எழுத்து

நோபல் பரிசின் வாசலில்

ஸ்ரீதர் நாராயணன்

mia-couto

‘அமெரிக்கன் நோபல்’ என்று பரவலாக அறியப்படும் நூஸ்டாட் சர்வதேச பரிசு, கவிஞர்கள், நாவலாசிரியர்கள், நாடகாசிரியர்கள் என்று எல்லோரும் சமமான வாய்ப்பு பெறும் வெகு சில சர்வதேச பரிசுகளில் ஒன்று.. இவ்வருட நூஸ்டாட் பரிசு போர்ச்சுகீசிய எழுத்தாளர் மியா கோதோவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக நூஸ்டாட் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் முப்பது பேராவது நோபல் பரிசை பெற்றிருக்கின்றனர் என்பதால் சர்வதே இலக்கிய வட்டாரத்தில் இது முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட இருபத்தைந்து நாடுகளில் இருந்து பதிமூன்று வெவ்வேறு மொழிகளில் எழுதும் முப்பத்து நான்கு படைப்பாளிகள் பங்குபெறும் நடுவர் குழு இந்த பரிசுக்குரிய எழுத்தாளரை தேர்ந்தெடுக்கிறது.

“தொலைவிலிருக்கும் ஐஸ்லாந்தின் பெரும் எழுத்தாளரால், காஃப்காவின் கனவுகளைச் சேர்ந்த, தனித்துவ ரோஜாப் பாறைகளின் நிலமான, புராண ஓக்லஹாமாவின் இந்தப் பரிசு, இலத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த – புதிரான, ஒதுக்குப்புறமான நாடு ஒன்றின் எழுத்தாளனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது போன்ற சூழல்கள்தான், இலக்கியத்திற்கான நூஸ்டாட் சர்வதேச விருதை, அதிகம் அறியப்படாத, ஆனால் தகுதி பெற்ற எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் பெரும் சர்வதேச பரிசாக ஆக்குகிறது.” என்று 1972ல் தன்னுடைய ஏற்புரையில் மார்க்குவெஸ் குறிப்பிட்டார்.

அடுத்து பத்தாண்டுகள் கழித்துதான் அவர் நோபல் பரிசுக் குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்டு உலகளவில் மிகப்பெரும் வீச்சைப் பெறுகிறார். நோபலும், நூஸ்டாட்டும் உலகளவில் உன்னத எழுத்தாளர்ளிலிருந்து பரிசுக்குரியவர்களை தேர்ந்தெடுத்தாலும், நூஸ்டாட் அடையாளபடுத்தும் விதம் சற்று விரைவாகவும், அதன் அங்கீகாரம் நோபல் தேர்வுக்குழுவினருக்கு உதவிகரமாகவும் அமைகிறது. படைப்பாளிகளின் பரிந்துரைகளில் பல புதியவர்களை இடம்பெறச் செய்தாலும், அதற்காக எவ்வித சமரச அரசியல் வழக்கங்களில் ஈடுபடாமல் முற்றிலும் வெளிப்படைத்தன்மை கொண்ட முறைமைகளை கொண்டிருக்கிறது. ஆனால் அது அவ்வளவு சுலபமானதா? ஒரு பிரபலமானவரை அல்லது புதியவரை பரிந்துரை பட்டியலில் இணைக்கும்போது தேர்வுக்குழுவினரின் சார்பரசியலை எப்படி மட்டுப்படுத்துவது?

