Author: பதாகை

ஆலிஸின் பதிப்புப் பயணத்தின் சாகஸ நிகழ்வுகள் – அஜய்

அஜய் ஆர்

(Alice in Wonderland நாவல் எழுதப்பட்டு 150 ஆண்டுகள் ஆவதை ஆங்கில ஊடகங்கள் கொண்டாடுகின்றன- எ. கா., Salvador Daliயின் ஓவியங்களைச் சுட்டி LARB. எனவே இந்த மீள்பதிவு)

lobster-quadrille

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, ஹார்பர் லீயின் “Go Set a Watchman” நாவல் வெளிவந்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், அதன் உள்ளடக்கம் சார்ந்த விமர்சனங்களுக்கு இணையாக/ அதிகமாகவும்கூட, அதை “To Kill a Mockingbird” நாவலின் தொடர்ச்சியாக (sequel)  மட்டுமே அணுகிச்  செய்யப்படும் விமர்சனங்களும் உள்ளன. பல ஆண்டுகளாக மக்கள் மனதில் பதிந்துள்ள, அவர்கள் மிகவும் அன்பு செலுத்தும் பாத்திரங்கள் இன்னொரு பரிமாணத்தில் தோற்றமளிக்கும்போது ஏற்படும் ஏமாற்றம்/ கோபம் இந்த விமரிசனங்களில் வெளிப்படுகின்றன..

To Kill a Mockingbird” நாவலின் காலத்திற்குப் பிந்தைய காலகட்டத்தைக் கொண்டது, அதன் பாத்திரங்கள் இதிலும் வருகிறார்கள் என்பதைத் தவிர “Go Set a Watchman”  உண்மையான “தொடர்ச்சி/ sequel” அல்ல என்ற புரிதலே, உணர்ச்சிவசப்பட்டு விமர்சிப்பதை தடுத்து, தனி/ standalone அல்லது ‘companion piece’ என்ற அளவில் வாட்ச்மேன் நாவலின் குறைநிறைகளைச்  சமநிலையோடு அணுகச் செய்யும். . அதுவே நாவலுக்கு நியாயம் செய்வதாகவும் இருக்கும்

Go Set a Watchman” தான் ஹார்பர் லீயால் முதலில் எழுதப்பட்டு, பின்பு  பதிப்பாசிரியரின் ஆலோசனைகளின் பேரில், முற்றிலும் புதிய/ வேறுபட்ட நாவலான  “To Kill a Mockingbird“ஆக உருவாகி, அது வெளிவந்து  இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது மூலவடிவில் வெளிவந்துள்ளது என்பது பதிப்பு வரலாறு. ஒரு நாவல் முற்றிலும் வேறொன்றாக மாறும் ரசவாதத்தை இங்கு காண்கிறோம்.

எழுத்தாளர் ஒருவருக்கு எழுத ஆரம்பிக்கும்போது இருந்த இலக்கிற்கும், அவர் வந்தடையும் இடத்திற்கும் உள்ள வித்தியாசம், இறுதி வடிவை அடையும் வழியில்  ஏற்படும் திருப்பங்கள் என ஒவ்வொரு படைப்பின் பயணமும் தனித்துவம் கொண்டது.

book0-firstimage (more…)

ஆறாவது விரல்

– கலைச்செல்வி –

நீரைத் தொட்டு மேலெழும்பி வருடலாக நகர்ந்த சில்லென்றச் சாரல் காற்று தனது சுவாசத்தை வேகப்படுத்தி அடர்வாகியதில் மழைக்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கியிருந்தன. மரங்களின் இண்டு இடுக்குகளில் நுழைந்து வெளிச்சம் பரப்பிய சூரியன் சாரலுக்கு வெட்கி எங்கோ நகர்ந்து விட கூரைகளற்றுப் போன உயர்மரங்களுக்கு கருமேகங்கள் மேற்புற கவசமிட்டன. காற்றுக்கும் அவனின் மேற்சட்டைக்குமானப் போராட்டத்தில் சட்டை விலகி காற்றுக்கு வழிவிட்டு உப்பலாகிப் போனது. சற்றே தொளதொளத்த முழுக்கால்சட்டை வம்புச் செய்யும் மனமின்றி காற்றின் போக்குக்கு தன்னை அனுசரித்துக். கொண்டதை படபடப்பாக வெளிப்படுத்தியது. சாரல் அடர்வாகி மழையானதில் காற்று ஈடுக்கொடுக்க முடியாமல் நகர்ந்து விட ஈரமான உடல் அனிச்சையாக நடுங்கத் தொடங்கியது

ஜீப்பை நோக்கி மெதுவாகவே நடந்தான் அவன். கியர்ராடில் ஒரு கையும் ஸ்டியரிங்கில் ஒரு கையுமாக வைத்தவனுக்கு கிளம்ப மனமின்றி போனதில் சாவியை திருகி இன்ஜினை அணைத்தான். கைகளைக் கட்டிக் கொண்டு ஆசுவாசமாக பார்வையை வெளியே செலுத்தினான். காட்டு ஓடை அது. நெல்லிக்கனிகளைச் சாக்குப்பையிலிருந்து சிதற விட்டதுப் போல கூழாங்கற்கள் விதவிதமாக அளவுகளில் ஓடையை நிரப்பியிருந்தன. மிக மெல்லிய ஓட்டத்தில் ஆழமற்று ஸ்படிகம் போல் தெளிந்திருந்தது ஓடை நீர். அதில் கண்ணாடியாய் தெரிந்த மணல் விரிப்பில் சிறு மீன்கள் அங்குமிங்கும் வாலை ஆட்டிக் கொண்டு ஓடின.

கரிய சிறிய மீன்கள். கைக்கு அகப்பட விரும்புதில்லை. அவன் அமர்ந்திருந்த பாறை மழையில் நனைந்திருந்தது. கீழே ஒடுங்கலாகவும் மேலே பரந்துமிருந்த அந்தப் பாறை கால்களை தொங்க விட்டுக் கொண்டு உட்கார ஏதுவாக இருந்ததில் இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. தோழர்களுடன் சுற்றுலா வந்ததில் அறிமுகமான இந்த இடம் இத்தனை ஈர்ப்பாக மாறும் என்று அப்போது அவன் நினைத்திருக்கவில்லை. அலுவலக நாட்களை தேனியிலும் வாரக் கடைசி நாட்களை இங்குமாக கழிக்க ஏதுவான பயணத்துாரமும் மனவோட்டமும் அமைந்துப் போனதில் ஊருக்குப் போகும் நாட்கள் குறைந்துப் போயின.

சென்ற முறை ஊருக்கு செல்லும்போது தாத்தா கோபமாக கத்தினார். “ஓய்வு ஒளிச்சலில்லாம அப்டியென்னா மயிறு வேலை பாக்ற..? வுட்டு தொலச்சுட்டு இருக்கற காடுக்கரையப் பாத்துக்கிட்டாலே தலமொறைக்கும் தாங்கும்.. ஒதவாக்கர உத்தியோகம்…” நிலம்நீச்சுக்கு பஞ்சமில்லை என்பதால் பேரன் உத்யோகம் பார்ப்பதில் தாத்தாவுக்கு விருப்பமிருப்பதில்லை. குரலும் உடம்பும் இன்னமும் திடகாத்திரம்.

“வைரம்பாஞ்சக்கட்டை..“ என்று கணவனைக் குறித்து அலட்டிக் கொள்ளும் அப்பத்தாவுக்கு பேரனைப் பற்றி வேறுவிதமானக் கவலை வந்து விடும். அம்மாவையும் அதில் சேர்த்துக் கொள்ளும். ”கண்ணாலப் பேச்செடுத்தா புடியே கொடுக்க மாட்டேங்கிறானே இந்தப்பய.. எதும் வெவகாரம் இருக்குமோ..? அம்மாவிடம் கிசுகிசுக்கும். ”சின்னவனே.. கண்ணாலம்ன்னா எங்களுக்கெல்லாம் பத்திரிக்க குடுக்க மறந்துடாதடா..” அப்பாவுக்கு எல்லாமே விளையாட்டுதான்.

”செலவு மிச்சம்னு இருப்பியா.. நீ வேறண்ணே.. பத்திரிக்க.. அதுஇதுன்னுட்டு..” என்பாள் அத்தை. அண்ணனின் விளையாட்டுக்கு ஏற்ற ஜோடி இவள்தான். கலகலத்த சுபாவி. ”அவனை வம்பிழுக்கிலேன்னா ஒனக்கு துாக்கம் வராதே..” என்பாள் அம்மா அத்தையிடம். உள்ளுரிலே திருமணம் செய்துக் கொண்டவள் அத்தை. குடும்பம் பார்க்கும் நேரம் தவிர்த்து மீதி நேரம் பிறந்த வீடே கதி அவளுக்கு. பெரியக்காவின் மகள்தான் அண்ணி என்பதோடு இருவரின் ஒத்த வயதும் நாத்தியையும் அண்ணியையும் இன்னும் ஒட்டியே வைத்திருந்தது.

