Author: பதாகை

அதீனாவின் தலை

ஸ்ரீதர் நாராயணன்

pallasathena

 

கொண்டு வருகிறேன் பலாஸை
இந்த மைதானத்திற்கு நடுவே.
உங்கள் பாசாங்குகளை
முற்றொழிக்க.

எந்தையின் சுடரை
அவர் பெண்மைத் தலையிலிருந்து
பிடுங்கி எடுத்து,
கொண்டு வருகிறேன்
இந்த உடலற்ற நெருப்பை.

எரி-கண்கள் கொண்ட பெண்ணவள்
இந்த நகரை
போலித்தனங்களிலிருந்து
பொலிவுற செய்யட்டும்.

கனன்று கொண்டிருக்கும் இத் தலை
கொடுக்கட்டும் எல்லா கதகதப்பும்
வேறெதுவும் மறைக்கப்பட வேண்டியதில்லை

கொண்டு வருகிறேன்,
பலாஸ் அதினாவை
இந்த மைதானத்திற்கு.

I bring the Pallas
to the middle of this Stadium,
to extinct the pretense

The fire of our father,
sprung out of his
effeminate scalp,
I bring you-
fire without a frame

She, the fiery-eyed lady
shall light this city
out of its sham

This smoldering head
bestows all the warmth,
there is no call for shields.

I bring,
Pallas of Athena
to this Stadium!

செப்டெம்பர் மாத மழை வாரத்தின் ஒரு மாலைப்பொழுதில்

பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி

snails

திசையற்று பறக்கிறது
தட்டான்கள்
மொட்டைமாடியில்
வெகுநேரமாக நின்றபடியே நான்
*
ஈரத்தரையில்
இமைக்காமலிருக்கும்
தவளையின் விழியில்
சரியாக விழுகிறது மழை
*
மரம் நடும்
குழந்தையின் முகத்தில்
இயற்கையாகவே துளிர்க்கிறது
மகிழ்ச்சி விதை.
*
எண்ணெய் ததும்ப
எரியும் சுடர் விளக்கை
எடுத்த எடுப்பிலேயே
அணைக்கிறது மழை
*
எதிர்வீட்டிலிருந்து வீசுகிறது
அடுக்கு மல்லியின் வாசம்
நாங்கள் தான் இதுவரை
பேசியதேயில்லை.
*
சீசா விளையாடும்
குழந்தைகளுக்கு
ஏற்றமும் இறக்கமும்
சமசந்தோஷமே.
*
விட்டு விட்டு
பெய்கிறது மழை
நகர்ந்து கொண்டேயிருந்தது
நத்தை

வண்ணக்கழுத்து 17இ: லாமாவின் மெய்யறிவு

gay_neck_the_story_of_a_pigeon

அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. நான் அந்த இரண்டு மரங்களுக்கு இடையிலான இடைவெளியை ஆராய்ந்தேன். அவை உயர்ந்து பருத்திருந்தவை, இரண்டுக்கும் நடுவே நாங்கள் இருவரும் நெஞ்சோடு நெஞ்சை ஒட்டிக் கொண்டு நடக்கக் கூடிய அளவே பூமி இருந்தது.

“இப்போது என்னுடைய பயம் தோய்ந்த ஆடையை இந்த இரட்டை மரங்களுக்கு நடுவே வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு தன்னுடைய உடைக்கு அடியில் இருந்து நேற்று வரை அவர் அணிந்திருந்த பழைய உடைகளின் மூட்டையை எடுக்கலானார்.  அதைத் தரையில் வைத்துவிட்டு இரண்டில் இரு மரத்தில் ஏறினார். மேலே ஏறிய பிறகு கோண்ட் ஒரு கயிற்று ஏணியை எனக்காக கீழே வீசினார். வண்ணக்கழுத்து என் தோளில் தனது சமநிலையை இருத்த தன் இறக்கைகளை அடித்துக் கொண்டிருக்க நான் அந்த ஏணியில் ஏறினேன். இரண்டுபேரும் கோண்ட் உட்கார்ந்து கொண்டிருந்த கிளையை பத்திரமாக அடைந்துவிட்டோம். மாலை விரைந்து வந்து கொண்டிருக்க நாங்கள் அங்கேயே சில நேரம் அசையாமல் உட்கார்ந்திருந்தோம்.

