Author: பதாகை

கிளி ஜோசியம்

காலத்துகள்

kamadeva1

இன்று அலுவலகத்திற்கு மட்டம் போட்டு விட்டு எந்த இலக்குமில்லாமல் வீட்டில் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தேன். 11.30 மணி அளவு கடைக்குச் செல்ல வேண்டி வர, அந்த வேலையை முடித்துக் கொண்டு திரும்பும்போது, கூரை வீட்டொன்றின் திண்ணையில் அமர்ந்தபடி கிளி ஜோசியன் ஒருவன், 50-60 வயதிருக்கக்கூடிய பெண்ணிற்கு ஆரூடம் சொல்லிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். கதையொன்றிற்கு விஷயம் தேறுமே என்று அவர்கள் பேசுவதை கவனிக்க ஆசைப்பட்டாலும், நாகரீகம் கருதி – அவர்களை பேசுவதை முடிந்தளவு உள்வாங்க காதுகளை கூர்மையாக்கி -, அவர்களைக் கடந்து வந்தேன். உண்மையில் நாகரீகம் கருதி அல்ல, ஆள் நடமாட்டமில்லாத நிச்சலமான தெருவில், நான் அங்கு நின்றிருந்தால் கண்டிப்பாக வசவு கிடைக்கும் என்பதால்தான் அங்கு நிற்காமல் வந்திருந்தேன். யாரும் கவனிக்காதபடி ஒட்டுக்கேட்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால் அதைக் கண்டிப்பாகச் செய்திருப்பேன். சரி, நான் கண்ட காட்சியை வைத்து கற்பனையில் கதை எழுத வேண்டியதுதான், இன்றைய பொழுதும் போகும் என்று யோசித்தபடி எழுத அமர்ந்தேன்.

நான் கடைசியாக கிளி ஜோசியனொருவனைப் பார்த்தது 6-7 வருடங்களுக்கு முன் கிழக்கு தாம்பரத்தில் வசித்தபோதுதான். ரயில் நிலையத்திற்குள் நுழையும் சாலையில், ஜோசியர்கள் சிலர் இருப்பார்கள், அவர்களில் கிளி ஜோசியர்களும் உண்டு. நான் பார்த்த வரை பெரும்பாலும், அவர்கள் யாருக்கேனும் ஆருடம் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். அதைக் கேட்பவர் முகத்தில் தெரியும் ஆயாசத்தையும், துயரையும் எளிதில் மறக்க முடியாது. நான் புதுச்சேரி வந்த பிறகு -இன்று பார்ப்பது வரை-, கிளி ஜோசியர் எவரும் கண்ணில் தென்பட்டதில்லை.

எங்கிருந்து கதையை ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்குக்கும்போது நான் செங்கல்பட்டில் வசித்தபோது கிளி ஜோசியம் பார்த்த நிகழ்வொன்று நினைவுக்கு வர, அதையே கொஞ்சம் இட்டுக் கட்டி கதையாக எழுதி விடலாமே என்று முடிவு செய்தேன். இது கதையே இல்லை, வெறும் அனுபவக் குறிப்பாக இருக்கிறதே என்று -நியாயமான – விமர்சனம் வரும்தான் என்றாலும், உண்மையின் வீச்சிற்கு என்று ஒரு மதிப்பு இருக்கும் இல்லையா, என்று என்னை சமாதானம் செய்து கொண்டு இதை எழுத உட்கார்ந்தேன்.

செங்கல்பட்டில் பெரிய மணியக்காரத் தெருவில் நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு பின்மத்திய பொழுதொன்றில் கிளி ஜோசியன் வந்த அன்று பள்ளி விடுமுறை நாளாக இருந்திருக்க வேண்டும். மாடியில் வீட்டின் சொந்தக்காரரும், கீழே மூன்று போர்ஷன்களில் குடியிருப்பவர்களுமாக இருந்த 4 வீடுகளிலும் பெண்களும், குழந்தைகளும் மட்டுமே இருந்தார்கள். குடித்தனக்காரர்கள் அனைவரும் ஜோசியம் கேட்க கூடினோம். ஆனால் நான் இன்று பார்த்த பெண் போல் இல்லாமல், கொஞ்சம் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும், அத்துடன் வித்தையொன்றை பார்க்கப்போகும் ஆர்வத்துடன் தான் அனைவரும் இருந்தார்கள் என்று நினைக்கிறேன்.

முதலில் ஜோசியம் பார்த்தது சுந்தரி அக்கா. கிளி அவருக்கு எடுத்த சீட்டை பார்த்து விட்டு, “கவலைப் படாதம்மா, எல்லாம் நல்லபடியா நடக்கும்” ,”புருஷனுக்கு வேலை சரியாகிடும்” என்றெல்லாம் ஜோசியன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு மகா ஆச்சரியம். பின்னே, சுந்தரி அக்கா பற்றி புட்டு புட்டு வைக்கிறானே. புதிதாக திருமணமாகி செங்கல்பட்டிற்கு அருகில் இருந்த கிராமத்தில் இருந்து வந்திருந்தவர் சுந்தரி அக்கா. அவர் கணவர் சென்னையில் எதோ தொழிற்சாலையில் தற்காலிக ஊழியராக பணியாற்றிக்கொண்டிருந்தார். நீண்ட பணி நேரம், விரைவுப் பேருந்துகள் அதிகம் இல்லாத காலத்தில் நீண்ட நேர ரயில் பயணம், இரவு நேர ஷிப்ட் என கடும் சுமை அவருக்கு. நேரங்கெட்ட நேரத்தில் பணி முடிந்து வருவதாலேயே இருவருக்கும் அவ்வப்போது சண்டை வர அக்கா கடுமையாக கத்திக் கொண்டிருப்பார். அருகில் இரு குடும்பங்கள் இருக்கின்றனவே, நான் வேறு பேச்சுத் துணைக்கு இருக்கிறேன், அக்காவிற்கு என்ன தனிமை இருக்கப்போகிறது, எதற்காக தேவையில்லாமல் சண்டையிடுகிறார் என்று அப்போது நினைத்துக் கொள்வேன். அதே நேரம், அந்த வார இறுதியிலே சிரித்தபடி பரவசமாக கிராமத்திற்கோ, சினிமாவிற்கோ இருவரும் கிளம்பி விடுவார்கள் என்பதையும் கவனிப்பேன். வத்தக் குழம்பின் உபாசகனாக மட்டுமே இருந்த எனக்கு, உருளைக் கிழங்கும், பூண்டும் கொண்டு செய்யப்பட்ட காரக்குழம்பை அறிமுகப்படுத்தியவர் அக்காதான். பின் என் வீட்டில் சொல்லி அதை செய்வித்த போதும் , பிற இடங்களில் அதை உண்டபோதும் அந்த முதல் நாள் ருசியின் பரவசம் மட்டும் கிட்டவேயில்லை. இதெல்லாம் எனக்கும் தெரிந்த விஷயங்கள் ஆச்சே, ஜோசியனும் சரியாக அக்காவின் கணவரின் வேலை குறித்தெல்லாம் சொல்கிறானே என்று பரவசமாக அவன் பேசுவதையே கேட்டுக்கொண்டிருந்தேன்.