ஓரோரு வருட வித்யாசத்தில் அடுத்தடுத்து மூன்று ஆண் பிள்ளைகள். கடைக்குட்டி.. ஆறு விரல் அதிர்ஷடக்காரன்.. என்ற கூடுதல் தகுதிகள் இவனுக்கு பிறப்போடு சேர்ந்துக் கொள்ள அம்மாவிடம் செல்லமும் கூடுதல்தான். துாங்கும் நேரம் தவிர்த்து மீதமான நேரங்களில் அவள் இடுப்பே இருப்பிடம். ”அய்யய்யய்யே.. இந்தப் பய பொறந்ததுலேர்ந்து இடுப்பே கழண்டுல்லப் போவுது…” செல்லமாக அலுத்துக் கொள்வாள் அம்மா. “செத்த நேரம் இந்தப் பயல துாக்கீட்டுப் போடீ.. அவள ஒரு வேல பாக்க வுட மாட்டேங்கிறான்..“ அப்பத்தா சாடையாய் மகளிடம் கண்காட்ட அத்தை அவனை இடுப்பிலிருந்து பிரித்து தன் இடுப்பில் ஏற்றிக் கொள்வாள். மூன்று வயதிற்கு ஏற்ற கனம். “அண்ணியோட இடுப்ப ஒடிச்சுப்புடுவான் இந்தப்பய..” என்றாள்.

வீட்டுக்கு செல்லும் வழியெங்கும் கதைகளால் நிறைத்து விடுவாள் அத்தை. ஒரு பேச்சும் இரண்டு சிரிப்புமாக நகர்வதில் கதைகள் நீளுபவையாக இருக்கும். அந்த இடைவெளி அவனுக்குத் தாயை நினைவூட்டி விடும். “அத்த.. அம்மாட்ட.. அம்மாட்ட போறன்..“ அனத்தத் தொடங்கி விடுவான். ”எல.. அம்மாட்ட என்னாத்தடா வச்சிருப்ப.. இங்க அத்தைமவளுங்க ரெண்டு பேரு இருக்காளுங்க.. பாத்துக்கிட்டு இருப்பியா.. அம்மா.. அம்மான்னுட்டு ” இழுத்து நொடித்துக் கொஞ்சுவாள். விளையாட்டுக் காண்பிப்பாள். அதற்கும் ஆயுள் குறைவுதான். மீண்டும் “அத்தே.. அம்மாட்ட.. அம்மாட்ட..” என்பான். குரல் அழுகையை நெருங்கியிருக்கும். அத்தையின் முந்தானையைப் பிடித்து இழுப்பான்.

“தம்பிக்கு.. அத்தை.. இப்ப.. ஒரு.. நெசக்கதை.. சொல்லப் போறேனேஏஏ..” வார்த்தை வார்த்தையாக உச்சரித்துப் பீடிகைப் போட்டாள் அத்தை. அம்மாவைப் பார்க்கப் போகும் குஷியில் கதைக் கேட்கப் பிடித்து விடும் அவனுக்கும்.

”மூணு வருசத்துக்கு முந்தி நம்ப ஊருல நெறயா நெல்லு வௌஞ்சுச்சா.. ஊர்சனங்களுக்கெல்லாம் ஒரே சந்தோசம்.. குருவிங்களுக்கும் கொண்டாட்டந்தான்.. கேக்கறல்ல தம்பி.. ஊன்னு சொல்லுய்யா.. அப்பதான் அத்த கதை சொல்லுவேனாம்..”

“ம்ம்ம்.. அத்த அம்மாட்ட..“

”அதான் கூட்டிட்டு போறேன்ல்ல.. கதய கேளுய்யா.. நெல்ல அரச்சு அரச்சு வீட்டுல அரிசு மூட்டையா சேர்ந்துப்போச்சு.. ஊரு பூரா தவுடா நெறஞ்சுப் போச்சு.. மாட்டுக்கெல்லாம் கரச்சு கரச்சு ஊத்துனாலும் தவுடு கொறயவேயில்ல.. ரோடு வீடெல்லாம் தவுடு பறந்து ஒடம்பெல்லாம் அரிப்பெடுக்க ஆரம்பிச்சுடுச்சு.. அப்பதான் வேத்து ஊரு பொம்பள ஒருத்தி வந்தா.. அவ கையில ஒரு ஆம்பளப் புள்ள… ஊன்னு சொல்லுய்யா..”

”ம்ம்ம்..”

”இந்தப் பயல வாங்கிக்கிட்டீன்னா எறைஞ்சுக் கெடக்கற தவுட்டெல்லாம் நான் வாரி எடுத்துட்டுப் போறேன்னு உங்கம்மாட்ட சொல்லுச்சு அந்தப் பொம்பள.. தவுடெல்லாம் தீர்ந்துப்போனா சரின்னுட்டு உங்கம்மாவும் சம்மதம் சொல்லிடுச்சு.. தவுட்ட எடுத்துக்கிட்டு ஒன்ன இறக்கி வுட்டுட்டு அந்தப் பொம்பளப் போயே போயிடுச்சு.. தவுடுப் போயி இந்த தம்பி வந்துட்டான் டும்.. டும்.. டும்..” அவனை கட்டியணைத்து முத்தமிட்டாள். “காகம் ஒன்று காட்டிலே.. தாகத்தினால் தவித்தது..“ என்பதுப் போல கதையை முடித்திருந்தாள் அத்தை. வீடு வந்து விட ”இந்தாடீயம்மா.. இந்தப் பயலப் புடிச்சுக்க.. வயுசு மூணாச்சு.. இன்னும் பால் குடிக்கிற பப்பா மாதிரி அம்மா.. அம்மான்னுட்டே கெடக்கான்..” டவுசரில் முட்டிக் கொண்டிருக்கும் பகுதியை கிள்ளி முத்தமிட்டாள். தனியேத் தொங்கும் அவனது ஆறாவது விரலை நீவி விடுவாள். மற்ற விரல்களை விடவும் பஞ்சுப் போன்றிருக்கும் அந்த விரல். வளர்ந்தவுடன் அறுவைச்சிகிச்சையில் நீக்கி விடலாம் என்று யாரோ சொன்னார்கள். தாத்தா குடையைத் துாக்கிக் கொண்டு அடிக்க வந்து விட்டார். தனியேத் தொங்கும் விரலைத் தொட்டான். மெத்தென்றுதான் இருந்தது… தவிட்டைத் தொடுவதுப் போல… இப்போதுக் கூட. எதிலும் ஒட்டாமல்.. கூடவே ஒட்டிக் கொண்டு.. அளவில் சிறியதாய்.. உபயோகமற்ற சதை பிண்டமாய்..

“ராசா வூட்டுக் கன்னுக்குட்டி.. நம்ப பரம்பரயில யாருக்குமே இந்த குடுப்புன இல்ல.. எங்க அய்யாவோட கூட்டாளியோட பங்காளி ஒத்தரு ஆறு வெரல்காரராம்.. வெவசாயத்துக்காரருதான்.. ஆனா இன்னிக்கெல்லாம் அவுக வூட்ட நிமிந்து பாத்தா களுத்துவலி கண்டுப்புடும்..” என்பாள் அப்பத்தா. ”அதானா சேதி.. அப்ப தவுடு போயீ லெட்சுமி வந்துச்சு.. டும்..டும்..டும்..” இவனை குறும்போடு ஓரப்பார்வைப் பார்ப்பாள் அத்தை. “பொறவு..? கொஞ்சநஞ்ச தவுடா துாக்கிக் குடுத்தோம்..” என்று அம்மாவும் கேலியைத் தொடர்வாள். “தவுட்டுக்கு கெடச்சப்பயலே..“ கோபமாகும் தருணங்களில் அண்ணன்காரன்களுக்கு வசைப்பாட வசதியாகி விடும்.

