Author: பதாகை

இராகப் பெண்கள் – 8: வராளி புன்னாக வராளி –அந்தி மயக்கம்

பானுமதி. ந

8: வராளி புன்னாக வராளி –அந்தி மயக்கம்

இதை நீர் சூழ்ந்த உலகு என்கிறார்கள். பனிக்குடத்துடன் பிறந்து நீர்க்குடத்துடன் நம் வாழ்வு நிறைகிறது. துவங்கும் புள்ளியும், முடியும் புள்ளியும் நீர்… நீர். நம் கடவுளின் தலையிலும் நீர்… அவன் உறைவிடமும் நீர்…

காவிரி பாயும் கன்னித் தமிழ்நாட்டில் தரங்கிணி அறிமுகமாகிறாள். அந்த ஆறுதான் அவளின் நதிமூலம்.. “எங்கம்மா என்னை எப்போ காவேரிக்குப் பெண்ணா ஆசீர்வாதம் பண்ணிவிட்டாளோ, அப்படியேதான் நான் ஆயிட்டேன்- வேண்டியவா, வேண்டாதவா எல்லாருக்கும் ஒண்ணாய், ஆத்து ஜலம் மாதிரி, எங்கெங்கே எப்படி எப்படியோ, ஒரு சமயம் ஒடுங்கி, ஒரு சமயம் பெருகி, ஒரு சமயம் ஒதுங்கி, ஒரு சமயம் நெருங்கி, எல்லோர் கைப்பட, எல்லாச் சொல்லும் பட வளர்ந்தேன்,” தரங்கிணி இராக “மாயா”.

அவள் கணவன்… தங்களிடையில் குழந்தையும் கூட தனிமையின் பங்கம் என நினைப்பவன். அவன் சொல்லும் ஒரு தொடர் நம்மைப் புரட்டிப் போட்டுவிடும். ”தனியாயிருக்கலாம். ஆனால்…தனிமையாயிருத்தல்…..அப்பா

குளிக்கப் போனவிடத்தில் மூழ்கிப் போய் தான் இறந்து போய்விட்டோம் என்பதை உணரும் உணர்வு மாத்திரமிருந்தால் எப்படி இருக்கும்?” அவனை அலைக்கும் தீயை அவள் நெருக்கத்தின் குளுமையில்தான் ஆற்றிக் கொள்ள முடிந்தது. சாவும் சத்தியமும் அவனளவில் ஒன்று.

அவள் உயிர் நீட்சி ஒன்று தான் வறட்சி தீர்க்கும் மருந்து என்கிறாள். சொல்லாலே மந்திரம் செய்யும் கதை இது. ”எனக்கு உயிர் மேல்தான் ஆசை. நான் செத்துப் போனாலும் உசிரோடு இருக்கணும். உசிர் மேலே எனக்கு அவ்வளவு உசிர்.”

இருக்குன்னா இல்லை என்போம். இல்லேன்னா இருக்கு என்போம் இப்படித்தான்”- அவள் சொல்லி, அவள் உணர்ந்து, இன்னுமொரு கல்யாணத்திற்கு அவன் செவி சாய்ப்பதை அவள் தாயாகப் போகும் தருணத்தில், தன்னை வளர்த்த ஆற்றின் கரையில் அவள் அறிவது….அப்பா! ”வானில் தங்க ரதம் ஒன்று உருவாகி எழும்பியது. கொத்துக்கொத்தாய்ச் சடை பிடித்த பிடரி மயிர் அலை மோத தலைகள்  உதறிக் கொண்டு வெள்ளை குதிரைகள் தாமே தோன்றி ரதத்துடன் தம்மைப் பூட்டிக் கொண்டன. ரதம் நகர்ந்தது. சக்கரங்களினடியில் அகிற்புழுதி தோகை தோகையாய் எழும்பிற்று.”

மாயா தரங்கிணி… ஆறு வளர்த்த இராகம்… அதுவே அவள் அகம், அதுவே அவள் புறம். அதுவே அவள் அறம் அதுவே அவள் மறம்.. அவளுயிரின் தொடர்ச்சி… தன்னை பலியிட்டாவது சாவிலும் வாழும் ஆசை.

அவள் புன்னாக வராளி..அவள் தொடங்குவதே நிஷாதத்தில்தான், முடிவதும் அதில்தான்
நி ச ரி க ம ப த நி நி த ப ம க ரி ச நி

இனி பங்கஜம்——நளபாக விருந்தில் முதன்மையான உணவு.