இப்பரிசை நிர்வகிக்கும் ‘The world literature today‘ பத்திரிகையின் செயற்குழு இயக்குநரும், ஓக்லஹாமா பல்கலை பேராசிரியருமான டேவிஸ்-உண்டியானோ தன்னுடைய விளக்கத்தில், விமர்சகர்களும், நூல் அறிமுகம் எழுதுபவர்களை விட எழுத்தாளர்களை அதிகம் கொண்ட தேர்வுக்குழு இத்தகைய புறச்சாய்வுகளை பக்குவமாக கையாளுகிறது என்கிறார். படைப்பாளிகள் நிரம்பிய தேர்வுக்குழு தவிர, 800 ஆலோசகர்கள் கொண்ட குழு, உலகளவில் புதிய எழுத்தாளர்களின் வரவைப் பற்றி தொடர்ந்து அறிவுறுத்தல்களை தேர்வுக்குழுவிற்கு சமர்பிக்கிறது. பரிந்துரைக்கப்படும் எழுத்தாளர் உயிருடன் இருக்க வேண்டியது மற்றும், நூஸ்டாட் பரிசை பெற்றுக்கொள்ள ஓக்லஹோமா வரத்தயாராக இருக்க வேண்டும் என்பதே நிர்வாக கமிட்டியின் ஒரே கோரிக்கையாக தேர்வுக்குழுவிடம் வைக்கப்படுகிறது. மற்ற நிகழ்முறைகள் எல்லாமே தேர்வுக்குழுவின் முழு சுதந்திரத்திற்கு உட்பட்டது. கவிஞர்கள், புனைவு எழுத்தாளர்கள், நாடகாசிரியர்கள், அபுனைவு எழுத்தாளர்கள் என்ற பெரிய கலவையின் தேர்வுமுறைகள் மிகவும் கடினமானதாக இருந்தாலும், தொழில்முறை படைப்பாளிகளை கொண்ட தேர்வுக்குழு அதை பிரமாதமாக கையாள்கிறது. இலக்கிய வரலாற்றை மாற்றியமைக்கும் அதிமுக்கிய பரிசுகள் இவை. தங்களுடைய ஆழ்ந்தாராய்வுகளில் எவ்வித விரைவையும் சுருக்குவழியையும் தேர்வாளர்கள் மேற்கொள்ளக் கூடாது என்பதில் நிர்வாகக் குழு மிகக்கவனமாக இருக்கிறது.

“இனி எப்போதும் நிகழாது என்று நாங்கள் நினைத்திருந்த போர்சூழல் மீண்டும் மொஸாம்பிக்கில் தொடங்கியிருக்கும் இந்த சோக காலகட்டத்தில், நூஸ்டாட் பரிசு என்னும் நற்செய்தி எனக்கு ஆறுதலாக அமைந்திருக்கிறது’ என்று மகிழும் மியா கோதோவைத்தான் 2014ம் வருடத்து வெற்றியாளராக ஜூரர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். எதிர்மறையான மற்றும் பலியாக்கப்பட்ட விழுமியங்களாலேயே குறிப்பிடப்படும ஆப்பிரிக்க நாடுகளுக்கான தேய்வழக்கை மறுத்து தங்களுடைய தனித்துவத்தை கண்டடையும் நாடான மொஸாம்பிக்கை சேர்ந்தவன் என்று கூறிக்கொள்ளும் மியா, போர்ச்சுகீசிய வம்சாவளி பெற்றோருக்கு பிறந்தவர். மொஸாம்பிக்கின் சமகால அரசியல் பின்னடைவில், மியா கோதாவின் இலக்கிய செயல்பாட்டிற்கான இந்த அங்கீகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

முப்பது வருடங்களாக வருடத்திற்கு ஒரு புத்தகமாக வெளியிட்டுக் கொண்டு வரும் படைப்பூக்கம் மிக்க எழுத்தாளராக அறியப்பட்ட மியா தன்னுடைய ஆதர்சமாக பிரதானமாக பிரேசிலிய எழுத்தாளர்களையும், பிற இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களையும் சொல்கிறார். மொஸாம்பிக்கின் சுதந்திர போராட்ட வரலாறும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றியுமான பதிவுகளை அவருடைய நூல்களில் பரவலாக காணமுடிகிறது. 1992ல் வெளியிடப்பட்ட ‘தூக்கத்தில் நடக்கும் நிலம்’ (Terra Sonâmbula) ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டது.

மொஸாம்பிக்கின் உள்நாட்டு கலகத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்த நாவல், அகதி முகாமில் இருந்து தப்பித்து செல்லும் துஹாஹிர் என்னும் கிழவரும், தன்னுடைய குடும்பத்தை தேடிச்செல்லும் ம்யுதிங்கா என்னும் இளைஞனும் எரிந்து போன பேருந்து ஒன்றில், இறந்த பிரயாணியின் குறிப்புப் புத்தகத்தை கண்டடைவதாக விரிந்து செல்கிறது. மொஸாம்பிக்கின் சுதந்திர போராட்டங்களும், அதைத் தொடர்ந்து நிலைத்தன்மைக்கான அதன் தத்தளிப்புகளைப் பற்றியும் அந்த குறிப்புப் புத்தகம் வாயிலாக விவரிக்கிறது. பெரும் போராட்டமான அந்த பயணத்தின் இறுதியில் இருவரும் பாழடைந்த நாட்டின் ‘தூக்கமிழந்தவர்களாக’ (Somnambulists) ஆகிவிடுகின்றனர். இந்த நாவல் தெரசா பிரதாவின் இயக்கத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டு விருதுகளையும் பெற்றது.

