Author: பதாகை

விடுப்பு – கிஷோர் ஸ்ரீராம்

(சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை, எழுதியவர் கிஷோர் ஸ்ரீராம்)

வெங்கடேசன் பத்து வருடங்களாக சமைத்து வந்தாலும், காலையில் தான் சமைத்த உணவை டப்பாவில் கட்டிக்கொண்டு போய் கல்லூரியில் திறந்தால் ஒரு ஊசிப் போன வாடை கண்டிப்பாக வந்துவிடும். உணவு நன்றாகவே இருந்தாலும் அந்த வாடை தினமும் அடிப்பதாக உணர்ந்தார். அதற்காகவே சக பேராசிரியர்களுடன் சாப்பிடாமல் தன் இருக்கையிலேயே சாப்பிடுவார்.

மனைவி ராஜி விபத்தில் கால் போனதிலிருந்து படுத்த படுக்கையாகவே இருந்தாள். இவர் தினமும் காலை எழுந்து, கோலம் போட்டு, வாக்கிங் செல்பவர்கள் பறிக்கும் முன் பூக்கள் பறித்து, பால் காயவைத்து  இருவருக்கும் காப்பி போட்டு பேப்பர் படித்துவிட்டு சமைக்க ஆரம்பிப்பார். சமையலில் அவர் வல்லுநர் இல்லையென்றாலும் சாப்பிடும்படி சமைத்து வந்தார். கல்லூரி கிளம்பும் முன் தன் மனைவியை எழுப்பி குளிப்பாட்டி, புது நைட்டி அணிவித்து காலை உணவை மெத்தைக்கு அருகே அமைக்கப்பட்ட டேபிளில் வைத்துவிட்டு, மதிய உணவையும் ஹாட் பேக்கில் அதே மேசையில் வைத்துவிட்டுத் தானும் எடுத்துக்கொண்டு போவார். மேசையில் டிவி ரிமோட், செல்போன், தட்டு, ஹாட்பேக், அன்றைய பேப்பர் வைக்கவே இடம் இருக்கும். மருந்து மாத்திரைகள் வைக்க தலைமாட்டில் தனியாக ஒரு டிராயர் இருந்தது.

எட்டு மணிக்கு கல்லூரிப் பேருந்து வந்துவிடும். நகரத்தை விட்டு இருபத்தைந்து கிலோமீட்டர்கள் தள்ளி இருந்தது கல்லூரி. கல்லூரி செல்லும் வரை எதையாவது படித்துக்கொண்டு வருவார். இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக அந்தக் கல்லூரியில் பணி புரிந்து வருகிறார் . புள்ளியியல் துறை பேராசிரியர். துறைத் தலைவர் பதவி தள்ளிப் போய் அவருக்கு அந்த வருட முடிவில் கிடைக்க வாய்ப்புள்ளதாக மற்றவர்கள் பேசி வந்தனர். வாரத்திற்கு எட்டு வகுப்புகள் எடுப்பார். பழகிப் போன கணக்குகள். முன்பு போல அந்தக் கணக்குகள் அவருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதில்லை. கரும்பலகையின் இடது ஓரத்தில் கை வைத்தால் மள மளவென்று கை வழியாக கணக்கு பாயும். எந்த இடத்தில் புள்ளி வைப்போம், பிரதான கணக்குக்குத் தேவையான உதவிக் கணக்குகள், எங்கு மாணவர்களை கேள்வி எழுப்ப வேண்டும் என்று எல்லாம் தடம் பழகிய காளைகள் போல் அடுத்து அடுத்து வரிசை மாறாமல் நடந்தன. புதுக் கணக்குகள் எடுப்பதை எப்போதோ கைவிட்டிருந்தார்  வழமைக்கு மாறாக புதிதாக செய்யவேண்டிய காரியங்கள் போல் அவரை எதுவும் அச்சுறுத்துவதில்லை. சாதுர்யமாக அவைகளை தவிர்த்து வந்தார்.

மதிய இடைவேளையில் ராஜிக்கு போன் செய்வார். ‘ஒன்னும் பிரச்சனை இல்லையே?’ என்று கேட்பார். உணவு எப்படி இருந்தது என்று கூட கேட்க மாட்டார். பதில் வந்ததும் போனை வைத்துவிடுவார். கல்லூரியில் அவருக்கு நல்ல பெயர் இருந்தது. துறையில் எடுக்கும் முக்கியமான முடிவுகளுக்கு பெரியவர் என்ற முறையில் ஆலோசனை கேட்பார்கள். வாக்குவாதங்களோ, சண்டைகளோ போட்டதில்லை. தனக்கு ஒரு வேலை வந்தால் செய்வார். அவராக எதையும் இழுத்துப் போட்டுக்கொள்ள மாட்டார்.

மாலை பேருந்தில் பெரும்பாலும் தூங்குவார். வீடு போக ஆறு மணிக்கு மேல் ஆகிவிடும். வீட்டுக்கு வந்தவுடன் காப்பியும் பிஸ்கெட்டும் ராஜிக்குத் தருவார். இரவு உணவுக்குத் தேவையான காய்கறிகள் நறுக்குவார். தொலைக்காட்சியில் ஏதாவது விவாதம் ஓடிக்கொண்டு இருக்கும். பார்த்துக்கொண்டே வேலை செய்வார். இரவு உணவு ராஜியின் படுக்கைக்குப் பக்கத்தில் சேர் போட்டுக்கொண்டு ராஜியுடனேயே சாப்பிடுவார். ‘இன்னும் கொஞ்சம் சாம்பார் விடட்டுமா?’, ‘நாளைக்கு ஷட் டவுன், கரண்ட் இருக்காது.’,‘ பக்கத்து அப்பார்ட்மெண்டுக்கு புதுசா பேச்சுலர்ஸ் குடி வந்திருக்காங்க, அதான் ஒரே சத்தம்’ என்று துணுக்குச் செய்தியாகத்தான் சம்பாஷணைகள் இருக்கும். ராஜி பெரும்பாலும் பேசுவதில்லை.

ராஜி பாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலை செய்து வந்தவள் . சிறு வயதிலிருந்தே துறுதுறுவென இருந்த பெண். பள்ளிக்குத் தன் அப்பாவின் பார் வைத்த ஹெர்குலிஸ் சைக்கிளைத்தான் ஓட்டிச் செல்வாள். செயினுக்கு எண்ணெய் ஊற்றுவது, காற்றடிப்பது எல்லாம் பார்த்துப் பார்த்து செய்வாள் . எட்டாவது வகுப்பு வந்ததும், அம்மா திட்டித்தான் வீதியில் இருந்த மற்ற பெண்கள் போல நடந்து பள்ளிக்குச் சென்றாள். தன் வேலையைத் தானே எப்போதும் செய்து கொள்பவள். துணி வைப்பு அலமாரியிலும், புத்தக மேசையிலும் அவள் அடுக்கி வைக்கும் ஒழுங்கை அம்மா எல்லோரிடமும் காட்டி பூரித்துக்கொள்வாள். வெங்கடேசன் அவளைப் பெண் பார்க்க வந்தபோது அவர் கை நகக்கண்களில் இருந்த அழுக்கு தான் அவளுக்கு முதலில் பார்வைக்குப் பட்டது.

‘காலேஜுல வாத்தியாராம். எல்லாருமே நல்லவங்களாத் தெரியறாங்க. நகத்துல அழுக்கு இருக்கறதெல்லாம் உனக்கு ஒரு காரணமா?’ சமையல் கட்டில் அம்மா அவளைத் திட்டினாள். இது என்ன மற்ற நாட்களைப் போன்ற ஒரு சாதாரண நாளா?, பெண் பார்க்கும்போதாவது ஒழுங்காக வரவேண்டாமா. அப்படி என்ன ஒரு அசட்டையான பாங்கு? ராஜியின் காரணங்கள் யாருக்கும் புரிந்திருக்கவில்லை.

