எழுத்து

வெற்றி- நம்மைச் சுற்றியே!

லதா ரகுநாதன்

இவ்வுரைக்குரிய தலைப்பைப் பற்றி யோசிக்க வேண்டாம்.  ஏனென்றால் முதலிலேயே சொல்லி விடுவது நலம் என்றே நினைக்கிறேன், இது கதை அல்ல, வாழ்க்கை.  இல்லை, இப்படிச் சொல்வது பொருத்தமாக வராது. வாழ்க்கைக் கல்வி, இது சரியாக இருக்கலாம். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமெனில், ஒரு மானேஜ்மெண்ட் புக்கின் ஆரம்பப் பாடம். இந்த காரணத்தினால், இந்த உரையில், தவறு, பாடத்தில் கோமு மட்டுமே பிரதானம். மற்றவர்கள் அவளைச் சுற்றி,  பெயர் இல்லாமல் அவளின் உறவுகளாக. இவ்விதம் உரையாற்றுவது எனக்கு மிகவும் நிறைவைக் கொடுக்கிறது. காரணம், யாருக்கு என்ன பெயர் என மெனக்கெடவும் வேண்டாம்.. அந்தப் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளவும் வேண்டாம். இந்தச் சட்டகத்தை ஆரம்ப பாடமாக கொள்ளலாம்.

கோமுவின் வாழ்க்கைக் கதையை ஒரு கண்ணோட்டம் கண்டால் இந்த உரையில் உங்களுக்கான தின பலன்கள் மிகச் சற்றே விளங்கும் சாத்தியக்கூறுகளும் உண்டு.

கோமுவுக்குத் திருணம் ஆனபோது அவளுக்குச் சிறிய வயதென்று கூற முடியாது. அதற்காக வயதானவள் என்றும் கூறலாகாது. பொருந்தச் சொல்வதானால், அந்தக்கால கல்யாண வயதினும் சற்றே அதிகம்இதற்குக் காரணம் ஒன்றும் இருந்தது. கோமு ஒரே பெண். பல வருடம் தவம் இருந்து, பின் பிறந்தவள். அதனால் தாய் தகப்பனின் செல்லப்பிள்ளை. இப்படியாக, குதிர் போல் ஆனாலும் குழந்தையாக பாவிக்கப்பட்டதால், கல்யாணம் பற்றிய நினைப்பு பெற்றோர் மனதில் உதிக்கவில்லை. கோமு செல்லமாக வளர்க்கப்பட்ட காரணத்தினால், சமையல் அறையின் பக்கம் அம்மா செய்து வைத்த முறுக்கு, தட்டை இதர நொறுக்குத்தீனி எடுத்துச் சாப்பிட மட்டுமே சென்றவள்.

இப்படிப்பட்ட ஒரு சின்ன தீனிக்கு தான் சமையல் அறை என்ற நம்பிக்கை காரணத்தினால்கோமு கல்யாணம் முடிந்து கணவன் வீடு வந்ததும், ‘பத்த வை’ என்று சொன்னபோது கடவுள் முன் இருந்த விளக்கு கண்களில் படாமல் உதறலுடன் சமையல் அறை அடுப்பை பற்ற வைக்க…..

கோமு மாமியார் பல வருடங்கள் முன்னரே சிவனடியை அடைந்து அங்கிருந்து அருள் பாலித்திருக்கிறாள் போல. ”ஆஹா.  பெண் என்றால் இவளல்லவா பெண். காரியமே கண்ணாய் சமையல் செய்ய வந்த இவளுக்கு சமையலறை கோமூ என்ற பெயர் வழங்கலாம்,” என்று சொந்த பந்தங்களால் ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.

recipe

கோமுவிற்கு உள்ளுக்குள் கொஞ்சம் உதறல் எடுத்தது உண்மை. ஆனால் காதுக்கு இந்தப் பட்டப்பெயர் குளிர்ச்சியையும், மனதிற்குள் ஒரு கிளுகிளுப்பையும் தந்ததென்னவோ நிஜம். அப்போது மனதிற்குள் முடிவெடுத்தாள்…..இனி எக்காரணம் கொண்டும் நான் பின் நோக்கி நடக்க மாட்டேன். இந்தப் பாதையிலேயே முன்னேறுவேன் என்று. இதை நான் அவள் வாழ்வின் முக்கியமான திருப்புமுனையாக கருதுவேன். ஒருமனதாக ஒரு செயலில் இறங்கிவிட்டால் எப்படி இந்த அண்ட சராசரமே நமக்குத் துணையாக வரும் என்பதைப் பார்ப்போம்.