‘பதினாறு வருடப் போருக்கு பின்னர், கலை என்பது (முக்கியமாக கவிதையும் இலக்கியமும்) எதிர்ப்பின் ஒருவகைமையாயாக இருக்கிறது என்பது எனக்கு தெளிவாகிறது. போரின் முதல் நோக்கமே மனிதத்தை அழிப்பதுதான். இம்மாதிரியான சூழல்களில் கலை மொழி என்பது மனிதத்தை மீள் உருவாக்கும் தெளிவான வழியாக அமைகிறது’ என்ற மியோவின் கூற்றை உலகிற்கு எடுத்து சொல்லும் நிகழ்வாக இந்த பரிசு அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

மனிதத்தை பண்படுத்துவதே இலக்கியத்தின் தேவையாக அன்றும், இன்றும், என்றும் இருக்கிறது. நூஸ்டேட்டின் பரிசு அதை மேலும் உறுதிபடுத்துகிறது.

மியா கோதோவின் நூஸ்டாட் பரிசு ஏற்புரை – இவ்வுலகை மீண்டும் மாயங்களால் நிறைத்தல்
மியா கோதோவின் சிறுகதை – காலத்தின் கடைக்கோடியில் தோட்டமும் ஒரு கிழவனும்

நெருப்புக்கோழிகளின் நடனம்

எஸ். சுரேஷ்

உறங்கலாம் என்று படுத்தபோது
“தொப் தொப் தொப் தொப் ” என்று
மாடி போர்ஷனில் யாரோ குதிக்கும் சப்தம் கேட்டது
தூங்க முடியாமல் மேல் போர்ஷனுக்கு போன் செய்தேன்
“ஹலோ” என்றது போனை எடுத்த நெருப்புக்கோழி,
“சாரி, நாங்க கொஞ்சம் அதிகமாக குதித்துவிட்டோம்.
இனி அப்படி குதிக்கமாட்டோம்,”
என்று சொல்லிவிட்டு போனை வைத்தது.
இப்பொழுது “தொப் தொப் தொப்” என்ற சப்தம்
மெதுவாக சப்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது

இவ்வுலகை மீண்டும் மாயங்களால் நிறைத்தல்

பீட்டர் பொங்கல்

இவ்வாண்டு ந்யூஸ்டாட் பரிசு பெற்ற மியா கோடோ அளித்த நன்றியுரையின் தமிழாக்கம்

அன்பு நண்பர்களே,

இந்த விருதைப் பெற்றுக்கொள்வதில் நான், எனக்கு மிகப் பெரிய கௌரவம் அளிக்கப்பட்டதாக உணர்கிறேன். ஏதோ ஒரு எளிய சம்பிரதாய மதிப்புக்காக மட்டும் இப்படிச் சொல்லவில்லை. இதை உணர்வுபூர்வமாகச சொல்கிறேன்.

தனிப்பட்ட ஓர் எழுத்தாளனின் படைப்புக்குத் தரப்படுகிறது என்பதற்கும் அப்பால் இந்த விருது முக்கியத்துவம் வாய்ந்தது. நாம் இங்கே ஓக்லஹாமாவில், ஒவ்வொரு வருடமும், கொண்டாடும் விஷயம் இலக்கியத்தோடு நின்றுவிடுவதில்லை. ந்யூஸ்டாட் விருதைக் கொண்டு நாம் நம் உலகின் பண்பாட்டுப் பன்மையைப் போற்றுகிறோம், நம் ஒவ்வொருவரின் உள்ளும் இருக்கும் பன்மைப் பண்பாட்டைப் போற்றுகிறோம். அன்னியர்கள் என்று நமக்கு அடையாளம் காட்டப்படுபவர்களின் அச்சுறுத்தல்களுக்கு எதிரான அரண்களாய் நம் தனிப்பட்ட அடையாளங்களும் தேசிய அடையாளங்களும் கோட்டைகள் போல் எழுப்பப்பட்டு வரும் இவ்வேளையில் பன்மைப் பண்பாட்டைப் போற்றுதல் மிக அவசியம். (more…)

