விமர்சனம்

கவியின் கண்- நீ உன்னை விட்டுச் செல்கிறாய்

எஸ். சுரேஷ்

 

ஒவ்வோர் அதிகாலையும் திரைச்சீலை விலகுகிறது,
தனியே, இருள் கரைவதை நீ கேட்டுக் கொண்டிருக்கிறாய்,
டிக்டிக்கென்று நட்சத்திரங்கள் விலகிக் கொள்வதை,
கண்விழித்த பறவைகளால் உலுக்கி எழுப்பப்பட்ட
வானம் மீண்டும் காற்றிலாடும் ஸ்கார்பாகிறது
நீங்கள் ஒருத்தரையொருத்தர் தொட்டுக்கொண்டல்ல,
இணைந்து நடந்து செல்கிறீர்கள்,
ஒருவர் மீதொருவர் சாய்ந்து,
ஒருவருள்ளொருவர் என்று மாலை வரை,
மாலையில், தனியே,
நீ உன் வாசலில் நிற்கும் முரட்டு இரவை விரட்டுகிறாய்
அதற்காக அழுமளவு இனியது, ஈரமான தெரு நாய் போல்,
நீ காகங்கள் கரைவதைக் கேட்க விரும்பவில்லை,
இந்த கட்டத்தில் பேசப்பட வேண்டிய வரிகள்,
நாளுக்கு நாள் குறைந்து வருவதை,
இன்னும் எத்தனை நாட்களுக்கென்று எழுதி வைக்கப்பட்டிருக்கிறது
நிழல் நீள்கிறது, உடலை உள்ளிருந்து வெறுமை நிறைக்கிறது,
வேறொருத்தர் உன் இடத்துக்கு வருகிறார்கள்.
ஒவ்வொரு அடியாக நீ உன்னை விட்டுச் செல்கிறாய்.

Poem by Claire Malraux (more…)

நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன்

ரா கிரிதரன்

அண்மையில், “உங்கள் கவிதைகள் எத்தகைய எதார்த்தத்தில் வேரூன்றி, எத்தகைய எதார்த்தத்தை நோக்கி விரிகிறது?” என்று என்னிடம் கேள்வி கேட்டிருந்தார் ஒரு நண்பர்.. “போட்டு வாங்குவோம்”, என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்ட நண்பர் கேள்விகளைத் தூண்டில்களாக பாவிப்பதால், கவிதை எழுதாத என் திசையிலும் அது விழுந்து பலி கொள்ளாமல் விலகியது.

கவிதை ஏதாவது ஓர் இடத்தில் வேரைப் பற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. அங்கேயே கிடக்காமல், எதையோ எட்டிப்பிடிக்கும் ஒரு தாவலையும் அது காட்ட வேண்டியுள்ளது. இந்த இரு நிலைகளையும் ரத்தினச்சுருக்கமாகவும் சொல்ல வேண்டியிருக்கிறது. அதே சமயம், இவற்றுக்கிடையேயான தூரமும் இரு துருவங்களுக்கிடையேயானதாக இருக்கவேண்டும். இதை ஒரு கவிதையை மட்டும் கணக்கிட்டுச் சொல்ல முடியாது.

ஆயுட்காலத்தில் ஒரு கவிஞன் எழுதும் சொல்வெளி தொடர்பற்ற அவனது சிந்தனைகளின் தொகை. ஆனால் அவன் அறியாமல் அவற்றினூடாக தறி போல ஓரிழை எல்லாவற்றையும் இணைக்கிறது. அவ்விழையை அவனது வாழ்க்கைப்பார்வை எனக்கொள்ளலாமா? அவன் பார்த்து அனுபவித்து அறிந்த காட்சியைக்கொண்டு நூலேணியை ஒரு திசை நோக்கி எறிகிறான். அவனது அனுபவம் என்பது கைக்கிளை. கவிதை புனையும் தருணம் வரை அதன் மறு கரையை அவன் அறிவதில்லை. அனுபவம் அவன் பற்றியிருக்கும் வேர். அங்கிருந்து எந்த நூலேணியைப் பிடித்து எங்கு செல்லும் என்பதை அவனது அறிதல் அவனுக்குப் புகட்டாது. கற்பனையும், பித்து உணர்வு நிலையும் அத்திசைக்காட்டிகள். (more…)

கற்பனையும் மொழியும்

றியாஸ் குரானா

பதாகை – கற்பனைக்கும் மொழிக்கும் உள்ள உறவின் இயல்பு என்ன?

றியாஸ் குரானா – மேலோட்டமாகப் பார்த்தால் இது சாதாரணமான கேள்விபோலதான் தோன்றும். ஆனால், உண்மையில் இது சற்றுக்கடினமான கேள்வியே. இந்தக் கேள்வியை பொருட்படுத்தி பதில் சொல்லுவதெனில், முதலில் ஒரு விசயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். கற்பனைக்கும் மொழிக்குமிடையில் உறவு இருக்கிறது என்பதுதான் அந்த விசயம். இப்படி ஏற்றுக்கொள்ளுவது என்னுடைய புரிதல் நிலைப்பாட்டில் பெரும் மாற்றங்களை கோரும் ஒன்று. ஆனால், பொதுவாக மொழிக்கும் கற்பனைக்கும் ஒரு உறவு உண்டென்று நம்பப்படுகிறது. அந்த உறவின் இயல்பு எப்படியானது என்பதில்தான், பல வகையான கருத்துக்கள் இருக்கிறது என்றும் நம்பப்படுகிறது. அடிப்படையில் இது குறித்து வேறு கருத்துக்ளைக் கொண்டவன் நான். ஆக, இந்தக் கேள்விக்கான பதிலை நான் எப்படி சொல்ல வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டியுள்ளது.

