எழுத்து

முகிழ்தல்

– காலத்துகள்-

வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை சுந்தரி அக்காவிடம் கொடுக்கும்போது அவனுக்குச்  சற்று கூச்சமாக இருந்தது. பள்ளிக்குச் செல்ல சைக்கிளை எடுத்தான். கோகுலபுரத்திற்கு குடி வந்து ஒரு வருடமாகியும் அந்த இடம் அவனுக்கு அன்னியமாகவே இருந்தது. அந்த ஏரியாவில் இருந்த வீடுகளும் மனிதர்களும்  இன்னும் அவன்  மனதில் பதியவில்லை.   புதிய இடத்தில் உண்டாகும் அசௌகர்ய உணர்வுடன் எப்போதும் போல் சற்று வேகமாகவே  மிதித்தான்.

கோகுலபுரத்தைத் தாண்டி -அவன் பத்தாண்டுகளுக்கு மேலாக, செங்கல்பட்டுக்கு வந்ததிலிருந்து வசித்திருந்த-, மணியக்காரத்  தெருவிற்குள் நுழைந்தவுடன் சைக்கிளின் வேகம் குறைந்தது.  ஒரு முறைகூட பேசியதில்லை என்றாலும் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்ததால் பழகியவை போல் உணரச்செய்யும் முகங்கள், வீடுகள், பரிச்சயமான கடைகள். மதிய நேரமென்பதால் கூட்டம் இல்லாத கடையில் நாடார் ஏதோ படித்துக்கொண்டிருந்தார். படித்தபின் எடைக்கு போடப்பட்ட  ஏதேனும் காமிக் புத்தகமாக இருக்கும். இவனும் நாடார் கடையில் அப்படி பல புத்தங்கங்கள் படித்தவன்தான் (பழைய கல்கி பத்திரிக்கைகளில் இருந்து எடுத்து பைண்ட் செய்யப்பட்டு, அட்டை பிய்ந்து போயிருந்த சிவகாமியின் சபதத்தின் அனைத்து பாகங்களையும் ஐந்து ரூபாய்க்கும் குறைவான விலையில் அங்கு வாங்கி இருக்கிறான்).

கோகுலபுரத்திற்கு குடி வந்த புதிதில் கடைக்குச் செல்ல வேண்டியிருந்தால், மணியக்காரத் தெருவுக்குத்தான் வருவான், ஆனால் நடைமுறைக்கு அது சரி வராது என்பது விரைவில் தெரிய அங்கிருந்த நாடார் கடைக்கே செல்ல ஆரம்பித்தான். ஆனால் இவனுக்கு நாடார் என்றால்  மணியக்காரர் தெருவில் கடை வைத்திருப்பவர்தான் என்றாகி விட்டது, கோகுலபுர நாடாரிடம்   ‘இத தாங்க, அது இருக்கா’ என்று பொதுவாகத்தான்  கேட்பான்.

இவன் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்ட ‘சைக்கிள் ராஜ்’  கடையும்  அதற்கடுத்து மீராவின் வீடும் தூரத்தில் தெரிந்தன. காற்றடிக்கும் சாக்கில் அங்கு வண்டியை நிறுத்தலாமா என்று யோசித்தவன், மனதினுள் சிரித்தவாறே அந்த எண்ணத்தையும், மீராவின் வீட்டையும் கடந்து சென்றான். விடுமுறை நாளொன்றின் விடிகாலையில் இந்தப் பக்கம் வர வேண்டிய வேலை இருக்க, வீட்டின் வெளியே இன்னும் தூக்கம் மிச்சமிருக்கிற கண்களுடன் வாடிய மலர்ச்சரத்தை  தலையிலிருந்து எடுத்தவாறு மீராவின் அம்மா கோலம் போடுவதைப் பார்த்தபடி இருந்ததும், அன்று அவள் அணிந்திருந்த மேலாடையின் கைப்பக்கம் சிறியதாக இருந்ததால், வெளிச்சம் படாத கையின் பகுதி அவளின் மாநிறத்திற்கு நேர்மாறாக வெண்மையாக இருந்ததும் நினைவிற்கு வர சைக்கிளுக்கு அழுத்தம் கொடுத்தான்.

உமாவின் வீடு மணியக்காரர் தெருவிற்கு மறுபுறம் இரண்டொரு தெருக்கள் தள்ளி இருந்ததாக கேள்வி. அந்த வீட்டையும் தாண்டி அவன் சென்றிருந்தாலும் அவளை அங்கு பார்த்ததில்லை. சுஜாதா வீடு எங்கு என்று இதுவரை அவன் யோசித்ததில்லை, யாரிடமாவது சந்தேகம் எழாதவாறு  கேட்க வேண்டும் என்று நினைத்தவாறே செட்டித் தெருவினுள் நுழைந்தான். மதிய நேர புழுக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்த மின்விசிறிகளின்கீழ் கடைக்காரர்கள் அமர்ந்திருந்தார்கள். சில கடைகளில் அப்போதும் கூட்டமிருந்தது. அரிசிக் கடையில் இறக்கப்பட்டுக் கொண்டிருந்த மூட்டைகளில் இருந்து தூசும், முடை நாற்றமும் முகத்தில் அறைந்தன. ஓடியே பார்த்திராத மணிக்கூண்டை கடந்தான். அந்த இடத்தில்  முன்பிருந்த  குதிரை வண்டி நிறுத்தத்திலிருந்து வண்டி வாடகைக்கு பிடித்து  அதில்  வைக்கோல் மணத்துடன்   பயணம் செய்திருக்கிறான்.

பரீட்சை இன்னும் முடியாததால் உள்ளே செல்ல முடியாமல் பள்ளிக்கு வெளியே பெரிய கூட்டம் நின்றிருந்தது. தன் வகுப்பு பசங்களுடன் சேர்ந்து, முழு கவனமும் இல்லாமல் வழக்கமான அரட்டையில் கலந்து கொண்டான். சைக்கிளில் வந்த பெண்கள் பள்ளியை நெருங்கியதும் பெடல் மிதிப்பதை நிறுத்தி,   வண்டியின் வேகத்தைக் குறைய விட்டு சட்டென இறங்கி, லாகவமாக காலை எடுத்துக் கொள்வதில்  உள்ள நளினத்தை எப்போதும் போல் ஓரக்கண்ணால் ரசித்தான்.   பரீட்சை எழுதியவர்கள்  வெளியேறியபின் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட,  வண்டி நிறுத்தும் இடத்தில்  எப்போதும் போல் நெருக்கடி. அதையொட்டி  இருந்த வகுப்புக்களில் மாணவர்கள் உள்ளே சென்று அமர  ஆரம்பித்திருந்தனர். அவன் படித்த ஒன்பதாம் வகுப்பறையை தாண்டும்போது  ஜன்னல் வழியே  வகுப்பினுள் சில நொடிகள்  பார்த்துக் கொண்டிருந்தவன், கூட்டத்தால் முன்னே உந்தப்பட்டான்.