கல்யாணம் ஆகிய சில வருடங்களிலேயே ராஜிக்கு பாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலை கிடைத்தது. வெளியே வந்து வேலை செய்வதே அவளுக்கு மிகப்பெரிய விடுவிப்பாக இருந்தது. வெள்ளிக் கிழமைகளில் வெங்கடேசன் ராஜியின் அலுவலகத்திற்கு வந்துவிடுவார். இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வருவர். வெங்கடேசன்தான் வழி நெடுக பேசிக்கொண்டே வருவார்.

‘உன்னை பொண்ணு பாக்க வந்தப்ப என் நகத்துல அழுக்கு இல்லாமல் இருந்தா என்ன பண்ணி இருப்ப?’

‘தலை முடி கலைஞ்சுருக்கான்னு பாத்திருப்பேன்’. இருவரும் சிரித்தனர்.

‘ஆனா பாருங்க. இன்னிக்கு வரைக்கும் உங்களுக்கு அதையெல்லாம் சரி பண்ணிக்கணும்ன்னு தோணினதே இல்ல’

‘ஐ ஹாவ் பெட்டர் திங்க்ஸ் டு வொர்ரி அபவுட்’

‘பொடலங்கா’

‘ஒரு உதாரணத்துக்கு நான் இதையெல்லாம் நான் சரி செஞ்சுகிட்டேன்னு வச்சுக்கோயேன், அப்பவும் உனக்கு குறை சொல்ல ஏதாவது இருக்கும்’

‘அப்படி நீங்க நெனச்சுக்கிட்டா நான் என்ன பண்றது’?

சில நேரம்தான் அது உரையாடலாக இருக்கும். பிறகு இருவரும் மாற்றி மாற்றி கல்லெறிவது போல ஆகிவிடும். வெங்கடேசனுக்கு ராஜியை புரிந்துகொள்ளவில்லையே என்ற ஏக்கம் எப்போதுமே உண்டு. அடியாழத்திலிருந்து எழும் சிறியதொரு சொல்லும் நேரம் போகப் போக எரிகற்களாக வந்து விழும். ராஜியின் திமிர் அனைத்தையும் கட்டுடைத்து உள்ளே என்ன தான் உள்ளது என்று பார்க்கும் பொறுமையெல்லாம் அவர் இழந்துவிட்டிருந்தார். கடைசி வரை ராஜியின் பிரச்சனைதான் என்ன என்று தெரிந்துகொள்ளும் ஆர்வமும் நின்று போனது. அதற்குள் ராஜியும் படுத்துக்கொண்டு விட்டாள்.

ராஜிக்கு விபத்து ஏற்பட்டது பத்து வருடங்களுக்கு முன்னால். வெங்கடேசனுடன் ஸ்கூட்டரில் பின் சீட்டில் அமர்ந்து கொண்டு போனபோது பின்னால் வந்த கார் இடப்புறமாக முந்த முயன்றது. அந்நேரம் எதிரே பஸ் வந்ததால் வெங்கடேசன் கார் வந்ததை கவனிக்காமல் இடப்புறம் சற்று ஒடிக்க, கார் ஸ்கூட்டரை இடித்தது. பிடி கிடைக்காமல் கீழே விழுந்ததில் ராஜியின் கால் மேல் கார் ஏறி இழுத்துப் போனது. வெங்கடேசன் தோள்பட்டையில் காயத்துடன் தப்பித்தார். ராஜியின் கால்கள் சரி செய்ய முடியாத அளவு பிளவுண்டு போயின. ராஜியைப் பார்த்துக்கொள்ள கொஞ்ச நாட்கள் அவளின் அம்மா வந்தாள். பிறகு வெங்கடேசனே பார்த்துக்கொண்டார்.

விபத்து ஏற்பட்டதிலிருந்து ராஜி பேசி வந்த வெகு சில வார்த்தைகளும் நின்று போயின. இரவில் அவள் விசும்புவது கேட்டு வெங்கடேசன் பேச முயன்றாலும் ‘ஒன்னும் இல்லை. வலிக்குது. நீங்க தூங்குங்க’ என்று கூறி விடுவாள். வீல் சேர் வைத்துக் கொண்டு சில மாதங்கள் வீட்டுக்குள் நடமாடி வந்தாள். அவ்வப்போது வெங்கடேசனுக்கு சமைக்க உதவுவாள். பொதுவாக டீவி பார்ப்பதில்லை என்றாலும் டிஸ்கவரியில் வரும் மிகப் பிரம்மாண்ட கட்டிடங்கள் தகர்க்கப்படுவது, ஒரு அடர் வனத்தில் தனியாக உயிர் பிழைப்பது போன்ற நிகழ்ச்சிகள் நன்றாக இருப்பதாகக் கூறுவாள். சில வாரங்களில் உலகில் உள்ள அத்தனை வகையான காடுகளும் அவளுக்கு அத்துப்படியாகி இருந்தது. முந்தைய இரவு பார்த்ததையே மறுநாள் மதியமும் பார்த்து வந்தாள்.

ஒரு நாள் அவர் கல்லூரி சென்றிருந்த போது ராஜி வீல் சேரிலிருந்து பாத்ரூம் கம்போடில் உட்காரப் போகும்போது கை இடறி வழுக்கி விழுந்துவிட்டாள். திரும்ப ஏறி உட்காரவும் கையில் பலம் இல்லை. கீழே விழுந்ததில் கையில் அடி பட்டுவிட்டது. வெங்கடேசன் மதியம் செல்போனில் திரும்பத் திரும்ப அழைத்த போது எடுக்காததால் மதியம் பெர்மிஷன் போட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது ராஜி பாத்ரூமில் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். அவர் மெதுவாக அவளை எழுப்பி வீல் சேரில் உட்கார வைத்து தண்ணீர் கொடுத்து படுக்க வைத்தார்.

‘ கீழ விழுந்தா சத்தம் போடலாமில்லே ?’

‘ போட்டேன். யாருக்கும் கேக்கல’

கீழே விழுந்ததும் ராஜிக்கு படுக்கையை விட்டுப் போகவே பயமாக இருந்தது. எவ்வளவு வற்புறுத்தியும் படுக்கையை விட்டு சற்றும் நகர மறுத்துவிட்டாள். உள்ளூர பயம் ஒரு விருட்சம் போல படர ஆரம்பித்திருந்தது. அவளுக்கு ஏற்படும் சிறு தொய்வும் அவளின் மனோபலத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வந்தது. பாத்ரூமில் வழுக்கி விழுந்ததிலிருந்து பாத்ரூம் போய் வர, குளிக்க, வெங்கடேசனின் துணை வேண்டியிருந்தது. கல்லூரி செல்லும் போது டயப்பர் கட்டிவிட்டுப் போவார். அவரும் மனம் கோணாமல் எல்லாம் செய்து வந்தார். பூ பறிப்பது, பேப்பர் படிப்பது போல ராஜியின் சிசுருஷைகளும் அவருக்கு மற்றொரு வேலையாயின.

ராஜிக்கு உடம்பும் உப்பிக்கொண்டே வந்தது. உடம்பு மெலிந்து போவதை விட அவள் உடல் பருமனாவது ஒரு பெரிய நோய்மையின் கூறாக அவர் எண்ணினார். ராஜியின் பிடிவாதமே அவளை அப்படி ஆக்குவதாக அவருக்குப் பட்டது . அவளின் உடனடி தேவை முழுமனதாக ஒரு அழுகை. அவர்களுக்கு குழந்தை இல்லாத குறை அவரை விட ராஜிக்கு அதிகமாக இருக்குமென்று அவர் நினைத்ததுண்டு . அவள் மனது கண்டிப்பாக அந்த இரவு விசும்பலை விட ஆழமானது .

