கொடு. வெளயாடிட்டு உள்ள வரும்போதே பசி பசின்னு பறப்பான். நான் மேலத் தெருவரை போயிட்டு வந்திடறன். சரசு பொண்ணுக்கு சடங்கு வச்சிருக்காளாம்”

அம்மாவின் பதில் மாரியை பெரிதாக பாதிக்கவில்லை. முத்து பிறந்தபோது அவளுக்கு ஒன்பது வயது. இரண்டாவதாவது ஆண் பிள்ளையாக இருக்க வேண்டுமென ஐயம்மாள் பட்ட பாடுகள் மாரிக்கு அத்துப்படி. போகாத கோவில் இல்லை. வேண்டாத தெய்வம் இல்லை. கடைசியாக குலதெய்வம் முத்துமாரிக்கு பால்குடம் எடுப்பதாக மாரி வேண்டிப் பிறந்தவன்தான் முத்து. அம்மா, அப்பா பிரார்த்தித்ததை விட தம்பி வேண்டுமென்று மாரி பிரார்த்தித்தது அதிகம். பக்கத்துக்கு வீட்டு ஆயிஷா அக்கா மகள் நஸ்ரினுக்கு ஒரு தம்பி இருக்கிறான், அதனால் தனக்கும் ஒரு தம்பி வேண்டும் என்ற ஏக்கம். அதனால்தானோ என்னவோ மாரிக்கு தம்பி மேல் அவ்வளவு வாஞ்சை.

மாரி, ஊரிலிருக்கும் அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தாள். படிப்பதென்பதோ எட்டாம் வகுப்பு, பாதி நாட்கள் பள்ளிக்குச் செல்வதே இல்லை. தம்பியைப் பார்த்துக் கொண்டு அவனுடன் விளையாடுவதிலேயே நேரத்தைச் செலவழித்தாள். அம்மா தம்பியை வளர்த்ததை விட இவள் வளர்த்ததுதான் அதிகம். சோறூட்டுவது முதல் தாலாட்டித் தூங்கவைப்பது வரை. அவளைப் பொறுத்தவரை இவ்வுலகத்தில் சிறந்த இடம் தன் வீடு, சிறந்த மொழி தம்பி பேசும் மழலை மொழி, சிறந்த விளையாட்டு தம்பியுடன் விளையாடுவது. மொத்தத்தில் அவள் உலகமே தம்பிதான். அவன் கைக்குழந்தையாக இருந்த போதிலிருந்தே, பால் கரைத்து கொடுப்பதாகட்டும், கஞ்சி வச்சுக் கொடுப்பதாகட்டும், எல்லாமே மாரிதான். “ரோ ரோ ரோ ரோ ரோ….. இந்தா அக்கா வந்துட்டேன் பாரு, அழக்கூடாது. எங்க ராசால்லா, எங்க ஐயால்லா. என்னைக்கு எங்க ஐயா ரெண்டு இட்லி திண்ணு ஒரு கிளாசு காபி குடிக்காரோ அன்னைக்குத் தான் எனக்கு நிம்மதி” என்று கொஞ்சியபடி பார்த்து பார்த்து செய்வாள்.

மாரியுடன் பக்கத்து வீட்டு நஸ்ரினுக்கு எப்போதுமே போட்டிதான். அனைத்து விளையாட்டிலும் நஸ்ரினைத் தோற்கடித்துவிடும் மாரி, தம்பி விளையாட்டில் மட்டும் தோற்றுக் கொண்டிருந்தாள். ஆனால் தம்பி பிறந்தபின் அதிலும் போட்டி போடுவாள். தனக்கும் ஒரு தம்பி இருக்கிறான் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வாள். வருடா வருடம் பொங்கல் பண்டிகையன்று ஊரில் நடக்கும் “உப்பு மூட்டை” போட்டியில் தம்பியைத் தூக்கிக் கொண்டு ஓடும் மாரி தொடர்ச்சியாக மூன்று முறை வென்றாள். தம்பியைத் தூக்கிச் சுமப்பது அவளுக்கு சுகமாகவே இருந்தது.

சரசு வீட்டிலிருந்து வந்த அம்மாவிடம், “எம்மா, தம்பிய ஸ்கூல்ல போடனும்னிட்டிருந்தியே, இங்கிலீசு மீடியத்திலதானேம்மா” என்று ஆரம்பித்தாள். கொஞ்ச நாட்களாக இந்த இங்கிலீஷ் மீடியம் பேச்சு அம்மாவுக்கும் மகளுக்கும் இடையே ஓடிக்கொண்டிருந்தது.

“ஏட்டி கூறு கெட்ட கழுத நமக்கெதுக்குடி அதெல்லாம்?” என்று அம்மா மீண்டும் மறுக்க ஆரம்பித்தாள்.

“எம்மா நீ செத்தப் பேசாம இரேன், இப்போ அதான் பேசன். பக்கத்து வீட்டு ஆயிஷா அக்காகூட அவுக ரெண்டு புள்ளைகளையும் அங்கதான் சேத்து விட்ருக்காம். தெரியுமா ஒனக்கு?”

“அது சரி, பேசனாம்லா பேசனு, வாரியக் கட்ட பிஞ்சிரும் பாத்துக்கோ. ஏழு கழுத வயசாவுது, பொட்டப் புள்ளைக்கு கொஞ்சமாது வீட்டு வனவருத்தம் தெரிய வேணாம்? பக்கத்து வீட்டு ஆயிசா புள்ளைங்கள சேத்துருக்கான்னா அவா புருசன் துபாய்ல இருந்து கத்த கத்தயா அனுப்புறாரு. அதுக இங்கிலீசு பள்ளிக் கூடத்துக்குப் போயி படிக்குங்க. உங்க அப்பா என்ன துபாய்லயா இருக்காரு? இல்ல பணம்தான் நம்ம வீட்டு மரத்துல காய்க்கா? இந்த பேச்ச இதோட விட்ரனும் பாத்துக்கோ. நானாது பரவாயில்ல ஏச்சோட விட்டேன், உங்க அப்பாக்கு தெரிஞ்சுச்சுன்னா கொன்னே போட்ருவரு பாத்துக்கோ” என்று ஏசினாள்.