பள்ளியாண்டு இறுதியில் மதிய நேரத்தில் வெளியே வர அனுமதி தருவதில்லை என்பதால் பிரதான வாயிலினுள் நுழைந்தவுடன் பள்ளி வெறிச்சோடி இருப்பது போல் முதற் கணம் தோன்றினாலும், அனைத்து வகுப்புகளிலிருந்தும் பேச்சொலி ஒன்றிணைந்து ஆண், பெண், மெல்லிய, கனத்த  குரல்  போன்ற தனித்தன்மைகளை இழந்து அடர்த்தியான ஒற்றை ரீங்காரமாக ஒலித்துக் கொண்டிருந்தது பள்ளி இயங்க ஆரம்பித்துவிட்டதை உறுதி செய்தது. வகுப்பு அடைந்தவுடன் அவ்வொலி இழைகளாக பிரிந்ததைப் போல அக்குரல்களில் சிலவற்றை அடையாளம் காண முடிந்தது. சுஜாதா  வந்து விட்டாள், ஓரக்கண்ணால் மீராவும் வந்திருப்பதை கவனித்தான். புத்தகப்பையை வைத்துவிட்டு தண்ணீர் குடிக்கச் சென்றவன், பள்ளியின் பின்புறமிருந்த மைதானத்தை நோக்கியபடி நின்றான்.  யாருமில்லாத வெட்டவெளியாக இருந்த மைதானம்  வெளிச்சம் நிறைந்திருந்தது. மைதானத்தின் ஓரத்தில்    சைக்கிளை நிறுத்திவிட்டுச் ஒளியை ஊடுருவி வருவது போல் பெண்கள் சிலர் நடந்து வருவதைக் கண்கள் கூச இடுக்கிக் கொண்டு பார்த்தான். முதல் வகுப்புக்கான மணி அடிக்க இவன் வகுப்புக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது சில மாணவிகளையும் அவர்கள் சூடிக்கொண்டிருந்த மல்லியின் மணத்தையும் கடந்தான்.

பாடத்தில் எந்த கவனமும் இல்லை.  மின்விசிறி இல்லாத வகுப்பறையில் மதிய நேர புழுக்கத்தில் வியர்வை மணத்தையும், அதனுள் கலந்துள்ள மலர்களின் மணத்தையும் உணர்ந்தான். உடல் மணத்தில் மூச்சடைக்க மூழ்க வேண்டுமென்று தோன்றிய கையோடு பெண்களின் மணத்தை தனியாக உணரமுடிவது தன் கற்பனையோ என்ற சந்தேகமும் எழுந்தது. பெண்களின் மணத்தினூடே காலையில் முதல் முறையாக  முகர்ந்தற்கு நகர்ந்து அங்கிருந்து  தான் இன்னும் மாற்றிக்கொள்ளாத உள்ளாடைக்குச் சென்றான். அதை அருகில் உள்ளவர்கள்  உணர்வார்களோ என்று ஒரு கணம் யோசித்து அந்த அபத்த எண்ணத்தை  விலக்கினான். உடலும் மனமும் மீண்டும் தன்னை மீறிச் செல்வதை உணர்ந்தவனுக்கு  வகுப்பில் அம்மூவர் மட்டும் –மீரா, சுஜாதா, உமா- ஆடையில்லாமல் இருப்பதாக ஒரு நினைப்பெழுந்ததும் இன்று ஏன் என்றுமில்லாத அளவிற்கு  தறிகெட்டு அலைகிறோம் என்று  பயமேற்பட்டது. தவறு செய்கிறாய் என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டே மனக்கண்ணை மூடாமல் அதில் விழும் பிம்பங்களை துளித்துளியாக நினைவுக் கிடங்கில் சேகரித்தபடி இருந்தான். மூவரும் மாநிறம், அதிக பருமன் இல்லாத, கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உடல்வாகு. நிர்வாணமான உடலில் தலையில் மட்டும் ஏன் ரெட்டை ஜடையும் ரிப்பன்களும்? அவற்றையும் அவிழ்க்க நினைத்தவனுக்கு அது மட்டும் சாத்தியப்படவில்லை. எங்கோ  வகுப்பறையில் மாணவர்கள் கூட்டாக  ஒப்பிப்பதன் ஒலி அவனை  கலைக்க தலையை அழுத்திக்கொண்டான்.  ‘என்னடா கடி தாங்கலையா’ என்ற சுந்தரின் கேள்விக்கு தலையசைத்து வைத்தான்.

அடுத்து வந்த தமிழ் ஐயா பாடத்தை  இயந்திரம் போல் ஒப்பிக்க ஆரம்பித்தார். பத்தாம் வகுப்பு வரை முக்கியத்துவம் கொடுக்கப்படும் மொழிப்பாடங்கள், அதன்பின் மாணவர்களாலும் (வெளிப்படையாக), நிர்வாகத்தாலும் (சூசமாக), இரண்டாம் நிலைக்கு தள்ளப்படுவது இவன் பள்ளியில் இயல்பான ஒன்று.  மொழிபாட  ஆசிரியர்களும் அதை உணர்ந்திருந்ததால் அவர்களும் மாணவர்கள் மீது அதிகம் கவனம் செலுத்துவதில்லை என்பதால் மற்ற வகுப்புக்களை ஒப்பிடும்போது சற்றே இறுக்கம் குறைந்தவை அவை. தமிழர்களின் வீரம் பற்றி ஐயா சொல்லிக்கொண்டிருக்க, காளையை எல்லாம் என்னால் அடக்க முடியாது என்று நினைத்துக் கொண்டான்.  வேறேதேனும்  இக்கட்டில் இருந்து வேண்டுமானால் காப்பாற்றலாம். சைக்கிளில் இருந்து  சுஜாதா தடுமாறி தெருவில் கீழே விழ , மிக  வேகமாக பேருந்தொன்று அருகில் வந்துகொண்டிருக்க இவன்  சைக்கிளை மிதிக்கும் மிதியில் அது அந்தரத்தில் பறந்து அவளருகில் சென்று  அவளை கைதூக்கி காப்பாற்றுவதை பார்த்துக் கொண்டிருந்தான். தசரா சந்தையின்போது  உமாவை இரண்டு மூன்று மாணவர்கள் கிண்டல் செய்ய அவர்களை அடித்து விரட்டுகிறான். இவன்  பரிட்சையில் முதல் மதிப்பெண் பெற, மீரா கண்களில் ஆர்வம் மின்ன இவனைப் பார்க்கிறாள். மூவரில் யாரை தேர்வு செய்ய என்ற குழப்பத்துடன்  அவர்களுக்கு  என்ன வயது என்ற சந்தேகமும், ஓரிரு மாதங்கள் கூட அவர்கள் பெரியவர்களாக இருந்தால் என்ன செய்வது என்ற கவலையும் தோன்றின.

உண்மையில் இத்தனை வருடங்களில் அவர்களுக்கு இவன் மீது கொஞ்சமேனும் ஆர்வமிருக்கிறது என்பதற்கு ஏதேனும் சிறு குறிப்பையேனும் பார்த்திருக்கிறேனா என்று யோசித்தவனுக்கு ஆறாவதோ ஏழாவதோ படிக்கும்போது, பாடப் புத்தகம் எடுத்து வர மறந்த ஒரு நாளில், தன் புத்தகத்தை மீரா அளித்தது ஞாபகம் வந்தது ( ‘அன்று நாலைந்து மாணவர்கள் பாடப் புத்தகம் எடுத்து வராத நிலையில் தனக்கு அவள் இரவல் தந்ததில் ஏதேனும் சூட்சுமம் இருக்குமோ?’). தன் கற்பனைகளின் அபத்தம் குறித்து யோசித்தபடி பின் பெஞ்சின் மீது சாய, ‘தூங்காத நாயே’ என்ற குரல்  தலையை தட்டியது.