கல்யாணம் முடிந்த ஒரு வாரம் கோமு தப்பித்து விட்டாள். பெண்ணைக் கொண்டு வந்து விட்ட சாக்கில், பெண்ணுக்கு சமையல் கற்றுக்கொடுக்கும் நோக்கில், கோமுவின் தாய் அவளுடனே இருந்து சமையல் முடிந்த பின் கோமுவின் மாமனார் அந்தப்பக்கம் வரும் போது, கருவேப்பிலை, கொத்தமல்லி அல்லது அது போன்ற ஏதோ ஒரு தழையை அவர் கண் பார்வையில் படும் ஒரு தருணம் தான் சமைத்து வைத்ததில் கோமுவைப் போட செய்து, ஒரு வாரத்தில் ஐந்து கிலோ ஏற்றிய அற்புத சமையல் நிபுணர் என்ற பெயரை பெண்ணுக்கு வாங்கிக் கொடுத்த உத்தம தாயானாள். ஆனால் சிரமம் என்றும் பாராமல் தலைகுப்புற நின்றபோதிலும் கோமு சமையலுக்கு “ச” சொல்லி “மையல்” இன்றி இருந்தாள். ஒரு வாரம் போன பின்னும் பெண்ணுடனேயே இருப்பது நன்றாக இராது என்ற காரணத்தினால் கோமுவின் அம்மா தன் வீடு கிளம்பிச்சென்றாள்.

முதல் நாள் கோமுவின் சமையல். கோமுவின் வீட்டில் அவள் சமையல் பற்றிய சந்தேகம் யாருக்கும் தோன்ற காரணமில்லாமல் போயிற்று. இந்த ஒரு வாரத்தில் வந்தவர் போனவர் என்று அனைவரிடமும் அவள் சமையல் பற்றி மிக சிலாகித்துப் பேசி கோமு என்ற நளனி என்ற பெயர் கொடுத்தாகிவிட்டது. அன்று சமையலறைக்கு எதேச்சையாக, கோமு மூக்கைச் செல்லமாக திருக வந்த கோமுவின் கணவன், தன் மூக்கைப் பிடித்துக்கொண்டு நின்றான், திகைத்து. இங்கே ஒரு முக்கியமான விஷயம் ஒன்றைச் சொல்ல வேண்டும். கோமு கணவன் மூக்கு நீளம், அகலம் என்று உடலிலேயே உருப்படியான உறுப்பு என்பது மட்டுமல்லாது தன் வேலையை செவ்வனே செய்யும் ஒன்றாகவும் இருந்ததால் சமையல் வாசமே அதன் தரத்தைக் காட்டிக்கொடுத்து விட்டது. திகைத்து ருசித்துப் பார்க்க நினைத்தவன், இன்னும் பரிசேஷணம் செய்யாத காரணத்தினால் கையை விருட்டென இழுத்து ஒன்றோடொன்று பிசைய ஆரம்பிக்க, தன் பெயரைக் காப்பாற்ற வேண்டி கோமு சட்டென கட்டிப்பிடிக்க, அப்போது சமய சந்தர்ப்பம் பாராது- இல்லை, பார்த்து என்றும் வைத்துக்கொள்ளலாம்- அங்கு வந்த கோமுவின் மாமனார், “ராமா, கிருஷ்ணா” என்று இன்னும் தெரிந்த சில கடவுள் நாமங்களை உச்சரித்து, தன் மகள் வீடு கிளம்பிச்சென்றவர்தான். ஆக, மாதக்கணக்காக கோமு தன் படு சுமார் சமையலில் சமாளிக்க பிரபஞ்சக் கணக்குகள் அவளுக்கு உதவியாக இருந்தன. சென்ற இடத்தில் கோமு சமையல் பற்றி மாமனாரும் பிரமாதப்படுத்திட ‘சமையல் திலகம் கோமு’ என்ற குடும்பப் பெயரும் இடப்பட்டது.

ஒரு காரியம் செய்ய நாம் முழு மனதோடு நினைத்தால். நம் சூழல் யாவும் ஒத்துழைக்கும்.

கோமுவுக்கு இதுவே நடந்தது

இதுவரையில் சென்னை தாண்டி கடலூர்கூட நினைத்துப் பார்க்காத கோமுவின் கணவனது ஆபீஸ் எங்கோ வடக்கே ஊர் பேர் தெரியாத ஒரு இடத்தில் கிளை ஒன்று ஆரம்பிக்க, அதன் பொறுப்பை கோமுவின் கணவன் கைகளில் ஒப்படைக்க, அவளும் கிளம்பிச்சென்றாள்.

தீபாவளி, கார்த்திகை, பொங்கல், இப்படி எல்லா பண்டிகைகளிலும்சொந்த பந்தம் தவறாது சொன்ன வார்த்தை, “கோமு கை மணமே தனி, அவள் செய்திருக்கவேண்டும் இவைகளை“. இதில் நாம் கவனிக்க வேண்டியது ஒன்றுதான். இவர்களில் ஒருவர்கூட கோமு சமைத்துச் சாப்பிட்டது கிடையாது.