இவளை இனம் கண்டு கொள்வது அத்தனை எளிதில்லை.இவள் அந்த கலவையில் செய்த உணவோ, இந்தக் கலவையில் செய்த உணவோ என உண்பவனை கேட்டுக் கொள்ளச் செய்கிறார் தி. ஜா.

அதிக முதன்மையில்லாமல் அறிமுகமாகி நினைவில் நிற்கும் அற்புத ருசி. கண்களுக்கும், நாவிற்கும், வயிற்றிற்கும், மனதிற்கும் இசைவான ஒரு அமுது. ”இவளைப் பார்த்தால் இருபது வயது போல- முப்பது வயது போல- நாற்பது வயது போல-எல்லா வயதும் தெரிகிற தோற்றம்”. இது மாமியாரான ரங்கமணி மருமகளைப் பற்றி நினைக்கும் தோற்றம்.

யாத்ரா ஸ்பெஷலில் சமையல் தலைமையாக ரங்கமணி கண்ட காமேச்வரன் – ஒரு ஆசானாக, மகனாக, சமையல் கலைஞனாக, அம்பாள் உபாசகனாக, அறிவு, அழகு, ஒழுக்கம், பண்பு ஒருமித்தவனாக, தன் வம்சத்தின் சாபத்தை களைபவனாக ரங்கமணியைக் காண வைக்கிறது. அந்த யாத்திரையில் வரும் ஒரு ஜோதிடர் சொல்வது, அவளைச் சிந்திக்க வைத்து காமேச்வரனை தன் வீட்டில் தனக்கு மகனாக சமையல்காரனாக, பூஜை செய்து குல சாபம் போக்குபவனாக அழைப்பு விடுக்கிறது. இரவல் வம்சமாகவே வளரும் தன் குடியில் தன் வம்சத்து வித்து வேண்டும் என அவள் நினைக்கிறாள். அவளுக்கு ஒரு தத்துப் பிள்ளை உண்டு. அந்தப் பிள்ளை இந்த பங்கஜத்திற்கு சரியான இணை இல்லை என நினைக்கிறாள்.

ஒரே கூரையின் கீழ் வாழும் மூவரின் தனிமையைப் போக்க அவன் வருகிறான். அவர்கள் அன்பு செலுத்த அவன் வேண்டும். அவன் இது வரை அறியாத குடும்ப நேசத்தை அவர்கள் மூலம் அனுபவிக்கிறான். அவன் எல்லாமுமாக இருக்கிறான். தொட்டிச் செடியாக இருந்தவர்கள் தோட்டத்துக் கொடிகளாக, காற்றையும், சூரியனையும்,மிகும் நீர் உறிஞ்சும் மண்ணையும் அனுபவிக்கிறார்கள். இத்தனைக்கும் இடையில் ரங்கமணியும் பங்கஜமும் ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டு….

உனக்கில்லை …. எனக்குத்தான்”. இளமையும், மிக மிகத் தனிமையுமான நடுவயதும், வாழ்வின் பேழையிலிருந்து பருகத் தவிக்கின்றன. ரங்கமணியின் வயதும், நிலையும் அவளை இலைகள் மூடிய கனியெனக் காட்டுகின்றன. இளமையும், வாழ்வின் உரிமையும் பங்கஜத்தினை எண்ணத்தினால் சற்று அசைத்துப் பார்க்கின்றன. யாரும் இல்லா ஓர் முன்னிரவு சமயத்தில் காமேச்வரனின் விரல்களை பற்றச் செய்கின்றன. தனக்கு அதுவே போதும் என்று அவள் சொல்கையில் தி ஜா கத்தியின் மேல் நடந்த நம்மை பாதுகாப்பாக இறக்கி விடுகிறார். மன இயல் வல்லுனர் போல் தி ஜா போடும் கோலங்கள். உணர்ச்சியில் தடுமாறாத விவேகம்.. ஒரு சமையல காரன் சமைக்கும் மன- மண விருந்து. அவன் கரம் பட்டு அவள் தன் கணவனுடன் உடன்பட்டு காமன் எழுதும் உயிரோவியம்.