அவருடைய ஒரே வருத்தம் தனக்கு சலிப்பு வந்து அவளை அப்படியே விட்டுவிடுவேனோ என்பதுவாகத்தான் இருந்தது. ஆனால் இவ்வளவு வருடங்கள் இந்த உறவை பிணைத்திருக்கும் ஒரு மறைமுகமான கயிறு அவர் மட்டும் தான். தன் வாழ்வில் இது தனக்கு உவப்பானதல்ல என்று அவர் எதையுமே ஒதுக்கியதில்லை. வாழ்க்கை தன்னை இட்டுப்போன திசைக்கு அம்மாவின் விரல் பிடித்து நடக்கும் குழந்தை போலவே நடந்து வந்துள்ளார். நடக்கையில் கடக்கும் காட்சிகள் தன்னையே மறக்கடிக்கச் செய்யுமளவு அழகாக இருந்தால் அவ்விரலை மேலும் கெட்டியாகப் பிடித்து நடந்துள்ளார். தன் சந்தோஷங்கள், துக்கங்கள், அவமானங்கள், வெற்றிகள் அனைத்துமே தம்பூராவில் மீட்டும் ஒரே சுருதியைப் போலத்தான் அவரால் மீட்டெடுக்க முடிந்தது. இது அத்தனையிலிருந்தும் ஓய்வு என்பதை அவர் அடிக்கடி கற்பனை செய்து பார்ப்பதுண்டு. அந்த மனநிலை என்பது எப்படித்தான் இருக்கும் என்று அறிய ஆசையாக இருந்தது.

கல்லூரியில் இருந்து அன்று வந்த போது மாலை வழக்கத்துக்கு மாறாக பேருந்தில் டிரைவர் பாட்டு போட்டுக்கொண்டு வந்தார். இளையராஜா வந்த புதிதில் போட்ட பாட்டுக்கள் . பேருந்தில் வந்த மாணவர்கள் உச்சுக்கொட்டிக்கொண்டு வந்தார்கள். பாட்டுக்கள் எல்லாமே யாரோ நல்ல இசை ரசனை உள்ளவர் தேடித் தேடிச் சேர்த்தவை போல இருந்தது. அனைத்தும் முத்துக்கள். அடித் தொண்டையில் முனகிக்கொண்டே சீட்டில் தாளம் போட்டுக்கொண்டு வந்தார். அந்த மாலை அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. ஜன்னலுக்கு வெளியே இளஞ்சிவப்பாக இருந்த அந்தச் சூரியனை முதல்முறை பார்ப்பது போலப் பார்த்துக்கொண்டு வந்தார். பேருந்து நிறுத்தத்திலிருந்து வீடு வரை பாடிக்கொண்டே நடந்து வந்தார். வீட்டைத் திறந்து உள்ளே வந்ததும் எதுவோ சரி இல்லை என்று பட்டது. ஹாலில் மேசையின் இடம் சற்று மாறி இருந்தது. சந்தேகம் ஏற்பட்டு ராஜியின் அறைக்குச் சென்று பார்த்தார். அங்கே எல்லாம் சரியாகத் தான் இருந்தது. ராஜி எதிர் சுவற்றை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த அறைக்குச் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. பழைய காலத்து மர பீரோ. அதை உடைப்பதற்கு பெரிய சிரமமெல்லாம் தேவையில்லை . இடுக்கில் ஒரு சன்னமான இரும்புக் கம்பியை உள்ளே கொடுத்து ஒரு நெம்பு நெம்பினால் வந்துவிடும் நிலையில் தான் இருந்தது. திருடனும் அதையே தான் செய்திருந்தான். அந்த அறைக்குள் வர ஜன்னல் கம்பிகளை ரம்பத்தைக் கொண்டு அறுத்திருக்க வேண்டும். பீரோவில் உள்ள துணிகளெல்லாம் கீழே வீசி எறியப்பட்டிருந்தன. ராஜியின் நகைகளை லாக்கரில் வைத்திருந்தார். பணம் ஒரு முப்பதாயிரம் வைத்திருந்தார். அதுவும், வெள்ளி சாமான்கள் சிலதும் திருடப்பட்டிருந்தன. பீரோவில் ஒரு டிராயரில் அவர், தான் கல்லூரியில் பொழுதுபோக்காக சேர்த்த ஸ்டாம்புகள், பல தேச நாணயங்கள், பழைய புகைப்படங்கள் எல்லாம் வைத்திருந்தார் அதெல்லாம் கீழே கொட்டப்பட்டிருந்தன.

அவர் செய்வதறியாது ஒரு நிமிடம் திகைத்தார். எண்ணங்கள் கோர்வையாக ஓடவில்லை. அடுத்து என்ன செய்வது என்று யோசிக்காமல் அவருக்கு பழைய நினைவுகளெல்லாம் திரண்டு கண் முன் விரிந்தன. சமயோசிதமில்லாமல் வாகனத்தை ஒட்டி ராஜியை படுத்த படுக்கையாக்கியது, பாடத்தில் பெயில் ஆக்கியதால் ஒரு மாணவன் மருந்து குடித்தது, அறிமுகமில்லாத ஆளிடம் கடன் குடுத்து அதை வாங்க முடியாமல் அலைந்தது, ராஜியை பெண் பார்க்கச் சென்றது.. ராஜி.. அவருடைய நினைவுகள் எல்லாம் அவளைச் சுற்றியே வந்துகொண்டிருந்தன. தன்னுடைய இயலாமையின் மிகப் பெரிய ஊற்றாக ராஜியைப் பார்த்தார். அணு அணுவாக அவரின் வாழ்க்கையை ஆக்கிரமித்திருக்கும் ஒரு மிகப் பெரிய முடிவிலி. அவள் பற்கள் பொதுவாகவே துருத்திக்கொண்டு வெளியே தெரியும். சிரிக்கும் போது கோரமாக அது தெரியாதிருக்க கையை வாய்ப்பொத்தித் தான் சிரிப்பாள். இவ்வளவு வருடங்களாக வெள்ளந்தியாக அவள் ஒரு முறை கூட வாய் விட்டுச் சிரித்தது இல்லை. அவள் மனதில் அப்படி என்ன உள்ளது? எதைப் பூட்டி வைக்க வேண்டும் ? அதை சற்றும் தெரிந்து கொள்ள முற்படாமல் தட்டிக்கழித்து, தோற்று, இப்படி அவளுக்கு வேண்டியதெல்லாம் மறுபேச்சு பேசாமல் பண்ணிப் பண்ணி அவள் அடுத்த அறையில் ஒரு பூதகியைப் போல் படுத்துக்கொண்டிருக்கிறாள்.

அவர் காலுக்குக் கீழ் அவர் தன் பள்ளி ஆண்டு விழாவில் பெண் வேஷம் போட்டு ஒரு நாடகத்தில் நடித்த போட்டோ விழுந்து கிடந்தது. கன்னத்தில் கை வைத்து வசனம் பேசும் போது எடுத்த போட்டோ. நாடகம் முடிந்து அவரை அள்ளிக்கொண்டு எல்லோரும் கொஞ்சினர். மாலை வீடு திரும்பியதும் அவரின் அம்மா திருஷ்டி கழித்தாள். அதைப் பார்த்துக் கொண்டே இருந்தார். தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது. கண்களில் கண்ணீர் வழிந்ததை துடைத்துக்கொண்டு ராஜியின் அறைக்கு விரைந்தார்.

‘நம்ம வீட்டுல திருடு போயிருக்கு’

‘ஓ அப்படியா. எப்ப?’

