எழுத்து

இராகப் பெண்கள் – 1. வசந்த பைரவி

பானுமதி ந

இணை இராகம்         

இருபதாம் நூற்றாண்டில்  தமிழில் மிகவும் வாசிக்கப்பட்ட, விமர்சிக்கப்பட்ட  இரு மாபெரும் எழுத்தாளர்கள் திரு. ஜானகிராமன் (தி ஜா.)  திரு. லா.ச.ராமாமிர்தம்(லா.ச ரா)

இருவரும் ஆழ்ந்த கவனம் உடையவர்கள்.. சொல்லிலே அணி செய்தவர்கள்.-  ஒருவர் அதன் மீது மட்டும் பார்வை மிகுந்தவர். மற்றவர்அதை வெளிப்படையாகச்    சொல்லவில்லை.

எத்தனை பெரிய மாளிகை ஆனாலும்  கதவும் ஜன்னலும் திறந்திருக்கும் – அது தி ஜா . ஒரு சிறு ஜன்னல் திறந்திருந்தால் அது லா ச ரா.

லா.ச ரா அக்டோபர் 30, 1916-ல் பெங்களூரில் பிறந்தார். அவரது ”சிந்தா நதி” சாகித்ய அகாதெமி விருது பெற்ற        நூல். தன்னைப் பற்றி சொல்கையில், “நான் ஒரு “சரித்திரிகன்”” என்கிறார்.

தி ஜா. ஜூன் 28,1921-ல் தேவங்குடியில் பிறந்தார்.இவரது”சக்தி வைத்தியம்” சிறுகதை தொகுப்பு சாகித்ய அகாதெமி விருது பெற்றது.இவருக்கு நல்ல இலக்கியம் என்பது, உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம்.

“தருணத்தின் தவப் பெருமையைப் பாடும் கீதமாய்… நிகழ்ச்சி சரித்திரமாகி, சரித்திரம் நினைவாகி, நினைவு கதையாகி, கதையைச் சொல்லிச் சொல்லி, சொல்லின் பிசிர்விட்டு, விஷயம் மெருகேறி, பிறகு நம் இரத்தத்தில் தோய்ந்து, நம் மனதையும், மாண்பையும் ஊட்டி வளர்க்கும் காவியமாகிவிடுகிறது.” லா.ச ராவின் சொல் காட்டும் நிறப்பிரிகை– இது

நெருடாத நடை. இயல்பான  நிகழ்வுகள், பழக்கத்தில் உள்ள வார்த்தைகள், அழகை ஆராதிக்கச் செய்யும் நளினமான நாகரிக  வர்ணனைகள். ஊடு பாவாக மனச் சிக்கல்கள், அந்தரங்க ஆழங்கள், தவிப்பும் தவிர்ப்புமாய் மனிதர்கள், அவர்களின் வெளிவேஷங்கள், நிமிடங்களில் யுகத்தின் தவிப்பும்,தொலைவிலோ, அருகிலோ இணைந்து பரவும் சங்கீதமும் தி ஜா.

அழகைச் சொல்லும்போதெல்லாம் நடப்பும், கனவும் இணையும் ஒரு ரசவாதம். குறிப்பாகக் கூட சொல்லாமல். உணர்வைக் கடத்தும் அதிசயம். “பால்கனியில் நின்று தலைமுடியைக் கோதும் பெண் “ என்ற சொல்லாடலில் லா.ச.ரா  அழகை  நம்மிடமே விட்டு விடுகிறார். ஈரப் புடவையுடன் படியேறும் பெண்கள் அவர் கதைகளில் அழகின் வீச்சு.

எழுத்தில் அப்பட்டமான வர்ணனைகளை  தவிர்த்த நாகரிகம்.

தாகம், மனித மனத்தை பாதித்துக்கொண்டே இருக்கிறது. இந்த உளச்சிக்கல்கள் மானுட நியதிகளை மீறி நம்மை அந்த கதாபாத்திரங்களை நெருங்க வைக்கிறது அவர்கள் வெற்றி பெறாவிடில், அழ வைக்கிறது. கதைகள் காவியங்களாகும் நொடி அது

இக் கட்டுரையில் இருவரின் இரு பெண் கதாபாத்திரங்களை எடுத்துக் கொள்வோம்.

 

வசந்த பைரவி

வசந்தம் இனிமை . பைரவியோ கம்பீரமானவள். இரண்டுமே உருக்கொண்டு திரண்டு எண்ணங்களின் வடிவாய்த் தவழ்ந்து தளிர் நடையிட்டு, பார்க்கும்போதே வளர்ந்து, நெக்குருக்கி, நம்மை அலைக்கழித்து ஒரு மோனப் பரவசத்தில் சொல்லில்லா திகைப்பில் கொண்டு சேர்த்துவிடும்

முதலில் அபிதா!

அக்ஷரங்களைப் பிரித்து, நீட்டி கற்பனைக்கும், கனவிற்கும், நனவிற்குமான எழுத்தாளரின் லாகிரி. உள்ளே இருப்பதே தெரியாமல் , அதன் நினைப்பே இல்லாமல், ஒட்டாமல் ஒட்டியும்,  இணையாமல் இணைந்தும் தன் மனைவியுடன் வாழும் கதாநாயகன்..

அவர்களுக்குக் குழந்தை இல்லை. இருவரும் ஒருவரையொருவர் சகித்து வாழும் நிலை. இதிலும் அவன் மனைவி அவனிடத்தில் தன்னை முழுமையாக ஒப்படைக்கிறாள் . அவன் அவளுக்கென அமைந்தாகிவிட்டது. இதை ஒப்புக்கொள்ள அவள் தன்னை பக்குவப் படுத்திக் கொண்டு விட்டாள். தன்னை மட்டம் தட்டும்போது சிலிர்த்துக் கொள்கிறாள்; பிறகு சகித்துக்  கொள்கிறாள் . ஆனால் இவளல்ல கதையின் நாயகி. அவள் இவன் மனதின் ஆழத்தில் புதைந்து இருக்கும் சகுந்தலா. செல்லமாக சக்கு. பெயர் வைப்பதில் என்ன ஒரு தேர்வு! உள்ளே மறைந்து பின்னரே வெளிப்படும் காளிதாச மகாகவி காவியம், கன்னி சகுந்தலை அல்லவா?

எதையும் உணர்ந்தும், உணராமலும் இருக்கும் பருவத்தில் நட்பும், காதலுமாக (சொல்லா) கதையின் அடிநாதம். அதன் அலைக்கழிப்பில் நாயகி தன் உயிரையும் துறக்கிறாள். நாயகனோ ஊரை விட்டு சிறு வயதில் ஓடி விடுகிறான். அவன் இளமை  பணியில், அதன் வழியே ஏற்பட்ட கல்யாணத்தில், மனைவியுடன் மோதலில், சொல்லமுடியாத வெறுமையில் கழிகிறது.  தன் இள முதுமையில் மனைவியுடன் பிறந்த ஊருக்கு வருகிறான். இவ்விடத்தில் எழுத்தாளர் மறைந்து போகிறார். வர்ணனைகள், நிகழ்வுகள் எல்லாம் தாமே  நடத்திச் செல்கின்றன.

லா .ச. ரா மொழியில்  இது காட்சிமொழி, தனியானது, சுவை மிக்கது.

தன் உறவுகளை சந்திக்கிறான், சிந்திக்கிறான், பின்னர் திகைக்கிறான்- இள வயது சக்குவைப் பார்த்து. காலம் மாற்றாத இளமை என வியக்கிறான். பின்னர் புரிந்து கொள்கிறான் இவள் அபிதா என்று; சக்குவின் பெண் என்று. மயக்கம் தரும் மனது. வானமும், பூமியும் சரி இரு பாதியாய்  பிரிந்து ஒன்றையொன்று  கவ்வப் பார்க்கின்றன அவனளவில் மட்டுமே. அபிதா, அவனிடத்தில் மரியாதை கொள்கிறாள், உபசரிக்கிறாள்,. தன் அழகை உணராத பேதை என இருக்கிறாள். நம் நாயகன், அபிதாவிடம் பிறர், குறிப்பாக, இள வயுது ஆண்கள் பேசுவதை பொறுப்பதில்லை .தனக்கு எவ்விதத்திலும் பொருத்தம் இல்லாத, கைகூட முடியாத அந்த நினைப்பு  மனிதர்கள் சந்திக்கும்  ஒரு மகத்தான விபத்து. அறிவு மறைந்து மனம் மேலெழும் தருணம். இதைக் காமம் என்று சொல்வதைவிட உயிர் வாதை எனச் சொல்லலாமோ?