வீரத்தை விதைத்துவிட்டு தமிழ் ஐயா செல்ல, ஆங்கில ஆசிரியர் வந்தார்.   தமிழுக்காவது தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இருக்க,  மேல்நிலை வகுப்புக்களுக்கு ஆங்கிலத்திற்கென்று தனி ஆசிரியர் கூட இல்லாத நிலையில்  இயற்பியல் எடுப்பவரே அதையும்  -‘Kennelனா   அது ஒரு விதமான கரடிக் குகை’ என்ற அளவில்- கற்றுக் கொடுத்தார்.

ஏதோ வகுப்பிலிருந்து  பி.டி.க்காக சென்று கொண்டிருந்தார்கள். சென்று கொண்டிருந்தவர்களில் மாணவிகள் டையை மட்டும் கழற்றி இருக்க, மாணவர்கள் சட்டையையும் கழற்றி இருந்தார்கள். சில வருடங்கள் முன் இத்தகைய ஒரு வகுப்பில் சட்டையின்றி பெண்கள் அருகில் நிற்க சில மாணவர்கள் தயங்கியதையும், விளையாட்டு ஆசிரியர் அதை கிண்டல் செய்ய, அதைப் பார்த்து பெண்கள் சிரித்ததும் நினைவுக்கு வந்தது. தயங்கிய கும்பலில் தான் இருக்கவில்லை என்றாலும், உள்ளுக்குள் இவனுக்கும் உதறல் தான். குறிப்பிடத்தக்க வகையில்  உறுதியான உடற்கட்டோ அதே நேரம்  மிகு  பருமனோ   இல்லாத உடல் இவனுடையது. அதுவே கூட அவனுக்கு சில நேரங்களில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்குவதாக இருந்தது,  குறிப்பாக விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களை பார்க்கும் போது.  கொஞ்சமே கொஞ்சம்  கனிவு கொள்ள ஆரம்பித்திருந்த சூரியன் அகன்று விரிந்திருந்த ஜன்னல்களின் வழியே வகுப்பறைக்குள் நிறைத்துக் கொண்டிருந்த பொன்னிற வெளிச்சத்தை பார்த்துக்கொண்டிருந்தவன், பாடப்புத்தகத்தை புரட்டி, அவன் தேடிய பாடத்தை எடுத்தான்.

“Shall I compare thee to a summer’s day?
Thou art more lovely and more temperate:
Rough winds do shake the darling buds of May,
And summer’s lease hath all too short a date: “

என்று தொடங்கும் ஷேக்ஸ்பியரின் சானட். இது கற்பிக்கப்பட்டபோது (ஆசிரியரால்  ஒப்பிக்கப்பட்ட என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்) மற்ற பாடங்களைப் போல இதையும் கடந்து சென்றவனுக்கு இப்போது இந்த வரிகள் -இப்போது  மார்ச் மாதம் தான் என்றாலும்- அணுக்கமாகத் தோன்றின.   ஜன்னலோரம் அமர்ந்திருந்த உமாவின்  முகம் முன் மாலை நேர ஒளியில் இன்னும் பொலிவு பெற்றிருந்தது போல் தோன்றியது. அவள்  கழுத்தோர வியர்வைத் துளிகள் இவன்  கற்பனைதான் என்று தெரிந்தாலும்  அவற்றை நாவால் வருடத் தோன்றியது.   பள்ளிக்கு வரும் போது துலக்கப்பட்டது போலிருந்த அவர்களிருவரின்  முகங்கள் சற்று  களை இழந்திருந்தாலும் முகத்திலிருந்த அந்தச் சோர்வும்கூட அழகாகத்தான் இருந்தது. மீராவின் கைகளில் மருதாணி பூசப்பட்டிருந்ததை அப்போததான் கவனித்தான். ஜன்னலருகில் அமர்ந்திருந்தால் அவர்களும் ஜொலித்திருப்பார்கள் தான். ஆசிரியர் கைகடிகாரத்தை  அவ்வப்போது  கவனிக்க ஆரம்பிக்க அதுவரை அமைதியாக இருந்த வகுப்பில் உடல்கள் அசையும் ஒலிகளும்  பரபரப்பும் எழுந்தன. ‘மீதி நாளைக்கு’ என்று சொல்லி ஆசிரியர் புத்தகத்தை மூடி வாசலை பார்த்தபடி நின்றிருக்க, புத்தகப் பைகளை ஒழுங்குப் படுத்தியவாறு, மெல்லிய குரலில் பேசும் சிறு சப்தங்கள் வகுப்பை நிறைத்தன.

சாவியைத் தரும்போது  ‘என்னடா ஒடம்புக்கு முடியலையா’ என்ற சுந்தரி அக்காவின் கேள்விக்கு ‘அதெல்லாம் இல்லக்கா, வெயில் ஜாஸ்தி’ என்று சொல்லி தன் போர்ஷனுக்குச் சென்றான். இனி  ஏழெட்டு மணி அளவில்  பெற்றோர் திரும்பும்வரை தனிமைதான். ‘எதாவது சாப்டறியாடா, மூஞ்சியே சரியில்லையே,’ என்று அக்கா வந்து கேட்க, ‘வேணாம்க்கா, ப்ரெட் ஸ்லைஸ் சாப்டுப்பேன்’, என்றவனுக்கு அவர்  சென்றவுடன், காலை முதல் தவறுக்கு மேல் தவறாக செய்துகொண்டிருக்கிறோம்  என்ற குற்றவுணர்வு மீண்டும் ஏற்பட்டது.  அந்த சஞ்சலத்துடனேயே ஒரு வழியாக   வீட்டுப் பாடங்களை முடிக்கும்போது  மணி ஆறு தாண்டி இருந்தது.

கண்களை ஓரிரு நிமிடங்கள்  மூடித் திறக்க ட்யூப்லைட்டின் ஒளி இன்னும் பிரகாசமாக கண்களை நிறைக்க மனமும் சற்று அமைதியாவது  போல் இருந்தது.  திரும்ப ஓரிரு நிமிடங்கள்  கண்களை மூடித் திறந்தான். சிறிது  நேர ஆசுவாசத்துக்குப் பின் மனம் மீண்டும் காலையிலிருந்தே பயணித்துக்கொண்டிருந்த பாதையில் நடைபோட  ஆரம்பிக்க,  இவன்   வெளியே  படிக்கட்டின் அருகே சென்றான். நாட்கள் நீளத்  தொடங்கியிருந்த,  இன்னும் சிறிது வெளிச்சம் மிச்சமிருக்கும் முன்னந்தி நேரம். பின்புற வீட்டில் புழக்கடை கதவு சாத்தப்பட்டிருக்க, அங்கு பொருத்தப்பட்டிருந்த பல்ப் அந்த இடத்திற்கு சற்றும் போதாத  மெல்லிய ஒளியை பரப்பிக்கொண்டிருந்தது. மல்லி, அரளிச் செடிகள் மற்றும் தென்னை வாழை மரங்களின் நிழல்கள் நீண்டிருந்தன. அவற்றையே பார்த்தபடி இவன் நின்றிருக்க, அவை  நெளிந்து பெண்ணுருக்கள்  கொண்டன.  பாடப் புத்தகமொன்றுடன் வந்த உமாவிடமிருந்து   சுஜாதா அதை பறித்து எறிய, மீரா  ஏதோ சொல்லிச் சிரித்தாள்.  இவன் காலையில் பார்த்தவளும் இப்போது அம்மூவருடன் சேர்ந்து கொண்டாள் (“இவளுக்கு எப்படி இவளுங்கள தெரியும்”). மல்லிச் செடியருகே அவர்களை அவள் அழைத்துச் செல்ல, அனைவரும் அதிலிருந்து பறித்த  பூக்கள் தாமாகவே   சரமாக, அவற்றை   தலையில் சூடிக் கொண்டார்கள். தான் சூடிய சரத்தை தோளின் முன்னே உமா போட்டுக்கொண்டாள். மெல்லிய காற்று வீசியதில்  பவழ மல்லியின் வாசனை எங்கும் பரவ , அதனூடே அவர்களின்  மணங்களையும் சேர்த்தே நுகர்ந்தான். மலர்களின், வியர்வையின், நகப்பூச்சின், மருதாணியின்,  கண் மையின், அணிந்திருக்கும் ஆடைகளின் மணமாக அவர்கள் தன்னை சூழ்த்து நிற்பதை உணர்ந்தவன்  அதன்  அழைப்பை ஏற்று சுவற்றைத் தாண்டி அந்த வீட்டினுள் குதித்தான்.