‘இல்ல தெரியாமத் தான் கேக்கறேன். நீ என்னத்தப் புடுங்கிட்டு இருந்த. ஜன்னல அறுத்து பீரோவ பிரிச்சு இருக்கான் பக்கத்து ரூமுல, நீ மயிரே போச்சுன்னு படுத்துட்டு இருந்துருக்க.’

ராஜி பேசவே இல்லை.

‘திங்க வேண்டியது. தூங்க வேண்டியது. பேள வேண்டியது. நீயெல்லாம் ஒழிஞ்சு போயேண்டி சனியனே’ – திட்டி முடிக்கும் முன்னரே உதடு துடித்தது. குரல் கூட கணீரெண்று ஒலிக்காத ஒரு நசநசத்த கோபம். அந்த நொடியின் கனத்தைத் தாள முடியாமல் சர சரவென்று வீட்டை விட்டு வெளியே சென்றார்.

மாலை ரசித்த பாட்டெல்லாம் எதுவும் ஞாபகத்துக்கு வரவில்லை. மனது ஏதேதோ எண்ணங்களை அசை போட்டது. வீட்டுக்குத் திரும்ப எரிச்சலாக இருந்தது. அவருக்கு யாரிடமாவது பேசி அழவேண்டும் போல இருந்தது. திடீரென்று பேருந்தில் எங்காவது செல்லவேண்டும் என்று தோன்றி அப்போது அங்கே வந்த பேருந்தில் ஏறிக்கொண்டார். இரண்டு நிறுத்தங்கள் தாண்டி பேருந்து நிலையம் வந்தது. கண்டக்டர் இறங்கச் சொல்லியதும் இறங்கி வெளியே நடந்தார்.

ரோட்டின் மறுபுறம் ஒரு மதுபானக்கடை இருந்தது. அதுவரை அவர் மதுவை தொட்டதே இல்லை. அன்று வரை அது ஏனோ தோன்றியதும் இல்லை, வாய்ப்பும் அமையவில்லை. அந்த மதுக்கடை நோக்கி நடந்தார். வெளியே கூட்டமாக இருந்தது. ஒரு இரும்பு சட்டத்தின் சிறு ஓட்டையில் அனைவரும் பணத்தை நீட்டி பாட்டிலை வாங்கிக்கொண்டு அருகிலிருந்த சந்துக்குள் சென்றனர். அவர் அங்கு சிறிது நேரம் விழித்துக்கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் கூட்டம் சேர அவர் முன்னுக்குத் தள்ளப்பட்டார். இரும்புச் சன்னல் அருகே நின்று சுற்றிப் பார்த்தார். பின்னால் நின்றிருந்தவர்கள் எல்லாரும் கத்த ஆரம்பித்துவிட்டிருந்தார்கள்

‘இந்தா சார் என்ன வேணும்’ என்று உள்ளே இருந்தவன் அலறினான்.

‘அது வந்து’ என்று இவர் இழுத்துக் கொண்டே பர்ஸைத் துழாவினார்.

‘சரி இருநூறு ரூபா எடு’ என்று ஒரு விஸ்கி பாட்டிலை அவர் முன் தள்ளினான். அவர் பணத்தை கொடுத்துவிட்டு அந்த சந்தின் முன் நின்றுகொண்டிருந்தார். உள்ளே இருந்து லுங்கி அணிந்த ஒரு சிறுவன் அவர் கையைப் பிடித்து ‘வா சார் உள்ள வா’ என்று அழைத்துப் போனான். நீளமான ஆஸ்பெஸ்டாஸ் சீட் வேயப்பட்ட ஒரு கொட்டகையில் பத்து டேபிள்கள் போடப் பட்டிருந்தன. எல்லா டேபிளிலும் ஆட்கள் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தனர். அந்த இடமே ஒரே கூச்சலாக இருந்தது. டேபிளில் தண்ணீர் சிந்தி, கொட்டகையின் ஓரத்தில் ஒருவன் கண்கள் சொருகி தலையைப் பிடித்துக்கொண்டு வாந்தி எடுத்துக்கொண்டிருந்தான். மூத்திர நாற்றமும், மது வாடையுமாக அந்த இடமே குமட்டிக்கொண்டு வந்தது.

ஓரளவு சுத்தமான டேபிளில் அமர்ந்து கொண்டார். சிறுவன் பிளாஸ்டிக் கப்பும் தண்ணீர் பாக்கெட்டுடனும் வந்தான். கடலை வேணுமா என்று கேட்டு ஒரு சிறிய கடலை பாக்கெட்டை லுங்கி மடிப்பிலிருந்து எடுத்து வைத்தான். முப்பது ரூபாய் வாங்கிக்கொண்டு ‘சிக்கன் எதுனா வேணும்னா சொல்லு சார்’ என்றான். வெங்கடேசன் வேண்டாம் என்பது போல் கையசைத்தார். ராஜியின் மருந்து பாட்டில்கள் போல அந்த பாட்டிலை திறக்க சிரமப் பட்டார். முகர்ந்து பார்த்தபோது வீச்சம் தலைக்கேறி ஒரு முறை சிலிர்த்துக் கொண்டார்.

எதிரே ஒருவன் பாட்டிலை உடைத்து மதுவை கப்பில் ஊற்றி தண்ணீரை அதில் பீச்சி அடித்து ஒரே மடக்காகக் குடித்துக் கிளம்பினான். அதை பார்த்துக்கொண்டிருந்த வெங்கடேசன் தன் பாட்டிலில் இருந்த முக்கால்வாசி மதுவை ஊற்றி கொஞ்சம் தண்ணீரை பீச்சி வாயில் ஒரேடியாகக் கவிழ்த்தார். மதுவின் வீச்சம் ஒத்துக்கொள்ளாமல் புரையேறி இருமினார். உணவுக் குழாய் நெடுக கதகதப்பாக அந்தத் திரவம் பயணிப்பதை உணர்ந்தார். குமட்டிக்கொண்டு வந்தது. வாய் எதையாவது மெல்ல வேண்டும் போல இருந்தது. கடலையை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். மிச்ச மதுவையும் ஊற்றி தண்ணீர் கலக்காமல் கண்களை மூடிக்கொண்டு குடித்து முடித்தார்.

லேசாக தலை கிறுகிறுத்தது. வெளியுலகமே சற்று நேரத்திற்கு பரிச்சயமற்றுப் போனது. எழுந்து நிற்க முடியவில்லை. முயன்று எழுந்தபோது தள்ளாடி கீழே விழப் போகையில் சிறுவன் பிடித்துக்கொண்டான். வாந்தி வருகிறது என்று சொன்னதும் சிறுவன் அதே மூலைக்கு அழைத்துச் சென்றான். மதிய உணவெல்லாம் வெளியே வாந்தியாக வந்தது. வீட்டுக்குப் போகணும் என்று முனகினார். பார்த்துக்கொண்டிருந்த இரு இளைஞர்கள் அவர் சொன்ன பேருந்துக்கு கைத்தாங்கலாக அழைத்துச் சென்று டிக்கெட்டையும் எடுத்துக்கொடுத்தார்கள்.

அவரால் உட்காரவே முடியவில்லை. கண்கள் இருட்டிக்கொண்டு மயக்கமாக வந்தது. பேருந்தில் தூங்கிக்கொண்டே வந்தார். தன் சீட்டின் முன் சாய்ந்த போது கைகள் முன் சீட்டில் அமர்ந்திருந்த பெண்ணின் தோள் மீது சரிந்தன. அந்தப் பெண் சத்தம் போட்டதும் பேருந்தில் இருந்தவர்களெல்லாம் அவரை அடிக்கத் தொடங்கினர். கைகளால் தடுத்துக்கொள்ள வேண்டும் என்ற பிரக்ஞை கூட அவருக்கு அப்போது இல்லை. பேருந்தை நிறுத்தி அவரை குண்டுக்கட்டாக தூக்கி படியிலிருந்து தள்ளி விட்டனர். அவர் காதில் மாட்டிக்கொண்டிருந்த ஒரு கால் செருப்பு கீழே விழுந்ததும் சாக்கடையில் அடித்துச் சென்றது . மைல்கல்லில் சாய்ந்து விழுந்து கிடந்தார். இரவு முழுதும் அங்கேயே கிடந்தார்.