அதிலிருந்த சூட்சுமத்தை புரிந்து கொள்ள இன்னும் சில வருடங்கள் தேவைப்பட்டன எனக்கு. உண்மையில் நான் மேலே கூறியவற்றுள் பல விஷயங்களை ஜோசியன் சொல்லவில்லை (கணவன்-மனைவி சண்டை, வார இறுதி இணக்கம் இத்தியாதி). அவன் சொல்லியது வேலை, எதிர்கால வாழ்க்கை பற்றிய பொதுப்படையான விஷயங்களை மட்டுமே. அவற்றையும்கூட, அக்காதான் பெரும்பாலும் சொல்லிக்கொண்டிருந்தார் என்பதும் பிறகு புரிந்தது. ஜோசியனின் பாணி எளிமையானது. கிளி எடுக்கும் சீட்டைப் படிக்க வேண்டியது, தொண்டையைச் செறுமி, “இன்னும் கொஞ்ச காலத்துக்குத்தான், அப்பறம் சரியாகி விடும்” என்பது போல் எடுத்துக் கொடுக்க வேண்டியது. அதுவே ஜோசியம் பார்க்க வந்தவர்களுக்கு தூண்டுதலாக அமைய, அவர்கள் தங்கள் கஷ்டங்களைச் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள், அதன் பின் அதைப் பற்றிக் கொண்டு சில நல்வார்த்தைகளை ஜோசியன் சொல்ல வேண்டியது. அவ்வளவு தான் விஷயம். அன்றும் அதுதான் நடந்தது. கிளியையே அதிகம் கவனித்துக் கொண்டிருந்த எனக்கு இந்த நுட்பம் அன்று புரியவில்லை, ஜோசியனே அனைத்தையும் சொல்லி விட்டதாக – எனக்குத் தெரிந்த, அவன் சொல்லாததை, பிற விஷயங்களைக் கூட அவன் சொல்லியதாக நானே மிகைப்படுத்தி – எண்ணிக்கொண்டேன். அக்காவும் அப்படி உணர்ந்தாரா என்று தெரியாது. அக்காவின் மனதை இலகுவாக்கும் சிலவற்றை ஜோசியன் சொல்லி முடிக்க, வீட்டின் முன்பகுதியில் குடியிருக்கும் அக்கா அடுத்து ஜோசியம் பார்த்தார்.

அவருக்கு ஜோசியம் பார்ப்பது எளிதாக இருந்திருக்க வேண்டும். அக்காவின் முதல் குழந்தைக்கு – அப்போது அவனுக்கு 3 வயதிருக்கும் – உதட்டில் பிளவு (cleft lip) இருக்கும். பள்ளியில் சேர்த்தபின், அவனால் படிக்க முடியுமா என்ற கவலை அவர்களுக்கு. அவர்களாக எதுவும் சொல்லாமலேயே ஜோசியன் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த நல்ல விஷயங்களை சொன்னான். நல்ல படிப்பு, சம்பாத்தியம், நல்ல இடத்தில் திருமணம் (3 வயது மற்றும் 1 வயதான குழந்தைகளின் திருமணம் பற்றி அவன் குறி சொல்வதின் அபத்தம் அப்போது எனக்கு புரியவில்லை).

அக்காவின் கணவர் பற்றி வழக்கமான பொத்தம் பொதுவான கருத்தாக “எல்லாம் சரியாயிடுவாரம்மா” என்று சொன்ன போது மட்டும் பிலி பிலி என அவரை அக்காவும், அவர் மாமியாரும் பிடித்துக் கொண்டது எனக்கு வியப்பளித்தது. ஏனென்றால், அக்காவின் குடும்பத்தை விட பொருளியல் ரீதியாக பின்தங்கிய குடும்பம் என்றாலும், அரசு வேலை, பணி உயர்வுக்கான வாய்ப்புக்கள் இதையெல்லாம் பார்த்து திருமணம் முடிக்கப்பட்டது என்று பேசிக்கொள்ளப்பட்டது (அதாவது மற்றவர்கள் பேசிக்கொள்வதை நான் தன்னிச்சையாக ஒட்டுக் கேட்டேன்). மாமியாரும் இவருடன் அவ்வப்போது வந்து தங்கியிருந்தார். கிராமத்தில் கணவரின் தம்பி ஒருவன் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு இவர் அதிகம் உதவுவதாக வீட்டில் சண்டை வரும், அக்காவின் குடும்பத்தினரும் வந்து சண்டையிடுவதை பார்த்திருக்கிறேன். மாமியார், மருமகள் இருவருக்குமே மகன்/கணவன் மற்ற தரப்பிற்குதான் சாதகமாக இருக்கிறான் என்ற எண்ணம் உண்டு என்பதால் சில சமயங்களில் இருவரும் ஒரே நேரத்தில் அவரை திட்டிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். அதே சூழல் என்று சொல்ல முடியாவிட்டாலும், பல ஆண்டுகள் கழித்து நாவலொன்றைப் படித்தபோது, அதன் சம்பவங்களிற்கும் நான் அக்காவின் குடும்பத்தில் பார்த்ததற்கும் உள்ள சில ஒற்றுமைகளை ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.