அபிதா  திருவண்ணாமலை அம்பாளின் திருப்பெயர். அவள் உண்ணாமுலையாள்.  ஆனால் அவளேதான் “தோடுடைய செவியன்” என்று சிறு குழந்தை பாடுவதற்கு முன் சீர்காழியில் பால் ஊட்டிய அன்னை.பெயரிலே கதை சொல்லத் தெரிந்த லா.ச ரா. அதன் ரகசியத்தை  குறிப்பால் உணர்த்துவதில் வல்லவர். கதையும், நடையும், மொழியும் பாத்திரங்களும், கன்னியாகுமரியைச் சுட்டுவதோ?

இனி, மோகமுள் யமுனா. புன்னைகையின் மர்மம், பேசாத பொருள். எங்கோ தூரத்தில் கேட்கும் இசை. இரவும் பகலும் சந்திக்கும் சாயறக்ஷை(சாயறட்சே). பெயர் தெரியாத ராகம். மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீர். யமுனையின் அடர்த்தியாய்  மடுவும், ஆழமும். அப்பா இருக்கும் வரை செல்வாக்கு. பின்னர் நடைமுறை யதார்த்தம். பெண் பார்க்க யார் வந்து போனாலும் பற்றின்மை. ஆனாலும் எந்தப் பெட்டியில் இடம் கிடைத்தாலும் அவள்  ஏற்றுக் கொள்வாள்., ஏறிக் கொள்வாள். மனதை மறுக்கும் நிஜம் புரிந்தவள் அவள். ஆனால் அவள் மனதில்——— தான் ஒன்றுமில்லையே. இங்கே தான், இந்த முரண்பாட்டில் தான்  தி. ஜா.  வெற்றி பெறுகிறார்

பாபு மட்டுமே காதலிக்கிறான். அதை அவன் புரிந்து கொள்ளவே வருடங்கள் ஆகின்றன. மனம் லயிக்கும் மோகத்தினைப் புரிந்து கொள்ள  அவனுக்கு ஏற்படும் அனுபவம்.  அதை எழுத்தாளர் சொன்ன விதம் உள்ளே பிசைந்து கொண்டே இருக்கிறது.

விரசம் இல்லாத ரசம். விரகம் தொட்ட ரகம். மாங்கனி போல் சுவையும், மணமும், திரளும் பொருந்திய நடை. தூரிகையில்லாது வரைந்த ஓவியம். வாசகனை இலக்கியச் சுவையில்ஆழ்த்தி, ரசானுபவத்தை அளித்து, நுண்ணிய பார்வையால்அவன் யூகத்தை வழிநடத்தி, யமுனாவைப் போன்ற பெண்களைப் படைத்து அவளை நிஜ வாழ்வில் வாசகர்கள் தேட வைத்த தி.ஜா.வை மறக்க முடியுமா?

நாவலின்  சுனாதமே யமுனா தானே ! உயிர் இசைந்த ஒத்திசைப்பில் பாபுவின்  நாதமே  மீண்டதல்லவா? பாபுவின் அவஸ்தைகளை யாரும் அறியலாம். ஆனால், தன்னைக் கொடுத்த யமுனா –அதிலும் குற்ற உணர்ச்சி இல்லை, தியாக மனப்பான்மை இல்லை, தன்னை உயர்ந்தவள் எனக் காட்டிக் கொள்ளவில்லை. செஞ்சோற்றுக் கடன் என்ற கடமையில்லை, சரியா, தவறா என்று வாதிடவில்லை .

யமுனா ஒரு வகையில் அபிதா; அபிதா  ஒரு வகையில் யமுனா.

இவள் கன்னிகா பரமேஸ்வரி, அவள் கன்னியாகுமரி.

இவள் எதையும் விளைவிக்கும் பூமி; அவள் அள்ளித்  தரும் ஆழ்கடல்.

வசந்தா: ச ம க ம த நி ச        ச  நி த ம க ரி ச

பைரவி: ச க ரி க ம ப த நி ச     ச நி த ப ம க ரி ச

வசந்தபைரவி:       ச ரி க ம த நி ச   ச நி த ம ப ம க ரி ச

லா ச ராவின் மொழியில் முடிக்க நினைக்கிறேன்.

“உணர்ச்சிகளைத் தனித்துப் பார்க்கையில் ஆசைகள், குரோதங்கள், கோபங்கள், தாபங்கள், நிறைவுகள், பங்கங்கள், சஞ்சலங்கள், அமைதிகள் எனப் பலப் பல கோணங்கள் தென்பட்டாலும், உண்மையில் அவை லோகஸ்ருதியின் இடையறா, முடிவிலா இயக்கத்திலும், அதனின்று தோன்றித் தெரிந்து, திரும்ப அதிலேயே மூழ்கிவிடும் அதனுடைய பிம்பங்களே”

இந்த இருவருக்காக அந்த இருவரையும் வணங்குகிறேன்.

 

 

சில்கோவ்ஸ்கியின் தேற்றம் : கார்ல் இயாக்னெம்மா – 6

தமிழில்: சரவணன் அபி

அத்தியாயம் 6

karl

அடுத்த நாள் காலை தனது அலுவலக நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்த ஹெண்டர்சன் பால்பாய்ண்ட் பேனாவினால் தனது காப்பியை கலக்கிக் கொண்டார். இன்னும் 7 மணி ஆகவில்லை; வால்டர் H லேய்ட்டன் கணித ஆராய்ச்சிக் கட்டிடம் இன்னும் அமைதி கலையாமல் இருந்தது. இவ்வளவு சீக்கிரம் அவர் அலுவலகத்திற்கு இதற்குமுன்னர் வந்ததில்லை; அந்த ஆழ்ந்த, உன்னதமான அமைதி தனக்கு எவ்வளவு பிடித்திருக்கிறது என அவர் வியந்து கொண்டார். இன்னும் சிறிது நேரத்தில், ஷேவ் செய்யாத, நேற்றைய சமையலின் வாசம் இன்னும் வீசும் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் வர ஆரம்பிப்aபார்கள். அடுத்து 8 மணி வகுப்புகளுக்கு பட்டப்படிப்பு மாணவர்கள் வருவார்கள்; .அடுத்து, அலுவலக பணியாளர்கள், மற்றவர்கள்… என கட்டிடம் கொஞ்ச நேரத்தில் தனது வழமையான  பரபரப்புக்கும், அவசரத்துக்கும் தாவி விடும். காப்பியை உறிஞ்சியவாறு ஹெண்டர்சன்  தனது மேசை மேல் சரிந்திருந்த, தூசித்துகள்கள் மின்னும் கதிர்க்கற்றைகளை   கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தார். அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாவிட்டால், அவரது இந்த அலுவலக அறையை  விட்டுவிட வேண்டியிருக்கும் என்பது வருத்தத்தை அளித்தது. மொத்தக் கல்லூரியிலும் அவரது இந்த அறையில் மட்டுமே தனது இயல்போடு, நிம்மதியாக இருந்திருக்கிறார்.