மலைகள் அண்மைப் பார்வைக்கு மரங்களாலும் துாரத்துப் பார்வைக்கு பனிப்படலமாகவும் தெரிந்தன. மழை பரவலாக பெய்ததில் ஓடை நனைந்திருந்தது. தெளிந்து நகரும் ஓடையின் நீர் மழையின் சடசடப்பில் இந்நேரம் கலங்கிப் போயிருக்கும் என்ற எண்ணம் அவனுக்கு சற்று அயர்ச்சியைத் தந்தது. ஓடையின் ஆதிமூலம் எங்கோ துாரத்து அருவியிலிருந்தது. அருவிக்கு இது பாதையல்ல. நண்பர்களுடன் பயணம் வந்தது அந்த அருவிக்குதான். நெருங்கிப் பார்க்கும் ஆவலில் பாதையற்ற பாதையில் அன்று பயணித்தனர். சாரல் காற்று அருவியின் நெருக்கத்தைச் சொன்னது. குளிர்ந்து குழைந்திருந்த உடல்கள் ஒருவிதக் கிளர்ச்சியைக் கொடுக்க அலுப்பின்றி பாறைகளுடே நடந்து மேலேறினர். மேலும் முன்னேறவியலாதப்படி தடுப்புக் கட்டப்பட்டிருந்தது.

பாறைகளிலிருந்து குபுகுபுவென வெள்ளை நுரையைத் தள்ளிக் கொண்டு சீறலாகக் கீழேப் பாய்ந்துக் கொண்டிருந்தது அருவி அருவி பிரம்மாண்டமானது. அழகானது. ஆனால் இறைச்சலானது. ஏகாந்தமற்றது. ஆற்று நீர் அமைதியாக ஆற்றைக் கடந்து விடும். கடல் நீர் ஆவேசமாக பதில்களற்றக் கேள்வியை எழுப்பிக் கொண்டேயிருக்கும். கிணற்று நீருக்கு தன் இருப்புக் குறித்து எந்தவித அக்கறையுமிருப்பதில்லை. டம்ளர் நீரோ செம்பிலிருக்கும் நீரோ ஒரு வரையறைக்குள்ளேயே தன்னை இறுத்திக் கொள்ளும். இவை எவற்றிலும் சேராத.. சேர்ந்துக் கொள்ளத் தோன்றாத ஆங்காரத்தோடு பீறிட்டு பெருமிதமாக பெரும் ஓசையோடு பயணிக்கும் அருவியை அன்றுதான் முழுமையாகப் பார்த்தான். தடுப்புக்கு அப்பால் அத்தனை தள்ளியிருந்தும் அதன் தெறிப்பு உடலை நனைத்துப் படபடக்க வைத்தது. நீரின் உத்வேகத்தில் மதர்த்துக் கிடந்தன பாறைகள்.

இவையெதிலும் தனக்கு சம்மதமில்லை என்பது போல படிப்படியாக அமைந்திருந்த பாறையிலிருந்து நிதானமாக வழிந்த நீர் பாறையின் போக்கிலேயே பாதையை அமைத்துக் கொண்டு வழிந்தப்படியே கீழிறங்கியது. அவர்கள் நின்றிருந்த பாறைகளில் கூட மெல்லியச் சரிகைக் கோடாக நீர் கசிந்துக் கொண்டிருந்தது. ஒற்றைக் கசிவென்றாலும் தனது தடத்தை பாறைகளில் கரையாக படிய வைத்து பாம்பாக நெளிந்து இறங்கிய நீர் இனமறியா சந்தோஷத்தை உண்டாக்கியது அவனுக்கு. இந்த ஓடைக் கூட அருவியின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபாடற்று தனக்கென கட்டமைத்தக் கொண்ட கூழாங்கல் சாம்ராஜ்யத்தோடு ஒதுங்கிக் கொண்டது அவனை வெகுவாக ஈர்த்திருந்தது. வாரக்கடைசிகளுக்காக தவமிருக்கத் தொடங்கிய அவனை அவைகளும் வரவேற்க தயாராகவே இருந்தது. தனக்கும் அவனுக்குமான இரண்டு மணி நேர சந்திப்பு போதாது என்பது ஓடைக்கும் புரிந்திருந்ததில் மழைக் குறைந்து நின்றே போனது.

ஜீப்பில் தயாராகக் கிடந்த ஜெர்கினை மாட்டிக் கொண்டான். மேற்புறம் மழையை தாங்கும் திறனும் உட்பாகம் குளிரைத் தாங்கும் தன்மையும் கொண்ட ஜெர்கின் அது. அதன் குல்லாவை இழுத்து தலையில் வழிய விட்டு தாடையில் முடிச்சுகளிட்டு அதை கட்டுப்படுத்தினான்.

கூழாங்கற்கள் கூட மேல்புறம் வழுவழுப்பும் பாசியேறி அடிப்பாகமுமாக ஓடை முழுக்கச் சிதறிக் கிடந்தன. மரங்களுக்கிடையே கிடந்த பெரிய கூழாங்கல்லொன்று புல் மேயும் மாடு ஒன்றின் முதுகையொத்திருந்தது.

மாட்டு வண்டிப் பயணம் அவனுக்கு மிகவும் பிடித்தமானது. அவித்துக் காய வைத்த நெல் மூட்டைகளோடு அரிசி மில்லுக்கு மாட்டு வண்டி புறப்படும்போது இவனும் கூடவே ஏறிக்கொள்வான். அசைந்து அசைந்துச் செல்லும் மாடுகளை ஹாய்.. ஹாய்..என்று விரட்டப் பிடிக்கும் அவனுக்கு. மில்லிலிருந்து அரிசியும் தவிட்டு மூட்டையுமாக வீடு திரும்பும்போது நெற்களத்தில் விளையாடிக் களைத்திருப்பான். அரவைக்கு கூலியாக கொடுத்ததுப் போக மீதமான தவிட்டு மூட்டைகளையும் அரிசி மூட்டைகளோடு ஏற்றிக் கொண்டு வண்டி ஊருக்குத் திரும்பும். அரிசி மூட்டையை வீட்டுக்குள்ளும் தவிட்டு மூட்டையை கொல்லைப்புறத் தாழ்வாரத்திலும் இறக்கி வைப்பது வரை வேலையாட்களின் பணி. அத்தையும் தனது மாடுகளை இதே தொழுவத்தில்தான் கட்டியிருப்பாள். “அந்த தவுட்டு சாக்கை செத்த அவுத்துக் குடுத்துட்டுப் போய்யா..” என்பாள் அத்தை வேலையாளிடம். ”தவுட்டுப்புளுதி ஒடம்ப அரிக்கும்.. நீ உள்ள போய்யா..” கூடவே நின்றுக் கொண்டிருக்கும் அவனையும் விரட்டுவாள்.

”இதான் தவுடாத்தே..” என்றான். ஆறு வயதிருக்கும் அவனுக்கு. கைகளுக்கு மிருதுவாக நெருநெருவென்றிருந்தது தவிடு.

”படிச்சு பெரிய ஆளாவ போறவன்ய்யா நீ.. ஒனக்கென்னாத்துக்குய்யா தவுடும் புண்ணாக்கும்..” கழனித் தொட்டிக்குள் போடும்போது பொத்தென்று உட்கார்ந்துக் கொண்டது தவிடு. புண்ணாக்கோடு கலந்து நடந்த மாடுகளின் களைப்பை ஆற்றுவாள் அத்தை.

அண்ணன்களுக்கோ வீட்டில் மற்றவர்களுக்கோ ஆறு விரல்கள் இருக்கவில்லை. உறவினர்கள் ஒன்றுக் கூடும் இடங்களில் கூட தேடிப் பார்த்திருக்கிறான். பள்ளி.. கல்லுாரி.. பணிப்புரியும் அலுவலகம்.. பயணிக்கும் இடம்.. என அவனது பார்வை விரிந்துக் கொண்டேப் போனாலும் ஆறுவிரல்காரர்கள் யாரும் அதற்குள் அகப்படவேயில்லை. இடதுக்கைச் சுண்டு விரலையடுத்து தனியாக.. துண்டாக.. சிறியதாக.. அழகற்றதாக விரல் போன்ற தோற்றத்திலான சதைத்துண்டு யாருக்குமே வாய்த்திருக்காது என்பது அவனுக்கு புரியும் நாட்களில் ஓடை அவனை தனக்குள் புதைத்து ஆசுவாசப்படுத்தியது.

ஒருநாள் புளியைக் கொட்டையோடு சப்பியதில் கொட்டையையும் சேர்த்து விழுங்கி விட பயந்து போனான். ”அய்யய்யே.. தம்பி வயித்துல புளியமரம் மொளைக்க போவுது..” அப்பா கிண்டலடித்தார். பயத்தில் அழுகை வந்தது அவனுக்கு. அன்று கனவில் அவன் தலையின் மீது முளைத்திருந்த புளியமரத்தில் காய்களைப் பறிக்கக் ஐந்து விரல்கள் கொண்ட கைகளால் கற்களை விட்டெறிந்தனர் அவனின் பள்ளித்தோழர்கள். முகமறியாதப் பெண்கள் கூட குழம்புச் சட்டியோடு புளியம்பழம் பொறுக்க வந்தனர். குனிந்துப் பொறுக்கும் அந்தக் கைகளில் யாருக்குமே ஆறாவது விரல் இருக்கவில்லை.