அன்று ஜோசியம் பார்த்த பெண்கள் , குழந்தைகளின் எதிர்காலம், கணவனின் வேலை இவற்றை பற்றியே கேட்டார்களே தவிர தங்களை பற்றிய தனிப்பட்ட கணிப்புக்கள் எதுவும் கேட்கவில்லை. அனைவரும் முதன்மையாக எதிர்பார்த்தது தங்கள் குடும்பம் குறித்த சில நற்சொற்களை மட்டுமே.

அடுத்து நான் ஜோசியம் பார்த்து முடித்தபின், ராட்சசி எங்களுடன் சேர்ந்து கொண்டார். எங்களுக்கு அடுத்த வீடு அவருடையது. வக்கீலிடம் குமாஸ்தாவாக இருந்த அவர் கணவர், வக்கீலின் சில பல ரகசியங்கள் அறிந்தவர் என்றும் அதனால்தான், இத்தனை பெரிய வீட்டை அவரால் கட்ட முடிந்தது என்றும் பேச்சு  இருந்தது. ராட்சசி குமாஸ்தாவின் மனைவியே அல்ல (குறைந்தபட்சம் முதல் மனைவி அல்ல), முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது தொடுப்பு ஏற்பட்டதாகவும், அவர் நோயில் விழ – நோயுற்றவரை கருணையில்லாமல் வீட்டின் பின்புறத்தில், தோட்டத்தில் இறக்கும் வரை கவனிப்பற்று படுக்க வைத்திருந்ததாக, ராட்சசிதான் செய்வினை வைத்ததாக – இவர் வீட்டினுள் நுழைந்ததாகவும் பேசிக்கொண்டார்கள். இதனாலெல்லாம் சிறுவர்களான நாங்கள் அவரை ராட்சசி என்றழைக்கவில்லை. இன்று இதை சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது, ஆனால் சராசரிக்கும் சற்று அதிகமான உயரம், பருமனான உடல்வாகு, அடர் கருப்பு நிறம், சுருட்டை முடி என அவரின் தோற்றம்தான் அப்படி அழைக்கச் செய்திருக்க வேண்டும்.

இத்தனைக்கும் எப்போதும் அடர்த்தியாக குங்குமமும் விபூதியும் பூசிக்கொண்டிருக்கும், கழுத்தில் சிறு ருத்திராட்சை மணி அணிந்து கொண்டிருக்கும் அவரைப் பார்த்தால், பக்தி மிகுந்தவர் என்றே சொல்லலாம். எனக்கோ அவைகூட பீதி அளிக்கக்கூடியதாக – மந்திரம்,சூனியம் என என் கற்பனை தறிகெட்டு ஓடும் – இருந்தது. தலையில்லாதப் பெண் ஒருவர் இரவு நேரத்தில் பிச்சை கேட்க வருகிறார், இல்லையென்று சொன்னாலும் சரி, ஏதேனும் கொடுக்க கதவைத் திறந்தாலும் சரி பயங்கரமாக எதோ செய்து விடுகிறார் என்றும் ஒரு முறை புரளி பரவியது. (கொஞ்ச நாட்களுக்குப் பிறகு தலையில்லாத பெண்ணும் வேறெங்கோ பிச்சை எடுக்கக் சென்று விட, எல்லாப் புரளிகளைப் போல இதுவும் முழுமையாக இல்லாததால் அவர் பயங்கரமாக என்ன செய்தார் என்பது இறுதி வரை தெரியாமலேயே போய் விட்டது ). இதைக் கேட்டதும் நான் முதலில் சந்தேகப்பட்டது ராட்சசியைத்தான். நாங்கள் குடியிருந்த வீட்டின் கடைசி போர்ஷன் எங்களுடையது என்பதால் நீண்ட சந்தொன்றில் நுழைந்து தான் செல்ல வேண்டும். வீட்டின் முன்புறத்தில் உள்ள – காலமாகி விட்ட – வீட்டைக் கட்டியவரின் மார்பளவு சிலை கிலியை ஏற்படுத்தினால், இருண்ட சந்திற்குள் நுழைந்தவுடன் சுவற்றின் மறுபுறமுள்ள வீட்டில் ராட்சசி என்ன மந்திர தந்திர செயல்களில் ஈடுபட்டிருக்கிறாரோ என்று தறிகெட்டு ஓடும் என் கற்பனை பீதியை இன்னும் அதிகமாக்கும்.

