எழுத்து

பிரக்ஞை

பெ. விஜயராகவன்

காலைப் பொழுதின் மழைத்தூறலில்
மிக ஞாபகமாய்
கக்கத்தில் மடங்கிய குடையுடன்
மெல்ல நிதானித்து நடக்கும்
நரை கூடிய கிழவன் நடையில்
காண்கிறேன்
பிரக்ஞையின் பெருவெளித் தடத்தை.

எஸ். சுரேஷின் ‘பாகேஸ்ரீ’

ரா. கிரிதரன்

பாகேஶ்ரீ ராகம் மென்சோகம் நிரம்பியது; சுயபச்சாதாபம் நிரம்பியது எனும் குறிப்போடு தொடங்கும் கதையில் அதே உணர்வுகளோடு பலவிதமான பாடல்களும் அவற்றின் ரசனையும் சுட்டப்படுகின்றன.  கதைசொல்லியின் பழைய நினைவுகளாகக் கதை தொடங்குகிறது. நிஜாம் பகுதியில் நடப்பது போலச் சொல்லப்பட்ட கதை பழைய ஹைதராபாத்தின் சாயா கடைகளில் நடக்கும் இயல்பான நிகழ்வுகளின் பின்னணியில் சொல்லப்பட்டிருப்பது கதையை நல்ல வாசிப்பனுபவமாக ஆக்குகிறது. டீக்கடை என்றாலே அரட்டை என ஆகிவிட்ட காலத்தில் ரம்மியமான இசையனுபவமும் கலை விவாதங்களும் நடக்கும் பொது அரங்குகளாகவும் அவை இருந்த காலத்தை நினைவூட்டியதில் பாகேஶ்ரீ ராகம் போல ஒரு வித ஏக்கம் நமக்கும் தோன்றியது. நிஜாம் சாம்ராஜ்ஜியத்தின் எச்சங்களாக எஞ்சிய சிலவற்றுள் ஹிந்துஸ்தானி கலைஞர்களுக்கான இடமும், கலாரசனையும் இருந்தாலும் அவையும் இன்று காணாமல் போய்விட்டதில் மனித மனநிலையின் இறக்கத்தை அசைபோடுகிறது கதையின் பின்புலம்.

பொதுவாக ராகங்களுக்கு என இருக்கும் இயல்புகளில் எனக்கு அதிக ஈர்ப்பு கிடையாது. சிலவகை ராகங்கள் காலையில் பாட உகந்தவை, சில இரவு நேர ராகங்கள் எனப் பிரித்திருப்பதே ஒருவித வசதிக்காக மட்டுமே தவிர அவை எழுப்பும் உணர்வுகளுக்கும் அந்த நேரங்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக நான் முழுவதாக நம்பவில்லை. இது ஒரு தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். இசையின் இயல்பு அகவயமானதுதான். ஆனால், ராகம் என்பது ஒரு உணர்வுநிலை. அதனால், சில குறிப்பிட்ட வகை மன இயல்புகளோடு இயைந்து போகும் தன்மை கொண்டது என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. இரவு நேரத்தில் கவிழும் அமைதியில், உலகமே தூங்கும்போது பரமாத்மாவைப்போல சாட்சியாக விழித்துப்பார்க்கும் நிலையில் பாடல்களின் உணர்வுகள் நமது மன இயல்புடன் இணைந்துகொள்ளும். அப்படி இரவின் இயல்பைக் கூட்டும் ராகங்கள் இருக்கலாம். பாடப்பாட ஒருமித்த மன நிலை கூடும்.