ஊரோடு உறவாகிறது அவனுக்கு. புழங்காத அறையினுள் காற்றும், வெளிச்சமும் அவனால் வருகிறது. நட்பும், நேசமும் கலகலப்பும் தனிமையைப் போக்கும் அருமருந்தென செயல்படுகிறது. பங்கஜத்திற்கு சீமந்தம் வருகிறது. அவன் அனைத்துமாக இருக்கிறான். அதில் தத்து வந்த பிள்ளையின் சொந்தக்காரர்களும், குணம் கெட்ட ஊர்க்காரரும் இவனை இணைத்துப் பேச, இந்த சின்னத்தனம் தாங்காது அவன் குமுறுகிறான். பங்கஜத்தின் கணவனோ இந்த அவப் பேச்சுக்களை ஒதுக்கி விடுகிறான். அவன் இருவரின் மேல் கொண்டுள்ள அசையாத நம்பிக்கை மிக அழகாக வெளிப்படுகிறது.

தன் இருப்பிடம் விட்டு வராத பங்கஜம். அவள் புகுந்த ஊரின் பல பகுதிகள் அவள் அறியாதவை. வறட்டு வாழ்வில் வசந்தம் என வந்தவன் அவன். ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் தோழமையானால் இந்த உலகில் தனிமை என்பதே இல்லை. உடல் கவர்ச்சியால் அவர்களின் நட்பை கொச்சைப்படுத்தும் சமூகத்தில், தனிமை என்றுமே தகிக்கும் நெருப்புதான். ஆனாலும், புனிதத்தை மட்டுமே இங்கே தி. ஜா நினைக்கவில்லை. ”உனக்கில்லை எனக்குத்தான் “ என்பதில் உளம் விழையும் நட்பை பூரணமாக அறிய உடலும் உணர வேண்டும் என்னும் மனிதர்களின் நுண்ணிய ஆவலை (ஆசை அல்ல) தி ஜா வினால் மட்டுமே விரசம் இல்லாமல் சொல்ல முடியும். சொல்லி பங்கஜத்தை, காமேஸ்வரனை, துரையை, ரங்கமணியை, ஜோசியக்காரரை வெற்றி பெறச் செய்யவும் முடியும்.

காமேச்வரன் தன் சில உடைமைகளை ரங்கமணியின் அகத்தில் வைத்துவிட்டு தன் பழைய யாத்ரா வேலைக்குத் திரும்புகிறான். கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணத்தையும் சொல்கிறான்.

வராளி… பொதுவாக கச்சேரிகளில் நடுவில் மட்டும் பாடப்படும் ஒரு இராகம். முதலில் பிடிபடாது போனாலும் பின்னர் தன் இடத்தில் கம்பீரமாக அமர்ந்துவிடும். சுரங்கள் ஆரோகணத்தில் வரிசைப்படி இல்லை. அவரோகணத்தில் இருக்கிறது. இரண்டு “க” ஏறுமுகத்தில் வருவதுதான் அதன் அழகு; அதன் எழுச்சி.. கீழே பாடுகையிலும்,நிதானமான ஆலாபனையிலும் உருவெடுத்து பின்னர் மலை அருவியிலிருந்து பெருக்கெத்தோடும் ஆறு போன்ற இராகம். எல்லோரும் எப்பொழுதும் அதைப் பாட முடியாது. தம்பூரின் சுருதியோடு தன்னைக் கலந்து அது இழையோடும்.

பங்கஜ வராளியைப் பாட தி. ஜாவால் தான் முடியும். தரங்கிணியைப் புன்னாக வராளியாகப் பாட லா.ச.ராவால் மட்டுமே முடியும்.

வராளி: ச க ரி கம ப த நி ச ச நி த ப ம க ரி ச
புன்னாக வராளி: நி ச ரி க ம ப த நி நி த ப மக ரி ச நி

வயலினில் ஒன்று. மகுடியில் மற்றொன்று. இரண்டுமே அம்சம்தான்.

oOo

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

புலரி

சிகந்தர்வாசி

கடற்கரையோரம் உட்கார்ந்துக்கொண்டு
அவன் கால் தடங்களை பார்க்கிறான்

சம்ஸார சாகரத்தில் ஒரு துளி ரத்தம் போல்
நீர் மேல் காலைச் சூரியன்

கண்ணுக்கு தெரியாத இலக்கை
நோக்கிப் பறக்கும் ஒற்றைப் பறவை

அவன் எழுந்து நடக்கிறான்

காலதேவன் மெல்லிய காற்றாய்
கால் தடங்களை அழிக்கத் துவங்குகிறான்

கிழக்கு வெளுக்கிறது

நெடுமரம்

ஸ்ரீதர் நாராயணன் 

 

tree-life-18184847

என் வழியில் நின்று கொண்டிருக்கும்
நெடுநெடுவன உயர்ந்திருக்கும் விருட்சம்.