மழை நின்று கருமேகங்கள் நகர்ந்திருந்தன. இருந்தாலும் பொழுதை ஒப்படைத்து விட்டுப் போக சூரியன் தயாரானதில் காடு மங்கிக் கொண்டே வந்தது. அந்திப்பொழுதும் பெய்த மழையும் காற்றை குளிர்வித்திருந்தது. சூழலை அனுபவிக்கும் ஆவலில் கைகளிரண்டையும் ஜெர்கினுக்குள் நுழைத்தப்படியே நடந்தான். உடலைத் தழுவிக் கொள்ளும் காற்றும் பெயர் தெரியாத பறவைகளின் ஒலியும் குதுாகலப்படுத்த வாயைக் குவித்து விசிலடித்தான். நடையில் சிறிய துள்ளல் இருந்தது.

தலைக்கு மேலே பறவைக் கூட்டம் ஒன்று பறந்துக் கொண்டிருந்தது. அடுக்கி வைத்ததுப் போன்ற ஒழுங்கில் சீரான வேகத்தில் ஏதோ ஒரு நியதிக்கு கட்டுப்பட்டதுப் போல பறந்துக் கொண்டிருந்தன. இவைகளுக்குள் பேதமிருக்காது. எல்லாமே ஒரே இனம். காக்கைக் குஞ்சுகளுடன் வளரும் சின்னக் குயிலின் நிலை அதன் தாயின் துரோகத்தால் விழைவது. கையாலாகாதக் கோபத்தில் எழும்பிக் கொண்டேயிருக்கும் அதன் குரல் ராகமாக மாறிப் போகிறது. அதன் தப்பிக் கிடக்கும் தாளங்கள் யாருக்கும் புரிவதேயில்லை. அதனால்தான் காலங்காலமாக எழும் குயில்களின் ஓசை அதற்கு எந்த ஒரு தீர்வையும் வழங்கி விடவில்லை. இந்த சூட்சுமத்தை அறிந்தவனுக்கு அமைதிக் காப்பது சுலபம். அவனுக்கு அது நன்றாகவே கூடி வருகிறது. “உம்மணாமூஞ்சிப்பய..” என்பாள் அம்மா.

தொட்டதற்கெல்லாம் அத்தைப் போலவே சிரிக்கும் அண்ணன்கள் கூட இவனின் கோபத்திற்கு அஞ்சியே இருந்தனர். இவனின் சுபாவத்துக்கு வம்சத்தில் ஆட்களைத் தேடிக் கொண்டிருந்தனர் தாத்தாவும் அப்பத்தாவும். அது கிடைக்கவேப் போவதில்லை என்று இவனுக்குத் தெரியும். “எங்கடீ அந்த மூஞ்சுரக் காணாம்..“ என்று தான் சொல்லும் துணுக்குக்கு தானே சிரித்துக் கொண்டே உள்ளே நுழைவார் அப்பா.

பொலபொலத்தச் சோறை ஆவிப் பொங்க பரிமாறும் அம்மாவின் விரல்கள் உருண்டு திரண்டிருக்கும். அவன் சிறுவனாக இருக்கும்போது நீண்டிருந்த விரல்கள் இப்போது சதைப்பற்றால் சிறிது தடித்திருந்தன. எப்போதோ அணிந்த மோதிரம் அவளின் மோதிர விரலை பள்ளமாக்கியிருந்தது. வலதுக்கையின் கட்டைவிரல் நகம் மட்டும் வெங்காயம் உரிப்பதற்கு ஏதுவாக பெரிதாக வைத்திருப்பாள். பத்து விரல்களும் சோற்றுப்பானையை பிடிப்பதும் பரிமாறுவதுமாக பரபரத்து செயலாற்றும்போது “போதும்“ என்று பாதிச் சோற்றிலேயே எழுந்து விடுவான். தாழ்ந்து பரவியிருந்தப் கொய்யாமரத்தின் கிளை அவ்வப்போது அவனுக்குப் படுக்கையாகி விடும். கிளை முதுகுத்தண்டைத் தாங்கிக் கொள்ள கால்கள் இரண்டையும் இருப்பக்கத் தரைகள் தாங்கியிருக்கும். கோபம் வரும் நேரங்கள் இப்படியாகவும் கழியும் அவனுக்கு. மாடியிலிருக்கும் ஒற்றை அறையும் கைக்கொடுப்பதுண்டு. “அகராசிப்புடிச்சப்பய…” மகனின் கோபம் மனசுக்குப் பழகிப் போனதில் அம்மா நகர்ந்து விடுவாள். அம்மாவின் முதுகு கோபத்தை நீட்டிக்க வைக்கும். மேய்ந்துக் கொண்டிருக்கும் கோழியை குறி பார்த்து அடிப்பான்.

இப்போதுக் கூட இங்கு வாய்க்காத வாரக் கடைசிகள் கோபத்தை வரவழைத்து விடுகிறது அவனுக்கு. அடுத்த வாரம் அவசியம் வந்தேத் தீர வேண்டுமென்ற கட்டளையை ஊரிலிருந்து பெற்றிருந்தான். கூழாங்கல் ஒன்றின் மறைவிலிருந்து எட்டிப் பார்த்தத் தவளையை சிறிய கல் ஒன்றை எடுத்து குறி வைத்து அடித்தான். அது ஒரு நொடியில் விலகி கல்லுக்குள் அடைக்கலம் புகுந்துக் கொண்டது. மீண்டும் கல்லெடுத்து வீசினான். மீண்டும் மீண்டும் வீசினான். தவளை தப்பி விட்டது. காலில் தட்டியக் கல் எகிறிப் பறந்தது. நேரம் நழுவியது. எகிறி விழும் கற்களின் துாரம் அதிகரித்துக் கொண்டேப் போனது.

ஜீப் தொலைவில் நின்றிருந்தது. அதை நோக்கி நடக்கத் தொடங்கினான். பின்னால் பேச்சுக்குரல் கேட்டது. திரும்பிப் பார்க்காமலேயே பெண்களும் ஆண்களுமான ஒரு சிறுக் கூட்டம் என கணிக்க முடிந்தது அவனால். சற்று துாரத்தில் நின்றிருந்த இனோவா கார் அவர்களுடையதாக இருக்கும். பேச்சும் சிரிப்பும் நெருங்கி வந்தன.

அவனின் வீட்டிலும் குலதெய்வம் கோயிலுக்கு போவதென்றால் இரண்டு வேன்களுக்கு கும்பல் காணும். அப்பா.. அம்மா.. அத்தை.. அவளின் மூன்று மகள்கள்.. அண்ணன்கள்.. அப்பத்தா.. தாத்தா.. பங்காளி வீட்டு ஆட்கள் என பெருங்கூட்டம் கூடி விடும். பேச்சும் சிரிப்பும் கட்டுச்சாதமுமாக கிளம்பும் கும்பலிடம் திரும்பி வரும்போது புளியோதரை மட்டுமே தீர்ந்திருக்கும். “உம்மாணாம்மூஞ்சி மாமனாம்.. உத்துப்பாத்தா பீமனாம்..“ சாப்பிடுகையில் வயதில் மூத்த அத்தை மகள்கள் அடிக்கும் கிண்டலில் இவனுக்கு கோபம் எகிறி அடிக்கும். பேச்சு நின்று விடும். “ஏண்ணீ.. வாங்குனதுதான் வாங்குனே.. ஒரு பொட்டப்புள்ளயா பாத்து வாங்கியிருக்கக் கூடாது.. வூட்டு வேலைக்காது ஆயிருக்கும்.. ஆன்னா ஊன்னா இந்தப்பய பொணங்கீட்டு வெளியில்ல ஓடிடுறான்..” அத்தை வம்பிக்கிழுப்பாள்.