அவரது யூனிக்ஸ் டெஸ்க் டாப்பில் புது அஞ்சல் மின்னியது: அனுப்புனர்: சோக்லோஸ், நேரம்: அதிகாலை – 2.17

அன்புள்ள ஜான் – படிக்க ஆரம்பித்த ஹெண்டர்சன் ஒரு கணம் தயங்கினார், அன்னியோனியமான அந்த விளி அவரைத் தாக்கியது – உனக்கு நன்றி தெரிவிக்க வேண்டி எழுதுகிறேன். மரியாவை மகிழ்ச்சியடைய செய்து விட்டாய்; ஆதலால் என்னையும் மிக்க சந்தோஷத்தில் ஆழ்த்தி விட்டாய். அவள் மனதிலிருந்து பெரும் பாரம் அகன்று விட்டது. ஓர் அற்புதமான குறுநகையுடன் தனித்தமர்ந்து மே மாதத்தில் நடக்கப் போகும் எங்கள் திருமணத்திற்கு செய்ய வேண்டிய காரியங்களை அவள் பட்டியலிட்டுக்கொண்டிருக்கும் காட்சி அரியது. என் வார்த்தைகளில் வடிக்க முடியாதது. நிச்சயம் உனக்கு அழைப்பு வரும்நீ வருவாய் என நம்புகிறேன்.

 J.A.M –இன் ஆசிரியர் சில்கோவ்ஸ்கியின் தேற்றம் குறித்த தவறான புரிதல்திருத்தப்படுவது குறித்து ஒரு விளக்கம் டிசம்பர் மாத இதழில் பிரசுரிக்க ஒத்துக் கொண்டுவிட்டார்இது என்னை வருத்தத்துக்குள்ளாக்குகிறது. பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகளுக்கு தனது Ph.D பட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தி மரியா  ஒரு கடிதம் எழுதப் போகிறாள். இறுதியில், இதை என்னால் தடுக்க முடியவில்லைமிக வருந்துகிறேன்.

நீ பெருங்கருணையுடையவன் என்று மரியா நம்புவதை நான் உன்னிடம் சொல்லித்தான் ஆக வேண்டும். அது உண்மையல்ல என்று நான் அவளிடம் சொன்ன போதிலும். நீ இதைப் புரிந்து கொள்வாய் என்று நம்புகிறேன். ஏனென்றால், அது உண்மையல்ல, அல்லவா? நீ கருணையுடையவன் அல்ல. சமீபத்திய உன்னுடைய பெருந்தன்மை உன்னில் நிலைகொண்ட நற்தன்மையின் சாட்சி என்று மரியா கருதுகிறாள். என்னால் அதற்கு பதிலொன்றும் கூற முடியவில்லை. இருக்கலாம் என்று சொல்ல முடியுமா? தெரியவில்லை.

மேற்கொண்டு எழுத அயர்ச்சியாக இருக்கிறது. நீ செய்தவற்றுக்கு மீண்டும் நன்றி. நீ ஏன் அதைச் செய்தாய் என்று முழுமையாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை எனினும் உனக்கு என் நன்றிகள்.

 உன் நண்பன்,
மிக்லோஸ்

ஹெண்டர்சன் மீண்டும் ஒருமுறை படித்து விட்டு மின்னஞ்சலை  அழித்தார். கணினியை அணைத்தார். நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். என்ன செய்தாரோ, என்ன நடக்க அனுமதித்திருக்கிறாரோ –  அவற்றைப் பற்றி அவர் நிம்மதி கொள்ளலாம் என்றுதான் முதலில் தோன்றியது. ஆனால், அவர் நிம்மதியாக இல்லை. அவர் செய்தவற்றின் விளைவாக, இறுதியாக, யார் பயனடைவார்கள்? மரியா, நீட்சியாக சோக்லோஸ்.

ஆனால் ஹெண்டர்சன்? எப்போதும் போல், ஏமாற்றப்பட்டு, கீழ் நிலையில், வருத்தத்துடன். துயரம் கலக்காத மகிழ்ச்சியை அதன் பரிசுத்த நிலையில் அடைவது சாத்தியமா? சில சமயம் முடியலாம்  என்று தோன்றியதுண்டு என்றாலும், பல நேரங்களில்  அது சாத்தியமேயல்ல என்றுதான் ஹெண்டர்சன் உணர்ந்திருக்கிறார்.  மகிழ்ச்சி என்பது ஒரு ஸீரோ-ஸம் விளையாட்டு; ஒருவர் மகிழ்ச்சிக்கு இன்னொருவர் கட்டாயம் வருத்தப்பட்டே தீர வேண்டும். பல காலமாக, ஹெண்டர்சன் இந்தச் சமன்பாட்டின் தவறான பக்கத்திலிருந்து கொண்டிருக்கிறார்.

மனதை இந்த எண்ணம் நிறைக்க, ஹெண்டர்சன் மேசை அறையிலிருந்து கடித உறையொன்றை எடுத்தார். சோக்லோஸின் அலுவலக விலாசத்தை எழுதி உறைக்குள் மரியாவின் இரு ஊதாநிற உள்ளாடைகளை இட்டு மூடினார்.

வெளியே, கணினியியல் துறை கட்டிடத்திற்கு மேல் சூரியன் எழுந்து விட்டது. இளந்தென்றல் புதிதாக விழுந்திருக்கும் இலைகளினூடாக சலசலத்துக் கொண்டிருந்தது. நான்கு மாணவர்கள்  – ஒரே போல் நீல நிற டீ ஷர்ட்டுகளும் காக்கி அரைக்காற்சட்டைகளும் அணிந்துகொண்டு, இலையுதிர் காலத்தின் குளிரையோ, அது கொண்டு வரப்போகும் கல்விகுறித்த கவலைகளோ இன்றி நடந்து சென்று கொண்டிருந்தார்கள். புது வருடம்; புது விரிவுரையாளர்கள்; பணிநீட்டிப்பு விவாதங்கள்; புது வரவுகள்; நீக்கங்கள்; அவர்களின் கவலையற்ற உற்சாகத்தை ஒரு கணம் பொறாமையுடன் பார்த்த ஹெண்டர்சன், மறு கணம் கார் நிறுத்துமிடம் நோக்கி விரைந்தார்.

நகரின் குறுக்காக காரை செலுத்திய ஹெண்டர்சன் ரேடியோவை இயக்கினார் – எந்தவொரு நிலையத்தையும் குறிப்பாக வைத்துக்கொள்ளும் கவனம் இல்லாமல். சோக்லோஸ் பணியாற்றிய கல்லூரியின் கணிதத்துறை அருகே காரை நிறுத்திவிட்டு கட்டிடத்தின் உள்ளே இருந்த பல்கலை வளாக அஞ்சல்பெட்டியை அடைந்தார். மரியாவின் உள்ளாடைகளின் கனமொன்றும் அவ்வளவாக இல்லாத அந்த உறையை அஞ்சல் பெட்டியின் வாயில் நுழைத்தவண்ணம் ஒரு கணம் தயங்கினார்.  பின் உள்ளே உறையை போட்டுவிட்டு அது பெட்டியின் உள் விழுந்ததை உறுதி செய்து கொண்டார். அனுப்புனர் விலாசம் இல்லை; அஞ்சல் முத்திரை இல்லை; வெறும் பெறுநரின் பெயர் மட்டுமே.  சோக்லோஸ் யார் அனுப்பியிருப்பார்கள் என்று சந்தேகிக்கக் கூடும், ஆனாலும் ஒருக்காலும் உறுதியாக கண்டுபிடித்துவிட முடியாது. நல்லது, குழம்பட்டும் என்று  எண்ணிக்கொண்டார் ஹெண்டர்சன்.

விரைந்து காரை எடுத்துக்கொண்டு கல்லூரி வளாகத்தை விட்டு நீங்கி, அழுக்குப்படிந்த வீடுகள் நிறைந்த போர்த்துகீசியர் குடியிருப்பை தாண்டி செலுத்திக் கொண்டு போனார். திடீரென்று ஓர் எண்ண உந்துதலில், சருகுகள் பரவிக் கிடந்த, ஆளரவமற்ற ஓர் சந்துக்குள் காரை திருப்பி நிறுத்தினார். ஏதோவொரு தவறு செய்ததுபோல் உறுத்தல்; கழிவிரக்கம் போல் ஏதோவொன்று குடைந்தது. மனதிலிருந்து எடுத்தெறிந்து விட்டு நடந்தார். சலவையகம், வங்கிக்கட்டிடம், மீன் சந்தை…

சந்தின் எதிர்புறம் இருந்தது அந்த தேவாலயம். வண்ணங்கள் பளிச்சிடும் கண்ணாடிசன்னல்களின் கீழ் திறந்த பெரு வாயிற்கதவுகளை நோக்கி அகன்ற படிகள் மேலேறிச் செல்லும் கருங்கல் கட்டிடம். படிகளில் அமர்ந்து புகைத்துக்கொண்டிருந்த வீடற்ற ஒருவனின் அருகே சிறிய அறிவிப்பு – ‘இயேசு காக்கிறார் – சனிக்கிழமை  6 ஞாயிறு 9 1030 1215’.