காலத்தின் கடைக்கோடியில் தோட்டமும் ஒரு கிழவனும்

(மியா கோடோவின் சிறுகதையை போர்ச்சுகீசிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர் டேவிட் ப்ரூக்’ஷா)

டோனா பெர்டா தோட்டத்தில் ஒரு பெஞ்ச் இருக்கிறது. அது ஒன்றுதான் மிச்சம். பிற அனைத்தையும் உடைத்து, விறகாகப் பயன்படுத்திக் கொள்ள ஒற்றை பலகைகளாக்கி கட்டி வைத்திருந்தார்கள். மிச்சமிருந்த இந்த பெஞ்சில் ஒரு கிழவன் வசிக்கிறான். ஒவ்வொரு இரவும், ஆசனமும் மனிதனும், மரமும் சதையும், அணைத்துப் படுத்துக் கொள்வார்கள். கிழவனின் தோல் வரியோடிப் போயிருக்கிறது என்று சொல்வார்கள். அவனது புறக்கூட்டில் பலகைகளின் வடிவம் தன் தடத்தைப பதித்திருக்கிறது. பெரியவரை விளாடிமிரோ என்று பெயர் வைத்து அழைத்தார்கள். அவனது தனிமையை உரசிக் கொண்டு அந்த வழியாகச் செல்லும் தெருவின் பெயர் அது- விளாடிமிர் லெனின் அவென்யூ.

அந்த பெஞ்சை அப்புறப்படுத்தப் போகிறார்கள் என்று இன்று சொன்னார்கள். அந்த இடத்தில் ஒரு வங்கியின் புதுக்கிளை அமைக்கப்போகிறார்கள். இந்தச் செய்தியைக் கேட்டதும் நிலைகுலைந்து போனேன்: என் நண்பனுக்கு இருந்த ஒரே உலகம் இந்தச் சிறு தோட்டம்தான், அவனது இறுதி புகலிடம் இது. விளாடிமிரோவைப் போய் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இந்தப் பயணம் என் இதயத்துக்கு மிக நெருக்கமான ஒன்று.

– வருத்தமா? நான் வருத்தமாக இருப்பதாக யார் சொன்னது?

என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை. இந்தச் செய்தி அவனுக்கு மிகப்பெரிய ஆனந்தமாய் இருக்கிறது. ஒரு வங்கிக் கிளை, நிதிநிறுவனங்களில் ஒன்று, காத்திரமான, கான்கிரீட் கட்டிடம்- ஒரு மரத்தின் கிளையைவிட அதன் மதிப்பு அதிகம். அது எவ்வளவு பெரிதாக இருக்கப் போகிறது என்பதை அவனிடம் சொல்லி விட்டார்கள், அவனும் அவனது வளர்ப்புப் பிராணியும் தங்குவதற்கு நிறைய இடம் இருக்கும். யாருக்குத் தெரியும்,அவனுக்கு அங்கே வேலை கிடைத்தாலும் கிடைக்கும். சுற்றிலும் இருக்கும் மலர்ப் பதியன்களைப் பார்த்துக்கொள்ளும் வேலையாகத்தான் இருக்கட்டும், அதனால் ஒன்றுமில்லை. எனவே, கிளைகள் நிறைந்த தோட்டத்திலிருந்து, தோட்டங்கள் நிறைந்த கிளைக்குச் செல்லப் போகிறான். .

– கிளைவிட்டுக் கிளைக்குப் போகிறேன்

அவனது சிரிப்பு சோகமாக இருந்தது, உலர்ந்த சிரிப்பு.