பயம் உருவாக்கிய விலகலுடன்தான் தெருவில் உள்ளவர்கள் அவரிடம் பழகினார்கள். அன்றெல்லாம் சாதாரண கருப்பு/ வெள்ளை தொலைக்காட்சி என்பதே தெருவில் ஓரிரு வீடுகளில் மட்டுமே இருந்த சூழலில், ராட்சசி வீட்டில் வண்ணத் தொலைக்காட்சியே இருந்தது. இருந்தும் தொலைக்காட்சி இருக்கும் மற்ற வீடுகளுக்கு வார இறுதி படம், பாடல் நிகழ்ச்சியை பார்க்க முண்டி அடித்து செல்வார்களே தவிர ராட்சசியின் வீட்டிற்கு யாரும் சென்றதில்லை. வார நாட்களில் மாலை நேரத்தில் பெண்கள் சிறு சிறு குழுக்களாக வீட்டு வாசல்களில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருப்பது தினசரி காட்சி. ஆனால் ராட்சசி மட்டும் தனியாக தன் வீட்டு வாசலில் அமர்ந்திருப்பார். தெருவில் செல்பவர்களிடம், அடுத்த வீட்டுக்காரர்களிடம் சில சமயம் பேச்சு கொடுத்தாலும் அதை சில நிமிடங்களுக்கு மேல் அவர்கள் நீடித்ததில்லை.

எனவே ராட்சசி எங்களுடன் சேர்ந்து கொண்டது எங்களுக்கு உவப்பாக இல்லாததோடு, சிறிது அசூயையும் உருவாக்கியது. அவர் எதிர்காலம் குறித்து தெரிந்து கொள்ள அல்ல, வேடிக்கை பார்க்க மட்டுமே வந்திருந்தார். ஜோசியன் அவரிடம் சீட்டெடுக்கச் சொன்ன போது ‘எல்லாம் அவனுக்குத் தான் தெரியும்’ என்பதாக ஏதோ முதலில் சொன்னவர், சின்ன வற்புறுத்தலுக்குப் பின் ஒப்புக்கொண்டார். ஆனால் இரண்டு மூன்று முறை கிளி அவருக்கான சீட்டை எடுக்கவில்லை. அவர் குறித்து விபரீத கற்பனைகளையே கொண்டிருந்த எனக்கு இதுவும் பயத்தையே உண்டாக்கியது, கிளிக்கு இவர் ரகசியங்கள் குறித்து தெரியும், ஆனால் அவற்றை சொல்ல பயம் அதனால்தான் சீட்டை எடுக்கவில்லை என்று நினைத்தேன். ஜோசியனோ அதற்கு சிறிது பருப்பும் தண்ணீரும் கொடுத்து சீட்டை எடுக்க வைத்து விட்டான். வழக்கம் போல், நேர்மறை விஷயங்களை சொல்ல ஆரம்பித்தவன், சற்று நிறுத்தி, கொஞ்சம் யோசித்தபின், ராட்சசி அடுத்த இரு வருடங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று பொருள்படும் படி பூடகமாக ஏதோ கூறினான். இப்படி சொல்வதால் ராட்சசி கோபமடைவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை, மீண்டும் ‘எல்லாம் அவன் பாத்துப்பான்’ என்பதாக ஏதோ சொன்னார். இருந்தாலும் அவர் வந்ததிலிருந்தே குறைந்து கொண்டிருந்த சூழலின் இனிமை இப்போது முற்றிலும் மறைந்து விட்டது. மாலை நேர வேலைகளை ஆரம்பிக்கும் முன், சிறிது நேரம் பொழுதைக் கழிக்கும் வழியாக ஜோசியம் பார்ப்பதை அணுகியவர்களுக்கு இப்போது அங்கிருந்து கிளம்பினால் போதும் என்று தோன்ற ஆரம்பித்தது. ஜோசியனும் கிளம்பினால் போதும் என்ற மனநிலையில் இருந்தவன் போல மூட்டை கட்டிக் கொண்டு அங்கிருந்து சென்றான். ராட்சசியிடம் பணம் வாங்கினானா என்பதைக்கூட இப்போது என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை. இது என்னுடைய வழக்கமான அதீத கற்பனையாகக் கூட இருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

அடுத்த ஒரு வருடத்தில், சுந்தரி அக்காவின் கணவருக்கு பணி நிரந்தரமாகி அவர்கள் சென்னைக்கே சென்று விட்டார்கள். அக்காவிற்கு குழந்தை பிறந்தது என்பது தான் அவர்கள் குறித்து நான் கடைசியாக கேள்விப்பட்டது. (“ஜோசியர் சொன்ன மாதிரியே நடந்துடுச்சு இல்ல அக்கா ” என்று அவர்கள் கிளம்புவதற்கு சில நாட்கள் முன் நான் கேட்ட போது “எந்த ஜோசியண்டா” என்று அவர் ஏன் கேட்டார் என புரிந்து கொள்ள சில ஆண்டுகள் தேவைப்பட்டது). இன்னொரு அக்காவின் கணவருக்கு பதவி உயர்வு கிடைத்து அவர்களும் காலி செய்து, செங்கல்பட்டிலேயே வேறு வீட்டிற்கு சென்று விட்டார்கள். அந்தப் பையனின் உதட்டுப் பிளவிற்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இப்போது இரு குழந்தைகளும் பெரியவர்களாகி, நல்ல வேலை கிடைத்து (இரண்டாவது குழந்தை டாக்டர்) அவர்களுக்கும் திருமணம் முடிந்து பெற்றோர்களாகி விட்டார்கள் . இதல்லாம் இயல்பாக நடந்தவை, எளிதில் யூகிக்கக் கூடியவை என்று நினைத்தாலும் ராட்சசி குறித்து யோசிக்கும் போது அப்படி உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