இலைஇலையாக விரித்து
என்னைப் பற்றியிழுக்கிறது.
கிளைகிளையாகப் பற்றி
மேலேறுகிறேன்.
கணுக்கணுவாய் பிளந்து
கையில் எடுக்கிறேன்.
துகள்துகளாக்கி தொகுத்துக் கொள்கிறேன்.
செதில்செதிலாக சிதறடித்து
சேர்த்து எடுக்கிறேன்.

அள்ளிஅள்ளி உண்டு
ஆற்றல் பெருக்குகிறேன்.

நிமிர்ந்து எழுந்து வேரூன்றி
கிளைகள் பரப்பிக் காத்திருக்கிறேன்,
நீ கொண்டுவரும் கோடலிக்கென.

 

Picture courtesy: Deviant Art

வண்ணக்கழுத்து 17அ: லாமாவின் மெய்யறிவு

gay_neck_the_story_of_a_pigeon

மாயக்கூத்தன்

பத்து நாட்கள், லாமா சொன்னபடியே கடுமையாகவும் ஆத்மார்த்தமாகவும் தியானம் செய்த பிறகு அவர் என்னையும் வண்ணக்கழுத்தையும் கூப்பிட்டனுப்பினார். வண்ணக்கழுத்தை என் கைகளில் ஏந்திக் கொண்டு அவருடைய அறையை நோக்கி ஏறிச் சென்றேன். வழக்கமாக மஞ்சள் நிறத்தில் இருக்கும் அவருடைய முகம் இன்றைக்கு பழுப்பு நிறத்தில், மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது. அவருடைய பாதாம் வடிவக் கண்களில் ஒருவித புதுமையான சமநிலையும் சக்தியும் ஒளிர்ந்தது. அவர் வண்ணக்கழுத்தை தன் கைகளில் எடுத்துக் கொண்டு,

“வாடைக் காற்று உன்னை குணப்படுத்தட்டும்
தென்றல் உன்னைக் குணப்படுத்தட்டும்
கோடைக் காற்றும் கொண்டல் காற்றும் ஆரோக்கியத்தை உன் மீது பொழியட்டும்
அச்சம் உன்னைவிட்டுப் போகிறது
வெறுப்பு உன்னைவிட்டுப் போகிறது
சந்தேகமும் உன்னைவிட்டுப் போகிறது
தைரியம் பொங்கும் புதுவெள்ளமென உனக்குக்குள்ளே விரைகிறது
உன் இருப்பு மொத்தத்தையும் அமைதி ஆள்கிறது
அமைதியும் வலிமையும் உனது இரு இறக்கைகள் ஆகிவிட்டன
உன் கண்களில் துணிவு ஒளிர்கிறது;
இதயத்தில் சக்தியும் வீரமும் உறைகின்றன
நீ குணமடைந்துவிட்டாய்
நீ குணமடைந்துவிட்டாய்
நீ குணமடைந்துவிட்டாய்
ஷாந்தி! ஷாந்தி! ஷாந்தி!

சூரிய அஸ்தமனத்தில், இமாலய சிகரங்களை வெவ்வேறு வண்ணச் சுவாலைகளாய் ஒளிரும் வரை நாங்கள் அங்கேயே உட்கார்ந்து இந்த எண்ணங்களை தியானித்தோம். எங்களைச் சுற்றி இருந்த பள்ளத்தாக்குகள், குகைகள், காடுகள் எல்லாம் ஊதாப் போர்வை போர்த்திக் கொண்டிருந்தன.