ஹெண்டர்சன் சந்தைக் கடந்து படிகளில் ஏறி, கனத்த கதவுகளைத் திறந்து உள்ளே நுழைந்தார். தூசியில் நனைந்த ஒளிக்கதிர்கள் உயரத்திலிருந்த சன்னல்களின்வழி வழிந்திறங்கி யாருமற்ற இருக்கை வரிசைகளில் மீது படிந்து கிடந்தன. காற்றில் தூபப் புகையும், ஈரக் கருங்கற்களும்  மணத்தன. கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்ட ஹெண்டர்சன், நிமிர்ந்து மேற்கூரையின் அழகிய வடிவமைப்பை வெறித்துப் பார்த்தார். என்ன அழகான இடம்! இதன் வெறுமை, இந்த அமைதி, தோள்களில் ஒரு  போர்வையைப் போல் கவியும் வெதுவெதுப்பான அடர்த்தியான இந்தக் காற்று… எங்கோ தொலைவில் ஒரு  காரின் அலாரம் அலறுவது சர்ச்சுக்குள் ஒரு குகைக்குள் கேட்பது போல் ஒலித்தது.

கடவுளின் இருப்பை டிடெரோட்டுக்கு ‘நிரூபித்த’ ஆய்லரின் சமன்பாடு ஹெண்டர்சனுக்கு நினைவு வந்தது. முட்டாள்தனம். ஆனால் பாஸ்கலின் வாதம் ஒன்று உண்டு: ஆராயும் அறிவுள்ள மனிதர்கள் கடவுளை நம்பத்தான் வேண்டும். ஏனென்றால் சொர்க்கத்தின் அனுகூலங்கள் நரகத்தின் இடர்களை விட மிக அதிகம். கைகளை கோர்த்தபடி, கீழுதட்டை கடித்தவாறு ஹெண்டர்சன் அமர்ந்திருந்தார். பாஸ்கலுக்கு மட்டும் நிகழ்தகவு கோட்பாடு தெரிந்திருந்தால் ஒருவேளை தனது கடவுள் இருப்பு வாதத்தை நிலைநிறுத்தியிருக்க முடிந்திருக்கலாம். யார் கண்டது, எத்தகைய இழப்பு இதுவென்று.

ஓர் இளம் பாதிரி இருபுற இருக்கைகளியிடையே தந்தநிற மெழுகுவர்த்திகள்  இரண்டையேந்திக் கொண்டு நடந்து வருவதைக் கண்டார். பாதிரியின் கண்களின் கவனத்தை ஈர்க்க முயன்றார். ஓர் எண்ணம் – தான், ஜான் ஹெண்டர்சன் –    துறவியாகி விட்டால்? ஒரே நேரத்தில் அச்சமும், பரவசமும் மேலெங்கும் பரவ  அவரது உடல் நடுங்கியது. யார் விண்ணப்பித்தாலும் ஏற்றுக் கொள்வார்கள் தானே, இல்லை ஏதாவது விதிகள் இருக்குமா? என்னைப் பாருங்கள் – முகம் கவிழ்ந்து மெதுவே நடந்து வந்து கொண்டிருந்த பாதிரியின் முகத்தைப் கூர்ந்து நோக்கியவாறு ஹெண்டர்சன் நினைத்துக் கொண்டார். துறவு பூண்டு, மதத்தையும், நம்பிக்கையையும் சிந்தித்துக்கொண்டு, மன்னிப்பை இறைஞ்சியவாறு  தன் நாட்களை கழித்து விடலாம்.  ஆம். திருச்சபையின் பிரார்த்தனைக் கூட்டத்தின் முன் நின்று தன் தனிமை நிறைந்த நாட்கள் எப்படி அச்சத்துடனே கழிந்தன என்று  அவரால் கூற முடியும். என்னைப் பாருங்கள், தயவுசெய்து என்னைப் பாருங்கள், ஹெண்டர்சன் மனதுக்குள் இறைஞ்சினார்.

 ஆனால் இளம் பாதிரி நீண்ட அங்கி மென்மையாக சரசரக்க கடந்து சென்றார்.

 நிறைந்தது

அத்தியாயம் 1 

அத்தியாயம் 2 

அத்தியாயம் 3 

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

oOo

19 அக்டோபர் 1972-ல் பிறந்த கார்ல் இயாக்னெம்மா அமெரிக்க விஞ்ஞானி, எழுத்தாளர். புகழ் பெற்ற MIT-ல் இயந்திர பொறியியல் துறையில் Ph. D பட்டம் பெற்ற கார்ல், இயந்திரவியல், ரோபாடிக்ஸ் துறைகளில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கிறார்.

பல பரிசுகள் பெற்ற நாவல்கள், சிறுகதைகள் எழுதிய இவரது பெரும்பாலான கதைகளின் கருப்பொருள் அறிவியல், கணிதம், மனித-இயந்திர உறவுகள் மற்றும் இத்துறை சார்ந்த உளச்சிக்கல்கள்.

பிரபலமான Zoetrope சிறுகதை பத்திரிகையில் வெளிவந்து பலரது கவனத்தை ஈர்த்த ‘Zilkowksky’s Theorem’ என்ற சிறுகதையின் முறையாக முன்னனுமதி பெற்று செய்யப்பட்ட மொழியாக்கம் இது.

ஒளிப்பட உதவி – Robotic Mobility Group, MIT 

மொழிபெயர்ப்பு – கற்பனைக்கான வெளி

 
The Lights of Brindisi
 
At night, in the harbour of Brindisi,
Angels bearing lamps were flying, and fires
Revealed their faces upturned on the sea.
– O real leaves, the walls of the closed garden
Distance you always; smiling face,
Tilted, silver in the summit of the trees,
You always keep the stormy gate shut.
But I can see you tonight; signature of foam
That the boat crosses and leaves, in the night.
 
Yves Bonnefoy, Translated by Anthony Rudolf, 1966, The Times Literary Supplement
 
ப்ரின்டீசியின் விளக்குகள்
 
இரவில், ப்ரின்டீசி துறைமுகத்தில்,
தேவதைகள் அகலேந்திப் பறந்து கொண்டிருந்தன, அழல்கள்
அவற்றின் மேல்நோக்கும் முகங்களைக் காட்டின, கடலில்.
-ஓ! நிஜ இலைகளே, 
பூட்டிய தோட்டத்தின் சுவர்கள்
உங்களைத் தொலைவிலிருத்தும், எப்போதுமே;
மரங்களின் சிகர வெள்ளியாய்
தலை சாய்த்திருக்கும் நகைமுகமே,
புயற்கதவை நீ அடைத்து விடுகிறாய், எப்போதுமே.
ஆனால் இன்றிரவு என்னால் உன்னைப் பார்க்கமுடிகிறது; 
நுரையின் முத்திரையே,
கடக்கும் படகு உன்னை விட்டும் செல்கிறது, இரவில்.
 
 
முதலில் ஒரு குறிப்பு. இது ஈஃப் பன்ஃபுவா (Yves Bonnefoy) எழுதிய பிரஞ்சு கவிதையின் நேரடி மொழிபெயர்ப்பல்ல. அந்தோணி ருடால்ப் செய்த ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்தான். எனவே, பிரஞ்சு கவிதைக்கும் தமிழாக்கத்துக்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் இருக்கலாம்.
 