இரண்டு வருடங்களுக்குள், அதிக பட்சம் 60 வயது வயதாகியிருக்கக்கூடிய குமாஸ்தா, எந்த நோயினாலும் பீடிக்கப்பட்டிருக்காத நிலையில், திடீரென்று காலமாகி விட்டார். அதன் பின் சில நாட்களில் ராட்சசி வீட்டை விட்டு சென்று விட்டார், அவரை அதன் பின் குமாஸ்தாவின் -முதல் மனைவியின்- பெண் தன் சொந்தக்காரர்களுடன் வந்து சண்டையிட்டதில் ராட்சசி வெளியேற நேரிட்டது என்ற பேச்சு இருந்தது. சூனியம், பேய் குறித்த அதீத பயங்கள் அப்போது கொஞ்சம் குறைந்து விட்டதால், அவர் குறித்து நான் அதிகம் கவனம் கொள்ளவில்லை, ஆனால் மந்திரம், தந்திரம் தெரிந்தவர் என்று சொல்லப்பட்டவர் ஏன் பெரிதாக எதிர்க்காமல் சென்று விட்டார் என்று மட்டும் பின்னர் யோசித்திருக்கிறேன். அனைவரும் நல்ல விஷயங்களையே சொன்ன ஜோசியன், ஏன் ராட்சசிக்கு மட்டும் எதிர்மறையாகச் சொன்னான் என்பதும் குறித்தும் ஒரு வேளை நாலைந்து பேருக்கு ஜோசியம் பார்க்கும்போது ஒருவருக்கேனும் அவ்வாறு சொல்லவேண்டும் என்பது அவன் தொழில் முறையோ என்றும், கிளி ஏன் இரண்டு மூன்று முறை கழித்தே சீட்டை எடுத்தது என்றால், அதற்கும் அயர்ச்சி ஏற்பட்டிருக்கக் கூடும் என அதற்கும் நானே காரணங்களை உருவாக்கி இருக்கிறேன்.

அவன் ஜோசியம் மெய்யோ, பொய்யோ இருந்தாலும் சரி, என்னளவில் அவனை நம்ப மாட்டேன். பின்னே, கிளி எடுத்த எனக்கான சீட்டை பார்த்து ‘அய்யனாருக்கே அல்வா கொடுப்பாரு’ என்று என்னைப் போய் மகா சாமர்த்தியசாலியாக குறிப்பிட்டவனை நான் எப்படி நம்ப முடியும்? ஆனால் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். பெரும்பாலான வீடுகளைப் போல, என் பெற்றோரும் என் ஜாதகத்தை சில, பல தொழில்முறை ஜோசியர்களிடம் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். சொல்லி வைத்தார் போல் அனைவரும் ‘மிகச் சிறந்த ஜாதகம், ஆஹா, ஓஹோ’ என்றும் ‘பணம் கொட்டும் , வெளிநாட்டு வாழ்க்கை கிடைக்கும் ‘ என்றெல்லாமும் சொன்னதாக திரும்பி வந்து என்னிடம் கூறும் போது உண்டாகாத மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அன்று கிளி ஜோசியன் சொன்னதைக் கேட்டு எனக்கு உண்டானது. அதன் பிறகு சில நாட்களுக்கு, எதிலும் வெற்றி பெறுவதற்கென்றே ஆசிர்வதிக்கப்பட்டவனாக, பலே சாகசக்காரனாக என்னை நினைத்துக் கொண்டிருந்ததும், பிறகு இயல்பாகவே அந்த மயக்கங்கள் கலைந்து விட்டன -என் அசமஞ்சத்தனம் குறித்து வெகு விரைவில் உணர்ந்து கொண்டதால் – என்பதும் உண்மையே (மற்ற தொழில்முறை ஜோசியர்கள் சொன்னதும் கூட பெரிதாக பலிக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்). ஆனாலும் அவன் சொன்னதைக் கேட்டபோது உண்டான சந்தோஷத்தின் எச்சத்தை , இதோ இப்போது அதை பற்றி எழுதும்போதும் உதட்டில் தோன்றும் புன்முறுவலில் உணர்கிறேன்.

..என்று இருந்திருக்கலாம்

ஸ்ரீதர் நாராயணன் 

the_warmth_of_nostalgia
அத்தனை நொடிகளுக்கு
நிலைகுத்தியது போலிருந்த
பார்வையின் நேசம்
அப்போது புரியாமலிருந்திருக்கலாம்.

பொருள் புரிந்தபோது
எடுத்து சொல்வதெப்படி எனத்
தெரியாது மலைத்திருந்திருக்கலாம்.

அப்போதே பதிலிறுத்து
பருவத்தே செய்த பயிரென
இன்னுறவை இன்பமாய்
பேணியிருந்திருக்கலாம்.

கலப்பில்லா அன்பென
வீசிவிட்டு சென்ற வெம்மையை
நினைத்திடும் கணமெல்லாம்
உணரமுடியாமல்

இப்போது
தணிந்து உலர்ந்தும்
போயிருந்திருக்கலாம்

அணைதல்

சரவணன் அபி

கண்கள் எரிய

பார்த்துக் கொண்டிருந்தேன்

வெளியும் இருளும்
கலங்கிக் குழம்பி
வண்ணங்கள் மறைந்து தோன்றி
வடக்குவான் ஒளித்திரையின்
நினைவையழிக்கும்
குழப்பச் சித்திரம் போல்
நிறமற்ற நிறம்
ஒளியற்ற ஒளி

தெளிவைத்
தேடவும் தோன்றா
சுயஅழிவின் கவர்ச்சி

திரைவிலக்கி இருள்கூர்ந்து
ஒற்றைச்சுடர் ஒளிர்வில்
நிலைக்கக் கண்டேன்

ஒரு சுடரின் மறுச் சுடர் –
ஓராயிரம் சுடரூட்டுதல்
உயர்வன்றி வேறென்ன

இவ்வார புனைவு – தன்ராஜ் மணியின் ‘அணங்கும் பிணியும் அன்றே’

தன்ராஜ் மணியின் ‘அணங்கும் பிணியும் அன்றே‘ என்ற சிறுகதை காமம் நிறைந்த ஒரு பெண்ணின் மனநிலையை அவள் பார்வையில் விரித்துச் செல்லும் கதை. சங்கப் பாடல் அறிமுகம் உள்ளவர்கள் தலைப்பைக் கண்டதும் கதையின் உட்பொருள் என்ன என்பதை உணர்ந்து கொள்வார்கள். அந்த இடத்துக்கு கதையைக் கொண்டு செல்வதில் தன்ராஜ் மணி எந்த அளவு வெற்றி பெறுகிறார் என்ற அளவில் இந்தக் கதை வெற்றி பெறுகிறது.