பழைய நிஜாம் அரசாட்சியின் மிச்சங்கள் கலாச்சார அடையாளங்களாகவும், கலப்பு மொழியாகவும் எஞ்சி நிற்கும் ஒரு பின்னணியில் நடப்பது கதைக்குப் பெரிய பலத்தைத் தருகிறது. தெலுங்கு, உருது மொழிகளும் கலந்திருப்பது கதைக்கு நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது. ரெண்டாவதாக, கதையின் கட்டமைப்பு மிகக் கட்டுக்கோப்பான பாணியில் அமைக்கப்பட்டிருப்பது ரசனை சமநிலையைப் பூர்த்தி செய்கிறது. கதையில் எவ்விதமான உணர்ச்சிகளும் தனித்துத் தெரியவில்லை. ஹ, ஹ ஹ என விரக்தியாகத் தெரியும் சிரிப்பு கான் சாகிப் சத்தியம் கேட்டபோதும் கதைசொல்லியின் மனதில் ஒலித்திருக்கலாம். அதே போல, கரானாவுக்கு வாரிசாகத் தனது மகன் உருவாக வேண்டும் எனும் வெறி உருவாவதும் ஒரு அரக்கத்தனமாகத் தெரியாமல் மிக இயல்பான ஒன்றாக ஆசிரியர் காட்டியிருப்பது உணர்ச்சியற்ற கூறல்முறையில் அவருக்கு இருக்கும் ஈடுபாட்டைக்காட்டுகிறது.  இதுவே கதையை ஒரு சமநிலையில் பார்க்க உதவுகிறது. சிறுகதையில் அதீத உணர்வு பாவனைகள் சமநிலையைக் குலைத்துவிடக்கூடும். கற்பூர டப்பாவில் பாதுகாத்த பண வாசனை போல கதையின் இயல்பை மாற்றிவிடும்.

ஆனால், மேலே சொல்லப்பட்ட சிறப்பியல்புகளே கதை அடுத்த கட்டத்துக்குச் செல்ல தடையாக இருக்கின்றன. உணர்ச்சியற்ற நடையில் கூறப்படும் பெரும்பாலான கதைகளுக்கு நேரும் அவலம்தான் என்றாலும் பல இலக்கியவாதிகள் இக்கட்டத்தை வேறொரு வழியில் தாண்டிவிடுகிறார்கள்.  வாழ்வின் அபத்த நிகழ்வாகவோ, உச்சகட்ட முரண்பாட்டுக் களமாகவோ நிகழ்வுகளைத் தொகுக்கும்போது உணர்ச்சியைக் காட்டாத கதைக்கும் ஆழம் கூடிவிடுவதைப் பார்க்கலாம். “எனக்கு எதைப் பார்த்தாலும் சிரிப்பாக இருக்கிறது”, எனத் தொடங்கும் ‘மரப்பசு’ நாவல் நாயகியின் உணர்ச்சிகள் வேகக்கார் போட்டி போல உச்சகட்ட தீவிரத்தையே தக்கவைத்திருந்தாலும் கதையை நாடகத்தனமாக மாற்றாமலிருக்க அம்மணியின் இயல்புக்கு மாறான காதலைப் புகுத்தி முரண்பாட்டை அதிகப்படுத்துகிறார் தி.ஜா. இரவு தாமதமாக வருவதால் வெளி கேட்டைத் திறக்காமல் போகும் வீட்டுக்காரம்மாவின் கோபத்தை எதிர்கொள்ளும் அபத்தத்தை விவரிப்பதில் கோபி கிருஷ்ணன் உணர்ச்சியைக் காட்டாது கதையை வாசகர்க்கு கடத்த முடிவதோடு கதாபாத்திரங்களின் ஆழத்துக்கும் புக வழி ஏற்படுத்த முடிகிறது.

பாகேஶ்ரீ கதையில் ஏகலைவன் போல சத்தியம் கொடுத்துவிடும் கதைசொல்லியின் எண்ண ஓட்டத்தில் தொடங்கும் கதை அவனது மனதின் ஆழத்தில் உறங்கும் சோகத்தைக் காட்ட எவ்விதமான முயற்சியையும் எடுக்கவில்லை. ஹ,.. ஹ… ஹ… எனச் சிரிக்கும் வகையில் ஒருவித விட்டேத்தியான மனநிலையைக் காட்டுவதாக எடுத்துக் கொண்டாலும் அது தீவிரமாகச் சொல்லப்படாதது அவனுடன் ஒன்றிவிடமுடியாதபடி தள்ளிவைக்கிறது. கலையின் உச்சகட்டத் தீவிரத்தைக் கைகொள்ளும் ஒருவன் அதன் வெளிப்பாட்டுக்குத் தடைவரும்போது முட்டிப்பார்க்கவோ, உடைந்து நொறுங்கிப்போவதோ, தீவிரமான கழிவிரக்கத்தில் புகுந்துகொள்வதோ இயல்பானது. அவன் பாட முடியாமல் முணுமுணுப்பதாக கதையின் தொடக்கத்தில் வந்தாலும் அந்த சத்தியம் அவனது இயல்பை எப்படி மாற்றியது எனச் சொல்லிவிட்டு பின்கதையில் அதே இசை அவனுடைய குதூகலத்தை ஊட்டியது எப்படி எனச்சொல்லியிருந்தால் பாடல்களில் காட்டப்பட்ட மென்சோகம் சொல்லாமலேயே நமக்குக் கடத்தப்பட்டிருக்கும். இந்த மாற்றம் நடக்காததால் கதையில் சுட்டிக்காட்டப்படும் பாடல்களுக்கும் கதைசொல்லியின் உணர்ச்சிக்கும் ஒரு பெரிய இடைவெளி விழுந்துவிடுகிறது. இதுவே கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தாமல் ஆசிரியரே பாடலின் உணர்வுகளைச் சொல்வது போல அமைந்துவிடுகிறது. ஆசிரியரே பாடலை மென்சோகம் எனச் சொல்லும் தேவையும் ஏற்படுகிறது.