வண்ணக்கழுத்து மெதுவாக லாமாவின் கைகளில் இருந்து கீழே குதித்து, அந்த அறையின் வாசலுக்கு நடந்து சென்று சூரிய அஸ்தமனத்தைப் பார்த்தான். தன்னுடைய இடது இறக்கையை விரித்து காத்திருந்தான். பிறகு மென்மையாக, அவ்வளவு மெதுவாக, ஒவ்வொரு சிறகாக, ஒவ்வொரு தசையாக, கடைசியில் பாய்மரத் துணியைப் போல விரிய, வலது இறக்கையை உயர்த்தினான். உடனடியாகப் பறப்பதைப் போல நாடகத்தனமாக எதையும் செய்யாமல், ஏதோ மதிப்புமிக்க, ஆனால் உடைந்துவிடக் கூடிய இரு காற்றாடிகளைப் போல தன்னுடைய இறக்கைகளை மூடிக் கொண்டான். அந்திச் சூரியனுக்கு எப்படி வணக்கம் சொல்ல வேண்டும் என்பதை அவனும் அறிந்திருந்தான். ஒரு பூஜாரியின் மாண்புடன் அவன் படிகளில் இறங்கினான். என் பார்வையை விட்டு அவன் மறைந்தவுடன், தன் இறக்கைகளை அடித்துக்கொள்ளும் சத்தததைக் கேட்டேன், கேட்ட மாதிரி கற்பனை செய்தேன். உண்மையில் என்ன நடந்தது என்பதைக் காண விரைந்து எழுந்தேன். ஆனால், லாமா என் தோள்களில் கையைப் போட்டு என்னை தடுத்து நிறுத்தினார். அவருடைய இதழ்களில் இன்னதென்றுபுரிந்து கொள்ள முடியாத ஒரு புன்னகை தவழ்ந்திருந்தது.

அடுத்த நாள் காலையில் நடந்த விஷயங்களை கோண்டிடம் சொன்னேன். அவர் சாதாரணமாக பதில் சொன்னார். ”வண்ணக்கழுத்து தன் இறக்கைகளை விரித்து அஸ்தமிக்கும் சூரியனுக்கு வணக்கம் சொன்னான் என்று நீ சொல்கிறாய். அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. விலங்குகள் ஆன்மீக எண்ணம் கொண்டவை. ஆனால் மனிதன் தனது அறியாமையால் அவை அப்படியில்லை என்று நினைக்கிறான். குரங்குகள், கழுகுகள், புறாக்கள், சிறுத்தைகள், ஏன் கீரிப்பிள்ளைகள் கூட சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் வணங்குவதை நான் பார்த்திருக்கிறேன்.”

“எனக்கு அவற்றைக் காண்பிக்க முடியுமா உங்களால்?”

“முடியும். ஆனால் இப்போது இல்லை. நாம் போய் வண்ணக்கழுத்துக்கு காலையுணவைக் கொடுப்போம்” என்றார் கோண்ட்.

நாங்கள் அவனுடைய கூண்டை அடைந்த போது, அது திறந்திருப்பதையும் அதற்குள் அவன் இல்லாததையும் கண்டோம்.  நான் ஆச்சரியப்படவில்லை. ஏனென்றால், மடாலயத்திற்கு வந்த பிற்பாடு ஒவ்வொரு இரவும் அவனுடைய கூண்டை நான் திறந்து தான் வைக்கிறேன். ஆனால், அவன் எங்கு போனான்? பிரதான கட்டிடத்தில் அவனைக் காணவில்லை என்பதால் நாங்கள் நூலகத்திற்குச் சென்றோம். அங்கு ஆளில்லாத வெளிப்புற அறையில் அவனுடைய சிறகுகள் கிடப்பதைக் கண்டோம். பக்கத்திலேயே கோண்ட், மரநாய் ஒன்றின் பாதச் சுவடுகளைக் கண்டுபிடித்தார். பிரச்சனை இருந்திருக்கும் என்று நாங்கள் சந்தேகித்தோம். ஆனால், அந்த மரநாய் அவனைத் தாக்கி கொன்றிருந்தால், தரையில் அவனுடைய ரத்தம் இருந்திருக்குமே. பிறகு எங்கு பறந்து போயிருப்பான்? என்ன செய்திருப்பான்? இப்போது எங்கே இருப்பான்?

நாங்கள் ஒரு மணிநேரம் அலைந்தோம். எங்களுடைய தேடலை நிறுத்தலாம் என்று நினைத்த போது, அவன் எழுப்பும் ஒலியைக் கேட்டோம். நூலகத்தின் கூரையில், இறவாணத்தில் தங்கள் கூடுகளில் இருந்த தன்னுடைய பழைய நண்பர்களான உழவாரக் குருவிகளுடன் அவன் பேசிக் கொண்டிருந்தான். இவனுடைய ஒலிக்கு அவர்கள் பதிலளிப்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. திருவாளர் உழவாரக்குருவி “சீப் சீப் சீப்” என்று கத்தினார். நான் உற்சாகத்தில் வண்ணக்கழுத்தை நோக்கிக் கூவினேன். “ஆயா ஆய்!” என்று காலைச் சாப்பாட்டிற்காக அவனை அழைத்தேன். அவன் கழுத்தை வளைத்து கவனித்தான். பிறகு, நான் மீண்டும் அவனை அழைக்க, அவன் என்னைப் பார்த்தான். உடனடியாக தன் இறக்கைகளை சப்தமாக அடித்து, கீழ் நோக்கிப் பறந்து என்னுடைய மணிக்கட்டில், சிறிதும் அலட்டிக்கொள்ளாதது போல் வந்து அமர்ந்தான்.