அந்தி சாய்கையில் நான் முதலில் கவனித்த விஷயம் பறவைகளின் வாழ்க்கை. கொக்குகள், இருவாய்க் குருவிகள், க்ரவுஸ், பெஸண்டுகள், பாட்டுக் குருவிகள், கிளிகளின் மரகதக் கூட்டங்கள் காட்டை ஆக்கிரமிப்பது போல இருந்தது. தேனீயின் ரீங்காரமும் மரங்கொத்தியின் டக் டக் டக் சத்தமும், தொலைவில் கேட்ட கழுகின் கிறீச் ஒலியும், மலை ஓடையின் கீழித்துச் செல்லும் இரைச்சலோடும் ஏற்கெனவே முழித்துவிட்டிருந்த கழுதைப்புலிகளின் விட்டுவிட்டு வரும் கனைத்தலோடும் கலந்திருந்தது.

அந்த இரவு நாங்கள் இருப்பிடத்தை அமைத்திருந்த மரம் மிகவும் உயரமானது. எங்களுக்கு மேலே சிறுத்தையோ பாம்போ இல்லாதபடி நாங்கள் உயரத்திற்கு ஏறினோம். கவனமான ஆய்வுக்குப் பிறகு இரண்டு கிளைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு இடையே எங்களுடைய கயிற்று ஏணியை உறுதியான தொட்டிலாகக் கட்டினோம். இருப்பிடத்தில் பத்திரமாக உட்கார்ந்த உடனே கோண்ட், வானத்தைச் சுட்டிக் காட்டினார். உடனே நான் மேலே பார்த்தேன். அங்கே மிகப் பெரிய கழுகொன்று தன்னுடைய மாணிக்க நிற இறக்கைகளோடு பறந்து கொண்டிருந்தது. வெள்ளத்தைப் போன்று வேகமாக இருட்டு தரையிலிருந்து மேலெழுந்து வந்தாலும் கூட, வானுக்கு மேல் வெளிகள் ஒரு புறாவின் கழுத்தைப் போன்று ஒளிர்ந்தது. அந்த வெளியில் அந்த தனிக் கழுகு மீண்டும் மீண்டும் வட்டமடித்துக் கொண்டிருந்த்து. கோண்டைப் பொறுத்தவரை சந்தேகமே இல்லாமல் அந்த்க் கழுகு அஸ்தமிக்கும் சூரியனை வழிபடுகிறது.

அந்தக் கழுகின் இருப்பு ஏற்கெனவே அங்கிருந்த பறவைகளையும் பூச்சிகளையும் அசைவற்று வைத்திருந்தது. அவற்றுக்கு வெகு மேலே அந்தக் கழுகு இருந்த போதும், மெளன பக்தர்களின் கூட்டம் போல, அவர்களுடைய அரசன் பின்னும் முன்னும் பறந்து, அவர்களுடைய கடவுளான ஒளியின் பிதாவுக்கு ஒரு பூஜாரியைப் போலே மெய்மறந்து வணக்கம் செலுத்துகையில், அவை அமைதி காத்தன. மெல்ல அதன் இறக்கைகளில் இருந்து மாணிக்க ஒளி கசிந்தது. இப்போது அவை தங்கப் பொறிகளால் விளிம்புகள் செய்யப்பட்ட கருநீல பாய்மரத் துணியைப் போலே இருந்தன. அதனுடைய தொழுகை முடிவுக்கு வந்துவிட்டதைப் போலே, இன்னும் மேலே உயர்ந்து, தன் தெய்வத்தின் முன் தீக்குளிப்பதைப் போலே, தீயினால் எரிவது போன்று நின்ற சிகரங்களை நோக்கிப் பறந்து சென்று, அவற்றின் ஒளி வெள்ளத்தில் ஒரு அந்துப்பூச்சியைப் போலே காணாமல் போனது.