oOo

கரைதல்

அகம் கொள்ளும் பாவனைகள் – நித்ய சைதன்யா சிறுகதை குறித்து

பீட்டர் பொங்கல்

சென்ற வாரம் பதிப்பிக்கப்பட்ட நித்ய சைதன்யாவின் ‘அகம்‘ என்ற சிறுகதை ஆசீர்வதிக்கப்பட்டது- பதாகையின் இருநூறாவது கதை அது. பதிப்பிக்கப்பட்டு ஒரு வாரம் ஆனபின், எந்த ஆரவாரமும் இல்லாமல் அந்த மைல்கல் கடக்கப்பட்டிருப்பது இன்றுதான் தெரிந்தது. பதாகையில் வந்த மற்ற பல கதைகளைப் போலவே எந்த விமரிசனமும் எதிர்வினையும் இல்லாமல் இந்தக் கதையும் வாசிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் இது ஒரு முக்கியமான இடம் கடக்கப்பட்டிருப்பதன் தடமாகிறது. இது போல் இங்கு பதிப்பிக்கப்பட்டுள்ள வேறு பல கதைகளும் அவ்வவற்றின் அளவில் ஏதோ ஒரு தடமாக பின்னொரு காலம் அங்கீகரிக்கப்படலாம். இந்த எதிர்பார்ப்புதான் பதாகை தொடர்ந்து இயங்க காரணமாகிறது.

ஒரு படைப்புக்கு கிடைக்கக்கூடிய எதிர்வினை என்பது எப்போதும் நம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக, நாம் நினைத்தபடி அமைவதில்லை. “‘அகம்‘ சிறுகதை படித்தீர்களா, என்ன நினைக்கிறீர்கள்?” என்று ஒரு நண்பருக்கு அஞ்சல் செய்து கேட்டபோது, அவர் அளித்த பதில் அவ்வளவு மகிழ்ச்சியளிப்பதாய் இல்லை:

“சென்ற வாரம் படிக்க முடியவில்லை. இப்போதுதான் உங்கள் அஞ்சலுக்குப்பின் படித்தேன். அவ்வளவாக சுரத்தில்லாது, அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக எழுதப்பட்டது போல் இருக்கிறது. தொடக்கத்தில் கிழம், கிழவன் எனத் திட்டுகிறார். அப்புறம் ஏனோ தாத்தா என பாசத்துடன் விளிக்கிறார். முடிவில் பிரம்மஸ்ரீ என மரியாதையுடன் போகிறது. தலைப்புக்கேற்ற அகத்தேடலாகவும் இல்லை. சைவ சித்தாந்த விளக்கங்களும் இயல்பாக பொருந்தாமல் தேய்வழக்காகத் துருத்திக்கொண்டு இருக்கிறது.”

நித்ய சைதன்யாவின் இரண்டாம் கதை இது- இதற்கு முன் மலைகள் தளத்தில் ஒரு கதை வெளிவந்திருக்கிறது (‘நிழலேந்திய மரம்‘ ). கவிதைகளில் காண முடியாத களத்தை நித்ய சைதன்யா தன் கதைகளுக்கு என்று எடுத்து வைத்திருக்கிறார்- அதிர்ச்சி என்பது அதன் ஒரு இயல்பு என்று நினைக்கிறேன்.

வெகுச் சில கதைகளே எழுதியவர்களின் எழுத்தை எவ்வாறு அணுகுவது? நண்பர் அளித்த கருத்து, எந்தச் சலுகையும் இல்லாத கறாரான பார்வை கொண்டது. அதனால் அது மதிப்புமிக்கது. ஆனால், பதிப்பிக்கத் தகுந்த கதைகளைத் தேர்ந்தெடுப்பது என்று வரும்போது இந்த எழுத்தாளர்களின் சாத்தியத்தைதான் பார்க்கிறோம். வேறு வகையில் சொல்வதானால், பதாகையில் வெளிவரும் இந்தக் கதைகள் சிறந்த கதைகள் என்று முன்வைக்கப்படுவதில்லை- விமரிசிக்கத்தக்க கதைகள் என்ற நம்பிக்கையில்தான் இவை தேர்வு செய்யப்படுகின்றன. விமரிசனங்கள் எதிர்மறையாய் இருந்தபோதிலும் அவற்றுக்கான பதிலைத் தம்மகத்தே கொண்ட கதைகளாய் விளங்கும் உயிர்ப்பு இவற்றுக்கு உண்டு என்பதுதான் எதிர்பார்ப்பு.

“”கிழட்டுத் தாயோளி உயிர வாங்குதானே” என்று வாய்க்குள் முனங்கிக்கொண்டே பன்னீர் பாட்டில்கள் அடங்கிய சாக்குப்பையை தோளில் துாக்கிவைத்தேன். உருவத்திற்குப் பொருந்தாமல் பஞ்சைப்போலிருந்தது.

”பேபி ஸ்டோர்ல குடுத்துட்டு. உங்கக்காவுக்கு ரெண்டு தேங்கா வாங்கிக்கோடா மாப்ள” என்றது கிழம். கோமணம் மீறி விதைப்பை ஒன்று வெளித்தெரிந்தது. எண்ணெய்க் குவளையால் பன்னீரை மொண்டு வெள்ளைப்பிளாஸ்டிக் பன்னீர் பாட்டிலில் புனல்கொண்டு ஊற்றினார். எனக்கு எப்போதும் அவர்மீது ஒருவித ஏளனம் கலந்த எரிச்சல்தான். குடும்பத்தின் சவால்களுக்குப் பயந்த பெருங்கோழை.”

என்று துவங்குகிறது கதை. இதையடுத்த பத்திகள், தாத்தாவின் பழக்க வழக்கங்களை விவரிக்கும்போதே அம்மாவுக்கு தாத்தாவிடம் உள்ள முரண் உணர்வு நிலை சொல்லப்படுகிறது – வீட்டுக்கு வராத தாத்தா, வழியில் ஏதாவது சாப்பிடத் தந்ததை அம்மாவிடம் சொல்லும்போது, “சட்டென்று அவள் முகத்தில் ஒரு குழைவு தோன்றும். முந்தானையால் கண்களை ஒற்றிக் கொள்வாள்“. ஆனால் அடுத்த வாக்கியத்திலேயே, “அம்மா பிறந்த வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் சண்டை நாறும். அம்மாவின் வாயில் இருந்து தெறித்து விழும் வார்த்தைகளால் தாத்தா நடுங்கிப்போவார். ”நீச முடிவான் பாழுங்கிணத்துல என்னெக்கொண்டு தள்ளிப்போட்டானே. இந்தப்பிஞ்சுக்காக நான் இன்னும் உயிரோட இருக்கேன்”, என்று செல்கிறது கதை.