மறுநாள் காலையில் அவ்வழியாகச் சென்ற கல்லூரி மாணவன் ஒருவன் அவரை எழுப்பி, தண்ணீர் வாங்கிக்கொடுத்து ஆட்டோவில் கொண்டு வந்து விட்டான். தன் வியர்வை வாடை தன்னுடையது போலவே இல்லை.பிசுக்காக ஒட்டியது. சட்டையெல்லாம் அழுக்காக இருந்தது. கால்சராய் மடிப்பு முழுதும் மணலாகக் கொட்டியது. நெற்றியிலும் முதுகிலும் காயம் ஏற்பட்டிருந்தது. ராஜியின் அறைக்கு வந்து பார்த்த போது அவள் கண்ணெல்லாம் சிவந்து வீங்கி இருந்தது. முன்தினம் டயப்பர் கட்ட மறந்திருந்தார். ராஜியின் ஆடை, மெத்தை முழுதும் சிறுநீர் நாற்றம் அடித்தது. ராஜியை அலுங்காமல் வீல்சேரில் அமர வைத்து பாத்ரூமுக்கு கூட்டிச்சென்றார். அப்போதும் விசும்பினாள். பிறகு தானும் குளித்து நெற்றிக்கு பிளாஸ்திரி ஒட்டிக்கொண்டார். காலை உணவை சில நிமிடங்களில் தயார் செய்து ராஜியின் ஹாட்பேக்கில் போட்டு வைத்து தானும் தன் டப்பாவில் போட்டுக்கொண்டு கல்லூரிக்குப் புறப்பட்டார்.

காலை வகுப்பில் கணக்குகள் வழக்கம் போல் வந்தன. மாணவர்களும் பழைய மாணவர்கள் கேட்ட அதே சந்தேகங்களைக் கேட்டனர். இவரும் மனப்பாடமே ஆகிப்போன பதிலைக் கூறி தெளிவு படுத்தினார் . மதிய உணவை தனியாகவே சாப்பிட்டார். டப்பாவைத் திறந்ததும் அதே ஊசிப்போன வாடை அடித்தது.

‘இந்தியா 1948’ – நான்கு பெண்கள்

அஜய் ஆர்

ami

அசோகமித்திரனின் ‘இந்தியா 1948‘ (குறு)நாவலில், அமெரிக்காவிற்கு அலுவல் சம்பந்தமாகச் செல்லும், திருமணமான கதைசொல்லி, அங்கு படிக்க வந்திருக்கும் விதவை இந்திய பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். இந்தியாவிற்கு திரும்பும் அவன், இரண்டாம் திருமணம் குறித்து தன் குடும்பத்திற்கு தெரிந்து விடுமோ என்ற பயத்துடனும், தன் செயல் குறித்த குற்ற உணர்வுடனும் இருப்பது என நகரும் கதை, சுதந்திரத்திற்கு முன் அமெரிக்காவிற்குச் சென்று, சுதந்திரம் அடைந்தபின் திரும்பும் கதைசொல்லி காணும் சமூக/ அரசியலின் நுட்பமான மாற்றங்களை பதிவு செய்கிறது. கதைசொல்லியின் கோணத்திலேயே நகரும் கதையில், அவன் வாழ்வில் உள்ள பெண்களின் ஆளுமை (சிறிதளவே விவரிக்கப்பட்டாலும்) கதைசொல்லியை விட அதிகமாக வாசகனை ஈர்க்கிறது. குறிப்பாக, கதைசொல்லியின் தாயார், அவன் முதல் மனைவி பார்வதி, இரண்டாவதாக திருமணம் செய்யும் லட்சுமி மற்றும் அவளின் தாய்.

இளம் வயதில் கணவனை இழந்து, சகோதர்களுடன் வசித்து குழந்தைகளை வளர்த்தவர் கதைசொல்லியின் தாய். அவள் அண்ணன், சந்நியாசம் பெற முடிவு செய்து அதற்கு முன் தன் மகள் பார்வதியை கதைசொல்லிக்கு மணம் செய்ய முடிவு செய்யும்போதும் அவருக்கு அது குறித்துச் சொல்ல ஒன்றுமில்லை. மகன் வேலைக்குச் சென்று நல்ல நிலைமைக்கு வந்தவுடன், அவரது தாயின் ஆளுமை உருப்பெறுகிறது- அல்லது, அதுவரை அடக்கி/ மறைத்து வைக்கப்பட்டிருந்தது வெளிவருகிறது. இது அவர் ஏதோ, மருமகளை கொடுமை செய்கிறார் அல்லது பகட்டாக வாழ ஆரம்பிக்கிறார் என்ற பொருளில் சொல்லப்படுவதில்லை. மருகளை அவர் நன்றாகவே நடத்துகிறார், ஆனால் தன மருமகளுக்கு அவள் எப்போதும் உறவு பேண விரும்பாத மாமியார் தான், தோழி அல்ல, என்பது நுட்பமாக உணர்த்தப்படுகிறது. தன் இரண்டாவது மகனுக்கு பெண் தேடும்போது, அவர் கொள்ளும் உற்சாகம், மணம் பேசப்படும் பெண்கள் குறித்த சந்தேகங்களை அவ்வப்போது கேட்டுத் தீர்த்துக் கொள்வது என அவர் நடந்து கொள்வது ஏதோ படாடோபத்தின் வெளிப்பாடாக இல்லாமல் முதல் மகனின் திருமணத்தில் எந்த வார்த்தையும்/ கருத்தும் பேச முடியாததை ஈடு செய்யும் ஒன்றாகவே பார்க்கலாம். குடும்பத்தில் இறுதி முடிவு எடுப்பவர் என்ற அளவில், அனைத்தும் இயல்பாகவே அவர் கட்டுப்பாட்டில் வந்துவிடுகிறது

ஐந்து வயதில் திருமணமாகி பத்து வயதில் விதவையான லட்சுமி, சமூகவியல் துறையில்டாக்டரேட் செய்ய அமெரிக்கா சென்று படிக்குமளவிற்கு திடசித்தம் கொண்டவள், பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவள். லட்சுமியை ஒரு ஆபத்திலிருந்து கதைசொல்லி காப்பாற்றி , இக்கட்டான சூழலில் அவளை மணம் முடிக்க வேண்டியுள்ளது போன்றெல்லாம் நாடகீயமாக எதுவும் நடப்பதில்லை. ‘லட்சுமி’ என்பவர் உரையாற்றப் போவதாக உள்ளூர் ஆங்கில பத்திரிகையில் படித்து, அவர் தமிழர் என்று எண்ணி கதைசொல்லி செல்கிறார். அங்கு அவர் ‘லட்சுமி’ அல்ல ‘லக்ஷ்மி’ என்ற குஜராத்திப் பெண் என்று தெரிகிறது (Lakshmi என்றே ஆங்கிலத்தில் எழுதப்படுவதால் புரிதலில் நிகழும் குழப்பத்தை அ.மி நுட்பமாகச் சுட்டுகிறார்). அவர்களின் அறிமுகம் இவ்வாறு நிகழ்கிறது.