இன்னும் சிறிது நேரத்தில் இருட்டி விடும். இரவானதும், விளாடிமிரோ சாராயத்தில் மூழ்குவான், பாட்டில்களில் மிஞ்சியிருயிருக்கும் வண்டல்களையும் விட மாட்டான். போதை தலைக்கேறியதும், அவன் இரவைக் கடந்து செல்வான், ஒரு நண்டு போல், குறுக்காக. சாலையின் மறுபுறத்தில் வேசிகள் நிற்கின்றனர். ஆம், வேசிகள் என்று அவன் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறான். அவர்கள் அனைவரையும் அவன் பெயர் சொல்லி அழைக்கிறான். வாடிக்கையாளர்கள் இல்லாதபோது அவர்கள் தோட்டத்துக்குள் வந்து, அவனருகில் பெஞ்சில் அமர்கின்றனர். விளாடிமிரோ தனது சாகசக் கதைகளை அவர்களிடம் சொல்கிறான், அவர்கள் அவனது அபத்தங்களைத் தாலாட்டாய் எடுத்துக் கொள்கிறார்கள். சில சமயம், இந்தப் பெண்கள் இரவில் சத்தம் போட்டு அலறுவதை கேட்டுக் கொண்டிருக்கிறான் யாரோ அவர்களை அடிக்கிறார்கள். கையாலாகதவனாய், முகத்தைத் தன் கரங்களில் புதைத்துக் கொள்கிறான், உதவிக்கு அழைக்கும் அவர்களின் குரல்களுக்கு அவனால் செவி சாய்க்க முடியாமல், கடவுளைக் குற்றம் சாட்டுகிறான்.

– ஆண்டவன் அளவற்ற கருணை கொண்டவன், யாரையும் இப்போதெல்லாம் அவன் தண்டிப்பதில்லை.

அழைத்துப் பேசிக் கொண்டிருக்கும் அளவு கடவுளுக்கு நெருக்கமானவன் விளாடிமிரோ. ஆண்டவனுடன் அவன் இப்படி வம்படித்துக் கொண்டிருப்பது எனக்கு வியப்பாக இருந்தது. விளாடிமிரோ ஒரு காலத்தில் ஆண்டவனின் மிகத் தீவிரமான பக்தனாக இருந்தான். ஆனால், இதற்கும் அந்தக் கிழவன் பதில் வைத்திருக்கிறான்: வயதாக வயதாக புனிதமான விஷயங்களில் நாம் சுதந்திரம் எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கிறோம். நம் அச்சத்தை வெற்றி கொண்டு விடுவதால்தான் இப்படி. நமக்கு எவ்வளவு தெரியுமோ, அவ்வளவு அச்சம் குறையும் என்பதுதான் விஷயமா? தெரியும் என்றோ நம்புகிறேன் என்றோ எதுவும் அவனால் சொல்ல முடியாது. சில சமயம் அவனுக்கே சந்தேகமாய்தான் இருக்கிறது.

– கடவுள் நாத்திகராகி விட்டாரா?

கிழவன் இனி வாழ்வில் பயப்பட வேண்டியதில்லை, என்று விலக்கு பெற்று விட்டானா? இப்படி தனியாக இருக்கிறான், தனக்கென்று சொல்லிக் கொள்ள வீடில்லை, ஒழுங்கான ஒரு வீடில்லை. இதைச் சொன்னால் அவன் எதிர்க்கேள்வி கேட்கிறான்:

– ஒழுங்கான ஒரு வீடா? என்னைவிட ஒழுங்கான வீடு வேறு யாருக்காவது இருக்கிறதா?

சில சமயம், காய்ச்சலில், மரணம் தனக்கு மிக அருகில் இருப்பதை அவன் உணர்கிறான், அது அவனைச் சுற்றி வந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் விளாடிமிரோ சில சாமர்த்தியமான காரியங்களைச் செய்யக்கூடியவன், தன்னை அழைத்துப் போக வந்தவனுக்குப் போக்கு காட்டிவிடுகிறான். பல்லெல்லாம் கிட்டிக்கொண்டிருக்கும்போதும், கண்கள் காய்ச்சலில் அனலாய் ஜொலிக்கும்போதும், அவன் பாடுகிறான். தான் ஒரு பெண் என்று பாவித்துக் கொண்டு நடுங்கும் குரலில் பாடுகிறான். பெண்கள், சாவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள், என்று சொல்கிறான்.

– சாவுக்கு பாட்டு கேட்க பிடிக்கும். என்னைப் பற்றி யோசிப்பதை விட்டுவிட்டு ஆடுகிறான்.

இவ்வாறாகத்தான் வாழ்க்கை போகிறது, ஒளிந்து விளையாடுவது போல. ஆனால் ஒரு நாள், சாவு அவனை முந்திக் கொண்டு முதலில் பாடத் துவங்கி விடுகிறது. ஆனால், அவனை அசைப்பதானால் சாவு தன் பாடலை நிறுத்தக்கூடாது. விளாடிமிரோ தன் பெஞ்சை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறான். இன்னும் சாகும் வயசு தனக்கு வரவில்லை என்று வலியுறுத்துகிறான். முதியவர்கள் தாங்கள் கடந்து வந்த ஆண்டுகளைச் சென்று காண்பதில்லை.