அவர்கள் கடப்பதற்காக நடையின் வேகத்தை மட்டுப்படுத்தினான். ஆணும் பெண்ணுமாக இருவர்.. கிட்டத்தட்ட இவனின் வயதையொத்தவர்கள்.. இரண்டு மூன்று சிறுவர்கள்.. இரு ஜோடிப் பெரியவர்கள் என கும்பல் இவனைக் கடந்துச் சென்றது. வயதானவர்கள் களைப்பேறியதுப் போல நடந்தனர். கடைசியாக சென்றப் பெண்மணியைத் தொடர்ந்து நடந்தான் இவனும். அந்தப் பெண்மணி சற்றே தளர்ந்திருந்த முந்தானையை உதறி சொருகும்போதுதான் அந்த விரலைப் பார்த்தான். தனித்து ஆடியது அந்த ஆறாவது விரல் தனியாக.. துண்டாக.. சிறியதாக.. அழகற்றதாக.
மழை நின்றதில் ஓடை நீர் தெளிந்திருந்தது. குனிந்து நீரை அள்ளி எடுத்து வருடலாக முகத்தைக் கழுவிக் கொண்டான். பிறகு கைகளை இணைத்து குவித்து நீரை அள்ளிப் பருகினான்.

மெலிதான பனி ஜீப்பின் மீது கவிழ்ந்திருந்தது நிறைவாக.

என் நூற்றாண்டு / My Century

என் நூற்றாண்டு
– தேவதச்சன் – 

துணியால் வாயைப் பொத்தி அழுதபடி
ஒரு பெண் சாலையில் நடந்து போகிறாள்
என் பஸ் நகர்ந்து விட்டது.
படிவங்களை நிரப்பத் தெரியாமல் ஒரு முதியவர்
மருத்துவமனையில் திகைத்து நிற்கிறார்
என் வரிசை நகர்ந்து விட்டது.
தண்டவாளத்தில் ஒரு இளைஞன் அடிபட்டு
தண்ணீர் தண்ணீர் என்று
கையசைத்துக் கொண்டிருக்கிறான்
என் டிரெயின் நகர்ந்து விட்டது
எவ்வளவு நேரம்தான் நான் இல்லாமல் இருப்பது
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம்
இருபத்தொன்றாம் நூற்றாண்டு எவ்வளவு நேரமோ
அவ்வளவு நேரம்

oOo

My Century
Nakul Vac

Muffling her cries with her saree
A woman walks down the street weeping
My bus has begun to move.
Flummoxed by forms he can’t fill
An old man stands helpless at the hospital
My queue has begun to move.
Water Water
An injured young man pleads with his hands
at the railway track

My train has begun to move.
For how long should I be absent
As long as I can
As long as this twenty first century lasts
That long.

oOo

குறிப்பு-

இந்தக் கவிதையின் மொழிபெயர்ப்புச் சிக்கல் கடைசி வரிகளில் வருகிறது. மொழிபெயர்ப்புச் சிக்கல் மட்டுமல்ல, புரிதலின் சிக்கலும்தான்- “எவ்வளவு நேரம்தான் நான் இல்லாமல் இருப்பது/ எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம்/ இருபத்தொன்றாம் நூற்றாண்டு எவ்வளவு நேரமோ/ அவ்வளவு நேரம்”, என்பதைப் பலவாறு பொருள் கொள்ளலாம். அவற்றில் ஒன்றை நோக்கும் குறிப்பு இது,

மேற்கண்ட கேள்வியில், “நான் இல்லாமல் இருப்பது,” என்ற இடத்தில், “கண்டும் காணாமல் இருப்பது” என்று மாற்றி வாசித்தால் என்ன வேறுபாடு சொல்ல முடியும்?

கவிதையின் முந்தைய வரிகள், கண்டும் காணாமல் செல்வதைத்தான் சொல்கின்றன- அழுதபடிச் செல்லும் பெண்ணிடம் ஆறுதலாக ஒரு வார்த்தை பேசியிருக்கலாம், ஆனால் நம் நகர்ப்புற வாழ்க்கையில் பிறர் அந்தரங்க விஷயங்களில் தலையிடுவதில்லை; பெரியவருக்கு படிவம் நிரப்பித் தந்திருக்கலாம், ஆனால் நமக்கு நம் அவசரம்; அடிபட்டவனுக்கு ஒரு வாய் தண்ணீர் கொடுத்திருக்கலாம், ஆனால் நமக்கு நம் நிர்ப்பந்தங்கள். இப்படி வெவ்வேறு காரணங்கள் சொன்னாலும் இவை அனைத்தும் நாம் கண்டும் காணாமல் கடந்து செல்லும் சம்பவங்கள், எனவே, “எவ்வளவு நேரம்தான் கண்டும் காணாமல் செல்வது”, என்று கேட்டு நம் மனசாட்சியை எளிதாகத் தொட்டிருந்தால் சரியாகவே இருந்திருக்கும். மாறாக, “எவ்வளவு நேரம்தான் நான் இல்லாமல் இருப்பது” என்பதில் குழப்பம் வந்து விட்டது.. தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுத்திருந்தால் நான் இருந்திருப்பேனா?- இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டால், நான் என்பது மனிதம் என்று அர்த்தப்பட்டு கவிதைச் சரியான இடத்துக்குக் கொஞ்சம் சுற்றுவழியில் வந்து விடுகிறது.

ஆனால் இந்தக் கவிதைக்கு நம் சமூக மனதைச் சாடும் நோக்கம் இருக்குமா என்பது சந்தேகமாக இருப்பதால், வேறொரு யோசனை தோன்றுகிறது. கவிஞர் நடந்தது எதையும் நினைத்து வருந்துவதாக இருக்காது- அதாவது, குற்றவுணர்வு இருக்கலாம், அதற்காக திருந்தி வாழும் மனநிலை வந்து விட்டது என்று சொல்ல முடியாது. மாறாக, இதெல்லாம் இப்படித்தான் இருக்கும், நாமும் எதையும் செய்யப் போவதில்லை என்ற விரக்தி மனநிலைக்கு வந்து விட்டிருக்கலாம்- இல்லை, இதுதான் யதார்த்தம், இதுதான் நிதர்சனம், தான் மட்டுமல்ல, நாமெல்லாரும் உள்ளபடியே உள்ள நிலையைதான் விவரிக்கிறார் என்று சொன்னாலும் சரி, அடுத்து வரும் வரிகள் “எவ்வளவு நேரம்தான் நான், இல்லாமல் இருப்பது” என்ற மனநிலையோடு பொருந்திப் போகிறது. நான் அப்போதெல்லாம் அங்கு நிற்காமல் நகர்ந்து வந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் இப்போது நினைத்துப் பார்க்கும்போது அங்குதான் இன்னும் நிற்கிறேன் என்று தெரிகிறது: நகர்ந்தது நானல்ல, “என் பஸ் நகர்ந்து விட்டது.”, “என் வரிசை நகர்ந்து விட்டது.”, “என் டிரெயின் நகர்ந்து விட்டது”. எத்தனையோ விஷயங்கள் என்னைக் கொண்டு செல்கின்றன, ஆனால் என் கூடவே இந்த விஷயங்களையும் நான் கொண்டு வந்திருக்கிறேன், அல்லது அவற்றோடு என்னில் ஒரு பகுதியை விட்டு வந்திருக்கிறேன். தன்னிகழ்வாக, அன்பாலோ கருணையாலோ, என்னில் ஏதோ ஒன்று தோன்றி வெளிப்படாவிட்டால் அப்புறம் அது என்ன இருப்பு, இருப்புக்கும் இல்லாமைக்கும் என்ன வேறுபாடு, நான் செலுத்தப்படுகிறேன் என்பதைத் தவிர? இதையெல்லாம் எத்தனை நாளைக்கு என்னால் தாங்கிக் கொள்ள முடியும்? தாங்கிக் கொள்வதா? செத்தாலும் முடியாது!

இந்தக் கவிதை இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில் எழுதப்பட்டது என்பதைப் பார்க்கும்போது- “எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம்/ இருபத்தொன்றாம் நூற்றாண்டு எவ்வளவு நேரமோ/ அவ்வளவு நேரம்”:- இதெல்லாம் இருந்து தீர்க்கிற விஷயங்கள் இல்லை என்று சொல்வதாகத் தோன்றுகிறது.

அம்புப் படுக்கை

– நரோபா – 

IMG_0276

துருவேறிப்போன தர்மாவின் பச்சை நிற ஹெர்குலஸ் சைக்கிள் நுரை தப்பி முரண்டு பிடித்தது. அவன் அழுத்துவதற்கு சம்பந்தமில்லாமல் பிடிவாதமாக இறுக்கிக்கொண்டு முனகியபடி மெதுவாக முன்னகர்ந்து வருவதை சுதர்சனின் காதுகள் தொலைவிலேயே கண்டுகொண்டன. தர்மாவின் சைக்கிளுக்கென்றே இருக்கும் ஓசை, பசையற்று உலர்ந்த எலும்புகள் ஒன்றையொன்று உரசிக்கொள்ளும் ஓசை. அவனுக்கு தாத்தாவின் நினைவெழுந்தது. வலி மிகுந்து இருக்குமோ?