கீழே ஒரு எருமையின் முக்காரம் பூச்சிகளின் ஒலிகளை ஒவ்வொன்றாக விடுவித்து, மாலையின் நிசப்தத்தை கந்தல் கந்தலாகக் கிழித்தது. அருகில் ஒரு ஆந்தை அலற, என் துணிக்கு அடியில் இருந்த வண்ணக்கழுத்து என் நெஞ்சோடு நெருங்கி வந்தது. திடீரென்று நைட்டிங்கேலைப் போன்ற இரவுப் பறவையான ஹிமாலய குண்டுகரிச்சான் குருவி ஒன்று தன் மாயப் பாடலைத் தொடங்கியது. கடவுள் ஊதும் வெள்ளிப் புல்லாங்குழல் போல, ட்ரில்லுக்கு மேல் ட்ரில்லாக, ஏற்றத்துக்கு மேல் ஏற்றமாக, மரக்கூட்டங்களுக்கு இடையே வேகமாகப் பொழிந்து, அவற்றின் கடுமையான கிளைகளின் மீது வடிந்து காட்டுத் தரையில் இறங்கி பின் அவற்றின் வேர்களின் வழியே பூமியின் அடிநெஞ்சுக்கு இறங்கும் மழையைப் போல, அமைதி இறங்கியது.

முன்னரே வரும் கோடைக்கால இரவு உண்டாக்கும் மகிழ்ச்சி எக்காலத்திலும் விளக்க முடியாததாகவே இருக்கும். உண்மையில் இது மிகவும் இனிமையாகவும் தனிமையாகவும் இருந்ததால் எனக்கு கண்ணைச் சுற்றிக் கொண்டு வந்தது. மரத்தின் தண்டோடு என்னை பத்திரமாகப் பிணைக்க கோண்ட் இன்னொரு கயிற்றைக் என்னைச் சுற்றிக் கட்டினார்.  பின், செளகரியமாகத் தூங்குவதற்காக என் தலையை அவருடைய தோளில் இருத்திக் கொண்டேன். ஆனால், நான் அப்படிச் செய்வதற்கு முன்பாக கோண்ட் தன்னுடைய திட்டத்தைச் சொன்னார்.

”நான் கீழே கழற்றிப் போட்ட எனது உடைகள், நான் பயத்தின் பிடியில் இருந்த போது உடுத்தியவை. அவை ஒரு விசித்திரமான வாடையைக் கொண்டவை. அந்த எருமை மச்சான் இந்த வாடையை நுகர்ந்தால், அவன் இந்தப் பக்கம் வருவான். பயத்தினால் பீடிக்கப்பட்டிருப்பவன், பயத்தின் வாசனைக்கு பதிலாற்றுவான். நான் கழற்றிப் போட்ட துணிகளை ஆராய அவன் வந்தால், நாம் அவனுக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வோம். அவனைக் கயிற்றால் பிணைத்து ஒரு கிடாரியைப் போலப் அடக்கி வீட்டிற்கு கொண்டு செல்ல முடியும் என்று நான் நினைக்கிறேன்…” அவர் அதற்கு மேல் சொன்னவை என் காதில் விழவில்லை. நான் தூங்கிவிட்டிருந்தேன்.

யாகச் சொல் சொல் யாகம்

பானுமதி. ந

லாஸ்யம் சத்யம் ராகவம் – 1   

யாகச் சொல் சொல் யாகம்

 

சொல் என்பது என்ன?

சொல்வதா? சொல்லப்படுவதா? சுட்டும் பொருளா? பொருளான சொல்லா? “த்வனி”யான சொல் சமயத்திற்குத் தகுந்தாற்போல் பொருள் கொள்ளுமா? சொல்லிற்கும் அதன் பொருளிற்கும் இடைவெளி இருக்கிறதா? இருந்தால், அது அவரவர்க்கு மாறுபடுமா?