லட்சுமி அமேரிக்கா வந்த இரு மாதங்களிலேயே எந்தெந்த ஊர்களில் எங்கு சைவ உணவு கிடைக்கும் என்ற பட்டியலைத் தயாரிக்கும் ஒழுங்கு உள்ளவள், படிப்பு முடிந்து இந்தியா வந்தவுடன் இயல்பாக இருக்க முடியாத குழந்தைகளுக்கு சிறப்புப் பள்ளி தொடங்க திட்டம் வைத்திருக்கிறாள். சிறுவயதிலேயே பல அனுபவங்களைப் பெற்று மன முதிர்ச்சி அடைந்த லட்சுமி ஓர் ஆணுடனான நான்காவது சந்திப்பிலேயே, என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று ஏன் கேட்க வேண்டும், அவன் திருமணமானவன் என்று தெரிய வந்த பிறகும் தன் முடிவில் ஏன் உறுதியாக இருக்க வேண்டும்? கதைசொல்லியிடம் அவள் எதிர்பார்ப்பது என்ன? காமமா, பாதுகாப்பா இல்லை பரிவா?

“நீங்கள் ஒருமுறைகூட என்னை உங்கள் அறைக்குக் கூப்பிடவில்லை. அதுவே எனக்கு உங்கள் மீது நம்பிக்கை தந்தது.” என்று சொல்லும் போது அவள் எதிர்பார்ப்பது சமமான நிலையில் இருக்கும் தோழமையை, அதனால் உருவாகும் அன்பை என்று புரிந்து கொள்ளலாம். லட்சுமியின் முடிவு கதைசொல்லியின் குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கும் என்பது உண்மைதான் என்றாலும் அவளை மணமானவனை மயக்கும் குடிகெடுப்பவள் (home-breaker) என்று சொல்ல முடியுமா என்ன?

லட்சுமியின் தாயாரும் இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டு விதவையானவர். விதவையான மகளின் எண்ணங்களுக்கு பக்கபலமாக இருக்கிறார். உனக்கு அவன் மீது நம்பிக்கை இருந்தால் திருமணம் செய்து கொள் என்று சொல்லுமளவிற்கு மகள் மீது அவருக்கும், அனைத்தையும் தாயிடம் பகிர்ந்து கொள்ளுமளவிற்கு லட்சுமிக்கு அவரிடமும் பரஸ்பரம் புரிதல் உள்ளது. தன் மகள் வாழ வேண்டும் என்ற பரிதவிப்பு இருந்தாலும், திருமணம் செய்து கொண்டவனின் குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார். அதனால்தான் கதைசொல்லி இந்த விஷயத்தை தன் குடும்பத்தினரிடம் சொல்லி விட்டானா என்று கேட்டாலும், அது குறித்து அவர் வற்புறுத்துவதில்லை. அனைவரும் ஒன்றாக இருக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

இந்த நான்கு பெண்களில், கதைசொல்லியின் செயலால் மிகவும் பாதிக்கப்படப்போகும் முதல் மனைவியான பார்வதி பற்றி வாசகனுக்கு தெரியவருவது குறைவு தான் என்பது முதல் பார்வையில் ஆச்சரியமாகத் தோன்றலாம். ஆனால் குற்ற உணர்வால், மனைவியை எதிர்கொள்ளும் துணிவு இல்லாத கதைசொல்லி அவளைக் குறித்து/ அவர்களிடையே உள்ள உறவு குறித்து வாசகனிடம் அதிகம் பகிர்ந்து கொள்வதில்லை என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்று தான். தந்தை தனக்கு தன்னிச்சையாக முடிவு செய்த திருமணத்தைக் குறித்தும், கணவன் குறித்தும் அவள் என்ன நினைக்கிறாள். அவளைக் குறித்தும்/ அவர்களுக்கிடையே பெரிய உரையாடல் என்று ஒன்றும் நடப்பது போலவும் கதைசொல்லி எதுவும் சொல்வதில்லை என்றாலும், அவள், இரண்டாம் திருமணம் செய்தது குறித்து தனக்குள்ளே நடந்து கொண்டிருக்கும் மனப்போரட்டம் குறித்து சந்தேகம் கொண்டிருப்பாள் என்றே எண்ணுகிறான். வாயில்லாப் பூச்சி என்று அவளை எண்ண முடியாது, தங்களுக்குத் தெரிந்தவர்கள் வீட்டுப் பெண்ணை (வேறு மொழி/ ஜாதியாக இருந்தாலும்), கணவனின் தம்பி மணிக்கு மணம் முடிக்கும் ஆசை பார்வதிக்கு உள்ளது, அது சில காரணங்களால் நிறைவேறாமல் போனாலும், மணியின் மனைவியுடன் சுமுகமாகவே இருக்கிறாள். தெரிந்தவர் என்று கூறி லட்சுமியின் தாயார் வீட்டிற்கு அவர்களை கதைசொல்லி அழைத்துச் செல்வதும், அவர் இவர்கள் வீட்டிற்கு வருவதும், ஏதோ பிரச்சனை உள்ளது என்று பார்வதியின் உள்ளுணர்வில் கண்டிப்பாக தோன்றி இருக்கும். ஆனாலும் அதைப் பற்றி தானாக எதுவும் விசாரிக்காமல் இருக்கிறாள். உண்மை வெளிவந்தவுடன் அவள் முதலில் வருந்தினாலும், தந்தை சொல்வதைக் கேட்டு சற்றே தெளிவடைகிறாள் (அதே நேரம் கதைசொல்லியின் தாயால் அவன் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை).

அடுத்து என்ன செய்வதென்று யாரும் முடிவெடுக்க முடியாமல் உள்ள நிலையில் ஒரு துயரச் சம்பவம் நிகழ்கிறது. கதைசொல்லியின் குடும்பத்தினர், லட்சுமியையும் அவள் தாயரையும் சந்திக்கின்றனர். கதை இங்கு முடிய அடுத்து என்ன நிகழும்?

நாவலில் ஒரு சம்பவம். கதைசொல்லிக்கு அலுவலகத்திலிருந்து கார் அளிக்கப்படுகிறது. ஆனால் கதைசொல்லி காரில் செல்லாமல், ரயிலில் தான் அலுவலகம் செல்கிறார். ஒரு நாள் அலுவல் முடிந்து வீட்டிற்கு வர, வீடு பூட்டி இருப்பதோடு காரும் இல்லை. பிறகு மணியின் மனைவி ஜானகி கார் ஓட்டிவர, பார்வதியும்/ கதைசொல்லியின் தாயாரும் கடைக்குச் சென்று திரும்பி வருகிறார்கள். உனக்கு கார் ஓட்டத் தெரியுமா, ஓட்டும் ஒரிமம் உள்ளதா என்று சற்றே ஆச்சரியத்தோடு கதைசொல்லி கேட்க, 18 வயதிலேயே கற்றுக்கொண்டதாக சாதாரணமாகச் சொல்லிச் செல்கிறாள் ஜானகி.

இந்தக் கதையின் பெண்கள் அனைவரும் இதைப் போலவே, கதைசொல்லியும்/ வாசகனும் அறிந்திராத, சரியான நேரத்தில் வெளிப்படும் ஆளுமைத்திறனும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள். எனவே கதை தீர்வு சொல்லாமல் முடியும் இடத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய தோதான முடிவை அவர்கள் எடுத்திருப்பார்கள் என்று நம்பலாம். திடசித்தம் படைத்த, கதைசொல்லியின் மேல் அன்பும் கரிசனமும் கொண்ட இத்தனை பெண்கள் அவன் வாழ்வில் இருப்பது அவனுடைய அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

பி.கு

அ.மியின் ‘பம்பாய் 1944‘ குறுநாவலின் தொடர்ச்சியாக, இன்னொரு பாத்திரத்தின் பார்வையில் விரியும் நாவலாக ‘இந்தியா 1948‘ஐ பார்க்கலாம். இரண்டையும் தனி நாவல்களாகவும் படிக்கலாம் என்றாலும், ஒன்றன் பின் ஒன்றாகப் படிப்பதும் ஒன்றை ஒன்று நிரப்ப உதவும்.