“எம்மா நா என்ன என்னியவா சேத்து விடச் சொல்றேன். தம்பியத்தான சேக்கச் சொல்றேன்,” என்று மாரியும் விடுவதாக இல்லை. “அதெல்லாம் சரிதான் ஆனா உங்க அப்பாட்ட யாரு சொல்றது?” என்று அம்மா இழுக்க, “நீதான்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் மாரி. “சரி, பாப்போம், மனுசன் என்ன சொல்றார்னு,” என்று சொல்லிவிட்டு அம்மா தூங்கப்போக, மாரி மனதிற்குள் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டாள்.

மாரிக்குத் தன் தம்பியை எப்படியாவது இங்கிலீசு மீடியத்தில் சேர்த்து விட வேண்டுமென்ற ஆசை. அதற்காக அப்பாவிடமும் சென்று பேசினாள். “எப்பா எப்படியாது தம்பிய இங்கிலீசு மீடியத்துல சேப்பும்பா, எனக்கு இந்த வருசம் புதுத் துணிகூட வேணாம்பா. தம்பிக்கு மட்டும் கரார் கடைக்குப் போயி நல்ல துணி வாங்குவோம். எனக்கு அடுத்த வருசம் பாத்துக்கலாம்பா,” என்றாள்.

“ஏம்லா, பாவாட கிழிஞ்ச்சிருக்குன்னியே. புதுசு வேணாமா?” என்றார் அப்பா.

“அடுத்த வருசம் பாத்துக்கிடுவம்ப்பா.” அவளுடைய ஆர்வத்தைப் பார்க்க அப்பாவிற்கே ஆச்சரியமாக இருந்தது.

முதல் நாள் மாரி தம்பியைப் பள்ளிக்குக் கிளப்பிக் கொண்டிருந்தாள். தலைசீவி, பொட்டு வைத்து.

“அடியே மாரி என்னட்டி இது கோட்டிக்காரத்தனம்? ஆம்பள புள்ளைக்குப் போயி பொட்டு வச்சிக்குட்டு?” பக்கத்துக்கு வீட்டு வேணி அத்தை வந்தாள்.

“நீ ச்சும்மா கெடத்த, எந்தம்பிக்கு நா பொட்டு வப்பேன், பூ வப்பேன் ஒனக்கு ஏன் இப்படி பொத்துக்குட்டு வருது?”

“எம்மாடி நீ ஒந்தம்பிக்கு என்னத்தையும் வைம்மா. எனக்கு என்ன வந்துச்சு?” என்று அவள் கோபித்துக் கொள்ள, “அப்படிச் சொல்லீட்டுப் போவியா பேசாம? வந்துட்டா அங்கேருந்து வாய இம்புட்டு நீளம் வச்சிக்கிட்டு” என்றாள் மாரி.

“ஒன் ஆட்டமெல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான, பாக்கத்தான போறோம். அரசங்காட்டுலேந்து ஒம்மாமன் பரிசம் போட வந்திட்டே இருக்கானாம்டி. சொடலமாடனுக்கு சோடி போட்டது போல வருவான் பாரு” என்று சொல்லிவிட்டுச் சென்றாள் வேணி அத்தை.

மாரிக்கும் தெரிந்த விஷயம்தான். அடுத்த வருச முத்துமாரி கொடை முடிஞ்சதும் பேசி முடிச்சுப்புட வேண்டுமென ஐயம்மாள் துடித்துக் கொண்டிருந்தாள். “பொட்டப்புள்ளய பொழுதோட கட்டி வச்சிப்புடனும். மாசத்துக்கொண்ணுன்னு ஒர்த்தி குத்த வச்சிடறாளுக. அப்புறம் மாப்பிள்ள தேடி நம்மாள ஆகாது. முருகைய்யனுக்கு என்னா கொற. மொத்த ஜில்லாவும் அவனக் கண்டா மெரண்டு நிக்கும். இவள ராணி போல பாத்துக்கிடுவான்” மாரியைப் பற்றிய முடிவுகளில் மாரியை யாரும் கலந்து கொள்வதில்லை.

வேணி அத்தை இந்தப் பக்கம் போனதும் பக்கத்து வீட்டு சங்கரன் தாத்தா வந்தார்.

“இது என்னட்டி கூத்தா இருக்கு, வெள்ளக்காரத் தொரகணக்கா? சூவு, சாக்சு, கழுத்துல என்னது தொங்கீட்டு? மூக்கு வடிஞ்சா தொடைக்குறதுக்கா?”

“ஏ தாத்தா அது டையி, இதெல்லாம் ஒனக்கு எங்க தெரியப் போவுது? முன்னப்பின்ன பள்ளிக்கூடம் பக்கம் போயிருந்தாத்தான? பாரேன் இவன் பெரிய டாக்டர் ஆயி, நீ காச்சல்னு வந்து நிக்கும்போது பிட்டியில பெரிய ஊசியா போடச் சொல்றேன்”

“அடியாத்தி இவ ஏன் இந்த வரத்து வாரா. இன்னும் தொர பள்ளிக்கூடத்துக்கே போவல அதுக்குள்ளயும் டாக்டர்ங்கிறா இன்ஜினீயர்ங்கிறா,” என்று சொல்லிக் கொண்டே தாத்தா தான் வைத்திருக்கும் மூக்குப் பொடியை எடுத்து சற்று உறிஞ்சிக்கொண்டுச் சென்றார்.

ஒவ்வொருவரையும் பேசி சமாளிப்பதென்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை மாரிக்கு. ஒரு வழியாக அனைவரையும் சமாளித்து விட்டு பள்ளிக்கூடம் செல்லத் தயாரானார்கள். ”அடியே மாரி ஒனக்கும் தம்பிக்கும் ரெண்டு சம்படத்துல பழைய சோறும் ஊறுகாயும் வச்சிருக்கேன் பாரு. மறக்காம எடுத்துட்டுப் போங்க” என்று வீட்டினுள் இருந்து அம்மா ஞாபகப்படுத்தினாள். எரிச்சலடைந்த மாரியோ “எம்மா அவனுக்குப் போயி பழைய சோத்த குடுத்துட்டு? அந்த பிளாஸ்க்ல கொஞ்சம் பால காச்சி ஊத்து, நா போற வழில சூப்பர் கடைல ரெண்டு கூட கேக்கு வாங்கிக் குடுத்துக்குறேன்” என்று சொல்லி விட்டு ஒரு சம்படத்தை மட்டும் எடுத்து தன் பையில் திணித்துக் கொண்டாள்.