அன்றைய சூரிய உதயத்தின் போது, காலை தியானத்திற்காகச் செல்லும் பூசாரிகளின் காலடிச் சத்தங்களைக் கேட்டு, கூண்டிலிருந்து வெளி வந்து, வெளிப்புற அறைக்குச் சென்ற போது, அங்கு ஒரு அனுபவமில்லா இளம் மரநாய் அவனைத் தாக்கியிருக்க வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. வண்ணக்கழுத்தைப் போன்ற அனுபவசாலியால், ஒன்றிரண்டு சிறகுகளை மட்டுமே உதிர்த்து அந்த மரநாய்க்கு எளிதாக போக்குகாட்டிவிட முடியும். அந்த இளம் மரநாய், குவிந்திருக்கும் இறகுகளுக்கு இடையே புறாவைத் தேடிக் கொண்டிருக்க, அவனுக்கு இரையாகி இருக்க வேண்டியதோ வானத்தை நோக்கிப் பறந்திருக்கும். வானத்தில், உதிக்கும் சூரியனுக்கு வணக்கம் செலுத்த பறந்து கொண்டிருந்த தனது பழைய நண்பனான உழவாரக் குருவியைப் பார்த்திருக்க வேண்டும். இருவரும் இணைந்து காலை வழிபாட்டை முடித்த பின்னர், உரையாடுவதற்காக மடாலய நூலகக் கூரையில் இறங்கியிருக்கிறார்கள்.

இராகப் பெண்கள் – 7: கோபிகா வசந்தம், ஹிந்தோள வசந்தம்- ஆபரணம்

பானுமதி. ந

 7. கோபிகா வசந்தம், ஹிந்தோள வசந்தம்- ஆபரணம்

துறவு என்றால் என்ன? இந்த உலகினர் அனைவரையும் துறப்பதா அல்லது ஆத்மாவைச் சுற்றியுள்ள மூன்று கவசங்களகற்றி உலகோர்க்கு நன்மை செய்து கொண்டிருப்பதா? இல்லறத்தில் துறவு கூடுமா? துறவு இல்லறத்தை நோக்கிச் செலுத்துமா?

கை பிடிக்காத கணவனுடன், மாப்பிள்ளை அழைப்பன்று ஓடியவனுடன், நினைவிலே ஒரு வாழ்வு சாத்தியமா? திலகவதியின் நாடல்லவா இது? அவனை நினைத்தும், நெருங்கியும், தனித்தும், உலகோர் வாழும் வாழ்வில்லாத வாழ்வும், ”அன்பே ஆரமுதே” ருக்குவிற்கு மட்டும் முடியும்.

இதை இன்று நாம் அறியும் (அபத்தமாக அறியும்) கற்பெனும் சிறையில் தள்ளவில்லை தி. ஜா. செந்தாழம்பூவைப் போல் கமழச் செய்கிறார். காட்டுக்குள்ளே ஒரு ஓடை. ஓடையோரம் தாழம் புதர். காற்றினிலே வரும் மணம். ஆனால் அது உனக்கில்லை. உன்னதமான ஒரு சமர்ப்பணம் முன்னரே ஆகிவிட்டது. அதன் வாசம் பிறரை இழுத்தாலும் அதன் நேர்த்தியே அவர்களை அண்ட விடுவதில்லை. பூக்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று சேரலாம், உன் வசத்தில் பூத்தால்.

அது பாரிஜாதம் போல் பூத்திருக்கிறது- பூக்கையிலே மாலையாகி தன்னளவில் தோள் சேர்ந்து விட்டது.

அந்தத் தோள்கள் அறியும் முன், அவன் கால்கள் அவனை எங்கோ ஓடிப் போகச் செய்கின்றன. அவன் ஒரு மருத்துவ சன்யாசி, அல்லது சன்யாசியாக பிறர் நலம் பேணும் மருத்துவர். அவரின் கால்கள் மூலம் சென்னையில் தி. ஜா. நடந்து கொண்டேயிருக்கிறார். பலர் பிணி போக்குகிறார். உடலோடு மனப்பிணியும் போக்கும் இந்த அற்புத மருத்துவரை யார்தான் காண விழையார்?