மூச்சிரைக்க காலூன்றி அவனிடம் நின்ற தர்மாவை நோக்கி. “இன்னமும் இந்த சைக்கிள விடலையாண்ணே?”.என்றான். “வேற போக்கில்லையே தம்பு” என்றபோது வழக்கமாக காதுகளைத் தொட முனையும் உதட்டோரக் கோடுகள் தயங்கிப் பாதி வழியில், கறைபடிந்து மழுங்கிய முன்பற்களைக் காட்டுவதோடு நின்றன. “தம்பு.. நம்ம ஆனாரூனா செட்டியாருக்கு சொகமில்ல .ஒரு எட்டு வந்து பாத்துட்டு போவச் சொல்லி ஆச்சி தாக்க சொல்லிவிட்டாக”.

மாலைச் சூரியன் மேகங்களுக்குள் மறைந்து மேக முனைகளில் மட்டும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. கிரிக்கெட் பேட்டை கவ்வியிருக்கும் கேரியரை இழுத்துச் சரிசெய்தபடியே, “அம்மா உள்ளதான் இருக்காங்க..சொல்லிருங்க.” என்றான்.

“அப்பச்சி ஒன்னையதான் பாக்கணுமாம்”

அவர் பேரனும் சுதர்சனும் பள்ளித் தோழர்கள். அவன் இப்போதெல்லாம் இங்கு வருவதில்லை எனும் வருத்தம் இருக்கலாம். அவனை வரவழைக்க உதவி தேவையாய் இருக்கும் என எண்ணிக்கொண்டான்.

“நாச்சி இருக்கானா?’

“எல்லாரும் இங்கேயேதான் ரெண்டு நாளா இருக்காக”

“நானும் அம்மாவும் வர்றோம்” என்றபடி சைக்கிளை மீண்டும் காம்பவண்டுக்குள் நிறுத்தினான்.
ஆனாரூனா ஊரின் முக்கியஸ்தர்களில் ஒருவர். ஒரு காலத்தில் அவருடைய பாத்திரக்கடை மிகப் பிரபலம். இப்போது கவனிக்க ஆளில்லை. டவுனில் நான்கைந்து காம்ப்ளெக்ஸ்கள் அவருடையது. வாடகையில் நல்ல வரும்படி. தர்மா அவருடன் பட்டறையில் இருந்தவன்தான். அது இதுவென்று எல்லா வேலையும் செய்வான். ஆள் தேவை என்றால் மருந்து இடிக்கவும் வருவான்.

தாத்தா மரணக் குறிகளில் தேர்ந்தவர். முதன்முறையாக அவர்கள் சந்தித்து கொண்டது பல வருடங்களுக்கு முன்னர். ஆனாரூனாவின் மூத்த மகன் பதினாலு நாள் காய்ச்சலில் துவண்டு கிடந்தான். மிஷன் ஆஸ்பத்திரி துரை டாக்டர் ஊசிக்குக்கூட மட்டுப்படவில்லை. நினைவிழந்து அரற்ற ஆரம்பித்தவுடன் பங்காளிகள் வைத்தியரைப் பற்றி கூறி அழைத்து வந்தார்கள். நாடி பார்த்து “யான நடதான்..மெதுவான்னாலும் வலுவா இருக்கு..பொழச்சிக்கிடுவான்” என்று அவர் சொன்னபடியே இரண்டொரு நாளில் மீண்டெழுந்தான். மூச்சிழுத்துக் கொண்டிருந்த பெரியாச்சியின் நாடியைப பார்த்துவிட்டு “தளந்துருச்சு..ஆனாலும் ஆத்தா கடிவாளத்த இறுக்கமா பிடிச்சிருக்கா.. பொறுக்காம போதும்னு விட கொஞ்சம் நாழியாகும்.. ரெண்டு நாள் கழிச்சிதான் ஆகும்” என்றார். அவர் வாக்கைக் காக்கவே மூச்சைப் பிடித்துக் கொண்டிருந்தவள் போல் மூன்றாம் நாள் உதயத்தில் உயிர்விட்டாள் பெரியாச்சி.

அதன் பின்னர் ஆனாரூனா வைத்தியரைப் பார்க்க அடிக்கடி வரத் துவங்கினார். வாயு குத்தல் கால் குடைச்சல் என ஏதாவது மருந்து வாங்கிக்கொண்டு போவார். ஒவ்வொரு முறையும் பர்மாவிலிருந்து தான் தப்பிவந்த கதையை தவறாமல் புதுப்புது கிளைக் கதைகளோடும் கதாபாத்திரங்களோடும் சொல்வார். தாத்தாவும் பொழுது போக வேண்டுமே எனக் கேட்டுகொண்டிருப்பார். ஆனாரூனா கிண்டல் செய்வது கூட பிடிபடாத அளவுக்கு வெள்ளந்தி.

“நெலம சரியில்லன்னு பட்டவுடனே பணத்த தங்கமா மாத்தி கப்பல பிடிச்சு வந்துட்டேன்ல….எல்லாம் அந்த ஆறுமுகசாமி அருள். வாங்கடான்னு சொன்னேன் ..என் வார்த்தைய நம்பாத பயலுக எல்லாம் ஓட்டாண்டி ஆய்ட்டைங்க” என்று ஒருமுறை சொன்னபோது “கப்பல்ல ஏற முன்ன ஒரு ஃபைட் சீனு உண்டுங்கானும் மறந்துட்டீர்” என தாத்தா எடுத்துக் கொடுப்பார். “சப்பான்காரன் போட்டாம் பாரு குண்டு.. மொத்தமும் காலி.. நானும் பாகனேரி சம்முகமும் மட்டும் கெடச்சத சுருட்டிகிட்டு ஊருக்கு ஓடியாந்தோம்…. போக்கு தெரியாம லாத்திகிட்டு கிடந்தோம்.. சோத்துக்கு வழியில்ல.. இங்கிலிஷ்காரன் இங்கிலிஷ்காரன் தான்.. அவம்புட்டு டாங்கு வண்டியில ஏத்தி இந்த லக்குல கொண்டாந்து விட்டுட்டான்” என்றால் “வழியில டாங்கு சக்கரத்துல காத்து போயிருக்குமே?” என்பார் தாத்தா.

ஒருமுறை பர்மாவிலிருந்து தன் தலைமையில் ஒரு படையை நடத்தியே ஊருக்குக் கூட்டிவந்த பிரதாபத்தைக் கூறினார். இவருடைய வீரச்செயலை பாராட்டி நேதாஜி வங்காளத்தில் எழுதிய நன்றிக் கடிதத்தைதான் காணவில்லை என்றும். கிடைத்தவுடன் காண்பிப்பதாகவும் சொன்னார்.

ஆனாரூனா கதைகளில் மாறாதது ஒன்றுண்டு. ஒவ்வொரு முறையும் அவர் மயிரிழையில் தப்பிப் பிழைப்பார். புறங்கழுத்தில் மூச்சுவிட்டுக் கொண்டிருந்த மரண தேவதையை மூச்சு வாங்கச் செய்து தப்பித்து வந்தார். “குண்டு போடுறான் போடுறான்னு கத்திகிட்டு சனமெல்லாம் தெருவுல ஓடுதுங்க.. பிளேனு சத்தம் கேட்டாலே வயித்துல அரளும்.. அவென் என்னத்துக்கு வாரான்னு தெரியாது.. ஒருநா ராத்திரில பொண்டு புள்ளைகளோட யங்கூன் கேம்புக்குள்ள உறங்கிட்டு கெடந்த சனம் மேல குண்டு போட்டான்.. ஒரு யுத்த தர்மம் வேணாம்?.. தண்ணி மோள எந்திருச்சு வெளிய வந்தவேன்.. தெகச்சு நின்னுட்டேன் .. டமார்ன்னு பெருஞ்சத்தம்.. அப்பிடியே தரையோட தரையா மட்டமா படுத்துக்கிட்டேன்.. கண்ணு முன்னாடி கேம்ப் பத்தி எரியுது….. இந்தக் காது மந்தமானது அன்னிலேந்துதான்..நீங்க கூட கேப்பீகளே” என்றார்.