ஊரில் புதிதாகத் திறக்கப்பட்ட ஆங்கில வழி பள்ளிக்கூடம். அரசு பள்ளிகளையேப் பார்த்துப் பழகிய ஊருக்கு இது புது அனுபவம். குழந்தைகள் சூ, சாக்ஸ், டை அணிந்து வருவதை ஊரே கூடி நின்று வியப்பாகவும் வித்தியாசமாகவும் வேடிக்கை பார்த்தது. மாரியும் தன் தம்பியை அழைத்து வந்தாள், ஒருவித பெருமிதத்துடன். எதிரே தன் பிள்ளைகளுடன் வந்த ஆயிஷா அக்கா, “என்ன மாரி தம்பிய விட வந்தியா?” என்று கேட்க “ஆமாக்கா” என்று சொல்லி விட்டு வகுப்பறையை நோக்கி நடந்தாள். சுற்றியும் சிறுவர் சிறுமியர் புது சீருடையில் நின்று கொண்டிருந்தனர். வகுப்பறை வரை சென்று தம்பியை விட்டுவிட்டு மதியம் வந்து அழைத்துச் செல்வதாகச் சொன்னாள். உள்ளே நுழையும்முன், “எக்கா இந்த டை கழண்டு கழண்டு விளுது” என்றான் முத்து.

“அதெல்லாம் ஒன்னும் ஆவாது,” என்றவள் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு, பாவாடை கிழிசலை கோர்த்து மாட்டியிருந்த ஊக்கை கழட்டி டையை சட்டையோடு சேர்த்து போட்டுவிட்டாள். “இனி சாயந்திரம் வீட்டுக்குப் போறவர கழளவே கழளாது” என்று சொல்லி, டாட்டா காண்பித்தவாறே வாசலை நோக்கி நடந்தாள்- “இனி பெரிய படிப்பெல்லாம் படித்து, டாக்டராவோ இன்ஜினியராவோ தம்பி வந்துவிட மாட்டானா என்ன,” என்று நினைத்தபடி.

வண்ணக்கழுத்து

மாயக்கூத்தன்

எவ்வளவு நேரம் தூங்கினேன் என்றே தெரியவில்லை. ஒரு கொடுரமான முக்காரம் கேட்டு திடீரென்று நான் விளித்தேன். கண்களைத் திறந்த போது, எனக்கு முன்னமே விளித்திருந்த கோண்ட், என்னைச் சுற்றிக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்துவிட்டு கீழே பார்க்கும்படி சைகை செய்தார். விடியலின் மங்கிய வெளிச்சத்தில் முதலில் எதுவுமே எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஒரு கோபம் கொண்ட விலங்கின் முனகலும் உறுமலும் எனக்குத் தெளிவாகக் கேட்டது. வெப்ப மண்டலப் பிரதேசங்களில் விடியல் விரைவானது. நான் கீழே கூர்ந்து நோக்கினேன். இப்போது அதிகரித்து வரும் வெளிச்சத்தில் நான் கண்டேன்… நான் கண்டதில் இருவேறு கருத்துக்களே இருக்க முடியாது. ஆம், ஒளிரும் நிலக்கரிக் குன்று ஒன்று தன்னுடைய கரும் பக்கத்தால் நாங்கள் உட்கார்ந்திருந்த மரத்தை உரசிக் கொண்டிருந்தது. அதன் ஒரு பாதி முழுக்க இலைகளாலும் மரக் கிளைகளாலும் போர்த்தப்பட்டிருந்த போதும், அது ஒரு பத்து அடி நீளம் இருக்கக்கூடும் என்று நான் ஊகித்தேன். காலைச் சூரியன் பட்டு அந்த மிருகம், ஒரு உலையிலிருந்து வெளிவரும் கரிய அமுதக்கல்லைப் போல இருந்தது. ”இயற்கையில் காணும் எருமை ஆரோக்கியமாகவும் வாளிப்பாகவும் இருக்கிறது. மிருகக்காட்சிசாலையில் சடைதட்டிப் போன மயிர்களுடனும் அழுக்கான தோலுடனும் ஒரு அசிங்கமான மிருகமாகத் தெரிகிறது. அடைத்துவைக்கப்பட்டிருக்கும் எருமையைக் காண்பவர்கள் அது மிக அழகாக இருக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ளவும் முடியுமோ? ஐயோ பாவம் இந்த இளைஞர்கள். கடவுளின் படைப்புகளை, நூறு விலங்குகளை மிருக்காட்சி சாலையில் பார்பதற்கு சமமானதான ஒரு விலங்கை அதன் இருப்பிடத்தில் நேரடியாகக் காண்பதைவிட்டுவிட்டு, சிறைகளில் மிருகங்களைப் பார்த்து அவற்றைப் பற்றிய அறிவைப் பெற வேண்டியிருக்கிறது. சிறைகளில் இருக்கும் கைதிகளைக் கண்டு மனிதரின் தார்மீக நியாயங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியாத போது, எப்படி கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு மிருகத்தைப் பார்ப்பதைக் கொண்டே அதைப் பற்றி எல்லாமும் நாம் அறிந்து கொண்டுவிட்டதாக நம்மால் நினைக்க முடிகிறது?” என்று நான் நினைத்தேன்.