குறிப்பாக, ‘O real leaves‘ என்பதை, ‘ஓ! நிஜ இலைகளே’ என்று மொழிபெயர்த்திருக்கும் நகுல்வசன், அதைத் தொடர்ந்து ‘smiling face,’ என்பதை ‘நகைமுகமே’ என்றும், ‘signature of foam‘ என்பதை ‘நுரையின் முத்திரையே,’ என்றும் மொழிபெயர்த்திருக்கிறார். இதற்கான சமாதானம்- ஆங்கிலத்தில், ‘smiling face… you‘, என்று சொல்வதும், ‘signature of foam‘ என்பதற்கு முன் ‘But I can see you tonight;‘ என்று வந்திருப்பதும். இதில் முந்தைய சமாதானத்தை எந்த சங்கடமும் இன்றி ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் பிந்தையது, சிறிது பிரச்சினைக்குரியது: ‘நான் உன்னைப் பார்க்கிறேன்’ என்பதைத் தொடர்ந்து ‘:’ என்று வந்திருந்தால் பரவாயில்லை, அது அடுத்து வருவதைச் சுட்டுவதாய் இருக்கும். ஆனால் ‘;’ என்ற குறியல்லவா வந்திருக்கிறது? பிரெஞ்சு கவிதையுடன் ஒப்பிட்டுப் பார்த்திருந்தால் இந்தக் கேள்விகளுக்கு விடை எளிதில் கிடைத்திருக்கும். இதையெல்லாம் இன்னொருவர் தமிழில் வேறு மாதிரி மொழிபெயர்க்கலாம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இது, இந்த மொழிபெயர்ப்புக்கான நியாயம்.
 
நகுல்வசன், முடிந்த அளவு, ஆங்கிலத்தில் உள்ள காட்சிகளின் வரிசை தமிழிலும் வர வேண்டும் என்று முயற்சிப்பவர். “At night, in the harbour of Brindisi,/ Angels bearing lamps were flying, and fires/ Revealed their faces upturned on the sea.” இதை நிதானமாகப் படிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். At night, in the harbour of Brindisi– என்பது ப்ரின்டீசி துறைமுகம் இருளில் இருப்பதைக் காட்சிப்படுத்துகிறது. தலைப்பு, The Lights of Brindisi என்று இருப்பதால், இந்த இருளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வெளிச்சம் தெரிகிறது என்றும் நினைத்துக் கொள்வோம். அடுத்து, ‘Angels bearing lamps were flying‘ என்ற புதிரான வரியை நாம் அப்படியே கற்பனை செய்து பார்க்கும்போது விளக்கேந்திச் செல்லும் தேவதைகள் புலப்படுகிறார்கள். ஆனால் ஒரு காற்புள்ளிக்குப் பின், ‘and fires‘ என்று அந்த வரி துண்டாவதில் நெருப்புக்கு ஒரு அழுத்தம் கிடைக்கிறது. ‘Revealed their faces upturned on the sea.’ அவர்கள் முகங்களை வெளிப்படுத்தின- அவை கடலில் மேல்நோக்கிக் கிடந்தன. இப்போது நமக்குப் புரிகிறது, நாம் வானில் பார்த்தது விளக்கொளியை, கடல் நீரில் பார்ப்பது அவற்றின் வெளிச்சத்தில் பிரதிபலிக்கப்படும் தேவதைகளின் முகங்களை. இந்தக் காட்சியின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாதபோதும் ஒன்று சொல்லலாம். எது ஆகாயத்துக்கு உரியதோ, அது கடல் நீரில் உள்ளது, ஒளியின் பிரதிபலிப்பில். 
 
இந்த வரிகள், “இரவில், ப்ரின்டீசி துறைமுகத்தில்,/ தேவதைகள் அகலேந்திப் பறந்து கொண்டிருந்தன, அழல்கள்/ அவற்றின் மேல்நோக்கும் முகங்களைக் காட்டின, கடலில்,’ என்று சரியாகவே தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன என்று நினைக்கிறேன். ‘அழல்கள்‘ என்ற சொல்லைக் கண்டு வேண்டுமானால் புருவம் உயர்த்தலாம். 
 
அடுத்து, ‘– O real leaves, the walls of the closed garden/ Distance you always;‘ என்பதை ‘-ஓ! நிஜ இலைகளே,/ பூட்டிய தோட்டத்தின் சுவர்கள்/ உங்களைத் தொலைவிலிருத்தும், எப்போதுமே;‘ என்றுதான் மொழிபெயர்க்க வேண்டுமா? ‘நிஜ இலைகளே,’ என்று அழைத்தால் போதுமே, ‘‘ என்று ஏன் கூவ வேண்டும்? ‘ஓ!‘ என்பதில் ஓர் அவலத் தொனியும், அதைத் தொடரும், ‘நிஜ இலைகளே,‘ என்ற அழைப்பில் ஒரு மென்சோகமும் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்கிறேன். கற்பனைதான், அப்படிதான் இருக்கிறது என்று சொல்லவில்லை. பூட்டப்பட்ட தோட்டத்தின் சுவர்கள் இலைகளை எப்போதும் தொலைவில்தான் இருத்துகின்றன- நெருக்கமில்லாத காரணத்தால் அவை உள்ளவாறே அறியப்படுவதில்லை. இது தோட்டத்து மரங்களின் இலைகளை நோக்கிப் பேசப்படுவதில்லை. அறியப்படாத, ஆனால் உணர்வின் எல்லையில் நிழலாடும் ‘நிஜ’ இலைகளே அழைக்கப்படுகின்றன, துல்லியமாகப் பேசுவதானால் ‘invoke,’ செய்யப்படுகின்றன என்றுகூடச் சொல்லலாம். 
 
முதலில் ‘எது ஆகாயத்துக்கு உரியதோ, அது கடல் நீரில் உள்ளது, ஒளியின் பிரதிபலிப்பில்,’ என்று கண்டோம். அடுத்து, எது தொலைவில் உள்ளதோ, அதன் மெய்வடிவம் நிழலாட்டமாய் உணர்ந்து, அழைக்கப்படுகிறது என்று காண்கிறோம். சேய்மையில் இருப்பினும் நிஜத்தின் அண்மை உணரப்படாமல் இல்லை, அதன் வடிவம் பூரணமாய் வெளிப்படுவதில்லை, அவ்வளவுதான். 
 
smiling face,/ Tilted, silver in the summit of the trees,/ You always keep the stormy gate shut‘ – எத்தனை அழகிய வரிகள். நிலவைப் பேசுகிறார் என்று நினைக்கிறேன். ஆனால் ‘stormy gate‘? இன்னதுதான் என்று தீர்மானமாகச் சொல்லவே முடியாது என்று தோன்றுகிறது. மூடப்பட்ட கதவுகளுக்குப்பின் எப்போதும் தொலைவில் இருக்கும் நிஜ இலைகள், என்பதைத் தொடர்ந்து, மரங்களின் உச்சியில் சிரிக்கும் நிலவு புயற்கதவை எப்போதும் பூட்டி வைத்திருக்கிறது என்பதில் ஏதோ ஒரு ஆசுவாசம் தொனிப்பது போல்தான் தோன்றுகிறது. “மரங்களின் சிகர வெள்ளியாய்/ தலை சாய்த்திருக்கும் நகைமுகமே,/ புயற்கதவை நீ அடைத்து விடுகிறாய், எப்போதுமே,” என்ற தமிழாக்கம் சிக்கலற்றது போல்தான் தெரிகிறது. ஆனால், ‘You always keep the stormy gate shut‘ என்பதை ‘நீ எப்போதும் புயற்கதவைப் பூட்டி வைத்திருக்கிறாய்” என்பதற்கும் “நீ எப்போதும் புயற்கதவை அடைத்து விடுகிறாய்,” என்பதற்கும் ஒரு நுண்ணிய வேறுபாடு இருக்கிறது. புயற்கதவை பூட்டி வைத்திருக்கிறாய் என்பதில் தெரியும் ஆசுவாசம், புயற்கதவை அடைத்து விடுகிறாய் என்பதில் இல்லை – உடைத்துப் பீறிட்டெழுக் காத்திருக்கும் உணர்வுகளின் அழுத்தம் தெரிகிறது என்றே சொல்லலாம். இந்த இரு வாசிப்புகளும் கவிதையின் பொருளையே மாற்றிவிடக் கூடியவை. இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது மொழிபெயர்ப்பாளனின் முடிவு. இங்குதான் மொழிபெயர்ப்பாளனின் கற்பனையும் படைப்பூக்கமும் செயல்படுகின்றன. 
 