மொழி என்பதே ஒரு கற்பனைதான் எனச் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்படிச் சொல்லுவதால், அடிப்படையில் மொழிக்கும் கற்பனைக்குமான உறவை மறுக்கிறேன். அப்படியானால், அதற்கிடையிலான உறவு குறித்து பேச எதுவுமில்லை. கற்பனையால் உற்பத்தி செய்யப்பட்ட மொழியே, மீண்டும் கற்பனையைப் பெருக்குவதற்கு தேவையான, மிக ஆற்றல் மிக்க உள்ளடக்கங்களையும், இயங்கு முறையையும் கொண்டிருப்பதால், இரண்டாம் நிலையில் மொழிக்கும் கற்பனைக்குமான உறவு உருவாகிவிடுகிறது. இந்த இடத்தில்- மொழிக்கும் கற்பனைக்குமான உறவின் இயல்பு என்ன என்பதை கற்பனை செய்யவும், உருவாக்கவும் முடிந்துவிடுகிறது என்பதும் ஒரு மர்மமான விசயம்தான். (more…)

அஞ்சலி கட்டுரை: ராபின் வில்லியம்ஸ் – உயிருள்ள உணர்ச்சிப்பிழம்பு

பாஸ்டன் பாலா

ராபின் வில்லியம்ஸ் என்றதும் அவர் நடித்த கதாபாத்திரங்கள் பலதும் கலந்துகட்டி நினைவிற்கு வந்துபோகிறது. துணையெழுத்துகள் உச்சரிப்பை சொல்லிக் கொடுக்காத, ஆங்கிலத் திரைப்படங்கள் பார்க்க ஆரம்பித்த புதுதில் இவருடைய படங்கள் மட்டும்தான் எனக்கு எளிதாகப் புரிந்தன. என்னால் மனம் விட்டுச் சிரிக்க முடிந்தது. ஜுமாஞ்சி ஆகட்டும், ஹுக் (Hook) ஆகட்டும், அலாவுதீன் ஆகட்டும்… எல்லாமே கோமாளித்தனமும் கிறுக்குத்தனமும் சரி பாதி கலந்து ஜாலியாக இருந்தது.

ஒரு முறை, அலுவலின் மதிய நேரத்தில் சாப்பாட்டுக் கடையின்போது பேசுவதற்கு பொதுவான விஷயங்களைத் தேடிக் கொண்டிருக்கும் வேளையில், ‘உனக்குப் பிடித்த சினிமா நடிகர் யார்?’ எனக் கேட்டு வைத்தார்கள். உச்சரிப்பதற்கு எளிமையான பெயர்; அதே சமயம் புகழ்பெற்ற பெயர், எனவே ‘ராபின் வில்லியம்ஸ்’ என்கிறேன். அவர்கள் முகத்தில் அதிர்ச்சியா, குழப்பமா, பயமா எனக் கண்டுபிடிக்க முடியாத அசட்டு உணர்வு. ‘அப்படியா…! உனக்கு வேறு யாருமே கிடைக்கலியா! உனக்கு என்ன பிரச்சினை? சந்தோஷமாகத்தானே இருக்கிறாய்?’ என கரிசனத்துடன் வினவினார்கள். (more…)

கவியின் கண் – அன்னிய வானின் கீழல்ல

எஸ். சுரேஷ்

அன்னிய வானின் கீழல்ல
அன்னிய சிறகுகளின் நிழலில்ல-
இவையனைத்தையும் என் மக்களுடன் பகிர்ந்து கொண்டேன்
இங்கே, தீவினை எம்மைக் கைவிட்ட இடத்தில்
– அன்னா அக்மதோவா

சில நாட்களுக்கு முன்னர் நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாடினோம். அப்போது ஊடக கட்டுரைகளிலும் சமூக ஊடகச் சிற்றுரைகளிலும் இருவேறு தீவிர குரல்களைக் கேட்க முடிந்தது. ஒரு முனையில், தேசபக்திக் கட்டுரைகள்- நாம் ஏன் உலகின் தலைசிறந்த நாடாக விளங்குகிறோம் என்று. மறுமுனையில், நம்பிக்கையற்றவர்கள்- நமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதா என்ற சந்தேகத்துடன், நம் சமூகத்தில் உள்ள தீமைகள் அனைத்தையும் பட்டியலிட்டு இவையே இந்தியாவின் சாதனைகள் என்ற குற்றச்சாட்டு (வழக்கம் போலவே உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் எங்கோ இருக்கிறது).

ஒரு வகையில் நாம் அதிர்ஷ்டக்காரர்கள் – நம் எதிரி யார் என்பதை நாம் அறிந்திருந்தோம். நம்மை ஆக்கிரமித்திருந்தவர்கள் பிரிட்டிஷார், அவர்களை விரட்டிவிட்டால் சுதந்திரம் கிடைத்துவிடும் என்று நம்பினோம். ஆனால் இதற்கு மாறாக, உலகின் பல நாடுகளும் வேற்று எதிரியை அடையாளம் காண முடியாத காரணத்தால் அடிமைத்தளையில் அவதிப்பட்டன. அவர்களின் எதிரி உள்ளிருந்தான். சர்வாதிகாரி, கொடுங்கோலன், பாசிஸ்டு என்று எப்படி அழைத்தாலும் அவன் அந்நாட்டு குடிமக்களில் மக்களில் ஒருவன். இவர்களில் பலர் மக்களின் ஒருமித்த ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியவர்கள். இது போன்ற ஓர் அதிகார அமைப்புடன் கடுமையாகப் போராடினாலன்றி விடுதலை பெறுதல் அரிது.. (more…)