எப்படியோ போகட்டும். எங்கள் மரத்தடியில் இருந்த அந்தக் கொலைகார எருமையைப் பார்ப்போம். வண்ணக்கழுத்தை என் உடையிலிருந்து விடுவித்து மரத்தில் உலாவ விட்டுவிட்டு, நானும் கோண்டும் அந்த மரத்திலிருந்து ஏணிப்படிகளில் இறங்குவதைப் போல கிளைகளில் இறங்கி, அந்த எருமைக்கு இரண்டிக்கு மேலே இருக்கும் ஒரு கிளையை அடைந்தோம். கோண்ட் சுருக்குக் கயிற்றின் ஒரு முனைவை மரத்தண்டோடு விரைந்து கட்டியதை அது கவனிக்கவில்லை. கீழே போட்டிருந்த கோண்டின் உடைகளில் கிழிக்கப்பட்டிருந்தவற்றில் மிச்சமிருந்தவற்றை அந்த எருமை தனது கொம்புகளைச் செலுத்தி கீழே விளையாடிக் கொண்டிருந்ததை கவனித்தேன். அந்த உடைகளில் இருந்த மனித வாடையே அதனை ஈர்த்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அதனுடைய கொம்புகள் சுத்தமாக இருந்த போதும், அதன் தலையில் இன்னும் காய்ந்திராத ரத்தக் கறை இருந்தது. அந்த இரவில் மீண்டும் அந்த கிராமத்திற்குச் சென்று மற்றும் ஒருவரை அது கொன்றிருக்கிறது என்பது தெரிந்தது. அது கோண்டை உசுப்பிவிட்டது. ’இதை உயிருடன் பிடிப்போம். மேலிருந்து இந்தச் சுருக்குக் கயிற்றை அதன் கொம்புகள் மீது வீசு, என்று என் காதில் கிசுகிசுத்தார். ஒரு நொடிப்பொழுதில் கோண்ட், மரத்திலிருந்து அந்த எருமையின் பின் பக்கம் குதித்தார். அது அந்த மிருகத்தை மிரளச் செய்தது. அதன் வலது பக்கம் நான் முன்பு சொன்ன மரமும், இடப்பக்கம் நான் அமர்ந்திருந்த மரமும் இருந்ததால், அதனால் திரும்பி ஓட முடியவில்லை. அந்த இரட்டை மரங்களை விட்டு வெளியே போக வேண்டுமென்றால், அது முன்னே போகவேண்டும் அல்லது பின்னே போக வேண்டும். ஆனால், அது நடக்கும் முன்பாகவே நான் சுருக்குக் கயிற்றை அதன் தலை மீது வீசினேன். அந்தக் கயிறு அதன் மீது பட்டவுடன் ஏதோ மின்சாரம் பாய்ந்த்தைப் போல அது உணர்ந்தது. அந்தக் கயிற்றிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள மிக வேகமாக பின்னால் நகர்ந்தது. கோண்ட் முன்னரே அடுத்த மரத்தைச் சுற்றி நகர்ந்துவிட்டார், இல்லையென்றால் அது பின்னால் போன வேகத்தில், அதன் கூரிய கால் குளம்புகளில் சிக்கி நசுங்கி, வெட்டுப்பட்டு இறந்திருப்பார். ஆனால் இப்பொழுது நான் கண்டது எனக்கு பீதியைக் கொடுத்தது. இரண்டு கொம்புகளையும் சேர்த்து அடியில் இறுக்காமல் ஒரு கொம்பை மட்டுமே சுருக்குக் கயிற்றால் பிடித்திருந்தேன். அந்த நொடியே நான் கோண்டிடம் சீறினேன், “ஜாக்கிரதை! ஒரு கொம்பு மட்டுமே பிடிபட்டிருக்கிறது. அதிலிருந்தும் கூட கயிறு எந்த நொடியும் நழுவலாம். ஓடுங்கள்! ஓடி மரத்தில் ஏறிக் கொள்ளுங்கள்.”
ஆனால் அந்த துணிச்சல் மிகுந்த வேடுவன் எனது அறிவுரையை பொருட்படுத்தவில்லை. மாறாக, எதிரியைப் பார்த்தவாறு அருகிலேயே நின்றார். பிறகு அந்த முரட்டு மிருகம் தன் தலையை தாழ்த்து முன்னே பாய்வதைக் கண்டேன். பயத்தில் என் கண்களை மூடிக் கொண்டேன்.

நான் மீண்டும் கண்களைத் திறந்த போது, அந்த எருது அதன் கொம்பில் கட்டப்பட்டு, கோண்ட் பின்னே ஒளிந்து கொண்டிருந்த மரத்தை முட்ட முடியாமல் தடுக்கும் கயிற்றை இழுத்துக் கொண்டிருந்தது. அதன் பயங்கர முக்காரம் அந்த காடு முழுவதையும், பய ஒலிகளால் நிரப்பியது. பயத்தில் கிறீச்சிடும் பிள்ளைகளைப் போல ஒன்றன் பின் ஒன்றாக அதன் எதிரொலி எழுந்தது.

அந்த எருது அவரை அடைவதில் இன்னமும் வெற்றியடையவில்லை என்பதால், கோண்ட் தன்னுடைய ஒன்றரை அடி நீளமும் இரண்டு அங்குலம் அகலமும் கொண்ட சவரக்கத்தியைப் போலே கூர்மையான பட்டக்கத்தியை எடுத்தார். மெதுவாக வலப்பக்கம் இருக்கும் இன்னொரு மரத்துக்குப் பின் நழுவினார். பிறகு பார்வையிலிருந்து மறைந்துவிட்டார். அந்த எருது, கடைசியாக கோண்டை எங்கு பார்த்த்தோ அந்த இடத்தை நோக்கி நேராக ஓடியது. அதிர்ஷ்டவசமாக அந்தக் கயிறு இன்னும் இறுக்கமாக அதன் கொம்பைச் சுற்றுயிருந்தது.

வெற்றி- நம்மைச் சுற்றியே!

லதா ரகுநாதன்

இவ்வுரைக்குரிய தலைப்பைப் பற்றி யோசிக்க வேண்டாம்.  ஏனென்றால் முதலிலேயே சொல்லி விடுவது நலம் என்றே நினைக்கிறேன், இது கதை அல்ல, வாழ்க்கை.  இல்லை, இப்படிச் சொல்வது பொருத்தமாக வராது. வாழ்க்கைக் கல்வி, இது சரியாக இருக்கலாம். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமெனில், ஒரு மானேஜ்மெண்ட் புக்கின் ஆரம்பப் பாடம். இந்த காரணத்தினால், இந்த உரையில், தவறு, பாடத்தில் கோமு மட்டுமே பிரதானம். மற்றவர்கள் அவளைச் சுற்றி,  பெயர் இல்லாமல் அவளின் உறவுகளாக. இவ்விதம் உரையாற்றுவது எனக்கு மிகவும் நிறைவைக் கொடுக்கிறது. காரணம், யாருக்கு என்ன பெயர் என மெனக்கெடவும் வேண்டாம்.. அந்தப் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளவும் வேண்டாம். இந்தச் சட்டகத்தை ஆரம்ப பாடமாக கொள்ளலாம்.