ஆக வடக்கே சென்ற கோமு, சமையலில் தேர்ச்சி பெறாவிட்டாலும், பேச்சில் தேர்ச்சி நிறையத்தான் பெற்றுவிட்டாள். வார்த்தைக்கு வார்த்தை நடுவே அச்சா, மத்லப், ஹான், தேகோ, பத்மாஷ் போன்ற அற்புத வார்தைகள் அவள் ஊருக்குப் போகும் அந்தச் சில நாட்களில் அவளை எல்லோரிடமும் இருந்து தள்ளித்தான் வைக்கும்.

“அத்தை….இந்த குழம்பு இப்படி வெச்சா சரியா….”

“சித்தி…..அதிரசத்திற்கு மாவு பதம் என்ன….”

இப்படிப்பட்ட கஷ்டமான, தர்மசங்கட கேள்விக்கெல்லாம் அச்சா வார்த்தை போட்டுப் பேசும்போது, கேட்ட கேள்வி மறந்து, பதில் சொல்லாததும் மறந்து முழிக்கும்போது, கோமு தன் அஸ்திரத்தை ஏவி விடுவாள்.

“என்ன நான் சொன்னதுபோல்தானே செஞ்ச….?”

ஆக அடுத்த விடுமுறைக்கு கோமு வரும் வரையில் அவள் சொன்னதாகச் சொல்லப்பட்டு, பின்வரும் காலங்களில் அவள் செய்ததாகச் சொல்லப்பட்ட பண்டங்கள் அங்கே விலாவாரியாகப் பேசப்படும்.

ஆனால், இந்த உலக மகா அண்டப்புளுகு தாங்காமல் இறைவன் கோமுவை மிக சீக்கிரம் அழைத்துக்கொள்ள,அவள் இழப்பு பற்றி பேசும் யாவரும், “என்ன ஒரு அற்புதமான சமையல் கை,” என்று சொல்லப்போக, கோமு சமையல் பற்றி நன்கு அறிந்த அவள் கணவனும் அதை நம்ப ஆரம்பிக்க, அவரை பார்க்க. நினைக்காமல், ஆனாலும் அசந்தர்ப்பவசத்தால் பார்க்க நேரும் அனைவரிடமும் அவர் சொல்வது, “உனக்குத்தான் தெரியுமே கோமு என்ன அற்புதமா சமைப்பாள் என்று. அவள் சொன்ன ரெஸிபிக்களை ஒரு புஸ்தகமா வெளியிட்டுருக்கேன். ‘கிச்சன் க்வீன்- தி கோமு’ இருநூறு ரூபாய்தான், வாங்கி நீயும் நன்றாக சமைக்கக் கற்றுக்கொள்”

ஆக, The power of perception, The power of repetitive utterance and Techniques of presentation என்பதையெல்லாம் கோமுவில் வாழ்விலிருந்து தெரிந்து கொள்ளலாம், இவை மானேஜ்மென்ட் உத்திகள் மட்டுமல்ல, இவற்றையே நாம் வாழ்க்கை கல்வியாகவும் கொள்வோமாக.

 

சித்திரச் சொல் சித்திரம்

ந. பானுமதி

 

“முதலிலே கடலின் அடிவயிற்றிலிருந்து ஒரு விம்மல், உடனே அதற்கொரு சிகரம்; அத்துடன் அது கரை நோக்கி உருண்டு புரண்டு விரையும் ஒரு திரளல்; வருகையிலேயே கரையிலிருந்து மீளும் சிற்றலைகள் அத்துடன் விழைந்து திருகும் ஒரு குழையல், சிகரம் உடைந்து வெண் நுரை அலை மீது சரியும் கக்கல். சங்கதி ஏதோ சொல்ல வந்து, வாய் திறந்து வார்த்தை வராமல்-இல்லை, ஒருவேளை அதன் பாஷையேஅதுதானோ-என்னவோ- ஆத்திரத்துடன் கரை மீது மோதியதும் குடம் பால் சரிந்தாற்போல், கரை வரை நுரை-கரை தாண்டிக் கூடி பெரிதாய்ப் பரவி, பெரிதும், சிறிதும் பொடிந்தும் நுரைக்கொப்புளங்கள் தனித்தனியாய் வெள்ளலை வாங்கிக் கொண்டதும் வர்ணங்கள் ஒவ்வொரு குமிழிலும் பிறந்து மிளிர்வது கண் கொள்ளவில்லை”(அலைகள்)

கடலை இப்படி ஓர் சித்திரமாகக் காட்டும் வல்லமை அவர் எழுத்திற்கு மட்டுமே உண்டு. விம்மல்,திரளல், குழையல், கக்கல், கொப்புளங்கள் இந்த சொற்கள் அலைகளின் சித்திரத்துடன் கலந்து காட்டும் வண்ண மாயங்கள் இந்தக் காட்சி மொழி , அதில் ஏறும் வாழ்வின் நிதர்சனம்-  இல்லை தரிசனம், சித்திரச் சொல் போடும் சொற் சித்திரம்.