இதற்கு இடைப்பட்ட காலத்தில், விளாடிமிரோ கொஞ்சம் உறங்குகிறான், பூனைத்தூக்கம். அலாரம் அடிக்கும் அவனது கடிகாரம் ஒரு தவளை. தன் காலில் ஒரு தவளையைக் கட்டிக் கொண்டு தூங்குகிறான். மிகத் தீவிரமான தொனியில் அவன் இதற்கு விளக்கம் சொல்கிறான்: அது ஓடிப் போய்விடாதபடிக்குதான் அதை கட்டி வைத்திருக்கிறான்.

– தன் இதயத்தில் தண்ணீர் புக அனுமதித்துவிட்ட காரணத்தால் தவளை பறக்க வேண்டுமென்பதில்லை.

இப்போது எல்லாம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது,. தோட்டத்தை இடிக்கப் போகிறார்கள். ஊர் இன்னும் நகரமயமாகப் போகிறது, அதன் மனிதம் இன்னும் குறையப்போகிறது. அதனால்தான் நான் கிழவனிப் பார்க்கப் போகிறேன். நான் ஏன் அவனைப் பார்க்கச் செல்கிறேனோ, அதே காரணத்துக்காகதான் திரும்பி வருகிறேன்.

– இந்த வங்கி விவகாரம் பற்றிச் சொல். நீ உண்மையாகவே சந்தோஷமாக இருக்கிறாயா?

விளாடிமிரோ பதில் சொல்ல அவகாசம் எடுத்துக் கொள்கிறான். தான் கண்டடையக்கூடிய ஆகச்சிறந்த உண்மையைத் தேடிக் கொண்டிருக்கிறான். அவன் முகத்தில் இருக்கும் சிரிப்பு மறைகிறது.

– நீ சொல்வது உண்மைதான். நான் கலகலப்பாய் இருப்பது ஒரு நாடகம்.

– நீ ஏன் அப்படி நடிக்க வேண்டும்?

– இறந்து போன என் மனைவி பற்றி உனக்குச் சொல்லியிருக்கிறேனா?

இல்லை, என்று தலையசைக்கிறேன். துயரம் நிறைந்த, வெகு காலம் நோய்மையுற்றிந்த தனது மனைவியின் கதையைச் சொல்கிறான். தீவிரமற்ற, சீழ்பிடித்த சாவு. அவள் முன் நாளெல்லாம் கோமாளித்தனமான சேட்டைகள் செய்வான், சன்னமாய் திறந்து கொண்ட இருண்மையை மிரட்டி விரட்ட நகைச்சுவை துணுக்குகள் சொல்வான். அந்தப் பெண் சிரிப்பாள், யாருக்குத் தெரியும், அவனது இரக்க குணத்துக்காக அல்லாமல், அவன் மீது பரிதாபப்பட்டு அவள் சிரித்திருக்கலாம். இரவில், அவள் உறங்கிக் கொண்டிருக்கும்போதுதான், அவன் அழுவான், வேதனையில் பித்தாகி.

– இப்போதும் அப்படிதான்: இந்தத் தோட்டம் உறங்கும்போதுதான் நான் அழுகிறேன்.

என் கரம் அவன் தோளை வளைத்து உரையாடுகிறது. விடைபிரியும் காலம் வந்துவிட்டது. கையறு நிலை குறித்து இன்னும் ஆழமான புரிதலுடன் எனக்கு நினைவு திரும்புகிறது. எனக்குப் பின்னால், நான் விளாடிமிரோவை விட்டுச் செல்கிறேன், அவனோடு இந்தச் சாலையையும், ஒற்றை பெஞ்ச் கொண்ட தோட்டத்தையும். அந்தத் தோட்டத்தின் கடைசி பெஞ்ச் அது.

நன்றி – Words Without Borders

எதனாலும் குடிமுழுகிப் போய்விடாது

கவியின்கண் – கலையொன்று
– எலிசபெத் பிஷப் –
 
இழப்புக் கலையில் தேர்ச்சி அடைவது கடினமல்ல;
தொலைந்து போகும் நோக்கம் நிறைந்தவை ஏராளம் உண்டு,
எதையும் இழப்பதால் ஒன்றும் குடிமுழுகிப் போவதில்லை.

(more…)