கோமுவின் வாழ்க்கைக் கதையை ஒரு கண்ணோட்டம் கண்டால் இந்த உரையில் உங்களுக்கான தின பலன்கள் மிகச் சற்றே விளங்கும் சாத்தியக்கூறுகளும் உண்டு.

கோமுவுக்குத் திருணம் ஆனபோது அவளுக்குச் சிறிய வயதென்று கூற முடியாது. அதற்காக வயதானவள் என்றும் கூறலாகாது. பொருந்தச் சொல்வதானால், அந்தக்கால கல்யாண வயதினும் சற்றே அதிகம்இதற்குக் காரணம் ஒன்றும் இருந்தது. கோமு ஒரே பெண். பல வருடம் தவம் இருந்து, பின் பிறந்தவள். அதனால் தாய் தகப்பனின் செல்லப்பிள்ளை. இப்படியாக, குதிர் போல் ஆனாலும் குழந்தையாக பாவிக்கப்பட்டதால், கல்யாணம் பற்றிய நினைப்பு பெற்றோர் மனதில் உதிக்கவில்லை. கோமு செல்லமாக வளர்க்கப்பட்ட காரணத்தினால், சமையல் அறையின் பக்கம் அம்மா செய்து வைத்த முறுக்கு, தட்டை இதர நொறுக்குத்தீனி எடுத்துச் சாப்பிட மட்டுமே சென்றவள்.

இப்படிப்பட்ட ஒரு சின்ன தீனிக்கு தான் சமையல் அறை என்ற நம்பிக்கை காரணத்தினால்கோமு கல்யாணம் முடிந்து கணவன் வீடு வந்ததும், ‘பத்த வை’ என்று சொன்னபோது கடவுள் முன் இருந்த விளக்கு கண்களில் படாமல் உதறலுடன் சமையல் அறை அடுப்பை பற்ற வைக்க…..

கோமு மாமியார் பல வருடங்கள் முன்னரே சிவனடியை அடைந்து அங்கிருந்து அருள் பாலித்திருக்கிறாள் போல. ”ஆஹா.  பெண் என்றால் இவளல்லவா பெண். காரியமே கண்ணாய் சமையல் செய்ய வந்த இவளுக்கு சமையலறை கோமூ என்ற பெயர் வழங்கலாம்,” என்று சொந்த பந்தங்களால் ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.

recipe

கோமுவிற்கு உள்ளுக்குள் கொஞ்சம் உதறல் எடுத்தது உண்மை. ஆனால் காதுக்கு இந்தப் பட்டப்பெயர் குளிர்ச்சியையும், மனதிற்குள் ஒரு கிளுகிளுப்பையும் தந்ததென்னவோ நிஜம். அப்போது மனதிற்குள் முடிவெடுத்தாள்…..இனி எக்காரணம் கொண்டும் நான் பின் நோக்கி நடக்க மாட்டேன். இந்தப் பாதையிலேயே முன்னேறுவேன் என்று. இதை நான் அவள் வாழ்வின் முக்கியமான திருப்புமுனையாக கருதுவேன். ஒருமனதாக ஒரு செயலில் இறங்கிவிட்டால் எப்படி இந்த அண்ட சராசரமே நமக்குத் துணையாக வரும் என்பதைப் பார்ப்போம்.

கல்யாணம் முடிந்த ஒரு வாரம் கோமு தப்பித்து விட்டாள். பெண்ணைக் கொண்டு வந்து விட்ட சாக்கில், பெண்ணுக்கு சமையல் கற்றுக்கொடுக்கும் நோக்கில், கோமுவின் தாய் அவளுடனே இருந்து சமையல் முடிந்த பின் கோமுவின் மாமனார் அந்தப்பக்கம் வரும் போது, கருவேப்பிலை, கொத்தமல்லி அல்லது அது போன்ற ஏதோ ஒரு தழையை அவர் கண் பார்வையில் படும் ஒரு தருணம் தான் சமைத்து வைத்ததில் கோமுவைப் போட செய்து, ஒரு வாரத்தில் ஐந்து கிலோ ஏற்றிய அற்புத சமையல் நிபுணர் என்ற பெயரை பெண்ணுக்கு வாங்கிக் கொடுத்த உத்தம தாயானாள். ஆனால் சிரமம் என்றும் பாராமல் தலைகுப்புற நின்றபோதிலும் கோமு சமையலுக்கு “ச” சொல்லி “மையல்” இன்றி இருந்தாள். ஒரு வாரம் போன பின்னும் பெண்ணுடனேயே இருப்பது நன்றாக இராது என்ற காரணத்தினால் கோமுவின் அம்மா தன் வீடு கிளம்பிச்சென்றாள்.

முதல் நாள் கோமுவின் சமையல். கோமுவின் வீட்டில் அவள் சமையல் பற்றிய சந்தேகம் யாருக்கும் தோன்ற காரணமில்லாமல் போயிற்று. இந்த ஒரு வாரத்தில் வந்தவர் போனவர் என்று அனைவரிடமும் அவள் சமையல் பற்றி மிக சிலாகித்துப் பேசி கோமு என்ற நளனி என்ற பெயர் கொடுத்தாகிவிட்டது. அன்று சமையலறைக்கு எதேச்சையாக, கோமு மூக்கைச் செல்லமாக திருக வந்த கோமுவின் கணவன், தன் மூக்கைப் பிடித்துக்கொண்டு நின்றான், திகைத்து. இங்கே ஒரு முக்கியமான விஷயம் ஒன்றைச் சொல்ல வேண்டும். கோமு கணவன் மூக்கு நீளம், அகலம் என்று உடலிலேயே உருப்படியான உறுப்பு என்பது மட்டுமல்லாது தன் வேலையை செவ்வனே செய்யும் ஒன்றாகவும் இருந்ததால் சமையல் வாசமே அதன் தரத்தைக் காட்டிக்கொடுத்து விட்டது. திகைத்து ருசித்துப் பார்க்க நினைத்தவன், இன்னும் பரிசேஷணம் செய்யாத காரணத்தினால் கையை விருட்டென இழுத்து ஒன்றோடொன்று பிசைய ஆரம்பிக்க, தன் பெயரைக் காப்பாற்ற வேண்டி கோமு சட்டென கட்டிப்பிடிக்க, அப்போது சமய சந்தர்ப்பம் பாராது- இல்லை, பார்த்து என்றும் வைத்துக்கொள்ளலாம்- அங்கு வந்த கோமுவின் மாமனார், “ராமா, கிருஷ்ணா” என்று இன்னும் தெரிந்த சில கடவுள் நாமங்களை உச்சரித்து, தன் மகள் வீடு கிளம்பிச்சென்றவர்தான். ஆக, மாதக்கணக்காக கோமு தன் படு சுமார் சமையலில் சமாளிக்க பிரபஞ்சக் கணக்குகள் அவளுக்கு உதவியாக இருந்தன. சென்ற இடத்தில் கோமு சமையல் பற்றி மாமனாரும் பிரமாதப்படுத்திட ‘சமையல் திலகம் கோமு’ என்ற குடும்பப் பெயரும் இடப்பட்டது.