“சிந்தித்து, சிந்தித்து நான் அறியாமலே வாக்கை வாயில் உருட்டுகையில் இன்னும் செவிக்கும், நாவிற்கும் மணம் கிட்டியும் ருசிக்கெட்டாதோர் தித்திப்பு.”இனிக்கிறது, கசக்கிறது போன்ற  தனிப்பட்ட உணர்வுகளைக்கூட சொல்லில் காட்ட முடிவது அவரால் நாம் பெறும் அனுபவம்.

“இது கோலமல்ல;காடு. நள்ளிரவில் நிலவு நிழலில் இலைகளின்நெய்வில் விலங்குகளின் விழிகள். இலைமறைவில்,இரையைச் சிந்திக்கும் குரூர விழிகள். என்ன சிந்திக்கின்றன? ஏன் சிந்திக்கின்றன? கண்ட கனவின் மீட்சி போல், மேலிமையுள், கோலத்தினின்று ஒரு உரு நிமிர்ந்தது.சின்னப் பொம்மையின் சிறுகூடு. உடுத்திய தூய வெண்மையோடிழைந்த வெள்ளைத் தாழம்பூ நிறம். கால், கை நகங்கள், உதடு, செவி மடிகளின் ரோஜா இதழ்த்திட்டுக்கள் கவனத்தைப் பறித்தன.கன்னத்தின் பீங்கான் வழவழப்பின் கீழ், மாதுளை விதையுள் உறைந்த ரச ஓட்டம் போல் கமழும் ரத்த காந்தி”(மாற்று)கோலங்கள் காண்கையிலே ஏற்படும் பரவசத்தின் ஊடாக பின்னிப் பின்னி சிக்கலாக, ஊடும் பாவுமென விளையாடி, தன் அமைப்பிற்கு வந்து சேரும் கோலங்கள் ;வாழ்க்கை போடும் கோலம்-பரபரப்பும், சுழிகளும், தீர்மானங்களும்,சட்டென்றுதிரும்புவதும்,ஒய்யாரமாகஓடுவதும்,பின்னர்

அமைதியாக நடப்பதும் எல்லாமற்று இணைவதும், ஒடுங்குவதும் அவன் போடும் கோலங்கள்.அது என் கைவழி வழிகிறது-ஆனால் என் இயக்கம் அல்ல.

“வாழ்க்கை ஒரு பரிட்சை கணக்கு மாதிரித்தான் இருக்கிறது.எங்கேயோ எப்படியோ ஒரு சிறு தப்பு நேர்ந்து விட வேண்டியதுதான்-விடை எங்கேயோகொண்டு போய் விட்டுவிடுகிறது.இத்தனைக்கும் தெரிந்த கணக்கு;புரிந்த கணக்கு; முன்னால் போட்ட கணக்கு தான்.”

“எல்லைப்படுத்தத்தானே கணக்கே ஏற்பட்டிருக்கிறது! எல்லையிலாததற்கும் எல்லை நாட்டும் கணக்கு” (ஏகா)

“பிறப்போடு வந்துவிட்டாற்போல் உடலோடு ஒட்டி வெள்ளை ரோஜா நிறத்தில் கடல் நுரையில் நெய்தாய ஆடையினூடே மார்க்கச்சு விண்ணென்று தெறித்துத் தெரிகின்றது.ரவிக்கை பூணாது,திரண்ட பனித்தோள் குமிழ்கள், கழுத்தின் விலாசம்”

“கீழ் வானத்தில் பெரிய யாகம் நடந்து கொண்டிருக்கிறது. மேகப் பாறைகள் நெகிழ்ந்து உடனே கரைந்து ஆஹூதியில் கவிழ்கின்றன. தழல் ஆட்டம், வான் பூரா பரவுகிறது”

“வானத்துக்கும்,வெய்யிலுக்கும் காற்றின் மத்யஸ்தம் நடந்து கொண்டிருக்கிறது.வெறிச்சிட்டுக் கிடந்த வான வீதியில் போக்குவரத்து தொடங்கிவிட்ட்து. மேகங்களின் பவனி,பட்சி ஜாலங்களின் விதவிதமான வரிசைக்கட்டுகள். ஆட்டத்தின் கையிலிருந்து தள்ளிக் கம்பளத்தில் விழும் சீட்டில் காண்பது போல,பட்சிக் கூட்டங்கள் மேகத்தின் பின்ணணியில் வித விதமான பொட்டுகள் வைக்கின்றன.மேற்கு மணக்கோலம் பூணுகிறது. பெண்ணுக்கு எந்தப் புடவையும் பிடிக்கவில்லை.அவிழ்த்துப் போட்ட புடவைகள், வித விதமாய் போர் போராய்க் குவிகின்றன.”