ஏனெனில், “But I can see you tonight; signature of foam/ That the boat crosses and leaves, in the night,” இன்னும் பல தேர்வுகளுக்கு இடம் கொடுப்பது. ‘But I can see you tonight;‘, என்பதை, ‘நான் இந்த இரவில் உன்னைக் காண்கிறேன்‘ என்ற இடைநிறுத்தத்தோடு விட்டுவிடலாம். யாரை என்ற கேள்விக்குச் செல்லாமல், கடல் நுரைத்துக் கொண்டிருக்கிறது, அதைக் கடந்து செல்லும் படகு, அது விட்டுச் செல்லும் நுரைகளாய் தன் கையொப்பத்தையும் இட்டுச் செல்கிறது. இந்த நுரைகளில்தான், நான் உன்னைக் காண்கிறேன் என்று சொல்கிறார் பன்ஃபுவா என்று புரிந்து கொள்ளலாம். அப்படி யாரைத்தான் காண்கிறார் என்றால், முதலில் பார்த்த கடலில் தெரியும் தேவதை பிம்பங்களுக்குப் போகலாம். அது போன்ற ஏதோ ஒன்றைக் காண்கிறார்.  
 
ஆனால் நகுல்வசன் தமிழாக்கம், “புயற்கதவை நீ அடைத்து விடுகிறாய், எப்போதுமே,” என்பதைத் தொடர்ந்து, “நுரையின் முத்திரையே,/ கடக்கும் படகு உன்னை விட்டும் செல்கிறது, இரவில்,” என்று இரட்டிக்கிறார். இலைகளையும், நிலவையும் அழைத்துப் பேசியதுபோல், கடல் நுரையையும் அழைக்கிறார். கடக்கும் படகு உன்னையும் விட்டுச் செல்கிறது.
 
கவிதையின் பொருள் தர்க்கத்தின் பாற்பட்டதல்ல. சொல்லப்போனால் எதுவொன்று சொற்களின் நேரடிப் பொருளாகிறதோ அது கவித்துவத்துக்கு எதிரானது. கவிதை, சுட்டல்களைக் கொண்டு சொல்லின் பொருளை அதன் அகராதிக் குறிப்புகளுக்கு அப்பால், சொற்களின் பொருளை அவற்றின் கூட்டுத்தொகைக்கு அப்பால் கொண்டு செல்கிறது. அவ்வாறே கவிதை ஒருமையடைகிறது. இந்தக் கவிதையில் சொற்கள் அடுத்தடுத்த அறிவிப்புகளால் பொருள் பெறுவதில்லை, ஒன்றன்மீது ஒன்று அடுக்கப்பட்ட பிம்பங்களாய் பொருள் கொள்கிறது. அதன் பொருள் கற்பனையால் மட்டுமே உணரப்படக்கூடியது. அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் தொனிக்கலாம்- ஆனால் கவிதையை வாசிப்பவனானாலும் சரி, மொழிபெயர்ப்பவனானாலும் சரி, அவனது திறன்களில் மிக முதன்மையானது கற்பனையே. அதைக் குறைத்து மதிப்பிடுவது மொழியின் இயல்பை புரிந்து கொள்ளத் தவறுவதாகும்.
 
இந்தக் கவிதையைப் பேசும்போது நகுல்வசன் எழுப்பிய கேள்வி- இந்தப் பதிவுக்குப் பொருத்தமான முடிவாக இருக்குமென்று நினைக்கிறேன்: 
“அல்லது, இது அன்றாட பிரத்யட்ச உண்மையைக் காட்டிலும் செறிவார்ந்த ஒரு ஸ்டீவென்ஸிய ‘உன்னதத்தை’ நோக்கிய தேடலுக்கு இணையானதாய் இருக்கலாமல்லவா? “நாம் கட்டியெழுப்புவன, வளர்ப்பன, செய்வன, இவை எல்லாம் நாம் சுட்டுவன, நம்புவன அல்லது வேட்பனவுடன் ஒப்பிட்டால் மிகச் சிறியவை,” என்று வாலஸ் ஸ்டீவன்ஸ் ஒரு கடிதத்தில் எழுதினார். “தட்பவெப்பம் பழகிப் போகிறது/ சூழ்நிலமும் மற்றவையும்;/ ஆன்மாவை சன்னதம் கொள்வதற்காகவே/ உன்னதம் கீழிறங்கி வருகிறது,/ ஆன்மாவும் வெட்டவெளியும், / வெறுமையான ஆன்மா/ சூன்யமான வெளியில்.” மகத்தான மனிதர்களின் பீடங்களில் பறவைகள் மலம் கழிக்குமானால், உன்னதமென்பது வேறெங்கிருந்தோதான் வந்தாக வேண்டும். உள்ளத்தின் எல்லையில் தன் கரம் நோக்கும் கற்பனைக்கே அது சாத்தியமல்லவா? நிஜமான இலையும் நிஜமான நிலவும்கூடப் போதாது, நுரைத்தெழும் முத்திரைகளையும் விட்டுச் சென்றாக வேண்டும், புலப்படும் ஒளியைப் பிரிந்தாக வேண்டும், பிம்பத்தின் மெய்ம்மை மட்டுமே கைப்பற்றத்தக்கது”.

Yves Bonnefoy (1923–2016) – ஒரு கவிதை

(உரைநடை தமிழாக்கம் பீட்டர் பொங்கல்; கவிதை தமிழாக்கம் – நகுல்வசன்)

ஈஃப் பன்ஃபுவா (Yves Bonnefoy) இம்மாதத்தின் துவக்கத்தில் மறைந்தார். கடந்த அறுபது ஆண்டுகளின் மிக முக்கியமான, மிகுந்த தாக்கம் செலுத்திய பிரஞ்சு கவிஞர் என்று பலராலும் கருதப்பட்டவர் இவர். உலகோடு நாம் எவ்விதத்திலும் “பொய்க்கலப்பற்ற நெருக்கம்” (“authentic intimacy”) கொள்ளாத வகையில் மொழி நம்மை விலக்குகிறது என்று அவர் நம்பிய காரணத்தால், “நாம் அதைத் தொலைத்துவிட்டோம் என்பதை நினைவுறுத்தவும்“, “பிறரை, அல்லது மரங்களை, அல்லது எதையும் நாம் எதிர்கொள்வது சாத்தியப்படும் கணங்களின்” மதிப்பை நமக்கு நாமே மெய்ப்பித்துக் கொள்ளவும், நமக்கு கவிதை தேவைப்படுகிறது என்றார் அவர். எந்தவொரு அறிவு சார்ந்த குறுக்கீடாலும் களங்கப்படாத “le vrai lieu”- மெய்யுலகம்- ஒன்றை மீளுருவாக்கம் செய்வதற்கான அவரது முயற்சிகளும் மெய்ம்மையை நோக்கிய கோரிக்கையும் பன்ஃபுவாவின் கவிதைகளில் கண்ணுக்குத் தெரியாத இருப்பாய் சூழ்கின்றன. மெய்ம்மையின் இயல்புநிலையில் நிலவிய பூரணத்துவ எச்சங்கள் இன்னும் மண்ணில் எஞ்சியிருக்கின்றன, அவற்றைச் சேகரித்து மீண்டும் கட்டியெழுப்புவதே கவிஞனின் பணி. இருப்பை அடைய வேண்டுமெனில் அதன் இயல்புநிலையில் துலங்கும் குறியீட்டு ஆற்றலை விரயம் செய்யும் கருத்துநிலை சட்டகத்திலிருந்து மொழியை விடுவித்தாக வேண்டும். “சொல்லென்பது இனிமேலும் உள்ளதன் விவரணையுள் நுழைவதல்ல“.