ஒரு காரியம் செய்ய நாம் முழு மனதோடு நினைத்தால். நம் சூழல் யாவும் ஒத்துழைக்கும்.

கோமுவுக்கு இதுவே நடந்தது

இதுவரையில் சென்னை தாண்டி கடலூர்கூட நினைத்துப் பார்க்காத கோமுவின் கணவனது ஆபீஸ் எங்கோ வடக்கே ஊர் பேர் தெரியாத ஒரு இடத்தில் கிளை ஒன்று ஆரம்பிக்க, அதன் பொறுப்பை கோமுவின் கணவன் கைகளில் ஒப்படைக்க, அவளும் கிளம்பிச்சென்றாள்.

தீபாவளி, கார்த்திகை, பொங்கல், இப்படி எல்லா பண்டிகைகளிலும்சொந்த பந்தம் தவறாது சொன்ன வார்த்தை, “கோமு கை மணமே தனி, அவள் செய்திருக்கவேண்டும் இவைகளை“. இதில் நாம் கவனிக்க வேண்டியது ஒன்றுதான். இவர்களில் ஒருவர்கூட கோமு சமைத்துச் சாப்பிட்டது கிடையாது.

ஆக வடக்கே சென்ற கோமு, சமையலில் தேர்ச்சி பெறாவிட்டாலும், பேச்சில் தேர்ச்சி நிறையத்தான் பெற்றுவிட்டாள். வார்த்தைக்கு வார்த்தை நடுவே அச்சா, மத்லப், ஹான், தேகோ, பத்மாஷ் போன்ற அற்புத வார்தைகள் அவள் ஊருக்குப் போகும் அந்தச் சில நாட்களில் அவளை எல்லோரிடமும் இருந்து தள்ளித்தான் வைக்கும்.

“அத்தை….இந்த குழம்பு இப்படி வெச்சா சரியா….”

“சித்தி…..அதிரசத்திற்கு மாவு பதம் என்ன….”

இப்படிப்பட்ட கஷ்டமான, தர்மசங்கட கேள்விக்கெல்லாம் அச்சா வார்த்தை போட்டுப் பேசும்போது, கேட்ட கேள்வி மறந்து, பதில் சொல்லாததும் மறந்து முழிக்கும்போது, கோமு தன் அஸ்திரத்தை ஏவி விடுவாள்.

“என்ன நான் சொன்னதுபோல்தானே செஞ்ச….?”

ஆக அடுத்த விடுமுறைக்கு கோமு வரும் வரையில் அவள் சொன்னதாகச் சொல்லப்பட்டு, பின்வரும் காலங்களில் அவள் செய்ததாகச் சொல்லப்பட்ட பண்டங்கள் அங்கே விலாவாரியாகப் பேசப்படும்.

ஆனால், இந்த உலக மகா அண்டப்புளுகு தாங்காமல் இறைவன் கோமுவை மிக சீக்கிரம் அழைத்துக்கொள்ள,அவள் இழப்பு பற்றி பேசும் யாவரும், “என்ன ஒரு அற்புதமான சமையல் கை,” என்று சொல்லப்போக, கோமு சமையல் பற்றி நன்கு அறிந்த அவள் கணவனும் அதை நம்ப ஆரம்பிக்க, அவரை பார்க்க. நினைக்காமல், ஆனாலும் அசந்தர்ப்பவசத்தால் பார்க்க நேரும் அனைவரிடமும் அவர் சொல்வது, “உனக்குத்தான் தெரியுமே கோமு என்ன அற்புதமா சமைப்பாள் என்று. அவள் சொன்ன ரெஸிபிக்களை ஒரு புஸ்தகமா வெளியிட்டுருக்கேன். ‘கிச்சன் க்வீன்- தி கோமு’ இருநூறு ரூபாய்தான், வாங்கி நீயும் நன்றாக சமைக்கக் கற்றுக்கொள்”

ஆக, The power of perception, The power of repetitive utterance and Techniques of presentation என்பதையெல்லாம் கோமுவில் வாழ்விலிருந்து தெரிந்து கொள்ளலாம், இவை மானேஜ்மென்ட் உத்திகள் மட்டுமல்ல, இவற்றையே நாம் வாழ்க்கை கல்வியாகவும் கொள்வோமாக.

 

சித்திரச் சொல் சித்திரம்

ந. பானுமதி

 

“முதலிலே கடலின் அடிவயிற்றிலிருந்து ஒரு விம்மல், உடனே அதற்கொரு சிகரம்; அத்துடன் அது கரை நோக்கி உருண்டு புரண்டு விரையும் ஒரு திரளல்; வருகையிலேயே கரையிலிருந்து மீளும் சிற்றலைகள் அத்துடன் விழைந்து திருகும் ஒரு குழையல், சிகரம் உடைந்து வெண் நுரை அலை மீது சரியும் கக்கல். சங்கதி ஏதோ சொல்ல வந்து, வாய் திறந்து வார்த்தை வராமல்-இல்லை, ஒருவேளை அதன் பாஷையேஅதுதானோ-என்னவோ- ஆத்திரத்துடன் கரை மீது மோதியதும் குடம் பால் சரிந்தாற்போல், கரை வரை நுரை-கரை தாண்டிக் கூடி பெரிதாய்ப் பரவி, பெரிதும், சிறிதும் பொடிந்தும் நுரைக்கொப்புளங்கள் தனித்தனியாய் வெள்ளலை வாங்கிக் கொண்டதும் வர்ணங்கள் ஒவ்வொரு குமிழிலும் பிறந்து மிளிர்வது கண் கொள்ளவில்லை”(அலைகள்)

கடலை இப்படி ஓர் சித்திரமாகக் காட்டும் வல்லமை அவர் எழுத்திற்கு மட்டுமே உண்டு. விம்மல்,திரளல், குழையல், கக்கல், கொப்புளங்கள் இந்த சொற்கள் அலைகளின் சித்திரத்துடன் கலந்து காட்டும் வண்ண மாயங்கள் இந்தக் காட்சி மொழி , அதில் ஏறும் வாழ்வின் நிதர்சனம்-  இல்லை தரிசனம், சித்திரச் சொல் போடும் சொற் சித்திரம்.