நியூ யார்க்கர் இதழில் வரும் சிறுகதைகளுடன் This Week in Fiction  என்ற தலைப்பில் எழுத்தாளருடன் ஒரு சிறு உரையாடல் நிகழ்த்தி அதைப் பதிப்பிப்பது வழக்கம். இதை நாமும் இனி தொடர்ந்து செய்து பார்க்கலாம் என்ற எண்ணத்தில் தன்ராஜ் மணியுடன் ஒரு சிறு உரையாடலைத் துவக்கினோம். இனி வரும் வாரங்களில் இதை இன்னும் விரிவாக, தொடர்ந்து செய்ய எண்ணம்.

கேள்வி : ‘அணங்கும் பிணியும் அன்றே’ என்ற தலைப்பு வித்தியாசமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக, இங்கிலாந்தில் வாழும் ஒரு பெண்ணின் கதையைச் சொல்ல இதைப் பயன்படுத்தியிருப்பதைச் சொல்ல வேண்டும். ஏன் இந்த தலைப்பைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

தன்ராஜ் மணி : அந்த வரி காமத்தை உண்பது, உறங்குவது போல ஒரு இயல்பான ஒரு விஷயமாக முன் வைக்கிறது. இக்கதை காமத்தை அப்படிப்பட்ட இயல்பான உயிரியல் தேவையாய் பார்க்கும் ஒரு பெண்ணுடையது, ஆகவே சரியான தலைப்பாய்ப் பட்டது. கதை நிகழும் இடத்தை நான் கணக்கில் எடுக்கவே இல்லை. கலாசார வேறுபாடுகள் இருக்கலாமே ஒழிய உணர்வுகள் எல்லா இடத்திலும் ஒன்றே என்பது என் பார்வை.

கேள்வி : நீங்கள் இந்தக் கதையை எழுத எது காரணமாயிற்று? (இந்தக் கதையின் ஊற்றுக்கண்/ தோற்றுவாய் என்ன?)

தன்ராஜ் மணி : சில மாதங்களுக்கு முன்பு சங்க இலக்கிய பாடல்களை புரட்டிக் கொண்டிருந்தேன்.

மிளைப் பெருங்கந்தனின் கீழ் வரும் பாடலுக்கு ஒரு சுவாரசியமான உரை அதில் இருந்தது. அதன் சாராம்சம், காமம் விருந்தாவது நம் மனதில், மனநிலையில், புற விஷயங்களில் அல்ல என்பது. முதிய பசு புல்லைச் சாப்பிட முடியாவிட்டாலும் ஆவலாய் அதைச் சுவைப்பதை முன் வைத்து உரையாசிரியர் அவ்வாறு சொல்லி இருந்தார்.

Tools and means are not but the mindset is all it matters” என்பது எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

அதுவே முதல் தூண்டுதல், தோற்றுவாய். இங்கிலாந்தில் காமத்தைப் பற்றி இவ்வகை வாழ்க்கை நோக்கு கொண்டவர்கள் ஏராளம், ஆகவே கதை நிகழும் இடத்தை இங்கிலாந்தாக வைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தேன்.

காமங் காம மென்ப காமம்
அணங்கும் பிணியு மன்றே நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா விளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே.

இராகப் பெண்கள் – 9: சுனாத வினோதினி, பிருந்தாவன சாரங்கா- மழலைச் சிரிப்பு

பானுமதி. ந

9: சுனாத வினோதினி, பிருந்தாவன சாரங்கா- மழலைச் சிரிப்பு

சுனாத வினோதினி – ச க ம த நி ச ச நி த ம க ச
பிருந்தாவன சாரங்கா – ச ரி ம ப நி ச ச நி ப ம ரி க ச

நினைவின் தேன்கூட்டில் வருடங்களின் மிதிகாலடியில் புதைந்து போன ஏதோ ஒரு பாதாள அறையிலிருந்து மணி ஒலி கேட்கிறது”: ‘த்வனி‘யில் “சுனாதினி” இப்படித்தான் அறிமுகமாகிறாள். சொல்லில் சொல்லாத பொருளையும் சேர்த்துச் சொல்லும் ஆற்றல் இரு பொருட்களுக்கு உள்ளது- ஒன்று மௌனம்— மற்றொன்று த்வனி. தம்பூரின் மந்த்ர ஸ்தாயி ஒலிப்பதே ஒரு இசை. இராகமாக, பதமாக, பாடலாக, சுரங்களாக இல்லாமல் நாதமாக ஒலிக்கும் சுனாதினி. எழுத்தில் சித்து விளையாடும் லா.ச ரா சொல்லின் நாதத்தில் நம்மை மூழ்கடிக்கிறார்.

“ஒலியே நீ மோனத்துள் புகுந்து கொண்டதால் உன்னைக் கேட்கவில்லை என்று உன்னையே நீ ஏமாற்றிக் கொள்கிறாயா? கன்ணாடியில் பிம்பம் விழும் த்வனி கூட எனக்குக் கேட்கிறது. நீ அதை அறிவாயோ? எல்லாம் நெஞ்சு நிற்கும் மீட்டலுக்கேற்ப, ஆனால் அறிவது, கேட்பது இவையெல்லாம் என்ன வெறும் வார்த்தைகள் தானே! அவைகளின் பொருளும் உண்டான பொருளல்ல. அவ்வார்த்தை வரம்புகள் சொல் ஓட்டம் நீடித்தவரை நாம் நமக்கு ஆக்கிக் கொண்ட பொருள் ஆனால், சொல் தாண்டிய உயிர், அவ்வுயிரையும் குடித்து உயிருடன் உயிர் தந்த பொருளையும் விழுங்கிய இருள் பற்றி நாம் என்ன கண்டோம்?”