“எப்படியோ எவென் கையிலும் ஆப்படாம இந்த பக்கட்டு வந்து சேந்து நிம்மதி மூச்சு விட்டா அந்த பகவானுக்குப் பொறுக்கல.. பெரிய ஆறு.. முழங்கால் மட்டு தண்ணில சனம் இறங்கி நடக்க ஆரம்பிக்குது.. எங்கையோ மலைக்கு அங்குட்டு மழ கொட்டி திடுமுன்னு தண்ணி.. சுதாரிக்க முடியல. .. அடிச்சுக் கொண்டே போயிடுச்சு.. கண்ணுமுன்னாடி பாத்தேன்.. இவளுக்கு முள்ளு குத்துனதால நெம்பிகிட்டு கிடந்தேனோ பொழச்சேன்.. ரெண்டு நிமிஷம் தான்”. ஒருமுறை ஆற்றில் கண்ணாடி விரியன் தன்னுடன் வந்தவரைக் கடித்து சாகடித்ததாக சொல்வார். பழனிக்கு நடக்கும்போது திருடர்களிடம் மாட்டி கவரிங்க் கடுக்கனை கொடுத்து தப்பியதை சொல்வார்.

கர்னல் சாமுவேல் மிகக்கறாரான பேர்வழி. சுதேசி எனச் சந்தேகம் வந்தால்கூட போதும், லாடம் கட்டிவிடுவார். விசாரணைக்குச் சென்ற பலரும் ஊமைக் காயங்களால் இரண்டு மூன்று நாட்களில் ரத்த பேதியாகி இறந்து போவார்கள். சுதேசி போராட்டத்திற்கு நிதி சேகரித்த வகையில் செட்டியாரும் மாட்டிக் கொண்டாராம். “என்னிக்கி இருந்தாலும் அவுகதான பாதுகாப்பு, நீங்க போயிருவீக.. நாளைக்கு எங்கள அவுக ஒதுக்கிடப்பிடாது பாருங்க” என நைச்சியமாக கர்னலிடம் நிலைமையை எடுத்துச்சொல்லி சரிக்கட்டி தப்பித்தாராம். அவருக்கு மரணம் தன்னை வேட்டையாடுவதாக ஒரு பயம்.

தாத்தா நல்ல அறிவுத் தெளிவோடு இருந்த கடைசி நாட்களில் ஒருநாள் அவரும் ஆனாரூனாவும் பேசிக்கொண்டிருந்தது சுதர்சனுக்கு நன்றாகவே நினைவில் இருந்தது. ஆனாரூனா, “நம்மள குறி வெச்சுகிட்டே இருக்கு.. எப்படியோ ஆறுமுகசாமி அருளால இம்புட்டு நாளா இன்னும் தல தப்பி இருக்கேன்” என்றபோது தாத்தா “குறி வெக்குற அளவுக்கெல்லாம் பகவானுக்கு பொறும இருக்காது ஓய்…. நாம என்ன ராவணனா கம்சனா.. அதுக்கும் ஒரு ஆகிருதி வேணும்.. குத்துமதிப்பா மொத்தமா அம்பு மாரி தான்.. அதிஷ்டம் இருந்தா பொழச்சிக்கலாம் ..நீர் சொல்லிட்டீர்.. ஒவ்வொரு நாளும் எல்லாருக்கும் இதே கததான்…” என்றார்.

பாம்புகளிடமும் தோட்டாக்களிடமும், திருடர்களிடமும், இராணுவத்திடமும், கிளர்ச்சியாளர்களிடமும், குண்டுகளிடமும், தப்பித்து பிழைத்திருக்கிறார் ஆனாரூனா. “ஒங்க தாத்தா நல்லா ஜேம்ஸ்பாண்ட் பட சீனெல்லாம் அடிச்சு விடுறார்” என சுதர்சன் நாச்சியிடம் சொன்னதற்காக கொஞ்சகாலம் கோபித்துக் கொண்டு அவன் பேசாமலிருந்தான்.

எது உண்மை என்று எவரும் தோண்டித் துருவியதில்லை. தேவையுமில்லை. பர்மாவில் இருந்தார். பர்மிய மனைவிமார்களை வேறு வழியின்றி உதறிவிட்டு, குழந்தைகளை மட்டும் தூக்கி வந்த அப்போதைய வழமைக்கு மாறாக தன் வாரிசைச் சுமந்த பர்மிய ஆச்சியையும் அத்தனை இக்கட்டுகளை மீறி ஊருக்கு கூட்டிக்கொண்டு வந்தார் என்பதும். அன்றைய தினத்தில் பேரழகியாக அறியப்பட்ட, தன்னை விட பல வருடங்கள் இளமையான, ஆச்சியின் பூர்வாசிரம வரலாற்றைப் பாதுகாக்க பெரும்பாடு பட்டார் என்பதும். பர்மாவிலிருந்து வரும் வழியில் காலில் அடிபட்டு எலும்பு முறிந்ததில் கெந்தி கெந்தித்தான் நடக்கிறார் என்பதும். இன்றும் பர்மிய முகச்சாயல்கொண்ட பேரன் பேத்திகள் புழங்குகிறார்கள் என்பதும் மூத்த ஆச்சியும் அவர் வழி வந்தவர்களும் இவரோடு புழங்குவதில்லை என்பதும் தீர்மானமான உண்மைகள். ஆச்சியைப் பார்க்கும்போதெல்லாம் எங்கிருந்தோ வந்தவர் தன்னை எப்படி முழுவதுமாக இந்த மண்ணில் கரைத்துக் கொண்டார் என்பது சுதர்சனுக்கு வியப்பாய் இருக்கும். தர்மாதான் ஏதாவது கதைகளைச் சொல்வான். “கேட்டுக்க தம்பு ஆச்சி ரொம்ப ராங்கி அப்பல்லாம், அப்பச்சிக்கும் எடுத்ததுக்கெல்லாம் சந்தேகம்.. ஆருட்டையும் பேச மாட்டாக பொழங்க மாட்டாக.. மெதுமெதுவா எல்லாமுமா ஆய்ட்டாக.. மீனாச்சி ராச்சியம்தான்..” எனச் சொல்லிச் சிரித்தான்.

இரும்புக் கட்டிலில் எவர் முகமும் காணப் பிடிக்காதவர் போல் ஜன்னலைப் பார்த்து வலது புறமாக கண்மூடி ஒருக்களித்து படுத்திருந்தார் ஆனாரூனா. உடல் முழுவதும் அடர்ந்திருந்த ரோமம் வெள்ளி புற்களாக நீண்டிருந்தன. வேட்டி நெகிழ்வின் ஊடாக மூத்திரப்பை நாளம் வெளித்தெரிந்தது. நாச்சியும் வேறு பலரும் நின்று கொண்டிருந்தார்கள். “ஐயா நீ நாடி பிடிச்சு பாக்கனும்னு சொல்றாரு.. தாத்தா இருந்த வரைக்கும் அவருதான் பாப்பாரு.. தாங்குமா தாங்காதான்னு பாத்து சொல்லுப்பா.” சொற்கள் முடிவதற்குள் ஆச்சிக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்தது.

சுதர்சனுக்கு எரிச்சலாக இருந்தது. நாடியில் என்ன இழவைப் பார்த்துவிட முடியும்? இன்னமும் இதை நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் விஜயதசமிக்கு ஆயுர்வேத கல்லூரியில் சேர்ந்தவன் தீபாவளிக்கு திரும்பி வந்திருக்கும்போது. வேண்டா வெறுப்புடன் முதல்நாள் முதல் வகுப்பில் சென்று அமர்ந்தவுடன் பேராசிரியர் ஸ்ரீகாந்த ரெட்டி “இது ஒரு கல்லூரி அல்ல, செத்த காலேஜ்.. நீங்கள் படிப்பது மருத்துவ அறிவியல் அல்ல வெறும் வரலாறு” என்று இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் உருவிச் சென்றிருந்தார்.

தாத்தாவினால்தான் இந்த கதி. அவருக்குப் பிறகு சுதர்சன்தான் மருத்துவனாக, அதுவும் ஆயுர்வேத மருத்துவனாக, வரவேண்டும் என்பதே தனது ஆசை என திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். அவனுக்காக மூட்டை நிறைய சுவடிகளையும் ட்ரங்க் பெட்டி நிறைய மருத்துவ நூல்களையும் சொத்தாக விட்டு சென்றார். எத்தனையோ முறை அவர் வாத பித்த கபம் என வகுப்பெடுக்க முயலும்போதெல்லாம் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி விடுவான். கடைசி காலங்களில் நினைவு தப்பத் துவங்கியதும் மருந்துகள் மறந்து அனைவருக்கும் நிரந்தர புன்னகையுடன் திருநீறு அளித்து கொண்டிருந்தார். அதற்கும் நோய் சரியாகிவிட்டது என காலில் விழுந்து கொண்டிருந்தார்கள். சாய்ந்து உறங்கிக்கொண்டிருப்பவர் திடுமென்று விழித்து “ஆரட்டியம் ..சீ ச்சீ..போயிரனும் சீக்கிரம் போயிரனும் “ எனப் புலம்புவார்.