கதையின் நாயகி அவரைச் சந்திப்பதும், இயல்பாகவும் கம்பீரம் குறையாமலும் தன்னை இன்னார் என்று அறிமுகப்படுத்திக் கொள்வதும் அழகோ அழகு! தனக்கு நல்லதெல்லாம் செய்யும் குடும்பத்திற்கு அவளும் நல்லது செய்ய நினைக்கிறாள்; செய்யவும் செய்கிறாள்.

அவரை, தான் குடி போகும் வீட்டின் மாடியில் இருத்தி அவரது மருத்துவப் பணி சிறக்க எல்லாமாகவும் நிற்கிறாள். அவளும், அவரும் பந்தமில்லாப் பந்தத்தில், உறவான தோழமையுடன், தோழமையான உறவுடன் இருக்க மிக  நேர்மையுடன் செயல்படுகிறாள். தூற்றும் ஒரு வாய்க்காக அவள் சோரவில்லை. தன் நண்பரின் குடும்பத்திற்காக அவரை அந்த நபரிடமும் அனுப்ப அவள் தயங்கவில்லை. அன்பும் ஆருயிரும் …

இதில் இருளும் ஒளியுமென, பகல் இரவு என, நல்லது, கெட்டது என இரு பிரிவுகளும் கைகூடும் மனிதர்களைப் பார்க்கிறோம். நடந்து செல்லும் ஒரு மழை மாலயில், பார்க்கும் வானவில்லென பரவசம் ஊட்டும் மனிதர்கள். வியப்பும், கவலையும் அளிப்பவர்கள். தன்னைத் தானே உணரப் பார்க்கும் முயற்சிகள்.

ருக்கு, தன்னை மணக்க இருந்தவரை தன் வாடகை வீட்டில் குடியமர்த்துவது தான் வெற்றி பெற்றோம் என்பதற்கு அல்ல. அது ஒரு தவம், சபரியின் தவம், திலகவதியின் தவம். சபரி மோட்சம் பெற்றாள்; திலகம் சிவனடியாரானாள். ருக்கு மருத்துவ சன்யாசிக்கு உதவுகிறாள். ஒரு பெண்ணை மீட்கவும், தன்னைப்போலவே ஆகப்போகும் ஒரு பெண்ணிற்கு தோள் கொடுக்கவும் அவள் தயங்கவில்லை. முகம் அறியா மனிதர்களின் உடல் நோய்க்கும் மன நோய்க்கும் உதவிட அந்த சன்யாசியுடன் இந்த சன்யாசி நிற்கிறாள்.

ஒரு உன்னதமான பாத்திரப் படைப்பு. இவள் கோபிகா வசந்தம். கண்ணன் ஆயர்பாடியில் இருந்த பொழுதெல்லாம் கோபிகைகளுக்கு வசந்தம். அவன் மதுரா சென்ற பிறகோ அந்த நினைவுகளே வசந்தம். நினைவுகள் தரும் புனைவுகள் கோபிகா வசந்தம்,

ச ம ப நி த நி த ச   ச நி த ப ம க ச  

பச்சைக் கனவு

அன்பின் தராசு மிகவும் வலிமையற்றது. ஒரு சிறு தவற்றில் அது உறவில் ஒரு நிரந்தரப் பகையை உண்டு செய்து விடும். ”உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது” என்றாலும் சற்று உடைந்த அல்லது விரிசல் கண்ட கண்ணாடிதான்.

பசுமை என்று சொல்கையில் இருக்கும் நிறைவு பச்சையில் இருப்பதில்லை. பச்சையுடன் ஏதேனும் ஒன்று சேரவேண்டும்- “பச்சைப் பசேல்”, “ பச்சைக் காய்கறி”, “பச்சைப் புல்”, “பச்சை விளக்கு”, “பச்சைப் பொய்”.

மனக்கண் குருடாய், மனமொழி பேசாமல், மனச்செவிடராய் இருக்கும் மாந்தர்களை லா.ச ரா “பச்சைச் கனவில்” காண்பிக்கிறார். கதையின் நாயகன் சிறு வயதில் ஆதவனை உற்று உற்று நோக்கி, பின் சுற்றும் முற்றும் பார்க்கையில் காணும் பச்சைக் கோலங்களை வியக்கிறான். பச்சை தங்கிவிட வாழ்வு குருட்டுத்தனமாக  நீள்கிறது. அவனுக்கு சிறு வயது கல்யாணம். அந்தப் பெண் ஊமையும் செவிடுமாக வாய்க்கிறாள். ஆணின் குறை பாராட்டப்படாமல் பெண்ணின் குறை வாழ்வை சூறையாடுகிறது. பலன் பிரிவு.