ஒலியின் உயிர்நாடி என நாம்கண்டு கொள்வது நாம் எதை அறிந்துள்ளோமோ அதன் வழி தான். அது சொல்லவந்ததையெல்லாம் நம்மால்அணுகமுடிவதில்லை. “தனியாக இருக்கிறேன்“ என்றாலும் நான் என்னுடன் தானே இருக்கிறேன்! சிந்தைகள் எழுப்பும் ஒலி; அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஒலி. குளத்தில் எறிந்த கல் என பரப்பைச சுழற்றி உள்ளே அமையும் ஓசை—அறியா ஓசை.

ஆம், அலுப்பற்ற விஷயத்தின் முடிவற்ற விளிம்பில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்” சுனாதினியின் த்வனியில் இதைப் போல் ரசமான பேச்சுக்கள் — ஆதார சுரத்திலிருந்து மாற்றி அடுத்த சுரத்தினை அடிப்படையெனக் கொண்டு பாடகர் தன் கற்பனையை விரிக்கையில் கேட்பவர் இராகத்தின் பெயர் அறியார். ஏன் அதன் சாயலைக் கொண்டு அவர் முன்னரே கேட்டிருந்த பாடலையும் நினையார். அவர் கேட்பது நாதம் ஒன்றினைத்தான். அது மீட்டும் புரிதலைத்தான். அது சேற்றில் புதையுண்டு நாம் மறந்து விட்ட ஒன்று; தன் நிலை கலைந்து மேலே எழுப்பும் அதிர்வலைகள்.

கண்டதைக் கண்டபின், அப்படிக் கண்டதாலேயே அதைக் காணாத முன் கற்பனையில் விளங்கிக் கொண்டிருந்த அதன் கற்பு நிலை சிதைந்து விடுகிறது என்று சொல்வேன்.” என்ன ஒரு சொல்லாடல்!

வினோதமான நாதம்— சுனாதம்— சுனாத வினோதினி— அது உன் தனிப்பட்ட த்வனி. நீ அறியப் பார்க்கும் பொருள்.. ஆனால், உனக்கு மட்டுமானதல்ல. அனைவரின் பொது. உனக்குள் கலங்கும், தெளியும், அமிழும், அழுத்தும், கண்காணாத ஒலியின் கண் பொத்தும் விளையாட்டு. முடிந்தால் கண்டுபிடி… சொல்லாதே. சொல் ஆட்சியில் இல்லை அது.

செங்கம்மா!

பெண்கள், உறவை நேசிப்பவர்கள் எனவும், ஆண்கள், ஊரை நேசிப்பவர்கள் எனவும் பொதுவான கருத்து உண்டு. உயிர்த்தேனில் அதை உரசிப் பார்க்கிறார் தி. ஜா. மன்னர் குலத்தில் அரசிகள் உண்டு. மக்கள் ஆட்சியில் தலைவிகள் உண்டு. தலைமைப் பண்புகளோடு அன்பும், உழைப்பும், சிறந்த மதி நுட்பமும், சிலை போன்ற வடிவழகும், கற்பின் கனலும் இணைந்தவள் செங்கம்மா.

இந்த நாவலில் அனுசூயாவை “மரப்பசு” அம்மணியின் சாயலில் தி ஜா படைத்திருந்தாலும், அன்பிலும், அழகிலும், அறிவிலும் செங்கம்மாவும், அனுசூயாவும் ஒன்றே. ப்ருந்தாவனி…… சாரங்கா பிருந்தாவன சாரங்கா

அதிலும் வறுமை நிலையிலுள்ள செங்கம்மமெய் வருத்தம் பாராது, சோர்விலாது தன் கணவனின் ஊருக்கு, அதாவது தான் புகுந்த ஊருக்கு தன் அன்பனைத்தையும் புகட்டுகிறாள். தன் நிலை தாழாது, அதே நேரம், ஆணவம் கொள்ளாது, செய்யும் தொழிலை வெறுக்காது வளைய வரும் ஓர் பெண். அவள் கதையின் நாயகனின் வீட்டில் வேலை செய்பவள். வேலையினூடே உதவி செய்பவள். அவள் கணவன் அந்த நாயகனின் காரியஸ்தர். இவள் ஏழ்மையைப் பாராட்டவில்லை, கணவனின் பொருளாதார நிலையைப் பழிக்கவில்லை.

பூவராகனின் உள் நிறைக்கும் ஒளி அவள். அனுசூயா, செங்கம்மா இருவரும் அன்பாலும், அழகாலும் அவனை ஆட்கொள்பவர்கள். ஈதல் இசைபட வாழும் அவன் தன் தந்தையின் நினைவாக தன் “ஆனைகட்டிற்கே” குடும்பத்துடன் வருகிறான். ஒற்றுமையில்லாத கிராமம். தன்னம்பிக்கையில்லா மனிதர்கள். ஒருவர் ஏற்றத்தில் மற்றவர் பொருமும் குணம். ஊர் கூடி தேர் இழுக்க முடியாமல் அவன் அந்தப் புராதனக் கோயிலை தானே புதுப்பிக்கிறான். ஆமருவி என்ற ஒரு சிற்பக் கலைஞனை தி ஜா கொண்டு வந்து நம்மை அசாத்தியமாகக் கவருகிறார். மிகப் படித்துவிட்டதாக தன்னை நினைத்துக் கொள்ளும் ஒருவன் மிகவும் முரண்டுகிறான். அவனை இணைத்துக் கொள்ள “பூவு” செய்யும் முயற்சிகள் செல்லுபடியாகவில்லை. இந்நிலையில் “கும்பாபிஷேகம்” நடத்த “பூவு” முற்படுகையில் “அவுச ஆனைக்கட்டியின்“ முழு விவசாயத்தையும் தன் செலவில், தன் முனைப்பில் அவன் செய்ய வேண்டுமென்று செங்கம் வைக்கும் கோரிக்கை. அதை அவன் ஏற்கும் விதம். அதற்காக அவன் கொண்டுவரும் நில விஞ்ஞானி. அவர் செய்யும் பயிர் சேவை. அதன் கண்டுமுதல். அதனால் ஊர் ஒன்று சேரும் அற்புதம். நாவல் கண் முன்னே விரிந்து விகசிக்கிறது. அதில் இணைய மாட்டாமல் படிப்பும், காமமும் மிகப் படித்தவன் கண்ணை மறைக்கின்றன.