பத்துத்தறிகள் போட்டு இரண்டு ஜவுளிக்கடைகளை நடத்திவந்த‘ தாத்தா திடீரென்று சாமியார் ஆகிறார், அவர் இருக்குமிடம் தெரிந்ததும் மூன்று பெண் குழந்தைகளுடன் போய் அவரை வீட்டுக்கு அழைத்து வருகிறார் பாட்டி. தாத்தா சாமியார் போல் இருந்து கொண்டு ஊதுபத்தி செய்து விற்றுக் கொண்டிருக்கிறார். பேரன் ஒரு காதல் தோல்விக்குப்பின் பாட்டி வீட்டுக்குச் சென்று, தாத்தாவுக்கு அணுக்கமானவனாக- ஊதுபத்தி செய்ய உதவி, அவரது சைவ சித்தாந்த தத்துவங்களை ஆர்வமில்லாமல் கேட்டு- வளர்கிறான்.

தோற்றுப் போனவராக, வேடதாரியாக-, இரக்கத்துக்கு உரியவராக அல்ல, வெறுப்புக்கும் ஏளனத்துக்கும் உரியவராக வெவ்வேறு இடங்களில் விவரிக்கப்படும் தாத்தா, பேரனின் பார்வையில்தான் நமக்குக் கிடைக்கிறார்- அவரை வசவு பாடும் அம்மாவின் பார்வையில் கிழவனாக, பாட்டியின் அணுக்கத்தில் தாத்தாவாக, இறுதியில் சக காவி வேட்டிக்காரரின் வணக்கத்துக்குரிய பிரம்மஸ்ரீ மாணிக்கம் சுவாமியாக. அம்மா திட்டும்போது இந்தத் தாத்தா நடுங்கிப் போகிறார், இருபது ஆண்டுகளாகப் பேசிக் கொள்ளாமல், ஆனால் தாத்தாவிடம் மாறாப்பிரியம் கொண்ட, எப்போதும் தரையை வெறித்துக் கொண்டிருக்கும் பாட்டியுடன் தனக்கென்று ஒரு உலகில் ஆணவ மலம் பற்றியும் பட்டினத்தார் பாடல்கள் பற்றியும் பேசும், துறவு பூண்ட சித்தாந்தியாக இருக்கிறார்- தன்னிடம் வினயமாக நடந்து கொள்ளும் சாதகன் வரும்போதுதான் அவரது அகம் மலர்கிறது-

“வந்தவர் நாற்காலியில் அமராமல் தாத்தாவின் காலருகே பயபக்தியோடு தரையில் அமர்ந்தார். நான் தாத்தாவின் முகத்தைப்பார்த்தேன். அதுவரை நானறியாத புதுபாவனை அவர் மீது வந்து இறங்கியிருந்தது.”

இங்கு மலர்வது தாத்தாவின் அகம் மட்டுமல்ல, கிழட்டுத் தாயோளி என்று திட்டிய, தற்கொலை செய்து கொண்ட தந்தையை இழந்த, காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்ற பேரனின் அகமும்தான்- இப்போது அவனும் தாத்தாவை புது பாவனையுடன் பார்க்கிறான், இல்லையா? தாத்தாவைப் போலவே தனது இழப்புகளையும் சரிக்கட்டும் ஒரு இடத்தை அவனும் அடையலாம், அவனே அவமானமானது, ஏளனத்துக்குரியது, மதிப்பற்றது என்று அதை நினைத்தாலும்.

அகம் சிறுகதை

மீதமிருக்கும் கோதும் காற்று: ஒரு பார்வை

கோகுல் பிரசாத்

வாடிக்கையாளர் எவரும் வராத பாலியல் தொழிலாளியின் நாள் ஒன்றினை மையமாகக் கொண்டு ஓர் இடதுசாரி எழுத்தாளர் கதை புனைகிறார். வழக்கம் போல வேசிகள் வாழ்வு மீது பச்சாதாபம் கொண்டு தன்னை மாபெரும் மனிதாபிமானியாக பிரகடனப்படுத்திக் கொள்ளும் முனைப்புள்ள சித்தரிப்பு. வாடிக்கையாளர் கிடைக்காத அந்தக் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டும்தான் கதையின் மையக் கதாபாத்திரம் வலியும் வேதனையுமின்றி நிம்மதியாக உறங்கியதாக முடிகிறது அக்கதை. இதனை வாசித்த சு. வேணுகோபால் அந்த எழுத்தாளரிடம், ‘நீங்க ஒரு பழக்கடை வச்சிருக்கீங்க. அன்னிக்கு யாரும் பழம் வாங்க வரல. அதனால கடைக்காரன் நிம்மதியா தூங்கினான்னு எழுத முடியுமா?’ என அந்தக் கதையை மறுத்து தனது பார்வையை முன்வைத்து எழுதியதே ‘மீதமிருக்கும் கோதும் காற்று’ என்ற சிறுகதை. இது அவர் எழுதிய கதைகளுள் முக்கியமானது.

இலக்கியம் என்பது வாழ்வை ‘காட்சிப்படுத்துதல்’ (portray) அல்ல. அது வாழ்வைத் துழாவி கண்டறிதலில் (discover) முகிழ்க்கிறது. கண்டறிந்த உண்மைகளை உணர்வுகளின் வழி கடத்துவதே சு. வேணுகோபாலுக்கு போதுமானதாக இருக்கிறது. சம்பவங்களின் தொகுப்பாக அல்லாமல் அவை இறுதியில் விட்டுச் சென்ற உணர்ச்சிகளின் தடயங்களை பின்தொடர்ந்தே இவரது கதைகளை நினைவு கூர்கிறேன். இவரது பெரும்பாலான கதைகளில் மையக் கதைமாந்தர்களின் புறத் தோற்றமோ அக வெளிப்பாடுகளோ மேலதிகமாக சித்தரிக்கப்படுவதில்லை. மாறாக மற்றவர்/ மற்றவை மீது தாம் வெளிப்படுத்தும் எண்ணங்கள் ஊடாகவே அவர்கள் மேலெழுந்து வருகிறார்கள். பிறர் மீதான நம் பார்வைகளே நாம் யாரென பிறர்க்கு அடையாளம் காட்டுபவை.

சுகிர்தாவின் தினப்பொழுதுகள் ஏனைய பாலியல் தொழிலாளிகளிடமிருந்து மாறுபட்டதல்ல. ஆனால் திட்டமிட்டு கட்டமைக்கப்படாத சம்பவங்கள் இழுத்துச் செல்லும் திசைகள் தோறும் கதை வளைகிறது. இது வாழ்வு பற்றிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. திணிக்கப்பட்ட தத்துவ மேற்பூச்சுகள் ஏதுமில்லை. அதனாலேயே வரையறுக்கப்பட்ட எல்லைகள் குறித்த கவலையின்றி தன்போக்கில் திரிகிறது. அலைந்து திரிந்து வடிகட்டப்படாத எண்ணங்களைச் சிதறடிக்கிறது. மனிதர்கள் மீதான அவநம்பிக்கையில் துவங்கி மனிதத்தின் பேருருக் கொண்டு அமைகிறது. வெவ்வேறு அடர் நிறங்களின் வண்ணக் கலவைகள் குழைந்து வேகமெடுத்த தீற்றல்களின் சமரசமற்ற மோதல்களில் ஒரு ஓவியம் முழுமை கொள்வதைப் போல.