சொல்லை எப்படி ஒரு மந்திர விசையாக்குவது என்று அவர் தன் வாழ்நாளெல்லாம் பரிசோதித்துக் கொண்டிருந்தார். அதன் அர்த்தத்தை, தொனியை அவர் தொடர்ந்து உயிர்த்தெழச் செய்தார். நகல் எடுக்க முடியாத, ஒரு போதும் காலத்தால் பின்தங்காத, எதன் முன்னும் சாரமிழக்காத…” திரு லா.ச.ராவின் எழுத்துக்களைப் பற்றி திரு. மனுஷ்ய புத்திரன் ஒரு முகவுரையில் இப்படிச் சொல்கிறார்.

லாசராவின் யாகச் சொல் என எனக்குப் படுவது “தருணம்”.

“வேளை” காலத்தைவிடச் சிறப்பு வாய்ந்தது. ‘ஏகா‘வின் நாயகியின் ஒரு உரையாடல் நம்மைப் புரட்டிப் போட்டுவிடும். ” வேளைக்கும் காலத்துக்கும் ஏன் முடிச்சு போடறேள்? வேளை கலையாமல் இருந்தால், காலம் என்ன கடந்தும் என்ன செய்ய முடியும்?

நான் பாஷையில் தோய்ந்து போனேன்; வாயின் வரம்பு தோற்ற மோனத்தில் தித்தித்த சொல்லில் தோய்ந்து போனேன்.” (ஏகா)

சமயங்களுக்கேற்ப சொல் கொள்ளும் உருவை அவர் சொல்லும் நேர்த்தி-

அம்மாவின் வார்த்தைகள், சூத்திரங்கள். ஒன்றில்,சமயத்துக்கேற்ப ஒன்பது கருக்கள், அமைப்புகள், வெறும் வர்ண விசிறல்களிலேயே, புரியாவிடினும், தனக்குள் ஒன்றுபட்டதோர் இழைவு போன்று, சம்பந்தா சம்பந்தமற்றவை போன்ற வார்த்தைகளில் வெவ்வேறு ஒலியேற்றங்கள், அர்த்தக் கூடுகள்

சொல்லைச் சொன்னதுமே அதுவாயிடறேன்.”

இந்த ஒரு வாக்கியம் போதும், அவரது சொல்லாட்சியைப் புரிந்து கொள்ள. “’நெருப்பு’ என்று சொன்னால் வாய் வேக வேண்டும்” என்ற அவரது சொற்கூற்று மிகவும் பிரபலம்.

எழுச்சி எண்ணமாகி, எண்ணம் வார்த்தைப்படும் இடைவேளையின் தடங்கள்கூட இலாது, தடங்களின் சிதைவிலாது, தோன்றியது தோன்றியபடி தோன்றிய தருணமே, தனக்கும், தன்னையழைத்தற்குமிடையே பாய்ந்து முறுக்கிய தந்தியே பாஷையாய்..

தருணம் எனும் யாகச் சொல், சிந்து கவி பாடும் விதம். எண்ணுபவர், அதை சொல்லாக மாற்றி வெளியே சிந்துகையில், எண்ணமே தருணமாக, தருணமே எண்ணமாக, இடைவெளியற்று, பொருளும் சொல்லுமாகப் பிணைந்து காட்டும் எண்ணத் தருணம், தருணத்தின் சொற்பொருள்.

சப்தங்கள், மகரந்தப் பொடிகள்; காற்றிலே மிதந்து வந்து என்னை இங்கே இழுத்தன”.

ஓசைத்துளிகள் முத்து முத்தாய் மெத்து மெத்தென எழுந்தன.” ”பட்டுப் பூச்சியின் இறக்கைகள் போல் ஒரு ஸ்வரம் அந்தரத்தில் படபடவென்று அடித்துக் கொண்டு என்னை அழைத்தது” (காயத்திரி). ஓசைகள் இசையாக, வாசமாக, மெத்தென அறியும் நேரம்.. எழுத்தின் தருணம் போலும்.