ஊரில் அனைவரும் பூவராகனை தலைவனாக்க விழைய, அவன் மூலப்பொருளாக செங்கத்தைக் காட்டுகிறான். அவள் தலைமையேற்று அன்பால் அந்த ஒருவனையும் கட்ட நினைத்து அவன் வீடு சென்று பேசுகையில் அவன் நல்லதற்கும், தீயதற்கும் இடையே ஊசலாடிவிட்டு காமம் தகிக்க செங்கத்தை இழுத்தணைத்து அவள் கண்களிலே முத்தமிட்டு பின்னர் அவளை விட்டுவிடுகிறான். அவள் அன்பின் மூர்க்கத்தை உணர்கையிலே தான் முழுத் தூய்மையுடன் இல்லை என நினைக்கிறாள். அந்த வாதையிலிருந்து அவளை விடுவிக்கிறாள் அனுசூயா.

செங்கம் ஒன்றை நினைத்துக் கொள்வாள்…. பூவும், ஊராரும், ஆசார்யரும் அவள் சொல் கேட்கும் விதம்…. அழகற்ற, இளமையற்ற ஒரு பெண் இதையெல்லாம் சொல்லியிருந்தால் இவர்கள் கேட்டிருப்பார்களா? வெற்றி பெற்ற ஆணும், அழகான பெண்ணும் சமுதாயத்தில் கொள்ளும் மதிப்பு தனிதான்.

“சிப்பிக்குள் முத்து” என்று திரு. விஸ்வநாத் அவர்களின் ஒரு திரைப்படம். சமத்து இல்லாத ஆண் ஒரு விதவைப் பெண்ணை சட்டென்று மணம் செய்துவிடுவான். அவனுக்கேன் இந்தத் தெளிவு? அந்த ஊரில் துயர்படும் வேறு பெண்கள் இல்லையா என்ன? அல்லது இந்த நாயகியாவது அழகில் குறைந்திருக்கலாகாதா? இதைப் பற்றி அந்தப் படம் கேள்வி கேட்கவில்லை. அவள் தன் வாழ்வை மாற்றி அமைப்பாள் என அவனுக்குத் தோன்றித்தான் அவன் அவளை மணந்து கொண்டான் என்று சொல்லக் கூடும். அதில் 99% உண்மை ஆனாலும் அந்த ஒரு சதவீதம்?

அதையும் கையாளும் திறமை தி. ஜாவிற்கு மட்டுமே உண்டு. எதையும் மறைக்கவோ, மறுக்கவோ அவர் முயல்வதில்லை.

படிப்பும், தேவையான பணமும், நண்பர்களிடத்தில் பீறிடும் நேசமும், ஆசையும், காற்று போல் சுதந்திரமும், கவலையற்ற பெரு வாழ்வும், அன்பும், பேரன்பும் என அனுசூயா.

மிகக் குறைந்த படிப்பு, ஏழ்மை,அனைவரிடத்திலும் பெருகும் பேரன்பு, காமம் கொண்டவரை அன்பால் மட்டுமே வெல்லுதல் இயலாது என்ற பேரிடி, தன் தூய்மையைப் பற்றி கிலேசம், தன் அழகின் வீச்சும், கட்டும், காட்டும் மனிதர்களின் குணம், கணவனின் தோள் சேர்ந்து உகுக்கும் கண்ணீர். உண்மையின் வீச்சு.

செங்கம்மாவை அவன் ஒன்றும் செய்து விடவில்லை. அவன் அவள் கண்களில் முத்தமிட்டதைப் பார்த்தவர் யாரும் இல்லை. ஆனால் தன்னை ஒளித்து தான் வாழ அவள் நினைக்கவில்லை. அனுவிற்கும் ஒளிப்பதற்கு ஒன்றுமில்லை. அந்தப் படித்தவன் கூட அவள் கணவனுக்கு தன் உண்மையை ஒப்புக் கொண்டு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொள்கிறான்.

இந்த ஒப்பில்லா உண்மையின் நாதம் ரீங்கரித்துக் கொண்டே இருக்கிறது. நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் மூடிகளில் நம் உண்மைகளை நாம் அறியோம். அதன் ஒலி நமக்குக் கேட்பதில்லை.

த்வனி”யில் அம்மா, மனைவி, மகள், எதிர் வீட்டுப் பெண், அவள் சொல்லும் அவள் தாய், தொலைபேசியில் பேசும் சுனாதினி எனப் பெண்கள். ஒலி கோர்க்கும் சரடின் வழி வருபவர்கள். தம்பூரின் ஒரே நாதமென ஒலிப்பவர்கள். சுனாத வினோதினி.

உயிர்த்தேனில்” செங்கம்மாவும், அனுசூயாவும் பிருந்தாவனி மற்றும் சாரங்கா. ஆனால் இருவரின் ஒலியும் ஒன்றே. வீணையின் நான்கு தந்திகளையும் ஒன்றாக அழுத்தி எழும் ஒன்றேயான ஒலி. உண்மையின் ஒலி. பிருந்தாவன சாரங்கா.

oOo