“வானத்தில் இங்குமங்குமாய்ப் பிசுபிசு பஞ்சு மிட்டாய்ப் படர்ச்சிகள், புலுபுலு ரோஜா மொக்குகள். கசங்கிய மாலியங்கள் சிதறிக் கிடக்கின்றன.இருளை இதமாய் நல்ல வார்த்தை சொல்லி ஒதுக்கிவிட்டு மலர்ந்த மினுமினு வெளிச்சம், இடத்துக்கே தண்ணொளியை வர்ணமாய்த் தீட்டுகிறது. ஏதோ, ஒரு ABSTRACT ஓவியம் உருவாகிக் கொண்டிருக்கிறது.”

“திடீரென வானத்தில் பூக்கள் மண்டிக் கிடக்கின்றன. மொட்டுக்கள், மலர்கள்,பிய்ந்த இதழ்கள்,மூச்சுவிடும் விண்மீன்கள்,சின்னதும் பெரிதுமாய்ச் சீனாக்கற்கண்டு கட்டிகள், வைரச் சிதறல்கள், உறைந்து போன கண்ணீர்த் துளிகள், இதய உதிரிகள்-இவற்றிலிருந்து இழுத்த ஜிகினாச் சரடுகளில் ஏதேதோ நினைவுகள், தோற்றங்கள்”

“ரீதி கௌளையின் ஒரு சொகுசு வளைவு

கன்னியாகுமரியின் மூக்குத்தி”(உத்தராயணம்)

“அண்டாவில் ஜலம் கண்ணாடித் தகடு போல் அசைவற்று நின்றது, வானபிம்பம்.இவ்வளவு துலக்கமாய், அதுவும் இரவில் ஒரு நாளும் தெரிந்ததில்லை. கலக்கம் எங்கள் கண்ணிலா, வானத்துக்கேவா? தனித்தனியாய், சம்சாரமாய் பாளை வெடித்துச் சொரியும் முத்துக்களாய் ஆனால் அத்தனையும் அதனதன் முழு உருவில், ரச குண்டு போல் தொங்கிக்கொண்டு இன்று எத்தனை நட்சத்திரங்கள்”(காசி)

“ மாலை வருகிறது.ஆசையுடன் வாசல் வழி எதிர்பார்த்திருந்த விருந்தாளி ஓசைப் படாமல் கொல்லை வழியோ, பக்க வழியோ வந்து கூடத்தில் அமர்ந்துவிட்டாற்போல், வந்தது தெரியாமல் வருகிறது.கரைத்துக் கழித்துக் கொட்டிய ஆரத்தி போன்று மாலை ஒளியின் செம்பிழம்பு தோட்டத்திலும், ஓட்டிலும், சுவர்களிலும் வழிகின்றது”(இன்று நேற்று நாளை)

“உயிர் அழிவற்றது. தன் உச்சரிப்புக்குத் தானே
திரும்பத் திரும்ப உருவைத் தேடுகிறது
திரும்பத்திரும்ப உச்சரணையே உயிரின் ஆதாரம்
திரும்பத்திரும்ப உருவே தொடர்பின் ஆதாரம்
திரும்பத் திரும்ப தொடர்பே முயற்சியின் ஆதாரம்
திரும்பத் திரும்ப முயற்சியே விமோசனத்தின் ஆதாரம்
திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப  (புத்ர)

“தான்” உண்டாக்கிய நெருப்பில் “நான்” திருப்பித் திருப்பி  தன்னையே காய்ச்சிக் கொள்கிறது.  “நாம் இறக்கவில்லை.ஏனெனில் நம்மால் இறக்க முடியாது. உயிர் பிறந்தது, எப்படியோ, ஏனோ பிறந்துவிட்டது. பிறந்த பின் அதனால் இறக்க முடியவில்லை.இருந்துதான் ஆக வேண்டும்.. ஆனால் சரியாய் இருக்கும் முறையைத் தேடித்தேடி இருந்து இருந்து மாற்றி மாற்றி, மாறி மாறித் தவித்துக் கொண்டிருக்கிறோம். இதுதான் நம் தவிப்பு. வித்திலிருந்து மரத்தில் இருந்தொரு வித்து.. ஆனால் வித்தெல்லாம் வித்தல்ல. ஒரு நாள் முத்தானதொரு வித்து ஒரே முத்து.(ஜமதக்னி).