கரும்பின் இதயம்; இதயத்தின் கரும்பு.. வார்த்தையோடு வார்த்தை சேர்த்தால், அல்லது மாற்றிப் போட்டால், புதுப்புது அர்த்தங்கள். உயிரோடு உயிர் கூடி உயிர் பிறப்பது போல். ஒரே கணுவுள் முழுத் தித்திப்பையும் தேடுபவர் பாடே உப்புக் கரும்பு தானோ?“ (இதழ்கள்)

அப்பவே, அதுவாகவே, ஆத்திரத்தில் பூமிமேல் கையறைந்து எழுந்த ஆவியின் தும்பில், எரிந்த வயிறின் முத்துக் கொதியில், நாபி வேரினின்று கிளைகளோடு பிடுங்கிக்கொண்ட வேகத்தின் சுழலில், அனல் மூச்சின் கொந்தளிப்பில், ரத்தக் கொதிப்பில், உடல் கக்கிய வேர்வையில், சப்தத்தின் சத்தியத்தில், நா நறுக்கிய வடிவில், சர்வத்தின் நிரூபணத்தினின்றுவாக்குத் தடுத்த வரம்புள், சொல் விதித்த விதியில், அதுவே என் உயிர்ப்பாய், அதன் கதியே என் ப்ரக்ஞையாய், நான் பிதுங்கினேன்

என் தனிமையின் உருவற்றமையாலேயே நான் காலம், இடம், உரு நியமங்கள் கடந்த மெய். சப்தத்தின்  சத்யம். நான் சொல், சொல்லின் பொருள், பொருளின் செயல். மூன்றும் ஒன்றாய் ஒருங்கே இயங்கும் திரிசூலம்

“அஞ்சலின் அஞ்சலியில் என் அருவிலும் அருவின் உரு ஒடுங்கிப் போனேன். என் உருவின் ஒடுக்கம்; ஒடுங்கலின் உரு.

“?

“கொக்கி குறுகி வளைந்து ப்ரக்ஞை அதில் கருவேறி நெளிந்தது. கேள்வியே பதில், பதிலே கேள்வி. பதிலினின்றும் கேள்வி, கேள்வியால் பதில். பதிலும் கேள்வியும் இதுவா? இல்லை அதுவா? இல்லை பின் எது? ஏது?”

“கேள்வி கேள்வியையே பெருக்கும். கேள்வியால் பயனென்?பதில் ஒன்றே.. கேள்வியையும், பதிலையும் விழுங்கிய ஒரே பதில்.. அதுவும் கேள்வியும் பதிலுடன் மூழ்கிப் போன மோன இருளில் உருவெடுக்கும் ஒளியை…”

“இருளின் மகவு ஒளி. எந்தையும் தாயும் நெஞ்சு நெகிழ்ந்து, ஒன்று கலந்து தம்மை மறந்த தருணம், கருவில் தங்கியதிலிருந்து நான் அமர்ந்த தவத்தில் பொருளாகும் பதத்திற்கு இட்ட மறுபெயர் காலம். தவத்தின் இருக்கை கலையும் சமயங்கள் இறப்பு, பிறப்பு; இரண்டிற்கும் இடையே இரவும் இரவியும் வகுத்த நேற்று, இன்று, நாளை காலம் என்பதே இவ்வளவுதானே”

“எங்குமே தருணம் தங்க முடியாது, தங்க இடம் தேடி, தருணம் தவிக்கும் வியப்பேதான் அதன் தவமோ? தருணத்தின் தவமே நேற்று இன்று நாளை என்று என்றும் ஓயாத கடனைத் தீர்ப்பதுதானோ?