“சிந்தித்து, சிந்தித்து நான் அறியாமலே வாக்கை வாயில் உருட்டுகையில் இன்னும் செவிக்கும், நாவிற்கும் மணம் கிட்டியும் ருசிக்கெட்டாதோர் தித்திப்பு.”இனிக்கிறது, கசக்கிறது போன்ற  தனிப்பட்ட உணர்வுகளைக்கூட சொல்லில் காட்ட முடிவது அவரால் நாம் பெறும் அனுபவம்.

“இது கோலமல்ல;காடு. நள்ளிரவில் நிலவு நிழலில் இலைகளின்நெய்வில் விலங்குகளின் விழிகள். இலைமறைவில்,இரையைச் சிந்திக்கும் குரூர விழிகள். என்ன சிந்திக்கின்றன? ஏன் சிந்திக்கின்றன? கண்ட கனவின் மீட்சி போல், மேலிமையுள், கோலத்தினின்று ஒரு உரு நிமிர்ந்தது.சின்னப் பொம்மையின் சிறுகூடு. உடுத்திய தூய வெண்மையோடிழைந்த வெள்ளைத் தாழம்பூ நிறம். கால், கை நகங்கள், உதடு, செவி மடிகளின் ரோஜா இதழ்த்திட்டுக்கள் கவனத்தைப் பறித்தன.கன்னத்தின் பீங்கான் வழவழப்பின் கீழ், மாதுளை விதையுள் உறைந்த ரச ஓட்டம் போல் கமழும் ரத்த காந்தி”(மாற்று)கோலங்கள் காண்கையிலே ஏற்படும் பரவசத்தின் ஊடாக பின்னிப் பின்னி சிக்கலாக, ஊடும் பாவுமென விளையாடி, தன் அமைப்பிற்கு வந்து சேரும் கோலங்கள் ;வாழ்க்கை போடும் கோலம்-பரபரப்பும், சுழிகளும், தீர்மானங்களும்,சட்டென்றுதிரும்புவதும்,ஒய்யாரமாகஓடுவதும்,பின்னர்

அமைதியாக நடப்பதும் எல்லாமற்று இணைவதும், ஒடுங்குவதும் அவன் போடும் கோலங்கள்.அது என் கைவழி வழிகிறது-ஆனால் என் இயக்கம் அல்ல.

“வாழ்க்கை ஒரு பரிட்சை கணக்கு மாதிரித்தான் இருக்கிறது.எங்கேயோ எப்படியோ ஒரு சிறு தப்பு நேர்ந்து விட வேண்டியதுதான்-விடை எங்கேயோகொண்டு போய் விட்டுவிடுகிறது.இத்தனைக்கும் தெரிந்த கணக்கு;புரிந்த கணக்கு; முன்னால் போட்ட கணக்கு தான்.”

“எல்லைப்படுத்தத்தானே கணக்கே ஏற்பட்டிருக்கிறது! எல்லையிலாததற்கும் எல்லை நாட்டும் கணக்கு” (ஏகா)

“பிறப்போடு வந்துவிட்டாற்போல் உடலோடு ஒட்டி வெள்ளை ரோஜா நிறத்தில் கடல் நுரையில் நெய்தாய ஆடையினூடே மார்க்கச்சு விண்ணென்று தெறித்துத் தெரிகின்றது.ரவிக்கை பூணாது,திரண்ட பனித்தோள் குமிழ்கள், கழுத்தின் விலாசம்”

“கீழ் வானத்தில் பெரிய யாகம் நடந்து கொண்டிருக்கிறது. மேகப் பாறைகள் நெகிழ்ந்து உடனே கரைந்து ஆஹூதியில் கவிழ்கின்றன. தழல் ஆட்டம், வான் பூரா பரவுகிறது”

“வானத்துக்கும்,வெய்யிலுக்கும் காற்றின் மத்யஸ்தம் நடந்து கொண்டிருக்கிறது.வெறிச்சிட்டுக் கிடந்த வான வீதியில் போக்குவரத்து தொடங்கிவிட்ட்து. மேகங்களின் பவனி,பட்சி ஜாலங்களின் விதவிதமான வரிசைக்கட்டுகள். ஆட்டத்தின் கையிலிருந்து தள்ளிக் கம்பளத்தில் விழும் சீட்டில் காண்பது போல,பட்சிக் கூட்டங்கள் மேகத்தின் பின்ணணியில் வித விதமான பொட்டுகள் வைக்கின்றன.மேற்கு மணக்கோலம் பூணுகிறது. பெண்ணுக்கு எந்தப் புடவையும் பிடிக்கவில்லை.அவிழ்த்துப் போட்ட புடவைகள், வித விதமாய் போர் போராய்க் குவிகின்றன.”

“வானத்தில் இங்குமங்குமாய்ப் பிசுபிசு பஞ்சு மிட்டாய்ப் படர்ச்சிகள், புலுபுலு ரோஜா மொக்குகள். கசங்கிய மாலியங்கள் சிதறிக் கிடக்கின்றன.இருளை இதமாய் நல்ல வார்த்தை சொல்லி ஒதுக்கிவிட்டு மலர்ந்த மினுமினு வெளிச்சம், இடத்துக்கே தண்ணொளியை வர்ணமாய்த் தீட்டுகிறது. ஏதோ, ஒரு ABSTRACT ஓவியம் உருவாகிக் கொண்டிருக்கிறது.”