“அஞ்சலி” முகவுரையில் அழகு படச் சொல்கிறார். “பார்க்கப் போனால், ஜன்மங்களே உயிரின் உடை மாற்றம் தானே! உயிரே, உணர்ச்சிகளின் எண்ணங்களின் வேஷப் பொருத்தம் தானே!

“இதுகாறும், பௌர்ணமியின் நடு நிலவில், அவை ஜரிகைகள் மிதக்கும் கடலின் கருநீலப் புடவையுள் ஒளிந்த காற்றின் வீக்கத்தில் களியாட்டம் கண்டிருந்தாய். இப்போது என் சீற்றம் பார். என் சீற்றம் மட்டுந்தான் உயிர்”

“எழுதினால்தான் கவிதை அல்ல, வார்த்தைகள் தான் கவிதை அல்ல, கவிதையென்று தானே உணர்ந்தால்தான் கவிதை அல்ல; சத்தியத்தின் கோடரி எப்பொழுது உள் பாய்கிறதோ, அப்போது நான் சொல்லும் கவிதை நேர்கிறது.”(பாற்கடல்-ப்ளேக்)

“கற்பனை என்பது பலர் நினைப்பது போல் வெறும்  கனவு கட்டுக்கதை புனைவதல்ல. தரிசனத்துக்குத் தன் உள் சக்தியைச் சமயம் வரும் போதெல்லாம் வளர்த்துக் கொண்டே இருப்பதுதான் கற்பனை. தன் வண்ணத்தை என் கை வண்ணத்தில் விளம்பல் அலுக்காத விளம்பல்”

“எழுத்து ஒரு அற்புதமான குழல் வாத்தியம். பிராண ஆஹூதியை அதனுள் செலுத்தியதும் அந்த ஆஹூதி வெளிப்படும் உருவத்தில் என்ன என்ன நாதங்கள்!(பாற்கடல்)

“பாற்கடலை நீயும் நானும் கடைந்தோம்
எனக்காக நீ, உனக்காக நான்,
எனக்காக நான்,
நமக்காக நாம்.
கடைந்தோம்,
அமுதம் வந்தது,
நான் கலசமானேன்
என்கரண்டி, என் பேனா;
நான் பரிமாறுகிறேன்,
உண், இனி நாம் தேவர்,

பாற்கடல் கடைந்து 5 முக்கியப் பொருட்கள் வந்தன.அதில் அமுதத் துளி ஏந்திய எழுத்தாணியோடு இவர் பிறந்திருக்கிறார்.

“எவ்வளவு தின்றும் குன்றா வான வெளியின் நீலத்தை, வெண்மேகங்கள் நிதானமாய் மேய்ந்து கொண்டு சென்றன.”(சோமசன்மா)  அவரது சித்திரச் சொல்லை, சொற் சித்திரத்தை முழுதும் சொல்ல இயலுமா?

அதீனாவின் தலை

ஸ்ரீதர் நாராயணன்

pallasathena

 

கொண்டு வருகிறேன் பலாஸை
இந்த மைதானத்திற்கு நடுவே.
உங்கள் பாசாங்குகளை
முற்றொழிக்க.

எந்தையின் சுடரை
அவர் பெண்மைத் தலையிலிருந்து
பிடுங்கி எடுத்து,
கொண்டு வருகிறேன்
இந்த உடலற்ற நெருப்பை.

எரி-கண்கள் கொண்ட பெண்ணவள்
இந்த நகரை
போலித்தனங்களிலிருந்து
பொலிவுற செய்யட்டும்.

கனன்று கொண்டிருக்கும் இத் தலை
கொடுக்கட்டும் எல்லா கதகதப்பும்
வேறெதுவும் மறைக்கப்பட வேண்டியதில்லை

கொண்டு வருகிறேன்,
பலாஸ் அதினாவை
இந்த மைதானத்திற்கு.

I bring the Pallas
to the middle of this Stadium,
to extinct the pretense

The fire of our father,
sprung out of his
effeminate scalp,
I bring you-
fire without a frame

She, the fiery-eyed lady
shall light this city
out of its sham

This smoldering head
bestows all the warmth,
there is no call for shields.

I bring,
Pallas of Athena
to this Stadium!