கவிதை மட்டுமே, வடிவத்தில் கவனம் செலுத்தும்போது “சொற்களின் கருத்துநிலை பொருளை மௌனிப்பதால்” கிட்டத்தட்ட தெய்வீகமாயுள்ள தரிசன கணத்தை மீண்டும் உருவாக்கக்கூடியது. கவிதை மட்டுமே, “உலகின் நேரடி நோக்கு” அளிக்கக்கூடியது. La Seconde Simplicité (1961), என்ற தொகுப்பில் உள்ள “The Lights of Brindisi”, என்ற கவிதையில், கவிஞர் காண்கிறார் – மூடப்பட்ட தோட்டச் சுவற்றால் சேய்மைப்படுத்தப்பட்ட இலைகளுக்கு அப்பால், நிஜமற்ற புன்னகை கொண்ட “வெள்ளி’ நிலவுக்கு அப்பால்- தோன்றி மறையும் வேறொன்றின் முத்திரையை, கண்ணுற்ற கணமே அது காணாமற் போகிறது.

ப்ரின்டீசியின் விளக்குகள்

இரவில், ப்ரின்டீசி துறைமுகத்தில்,
தேவதைகள் அகலேந்திப் பறந்து கொண்டிருந்தன,  அழல்கள்
அவற்றின் மேல்நோக்கும் முகங்களைக் காட்டின, கடலில்.
-ஓ! நிஜ இலைகளே,
பூட்டிய தோட்டத்தின் சுவர்கள்
உங்களைத் தொலைவிலிருத்தும், எப்போதுமே;
மரங்களின் சிகர வெள்ளியாய்
தலை சாய்த்திருக்கும் நகைமுகமே,
புயற்கதவை நீ அடைத்து விடுகிறாய், எப்போதுமே.
ஆனால் இன்றிரவு என்னால் உன்னைப் பார்க்கமுடிகிறது;
நுரையின் முத்திரையே,
கடக்கும் படகு உன்னை விட்டும் செல்கிறது, இரவில்.

(ஆங்கில மொழிபெயர்ப்பு – அந்தோணி ருடால்ஃப், 1966)

நன்றி – Andrew McCulloch, Times Literary Supplement

934 தொடர்ச்சி

934

 

o0O0o

935

‘இப்படி மலைச்சுப் போய் உக்கார்றதுக்கு என்னாச்சு இப்ப, வர வேண்டிய இடத்துக்குதான வந்திருக்கம்’ என் முகக்குறிப்பைப் பார்த்த பவுடர் கைக்குட்டைக்காரர் முறுவலித்தார். சிரித்து முடித்ததும், அந்த தருணத்தின் அவநம்பிக்கையினை உணர்ந்தது போல அவர் முகம் வெறுமையாகியது. அந்த பிரும்மாண்ட வெண்மதிலின் இருப்பை மறுப்பது போல முகத்தை திருப்பி வந்த வழியை சற்றுப் பார்வையிட்டார். கழுத்தில் இருந்த கைக்குட்டையை எடுத்து நெற்றியை ஒற்றிக் கொண்டவர், சட்டென தளர்ந்து போய் கீழே அமர்ந்தார்.

சுருட்டுக்காரன் நீண்ட புகை விடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“அவன் கெடக்கான் விடு. சுருட்டு கண்ட இடமே சொர்க்கம்னு உக்காந்திருப்பான். இப்ப என்ன விஷயம்னா” எனக்குப் பின்னால் வந்த புதியவர் ஆரம்பித்தார். “நாம இப்ப என்ன செய்யப் போறம்” என்றார்.

கைகள் இரண்டையும் ஒன்று சேர்த்து பரபரவென தேய்த்துக் கொண்டார். குந்தி அமர்ந்திருந்தவர்கள் சற்று கால்களை மாற்றி அவரைத் திரும்பிப்பார்த்தனர். அந்த கவனயீப்பு அவருக்கு சற்று உற்சாகம் அளித்தது. முதுகை நிமிர்த்திக் கொண்டபடி பேசத் தொடங்கினார்.

“இந்த நெடிய பயணம், நாம் எதிர்கொண்ட தேர்வுகள், நம்முடைய தீர்மானங்கள், மனஉளைச்சல்கள் எல்லாவற்றுக்கும் இந்த மதில்தான் இறுதித் தீர்வு என்றால், இங்கே நாம் இருக்கவே கூடாது. புரிந்து கொள்ளுங்கள். நம்முடைய பயணத்தின் நோக்கம் என்ன? கிறக்கத்திலிருந்து நிமிருங்கள். கண்களைத் திறவுங்கள்” அவருடைய குரலில் சுதி கூடிக் கொண்டே போனது.

“நமக்கான வழி இங்கே எழுதி வைக்கப்படவில்லை என்பதால் அது இல்லை என்றாகி விடுமா” என்று உரக்கக் கேட்டார். சுற்றியிருந்தவர்களிடையே சற்று சலனம் உண்டானது. அச்சமும் மதிப்பும் அளிக்கும் அவருடையப் பேச்சிற்கு யார் முதல் எதிர்வினையாற்றுவது என்கிற தயக்கம், எல்லோரிடமும் அலை போல் பரவியது.

“நீங்கள்” கையை நீட்டி “உங்களைத்தான் 934′ என்று என் தோளைத் தொட்டதும் நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்தேன்.

“நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்?” என்றார். அவருடைய முகம் முழுவதும் நம்பிக்கை விரவியிருந்தது. திரும்பி சுருட்டுக்காரனைப் பார்த்தேன். கண்களை இடுக்கியபடி, மிதக்கும் புகைவளையங்களை சுவாரசியமாக பார்வையால் பின்தொடர்ந்து கொண்டிருந்தான்.

“எழும்புங்கள். தயங்காதீர்கள். நமக்கான வாசலை நாமே கண்டெடுப்போம். மதிலை ஏறிச்சாடுவோம். நம் முயற்சிக்கான பலன் கிடைக்கும் வரை ஓயமாட்டோம்”

இப்பொழுது முழக்கமாகவே அவருடைய குரல் ஒலித்தது. சிறு நெருப்புப் பொறியென சுற்றியிருந்தவர்களை பற்றிக் கொண்டது. கைக்குட்டைக்கார் மீண்டும் எழுந்துவிட்டார். தோளில் போட்டிருந்த கைக்குட்டையை எடுத்து நெற்றியை சுற்றிக் கட்டிக் கொண்டு கைகைளை உயர்த்தி கூக்குரலிட்டார்.

“நமக்கான வாசல். நமக்கான வாசல்”. பற்றிக் கொண்ட நெருப்பென எல்லோரையும் அது சுற்றிக் கொண்டது. சிலர் மதிலைச் சுற்றிக் கொண்டு வழி இருக்குமென ஓட ஆரம்பித்தார்கள். சிலர் மதிலுக்கு கீழே ஏதேனும் பொந்துகள் இருக்கிறதா எனத் தேட ஆரம்பித்தார்கள். புதியவரின் முழக்கத்தால் உந்தப்பட்ட சிலர்ம திலின் மேல் ஏறிச்சாட முயற்சி செய்தனர். கைக்குட்டைக்காரரும் ஏதாவது வழி இருக்கிறதா என்று மதிலை உன்னிப்பாக பார்க்க ஆரம்பித்தார்.

சுருட்டுக்காரன் சுருட்டின் இறுதிப் பகுதியை ஆழமாக உறிஞ்சிக் கொண்டிருந்தான். அவனுடைய அசட்டையே எங்களை எல்லோரையும் இருப்புக் கொள்ளாமல் ஆக்கிவிட்டது. இந்த மதிலைத்தாண்டி ஏதாவது வழி இருக்கும் என நிச்சயம் நம்பினேன். இருந்தேயாக வேண்டும்.

அப்போதுதான் கைக்குட்டைக்காரர் அதைச் செய்தார்.