சுகிர்தாவின் வேடங்கள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன. அழகான வாடிக்கையாளனின் வயிற்றை அணைத்துக் கொள்ள பிரியமிருக்கிறது. கசப்பை விழுங்கி எரிச்சல் காந்தும் தருணத்திலும் தன் மார்புகளை குலுக்கி அந்தக் கேலிக்கூத்தில் தானும் அமிழ்ந்து போக அவளுக்கு ஆட்சேபனை கிடையாது. சக தொழில் போட்டியாளரான ரோகிணிக்கு தான் சளைத்தவளில்லை என நிரூபிக்கக் கிடைத்த ஒரு தருணத்தை தவறவிடலாகாதே! அலங்கோலமாகக் கிடக்கும் குடிகாரனிடம் அவள் காட்டும் கரிசனமும் அதன் மூலமாக தனது துயரை மீறிச் சென்று இளைப்பாற விழையும் தன்முனைப்பு தான். கனிந்து கொண்டிருக்கும் தீ!

சரி தவறுகளுக்குள் புகாது வாழ்வை விலகி நின்று அவதானிக்கும் சு வேணுகோபால் ‘உடலின் நாற்றமா? நாற்றமே உடலா?’ என தனது கருத்துகளை அவ்வப்போது கதாபாத்திரங்கள் மீது திணிப்பதை தவிர்த்திருக்கலாம். மறு வாசிப்பில் இயல்பாகத் துலங்கும் வெளிச்சப் புள்ளிகள் மீது அவை கருந்திட்டுகளாக துருத்திக் கொண்டு படர்ந்திருக்கின்றன.

தொகுப்பு : களவு போகும் புரவிகள்
வெளியீடு : தமிழினி

ஸ்டீபன் கிங்கின் ‘ஜாய்லேண்ட்’

ஆர். அஜய்

joyland
1973ஆம் வருடம் ‘ஜாய்லேண்ட்’ நாவலின் கதைசொல்லி டெவினுடனான உறவை முறித்துக் கொள்கிறாள் அவர் காதலி. இருபத்தியோராவது வயதில் ஏற்பட்ட அந்த முதற்காதலின் முறிவின் காயம் வடுவாகி அவ்வப்போது அது தரும் வலியால், 2012 ஆண்டும் -அம்முதற் காதலுக்கு பின்னான பல உறவுகளுக்குப் பின் – தன்னுடைய அறுபத்தியோராம் வயதிலும் டெவின் துன்புறுகிறார். அவள் ஏன் தன்னைப் பிரிந்து சென்றாள் என்ற கேள்விக்கான விடையை இந்த வயதிலும் தேடிக்கொண்டிருக்கிறார். தழுவுதல், முத்தமிடுதல் இவற்றுக்கு அடுத்த கட்டமான ‘அதற்கு’ (‘It‘ என்று தான் டெவின் அதை குறிப்பிடுகிறார்) செல்ல காதலி வெண்டி வெட்கி தயங்க, கனவான்போல் தான் அவளை வற்புறுத்தாததுகூட காரணமாக இருக்குமோ என்று சந்தேகப்படுகிறார்.

வாழ்வில் இன்பங்களை மட்டுமே அடைவது அனைவரின் ஆசையாக இருந்தாலும், துன்பங்களை அவரவர் அதிர்ஷ்டம் அல்லது ஆற்றல் சார்ந்து அடைவது தவிர்க்க இயலாததாக உள்ளது. கற்றுக்கொள்வதும், கல்லாமல் இருப்பதும் அவரவர் கைமணல் எனினும், காலப்போக்கில் அவற்றை அசை போடும் மனநிலைக்கு வந்து விடுகிறோம். அந்த அனுபவங்கள் மீதான நம்முடைய மீள் விசாரணை நம் வாழ்வை தொகுத்துக் கொள்ள உதவுகின்றன. டெவின் அப்படி அசை போடுபவர்களின் பிரதிநிதி என்றால், அதற்கான வாய்ப்பே கிடைக்காமல் வாழ்வு முடிந்து போகிறவர்களும் – இருபதுகளின் ஆரம்பித்தில் இருக்கும் நான்கைந்து பெண்கள் அனுபவங்களின் சேகரிப்பு நிகழ அவகாசம் இல்லாமல், நாவலின் எதிர்மறை பாத்திரத்தால் கொல்லப்படுகிறார்கள் – ‘ஜாய்லேண்ட்’ நாவலில் உண்டு.

டெவினையும் கொல்லப்பட்ட பெண்களையும் கொலையாளியையும் இணைக்கும் புள்ளி, அதனூடே இணைந்து வரும் அமானுஷ்யம் இந்நாவலை குற்றப்புனைவு/ வழக்கமான ஸ்டீபன் கிங்கின் திகில் புனைவு என்று வரையறை செய்ய உதவினாலும், வாழ்வின் மீது இன்னும் கால் பதிக்காத இளைஞனின் மனம் முதன் முதலாக தரை தட்டுவதைப் பற்றியும், அதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் பற்றியுமான நாவலாகவே உண்மையில் இதைப் பார்க்க முடிகிறது. அதுவே நாவலுக்கு நியாயம் செய்வதாகவும் இருக்கும்.

கோடை விடுமுறைக்கால பணியாக, ‘ஜாய்லேண்ட்’ எனும் கேளிக்கை வளாகத்தில் (theme park) வேலைக்கு சேர்வதில் இருந்து நாவலை ஆரம்பித்து அங்கு நடந்த ஒரு கொலை, கொல்லப்பட்டப் பெண் ஆவியாக அலைவதாகச் சொல்லப்படுவது போன்றவற்றை டெவின்/ கிங் தொட்டுச் சென்றாலும் அவற்றில் அதிக நேரம் செலவிடுவதில்லை. நாவலின் பெரும்பகுதி டெவினின் உணர்வுநிலை ஊசலாட்டங்களையும் அவன் அங்கு ஏற்படுத்திக்கொள்ளும் புதிய உறவுகளையும், அப்பாத்திரங்கள் பற்றிய சித்திரத்தையும் உருவாக்குவதில் கவனம் செலுத்தும் கிங் அதில் பெருமளவு வெற்றி பெறுகிறார்.

எழுத்தில் ஆர்வமுள்ள டெவின் சற்று மென்மையானவர், கனவுகள் நிறைந்தவர் என புரிந்து கொள்கிறோம். அதே நேரம் இளமை தரும் அதீத நம்பிக்கையில், தன் கண் முன்னே ஏற்பட்டுக் கொண்டிருக்கும் எதிர்மறை மாற்றங்களை கவனித்தும் அவ்வாறு நடக்காது என தன்னை தானே ஏமாற்றிக் கொள்ளும் சிறுவனாகவும் இருக்கிறார். காதலி வெண்டி சில காலமாக முன்பிருந்த அளவிற்கு நெருக்கமாக இல்லை என்பதை உணர்ந்தே இருந்தாலும் அந்த உண்மையை எதிர்கொள்ள மறுத்து, சிறிது சஞ்சலத்துடன்தான் வேலைக்குச் சேர்கிறார். தான் பக்கம் பக்கமாக எழுதி அனுப்பும் கடிதங்களுக்கு வெண்டி ஓரிரு வரிகளில் பதில் அளிப்பதும் அவரை நம்பிக்கை இழக்கச் செய்வதில்லை. டாம்(Tom) மற்றும் எரினுடன் (Erin) அவருக்கு நெருங்கிய நட்பேற்படுகிறது.