நுண்கலைகளைப் பற்றிய விவரங்கள் அதிகம் வரும் கதையில் அக உணர்வுகளுக்கு எந்தளவு மதிப்பு தரவேண்டும்? நுண்கலையின் வெளிப்பாடு எதற்குப் பயன்படவேண்டும் என கதாசிரியர் உத்தேசித்திருக்கிறார் என்பதைப் பொருத்து இதற்கான பதில் அமையலாம். திசைகாட்டியைப் போல கதையில் வரும் புறக்காட்சிகள் கதையின் நம்பகத்தன்மையைக் கூட்டுவதற்காகவும், கதைக்கு மேலதிக பொருளை அளிப்பதற்காகவும் பயன்படும். தமிழுக்கு கூடுதலாக அகப்புற சித்தரிப்புகள் ஆடிப்பிம்பமாகப் பார்க்கும் மரபை கதைகளுக்குப் போட்டுப்பார்த்து வளர்த்தெடுத்தும் வழிமுறை கைவசம் உண்டு. அக உணர்வுகளும் புறக்காட்சிகளும் உண்மையில் ஆடிப்பிம்பமாகச் செயல்படும் விதத்தில் ஒருங்கிணையும்போது நம்பகத்தன்மையும் கதைக்கு மேலதிக பொருளையும் அவை கொண்டுகூட்டி அளிக்கும். இக்கதையில் பாடல்களின் தன்மையும் அதன் உணர்வுநிலைகளையும் கதாபாத்திரங்கள் மீது சுமத்திப்பார்ப்பதற்கான  சந்தர்ப்பங்களை ஆசிரியர் அதிகம் பயன்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது.

சத்தியம் வாங்கும் நிகழ்வை முன்னிட்டு நாடகீய ஆட்டம் மூலமாகவோ, கதைசொல்லியின் தீவிரத்தன்மையைக் கூட்டும் அகச்சித்தரிப்புகள் மூலமாகவோ, வாழ்வின் முரணைக் காட்டும் விதத்தில் விட்டேத்தியான மனநிலை மூலமாகவோ, அபத்தத்தின் வெளிப்பாடாகவோ இந்த இடைவெளியை அவர் நிரப்பியிருந்தால் பாகேஶ்ரீ மிகச்சிறந்த கதையாக மாறியிருக்கும்.

பாகேஶ்ரீ சிறுகதை, எஸ். சுரேஷ்

பாகேஶ்ரீ சிறுகதையில் வரும் பாடல்கள்

ஒரு சிவப்பு பாட்டில்

அதிகாரநந்தி

img_20161103_170038-01

என் முன்னே இருக்கும்
இந்தச் சிவப்பு பாட்டில்
ப்ரான்ஸில் செய்யப்பட்டது
ரத்தம் மாதிரி இருக்கிறதே நீர்
என்று ஓரோர் நாள் நினைத்ததுண்டு-
தொண்ணுற்று ஒன்பது ரூபாய்க்கு கொடுத்திருக்கிறான்
அதுவும் ப்ரான்ஸிலிருந்து. ரத்தம்தான்,
ஆனால் யாருடையதோ.

சண்டமாருதம்

ஸ்ரீதர் நாராயணன்

koothu1

பூசிய சந்தனமும்
வீசிய அரிவாளுமாக
வெறிகொண்டு எழுகிறது
துடியான முனி.

துள்ளி ஆடுகிறது
எகிறிக் குதிக்கிறது
இரத்தம் கேட்கிறது
துடியான முனி.