இன்று நேற்று நாளை

தருணத்தின் விஸ்தரிப்பு” (புத்ர)

சொல் என்பதே அவருக்கு ஒரு விசை. “சொல்றது புரியாட்டா, புரிஞ்சுக்கற வரைக்கும் புரிஞ்சிக்காதவாள் கூட செவிடுதான்

என் நெஞ்சில் தெறித்தது வேளையின் முத்து. என் மேல் கமழ்ந்தது வேளையின் மலர்ச்சி. கவிதையே வேளை தன் முழுமை கண்டதன் விளைவுதானே!

தந்திகளின் தன் மீட்டல் போலும் உன் வார்த்தைகள் இருளில் எங்கிருந்தோ மிதந்து வந்தன. புரிந்து விட்டால், பிறகு சொல்லவேதான் என்ன இருக்கிறது?சொன்னால், சொல்லின் சிதைவு பட்டு, உண்மை பொய்யாகிவிடுகிறது.”

வித்தும் வேரும்” இந்த சொல்லாட்சியில் திளைக்கின்றன.

எத்தனைதான் சொன்னாலும் அவர் சொல் மயக்கை, அதன் உயிரை, அது காட்டும் வண்ணக் கோலங்களை, தருணமாகும் சொல்லை, பொருளாகும் தருணத்தை எப்படி விட முடியும்?

சொல்லே பொருளாக எழுத்து. யாகத்தின் அவிர்பாகம்.

வேத நெருப்பிலே ஒடுங்கும் தருணம். கை நீட்டி உண்ணும் அந்த அக்னியின் பிரசாதம் வார்ப்பவனுக்கும், வாசிப்பவனுக்கும் அவரவர் வழி கிடைக்கிறது. தருணம் இவரது யாகச் சொல். கல்லாக உறையும், நீராகத் தழுவும், தென்றலென இசைக்கும், தீயென சுடும், வான் என விரியும். அதுவே, வான் உறைந்த சப்தமென கேட்கும். நீர் கொண்ட தீயெனச் சூழும் , மண் கொண்ட உயிர் என முகிழ்க்கும் மனோரஞ்சிதத்துடன் காற்றெனச் சேரும். என் தருணப் பாடலை நான் இவர் எழுத்தில் கண்டேன். அவர் மொழியில் “உள்ளது கண்டு, கண்டது விண்டு”.

 

மூங்கில் கூத்து மேதாவி

ஸ்ரீதர் நாராயணன் 

bamboo-genius

முச்சந்தியில் நட்டு வைத்த
மூங்கில்கள் இடையே
கயிற்றில் நடந்து
வித்தைக் காட்டுகிறா(ள்)(ன்).

மூளையை கூராக்கி
கொம்பெனக் கொண்ட
அறிவுச்சிகரம் மேதாவி.

கயிற்றின் மேலே
கரணம் அடிக்கிறா(ள்)(ன்).
கைதட்டுபவரை குஷிப்படுத்தும்
சரணம் பாடுகிறா(ள்)(ன்).

அவையோர் முகம் கோணினால்
சுற்றி சுற்றி வந்து
சலாம் போடுகிறா(ள்)(ன்)..
வசமாக யாரும் சிக்கினால்
வாகாக ஏறி மிதிக்கிறா(ள்)(ன்).
காணிக்கை தாராளமாக கிடைக்குமென்றால்
கேளிக்கையை குறைப்பானேன்.

நிமிர்ந்து நிற்கும் மூளையை கண்டு
நெருங்கி வர அருவெறுக்கும்
கோமாளிக் கூட்டத்திற்கென
தலைகுப்புற நின்று கொண்டு
வாலாக ஆக்கிய மூளையை
காலால் ஆட்டிக் காண்பிக்கிறா(ள்)(ன்).

இதுதான் ஒரிஜினல் கூத்தென
அள்ளிக் கொண்டு போகிறது
அப்ளாஸ் ஆடியன்ஸிடம்.

இன்னும் கொஞ்சம்
மூளை நீண்டாலும்
வாலாட்டுவது சிரமமென
விசனப்படுகிறா(ள்)(ன்).
அறிவுச்சிகரம் மேதாவி.