கைகாட்டி

காஸ்மிக் தூசி

image

வண்ணத்தின் தேவையுள்ள
மரத்துறவி

பத்து மடங்குக்கும் மேல்
உள்நோக்கி வளைந்த
கைகாட்டி

விழுங்கிவிட்டது
தனக்குத்தெரிந்த எல்லா
ரயில் நிலையங்களின்
பெயரையும்.

முகத்தில் இருந்து
எடுத்த தன் கைகளை
பைகளில் விட்டுக்கொண்டு
நிற்கிறது

அடுத்த ரயில் எப்பவருமென
தெரியும் அதற்கு
ஆனால் நிற்கிறது
குறிப்பு ஏதும் தராமல்

கடிகார முகப்பு
எண்களைக் கூட்ட
மொத்தமாய் வருவது
பூஜ்யம்.

௦௦௦

அருண் கொலாட்கர் எழுதிய “The Indicator” என்ற கவிதையின் தமிழாக்கம்

நன்றி – monon.monon.org

 

இரண்டு தோசைகள்

(பரிசு போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை, எழுதியவர் ராஜா (எ) இளமுருகு)

இரண்டாவது தோசையை வேகமாக பிய்த்து வாயில் போட்டு, டம்ளரில் இருந்த தண்ணீரைக் குடித்தபடியே “குமாரு, கணக்குல எழுதிக்கோ” என்று வேகமாக ஹோட்டல் படியிறங்கி பைக்கில் உட்கார்ந்தேன்.அது நான் தினசரி சாப்பிடும் ஹோட்டல், காலை இரவு என்று 2 வேளை அங்கே சாப்பிடுவது வழக்கம், சில நேரங்களில் மதியம் மட்டும், வாரயிறுதியில் எப்பவாவது இல்லாமலும் கூட போகும். ஹெல்மெட் எடுக்கலாம் என்று திரும்பிய கணத்தில் ஒரு கை நீண்டது. அவருக்கு 45லிருந்து 50 வயதிருக்கலாம். நிறைய முடி நரைத்திருந்தது, சவரம் செய்து எப்படியும் 6 மாதமாவது இருக்கும், குழி விழுந்த கண்கள், அழுக்காக.. இல்லை இல்லை மிகவும் அழுக்காக இருந்தார். உடைகளை அவர் சமீபத்தில் துவைத்திருப்பதற்கான அறிகுறியே இல்லை. எங்கேயோ கீழே கிடந்ததைப் பொறுக்கி அப்படியே அணிந்து வந்திருக்கிறார், இல்லையெனில் யாராவது பழைய துணி கொடுத்திருக்கலாம். எப்படியாக இருந்தாலும் துவைக்கவில்லை.

“என்ன” என்றேன். “சாப்பிட்டு 2 நாளாச்சு சார், ஏதாச்சும் வாங்கிக்குடுத்தீங்கன்னா புண்ணியமாப் போவும்”. நான் அவரை மேலும் கீழும் பார்த்தேன். அவர் சொல்வது உண்மையாகக் கூட இருக்கலாம். இவர் சாப்பிடக் கேட்கிறாரா? இல்லை டாஸ்மாக்கில் கட்டிங் வாங்க கேட்கிறாரா என்று தெரியவில்லை. “சாப்பாடு வாங்கித்தந்தா சாப்பிடுவீங்களா? இல்லை, காசுதான் வேணுமா?” இன்னும் எனக்கு சந்தேகம் விலகவில்லை. “சாப்பிட வாங்கிக்குடுங்க சார், அது போதும்” தொண்டை கமறியது அவருக்கு.

நான் திரும்பி “குமாரு, இவருக்கு எதாச்சும் சாப்பிடக்குடு, என் கணக்குல சேர்த்துக்கோ” என்றேன். “சார், அதெல்லாம் சரியா வராது சார், நான் வெளியில இட்டாந்து தந்துர்றேன், அந்தாளு அங்கனயே சாப்பிட்டுகிடட்டும்” “பரவாயில்லை சார், நான் சாப்பிட்டுக்கிறேன் சார். நீங்க நல்லா இருக்கனும் சார்” “இருக்கட்டும், நீங்க சாப்பிடுங்க” என்று கிளம்பி 4 வது கியரை மாற்றவில்லை, ஏதோ தோன்ற திரும்ப ஹோட்டலுக்கே வந்தேன். அவர் வாசலில் காத்திருக்க குமார் இரண்டு தோசையை பார்சல் செய்து கொண்டு வந்து தந்தான். “அந்தப் பக்கம் போய் சாப்பிடு பெர்சு” என்றான், என்னைக் கண்டு திடுக்கிட்ட குமார் “இல்ல சார், மொதலாளி வந்தா திட்டுவாரு சார், அதான்…” என்று இழுத்தான்.

பெரியவர் பார்சலை வாங்கி பிளாட்பார்ம் வந்து சாப்பிட ஆரம்பித்தார், அவர் சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டிருந்தேன், சரியான 40வது விநாடியில் இரண்டு தோசைகளையும் சாப்பிட்டு முடித்திருந்தார். கை கழுவ தெருக்குழாய் நோக்கி நகர்ந்தார். நான் அவரைக் கூப்பிட்டேன், அப்படியே குமாரையும். “குமார், இனிமே இவர் சாப்பிட எப்போ கேட்டாலும், என்ன கேட்டாலும் சாப்பிடக்குடு, சரியா” பெரியவர் ஏதோ பேச எத்தனித்தனிப்பதற்குள் நான் அந்த இடத்தைவிட்டு வெகு தூரம் வந்துவிட்டேன். அந்தப் பெரியவருக்கும் எனக்கு ஏதோ தொடர்பு இருப்பதைப் போன்றதொரு உணர்வு, நான் சிறுவனாக இருந்த போது என் தந்தை ஊரை விட்டுப் போய்விட்டாராம். காசியில் சாமியாராகி விட்டதாக சிலர் சொன்னார்கள், இராமேஸ்வரத்தில் பிச்சையெடுப்பதாகவும் சொன்னார்கள். அதுகூட இவருக்கு சாப்பாடு வாங்கித் தருவதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஏதோ ஒன்று இப்பொழுது மனம் நிரம்பியிருந்தது, என்னவென்று அறியாத ஓர் இனம் புரியாத சந்தோசம்.

அப்புறம் அந்தப் பெரியவரை சாப்பிடப் போகும்போதெல்லாம் தேடுவேன், பார்த்ததேயில்லை. அடுத்த மாதம் அக்கெளண்ட் செட்டில் செய்யும் போதுதான் கவனித்தேன், கணக்கு சரிவிகிதம் எகிறி இருந்தது, காலை 2 தோசை, இரவு 2 தோசை, இப்படித்தான் வாரம் ஏழு நாட்களும் அவர் சாப்பிட்டிருக்கிறார். ஆச்சர்யமாய் இருந்தது, எப்படி ஒரு மனிதன் காலை இரவு என இரு வேளைகளுக்கும் தோசை மட்டும் சாப்பிட முடிகிறது, சரி, எதுவும் இல்லாமல் இருப்பவருக்கு தோசை கிடைக்கிறதே என்று சாப்பிடுவார் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். அந்த மாதமும் அவரைச் சந்திக்காமலேயே கழிந்தது. அவர் தவறாமல் சாப்பிட வருகிறார் என்று உறுதி செய்தான் குமார். அடுத்த மாதம் கணக்கை செட்டில் செய்யும் போது ஏதோ உறுத்தியது. அந்த ஒரு வேளை மட்டும் வாங்கிக்கொடுத்துவிட்டு விலகியிருக்கலாமோ என்று தோன்றியது. ஆனாலும் மனதில் ஏதோ உந்த பரவாயில்லை என்று விடத்தோன்றியது.