சன்னதம் கொண்ட
சண்டமாருதமென
புறப்படுகிறது வேட்டைக்கு
துடியான முனி

வழியில் குறுக்கிடும்
ஆடு அகப்பட்டால்
ஒரே போட்டில் போட்டுவிடும்
துடியான முனி

எதிரில் வந்து நின்ற
அடுத்த ஊர் சாமியை
நாக்கை துருத்தி
நின்று பார்த்துவிட்டு
எல்லையைச் சுற்றிக் கொண்டு
திரும்பி ஓடுகிறது.

Image courtesy சொல்வனம்

‘அகந்தை’ – ஆதவன் சிறுகதை குறித்து

வெ.சுரேஷ்

“ஒரு கலைஞன் தன் சாதனைகளின் கூறுகளை உணர்ந்து, அது குறித்து நியாயமான கர்வம் கொள்வதில் தவறில்லைதான். அதே சமயத்தில், தன் சாதனையின் பரிமாணங்கள் குறித்த பூதாகரமான பிரக்ஞையும் அவனுக்கு நல்லதில்லை. இந்தப் பிரக்ஞையின் பளு இல்லாத வரையில்தான் பணிவுடன், யதேச்சையான, இளமையான, ஒரு மனப்பாங்குடன் அவன் தன் கலையைப் பயிலவும் பேணவும் முடியும்”

மேற்காணும் வரிகள் ஆதவனின் ‘அகந்தை,’ சிறுகதையில் வருபவை. ஒரு கலைஞன் பயிலும் கலை, ரசிகர்கள் அவனைக் ஏற்றுக் கொள்வதில் முழுமை அடைகிறது. ஆனால் அந்தக் கலைஞன் எம்மாதிரியான பாராட்டுகளை விரும்பி ஏற்கிறான்? தன் கலையின் எல்லா நுணுக்கங்களையும் புரிந்து கொண்ட ஞானம் மிக்க சிலரின் பாராட்டா, அல்லது அவனது பிராபல்யத்தின் காரணமாக ஒரு மந்தைத்தனத்தோடு குவிக்கப்படும் வெற்றுப் புகழ் மொழிகளா? அல்லது இரண்டுமே ஒரு நல்ல கலைஞனுக்குத் தேவைப்படுமோ?

இந்தக் கேள்விதான் ஆதவனின் ‘அகந்தை,’ சிறுகதையின் அடிப்படை  என்று சொல்லலாம். மத்திய அரசு அளிக்கும் விருது ஒன்றினைப் பெற்றது முன்னிட்டு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர் வெங்கடேஸ்வரனுக்கு பாராட்டு விழா. அவரது பிரதான சிஷ்யன் கல்யாணமும் ஒரு பேச்சாளர். தன்  முறை வரும்போது, அவரின் கலையைப் பற்றிய தன்  நுணுக்கமான அவதானிப்புகளை- அவர் பாடும் முறையின் தனித்துவத்தை, இதுவரை எவரும் தொட்டுப் பேசியிராத சில தனித்த அம்சங்களை, விரிவாக எடுத்துரைத்துப் பாராட்டக் காத்திருக்கிறான். ஆனால் அதற்கு முன் மேடையில், அந்த ஊரின் கலெக்டர் பேசுகிறார். இசை ரசனை ஏதுமற்ற, வழக்கமான, அரசு அதிகாரிக்குரிய தோரணையோடு ஆற்றப்படும் உரை, மேலும் அதையடுத்து இன்னும் சில சமத்காரமான உள்ளீடற்ற பேச்சுக்கள் என்று போய்க்  கொண்டிருக்கிறது. இந்த வெற்று உரைகளை வெங்கடேஸ்வரன் கிண்டலாகவே அணுகி, மேடையிலிருந்தாலும் தன்னிடம் கண்ஜாடையில், குறும்புச் சிரிப்பில் அதிருப்தியைப் பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்த்திருக்கும் அவனுக்கு வெங்கடேஸ்வரன் அந்த உரைகளை ரசித்து அமர்ந்திருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. கடைசியில் உங்களுக்கும் இதுதான் வேண்டியிருக்கிறது என்று வெறுப்போடு  நினைத்துக் கொள்கிறான்.