டெவினுக்கு அந்தக் கோடை ஒரு விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், தங்கள் இணையை ஒருவரில் மற்றொருவர் கண்டு கொள்ளும் டாமுக்கும் எரினுக்கும் இது மிக முக்கியத்துவம் வாய்ந்த வருடமே. தன் காதல் கொஞ்சம் கொஞ்சமாக அணைந்து ஒரு கட்டத்தில் வெண்டி வெளிப்படையாக உறவை முறித்தவுடன் முற்றிலும் இருள் சூழ்ந்து விட, அதே நேரம் டாமும் எரினும் தங்கள் உறவில் ஒளியேற்றிக் கொள்வதைக் கண்டு ஒரு சிறு துளி பொறாமை கொண்டதையும் டெவின் நேர்மையாக பதிவு செய்கிறார். இவர்களுடனான நட்புடன், குழந்தைகளை மகிழ்விக்க ஜாய்லேண்ட்டின் அடையாளச் சின்னமான (mascot) நாய் வேடமணிந்து குழந்தைகளை மகிழ்விக்கும் பணியிலும் இயல்பாக பொருத்திக் கொள்கிறார் டெவின்.

‘ஜாய்லேண்ட்’ திறந்திருக்கும் கோடை காலத்தில் மட்டும் ‘ஜிப்சியாக’ வேடமிட்டு, ஆருடம் சொல்லும் ஃபார்டுனா (Fortuna), டெவின் இருவரைச் சந்திக்கப்போவதாகவும் அதில் ஒருவர் அவன் வாழ்வில் முக்கியத்துவம் கொண்டவராக இருப்பார் என்று சொல்வதும், டாம் கொல்லப்பட்ட லிண்டாவை (Linda) பார்த்ததாக டாம் சொல்வதும் இது மர்ம/திகில் நாவல்தான் என்று அவ்வப்போது நினைவூட்டினாலும், டெவினின் உளக் காய்ச்சலைத்தான் சுற்றி வருகிறது. காதல் முறிவில் அவர் மருகுகிறார் என்று கிட்டத்தட்ட அனைவருக்குமே தெரிந்து விடுகிறது, அவரிடம் அது குறித்து பரிவாகவே நடந்து கொள்கிறார்கள். அவரின் பணி நேர்த்தி (அதுமட்டுமல்ல குழந்தை ஒன்றை அவர் காப்பாற்றுகிறார்), மற்றும் இயல்பான இனிய சுபாவமும் காரணமாக இருக்கலாம்.

கோடை முடிந்தவுடன், கல்லூரிக்கு திரும்பும் முன் எரின் டெவினை முத்தமிட்டு ‘ஏன் டாம் இங்கு இருந்தான்’ என்று கேட்பதின் பொருள் தெரிந்தாலும், என்ன நிகழ்ந்திருக்கக் கூடும் என்பது குறித்த சாத்தியங்களை வாசகன் யோசிக்கலாம். டெவின் மட்டும் கல்லூரிக்குத் திரும்பாமல் தொடர்ந்து ஜாய்லேண்ட்டில் வேலை செய்ய முடிவு செய்வது, அந்த இடம் அவருக்கு பிடித்துப்போனதால் மட்டும்தானா அல்லது திரும்பிச் சென்று -மற்றொருவனுடன் உறவில் இருக்கும் – வெண்டியை எதிர்கொள்ள வேண்டியதை தவிர்க்க எண்ணியதாலா என்பது குறித்தும்யோசிக்க இடமிருக்கிறது.

உயிர்கொல்லி நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவன் மைக், அவன் தாய் ஆன்னியையும் சந்தித்து அவர்களுடனும் -சின்ன தடங்கல்களுக்குப் பின் – நட்பு ஏற்படுகிறது. ஆன்னியின்பால் ஈர்ப்பட்டு (அவரும் டெவினின்பால்), இருவரும் உடல் உறவும் கொள்கிறார்கள். புது உறவின் திளைப்பிலும் கூட டெவினுக்கு இதற்கும், வெண்டியுடனான உறவுக்குமுள்ள வித்தியாசமும் அதை எப்போதும் ஈடு செய்ய முடியாது என்று புரிந்து கொள்வதும் வாசகனுக்கு சிலவற்றை உணர்த்துகின்றன.

முதற் காதலின் தோல்வி, அதை கடந்து செல்லும் முயற்சிகள் என ஒற்றை விஷயத்தின் நினைவோடை குறிப்புக்கள் (nostalgia) மட்டுமே அல்ல இந்த நாவல். ஆம், இதில் கடந்த காலம் பற்றிய ஏக்கம் உண்டு, ஆனால் அது அக்காலத்தில் நாம் கண்ட -காதலும் அடங்கிய – கனவுகள் பற்றிய ஏக்கம். அந்தக் கோடையைப் பற்றி விவரிக்கும்போதே டெவின்/ கிங் அதற்குப் பின் என்ன நடந்தது என காலத்தில் முன் பின் சென்று சின்ன செய்திகளை சொல்லும் உத்தி இளமைக் கனவுகளின் இலட்சியங்களின் நிச்சயமற்ற தன்மையை உணர்த்துகின்றன.

டெவின் தான் எண்ணி இருந்தது போல பெரிய எழுத்தாளராகவில்லை, பத்திரிக்கைகளில் வேலை செய்கிறார். மணம் முடிக்கும் டாம்/எரினின் மண வாழ்கை இருபது வருடமே – டாம் மறையும் வரை – நீடிக்கிறது. இந்தச் செய்திகள் வாசகனுக்குத் தெரிவதால், 1973ல் கனவுகளை எழுப்பிக் கொண்டிருக்கும் இந்த இளைஞர்களை காணும்போது அவனுக்கு அவற்றின் வியர்த்தம் குறித்த துயரமே ஏற்படுகிறது, அத்துடன்தான் கண்டிருக்கக் கூடிய கனவுகள் என்னவாகின என்றும் சுயபரிசோதனை செய்யத் தூண்டுகிறது. லிண்டாவை காணும் டாம் அதை குறித்து பேச மறுக்கிறான், அதை தன் மனதிலிருந்தே அகற்ற எண்ணுகிறான். இன்று, இந்தக் கணத்தில், யதார்த்தத்தில் வாழும் விழைவும் வாழ்வின் மீது நேசமும் அதைப் பெரும் புன்சிரிப்புடன் எதிர்கொள்ளும் இளைஞன் ஒருவன் தன்னுடைய நாற்பதுகளில் இறந்து விடுவான் என்பது எவ்வளவு பெரிய சோகம்.