தாத்தாவிற்கு தண்டுவட டி.பி. மிகக்கொடூரமான வலி. “அம்புப் படுக்கைன்னா என்னன்னு கிருஷ்ணன் எனக்கு காட்டுறான்.. போதும் கிருஷ்ணா..” எனப் புலம்புவார். தண்டுவடம் முழுக்க ஆயிரம் கூர்வாட்கள் குத்திக்கொண்டிருப்பது போல வலி. உச்சகட்ட வலிக்கு அப்பால் வாழ எப்படியோ பழகிக்கொண்டார். அங்கே அவர் என்னவாக இருந்தார் என்பது யாருக்கும் தெரியாது. பெரும்பாலும் புன்சிரிப்புடன் கண்மூடிக் கிடந்தார். மனம் அதிலிருந்து வழுவி போதம் திரும்பும்போதுதான் வலி அவரால் தாங்கிக்கொள்ள முடியாமல் ஆனது. “என்னக் கொண்டுபோ.. கொன்னுடு” என அரற்றுவார். மரணக் குறிகள் மட்டும் நினைவில் எழுந்தன. “இன்னும் சக்கரவட்டம் வரல..” என்பார். மரணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் “காட்டுப்பீ..” என புன்னகைத்தார். கடைசியில் நேராகப் படுக்கக்கூட முடியாத நிலை. வலியின் தீவிரத்தில் ஒருநாள் இதயம் ஸ்தம்பித்து மரித்தார்.

“ஆச்சி நாடில ஒன்னும் தெரியாது”

“அதெல்லாம் நீ பாத்து சொல்லுப்பா.. தாக்க சொல்லிவிடனும்” என்றாள் ஆச்சி. சுதர்சனைக் காட்டிலும் அவன் மீது அவளுக்கு அதீத நம்பிக்கை.

“ரிபோர்ட்ஸ் கொடுங்க” எனக் கேட்டு ஃபைலை பிரித்து பார்த்தான். சுதர்சனின் சங்கடத்தைப் புரிந்துகொண்டது போல் செட்டியாரின் இளைய மகன் அருகில் வந்து காதில் கிசுகிசுத்தார் “இஸ்கீமிக் ஹார்ட் டிசீஸ்னு சொன்னாங்க தம்பு.. இப்ப தண்ணி கோத்துகிட்டு கெடக்கு.. ஒன்னும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க” என்றார். ஊரிலேயே இருந்து செட்டியாரைப் பார்த்துக் கொள்பவர் அவர்தான். டவுனில் ஹார்ட்வேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.

செட்டியார் அருகே ஸ்டூலில் அமர்ந்தான். மூடிய திரைகளுக்கு அப்பால் விழிகள் துடித்துக் கொண்டிருந்தன. உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன. தொண்டையைக் கடக்கும் காற்றின் ஒலி புறா அகவல் போல் வெளியே கேட்க முடிந்தது. ஆவல் மின்னும் விழிகள் சூழ சுதர்சன் அமர்ந்திருந்தான்.

“அய்யா.. நல்லா இருக்கீகளா.. நாடி பாக்க வைத்தியர் பேரன் வந்திருக்காரு.. தெரியுதா?” என கூட்டத்திலிருந்த முன் வழுக்கையர்களில் ஒருவர் உரக்க கூவினார். பெரிய சலனமேதும் இல்லை. “அய்யா சுதர்சன் வந்திருக்கான்” என்று நாச்சி காதருகே குனிந்து சொன்னான்.

தலைமாட்டில் செட்டியாரின் மூத்த மருமகள் லோட்டா பாலில் நெய்க் கரண்டியுடன் தயாராக இருந்தார். கங்கை நீர் நிரப்பிய தாமிரச் சொம்பை வைத்துக்கொண்டு இரண்டாம் மருமகள் நின்றிருந்தார். கோயம்பத்தூரிலிருந்து வந்திருந்த பெரிய மகன் எவரிடமோ “காரியம் முடிச்சு நாலாம் நாள் வந்து கையெழுத்து போடலன்ன ஏன்னு கேளுங்க” என உணர்ச்சிகரமாக கிணற்றடியில் மன்றாடிக் கொண்டிருந்தது அசாதாரண நிசப்தத்தை கீறிக்கொண்டு அறையை நிறைத்தது.

மெதுவாக இடக்கரம் தொட்டு நாடியை நோக்கினான். ஆள்காட்டி விரல் வாதம், நடுவிரல் பித்தம், மோதிரவிரல் கபம். வாதம் – பித்தம் – கபம் மனதிற்குள் சொல்லிக்கொண்டே இருந்தான். நாடி ஒரு அலை போல எழுந்து மூன்று விரல்களையும் தொடுவது போலிருந்தது. வாதம் – பித்தம் – கபம். மோதிரவிரலையும் நடுவிரலையும் தீண்டாமல் வளைந்து சென்ற ஒரு பாம்பு விருட்டென ஆள்காட்டி விரலை கொத்தியது. சிற்றலைகள் எழுந்தன தாமரை மிதக்கிறது. ஆழத்திலிருந்து ஒரு கடலாமை நிதானமாக மேலெழுந்து வருகிறது. அதன் ஓடு மோதிரவிரலை தொட்டு மூச்சிழுத்து மீண்டும் ஆழத்திற்கு சென்றது. மெல்லச் சலனமற்று அடங்கியது. பதட்டத்தில் கனவு கலைந்து எழுந்த சுதர்சன் கண் விழித்து நோக்கினான். மீண்டும் பேரலை விரல்களை தொட்டு சென்றது.

எழ முற்பட்டபோது அவர் விரல்கள் அவனைத் தீண்ட முனைவது போலிருந்தது. மீறி எழுந்தான். நாசி வளைவு கண்ணீரின் ஈரத்தில் மின்னியது. உதடுகள் துடித்து எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தன. சொல்லிவிடு, சொல்லிவிடு, என மன்றாடித் துடிக்கும் கண்கள் அவனுக்கு மிகப் பரிச்சயமானவை என தோன்றியது. சுதர்சன் எழுந்தான். அவனையும் மீறி உதட்டில் ஒரு சிரிப்பு எழுந்தது. “அய்யா உங்களுக்கு ஒண்ணுமில்ல.. நாடி எல்லாம் நல்லா இருக்கு.. பழைய மாதிரி ஆயிடலாம்.. கவலப்படாதீங்க.. நீங்க சொல்ல இன்னுமொரு கத பாக்கியிருக்கு” எனக் கையை இறுகப் பற்றி உரக்கச் சொல்லிவிட்டு, “வர்றேன்,” என்றபடி வெளியே வந்தான்.

“என்ன தம்பு ஆளுகளுக்கு தாக்க சொல்லிவிடலாமா?” என்றார் இளையவர்.

“அவசியம் இருக்காது “ என்றபடி சைக்கிளில் ஏறிக் கிளம்பியபோது வாயிலில் புங்கை மர நிழலில் தன்னுடைய சைக்கிளைச் சாய்த்துக்கொண்டு அமர்ந்திருந்த தர்மா, “வாங்க தம்பு” என உதட்டோர கோடுகள் காது தொட வழக்கம் போல் சிரித்தான்.

சைக்கிள் தெரு முக்கைக் கடப்பதற்கு முன்பே ஆச்சியின் பெருங்குரல் கேட்டது. அவனை நிறுத்த விடாமல் சைக்கிள் உந்திக் கொண்டு போனது.

சுசீலாவிற்காக எழுதிய கடிதத்தின் பாதி

– பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி –

nagulan

 

சித்தார்த்தனின் சொப்பனத்தில்
எப்போதும் போல இன்றும்
மாறாமல் வந்துவிட்டது
அந்தக்காட்சி,
என்றும் ஈரம் தாங்கிய
பூக்களின் நறுமணமாய்
பதியமாகிப் போன
சுசீலாவைப் பற்றிய
புன்னகைக்குறிப்புகளில் ஒன்று.
மழைக்கு பிந்தைய
அதிகாலைப் பொழுதொன்றில்
வீட்டின் அருகிருந்த
புல்வெளிக்காட்டில்
சிறு சிறு
வெண்குடைக்காளான்களை
ஓடி ஓடித்தேடி
மண்ணைத் தோண்டி
அடித்தண்டு வேர்முறியாமல்
பறித்ததில் சிதறிய
அவளுடைய கொலுசின்
சிணுங்கல்கள் மீட்டும்
வெள்ளி மணிகளின்
சமிக்ஞையை போல.