“திடீரென வானத்தில் பூக்கள் மண்டிக் கிடக்கின்றன. மொட்டுக்கள், மலர்கள்,பிய்ந்த இதழ்கள்,மூச்சுவிடும் விண்மீன்கள்,சின்னதும் பெரிதுமாய்ச் சீனாக்கற்கண்டு கட்டிகள், வைரச் சிதறல்கள், உறைந்து போன கண்ணீர்த் துளிகள், இதய உதிரிகள்-இவற்றிலிருந்து இழுத்த ஜிகினாச் சரடுகளில் ஏதேதோ நினைவுகள், தோற்றங்கள்”

“ரீதி கௌளையின் ஒரு சொகுசு வளைவு

கன்னியாகுமரியின் மூக்குத்தி”(உத்தராயணம்)

“அண்டாவில் ஜலம் கண்ணாடித் தகடு போல் அசைவற்று நின்றது, வானபிம்பம்.இவ்வளவு துலக்கமாய், அதுவும் இரவில் ஒரு நாளும் தெரிந்ததில்லை. கலக்கம் எங்கள் கண்ணிலா, வானத்துக்கேவா? தனித்தனியாய், சம்சாரமாய் பாளை வெடித்துச் சொரியும் முத்துக்களாய் ஆனால் அத்தனையும் அதனதன் முழு உருவில், ரச குண்டு போல் தொங்கிக்கொண்டு இன்று எத்தனை நட்சத்திரங்கள்”(காசி)

“ மாலை வருகிறது.ஆசையுடன் வாசல் வழி எதிர்பார்த்திருந்த விருந்தாளி ஓசைப் படாமல் கொல்லை வழியோ, பக்க வழியோ வந்து கூடத்தில் அமர்ந்துவிட்டாற்போல், வந்தது தெரியாமல் வருகிறது.கரைத்துக் கழித்துக் கொட்டிய ஆரத்தி போன்று மாலை ஒளியின் செம்பிழம்பு தோட்டத்திலும், ஓட்டிலும், சுவர்களிலும் வழிகின்றது”(இன்று நேற்று நாளை)

“உயிர் அழிவற்றது. தன் உச்சரிப்புக்குத் தானே
திரும்பத் திரும்ப உருவைத் தேடுகிறது
திரும்பத்திரும்ப உச்சரணையே உயிரின் ஆதாரம்
திரும்பத்திரும்ப உருவே தொடர்பின் ஆதாரம்
திரும்பத் திரும்ப தொடர்பே முயற்சியின் ஆதாரம்
திரும்பத் திரும்ப முயற்சியே விமோசனத்தின் ஆதாரம்
திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப  (புத்ர)

“தான்” உண்டாக்கிய நெருப்பில் “நான்” திருப்பித் திருப்பி  தன்னையே காய்ச்சிக் கொள்கிறது.  “நாம் இறக்கவில்லை.ஏனெனில் நம்மால் இறக்க முடியாது. உயிர் பிறந்தது, எப்படியோ, ஏனோ பிறந்துவிட்டது. பிறந்த பின் அதனால் இறக்க முடியவில்லை.இருந்துதான் ஆக வேண்டும்.. ஆனால் சரியாய் இருக்கும் முறையைத் தேடித்தேடி இருந்து இருந்து மாற்றி மாற்றி, மாறி மாறித் தவித்துக் கொண்டிருக்கிறோம். இதுதான் நம் தவிப்பு. வித்திலிருந்து மரத்தில் இருந்தொரு வித்து.. ஆனால் வித்தெல்லாம் வித்தல்ல. ஒரு நாள் முத்தானதொரு வித்து ஒரே முத்து.(ஜமதக்னி).

“அஞ்சலி” முகவுரையில் அழகு படச் சொல்கிறார். “பார்க்கப் போனால், ஜன்மங்களே உயிரின் உடை மாற்றம் தானே! உயிரே, உணர்ச்சிகளின் எண்ணங்களின் வேஷப் பொருத்தம் தானே!

“இதுகாறும், பௌர்ணமியின் நடு நிலவில், அவை ஜரிகைகள் மிதக்கும் கடலின் கருநீலப் புடவையுள் ஒளிந்த காற்றின் வீக்கத்தில் களியாட்டம் கண்டிருந்தாய். இப்போது என் சீற்றம் பார். என் சீற்றம் மட்டுந்தான் உயிர்”

“எழுதினால்தான் கவிதை அல்ல, வார்த்தைகள் தான் கவிதை அல்ல, கவிதையென்று தானே உணர்ந்தால்தான் கவிதை அல்ல; சத்தியத்தின் கோடரி எப்பொழுது உள் பாய்கிறதோ, அப்போது நான் சொல்லும் கவிதை நேர்கிறது.”(பாற்கடல்-ப்ளேக்)

“கற்பனை என்பது பலர் நினைப்பது போல் வெறும்  கனவு கட்டுக்கதை புனைவதல்ல. தரிசனத்துக்குத் தன் உள் சக்தியைச் சமயம் வரும் போதெல்லாம் வளர்த்துக் கொண்டே இருப்பதுதான் கற்பனை. தன் வண்ணத்தை என் கை வண்ணத்தில் விளம்பல் அலுக்காத விளம்பல்”

“எழுத்து ஒரு அற்புதமான குழல் வாத்தியம். பிராண ஆஹூதியை அதனுள் செலுத்தியதும் அந்த ஆஹூதி வெளிப்படும் உருவத்தில் என்ன என்ன நாதங்கள்!(பாற்கடல்)

“பாற்கடலை நீயும் நானும் கடைந்தோம்
எனக்காக நீ, உனக்காக நான்,
எனக்காக நான்,
நமக்காக நாம்.
கடைந்தோம்,
அமுதம் வந்தது,
நான் கலசமானேன்
என்கரண்டி, என் பேனா;
நான் பரிமாறுகிறேன்,
உண், இனி நாம் தேவர்,

பாற்கடல் கடைந்து 5 முக்கியப் பொருட்கள் வந்தன.அதில் அமுதத் துளி ஏந்திய எழுத்தாணியோடு இவர் பிறந்திருக்கிறார்.

“எவ்வளவு தின்றும் குன்றா வான வெளியின் நீலத்தை, வெண்மேகங்கள் நிதானமாய் மேய்ந்து கொண்டு சென்றன.”(சோமசன்மா)  அவரது சித்திரச் சொல்லை, சொற் சித்திரத்தை முழுதும் சொல்ல இயலுமா?