அவனது முறை வரும்போது, தான் தயாரித்து வந்ததைப் பேசாமல் அவர் எப்படி எவ்வளவு எளிமையானவர், தன்னைப் போன்றவர்களின் முட்டாள்தனத்தையெல்லாம் எப்படி மன்னித்து அருள்பவர் என்றெல்லாம் ஒரு விதூஷக வேஷம் கட்டிப் பேசுகிறான். கூட்டம் ஆரவாரிக்கிறது. வெங்கடேஸ்வரன் அகந்தை கொண்டு விட்டதாகவே நினைக்கிறான். தான் அங்கு உதாசீனப்படுத்தப்பட்டதாகவும் உணர்கிறான். வெறுப்போடு வீடு திரும்பியவன், பிறகு வெங்கடேஸ்வரன்   வீட்டுக்குப் போவதையே பல நாட்களாக தவிர்க்கிறான்.

அவருக்குத் தன் வித்தையைப்  பற்றிய அகந்தையும் புகழில் ஆசையும் வந்துவிட்டதாக எண்ணிக் கொள்கிறான். அப்போது ஒருநாள் வெங்கடேஸ்வரன் பாடிய ஒரு பழைய  கச்சேரியை வானொலியில் கேட்டு மனமுருகி, தரையில் அமர்ந்து அந்த ‘ராம பக்தி சாம்ராஜ்யம்‘ கீர்த்தனையைப் பாடுகிறான். மனம் நிர்மலமானதைப் போல் இருக்கிறது.

அடுத்த நாள் அவன் அதுவரை அறியாத ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, நேற்று அவன் பாடிய கீர்த்தனையை வெகுவாகப் பாராட்டி, பாட்டில் இருந்த நுணுக்கங்களைக்  குறித்து விரிவாக உரையாடுகிறார். அவன் வீட்டின் மாடியில் குடியிருப்பவர் அவர். பின் இந்தப் பழக்கம் தொடர்கிறது. அவருக்காக இவன் பாடுகிறான். நுணுக்கமான அவரது அவதானிப்புகளுக்கு ஈடு கொடுப்பதற்காக ஒவ்வொரு நாளும் மேலும் நுணுக்கங்களுக்காக முயன்று என்று போகிறது நாட்கள்-, ஆனால் ஒரு கட்டத்தில் அவரது நுட்பமான அவதானிப்புகளும் ரசனையும் அவனுக்குச் சலிக்கத் தொடங்குகிறது.  அவரைத் தவிர்க்கத்  தொடங்குகிறான்.

அப்போதுதான் மேலே மேற்கோளில் சொன்ன அந்தச் சிந்தனை தோன்றுகிறது அவன் மனதில். அந்த ரசிகர் தனக்கு, தன்  பாடும் திறன் மீது, பூதாகாரமான ஒரு பிரக்ஞையை உருவாக்கித் தன்  கலை அப்பியாசத்துக்கு தடையாவதாகத் தோன்றும் அதே சமயம், வெங்கடேஸ்வரனின்  நினைப்பும் வருகிறது கல்யாணத்துக்கு. நுணுக்கமான ரசனை வெளிப்பாடுகளால் தன்  கலை குறித்த பூதாகரமான பிரக்ஞையை மறைக்க அல்லது தவிர்க்கத்தான் அன்று அவர் பல வெற்று உரைகளை ரசித்தாரோ? அல்லது, அவற்றை ரசிப்பது போலக்  காட்டிக் கொண்டாரோ, என்று நினைக்கும்போதே அப்படித்தான் என்று தோன்றுகிறது  அவனுக்கு.

இசையின் நுணுக்கங்களை அறியாத எளிய பாமர ரசிகர்களை ஊக்குவித்து தன்னை அவர் உதாசீனப்படுத்தியதாகக் கருதியதும் தவறோ  என  நினைக்கிறான் அவன். மாறாக, நுட்பமான ரசிகர்களின் மதிப்பீடுகளினால் தன் கலைக்கு ஏற்படும் இடையூறுகளை உணர்ந்துதான் எளிமையான ரசிகர்களை நோக்கி ஓடியிருக்கிறார் அவர் எனவும் நினைக்கிறான். மறுநாளே மனைவி குழந்தையுடன் வெங்கடேஸ்வரனைச் சந்திக்க அவர் வீட்டுக்குப் போகிறான். இப்படி முடிகிறது கதை.