மர்மங்கள் அவிழ்க்கப்படும் நாவலின் இறுதிப் பகுதி அதன் பலவீனமான அம்சமாக உள்ளது. ஜாய்லேண்ட்டில் டெவின் தன்னை பொருத்திக் கொள்வது இயல்பாக இருந்தாலும், லிண்டாவின் ஆவியைப் பார்க்க அவன் கொள்ளும் மிதமிஞ்சிய (டாம் கண்ணிற்கு மட்டும் அவள் தென்படுவது அவனுக்கு கொஞ்சம் பொறாமையூட்டுகிறது) ஆவலுக்கான தர்க்கம் நாவலில் வெளிப்படையாக மட்டுமல்ல குறிப்பாகவும் எங்கும் சுட்டப்படவில்லை.டெவின் பரபரப்பை விரும்பும் ஆசாமியும் அல்ல எனும் பட்சத்தில் அவன் ஏன் லிண்டாவை பார்க்கக் விழைய வேண்டும், ஏன் அந்தக் கொலை பற்றி ஆராய வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடையை வாசகன் அவனுக்கேற்றார் போல் வலிந்து யூகிக்க வேண்டியுள்ளது. அதே போல் டெவினுக்கு உதவ எரின் பழைய செய்தித்தாள்களை சேகரிப்பதும், -நாவலின் ஆரம்பத்தில் டெவின் தங்கும் வீட்டின் உரிமையாளர் லிண்டாவைத் தவிர இன்னும் சில பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக யூகிக்கப்படுவதாக கூறுவதும், தன் ஆராய்ச்சிக்குப் பின் அதே முடிவுக்கு வரும் எரின் இதை காவல்துறை கண்டு கொள்ள தவற விட்டுவிட்டது என்று சொல்வதும் முரணாக உள்ளது -அவற்றிலிருந்து சட்டென குற்றவாளியை அவன் அடையாளம் கண்டு கொள்வதும் நாவல் முடிவிற்கு வந்துவிட அவசரப்படுவதை தான் காட்டுகிறது, பாத்திரங்களின் மனநிலை, கேளிக்கை விடுதியின் சூழல் இவற்றை விவரிப்பதில் உள்ள நேர்த்தியும், ஆழமும் இறுதிப் பகுதியில் காணப்படவில்லை. மைக்கிற்கு இருக்கும் அமானுஷ்ய ஆற்றல் இந்த ழனார் எழுத்துக்களின் அத்தியாவசிய ஒன்று என்ற அளவில் பொருத்தமான ஒன்றே, அது எப்படி உபயோகப்படுத்தப்படுகிறது என்பதும் அதற்கான நியாயமும் நாவலில் உள்ளது, இருப்பினும் குற்றவாளியுடனான இறுதிச் சந்திப்பு சடுதியில் ஆரம்பித்து முடிவதாக இருப்பதை தவிர்க்கவில்லை.

மர்ம /திகில் புனைவென்பதைவிட கனவுகள் கலைவதால் அலைக்கழிக்கப்படும் மனிதர்கள் பற்றிய புனைவாக ஜாய்லேண்ட் வெற்றி பெறுகிறது. லிண்டாவின் ஆவி பழிவாங்கத் துடிக்கவோ அதற்காக யாரையும் துணைக்கு அழைக்கவோ இல்லை. தான் கொலை செய்யப்பட்டபின் – ஜாய்லேண்ட்டின் ஒரு முக்கிய கேளிக்கை அம்சமான – திகில் அறையில் (horror house) இருந்து எப்படி வெளியேறுவது என்று அவளுக்கு தெரியவில்லை. லிண்டாவின் ஆன்மா வழக்கான பழிவாங்கும் பாவையாக இல்லாமல், திக்குத் தெரியாமல் திணறுவதில் எல்லையற்று விரிந்திருப்பதாக கற்பனை செய்திருந்த வாழ்வு திடீரென்று முடிவு பெற்றதை எதிர்கொள்ள முடியாத அதிர்ச்சியும், அதில் இருந்து மீள முடியாத இயலாமையின் சோகமும் தான் உள்ளது.

ரிச்சர்ட் போர்டின் (Richard Ford) ‘பஸ்கம்ப் ட்ரிலஜி’ (Bascombe Trilogy) (நான்காவதாக சமீபத்தில் ஒரு நாவல் வெளிவந்த பின்னும்) என்றழைக்கப்படும் நாவல்களின் முக்கியப் பாத்திரமான பஸ்கம்பின் மகன், சிறுவனாக இருக்கும் போதே காலமாகிறான். அவன் குறித்த நினைவுகளில் மூழ்கும் பஸ்கம்ப் அவனுக்கு வயது ஏறப்போவதில்லை என்பதாக எண்ணிக்கொள்கிறார், அவர் மனதில் அவன் குழந்தைமையை இழக்காத பாலகனாகவே இருப்பான். பஸ்கம்பின் மனவோட்டத்தினூடாகவே பயணம் செய்யும் நாவல்களின், ஒருவர் ஆறவே ஆறப்போகாத இயலாத துயரை எப்படி எதிர்கொள்கிறார், அதில் எப்படி துளியேனும் ஆசுவாசத்தை கண்டடைய முயல்கிறார் என்பதை விவரிக்கும் நெகிழ்வான தருணம் இது. பஸ்கம்ப் தன் அமைதிக்காக உருவாக்கிக்கொள்ளும் கற்பிதத்தை (ஒரு விதத்தில் அது உண்மையும்கூட என்று வாதிடலாம்) இந்நாவலிற்கும் பொருத்திப் பார்க்கலாம். லிண்டாவும் இனி எப்போதும் இருபதுகளில் இருக்கும் யுவதிதான், மூப்பென்பதே அவளுக்கு இல்லை. அந்த விதத்தில் அவள் நித்தியத்துவம் பெற்றுவிட்டாள். ஆனால் இப்படிப்பட்ட நித்தியமான இளமையை யார் விரும்புவார்?

இறப்பிற்கு பின்னான விஷயங்களை அவரவர் நம்பிக்கைக்கேற்ப யூகிக்கத் தான் முடியும் என்றாலும், நாவலின் உலகினுள் ஆன்மா, அமானுஷ்யம் உணமையனவையாக உள்ளன என்பதால் லிண்டா செல்லுமிடத்தில் அவள் தன் வாழ்கையை திரும்பிப் பார்ப்பாளா, கடந்த கால (அங்கு காலமென்ற ஒன்று இருந்தால்) அனுபவங்களை அசை போடுவாளா என்ற கேள்வி எழாமல் இல்லை. இன்னொரு புறம் மூப்படையும் டெவின் போன்றவர்கள் பல கசப்புக்களையும், இனியவைகளையும் அனுபவித்திருந்தாலும், கடந்து வந்த பாதையில் திரும்பிப் பார்க்க அவர்களுக்கு நிறைய உள்ளது என்பது -இறப்பதைவிட – நேர்மறையான அம்சம் என்று கொள்ளலாம். ஆனால் அவர்களும் ஒரு விதத்தில் லிண்டாவைப் போல் வாழ்வெனும் கேளிக்கை விடுதியில் அவரவருக்கான பிரத்யேக திகில் அறையில் சிக்கிக் கொண்டு திக்குத் தெரியாமல் அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

oOo

ஒளிப்பட உதவி – விக்கிபீடியா

மெய்யோ பொய்யோ

வே. நி. சூரியா

 

கண்ணாடியிலிருந்த
பறவையின் தவறி விழும்
சிறகுகளிலிருந்து
சிறுசெடியென அதே
கண்ணாடி
பிரதிபலிப்பிற்குள்
விழுகிறேன்.
பிரதிபலிப்பிற்குள்ளிருந்து
பெருஞ்செடியாக
அல்லாமலும் சிறுகாளான்
சூழாமலும் விதையென
வான் நோக்கி
முளைக்கிறேன்.
பிரதிபலிப்பிற்கு வெளியே
விழும் என் நிழலில்
செடிகளும் காளான்களும்
மரங்களும்
இளைப்பாறுகிறது.