Author: பதாகை

மதுவற்றவனின் இரவுவிடுதி

சோழகக்கொண்டல் 

— கோப்பைகளின் கதை —

என்னிடம் மூன்று
காலி மதுக்கோப்பைகள் இருக்கின்றன

எப்போதுமே மதுவின் ஈரம் பட்டிராத
கருங்கல்லால் செய்த
காந்தியின் கோப்பை ஒன்று

நிரம்பி நிரம்பியே
நிறம் மங்கிப்போன
தங்கத்தால் ஆன என்
தந்தையின் கோப்பை ஒன்று

எப்பொழுதோ விழுந்து உலர்ந்த
மதுவின் கறையோடு இருக்கும்
மண்ணால் செய்த என்
சொந்தக் கோப்பை ஒன்று

என் லட்சியவாதத்தின் முதுகெலும்பில்
காந்தியின் கோப்பை இருப்பதை
யாரும் நம்புவதில்லை

தீராத வேட்கை சுழலும் இரத்தத்தில்
ஒரு தங்கக்கோப்பை
காலியாக இருக்கும் என்பதை
என் தந்தையும் நம்புவதில்லை

மது கரைபுரண்டோடும்
மணல்வெளியில் எனது
மண்கோப்பை பத்திரமாய் இருக்கிறதென்பதை
என்னாலும் நம்பமுடிவதில்லை.

— இலட்சியவாதப் பூனை —

கோடைத் தொடங்குகிறது
குளிர்மதுப் புட்டிகள் குவிகின்றன
‘வாப்பு’ வை வரவேற்று
கோப்பைகள் நிறைகின்றன

நனையாத கோப்பைகள் கொண்டதால்
இந்தியனுக்கும் அன்னியனாய் நான்
வீதிகள்தோறும் உலரும் கோப்பைகள்
விடுதிகள் தேடி உருள்கின்றன வாரக்கடைசியில்

மூன்று கோப்பைகளை
முதுகின்மேல் தாங்கியபடி
கண்களைக் கட்டிக்கொண்டு
கம்பிமேல் நடக்கும் பூனைபோல் இருக்கிறேன்
என்று நண்பன் வந்து சொல்லிவிட்டுப் போனான்

நீ பழிக்கும் இந்த கடலின் மீது
மிதப்பதற்காகவே செய்யப்பட்டது
நீச்சலுக்கு பயந்து நீ நிற்கும்
அந்த இலட்சியவாதப் படகு

கடலின் சுழியும்
கவிழ்க்கும் காற்றும்
உறையும் குளிரும் உணராமல்
ஒருபோதும் அடைய முடியாது
கரைசேரும் உத்தியை உறுதியை.
என்றான்.

நான் குதிக்க விரும்பாத
கடலின் குளிர் சுழன்றடிக்கிறது
என் கோப்பைகள் இருக்கும் அலமாரியில்.

கதவுகளை அறைந்து சாத்திவிட்டு நடக்கிறேன்
அவனோடு இரவு விடுதிக்கு.

— இரவு விடுதி —

இரவின் திரையில்
எழுந்து நெளிகின்றன
நினைவழிக்கும் பாம்புகள்

தலைதொங்கி தவழும் மழலையென
நிறைந்து சரிகின்றன கோப்பைகள்
விஷமேறிய நாக்குகளில்
குழைந்து உடைகின்றன மொழிகள்

வீதியில் எங்கும் செயலற்று கிடக்கும் குளிர்
எனக்கு மட்டுமே எஞ்சி ஏறுகிறது
விடுதிகள்தோறும் காவல்புரியும் துவாரபாலகர்களிடம்
யாசித்து வரிசையில் நிற்கின்றன
இன்னும் இடமிருக்கும் கோப்பைகள்

நியாயத்தீர்ப்பு கிட்டிவிட்டது
நீந்திப்பாய்கிறோம் இருளுக்குள்
இடி இடியெனும் இசையில்
நெடிதுளைக்கும் புகையில்
குடிகுடியென கூவியழைக்கிறது
ஒரு விஷத்தீ வெடித்தெரியும் யாகம்

நான் அஞ்சியஞ்சி கால்நனைக்கும் கடலில்
தாவிவிழுந்து நீந்துகிறான் நண்பன்
நடன அரங்கில் நடப்பதைப்போல் அவமானமிது என்று
பிடித்துத் தள்ளுகிறான் பின்னாலிருந்து அவனே

உடைகள் தளர்கின்றன
உன்மத்தம் கொள்கின்றன கண்கள்
உலர்ந்து வலிக்கிறது நாக்கு
மோதி மீள்கின்றன மென்மார்புகள்
இழுத்து இடைகோர்க்கும் கைகள்
பிண்ணிப் பின்வாங்கும் கால்கள்

நான் வலிந்து நீந்தினாலும்
வழுக்கி உள்வாங்குகிறது கடல்
என்னைவிட்டு

உலர்ந்த கோப்பை இதில்
ஒருபோதும் நீந்த முடியாது
என்று தெரிந்தபின்
வெளியேறி நடக்கிறேன்
விடுதியைவிட்டு.

ஒளிப்பட உதவி- etsy.com

நீரடி

காஸ்மிக் தூசி –

water supply

நீறேற்றும் குழாயொன்று
நீண்டு செல்கிறது
பீடத்தின் மேல்

ஒருவீட்டின் மூலையை
இடவலமாய் மாற்றிச்சென்று
தன் தடத்தில்
அசையாமல் நின்றபின்

விருட்டென
ஏறிச்செல்கிறது
மேல்நோக்கி.

சுவரோடு ஒட்டிநின்று
இரட்டித்து
மீண்டும் முறுக்கித் திரும்பி
நிறுத்தத்திற்கு வருகிறது
திடீரென.