“இதோ இங்கே இருக்குப் பாருங்க வழி” என்றார் உரக்க. தன் தலையை முன்னால் சாய்த்துக் கொண்டு, ஓடிப்போய் பெரும் பாய்ச்சலென மதிலை நோக்கிப் பாய்ந்தார். ‘வழி’யென அவருடைய குரலைக் கேட்டதும்தான் தாமதம் , மடமடவென கூட்டத்தினர் பலரும் பாய ஆரம்பித்தனர் என்று சொல்லி முடிக்கும் முன்னர் நானும் பாய்ந்திருந்தேன்.

என் குனிந்த தலை மதிலை நெருங்கிய நொடியில் கண்ணோரத்தில் சுருட்டுக்காரன் புதியதொரு சுருட்டை எடுத்துப் பற்ற வைப்பது தெரிந்தது. பற்களால் சுருட்டைக் கடித்தபடி ‘935’ என்றான்.

o0O0o

936

கதவு பக்கம் வந்ததும் வரிசையில் பதட்டம் கூடியது. “இது இல்லை” என்று சிலர் விலகினர். “இது என்ன” என்று சிலர் எட்டிப் பாய்ந்து தேடினர்.

“ஒரு ரகசியம்” முன்னே சென்று கொண்டிருந்தவர், தன்னுடைய நடையை மெதுவாக்கி, இடைவெளியை குறைத்து, அருகில் வந்ததும், என் காதுக்கு மட்டும் கேட்கக்கூடிய ஒலியில் முணுமுணுத்தார். எதிரே இருண்டிருந்த பாதை இன்னமும் குறுகிக் கொண்டு வருவது அடர்ந்த குளிரால் தெரிந்தது. நாசியில் பவுடர் நெடி படர்வதை உணர்ந்து தலையைத் திருப்பி அவரை நோக்கினேன்.

“இந்த பாதை முடியவே முடியாது. எழுதி வச்சுக்கிடுங்க இந்த வழியெல்லாம் ரெம்ப பழக்கப்பட்டதாகத்தான் தெரியுது எனக்கு” கிசுகிசுப்பாக சொன்னார். “சுத்தி வளச்சு சுத்தி வளச்சு போயிட்டேத்தான் இருக்கும்”.

நீண்டு கிடந்திருந்த பாதையை மென் நடை மூலம் கடந்து சென்று கொண்டிருந்தோம்.

பனிபோர்த்திய வெளி போல் தோற்றமளிக்கும் இடத்தில் பல கிளைகளாக பாதை பிரிவது தெரிந்தது. தொலைவில் திரும்பும் பாதை ஒன்று. பசுமையாகவும் தடங்கள் ஏதும் இல்லாததொரு சாலை மற்றொன்று. பின்னிப் பிரிந்து செல்லும் பாதைகள் சில.

விரிந்து இறங்கும் சாலை முடிவில், கழுத்தைச் சுற்றி கைக்குட்டை கட்டிக் கொண்டிருந்தவர் தன் நடையை நிறுத்திவிட்டுச் சொன்னார். “இலக்கை தேடிச் செல்வதல்ல பயணம். இலக்கை உருவாக்கிக் கொள்வதுதான் பயணம்”.

உடன் வந்தவர் பலர் நின்றனர். கைக்குட்டைக்காரர் சுட்டிக் காட்டிய பெரும்பாறையில் இலக்கம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. “இதுதான் நம்முடைய இலக்கு. இதுவே நம்முடைய குறிக்கோள்” என்றார். அத்தனைக் கால அலுப்பிலும் அவர் முகம் புது பவுடர் மெருகோடு பளபளத்துக் கொண்டிருந்தது.

தன் கொடியை அங்கே நட்டவர், விரித்த கைகளுடன் விவரிக்கத் தொடங்கினார். “இந்த கொடியின் கீழ் நமது புதிய உலகம் சிறக்கும். நம்முடைய கனவுகள் எல்லாம் இங்கே ஈடேறப் போகிறது. இதுதான் நம் குறிக்கோள்” அவருடன் நின்றவர்கள் எல்லோரும் ஆர்ப்பரித்தனர்.

இப்படி ஓர் இலக்கை எதிர்பார்க்காததால் நம்பிக்கையில்லாமல் விலகிச்சென்றவர் கூட்டத்தோடு சென்றேன். சாதனை என்றால் அவ்வளவு சுலபத்தில் சித்தித்து விடுமா.

சுற்றி சுழன்று போய்க்கொண்டிருந்து முடிவேயில்லாமல் போய்க்கொண்டிருந்த பாதையின் நடுவே பலரும் தங்கள் இலக்கை கண்டடைந்து விட்டோமென பிரிந்து சென்றனர். அவரவர் கொடிக்கு என ஆங்காங்கே கூட்டமும் சேர்ந்து நின்றது. எதுவும் என்னுடைய தேடலை நிறுத்தவில்லை. நான் எதிர்பார்ப்பது இவற்றை எல்லாம் விட வேறான, தனித்துவமானதொன்று. அதை அடைய இன்னும் எவ்வளவு கடின பயணம் என்றாலும் மேற்கொள்ளத்தான் வேண்டும்.

தன்னந்தனியே அந்தப் பாதையில் சுற்றிக் கொண்டிருந்த நிலையில் மொட்டைப் பாறை என அந்த இலக்கு முன்னே வந்து நின்றது. பாறையின் மேலே, சுருட்டுப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தவன் திரும்பிப் பார்த்து

“நடக்க சக்தியில்லன்னா அப்படி ஓரமாப் போய் ஒக்காரு. இந்த இடத்துக்கு நம்பர் போடறேன்னு எதையாச்சு நட்டு வைக்காத போ’ என்றான் சிரித்தபடி. கையிலிருந்த கொடியை உடைத்துப் போட்டுவிட்டு ஓரமாகப் போய் அமர்ந்து கொண்டேன்.

o0O0o

.

.

.

1000

பிறிதொரு நாளில் எங்கோ ஒருவரிடம் என் தேடலைப் பற்றி விவரிக்க நேர்ந்தால், அப்பொழுது என்னுடைய தெரிவுகளின் தனித்துவத்தைப் பற்றி விரிவாகச் சொல்வேன். அதன் வெற்றிகளையும், மேன்மைகளையும் நீள உரைப்பேன்.

நான் விட்டு விலகிய பாதைகளின் குளிர் மரநிழல்களையும், காற்றின் சரசரப்பையும் நினைவில் சேமித்து வைத்திருக்கிறேன். அவைகளை எதிர்கொண்ட வேளைகளில், நிராகரிக்கும் எண்ணம் துளியும் இருந்தததில்லை எனக்கு. முடிந்த அளவு என் முடிவுகளை தாமதப்படுத்திக் கொண்டுதான் வந்திருக்கிறேன். நான் பயணிக்காத பாதைகளும், பயணித்தவை அளவுக்கு தனித்துவமானவையே.

இதைத்தான், இந்த பயணத்தைத்தான், இப்படித்தான், இதன் ஊடுபாவுகளுடன், இத்தனை உச்சங்களுடன், வழுக்களுடன் உருவாக்கி வந்திருக்கிறேன்.

இனி என்னால் திரும்பிப் போகவே முடியாது என்ற நிலையில் பல திருப்பங்களை கடந்து, அந்தப் பெருவெளியில் வந்து நின்றேன்.

சுற்றி அத்தனையும் புதிய பாதைகளாக தெரிந்தன. யாரும் பயணிக்காத, புதிய, மெருகேற்றப்பட்ட, நிச்சலனமான பாதைகள்.

எல்லாத் தெரிவுகளும் அங்குதான் வந்து முட்டி நின்றன. அங்கிருந்துதான் எல்லா தெரிவுகளும் தொடங்கிச் சென்றன.

பாதையில் மையத்தில் அமர்ந்து சுருட்டுப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த அவன், திரும்பிப் பார்த்து, உரக்க சிரித்தபடி சொன்னான்.

“ஆயிரம் இருக்கு வழி இங்க. அத்தனையிலும் பயணிச்சிட்டு வந்திடனும் உனக்கு…. இல்ல?’

நானும் அவன் பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டேன். புதிய சுருட்டு ஒன்றை எடுத்து நீட்டினான் என்னிடம்.

o0O0o