செப்டெம்பர் மாத மழை வாரத்தின் ஒரு மாலைப்பொழுதில்

பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி

snails

திசையற்று பறக்கிறது
தட்டான்கள்
மொட்டைமாடியில்
வெகுநேரமாக நின்றபடியே நான்
*
ஈரத்தரையில்
இமைக்காமலிருக்கும்
தவளையின் விழியில்
சரியாக விழுகிறது மழை
*
மரம் நடும்
குழந்தையின் முகத்தில்
இயற்கையாகவே துளிர்க்கிறது
மகிழ்ச்சி விதை.
*
எண்ணெய் ததும்ப
எரியும் சுடர் விளக்கை
எடுத்த எடுப்பிலேயே
அணைக்கிறது மழை
*
எதிர்வீட்டிலிருந்து வீசுகிறது
அடுக்கு மல்லியின் வாசம்
நாங்கள் தான் இதுவரை
பேசியதேயில்லை.
*
சீசா விளையாடும்
குழந்தைகளுக்கு
ஏற்றமும் இறக்கமும்
சமசந்தோஷமே.
*
விட்டு விட்டு
பெய்கிறது மழை
நகர்ந்து கொண்டேயிருந்தது
நத்தை

வண்ணக்கழுத்து 17இ: லாமாவின் மெய்யறிவு

gay_neck_the_story_of_a_pigeon

அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. நான் அந்த இரண்டு மரங்களுக்கு இடையிலான இடைவெளியை ஆராய்ந்தேன். அவை உயர்ந்து பருத்திருந்தவை, இரண்டுக்கும் நடுவே நாங்கள் இருவரும் நெஞ்சோடு நெஞ்சை ஒட்டிக் கொண்டு நடக்கக் கூடிய அளவே பூமி இருந்தது.

“இப்போது என்னுடைய பயம் தோய்ந்த ஆடையை இந்த இரட்டை மரங்களுக்கு நடுவே வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு தன்னுடைய உடைக்கு அடியில் இருந்து நேற்று வரை அவர் அணிந்திருந்த பழைய உடைகளின் மூட்டையை எடுக்கலானார்.  அதைத் தரையில் வைத்துவிட்டு இரண்டில் இரு மரத்தில் ஏறினார். மேலே ஏறிய பிறகு கோண்ட் ஒரு கயிற்று ஏணியை எனக்காக கீழே வீசினார். வண்ணக்கழுத்து என் தோளில் தனது சமநிலையை இருத்த தன் இறக்கைகளை அடித்துக் கொண்டிருக்க நான் அந்த ஏணியில் ஏறினேன். இரண்டுபேரும் கோண்ட் உட்கார்ந்து கொண்டிருந்த கிளையை பத்திரமாக அடைந்துவிட்டோம். மாலை விரைந்து வந்து கொண்டிருக்க நாங்கள் அங்கேயே சில நேரம் அசையாமல் உட்கார்ந்திருந்தோம்.

அந்தி சாய்கையில் நான் முதலில் கவனித்த விஷயம் பறவைகளின் வாழ்க்கை. கொக்குகள், இருவாய்க் குருவிகள், க்ரவுஸ், பெஸண்டுகள், பாட்டுக் குருவிகள், கிளிகளின் மரகதக் கூட்டங்கள் காட்டை ஆக்கிரமிப்பது போல இருந்தது. தேனீயின் ரீங்காரமும் மரங்கொத்தியின் டக் டக் டக் சத்தமும், தொலைவில் கேட்ட கழுகின் கிறீச் ஒலியும், மலை ஓடையின் கீழித்துச் செல்லும் இரைச்சலோடும் ஏற்கெனவே முழித்துவிட்டிருந்த கழுதைப்புலிகளின் விட்டுவிட்டு வரும் கனைத்தலோடும் கலந்திருந்தது.

அந்த இரவு நாங்கள் இருப்பிடத்தை அமைத்திருந்த மரம் மிகவும் உயரமானது. எங்களுக்கு மேலே சிறுத்தையோ பாம்போ இல்லாதபடி நாங்கள் உயரத்திற்கு ஏறினோம். கவனமான ஆய்வுக்குப் பிறகு இரண்டு கிளைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு இடையே எங்களுடைய கயிற்று ஏணியை உறுதியான தொட்டிலாகக் கட்டினோம். இருப்பிடத்தில் பத்திரமாக உட்கார்ந்த உடனே கோண்ட், வானத்தைச் சுட்டிக் காட்டினார். உடனே நான் மேலே பார்த்தேன். அங்கே மிகப் பெரிய கழுகொன்று தன்னுடைய மாணிக்க நிற இறக்கைகளோடு பறந்து கொண்டிருந்தது. வெள்ளத்தைப் போன்று வேகமாக இருட்டு தரையிலிருந்து மேலெழுந்து வந்தாலும் கூட, வானுக்கு மேல் வெளிகள் ஒரு புறாவின் கழுத்தைப் போன்று ஒளிர்ந்தது. அந்த வெளியில் அந்த தனிக் கழுகு மீண்டும் மீண்டும் வட்டமடித்துக் கொண்டிருந்த்து. கோண்டைப் பொறுத்தவரை சந்தேகமே இல்லாமல் அந்த்க் கழுகு அஸ்தமிக்கும் சூரியனை வழிபடுகிறது.