இளமை, தன் இணை தேடும் தவிப்பு, தன் சொந்தம் என்ற நினைப்பு, உயிர் உருகும் ஏக்கம், அது அவர்களை ஊர் அறியா வண்ணம் சேர்க்கிறது.

அவர்களிருவரின் ஆயுளின் இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மூச்சில் அளந்துவிட முயல்வது போன்ற ஆலிங்கனத்தின் அவஸ்தையிது…

3 மாத கர்ப்பத்துடன் அவள் இறக்க, ஊர் சிரிக்க அந்த நேச இழை வெளியே அறுந்து உள்ளே பச்சையாகத் தொடர்கிறது.

ஊமை கண்ட கனவினை யாரிடம் சொல்வாள்? இல்லை.. “அந்த நினைவு அவர்கள் இருவருக்கும் மட்டுமே சொந்தமாயிருக்க அவள் எண்ணியிருக்கக் கூடும். பகை நடுவில் பயிரான உறவைப் பாதுகாப்பதில் சட்டென்று சலிப்பேற்பட்டுவிட்டதோ? உயிர் நிலையின் ஒரே மூச்சுப் போன்ற அம்மூன்று மாதப் பச்சைக் கனவின் மிச்சம்”- நாயகன்தான்.

மானம், மானம் என்பதெல்லாம் வகையாக வாழ்பவருக்கோ? கண்டு, கேட்டு, பேச இயலாத உறவின் தனிமைகளை ஊர் அறிய ஏன் சொல்லவேண்டும்? வாழ வைக்காதவர்கள் தூற்ற மட்டும் எங்கிருந்து வருகிறார்கள்? உயிர் உருகும் ஓசை கேட்காதவர்கள் வாய் திறந்து பேச மட்டும் செய்கிறார்களே? லா. ச.ரா அவன் மூலம் இந்தக் கேள்விகளைக் கேட்கிறார். அந்த உறவின் அர்த்தத்தை, அவர்கள் கண்டு கொண்ட உயிரின் மீதியை, இளமைக் கொண்டாட்டங்கள் மீறிய சிலிர்ப்பை அவன் பகிரங்கப்படுத்தவில்லை.

இந்தக் கதையும் நாயகனின் போக்கிலே சொல்லப்படுகிறது. அதுவும் தன் இரண்டாம் மனைவியிடம்..

பார்வையற்ற அவனுக்கு இறந்தவள் பாலைவன நீரூற்று. தாகம் தணித்தவள். அன்பால் நிறைத்தவள். அந்த அன்பாலேயே பிரிந்தும் சென்றவள். குறைகளைக் கொண்டாடும் சமுதாயத்தில் விடை சொல்லாத வினாவாக அவள் வெற்றி பெறுகிறாள். அதற்கு மதிப்பளித்து அவனும் மௌனிக்கிறான். அவன் மட்டுமே கேட்ட வசந்தம்… ஹிந்தோள வசந்தம்.. வசந்த மாதவம்… ஜானகி தவம்… சச்சிதானந்த வைபவம் (முத்துஸ்வாமி தீஷதர் கிருதி…  சந்தான இராமனைக் கொண்டாடும் இந்தக் கிருதி).இவன் பச்சைக் கனவின் நாயகியை மனதால் பார்த்துக் கொண்டேயிருக்கிறான்.

பெயரில்லாத இந்தப் பெண்… வாய் பேச இயலாத இந்தப் பெண் தன் பிறப்பின் பலனை உரக்கச் சொன்னாள். உயிர் தாங்கும் உரிமை பெண்ணிற்கு அன்றி யாருக்கும் இல்லை. அவள் வசந்தம்.. பூவாகிக் காயாகிக் கனிந்த மரம்… தன்னையன்றி யாருக்கு அவள் தன்னை மெய்ப்பிக்க வேண்டும்?

ச ரி ம ப த நி த ச  ச நி த ப ம த ம க ச  – ஹிந்தோள வசந்தம்.

ருக்குமணி– கோபிகா வசந்தம்: இன்பமும் துன்பமும் வெளிப்படை.

பச்சைக் கனவின் நாயகி- ஹிந்தோள வசந்தம்: இன்பமும் துன்பமும் உள்ளிடை.

oOo