எம்மாதிரியான
சூழலில் இருக்கிறோம்
என்ற அறிதல் இல்லாமல்
கழுத்தில்லா எலிபோல
சாவியற்று நிற்கும்
பித்தளையின்
திறப்பு ஒன்று

நெடுந்தூர உறுதியை
கொண்டுவந்து சேர்க்கிறது
முக்கியமான தொரு
முடிவுக்கு

வாழ்நாள் முழுதையும்
வறண்டு போன
நீரடியில்
கழிக்க வேண்டி.

***

(அருண் கொலாட்கர் எழுதிய Water Supply என்ற கவிதையின் தமிழாக்கம்)

அகத்துக்கு நெருக்கமான வடிவம் – டோர்தா நோர்ஸ்

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் டேனிஷ் சகா ஒருவர், நான் நல்ல சிறுகதை எழுத்தாளராக வருவேன் என்று தான் நினைப்பதாகச் சொன்னபோது, அதை மறுத்து தலையசைத்தேன்- அதெல்லாம் இல்லை. ஆனால் அவர் தான் சொன்னதை மீண்டும் வலியுறுத்தினார். நான் பேசும் விதத்தில் ஒரு துல்லியம் இருக்கிறது, ஆணித்தரமாகப் பேசுகிறேன், இவை சிறுகதை வடிவத்துக்கு கச்சிதமாகப் பொருந்தக்கூடும். நான் திரும்பவும் சொன்னேன்: அதெல்லாம் இல்லை.
 
அச்சமும் அனுபவமின்மையும்தான் என் மறுப்புக்கான காரணங்கள் என்று நினைக்கிறேன். எனக்கு எழுத்துத் திறமை போதாது என்று அஞ்சினேன், எல்லாவற்றையும்விட சிறுகதை வடிவம்தான் மிகக் கடினமானது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஏன்? சிறுகதையில் பிழை செய்ய இடமில்லை. நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்ற விஷயத்தில் ஒவ்வொரு நொடியும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கிட்டத்தட்ட ஒவ்வொரு வாக்கியமும் பாத்திரப்படைப்புக்கு உதவக்கூடிய, ஒரு கிராமத்தைக் கொளுத்தக்கூடிய, ஆற்றல் கொண்டதாக இருக்க வேண்டும்- இதை எல்லாம் சிரமம் தெரியாத வகையில் செய்ய வேண்டும். துல்லியமாய் எழுதக்கூடிய திறமை வாய்க்கப்பெற்ற ஒரு சில எழுத்தாளர்களால் மட்டுமே இதைச் சாதிக்க முடிந்திருக்கிறது, இதில் தோற்றுப் போவது குறித்து எனக்கு அச்சம் இருந்தது.

(more…)

கலங்கிய நதி- வர்லாம் ஷாலமோவின் கொலிமா கதைகள்

கார்டியன் இதழில் முன்னோடிச் சிறுகதைகள் குறித்து ஒரு தொடர் வெளியிடுகிறார்கள். அந்த வரிசையில் வர்லாம்  சிறுகதைகள் குறித்து கிரிஸ் பவர் எழுதிய பகுதி இது.
“நான் இலக்கியத்தை வெறுக்கிறேன்,” என்று 1965ஆம் ஆண்டு கடிதம் ஒன்றில் எழுதினார் வர்லாம் ஷாலமோவ். “நான் என் வாழ்க்கை அனுபவங்களை எழுதுவதில்லை; நான் சிறுகதைகளும் எழுதுவதில்லை. நான் சிறுகதை எழுதுவதை, இலக்கியமாய் இருக்கக்கூடியதை எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்கிறேன்”. ஷாலமோவ்வின் தயக்கங்கள் இவ்வாறு இருப்பினும், கொலிமா கதைகள் (Kolyma Tales) என்ற அவரது சிறுகதைத் தொகுப்பு, குலாக் அனுபவத்தில் உருவான மிகச் சிறந்த எழுத்துகளில் சிலவற்றைக் கொண்டிருக்கிறது.

(more…)

“இன்று எழுதப்படுவது இலக்கியம் அல்ல, பொழுதுபோக்கு மட்டும்தான் இருக்கிறது”” – மரியோ வர்காஸ் லோசா நேர்முகம் – டிம் மார்டின்

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பெருவிய எழுத்தாளர் மரியோ வர்காஸ் லோசா தன் 78வது வயதில் நடிக்கத் துவங்கியிருக்கிறார். நடிகர் லோசா? “இல்லை, இல்லை, இல்லை”, என்று சந்தோஷமாகச் சிரிக்கிறார் அவர். நைட்ஸ்பிரிட்ஜில் வாடகைக்கு எடுத்துள்ள அபார்ட்மெண்டில் உள்ள சோபாவில் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தபடி அமர்ந்திருக்கிறார் லோசா. “எனது நடிப்புத் தொழில் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் என்னவொரு அருமையான, செறிவான அனுபவம்- வாழ்க்கையில் நான் இந்த அளவுக்கு பயந்ததே கிடையாது,” என்று சிரிக்கிறார்.
 
அவரது சிரிப்புதான் எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறது: ஆனந்தம் நிறைந்த, அடக்க மாட்டாத, அறையை நிறைக்கும் ஓசை, மூட்டம் போட்டிருந்த வசந்த கால மதியத்தில் அவரைச் சந்தித்து பல நாட்கள் சென்றபின் இந்த நேர்முகத்தின் பதிவைக் கேட்கும்போது அடக்கமாட்டாமல் நான் சிரித்துக் கொண்டிருக்கிறேன். 

(more…)