ஆதவனின் பெரும்பாலான கதைகளைப் போலவே இதிலும் மனித வாழ்வின் தவிர்க்கவியலா புற காரணிகள், சம்பவங்கள் உருவாக்கும் பாதிப்பைவிட,  மனநிலைகளின்  முரண்கள் உருவாக்கும் பாதிப்புகளே அலசப்பட்டிருக்கிறது. இதில் ஒரு கலைஞன், இன்னொரு கலைஞனின் மனநிலையை தனது சுய அனுபவத்தின் மூலமாக ஏற்படும் ஒரு திறப்பின் வழியாக புரிந்து கொள்வது விவரிக்கப்படுகிறது. ஒரு கலைஞனுக்கு உவப்பளிப்பது என்ன என்ற கேள்வியும் விவாதிக்கப்படுகிறது. இன்னொரு கோணத்தில், கலை குறித்தான அவதானிப்புகள், விமரிசனங்கள் கலைஞனின் மீது ஏற்படுத்தும் பாதிப்பையும் விவாதிப்பதாகப் பார்க்கலாம். அவை பாராட்டாக இருந்தாலும், குறை கூறலாக இருந்தாலும், அதில் நுணுக்கங்கள் மேலிட மேலிட ஒரு கலைஞனுக்கு மகிழ்ச்சியைவிட, ஒருவித இறுக்கத்தையே (Discomfort) ஏற்படுத்துவதை சிலரிடத்தில் கவனித்திருக்கிறேன். முக்கியமாக, இந்தக் கதையில் வருவதைப் போல், இசைக்கலைஞர்களிடம் அதை மிகத்  தெளிவாகப் பார்க்கலாம்.

இசையமைப்பாளர் எம்.எஸ்.வி ஒரு தொலைக்காட்சி தொடரில் மிக விரிவாக நேர்காணல் செய்யப்பட்டார். அவரது இசையமைக்கும் முறையும், ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு ராகத்தை தேர்ந்தெடுக்கும் காரணத்தையும் விளக்கும்படி கேட்கப்பட்ட எந்தக் கேள்விக்கும் அவர் நேரடியாக பதில் சொல்லவேயில்லை. சற்றே  கூச்சத்துடன், அது அப்படி வந்தது அப்படி பண்ணினேன், என்பது போன்ற மிக எளிமையான ஒரு வரி பதில்களாலேயே அந்தக் கேள்விகளை எதிர்கொண்டார். கிரிக்கெட் ஆட்டத்தில்கூட, கபில்தேவ் போன்றவர்கள் தம் திறமைகளைக் குறித்த நுணுக்கமான கேள்விகளை தவிர்த்து விடுவதையே கண்டிருக்கிறேன். A Genius can never  explain his genius என்று அந்த நேர்காணல்களை காணும்போதெல்லாம் நினைத்துக் கொள்வேன்.

ஆனால் இந்தச் சிறுகதை வேறொரு கோணத்தை திறக்கிறது. தன் படைப்பின் நுணுக்கங்களை விவாதிப்பதை ஓரளவுக்கு மேல் ஒரு கலைஞனால் விரும்ப முடியாதோ என்ற கேள்வியை முன்  வைக்கிறது. அதே போல ஒரு ரசிகனுக்கு ஏற்படக்கூடிய, தன் ரசனையின் நுட்பத்தின் மேன்மை குறித்த ஒரு பெருமிதத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. உதாரணமாக, வெங்கடேஸ்வரனின் போக்கு குறித்து தொடர்ந்து சிந்திக்கும் கல்யாணம், ஒரு கட்டத்தில், மேன்மையான, நுட்பமான ரசிகன், சமரசமற்ற கலைஞனை மட்டுமே கொண்டாடுபவன் என்ற அகந்தை தனக்குத்தான் இருக்கிறதோ என்றே நினைக்கிறான்.

கூடுதலாக, ஆதவனின் நகைச்சுவை உணர்வுமிக்க அவதானிப்புகள்- அந்தப்  பாராட்டு விழாவில் கலெக்டர் பேசி முடித்தவுடன் பேச வருபவர்களுக்கு, விழா நாயகரைப் பாராட்டுவதன் கூடவே, நமது கலெக்டர் அய்யா சொன்னது போல என்றோ, கலெக்டர் அய்யா அழகாகச் சொன்னார்கள் என்றோ கலெக்டர்  பேச்சையும் பாராட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவது,   நீதிபதி, தலைமை ஆசிரியர் ஆகியோர் தத்தம் தொழிற் கோணத்திலேயே  பாராட்டுவது போன்ற இடங்களும்- குறிப்பாக, வெங்கடேஸ்வரனின் மனைவி குறித்த கல்யாணத்தின் மனைவியின் கூர்மையான அவதானிப்புகளும்- என்று பல விஷயங்களை ரசித்துப் படிக்கக்கூடிய சிறுகதை, ‘அகந்தை