அந்தக் கழுகின் இருப்பு ஏற்கெனவே அங்கிருந்த பறவைகளையும் பூச்சிகளையும் அசைவற்று வைத்திருந்தது. அவற்றுக்கு வெகு மேலே அந்தக் கழுகு இருந்த போதும், மெளன பக்தர்களின் கூட்டம் போல, அவர்களுடைய அரசன் பின்னும் முன்னும் பறந்து, அவர்களுடைய கடவுளான ஒளியின் பிதாவுக்கு ஒரு பூஜாரியைப் போலே மெய்மறந்து வணக்கம் செலுத்துகையில், அவை அமைதி காத்தன. மெல்ல அதன் இறக்கைகளில் இருந்து மாணிக்க ஒளி கசிந்தது. இப்போது அவை தங்கப் பொறிகளால் விளிம்புகள் செய்யப்பட்ட கருநீல பாய்மரத் துணியைப் போலே இருந்தன. அதனுடைய தொழுகை முடிவுக்கு வந்துவிட்டதைப் போலே, இன்னும் மேலே உயர்ந்து, தன் தெய்வத்தின் முன் தீக்குளிப்பதைப் போலே, தீயினால் எரிவது போன்று நின்ற சிகரங்களை நோக்கிப் பறந்து சென்று, அவற்றின் ஒளி வெள்ளத்தில் ஒரு அந்துப்பூச்சியைப் போலே காணாமல் போனது.

கீழே ஒரு எருமையின் முக்காரம் பூச்சிகளின் ஒலிகளை ஒவ்வொன்றாக விடுவித்து, மாலையின் நிசப்தத்தை கந்தல் கந்தலாகக் கிழித்தது. அருகில் ஒரு ஆந்தை அலற, என் துணிக்கு அடியில் இருந்த வண்ணக்கழுத்து என் நெஞ்சோடு நெருங்கி வந்தது. திடீரென்று நைட்டிங்கேலைப் போன்ற இரவுப் பறவையான ஹிமாலய குண்டுகரிச்சான் குருவி ஒன்று தன் மாயப் பாடலைத் தொடங்கியது. கடவுள் ஊதும் வெள்ளிப் புல்லாங்குழல் போல, ட்ரில்லுக்கு மேல் ட்ரில்லாக, ஏற்றத்துக்கு மேல் ஏற்றமாக, மரக்கூட்டங்களுக்கு இடையே வேகமாகப் பொழிந்து, அவற்றின் கடுமையான கிளைகளின் மீது வடிந்து காட்டுத் தரையில் இறங்கி பின் அவற்றின் வேர்களின் வழியே பூமியின் அடிநெஞ்சுக்கு இறங்கும் மழையைப் போல, அமைதி இறங்கியது.

முன்னரே வரும் கோடைக்கால இரவு உண்டாக்கும் மகிழ்ச்சி எக்காலத்திலும் விளக்க முடியாததாகவே இருக்கும். உண்மையில் இது மிகவும் இனிமையாகவும் தனிமையாகவும் இருந்ததால் எனக்கு கண்ணைச் சுற்றிக் கொண்டு வந்தது. மரத்தின் தண்டோடு என்னை பத்திரமாகப் பிணைக்க கோண்ட் இன்னொரு கயிற்றைக் என்னைச் சுற்றிக் கட்டினார்.  பின், செளகரியமாகத் தூங்குவதற்காக என் தலையை அவருடைய தோளில் இருத்திக் கொண்டேன். ஆனால், நான் அப்படிச் செய்வதற்கு முன்பாக கோண்ட் தன்னுடைய திட்டத்தைச் சொன்னார்.

”நான் கீழே கழற்றிப் போட்ட எனது உடைகள், நான் பயத்தின் பிடியில் இருந்த போது உடுத்தியவை. அவை ஒரு விசித்திரமான வாடையைக் கொண்டவை. அந்த எருமை மச்சான் இந்த வாடையை நுகர்ந்தால், அவன் இந்தப் பக்கம் வருவான். பயத்தினால் பீடிக்கப்பட்டிருப்பவன், பயத்தின் வாசனைக்கு பதிலாற்றுவான். நான் கழற்றிப் போட்ட துணிகளை ஆராய அவன் வந்தால், நாம் அவனுக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வோம். அவனைக் கயிற்றால் பிணைத்து ஒரு கிடாரியைப் போலப் அடக்கி வீட்டிற்கு கொண்டு செல்ல முடியும் என்று நான் நினைக்கிறேன்…” அவர் அதற்கு மேல் சொன்னவை என் காதில் விழவில்லை. நான் தூங்கிவிட்டிருந்தேன்.