அடுத்த மாதம் பாதியில் குமார் என் செல்போனுக்கு அழைத்தான். “சார், அதான் சார், அந்தப் பெருசு உள்ளாரதான் சாப்பிடுவேன்னு சொல்லுது சார், முதலாளி கத்துறாரு சார். நீ பார்சலே வாங்கிக்கச் சொல்லு சார், பேஜாரா போவுது சார்” என்றான் பதட்டமாக. என்னடா இது பெரிய தொந்தரவாக போயிற்றே என்று “குமார், நீ ஒன்னு பண்ணு, இன்னும் ஒரு வாரத்துக்கு பார்சல் வாங்கிக்கச் சொல்லு, அப்புறமா நான் அவர்ட்ட பேசிக்கிறேன்” என்று கட் செய்தேன்.

கொல்கத்தா போனபிறகு பெரியவர் மனதிலிருந்து காணாமல் போயிருந்தார். திரும்ப சென்னை திரும்ப 10 நாட்கள் ஆகிற்று.

அடுத்த மாதம் கணக்கை செட்டில் செய்யும் போதுதான் கவனித்தேன், கணக்கில் குறைந்தது. குமாரை கூப்பிட்டு விசாரித்ததில் தெரிந்தது, பணம் வாங்கி 4 நாட்கள் ஹோட்டல் உள்ளே வந்தே சாப்பிட்டிருக்கிறார், துணியெல்லாம் புதிதாகப் போட்டிருந்தாராம், ஹோட்டலுக்குள் சாப்பிடுவதை மிகவும் கெளரவமாக நினைத்து சாப்பிட்டாராம். ஆனாலும் காலை, மாலை 2 வேளைகளிலும் 2 தோசை என்கிற கணக்கில் எந்த மாற்றமும் இல்லை. அப்புறம் அவர் என்னை முறை கேட்டிருக்கிறார், அவ்வளவுதான் திரும்ப அவர் வரவேயில்லை. அவரைத் தேடுவதா? இல்லை விட்டது தொல்லை என்று கிளம்பிவிடலாமா என்று ஒரே குழப்பம். இரு தெருக்களில் தேடிப்பார்த்தேன், சிக்கவேயில்லை. நாளடைவில் அவரை மறந்துவிட்டிருந்தேன்.

ஒரு நாள், இரவு 10 மணி வாக்கில் கோயம்பேடு, மார்க்கெட் தாண்டிப் போகையில ஒருவர் அரக்கப் பரக்க என் பின்னாடி ஒருவர் ஓடி வந்தார், சட்டென அடையாளம் தெரியவில்லை. “தம்பி” என்று இரு கை கூப்பினார். அந்த தம்பி என்கிற வார்த்தையிலேயே புரிந்துவிட்டது, அந்த 2 தோசைப் பெரியவர். “நல்லா இருக்கீங்களா தம்பி?”

“நல்லா இருக்கேன், எங்கே இப்பல்லாம் வந்து சாப்பிடறது இல்லை போல. நீங்க இப்ப..” என்று இழுத்தேன்.

“இல்லே தம்பி, பிச்சை எடுக்கிறது இல்லை. நீங்கதான் அதுக்குக் காரணம்..”

ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச்சென்றேன்

“சொல்லுங்க என்னாச்சு”

“தினமும் உங்க காசுலேயே சாப்பிடுவேன், பிச்சையெடுப்பேன். இப்படியே போயிட்டு இருந்துச்சு. ஒரு மாசம் கழிச்சு, நீங்கதான் காசு தரீங்க. அதுவும் முழுசாத்தான் தரீங்க. ஏன் உள்ளே உக்காந்து சாப்பிடக்கூடாதுன்னு கேட்டேன். அதுக்குக் கோவிச்சிட்டாரு அந்தத் தம்பி..”

“யாரு குமாரா?”

“ஆமா, அந்த சர்வர் தம்பிதான். ஏன்னு கேட்டேன். குளிக்கலை, அழுக்கா இருக்கேன்னு சொன்னாப்ல. சரி இருக்கிற, பிச்சையெடுத்த காசை வெச்சி, சவரம் பண்ணிட்டு, நல்ல துணி போட்டுட்டு போய் 2 நாள் சாப்பிட்டேன். நல்ல துணி போட்டுக்கிட்டதால பிச்சை எடுக்க தோணவும் இல்லை, நல்ல துணி போட்டிருக்கிறதால யாரும் பிச்சை போடவும் இல்லை. அதான் மார்க்கெட் பக்கம் வந்து வேலை தேடினேன். இப்ப இருக்கிற முதலாளி காய்கறி கடை வெச்சிருக்காரு. கூடமாட ஒத்தாசையா இருந்துக்கோன்னாரு. ராவுக்கு அங்கேயே படுத்துக்கவும் சொல்லிட்டாரு. இப்பல்லாம் பிச்சை எடுக்கிறதில்லை தம்பி. ஆனா பிச்சைன்னு கேட்டா காசு குடுக்கிறதில்லை, சாப்பாடு வாங்கித் தந்துடறேன். நீங்க சொல்லிக்குடுத்ததுதான் தம்பி”

எனக்குப் புரியவேயில்லை, சாப்பாடு போட்டா சோம்பேறி ஆகிடுவாங்க என்கிற விதி போய், பிச்சையெடுத்தவர் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்.

சிரித்தபடியே “சந்தோசம்ங்க பெரியவரே! எனக்குப் பசிக்குது, நீங்க சாப்பிட்டீங்களா? என்றேன்

“இல்லை தம்பி, இப்பத்தான் முதலாளி கடையைச் சாத்தினாரு. இனிமேதான்..”

“சரி, சர்வர் எனக்கு ஒரு பூரி மசால் குடுங்க. உங்களுக்குப் பெரியவரே..” என்றேன் அவரைப் பார்த்து

“2 தோசை” என்றார்.

இருண்மை

சரவணன் அபி

கேட்கப்படாத கேள்வியொன்று
நெய் குறையும் தீபத்தின்
சுடர் போல்

வளி கொண்டு அணையலாம்
ஆயினும்
இன்னும் கேட்கப்படாத கேள்வியின்
ஆன்மா
அங்கேயேதான் உறைகிறது

பிறிதொருகணம்
எனவொன்றில்லை

இறவாத அக்கேள்வியுடன்
தனித்து
அச்சுடர் நோக்கி
அமர்ந்திருப்பதில்
இடரொன்றும் இல்லை

அறிந்தது கொண்டு
அறிந்ததை அளத்தல்
இல்லாதது கொண்டு
இருப்பதை உணர்தல் போலும்

சுடரின் நுனி
துடித்தல் போலன்றி
தவித்தல்
எனவுணர்வதிலும்
இல்லை இல்லை
எனுமொரு நிலை
இல்லை இல்லை

கரைதலென்பதென்ன
இல்லாமற் போவதா
இன்னொன்றாய் இருப்பதா

வெற்றிடம் முழுதும்
நிறைந்து பெருகி
எனவொன்றில்லாத
பிறிதொருகணத்தில்
வழிந்தோடி வெற்றிடமாகி
இன்மையும் இருப்பும்
கரைதலென்பதென்ன
இல்லாமற் போவதா
இன்னொன்றாய் இருப்பதா

சுடரணைந்த இருளுக்குள்
தனித்தவொரு கேள்வியும்
சற்றுமுன்
வேறொன்றாய்
இருந்த ஒளியும்